Search This Blog

22.5.21

அம்பேத்கரும் நானும் - பார்ப்பனரல்லாதவர்கள் எதிரியா? - எதற்கும் பார்ப்பானை அழைக்காதீர்!

 

எதற்கும் பார்ப்பானை அழைக்காதீர்!



மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டுபேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ அவ்வாறுதான் அவரும் மிக உறுதியாகவும், பலமாகவும் இலட்சிங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாகப் பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை "முட்டாளின் உளறல்" என்று சொன்னவர்!

 

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல. பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம் (கருத்து) தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.

 

உதாரணமாக பர்மாவில் (தற்போது மியான்மர் நாடு) நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து, "என்ன இராமசாமி! இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதால் நாம் என்ன பலன் ஏற்பட முடியும்? வா! நாம் இரண்டு பேரும் புத்த மார்க்கத்திலே சேர்ந்துவிடுவோம்" என்றார். நான் சொன்னேன், "மிகவும் சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றேன். இந்த கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது மக்களிடையே எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்வது போல் அப்புறம் செய்ய முடியாது. ஓர் இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு "மதக்காரனாக" இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்" என்பதாகச் சொன்னேன்.

 

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.

 

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிராமணம் (உறுதிமொழி) எடுத்துப் படித்தாரோ (இராமனையும், கிருஷ்ணனையும், கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவைகள்) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25-வருட காலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இராமனையும், பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்தப் பிராமணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்குப் பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியவைதான். அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றியது.

 

புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.

 

நேற்று நான் தங்கிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார், "நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒருமதம் தானே" என்று. அதற்கு நான் சொன்னேன், "அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள்" என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார், ஏன் அதில் 'புத்தர் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி' என்று சொல்லுகிறார்களே" என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.

 

"புத்தம் சரணம் கச்சாமி" என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதல்ல, "நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று" என்பதாகும். "நீ தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும்" என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது தானே ஒழிய வேறில்லை. மற்றும் புத்தம் என்பது உன் புத்தியை குறிப்பதேயாகும்.

 

அதுபோலவே "தர்மம் சரணம் கச்சாமி" என்பதற்குப் பொருள் "நீ ஏற்றுக்கொண்டுள்ள கர்மங்களைக் - கொள்கைகளை (Principles) உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைபிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைக்கு மாறாக நடக்கக்கூடாது உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும்" என்பதுதான்.

 

மூன்றாவதாக "சங்கம் சரணம் கச்சாமி" என்பது. "நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதைப் பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருத வேண்டும்" என்பதுதானேயொழிய வேறில்லை.

 

ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்)

 

நீ உன் தலைவனை மதி!

 

உன்னுடைய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!

 

உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.

 

இவர்களெல்லாரும் உங்கள் புத்த நெறிக்கு மரியாதைக் கொடுத்து அது எல்லோரும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு புத்த மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உள்ளே புக விடக்கூடாது.

 

எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.

 

நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காகப் பார்ப்பானும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு - தொல்லைகள் தரக்கூடும். அவை எல்லாவற்றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்து மத பார்ப்பன ஆட்சியாகும்.

 

உங்கள் வசதி ஓரளவு அரசாங்கக் கொடுமைக்குத் தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன்வர வேண்டும்.

 

நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும், சாஸ்திரங்கள்படியும் நாம் இரண்டே பிரிவுகள் தான் அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.

 

இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.

 

ஆசையால் பார்ப்பனர்களுக்குப் பதவி அதிகாரத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.

 

எனக்கு இப்போது 80-வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (Firest Bell) அடித்துவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும். இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது.

 

சம்பத் பேசும்போது என்னைப் பற்றி ரொம்பவும் அதிகமாகச் சொன்னார். அவர் எனக்கு அண்ணன் மகன் ஆகும். தகப்பனாரைப் பெருமைப்படுத்தும் முறையில்தான் அப்படிச் சொன்னாரே தவிர உண்மையில் நான் அவ்வளவு பெருமைக்கு உரியவன் அல்ல.

 

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் பொது வாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவிதச் செல்வாக்கும் பெற முடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கி வைத்துவிட்டோம். இங்கே அவர்கள் தன்மை பற்றித் தக்கப் பிரச்சாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்கத் தயங்குவார்கள்.

 

பார்ப்பனர்கள் கொஞ்சம் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம் மீது தப்புப்பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் தமிழ் நாட்டில் எங்கள் கட்சியைப் பார்ப்பானை எதிர்க்கிற கட்சி (Anti Brahimin movement) என்றே அழைக்கிறார்கள்.

 

அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம்.

 

எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்குச் சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும்.

 

எந்தவிதச் சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் நிறைய பார்ப்பனர்கள் எங்கள் தமிழ்நாட்டைவிட்டு இங்கு வந்துவிட்டார்கள். மேலும் வரவாய்ப்புத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான். நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்கள் விலக்க வேண்டும்.

 

பசி, உயிர் போகிறது என்றாலும் கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன புறக்கணிப்பை (பகிஷ்காரத்தைத்) தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.

 

உங்களுக்கும் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள் கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல ஆதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும், அவனது விஷமப்பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஒரு இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.

 

ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.

 

பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் - சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

 

ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால் அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றிக் கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

 

முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே! தீட்டுப்பட்டு விட்டதே! என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.

 

இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான்! ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.

 

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பன புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவை தான் நமக்கு எதிரிகளே யொழிய வேறில்லை. "பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்" என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

 

ஆகவே நீங்கள் இவற்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன்.

 

               --------------------------- 15.02.1959 அன்று புதுடெல்லி அம்பேத்கர் பவனத்தில் பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 22-02-1959

0 comments: