Search This Blog

1.2.11

சபரிமலை மகரஜோதி மர்மம்

(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது)


சபரிமலையில் தெரியும் மகரஜோதி யும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது?

மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்பட்டு வருவதால் இதில் எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என பணம் கொழிக்கும் சபரிமலையைத் தற்காத்துக்கொள்ளும் பதிலையே தந்தது.

கேரள முதலமைச்சர் அச்சுதானந் தனும் மகர ஜோதி என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மகர ஜோதி வடிவில் பக்தர்கள் கடவுளைக் காண்கிறார்கள். எனவே இதை மதத் தலைவர்களை வைத்தோ, விஞ்ஞானி களை வைத்தோ விசாரனை செய்ய அவசியமில்லை. என பத்திரிகை களிடையே பேட்டியளித்தார்.

ஆனால் கேரள கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரனோ... மகர ஜோதியை பொன்னம்பம்பல மேட்டில் அங்குள்ள ஆதிவாசிகள்தான் ஏற்றுகிறார்கள். அது மத நம்பிக்கைக்குரிய பிரச்சினை என்பதால் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

இதைக் கேட்டு சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரோ, மகர விளக்கு வேறு; மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது வானில் அந்நாளில் உதிக்கின்ற நட்சத்திரம். மகர விளக்கு என்பதுதான் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது... என கொடுத்த புது விளக்கம் மூலமாய் மகர ஜோதியை அய்யப்ப பக்தர்கள் தம் நம்பிக்கையி லிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்ற தன் அக்கறையை ரகசியமாக வெளிப்படுத்தினார்.

இப்படியான நிகழ்வுகளுக்குப் பிறகு... ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மலையில் தோன்றும் ஒளியைத்தானே மகர ஜோதி என நாம் தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் பார்த்தோம் என நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களும் பொதுமக்களும் குழம்பிப்போனார்கள்.

உண்மையில் சபரிமலை மகர ஜோதியின் ரகசியம் என்ன? மகர விளக்கு என்பது என்ன? என்ற கேள்வி களோடும், மகர ஜோதியின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தவிப்போடும் இதுவரை மகர ஜோதி காண வந்து பலியாகிப் போன பக்தர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என உயிர் களின் மீதான கரிசனத்தோடும், சபரி மலை பொன்னம்பல மேட்டிற்குள் செல்ல நக்கீரன் உறுதியெடுத்தது, களமிறங்கி யது.

தொடர்ந்து பல வருடங்களாய் மகர ஜோதி பொய்யான ஜோதி என போராடிக்கொண்டிருக்கும் சுகுமாரனும் நம்மோடு வருவதாய்ச் சொல்ல... லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் சாமி யப்பா அய்யப்பா... சரணமப்பா அய்யப்பா... என சரணம் சொல்லியபடியே கேரளாவில் எந்த பத்தினம் திட்டா வழியாக சபரிமலையின் பம்பைக்குச் செல்கிறார்களோ... அதே வழியிலேயே நாம் பயணித்தோம்.

இந்தப் பயணம் நக்கீரனின் அசாத்தி யமான பயணம். அய்யப்பன் மீதான பக்தியில், எங்கிருந்தோ விரதம் இருந்து, குழந்தை குட்டிகளோடு வரும் மனித உயிர்கள் ஒரு புழுவாக நெரிசலில் மிதிப்பட்டு மடிவதைக் காணச் சகியா மலேதான், இந்தப் பயணத்தை நக்கீரன் தேர்ந்தெடுத்தது. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது பயணம் கடும் பனிக்கிடையே ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காரில் பயணிக்க முடியும் என்பதால், கேரள மலையாள நண்பர்களையும் கூட்டிக்கொண்டு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு சென்றோம்.

சபரிமலை பம்பைக்குப் போகும் வழியில் பிலாப்புள்ளி என்ற இடத்தி லிருந்து வலது புறமாய் பிரியும் பாதை தான் மகர ஜோதி தெரியும் பொன்னம்பல மேட்டிற்கு செல்லும் வழி. அதன் ஊடாக அந்த அடர்காட்டுக்குள் பயணத்தைத் தொடர்கிறோம்.

அந்தக் குறுகலான பாதையில் கார் லைட் வெளிச்சத்தில் தெரிகின்றன - பாதையெங்கும் கொட்டிக் கிடக்கும் யானைகளின் சாணிகள். இடையிடையே குரங்குகளும், சில வகையான பாம்பு களும் நாம் கடக்கும் பாதையை மறித்து கடக்கின்றன.

அந்தக் குறுக்குப் பாதை யில் நின்று மறிக்கிறது ஒரு காட்டெருமை பிரேக்கை அழுத்திக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கும் நம் கார் டிரைவரின் சாமர்த்திய சப்தத்தில் பாதையை விட்டுவிட்டு மரங்களுக்குள் ஓடிப்போனது காட்டெருமை.

வெகு தூரத்தில் கேட்கும் யானைகளின் பிளிறல்கள் அடிக்கடி நம் காரின் பின்னாலும் கேட்கிறது. திடீரென ஒரு வளைவில் நம் கார் நிறுத்தப்படு கிறது. அந்த இடம் ஃபாரஸ்ட் செக்போஸ்ட் எவிடே நிங்களு போறது? என கேட்கும் செக்போஸ்ட் ஃபாரஸ்ட் காரனிடம் குமுளியானு என டக்கென சொல்கிறார் நம் நண்பர்.

காரினுள்ளான அந்த ஃபாரஸ்ட் காரரின் தேடலுக்குப் பிறகு அவரிட மிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு மறுபடியும் பயணம் தொடர்ந் தது. போகப்போக அந்த அடர்காடு ஒரு பெரும் மலையாகிவிட்டது. மலையேற முடியாமல் திணறிக்கொண்டு மலை யேறும் நம் கார், ஒரு மாட்டு வண்டியின் வேகத்திற்குக் குறைந்து போனபோது மலையில் வெளிச்சம் பரவத் தொடங்கி யிருந்தது.

மலைக்குள்ளான அந்தப் பயணத்தில் எந்த விலங்கு நின்று நம்மை மறிக்குமோ என நமக்குள் ஒரு பயம் படரும் போதேல்லாம் தூரத்தில் தெரியும் பாறைகள் எல்லாம் யானைகளாகத் தெரிந்தன.

காக்கி டேம், யானைத் தோடு டவர், பச்சைக்காணம், பாம்படம் செக்போஸ்ட் என 120 கி.மீ. கடந்து போய்க்கொண்டி ருக்க... கொச்சு பம்பா என்ற இடத்தோடு நம் வண்டி நின்றது. அந்தப் பொன்னம் பல மேட்டிற்குப் போக குறுக்கு வழி இங்கேதான் இருக்கிறது என்ற சுகுமார னின் தகவலோடு காரை விட்டு இறங் கினோம்.

பொன்னம்பல மேட்டின் கீழ் நிற்கும் நாம்... ஆகாசம் தொடும் பொன்னம்பல மேட்டு மலையை பிரமிப்பாய் பார்த்தபடி, அந்த மலைக்குக் கீழ் வசிக்கும் மனிதர்களிடம் மகர ஜோதியைப் பற்றி கேட்க ஆரம்பித்தோம். கோணிப் பையில் விறகுகளை திணித்துக் கொண்டிருந்த அந்த அம்மா, ஏதோ ஒரு ஜந்துவைப் போல நம்மைப் பார்த்துவிட்டு அந்த குடிலினுள் நுழைந்து விட்டார்.

தன் நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த சிஐ என்ற இளைஞனிடம், இந்த மகர ஜோதியைப் பற்றி இங்குள்ள நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் என்க... இதே போல தானு இவுடே ஒரு லோக்கல் டி.வி.காரு வந்து மூணு ஆளுக்காருகிட்ட மகர ஜோதியின்டே மர்மம் குறிச்சு கேட்டுட்டுப் போயி. அது டி.வில வந்தப்போ, ஆ மூணு ஆளுக்காரையும் அடிச்சு போலீஸ் கேஸாயிட்டு ஜெயில்ல அடைச்சு. அது கொண்டு இப்போ நிங்களிடத்து நான் எந்தெங்கிலும் பரைஞ்சா போலீஸ் என்னை கொன்னு களையும் என்று ஒதுங்கிக் கொண்டான்.

இலங்கையிலிருந்து அகதியாய் வந்து பொன்னம்பல மேட்டின் கீழ் குடியிருக்கும் தமிழரான முதியவர் சிவலிங்கத்திடம் கேட்டபோது... 30 வருஷமா இங்கேதான் குடியிருக்கேன்.

மகர ஜோதியோட உண்மையச் சொல்லியே ஆகோணும். ஏன்னா... மகர ஜோதியை நம்பி நெரிசல்ல சிக்கி நிறைய பேரு செத்துப்போறத பாத்தா கஷ்டமாயிருக்கு என்கிறவர்.. ஜனவரி 14ஆம் தேதி காலையிலே பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங் களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக் குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டி களைப் போட்டு நாலஞ்சு பேரு சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமி னியப் பாத்திரத்ததத் தூக்கிப் பிடிப் பாங்க, அதுதான் மகர ஜோதி.

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஒளியா இப்படித்தான் தோன்றி சபரிமலையிலும், புல்மேட்டிலும் மகர ஜோதி காண காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்சியளிக்கிற அநியாயம் நடக்கிறது. இதெல்லாம் பணத்துக்காக செய்ய றாங்க நீங்கதான் இதை அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தணும் என்ற ஒரு பெரும் உண்மையைப் போட்டு உடைத்தபோது நாம் பெரு அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவரிடம் பேசிவிட்டு தலை தெரியாத பாம்பொன்று நெட்டுக்குத் தலாய் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல கிடக்கும் பொன்னம்பல மேட் டின் நுனி வாலைப்பிடித்துக் கொண்டு ஏறத் தொடங்க முயற்சித்தபோது நம்மை மறித்த மலையாள ஆள் ஒருவர்... இதுக்குள்ள போகாம் பெற் றில்லா... மீறி போனா ஃபாரஸ்ட் காரங்க சுட்டுக் கொல்லும் என கண்காணிக்க மரத்திற்குப் பின்னால் நின்று கொண்டார். நாமும் பொன் னம்பல மேட்டிற்குள் நுழையாதது போல் பாவ்லா காட்டிவிட்டு திரும்பவும் பாம்பின் நுனி வாலைப் பிடித்து வனத்துறையால் போடப்பட்டிருக்கும் நோ என்ட்ரி போர்டைத் தாண்டி னோம். நாம் நடக்கும் அந்தக் குறுக லான பாதையில் நம் மீது தேரைகள் எகிறி எகிறிக் குதிக்கின்றன.

தின்று செரிக்க முடியாமல், நெளிய முடியாமல் ஊர்ந்து போனது பெரிய பாம்பொன்று. மிதிபடும் இலைகளின் சத்தத்தோடும், யாரும் பேசாமல் மிக ரகசியமாகச் சென்று கொண்டிருந் தோம். கொஞ்ச தூரம் நடந்தபோது, அந்த மலையாள ஆள், நம்மை மிரட்டிய.... சுட்டுக் கொல்லும் என்ற வார்த்தை எங்களுக்குள் செரிக்க முடியாமல், அந்தப் பாம்பைப் போலவே ஊர்ந்து கொண்டிருந்தது என்பது தான் உண்மை. இந்தப் பயத்தோடு நடக்கிற நமக்கு இன்னும் பயத்தைக் கூட்டவோ என்னவோ ஒரு மேட்டில் நின்று காடே அதிரப் பிளிறியது ஒரு யானை.

அவ்வளவுதான்.. ஏற்கெனவே நடப் பதையே ஓடுவது போல செய்து கொண்டிருந்த நாம் இப்போது ஓட்ட மெடுத்தோம். பாவம் நம்முடன் வந்த வர்களில் இரண்டு பேர் வயதான வர்கள். அவர்களும் நமக்குச் சரி சமமாகவே ஓடி வந்தார்கள். மலைமீது நடப்பது தெரியும். மலையில் ஓடுவது என்பது புதிதுதான். கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் நடந்து பொன்னம் பல மேட்டு பாம்பின் முக்கால்வாசி உடலைத் தொட்டாகிவிட்ட சமயம் ஒரு இடத்தில் பதுங்கினோம்.

------------------------தொடரும் “விடுதலை” 1-2-2011
சபரிமலை மகரஜோதி மர்மம்! (2)

(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது)

அங்கே கண்காணிப்புக் கோபுரம் ஒன்று இருந்ததுதான் நம் பதுங்கலுக்குக் காரணம். சிறிது நேரம் நோட்டம் விட்ட நாம் கண் காணிப்புக் கோபுரத்தில் யாரும் இல்லாததை உறுதிபடுத்திய பின்பே பாம்பின் தலையைப் பார்க்க மேற் கொண்டு மிக மிக நெட்டுக்குத் தலாய் இருக்கும் மலையில் ஏறினோம். அங்கி ருந்துதான் எங்களுக்குள் பேச்சுக் கிளம்பியது.

நம்மிடையே பேசத் தொடங்கிய சுகுமாரன், பொன்னம்பலமேடு மனுஷங்க யாரும் போக முடியாத மலை. அங்கே அய்யப்பனின் வாகனமான புலிகள் நிறைய இருக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருக்கற வங்க எதுக்கு இந்தப் மலை பகுதியில் கண் காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க. இங்க நான் வர்றது அஞ்சாவது தடவ என அதிர்ச்சி கொடுக்கிறவர்.. இதோ.. இதோ.. இதுதான் பொன்னம்பல மேடு உச்சி என்றபோது நடந்து வந்த கால் வலியெல் லாம், பயமெல்லாம் காணாமல் போக.. பாம் பின் தலையைப் பார்த்தோம். சபரிமலையி லிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்த வர்களே இருக்கிற நிலையில் நாம் மட்டும் தான் பொன்னம்பல மேட்டிலிருந்து 2000 அடிக்கு கீழ் ஒரு வெளிச்சப் புள்ளியாய் தெரிகிற சபரி மலையைப் பார்த்தோம்.

பொன்னம்பல மலையின் நுனிப்பகுதி யில் ஒரு சின்ன திட்டு கட்டப்பட்டிருந்தது. அந்தத் திட்டை கை நீட்டிக் காட்டும் சுகுமாரன், இந்தத் திட்டுதான் சபரிமலை தேவசம் போர்டுக்கும் கேரள அரசுக்கும் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துக் கொண் டிருக்கிறது என்றவரிடம்.. முதலில் மகர ஜோதி என்பது என்ன? மகர விளக்கு என்பது என்ன? அதைச் சொல்லுங்கள் என்றபோது...

ஆதி காலத்திலிருந்தே மகர மாசம் பிறக்கும் ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம் பலமேட்டில் ஒரு நட்சத்திரம் தோன்றும். அந்த நட்சத்திரம் வருவதற்கு முன்னால் கிருஷ்ண பருந்து வட்டமிடும்.. பின்வரும் அந்த நட்சத்திரமே மகர விளக்கு. அதான் அய்யப்பன்னு சொல்லப்பட்டது. பின்னா ளில் பொன்னம்பல மேட்டில் ஆதிவாசிகள் இருந்தபோது அவர்கள் ஏதொவொரு நிகழ் வுக்காக அங்கே மலையுச்சியில் குறிப்பிட்ட அந்த நாளில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.

இதை சபரிமலையில் நட்சத்திரத்தைப் பார்க்க வந்திருந்தவர்கள் அய்யப்பன் ஒளியா காட்சி தர்றாரு. இது மகர ஜோதின்னு கன்னத்துல போட்டுக் கிட்ட தேவசம் போர்டு பார்த்தாங்க. அதையே மகர ஜோதியாவே வச்சுக்கிட்டவங்க முதல்ல செய்த காரியம், பொன்னம்பல மேட்டிலிருந்த ஆதிவாசி களை விரட்டினாங்க. 2000 அடிக்கும் மேலாக இருக் கும் சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தால் வானத்தை முட்டுவதுபோல இருக்கும். அதனால் ஜோதி ஏற்றும்போது அது வானத்தி லிருந்து வருவதாகவே பக்தர்கள் நம்பு வார்கள் என தேவசம் போர்டு பிளான் செய்தது. அதன் பின்னரே அந்த மலை யாரும் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டு தேவசம் போர்டோட பண மலையாகிப் போனது.

இப்போ இந்தப் புல்மேட்டுல 104 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகே தங்கள் கற்பூர ஜோதி குட்டு வெளியாகற தனாலேயே தங்கள் மலை வருமானத் தைத் தக்க வைத்துக் கொள்ள.. புதிதாய் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மகர ஜோதி என்பது நட்சத்திரம்; மகர விளக்குங் குறதுதான் பொன்னபல மேட்டில் ஏற்றப் படுவதுன்னு.. என சிரிக்கிறவர் இதிலும் ஒரு பொய் என்னன்னா.. ஆதிவாசிகள் தான் மகர விளக்கு ஏத்தறாங்கன்னு.. ஆனா யார், ஏத்தாறங்கன்னு நான் சொல்றேன்.

1980-இல் மகரஜோதி பொய்னு சொல்லி நானும், என் ஃப்ரெண்ட் பாபுவும் இந்த பொன்னம்பல மேட்டுக்கு ரகசிய மாய் வந்தபோது.. நாங்கள் நினைத்தது போலவே இங்கே ஆதிவாசிகள் வசிக்கவில்லை. இங்கே வந்த ஜீப்புகளில் ஒரு ஜீப்பில் சபரிமலை தேவம்போர்டு என்று எழுதப்பட் டிருந்தது. அந்த வண்டி எண்கூட கே.ஆர்.பி. 2951, இன்னொரு ஜீப்பில் போலீஸ் எஸ்கார்ட்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த வண்டி எண் கே.சி.எஃப்.2672. கூடவே வனத்துறை வண்டி, எலக்ட்ரிசிட்டி போர்டு வண்டி என்று இன்னும் சில ஜீப்புகளில் பெயர் இருந்தது. அவர்கள் எல்லோரும் இணைந்து பெரிய பெரிய அலுமினிய பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு மேலே நடந்தார்கள். அவர்கள் பின்னா லேயே நடந்த நாங்கள் இந்த உச்சிக்கு அவர்கள் வந்த பின் அவர்களின் செயல் களைப் பார்த்து அதிர்ச்சியாகி விட் டோம். மது பாட்டில்களை எடுத்து அருந்தத் தொடங்கியவர்கள் இங்கேயே படுத்துக் கொண்டார்கள். நாங்கள் வெகு நேரம் காத்திருந்தோம்.

மாலை 5 மணிக்கெல்லாம் எழுந்த வர்கள் அந்த அலுமினியப் பாத்திரங் களில் கற்பூரக் கட்டிகளைக் கொட்டி கற்பூர மலையை அந்த அலுமினியப் பாத்திரத்திற் குள் உருவாக்கினார்கள்.

சரியாய் 6.40 மணிக்கு மலையின் நுனியில் நின்று (இதோ நான் செய்வது போல...) தீபத்தை உயர்த்திப் பிடித் தார்கள். பின்பு இன்னொரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து எரியும் தீபத்தின்மீது கவிழ்த்தார்கள். பின்பு சில நொடிகள் கழித்து கவிழ்த்த அலுமினியப் பாத்திரத்தை எடுத்தார்கள். இதேபோல இன்னும் இரண்டு முறை செய்தார்கள். அவ்வளவுதான்... ஆகப் பெரும் வேலை யொன்றை முடித்த நிம்மதியோடு மலையை விட்டு இறங்கத் தொடங்கி னார்கள்.

அப்போது இந்தத் திட்டு கட்டப் படவில்லை. சபரிமலையில் அய்யப் பனுக்கு தீபாராதனை காட்டும் போது... பொன் னம்பல மேட்டுமலையில் ஓடும் ஆற்றில் குளித்து எழுந்து அய்யப்பன் ஒளியாய் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்ற புராணக் கதையை நம்பி பல மூலைகளிலிருந்தும் சபரிமலைக்கு ஜோதி பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்களிட மிருந்து வசூல் செய்வதற்காகவே இந்த பொன்னம்பல மலையை கேரள அரசு பயன்படுத்துவதைப் பார்த்து மனம் நொந்து போனோம்.

அதுவும் எப்படி... மகர ஜோதி யினுடைய ஒளி புனிதம் என்று சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்க.. இவர்களோ கிண்ணத்தில் மது ஊற்றி குடித்துக் கொண்டாடி கற்பூரக் கட்டிகளைப் போட்டு தானாய் வரும் ஜோதி என பக்தர்களை ஏமாற்றுகிறார்களே என வருந்தினோம். அதற்கடுத்த வருடம் 25 பேராய் வந்தபோது.... பொன்னம்பல மலையுச்சியில் துப்பாக்கி முனையில் போலீஸ்காரர்கள் எங்களைப் பிடித் தார்கள். அடித்துத் துவைத்தார்கள். மிகக் கொடூரமாய் துன்புறுத்தினார்கள்.

என்னை அடிக்கும்போது அவர்கள் சொன்னார்கள். மலையாளத்துக் காரனான நீங்க ஒரு பைசாகூட உண்டி யல்ல போட மாட்டீங்க. ஆனா தமிழுக்காரனுகளும், தெலுங்குக்காரனுகளும், கன்னடக் காரனுகளும் கொண்டு வந்து காசு கொட்றத நீங்க எதுக்குடா தடுக்கிறங்கன்னு சொல் லியே அடிச்சாங்க.

அடிச்சுக் கொண்டு வந்து மலைக்கு வெளியே தூக்கி வீசிட்டுப் போனாங்க. 3 மாசம் ஆஸ்பத்திரியில் கிடந்த நான் திரும்பவும் மகரஜோதின்னு கற்பூர தீபத்தை காட்றத படம் எடுக்கணும்னு வெறியோட போய் படம் புடுச்சு லோக்கல் பத்திரிகைகளிடம் கொடுத்தபோது யாரும் பிரசுரிக்கலை. மக்களோட நம்பிக்கைய முதலீடா வச்சு கோடிகள்ல கொழிக்கிற கேரளா அரசையும், தேவசம் போர்டோட முகத்திரையையும் எப்படியா வது கிழிக் கணும்னு போராடிக்கிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள 1999-ல 54 பக்தர்கள் பலியான சம்பவம் அறிந்து ஸ்பாட்டுக்கு ஓடினேன். நிஜமாய் நான் அழுது விட்டேன். தான் மட்டுமல்லாமல் தன்னு டைய 4 வயது சிறுவனை கூட்டிக் கொண்டு பொய்யான இந்த ஜோதியை உண்மை என நம்பி வந்த ஒரு அப்பா வையும், அந்த 4 வயது சிறுவனையும் ஓலைப்பாயில் சடலமாய் சுற்றி அனுப்பி னோம். இதற்குக் காரணம் மகர ஜோதி தான். அப்போதைய சம்பவத்தைப் போலவே தான் இப்போது புல்மேட்டில் 104 பேர் பலியானதுக்கு காரணமும் இந்தப் பொய்யான மகர ஜோதிதான். உங்க ளுக்கு ஒண்ணு தெரியுமா?

இது உங்க ளுக்கு ரகசியம். எங்களுக்கு இல்லை. இந்த மகரஜோதி தானா வர்றதில்லை. ஏற்றப்படுதுன்னு எங்க மலையாளிக எல்லாத்துக்கும் தெரியும். அதனாலதான் சபரிமலையில் இதுவரைக்கும் இறந்தவங் கள்ல மலை யாளிக ரெண்டோ, மூணோ தான். அதுகூட அவங்க பக்தருக இல்லை. உங்களுக்கு வழிகாட்டி சம்பாதிக்கிற கைடுக பணத்த வந்து எங்க மாநிலத் துல கொட்ற உங்ககிட்ட எதுக்கு மகர ஜோதி உண்மைய சொல்லுணும்னுதான் மலையாளிக பலரும் நெனைக்கிறாங்க என்று கொந்தளிக்கிறவர்... கேரள அரசும், தேவசம் போர்டும் இனியும் பொன்னம்பல மலையை வைத்துக் கொண்டு பிசினஸ் பண்ண முடியாது.

பணத்திற்காக உயிரை மதிக்காத இவர்கள் மீது எங்கள் அமைப்பு அய்கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தண் டனை வாங்கித் தரும்வரை ஓயமாட் டோம் என அந்தப் பொன்னம்பல மேட் டிலேயே நம்மிடம் சத்தியம் செய்தார் சுகுமாரன்.

நாங்க மலையாளப் பத்திரிகை களை நம்பறது இல்லை. நீங்க தமிழ் பத்திரிகை. அதுவும் நக்கீரன்ங்கிற தாலதான் உங்ககூட வந்தோம். நாங்க கைகூப்பி, கேட்டுக்கறது என்னன்னா.. தயவு செய்து இனியும் உங்க தமிழ் மக்களும், ஆந்திர மக்களும், கன்னட மக்களும் மகரஜோதி உண்மைன்னு நம்பி இங்க வரவேணாம். வந்து மரிக்க வேணாம். உங்க மாநிலத் துலயே ஒரு அய்யப்பன் கோயில் கட்டி கும்பிடுங்க. அதையேதான் நாங்க கேட் டுக்கிறோம் என்கிறார்கள் குருவிலா னும், புருஷோத்தமனும்.

மலையைவிட்டு இறங்கத் தொடங் கியிருந்தபோது.. இருள் பிடித்துக் கொண்டிருந்தது எங்களை. மலை விட்டு கீழிறங்கி அந்த மலையைத் திரும்பிப் பார்த்தோம். கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்கிற அய்யப்ப பக்தர்களின் சரணத்தில் நமக்கு ஒரு கேள்வி எழும் பியது. கல்லும் முள்ளும் யார் காலுக்கு மெத்தை என்பதுதான் அது? அதற் கான பதில் கேரள அரசிடமும் சபரி மலை தேவசம்போர்டிடமும் மட்டுமே இருக்கிறது.

பக்தியில் திளைக்கும் மக்களை பணம் காய்க்கும் மரமாக நினைப்பதைத் தடுத்து உண்மையை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் பயணத்தைச் செய்தது நக்கீரன். கேரள அரசு வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பகுதி என்று பொன்னம்பல மேடுவை பொன் மேடு தயாரிக்கப் பயன்படும் மெத்தையாக்கிக் கொள்ளலாம். ஆனால் உண்மைகளுக்காக எங்கேயும் நடக்கும் நக்கீரனின் கால்களுக்கு அந்தப் பொன் னம்பல மேடு வெறும் சொத்தைதான்.

- அருள்குமார்
நன்றி: நக்கீரன் ஜன26-28 2011

--------------நன்றி:- “விடுதலை” 1-2-2011

3 comments:

தமிழ் ஓவியா said...

திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்

பக்தர்களே, இப்பொழுதாவது சிந்திப்பீர்களா?
மகரஜோதி கடவுள் சக்தியல்ல;
மனிதர்கள் செய்யும் ஏற்பாடே!

மோசடி செய்து வந்தவர்கள்மீது நடவடிக்கை உண்டா?

திருவனந்தபுரம், பிப்.1- சபரிமலையில் `மகர ஜோதி' மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவ சம் போர்டு அறிவித் துள்ளது.

சபரிமலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 104 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர் களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்தி ரமா? என்பதை திருவாங் கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், திரு வாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோ பாலன் நாயர் தலைமை யில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன் னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற் றும் பல உயர் பூசாரி கள், திருவாங்கூர் தேவ சம் போர்டு உறுப்பினர் கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப் பன் கோவில் நிருவாகி கள், கட்டடக்கலை வல் லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில் தேவசம் போர்டு தலை வர் ராஜகோபாலன் நாயர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது

பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர் கள் தான் ஏற்றுகிறார் கள். இது எல்லோருக் கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலை யிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்ய வும் தேவசம் போர்டு விரும்பவில்லை.

மகர ஜோதி பிரச் சினை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட் டம் கூட்டப்பட வில்லை. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அய்யப் பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஆகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து பக்தர்களை தரிசனத் துக்கு அனுமதிக்கலாமா என்பது பற்றியும் கூட் டத்தில் விவாதிக்கப்பட் டது.

18ஆம் படியை அகலப்படுத்தக்கூடாதாம்!

வருடம் முழுவதும் கோவிலை திறந்து வைப் பது சம்பிரதாயத்துக் கும், வழக்கத்துக்கும் மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலைத் திறக்க வேண்டாம் என்று ஏக மனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல், பக்தர் களின் நெரிசலைக் குறைப் பதற்காக புனிதமான 18-ஆம் படியை அகலப் படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரி வித்தனர். புனித 18ஆம் படியை அகலப்படுத்து வது, கோவில் கட்டப் பட்ட ஆகம விதிக்கு விரோதமானது. அத்து டன் 18ஆம்படி சன்னி தானத்துடன் புனிதம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18ஆம் படியை அகலப்படுத்துவது சரி யல்ல என்றும் கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் அறிக்கை

இந்த விவரங்களை பதில் மனுவாக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இதுவரை பக்தர் களை மோசடி செய்தவர் கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி வெடித்துக் கிளம்பியுள்ளது.
--------------"விடுதலை” 1-2-2011

அப்பாதுரை said...

சுவையான கட்டுரை. கட்டுரையை விட உங்கள் பின்னூட்ட விளக்கம் நன்று.

மக்களை ஏமாற்றுவது சட்ட விரோதமா? எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? யார் எடுப்பார்கள்? அரசாங்கமா? சரிதான் போங்கள்!

நக்கீரன் கட்டுரையில் ஒன்றை ஏற்க முடியவில்லை. அலுமினியப் பாத்திரத்தில் கற்பூரக்கட்டி ஏற்றித் தூக்கினால் கை சுட்டுப் புண்ணாகும். மக்களை ஏமாற்றத் துணியும் எவரும் - நான் உள்பட - தங்களை வறுத்திக் கொள்வார்களா தெரியவில்லை. தமிழ் முதியவர் அறியாமல் சொன்னதை அறிந்தே எழுதியிருக்கிறார்களா கட்டுரையில்?

மக்களுடைய அறியாமையை சட்டத்தை வைத்து ஒடுக்க முடியாது என்பது ஆறுதல் என்றாலும் வேறு வழி தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. (ஒடுக்க முடிந்தால் அறிவையும் சட்டம் போட்டு ஒடுக்கி விடுவார்கள் :)

நம்பி said...

//நக்கீரன் கட்டுரையில் ஒன்றை ஏற்க முடியவில்லை.அலுமினியப் பாத்திரத்தில் கற்பூரக்கட்டி ஏற்றித் தூக்கினால் கை சுட்டுப் புண்ணாகும்.//

ஏற்றுவது சில நிமிடங்கள் தான் சூடு தாங்கமுடியும்...இல்லையென்றால் வீட்டில் பயன்படுத்துவது போல் கரிக்கந்தையை வைத்து ஏற்றிக்காட்டுவார்கள்...வீட்டில் அடுப்படியில் அடுப்பில் இருக்கும் பாத்திரத்தை இப்படித்தான் இறக்குவார்கள் நாமும் இப்படித்தான் இறக்குவோம்...தனியான இடுக்கி இருந்தாலும்...துணியை கொண்டு சூடான பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்குவதுதான் இலகுவானது.

இந்த தீபத்தை ஏற்றுவது மின்துறையை சேர்ந்த ஊழியர்கள் உழைப்பாளிகளின் கை எப்போதும் காய்த்துப்போயிருக்கும். (தோல்கள் மிக்கடினமாக இருக்கும் நெருப்பின் அருகில் வேலை செய்பவர்களால் அதிக சூட்டைத்தாங்க முடியும்)

மின் வயரை வெறுங்கையால் கூட இவர்களால் தொடமுடியும் தொட்டுக்காட்டுவார்கள்...பார்த்திருக்கலாம்...,

இதை கேரள கம்யூனிச அரசும் சேர்ந்துகொண்டு மறைப்பது யாத்திரிகர்களின் வருமானத்தை குறிவைத்துதான். இந்த வெளியீட்டினால் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் தேவையில்லாமல் இழக்க நேரிடும். ஆனால் இது தவறு...அரசே ஏமாற்றுகின்ற வேலையில் ஈடுபடுகிறது. திருப்பதிக்கும் பழனிக்கும்.... அடுத்து இங்குதான் அதிக (128 கோடி வசூலாகிறது.) நிதி வசூலாகிறது. இந்த வசூல் முழுவதும் கிடைப்பது தமிழக, கர்நாடக, ஆந்திர யாத்திரிகர்களால் தான். நீதிமன்ற தீர்ப்பு இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த கோநில் சார்ந்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எல்லாமே தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.