Search This Blog

9.2.16

மகாமகம்-தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா?-பெரியார்

மகாமகம் திராவிடனுக்கு மானக்கேடு!

- தந்தை பெரியார்

தண்ணீரில் குளித்தால் 
பாபம் தொலையுமா?

கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்கு திராவிட மக்களை வரும்படியாக கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தவண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன.
பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றி பிரமாதப்படுத்தி மக்களை அங்கு சேர்ப்பிக்க  - தள்ளிவிட முயற்சிக் கின்றன.
இந்த 20ஆம் நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஒரு அறிவும், மானமும் சூன்யமான ஒரு உற்சவத்தை மதித்துக் கும்பகோணம் சென்று கூமுட்டைகள் ஆவதென்றால் இதை உலகின் 8வது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கும் மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப்போகிறது என்பதை யோசிப்போம்.


அங்குள்ள மாமாங்கக் குளம் என்பது வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அதில் உள்ள தண்ணீரும் வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அப்படி இருக்க அன்று (மக நட்சத்திரத் தினத்தன்று) மாத்திரம் அக்குளத்திற்கும் தண்ணீருக்கும் எப்படிப் புது யோக்கியதையோ, பெருமையோ உண்டாகிவிடும் என்பதை அறிவுள்ள மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா!  தமிழனின் மதி ஈனத்தை கைமுதலாக வைத்து வாழும் பார்ப்பனர் கூட்டம் தங்கள் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக எதைக் கற்பித்தாலும், தமிழன் அதற்கு அடிமையாவதென்பது இழிவான காரியமல்லவா?
பார்ப்பனர் கட்டிய கதை

கும்பகோண மாமாங்கத்திற்குப் பார்ப்பனர் ஏற்படுத்தி இருக்கும் கதை என்னவென்பது எவரும் அறியாததல்ல.
அதாவது, சப்த நதிகளும் சிவனிடம் சென்று உலக மக்கள் தங்கள் தங்கள் பாவத்தைக் கழிப்பதற்கு ஆக தங்களிடம் வந்து குளித்து முழுகிப் பாவங்களை கழுவிவிட்டுக்கொண்டே இருப்பதால் அப்பாவங்கள் தங்களால் சுமக்க முடியவில்லை என்று அழுதார்கள். அதற்கு சிவன் அந்நதிகளைத் தேற்றி 12 வருஷத்திற்கு ஒரு முறை கும்ப கோணத்திற்கு வந்து அங்குள்ள ஒரு குளத்தில் ஒரு தீர்த்தத்தை உற்பத்தி செய்கிறேன். அக்குளத்திற்கு வந்து நீங்கள் குளித்தால் உங்களின் பாவங்கள் அதில் கழுவப்பட்டுப் போகும் என்றும் சொன்னார். அதற்கு ஆக அந்த நதிகள் அங்கு வந்து குளித்து தங்கள் மீதுள்ள பாவங்களை அதில் கழுவி விடுகின்றன. ஆதலால் மனிதர்களும் அன்று வந்து அதில் குளித்தால் அம்மனிதர்களின் பாவமும் அங்கு கழுவப்பட்டுவிடும் என்பது புராணக் கதை. இதுதான் மாமாங்கக் கதையின் சுருக்கம்.
இதை எந்த மனிதனாவது நம்ப முடியுமா? மனிதன் உயர்ந்த ஜீவப் பிராணி என்பதற்குக் காரணம் அவனுக்கு உள்ள ஆறாவது (பகுத்தறியும்) அறிவேயாகும். அதாவது சிந்தித்துப் பார்க்கும் தன்மையே யாகும். அப்படிப்பட்ட ஆறாவது அறிவுப்படி பார்த்தால் இந்த மாமாங்கக் கதையை எந்த மனிதனாலாவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.
நதியில் குளித்தால் 
பாபம் போகுமா?

ஒரு நதியில் ஒரு மனிதன் குளித்த மாத்திரத்தில் அவனது பாபம் அதில் கழுவப்பட்டுப்போகும் (தொலையும்) என்பது எப்படி அறிவுக்குப் பொருந்தும் என்பதும், அந்த நதி அந்தப் பாவத்தை சுமக்காமல் சிவனிடம் சென்று அழுவது என்பதும், அதற்கு ஆக (அந்த நதிகளின் பாவபாரம் குறைவதற்கு ஆக) வேறு ஒரு குளத்தைக் கடவுள் சிருஷ்டிக்கிறது என்பதும், அந்தக் குளத்திற்கு இந்த (ஏழு) நதிகள் வருவது என்பதும் ஆகிய சங்கதிகள் மனிதர்களுக்குச் சொல்லக் கூடியவைகளா அல்லது மடையர்கள், மனிதத்தன்மை அற்ற, மனித உருக்கொண்ட மிருகங்களுக்கும் மரஞ்செடிகளுக்கும் சொல்லக் கூடிய கதையா என்று வாசகர்களை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
12 வருடத்திற்கு ஒரு முறை அந்தக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.
தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லாது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லாது தண்ணீர் எப்படிப் பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாக காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டிவிடுகிறார்கள். மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரைப் பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக்கணக்கான மக்களை, லட்சக்கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படித் தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்? ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு நீர்கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்; அந்தச் சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழ்கள் காணப்படலாம். குளம் தன் பாவத்தை எங்குக் கழுவும்?
அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண் ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்துவிட்டால் அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.
அன்றியும் சப்த நதிகளுக்குமே தங்களிடம் மக்கள் கழுவிவிட்ட பாபம் தாங்காமல் அங்கு (மாமாங்க குளத்திற்கு) வந்து குளித்துப் பாவங்களைக் கழுவி விட்டு விட்டுப் போக வேண்டிய அவசியம் வந்ததென்றால், பிறகு இந்த நதிகள் கழுவிவிட்ட பாபத்தை இந்த மாமாங்கக் குளம் கழுவி விட வேறு எந்தக் குளத்திற்கு வருஷத்திற்கு வருஷம் அல்லது 12 வருஷத்திற்கு ஒரு தரமாவது அது சென்று வந்தது என்ற கேட்கின்றோம்.

ஆகவே, எத்தனையோ காலமாக எத்தனையோ பேர் கழுவிவிட்ட பாபங் களைக் கொண்டு வந்து கழுவிவிட்ட மாமாங்க குளப் பாவத்தண்ணீரில் மனிதன் போய் குளிப்பதானால் அவனுக்கு பாவம் ஏறுமா? அல்லது கழியுமா? என்று அறிவுடைய மக்கள் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். எனவே, இந்த மாமாங்கப் புரட்டு பார்ப் பனர் பிழைக்க ஏற்படுத்திக்கொண்ட சுங்கச்சாவடி, கட்டுக்கதை அல்லாமல் இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ இருக்க இடமிருக்கிறதா? இதற்குப் பார்ப்பனப் பத்திரிகை உடையவும் காங்கிரஸ்காரர்களுடையவும் விளம்பரம் ஒருபுறமிருக்கக் காங்கிரஸ்காரர்கள் அதைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சி ஒருபுறம் இருக்க ரயில்வேக்காரருடைய விளம்பரம் வேறு பக்கம் இருந்து வருகிறது. இந்த வருஷம் மாத்திரம் சண்டை நெருக்கடி காரணமாக ரயில்விட முடியாது என்று சொல்லுகிறார்கள் என்றாலும், அந்த விளம்பரத்தின் மூலம் மக்களுக்கு மா மாங்கத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் வருகிறார்கள். ரயிலுக்கு எப்படியும் சென்ற மாமாங்கத்திற்கு கிடைத்த வரும்படிக்குக் குறையாமல் வரும்படி கிடைக்கத்தான் போகிறது. ரயில்வே சிப்பந்தி பார்ப்பனர்களுக்கும் பிரைஸ் அடிக்கத்தான் போகிறது. மற்றும் பார்ப்பனர்களுக்குக் காப்பிக்கடை, ஓட்டல், தங்குமிட வசதி, பாட்டுக் கச்சேரி, சினிமா, முதலிய காரியங்களாலும், தர்ப்பணம், சங்கல்பம் முதலியவைகளாலும், மற்றும் பலசிங்காரச் சிற்றின்பக் காரியங்களாலும் இரும்பு, நூல், ஜவுளி வியாபாரிகள் அடித்த கொள்ளை லாபத்தைப் போல் லாபம் கிடைக்கத்தான் போகிறது. கடைசியில் கெட்டு நட்டமடைந்து இழிவடைந்த முட்டாளாகத் திராவிட மக்கள்தான் ஆகப் போகிறார்கள்.

மனைவி மக்கள் இடிபடவா?

மற்றும் தன் மனைவி மக்களை ஒரு மீட்டிங்குக்கும் கான்பரன்சுக்கும் அனுப்பக்கூடப் பயந்து நடுங்கியவனும் உறை போட்டு அறைக்குள் பூட்டி வைத்துப் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டு வெளியில் போய்வருகிறவனும் கூடத் தன் மனைவி மக்களை மாமாங்கத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் கூட்டத்தில் சிக்கவைத்து நசுக்குண்ட பஞ்சாமிர்தம் போல் ஆனதைப் பார்த்து கழுத்து பத்திரம், காது பத்திரம் என்று மாத்திரம் உரத்துக் கூறிக்கொண்டு இழுத்து வரப்போகிறான் என்பதைத் தவிர மாமாங்கத்தின் முடிவு வேறு என்னமாக இருக்க முடியும்?
இந்த சர்க்கார் மனுதர்ம, புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரி யங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக்கூடாது என்று 144 உத்தரவு போட்டு அதற்குப் பதி லாக ஒரு உலகக் கண்காட்சியை நடத்தச் செய்து இருக்கும். மக்கள் மடமையாய் இருக்கும்வரை அரசருக்கும், ஆரியருக் கும் ஆதாயம் என்கிறது சாணக்கிய கொள்கை;ஆதலால் அறிவு வளர்ச்சிக்குச் சர்க்கார் தக்கது செய்யாமல் மாமாங்கம் முதலியவைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் இந்த மாமாங் கத்திற்குத் திராவிட மக்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் செல்லாமல் அதை வெறுத்துத் தள்ளி, போகிறவர்களுக்கும் விவரம் சொல்லி எவரையும் போகாமல் தடுத்துவிட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
மாமாங்கத்தையே நம்புவது கேடு! மதிகேடு!! மதிகேடு!!! என்று சொல் லுவதோடு அங்கு செல்லுவதும் தமிழ் மகனுக்கு (திராவிடனுக்கு) மானக்கேடு! மானக்கேடு!! மானக்கேடு!!! என்று பல தடவை சொல்லுவோம்.
-------------------------------------------------பெரியார்-" குடிஅரசு" - தலையங்கம் - 17.02.1945


************************************************************************************************************

மகாமக மூத்திரக் குளம்




புராண மரியாதைக் காரன் கேள்வி :- அய்யா, சுயமரியா தைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.

சுயமரியாதைக் காரன் பதில்:- என்ன அற்புதமய்யா?
பு.ம    :- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு.ம    :- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்வி தான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.
பு-ம    :- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகி றார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
சு.ம    :- இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல் லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறையவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
பு.ம    ;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேரு மானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
சு.ம    :- நாற்றமிருக்கத்தான் செய்யும்.தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்ற தல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே செலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
    
                            ------------------------பெரியார் "குடிஅரசு" - உரையாடல் - 26.02.1933


11 comments:

AIESES said...

கடவுள் காப்பாத்துவார்னு குளத்துல குளிக்கப்போனா இணை இயக்குனர் காப்பாற்றவில்லை என்று அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறார்களே!அவர் அண்ணாமலையாரிடம் போய் காப்பாற்று என மண்டியிட்டால் ஏன் என்னிடம் வருகிறாய் அம்மாட்டப் போய் மண்டியிடு என்னால முடியாதுன்ட்டாறாம்.

தமிழ் ஓவியா said...

கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்கு மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties)
என்ற பகுதியில் 51கி பிரிவு கூறுவது என்ன?

ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்னவென்றால்,

1) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தலும்,
2) மனிதநேயத்தைக் காத்தலும்,
3) ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கத் தூண்டுதலும்
4) சீர்திருத்தமும் ஆகும்.

இதன்மீது பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் அமைச்சர், முதல் கடைகோடி பொறுப்பாளர் வரை இதை உடைத்து நொறுக்கி மகிழ்வதில் தான் சுயஇன்பமும் அதுதரும் பக்தி போதையும் பெறுகிறார்களே தவிர, அரசமைப்புச் சட்டத்தை வெறும் காற்றில் பறக்கும் காகிதமாகக் கொள்கின்றனர்.

பெரும்பாலான அரசு அதிகாரிகளோ, அரசின் ஜால்ராக்களாகவும், முகமன் கூறுவதின் முழு உருவமாகவும், ‘ராஜாவை விஞ்சும் ராஜவிசுவாசிகளா கவே’ நடந்து கொண்டு, தாங்கள் பொது அதிகாரிகள் - இது மதச் சார்பற்ற அரசு - இந்து மதப் பிரச்சார அரசு அல்ல என்ற உணர்வினை அறவே இல்லாதவர்களாகவே, நடந்து கொள்கின்றனர்!
தமிழ்நாட்டில், நீதிக்கட்சியால் திராவிடர் இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட, இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை ஒரு கணக்கு வழக்கு பார்க்கும் தணிக்கைத் துறை மட்டுமே என்பதை மறந்து, 69 கோயில்களுக்கு (இதன் அர்த்தம் (69) என்னவென்று மக்கள் அறிவர்) ஆளுங் கட்சியின் பக்திப் பிரச்சாரத் துறையாகவே மாறி விட்டது!

கும்பகோணம் என்ற ஒரு ஊரில் நடைபெறப் போகும் மகாமகத் திருவிழாவிற்கும், பகுத்தறிவுக்கும், மனித ஒழுக்கத்தின் வளர்ச்சிக்கும் கடுகளவாவது சம்பந்தம் உண்டா?

தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே இதனைப் பச்சையாக தோலுரித்து, சுயமரியாதை சூடு போட்டார்!

என்றாலும் ஆறாவது அறிவை இந்த பக்தி போதை, இந்த பக்த சிகாமணிகளிடமிருந்து பறித்துக் கொண்டதே!

புராண காலமா இது? செவ்வாய் கிரகத்தில் விண்வெளிக் கலம் இறங்கும் காலம்; மனிதர்கள் செவ்வாய்க் கோளில் குடியேற வசதி இருக்கிறதா என்று ஆராயும் காலம்!

நம் நாட்டு ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் - இந்த போதைச் சரக்குக்கு அபார விளம்பரம் தந்து, மூடநம்பிக்கை வியாபாரம் செய்து மக்களின் அறி யாமையை, ஒழுக்கக் கேட்டைப் பரப்ப உதவி, அறிவி யலைக் குழி தோண்டிப் புதைத்து ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்று மக்களைச் சுரண்டும் அறிவு டாஸ் மாக்குகளாக ஆக்குகின்றனவே!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு (1992இல்) நடந்த மகாமகத்தில், குளத்தில் இறங்கி நெருக்கடியில் செத்த மனித உயிர்கள் நூற்றையும் தாண்டியதுதான் கடவுளின் பாவ மன்னிப்புக்கு அடையாளமா?

அட மண்டூகங்களே, கெட்ட பின்பும்கூட ஞானம் வராதா உங்களுக்கு?

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்குவர வேண்டிய காவிரி நீர் இப்படி பாவம் தீர்க்கும் படலம் என்ற பெயரில் வீணடிக்கப்படுவதை அந்தப் பகுதி விவசாயிகளே குறை கூறியுள்ளது, ஏனோ அரசின் கேளாக் காதுகளில் விழவில்லை?

தமிழக அரசு இதற்காக, இந்த சில நாள் ஒருவாரக் கூத்துக் காக ஒதுக்கியுள்ள மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!

சுற்றுச்சூழல் மாசுபடுதல், விதி மீறிய கட்டமைப்புகள், இவைகளால் ஏற்பட்ட கேடுகள் எவ்வளவு என்பது முடிந்தவுடன் தகவல்களாக வெளிவரும்!

260 கோடி ரூபாய் எப்படிச் செலவு செய்யப்பட்டது? என்ன கணக்கு - எல்லாம் உலகறிந்த ரகசியம் தானே!

காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும், பெரிய பெரிய மாவட்ட அதிகார அலுவலர்கள் பட்டாளமும் குவிக்கப்பட்டுள்ளது!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கே வந்து இந்த அழுக்குத் தண்ணீரில் அரைப் பகுதியை நனைத்து, அல்ல தலைமேல் தெளித்துக் கொண்டால், மீண்டும் அடுத்த 12 ஆண்டுகள் வரை தொடர்ந்து பாவங்களை தாராளமாக, ஏராளமாகச் செய்யலாம் என்றால், இது மனித ஒழுக்கத்தினை அழிக்கும் அருவருக்கத்தக்க விழா அல்லவா?

போக்குவரத்து வாகனங்களும், மற்றவர்களும் பிழைக்க இது ஒரு குறுக்குவழி!

உடலுழைப்பை அறியாத பார்ப்பனக் கூட்டம் ‘தட்சணை வசூலை’ தங்கு தடையின்றி நடத்தி, ‘மோட்சத்திற்கு டிக்கெட்’ கொடுக்கும் தரகு வேலை செய்வதுதான் இதில் மிச்சம்?

‘மகாமக மகாத்மியம்’ புராணக் கதை என்ன? தந்தை பெரியார் புட்டுபுட்டு வைத்தாரே! அவரும், அவர்தம் தொண்டர்களும் இயக்கமும் எழுப்பிய அறிவுக் கேள்விகளுக்கு இதுவரை எந்த மதவாதியாவது பதில் சொல்ல முடிந்ததா?

மோசடி சாமியார்கள் ‘துறவிகள்’ என்ற பெயரில் பக்தி வியாபாரம் செய்ய கடை விரித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷித், அவர்கள் அச்சான ஆரியக் கூட்டம் கொண்டாட்டத்தில் உள்ளது!

மது போதையைவிட இந்த மதபோதை மிகப் பெரிய மூளைக் காய்ச்சல் - மூளைச் சாவு அல்லவா?

2ஆம் பக்கத்தில் தந்துள்ள மகாமகப் புராணக் கதையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

அறிவுள்ளவர்களும், ஒழுக்கமுள்ளவர்களும் அங்கே செல்லலாமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!

- கி.வீரமணி 14-02-2016

தமிழ் ஓவியா said...

மகாமகா மூடத்தன மகாமகம்!



இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள்.

அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மகநட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார்.

அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரின் அண்மையில் உள்ளன.

மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்
வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்
உறி விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்
பூணூல் விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்
தேங்காய் விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்
சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்
புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்
சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்
அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்
இது என்ன பூணூல் விழுந்த இடம்? இந்து மத விவகாரம் என்றாலே எல்லாம் பூணூல் மயம்தானா?
20-02-2016

தமிழ் ஓவியா said...

மகாமக பக்தர்களே! ஒரு கணம் சிந்தியுங்கள்!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2016
கி.வீரமணி




தமிழ்நாடு அரசால் சுமார் 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இம்மாதம் 13ஆம் தேதி முதல் துவங்கி 22ஆம் தேதி பிப்ரவரி (2016) முடிவடையவிருக்கும் கும்பகோண மகாமகத்தின் மகத்துவம்பற்றி பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனரல்லாத சூத்திரர்கள் முதலாளிகளாக உள்ள ஊடகங்களும் - தொலைக்காட்சிகள் உட்பட, நாளும் பக்திப் பிரவாகம் பொங்க செய்திகளை வெளியிட்டு, அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் அழிவைத் தேடித் தருகின்றன!

தமிழ் ஓவியா said...

ஒரே முழுக்கில் 12 வருட பாவங்கள் ‘குளோஸ்!’

12 வருடங்கள் முழுவதும் ஒரு மனிதன் செய்த பாவங்கள் எல்லாம் இந்த இரண்டரை அடி - மேட்டூரிலிருந்து விடப்பட்டு தேக்கி வைக்கப்பட்ட கும்பகோண மகாமகத் தீர்த்தவாரி தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ளுதல் மூலம் போய்விடும்; கழுவப்படும்! பல லட்சக்கணக்கில் ஒரே நேரத்தில் இறங்கிடும் - கரையேறும் பக்தர்கள் வாழ்வு - ஆரோக்கிய வாழ்வாக அமைய வாய்ப்பு உண்டா என்று, சற்று பகுத்தறிவுடன் பக்தர்கள் நிதானித்துச் சிந்திக்க வேண்டாமா? காஞ்சி சங்கராச்சாரியார் வகையறாக்களும், பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களும் இந்த பாவ விமோசன குளத்தில் நீராடி நனைந்த வேட்டியுடன் படத்திற்குப் ‘போஸ்’ கொடுப்பது நமக்குப் புரிகிறது!

சாமியார்களும் மடாதிபதிகளும் செய்த பாவங்கள் கொஞ்சமா நஞ்சமா?

அதுபோல மடத் தலைவர்களும்; சாமியார்கள், சாதுக்கள், சந்நியாசிகள், ஆதீனங்கள் என்ற பெயரால் மக்களை ஏமாற்றி, ராஜபோக செல்வங்களை அனுபவித்து வரும் காவிகளும் இதில் கலந்து மகிழுவது ‘நியாயம்தான்!’

காரணம் 12 ஆண்டுகளில் இவர்கள் செய்துள்ள பாவங்கள் கொஞ்சமா? நஞ்சமா? சாமியார்களின் ஆசிரமங்களில் நடந்த காவல்துறை வேட்டைகளில் கண்டறியப்பட்ட கருத்தடை தொழிற்சாலைகள் வரை - தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளும், அதன் மூலம் நடைபெற்றிருக்க வேண்டிய பாவங்கள் எவராலும் ஊகித்து அறிந்து கொள்வது எளிதுதானே!

தந்தை பெரியார் கேட்ட கேள்வி

தந்தை பெரியார் கேட்டார். “பாவங்களை மன்னிக்க, போக்கிக் கொள்ள இவ்வளவு எளிதான வழி இருக்கையில், மனிதர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் இல்லையே! ஹிந்து மதம் என்ற இந்த பார்ப்பன சனாதன வேத மதத்தில்தான் எவ்வளவு எளிய வழி அதுவும் (Wholesale) 12 வருட பாவத் தீர்வு முறை என்றார்.

பார்ப்பனக் கதையளப்புகள் வேறு!

இதற்குப் புராணக் கதைகள் - புளுகுகள் வேறு. இந்தியாவின் எல்லா நதிகளும் கங்கை, சிந்து (பாகிஸ்தானில் இப்போது) கோதாவரி, நர்மதா, காவிரி, சரஸ்வதி போன்ற நதிப் பெண்கள் பரமசிவனிடம் எல்லோரும் அவர்களது பாவங்களைக் கழுவிவிட எங்களிடம் வந்து கழுவி விட்டுச் செல்லுகிறார்களே என்று முறையிட, அவர்களை சிவன் சமாதானம் செய்து, ‘உங்களுக்கு ஒரே வழி, உங்கள் பாவங்களை 12 வருடங்களுக்கு ஒரு முறை தெற்கே கும்பகோணம் என்ற ஒரு ஊரில் உள்ள குளம் உள்ளது அங்கே சென்று குளியுங்கள்; நான் உங்களை அழைத்துச் செல்லுகிறேன்’ என்றாராம்!

அதன்படி, எல்லா நதிகளான பெண்களும் அங்கே வந்து அவர்கள் சுமந்த பாவங்களைக் கழுவி விட்டுத் திரும்பினார்கள் போலும்!

இப்படி ஓர் அண்டப்புளுகு அறிவுக்குப் பொருந்தாத புராணப் புளுகுகளை கும்பகோண ஸ்தல புராணம் ஒன்று கூறுகிறது!

இந்தக் கதை இல்லாமல், வேறு ஒரு கதையையும் உருவாக்கிக் கூறுகின்றனர்.

ஹிந்து ஆங்கில நாளேடு 12.2.2016, 19.2.2016 ஆகிய இரு வார கட்டுரைகளில் சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளதை அப்படியே தருகிறோம்! (எஸ். பிரபு)

“உலகம் அழியப் போகிறது, பிரளயம் வரப் போகிறது என்று கேள்விப்பட்டு கவலைப்பட்ட பிரம்மா, சிவபெருமானிடம் சென்று உதவி கேட்டார்.

உடனே சிவன், ‘அமுத கலசம்’ என்ற ஒரு பானையைத் தயாரித்து, அதில் உற்பத்தி விதைகள், தேங்காய், தர்ப்பை, மாந்தளிர்களை மாவிலை - பூணூல், வஸ்திரம், வில்வம் இவைகளைப் போட்டு, பூஜை செய்யும்படி மேருமலையின் உச்சியில் வைத்தாராம்!

பிரளயம் வந்தவுடன், அந்த வெள்ளத்தில் இந்தப் பானை உருண்டு திருக்குடந்தை என்ற இந்த கும்பகோணத்தில் வந்து உருண்டு நின்றது.

உடன் சிவன் ஒரு வேடனாக மாறி, அந்தப் பானையைத் தனது வில்லிலிருந்து விட்ட அம்பு மூலம் உடைத்தாராம்!
அந்தக் குடம் பல துண்டுகளாக உடைந்து பலவிடங்களில் அமுதம் விழுந்து சிதறியதாம்! அவைதாம் இந்த புனித பொற்றாமரைக் குளம் முதலிய பல. கும்பேசுவரர் ஒன்றை தனது பூஜைக்காக ஒதுக்கி வைத்துக் கொண்டு, மற்ற 13 தீர்த்த வாரிகளை வைத்து, அஷ்டதிக்கு பாலகர்களுக்கும், கின்னரர் மற்றும் கந்தர்வர்களுக்கும் என புனித நதிகளை மீண்டும் உருவாக்கினாராம்!

இந்த அமுதம் மூலம் சிவன் கலந்து லிங்கத்தையும் உருவாக்கி அதனை வணங்கி இணையச் செய்தாராம்!
(கும்ப-லிங்கம் என்பது இதன் மூலம் தான் போலும்!)

மகா பிரளயத்திற்குப்பின் ஏற்பட்ட முதல் ‘சிருஷ்டி’ - உற்பத்தி இதுதானாம்! எனவேதான் இக்கோயிலுக்கு ‘ஆதிகும்பேசுவரர்’ என்று பெயர் அழைக்கப்பட்டு, சிவன், வேடனுடைய வில்லுடன் காட்சியளிக்கிறாராம் இங்கே!

தமிழ் ஓவியா said...

எத்தனைத் தேன் தடவல்கள்!

(பக்தர்களை ஈர்க்க என்ன வித்தைகள் - தேன் தடவல்கள் என்ன தெரியுமா? கட்டுரையில் உள்ளபடி)

1) கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்படும்
2) பிள்ளைப் பேறு உண்டாகும்.
3) இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாத முந்தைய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும்.

ஏனெனில் இந்த (ஒன்பது) நதிகளின் பாவங்களும் இங்கேதான் விலக்கப்படுகின்றன; கரைக்கப்படுகின்றன! கழுவாய் இது என்பதால் அவ்வளவுக் கொள்ளை - ‘புனிதமோ புனிதமாம்!’

திருஞான சம்பந்தர் குறிப்பிடவில்லையே!

இந்த கும்பகோண மகாமகக் குள மகாத்மியத்தை முதலில் துவக்கியது - கிருஷ்ணதேவராயர் இக்குளத்தில் குளித்து சென்றதின் தொடக்கமாம்!

திருஞானசம்பந்தர்கூட கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே தவிர, மகாமகம் பற்றிக் குறிப்பிடவில்லை என்கிறார் ஸ்ரீராம் (‘ஹிந்து’ - 12.2.2016).

‘வாரார் கொங்கை மாதொரு பாகர்’ என்று மட்டுமே காசிவிசுவநாத சாமியைப் பாடியிருக்கிறார் அவர்!
தஞ்சையை ஆண்ட நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் இந்த மகாமகம் பிரசித்தி அடையச் செய்யப்பட்டது!
இதைச் செய்தவர் நாயக்கர்களின் முக்கிய அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதர் என்கிற பார்ப்பனர் தான் (இவர் பெயரில் அமைந்த கிராமம்தான் கோவிந்த குடி என்ற ஊர்) தஞ்சாவூரில் உள்ள ‘அய்யன் கடை’ அய்யம்பேட்டை எல்லாம் இந்த பார்ப்பனர் பெயரில்தான் என்ற கருத்தும் உண்டு!)

கோவிந்த தீட்சதர் என்ற
பார்ப்பானின் தில்லுமுல்லு இது

இவர்தான் இதை ஒரு பக்தி வியாபாரமாக செழிக்க, பார்ப்பனத் திருமேனிகள் செழிக்க இப்படி ஒரு தந்திர வழிபாட்டுப் பக்திப் போதையைப் பரப்பி ஏற்பாடு செய்தவர் (கி.பி. 16 17ஆம் நூற்றாண்டில்)

ராஜ மரியாதை - ராஜாவுக்கு சமமாக நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தை அனுபவித்தவர் இவர். இவருக்கு எடைக்கு எடை தங்கம் - ‘துலாபாரம்’ ‘துலாபாரஷேதனா என்ற ஒன்றைப் புகுத்தினார்.

அந்த தங்கத்தை - எடைக்குப் பின் பார்ப்பனர்களுக்கே விநியோகம் செய்யும் ஏற்பாட்டைச் செய்தார். இதைக் காணவும் பெருங்கூட்டம் சேர்ந்தது, சேர்க்கப்பட்டது!

(அது 12 ஆண்டு மாசி, முழு பவுர்ணமி முழு நிலா என்பதுகூட, புத்தர் சித்திரை மாத முழு நிலாவைத் தோற்கடித்தது; புத்த மத எதிர்ப்பினை ‘நாசுக்காக’ முன்பே துவக்கியதற்காகவும் கூட இருக்கக் கூடும்! இது நமது கருத்து)

அன்று மன்னர்கள்- இன்று மந்திரிகள்

கி.பி. 1676 முதல் நாயக்கர் காலத்தில் இந்த மகாமகத் திருவிழாவில் தஞ்சையை ஆண்ட ராஜா - மன்னர்கள் பங்கேற்பதை ஒரு வாடிக்கை போல் செய்தனர்.

(மன்னர்களும் மனுசிந்தனை உடையவர்கள்தானே! மகத்தான புண்ணியம் தேட இதனை ஒரு வழியாகக் கொண்டிருக்கக் கூடும்).

அன்று மன்னர்கள்; இன்று மந்திரிகள் - அதுவும் மதச் சார்பற்ற ஆட்சி என்ற பெயரில்.
குளோரின் போட்டு இரண்டரை அடி தண்ணீரை விட்டே இந்தப் பாடு!
எத்தனை ஆயிரம் போலீஸ் - இந்த பக்தி மூடநம்பிக்கை வியாபாரத்தைக் கண்காணிக்க!
பக்தர்களே, கொஞ்சம் புத்தியுடன் சிந்தியுங்கள் - உங்களுக்கு நல்லது.

தமிழ் ஓவியா said...

துறவிகள் மாநாடா, அரசியல் மாநாடா?


கும்பகோணம் மகாமகத்தையொட்டி கோவிந்தபுரம் ருக்மணி சமஸ்தானத்தில் கடந்த வியாழனன்று அகில பாரதத் துறவிகள் மாநாடு நடைபெற்றுள்ளது. இத்தனைத் துறவிகள் ஒரே இடத்தில் கூடியதுகூட அதிசயந்தான்.

இந்த மாநாட்டில் இந்து முன்னணி இராம. கோபாலனுக்கு என்ன வேலை? இவர் என்ன துறவியா? எந்த மடத்தின் அதிபதி? அங்கு போய் என்ன பேசி இருக்கிறார்?
“இந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வாக்கு வங்கிமுறையை ஏற்படுத்த வேண்டும். கோயில்களில் அறநிலையத்துறை தேவையில்லை” என்று பேசி இருக்கிறார். இதனை வழிமொழியும் வகையிலும் சில மடாதிபதிகளும் பேசி இருக்கின்றனர்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? பி.ஜே.பி. கூறும் வாக்கு வங்கி அரசியலைத்தானே இவர்கள் சொல்லுகிறார்கள்?

இதன் பொருள் மக்களை மதவாரியாகப் பிரித்து அதன் அடிப்படையில் வாக்குகளை அள்ளிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

‘நாம் இந்துக்கள், அவர்கள் முஸ்லிம்கள், கிறித்த வர்கள், அந்நியர்கள், ஆகவே இந்துக்களே, உங்கள் வாக்குகளை இந்துத்துவாவைப் பேசும், ராம ராஜ்யத்தை உருவாக்க துடிக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் எங்களுக்கு என்றால் பி.ஜே.பி.க்கு வாக்களியுங்கள்” என்று சொல்லப் போகிறார்களா?

இந்து முன்னணி ராம. கோபாலன் சொன்னதை வழி மொழிகிறார்கள் என்றால் அதன் பொருள் இதுதானே?

இதுதான் இந்தத் துறவிகளின் ஆன்மிக ஒழுக்கமா? அடுத்த மதக்காரர்களை அந்நியப்படுத்துவது, மத அடிப்படையில் பகைமையை வளர்ப்பதுதான் இவர்கள் கூறும் ஆன்மிகமா?

அப்படியென்றால் ஆன்மிகம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது அல்ல. மத ரீதியாகக் கூறுபடுத்துவது, மாச்சரிய உணர்வுகளைத் தூண்டி விடுவது என்று தானே பொருள்?

ஆன்மிகத்தைத் தேடுவதில் மதக் கண்ணோட்டம் தேவையில்லை; மதத்தால் வேறுபட்டாலும் அடிப்படை ஒன்றுதான் - ஆன்மிகத் தேடுதல் என்பது இதுதான் என்ற சொற்களை யாரும் உச்சரிக்காதது ஏன்? காரணம் அப்படி ஓர் ஆன்மிகம் ஏதுமில்லை.

இராமேசுவரம் கோயில் குட முழுக்கில் யாருக்கு முதல் மரியாதை என்று சிருங்கேரி சங்கராச்சாரியாரும், காஞ்சி சங்கராச்சாரியாரும் மோதிக் கொண்டார்களே அந்தமோதல் கும்பகோணத்தில் நடந்ததா என்று தெரியவில்லை. முற்றும் துறந்தவர்களிடத்தில் முரண்பாடுகளும் முணுமுணுப்புகளும், தன் முனைப்புகளும் இருப்பதுதான் வேடிக்கை.

இந்து மதத் துறவிகள் நடத்திய அம்மாநாட்டில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. இந்தக் கால கட்டத்தில் இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதைப் பற்றி அலசியிருக்க வேண்டாமா? இந்து மதம் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினையாயிற்றே!

குறைந்தபட்சம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களாவது இந்தப் பிரச்சினைப் பற்றிச் சிலாகித்திருக்க வேண்டாமா? காரணம், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் இந்தப் பிரச்சினையில் மிகவும் அக்கறை கொண்டு கவனம் செலுத்தியவர் ஆயிற்றே! இதைக்கூடப் பேசாமல், வேறு எதற்காகத்தான் இந்த அகில பாரதத் துறவிகள் மாநாடாம்?

இடுக்கோடு இடுக்காக திருவாளர் ராம. கோபாலன், தன் நச்சுப் பொடியைத் தூவி இருக்கிறார்.

‘கோயில்களில் அறநிலையத்துறை தலையீடு தேவையில்லை’ என்பதுதான் அந்த நச்சுப் பொடி. இதன் பொருள், கோயில் சொத்துக்களை எல்லாம் கோயில் பெருச்சாளிகளான பார்ப்பனர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும், யாரும் கேள்வி கேட்கக் கூடாது - தானடித்த மூப்பாக சுரண்டிட வேண்டும் என்பதுதான்.

அப்படியெல்லாம் ஒரு கால கட்டம் இருந்த காரணத்தினால்தான் இந்து அறநிலையத்துறை, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அரசால் போடப்பட்ட ஆணையம்கூட கோயில் குருக்களின் சுரண்டல் கூடாரமாகத்தான் இருக்கிறது என்பதை ஆதார பூர்வமாக அறிக்கையாகவே அளிக்கவில்லையா?
கோயில் சொத்துக்கள் எல்லாம் பார்ப்பான் வீட்டுச் சொத்தா? நமது அரசர்களால் வாரி வழங்கப்பட்டவை அல்லவா? அப்படி இருக்கும் பொழுது அதற்கு முறையான கணக்கு இருக்க வேண்டாமா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மன்னன் கிருஷ்ணதேவராயன் அளித்த வைர நகைகளைக் காணவில்லை என்று புகார் கூறப்பட்டதே! உயர்நீதிமன்றம் தலையிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நகைகள் பற்றிய தணிக்கை அறிக்கை தேவை என்று உத்தரவிடவில்லையா?

வெகு தூரம் கூடப் போக வேண்டாம்; சிதம்பரம் நடராஜன் கோயிலை எடுத்துக் கொள்ளலாமே! தீட்சதர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரம் என்ன?

ஆண்டு ஒன்றுக்கு சிதம்பரம் கோயில் வருமானம் ரூ.37,199 செலவினம் ரூ.37,000, மீதி ரூ.199. இதுதான் தீட்சதர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த கணக்கு; அதே நேரத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அக்கோயிலின் வருவாய் என்ன? 15 மாதங்களில் ரூ.25,12,485. இது எதைக் காட்டுகிறது?

அரசு தலையீடு இல்லை என்றால் சர்வமும் பார்ப்பனக் கொள்ளை மயம்தானே - இதைத்தான் ராம. கோபாலன் விரும்புகிறார் - ஆதீனங்கள் இதனைப் புரிந்து கொள்ளவில்லையா?

இல்லை, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுக்கிக் கொண்டார்களா? 22-02-2016

தமிழ் ஓவியா said...

மலக்கழிவு28சதவிகிதம்;
மூத்திரக்கழிவு40சதவிகிதம்!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு





கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத் தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காவல்துறையினரின்
உடல்நலம் பாதிப்பு!

குளத்தைப் பாதுகாக்கும் 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல்துறையினருக்கு தொண்டை கரகரப்பு, மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.

விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத் தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.

இ.கோலி

இ.கோலி என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும் இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிக மாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. முக்கியமாக ஓ157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன. இத னுடைய வாழ்க்கைச் சுழற்சி மலத்தின் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து பிறகு தாவரம் மற்றும் மீன் உணவு வழியாக மீண்டும் மனித குடலைச் சென்றடையும். சமைத்த உணவு உண்ணும் பழக்கம் உள்ள மனித இனங்களில் மிக அதிக அளவு இவ்வகை பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதி, மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் இவ்வகைப் பாக்டீரியாக்கள் குடலில் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.




மனித மலக்கழிவு - மூத்திரக் கலப்பு
நீரில் இ-கோலி என்னும் பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. (இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் உள்ள சளி போன்ற திரவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.மலம் கழிக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி நீரில் கலந்துவிடுகின்றன). இவ்வகைப் பாக்டீரியாக்கள் 28 விழுக்காடு குளத்து நீரில் கலந்துள்ளது. மேலும் மனித சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவும் குளத்து நீரில் 40 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.


மாவட்ட நீரியல் துறை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறும்போது,

நாங்கள் குளத்து நீரை ஓட்டத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். ஆனால், வெளியேறும் நீரின் அளவு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அதிகமாக இருந்தது. முக்கியமாக குளத்தின் கரைப்பகுதி மற்றும் 2 அடி ஆழமுள்ள பகுதி நீர் அப்படி தங்கிவிட்டது. இதனால் மாசுக்கள் அதிகமாகிவிட்டன. மேலும் மக்கள் தொடர்ந்து வந்து முழுக்குப் போடுவதால் மாசு மிகவும் அதிகமாகிவிட்டது என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள சமஸ்கிருதமே சரியான அளவுகோல்!


சமஸ்கிருதம் என்று சொன்னால் அது செத்தொழிந்த மொழி என்பது ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்த வெளிச்சமான உண்மை.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 14 ஆயிரமே என்று சொல்லப்பட்டாலும்கூட, அது நடைமுறை சாத்தியமில்லாமல் தானிருக்கிறது. 2013 இல் வெளிவந்த புள்ளி விவரம் இது; 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகும் எண்ணிக்கை உயரவில்லை; அதே தேக்க நிலைதான். (சங் பரிவார் வகையறாக்களுக்கு நமது அனுதாபங்கள்!)

அம்மொழி ஏதோ இருக்கிறது என்றால், புரோகிதத்திலும் அர்ச்சனையிலும்தான் - அதுகூடப் பொருள் புரிந்து சொல்லப் படுகிறதா என்பது சுவையான கேள்வி.

1960 ஆம் ஆண்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்துக் கோவில்களின் நிலவரங்களை நிரல்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்களைப்பற்றிக் கூறும்போது, ‘‘அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? சமஸ்கிருத மொழியை அறிந்த வர்கள் என்பதைவிட பாரம்பரியமாக அர்த்தம் தெரியாது. நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனப் புரோகிதரை வைத்து நடத்தப்பட்ட விவாக சுபமுகூர்த்தத்திற்குச் சென்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துச் சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியும் உண்டு.

பார்ப்பனர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வீட்டிலாவது சமஸ்கிருத மொழியில் உரையாடல் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

இந்த நிலை இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் சனாதன சங்கராச்சாரியாரிலிருந்து, அரசியல் ஆச்சாரியார் என்று சொல்லப்படும் ராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும் சரி (ராஜாஜி) சமஸ்கிருதத்தின்மீது வைத்துள்ள பற்று என்பதைவிட வெறித்தனம் என்பது அளவிட்டுச் சொல்லப்பட முடியாத ஒன்றே.

இதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்.’’ (‘திராவிட நாடு’, 2.11.1947) என்று அண்ணா சொல்லும் உரைக்கல்லில் வைத்து உரைத்துப் பார்த்தால், பார்ப்பனர் தம் உள்ளத்தின் தன்மை உண்மையாகவே விளங்கும்.

தமிழ் ஓவியா said...

‘‘சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது - அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் ‘‘சர்வ வியாபசத்வம்’’ என்பார்கள்.

உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்சம் நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ‘‘பாணிணி’’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான், அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய (Philology) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது’’ - இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

‘முற்றுந் துறந்த லோகக் குரு’ என்று அக்கிரகாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (‘ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).

சங்கராச்சாரியார் எல்லாவற்றையும் கடந்தவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்; எதைத் தாண்டினாரோ இல்லையோ, அவாளின் சமஸ்கிருதப் பற்றை மட்டும் தாண்ட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூஜை வேளையில் எந்த காரணத்தை முன்னிட்டும் தமிழில் பேச மாட்டார். அப்படிப் பேச நேரிட்டாலும் குளித்து முழுகி விட்டுத்தான் மறுபடியும் பூஜையை ஆரம்பிப்பார்; காரணம், அவாள் பார்வையில் தமிழ் நீஷ பாஷையாம்.

இவர் ஆன்மிக ஆச்சாரியார் - அரசியல் ஆச்சாரியார் ராஜாஜி என்ன சொல்கிறார்?

‘பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி என்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால், மகாபெரிய விபத்தாகும்’’ என்று கூறுகிறார்.

அவரை விட்டுத் தள்ளுங்கள், கோமாளி என்று பொதுவாகச் சித்தரிக்கப்படும் திருவாளர் சோ.ராமசாமி கோவிலில் அர்ச்சனை மொழி தமிழ் என்றால், எப்படியெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்.

‘‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால், அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது; ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால், பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல - ஒலிக்கு’’ என்று தலையங்கம் தீட்டுகிறார் (‘துக்ளக்’, 18.11.1998) எல்லாம் வல்ல கடவுள் என்று பசப்புவார்கள். ஆனால், அவரைக்கூட அவாளின் சமஸ்கிருதக் குடுவைக்குள் அடைக்கிறார்களே - புரிகிறதா - அதுதான் அவாளின் இனப்பற்றும் - மொழிப்பற்றும்.

சமஸ்கிருதத்திலிருந்து எதற்குத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம்? அதுபற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே! கோவிலில் வழிபாடு செய்ய தமிழில் பாடல்கள் இல்லையா?

திருவாசகம், தேவாரம் என்று ஒரு பட்டியல் இருப்பதாக சைவ மெய்யன்பர்கள் சொல்லுகிறார்களே, அவையெல்லாம் குப்பைக் கூளங்களா?

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமஸ்கிருதம்தான் சரியான அளவுகோல்! மத்தியில் உள்ளது பார்ப்பன ஜனதா ஆட்சி என்பதால், சமஸ்கிருதத் திணிப்பு திட்டமிட்டு நடக்கிறது - எச்சரிக்கை!