Search This Blog

25.9.15

என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா?

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷணை 
(சித்திரபுத்திரன் எழுதியது)


சைவன்: ஒய்! என்னாங்காணும் நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப்போய் விட்டீர்.

பார்ப்பனன்:-வாரும் வாரும் பிள்ளைவாள் எனக்கு வர வர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்குச்சாகின்றோமோ, சாவதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்யவேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிடத் துணிந்து விட்டேன்
சைவன்: என்னங் காணும் பார்ப்பான் ஜீவ ஹிம்சை கூடா தென்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன போக்கிரித்தனமா அல்லவா.
பார்ப்பனன்:-கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவரல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமே யொழிய விஷயம் புலப்படுவது தான் கஷ்டம்
சைவன்:-என்ன பார்ப்பனக் குறும்பை நம்மிடமே காட்டு கிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பான்: இந்த நாடு தான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது சரி, வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைபேர்? சாப்பிடாதவர்கள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரியுமா?
7 கோடி மகமதியர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். ஒரு கோடி கிருஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாத்தகாதோர் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள் மராட்டிசத்திரியர், நாடாடர் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடுசத்திரியர்,
செங்குந்த சத்திரியர் ஆகியவாள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக்கோட்டை தன வைசிய வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளார்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளார்கள்,
வடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலுள்ள சில வேளாளர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஷ்டிரப் பிராமணர்கள்,
விஸ்வப்பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் சாலிய பிராமணர்கள் கொங்கினி பிராமணர்கள், கவுடப்பிராமணர், காஷ்மீரப்பிராமணர்கள் மச்சப் பிராமணர்கள். அம்பஷட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடு கின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைளையெல்லாம் சேர்த்தால்,
குறைத்தது 15 கோடிக்குக் குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பதே சந்தேகம் 35 கோடியில் ஒரு கோடி அதாவது 100க்கு மூன்று போகலாம். தவிர இந்தியர் தவிர உலக எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.
எனவே மொத்த  ஜனத்தொகையில் 100க்கு 99.5 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா சொல்லும் பார்ப்போம்.
சைவன்:- என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர்க்கதையெல்லாம் பேசுகிறீர்
பார்ப்பனன்:- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே! வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது அதெல்லாம். அந்தக்காலம். இது அறிவு ஆராய்ச்சி சையன்சு காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு.
அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறில்லை பிறகு இத்தனைபேர் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99 பேருக்கு ஜீவகாருண்ணியமில்லாமல் இருக்குமா? இப்படியா ஒரு கடவுள் மக்களை பிறப்பித்திருப்பார் என்று யோசித்து யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு சர்.ஜகதீச சந்திரபோஸ் மரம் கொடி செடி புல் பூண்டு. ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவை தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக்கண்டு பிடித்தபிறகு தான் சரி எது ஜீவகாருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது.
ஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும்போதும், காய்களை அறுக்கும் போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும்.அவை படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார்.
எனவே ஒரு ஜீவனை தினந்தினம் பல தடவை வதைசெய்து அதை துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும். அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடு வதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.
அதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால் தான் கிழங்கு, கீரை, காய், கறியை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே நான் உம்மைவிட குறைந்த ஜீவகாருண்ணியமுடையவன் என்று எண்ணிவிடாதீர்.
தவிர திரு.போஸ் காய்கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டு பிடித்துத்தான் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்பநாயனாரை ஒப்புக்கொண்ட சைவப்புராணங்களும் இதை அறிந்து தான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலை முறைக்கு நரகத்தை அடைவன் என்று மனுதர்மசாத்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா? சைவரே
சைவன்:-ஓய் ஓய் பார்ப்பனரே சரிதான் நடையைக் கட்டுங் காணும் உம் ஆராய்ச்சியையும், சயன்சையும் சாஸ்திரத்தையும் வேதத்தையும் புராணத்தையும் கொட்டை அடுப்பில் என்றைக்கு ஆராய்ச்சியும், சையன் சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டுது/ கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கை வைக்க வந்து விட்டது.
இந்தப் பாழும் அறிவும், ஆராய்ச்சியும் சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும் ஆதலால் இவை ஒழிய தவம் கிடப்போம். உம்மைப் பார்த்ததற்கும் உம்பேச்சை கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவவோண்டும்
பார்ப்பான்:-அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் போசும் இயற்கை ஆராய்ச்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானுலும் உங்கள் சைவரும் உங்கள் ஜீவகாருண்யமும் சிறிது கூட நிலைக்காது. தவிர என்னைப் பார்த்ததற்கும், என் பேச்சுகளை காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.
--------------------------- தந்தைபெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதிய உரையாடல்- ”குடிஅரசு” 16.6.1929

15 comments:

தமிழ் ஓவியா said...


1949ஆம் ஆண்டிலேயே திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்
திருக்குறள் பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனை தனித்தன்மையானது
முனைவர் அவ்வை நடராசன் ஆய்வுரை



சென்னை, ஆக. 25- 1949ஆம் ஆண்டிலேயே திருக்குறள் தமிழ் நெறி விளக்க மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார், குறள் பற்றி பெரியார் அவர்களின் சிந்தனை தனித்தன்மையானது என்று மேனாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராசன் கூறினார்.

வாழ்க்கையில் தமிழர்களுக்குக் கிடைத்த பேறாக - திருக்குறள் தெளிவு என்பது இப்படித்தான் அமையவேண்டும் என்று முனைவர் அவ்வை நடராசன் உரையாற்றினார்.
தந்தை பெரியார் அவர்களின் 137 ஆவது பிறந்த நாள் விழா 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் களஞ்சியம் தொகுதி 37 - திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

1949 ஆம் ஆண்டு திருக்குறள் தமிழர் நெறி விளக்க மாநாடு இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு ஒரு சிறப்பையே உண்டாக்குகிறது. தமிழகத்தில் நூற்றுக்கணக் கான இயக்கங்களும், ஆயிரக்கணக்கான மன்றங்களும், பல்லாயிரக்கணக்கான அறிஞர்களும் நாடு முழுவதும் இருந்தாலும், 61 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொன்னால், 1949 ஆம் ஆண்டளவில், பிராட்வே பகுதியில் திருக்குறள் தமிழர் நெறி விளக்க மாநாடு என்பதை நடத்திய பெருந்தகை தந்தை பெரியார்தான்.

61 ஆண்டுகளுக்கு முன்பு புலவர்கள் அப்படி மாநாடு நடத்துகின்ற கருத்துடையவர்கள் இல்லை. அந்த மாநாட்டில் அவர்கள் என்ன பேசவிருக்கிறார்கள் என்பதை யும் அவர்கள் அறிந்ததில்லை. தமிழரின் நெறி விளக்குவது என்று சொன்னால், அது திருக்குறளாகத்தான் திகழ முடியும் என்று சொல்லி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறி, பொருள் இது என்ற வள்ளுவன் என்ற கல்லாடத்தின் கருத்தை, தந்தை பெரியார்தான் எடுத்துத் தமிழகத்தில் சொல்லாடத் தொடங்கினார்கள்.

நமக்கெல்லாம் வாய்த்த பெரும் பேறு

தந்தை பெரியார் செய்த புரட்சிகள் எண்ணற்ற புரட்சிகள். பெண்கள் மானத் தகுதியோடு மாட்சி பெற்றுத் திகழ்வதும், தமிழர்கள் இன உணர்ச்சியோடு எழுச்சி பெறுவதும், தமிழ் உலகத்திற்குத் தக்க வகையில் அவர்கள் நெறியைப் பற்றியும், அவர்கள் விளக்கத்தைப்பற்றியும் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காக, தொடங்கிய அந்த அறிவுப் பணியை நமக்கெல்லாம் வாய்த்த பெரும் பேறாக, ஆசிரியர் பெருமகன் அறிவுப் பிழம்பாக இருந்து 37 தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த 37 ஆம் தொகுதியில் நான் இரண்டொரு பகுதி களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நீங்கள் வேறு யாராவது, எப்பொழுதாவது இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் களா? என்ற எண்ணிப் பாருங்கள்.

குறள் மக்களிடத்தில் பரவுவதற்கான முறையில்தான் நான் பணிபுரியவேண்டும். சென்னையில் ஒரு புத்தகத்தை இரண்டணா வீதம், எல்லாக் குறட்பாக்களையும் கொண்ட புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் போட்டு, மக்களிடத்தில் விநியோகிப்பதற்காக தோழர் கடலூர் நாராயணசாமி அவர்கள்மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது. அந்தப்படி வந்தால், திருமணங்களில் தேங்காய், பழம் கொடுப்பதற்குப் பதிலாக, குறள் புத்தகத்தைத் தட்டில் வைத்துக் கொடுத்து, மக்கள் அறிவைப் பரப்பலாம்; வையகம் எல்லாம் குறளின் புகழ் ஓங்கும்!

தமிழ் ஓவியா said...


அதுவும் படித்துப் பாருங்கள், பத்து லட்சம் பதிப்புகள்; பத்து லட்சம் படிகளை இரண்டணா விலையில், தமிழ் மக்கள் எல்லோர் கையிலும் திகழும்படியாக இந்த நூல் மிளிரவேண்டும் என்கிற கருத்தை, எனக்கும் 80 வயதாகப் போகிறது. இதுவரையில் எந்த மேடையிலும் கேட்ட தில்லை. தந்தை பெரியார் அந்த மாநாடு நடத்தியபோது, அம்மாநாட்டில் பங்கு பெற்றவர்கள், நாவலர் பாரதியார், அறிஞர் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், இலக்கு வனார் இவர்கள் எல்லாம் பங்கேற்றபொழுது ஒன்று சொன்னார்கள்; திரு.வி.க. சொன்னார், எதையும் எண்ணிப் பார்க்காமல், ஏன் என்று கேட்காமல், தமிழகத்துக்கு இந்நூல் எதற்கு என்று கேட்காமல், எதையும் தான் நினைத்தால் மட்டும் சொல்லுகின்ற தன்மை வாய்ந்தவர், என்னுடைய நண்பர் ஈ.வெ.ரா. என்று சொல்லியிருக்கிறார்.

துணிவான கருத்துகளை மிகவும் அழகாக ஒரு நாட கம்போல ஓரிடத்தில் எழுதிக் காட்டியிருக்கிறார் சித்திர குப்தன் என்கிற பெயரில். ஒரு கருத்தை கேட்கிறார்கள், இந்த மாநாட்டை திராவிடர் கழகம் ஏன் நடத்துகிறது? இப்படி நடத்துவதனால் என்ன பயன்? இந்தக் கருத்துகள் மக்களிடையே பரவுமா? என்று.

வருகின்ற தலைமுறைகளுக்கு நெஞ்சில் பரவினால் போதும்!

விடை சொல்கிறார், தந்தை பெரியார். பரவாவிட்டால், பரவாயில்லை. இந்தக் கருத்துச் சென்று சேரவேண்டும் என்பதுகூட எனக்குக் கவலை இல்லை. என்னுடைய வேலை என்பது நம்முடைய ஆசிரியர் அடிக்கடி சொல் வதைச் சொல்வதென்றால், அறிவு நாணயம் கொண்ட தாகும். எனவே, நான் சொல்கிற கருத்தின்படி, திருக்குறள் எண்ணங்களைச் சொல்கிறேன். கேட்டால், கேட்கட்டும்; கேட்காமல் போனால், போகட்டும். இன்று இல்லை, இனி வருகின்ற தலைமுறைகள் காணுகின்ற கருத்துகள் எப் பொழுதாவது நெஞ்சில் பரவினால் போதும் என்பதுதான் என்னுடைய கருத்து.

தந்தை பெரியார் திருக்குறளை எவ்வளவு நுணுக்க மாக எண்ணியிருக்கிறார் என்றால், அதில் இருக்கின்ற கடவுள் வாழ்த்தைப் பற்றியோ, அதில் இருக்கின்ற அவா அறுத்தலைப் பற்றியோ, அதிலிருக்கிற மெய்யுணர்வைப் பற்றியோ, இந்தப் புலவர்கள் எழுதி வைத்தப் பொய்களைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. காரணம், இந்தக் கருத் துகள் எந்த வகையில் சொல்லப்படுகின்றன என்பதனை, அவர்கள் சரியாகவே எண்ணிப் பார்க்கவில்லை என்பது தான் தமிழர்களைப்பற்றிய குறை. இதிகாசங்களையும், புராணங்களையும், பொய்க் கதைகளையும், புரட்டுகளையும், நீதி என்று சொன்னால், மனு நீதிதான் நீதி என்றும் சொல்லி, இவர்கள் தலையில் அழுத்தி வைத்திருப்பதைப் பார்க்கிறபொழுது, இந்த அழுத்தி வைத்த சுமை என்பது, எவ்வளவு கேவலமான தாகவும், இழிவுடையதாகவும் இருக்கிறது என்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமல்தான், நான் திருக்குறளைப்பற்றி சொல்ல வருகிறேன்.

வருண ஜெபம் செய்யலாம் என்று மூடர்கள் சொல்கிறார்கள்

திருக்குறள் கருத்துகளைக்கூட இவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதற்கு, நான் ஒன்று சொல்லலாம்; மழை பெய்யவில்லையா? இது ஏன் என்று எல்லோரும் கேட்டபொழுது, வருண ஜெபம் செய்யலாம் என்று மூடர்கள் சொல்கிறார்கள். இந்த மூடர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மழை பெய்வதற்கு, பல பேர் வழிபாடு செய்கிறார்கள். அரை அங்குல அறிவாவது அவர்களுக்குத் திருக்குறளைப்பற்றி இருக்குமானால், இந்த வருண ஜெபம் நடக்காது. திருக்குறளின் குறட்பாவை எண்ணிப் பாருங்கள் என்று அவர் ஒரு குறளை எடுத்துக் காட்டுகிறார்.

மழை பெய்யவில்லை என்றால், மக்கள் துன்பப்படு வார்கள். மக்கள் துன்பப்பட்டால் வளம் வராது; வளம் இல்லையென்றால், ஏராளமான சிக்கல்கள் நாட்டில் பெருகும். இது எல்லாவற்றுக்கும் காரணம், மழை பெய்ய வில்லையே என்று நினைக்கின்றபொழுது, மக்கள் கூடி மகிழ மாட்டார்கள். கொண்டாட்டங்களை நடத்த மாட்டார் கள். விழாக்களை நடத்தமாட்டார்கள். இவைகளையெல் லாம் மனதிலே வைத்துக்கொண்டுதான், ஒரு திருக்குறள் இருக்கிறது,

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
என்று ஒரு குறளைக் காட்டுகிறார்.

பெரியார் உரையை வாரந் தவறாமல் போய் கேளுங்கள், விளங்கிவிடும்

எந்தகைப் பெருந்தகை பேராசிரியர் அவர் எனக்கு திருக்குறள் பாடம் எடுத்தவர். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, அவர் திங்கள்கிழமைதான் வகுப்புக்கு வருவார். ஞாயிற்றுக்கிழமை இயக்க மாநாட்டில் கலந்துகொண்டு வருகிறவர் அவர்; திருக்குறள் உங்களுக்கு விளங்கவில்லை என்றால், கவலைப்படாதீர்கள்; பெரியார் உரையை வாரந் தவறாமல் போய் கேளுங்கள், விளங்கிவிடும் என்றார்.

அந்த அடிப்படையில்தான், நீங்களே எண்ணிப் பாருங்கள்; பரிமேலழகர் அல்ல, நூற்றுக்கணக்கானவர் உரை எழுதியிருக்கிறார்கள். யாரும் நினைத்துப் பார்க்காத குறட்பாக்களை எடுத்துக்காட்டி...

சிறப்பொடு பூசனை செல்லாது என்பதற்கு, பெரியார் தந்த இந்த விளக்கம்; இந்தத் தலைமுறையில் ஒரு தமிழுரும் எண்ணிப் பார்க்காத விளக்கமாகும்.

தமிழ் ஓவியா said...

ஒரு 25 கருத்துகளை ஆசிரியர் அவர்கள் திரட்டி, பெரியார் கருத்துகள் என்று முன்னுரையாக எழுதியிருக் கிறார்கள். அந்த 25 கருத்துகளிலும் எப்படி பொய் நூல்களி னால் தமிழ் மக்கள் வாடி விட்டார்கள் என்பதற்கு, திருக் குறளில் கடவுள் என்ற சொல் இல்லை; ஜென்மம் என்ற சொல் இல்லை; மாற்றம் என்ற சொல் இல்லை; பக்தி என்ற சொல் இல்லை. இவை இல்லாத நூல், இது தமிழ் நூலா?

ஒரு கருத்தைக் கேட்கிறார், ஒரு 33 சொற்பொழி வுகளில் தந்தை பெரியார் கிட்டத்தட்ட 40 குறட்பாக்களை எடுத்துக்காட்டுகிறார். யாரும் நினைத்துப் பார்க்காத குறட் பாக்களை எடுத்துக்காட்டி, ஒரு கருத்தைச் சொல்கிறார்.

நன்றி மறந்தவர்களைப்பற்றி ஒரு கருத்து வருகின்ற பொழுது, ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை
என்கிற ஒரு குறளைக் காட்டி,

இழிவான ஒரு செயலைச் செய்வது என்பது மக்க ளுக்கு நல்லதல்ல. மானம் உடையவர்கள் செய்வது இல்லை. மானம் உடையவர்கள் இப்படி செய்யலாமா? என்று கேட்டால், வேதங்கள் சொல்லுகின்றன, இதிகாசங்கள் சொல்லுகின்றன - இப்படி சொல்லுகின்ற கருத்துகளைக் கேட்டுப் பார்த்தால், இவ்வளவு தவறான காரியத்தை, இழிவான காரியத்தை செய்யலாமா? இதை ஒரு நூல் என்று காட்டி, அதனை ஒரு மேற்கோளாகக் காட்டலாமா? என்று நான் கேட்டிருக் கிறேன்.

அந்தக் காலத்தில் சொன்னார்கள், ஆபத்திற்குப் பாவமில்லை; அவசரத்திற்குத் தோஷமில்லை இப்பொழுது தெரிகிறது, இந்த நான்குமே தமிழ் இல்லை.
எல்லா இடங்களிலும் அவருடைய சிந்தனை பகுத் தறிவு எண்ணத்தின்படி, திருக்குறள் நூல் கருத்துகளைப் பற்றி பல கருத்துகள் எனக்கு உடன்பாடு என்று நான் சொல் லமாட்டேன் என்று சொல்கிறார்.

தமிழ் ஓவியா said...

அறிவு என்பது எது?

எப்பொருள் எத்தன்மை த்தானும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
அது எவன் சொன்ன கருத்தாக இருந்தாலும் என்ன? எத்தகைய கருத்தாக இருந்தால் என்ன? எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
இந்த இரண்டு கருத்து போதும், நான் திருக்குறளை உடன்படுகிறேன் என்பதற்கு.
நன்றியோடு தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்!

உடன்படாததற்கு உண்டா என்றால், உடன்படாத கருத்துகள் இருக்கட்டும்; இருக்கிற கருத்துகளில் இருக்கின்ற செம்மையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதை மிக அருமையான தொகுப்பாக, வாழ்க்கையில் தமிழர்களுக் குக் கிடைத்த பேறாக - திருக்குறள் தெளிவு என்பது இப்படித்தான் அமையவேண்டும் என்பதற்கு, நம்முடைய தந்தை பெரியார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி வந்த இந்தக் கருத்துகளை - நாள் தவறாமல் எண்ணிப் படிக்கவும் - அந்தக் கருத்துப்படி நடக்கவும் நமக்கு இதை ஒரு அருமையான கருவூலமாக பேராசிரியர் வழங்குவதும் - நம்முடைய ஆசிரியர் பெருந்தகை அவர்கள் வெளியிடு வதையும் நான் மகிழ்ச்சியோடு, விரும்பி நன்றியோடு தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.
திருக்குறள் ஒரு காலத்தில் ஏற்பட்ட கருத்துகளினால் பிறந்தவையே தவிர, தமிழர்கள் நெறிவிளக்கம் என்பதை எடுத்துக்காட்டுவது என்று சொன்னால், தமிழர் வாழ்வின் கருத்துகளையெல்லாம் எப்படி வகுத்துக் காட்டலாம் என்பதற்காக,

ஓரிடத்தில் சொல்லிக் காட்டுகிறார்,

எவனாவது இதற்கு முன்னால் இந்த உலகத்தில் அடைய வேண்டிய நன்மைகள் என்று சொன்னால், நான்கு என்றுதான் சொல்வார்கள். வேதம் ஓதுகிறவன் விடாமல் சொல்வது அதுதான். மனுநீதி சொல்வது அதுதான். ஆனால், நான்கல்ல, மூன்று என்று காட்டுவதுதான் தமிழ் வாழ்க்கை. அதுதான் அறம், பொருள் இன்பம் என்று சொல்லுகிறார்.
உலகமெல்லாம் பரவவேண்டும்!

இப்படி நான் பார்த்ததில், 85 இடங்களில் இதுவரை யில் திருக்குறள் விளக்கமாக உணர்ந்து கொள்ளாத மூடர் களாக தமிழர்கள் இருந்ததை சுட்டிக்காட்டி, ஒரு அறிவுத் தெளிவையும், அறிவுச் சுடரையும் ஏற்றிய தந்தை பெரி யாரை, அவருடைய பெரும் புகழ், அவருடைய கருத்துச் செறிவு, அவர் வளர்த்த பகுத்தறிவுச் சிந்தனை, அவர் ஊட்டிய தன்மான எண்ணம் உலகமெல்லாம் பரவ வேண்டும் என்று சொல்லி,

நான் ஒரு அய்ந்தாண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு நாள் செய்தித் தாளைப் பார்க்கும்பொழுது அதில், ரேசனலிஸ்ட் ஃபோரம் என்ற இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்கிற செய்தி வெளியிட்டிருந்தனர். அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, நான் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே சென்ற இடத்தில், ஒரு ஏழு, எட்டு பேர் தான் அமர்ந்திருந்தனர். ஒரு அம்மையார் என்னைப் பார்த்து நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்டபொழுது, நான் தமிழ் நாடு என்ற பகுதியிலிருந்து வருகிறேன். அது இந்திய நாட்டினுடைய தென்பகுதியில் இருக்கின்ற வளரும், தலைநகரம் என்று சொன்னேன்.

உலகத்திலேயே கடவுள் இல்லை என்ற கருத்தோடு ஒரு சிலை இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்

அதைக் கேட்ட அந்த அம்மையார், எனக்கு ஒரு புத்த கத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அப்பொழுது அவர் சொன்னார், நான் சென்னைக்கு வந்திருக்கிறேன்; சென்னை வந்தது மட்டுமல்ல; ஆசிரியர் அவர்களையும் பார்த்திருக் கிறேன். உலகத்திலேயே கடவுள் இல்லை என்ற கருத்தோடு ஒரு சிலை இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று சொன்னார்.

அந்தச் சிலையைக் கண்ணும் கருத்துமாக நீங்கள் காத்து வருவதோடு மட்டுமல்லாமல், அறிவினுடைய பிழம் பாக மக்கள் சிந்திக்கவேண்டும் என்று ஊட்டிய அந்தத் தணல் போன்ற சிந்தனைகள் நாடு முழுவதும் பரவவேண் டும் என்று சொல்லி, இந்த வாய்ப்பினைத் தந்த ஆசிரி யருக்கு நான் எப்பொழுதும் நன்றி கடப்பாடு உடையேன் என்று சொல்லி அமைகிறேன். நன்றி! வணக்கம்!

- இவ்வாறு முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


கோயில் கோபுரத்தின் ஆபாசம் (ஏ.மெத்துசாலா)



கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரஸ்வாமி கோயிலின் கோபுரமும், அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் கணக்கற்ற உருவங் களும், பொம்மைகளும் சமீப காலத்தில் பார்ப்போர் கண்களைக் கவரும் வண்ணம் பலவித அழகான வர்ணங்களால் தீட்டப்பெற்று வெகு ரம்மியமாய் விளங்குகின்றன. சென்ற 9.6.1929 அன்று மாலையில் யான் அதன் வழியாகப் போக நேர்ந்தது.

அப்படிப் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவ்விடத்தில் சில வாலிபர் கூட்டமாய்க் கூடிநின்று கோபுரத்தைப் பார்த்துச் சிரிப்பதையும், கைதட்டுவதையும், கேலி பண்ணுவதையும்.அவர்களில் இரண் டொருவர் தூ-தூ என்று துப்புவததையும் கவனித்த யான் இதற்குக் காரணம் யாதென அறிவான் வேண்டி கோபுரத்தைப் பார்த்தேன்.

உடனே என் மனதில் எழுந்த வெறுப்பும், வெட்கமும் இவ்வள வென்பதை எழுதவோ, சொல்லவோ முடியாது. சுருங்கக் கூறுமிடத்து அநேக பொம்மைகளை நிர்வாணமாகச் செய்து  வைத்திருப்பதோடு ஆண்களும், பெண்களும் கலவி செய்வது போலும், அதிலும் இயற்கைக்கு மாறாகவும், மிலேச்சத்தனமாகவும் பலவித ஆபாச முறையில் ஆங்காங்கு உருவங்கள் செய்யப்பட்டு பிரத்தியட்சமான வர்ணங்களும் தீட்டப் பெற்றிருக்கின்றன.

யான் அவ்வழியே சென்று கொண்டிருந்த சுமார் 55 வயதுடைய ஒர் பார்ப்பன கனவானைப் பார்த்து ஐயா! இது என்ன அநியாயம்? இப்படியும் உண்டா? கடவுள் பக்தியையும் சன்மார்க்கத்தையும் வாலிபருக்குள் விருத்தி செய்யும்படியான உருவங்கள் இவைதானா? ஆலயத்தின் பிரதான கோபுரத்தில் பலரும் கவனிக்கக் கூடிய இடத்தில் இவை இருக்கலாமா? எனக் கேட்க அப்பெரியார் ஏதோ எல்லாம் அந்தக் காலத்தில் பெரியவாள் ஒரு நல்ல காரியத்தை உத்தேசித்துத் தான் செய்து வைத்திருப்பார்கள்.

அதன் அந்தரங்கங்கள் தெரியாமல் இவர்கள் கேலி பண்ணுகிறார்கள். அப்படிச் செய்யப்படாது' என்று பதில் கூறிச் சென்றார், இதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வாலிபரிருவர் எமது சம்பாஷணையையும் அதற்குக் காரணமாயுள்ள உருவங்களையும் கவனித்து விட்டு இதனால்தான் மகம்மதியரும், கிறிஸ்தவர்களும் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள்.

முற்காலத்திலிருந்த பெரியவாள் என்ன உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு செய்திருந் தாலும், அது அவர்களுடைய மிலேச்சத்தனத்தையும், காட்டு மிராண்டித்தனத்தையும், இழிசெய்கைகளையும் காட்டுகிற தெனக்கூறி தூ-தூ-தூ என்று துப்பிக்கொண்டும் வெட்கம்! வெட்கம்! என்று கூறிக்கொண்டும் போய்விட்டனர்.

தமிழ் ஓவியா said...

இதிலிருந்து முற்காலத்திய மேதாவிகளின் செய்கைகள், ஆசார அனுஷ் டானங்கள் நடத்தைகள் இவற்றை வாலிபர் மிலேச்சத்தனமாகவும், காட்டுமிராண்டித் தனமாகவுமே கருதுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை நிற்க, மேற்படி சின்னங்கள் எந்த முறையில் தற்கால வாலிபரின் மனத்தை பக்தியிலீடு பெறச் செய்யுமென்பதைவிளக்குவார்களா? கள்ளுக்கடை,

தமிழ் ஓவியா said...

சாராயக்கடை இவற்றின் முகப்பில் சிலர் சேர்ந்து குடிப்பது போலவும், கூத்தாடுவது போலவும், போதை மிகுதியால் ஒருவரையொருவர் கட்டித் தழுவுவது போலவும் சித்திரம் எழுதி வைத்திருப்பதைக் காணலம்.

கோபுரத்தில் எழுதப்பட்டபடியே  தான் கோயிலுக்குள்ளும் நடக்கும் என்பதாக நினைப்பதா? அன்றி அக்கோயிலுக் குள்ளிருக்கும் கடவுளின் விருப்பமும் செய்கையும் அதுவென்று கொள்வதா? பழுத்த வேதாந்திகளே பதில் சொல்லுங்கள்.

மனிதராகச் செய்து வைக்கப்பட்டதென்றால் தன்னிருப்பிடத்தின் முகப்பில் இவ்வித அவலட்சணமான உருவங்களைச் செய்து வைக்கச் சம்மதித்திருந்த அக்கடவுளின் மிலேச்சத் தனத்தையும் குணாதிசயங்களையும் என்னென்று சொல்வது, மேலும் சாமியைக் கும்பிடப் போகும் பக்தகோடிகள் தங்களை தொடர்ந்து வரும் 10, 14 வயதுடைய விவரமறியாக சிறுவர் சிறுமியர் மேற்படி சின்னங்களைப் பார்த்து விவரம் கேட்பின்,

என்ன பதில் கூறி அவர்களைத் திருப்தி செய்விப்பர்? எதாவது சொல்லி மழுப்பிவிட்டாலும் விஷயத்தை அறிய இயற்கை ஆவல் கொண்டுள்ள அச்சிறுவர்கள் வேறு யாரிடமாவது கேட்டுக் தெரிந்துகொண்ட பின் அவர்களுடைய மனம் எப்படித் திரும்புமோ யாரறிவர்?

ஆனல் பக்தியிலீடுபடும் என்பது மட்டும் முக்காலும்,சந்தேகமே! முற்றிப்பழுத்த வேதாந்திகளே! கனிந்து வழிந்த வைதீகக் கோஷ்டிகளே! கடவுளைப் பிரத்தியட்சமாய் கண்டதுபோல் நடித்து ஆசார அநுட்டானங்கள் சிறிதும் மாறாது நடப்பது போல் வெளிக்குக் காட்டிக் கொள்ளும் பக்த கோடிகளே!

உங்கள் அபிப்பிராயம் யாது? இவ்வித ஆபாச நடத்தையோடு கூடிய சின்னங்கள் கோபுரத்தின் முகப்பில் இருக்கவேண்டியது அவசியந்தானா? அவற்றைச் செய்து வைக்காவிட்டால் உள்ளிருக்கும் கடவுள் கோபித்துக் கொள்ளுமா? அல்லது செத்துப் போய்விடுமா? தவறி உலகத்தில் சக்தியும் சன்மார்க்கமும் குறைந்துவிடுமா? என்பதற்கு ஆத்திகக் கூலிகள் பதிலிறுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

(குடிஅரசு 1929)

தமிழ் ஓவியா said...

சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமூகங்களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக்கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கியிருக்கிறது. - தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

அவாளின் ஆராய்ச்சி

வெள்ளி, 25 செப்டம்பர் 2015

ரிக்வேதம் முதல் நவீன யுகம் வரை என்ற கலாச்சாரக் கண்காட்சி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சிக்காக சமஸ்கிருத நூலாய்வுக் கழகமான லலித் கலா அகாடமி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
வாஸ்து, ஜோதிடம், ஆயுர் வேதம் மற்றும் அக்கால வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கள் குறித்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், கங்கையைப் பற்றியதுதான். வேத அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டி ருப்பதாவது:

ரிக்வேதத்தில் ஒன்பது கண்டங்கள் மற்றும் பல்வேறு வேத நூல் குறிப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்தோம்; எங்கள் ஆய்வில் சிறிய அளவில்கூடத் தவறு நேர்ந்திட வாய்ப்பில்லை. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் அமைப்பு களையும் ஆய்வு செய்தோம். ஆனால், எந்த இடத்திலும் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும், குறிப்பும்கூட இல்லை; இது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லலித் கலா அகாடமியின் ஆய்வுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலை நாடுகளில் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கட்டுரைகள் என்றும், எந்த ஒரு நிகழ்வையும் அறிவியல் தளத்தில் இருந்தும் இதை நாம் பார்க்க வேண்டும் என்றும் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வு இந்துத்துவாவாதிகளை ஒரு கலக்குக் கலக்கும் என்பதில் அய்யமில்லை. இதனை வேறு யாராவது கூறியிருந்தால், அதற்கு உள்நோக்கம் கற்பித்து விடுவார்கள். சொல்லுவதோ சமஸ்கிருத நூலாய்வுக் கழகமாகும்.

கங்கை என்றால் சாதாரணமா? சிவன் தலையில் (?) குடியிருக்கும் கங்காதேவியாயிற்றே - பாவங்களைப் போக்கும் தெய்வ சக்தி கொண்டது என்று நம்புபவர் களாயிற்றே! கங்கையைச் சுத்திகரிப்பதற்காக மத்திய பிஜேபி அரசு கொட்டியழப் போகும் தொகை ரூ.7000 கோடி.

புராணங்களை வரலாறாக மாற்ற நினைக்கும் புளுகுகளை பிஜேபி வட்டாரத்தையே சேர்ந்த ஆய்வுப் புலமே அம்பலப்படுத்தி விட்டது.

இரண்டாவதாக அதே சமஸ்கிருத நூலாய்வு கழகமான லலித் கலா அகாடமி சொல்லும் கருத்தும் கருத்தூன்றத் தக்கதாகும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் ஆரியர்கள், 3000 ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். சிறிது சிறிதாக இந்தியத் தீபகற்பத்துக்குள் நுழைந்தனர்.

அந்தக் கால கட்டத்தில் இந்தியத் தீபகற்கம் முழுவதும் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்கள்; ஆரி யர்களின் வருகையால் திராவிடர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டனர் என்றும் கூறப் பட்டுள்ளது.

ஆரியராவது, திராவிடராவது - இவை எல்லாம் வெள்ளைக்காரன் கட்டி விட்ட கதை, அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பிதற்றும் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகளுக்கு - அவர்கள் வட்டாரத்திலிருந்தே பதிலடி கிடைத்து விட்டதா இல்லையா?

ஆரியர்கள் இந்தியத் தீபகற்பத்தில் நுழைந்த காலந்தொட்டே ஆரியர் - திராவிடர் போராட்டம் சண்டை என்பது தொடங்கப்பட்டு விட்டது.

அந்தச் சண்டைகளைத் தான் வேதங்கள் வேறு வார்த்தைகளில் கூறுகின்றன.

திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன.

(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார் எழுதிய பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்) ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதி னார்கள்!

(சி.எஸ்.சினிவாசாச்சாரி எம்.எஸ். ராமசாமி அய் யங்கார் ஆகியோர் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம்)

இந்த ஆதாரங்களை நாம் எடுத்துச் சொன்னபோது ஆரியர் - திராவிடர் கட்டுக் கதை என்று கதைத்தவர்கள் - இப்பொழுது அவர்கள் வட்டாரத்து ஆய்வே ஆரியத் திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார்களே - முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்?

இன்றுகூட பார்ப்பனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் தங்களை வேறுபடுத்தித்தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அதனை ஒப்புக் கொண்டால், அவர்கள் வேறு இனத்தவர் என்ற உண்மை அம்பலப்பட்டு விடுமே - அது அவர்களுக்கு கேடாக முடியுமே- அந்தத் தந்திரத்தால்தான் இப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாக நடந்து கொண்டிருக் கிறார்கள் அல்லது நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உண்மையை எவ்வளவுக் காலம்தான் திரை போட்டு மறைக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

மெக்காவில் நிகழ்ந்த பரிதாபம்நமது இரங்கல் உரித்தாகுக!


ஹஜ் பயணம் சென்றபோது, மெக்கா அருகில் நேற்று (24.9.2015) ஏற்பட்ட நெரிசலில் சுமார் 700 பேர்களுக்கு மேல் இறந்து விட்டனர் என்பது மிகவும் மனம் உருக்கும் துயர நிகழ்வாகும்.

அது மதம் சம்பந்தமான விழா என்ற போதிலும், இறந்தவர்கள் எம்மதத்தவராயிலும் அவர்கள் மனிதர்கள். பலியானவை மனித உயிர்கள் என்பதால், முன்பு கும்பகோணம் மகாமகம், வடக்கே கும்பமேளா திருவிழாவில் பலியானோர் அனைவருக்குமே பகுத்தறிவாளர்களாகிய நாம் இரங்கல் தெரிவித்ததும் மனிதநேயத்தின் பாற்பட்டதேயாகும்.

மெக்காவில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்து வாடும் அவர்களது உறவினர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், இரங்கலும் உரித்தாகுக.

மீண்டும் இத்தகைய சோக நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அந்நாட்டு அரசின் கடமையாகும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

25-9-2015 சென்னை

தமிழ் ஓவியா said...

மதவாதம் பேசினால்....

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பல்வேறு தரப்பின ரும், பலவிதங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித் துள்ளனர். பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ஏ.ஜே.ஏ. என்னும் நீதி மற்றும் பொறுப்பு கூறலுக்கான கூட்டணியினர் மோடி தோல்வி என்ற இயக்கத்தை நடத்துகின்றனர். சிலிக்கான் வேலி சாலைகளில் இது தொடர்பாக அவர்கள் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர்.

சான்ஜோஸில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறபோது, அந்த அரங்கத்துக்கு வெளியே போராட்டம் நடத்தவும் ஏ.ஜே.ஏ. திட்ட மிட்டுள்ளது.

இதேபோன்று நீதிக்கான சீக்கிய அமைப்பினரும் போராட்டங்கள் நடத்த உத்தேசித்துள்ளனர். ஐ.நா. சபைக்கு வெளியேயும், சான்ஜோஸ் வரவேற்பு நிகழ்ச்சி அரங்குக்கு வெளியேயும் இவர்கள் போராட்டம் நடத்த எண்ணி உள்ளனர்.

கேள்வி - பதில் நிகழ்ச்சியின்போது மோடியிடம் கேள்வி எழுப்புகிறவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் எனவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

குஜராத்தில் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி வருகிற பட்டேல் இனத்தினரும், தங்கள் பங்குக்கு மோடி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

மதச்சார்பின்மையைத் தூக்கி எறிந்து மதவாதம் பேசினால் இந்தக் கெதிதான்.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்

கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜக் மோகன் டால்மியா மறைவைத் தொடர்ந்து அந்தப் பத விக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக என். சீனிவாசன் (சர்வதேசக் கிரிக் கெட் தலைவர்) - முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் திடீர் சந்திப்பு நடந்துள்ளது.

கிரிக்கெட் என்றால் சும்மாவா? பணம் காய்த்துத் தொங்கும் தோப்பு ஆயிற்றே!

தமிழ் ஓவியா said...

ஏட்டுச் சுரைக்காய்

எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்கக் கூடாது - இந்திய இலங்கை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு என்ற செய்தியின் ஈரம் காய்வதற்கு முன்பே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளனவே - எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தானோ!

தமிழ் ஓவியா said...

வினை தீர்த்த (?) விநாயகன்

விநாயகர் சிலையை குட்டையில் கரைக்க முயன்ற 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.குஜராத் மாநிலம் ஜூனாத் மாவட்டத்தில் உள்ள உமத்வாடா கிராமத்தில் விநாயகர் தின விழா கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலையை நீரில் கரைக்க, அங்குள்ள பள்ளி மாணவிகள் 300 பேர் சிலையை குட்டைக்கு புதன்கிழமை மாலை எடுத்து சென்றனர்.

விநாயகர் சிலையை குட்டையில் கரைக்க முயன்றபோது 5 மாணவிகள் நீரில் தவறி விழுந்து மூழ்கினார்கள். அதைப் பார்த்த மற்றவர்கள் மாணவிகளை காப்பாற்ற முயன்றனர்.

ஊர்வா என்ற மாணவி மட்டும் காப்பாற்றப்பட்டார். நிகிதா பராடு(16), ருது ஜாவ்தா(11), நயின் சிந்து(15), பாயல் சுதஸ்மா(16) ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.இது பற்றி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கு யார் மீது? விநாயகர் மீதா?

தமிழ் ஓவியா said...

தமிழிசைக்கு....

வெள்ளி, 25 செப்டம்பர் 2015


தமிழகத்தில் இருந்து தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிலர் டில்லி சென்று மோடியைச் சந்தித்து வர்ணாசிரம முறைப்படி தங்களுக்கு வைக்கப்பட்ட பெயரான தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரைக் கெசட்டில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

முதலில் இந்தக் குழு வினர் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரத மரைச் சந்திப்பது குறித்து தமிழக பாஜக தலைவரான திருமதி தமிழிசைக்கு மரியாதை அளவிற்குக் கூட தெரிவிக்கவில்லை, இந்த நிலையில் அவர்களிடம் பேசிய மோடி உங்களில் பெண் தலைவர் வராதது குறித்து நான் வருத்தமடைகிறேன், விரைவில் தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதியாக ஒரு பெண் ஒருவரை தலைவராக நீங்கள் தேர்ந் தெடுக்கவேண்டும் என்று கூறினாராம். (தமிழ்நாட்டில் பிஜேபி தலைவராக ஒரு பெண்ணிருப்பது தெரியாதோ!)

2014- தேர்தலுக்கு முன்பு பாஜக தேசியச் செயலாளர் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசும் போது தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் தலித் பெண் ணான தமிழிசையை தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ளோம் என்று கூறினார்.

பிஜேபி தலை வர்கள் எந்த அளவுக்கு விவரம் தெரிந்த பு(ளி)லிகள் என்பதற்கு இது ஒன்றே போதுமானது. மதுரையில் பிஜேபி தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் கூட்டிய நிகழ்ச்சியின் போது, அந்த மேடையில் தமிழக பிஜேபி தலைவரான தமிழிசை அவர்களுக்கு இடமில்லை; மாறாக இரு பார்ப்பனர் களுக்குச் சிம்மாசனம் அளிக்கப்பட்டு இருந்தது. வருண தருமத்தில் நான்காவது நிலைக்கு கீழாகப் பெண்கள் வைக் கப்பட்டுள்ளனர்.

பார்ப் பனப் பெண்களாக இருந் தாலும் கூட! பாவயோனியில் பிறந்த வர்கள் பெண்கள் என்று கீதையிலே (அத்தியாயம் 18 சுலோகம் 44) கிருஷ்ணன் சொல்லுவதோடு அது நின்றுவிடவில்லை. நம் நிகழ் காலத்தில் பெண்கள் வேதம் ஓதக் கூடாது என்று கல்கத்தாவில் பூரி சங்கராச் சாரியார் கூறவில்லையா? அதனைக் கண்டித்து திரா விடர் கழகம் பூரியாரின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தை நடத்தி யதே (7.2.1991)

விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுச் சொன்னவர் காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அதனைக் கண் டித்து காஞ்சிபுரத்தில் திரா விடர் கழக மகளிரணியி னர் ஆர்ப்பாட்டம் நடத் தினரே (8.3.1998)

இந்துத்துவாவை இந்தியாவில் நிலை நிறுத்தத் துடிக்கும் ஒரு கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய ஒரு பெண் மணி என்கிற முறையில் சகோதரி தமிழிசை சவுந்தரராசன் இவற்றைப்பற்றி சிந்திப்பாராக!

- மயிலாடன்