Search This Blog

7.4.12

ராமன்கட்டியபாலத்தைஅந்தராமனேஇடித்துவிட்டான்!


சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் - நிறைவேற்றப்பட்டு, கப்பல்களின் போக்குவரத்து நடைபெற்று வருவாய் வந்து சேர வேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத்தின் குறுக்கே புராணக் குப்பைப் பாத்திரமான ராமனைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு குளறுபடிகளைச் செய்து விட்டனர்.

ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.


ராமன் கடவுள் அவதாரம் என்றால் அவன் எய்த அம்பு யார் யாரையோ, எதை எதையோ, துளைத்துச் சென்று, சீதை மீது இராவணன் கொண்ட ஆசையின் அணுக்களை எல்லாம் குத்திக் குதறி, மீண்டும் இராமனிடமே வந்து சேர்ந்தது என்று சொல்வதில் இந்துத்துவா வாதிகளுக்கும், சுப்பிர மணிய சாமிக்கும், அதிமுக பொதுச் செயலாள ருக்கும், நம்பிக்கை இருக்குமேயானால், அந்த ராமன் பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ள ராமனால் முடியாதா? ராமன் பாலத்தைக் காப்பாற்ற இந்த அற்பமானிடர்கள் யார் என்ற கேள்வி எழாதா?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அவர்கள் நம்பும், ஆதாரம் காட்டும் அந்தப் புராண நம்பிக்கையின் அடிப்படையிலேயே கேட்கிறோம்.

ராமன் கட்டிய பாலத்தை அந்த ராமனே இடித்து விட்டான் என்று சேது புராணமே கூறுகிறதே. இதற்கு என்ன பதில்?

சேது புராணம் என்ன? கம்ப இராமாயணமே கூறுகிறதே. மீட்சிப் படலம் 17 ஆவது பாடல் என்ன கூறுகிறது?

மரக்கால் மியங்க வேண்டி
வரிசிலைக் குதையாற்
கூறித் தருக்கிய
விடத்தினை எனும் பாடலில் போர் முடிந்த பின்னர் ராமன் புஷ்பக விமானத்தில் பறந்து செல்கையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இனிது செல்லும் பொருட்டு தனது வில்லின் நுனியால், சேதுவை ராமனே உடைத்தார் என்று கம்பநாட்டாழ்வாரே சொன்ன பிறகு இந்த இந்துத்துவ வாதிகள் யார்?

ஒன்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளும், மதமும், சாத்திரங்களும் மக்கள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையானது என்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறதே. அது எவ்வளவு பெரிய உண்மை என்பதற்கு ராமன் பாலத்தைக் காட்டி மக்கள் நலத் திட்டமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குகிறார்களே இது ஒன்று போதாதா?


எந்த காட்டு விலங்காண்டிக் காலத்திலோ எந்த ஒருவனாலோ கிறுக்கப்பட்ட குப்பைகள் எல்லாம் அறிவியல் எழுச்சி மிகுந்த 21 ஆம் நூற்றாண்டில் அழுக்குத் தலைகளைத் தூக்கிட அனுமதிக் கலாமா?

உலகம் தட்டை என்று மதம் சொன்னது என்பதற்காக அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கலிலியோ சொன்னதற்காக அன்று அந்த விஞ்ஞானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அப்படி செய்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டு கலிலியோவைப் பற்றி கல்வி நிறுவ னங்களில் சொல்லிக் கொடுங்கள் என்று தவறை உணர்ந்த நிலையில் அறிவிப்பைக் கொடுத்துள்ளார் கத்தோலிக்க மதக்குருவும், வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப்.

அதே நேரத்தில் இந்த இந்துத்துவாவாதிகளின் புத்தியும் போக்கும் என்ன? 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமன் பாலம் கட்டினான் என்று இன்றைக்கு வரை, பிடிவாதம் காட்டுகிறார்களே.

எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைப்பற்றித் தானே விமர்சனம் செய்கிறீர்கள். கிறித்துவ மதம் பற்றிப் பேசுவதில்லையே என்று கேட்கும் இந்து அபிமானப் புத்திரர்கள், காலத்துக்கேற்ப மறுபரிசீலனை செய்யத் தயாராக இருக்கும்அந்த கிறித்துவ மதத்தையும், மாறுதலுக்குத் தயாராக இல்லாத தங்கள் இந்து மதத்தையும் ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளட்டுமே!

ராமன் பாலம் என்ற பொய் மூட்டையை அம்பலப்படுத்துவதன் மூலம் இந்து மதத்தின் யோக்கியதையை நாடெல்லாம் தோலுரித்துக் காட்ட தோழர்களே புறப்படுங்கள்!

-------------------"விடுதலை” தலையங்கம் 7-4-2012

9 comments:

Seeni said...

sarithaan!

ungal vaatham!

தமிழ் ஓவியா said...

இராமர் பாலம் இருப்பதாய்க் கூறுவது அசல் மோசடி அயோக்கியத்தனம்! புராண ஆதாரம் இதோ!


- மஞ்சை வசந்தன்

இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் எடுத்துச் சொல்லும்போது, இல்லை யில்லை. இது எங்கள் மத நம்பிக்கை. எங்கள் புராணங்கள் கூறும் செய்திகளின்படி நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு விரோதமாக அதை இடிக்கக் கூடாது என்று எதிர்வாதம் செய்வதோடு, இன்று உச்சநீதிமன்றம் வரைச் சென்று எங்கள் நம்பிக்கையின் சின்னமான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.

ஆனால், உண்மை என்னவென்றால், புராணத்தையே படிக்காத அடி முட் டாள்கள், அரைவேக்காடுகள், அயோக் கியர்கள் பரப்பும் வதந்தியே இராமர் பாலம் என்பது. இதை நாம் சொல்ல வில்லை. புராணமே சொல்கிறது.
இராமர் பாலத்தை, இராமரே தகர்த்தார்:-

சேது புராணம் செப்புவது என்ன?

இராமர் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், அயோக்கியத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

இராமர் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமர் கையாலே, தனது வில்லினால் சேது அணையை தகர்த்து அழித்து விட்டார் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.

அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமர் பாலம் அமைத்தார் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப்பகுதிக்கு இராமர் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விட்டார் என்கிறது சேது புராணம்.

தமிழ் ஓவியா said...

இராமர் பாலம் அமைத்ததையும், பின் அதை அவர் தகர்த்ததையும் கூறும் சேது புராண பகுதி இதோ: மிதவை அணை கட்டியது எப்படி?

இலங்கைக்குப் போக வேண்டு மானால் வானராதிகளால் சமுத்திரத் திற்கு அணைகட்டி அப்பாலத்தில் நடந்துபோக வேண்டுமென்று சொல்ல சுவாமியும் அந்தவார்த்தையை ஒப்புக் கொண்டு சமுத்திரமும் ஆழம் நீள மறிந்து அணையைக் கட்ட வருணனை நோக்கி ஏழுநாள் தர்ப்பாசனத்தில் வருணமந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருந்தார். அஃதறிந்து வருணணும் வராததுகண்டு க்ஷணத்தில் சுவாமிக்கு கோபம் வந்து பாணத்தைப் பிரயோகஞ்செய்தார். வருணனும் பயந்து சரணாகதியடைந்து தோத்திரமுஞ் செய்தான். சுவாமியுந்தயவுவந்து இச் சமுத்திரத்தின் ஆழமும் இலங்கைக்குப் போக நீளமென்னவென்று கேட்டு அணை கட்ட வேண்டியதையுஞ் சொல்ல வருணனுங்கேட்டு சுவாமி இவ்விடமிருந்து இலங்கைக்கு நூறுயோசனை தூரமிருக்கின்றது. ஆழங்காணக்கூடாது அணை போட வேண்டுமானால் போட்டகல் மிதக்கும்படி வரப்பிரசாதங்களினால் பிறந்திருக்கின்றான், வானரப்படைத் தலைவரில் நளனென்று ஒருவன் சுவாமியுடன் வந்திருக்கின்றான். அவன் பூர்வஜன்மத்தில் மயனாகிய சிற்பனாக் கும். அவனுக்கு சுவாமியின் உத்தரவு கொடுத்து வானரப்படைகளால் ஒத்தாசை செய்தால் அவனும் கட்டு வானென்று சொல்ல, சுவாமியும் அவனை அழைத்துப் பரிசீந்து நீரிலே போட்டால் மிதக்கும்படி உன் பிதா வினுடைய வரப்பிரசாதம் பெற்ற வனாகலின் அனுமார் முதலாகிய வானரப்படை வீரர்களான வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பர்வதங்களை வாங்கி உன்கையினால் இலங்கைக்குப் போகும்படி வருண னுடைய முதுகின் பேரில் அணை கட்டென்று ஸ்ரீ ராமசுவாமி வரப் பிரசாதங் கொடுத்தருளி, யாதொரு விக்கினங்களும் வராமல் நிறைவேற் றும்படிக்கு விக்கிநேஸ்வரனைப் பூசித்து அனுகிரகம் பெற்று அப்பால் நவக் கிரகங்களையும் விதிப்படி நவபாஷாண ஸ்தாபிதஞ்செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து அப்பால் சனிப்பீரிதியாய் எண்ணெயை வைத்து

தமிழ் ஓவியா said...

சிவப்பிர திஷ்டை செய்து திலதீஸ்வரரை பூசித்து இவர்களுடைய அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு நளனுக்கு சேதுபந்தனத்துக் குத் தேங்காய் தொட்டுக் கொடுத்து அனுமார் முதலிய பெரியோர்களான படைத் தலைவரையும், வானரப் படைகளையும் நாலுதிக்குகளிலும் போய் பருவதங்களைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கட்டளையிட ஸ்ரீ ராமருடைய வாக்கியப்படி வானராதி களெல்லாம் பருவதங்களை, சங்கை யில்லாமல் கொண்டுவந்து மேன்மேலும் கொடுக்க ஸ்ரீராமசுவாமியும், லக்ஷ்ம ணரும், ஐயம்ஜயமென்று வாக்குக் கொடுக்க நளனானவன் வாங்கிக் கட்டின திருவணையானது நவபாஷா ணம் முதல் தர்ப்ப சயனம் மத்தியாக புல்லாரண்யம் கடைசியாய் ஈசான்யதிக்கு அக்கினி திக்களவாய்ப் பத்துயோசனை விஸ்தீரணம் அகலமும் அதிலிருந்து அக்கினிதிசை பிரவேசமாய் தெற்குமுகமாய் இலங்கையை நோக்கிப் பவளமால் மலைவரைக்கும் நூறு யோசனை நீளமுஞ்செய்து சேதுபந்தன முடிவாயிருக்கும். அப்படி ஸ்ரீராமசுவாமியாலே அநேக நதிகள், சுனைகள், ரிஷிகள், சஞ்சாரஞ் செய்துக் கொண்டிருந்த பருவதங்களை ஸ்ரீராமர் வாக்கியத்தின்படி வானராதிகளால் கொண்டுவந்து கொடுக்க நளன் வாங்கி அடைக்கின்றபோது சமுத்திரத்தை எப்போதுங் கண்பார்க்க வந்த ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி நடக்கும்போது பட்டபாதாரவிந்தங் களிலுள்ள சங்கு சக்கரரேகைகள் சேதுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அத்தகைய பருவதங்கள் சங்கு சக்கரங்களில் அலைமோதிச் சத்தத்துடன் ஆடம்பரஞ் செய்து கெர்ச்சிதங் களைப் பண்ணி தென் சமுத்திரமானது மகா ஆனந்த சந்தோஷங்களை யடைந்து கொண் டிருக்கும்படி அலைமோதுகின்றன. சமுத்திர ஜலத்துக்கு சேது தீர்தமென்று பெயர் அநேகயுகங்களாய்ப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.

இராமர் பலத்தைத் தகர்த்தது எப்படி?

மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபி ஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்திறைஞ்சப் புட்பக விமானத் திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்தவாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான் சுவாமீ வேதவேதாந்த மூர்த்தியே தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறே யிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்குவரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேதுவாகிய அணையை சோதிக்க வேண்டுமென்று சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனதுகரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.

தமிழ் ஓவியா said...

மேலே கண்ட புராணக் கதையிலிருந்து கீழ்க்கண்டவை உறுதி செய்யப்படுகின்றன.

1. இராமர் பாலம் கடலுக்குள் அமைக்கப்பட்ட மணல் பாலம் அல்ல.

2. இராமர் பாலம் மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல் என்பதற்கு கடல் நீரின் மேல் என்பது பொருள்).

3. இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமர் ஏற்று, இராமர் பாலத்தை இராமரே தகர்த்து விட்டார். அதுவும் எப்படித் தகர்த்தார்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமர் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தார்.

இந்த மூன்று செய்திகளும் உறுதி செய்யும் உண்மையென்ன?

1. தற்போது கடலுக்குள் உள்ள மணல்மேடு இராமர் பாலம், கடல் நீர் மீது மிதக்கும்படியான மிதவைக் கற்களால் அமைக்கப்பட்டது. எனவே இவர்கள் இராமர் பாலம் என்று கூறும் மணல் மேடு இராமர் பாலம் அல்ல. அது இயற்கையாய் உருவானது.

2. இராமர் கட்டிய பாலத்தை இராமரே தகர்த்து அழித்து விட்டார். எனவே இராமர் பாலமே இல்லை.

3. மத நம்பிக்கைக்கு அடிப்படை புராணம். புராணமே இராமர் பாலம் அப்போதே இராமனால் அழிக்கப்பட்டு விட்டது என்றுகூறி விட்டபின், இராமர் பாலம் இருப்பதாகக் கூறுவது மோசடியல்லவா? அயோக்கியத்தனமல்லவா?

சுப்பிரமணியசாமியும், சோவும், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் பதில் சொல்ல வேண்டும். உங்கள் புராணமே இராமர் பாலம் இல்லையென்று சொல்லவிட்டபின், எதை வைத்து இராமர் பாலம் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?

எனவே, தமிழக முதல்வர், தன் கோரிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.

சுப்பிரமணிய சாமி வழக்கை திரும்பப் பெற வேண்டும். சூத்திரதாரி சோ அறிவு நாணயமிருந் தால் நேருக்கு நேர் நின்று பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசு, இந்த புராண ஆதா ரத்தை அறிவியல் அறிக்கையை அடிப்படையாக வைத்து இராமர் பாலம் இல்லையென்று அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழர்கள் இதற்காகப் போராட வேண்டும். உண்மை நம் பக்கம். வெற்றி நமதே! 7-4-2012

தமிழ் ஓவியா said...

ஜோதிடமோசடி கழகத் தோழர்களால் முறியடிப்பு


தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு பகுதியில் நெய்வாசல் அருகிலுள்ள குல மங்களம் மற்றும் தாந்தோனியில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி (பொதுமக்களிடம்) விவசாய கூலி வேலை செய்யும் மக்களிடம் ரூ.1500-லிருந்து ரூ.2500 வரை ஏமாற்றி பிடுங்கிய கரூர் பசுபதி பாளயத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் என்பவரும் அவரது மனைவியும் ஜோதிடம் பார்ப்பதாக ஒரு வாரமாக வசூல் செய்து வந்தனர். அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததின் பெயரில் அப்பகுதிக்கு சென்று தஞ்சை ஒன்றிய தி.க. அமைப்பாளர் போட்டோ மூர்த்தி தாந்தோனிப் பகுதியைச் சேர்ந்த பால சுப்பிரமணியன், மஞ்சுளா இல்லத்தில் 3 மணி நேரம் தங்கியிருந்தனர். ஜோதி டரும் அவர் மனைவியும் மாலை 6 மணிக்கு அங்கே வந்தபோது அவர்களை மடக்கி விசாரித்த போது நாங்கள் ஒவ்வொரு வீட்டிலும் முந்நூறு நானூறு வசூல் செய்தோம் என்று தவறான தகவலைக் கொடுத்தனர். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கழகத் தோழர்களிடம் வீட்டுக்கு வீடு ரூ.1500 முதல் 2500 வரை வாங்கியுள்ளனர். பொய் சொல்லுகிறார்கள் என்றனர். விசாரித்ததில் உண்மை தகவல் வந்தது அவர்களிடம் விசாரித்ததில் ரூ.1500 முதல் 2500 வசூல் செய் துள்ளனர். செவ்வாய் தோஷம், பில்லிசூனியம் நீக்கித் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கு எத்தனை நாள் ஆகும் என்று கேட்டதற்கு 48 நாளில் கைகூட வில்லை என்றால் வசூல் செய்பவர்களிடம் பணத்தைத் திரும்ப கொடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

உங்களை எப்படி நம்புவது என்று கேட்டதற்கு நாங்கள் வருடா வருடம் வருவோம் என்று கூறியுள் ளனர். கழகத் தோழர்கள் மடக்கி மடக்கிக் கேட்டபோது உண்மையை ஒப்புக் கொண்டனர். எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் இனிமேல் வரமாட்டோம். இவர்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறினர். பாலசுப் பிரமணியனிடம் 800 முன்பணமாக வாங்கியதை திருப்பிக் கொடுத்து தலைதெறிக்க ஓடி விட்டனர்.
சபாஷ் கழகத் தோழர்கள்! (தகவல்: போட்டோ மூர்த்தி (தஞ்சை ஒன்றிய அமைப்பாளர்) தி.க. 7-4-2012

தமிழ் ஓவியா said...

வடமொழியில் சிபாரிசா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார்
ஒரு சொல்லால் ஒரு சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடிவந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?
-_ குயில்
புதுச்சேரி 12.8.1958

தமிழ் ஓவியா said...

ரவிசங்கருக்குக் கண்டனம்:


டிரினடி மிர்ரரில் கடிதம்

வேலுக்குடி கிருஷ்ணன் ஆற்றும் பாகவத சொற்பொழிவைக் கேட்கும்படி எனது மனை வியை நான் வற்புறுத்தி யிருந்தேன். அவரது பேச்சு நடையும், அவர் கூறும் எடுத்துக்காட்டுகளும் ஆர்வம் அளிப்பவையாக இருக்கும். ஒழுக்கத்தைப் பற்றியும், மக்களும் துறவிகளும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தைப்பற்றியும் அவர் பேசுவதைக் கேட்ட பிறகு, விளம்பரம் தேடிக் கொள்ளும் மட்டரகமான ஆவல், புத்தர், சித்தர்களைப் போல மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமற்றவர்களாக இருப்பது ஆகியவைகளைக் கண்டு இன்றைய ஆன்மிகக் குருக்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி நினைத்து நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். துறவிகள் ஆடம்பரமாக வாழ்வதும், ஆன்மீக குருக்கள் பாலியல் விளை யாட்டுகளில் திளைப்பதும், பக்கீர்கள் பில்லி சூன்யத்தில் ஈடுபடுவதும் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தொல் லைகளை உருவாக்கி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகை யில் பேசியும் செயல்பட்டும் வரு கின்றனர்.

அன்னா ஹசாரேயுக்கும் அரசுக்கும் இடையில் தூதுவர்களாகக் கூறிக் கொண்டு செயல்பட்ட சிறிசிறீ சங்க ரும், ராம தேவும் மக்கள் கவனத்தைக் கவரவும் இல்லை. பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை.

அண்மையில் சிறீசிறீ ரவிசங்கர் தெரிவித்த கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு எந்தப் பள்ளிகளையும் நடத்தக் கூடாது; அரசுப் பள்ளிகளில்பயின்ற மாண வர்களே வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டுகளாக மாறுகின் றனர் என்று அவர் கூறியதுதான் இது. இத்தகைய தவறான கருத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தார்; மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது.

துறவிகளும், ஆன்மிகவாதிகளும் மக்களை சரியாக வழி நடத்திச் செல்ல வேண்டுமே தவிர, அவர்களைக் குழப் பக் கூடாது. அரசியலில் தலையிட்டு ஊடக விளம்பரத்தைத் தேடுவதுதான் அவரது நோக்கம். ஒரு ஆன்மீக வாதி எப்படி இருக்கக்கூடாது என்ப தற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு சிறீசிறீ ரவிசங்கரே.

(தகவல்: கு. பஞ்சாட்சரம் மாவட்ட கழக செயலாளர், திருவண்ணாமலை 7-4-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துளிகள்


ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை. நாம் பயப்படுவதால்தான் அது கஷ்டமாகிறது. - -_ செனகா.

உன்னை யாராவது ஒரு தடவை மோசடி செய்தால் அது அவன் தவறு. மறுதடவை மோசடி செய்தால் அது உன் தவறு. - _ ருமேனியா பழமொழி.

பட்டப்படிப்பு புட்டிப்பால் போன்றது. சிந்தனை பசும்பால் போன்றது. அனுபவம் தாய்ப்பால் போன்றது. - _ ஜீவா றீ இப்போது செய்வதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்றும் சிறப்பும் வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே. _- சாக்ரடீஸ்.

பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசின வார்த்தைகள் உனக்கு எஜமான் - _ ஆங்கிலப்பழமொழி.