Search This Blog

14.4.13

டாக்டர் அம்பேத்கர்பற்றி குடிஅரசு தலையங்கம்


டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிருவாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 45 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசி விட்டுப் போய் இருக்கிறார்.

அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் இருந்தால், எப்படிப் பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய்ப் பேசுவார்களோ அது போலவே பச்சையாய்ப் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத் தக்கதுமான காரியமாகும்.

நம் எதிரிகள் அவரை சர்க்கார் தாசர் என்று சொல்லக்கூடும். அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை. பதவிக்கு அவர் வந்தவுடன், இந்தப் பதவிக்கு நான் வந்ததன் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளி வந்துவிடுவேன் என்று சொன்னார். அது போலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய்க் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.

அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால், அது பூஜ்ஜியம் என்பதோடு, இனத்தார் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை. இனத்தின் தக்க செல்வமோ, செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடிய ஆள்களும் மிகக் குறைவு. 100 க்கு, 99 பேர் ஏழைக் கூலி, தரித்திர மக்கள். இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்குக் கிடைக்கத் தக்கவிதமாகத் தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க அவர்கள் மெச்சும்படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும் இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவைகளையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது, கண்டித்துச் சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலதை தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும்தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன் ஆட்சி, தேசிய சர்க்காரை விட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும் பேசி வருகிறார். மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால், எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாச்சிரம சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்ட விட்டங்களை இலட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.

இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம்; காங்கிரசுக்காரர்கள் வையலாம்; தேசியப் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில்லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று, பதவிக்குப் போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்காகப் பதவி அனுபவிப்பார்கள் பொறாமைப்பட்டு, இந்த சனியம் பிடித்த டாக்டர் அம்பேத்கர் நம்ம யோக்கியதை வெளியாகும்படி நடிக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம். ஆனால், தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும், நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுயமரியாதை அற்ற பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைத் தவிர, மற்ற சமுதாயக்காரர் களில் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர, அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல. ஆனால், மற்றவர்களை விட இவர் சற்று வெளிப்படையாய்ப் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.

உதாரணமாக, டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்குப் பதில் சொல்லும்போது பேசியதைக் கவனிப்போம்.

ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்காகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில், இந்த வரவேற்பு, சடங்கு முறை வரவேற்பல்ல என்பதும், எனக்கு வரவேற்பு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாக இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றி பெற்று எனக்குக் காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.

அடுத்தாற்போல் தேசியப் பித்தலாட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கினார். என்னவெனில்,

தேசிய சர்க்கார் என்றால், பார்ப்பனச் சர்க்கார்தானே. 1937 இல் தேசியம் வெற்றி பெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன் மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செய்வார்கள்? இது மாத்திரமா? பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் பார்ப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்; தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள். இது மாத்திரமா? தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்து வைக்கிற ஆள்கள்தான் வருகிறார்களே தவிர, வேறு யார் வருகிறார்கள்? ஆகவே, தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கு இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார்.
இதற்கு பார்ப்பனர்களாகட்டும், தேசியர்கள்தானாகட்டும் என்ன பதில் சொல்லக்கூடும்? நான்சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்துத் தங்கள் அயோக்கி-யத்தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய, வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் இதெல்லாம் (இப்படிப் பார்ப்பனர் வெற்றி பெற்றது)கடவுள் செயல், அந்தராத்மா கட்டளை என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்து கொள்ள வேண்டியதைத் தவிர, இதற்கு வேறு பதில் இல்லை.

தேசியர்களின் தன்மை இப்படி என்றால் பார்ப்பனரல்லாத கட்சியார் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ஒரு நல்ல கொள்கையையும், பொறுப்பையும் பாழ் அடையும்படி தங்கள் சுயநலத்தையும், வயிறு வளர்ப்பையும், பட்டம், பதவி, உத்தியோகம் முதலியவைகளை மாத்திரம் வேட்டை ஆடுவதில் மூழ்கிக் கொண்டு மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைப்பாக்ள் என்ற கவலையற்ற அதிதீவிர சுயநலக்காரர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துச் சிறிதாவது உறைக்கும்படிச் செய்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமாகக் கன்னிமாரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கரின் ஆசி பெற விருந்து கொடுத்து ஏமாற்ற நினைத்த சென்னைத் தோழர்களுக்கு டாக்டர் வலியுறுத்திய அறிவுரையைக் கவனித்தால் விளங்கும்.

அம்பேத்கர் பேசியதன் தத்துவம்

பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே. அதில் உங்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? அதற்கும் உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன? எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும், 2 ஆவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக்கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானால் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்? பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு முதலாவதும் கடைசியானதுமான கொள்கை உத்தியோகம்தானா? அல்லது உத்தியோகத்தில் சரிபங்கு என்பது மாத்திரம்தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றி வந்தீர்கள் என்பதாகக் கேட்டிருக்கிறார்.
மேலும் அப்படியாவது உத்தியோகம், பதவி, பட்டம் ஆகியவை அக்கட்சியின் மூலம் பெற்று வாழ்ந்தீர்களே, அதற்காக அக்கட்சிக்கு நீங்கள் காட்டிய நன்றி அறிதல் விசுவாசம் என்ன? என்பதாகவும் கேட்டிருக்கிறார்.

மேலும் மந்திரி வேலை பார்த்தவர்கள் எங்கே? சேலம் கூட்டத்திற்கு போனீர்களா? மந்திரிகள் காரியதரிசிகளாய் இருந்து ரூ.500, 1000 மூட்டை கட்டியவர்கள் எங்கே? இவர்கள் தேர்தலுக்குப் பேசுவது தவிர வேறு ஏதாவது பொதுக்கூட்டம் கூட்டி இருப்பார்களா? அல்லது பொதுக் கூட்டத்தில் பேசி இருப்பார்களா? இந்த மந்திரிகளும் சம்பளம் பெற்றது தவிர பார்ப்பனியத்தில் ஏதாவது ஒன்றை விட்டிருப்பார்களா? விட்டிருக்காவிட்டாலும் பார்ப்பனியத்தை வளர்க்காமலாவது இருந்திருப்பார்களா?

இவைகள் எல்லாம் நாசமாகப் போகட்டும். கட்சியின் பெயரால் உத்தியோகம் பெற்ற பெரியவர்களின் யோக்கியதைதான் இப்படி என்றால் கட்சிப் பேரால் உத்தியோகம் பெற்ற வாலிபர்களிலாவது எவனாவது கட்சிக்கோ, கட்சியில் உள்ள மக்களுக்கோ ஏதாவது நன்மை செய்தானா என்பது விளங்கும்படிப் பேசினார்.

மற்றும் கட்சித் தலைவர்கள் பார்ப்பரல்லாத கிராமத்தார்களைப் பற்றி நினைத்தார்களா? எந்தக் கிராமத்திற்காவது எந்தத் தாலுக்காவுக்காவது போய் அங்குள்ள மக்களிடம் கலந்தார்களா? கூட்டங்களுக்குப் போய்ப் பேச்சாளர்களாகப் பேசினார்களா? என்று முள்தைக்கும்படிப் பேசினார்.
மற்றும் கட்சி வீழ்ச்சி அடைந்த பின் மந்திரிகளும் பட்டம் பெற்றவர்களும் பிள்ளை குட்டிகளுக்குப் பதவி, உத்தியோகம் பெற்றவர்களும், மந்திரிகளுக்குக் காரியதரிசியாய் இருந்து பயன் பெற்றவர்களுமான தமிழர் ஆந்திராவுக்குப் போனார்களா? இப்படிப்பட்ட ஆந்திரக்காரர் யாராவது தமிழ் நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தார்களா? அல்லது ஆந்திரர்கள் யாராவது ஆந்திராவில் ஒரு கூட்டத்தில் பேசி இருப்பார்களா? தமிழர்கள் யாராவது தமிழ் நாட்டிலோ, மலையாளத்திலோ ஒரு பேச்சுப் பேசி இருப்பார்களா? என்றும் பொருள்பட அறைந்தார். பதவி அடைந்து பட்டம் பெற்றும், பணம் சம்பாதித்துக் கொண்டு மேலும் மேலே போக ஆசைப்பட்டு வலை வீசிக் கொண்டு அலையும் நீங்கள் உங்கள் நன்றி மறந்த தன்மைக்கும், கவலையற்ற தன்மைக்கும் வெட்கப் படாமல், வருத்தப்படாமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் ஏதோ ஒரு சிறிதாவது வேலை செய்து கொண்டு இருக்கிறவர்களையும், அது போன்ற கட்சித் தலைவனையும் குற்றம் கூறி வீரம் பேசுவதைக் கட்சி வேலை என்று கருதுகிறீர்களே இது ஒழுங்கா?

மற்ற கட்சிகளைப் பாருங்கள். அக்கட்சித் தவைர்களின் தன்மையைப் பாருங்கள். கட்சியின் மக்களைப் பின்பற்றுவோரைப் பாருங்கள். உங்களைப் போன்று குறை கூறித் திரியும் ஆள்கள் அங்கு எதிலாவது யாராவது இருக்கிறார்களா? என்று விளாசி இருக்கிறார்.

உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டீர்கள் என்று எச்சரிக்கையான அறிவுரை பகர்ந்திருக்கிறார்.
விருந்து நடத்தியவர்கள் இவ்வளவு அடியையும், இடியையும் பெற்றுக் கொண்டு டாக்டர் அம்பேத்கருக்கு நன்றி செலுத்திவிட்டு நாங்கள் தலைவரிடம் முழு நம்பிக்கையுடனும் பக்தி விசுவாசத்துடனும் தலைவர் கட்டளைக்கு மறுமொழி கூறாமலும்தான் கொள்ளுகிறோம். அதுதான் எங்கள் கட்சி சம்பிரதாயம் ஆனால் ஜனநாயகம் வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம் என்று பதில் சொன்னார்களாம். அதுவும் யார் சொன்னார்கள் என்றால் சேலம் மாநாட்டுக்கு வந்து பெரியாரைத் தவிர உலகம் முழுவதும் தேடியும் வேறு தலைவர்கள் கிடைக்கவில்லை. நான் ஒரு காலத்தில் தலைவர் சிபாரிசு செய்த சர். சண்முகம் செட்டியார் முதலியவர்கள் கட்சிக்குத் துரோகிகளாகவும், வஞ்சகர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஆதலால் பெரியாரே எங்கள் நிரந்தரத் தலைவர்; அவரை நாங்கள் என்றும் பின்பற்றுவோம். அவரே லெனின், அவரே மார்க்ஸ்; அவரே திராவிட நாட்டுக்கு பிரசிடென்ட் என்று கூறி மக்கள் கை தட்டுதலைப் பெற்றுக் கொண்டு பிழைத்தேன் என்று சொல்லிக் கொண்டு ஓடினவர்களும் ஊருக்கு இரண்டு மைல் தூரத்தில் போலீஸ் பந்தோபஸ்தை வைத்துத் தங்கள் ஆள்-களைத் தவிர வேறு யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வேலைக்காரர்கள் உள்பட 20,30 பேர்கள் இருந்து கொண்டு ஏதோ பேசி எதையோ எழுதிக் கொண்டு நாங்கள் தலைவரை நீக்கிவிட்டோம்; வேறு தலைவரை நியமித்துவிட்டோம் என்று வெளிப்படுத்தின. மூன்றே முக்கால் பேர் வழிகள்தான் இந்த ஜனநாயகம் பேசியிருக்கிறார்கள்.
அது ஒரு புறமிருக்கட்டும். இவைகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தைரியசாலி என்பதும் மனத்தில் உள்ளதை தைரியமாய் பேசுகிறவர் என்பதும், அவரது பொது வாழ்வு பட்டத்திற்கோ, பதவிக்கோ, பணச் சேகரிப்புக்கோ, விளம்பரத்திற்கோ அல்லாமல் ஒரு பொது இலட்சியத்திற்கு என்பதும் நன்றாய் விளங்கும்படி நடந்து வந்திருப்பதோடு சென்னைக்கு வந்ததிலும் அப்படியே நடந்து கொண்டிருக்கிறார் என்பதும் நன்றாய் விளங்கும்.

இதே சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்கள், பிரமுகர்கள், மந்திரிகள், காரியதரிசிகள், மந்திரிகளுடன் சுற்றித் திரிந்து கொண்டு பயன் பெற்றும், பதவி பெற்றும், வயிற்றுப் பிழைப்பும் வாழ்க்கை நடத்திக் கொண்டும் இருந்த மக்களின் யோக்கிதையையும் நினைத்துப் பாருங்கள்.
---------------------- "குடிஅரசு", 30.9.1944

3 comments:

தமிழ் ஓவியா said...


அந்த மாமனிதர் அம்பேத்கர்!



கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய்; தாழ்ந்து

கிடந்தமக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!

விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும்; பேச

வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும்; வாழ

வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு

வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்

எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த

இருள்முழுதும் விலகியதோ? இன்னும் இல்லை!

பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்

பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய் சொந்தத்

திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்;

தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!

அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்

அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!

திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்

துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!

அறியாமை எனும்இருட்டில் கிடந்தும்; ஜாதி

ஆதிக்கத்தின்பிடியில் உழன்றும்; கூட்டில்

சிறைப்பட்டப் பறவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்

கேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப்பட்டும்

தரித்திரராய் வாழ்ந்துமடிந் தழிந்தார்! தங்கற்

தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி

உரிமையொடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்

உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!

ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க

உயர் ஜாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!

சேரி மக்கள் தொட்டுவிட்டால் தீட்டாம் என்றே

தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப்பட்டார்!

வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு

மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்

சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்துத்

தவித்தார்கள்! அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?

பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து

படியேற நினைக்கையிலும் உதவி டாமல்

தள்ளிவிடப் பட்டார்கள்! கல்வி என்னும்

தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!

எல்லார்க்கும் பொதுவென்னும் கோயிலுக்குள்

இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!

கல்லாக இருக்கின்ற காரணத்தால்

கடவுள்களும் கண் திறந்து பார்த்ததில்லை!


ஜாதிமதத்தின் பேரால் கடவுள் பேரால்

தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்

நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்

நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே

நாதியற்றும் நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்

நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!

ஆதிநாளின் கொடுமை இன்று இவையென்றாலும்

அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!


செந்தாமரைசேற்றில் மலர்ந்த தைப்போல்

தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்

வந்துபிறந் தாயேஇச் சமுதாயத்தில்!

விடிவெள்ளியாய் உன்னைக் காண்ப தற்கு

நொந்துதவம் செய்தாரோ அந்த மக்கள்!

நெடுவாழ்வின் துயர்போக்கும் மருந்தே நீதான்!

இந்தபிறப்பில் மட்டும் இன்றி என்றும்

இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!



- கா. முருகையன்

சென்னை -72

தமிழ் ஓவியா said...

தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.14- தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் 13.4.2013 அன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூக்குத் தண்டனை அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான நிலைப்பாடு. இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இந்தக் கருத்தைப் பத்திரிகையாளர்கள் சிலர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வந்தாலுங்கூட, இப்போது இந்தக் கருத்து புதிய வலிவோடு அர சியல் அரங்கமேறியிருப்பதை மனதில் கொண்டு, அதனை மேலும் வலியுறுத்தும் வண்ணம் மீண்டும் ஒரு முறை இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

மரண தண்டனை இருக்கலாமா அல்லது அதை நீக்க வேண்டுமா என்ற பிரச்சினை உலகமெங்கும் மிகப் பெரிதாக எழுப்பப்பட்டு விரிவாக விவாதிக் கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நேற்றைய தினம் (12-4-2013), இந்திய உச்ச நீதி மன்றம் கருணை மனு மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி மரண தண்ட னையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று வழங்கியுள்ள தீர்ப்பு, தூக்கு தண்டனையை எதிர்பார்த்திருக்கும் பலருடைய மனதிலும், ஏன் நம்முடைய எண்ணவோட்டத் திலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு பற்றி இன்று இந்து நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தில், கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதையே மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியமைப்பதற்கான அடிப் படையான காரணம் என்ற அளவில் உச்ச நீதி மன்றம் ஆழ்ந்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பினை இழந்து விட்டது. குடியரசுத் தலைவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக புல்லருடைய கருணை மனுவைப் பரிசீலிப்பதற்கு எடுத்துக் கொண்ட தாமதத்தையே; மரண தண்டனையை மாற்றி யமைப்பதற்கான தகுந்த வழக்கு என உச்ச நீதி மன்றம் தனது நீதிநெறியிலான விருப்புரிமையைப் பயன்படுத்தியிருக்கலாம் (The Supreme Court has lost an opportunity to invoke the sound legal principle that prolonged delay in disposal of mercy petitions could be a key ground for commuting the death penalty. Since the President took over eight years to dispose of Bhullar’s mercy plea, this was surely a fit case for the Supreme Court to exercise Judicial discretion in favour of commutation”) என்று சுட்டிக் காட்டி யுள்ளது.

தமிழ் ஓவியா said...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்ற நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.மு. கழக அரசு செய்தது - இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் - மேலும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் - நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு - இருபதாண்டு காலத்திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களைத் தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித் திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கருணை காட்டப்பட வேண்டும்; அவர்கள் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியது என்ற போதி லும், அவர்கள் அனுபவித்த மிக நீண்ட தண்டனைக் காலத்தைக் கருதிப் பார்த்து மனிதாபிமானத்தோடு மன்னிக்க முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்; இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.

தமிழகச் சட்டப் பேரவையில் 29-8-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110ஆவது விதியின்கீழ் படித்த அறிக்கையில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி யமைக்க ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். அதே முறையைப் பின்பற்றி சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தான் நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும், ஏன் உலகத் தமிழர்களும் ஒரு மனதோடு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இது போன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ அவ்வாறு தமிழகத்தில் தி.மு. கழக அரசு பொறுப் பில் இருந்த போது மாற்றியமைத்து - அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக - தோழர்கள் தியாகு, கலியபெரு மாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தியாகு - நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக இந்தச் சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக் கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ் வளித்து - அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் - மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டு மானால் - அதற்குரிய சட்ட விதிமுறைப்படி ஏற்கனவே கழக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில் - உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டதையே மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.