Search This Blog

9.4.12

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - திராவிடர் இயக்கப் பார்வையா?


பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளான திராவிடர் இனம் - அதிலிருந்து மீட்கப்பட திராவிடர் இயக்கம் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழில் மறுமலர்ச்சி- தமிழினப் பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற வகையில் திராவிடர் இயக்கத்தின் தன்மான இயக்கத்தின் சாதனை பெரிது.

அக்ராசனர் தலைவர் ஆனதும், நமஸ்காரம் வணக்கம் ஆனதும், வந்தனோபசாரம் நன்றியுரையானதும், உபந்நியாசம் சொற்பொழிவானதும் தன்மான இயக்கத்தின், திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனைகளாகும்.

பார்ப்பனீய, சமஸ்கிருதமயம் என்பவை திராவிடர் இன மக்களிடத்திலே இடையிலே புகுந்து சின்னா பின்னப்படுத்தின.

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகர் ஆக முடியாது. தமிழ் அரசர்கள் கட்டிய கோயில் களில் தமிழ் வழிபாட்டு முறை என்ற நிலை தகர்க்கப்பட்டது.

கடவுள் பெயர்களும், தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருதமாகின; தமிழன் இல்லங்களில் பார்ப்பன மயப் பண்டிகைகள் உள்ளே புகுந்தன.

இதன் விளைவு - தமிழர்கள் தங்கள் நிலை திரிந்தனர். இளங்கோ என்றும், அறிவுடைநம்பி என்றும் இருந்த தமிழர்களின் பெயர்களும் கேசவன் என்றும், ஆதிகேசவன் என்றும் (தமிழில் மயிரான் என்று பொருள்) குஞ்சிதபாதம் என்றும் சமஸ்கிருதமாகின.

தமிழர் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாகின. மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று, திருமரைக்காடு வேதாரண்யம் ஆயிற்று, திருமுது குன்றம் விருத்தாசலம் ஆயிற்று. இப்படி தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன.

தீபாவளிக்கும் தமிழர்களுக்கும் உறவு என்ன? தொடர்பு என்ன? ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் எப்பொழுது வந்து இங்கு குடிபுகுந்தன?

தமிழ் ஆண்டு என்று அறுபது பெயர்களைச் சொன்னவர்கள் யார்? அறுபது ஆண்டுகள் எப்படி பிறந்தனவாம்? கிருஷ்ணன் என்ற கடவுளுக்கும், நாரதன் என்ற கடவுளுக்கும் பிறந்ததுதான் 60 தமிழ் ஆண்டுகள் என்று சொன்னதை அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?

தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட அந்த அறுபதாண்டுகளில் மருந்துக்காவது ஒரு பெயராவது தமிழில் உண்டா?

எத்தனை எத்தனைக் கூட்டங்களில் தந்தை பெரியார் எடுத்துக் கூறியிருப்பார் - எழுதிக் குவித்திருப்பார்?

மொழி மான உணர்வும், இனமான உணர்வும் தமிழர்களுக்கு ஊட்டப்பட்டது சாதாரணமான ஒன்றா?

1921இல் தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்ததுதானே தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது? அவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா? அல்லவே! தமிழ் கற்றாய்ந்த கடல் போன்ற புலமை உடையவர்கள் ஆயிற்றே!

மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது தைமுதல் நாள் புத்தாண்டு - திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் என்பது இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று உண்மைகளைப் பின்னணியாகக் கொண்டுதானே சட்டம் இயற்றப்பட்டது.

இதனை அரசியல் கண்கொண்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பார்க்கலாமா?

அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற இனப் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், ஆட்சியின் முதல்வர் இந்தப் பின்னணிகளை மதிக்க வேண்டாமா?

சித்திரை முதல் நாள்தான் தமிழ் ஆட்சிப் பிறப்பு என்று கூறி அந்நாளில் தமிழ் அறிஞர்களுக்கு எல்லாம் அரசு சார்பில் விருது என்று அறிவிப்பது, விதாண்டாவாதமும், வெறுப்பு கலந்த அரசியல் கலவையும் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

எந்தக் கண்ணோட்டத்தில் அதிமுக ஆட்சி சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்தாலும், வரலாற்றின் பெரும் பழிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆளாவதிலிருந்து தப்பித்துவிட முடியாது. திராவிடர் இயக்கத்தில் ஆரியம் புகுந்ததால் ஏற்பட்ட கேடு என்று தான் வரலாறு எங்கும் பேசப்படும்.

திராவிடர் கழகத்திற்கு அரசியல் பார்வை கிடையாது. கொள்கைப் பார்வைதான். அந்த அடிப்படையில் அழுத்தமாகக் கூறுகிறோம். சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது திராவிடர் இயக்கப் பார்வையல்ல - ஆரியக் கலாச்சாரப் பார்வையே!

-----------------------”விடுதலை” தலையங்கம் 9-4-2012

6 comments:

தமிழ் ஓவியா said...

சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமா? ஆரியம் தமிழ் உணர்வை மதிக்குமா? மிதிக்குமா?


- கலைஞர் கடிதம்

சித்திரையல்ல தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டின் தொடக்கம் என்று தந்தை பெரியார் மற்றும் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட புலவர் பெரும் மக்களின் உணர்வை ஆரியம் மதிக்குமா? மிதிக்குமா என்று கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.4.2012) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதம் வருமாறு:

உடன்பிறப்பே,

நான் நேற்றையதினம் எழுதிய கடிதத்தில், மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்க மறுத்து ஆரியமாயைக்கு கைலாகு கொடுத்து விட்டார் ஜெயலலிதா! - விரைவில் வருகின்ற சித்திரை முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம் என்று எழுதியிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலேயே ஏடு களில் வந்த செய்தி, வாய்மொழி ஆணையாக அல்ல, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள செய்தி, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும் என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சரே பங்கேற்று விருதுகளை வழங்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் முக்கிய திட்டங்களுக்கு முற்றுப் புள்ளியா?

நான் நேற்றையதினம் எழுதியிருந்ததைப் போல கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தது முதல், அதுவே நிரந்தர மான வெற்றி - இனி தோல்வி என்பதே இல்லை என்ற இறுமாப்பில்; தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கியத் திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள். 23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத் தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெரு மக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சை யப்பன் கல்லுரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றி னைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண் டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத் தாடை புனைந்து தமிழ்மானம், தன்மானம் போற் றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப் பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார். தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெருமகிழ்ச் சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பு இது என்ற ஒன்று போதாதா ஜெயலலிதாவுக்கு! உடனே அதற்கு எதிர் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார்.

தமிழ் ஓவியா said...

தமிழர்களின் முடிவு

மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப்பிள்ளை, சைவப் பெரி யார் சச்சி தானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வெங் கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள் ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டா கப் பின்பற்றுவது;

2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;

3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.

தந்தை பெரியார் பங்கேற்ற மாநாட்டில்....

அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் கூறியது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும், விவசாய வாழ்வு சார்ந்தும் தைத் திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச் சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறி ஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக் கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடை முறைப் படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங் களுக்கும் அழிக்க முடியாத சில அடை யாளங்கள் உண்டு. தமிழர் களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடை யாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக் கிறது.

அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலா கவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக் கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும் என்று எழுதி யிருந்தார்.

மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய் வார்கள். ஊரெல் லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங் களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண் டாடுகிறார்கள் என்று விளக்கியுள்ளார்.
ஆதாரம் இல்லையா?

ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதார மும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவ தற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண் படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்ல முயற்சியில் நஞ்சைக் கலந்து நசுக்குவதைப்போல், தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற பெரும் பிற்போக் குத் தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள். அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.

தமிழக அரசின் அறிவிப்பு வந்த அந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள், இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்து திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடு வதில் என்ன தவறு? என்றார்.

தந்தை பெரியார், கி.வீரமணியின் கண்டனம்

தமிழ் ஓவியா said...

தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.

1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடை பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணிய மும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது. இப்படி யெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக்கொண்டு வரப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டுவந்தது. தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது அப்படியே உயிரோடு இருக்கலாமா என்று எப்போதும் எண்ணுகின்ற அம்மையார் ஜெய லலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டுவிட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வினால் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்ட போது அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங் குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன். அதன் பின்னர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேத னைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித் திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மை யாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய இந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக் கிறேன்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் கேடுகள் தமிழுக்கும், தமிழகத் திற்கும் நேர்ந்து வருகின்றன

என்பதைக் காணும் போது நெஞ்சம் விம்முகிறது! மறைமலை அடிகளா வது மண்ணாங் கட்டியாவது! பாரதிதாசனாவது பலநூறு புலவர்களாவது! இவர்களையெல்லாம் மதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது! ஆரியம், இவர்களையும் இவர்களது கொள்கை களையும் தமிழ் உணர்வுகளையும் காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்கவே மதிக்காது என்பதற்கு தமிழக அரசு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம்! புத்தியுள்ள தமிழா; இதை நீ புரிந்துகொண்டால் சரி!

அன்புள்ள,
மு.க 9-4-2012

Seeni said...

ayya periyaar !
sonnathu-
unmai!