Search This Blog

16.10.14

பணம் வாங்குவது ஏன்?-பெரியார் விளக்கம்- பெண்கள் நாட்டிற்குப் பயன்பட வேண்டும்

பெண்கள் நாட்டிற்குப் பயன்பட வேண்டும்


மணமகன் அவர்கள் பத்திரிகையில் வருஷம் போடுவதைப் பற்றி ஒரு கருத்துச் சொன்னார்கள். தமிழ் வருஷம் போடுவதைப் பற்றி நான் போட வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய தினம் நாம் புதிதாக ஓர் ஆண்டைத் துவக்கினால் அதை மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே! அதற்குப் பதிலாக எனது ஆண்டைப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அது கேலிக்குரியதாகவே இருக்கும்.

அந்த பழைய ஆண்டுகளின் கதை அசிங்கம், ஆபாசமாக இருக்கிறது என்பதோடு, தமிழனுக்கு என்று நாளைக் குறிப்பிடுவதற்கு வகை இல்லை. நம் தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. ஆரியர்கள் நம் நாட்டிற்கு வந்த பின் தான் இந்த ஆண்டுகளே நமக்கு ஏற்பட்டதாகும்.

அடுத்து நான் பணம் வாங்குவதைப் பற்றிச் சொன்னார்கள். நான் எனது தேவைக்காக வாங்கவில்லை. அதை எனக்காக செலவிடுவதுமில்லை. எனது வண்டி காலனுக்கு 10, 12-மைல் தான் போகும். அடிக்கடி ரிப்பேர் வேறு செய்ய வேண்டியிருக்கிறது. போன வருஷம் மூவாயிரம் ரூபாய் செலவு செய்து கும்பகோணம் சிம்சன் கம்பெனியில் ரிப்பேர் செய்து கொடுத்தார்கள். இடையில் சிறிது சிறிதாக 200, 300-ரூபாய் என்று ரிப்பேர் செய்து கொண்டு தான் இருந்தேன். எலக்க்ஷனுக்கு முன் மதராசில் ரூ1,500- கொடுத்து ரிப்பேர் செய்தேன். இப்போதும் திருச்சியில் ரிப்பேர் செய்வதற்காக விட்டு இருக்கிறேன். இரண்டு டிரம் - ஆயிரத்தி சொச்ச ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சில்லறைச் செலவு சாமான்கள் 400, 500-ரூபாய் ஆகும். இப்படி அடிக்கடி செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்தப் பணத்தில் தப்பித் தவறி மிச்சப்படுவதையும், கழகக் காரியத்திற்கே செலவிட்டு வருகின்றேன்.

தோழர்களே! இந்த நடப்புக் காலம் பெரும் புரட்சிக் காலமாகும். கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாத மக்களிடையே அறிவைப் புகுத்த வேண்டிய புரட்சிக் காலமாகும். மக்களின் எதிர்ப்பு வெறுப்புக் கிடையே புரட்சி செய்ய வேண்டி இருக்கிறது. உலகத்தையும், நம்மையும் நிறுத்துப் பார்த்தால் நம் சமுதாயம் கட்டுமிராண்டி சமுதாயமே ஆகும்.

ஆதலால், நம் புரட்சிக்கரமான கருத்துக்களைக் கேட்பதே பெரிது. தமிழன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது என்றால், எதுவுமே கிடையாது. எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும். மாற்ற வேண்டுமென்றால் நம் மக்கள் பயப்படுகிறார்கள். பழைமை, பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னது என்று சொல்கிறார்கள்.

தாலி என்றால் என்ன? அதன் பலன் என்ன? என்று தெரிந்தவர்கள் ஒருவர் கூடக் கிடையாது. ஆனால், அது பெண்களுக்கு உயிர் போல் இருக்கிறது. பெண்களை நாம் அடிமைகளாகவே வைத்திருந்தோம். அவர்களை விட்டு விடுங்கள். எல்லாம் தெரிந்தவர்களே தாலி வேண்டுமென்கிறார்களே! அப்படித் தான் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுள், மதம், சாஸ்திரம் எதுவாக இருந்தாலும் பயப்படுகிறான். இவற்றையெல்லாம் எதிர்த்து காரியம் செய்வதென்றால் பெரும் தொல்லைகளுக்கிடையே தான் செய்து வர வேண்டி இருக்கிறது. அநேக துறைகளில் மாறுதல் செய்ய வேண்டும் என்று சிந்தித்ததில் இத்திருமண முறையே ஒன்றாகும்.

தமிழர் சமுதாயம் என்கின்ற நமக்கு இந்தப்படி ஒரு நிகழ்ச்சி இருந்திருக்கிறதா? அப்படியானால், அதற்கு என்ன முறை இருந்தது என்பது சரித்திரக்காரனுக்குத் தெரியுமா? இலக்கியக்காரனுக்குத் தெரியுமா? என்றால் எவனுக்கும் தெரியவில்லை. இதை நான் இன்றைக்குச் சொல்லவில்லை. 40-ஆண்டுக் காலமாகச் சொல்லி வருகின்றேன். இதுவரை எவருமே நான் சொன்னது தப்பு. இப்படி ஒன்று இருக்கிறது என்று எடுத்துச் சொல்லவில்லை. இருந்தால் தானே சொல்லுவதற்கு.

இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்திருக்குமானால், அதற்கு ஒரு பெயர் இருந்திருக்குமே. அப்படி இந்நிகழ்ச்சியைக் குறிக்கும்படியாக ஒரு பெயரும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. நாம் ஆரம்பித்த பெயர் தான் வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகும்.

திருமணம் என்று சில தமிழ்ப் புலவர்கள் சொன்னாலும், திருமணத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமோ, பொருளோ இல்லை. தமிழனுக்கு மட்டுமல்ல, ஆரியனுக்கும் கிடையாது என்று சொல்வேன். விவாகம், கல்யாணம், முகூர்த்தம் என்பதெல்லாம் வேறு பொருளைக் குறிப்பிடும் சொற்களே தவிர, இந்நிகழ்ச்சியை காரியத்தைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல.

வாழ்க்கைத் துணை என்பதை வள்ளுவன் சொல்லி இருக்கிறானே என்பார்கள். அவன் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையே குறிப்பிட்டிருக்கிறான். "தற்கொண்டாற்பேணி" என்ற குறளே பெண்ணை அடிமை என்பதைக் குறிப்பிடுவதே ஆகும் என்று ஆண் - பெண் திருமண முறை தோன்றிற்றோ அன்றே ஆணுக்குப் பெண் நிரந்தரமான அடிமை என்பதும் தோன்றி விட்டது.

மணப்பாறையில் 4, 5-ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், என் மேல் அன்பு கொண்ட சில புலவர்கள் நான் இதுபோல் பேசியதைக் கேட்டு இம்முறைக்கு இலக்கியத்தில் சான்றுகள் இருக்கின்றன என்று சொல்லி, மணமகன் காளையை அடக்கிப் பெண் கொள்ள வேண்டுமென்று ஒரு கவிதையையும் எடுத்துக் கூறினர். இன்னொன்று ஆணும், பெண்ணும் தோட்டத்தில் உலவும் போது ஒருவருக்கொருவர் பார்த்து சேர்ந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள். நான் கேட்டேன், பெண் என்ன காளை, புலியைப் போல அவ்வளவு முரட்டுக் குணத்தன்மை உடையதா? அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா? என்று கேட்டேன். அந்தப் புலவர்கள் சிரித்துக் கொண்டார்கள். நான் இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியைக் குறிக்கத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சியை உணர்த்தக் கூடிய பொருளில் இந்நிகழ்ச்சி இப்படித்தான் செய்யப்பட வேண்டுமென்கிற முறையில் ஒரு சொல்லோ, ஆதாரமோ எதுவும் நமக்குச் சரித்திர வாயிலாகவுமில்லை - இலக்கியங்களிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே ஆகும்.

இம்முறையைக் குறிக்கும் சொற்கள் யாவும் வடமொழிச் சொற்களேயாகும். அடுத்து, நம் மக்களின் சிந்தனையற்றத் தன்மையில் ஆரியர்கள் இங்கு வந்து நுழைந்த பிறகு, அதுவும் இந்த நூற்றாண்டுக்குப் பிறகு தான் பார்ப்பானை வைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்ற முறையே ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை அவர்களே அவர்கள் ஜாதியில் உள்ள பெரியவர்களை வைத்தோ தாங்களாகவே நடத்திக் கொள்வார்கள்.

பழைய முறை ஏற்பட்டதன் அடிப்படைக் காரணமே பெண்ணடிமையை நிலை நிறுத்தவும், நம் மக்களின் சிந்தனையற்ற முட்டாள்தனத்தை, மடமையைப் பாதுகாக்கவும், ஜாதியைக் காப்பாற்றவுமான இந்த மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டவையே ஆகும். சிலர் பெருமையை முன்னிட்டு இம்முறைகளைக் கடைப் பிடிக்கிறார்கள். பார்ப்பான் வந்து செய்தால் பெருமை என்று கருதுகிறான். அதற்காகவே அவனை அழைக்கிறான்.

சிலர் பெருமையைக் கருதி எப்படிப் பாட்டுக் கச்சேரி, மேளக் கச்சேரி, நாட்டியம் என்று ஏற்பாடு செய்கிறார்களோ அதைப் போலவே சுயமரியாதைத் திருமணம் செய்வதையும் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். என்னை ஒரு திருமணத்திற்குச் சில சில நாட்களுக்கு முன் அழைத்திருந்தார்கள். நான் போயிருந்தேன். அங்கு உள்ளுக்குள் பார்ப்பானை வைத்து சடங்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே நம் முறையை வைத்துச் செய்தார்கள். அப்படியில்லாமல் பகுத்தறிவோடு செய்ய முற்பட்ட மணமக்களுடைய பெற்றோர்களையும் பாராட்டுகிறேன்.

இம்முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறோம் என்றால், இம்முறை ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்பதைத் தெளிவுறுத்துவதோடு, ஆணும், பெண்ணும் நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறது. இதில் எந்த முட்டாள்தனமான சடங்குகள் எதுவும் கிடையாது. தேவைக்கு மேற்பட்ட எந்தக் காரியங்களும் இங்கு வலியுறுத்தப்படவில்லை. இன்னும் சில காலம் சென்றால், "கணவன் - மனைவி" என்பதே இல்லாமல் போய் விடும்!

திருமணம் என்கின்ற இந்தக் காரியமானது இவ்வளவு பெரிய அளவில் செய்யப்படுவது ஒரு விளம்பரத்திற்கு செய்யப்படுவதே யாகும். இன்னமும் சுருக்கமாகச் செய்ய வேண்டும். சென்ற வாரம் எனது நண்பரின் மகன் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு எனது வீட்டிற்கு வந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டார். உனது தந்தை எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே. அவர் இல்லாமல் எப்படிச் செய்வது? என்று தயங்கினேன். நீங்கள் செய்து வைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னார். பிறகு யோசனை செய்தேன். நகரத்தில் உள்ள தோழர்களுக்கு விஷயத்தைச் சொல்லி எல்லோரையும் வரவழித்து இரண்டு மாலையை வாங்கி வரச் செய்து திருமணத்தை முடித்து வைத்து விட்டேன். நேற்று அவரிடமிருந்து கடிதம் வந்தது. தனது வீட்டார் நான் இக்காரியத்தை செய்து வைத்ததில் பெருமை அடைந்ததாகவும் தங்கள் இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்றதாகவும் எழுதியிருந்தார்.

அடுத்த மாதம் 7-ஆம் தேதி ஒரு திருமணம் திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதுவும் சாயந்திரம் 5-மணிக்கு மேல். வருபவர்களுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி விட்டால் சரியாகப் போய்விடும். சாப்பாட்டுச் செலவோ, மற்ற செலவோ இல்லை. வருபவர்களுக்கும் தொந்தரவு இருக்காது. இது கூட இனித் தேவை இல்லை. திருமணத்தை முடித்துக் கொண்டு பேப்பரில் போட்டு விட்டாலே போதும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள்.

மணமக்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க வேண்டும். பெண்ணைக் கெடுத்தது முதலில் திருமணம். அடுத்தது நகை. இந்த இரண்டால் பெண்கள் நாட்டிற்குப் பயன்பட முடியாமலே போய் விட்டார்கள். பெண்கள் அழகுபடுத்துவதிலும் பிறருக்கு அழகாகத் தோன்ற வேண்டுமென்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர். அது மாற வேண்டும். சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். வரவிற்குள் செலவிட வேண்டும். நம் இனத்தைத் தவிர மற்ற எல்லா இனங்களும் தங்கள் இனத்திற்காக வாழ்கின்றனர். நாமும் அதுபோல வாழ முற்பட வேண்டும்.

நான் கடந்த 40-ஆண்டு காலப் பொதுத் தொண்டில் எனக்கு எது சரி என்று பட்டதோ, அவற்றை எடுத்துச் சொல்லி வருகின்றேன். இக்கருத்து உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு, இதற்கு ஏற்பாடு செய்த மணமக்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி, எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

----------------------------------- 19.05.1967 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 29.05.1967

34 comments:

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத் தீர்ப்பை சட்டத்தின் வாயிலாக சந்திக்காமல் நாகரிகமற்றமுறையில்வசைபாடுவது, வன்முறைகளில் ஈடுபடுவது சரிதானா?


நீதிமன்றத் தீர்ப்பை சட்டத்தின் வாயிலாக சந்திக்காமல் நாகரிகமற்றமுறையில்வசைபாடுவது, வன்முறைகளில் ஈடுபடுவது சரிதானா?

தாடி வளர்த்தால் தண்டனைதான் ரத்தாகுமா?

கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க துடியாய்த் துடிக்கும் பரிதாபத்திற்குரிய அரசியல்வாதிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் தர்க்க ரீதியான படப்பிடிப்பு!



முன்னாள் முதல்வருக்குத் தண்டனை என்பது சட்ட ரீதியாக நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது; அதிலிருந்து வெளிவர சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபடவேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் வன்முறையைக் கையாளு வதோ, நீதிபதியை வசைபாடுவதோ தீர்வாகாது.
இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, பதவி ஆசையால் எச்சில் ஊறிக் கிடக்கும் அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - இவைபற்றியெல்லாம் தர்க்க ரீதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் கட்சிகளைப் பார்த்தால் மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது!

தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவுப் பூமியா அது? என்று வெளிநாட்டவர் எல்லாம் விலாநோகச் சிரிக்கும் நிலைதான் காணப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத் தீர்ப்பும் - அதன் தொடர்ச்சியும்...

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 18 ஆண்டுகால இழுத்தடிப்பு, வாய்தாக்கள் தாண்டி வந்த தீர்ப்பின்படி, முதல்வராக இருந்த முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும் உடந்தையாக இருந்த வர்களுக்கு அதேபோல் நான்காண்டு சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் என்ற தீர்ப்பு அதிர்ச்சியை அ.தி.மு.க.வினருக்குக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, உச்சநீதி மன்ற அண்மைக்கால சட்ட வலிமை பெற்ற தீர்ப்பின் விளைவாக, மூன்றாண்டுகளுக்குமேல் தண்டனை பெற்ற பதவியாளர்கள், சிறைத் தண்டனை மாத்திரமல்லாமல், பதவியை உடனடியாக இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

அதன்படி, முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.எல்.ஏ., முதல்வர் பதவியையும் இழந்தவராகிறார் என்ற சட்டபூர்வ நிலையினால், அவருக்குப் பதிலாக - அரசியல் சட்டப்படி அக்கட்சியினரால் வேறு ஒருவர் முதலமைச்சர் பொறுப் பையும் ஏற்று, ஆட்சியை நடத்துகிறார்.

நாளைய முடிவு - யாருக்கும் தெரியாது!

தண்டனை அடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவர செய்த முயற்சிகள் - கருநாடக உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெறவில்லை - ஜாமீன் நிராகரிக்கப் பட்டது.

அதன்மீதுதான் முன்பு ஏற்பாடு செய்திருந்த, பிரபல வழக்குரைஞர்களுக்குப் பதில் வேறு இரண்டு பிரபல மூத்த வழக்குரைஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (அப்பீல்) செய்துள்ளார்கள்.

நாளை (17.10.2014) உச்சநீதிமன்றத்தில் ஜாமீன்பற்றிய மேல்முறையீடு மனு விசாரணைக்கு வர இருக்கிறது. முடிவு எப்படி இருக்கும் என்று யாரும் இப்பொழுது சொல்ல முடியாது. அது உச்சநீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.

நீதிபதியைத் தாறுமாறாக வசைபாடலமா?

சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட முறை களான மேல்முறையீடுகள், ஜாமீன் போன்றவை மூலம்தான் வெளிவர முயற்சிக்கலாமே தவிர, தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப்பற்றி தாறுமாறாக வசை பாடி, விமர்சித்து சுவரொட்டிகள் அடித்து ஒட்டுவது, பதாகை களை வைப்பது, கடவுளை மனிதன் தண்டிக்கலாமா? என்று உளறல் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், கருநாடகாவே எங்கள் அம்மாவை எங்களுக்குக் கொடுத்துவிடு - காவிரியை நீயே எடுத்துக்கொள்! என்று பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையற்ற வாசகங்களைக் கொண்டு எழுதி, வெறுப்பினை மேலும் - பல தரப்பிலும் சம்பாதிப்பது, தேவைதானா?

மோடி அரசே தலையிட்டு எங்கள் அம்மாவை வெளியே கொண்டுவர முயற்சி செய்! என்று நீதி - நிர்வாகப் பிரிவான நீதித்துறை சுதந்திரம்பற்றிய கடுகளவு அறிவும் இல்லாத அறிவு சூன்ய அபத்தங்களை வாசகங்களாக்கி உலா விடுதல் சரியானதுதானா?

தாடி வளர்த்தால் தண்டனை ரத்தாகுமா?

இவைகளுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல, ஒப்பாரி வைத்து மாரடிப்பதும், பேருந்துகளைக் கொளுத்துவதும், பேருந்துகளில் பயணம் செய்வோர் மண்டைகளை உடைப்பதும், கடைகளை மூடச் சொல்லி காலித்தன முயற்சிகளைச் செய்வதும், கடைகளை மூடுமுன் பொருள் களைக் கொள்ளையடிப்பதும் எந்த வகையில் சரி? இவை யெல்லாம் சமூக விரோத செயல்கள் அல்லவா? இவற்றில் ஈடுபடுபவர்கள் சமூகவிரோதிகள் அல்லவா? பள்ளிகளை யெல்லாம் மூடும்படி பள்ளி நடத்துவோரைக் கூட்டி நிர்ப்பந்தப்படுத்துவதும், மொட்டை போட்டுக் கொள்வதும், தாடி வளர்ப்பதுமான மழித்தலும் நீட்டலும் ஆன கேலிக் கூத்துக்கள், சத்ரு சங்கார யாகங்கள், பூஜை, புனஸ்காரங்கள், கல் சோறு, மண் சோறு சாப்பிடுவது போன்றவைகளும், அதற்கான ஆள்களைச் சேகரிக்க பணம் கொடுத்து அழைத்து வந்து, இந்தக் கேலிக் கூத்துக்களை அரங்கேற்று வதும் செய்தித் தாள்களில், ஊடகங்களில் வெளிவருபவை. உலகம் முழுவதும் பரப்பப்படுகின்றன (இவை முன்பே பயன் அளிக்கவில்லை என்ற புத்தியும் வரவில்லையே!)

தமிழ் ஓவியா said...


மற்ற நாடுகளில் வாழுகிறவர்கள் மிகமிகக் கேவலமாகக் கருதுகின்றனர். ஒரு ஆங்கில நாளேட்டில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒருவர் எழுதிய கட்டுரையில் பயன்படுத்திய சொற்றொடர் ‘‘Competitive Breast Beating’ போட்டி போட்டுக்கொண்டு மாரடித்து அழும் கேலிக் காட்சி என்பதான வாசகங்கள்!

இவை எல்லாம் பெருமை தரக்கூடியவைதானா? செந் தமிழ்நாடெனும் போதினிலே என்ற பாரதி பாட்டினையே மாற்றி அல்லவா, இன்று பாடிட பகுத்தறிவுள்ள எவருக்கும் தோன்றும்!

பதவி எச்சில் ஊறித் திளைக்கும் பரிதாபத்திற்குரியவர்கள்!

இது ஒருபுறம்; மறுபுறம் எதைத் தின்றால் பித்தம் தீரும்? என்ற மொழிக்கேற்ப, பல அரசியல் கட்சிகள் அளவுக்கு அதிகமாக நாக்கில் எச்சில் ஊறி, குற்றால அருவியோடு போட்டிப் போடும் வேடிக்கை!

சுப்பிரமணிய சுவாமிகளின் கற்பனைக் கனவுகளும் ஒருபுறம். மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு!
ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டு, கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் திட்டமிட்ட அதிபுத்தி சாலியாக மாறிடத் துடியாய்த் துடிக்கிறது!

இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிடர் இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இறுதியில் சிரிப்பவர் யார்?

இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது.

காலம் புரிய வைக்கக் காத்திருக்கிறது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/89359.html#ixzz3GJnWO6Cn

தமிழ் ஓவியா said...

இந்தியா ஒளிர்கிறதா - மிளிர்கிறதா...?

பெண்ணை நிலவாகவும், மலராக வும், தெய்வமாகவும் போற்றிப் புகழ் கின்ற நம் பாரத புண்ணிய பூமியில் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமே எண்ணி அவர்களிடம் பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை ஆகியவை நாளும் அரங் கேற்றப்பட்டு வருகின்ற அவலநிலையை நாளேட்டின் வாயிலாக நாள்தோறும் காண முடிகின்றது.

பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களைப் படிக்க வைப்போம் - நாட்டிற் குப் பெருமை சேர்ப்போம் எனும் வெற்று முழக்கங்களால் மட்டுமே பெண் களுக்கு பெருமையும், புகழும் வந்து விட்டது.

ஆண்களுக்கு நிகராக பெண் களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முழு சுதந்திரத்துடனும் - உரிமையுட னும் வாழமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நாள்தோறும் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் ஆகியவை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

எனவேதான் தொலைநோக்குப் பார்வையோடு சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் செங்கற்பட் டில் 1929-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் மத்திய - மாநில அரசுகள் பெண்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு ஏதுவாக சட்டம் இயற்றவேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மா னத்தைக் கொண்டு வந்து அகிலத் தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தமிழ் ஓவியா said...

மேலும், ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அத்தனை உரிமைகளும், பெண்களுக்கும் கட்டாய மாக வழங்கப்பட வேண்டும் என்று ஓர் ஆணாக இருந்துகொண்டு பெண்களுக் காக உரிமைக்குரல் கொடுத்தவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? ஒரு நாளும் கிடைக்காது. அது போன்று எந்த ஆணும் தான் அனுபவித்து வருகின்ற உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். எனவே பெண்கள் தங்கள் உரிமைகளை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முன் வரவேண்டும் எனறு கூறிய பெண்ணிய வாதி தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைதான் இன்றளவும் மக்கள் மனதில் சுடர் ஒளியாய் எழுந்து நிற்கின்றது.
இவ்வாறு தந்தை பெரியார் அவர் கள் நீண்ட நெடுங்காலமாக பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனிற் காகவும், பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்ததின் பயனாய் இன்று பெண்கள் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாகவும், ஊராட்சி - நகராட்சி மன்றத் தலைவர் களாகவும், மாநகராட்சி மேயராகவும் மற்றும் மாநில முதல்வராகவும் கட்சி யின் தலைவர்களாகவும், நாடாளுமன்ற பேரவைத் தலைவராகவும், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக வும், மத்திய - மாநில அமைச்சர்களாக வும் அங்கம் வகித்து வீட்டிற்கும், நாட் டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஒருபுறம் மகளிர் சமுதாயம் பல்வேறு துறைகளில் - பல்வேறு நிலைகளில் மேம்பட்டு வருவதைக் கண்டு மகிழ் கின்ற அதே வேளையில் மறுபுறம் அண்மையில் (5.9.2014) தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு புள்ளி விவரங் களுடன் ஓர் வேதனை மிகுந்த செய்தி யினை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கபடுகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 2012-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 வழக்குகள் இவ்வாண்டில் பதிவாகி இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் (2013) 33 ஆயிரத்து 707 ஆக உயர்ந்து உள் ளது. கடந்த ஆண்டில் பாலியல் வன் முறைக்கு உள்ளான பெண்களில் 15 ஆயிரத்து 556 பேர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் இந்த குற்றத்தில் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறிது. அங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். 2012 ஆம் ஆண்டில் டில்லியில் 706 பாலி யல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள் ளது. கற்பழிப்பு குற்றத்தில் நகரங்களை பொறுத்த மட்டில் டில்லிக்கு அடுத்த இடங்களை மும்பை, ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்கள் உள்ளன என்று அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு அண்மையில் (5.9.2014) வெளியிட் டுள்ளது.

மேற்கண்ட அதிர்ச்சி மிகுந்த செய்தியை நாளேட்டின் வாயிலாக அறிந்த மகளிர் அமைப்பினர், மாதர் சங்கங்கள், மகளிர் உரிமை மாண்பாளர் கள், சமுதாய ஆர்வலர்கள், முற்போக் குச் சிந்தனையாளர்கள், மனிதநேயப் பண்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கி னர். அவர்களால் பேச முடியாமல் நா தழுதழுத்தது, உதிரம் உறைந்து போனது, செய்வதறியாது திகைத்து நின்றனர்.

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன நிலையில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்திய நாடு வளர்ந்த நாடாக - வளர்ச்சி பெற்ற நாடாக உலக அரங்கில் ஏற்றம் பெற முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் பெண்ணினத்தை மதிக்கத் தவறியதாலும், பெண்களுக்கு எதிராக நாளும் நடைபெறுகின்ற பாலியல், வன் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, கொலை - கொள்ளை ஆகியவற்றை குறித்த நேரத்தில் தடுக்கத் தவறிய தாலும் இந்திய நாடு முன்னேற முடியா மல் இருப்பதற்கு அடிப்படைக் காரண மாகும்.

இத்தகைய அவல நிலையில் இந்தியா ஒளிர்கிறது - மிளிர்கிறது மற்றும் இந்தியா முன்னேறுகிறது - முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஆட்சியாளர்களால் மிகைப்படுத்திக் கூறப்படுவதை நகைப்புக்குரிய ஒன் றாகவே மக்கள் கருதுகின்றனர்

- லட்சுமிபதி, தாம்பரம்

Read more: http://viduthalai.in/page-2/89371.html#ixzz3GJoCHw1z

தமிழ் ஓவியா said...

கல்விக் கடன் வழங்க மறுப்பது ஏன்?


மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாராள தன்மை யுடனே நடந்து வந்திருக்கிறது. சொத்து ஜாமீன் என்பது போன்ற நடைமுறைச் சிக்கலில் மாணவர்களைச் சிக்க வைக்காமல், கல்விக் கடன் வழங்கப்படவேண்டும் என்று ஆணையிட்டது.

2009-2010 ஆம் ஆண்டில் அவ்வரசின் நிதிநிலை அறிக்கை ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சினில் பால் வார்த்தது. 2009 ஏப்ரல் முதல் நாளிலிருந்து கல்விக் கடனைப் பெறும் மாணவர்கள் கல்வியை முடித்து 6 மாதங்கள்வரை செலுத்தப்படவேண்டிய கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு, வட்டி மானியம் அறிவித்திருந்தும், சில வங்கி களில் வட்டியை கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும் ஒரு மாதம் வட்டி செலுத்தாவிட்டால்கூட, அந்த வட்டித் தொகையை அசலுடன் சேர்த்து கூட்டு வட்டி போடுவதாகவும் பொதுமக்களிடையே புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2010 செப்டம்பர் செங்கல்பட்டில் நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில், மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கிப் பேசிய அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நமது நாட்டில் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளிப் படிப்புடன் நிறுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. இவர்களைக் கருத்தில் கொண்டே கல்விக் கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

2009-2010 ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டி செலுத்தத் தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

எந்த வங்கியேனும் 2009-2010 ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்குப் பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியைத் தொடர்புகொள்ளலாம்; அவர்கள்தான் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்குத் தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர் என்று பேசினார். இதே கருத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்விக் கடன் மேளா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இந்த செயல்பாட்டின்மூலம் 2013 டிசம்பர் 31 ஆம் தேதிவரை இந்தியாவில் 25,70,254 பேரிடம் 57,700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டின்போது தெரிவித்த அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2009 மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பும் கல்விக் கடன் பெற்ற 9 லட்சம் பேர் செலுத்தவேண்டிய வட்டியான சுமார் ரூ.2,600 கோடியையும் மத்திய அரசே செலுத்தும் என அறிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மாணவர்கள் கல்விக் கடன் வாங்கிய நாளிலிருந்தே வட்டியும் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் கல்விக் கடன் பெற்ற யாருக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் மாணவர்களுக்கு வங்கிக் கடன் புத்தகமும் வழங்கப்படுவதில்லை. இதனால் இதுவரை தங்கள் கடன்பற்றிய விபரத்தைக்கூட அவர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், தங்கள் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவே இதுவரை கருதி இருந்தவர்களுக்கு, வட்டித் தொடர்பான வங்கிகளின் நோட்டீஸ் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

வங்கி அதிகாரிகளைக் கேட்டால், வட்டி இல்லை என்று யார் சொன்னது என்று, திருப்பி கேட்கிறார்களாம். சில அதிகாரிகள் வட்டி தள்ளுபடி தொடர்பாக மத்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட குறைந்தபட்ச தொகையைக்கூட இதுவரை வழங்கவில்லை. அந்தத் தொகையை கடன் வாங்கியவர் களிடமிருந்துதானே வசூலிக்க முடியும் என்கிறார்கள்.

வட்டித் தொகையை செலுத்த முடியாத மாணவர்கள் வங்கிகளில் தொடர்ந்து தங்கள் கல்விக் கடனைப் பெற இயலாத நிலையில், அவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்கிறது.

ஓர் அரசு போய், இன்னொரு அரசு தொடர்ந்து அதிகாரத் திற்கு வந்தால், முந்தைய அரசின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்துவிடத்தான் வேண்டுமா?

அதுவும் கல்வியிலா இந்த அரசியல் விளையாட்டைக் காட்டுவது? கல்விக் கடன் கிட்டா விட்டால் ஏழை, எளிய மக்கள் கல்லூரிப் படிக்கட்டுகளை மிதிப்பதுபற்றி கனவு காணத்தான் முடியுமா?

மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி விடயத் திலேயே பி.ஜே.பி. தலைமையிலான அரசு இந்தக் கதியில் நடந்துகொள்ளுமேயானால், மற்ற மற்ற பிரச்சினைகளில் இதன் அணுகுமுறை எத்தன்மை கொண்டதாக இருக்கும்?

இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக நிதிநிலை அறிக்கையில் 4.1 சதவிகிதம்தான் ஒதுக்கப்படுகிறது. வளரும் நாடுகளான கியூபாவில் 18.7; மலேசியாவில் 8.1; கென்யாவில் 7; தென்னாப்பிரிக்காவில் 5.2 சதவிகிதம் ஒதுக்கப்படுகின்றன. இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய நிதி ரூ.2 லட்சத்து 31 கோடி; ஆனால், பி.ஜே.பி. அரசு ஒதுக்கியதோ ரூ.2000கோடி மட்டுமே!

கல்வியைப் பாதியில் இடை நிறுத்துபவர்கள்(Dropouts) விபரம் (இந்தியா முழுவதும்)

8 ஆம் வகுப்பு வரை பெண்கள் 38% ஆண்கள் 29%

10 ஆம் வகுப்புவரை பெண்கள் 30% ஆண்கள் 22%

12 ஆம் வகுப்புவரை பெண்கள் 19% ஆண்கள் 11%

கல்லூரி பெண்கள் 10% ஆண்கள் 8%

நகர்ப்புறங்களில் கல்வியைப் பாதியில் நிறுத்துவது 13%

கிராமப்புறங்களில் 28% மாகவும் உள்ளது.

இதில் மாற்றம் வரவேண்டுமானால் கல்விக்குத் தடை பொருளாதாரமாக இருக்கக்கூடாது; அந்தத் தடையை நீக்கும் கடமை கண்டிப்பாக அரசுக்கு, அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த அந்தக் கல்விக் கடன் வழிமுறையை, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/89370.html#ixzz3GJoYyRdk

தமிழ் ஓவியா said...

கடல்நீர் உப்பு கரிப்பதின் காரணம் என்ன?


பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.

ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப் பார்த்தோம். மழை பெய்து குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்புத் தன்மையை அதிகரிக்கும்.

கடல்வாழ் உயிர்கள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கின்றன. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.

சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.

இதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டு களாக நடந்து கடல் நீரில் உப்புத் தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது.

கடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம்.

நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவமான ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/89384.html#ixzz3GJpG5A96

தமிழ் ஓவியா said...

முதலைக்கஞ்சாச் சிங்கம்!


முதலைக்கு அஞ்சாத சிங்கம் எது தெரியுமா? புளோவர் எனும் சின்னஞ்சிறு பறவைதான்.

எந்த உயிரைக் கண்டாலும் தன் வாய்க்குள் அனுப்பும் முதலை, இந்தப் பறவை வந்தால் மட்டும் வரவேற்கும் வகையில் வாய்த் திறந்து பற்களைக் காட்டுகிறது. இந்தப் பறவை முதலை வாய்க்குள் சென்று, முதலையின் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத் துண்டுகளைத் தனது ஆகாரமாக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுகிறதாம்!

என்னே, விந்தை! முதலைக்கு அஞ்சாத சிங்கம் என்று இதனைக் கூறினால் என்ன?

Read more: http://viduthalai.in/page-8/89400.html#ixzz3GJpkkmqZ

தமிழ் ஓவியா said...

ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை?

தசரா, விஜயதசமி, தீபாவளி ஆகிய ஹிந்துமதப் பண்டிகைகள் எதுவாக இருந்தாலும், அந்தப் பண்டிகைக்கான புராணக் கதையையோ, அதனுடைய தத்து-வார்த்தத்தையோ பார்ப்பதும், அல்லது அறிவியல் தர்க்கங்களையோ அலசி ஆராயாமல் எதார்த்தமாகப் பார்த்தால்கூட, இந்த ஹிந்துமதப் பண்டிகைகள் மக்கள் விரோதமான காரியங்களையே செய்துகொண்டு இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இதோ இப்போது கொண்டாடித் தீர்த்திருக்கிறார்களே? தசரா என்றும் விஜயதசமியென்றும், இதன் பயன் என்ன? ஊர்முழுதும் குப்பைமேடானதுதானேதவிர இதில் வேறென்ன இருக்கிறது? சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பண்டிகைகளின் போது, வாழை இலை, வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்டவை மங்களப் பொருட்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும். இதுபோன்ற நாள்களில் துப்புரவுப் பணியாளர்களும் பிறந்த ஊர்களுக்குச் சென்றிருப்பர். அதுவும் இந்த ஆண்டு தொடர்ந்து ஆறுநாட்கள் விடுமுறை? எப்படியிருக்கும் நகரம். இதில் அத்தியாவசிய உணவுப்பொருளான பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றைச் சூறையிடுவது என்ற பெயரில் சாலைகள் குப்பைகளால் நிரம்பி வழியும். அந்தக் குப்பைகளும் உடனடியாக அகற்றப்-படாமல் அழுகி துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கெடும். இதனால் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

நூறாண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் தொற்றுநோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்த சூழலில், மனிதநேயரான தந்தை பெரியார் தனக்கு அந்த நோய் தொற்றும் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்தார்.

சமூக மருத்துவரான தந்தை பெரியார், அந்த நோய் பரவியதற்கான காரணத்தைச் சொல்லும்போது, இந்த மாதிரி நோய் வரக்காரணம் அந்த மாதங்கள் உற்சவ காலம். பல ஊர்க்காரர்கள் வந்து ஓர் ஊரில் கூடுவது உற்சவத்தின் அறிகுறி _- கண்டபடி சாப்பிடுவது; கண்ட இடத்தில் அசிங்கம் செய்வது; வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் ஊர்களின் ஜலதாரைக் கசுமாலத் தண்ணீர் வாய்க்காலில் விழுவது; அந்தத் தண்ணீரைக் குடிப்பது; தூக்கம் கெடுவது; பாமர மக்கள் அதிகம் போக்குவரத்துக் காரணமாய் ஆங்காங்கு நோய் பற்றியும், அம்மக்கள் வழிப்பயணத்தில் அடைந்த பலவீனம் -- அசவுகரியம் காரணமாய்த் தங்கும் இடங்களில் நோய்க்கிருமிகள் பரவிப் பல வழிகளில் மக்களைப்பற்றும்படி ஆகிவிடுகிறது. (கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார்) என்று பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், இன்னமும் பெருவாரியான மனிதர்கள் மாறவில்லையே. இதோ அடுத்தொரு பண்டிகை. தீபாவளி. ஆளாளுக்கு ஒரு வியாக்கியானம். அதில் பட்டாசுகளை வெடித்து சாலைகள் மொத்தமும் சிதறிக் கிடக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் உண்டு. அந்த வெடிமருந்துடன் மழைநீரும் சேர்ந்து என்னென்ன கேடுகள் வரப்போகிறதோ? இதில் உயிருக்கும் ஆபத்துண்டு.

சுற்றுச்சூழல் கேடும் பெருமளவில் ஏற்படும். இந்த ஹிந்து மதத்தால் மக்கள் படுகிறபாடு கொஞ்சமா நஞ்சமா? சென்னையைப் போலவே பெருநகரமாக இருக்கின்ற பூங்கா நகரம், தூய்மை நகரம் என்றும் பெயர் பெற்ற பெங்களூரு, இந்தப் பண்டிகைகளால் குப்பை நகரமாக மாறியதென்று தினகரன் கர்நாடகப் பதிப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது. அதில், பெங்களூரு மாநகராட்சிப் பகுதி வசந்த் நகரில், மாதம்தோறும் 5 டன் குப்பைகள் உருவாகின்றன.

அத்துடன் வீடுகளில் சேகரிக்கப்-படும் குப்பைகள் தனியாக 2 அல்லது 3 டன்னும் சேர்கிறது. சாதாரண இந்தச் சூழலிலேயே துப்புரவுப் பணியாளர்கள் குறைந்த அளவில்-தான் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் தசரா, - ஆயுத பூஜைக்காக கிராமங்களில் இருந்து மாவிலை, வாழை இலை, வாழைக்-கன்றுகள் கட்டுக்கட்டாக குவிந்துள்ளன. மக்கள் போடுகிற குப்பைகள் தவிர, விற்பனையாகாத இதே பொருள்களை, கடைக்காரர்கள் அப்படியப்படியே போட்டு-விட்டுப் போய்விடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து 198 வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன. மலையெனக் குவிந்துவிடும் குப்பைகளை அகற்றுவதில் பணியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று மாநகராட்சி தரப்பில் கவலையோடு கூறுகின்றனர் என்று பொறுப்போடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இதனால் தூய்மை நகரம் இன்று குப்பை நகரமாக மாறியிருக்கிறது. இதுமட்டுமா? உணவுப் பொருள்கள் எவ்வளவு வீணா-கின்றன? இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் யார் எடுப்பது? கொடுப்பது? இந்தக் கணக்கு, சுகாதாரம் இவைகளில் கவனம் செலுத்தாத நாடு எப்படி உருப்படும்?

இந்தக் கேடுகளைப் பார்த்தாவது மக்களுக்குப் புத்திவரவில்லையே என்றுதான் நமக்குக் கவலையாக இருக்கிறது. கடவுள், அது தொடர்பான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றில்-தான் மக்கள் பலருக்குத் தெளிவு ஏற்படவில்லை என்றாலும், அவர்களை நேரிடையாகப் பாதிக்கின்ற இது போன்ற சுகாதார விசயத்திலாவது புத்தி கொள்முதல் ஆகாதா என்று நாம்தான் தவிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகாவில் இதையெல்லாம் சுட்டிக்-காட்டுவதற்கான வாய்ப்பாவது இருக்கிறது. இங்கு அதுவும் இல்லை. ம்.. என்ன செய்வது? மதச்சார்பற்ற அரசு அல்ல மதமற்ற ஓர் அரசு வந்தால்தான் இந்த ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை சொல்ல முடியும்! அதுவரையில் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

- உடுமலை

தமிழ் ஓவியா said...


சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.

தமிழ் ஓவியா said...

வாங்க கூட்டலாம்!

இந்திய நாட்டில் இன்னல்களே இல்லாமல் செய்யும் வல்லமை படைத்தவராக தன்னைக் கருதுபவரும் வல்லபபாய் பட்டேலுக்கு உலகத்தில் இல்லா உயரச் சிலை உருவாக்கியே தீருவேன், இந்து தேசத்தை அமைத்தே தீருவேன் என்ற உறுதிப்பாடுடன் அதற்காக மக்களைத் தன்வயப்படுத்துவதற்காக தன்னால் இயன்றமட்டிலும் தனி மனிதனாய் நின்று இடைத்தேர்தல்களில் இடுப்பொடிந்து தள்ளாடும் தன் தாமரைச் சின்னக் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நம் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நரித் தந்திரத்தில் உருவான சுவட்சா பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்) திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள நல்ல நடிகர்கள் தப்புதப்பு... மனிதர்கள் பங்கேற்றனராம்.

பரந்துபட்ட பாரத தேசத்தின் பல பகுதியிலும் பாரதத்தின் புதல்வர்களும், புதல்விகளும் அகன்ற பாரதத்தின் அழுக்கை அகற்றுவதற்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று விளக்கமாற்றைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாய் வந்துவிட்டனர்.

புதுடில்லியில் உள்ள வால்மீகி காலனிக்கு துடைப்பக் கட்டையுடன் வாளியை எடுத்துக்-கொண்டு குப்பை அள்ளுவதற்காக குழுவோடு வந்து சேர்ந்தார் புதிய நடிகர்; சாரிங்க! மறுபடியும் மறுபடியும் தப்பாவே தோணுது. டி.வி.யில உங்களுடைய படத்தையே அடிக்கடி காட்ட ஆரம்பித்துவிட்டதால் பிரதமர் என்பதே மறந்து போகுதுங்க.

துப்புரவுத் தொழிலாளிகள் வசிப்பிடத்திற்கே துப்புரவு செய்ய வந்துவிட்டார் மோடி. அதிகாலையில் மலம் அள்ளச் சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள் வீதியைப் பளபளக்கச் செய்த செப்படி வித்தைக்காரர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல உடையணிந்து வந்துவிட்டார். தெருக்களைக் கூட்டிப் பார்த்தார், தேகமெங்கும் வியர்க்க வியர்க்க. காமிராக்கள் காட்சிகளை அள்ளிக் கொண்டன. அகிலமெங்கும் காட்டத் தொடங்கின.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்தார்கள் நாட்டின் மற்ற மற்றப் பகுதிகளில். கூட்டு கூட்டு என்று கூட்டினார்கள்; பெருக்கு பெருக்கு என்று பெருக்கினார்கள். தமிழிசையும், வானதியும், உமா பாரதியும், ஸ்மிருதி ராணியும் கூட்டிப் பழகத் தொடங்கினார்கள். முடிந்த காட்சியின் முடிவுரையாக 9 பேருக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். கமலஹாசன் களிப்படைந்துபோய் தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்றார். பாவம் அவர் என்ன செய்வார்? விசுவரூபம் பாகம் 2 வெளியாக வேண்டுமே! சூர்யா சுறுசுறுப்பாக நானும் கூட்டுவதற்குத் தயார் என்றார். இவர் எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கப் பார்க்கிறார். குஷ்புவோ நானும் கூட்டுகிறேன் குப்பையை என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக அகில உலக ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி நானும் இந்த ஆட்டத்திற்குத் தயார் என்று துடைப்பத்தோடு நாட்டைச் சுத்த்த்தமாகத் துடைப்பதற்குத் தயாராகிவிட்டார்.

தமிழ் ஓவியா said...

விளக்குமாறு வியாபாரிகளோ வியாபாரத்தை பெருக்கி-யதற்காக நன்றி கூறுகிறார்கள் நரேந்திர மோடிக்கு. வீதியைக் கூட்டியது போதும் மோடிஜி. வாருங்கள்! மலத்தை மனிதர்கள் தங்களுக்கு முடிந்த இடத்தில் இருந்து வைத்து-விடுகிறார்கள். கண்ட இடத்தில் கழித்து விடுபவர்களுக்கு நமது சுவட்சா பாரத் அபியானைப் பற்றிச் சொல்லுங்கள். முன்னு-தாரணமாக நீங்களே செயலில் இறங்குங்கள். வராக அவதாரத்தை வணங்கும் தாங்கள் பூமாதேவியின் மேல் கிடக்கும் நரகலை-யெல்லாம் கூடையில் வாரிப் போடுங்கள். ஸ்டார்ட்... கேமரா ரெடி! ஆக்க்ஷன்! நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்புங்கள். 9 பேரைத் தேர்ந்தெடுத்து இதையும் செய்யச் சொல்லுங்கள். இன்னும் நாட்டில் நிறைய நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் பாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் பாருங்கள்! என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் நம் மக்கள். நாம் காட்டாத எய்ட்ஸ் விளம்பரமா? குடியின் தீமை பற்றி, சிகரெட்டின் அபாயம் பற்றி நாம் சொல்லாததா? சாலை விதிகள் பற்றி நாம் கூறாததா? தூய்மை இந்தியா இயக்கமாகட்டும், மற்ற எதுவாக வேண்டுமென்றாலும் ஆகட்டும், தனி மனிதனுக்கு தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் பொறுப்புணர்ச்சி வர வேண்டும். அதனைக் கொண்டு வருவதற்கு கேமரா முன்னால் நடிப்பதை விட்டுவிட்டு நல்லதாக தங்களிடம் உள்ள வலிமை வாய்ந்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துப் பார்த்துச் செயல்படுத்துங்கள்.

இப்படி விளம்பர வெளிச்சத்திலேயே நாட்டை ஆளும் பிரதமராக மட்டும் இருக்காதீர்கள். வாக்குகளைக் கூட்டுவதற்காகவும், பெருக்கு-வதற்காகவும் தன்னால் இயன்ற அளவு மனிதர்களின் மனதை வளைத்துப்போடும் முயற்சியில் பிரதமராகிய நீங்கள் ஒருபுறம் இறங்கியிருக்க, நாட்டின் இன்னொரு பகுதியில் தான் வந்து சென்றதற்காக கோவிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பெருக்குவதையும், கூட்டுவதையும் நொந்து போய்ச் சொல்கிறார், ஒரு மாநிலத்தின் முதல்வர்.

பீகார் மாநிலத்தின் மதிப்புமிகுந்த முதல்வர் மாண்புமிகு ஜிதன்ராம் மாஞ்சி தான் அவர். மாநிலத்தின் எச்செயலும் இவர் இசைவின்றி நடவாது.

ஆனால் என்ன செய்ய? கல்லைக் கடவுள் என்றெண்ணிக் காணச் சென்றதால் காவி உடைதரித்த பார்ப்பனர்கள் அவர் கால் வைத்த இடங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்தார்களாம்.

தமிழ் ஓவியா said...

இப்படி ஏற்கெனவே முப்படைக்கும் தலைமை அமைச்சராகப் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கும் இதேபோன்று நடந்த அவமதிப்பும் நினைவிற்கு வருகிறது.

தேவநாதன்கள் செய்கின்ற காரியத்திற்-கெல்லாம் கடவுள் சன்னதியைக் கழுவினீர்களா என்பதையும் கேட்க வைக்கிறது.

இப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறாங்க! என்று சொல்லும் ஏமாந்த நம் மக்களும் ஏமாற்றும் பார்ப்பனர்களும் இந்த தலித் முதலமைச்சருக்கு நேர்ந்த நிலைக்கு என்ன பதில் கூறுவார்கள்? நாடெங்கிலும் நமக்காக உழைத்திட்ட நல்ல பெருந்தலைவர்கள் காலத்திற்குப் பின்னும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிரான மனநிலை இன்னமும் தொடர்ந்து வெளிப்படுகிறதென்றால் இதற்குக் காரண-மான ஜாதிய வெறித்தனத்தையும் இப்படி மனிதர்களைப் பிரித்துப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளையும் அடித்து நொறுக்காமல் வேறு என்ன செய்யலாம்?

நாட்டின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யத் துடிக்கும் மோடி அவர்களே! மனதில் உள்ளுக்குள் இதுபோன்ற நீங்காத கறை-பிடித்த அழுக்குகளுடன் மனிதர்கள் உலாவு-கிறார்களே. இந்த அழுக்குகளுடன் மனிதனை உருவாக்கும் உங்கள் இந்துமதச் சித்தாந்த அழுக்குகளைக் கழுவி சக மனிதனைச் சகோதரனாய்ப் பார்க்க வையுங்கள்.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுடன் கூட்டாகப் பெற்றிருக்கின்றாரே கைலாஷ் சத்தியார்த்தி! குழந்தைகள் உரிமைகளுக்காகப் போராடி 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்திருக்கிறாரே! பல நாடுகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரை நோபல் பரிசுக்கான குழு தேர்ந்-தெடுத்துச் சொல்லும் வரை அவரை யாருக்குத் தெரியும்? இதுவரையில் எந்த செய்தி ஊடகத்திலாவது _ காட்சி ஊடகத்திலாவது அவரைக் காட்டியதுண்டா? விளம்பரமே இல்லாமல் இருந்த அவர் இன்றைக்கு விரிந்துபட்ட உலகிற்குத் தெரிந்த மனிதராய் மாறியிருக்கிறாரே! அதுதான் மனிதநேயப் பணிக்கான இலக்கணம்!

குப்பைகளை அகற்றுவதற்காக குடிசைப் பகுதிக்கு வருவதையே விளம்பரமாக்காமல் எண்ணற்ற குப்பைகளையும், ஆபாசங்களையும் அழுக்குகளையும் உள்ள உங்கள் இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தி முடிந்தால் மதக் கழிவையே கழுவி வெளியேற்றி சக மனிதனையும் சகோதரனாய்ப் பார்க்க வைக்கும், தழுவிக் கொள்ள வைக்கும் மண-உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவைக்கும் மனநிலைக்கு மாற்றமுயற்சியுங்கள்!

முதலில் சுவாட்ச் பாரத் அபியான் என்று தங்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டும் சொல்லாமல் நாட்டுடைமைத் தொலைக்-காட்சியிலும், தனியார் தொலைக்காட்சியிலும் அந்தந்த மாநில மொழிகளில் சொல்ல வையுங்கள். சுவாட்சா என்று நீங்கள் சொல்ல எங்க ஆள் உச்சா போகச் சொல்லுகிறார் என்று நினைத்து விடுவான்.

அந்நியமாகிப் போகும் எதனையும் எந்த மனிதனும் சட்டை செய்யவே மாட்டான். காந்தியாரின் கனவாகிய தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்னும் பிரதமர் அவர்களே! இதைவிடப் பெரிதாக இன்னொன்றுக்கு ஆசைப்பட்டு கனவு கண்டார் காந்தியார் அவர்கள். அதுதான் மனிதநேயமுள்ள மதச்சார்பற்ற ஒற்றுமையான சமூக நல்லிணக்க இந்தியா! அந்த அருமையான கனவினை நிறை-வேற்றுவீர்களா, காந்தியைக் காவு வாங்கிய கூட்டத்தைக் குருவாக ஏற்றிருக்கும் திருவாளர் இந்துத் தேசியவாதி மோடி அவர்களே!

- இசையின்பன்

தமிழ் ஓவியா said...

தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நாட்டில்?



தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெரு நாள்... இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை

- அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு - பக்கம் 433-434).

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே தீபாவளி நமது விழாவா? இப்பொழுது சொல்லுங்கள்!

இடையில் புகுத்த இந்த இடைச்செருகல் எப்படி நமது விழாவானது? ஒரே ஒரு கணம் சிந்தித்து புறக்கணிப்பீர்! புத்தியைப் பயன்படுத்துவீர்!

பொருள் இழப்பைத் தவிர்ப்பீர்!
பொழுதை வீணாக்காதீர்!

ஆரியர் திராவிடரை வீழ்த்திய நாளை திராவிடர்கள் கொண்டாடலாமா? கொண்டாடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/89516.html#ixzz3GVYwxxh1

தமிழ் ஓவியா said...

அட்ரா சக்கை; அட்ரா சக்கை!!!


- குடந்தை கருணா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக் கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மூட்டை கட்டிக் கொண்டு வரு வோம்; அந்தப் பணத்தை களவாடி வைத்திருக்கும் பெயர்களை வெளி யிடுவோம் என இந்தியில் நீட்டி முழக்கமிட்டவர் இப்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களில் கருப்புப்பணத்தை வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவோம் என மேடைகளில் சூளு ரைத்தவர். அன்றைய பாஜகவின் தலைவரும், இன்றைய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்.

தனது டிவிட்டரில், காங்கிரசு ஏன் கருப்புப்பணத்தை கொண்டு வரத் தயங்குகிறது? ஏனென்றால், அது யாருடையது என்று அவர்களுக்குத் தெரியும்; எங்கள் ஆட்சி வந்தவுடன், பைசா முதல் கொண்டு, வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என தேர்த லுக்கு முன், மார்ச் 30, 2014-ல் தனது டிவிட்டரில், நரேந்திரமோடி அளந் தார்.

நம்மாளும், இதை படிச்சுட்டு, ஆகா, வந்துட்டார்யா, யோக்கியர். இவருக்கு வோட்டு போட்டா, எல்லா கருப்புப் பணமும் இந்தி யாவுக்கு வந்துடும். இங்கே, பஞ்சமே இருக்காது. யாரும், வரிக்கூட கட்ட வேண்டியிருக்காதுன்னு, அவரோட அல்லக்கைகள் மேடைபோட்டு முழங்கின. இப்போது, அதைச் சொல்லி ஆட்சிக்கும் வந்தாச்சு; இப்போ என்னாச்சு. நேத்து, நிதி மந்திரி சொல்றார். பெயரெல்லாம் சொல்லக் கூடாது; சொல்ல முடியாது. ஏன்னா, அப்படித்தான் ஒப்பந்தம் போட்டிருக்காங்க.. இது பத்திரிக்கையாளர் கிட்டே அப்படின்னு அவர் சொல்லிட்டார்.

இதுமட்டுமில்லை; உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகட்கி, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை வெளியிட முடியாதுன்னு சொல்லிட்டார். காரணம், ஜெர்மனியோட போட்ட ஒப்பந்தம்னு சொன்னார். முந்தைய காங்கிரசு ஆட்சியிலே, இதே காரணத்தை சொன்னப்ப, ஏத்துக் காத உச்ச நீதிமன்றம், இப்ப, அதே காரணத்தை ஏத்துக்கிடுச்சே.

இந்தக் கருத்தை, மூத்த வழக் குரைஞர் ராம் ஜெத்மலானி கடு மையா சாடியிருக்கார். இந்த மாதிரி கோர்ட் டுலே, குற்றவாளிகள்தான் சொல்லி யிருக்கனும். ஆனா, அரசே சொல் லுதேன்னு, கடுமையா அறிக்கை விட்டிருக்கார்.

அதைவிட இன்னும் சிறப்பு; நம்ம அட்டார்னி ஜெனரல், பத்திரிக்கை யாளர்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? வெளி நாட்டில் துவங் கப்பட்டுள்ள இந்தியர்களின் எல்லா கணக்கிலும், கருப்புப்பணம்தான் இருக்கும்னு சொல்லமுடியாது; அப்படி கணக்கை துவங்குறது குற்றம்னு சொல்லமுடியாது; இதைப் பிரிச்சு, எது நல்ல கணக்கு, எது கருப்புக் கணக்குன்னு பார்த்து, அப் புறம்தான் சொல்லமுடியும்னு சொல்லிட்டார்.

அட்ரா சக்கை; அட்ரா சக்கை;

ஆக, இப்போதைக்கு, ஒன்னும் ஆகாதுங்கறது நல்லா தெரியுது.

Read more: http://viduthalai.in/page-2/89528.html#ixzz3GVa2preE

தமிழ் ஓவியா said...

பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்போம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எஸ். இரவி ஆகி யோர் ஒரு முக்கியமான கருத்தினைத் தெரிவித்தனர். பெண்களின் திருமண வயதினை 18லிருந்து 21ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் கருத்தாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் களைகட்டத் தொடங்கின. நல்ல கருத்து என்று ஒரு தரப்பிலும் தேவையில்லாத கருத்து என்று இன்னொரு தரப்பிலும் ... அலசப்பட்டும் வருகிறது.

இப்பொழுது ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்குத் திருமண வயது 18 என்றும் சட்டம் இருக்கிறது.

ஒரு காலத்தில் பெண்கள் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சாஸ்திர நம்பிக்கை இருந்ததுண்டு. பெண்கள் திருமண வயதை 13க்குக் கீழ்ப்படாமலும் 14 வயதுக்கு மேற்படாமலும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று சர் அலக்சாந்தர் முட்டிமன் ஒரு மசோதாவை அரசு சார்பில் கொண்டு வந்து 1925இல் நிறைவேற்றப்பட்டது.

வைதிகப் பார்ப்பனர்கள் பொதுவாக பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது என்பதில் பிடிவாதமாகவே இருப்பர். ஒரு பெண் ருது ஆவதற்கு முன் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பராசரர் கூறுகிறார். உங்கள் சட்டமோ அதற்கு மாறாகக் கூறுகிறது. நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர, ஒருக்காலும் சாஸ்திரத்தை மீறி ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல மாட்டோம் என்று கூறினார்கள் என்றால் நம் நாட்டின் சனாதனமும், வைதிகமும் எத்தகைய பிற்போக்குக் குணம் கொண்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இப்படி பால்ய வயதில் கல்யாணம் செய்து வைப்பதால் சிறு வயதிலேயே பெண்கள் கருத்தரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, நோயின் வடிவமாகக் காட்சி அளிப்பது குறித்து மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்து பல பிரசவ மருத்துவமனைகளையும் நேரில் கண்டு, கண்ணீர் வடித்துள்ளார்; அது மதர் இந்தியா என்ற நூலாகவே வெளி வந்தது.

9வயது சிறுமி கல்யாணமான மறுநாள் இடது கால் எலும்பு பிசகி விட்டது. கருப்பை கவிழ்ந்து விட்டது, உள்ளே புண்; 10 வயது சிறுமி; நிற்கக் கூட சக்தி இல்லை. பெண் குறியில் புண் உண்டாகி ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

இன்னொரு 9 வயது சிறுமி; பெண்ணின் உறுப்பில் அதிக ரணம், இவளைத் தவிர இவள் புருஷனுக்கு இரண்டு மனைவிகள்; ஏழு வயது சிறுமி; சிற்றின்ப விஷயத்தில் புருஷனுடைய கொடுமை பொறுக்க முடி யாமல் உயிர் துறந்தார் என்று மேயோ எழுதியுள்ளார்.

இந்து - வைதிகத்தின் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டித் தாண்டித்தான் பெண்களுக்குத் திருமண வயது 18 என்று உயர்த்தப்பட்டது.

பெண் கல்வி என்பது நாளும் வளர்ந்து வருகிறது. 18 வயதில் திருமணம் என்று சொன்னால், அனேகமாக +2 என்கிற அளவில் அந்தப் பெண் கல்விக்கு மூடு விழா செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு பட்டப் படிப்பு ஒரு பெண் பெற வேண்டுமானால் கண்டிப்பாக 21 வயதை நெருங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண்டுமானால் இன்னும் கூடுதல் ஆண்டுகள் கூடத் தேவைப்படும்.

இந்தச் சூழலில் பெண்கள் வயது 18லிருந்து 21ஆக உயர்ந்தப்படுவது அவசியமும், நியாயமும், நேர்மை யுமாகும். பெண் என்றால் ஆணைவிட குள்ளமாக இருக்க வேண்டும். கணவனைவிட பெண் அதிகம் படித் திருக்கக் கூடாது; ஆண் சம்பாத்தியத்தை எதிர்ப்பார்த்து மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தான் பெண்ணின் திருமண வயதுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதைத் தான் கூறுகிறார். கணவனைவிட மனைவி அதிகம் படித்து அதிக வருவாய் உடையவராக இருந்தால் ஈகோ ஏற்படும் - எனவே அத்தகைய மனைவிகளை விட்டு வெளியேறுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறவில்லையா?

இந்தப் பிற்போக்குத்தனங்களைப் பெண்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல; மேலாகவும் படிக்க வேண்டும்; பொருளாதாரத்தில் தன் காலில் நிற்க வேண்டும்; அந்தச் சூழல் வருமேயானால் பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தும் கொடுமை ஒழியும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

எனவே மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத் திற்கு மாநில, மத்திய அரசுகள் பச்சைக் கொடி காட்ட வேண்டும் மகளிர் அமைப்புகளும் இதனை வரவேற்க முன் வர வேண்டுமென்று கேட்டுக கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/89522.html#ixzz3GVaAWkwh

தமிழ் ஓவியா said...

சுப்பண கவுண்டர்


கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர் கே. சுப்பண கவுண்டர் அவர்கள் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் அதிகப்பற்றுள்ளவராயிருந்தாலும் தீண்டாமை, வருணா சிரமம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்பதில் உண்மையாகவே பற்றும், உண்மையான ஊக்கமும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஒரு வேளாளப் பெரியாராவார்.

இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது தோட்டத்துக் கிணற்றில் ஆதி திராவிடர்களைத் தண்ணீர் எடுக்க அனுமதித்ததினால் ஊரார் இவரைப் பகிஷ்காரம் செய்து இவர் வீட்டு வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள்களைப் போகாவொட்டாமல் தடுத்து விட்டார்கள்.

இதனால் வெளியூர்களில் இருந்து ஆள்கள் தருவிக்கப் பட்டு திரு. கவுண்டர் அவர்களின் குடித்தனம் கிரமமாய் நடைபெற்று வருகின்றதோடு அநேக அறிவாளிகளும், சில மிராசுதாரர்களும் திரு. சுப்பண கவுண்டருக்கு அனுகூல மாகவும் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

ஆனாலும், மூடப்பழக்கவழக்கங்களைக் கையாளும் அஞ்ஞானி களாயுள்ள சிலர் அந்த ஜாதிப் பெரியார்களான பட்டக்காரர்கள் என்பவர்களுக்குக் கடிதம் எழுதி கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களைச் சாதியைவிட்டு நீக்கும்படி கேட்டுக் கொள்வதாகப் பயமுறுத்துகின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் பட்டக்காரர் கனவான்கள் துணிந்து முன் வந்து அஞ்ஞானிகளுக்கு ஞான உபதேசம் செய்து இக்கால நிலைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றவண்ணமே நடந்து மக்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும் கிடைக்கும்படி செய்வதன்மூலம் தங்கள் பட்டத்திற்கும், ஸ்தானத்திற்கும் பெருமை விளைய செய்வார்கள் என்றே கருதுகின்றோம். கடைசியாக இவ்வளவு மேலான ஒரு காரியத்தைத் துணிந்துமேற்போட்டுக் கொண்டு செய்த திரு. சுப்பண கவுண்டர் அவர்களையும், இவ்விஷயத்தில் அவருக்கு உதவி செய்து துணையாய் இருக்கும் மற்ற கனவான்களையும் போற்றிப் பாராட்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbi0Lpk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று;

இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை.

இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbpO59D

தமிழ் ஓவியா said...

மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜூன் 6, 7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்டதென்று தெரிவிக்க வேண்டியதாகி விட்டது.

ஏனெனில், மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும், மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.

ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன் பின்னாகவாவது நடத்தி விடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களும் மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார் நாடார் முதலியவர்களும் வெகு மும்முரமாகவே மகாநாட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டு வருகின்றார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVcDkV8T

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு.எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதாரகுமாரர். அவர் எம்.ஏ., பி.எல்., படித்துப் பட்டமும், சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர்.

ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும் தனது சம்பாதனையையும் விட்டு வெளியேறி சிறைச் சென்றவர். இவர் சிறைச் சென்ற காலம் எது என்றால், இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மருமகனை போல் அளவுக்கும், தகுதிக்கும் மீறின மரியாதைகளும், சுக போகங்களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது.

திரு. இராமநாதன் அவர்கள் தலையில் கூடையும், கையில் மண்வெட்டியும் கொடுக்கப்பட்டு தெருவில் ரோடு போடும் வேலை செய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்ப்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல், தனி அறையில் அதாவது கூனுகொட்டடியில் போட்டு மக்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர்.

இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்டசபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். தவிர, சென்னை மாகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர தமிழ் , கேரளம், கர்நாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாகக் காரியதரிசியாகவும் இருந்தார்.

திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்தியவர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர் இவ்வளவும் அல்லாமல், யாதொரு சுயநலப் பிரதிப்பிரயோஜனமும் எதிர்பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ்வியக்கத்தில் உழைப்பவர்.

அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும், குளறுபடியும், சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கி யானமும் இல்லாமல் மிகத் தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே, இப்படிப்பட்ட ஒருவர் இந்து மகாநாட்டுக்குக் கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு உண்மை யான வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - சொற்பொழிவு - 12.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89545.html#ixzz3GVcU9gBT

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


சென்னை, அக்.18_ அய் ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலி கள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடு தலைப்புலிகள் மீது விதித் திருந்த தடையைத் தற் போது விலக்கிக் கொண் டிருக்கிற அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக் கைகளையும் விமர்சித்துள் ளது.

இந்திய அரசு, இலங் கைப் பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறை களைக் கொண்டிருக் கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்து களில் நம்பிக்கை இல்லை என்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர். விடுதலைப் புலிகள்மீது சிங்கள அர சும், இந்திய அரசும் எவ் வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என் பதை இதிலிருந்து சர்வ தேச சமூகத்தால் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகு வாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட் டுமே கேட்கிற வாய்ப் பைப் பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலி களுக்கு எதிரான முடி வெடுக்கும் நிலையும் உரு வாகிறது. சிங்கள அரசுக் குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலி களுக்கு எதிரான அவ தூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது.

அதனடிப் படையில், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடு தலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வ மாக விசாரணை நடத்தி யதில் அய்ரோப்பிய ஒன் றியத்தின் நீதிபதிகள் அக் கருத்தை மாற்றிக் கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதுடன், புலி களின் மீது ஒரு புதிய பார் வையை ஏற்படுத்தும் என் றும் நம்புகிறோம். அய் ரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த வரி சையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண் டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக் கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக் கிறது.

அத்துடன், விடு தலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. _ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89531.html#ixzz3GVcl7000

தமிழ் ஓவியா said...

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page2/89472.html#ixzz3GVdyJIZk

தமிழ் ஓவியா said...

மும்பையைத் தொடர்ந்து பெங்களூருவிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ற விளம்பரம்


2013 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டிட நிறுவனம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரமிட்டு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு புறப் பட்டதும் இவ்விளம்பரத்தை நீக்கி விட்டது. தற்போது பெங்களூருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வேதிக் ஆசிரமம் என்ற பெயரில் ஒரு குடியிருப்புத் தொகுப்பு வீடுகளைக் கட்டிவருகிறது. இதன் விளம்பரத்தில் வேதிக் ஆசிரம வீடுகள் பார்ப்பனர்களுகாக உருவாக்கப்பட்டது என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக் கப்பட்டுள்ளது.

பெங்களூரு--அய்தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 1200 தொகுப்பு வீடு களைக் கொண்ட வேதக்கிராமத்தை தனியார் நிறுவனம் ஒன்று கட்டி வரு கிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப்பகுதி முழுவதுமே தொகுப்பு வீடுகளைக் கட்டி வருகிறது, இச்செயற்கை கிராமம் பார்ப் பனர்களுக்கு மாத்திரமாம்.

இது குறித்து இந்த கட்டுமான நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ராவ் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பார்ப்பனர் என்பது சாதியல்ல; அது ஒரு நல்ல எண்ணஓட்டம் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் குறியீடாகும். இதை பார்ப்பன சாதி என்று பார்க்காமல் பார்ப்பன அய்டியாலஜி (சித்தாந்தம்) என்று கூறுவதுதான் சரியானது. மேலும் இது போன்ற செயற்கை கிராமங்களின் மூலம் சமூகத்தில் எந்த சச்சரவும் இல்லாமல் அமைதியான சூழலில் வாழும் நிலையை நாம் உருவாக்க முடியும். தற்போதுள்ள சூழலில் அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு சிந்தனை கொண்ட வர்கள் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதனால் அங்குள்ள வர்களின் பழக்கவழக்கங்களினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இது போன்ற தனிக் குடியிருப்புகள் கட்டும் போது சச்சரவற்ற நிலையில் அமைதியான சூழலில் வாழ வகை யுண்டு. இதனால் பல நன்மைதான் உண்டு, வேண்டுமென்றால் பல்வேறு பிரிவு மக்கள் அவர்களுக்கு என்று குடி யிருப்புகளைக் கட்டிக்கொள்ளட்டும், இதில் எங்கும் பாகுபாடு என்ற பேச்சிற்கே இடமில்லை, ஒரே எண்ண ஓட்டம் கொண்டவர்கள் ஓரிடத்தில் வாழ்வது எப்படி பாகுபாடு ஆகும்? அடுத்தடுத்து இது போன்ற செயற்கைக் கிராமங்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் போது சமூகம் அமைதியான சூழலில் வாழும் நிலை ஏற்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே 90 சதவீத வீடுகள் விற்றுத் தீர்ந்து விட்டன இதுவே எங்களின் திட்டத்திற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/89475.html#ixzz3GVeHrlS9

தமிழ் ஓவியா said...

பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்திய பொதுபலசேனா

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொதுபலசேனா இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் கீழை நாடுகளில் உள்ள பல்வேறு பவுத்த இயக்கத்துடன் பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு வைசாக் அன்று இலங்கையில் பவுத்த இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு ஒன்று நடத்தவிருப் பதாகவும் செய்திகள் வந்தது.இதில் முக்கியமான அமைப்பு ஒன்று தானாகவே முன்வந்து கரம் கோர்த்துள்ளது, அந்த அமைப்பு கடந்த ஆண்டு பர்மாவில் உள்ள ரெஹிங்கோ இஸ்லாமிய கலவரத்தில் மறைமுகத்தொடர்பு கொண்ட மியன்மா 969 அமைப்பு என்ற அமைப்பாகும்.தெற்காசியப்பகுதியில் சமத்துவமற்ற அமைதியற்ற சூழலை உருவாக்க பொதுபலசேனா தயாராகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் பகுதிகளை இணைத்து அகண்ட பாரதம் என்ற கனவு காண்கிறேன், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று கூறுகிறார். அதாவது தற்போது சில பழமைவாதக் குழுக்களால் மேற்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதியில் அமைதி குலைந்து இருப்பது போன்ற சூழ்நிலையை தெற்காசியாவிலும் உருவாக்க முனைவது இவர்களின் பேச்சிலும் போக்கிலும் நன்றாகத்தெரிகிறது. முக்கியமாக 2009 இலங்கையில் போர் முடிந்த பிறகு பொதுபலசேனா ஒரு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இதர மதத் தவர் சிங்கள நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேரடியாக மிரட்டும் தொனியில் அறிக்கை ஒன்றை விட்டிருந் தது. அன்றிலிருந்தே இலங்கையில் இஸ்லாமியர் மீதான விரோதப்போக்கு மெல்ல மெல்ல அதிகரித்து 2013- அக் டோபரில் கலவரத்தில் முடிந்தது.

அதா வது இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் பொதுபலசேன இரண்டும் சிறுபான்மை மதத்தினருக்கு ஒரு அச்சுறுத்தலை தெற்காசியப்பிராந்தியத்தில் உருவாக் குவதை விரும்புகிறதோ என்றே தோன்று கிறது. ஒரு பழமைவாத மத அமைப்பிற்கு மற்றொரு பழமைவாத மத அமைப்பு என்றுமே ஒரு தீர்வாக இருக்காது. போட்டிக்கு போட்டி என்பது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி பிராந்தியத்தையே அச்சத்தில் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதை நாம் மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளில் கண்டு வருகிறோம். அங்கு அளப்பரிய எண்ணெய் வளம் இருப்பதால் பிற நாடுகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இங்கே அழிந்து வரும் இயற்கை வளம் மற்றும் மூடப்பழக்கங்களில் உழலும் மக்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் இப்பழமை வாதிகளின் போக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும். பொதுபல சேனாவின் இந்த வெளிப் படையான அறிக்கைக்கு இந்துத்துவத் தலைவர்களின் சிலர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். முக்கியமாக சுப்பிர மணிய சுவாமி மற்றும் சில வட இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் இலங்கையில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதே போல் தமிழ் நாட்டில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பாகிஸ் தானின் உளவாளிகள் என்று பத்திரி கையில் செய்திகள் வெளியாகின. மோகன் பகவத்தின் அக்டோபர் 3-இல் பேசிய பேச்சில் தெளிவாக இரண்டு வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிர வாதிகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலிகள் இன்றும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை தொடரத் தயாராக இருக்கிறார்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த செப்டம்பர் முதல் வாரம் செய்திவெளியிட்டிருந்த்து.

அதாவது இலங்கையில் பாதுகாப்பு மாநாடு நடந்து கொண்டு இருக்கும், போது இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தீவிரவாதிகளின் நடமாட் டம் இருக்கிறது, புத்தமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வைக்கப்பட்டால் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் இருக்கும் தேரவாத புத்தம் என்பது பார்ப்பனிய வகைப்பட்ட புத்தவாதம். இன ஒதுக்குதலையும், இனவெறியையும் உள்ளே வைத்து செயல்படும் பவுத்தம் உன்மையான பவுத்தமல்ல. இங்கே தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கரின் பெயரைக்கூறி சில சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பதுவும், தேசியம்-பாரதம்-இந்துப்புனிதம் என்று பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். இதில் ஒரு புறம் தமிழர்களை இந்துத்துவ மயமாக்க முற்படுவதும், மறுபுறத்தில் பவுத்த பேரினவாதத்திற்கு துணை போவதும் கவனிக்கப்படவேண்டியவை. இவ்விரண்டு பேரினவாத அமைப்பு களின் முக்கிய நோக்கம் தமிழர் அழிப்பு என்பதில் மய்யம் கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது இத்தனை நாட்களாக தனித்தனியாக இயங்கிவந்த மதவாதக்குழுக்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கையில் வந்த பிறகு பிராந்தியத்தையே தங்கள் கைவசம் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கி விட்டது.

Read more: http://viduthalai.in/page2/89476.html#ixzz3GVePkkBC

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....

போடி ஜே.கே. பட்டியில் சுந்தரபாண்டியன் என்பவர் திடீரென்று இறந்து போகவே கண்தானம் வழங்க சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனே ரகுநாகநாதனுக்கு போன் பண்ணுங்க.. எனக் கூறியது வியப்பாக இருந்தது. அவர்களிடம் கேட்ட போது.... இறந்த பின்பும் உயிர் வாழத்தான் கண் கொடை என்றனர். சிறிது நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வீட்டிற்கு வந்தனர். சற்று நேரத்திலே அறுவை சிகிச்சை செய்து சுந்தரபாண்டியன் கண்களை கொண்டு சென்றனர். சரி ரகுநாகநாதன் யார் என்று கேட்டபோது, போடி பி.எச். ரோட்டில் குருதி, விழி, உடல் கொடைக் கழகம் நடத்தி வருகிறார்.

இனி ரகுநாகநாதன்....

இருக்கும்போது நாம் பலருக்கு உதவியாக இருக்கின்றோம். இறந்த பின் மண்ணுக்கு உரமாவது தவிர வேறு பயன் ஒன்றும் தருவதில்லை. ஆனால், இறந்த பின்பும் நம் உடல் உறுப்புகள் உடல் வாழ்வதற்கும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித உடல் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நோக்கம் பிடித்துப் போனதால் குருதி விழி, உடல் கொடைக் கழகம் என்ற பெயரில் குருதி, கண், உடல் உறுப்புகள் கொடை பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்றார். இறந்த பின்பும் பிறர் உயிர் வாழ விழி, உடல் கொடை செய்ய ரகுநாதகநாதனை தொடர்பு கொள்ள - 98421 20321.

Read more: http://viduthalai.in/page2/89481.html#ixzz3GVf9hbPq

தமிழ் ஓவியா said...

அரசியல் கட்சிகளுக்கு புதிய கடிவாளம்


அரசியல் கட்சிகளின் நிதி, தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அன்று பிறப்பித்த உத்தரவின் நெறிமுறைகளில்,

* அரசியல் கட்சியின் பொருளாளர், தனது கட்சியின் வரவு, செலவுக் கணக்குகள் அடிமட்ட நிலைகளிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பராமரிக்கப்படும் ஆண்டுக் கணக்குகள், தகுதியுடைய கணக்குத் தணிக்கையாளர்களால் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ ரொக்கமாக வழங்கக்கூடாது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது.

* வேட்பாளருக்கான தொகையை வங்கிக் கணக்கு மூலம் காசோலையாகவோ, வரைவோலையாவோ மட்டுமே வழங்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்து சான்றொப்பம் அளித்த ஆண்டு வரவு-செலவு தொடர்பான அறிக்கைகளை, தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மாநிலத் தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலான புதிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டன. இந்தப் புதிய நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read more: http://viduthalai.in/page2/89484.html#ixzz3GVgEciHS

தமிழ் ஓவியா said...

வெற்றிக்கு ஒரே ஒரு பாதை அல்ல; பல உண்டு

நாம் அனைவரும் அன்றாடம் நமது நலம் விரும்பிகளான பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்ப ஆலோசகர்கள் என்ற பலரும் கடுமையாக உழைத்தால், பொறுப்பான வகையில் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், எதையும் உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நம் வீட்டுக் கதவைத் தட்டும் என்று கூறுவர்.

கேட்டுப் பழகிய காதுகள் நம் முடையவை; இதனை ஏற்று, அதனைப் பின்பற்றி நாளும் சோர் வறியாமல் உழைத்து வெற்றிக் கனியைப் பறிக்கின்றவர்கள் பல ருண்டு, உண்மைதான்.

ஆனால், இந்த மாதிரி ஒரே வழியைப் பின்பற்றாமல் - பல்வேறு சூழ்நிலைகளாலும் - நெருக்கடி - நிர்ப்பந்தங்களாலும் வழமையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வாய்ப்பில்லாதவர்களிலும் பலர் வெற்றிப் படிக்கட்டுகளின் மீதே ஏறி நின்று, மற்றவர்களுக்குத் தாங்களும் கூட எடுத்துக்காட்டானவர்கள் - ரோல் மாடல்கள் தான் என்று காட்டுபவர்களும் உண்டு என்பதை நாம் மறந்திடக் கூடாது.

பள்ளிக்கூடம், கல்லூரிப் படிப்புகளை முழுமையாக முடிக்காமல், பெரிய பெரிய ஆய்வுப் பட்டங்களான முனைவர், அதற்கு மேல் உள்ள பட்டங்களைப் பெறாதவர்கள் உலகில் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சாதனையாளர்களாக நம் காலத்திலேயே திகழ்கிறார்களே, அவர்கள் பெற்றது பெரு வெற்றி அல் லாமல் வேறு என்ன?

கணினித் துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கும் மைக்ரோசாஃப்ட் (“Microsoft’’) நிறுவனர் பில்கேட்ஸ் இடையில் கல்லூரிப் படிப்பை நிறுத்திய ஒரு(Dropout) தானே!

அவர் எத்தனைப் பெரிய பில்லியனர்! அவரும் அவரது வாழ்விணையர் மிலிண்டா பில்கேட்ஸ் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக்கி, அந்தப் பொருளை, உலகின் கொடிய நோயான எய்ட்ஸ் (Aids நோயை ஒழிக்க மிகப் பெரிய அளவில் ஓர் இயக்கத் தினையே நடத்துவதன் மூலம்; உலகின் தொண்டறச் செம்மல்களாக உயர்ந் துள்ளனர்!

அதுபோலவே, அதிகம் படிக்காத, கடவுள் நம்பிக்கை அற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவன - உரிமையாளர் ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன Ph.D. பட்டமா வாங்கியவர்?அவர் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் வேலைக்கு மனு போட்டால் அவரை நமது கல்வி அமைப்புகள் விரிவுரையாளர் பதவிக்குக்கூட தேர்வு செய்ய மாட்டாவே! இதுதான் இன்றைய படிப்பறிவுக்கும், பட்டறிவு - சுதந்தரச் சிந்தனைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளி!

ஆப்பிள் - 6, ஆப்பிள் 6 - பிளஸ், என்ற அண்மையில் வெளியான புது வகைக் கைப்பேசிகள் செல்போன் களுக்கு உலக சந்தையில்தான் எவ்வளவு கிராக்கி! காத்துக்கிடந்து போட்டி போட் டுக் கொண்டு அதனை விலை கொடுத்து வாங்குவதில் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி - அதுவும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சியில் முந்தியுள்ள நாட்டினரும்கூட! இந்த வெற்றியின் ரகசியம் எதில் உள்ளது?

புரட்சிக் கவிஞர் சொன்ன இரு வரிகளில் உள்ளது என்பது நமது எளிய கருத்து.

அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு உலகை!

ஒவ்வொரு முறை மாற்றம், புதுமைக்குமேல் புதுமை செய்திட்ட நிலை - கவிஞரின் வரிகளுக்கு சான்று அல்லவா?

எனவே தேர்வில் அதிக மதிப் பெண் பெறவில்லை அல்லது முதல் முயற்சியிலேயே வெற்றிகிட்டிட வில்லை என்று மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முயற்சி அல்லது உலகமே இருண்டு விட்டது போன்ற கற்பனையின் உச்சி, விரக்தியின் விளிம்புக்குச் சென்று, வெறுப்பினால் மன உளைச்சல் எதுவும் கொள்ளாமல் வெற்றிக்கான இந்தக் கதவு மூடினால், இன்னொரு திறக்கப்படும் கதவைக் கண்டு வாழ்வினை வெளிச்சம் உள்ளதாக ஆக்கி, விரக்தி இருட்டை விரட்டி அடித்து, வெள்ளி முளைப்பதைக் கண்டு, வீறு நடை போடுவோம் என்று எழுந்து நடவுங்கள் - துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை அள்ளி அணையுங்கள்!



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/89429.html#ixzz3GVgtoi7F

தமிழ் ஓவியா said...

ஜோதிடமும் - அறிவியலும்


சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொது வாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம்பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்.

- விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViQLMZc

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை

கடவுள் என்பது திருடர் களின் இரதத்திற்காக செய்யப் பட்ட கடையாணிப் போன்றது. - தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத் திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே. - பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான

கடவுளைப் படைக்கத் தெரியும். - ஒரு மேனநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே - வால்விச்மன்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViXNuyR

தமிழ் ஓவியா said...

பிராமணன் கடவுள்!

புருஷ சரீரம் பரிசுத்தமாயிருக்கிறது. அதில் நாடிக்கு மேல் பாகம் அதிக பரிசுத்தமானது. ஆகையால் பிர்மாவின் முகம் அதிகம் பரிசுத்தமாயிருக்கிறது. பிர்மாவின் முகத்திலிருந்து ஜனித்ததாயிருப்பதாலும், மற்ற ஜாதி களுக்குத் தருமத்தை உபதேசிக்க வேண்டியிருப்ப தாலும், வேதத்தைத் தரிப்பதாலும் இவ்வுலகில் பிராமணன் கடவுள் ஆகிறான்

- மனு தர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 92, 93
(பார்ப்பான்தான் கடவுளைக் கற்பித்தான் என்பது விளங்க வில்லையா?)

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GVidXOJJ

தமிழ் ஓவியா said...

மதத்திற்கு எதிராக..

தன்னுடைய அடிமைத் தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந் தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான்.

தொழிற்சாலை அமைப் பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான். சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான்.

இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது.

மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVitM4QG