Search This Blog

18.4.13

பொருளாதாரம் பற்றி பெரியார்

பொருளாதாரம்

சகோதரர்களே!

பொருளாதார மென்னும் விஷயத்தைப்பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவ திலும் நம்நாட்டு மக்கள் எந்தநிலைமையிலிருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாயென்ன பலனளிக்கின்றது? அவர்களுக்கதிக வருவாய் கிட்டவுமது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரமென்பது பற்றி நான் பேசப்போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்களென்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப்பார்த்தால் ஆளொன்றுக்கு வருமானம் ரூ 2-0-0 ஆகும். அதைப்போலவே இந்திய நாட்டின் பெரிய ஜமீன்தாரனிலிருந்து மகாராஜாக்களிலிருந்து மடாதிபதி களிலிருந்து தினம் ஒரு காசு பிச்சை எடுப்பவன் வரையில் ஒட்டு மொத்தம் கணக்குப் பார்த்து ஆள் ஒன்றுக்கு வருமானமென்னவாகுமென்று பிரித்து ஈவு பார்த்தால் ஆள் ஒன்றுக்கு 2 அணா வீதமே வரும்.

இவ்விதம் மேல்நாட்டில் வருமான மதிகமாவதற்கும் அதாவது சராசரிரூ.2-0-0 வருமானமாவதற்கும் நமது நாட்டில் வருமானம் குறைவ தற்கும் அதாவது ஆள் ஒன்றுக்கு சராசரி0-2-0 அணாவே கிடைப்பதற்கும் காரணமென்ன வென்பதைக் கண்டு பிடிப்பதுதான் பொருளாதாரப் பிரச் சினையில் முக்கியமானதாயிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். மேல் நாட்டான் பணம் சம்பாதிக்க வென்று உழைக்கிறான். நாமுமது போல வே தானுழைக்கிறோம். ஆனால் தினம் 0-2-0 அணா சம்பாதிப்பதற்கு நமது மக்கள் படுகின்ற கஷ்டத்தினளவு மேல் நாட்டில் தினம் ரூ. 2-0-0 சம்பாதிக்கின்ற ஆட்கள் கஷ்டப்படுவதில்லை. சம்பாதனை விஷயத்தில் நமது கஷ்டமும் சரீரப்பிரயாசையும் சிறிதும் குறைந்த பாடில்லை. ஆனால் நாட்டு வளப்பத்தில் நம் நாட்டை விட மேல் நாடு சிறந்ததென்று யாருமிது வரை சொல்ல வரவில்லை. அப்படியிருக்க அதாவது வளமுள்ள நாட்டிலிருப்பவன் தினம் இரண்டணாவும் வளமில்லா தேசத்திலிருப்பவன் தினமிரண்டு ரூபாயும் சம்பாதிக்கக் காரணமென்ன என்பதில் தான் பொருளாதாரப் பிரச்சினையின் சாவி இருக்கின்றது. மலைவளம், நீர்வளம், நிலவளம், செழிப்பு வர்த்தக மூலப்பொருள்கள் பல தானியங்கள் விளை வுக்கு வேண்டிய சௌகரியங்களாகியவை மற்ற நாடுகளைவிட நமது நாட்டிலதிக முண்டல்லவா? இத்தகைய வளம் கொழுத்த நமது நாட்டில், செல்வத்திற்காக வென்று ஒரு தனி கடவுளையும் ஏற்படுத்திக் கொண்டு, அதற்காக பூஜைநைவேத்தியம் உற்சவம் பிரார்த்தனை முதலியவைகளும் செய்து வரும் நமது நாட்டில் “தரித்திரம் தலைவிரித்தாடக்” காரணமென்ன? மக்கள் சுகமாயிருக்க வீடில்லாமல் கட்டத்துணியில்லாமல் உண்ண உண வில்லாமல் வாடுகிறார்கள் வதங்குகிறார்களென்று சொல்லப்படக் காரண மென்ன? வென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரணத் தினுண் மையைக்கண்டு பிடித்து விட்டால் பொருளாதார பிரச்சினை வெகு சுலபமாகத் தீர்ந்துவிடும்.

பொருளாதார சீர்திருத்த நிபுணர்களுக்கு இந்த விடத்தில் தானாதிக வேலையிருக்கிறது. இதைக்கண்டுபிடித்து நேர் செய்யாமல் “நமது செல்வம் கொள்ளை போகின்றது! கொள்ளை போகின்றதே! தென்று பேசுவதால் - தலையிலும், வாயிலும், வயிற்றிலுமடித்துக் கொள்வதாலொருபயனுமே யுண்டாகாதென்பது எனது அபிப்பிராயம்.

உண்மையைப் பேசத்துணிந்தோமேயானால் 1. இந்த நாட்டில் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? 2. இருந்தால் யாருக்கிருக்கின்றது? 3. அது ஏனிருக்கின்றது? 4 யாராலிருக்கின்றது? என்பவைகளாகிய விஷயங்களில் கவனம் செலுத்திப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோமானால் அந்த முடிவின் அபிப்பிராயங்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள் தலைவர் கள் என்பவர்களது அபிப்பிராயங்களுக்கு விறோதமாகவே இருக்கும். இருந்தபோதிலும் இவ்விஷயங்களில் எனக்குத்தோன்றிய உண்மையை உங்கள் முன் பேசுகின்றேன்.

சகோதரர்களே! இன்று பொருளாதாரக் கஷ்டமென எங்காவது உண்மையிலிருக்கின்றதா? விவசாயங்கள் நடைபெறுகின்றன. தொழில்கள் நடைபெறுகின்றன. சில இலட்சம் பிறவிப் பிச்சைக்காரர்கள் தவிர, சில கோடி பிறவிச் சோம்பேறிகள் தவிர மற்ற மக்களெல்லோரும் வேலை செய்கின்றார்கள். 1,000, 10,000, 1,00,000, 10,00,000, 100 00 000, 1,00000000 ரூபாய் களென்பதான சொத்துக்கள் கொண்ட செல்வவான்கள் நமது நாட்டிலில்லையா? 100, 1,000, 10,000, 1,00,000, 10,00,000 பல 10,00,000 ரூபாய்களென்பதான வருஷ வரும்படியைக் கொண்ட வரும்படிக்காரர்கள் நமது நாட்டிலில்லையா? மாதம் ஒன்றுக்கு 10, 100, 1000, 10,000 ரூபாய்கள் வீதம் சம்பளமும், சம்பாதனையுமானவரும் படியுள்ள உத்தியோகஸ்தர்கள் வக்கீல்கள், வைத்தியர்கள் முதலிய மக்கள் நமது நாட்டிலில்லையா? ஒவ்வொரு வீடுகளில் 1000, 10,000, 1,00,000 ரூபாய் பெறும்படியான நகைகளும், 1000, 10,000, 1,00,000, 2,00,000 பெறுமான கட்டடங்களும், கோட்டை கொத்தளம் போன்ற வீடுடையவர்களும் நமது நாட்டி லில்லையா? வென்று யோசித்துப்பாருங்கள். பூமி விஷயத்திலும் ஆள் ஒன்றுக்கு 5, 10, 100, 1,000, 10000, 20,000, 50,000 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூமியையும், வயல்களையும், தோட்டங்களையும், மலைகளையும், சோலைகளையும் அவற்றுள் அழகிய நீரோடைகளையும் கொண்ட மக்கள் நமது நாட்டிலில்லையா? பெரிய பெரிய நதிகள், வாய்க்கால்கள், ஓடைகள், ஏரிகள் நமது நாட்டிலில்லையா? என்று யோசனை செய்து பாருங்கள். ஆகவே இந்த நாட்டில் செல்வமில்லை என்று எப்படி, எந்த ஆதாரத்தைக் கொண்டு சொல்லக்கூடும்? என்பதை சற்று நடு நிலைமையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே!இவ்வளவு செல்வமிருக்கும் போது இந்த நாட்டைப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்ற நாடாக எப்படி சொல்ல முடியும்? அப்படித்தானெங்காவதிருப்பதாக சொல்லுவதானால், யாருக்குப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றது? பாடுபடுகின்றவர்களாய், பாமர மக்களாயிருக்கின்ற - சாது ஜனங்களாக இருக்கின்றவர்களுக்கும், எந்தக் காலத்திலும் எந்த விதத்திலும் பொருளற்றவர்களாகவே இருந்து தீரவேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றவர்களுக்குமேயல் லாது, மற்ற யாருக்குப் பொருளாதார கஷ்டமிருக்கின்றது? என்று உங்களை நான் கேட்கின்றேன்.

தங்களை யுயர்ந்த ஜாதியரென்றும், மேல்வருணத்தவரென்றும், பாடு படுவதற்கு உரிமையில்லாதவர்களென்று மேற்பாடு செய்துகொண்ட கூட்டத் திற்கெங்காவது பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? என்று பார்த்தீர்களா னால் இந்தக் கூட்டத்தாருக்கு எங்காவது சிறிதாவது பொருளாதாரக் கஷ்டமிருப்பதாகவோ, ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியிருப்ப தாகவோ, அதனால் பசியுடன் வாடிக்கொண்டோ, கல்வி கற்க மார்க்க மில்லாமலோ இருப்பதாக நீங்கள் சொல்ல முடியுமா? என்பது உங்களுக்கு விளங்கும். ஆகவே, இந்தக் கூட்டத்தவர்களல்லாமல் மற்றவர்களுக்குப் பொருளாதாரக் கஷ்டமென்பதிந் நாட்டிலேனிருக்கின்றது? யாராலிருக் கின்றது? என்பதை இப்போது யோசித்துப்பாருங்கள். அப்போதுதான் நாட்டி லுள்ள செல்வங்களை சகல மக்களும் சரியாய் அனுபவிக்க முடியாம லிருக்கும்படிக்கும், பாடுபடுகின்றவன் பட்டினியாகவும், சோம்பேறி யாயிருப்பவன் நன்றாகத் தாராளமாய் சாதாரண அளவுக்கெத்தனையோ மடங்கதிக மாயனுபவித்துக்கொண்டு வாழும்படியாகவுமிருப்பதும் அதற்கு ஆதாரமாக நமது சமூகவாழ்க்கைக் கிரமத்திலதற்கேற்ற திட்டங்களேற் படுத்தி வைத்திருக்கும் சூக்ஷியும், பித்தலாட்டமும், ஏமாற்றமும் நன்றாய் உங்களுக்கு விளங்குவதோடு இதைத்தவிர மற்றபடி வேறொன்றும் ‘பொரு ளாதாரக் கஷ்டத்திற்கு’ காரணமில்லை யென்பதை நன்றாயுணருவீர்கள்.

சகோதரர்களே!இந்தப்படியாய்த் திட்டம் செய்வதற்கு மூலகாரண ஸ்தர்களாகயிருப்பவர்கள் மேல்ஜாதியார், மேல்வருணத்தாரென்கின்ற சூஷிக்கார சோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தார்களா? இல்லையா? வென்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட நிலைமையில், இந் நாட்டி லிருப்பதாய் சொல்லப்படும் பொருளாதாரக்கஷ்டத்தை எப்படி யொழிப் பது தென்பதுதான் இனி முக்கியப்பிரச்சினையாக யோசிக்கப்படவேண்டும்.

சகோதரர்களே!இந்த இடத்திலுங்களது நியாயமான புத்தியையும், நடு நிலைமையான கவனத்தையும் செலுத்திப் பாருங்கள். பொருளாதாரக் கஷ்டத்தின் தத்துவங்கள் சுலபமாக உங்களுக்கு விளங்குவதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். இன்றையத்தினம் ரூ. 1-க்கு பட்டணம் படியினால் 6 படி அரிசி விற்கும்படியான நிலைமை நம் நாட்டில் இருந்தும் (அதாவது ஒரு தம்படிக்கு ஒரு பெரிய இட்டலி விற்கக்கூடிய அளவு மலிவாக இருந்திருந்தும்) இன்று ஒரு மனிதன் ஒரு இட்டலி 6 தம்படி கொடுத்து வாங்குவதும் அதே இட்டலியை வேறு ஒருவன் ஒரு தம் படிக்கோ அல்லது இரண்டு தம்படிக்கோ விற்றால்கூட அவனிடம் வாங்காம லதிகவிலை கொடுத்து வாங்கி, நஷ்டமடைந்து வயிறார இட்டலி வாங்கி சாப்பிடக்கூட சௌகரியமில்லாமல் கஷ்டப்படுவதும், அதிக விலைக்கு விற்பவன் பெண்டு பிள்ளைகள் கெம்பு வைரக்கம்மலும், அட்டிகையும், ஜப்பான் சில்க் கும், பிராந்தி, விஸ்கிக்குடியுமாகியவைகளான போக போக்கியங்களை அனுபவித்துக் கொண்டு அவன் பிள்ளைகள் பி.ஏ.பி.எல்., படிக்கின்றார்கள் என்றால் இது இந்நாட்டுப்பொருளாதாரக் கஷ்டத்தின் பயனா? அல்லது சிலருக்கெப்போதும் பொருளாதாரக்கஷ்டம் சதா இருக்கும்படியாகச் செய்யப்பட்டிருக்கும் சமூகவாழ்வு ஏற்பாடா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தப்படியான, அதாவது செல்வத்தையும், பொருளையும் மக்கள் சமமாயனுபவிக்க முடியாதபடி வெகுகாலத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்டிருக்கு மேற்பாட்டை-கட்டுப் பாட்டையுடைத் தெரிந்தீர்களானால் இங்குப் பொருளாதாரக் கஷ்டமேற்பட மார்க்கமிருக்குமா? என்று கேட்கின்றேன்.

மேல் நாட்டில் சக்கிலிமகன் பிரதம மந்திரியாகின்றான். குயவன் மகன் லார்டு (டுடிசன) ‘பிரபு’ சபையில் அங்கம் வகிக்கின்றான். கப்பலில் சட்டி பானைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றவன் குப்பைக் கூழங்களைக் கூட்டு கின்றவன் மகன் இராஜப் பிரதிநிதியாகின்றான். வண்ணான் மகன் கவர்ன ராகின்றான் என்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது நாட்டில் சக்கிலி கள் வீதிகளிலும் நடக்கக்கூடாது.

பறையன் சுடுகாட்டிலிருந்துகொண்டு, பிணங்களுக்குக் கட்டியத் துணியைக்கிழித்துக் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும், பிணங்களுக்கு வாயில் போடும் வாய்க்கரிசியைப் பொறுக்கியெடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கவேண்டுமென்றும் திட்டங்களிருந்தாலெப்படிப் பொருளாதாரத் திட்டம் பெருவாரியான பாடுபடும் மக்களுக்கு திருப்திதரக்கூடியதாக விருக்குமென்று யோசித்துப்பாருங்கள்.

இந்த நாட்டில் மேல் ஜாதிக்காரனென்பவன் எவனாவது சரீரத்தால் பாடுபடுகின்றானா? வென்று கவனித்துப்பாருங்கள்.

இந்தநாட்டில்மக்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் பஞ்சமனென்று பிரித்து, இதில் அவர்களுக்கு அந்தஸ்தும், வேலையும் பிரித்து, அதாவது பிராமணன் படிப்பதற்கும்- படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மருகனென்றும், க்ஷத்திரியன் அரசு செலுத்தி - உத்தியோகங் கள் பார்க்க அருகனென்றும், வைசியன் வியாபாரியாய் வியாபாரம் செய்து ஜமீன்தாரனாய் விவசாயக்குடித்தனம் செய்விக்கச்செய்து, பணம் சம்பாதிக்க அருகனென்றும், சூத்திரன் சரீரப்பிரயாசைப்பட்டு, உயிர்வாழுமளவுக்கு மாத்திரம் ஊதியம் பெற, கூலிபெற அருகனென்றும், பஞ்சமனென்பவன் இந்த சூத்திரன் அதிகாரம் செய்யவும், அவனுக்கு வெட்டி வேலை செய்ய வும் அவன் உண்டுகழித்த கஞ்சியையும், உடுத்திக்கிழித்த கந்தையையும் பெற்று, உண்டு உடுத்தி இழிபட்ட மிருகங்களிலும் கேவலமாயிருக்க அருகனென்றும் யேற்பாடுகள் செய்ததிட்டமே - வருணாச்சிரம தர்மமே தான் - இன்று இந்த நாட்டில் பாடுபடுபவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையையடைய முடியாமல் இருக்கின்றதேயொழிய, வேறுகாரணமில்ல வேயில்லை. இந்தக்கூட்டம் அதாவது பாடுபடுகின்றவர்கள் எண்ணிக்கை யில் மற்றவர்களைவிட அதிகமாயிருப்பதால் நாடு ஏழையாகவும், தரித்திர மாகவுமிருப்பதாக தெரிகின்றது. இவர்களது இந்த நிலைமையை மேல் ஜாதிக்காரர்கள் மற்றவர்களுக்கு - வெளியாருக்கு எடுத்துக்காட்டி, ‘இந்தியா ஏழைநாடு, தரித்திரநாடு, பொருளாதாரத்தில் கீழான நாடு’ என்பதாக ஒப்பாரிவைத்து அதாவது ஒரு பிச்சைக்காரி பிச்சைப்பெறவேண்டுமானால் யாரிடத்திலாவதுள்ள ஒரு மொண்டிக் குழந்தையையோ, குருட்டுப்பிள்ளை யையோ வாடகைக்குப் பெற்றுவந்து, தனது குழந்தை ‘குருடு’ என்றும், ‘மொண்டி’ என்றும் சொல்லி, தெரியாதவர்களுக்குக்காட்டி, காசு, பணம் சம்பாதித்துக்கொண்டு பிறகு குழந்தைகளைப் பெற்றோர்களிட மொப்பு வித்து விடுவதுபோல் இந்தியாவின் கீழ்பட்ட மக்களென்பவர்களின் நிலைமையை கைமுதலாக வைத்து மேல் நிலைமையில் மிக்க சௌகரிய மாக இருப்பவர் தாங்கள் மிகவும் பரிதாபப்படுவதாக வேஷம்போட்டு அரசாங்கத்தில் சுயநலத்திற்கு அனுகூலமான லாபத்தை மேலும் மேலும் அடைவதற்குச் செய்யும் சூக்ஷியேதான் இன்றையப் பொருளாதாரக் கஷ்டமேயொழிய வேறில்லை.

இந்தியப் பொருளாதார நிலைமை சிறிது உயரவேண்டுமானாலும் இந்திய ஜனத்தொகையில் 100க்கு 75 பாகத்திற்கு மேலான இந்த சமூகங்கள் பொருளாதாரத் துறையில் மேல் வருவதற்கு சமூகத்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைக்கச்செய்தால் ஒழிய வேறு வழியில் இந்திய மக்கள் பொருளாதாரத்துறை சீர்படுத்தப்படுமென்பது சிறிதும் முடியாத காரியமே யாகும். ஆகவே இதைத்தவிர மற்ற வழியில் பொருளாதாரத் துறையைப் பற்றி பேசுபவைகளவ்வளவும் புரட்டும், ஏமாற்றமுமேயல்லாமல், அதில் சிறிதும் அறிவுடைமையோ, நாணயமோ உண்மையோ யில்லையென்றே சொல்லுவேன். ஆதலால் நமது நாட்டுப் பொருளாதாரக் கஷ்டமென்பது இம்மாதிரியான ஒரு பெருமிந்திய சமூகத்திற்கிருந்து வருவதற்குக் காரணமே இந்தமாதிரியான வருணாச்சிரம முறையேயல்லாமல் வேறல்ல யென்பதே எனது அபிப்பிராயம். இந்திய நாட்டிலெவ்வளவு பஞ்சமிருப்ப தாக சொல்லப்பட்டாலும், எவ்வளவு தரித்திரமிருப்பதாக சொல்லப்பட்டா லும், எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட உயர்ந்த ஜாதிக்கூட்டமானது ஒரு நாளாவது, ஒரு நிமிஷமாவது, கஷ்டப்படு வதாகவோ பட்டினிக்கிடப்பதாகவோ சொல்ல முடியவே முடியாதென்பதை நீங்கள் கூர்மையாய் யோசித்துப்பார்த்தீர்களானால், உங்களுக்கு விளங்கா மல் போகாது.

மற்றுமின்னுமொரு விஷயத்திலும் நமது பொருளாதார நிலைமைக் கஷ்டமாகக் காணப்படுவதற்குக் காரணம் சொல்லவேண்டியிருக்கின்றது. அதாவது நமது பொருளாதார வருவாய்களும் செல்வர்களுடைய செல்வத் தின் பயன்களும் நாட்டு நலனுக்கும், பெரும்பான்மையான ஏழை மக்கள் பாடுபடுகின்றவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் அவர்களது முன்னேற்றத் திற்கும் போக முடியாமல் சாமி பேராலும் மதத்தின் பேராலும் சடங்குகளின் பேராலும் நாசமாகும் ஒரு பெரிய மோசமான துறையேயாகும்.

இந்தநாட்டுச் செல்வவான்களெல்லோரும் பணம் சம்பாதித்து செல்வ வான்களானதற்குக் காரணமிந்த நாட்டுப்பெரும்பான்மையான மக்கள் சரீரப்பிரயாசையின் பயனாலேற்பட்ட தென்பதை சிறிதும் உணராது ‘கடவுள் தங்களுக்குக்கொடுத்தா’ரென்பதாக யெண்ணிக்கொண்டு, அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறையிலும், இன்னும் மேன் மேலும் செல்வம் பெருக வேண்டுமென்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகின்றார்கள். இதன் பயனா கவே இந்த நாட்டில் வருஷமொன்றுக்கு பல கோடி ரூபாய்கள் பாழாவதைப் பார்க்கலாம். நமது தமிழ்நாட்டில் மாத்திரம் வருஷமொன்றுக்கு இரண்டு கோடி அல்லது மூன்றுகோடி ரூபாய்கள் வரும்படி வரத்தக்க மூலத்துகை கள், சொத்துக்கள் கோவிலின் பேரால் மதத்தின் பேரால் முடங்கிக் கிடக் கின்றன. மற்றும் மூன்றுகோடி, நான்குகோடி ரூபாய் வருஷம் ஒன்றுக்குப் பொதுமக்களின் வருவாயும், சிலவிடங்களின் கைமுதலும் பாழாகும் வண்ணம் கிராமதேவதைகள் முதல் உயர்தரக் கடவுள்கள் வரையுள்ள இலட்சக் கணக்கான கடவுள்களுக்குப் பூசை, நைவேத்தியம், உற்சவம், காணிக்கை முதலிய செலவுகளும், கோவில் திருப்பணி கும்பாபிஷேகம் முதலிய செலவுகளும், மற்றும் இரதம், தேர், வாகனம், பாத்திரம், பணம், துணிமணி, நகை முதலிய செலவுகளும் தேசத்தின் பொருளாதார நிலைமை யைப் பாழாக்குகின்றன. தமிழ்நாட்டில் மாத்திரம் இவ்வளவென்றால் இந்தியா மொத்தமு மெப்படியிருக்குமென்று நினையுங்கள். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டி இந்த நாசமாய்ப்போகும் பொருளாதாரத்தைக் காப்பாற்றி அச்செல்வங்கள் இந்திய மக்களுக்குப் பயன்படுத்தச் செய்யா மல் இத்துறையில் சிறிது முயற்சியுமில்லாமல் ‘நமது செல்வம் அன்னிய நாட்டுக்குப் போகின்ற’ தென்கின்ற ஜாலமந்திரத்தைப் பிரயோகித்து முட்டாள்களை ஏமாற்றி உண்மை அறியாமலிருக்கும்படி பொதுநலத்தின் பேரால் அரசியலின் பேரால் சூக்ஷிகள் செய்யப்பட்டு வருகின்றதை நமது மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.

இந்த நாட்டுச் செல்வம் வெளியில் போகின்றதென்பதை அடியோடு நிறுத்தப்பட்டுப் போவதுடன் வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் நமது நாட்டுக்கே வருவதாக வைத்துக்கொண்டாலும், இன்றைய வருணாச்சிரம முறையும், மத சம்பந்தமான கடவுள் சடங்குகளின் முறையுமிப்படியே இருக்கும் வரை மேற்கண்ட, அதாவது பாடுபடாமல் சோம்பேறியாய் வாழ உரிமையுள்ளவனும், பணக்காரனாக உரிமையுள்ளவனும், உத்தியோகம் பார்க்க உரிமையுள்ளவனும், பொதுஜனப்பிரதிநிதியாக உரிமையுள்ளவனும் தான் இப்போதையைவிட இன்னுமதிகமாகக் கொள்ளையடிக்கவும், போக போக்கியங்களனுபவிக்கவும், கஷ்டப்படுபவர்களை பட்டினி கிடப்ப வர்களை இன்னும் அதிகமாய் கொடுமை செய்யவும் அருகதையுடையவர் களாவார்களே தவிர, ஒரு நாளும் இந்தியாவிலின்று பொருளாதாரத்தால் கஷ்டப்படும் ஏழைமக்கள், பட்டினிக் கிடப்பவர்க ளென்கின்றவர்கள் ஒரு நாளும் யாதொரு விதத்திலும் சீர்பட முடியவே முடியாதென்பதை உணருங்கள்.

மேலும் இந்தியப் பொருளாதாரத் துறை என்பதை சீர்படுத்த மற்றொரு துறையில் பாடு படவேண்டியிருக்கின்றது.

அஃதென்னவெனில் மனிதன் தனது வாழ்வுக்கும், தாழ்வுக்கும் கடவுளே காரணமென்று எண்ணிக்கொண்டு கடவுள் மீதே சகல பொறுப்பும் போட்டுவிட்டு மாடுபோல் உழைப்பதை மாத்திரம் தன் கடமையாய்க் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதாகும்.

நம் நாட்டில் பாடுபட்டு ஏழையாய் பட்டினியாய் இழிவாய் இருந்து கஷ்டப்படுபவன் மாத்திரம் தான் கடவுள் உணர்ச்சி கொண்டு நசமாய்ப் போகின்றானேயொழிய செல்வமுடையவனும், பணமுடையவனும், சோம்பேறியாய் வாழ்பவனும் ஒருநாளும் உணர்ச்சிகொண்டு கடவுளுக்குப் பயந்து நடப்பது என்கின்ற கொள்கையில் ஈடுபடுவதே இல்லை.

மேலும் எவ்வளவு அக்கிரமமும் மோசமும் செய்தாலும் அந்தக் குணங்களால் சம்பாதித்த பொருளில் ஒரு பாகத்தை கடவுளுக்குக் கொடுத்து மன்னிப்பு பெற்று விடலாம் என்றும் மேலும் மேலும் செல்வம் பெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்றுமே கருதுகின்றான்.

ஆகவே கடவுளுணர்ச்சியானது பாடுபடுபவன் கஷ்டப்படவும் பித்தலாட்டக்காரன் சோம்பேறி ஆகியவர்கள் செல்வம் பெற்று சுகப்படவும் தான் உதவுவதாயிருப்பதால் அதை ஒழிக்க வேண்டிய விஷயத்திலும் பாடு பட வேண்டியது அவசியமாகும்.

கடைசியாக பொருளாதாரத் திட்டத்திற்கு மற்றொரு துறையிலும் பாடுபட வேண்டியது அவசியமாகும். அதாவது மனிதன் பொருள் அடை வதற்காக செய்யும் தொழில்கள் எல்லாம் பழைய முறைப்படி 1000, 2000, வருஷங்களுக்கு முன்னால் செய்து வந்த முறைப்படி செய்து வர வேண்டும் என்கின்ற மூடநம்பிக்கையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து புதிய மாதிரியில் அதாவது யந்திரம் முதலியவற்றில் பாடுபடும் பொருள் சம்பாதிக்கு முறையில் பாடுபட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இதைப்பற்றி வேறு பல சமயங்களில் விசேஷமாகப் பேசி இருப்பதால் அவற்றைக் கவனித்தால் தெரியவரும்.

ஆகவே இவ்விஷயங்களை எல்லாம் நீங்கள் தக்கப்படி கவனித்து உங்களுக்கு பட்டபடி நடவுங்கள்.

------------------------சென்னிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை.”குடி அரசு” - சொற்பொழிவு - 05.07.1931

10 comments:

தமிழ் ஓவியா said...

பதில் சொல்லுமா அதிமுக ஏடு?

மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.

அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்?

இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு.

திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா?

பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா?

அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா?

திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு.

அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன?

மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா?

வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா?

மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா?

ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்?

போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா?

மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம்.

கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும்.

@@@@@@

தமிழ் ஓவியா said...

மழை பொழிய....

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்?

கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா?

மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும்.

திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள்.
இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா?

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள்.
மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்!

@@@@@@

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால்...

பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார்.

இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது.

சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது.

அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் ஓவியா said...


பயன்படவேண்டும்


சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?


இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக் காவைச் சுற்றிப் பார்க்கப் போனாராம். இறங்கியதுமே அமெரிக்கப் பெண் கேட்ட முதல்கேள்வி, நான் மகாபாரதம் படித்திருக்கிறேன், உங்களுடைய மற்ற கணவர்கள் எங்கே? அங்கேயே விட்டு வந்து விட்டீர்களா? என்பதுதானாம். இப்படி இந்தியாவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ராணி பத்திரிகையாசிரியர் சொன்னதும், அனுராதா ரமணன் எழுந்து... என்னை அப்படி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அய்ந்தாவது நபர் தான் தாலி கட்டிய கணவனென்று... இவ்வாறாக 21.8.1983 நாளிட்ட தாய் இதழில் ஒரு பெட்டிச் செய்தி வந் துள்ளது.

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?

திருமதி அனுராதா ரமணன் கூற்றுப்படி ஒரு பெண்ணானவள் தாலி கட்டிய ஒரு கணவனையும், தாலி கட்டாத நான்கு ஆண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாரா? மகாபாரதத்தைக் காப்பாற்ற போய் தன் மானத்தைப் பறக்க விட்டு விட்டாரே!
(உண்மை, 1.8.1983)

தமிழ் ஓவியா said...


நெய்வேலியும் திருவெறும்பூரும்



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம்.

இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது.

என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.

இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம் பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தமே செய்யும்.

பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம்.

பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம் பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.

பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.

நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன.

1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.

1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில் பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத் தான் (முதலாளிக்குத் தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக பச்சை மையால் கையொப்பமிட மனம் மறுக்கிறது.

நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது. திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா? 19-4-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சாஸ்திரம்

செய்தி: இன்று ராமநவமி. சிந்தனை: ராமன் பிறந்த நவமியும், கிருஷ் ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாளாம் - சொல்லு கிறது சாஸ்திரம்.

கேட்டீர்களா சேதியை?

அட்சய திருதியையில் நகை வாங்கினால் அதிர்ஷ் டம் குவியும், செல்வ தேவதை வந்து குடியிருப் பாள் என்று கிளப்பிவிட் டார்கள் அல்லவா?
இப்பொழுது புதாஷ்டமி யில் வீடு, நிலம் வாங் குங்கள் - விளங்குவீர்கள் என்று கிளப்பி விட்டுள்ளனர்.
முன்னது நகைக்கடைக் காரர்களின் சரடு - பின் னது ரியல் எஸ்டேட்கா ரர்கள் கட்டிவிட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?


மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.

குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.

வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?

இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே... அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

மனைமாட்சியருக்கு விழா!


ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.

அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.

மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!

இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!

தமிழ் ஓவியா said...

மாற்றம்


வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.

பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.

வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.

அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.

கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.

கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.

பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.

அய்யனார்க்கே இந்த நிலைமையா?

இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.

அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.

பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.

_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்