Search This Blog

3.10.14

முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது-ஏன்?-பெரியார் விளக்கம்

கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்


சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது. பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன். பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆன தில்லை போல் காணப்படுகின்றது. சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும். கல்யாணம் என்பதே வேண்டிய தில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கை யில் ஒரு காலத்தில் வரக்கூடும். எந்தப்பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும். இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு இதற்குமுன் எத்தனை புருஷன் கல்யாணம் ஆயிற்று? என்கின்ற கணக்குப் போடக்கூடிய காலம் வரும். மற்றும் அதைப்பற்றியே மக்கள் விசாரிக்க - யோசனை செய்யக்கூடிய அவசியமே இல்லாமலும் போகக்கூடும். அந்த மாதிரி கல்யாண முறையும் இன்றைய குடும்ப வாழ்க்கை முறைகள் ஒழிந்து ஆணும் ஆணும் சிநேகமாய், அன்பாயிருப்பது போலவே ஏதோ ஒரு பெண்ணும் ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் சிநேகமாயிருக்கின்றார்கள் என்கின்ற அளவில் மாத்திரமே சம்பந்தமிருக்கும்படியான காலமும் வரும். இதெல்லாம் அநேகமாய் பெண் மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், உண்மைச் சுதந்திரம் என்பது என்ன என்கின்ற உணர்ச்சியும் வந்தவுடனே ஏற்பட்டுவிடும். 


இப்போது பெண்கள் அடிமைப் பொருள்கள் என்றும் தாங்கள் மற்றவன் அனுபவிக்கும் பொருள் என்றும்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள நினைப்பதே அவர்களின் அடிமை உணர்ச்சியின் அறிகுறியாகும். அந்தக் கருத்துக் கொண்டுதான் அவர்களுக்கு நடை, உடை அணி முதலியவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு தாசி என்பவள் அதாவது தான் பிறர் அனுபவிப்பதற்காக இருக்கின்றவள், அதன் பயனாய் ஜீவிக்கின்றவள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் மற்றப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளு வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் அதிக வித்தியாசமிருப்பதாக நான் கருதுவதில்லை. மிருகம், பட்சி ஆகியவைகள் ஆணைவிட பெண் தாழ்ந்த தென்று கருதுவதில்லை. “ஆணுக்காகத்தான் பெண் இருக்கிறோம்”என்று கருதி, தங்கள் மீது ஆண்கள் ஆசைப்பட வேண்டும் என்று சிறிதும் முயற்சிப் பதில்லை. ஆண்கள் ஆசைப்படும்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கருதுவதுமில்லை. ஆனால் பெண் ஜன்மம் எடுத்து தாங்கள் அலங்கரித்துக் கொண்டு ஆண்கள் ஆசையை எதிர்பார்ப்பதற்கே ஏற்பட்டதென்பதாய் கருதுகிறார்கள். தன் சொந்தப் புருஷனை சந்தோஷிக்கச் செய்யவோ திருப்தி அடையச் செய்யவோ என்று செய்யுங் காரியங்களும் கூட ஒரு வித அடிமை எண்ணத்தில் பட்டதே ஆகும். நடைஉடை பாவனைகளில் புருஷனை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையும் அடிமை மோகமே யாகும். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறுபட்டவையே யாகும். எப்படியோ ஆதியில் இம்மாதிரி ஏற்பாடு செய்து விட்டதால் அந்த பத்ததிகள் இனியும் நடந்து வருகின்றன. ஆண்களும் அனேகமாய் தனது வீட்டை, வண்டியை, மாட்டை அலங்கரிப்பதில் என்ன மனோபாவம் கொள்ளுகின் றார்களோ அதே மனோபாவம்தான் தன் பெண் ஜாதியை சிங்காரிப்பதிலும் கொள்ளுகிறான். ஆகையால் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது என்கின்ற மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது பெண்கள் விடுதலையில் - சுதந்திரத்தில் ஒரு திட்டமாகும்.


தவிர திருமணம், கல்யாணம் என்பவைகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தவிர மற்றபடி இதில் வேறு ஒன்றுமே இல்லை. இந்த ஒப்பந்தமும் இருவர் சௌகரியத்தை பொருத்த காரியங்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றொன்றுக்கும் இல்லை. அதுவும் இருவருடைய சமமான சௌகரியத்திற்குத் தானேயொழிய ஒருவருக்கு அதிக சௌகரியம் ஒருவருக்கு குறைந்த சௌகரியம் என்பதாக சிறிது வித்தியாசங்கூட கொண்ட தாயிருப்பதல்ல. அதிலும் இருவரது சுதந்திரங்களும் சமமாய்க் கருதப்பட்ட தாகவும் அதற்கு எவ்விதத்தடையும் இருப்பதாகவும் இருக்கக் கூடாததாகும். அனேகமாய் இந்த ஒப்பந்தங்கள் எழுதி ரிஜிஸ்டர் செய்வதுதான் இனிப் பொறுத்தமானதாக இருக்கும். வேண்டுமானால் புதுவீடு குடிபோதல், புதிய தொழில் வியாபாரம் முதலிய காரியங்கள் துவக்கப்படுபவை ஆகியவை களுக்காக எப்படி முதலிலேயே சற்று விளம்பரம் இருந்தால் அனுகூலம் என்று கருதுகின்றோமோ அதுபோல் நண்பர்கள், நான்கு பந்துக்கள், அக்கம் பக்கத்தார்கள் ஆகியவர்களுக்கு தெரியக்கூடியதாய் இருப்பதும் நன்மை யானதுதான். அதிலும் ரிஜிஸ்டர் இல்லாத திருமணங்களுக்கு சாக்ஷிகள் இருக்க வேண்டியது அவசியம் என்கின்ற முறையில் பலர் அழைக்கப்படு வதும் சரிதான். ஆனால் இதற்காகவே அதிகச்செலவும் மெனக்கேடும் கூடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திருமணச் சடங்கு என்று ஒன்றை தனிப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.


மணமக்கள் சபைக்கு வந்து தங்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாய் தங்கள் தங்கள் சுருக்கெழுத்துள்ள மோதிரம் மாற்றிக் கொள்வதோ மாலை மாற்றிக் கொள்வதோ போதுமானதே யாகும். இதற்காகவென்று ஏன் அதிகப் பணச்செலவு செய்ய வேண்டும்? என்பதுதான் எனக்கும் புரியவில்லை. புதுச்சேலை, புதுநகை தாம்பூலம் இவைகளெல்லாம் பயனற்ற செலவாகவே ஆகின்றன. அனேக சுயமரியாதை கல்யாணங்களில் மாப்பிள்ளை சாதாரண உடுப்புடன் இருந் திருக்கிறார்கள். பெண்கள்தான் உயர்ந்த சேலையும், விலையுயர்ந்த நகை களும் அணிந்து ஒரு ஆணானவன் பெண் வேஷம் போட்டிருப்பது போல் விளங்குகின்றார் கள். இவையெல்லாம் நாகரீகம் என்பதோடு பெண் மக்களின் தன்மையையே குறைத்து விடுகின்றது. பெண்கள் சுதந்திரத் துக்கும், பெண்கள் விடுதலைக் கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். “நான் அடிமையாய்த்தான் இருப்பேன் நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக் கூடாது” என்பதில் அர்த்தமேயில்லை.


தவிர பெண்களுக்கு பிள்ளைப்பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும். பிள்ளைகள் பெறாமல் இருப்பதற்கு எவ்வளவு சௌக ரியம் செய்து கொள்ளக்கூடுமோ அவைகளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கென்று பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்று அதற்கு நேர் விரோதமாய் என்னென்னமோ செய்து அஞ்ச வேண்டி யதாகி விடுகிறது. எவ்விதத்திலும் பொறுப்பில்லாதவர்கள் வெகுதாராளமாய் “16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்துவிடுகிறார்கள். பிள்ளை பெற்று வளர்க்கக் கஷ்டப் படுகின்றவர்கள் யார் என்பதை யோசித்துப்பாருங்கள். நமது அறிவீன மானது இக் கஷ்டங்களை உணரச்செய்யாமல் செய்து விடுகிறது. உணர்ந் தாலும் அதற்கு நாம் ஜவாப்தாரியல்ல என்று நினைத்துக் கொள்வதால் அக்கஷ்டத்திலிருந்து விலக முடிவதில்லை.


--------------------- கும்பகோணம் சாக்கோட்டையில் 12-06-1931 அன்று நடந்த ‘ராகு காலத்’ திருமணத்தில்  தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை."குடி அரசு" - சொற்பொழிவு - 21.06.1931

35 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

செவ்வாய்க் கிழமைக் குத் தனிச் சிறப்பு உண்டு. செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தி திதியும் சேர்ந்தால் அது சாபங் களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும் என்கிறது ஓர் இதழ்.

இது உண்மையானால் செவ்வாயில் கல்யாணம் முதலிய நல்ல காரியங் களைச் செய்யத் தயங்கு வது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/88627.html#ixzz3F8MpBPwO

தமிழ் ஓவியா said...

எதிர்க்காமல்...

மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது. - (விடுதலை, 5.11.1967)

Read more: http://viduthalai.in/page-2/88653.html#ixzz3F8Nbhksx

தமிழ் ஓவியா said...

ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108 யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8OwmSlJ

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8P5lml1

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!

எழுத்துரு அளவு தீண்டாமை என்பது சமயம் சம்பந் தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத் தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்.

- டாக்டர் கலேல்கர், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன் பக்கம் 123

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8PCY7BM

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

************

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PLvmz9

தமிழ் ஓவியா said...

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!

பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய

தாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PUJ6dO

தமிழ் ஓவியா said...

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88644.html#ixzz3F8PcNbv1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி பெரியார்! உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்புரை



சென்னை, செப்.17- பெரியார் சிலை அமைப் பதற்கு இடம் ஒதுக்கித்தர மறுக்கும் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மகாத்மா காந்தி போல் பெரியார் போற்றப் பட வேண்டியவர் என்று கூறியுள்ளது.

சுயமரியாதை இயக்கத் தின் தலைவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ.இராமசாமி மகாத்மா காந்தியைப் போன்று போற் றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தின் அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.

தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தக்கருத்து வெளி யாகி உள்ளது பொருத்த மானதாக உள்ளது.

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகில் கூத் தப்பார் என்கிற இடத்தில் தந்தை பெரியார் சிலை அமைப்பது குறித்த வழக் கில் நீதிபதி எஸ்.நாகமுத்து கூறும்போது பெரியார் தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி என்று அழைக்கப்பட வேண்டிய உயர்ந்த தலை வராவார்.

ஈ.வெ.இராமசாமி அன்போடு பெரியார் என்று அழைக்கப்படுபவர். சமூக நீதிக்காக தம் வாழ் நாளில் புரட்சிகரமாகப் போராடி வந்தவர்.

ஜாதி யற்ற சமுதாயத்தை அமைப்பது, பெண்கள் அதிகாரம் பெறுவது ஆகிய அவரது கொள்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87882.html#ixzz3F8QcG5tw

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்

அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்

தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்

சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

Read more: http://viduthalai.in/page1/87892.html#ixzz3F8RxMiuq

தமிழ் ஓவியா said...

நாம் யார்?


சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பித்து என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத் திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கை யையும் உடையவராய் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

- தந்தை பெரியார், குடிஅரசு: 3.5.1931

Read more: http://viduthalai.in/page1/87897.html#ixzz3F8S6F6QC

தமிழ் ஓவியா said...

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!


குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

Read more: http://viduthalai.in/page1/87913.html#ixzz3F8SJVTQA

தமிழ் ஓவியா said...

ஜாதீய மதவாத சக்திகளைத் தகர்க்கும் ஒரே சக்தி பெரியார்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி


சென்னை,செப்.17- தந்தைபெரியார் 136ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தமிழர் தலைவர். திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 136ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா இன்று. உலகம் முழுவதும் கொண்டாடப் படுகின்றன. ஏற்கெனவே சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நடத்தி இருக்கக்கூடிய இந்த விழா இன்றைக்கு அவர்களுடைய பிறந்த நாள் விழா முதற்கொண்டு தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. தந்தைபெரியார் அவர்களுடைய அரிய தொண்டு என்பது மனித குலம் அத்தனைக்குமே பயன்படக்கூடிய ஒன்று.

தந்தை பெரியார் அனைவருக்கும் உரியார். தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு மாத்திரம் அல்ல, இந்தியத் துணைக்கண்டத்துக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தந்தை பெரியார் என்பதற்கு அடையாளம்தான் தமிழர்கள் அல்லது மனித உரிமைகள் பறிக்கப்பட்டோர் எங்கிருந்தாலும், அதற்கு குரல் கொடுத்து, அவர்கள் எழுச்சி பெறவேண்டுமானால், அங்கே பெரியார் தேவைப்படுகிறார் என்பதுதான் நிதர்சனமான, யதார்த்தமான உண்மையாகும். அந்த வகையிலே எவ்வப்போதெல்லாம் ஆதிக்க சக்திகள், ஜாதிய சக்திகள், மதவாத சக்திகள் இன்னும் சுரண்டல் ஆதிக்கத்தைத் தாங்கள் நிலைநாட்டிக் கொண்டு வாழக்கூடிய மதவெறிச்சின்னங்கள் இவைகளெல்லாம் தலைதூக்கும் போது, அதற்கு ஒரே சரியான விடை பெரியார்! பெரி யார்!! பெரியார்!!! என்பதுதான். அந்த நிலையிலேதான் பெரியாருடைய 136ஆவது ஆண்டிலேகூட, அவருடைய ஆண்டு தொடங்குகின்ற நேரத்திலேயே ஈழத்தமிழர் களுடைய வாழ்வுரிமைக்காக மிகப்பெரிய ஒரு போராட்டக்களம் உருவாகி இருக்கிறது. ஏற்கெனவே ஈழத்தமிழர்களை மிகப்பெரிய அளவிற்கு இன்னலுக்கு ஆளாகி இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அய்க்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை ஆணையத்தைக்கூட, தன்னுடைய நாட்டுக்குள்ளே விட மறுக்கக்கூடிய, ஒரு மனித நேயமற்ற, நீதி நேர்மையிலே, நம்பிக்கையற்ற, ஜனநாயகத்திலே மிகப்பெரிய அளவிற்கு முரண்பாடு கொண்ட ஒரு ராஜபக்சேவை அய்.நா. உதைத்த காலுக்கு முத்தமிடுவதைப்போல அழைத்துப் பேச வைக்கிறது என்றால், அது தவறு என்பதை பல்லாயிரக்கணக்கான பெருந்திரள் கூட்டத்திலே டெசோ ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தலைவர் கலைஞர் அவர்களுடைய தலைமைலே தெளிவாகச் சொன்னோம். ஆனால், மத்திய அரசு அதை அலட்சியப்படுத்தி இருக்கிறது. அய்.நா.சபை அதை இன்னும் சரியாகக் கேளாக்காதுடன்தான் நடந்துகொள்கிறது என்று பார்க்கும்போது, அந்த 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழர்களுடைய இல்லங்களிலே உணர்ச்சி பெற்றோர் நியாயம் கேட்போர் அனைவருடைய உரிமைக்குரலாகக் கருப்புக்கொடிகளை ஆங்காங்கு இல்லங்களிலே ஏற்றுவதோடு கருப்பு உடை அணிந்தோர் தம்மை மிகத் தெளிவாகக் காட்டி நியாயம் கேட்போம் என்ற உரிமையை இந்தப் பெரியார் பிறந்த நாளில் மனித உரிமை நாளாகவும் மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. பெரியார் எப்போதும் தேவைப் படுகிறார்.

செய்தியாளர் கேள்வி: மாபெரும் தலைவரான தந்தை பெரியார் பிறந்த நாள்விழாவை தமிழக அரசு பெரியார் பிறந்த நாள்விழாவை அரசு விழாவாக எடுக்கப்படவில்லை என்றே செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழக அரசிடமிருந்து பெரியாரைப் பாதுகாக்க வேண்டும். பெரியாரைப் பரப்புகின்ற பணிக்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லை. அவர்கள் அரசு விழாவாக கொண்டாட மாட்டார்கள். அதற்குப்பதிலாக கிருஷ்ண ஜெயந்தியும், வினாயகர் சதுர்த்தியும் கொண்டாடுபவர்கள் பெரியார் விழாவும் கொண்டாடாமல் இருப்பதுதான் பெரியாருக்கும் மரியாதை.

தந்தை பெரியார் அவர்களுடைய 136ஆவது ஆண்டுபிறந்த நாள்விழா ஆகிய இன்று ஒரு சமுதாய மறுமலர்ச்சி, எழுச்சி மிகுந்த வரலாறு மீண்டும் தொட ருகிற ஒரு வரலாற்று நிகழ்வாகும். தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம் என்று சொன்னார்கள். இன்றைக்கும் ஜாதிவெறி படமெடுத்து ஆடக்கூடிய சூழல், மத வாதம் மிகத் தீவிரமாக ஆடிக்கொண் டிருக்கிற இந்த நேரத்தில் பெரியாருடைய சிந்தனைகளும், பெரியாருடைய போராட்ட வழிமுறைகளும் நமக்கெல்லாம் பாடங்களாக, படிப்பினையாக, வழிகாட்டுவைகளாக அமைந்திருக்கின்றன. எனவே, பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்பும், தீண்டாமை ஒழிப்பும், சமூகநீதிக்கொடி தலை தாழாது பறக்கின்ற நிலையையும் உருவாக்கி, மனிதநேயம் மலர்ந்து மத வெறிகள் மாய்ந்து, ஜாதி வெறி சரிந்து சமத்துவம் பெருகக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே பெரியார் பிறந்த நாளில் நாங்கள் எடுத்துக்கொள்ளுகிற சூளுரையாகும்.

Read more: http://viduthalai.in/page1/87914.html#ixzz3F8UfO7Nn

தமிழ் ஓவியா said...

எதிர்வினை புரிந்த குரல் கவிஞர் கண்ணிமை


வினையாற்றிய வல்லாளர்களால்
ஊர்ப்பெயர் வரைபடத்தில் பதிந்ததுண்டு
பெரியாரால் இசை குவித்தது
நீரோடை என்னும் ஈரோடு
இவரை நெருப்பாக்கியது
இக்கந்தக நிலம்
கல்வி கேள்விகளாலும் கண்களாலும்
அச்சம் கண்டறியாத
எஃகின் வார்ப்படம்
இவரது கூர் நகங்கள்
கீறிக் கிழித்தது பழம்பஞ்சாங்கம்
பூவாங்கிக் கொடாதே
ஓர்... புத்தகம் வாங்கிக் கொடு
என்ற புதிய பொருள் மொழி
நால்வருணம் என்ற சொல்
மீளவும் முளைவிடாதவாறு
அடக்கம் செய்தவர்
கேள்விகளால் புலர்ந்த கிழக்கு
தனித்துச் சுட்டப்படும் தடம்
பகுத்தறிவுப் பாசறை
சுற்றிச் சுழன்ற கடற்சூறை
திருவிடத்தின் அகண்ட திரை
பகுத்தறிவுப் படைவீடு
அறிவு முகந்து புகட்டிய
காலக் கணியன்
மடமை இருள் அப்பிக் கிடந்த
உச்சிப் பகல்
கூனிக் குறுகிய மனிதன்
விடுதலை அறியாப் பாமரன்
கற்றலின் சீர் மறந்து
அடிமை வயப்பட்ட ஏழ்மை
படைத்தவன் எழுதிய விதி பசி
என வாழ்ந்த ஊமை
இன்னவாறான இருப்பின் பொதிகளை
அறுத்துக் கூறிட்ட அறக் கூற்றுவன்
வான்வெளியில் உயர நிற்கும்
ஒற்றைக் கோள்
உயர்வு நவிற்சி இல்லாத எளிய உரு.
இறைவீடு எல்லோர்க்கும் பொது என்று
வைக்கம் நுழைந்த
வரலாற்றுத் தோற்றுவாய்
திரியும் தீக்குச்சியும் வைத்து
வல்லினங்களை உரசி எறிந்தவர்
எரிபொருள் வெடிபொருள் நிரப்பும்
ஆரியப் படை கடந்த
கொங்குச் சோழன்
கருஞ்சட்டை அணி வரிசைகளால்
இருளின் அடர்த்தி அமிழ்த்துச்
சுவடின்றிச் செய்த சூரிய விளக்கு
தந்தை பெரியார் கடந்து ஒலிக்கும் என்றும்
எதிர்வினை புரிந்த குரல்!

Read more: http://viduthalai.in/page1/87880.html#ixzz3F8V1QN8z

தமிழ் ஓவியா said...

வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page1/87831.html#ixzz3F8ZNEGbk

தமிழ் ஓவியா said...

வேட்பாளரை கடவுள் கைவிட்டதால், சென்னை உயர்நீதி மன்றத்தில் சரண்!


"ஜனநாயகம் என்பது காலிகள் நாயகம்" என்ற தந்தை பெரியாரின் பொன் மொழியை மெய்ப்பிக்கும் வகையிலும், 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற கதைப்பை பொய்ப்பிக்கும் வகையிலும் ஒரு நிகழ்வு மதுரையில் நடைபெற்றுள்ளதை நமது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான்.

விவரம் வருமாறு:- மதுரை மாநகராட்சி தேர்தலில் 85-ஆவது வட்டத்திற்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வைச் சேர்ந்த அரிகரசுதன் விண்ணப்பித் திருந்தார். விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மதுரையில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோவி லில் பயபக்தியுடன் "சாமி" கும்பிட்டு விட்டு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பித்தார். ஆனால் நடந்ததோ பயங்கரமான

அதிர்ச்சி! அவர் வேட்பாளர் மனு வைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் அ.தி.மு.க. வேட்பாளர் லதா போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் உதவி தேர்தல் அதிகாரி அறிவித்து அதற்கான சான்றிதழையும் அளித்து விட்டார்.. "தான், மனுவைத் திரும்பப் பெற்றதைப்போல, போலி மனுவைத் தயாரித்து, அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாகவும் . எனவே தனக்கு நீதி வழங்க வேண்டு மெனக் கேட்டும் "சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உதவித் தேர்தல் அதிகாரி கதவைப் பூட்டி விட்டு ஆணையாளர் அறையில் ஒளிந்து கொண்டதாகவும் தனது மனுவில் குறிப் பிட்டுள்ளார். நீதியரசர் திரு டி.எஸ். சிவஞானம் வழக்கை விசாரித்து வருகிறார்.

ஜனநாயகம் எப்படிக் கேலிக் கூத்தாகிறது என்பதை, தந்தை பெரியார் அவர்கள் காலிகள் நாயகம் என்று உரைத்தது, இப்பொது மக்களுக்கு உறைக்கும்!

அது சரி! வழக்குத் தொடர்ந்தவர், "இம்மையில் நன்மை தருவார்" கடவுள் தன்னை ஏமாற்றியதையும் மனுவில் குறிப்பிட்டு அவர் மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தால் வரவேற்கலாம்! . கட வுளையும், நம்பிக்கையையும் மட்டுமே பேசும் பா.ஜ.க.வும் கடவுளைக் கைகழுவி, விட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டது நல்லதொரு திருப்பமே!

- தி.ப.பெரியாரடியான்,
தூத்துக்குடி

Read more: http://viduthalai.in/page1/87829.html#ixzz3F8ZVYAYu

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87803.html#ixzz3F8Zx7LBT

தமிழ் ஓவியா said...

அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87808.html#ixzz3F8a90RvX

தமிழ் ஓவியா said...

பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/87810.html#ixzz3F8aXpbjg

தமிழ் ஓவியா said...

திருவையாறு கல்லூரி


சமஸ்கிருதம்பற்றிய சர்ச்சை ஆங்காங்கே நடத்து கொண்டு தானிருக் கிறது. இவ்வளவுக்கும் சமஸ்கிருதம் செத்த மொழி யாகவே ஆகி விட்டது; இந்தியாவில் 0.01 சதவீதம் மட்டுமே பேசுவதாகப் புள்ளி விவரம் பேசுகிறது.

கல்யாணம், கருமாதி, அர்ச்சனை என்கிற சடங் குகளில் நெட்டுருப் போட்டு ஒப்புவிப்பவர்களும் இதில் அடங்குவர்.

இது செத்த மொழியாக ஆனதற்கே காரணம் - அது தேவப் பாஷை என் றும் பெரும்பான்மையான மக்களான சூத்திரர்கள் அதனைப் படிக்கக் கூடாது என்றும், சாஸ்திர ரீதியா கவே தடை செய்ததாலுமே அம்மொழி சவக் குழிக்குத் தள்ளப்பட்டது. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய வர்கள் பார்ப்பனர்களே!

ஆனாலும் சமஸ்கிரு தத்தை இன்னும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தான் செய்கிறார்கள்; கோவில் குட முழுக்கை தமிழில் நடத்தினால், தோஷம் வந்து விட்ட தாகக் கதறுகிறார்கள்.

கரூர் அருகில் திருமுத் தீசுவரர் கோவிலில் தமி ழில் குடமுழுக்கு செய்யப் பட்டது என்பதற்காக, பார்ப்பன அர்ச்சகர்கள் கோவிலை பல நாட்கள் இழுத்து மூடி தீட்டுக் கழிப் புச் சடங்குகளைச் செய் தனர். காஞ்சி ஜெயேந்தி ரரும் அதற்குத் தூபம் போட்டார்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சி எத்தகையது என் பதற்கு இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போது மானது.

திருவையாறில் அரசர் கல்லூரி ஒன்று உள்ளது. அக்கல்லூரி 1937ஆம் ஆண்டு வரை சமஸ் கிருதக் கல்லூரியாகவே நடந்து வந்தது; அதற்குச் சொல்லப்பட்ட காரணம் விசித்திரமானது; அந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று நிலமும், பணமும் கொடுத்து அரசர் உயில் எழுதியுள்ளார் என்று கூறப் பட்டது.

தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலி யாரும் இதன்மீது சில முயற்சிகளை மேற்கொண் டனர். அரசன் எழுதி வைத் ததாகக் கூறப்பட்ட உயிலை எடுத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளிடம் சென்றனர். (இவர் தான் தந்தை பெரியார் தொடங் கிய குடிஅரசு இதழையும் தொடங்கி வைத்தவர்).

உயிலைத் துருவித் துருவி படித்த ஞானியார் அடிகள், சமஸ்கிருதம் மட் டும்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் உயிலில் எழுதப்படவில்லை என் பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்களே. அதற் குப் பிறகுதான் ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அம்பலப்பட்டது.

அந்தக் கால கட்டத்தில் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர். அவர் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, அவர் தலையிட்டு, அரசு வரை கொண்டு சென்று, அதன்பின் தமிழும் சொல்லிக் கொடுக்க வழி செய்யப்பட்டது.

இந்த வரலாறு எத் தனைப் பேருக்குத் தெரி யும்? வஞ்சகமும், சூழ்ச்சி யும், புரட்டும் பார்ப்பனர் களுக்கு மட்டுமே வாய்த்த அரும் பெரும் அவலக் குணங்கள் என்பது புரிகிறதா?

- மயிலாடன்


Read more: http://viduthalai.in/page1/87743.html#ixzz3F8bEybBS

தமிழ் ஓவியா said...

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?


இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது. இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் உள்ள உயிர்வளி, உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses)
விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

Read more: http://viduthalai.in/page2/88668.html#ixzz3FAkBwe7O

தமிழ் ஓவியா said...

அறிவியல் பார்வை இல்லாவிட்டால் குத்துக்கல்லும் குழந்தை பெறும்


சில நாட்களுக்குமுன் நாசா அனுப்பிய விடியோ என்ற பெயரில் போலியான வீடியோ ஒன்று யூ டியூப் மூலம் சில விசமிகளால் பரப்பபட்டது அதில் நிலவில் மனிதர் ஒருவர் நடக்கிறார் அவரது நிழல் படிந்துள்ளது, இதுவேற்று கிரகமனிதராக இருக்கலாமா? நாசா ஏன இதை மறுக்கிறது என்றெல்லாம் பல்வேறு கேள்விகளோடு சுமார் 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த விடியோ படமும் ஏதோ ஒரு உருவமும் காட்டப்படுகிறது. இந்த வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது உண்மையா பொய்யா என்ற ஆய்வு இருக்கட்டும்; முதலில் நிலவின் மீது எப்படி நிழல் விழும் என்ற கேள்வி யாருக்காவது எழுந்ததுண்டா. நமது பூமி போல் நிலவில் சூரிய ஒளிவிழுவதில்லை. அதே போல் நமது பூமியும் சூரியனின் ஒளியை நிலவில் பிரதிபலிப்பதில்லை. எப்போதும் இருட்டான ஒரு பகுதியில் அப்படியே ஒருவர் நடந்தாலும் நிழல் எப்படி விழும் என்பது இந்த விடியோவை ஒளிபரப்பிய விசமிகளும் இதனை உண்மை என்று நம்பி உலகம் முழுவதும் பரப்பிவரும் அறிவிலிகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/page4/88671.html#ixzz3FAkhmckg

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்க!


கழிவறைக்குச் சென்று திரும்புகிறோம். கைப்பிடியைப் பிடித்து இழுத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ செல்கிறோம். கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைப்பிடியில் ஒட்டிக் கொள்ளும். கதவைத் திறக்கும் இன்னொருவர் கைகளில் கிருமிகள் பயணத்தைத் தொடரும். அதிகம் பேர் வேலை செய்யும் அலுவலகங்களில், யார், எந்த அளவுக்குக் கையைச் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கழிவறை என்றில்லை. பேருந்தின் நாம் இறுகப் பற்றும் இடங்களில் உள்ள கிருமிகள் வீடு வரை, அலுவலகம் வரை வந்து விடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க இப்போது கதவுகளில் பொருத்த ஒரு புதுவிதமான கைப்பிடி Pull Clean என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கைப்பிடியின் உள் பகுதியில் கிருமியை அழிக்கும் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும்போது கைப்பிடியின் கீழ்ப்பகுதியை அழுத்தினால் கைப்பிடியின் உள்ளிருந்து அந்த கிருமியை அழிக்கும் பொருள் கைகளுக்கு வரும். அதை இரு உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் போதுமானது. கிருமிகள் அழிந்துவிடும்.
(தினமணி கதிர் 28.9.2014)

Read more: http://viduthalai.in/page5/88674.html#ixzz3FAl5ZfbG

தமிழ் ஓவியா said...

கேட்பவன் கேணையன் என்றால்...

அபிராமி பட்டர் என்பவருடைய ஊர் திருக்கடவூர். இவர் தேவி வழி பாட்டில் சிறந்தவர்.

ஒரு முறை தஞ்சை சரபோஜி மன்னனர் ஆலயம் வந்தபோது, அதைக் கவனிக்காமல் அபிராமி பட்டர் மட்டும் தேவியை மனதில் இருத்தி தியானம் செய்துகொண்டிருந்தார். மகாராஜா அவரிடம் இன்று திதி என்ன என்று கேட்டார். அதற்கு அபிராமி பட்டர் பவுர்ணமி திதி என்று கூறி விட்டார்.

ஆனால், அன்றைய தினம் அமா வாசை திதியாகும். இதனால் கோப மடைந்த மகாராசா அதை நிரூபிக்க முடியுமா, என்று கேட்டார். அம்மா வாசையை பவுர்ணமி என்று கூறியதை வாதிக்கும் பொருட்டு, அபிராமி பட்டரும் முடியும் என்றார்.

பிறகு உமாதேவியைப் பிரார்த்தித்துக் கீழே வெட்டி குழியிலே நெருப்பு எரிய விட்டு மேலே தூக்கிய நூறுவடம் கொண்ட உறிஒன்றிலே ஏறினார். அபிராமி அருளவில்லை என்றால் இந்த நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்றார்.

இவ்வாறு கூறி அபிராமி அம்மைமீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கினார். அவ்வாறு பாடுகையில் ஒரு பாடல் முடிவில் ஒரு வடமாக உறியின் ஒவ்வொரு வடத்தையும் அறுத்தார்.

பாடல் முடிய தேவியும் வெளிப் பட்டாள். அவள் தன்னுடைய காது தோடுகளுள் ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீசினாள். அந்த தோடு நிலவாக மாறி பவுணர்மி போல காட்சி அளித்தது. இதனால் தேவியின் அருளைப் பாராட்டி மற்ற பாடல் களையும் பாடி முடித்தார் அபிராமி பட்டர்.
இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை பாராயணம் செய்பவர் களுக்கு பக்தியும் சித்தியும் கைவரப் பெறும் என்பது உறுதி.

கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்ல மாட்டானா?

இவ்வளவு அபத்தமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவற்றை விற்றுப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page7/88679.html#ixzz3FAmEKezG

தமிழ் ஓவியா said...

பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை


பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)
ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FAmcWf9C

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.


Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3FAmno73Y

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சூரியகிரகம்

சூரியகிரகம் அதன் அண்ட சக்தி நமது வாழ் வில் நற்பலன்களையும், கெடுபலன்களையும் ஏற் படுத்துகின்றன. இப்படி ஒரு விளம்பரம் தின மணியில்.

ஒரே ஒரு கேள்வி. சூரி யன் கிரகமே இல்லையே. அது நட்சத்திரம் ஆயிற்றே - அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க சூரி யனைக் கிரகப் பட்டியலில் சேர்க்கும் அறியாமையை எண்ணினால் சிரிப்புதான் வருகிறது

Read more: http://viduthalai.in/e-paper/88700.html#ixzz3FE8EkML8

தமிழ் ஓவியா said...

இராமன் காக்கவில்லையே! இராவணனைவதம் செய்யச் சென்ற 33 பக்தர்கள் பாட்னாவில் பலி!

பாட்னா, அக்.4: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் நேற்று நடந்த தசரா விழாவில், கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் பலி யாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டா டப்பட்டது. 10ம் நாளான நேற்று ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி வடமாநிலங் களில் நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் தசரா விழா நேற்று மாலை கொண்டாடப் பட்டது. இதைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர். இதனால் காந்தி மைதா னத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த விழாவை காண முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியும் வந்திருந்தார்.

தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 60 அடி உயர பத்து தலை ராவணனின் உருவ பொம்மை, அம்பு எய்தி தீ வைத்து கொளுத்தப்பட் டது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங் கினர்.

மைதானத்தை ஒட்டி யுள்ள குறுகலான தெரு வழியாக மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண் டிருந்தது. மைதானத்தில் இருந்த ஒரு வழியாக மட்டுமே மக்கள் வெளி யேற அனுமதிக்கப்பட் டனர். அப்போது திடீ ரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால், மக்கள் போட்டி போட் டுக் கொண்டு மைதா னத்தை விட்டு வெளி யேறினர்.

இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் அலறினர். பலர் மயங்கி கீழே விழுந் தனர். மைதானத்தில் இருந்து வெளியேறும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலர் கூட்டத்தில் மிதி பட்டனர். மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தவர் கள் உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந் தனர். மொத்தம் 33 பேர் பலியானதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/88698.html#ixzz3FE8QdxxD

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/88704.html#ixzz3FE8zblAk

தமிழ் ஓவியா said...

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்

1. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மீறக் கூடாது என இந்திரா சகானி (1992) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சில அசாதாரண மான சூழ்நிலைகளில், இந்த விதியில் சில விலக்குகள் அளித்திடுவது அவசி யமாகிறது என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பில் கூறியுள்ளது.

3. 1992 இந்திரா சகானி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், இட ஒதுக்கீடு கூடாது என பாலாஜி வழக் கில் கூறப்பட்டது நீதிபதியின் கருத்து மட்டும்தான்; (obiter dicta) தீர்ப்பு அல்ல என கூறியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

4. 1992 இந்திரா சகானி வழக் கின் ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்புரையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்; நிறை வேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வது, முழுவதும் ஓர் அரசின் வரம்புக்குட்பட்டது; இந்த விஷயங் களில் நீதித்துறை நுழைவதும், மறுஆய்வு செய்வதும் சாதாரணமாக நீதித்துறையின் அதிகாரத்திற்குள் வருவது இல்லை எனக் கூறியுள்ளார்.

5. இதற்குப்பிறகு, 77-வது அரச மைப்பு சட்டத்தின் திருத்தமாக கொண்டுவரப்பட்டு 16(4) பிரிவில் அ பிரிவு சேர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடருவதற்கான திருத் தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. மேலும் பல திருத்தங்களும் செய்யப்பட்டன.

இந்த திருத்தங்கள் தொடர்பான வழக்கில் ( நாகராஜ் வழக்கு 19.10.2006), உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்து, மேலும், இந்த திருத்தத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும்போது, நான்கு விச யங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இட ஒதுக்கீடு பிரிவினரின் எண்ணிக்கை அளவு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, போதுமான பிரதிநிதித்துவம் இல் லாமல் இருப்பது, இவற்றுடன், இந்த இடஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப் படகூடாது அதற்கான புள்ளிவிவர அளவினை அரசு தெரிந்துகொண்டு செய்திட வேண்டும் என கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

(the Constitution Bench held that the State is not bound to make reservation for Scheduled Castes and Scheduled Tribes candidates in matters of promotion but if it wished, it could collect quantifiable data touching backward ness of the applicants and inadequacy of representation of that class in public employment for the purpose of compliance with Article 335 of the Constitution.)

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ் நாட்டில், தற்போது உள்ள 69 விழுக்காடு தரப்படுவதற்கான நியா யத்தை, மத்திய அரசின் புள்ளியியல் துறை நடத்திய மாதிரி ஆய்வு அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களை தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு தெரி வித்து, அவர்கள் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும். 6. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் மக்கள் தொகையினை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இடைப் பட்ட நேரத்தில், மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வேயின் (National Sample Survey) 62-ஆவது சுற்று சர்வே (2004-_05) அறிக்கை மத்திய அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், தமிழ் நாட்டில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், மலைவாழ் மக்கள், 73.5, 22.16 மற்றும் 1 விழுக் காடாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத் தையும், அரசு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

7. மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களுக்கு 69 விழுக்காடு தான் தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பிரிவு 16(4)-படி, போதிய அளவு இட ஒதுக்கீடு என்கிற அளவுகோலில் இது வழங்கப்பட்டுள் ளது நியாயமானதுதான்.

தமிழ் நாட்டில் நீதிக்கட்சி காலத்தி லிருந்து நடைமுறையில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடும், 1994-ல் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட் டமும், இந்தியாவிற்கே ஓர் வழி காட் டியாக இருக்கிறது. ஆகவே, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, 69 விழுக்காடு சட்டத்தினை பாதுகாத் திட அனைத்து முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று எதிர் பார்க்கிறோம்.

- கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/88706.html#ixzz3FE987Qz9

தமிழ் ஓவியா said...

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்பந்தமாய் திருவாங்கூர் அய்க்கோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்கும் உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட, பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? வம்புச்சண்டைக்குப் போகாமல் இருக்கலாமே ஒழிய, வலியவரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்குப் பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAgy72V

தமிழ் ஓவியா said...

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோ பாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டே ஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ் பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார். பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டி ருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண் டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமை யாவையும் கண்டு மரியாதை செய்தார். அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் -01.02.1931



Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAo1HZM

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புபற்றி தாங்கள் எதுவுமே கூற வில்லையே?

கலைஞர்: இந்தத் தீர்ப்புபற்றி நான் கூறுவதை விட இந்த வார ஆனந்த விகடன் தீர்ப்பு தரும் பாடம் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங் கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அது வருமாறு:- இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெய லலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல் என்ற பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வர லாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப் பால் பதவி பறிக்கப்பட்டுள்ள முதல மைச்சர் ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம் பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளி வாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழ மொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்! சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெய லலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை.காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம்தான் இது! ஆனந்த விகடன் மட்டுமல்ல; டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் 2.10.2014 அன்று எழுதிய தலையங்கத்தில், தண்டனை நியாய மற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல் முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறை கள் நிரம்ப இருக்கின்றன. சட்டத்தின் முடிவு களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று கட்சியின் தொண்டர்களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் விளக்கமாக எழுதியுள்ளது. கேள்வி: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

கலைஞர்: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம் பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் மீதான வழக்கு களை உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அண்மைக் காலத் திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத் திற்கு உச்சநீதிமன்றம்தான் மாற்றியது. ஜெய லலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003 ஆம் ஆண் டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் பேரா சிரியர் விடுத்த வேண்டுகோளின்படி, உச்சநீதி மன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கருநாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளேடே வெளியிட்டுள்ளது.

(முரசொலி, 4.10.2014)

Read more: http://viduthalai.in/page-3/88725.html#ixzz3FEBNGgpR

தமிழ் ஓவியா said...

தமிழகம் ஜிகாதிகளின் உறைவிடமாம்! மோகன் பகவத்தின் அடாவடிப் பேச்சு!

There is a serious upsurge in the jehadi activities in the southern parts of Bharat, especially in Kerala and Tamil Nadu. No effective policy imperatives, efforts are visible in curbing such activities.

தென்னிந்தியா ஜிகாதிகளின் உறைவிடமாக மாறிவருகிறது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். முக்கியமாக கேரளா மற்றும் தமிழ் நாட்டில் ஜிகாதி நடவடிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை ஆளும் மாநில அரசுகள் தீவிர வாதிகளின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை.

Read more: http://viduthalai.in/page-3/88728.html#ixzz3FEBnsLlp