Search This Blog

17.1.13

நாம் பிரிந்து கிடக்கிறோம் - பெரியார்




(தம் மனதில் உண்மை என்று படக் கூடிய விசயங்களைச் சமய சந்தர்ப்பம் தயவு தாட்சண்யம் முதலியவற்றைப் பார்க்காமல் மிகவும் தைரியமாக எடுத்துச் சொல்லுபவர் பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய பிரசங்கம் எவ்வளவு தெளிந்த நடையோடும். உணர்ச்சி யூட்டக் கூடியதாகவும் இருக்கிறதோ, அதேபோல அவருடைய கட்டுரையும் அமைந்திருப்பதைக் காணலாம்.  சாதி சமயப் பிரிவினைகளை வேரறுத்து, ஒவ்வொருவரும் தன் மதிப்போடு தானும் மனிதன் என்று தலை நிமிர்ந்து நடக்க இக்கட்டுரை வழிகாட்டட்டும் -(பிரசண்ட விகடன்)

தற்காலப் பிரச்சினை திராவிட மக்கள் இந்துக்கள் என்னும் தலைப்புக் கொண்ட கூட்டத்திற்குள் இருப்பதா அல்லது அதைவிட்டு விலகி வெளிவந்து, தங்கள் இனம், நாடு, இனநலன், நாட்டு நலன் தெரியும்படியான தலைப்புடையவர்களாகி அன்னிய ஆதிக்கத்திலும் சுரண் டலிலும் இருந்து விடுபடுவதா என்பதேயாகும்.

உண்மையாகச் சொல்லுகிறேன், திராவிட மக்கள் இன்று தங்கள் முற்போக்குக்கும் விடுதலைக்குமாக முதலில் கவனிக்க வேண்டியது தங்கள் நாட்டினுடையவும் இனத்தினுடையவும் ஆன பிரச்சினையே யொழிய, அரசியல் பிரச்சினை அல்ல. நமக்கு இன்னும் அரசியல் பிரச்சினையைப் பற்றிப் பேசும்படியான தகுதி ஏற்படவில்லை. ஆரியர்களைப் போலவோ, முசுலீம்களைப் போலவோ நமக்குள் அரசியல் பிரச்சினைக்கேற்ற ஒற்றுமையும், தகுதியும், திட்டமும் இன்றுவரை இல்லவே இல்லை.
ஆரியர்களுடைய அரசியல் பிரச்சினை, ஆரிய ஆதிக்கமுள்ள இந்து சட்டப்படி மனுமாந்தாதா, இராமன் கொள்கைப்படி ராஜ்ய பாரம் நடைபெற வேண்டியதே ஆகும். மற்றப்படி நாட்டை எவன் ஆண்டாலும் அவர்களுக்கு அக்கறை யில்லை. தங்கள் இஷ்டப்படி, தங்கள் நலனுக்கு ஏற்றவண்ணம் எவன் ஆட்சி நடத்துகிறானோ அவனை இருத்தி வைப்பதும்  மற்றவனை ஒழித்து விடுவதுமே அவர்களுடைய புராண காலம் முதற்கொண்டு நடந்து வந்த கொள்கை ஆகும். இராமாயணக் கதை இந்த நீதியைப் புகட் டுவதே ஆகும்.
இந்து தேச சரித்திரமும் இதைப் பெரிதும் மெய்ப்பிக்கும். இதற்கேற்ற ஒற்றுமையும், ஒன்று பட்ட உணர்ச்சியும், கட்டுப்பாடும்  அவர்களிடம் உண்டு. ஆதலால் இன்றைய நிலையில் பிரிட்டிஷார்கூட அல்லாமல் ஜப்பானியரோ, ஜெர்மானியரோ ஏன் அய்ரோபியரோ, ஆப்பிரிக்கரோ இந்நாட்டைக் கைப்பற்றி விட்ட போதிலுங்கூட, அவர்களிடம் தங்கள் நலனுக்குக் கேடில்லாமல், (ஆரிய மதத்தில் பிரவேசிப்பதில்லை என்பதால்) நடப்பதாக வாக்குறுதி வாங்கிக் கொள்ளுவார்கள். அல்லது அப்படி வாக்குறுதி கொடுக்காதவனையோ, கொடுத்த வாக்குறுதியைத் தவறுபவனையோ விரட்டிவிட்டு வேறொருவனை அழைத்து வந்து வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஆட்சியில் அமர வைப்பார்கள். இந்தச் சக்தி அவர்களுக்கும்,  அதுவே கொள்கையாக அவர்கள் மதத்திற்கும் அதற்குத் திட்டமாக அவர்களது புராண இதிகாசக் கதைகளுக்கும் இருக்கின்றன.

அதுபோலவே முசுலீம்களுக்குள் பெரிதும், பாகிஸ்தான் பிரச்சினை இந்துமத ஆட்சியை விட்டு மீண்டு கொள்ளுவதும், தங்கள் இஸ்லாம் கொள்கைக்கு ஏற்ற ஆட்சியே நடைபெற வேண்டும் என்பதுமாகும். அதற்கேற்ற மதமே அவர்களது மதமுமாகும். அதற்குத் தகுந்த ஒற்று மையும் கட்டுப்பாடும் அவர்களிடம் உண்டு.

ஆனால், திராவிடர்களுக்கு அதுபோல் என்ன இருக்கிறது? திராவிடர்களுக்கு வடநாட்டில் நூற்றுக்கு அய்ந்து பேருக்குக்கூடத் தாங்கள் திராவிடர்கள் என்றோ, தங்கள் நாடு திராவிட நாடு என்றோ தெரியாது. தென்னாட்டவர்களை வடநாட்டார் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ கருதுகிறவர் வெகுவெகு அருமையே ஆகும்.
தென்னாட்டவர்களில் தானாகட் டும், திராவிடர்களில் தாங்கள் திராவிடர்கள் என்றும்,  தங்கள் நாடு திராவிட நாடு என்றும், தங்கள் நாட்டில் ஆரிய சமயமும், ஆரிய புராண இதிகாச காவியங்களும் வந்து தங்கள் நிலையைக் குலைத்து, தங்களை ஆரிய அடிமைகளாகவும், முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், கீழான ஜாதியார் ஆகவும், தீண்டாதவராகவும் செய்து விட்டதாக (திராவிடர்களில்) எத்தனை  பேருக்குத் தெரியும்? இந்த நிலையில் திராவிடர்கள் தங்களுக்கு அரசியல் கொள்கையாகவோ திட்டமாகவோ எதைக் கருத முடியும்? முதலாவது திராவிடர்களிடையில் ஆரியர்கள் போலவோ முஸ்லீம்கள் போலவோ சமுதாயத்திலும், சமயத்திலும் ஒன்றுபட்ட உணர்ச்சியும், தாங்கள் யாவரும் ஒன்றேயென்ற ஒற்றுமையும் குறித்துக் காட்டக், காரியத்திற்குத் தொண்டாற்றக் கட்டுப்பாடும் இருப்பதாக யாராவது கூற முடியுமா? ஆரியர்கள் போலவோ, திராவிடர் களுக்கு ஒரு பொது ஸ்தாபனம் எங்கே இருக்கிறது? ஆரியர்களுக்கு ஆரிய தர்மசபை, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக், கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்தவர்கள் சங்கம் (கிறிஸ்டியன் அசோசியேஷன்) இருக்கின்றன.

திராவிடர்களுக்கோ என்றால் அந்தந்த ஜாதியின் பேரால், அதாவது விஸ்வப் பிராமணர் சங்கம், அக்கினி குல க்ஷத்திரியர்கள் சங்கம், வன்னிய குல க்ஷத்திரியர் சங்கம், நகரத்து வைசிய சங்கம், தொண்டை மண்டல வேளாளர் சங்கம், கார்காத்த வேளா ளர் சங்கம், கொங்கு வேளாளர் சங்கம், முக்குலத்தோர் சங்கம், நாடார் மஹாஜன சங்கம், செங்குந்தர் சங்கம், பேரி செட்டியார் சங்கம், 24 மனை வைசியர் சங்கம், ஆரிய வைசிய சங்கம், நாயுடு சங்கம், வெலம நாயுடு சங்கம், காபு நாயுடு சங்கம், கொல்ல நாயுடு சங்கம், நாயர் சமாஜம், தீயர் யோகம், புலையர் சங்கம், (இன்னும் பல கூறலாம்). இப்படியாகச் சின்னா பின்னப்பட்டுப் ப ல ஜாதிகளும் தங்களைப் பல இனங்களாகக்  கருதிக் கொண்டு, ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல் இல்லாமலும், உண்பன தின்பன தண்ணீர் குடித்தல் முதலியவை கூடத் தடுக்கப்பட்டுக் கட்டுக் குலைந்து நெல்லிக்காய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டியது போல் தனித்தனியாய் இருக்கிறோம்.
இதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, இன்றைய நிலையில் நமக்குச் சுயராஜ்ஜியம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளாகவே, ஆளப்படுபவர்களாகவே தான் இருப்போம்.

ஆதலால் சுயராஜ்ஜிய ஆட்சி இன்றைய ஆட்சியை விட மேலானதாக இருக்க முடியாது என்று சொன்னார். அதாவது ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்தச் சுயராஜ்ஜியத்திலும் ஆட்சி புரியும் என்றும், அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்ஜியத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத் தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.

--------------------- தந்தை பெரியார் --"பிரசண்ட விகடன்" மலரிலிருந்து  "திராவிடநாடு" 25.2.1945).

7 comments:

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


சென்னை - புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர்!


புத்தகக் குவியலிடையே மனம் மகிழ்ந்தார்

புத்தக அரங்கில் தமிழர் தலைவர்

சென்னை, ஜன.17- தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினரின் 36ஆவது புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி மைதானத்திடலில் 11.1.2013 முதல் 23.1.2013 வரை நடைபெற்று வருகிறது. திருவள்ளுவர் நாளன்று (15..1.2013) பகல் 12.30 மணியளவில் தமிழர் தலைவர் கி.வீரமணி புத்தகக்காட்சிக்கு வருகை தந்தார். புத்தகக் காட்சியின் முதன்மை வாயிலில், திருச்சி பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் நை.பூமி நாதன், தமிழர் தலைவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். முதலில் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனப் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்கு (எண் 227) சென்றார்.

அரங்கத்தில் உள்ள இயக்கத் தோழர்களிடம் விசாரிப்புடன்,அரங்கத்தில் புத்தக விற்பனை, மக்கள் விரும்பி வாங்கிடும் புத்தகங்கள் பற்றிய விவரங் களைக் கேட்டறிந்தார். கேட்டுக் கொண் டிருக்கும் பொழுது, எதிர் அரங்கில் உள்ள திருக்குடந்தைப் பதிப்பகத்தின் உரிமையாளர், காங்கிரசு இயக்கப் பிரமுகரும், மூத்த திரைப்பட இயக்குநருமான முக்தா வி.சீனிவாசன், தங்களது அரங்கிற்கு தமிழர் தலைவர் வருகை புரிய வேண்டும் என அழைத்துச் சென்றார். நலம் விசாரிப்புடன், இருவரும் தந்தை பெரியார் கால நினைவுகளில் மூழ்கினர்.

தமிழர் தலைவருடன் திருக்குடந்தை பதிப்பக உரிமையாளர் முக்தா. வி.சீனிவாசன்

தமிழ் ஓவியா said...

முக்தா வி.சீனிவாசன் தான் இயக்கிய தவப் புதல்வன் திரைப்படத்தினை தந்தை பெரியார் பார்த்திட வேண்டும் என விரும்பியது நடைபெறா வேளையில், அவர் இயக்கி, சிதம்பரம் வேணு தயாரித்த சூரியகாந்தி திரைப்படத்தினை தந்தை பெரியார் பார்த்திட்டதை நினைவு கூர்ந்தார்.

பின்னர் தமிழர் தலைவரைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என அன்பு வேண்டுகோள் விடுத்தார். தமிழர் தலைவர் அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்வையிட்ட பொழுதே, அவர் வருகையை அறிந்த பார்வையாளர்கள் பலர் அரங்கத்திற்கு வெளியே தமிழர் தலைவரிடம் கையொப்பம் வாங்கிடக் காத்திருந்தனர்.

கூட்டத்தினரைப் பார்த்த முக்தா சீனிவாசன், இவர்கள் அனைவருக்கும் நீங்கள் கையொப்பம் இடுவதாக இருந்தால் இன்று நீங்கள் வீடு சென் றடைய முடியாது; விடிந்து விடும் எனக் கூறி விடை கொடுத்தார்.

அடுத்து, இராமகிருஷ்ண மடத்தின் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்குள் நுழைந்தார். தமிழர் தலைவரது வருகையை அறிந்துகொண்ட அரங் கத்தின் பொறுப்பாளர், அருகில் சென்று தமிழர் தலைவர் ஆசிரியரது விளக்கங்களுக்குப் பதில் அளித் தார். வேண்டிய புத்தகங்களை எடுத்து அளித்தார்.

புத்தகங்களுக்கு உரிய பணத்தினை அரங்கத்தினர் வாங்க மறுத்த வேளையில், புத்தகம் பணம் கொடுத்துத்தான் பெற வேண்டும் எனும் தனது பழக்கத்திற்கு ஏற்ப உரிய தொகை அளிக்க பணித் தார். இராமகிருஷ்ண மடத்தின் புத்தக அரங்கிற்குள் நுழையும் பொழுது நடுத்தர வயதைத் தாண்டிய இணையர் இருவர் பேசிக்கொண்டது:

வீரமணி எதற்கு இந்த அரங்கத்திற்குள் செல்கிறார்? - இது கேள்வி.

தமிழர் தலைவருடன் கலந்துரையாடிய தமிழ்க் குடும்பத்தினர்.

தமிழ் ஓவியா said...

எதையும் படித்து, ஆதாரத்துடன் பேசும் அவரது ஆர்வமே காரணம் - இது பதில்.

இராமகிருஷ்ண மடத்தின் புத்தக அரங் கத்திலும் பார்வையா ளர்கள், முதியோர், இளைஞர்கள் பலர் தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்து, நிழற் படம் எடுத்துக் கொண் டனர்.

நேராக அங்கிருந்து, எமரால்டு பதிப்பகம் அரங்கத்திற்குச் சென்றார். அதன் உரிமை யாளர் கோ.ஒளிவண் ணனின் புதல்வர். ஒளி. இனியன் ஆசிரியரை வரவேற்றார். ஆசிரியரது வருகையை அறிந்த கோ. ஒளிவண்ணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) செல்பேசியில் தமிழர் தலைவரிடம் பேசி மகிழ்ச்சியினைத் தெரி வித்துக் கொண்டார். அவரிடம் புத்தக விற்பனை பற்றிய செய்திகளை தமிழர் தலைவர் விசாரித்து அறிந்தார். எமரால்டு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளை தமிழர் தலைவருக்கு வழங்கினர்.

அடுத்து தமிழினி பதிப்பகம் அரங்கத்திற்கு வருகை தந்தார். புத்தக விற்பனையில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டிருந்த அரங்கின் பொறுப் பாளர்கள் பின்னர் தமிழர் தலைவரின் வருகையினை அறிந்து கொண்டு ஆசிரியர் அருகில் வந்து உரை யாடினர். சிந்தனை மாறுபாடான, மாற்றுக்கருத்து களை பதிப்பிப்பதில் தமிழினி பதிப்பகம் தனித் துவத்துடன் விளங்குவதை தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினர். சில புத்தகங்களைத் தெரிவு செய்து வாங்கினார்.

ஆர்வமுடன் தமிழர் தலைவரிடம் கையொப்பம் வாங்கும் இளைஞர்கள்.

பின்னர் அடுத்து இருந்த தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust)
அரங்கத்திற்குச் சென்றார். பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் இரெ.இரத்தினகிரி எழுதிய தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும் எனும் புத்தகத்தினை பிற புத்தகங்களுடன் விற்பனைக்கு வைத்திருந்தனர். சற்று அதிக நேரம் பல்வேறு புத்தகங்களை எடுத்து தமிழர் தலைவர் குறுவாசிப்பு செய்தார்.


தமிழ் ஓவியா said...

அரங்கத்தில் இருந்த பெண் பொறுப்பாளர் இனிய, முக மலர்ச்சியுடன் தமிழர் தலைவருடன் உரையாடி அவரது தேவைக் கான புத்தகங்களை எடுத்து அளித்தார்.

எதிர்ப்புறத்தில் இருந்த இசுலாமிய நிறுவன (Islamic Foundation) புத்தக அரங்கத்திற்கு தமிழர் தலைவர் சென்றார். பல்வேறு புத்தகங்களை எடுத்து கண்ணோட்ட வாசிப்பினை (Cursory reading) மேற் கொண்டார். கருப்பு பர்தா அணிந்திருந்த மகளிர் நிறைந்திருந்த அரங்கில் கருப்புச் சட்டை அணிந்த தமிழர் தலைவர் சென்று புத்தகம் பார்த்து கொண் டிருந்தது, ஒருங்கிணைந்த செயல்பாட்டினை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

புத்தகக் காட்சியில் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விட்டு, நிறைவாக, தமிழ் மண் பதிப்பகம் அரங்கத்திற்கு வருகை புரிந்தார். உரிமையாளர் இளவழகனின் புதல்வர் ஆசிரியரை வரவேற்றார். உடன் இருந்த அறிவியல் ஒளி இதழாசிரியர் சிதம்பரம், ஆசிரியர் அவர்களுக்கு அறிவியல் செய்திகளை குழந்தைகள் மனம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், தாம் எடுத்து வரும் பணிகள் பற்றிச் சுருங்கக் கூறினார்.

அண்மையில் தமிழ் மண் பதிப்பக வெளியீடான பாவேந்தம்எனும் புரட்சி தமிழர் பாரதிதாசனின் முழுப் படைப்புத் தொகுதியினை எடுத்து பார்த்தார். வெளியூர் சென்றிருந்த இளவழகனுக்கு தனது வாழ்த்துகளைக் தெரிவிக்கச் சொல்லி விட்டு விடை பெற்றார்.

மதிய உணவு வேளை நெருங்கியது; பார்க்க வேண்டிய அரங்குகள் பல உள்ளன, எனும் தேடுத லோடு தமிழர் தலைவர் புத்தகக் காட்சியிலிருந்து கிளம்பினார். ஆசிரியர் அவர்கள் அரங்கத்தில் நடந்து செல்லும்போதும், அரங்கத்தில் புத்தகங்களைப் பார்க்கும் பொழுது பலதரப்பட்ட, பார்வை யாளர்கள், காத்திருந்து தமிழர் தலைவரைச் சந்தித்தனர். மதநம்பிக்கை கொண்ட பலரும் ஆசிரியர் அவர்களிடம் கையொப்பம் வாங்கி மகிழ்ந்தனர்.

பார்வையாளர்களில் முதியோர்முதல் இளை யோர் வரை, தலைமுறை இடைவெளியில்லாத மக்கள் கூட்டம் தமிழர் தலைவரை சந்தித்து, ஒளிப் படம் எடுத்துக் கொண்டது, அவரது பொதுநலப் பணியின் மகத்துவத்தினை, மாண்பினை, குடும்ப உணர்வோடு கலந்துரை யாடும் பண்பினை பறை சாற்றுவதாக இருந்தது.

பரபரப்பான, செரிவு மிகுந்த தமிழர் தலைவரின் அன்றாடப்பணியில், ஒரு மணிநேரம் புத்தகக் காட்சியில் இருந்தது அவரது புத்தக வாசிப்பினை, செய்தித் தேடலை வெளிக்காட்டும் விதமாகவே இருந்தது. உடன் பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் சென்றிருந்தார்.

வீட்டுக்குத் திரும்பும் பயணத்தின் பொழுது வாங்கிய புத்தகங் களுக்குரிய பணம் கொடுக்கப்பட்டு விட்டதை கேட்டு உறுதி செய்து கொண்டார்.

- நீட்சே

தமிழ் ஓவியா said...

கேள்வி - பதில் சித்திரபுத்திரன்

கடவுள்

கேள்வி: கடவுள் எங்கே இருக்கிறார்?

பதில்: முட்டாள்கள் உள்ளத்தில் இருக்கிறார்.

கேள்வி: கடவுள் எப்போது ஏற்படுத்தப்பட்டார்?

பதில்: மக்கள் காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய் இருந்த காலத்தில்.

கேள்வி: கடவுள் பக்தி எங்கே இருக்கிறது?

பதில்: சிறிது பாகம் மடையர்களிடத்திலும், பெரும் பாகம் அயோக்கியர்களிடத்திலும் இருந்து வருகிறது.

கேள்வி: கடவுளைப் பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் பாடுபடுபவர்கள் யார்?

பதில்: சிறு அளவு மூடர்களும், பெரும் அளவு பார்ப்பனர் களுமேதான்.

கேள்வி: நமது நாட்டில் கடவுள்களால் ஏற்பட்ட பலன் என்ன?

பதில்: ஜாதிப் பிரிவும், பார்ப்பனர் உயர்வும், அயோக்கியத்தன மான வாழ்வும்தான்.

மதம்

கேள்வி: மக்கள் யாவரும் ஒன்றாக இணைய வேண்டுமானால் என்ன ஆகவேண்டும்?

பதில்: மதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இந்துமதம்

கேள்வி: மக்கள் பகுத்தறிவாளர்களாய், சமத்துவம் உள்ளவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, ஒழுக்கம், நாணயம், நன்றி, விசுவாசம் உள்ளவர்களாக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இந்து மதம் என்னும் பார்ப்பன (ஆரிய) மதமும் அதன் சார்பு நூல்களும் தடை செய்யப்பட்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?


பாரத ஸ்டேட் பாங்கு என்பது நாட்டு டைமையாக்கப்பட்ட முக்கிய வங்கியாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் இந்த வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திரக் காலாண்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைய நேரிட்டது.

மதச் சார்பற்ற ஓர் அரசின் நிறுவனம் வெளியிட்ட காலண்டராக அது தோற்றமளிக்கவில்லை.

மாறாக காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற பஞ்சாங்கக் குப்பையாகவும், இந்துமத சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களின் அடங்கலுமாகவே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(h)
என்ற கோட்பாடு ஒன்று இருக்கிறது என்ற நினைப்புக் கொஞ்சம்கூட இல்லாத புராணக் குப்பைத் தொட்டியாக இந்தக் காலண்டர் வெளி யிடப்பட்டுள்ளது.

இராகு காலம், எம கண்டம், குளிகை என்பதோடு நிற்காமல் வாஸ்து நாள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் கஞ்சனூர் பஞ்சாங்கமே தான்!

மாதம் ஒன்று வீதம் 12 தாள்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பின் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய சிறப்பான தகவல்கள் என்ன தெரியுமா?

1) யஷ்கானம் எனும் நாட்டியம்பற்றியது. அதைப் பற்றிய குறிப்புகள் என்னென்ன?

கதையில் நல்லவர்கள் கண்ணுக்கு இனிமையான வண்ணங்களிலும், தீயவர்கள் அல்லது ராட்சச வேடம் ஏற்பவர்கள் அதற்கேற்ற வண்ணங்களில் பயங்கரமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து கொள்கிறார்களாம்.

தீயவர்கள் அல்லது ராட்சசர்களாம் - இதன் பொருளைப் புரிந்துதான்வெளியிட்டு இருக் கிறார்களா? அல்லது அறியாமையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்களா?

புராணங்களில், இதிகாசங்களில் ராட்சசர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்க வில்லையா? தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டே அந்த நாட்டுக்குரிய மக்களைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

இன்னொரு பக்கத்தில் குலசேகர ஆழ்வார் பற்றியதாகும். திருமாலைப் பற்றிப் புகழ்ந்து தள்ளும் பாடல்களும் - விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என்ன தெரியுமா? வாரணாசி என்னும் காசிபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

கங்கைக்கு நிகரான நீருமில்லை. காசிக்கு நிகரான ஊருமில்லை என்ற பீடிகையுடன் இந்து மதத் தலப் புராணக் குப்பை கொட்டப்பட்டுள்ளது - பட விளக்கங்களுடன் அதோடு நிற்கவில்லை. முக்கியமாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியது ஒரு பக்கம் முழுவதும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பிரதாபங்கள் முழுக்க முழுக்க பல்வேறு தோற்றப் படங்களுடன்

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய; சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய மகா குற்ற வாளிபற்றி அரசு வங்கி வெளியிட்ட காலண்டரில் சாங்கோ பாங்கோமாக வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இன்னும் உண்டு; அற்புதங்கள் ஆற்றிய திருஞானசம்பந்தர் பற்றி முழு பக்கத்தில் பல வகை படங்களுடன்;

சட்டப்படி நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிடப்பட்டதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய காலண்டர் அச்சிட்டதற்காக செலவு செய்யப்பட்ட பெருந் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்து பறி முதல் செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் என்றால் எத்தனைக் கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்? அரசு செலவில் இந்துத்துவா பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்துத்துவா சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் - நிதித்துறை இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக சட்டப்படியாக நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்; நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்டேட் பாங்கு என்பது தனியாருடையதோ - குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவருடையதோ அல்ல - எல்லோருக்கும் பொதுவான அரசு சொத்து! அதனை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளதால் சட்டப் படியான நடவடிக்கை அவசியம் தேவை! தேவை!!19-1-2013