Search This Blog

2.10.14

அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது-பெரியார்

அரசியல் வாழ்வு!


அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது. அரசியல் போட்டி என்பது மிகமிகக் கீழ்த்தரத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது.

இவை நம் பின் சந்ததிகளைப் பாழாக்கி விடும் போலத் தெரிகிறது.

இன்றைய மாணவர் சமுதாயத்திற்கு, கிளர்ச்சி - அதாவது சட்டம், அமைதி, ஒழுங்கு தன்மைகளை, அலட்சியமாய்க் கருதிப் போராட்டம் நடத்துவதைத் தான் உற்சாகமாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மனிதப் பண்பு பற்றிய கவலையோ, கல்வியைப் பற்றிய கவலையோ, சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இதற்கு அரசியல் போட்டியாளர்களே காரணமாவார்கள்.

ஜனநாயகம் என்பது தான் இதற்குக் காரணம் என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது.


சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலிய காரியங்கள் நம் நாட்டில் முதல் முதல் அரசியலின் பேரால் தான் துவக்கமானதாகத் தெரிகிறது. இதற்குக் காரணஸ்தர்கள் பார்ப்பனர் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோல் மனுதரும சாஸ்திரம் தான்.

பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாகத் தான் இருந்து வரும். பொதுவாகச் சொல்லப்படுமானால், அரசியலில் காலித்தனம் புகுத்தப்பட்டது. முதல் முதல் சிப்பாய்க் கலகத்தின் போது என்றாலும், நாம் அறிய வங்காலப் பார்ப்பனர்களால் தான் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அரசியல் காலித்தனம் பொது மக்கள் செயலாக ஆக்கப்பட்டது காந்தியால் தான் என்று சொல்லலாம்.

சட்டசபைகளில் காலித்தனம் என்பது சத்தியமூர்த்தி அய்யர், மோதிலால் நேரு முதலிய பார்ப்பனர்களாலேயே ஆகும். சட்டசபையின் கவுரவமும் ஒழிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் பக்தர்கள் (காலிகள்) என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம் கொடுத்தவர்கள் பார்ப்பனப் பத்திரிக்கைகளே ஆவர்.

பொதுவாழ்வில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கம் குறைந்ததுடன் அவர்கள் காலித்தனத்தை வளர்த்து, நாட்டில் அமைதியையும், பொது ஒழுக்கத்தையும் பாழாக்கிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்களில் மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்றும், அருகதையும் உள்ள பெரிய மனிதர்கள் என்பவர்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியோரையே பெரிதும் வேட்டையாடி விளம்பரம் கொடுத்து உண்மையில் பெருமையும், கவுரவமுள்ள பெரியவர்கள் என்பவர்களை எல்லாம் மூலையில் ஒடுங்கும்படிச் செய்துவிட்டார்கள். நல்ல பாரம்பரியத்தின் மதிப்பை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.


மனிதர்களின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், பண்பைப் பற்றிக் கவலைப்படவில்லையானால், மனித சமூதாயத்திற்குப் பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்?

சமதர்மம் பேசுகிறோம், எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்பட்டாலும் நம் சமுதாயமும், நாடும், பொது உடைமைச் சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும் வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவார்கள்; மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்துதான் தீருவார்கள்; எஜமான் - வேலைக்காரர்கள் இருந்து தான் தீருவார்கள்; இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத்திட்டம், ஒழுங்கு முறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்தேற முடியும்?

மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்கிறது. இதில் மற்றவன் தனது பலாத்காரத்தைப் பயன்படுத்தி உரிமை பெறுவதென்றால், கையில் வலுத்தவன் பயனடைவது என்றால் மனித சமுதாயத்தில் அமைதியும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும்?

காந்தி, பார்ப்பானுக்குக் கூலியாகவும், பொறுப்பற்ற மனிதனாகவும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டிததனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டிவிடுவதில்  உற்சாகமாக இருந்து விட்டார்.

இன்றைய தினம் அறிவில்லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறி பெருமை அடைகிறார்களே ஒழிய, இன்றைய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்பதே இல்லையே!


கட்டுப்பாடும், சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கி விட்டு ஜனநாயகத்தையும் ஏற்படுத்திவிட்டால் - எந்தக்குணம் எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சிதான் நிலவும். "தொழிலாளர் தொல்லை," "கூலிக்காரர்கள் தொல்லை" இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டியாக உள்ளனர்.

இந்த நிலையில் சமதர்மம், ஜனநாயகம் என்றால் நாடும் - மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

ஆகவே நமது "அரசியல் வாழ்வு" என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்.



------------------------- தந்தைபெரியார் ----------31.01.1969 அன்று 'விடுதலை'யில் வெளிவந்த தலையங்கம்.

81 comments:

தமிழ் ஓவியா said...

ஆண் என்ன? பெண் என்ன? அறிவியல் சொல்வதென்ன?



- பேராசிரியர் நவெற்றியழகன்



உலகம் முழுவதும் ஒரே ஆண் (Man) ஆக அல்லது பெண் மயமாக இருந்தால் உலகம் என்னவாகும்?

ஈர்ப்பு இன்றி, உலகமே பொறுக்க இயலாத அறுவை (Boring) ஆக இருந்திருக்குமே!

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பெண்களே இல்லாமல் உலகம் இருக்குமேயானால் அப்படிப்பட்ட வாழ்வும் ஒரு வாழ்வா?



இல்வாழ்க்கையா? சுவை இல்(லாத) வாழ்க்கையா?

ஆண்களே இன்றி உலகம் இருந்தால் அது வாழ்க்கையா? வாழத்தான் முடியுமா? திருவள்ளுவர் கூறியபடி, அன்பும் அறனும் உடைத்தாயிருந்தாலும் பண்பும் பயனும் கொண்ட இல்வாழ்க்கை இருக்க முடியுமா? இல்வாழ்க்கை இல்(லாத) வாழ்க்கையாகவல்லவா இருக்கும்.

என்ன பார்வை உந்தன் பார்வை?

அவளுக்கென்ன அழகிய முகம்! _ ஒன்று பெண்கள் மட்டுமே உள்ள உலகில் ஒரு பெண் வியந்து பாடுவாளா? பாடத்தான் முடியுமா? என்ன பார்வை உந்தன் பார்வை? என பாடல் இசைக்க முடியுமா?

அவனுக்கென்ன இளகிய மனம்? _ என ஓர் ஆணை மற்றோர் ஆண் புகழ்ந்துதான் பாடமுடியுமா? உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல! என்று ஓர் ஆணை மற்றவன் மயங்கிப் பாடமுடியுமா?

இப்படிப்பட்ட வாழ்க்கையில் உறவு தழைக்குமா? அன்பு செழிக்குமா?

இரு எதிர் துருவம்

எதிர் துருவங்கள்தானே ஈர்க்கும்? ஒத்த துருவங்கள் விலகி விடாதா? (Like poles repel; opposite poles attract) இந்த உண்மை ஆண்_பெண் பாலியல் வேற்றுமைக்கும் பொருந்தாதா?

இந்தப் பாலியல் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள இந்துமதம் பெண் இனத்தைத் தாழ்வுபடுத்தியது; ஆணினத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

தமிழ் ஓவியா said...

அவள் என்ன 'அடிமைப் பெண்'ணா?

ஆணுக்குப் பெண் அடிமைதான்! _ என்கின்றன இந்து மத வேத, புராண இதிகாசங்கள். இதனை வன்மையாக மறுத்த நம் பெண்ணுரிமைக் காவலர் எவ்வகையிலும் ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளோ அடிமையோ இல்லை என்று கூறி பெண் ஏன் அடிமையானாள்? _ என்ற குறு நூலினையே வெளியிட்டுள்ளார். இதுதான் சமூக இயலின் நிலவரம்!

மனதில் வையடா!

ஆனால், எதனையும் அறிவியல் கண்கொண்டு நாம் ஆண் - பெண்பற்றிய உடலியல் இயலின்படி அறிவியல் அடிப்படையில் என்ன கூறுகிறது என்று பார்க்க இருக்கிறோம்.

இதில் கூறப்படும் ஒற்றுமை_வேற்றுமை வெறும் உடலியல் நிலையில் மட்டும்தான்; சமூக பொருளியல், அரசியல் கல்வியியல் முதலான வாழ்வியல் துறைகளுக்குப் பொருந்தாது; பொருந்தாது; பொருந்தவே பொருந்தாது என்பதை சற்றும் மனதில் வைக்க வேண்டும். மறத்தல் கூடாது.

ஆராய்ந்து கண்ட அறிவியல் உண்மைகள்

இனி, ஆண் பெண் பற்றிய உடலளவில் உள்ள ஆய்ந்து ஆய்ந்து அலசி, தெரிந்து கண்ட அறிவியல் உண்மையைப் பார்ப்போம்.
அளவு கூடினால் அறிவு கூடுமா?

(1) சராசரியாக, ஆண் களில் 24.7 சதவிகிதத்தினர் எடை கூடுதலாக உள்ளனர். பெண்கள் 27 சதவிகிதத்தினர் கூடுதல் எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

(2) ஆணின் மூளை 87.4 கியூபிக் அங்குலம் அளவுடையது. பெண்ணின் மூளை 76.8 கியூபிக் அளவுடையது. மூளையின் அளவிற்கும் ஆற்றலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சிந்தனை செய்வதில் சிறிதும் வேறுபாடில்லை

(3) பொதுவாக, மனிதனின் மூளை நரம்புயிரணுக்கள் (Nervous Cells) இது நரம்பியலில் (Neurology) நியூரான்கள் (Neurons) எனப்படும். இவை பொதுவாக மாந்தனிடம் சராசரி 1400 கோடி நியூரான்கள் உள்ளன.

ஆனால், பெண்ணிடம் இவை சற்றுக் குறைவாகவே உள்ளன. இதனால் சிந்தனையிலோ அறிவிலோ குறைவு இல்லை.

வழுக்கை விழுவதில்லை

(4) ஆண்களுக்கு 25 வயது முதற்கொண்டே வழுக்கை ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு சாதாரணமாக 70 வயதுவரை வழுக்கைக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

குறைவிலாக் கொழுப்பு

(5) ஆணின் எடையில் 15 முதல் 18 சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது. ஆனால், பெண்ணின் எடையில் 25 முதல் 28 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

எடை எப்படி?

(6) ஆணின் மூளையின் எடை பொதுவாக 1400 கிராம். பெண்ணின் மூளையின் எடை கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

வியர்வை சுரப்பதிலும் வேறுபாடு

(7)ஆணின் மூச்சுப் பை, சற்றுப் பெரியது; பெண்ணினுடையது கொஞ்சம் குறைவு.

(8)ஆணுக்கு வியர்வை அதிகம் சுரக்காது; ஆனால் பெண்ணுக்குக் கூடுதலாகச் சுரக்கும்.

கரகர குரல்

(9)பிறப்புறுப்புகளின் வளர்ச்சி இரு பாலருக்கும் பொது. அமைப்பு வேறுபாடு டையது. ஆண்ட்ரஜன் (Androgen) என்னும் நாளமில் சுரப்பு இயக்கு நீர் (Duetless gland - Endoerine) ஆண்களிடம் உண்டு.

இது, தாடி, மார்பு, பரந்த மார்பு கரகரப்பான குரல்களுக்குக் காரணமாக அமைகிறது.

கொஞ்சும் குரலினிமை

பெண்களுக்கோ, ஈஸ்ட்ரஜன் (Estrozen) இயக்கு நீர் சுரப்பி அமைந்து உடலின் மென்மை, மெருகு, குரலினிமை போன்றவற்றிற்குக் காரணமாக அமைகிறது.
அவனுக்கும் அவளுக்கும்

(10) ஆண்களுக்கு, எலும்பு முறிவு, காயம், நாட்பட்டு ஆறாத புண்கள் போன்றவை பெண்களைக் காட்டிலும் அடிக்கடி ஏற்படுகின்றன.

பெண்களுக்கு அதிக தீவிரம் அற்ற நோய்களான சளிப்பிடிப்பு, தலைவலி, எலும்பு மற்றும் உணவுக்குழல் தொடர்புடைய நோய்கள் அடிக்கடி வருகின்றன.

தமிழ் ஓவியா said...

(11)ஆண்களுடைய இடுப்பெலும்பு (Pelvis) 13 செ.மீ அகலமே உடையது; பெண்களின் இடுப் பெலும்பு (Pelvis) 13.4 செ.மீ அகலம் உள்ளது.

வண்ணக் குருடு வருவது

(12) ஆண்களில், 4 சதவீதத்தினர் நிறக்குருடர்கள் (Colour Blind) ஆக உள்ளனர். பெண்களில் 1 சதவீதத்தில் 5 பகுதியினர் மட்டுமே நிறக் குருடர்களாக உள்ளனர்.

எத்தனை தடவை இதயத்துடிப்பு?

(13) ஆண்களின் இதயம் 1 மணித்துளியில் (Minitue) 72 தடவை துடிக்கிறது. பெண்களுக்கு 78 தடவைகள் இதயம் துடிக்கிறது.

குருதி அடர்த்தி நிலை

(14) ஆணின் குருதி அடர்த்தி அதிகம். இதில் இரும்புச்சத்து (Haemoglobin) குறைவு. பெண்ணின் குருதி அடர்த்தி குறைவு.

நிலைமாறும் சுண்ணாம்புச் சத்து

(15) ஆணின் உடலில் சுண்ணாம்புச் சத்து (Calcium) நிலையாக _ சீராக இருக்கும். பெண் உடலில் சுண்ணாம்புச் சத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. மாத விடாயின்போதும் கருக்கொண்டுள்ள காலத்தும், சுண்ணாம்புச் சத்தை இழக்கிறாள். பிள்ளைப்பேறு அவளை நலிவடையச் செய்கிறது. பெண்களுக்குப் பிள்ளைப்பேறு கூடாது என்பார் தந்தை பெரியார்.

மாறுபட்ட மதிப்பு

(16) ஆணின், மதிப்பு 5 கோடி; பெண்ணின் பெறுமானமோ 7 கோடி. ஏன் இப்படி? ஆணுக்கு இல்லா பாலூட்டும் மார்பகங்கள் இரண்டு கூடுதலாக இருப்பதால் 2 கோடி அதிகம். இந்த, சில சமூக-_உயிரியல் (Socio biology).

உணரவேண்டிய பெண்ணின் உடலியல்

வேறுபாடுகளை நாம் உணர்ந்தோமானால் பெண்ணை உடலியல் அளவில் புரிந்துகொண்டு பெண்மையைப் போற்ற முடியும். போற்ற வேண்டும்.

இருபாலாரிடமும் அமைந்த இயல்பான கொழுப்பு

(17) ஆணிடம் நடுக்கம் அதிகமாகவே உள்ளது. பெண்ணிடம் அதிக நடுக்கம் ஏற்படுவதில்லை. குளிராலோ பிற காரணங்களாலோ;

(18) ஆணின் உடல் தோலின் கீழே உள்ளது கொழுப்பு அடுக்கு (Fat layer).இதனைவிட பெண்ணின் மேனியின் அடியில் கொழுப்பு அடர்ந்துள்ளது.

அறிய வேண்டிய அடிப்படை

மேலே நாம் குறிப்பிட்ட அறிவியல் உண்மைகள் ஆண் பெண் வேறுபாடு சமூக இயலில் எந்த விளைவையும் உண்டாக்கவில்லை; உண்டாக்காது.

மதம், வேதம், புராண, இதிகாச, ஆரிய, பார்ப்பனியம் இவை மட்டுமே ஆண் பெண் வேறுபாட்டுக்கும் பெண்ணடிமை, பெண்ணிழிவு இவற்றிற்கு காரணங்களாக அமைகிறன்றன.

செய்ந்நன்றியறியும் சிறப்பு

அறிவியல் சொல்வதன்படி ஆண் என்ன? பெண் என்ன? நான் என்ன? நீ என்ன? எல்லாம் ஓரினம்தான்! உயர்வு தாழ்வற்ற மாந்த இனம்தான். பாலியல் அநீதி (Gender injustice) ஏற்படக்கூடாது. பாலியல் நீதி, சமூக நீதி (Social Justice) போல பெண்ணினத்திற்கு ஏற்படுவதே, ஏற்படுத்துவதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் நன்றிக்கடன்!

காட்டுவோமா? காட்டுவோமே!

தமிழ் ஓவியா said...

ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு


இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.

அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.

ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார். அய்யய்யோ... ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.

இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.

தமிழ் ஓவியா said...

இந்தியப் பெண்களின் நிலை


இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2012இல் 706 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013இல் 1,636ஆக உயர்ந்துள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க...


2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது.

இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வந்து சேருவார்கள்.

- சந்திரஹாசன், ஈழ அகதிகள் மறுவாழ்வு இயக்கம்.

தமிழ் ஓவியா said...

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங் கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே, 13ஆவது சட்டத் திருத்தத் தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகாரப் பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக, இந்தியாவிடமும் அய்.நா.சபையிடமும் இலங்கை அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.

- இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.

- கவிஞர் சல்மா

தமிழ் ஓவியா said...

பெரியாரும் காந்தியும்!

- கி.தளபதிராஜ்

பெரியாரும் காந்தியும்!

தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.



அதில் இருந்த தீண்டாமை விலக்கு, மது விலக்கு ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. முக்கியமாக தீண்டாமை விலக்கு மூலம், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வேற்றுமையை ஒழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பதாக எண்ணி காங்கிரஸில் இணைந்தார். காந்தியை முழுமையாக நம்பிய பெரியார் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

கோர்ட்டுகளை விலக்கும் காரியத்தில் தம் குடும்பத்திற்கு கோர்ட்டு மூலம் வரவேண்டிய 50,000 ரூபாயை அந்தக் காலத்திலேயே இழந்தார்.

1915ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி மாயவரம் (மயிலாடுதுறை) வருகை தந்த காந்தியாருக்கு விக்டோரியா நகர மண்டபத்தில் (TOWN HALL) வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இந்த வரவேற்பில் கலந்துகொண்டனர். நகரசபைத் தலைவரான நடேச அய்யர் வரவேற்புரை ஆற்றினார். ஆதிக்க ஜாதியினர் நிரம்பியிருந்த சபையில் காந்தியார் தனது பேச்சைத் தொடங்கினார். நீங்கள் வருந்தக்கூடிய சில சொற்களை நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

தீண்டத்தகாதவர்கள் என ஒரு வகுப்பார் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் யார்? எங்கெங்கே பிராமணர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்தவர்கள் என்கிற மரியாதையை அவர்களே பெறுகிறார்கள். இந்தப் பாவம் அவர்களையே சாரும். பகவத்கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். பண்டிதனுக்கும், பாமரனுக்கும் எவன் வேறுபாடு பாராட்டுவதில்லையோ அவனே உண்மையான பிராமணன் என்று கீதை கூறுகிறது. மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால், மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்றமாட்டோம் என்று சொல்லுவார்களா? தங்களது தற்கால நிலைமை பூர்வீக தவபலத்தால் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள். மாயவரம் மக்களின் காலடியில் நின்று நான் கேட்கிறேன். வீடு, வாசல் இல்லாதவர்களை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கதறுபவர்களை விரட்டியடிப்பதுதானா தேசியம்? என்று பேசினார். அடுத்து 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி தேவதாசிகள் நிலை பற்றி உரையாற்றினார். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இசைவேளாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் காந்தியைச் சந்தித்து, கோவிலுக்குத் தங்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள் தேவதாசிப் பட்டம் கட்டிவிடப்படுவதைவும், அவர்கள் வாழநேரும் கேவலமான வாழ்க்கையைப் பற்றியும் காந்தியிடம் கூறியிருந்தார்கள். எனவே தேவதாசிகள் பற்றி அந்தக் கூட்டத்தில் காந்தி விரிவாகவே பேசினார்.

தமிழ் ஓவியா said...


அவர்களைத் தேவதாசிகள் என்று அழைப்பதன் மூலம் கடவுளையே நாம் அவதூறு செய்கிறோம். நமது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக கடவுள் பெயரை இழுக்கிறோம். ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வதற்காக இம்முறை நீடிக்க வேண்டுமென்று சிலர் எண்ணுவதைப் பார்க்கும்போது வாழ்க்கையே கசந்துபோகிறது. நான் அந்தப் பெண்களைச் சந்தித்தபோது அவர்கள் கண்களில் களங்கம் எதுவும் தென்படவில்லை. உலகில் உள்ள மற்றப் பெண்களைப் போல அவர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். இந்தச் சகோதரிகளில் பெரும்பாலோர், சொல்லப்போனால் எல்லோருமே தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புவதாக என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் நான், அவர்களைக் குறைகூற மாட்டேன். அவர்கள் கதி எந்தச் சமூகத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ அந்தச் சமூகத்தையே குறை சொல்வேன் என்றார்.

தமிழ்நாட்டில் சேரன்மாதேவியில் காங்கிரஸ் மற்றும் பார்ப்பனரல்லதார் தலைவர்களின் நிதி உதவியுடன், வ.வெ.சுப்ரமணிய அய்யரால் ஒரு தேசிய நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பெயர் குருகுலம். அங்கு பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு, தனி இடம், தனிப் பிரார்த்தனை. பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனி உணவு, தனி இடம், தனிப் பிரார்த்தனை என வேறுபாடு காட்டப்பட்டது. அதை எதிர்த்து காங்கிரசில் இருந்தபடியே போராடினார் பெரியார். கதர் போர்டு நிர்வாகத்தில் பெரியார் தலைவராக இருந்த போதிலும் காரியதரிசியாக அப்போது இருந்த சந்தானம் என்கிற பார்ப்பனரின் ஆதிக்கத்தால் கதர்போர்டு நிர்வாகம் முழுவதும் பார்ப்பனர் மயமாகி இருந்தது.

சகல வசதிகளையும் பார்ப்பனர்களே அனுபவித்து வந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தார் பெரியார். அந்தப் போராட்டங்களில் காந்தியாரின் தலையீடு இருந்ததால் பெரியாரால் வெற்றிபெற முடியவில்லை. 1920லிருந்தே காங்கிரஸில் இருந்தபடி வகுப்புவாரி உரிமைக்காகப் போராடியவர் பெரியார். 1920, 1921, 1922, 1923, 1924இல் நடைபெற்ற திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாடுகளைத் தொடர்ந்து 1925 காஞ்சிபுரம் மாநாட்டிலும் பெரியாரின் வகுப்புவாரி உரிமைத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் பெரியார். காந்தியார் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் நீடிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


1934இல் மீண்டும் காந்தி மயிலாடுதுறை வந்தபோது பெரியார் காங்கிரசில் இல்லை. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வலுப்பெற்றிருந்தது. 1927இல் கலந்துகொண்ட பலர் காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட காந்தி சென்ற முறை நான் இந்நகருக்கு வந்திருந்தபோது என் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பலர் இப்போது வரவில்லை என்று கூறினார்.

இந்தத் தகவல்கள் தமிழ்நாட்டில் காந்தி என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. சுயமரியாதை இயக்க வீராங்கனையும், தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவருமான மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் 1927இல் நடத்திய ஒரு மகளிர் மாநாட்டில்தான் காந்தி கலந்துகொண்டு உரையாற்றியதாக இராமாமிர்தத்தம்மையார் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் இராமாமிர்தத்தம்மாள் தலைமையில் இசைவேளாளர்கள் காந்தியைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால் இராமாமிர்தத்தம்மையார் பெயரை விடுத்து சில இசைவேளாளர் பெண்கள் காந்தியைச் சந்தித்ததாக அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் மூதாட்டியார் இருட்டடிக்கப்பட்டதைப் போன்றே வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் அளப்பற்கரிய தொண்டை காந்தியாரே மூடி மறைக்கவில்லையா?. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், அய்.ஏ.எஸ் அதிகாரியான வெ.இறையன்பு அவர்கள் எழுதிய துரோகச் சுவடுகள் என்கிற நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. காந்தியாரின் இச்செயலை விமர்சித்து அமுக்கப்படும் அங்கீகாரம் எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார் இறையன்பு.

முதுகில் குத்துவது ஒருவகையான துரோகம் என்றால் ஒருவரின் முகவரியை மறைத்து அதில் தன் முத்திரையைக் குத்துவது இன்னொரு வகையான துரோகம். உழைத்தவர்களுக்குப் போய்ச்சேரவேண்டிய அடையாளத்தை மறைத்துவிட்டு தொடர்பில்லாத நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வையைச் சிந்தியவர்களுக்கு அயர்வைத் தருகிற அற்பச் செயல் எனத் தொடங்குகிறது அக்கட்டுரை. கேரள மாநிலம் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க அனுமதிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

தமிழ் ஓவியா said...

சரியான தலைமையில்லாததால் போராட்டம் முடக்கப்பட்டது. போராட்டத்தை வலுப்படுத்தும் சக்தி ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கே உண்டு எனக் கணித்த போராட்டக்காரர்கள், ராமசாமி நாயக்கருக்கு அழைப்புவிடுக்க, உடனடியாக அவர் வைக்கம் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திருவிதாங்கூர் மன்னர் மரணம் அடைய, அவரது மறைவையொட்டி கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராமசாமி நாயக்கரின் தலைமையில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து விபரீதம் ஏதும் நிகழுமோ என்று பயந்த திருவிதாங்கூர் மகாராணி காந்திக்குக் கடிதம் எழுதினார். பின்னர் அந்தத் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதிக்கப்பட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் அளவிற்கு வாகையைச் சூடிய அந்தத் தலைவர்தான் பின்னால் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பெயர் சூட்டப்பட்ட ஈ.வெ.இராமசாமி. உண்மை இப்படி இருக்க, மகாத்மா காந்தியே மகத்தான தவறு ஒன்றைச் செய்தார். வைக்கம் போராட்டம் பற்றி, காந்தி பத்திரிகை ஒன்றில் எழுதிய கடிதத்தில் பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ அதுபற்றி எதுவும் அலட்டிகொள்ளவில்லை என்கிறார் இறையன்பு.

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி நாராயணசாமி நாயுடு அவர்கள் தன் வாழ்நாள் அனுபவங்களைப் பற்றிச் சொல்கையில் 1930களில் மயிலாடுதுறையில் சுயமரியாதைக்காரர்களின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். மயிலாடுதுறையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்கார் கூட்டத்தில் கலாட்டா. வரதராஜுலு நாயுடு கூட்டத்தில் அடிதடி. சத்தியமூர்த்தி கூட்டமே நடத்த முடியாத நிலை. காந்திக்குக் கருப்புக்கொடி. நேருவுக்குக் கருப்புக்கொடி. கதர்கட்டி பட்டமங்கலத்தெரு, மணிக்கூண்டு தாண்டினால் கதர் கட்டியவர்கள் சென்றால் அடிவிழும் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

தியாகி நாராயணசாமி கூறியதையும், 1934இல் காந்தி வருகைக்கு மக்கள் ஆதரவு குறைந்திருந்ததையும் ஒப்பிடுகையில் தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்தபோது, தமிழ்நாட்டில் காந்திக்கு இருந்த ஆதரவு, பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் காந்திக்கு இல்லை என்பதையும், காந்தி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பெரியாரின் கொள்கை நிலைப்பாட்டை ஒட்டியே பேச முடிந்திருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் காந்தி 1925க்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தே சென்றிருக்கிறார். 1925இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பின்னரே காந்தியாரால்கூட பார்ப்பனர்கள் வீட்டு அடுப்பங்கரை வரை செல்ல முடிந்திருக்கிறது. இதை, காந்தியே தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காந்தியாரைச் சந்தித்தபோது நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்று பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை எந்த ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரித்தார்.

தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்ததைப் போலவே 1948இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்கிற பார்ப்பனரால் காந்தி கொல்லப்பட்டார். நாடே கொந்தளித்திருந்த சூழலில் இந்திய நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். அவர்தாம் பெரியார்!.

தமிழ் ஓவியா said...

மங்கள்யான் வெற்றி மனித நேயம் தோல்வி!


24.9.2014 அன்று காலை சரியாக 7.42 மணிக்கு மங்கள்யான் (செவ்வாய்க்கலன்) உலகில் யாராலும் செய்ய முடியாத சரித்திரச் சாதனையாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கோளின் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை நம்முடைய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஆய்வு மய்யத்துக்கு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விண்வெளி தகவல் தொடர்பு நிறுவனம் கண்டுபிடித்துத் தெரிவித்தது.



ஆய்வாளர்கள் ஆனந்தக் கூத்தாடினர். அதுவரையில் இஸ்ரோவில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி அனைவரிடமும் கைகுலுக்கினார், கட்டித் தழுவினார். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை விட இது மகத்தானது என்று பூரிப்படைந்தார். (செவ்வாய்க்கலன் வெற்றியைப் பற்றி அவருடைய மதிப்பீடு நம்மைப் புளகாங்கிதப்படுத்துகிறது). மேலும் கூறுகிறார்:

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா எப்பொழுதுமே உலகின் குருவாக உள்ளது. ஜீரோவைக் கண்டுபிடித்தது நாம்தான். விண்வெளியில் உள்ள கிரகங்களை அறிந்து அவை சூரியனைச் சுற்றும் காலத்தைக் கணித்தது நமது ரிஷிகள்தான். பூமி உருண்டை வடிவம் என்றதும் நாம் தான் (?) என்கிறார்.

கலிலியோ, கோப்பர்நிக்கஸ், புருனோ உங்கள் நினைவுக்கு வரக்கூடாது. வந்தால் நீங்களும் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்கப்படுவீர்கள், கல்லால் அடிக்கப்படுவீர்கள், கட்டி வைத்து எரிக்கப்படுவீர்கள். ஆனால் பூமியைப் பாயாய் சுருட்டியதாகக் கதைவிட்டவர்கள் இப்பொழுது பூமி உருண்டை என்று நாம்தான் முதலில் சொன்னோம் என்று கூறுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஜீரோவை நாம்தான் கண்டுபிடித்தோம் என்கிறார். நீங்களே ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகு இதில் யாருக்காவது ஏதாவது அய்யம் இருக்க முடியுமா?

பிரதமராக வாஜ்பேயி இருந்த காலத்தில் அவருடைய ஆசையை சந்திராயன் நிறைவேற்றியது. இப்பொழுது மங்கள்யான் சாதித்துள்ளது என்கிற பிரதமர், மறந்தும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் இந்தச் சாதனைக்கு 450 கோடி ஒதுக்கி அடித்தளமிட்டது என்பதைக் கூறவில்லை. செவ்வாய் கோளுக்கு விண்கலனை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறியபோது, அதற்கு முட்டுக்கட்டை போடாமல் நிதியை ஒதுக்கி ஊக்கப்படுத்தியவர்கள்தானே சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இருக்க முடியும்! ஆனால், இதை உங்கள் சாதனைபோல் மார்தட்டிக் கொள்கிறீர்களே, இதைத்தான் எங்கள் கிராமங்களில் நோகாமல் நுங்கு தின்பது என்று சொல்வார்கள்.

செவ்வாய்க்கலன் படங்களை அனுப்பத் தொடங்கிவிட்டது. அதில் உள்ள நீர், கனிம வளங்களையெல்லாம் கண்டறிந்தால் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பட்டா எழுதிக் கொடுத்துவிடலாம். உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதாகக் கண்டறிந்தால் பூமிக்கும், செவ்வாய்கோளுக்கும் ராக்கெட் சர்வீஸ் தொடங்க டாட்டாவுக்கு அனுமதி கொடுத்துவிடலாம்.. எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு ஒரு மாற்றத்தை நாம் கொடுக்கலாம். பூமியைப் போல் செவ்வாயையும் மனிதர்களால் நிரப்பலாம். அங்கேயும் ஜாதகம் பார்த்து இந்தப் பெண்ணிற்கு பூமிதோஷம் இருப்பதாகச் சொல்லி, திருமணம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பிரதமர் அவர்கள் நம் அறிஞர்களிடம் எப்படியாவது இராகு, கேதுவைக் கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவு போட்டு, உதவிக்கு ரிஷிகளை வைத்துத் தேடி, உலகிற்கே காட்டி அந்தப் பெருமையையும் நாம் தட்டிச் செல்லலாம்.

அமெரிக்கப் பயணத்திற்கு முதல்நாள் தாங்கள் கோகோ - கோலா _ பெப்ஸி குளிர்பானக் கம்பெனிகளுக்கு எப்படி இந்தியாவின் தூதுவராக மாறி, குளிர்பானத்தில் பழச்சாற்றையும் கலந்து தரவேண்டும் என்ற அரிய யோசனையை பெங்களூரு விவசாயிகள் மாநாட்டில் கூறினீர்களே, அதே போன்று செவ்வாய்க் கோளிலும் தூதுவராக மாறி அந்தப் பணியை நீங்களே செவ்வனே செய்யலாம்.

தமிழ் ஓவியா said...

எல்லா வழிகளிலும் இந்தியாவுக்கும், இந்திய ரிஷிகளுக்கும் பெருமை சேர்க்கும் தாங்கள் ஆளும் நாட்டில் வாழும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களும் ஆனந்தக் கூத்தாடுவோம்!

23.9.2014 அன்று புதுடில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் தடுப்புகளை மீறி வெள்ளைப்புலியைப் படமெடுக்க முயற்சி செய்து தவறிக் கீழே விழுந்தான் மக்சூத்கான் என்ற 20 வயது இளைஞன். விழுந்தவனுக்கு எதிரில் புலி அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றுள்ளது. சர்வமும் ஒடுங்கி 15 நிமிடங்கள் கண்களில் உயிர் பயத்தோடு பூனையின் முன் மாட்டிக்கொண்ட எலி போல இருந்துள்ளான். மேலே நின்று கொண்டிருந்தவர்கள் சிறிய கற்களை வீசியுள்ளனர். பூங்காக் காவலாளி அடைக்கப்பட்ட புலியின் கூண்டுக் கம்பிகளைப் பலமாக அடித்துள்ளார், அசரவில்லை புலி. மாறாக, வி வாண்ட் சிக்சர் என்று கூறுவதைக் கேட்கும் மனநிலையில் உள்ள மட்டையாளனைப் போல அவனைக் கடித்துக் குதறியுள்ளது. அன்றைய காலங்களில் கொலைத் தண்டனைக்கு ஆளாகும் ஒருவனையோ, அடிமைகளையோ கூண்டுக்குள் தள்ளி சிங்கம், புலி போன்ற மிருகங்களின் வாய்க்கு இரையாக ஆக்குவது போன்றுதான் அதனை ஒளிப்பதிவில் பார்த்த அனைவருக்கும் இருந்திருக்கும். இவ்வளவு நடைபெற்ற இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பாதுகாவலரைத் தவிர உயிரியல் பூங்காவைச் சேர்ந்த வேறுயாரும் அங்கு இல்லை, வரவுமில்லை. இது நாடா? புலிகள் வாழும் காடா?

இது அந்த இளைஞனுடைய தவறாகக் கூட இருக்கட்டும். ஆனால், காப்பாற்ற முயற்சி எடுப்பதுதானே மனிதநேயம். 15 நிமிட நேரமிருந்தும் காப்பாற்ற முடியவில்லையென்றால் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எங்கே போனார்கள்? தகவல் தொடர்புச் சாதனம் இருக்கும்தானே? இயல்பாக கொடூரத்தன்மை கொண்ட மிருகங்களைக் கையாளுவதற்கு மயக்க மருந்து ஊசி துப்பாக்கி இருக்குமல்லவா? மிருகங்களை முறையாகக் கையாள பயிற்சியாளர்கள் இருப்பார்களே! இப்படி எந்தக் கேள்வியை எழுப்பினாலும் பதில் ஒன்றுமில்லை. ஜீரோவைக் கண்டுபிடித்தவர்கள் நாம்தான் என்பது வேறு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கடந்தவாரம் நேசனல் ஜியாகரபி சேனலில் ஒரு நிகழ்வைப் பார்க்க நேரிட்டது. இதே போன்று வேறு நாட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா. ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் இருந்த பகுதிக்குள் புதிதாக வந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் உள்ளே வந்ததும், ஆண் சிங்கம் பாய்ந்துள்ளது. இதைக் கவனித்த இன்னொரு பயிற்சியாளர் வேகமாக வந்து சிங்கத்தைப் பிடித்து இழுத்துள்ளார். பெண் சிங்கம் வந்து ஆண் சிங்கத்தின் மீது விழுந்து அந்தப் பயிற்சியாளரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளது. இறுதியில், அந்தப் பயிற்சியாளரை இன்னொரு பயிற்சியாளர் காப்பாற்றியுள்ளார். இதற்குப் பெயர்தான் மனிதநேயம்.

கடிபட்டு இறந்தவன் போதைப்பழக்கம் உள்ளவனாம். முகநூலில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தகவல் பரிமாறப்படுகிறது. போதைப் பழக்கமுள்ளவனை புலியிடம் கடிபட்டு இறக்கச் செய்யலாம் என்று எந்தக் கருடபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது?

போதாக்குறைக்கு இந்தப் புலியை என்ன செய்யலாம்? வேறு உயிரியல் பூங்காவிற்கு மாற்றி விடலாம் என்று யோசிக்கிறார்களாம். நம்மூரில் பிரச்சினைக்குள்ளான காவல் துறையினரை வேறு பகுதிக்கு மாற்றுவது போல.

ஒவ்வொரு பிரச்சினையிலும் யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்வது, சிறுத்தையிடம் கடிபட்டுச் சாவது, ஆண்டுக்கு 60,000 பேருக்கு மேல் வெறிநாய்க்கடிகளுக்கு ஆளாகி உயிர்விடுவது, எதற்காவது சரியான தீர்வு கண்டோமா? மனித உயிர்கள் அவ்வளவு மலிவானவையா? மிருக ஆர்வலர்கள்தான் பதில் கூற வேண்டும்.

இது எல்லாவற்றையும்விட அந்த இளைஞன் கடிபட்டு துடிதுடித்துச் சாவதை இணையதளத்திலும், முகநூலிலும், செல்பேசியிலும் உலவவிடுகிறோமே, இது நம்மைத் திருத்திக் கொள்ளவா? நமக்குள் உள்ள மிருக குணத்தைத் திருப்தி செய்யவா? மங்கள்யானுக்காகப் பெருமிதம் கொள்வதா? மனித நேயமற்றுப் போய்விட்டதற்காக வேதனை கொள்வதா? நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்கலாமே!

- இசையின்பன்

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய்துகொள்ளலாம் இண்டியானாவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு



அமெரிக்காவில் இண்டியானா பகுதியில் மனிதநேய அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு முன்பாக அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதவையாக இருந்துள்ளன.

அப்படி மாற்றமுடியாத சட்டத்தை சிகாகோவை மய்யமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஏழாம் சர்க்குயூட் நீதிமன்றம், மனித நேயர்களுக்கான திருமண உரிமையை கடவுள் நம்பாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, மறுப்பது என்பது அரசியலமைப்பு முதல் விதி கூறுகின்ற மத ரீதியிலான சுதந்திரம் குறித்த உரிமைகளை மறுப்பதாக ஆகிவிடும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டின் சட்டத்தின்படி இண்டியானாவில் திருமணங்கள் மதரீதியில் உடையணிந்தவர் (மதக்குரு) நடத்திட வேண்டும் அல்லது அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்று உள்ளது. மனுதாரரான மனிதநேயர் வாதிடும்போது, மனிதநேயர்களின் திருமண உரிமையை மறுப்பது என்பது தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும். மதரீதியில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்ததாக ஆகிவிடும் என்று கூறினார்.

மனிதநேயரான ரேபா போயிட் உட்டன் கூறும்போது, நீதிமன்றம் தேவையான உரிமையைப் பெற்றுள்ளது என்றார். மதச் சார்பற்ற மணமகன் என்று மனுதாரருக்குச் சான்றளிக்கும் அவர் மேலும் கூறும்போது, ஒருவர் நாத்திகராகவோ, கடவுளை நம்புவதில் அய்யம் உள்ளவராகவோ, மனிதநேயராகவோ அல்லது மதரீதியிலான திருமணத்தைச் செய்ய விரும்பாதவராகவோ இருந்தாலும் தற்போது, இதுபோன்ற அற்புதமான நேரங்களில் தங்களுடைய கவுரவத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் நடைபெறும் விழாக்களையும் மகிழ்வாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று உட்டன் கூறியுள்ளார்.

புளோரிடா, மெய்ன் மற்றும் தெற்குக் கரோலினா ஆகிய பகுதிகளில் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றபின், மனிதநேயர்களுக்கு அலுவல்ரீதியாக திருமணம் செய்வதற்கு அனுமதி உள்ளது. அதுபோன்றே இண்டியானாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோல் இரண்டு டசன் மக்கள் மனிதநேயர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மனிதநேயர்களுக்கான அமைப்பின் விசாரணை மய்யத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அதன் தலைவராக உள்ள ரொனால்ட் ஏ. லிண்ட்சே கூறும்போது, அனைத்து மதச் சார்பற்ற அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்க முடியாத அளவில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் வேகமாக நம்பிக்கையாளர்களாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பாரபட்சமாக நடத்தப்படுவதாலும், மதரீதியில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது என்று கூறினார்.

வடக்கு கரோலினாவிலும் திருமணச் சட்டங்கள் சவாலாகத்தான் உள்ளன. திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டப்படியான திருமண உரிமைச் சான்று (Legal Marriage Licence) பெற்றிருக்க வேண்டும் என்று யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் பாஸ்டர்கள் என்கிற மதக் குழுவினர் அரசு கேட்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வருகின்றனர். வடக்குக் கரோலினாவில் ஓரினத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணச் சடங்குகளை நிறைவேற்றக்கூடிய பாதிரிகள்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்தப் பாதிரிகளும், மற்றவர்களும் அவர்களின் நம்பிக்கைப்படி ஓரினத் திருமணங்களையும் நடத்திட வலியுறுத்தி வருகின்றனராம்.

நன்றி: வாஷிங்டன் போஸ்ட், 14.7.2014

தமிழ் ஓவியா said...

மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!


தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?
ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ்- _ கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித்துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர் விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!

இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையைத் திரை போட்டு மூடி, கதவைச் சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.

கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.

அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.

ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

-ஆர்.டி. மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

பெரியாராம் பேரண்டம்!


இருளை வெடிவைத்துப்
பிளந்த எரிமலை!
இன உணர்வை ஏற்றிய தீபம்!

ஆயிரங் காலத்து
அடிமைச் சேவகத்தை
அடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்!

ஆணவச் சிரிப்பின்
அடங்கா ஆரியத்தை
அக்னிச் சிரிப்பால்
அழித்திட்ட அரிமா!

பிறவிப் பேத
சமுத்திரக் காட்டை
அறிவுப் புனலால்
உறிஞ்சிய அகழி!

எங்கே எங்கே
ஏற்றத் தாழ்வென்று
முகவரி தேடி
மோதிய வேழம்!

மதமாம் யானையை
சம் ஹாரம் செய்து
மன்பதை காத்திட்ட
மானுட மீட்பர்!

அமைதித் தேன்குழல் தென்றல் காற்றை
வையத்து வாயினில்
ஊட்டிய செவிலி!

யாரிந்த மானுடர்?
ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த
பெரியாராம் பேரண்டம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...



தலைவர்கள் போற்றும் தலைவர்!


கொள்கைக் குன்றம்

இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.

- முத்தமிழறிஞர் கலைஞர்



ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

- அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)


நீதிமன்றின்...


நோபல் பரிசு

பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

- நீதிபதி பி.வேணுகோபால்


பதவியை விரும்பாத தலைவர்

அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.

- நீதிபதி ஏ.வரதராசன்



பெரியார் இல்லை என்று சொன்னால்...

பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.

- நீதிபதி எஸ்.மோகன்


ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
- நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்


தன் அறிவை முன்வைத்து...

கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!

- நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)

தமிழ் ஓவியா said...

விநாயகனின் மர்ம விளையாட்டுகள்


கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;

நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;

இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;

ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.

சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?

கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?

- வே.மதிமாறன்

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்வில்....


நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?

தமிழ் ஓவியா said...


பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.

நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

- இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)

தமிழ் ஓவியா said...

இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

- பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பு மட்டுமல்ல

1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி

பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.

கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில் தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.

இதழ்களின் பார்வையில்...

தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.

- தினத்தந்தி 31.12.2008

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

- தினகரன் 4.1.2009

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.

- தினமணி 5.1.2009

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- தீக்கதிர் 18.1.2009

பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!

- ஆனந்த விகடன் 14.1.2009

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.

- புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009

தமிழ் ஓவியா said...

உத்சவ்’னா உச்சா கூடாதா?

இவ்விடம் அரசியல் பேசலாம்

’உத்சவ்’னா உச்சா கூடாதா?

(வழக்கம்போல இந்த ஞாயிறும் சலூன்கடையில் அரசியல் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கிடுச்சு! ஒரு பக்கம் கட்டிங் ஷேவிங் நடக்குறப்பவே சலூன்கடை சுந்தரம், வாடிக்கையாளர் மதியழகன் ஆகிய இருவருக்கும் இடையில் சுவாரசியமாப் போற உரையாடலை அப்படியே பதிவு பண்ணி உங்களுக்குக் கொடுத்துட்டோம்! சுவாரசியமான உரையாடலிலிருந்து... உங்களுக்காக...)



வாங்க தோழரே, சவுக்கியமா?



ரொம்ப சவுக்கியம்! முடி வெட்டுறோமோ இல்லையோ, உங்க கடைக்கு வந்து நாட்டு நிலவரத்தைக் கொஞ்சம் பேசிட்டுப் போனாலே பாரம் குறைஞ்ச மாதிரி ஆயிடுது தோழரே! அதுக்காகத்தான் இன்னைக்குக்கூட அப்படியே இந்தப் பக்கமா வந்தேன்!

அதுசரி, சலூன்கடை அரசியல் பேச்சுகள்தான் பலமுறை நாட்டோட தலையெழுத்தையே மாத்தியிருக்கு! இந்த வார நிலவரம் என்ன தோழர்? உங்க ஏரியா பிள்ளையார் சவுக்கியமா?

அதை ஏன் கேக்கறிங்க! எங்க ஏரியா பிள்ளையாரு சிலை பத்து நாளா இருந்ததுல பெயிண்டெல்லாம் உரியத் தொடங்கிடுச்சு...

பின்ன, தூக்குத் தண்டனைக் கைதிகளின் காத்திருப்பு மாதிரிதான் ஆயிடுச்சு பிள்ளையாரோட பொழப்பு!

இதுல ஒரு காமெடி பார்த்தியா? அவரோட பிறப்புக்கான கதை மாதிரியே ஆயிடுச்சு அவரோட அழிப்பும்!

எதைச் சொல்றிங்க?

அப்பன் சிவனே அவரோட தலையைத் துண்டிச்சுட்டாரு, அடுத்ததா அவருக்காக ஒரு அப்பிராணி யானையோட தலையைத் துண்டிச்சு ஒட்ட வச்சாங்க... இப்ப என்னடான்னா பெரிய பெரிய பொம்மையா செஞ்சு கடலில் தூக்கிப் போட்டு உடைச்சு அவரை அழிக்கிறாங்க! ஆக மொத்தம் அவரோட பிறப்பைப் போலவே அழிப்பும் காட்டுமிராண்டித்தனமாத்தான் இருக்கு!

தமிழ் ஓவியா said...


இப்பல்லாம் கடலலையப் பார்த்தால் பிள்ளையார் பொம்மைகளை இங்க வந்து கொட்டாதீங்கடான்னு மாற்றி மாற்றிச் சொல்றாப்புலயே இருக்கு!

அதுசரி, நாம என்னைக்கு இயற்கையோட வார்த்தையை மதிச்சோம்?!

பிள்ளையார் சிலைல பெயிண்டு உரிஞ்சமாதிரியே இந்த நூறு நாள்ல மோடிக்குப் பூசின பெயிண்டும் உரிஞ்சுடுச்சு, கவனிச்சிங்களா?

தேர்தலப்ப அவசர அவசரமா பெயிண்ட் அடிச்சப்பவே தெரியும், சீக்கிரம் பல்லிளிச்சிரும்னு!

மாப்பிள்ளை அவருதான், ஆனால் அவரு போட்டிருக்குற சட்டை என்னதுன்னு சொல்றாப்புல தான் இருக்குது மோடியோட ஒவ்வொரு நடவடிக்கையும்! காங்கிரஸ் கட்சியை அப்படியே அச்சு அசலா இமிடேட் பண்ணியே ஆட்சி நடத்துறார்! அப்ப, டிவியில வர்ற காமெடி ஷோக்களில் மிமிக்ரி பண்றவங்களையே மோடி மிஞ்சிட்டார்னு சொல்லு!

அதே அதே! இப்பக்கூட ஜப்பான்ல அவரு ட்ரம்ஸ் வாசித்ததை நினைத்துப் பெருமைப்படலாம்னு பார்த்தால், அதே ட்ரம்ஸ நம்ம மன்மோகன்சிங்கும் அடிச்சிருக்காருன்னு ஆதாரப்பூர்வமா எடுத்துக்காட்டிட்டாங்க!

அடங்கொய்யால! இதுல கூடவா காப்பி பேஸ்ட் வேலை பண்ணியிருக்காரு?!

அது போகட்டும், இந்தத் தடவை ஆசிரியர் தினத்தை குரு உத்சவ்னு பெயர் மாத்தினதைக் கேள்விப்பட்டிங்களா?

நமக்குத் தெரிந்ததெல்லாம் காராசேவ் மிச்சர் தான்...

ஆமா, ஆமா, நான்கூட கார்ப்பச்சேவ் மாதிரி இந்த குரு உத்சவ், ரஷ்யாவோட மந்திரியா இருப்பாரோன்னுதான் முதலில் நினைச்சுட்டேன்! அப்புறமாத்தான் உண்மை வௌங்குச்சு!

ஆனா எனக்கு ஒன்னு மட்டும் வெலங்கவேயில்ல... ஆசிரியர் தினம்னா ஆசிரியர் களோடதான மோடி கலந்துரை யாடணும்? அதென்ன, மாணவர்களோட கலந்துரையாடல்?

அதான் ஆரம்பத்துல இருந்தே சொல்றோம்ல, மோடி ஷோ கேஸ் பொம்மை மாதிரிதான். அதுக்குத் தினமும் ட்ரெஸ் மாட்டிவிடுற பொறுப்பெல்லாம் சுத்தியிருக்குற தொழிலதிபர்கள், ஆர். எஸ். எஸ். கூட்டத்தோட வேலைதான்! ஆசிரியர் தினத்தன்னைக்கு அவருக்கு மாட்டிவிட்ட வேஷம் அப்துல்கலாம் வேஷம்! புரிஞ்சுதா?!
அட, ஆமால்ல!

இதுல கொடுமை, அவரோட ஹிந்திப் பேச்சை, இந்தியா முழுக்க இருக்குற பசங்களை நேரடி ஒளிபரப்பில் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினது! இவனுங்க அரசியலில் பசங்களை வேற டார்ச்சர் பண்றானுங்க! பெங்களூர்ல ஒரு பள்ளிக்கூடத்துல மோடியோட ஆசிரியர் தினப் பேச்சை நேரடி ஒளிபரப்பு பண்ணிட்டு, அது முடியறவரைக்கும் பசங்களை உச்சாகூடப் போகவிடாமல் ஆசிரியர்கள் அடாவடி பண்ணியிருக்காங்க!

அடக்கொடுமையே! குரு உத்சவ்னா, உச்சா கூட போகக்கூடாதா என்ன?!

இன்னும் போகப் போக என்ன கோமாளித் தனமெல்லாம் பண்ணப் போறாங்களோ!

அதான் நம்ம ஊர் பொன்னார் ஆரம்பிச்சுட்டாரே!

எதைச் சொல்றிங்க?

குமரி மாவட்டத்தைக் கேரளாவோட சேர்க்கணும்னு கொஞ்ச நாளா கதக்களி ஆடிட்டு இருக்காரே... படிக்கல?

ஆமா, ஆமா, எனக்கென்னவோ இவரு கொஞ்சம் கொஞ்சமா மலையாளக் கரையோரமா ஒதுங்கலாம்னு யோசனை பண்றாரோன்னு தோணுது!

அட, இது புதுக் கதையால்ல இருக்கு!

பின்ன, தமிழ்நாட்டில் இவரோட வேலை முடிஞ்சுடுச்சு, புதுத் தலைமையும் வந்திடுச்சு. இனி தமிழ்நாட்டுல இவருக்கு மரியாதை பெருசா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டாரு போல. அதான், கேரளாப்பக்கம் அரசியல் பண்ணி அதோட தலைமையைக் கைப்பற்றிடலாம்னு யாரோ ஜாதகம் குறிச்சுக் குடுத்திருக்காங்க போல! குமரின்னாலே மனசு அலைபாயத்தான செய்யும்?!

அது சரி.. அவரவர் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்!

இவருதான் கோமாளின்னா, இவரைவிடப் பெரிய கோமாளியா அந்த சூனா சாமி பேசிட்டுத் திரியறாரே!

பின்ன... ஞானப்பழத்துக்காகக் கோவிச்சுக்கிட்டுக் கோவணாண்டியா மாறின சுப்பிரமணிய சாமி மாதிரி, இந்தாளும் மந்திரி பதவி ஆசையில அந்நிய நாட்டுக்கே உளவாளியா வேலை பார்க்கப் போயிட்டாரு! இவரையெல்லாம் தேசத்துரோக வழக்கு ஒரு மண்ணும் பண்ணாது!

அதான் அங்க அங்க கொடும்பாவியக் கொளுத்திக்கிட்டு இருக்காங்களே! இதுல ஒரு ஒற்றுமை பார்த்திங்களா? தம்பி சுப்பிரமணிய சாமியோட கொடும்பாவியக் கொளுத்துறது ஒருபுறம்னா, அண்ணன் பிள்ளையாரோட பொம்மைப்பாவி(!)ய கடலில் போட்டு அழிக்கிறது இன்னொரு பக்கம் நடக்குது!

பின்ன அழிக்கும் கடவுளோட குடும்பத்தினர்னா சும்மாவா?!

ஹஹஹஹ! சரியாச் சொன்னீங்க!

- கல்வெட்டான்

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுமைக்குமான பெரியாரியத்தின் தேவை

கடவுள் இல்லாத சமுதாயத்தை உண்டாக்க வேண்டும் என்று இங்கு சொல்லவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதை வற்புறுத்துகிறேன் என்று 15.5.1957ல் நடைபெற்ற புத்தர் விழாவில் பேசியவர் பெரியார். அதன் பரிணாமங்கள் தான் கடவுள் மறுப்பு, வைதீக மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், சுயமரியாதை என பெரியாரின் அத்தனை கருத்தியலுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. ஒரு நவீன அறிவியல் ரீதியான சமூகச் சிந்தனையை வார்த்தெடுப்பதன் மூலம் ஜாதியால், வர்ணத்தால் பிளவுபட்டுக் கிடந்த சுரண்டல் சமுதாயத்தை சமதர்ம சமூகமாக மாற்ற இயலும் என்று நம்பினார் பெரியார்.



பொருளாதார அடிப்படையில் வெளிப்படையான கருதுகோள்களை பெரியாரியம் வைக்கவில்லை எனினும் அனைவருக்குமான சமூக நீதி என்ற அடிப்படையில் பொருளாதார சமநிலைக்கான அடித்தளமாக ஜாதியற்ற சமூகம் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது.

பெரியாரியம், மார்க்சியத்தின் கூறுகளை பொருள்சார் அடிப்படையில் இல்லாமல் சமுதாயப் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்த்தது. ஜாதிக் குழுக்களாக வாழும் இந்தியச் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் வர்க்கங்களை ஒருங்கிணைப்பது இன்று வரை சாத்தியமில்லாததற்குக் காரணம், அதை விட தகுதியின் பாற்பட்ட (Status Group) பிளவுபட்ட ஜாதியக் குழுக்களைக் கொண்ட சமூகமாக (Stratified Society), 2000 ஆண்டுகளாக வேரூன்றி இருந்து வருகிறது. ஜாதியக் குழு மனப்பான்மை என்பது வர்க்க மனப்பான்மை ஏற்பட வழியில்லாமல் தடையாக இருந்தது. ஜாதிய சமூகத்தில், பொருளாதாரச் சுரண்டலை ஜாதிய ஆதிக்கமாக நிறுவியிருந்தது மனுதர்மம்.

இத்தகைய நிலையில் வர்ணத்தின், ஜாதியின் கட்டுமானங்களை உடைக்காமல் பொருளாதார மாற்றங்கள், எளிய மக்களின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இந்த அடிப்படையில், திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் ஏற்படுத்திய மாற்றங்கள் _ இன்றைய நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளில் தமிழகத்தை மாற்ற மாநிலங்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

பெரியாரின் சிந்தனைகளால் தமிழகத்தின் மலர்ந்த சமூக விழிப்புணர்வு - இன்றைய நிலையில் மதவாத சிந்தனைகளால் பின்னடைந்துள்ளது. ஜாதியக் கட்சிகளின் அரசியல் நோக்கங்களுக்காக, பெரியாரின் கருத்தியல் பார்ப்பன எதிர்ப்பாக சிறுமைப் படுத்தப்பட்டு, உழைக்கும் மக்களை _ சாமானியனை இந்துத்துவ நம்பிக்கைகளில் மீண்டும் சிக்க வைக்க பரவலான முயற்சிகள், தற்போது அதி தீவிரமான நிலையில் நடந்து வருகின்றன. அன்று நாட்டிற்கு விடுதலை கிடைத்தால் போதாது; சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனை தேசத் துரோகமாக முத்திரை குத்தப்பட்டது.

மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்யப்பட்ட மக்களை விழிக்கச் செய்ய பெரியார் போராடிய தீவிரம் கற்பனை செய்ய முடியாத ஒன்று.

இன்று பெரியாரியல் அமைத்துத் தந்த சமத்துவச் சிந்தனையில் ஜாதியக் கட்டுகளில் இருந்து பொருளாதாரத்தில் வளர்ந்த இடைநிலை ஜாதியக் குழுக்கள் மீண்டும் இந்துத்துவ மனுதர்மக் கொடியைத் தூக்கக் காரணம், அரசியல் ஆதாயம் என்ற குறுகலான நோக்கம் அன்றி வேறெதுவும் இல்லை.

தமிழ் ஓவியா said...


தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்திலும் கடவுளின் பெயரில் உலகளாவிய போர்களும் உள்ளூர் ஜாதி மதச் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க.... ஊர் ஊராகச் சென்று... கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற கூவலுடன்... அத்தனை எதிர்ப்பையும் மீறி பகுத்தறிவினைத் தூண்ட அசாத்தியத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.

பெரியாரின் கொள்கைகள்தான் இன்று தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது. இதில் ஆட்சியாளர்களது பங்களிப்பு என்பது ஒரு செப்பனிடப்பட்ட நிலத்தில் பயிர் செய்வதைப் போல! பெரியாரின் கொள்கை வீச்சு, தமிழகத்தில் ஓரளவு மதத்தின் கட்டுமானங்களைத் தகர்த்தது. பெரியார் மட்டும் இல்லையென்றால் குலக்கல்வி புகுத்தப்பட்டிருக்கும்: சில ஆண்டுகள் ஜாதியத்தில் சுழன்று, சிக்கி மதத்தின், வருணாசிரமத்தின் வரையறைக்குள் ஒரு சிலரது ஆதிக்கத்தில் தமிழகம் பின்னடைந்திருக்கும்.

நாடு முழுமையிலும் பெரியாரின் காலத்தில் சமூகச் சிந்தனையாளர்கள் இருந்தனர். பெரியாருக்கு முன்பே ராஜாராம் மோகன் ராய், ஜோதி பா பூலே என முன்னோடிகள் இருந்தனர். ஆனால் பெரியாரின் பங்களிப்பு அவர்களை மிஞ்சியதற்குக் காரணம், பெரியார் தான் சமூக விடுதலைக்கான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு, தமிழகத்திலும் கேரளாவிலும் சமூக விடுதலைப் போராட்டம் எழுச்சியோடு மக்களால் நடத்தப்பட்டது.

இத்தகைய விழிப்புணர்வு இன்னும் வட மாநிலங்களில் இல்லை. தமிழகத்தையும் வட இந்திய மாநிலங்களையும் ஒப்பு நோக்கினால் அது புரியும். மதத்தின் கட்டுமானங்களில் உழன்று வரும் சமூகம் என்பதால் மிக எளிதாக ஒரு மசூதியை இடிக்க முடிந்தது. பெரியாரின் தாக்கம், நம்மைப் பண்பட்ட மனிதனாக மாற்றியுள்ளது. இது வரை, தமிழகத்தில் மதவாத சக்திகள் தங்கள் கடையை விரிக்க எத்தனைப் பிரயத்தனம் பட்டும் முடியாததற்குக் காரணம், திராவிடக் கொள்கைகள் வேரூன்றி இருப்பதுதான். இந்தியா முழுமைக்குமான பெரியாரின் தேவையை உணரும் காலகட்டம் இது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கலாம்; ஆனால் பெரியார் போன்று பகுத்தறிவை நிறுவனப் படுத்திய முயற்சி இல்லை. அதுவும்... திராவிட இயக்கம், ஒரு சமூக நிறுவனமாக இல்லாமல் அரசியல் நிறுவனமாகவும் நீட்சி கண்டது.

பல தலைமுறைகளைத் தன் வசப்படுத்தியது; மாணவர்களை எழுச்சி மிக்க பகுத்தறிவுப் பரப்புரையாளர்களாக வைத்திருந்தது. அந்த திராவிடப் பாரம்பரியத்தில் வந்த குடும்பங்கள், கடவுள் மறுப்பாளர்களாக மாறியதுடன், ஜாதியத்தின் மறுப்பாளர்களாக மாறத் தலைப்பட்டனர். கடவுள் மறுப்பு, ஆழமாய் வேரூன்றியிருந்த மனு தர்மங்களை அம்பலப்படுத்தியது. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது சுரண்டல் சமுதாயத்திற்கு எதிரானது. மதத்தினால் மழுங்கிய மூளையை சாட்டையடிப் பேச்சால் விழிக்க வைக்க பெரியாரால் முடிந்தது.

இந்து மதத்தினை _ அதன் கட்டமைப்பை, கட்டுக் கதைகளை, கேவலமான புராணப் புளுகுகளை இந்தியாவில் வேறெந்த சீர்திருத்தவாதியும் பெரியார் அளவுக்குச் சாடியதில்லை. பெரியாருக்கு ஈடாக ஒரு தலைமை, இந்து மதத்தின் முகத்திரையைக் கிழித்தார் என்றால் அது அம்பேத்கர் மட்டுமே.

ஆனால் அம்பேத்கரை _ அவரது கருத்துகளை ஒடுக்கப்பட்ட தலைவராக ஒடுக்கியது வரலாறு. அம்பேத்கரியம் ஒரு அறிவுசார் நிலையில் பெரியாரைவிட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும், பெரியாரின் இயக்கம் தனது பரவலை வெகுசன இயக்கமாக மாநிலம் முழுமைக்கும் கொண்டு சென்றது. பெரியாரின் கருத்துகளை எதிர்த்து நிற்க முடியாத பார்ப்பனியக் கட்டுக்கதைகளால் பின்னப்பட்ட சப்பைக் கட்டு விவாதங்கள் முன் பெரியாரியம் வேகமாகப் பலம் பொருந்தி மோதியது.

தமிழ் ஓவியா said...


மாநிலத்தின் அரசியல் கட்சிகள், பெரியாரின் வழித்தோன்றலாக திராவிடக் கொள்கைகளை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த அளவுக்கு அடித்தட்டு மக்களின் மனதிற்குள் பகுத்தறிவினை இயக்கமாக மாற்றியதால் தமிழகத்தில் புரையோடிக் கிடந்த பார்ப்பனியத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக பெரியாரால் இயங்க முடிந்தது.

பெரியாரியம் சமூக விடுதலையை முன்னிறுத்தியது; ஜாதியத்தைச் சாடியது; பெண்ணியம் பேசியது. ஒட்டுமொத்த சமூகத்தின் சீர்திருத்தத்திற்கான அஸ்திவாரமாக விதைக்கப்பட்டது. அரசியல் விடுதலை அடைந்த பின் மிக மிக அத்தியாவசியமான மாற்றமான சமூக விடுதலைக்கான இயக்கமாக திராவிட இயக்கம் நீண்ட நெடுங்காலம் தமிழகத்தில் வேரூன்றியதால் தமிழக மக்களின் சமூக வாழ்க்கை மேம்பட்டது.

இந்து வருணாசிரமத்தினை எதிர்க்கும் நிறுவனமாக பார்ப்பனியத்தை எதிர்த்ததன் விளைவு, மதத்தின் வீரியத்தில் வீழ்ந்து கிடந்த சாமனிய மக்களை கல்வியின் திசையில் பகுத்தறிவின் பாற்பட்டு சிந்திக்க வைக்க முடிந்தது. இது, சாமானிய மக்களைச் சுயமரியாதையுடன் வாழத் தூண்டியது. பார்ப்பன ஜாதி அடுக்கில் அல்லாத அனைத்து மக்களையும் பெரியாரியம் சென்றடைந்தது. இந்த ஒருங்கிணைப்பு, மற்ற மாநிலங்களில் அரசியல் சக்தியாகத் திரண்டது. அதுவும் இடைநிலை ஜாதிகளின் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒன்றாக இருக்கையில், பெரியாரின் கொள்கைகள் அரசியலைக் கடந்த சமூக விழிப்புணர்வாக இருந்தது.

அதனால்தான் வட இந்தியாவிலும் தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களிலும் ஜாதி இன்னும் வலுவாக அசைக்க முடியாது உள்ளது. அவ்விடங்களில் பகுத்தறிவின் பாற்பட்ட ஒருங்கிணைப்பாக இல்லாது, அரசியல் சக்திக்கான ஒருங்கிணைப்பாக இடைநிலை ஜாதிக் கட்சிகளாக இருந்ததால், இன்றும் ஜாதியமும் மதமும் அரசியலைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அதனால்தான் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பார்பனியத்திற்கு மாற்றாக இடைநிலை ஜாதிகளின் கூட்டமைப்பு வலுவாக உள்ளதுடன், அவை சமதர்ம சமூக நீதிக்காக தெளிவான சிந்தனையின்றி அதிகாரத்தைக் கைக்கொள்ளும் அமைப்புகளாக உள்ளன.

இம்மாநிலங்களில் பெண்ணியச் சிந்தனைகளோ பெண்களின் விழிப்புணர்வோ தமிழகத்தில் இருக்கும் அளவு பரவலாக இல்லை. பெண்களுக்கான சமூகநிலை தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது. கல்வி கற்ற பெண்கள் வேண்டுமானால் ஓரளவு உரிமைகளுடன் வாழ வழி இருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஆணாதிக்கத்தின் கீழ் சமூகத்தில் இரண்டாம் தர நிலையிலேயே சாமானியப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் அடிப்படை தமிழகம் தவிர்த்த பகுதிகளில் மதம் அதன் ஆதிக்கத்தை இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறது. மதத்தை மீறிய சிந்தனை என்பது சாத்தியமின்றிப் போனது. இதனால்தான் அரசியல் சுதந்திரமடைந்தாலும் சமூக விடுதலை என்பது சாத்தியமற்ற ஒன்றாக இன்னும் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னால் தமிழகத்தில் இருக்கும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் விழிப்புணர்வும் அவர்களது உரிமைகள் குறித்த சிந்தனையும் பெரியாரின் கருத்தால் நிகழ்ந்த மாற்றம்.

இன்றைய நிலையில் நாம் தெளிவடைந்த ஒன்றின் மீது இந்துத்துவப் போர்வை சூழ்ந்து மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. அதிலிருந்து மீள பெரியாரின் கருத்தியல் மீண்டும் முழு மூச்சுடன் மக்களுக்குச் சென்றடைவதும், பெரியாரை இந்திய அளவிற்கு எடுத்துச் செல்வதும்தான் சமதர்ம சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான வழி.

வெறும் கருத்தியலாக மட்டுமன்றி செயலாக்க வடிவத்தில் பெரியாரின் ஜாதிமறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பாக இல்லாமல் ஒட்டுமொத்த ஜாதிய மனநிலையின் எதிர்ப்பாக மீண்டும் வலுப்பெற வேண்டும்.

பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கான மாற்றத்தை பெரியாரின் கருத்தியல் மூலமாகவே வென்றெடுக்க இயலும். அதை இந்துமதத்தின் வர்ணாசிரமத்தின் மீதான, ஆணாதிக்கத்தின் மீதான தாக்குதலாக இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வதே அதற்கான வழி.

- மீனா சோமு

தமிழ் ஓவியா said...

ஆட்சிப் பீடத்தில் ஆர்.எஸ்.எஸ்?

ஒளிவு மறைவுத் திட்டங்கள்; திரைமறைவு வேலைகள்; மாறுவேடம் பூண்டு ஏய்த்தல், இரகசியத் திட்டங்கள் என்று வாழ்ந்த, வளர்ந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது அப்பட்டமாக, பட்டவர்த்தனமாக ஆட்சியைத் தன்பிடியுள் கொண்டுவரத் தொடங்கி, தன் செயல்திட்டங்களை வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டது.



ஆர்.எஸ்.எஸ்.ன் கொள்கையே ஆட்சியின் கொள்கை; அதுவே, தேசியக் கொள்கை என்ற முடிவில் செயல்படத் தொடங்கிவிட்டனர். எப்படியோ ஏய்த்து வாக்கு பெற்றாகிவிட்டது.

இனி அய்ந்து ஆண்டுகள் எதையும் செய்யலாம் என்ற முடிவில் செயல்படத் தொடங்கிவிட்டனர்.

பகவத் வெளியிட்டுள்ள கருத்துகள் இவற்றை பளிச்சென்று வெளிப்படுத்திவிட்டன. இனி அவர்கள் மறைவுத் திட்டங்கள் செயல்களைக் கைவிட்டு, நேரடியாகக் களத்தில் ஆட்சியை அதிகாரத்துடன் செயல்பட முனைகின்றனர் என்பது அவரது பேச்சால் அய்யமின்றி தெளிவாகின்றது.

பகவத் பகர்வது என்ன?

1. இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள். நாத்திகனாயினும் அவன் இந்துவே.

2. இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம். அது இந்துக் கலாச்சாரம் மட்டுமே. புத்தமும், சமணமும் இந்து மதத்தின் உள்ளடக்கமே!

3. தன்னையே நம்பாதவனே நாத்திகன்.

4. மோடியின் செல்வாக்கால் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்கள் ஏற்றதாலே ஆட்சியைப் பிடித்தோம். பகவத் பகர்ந்த பாசிச நச்சுக்களில் இவை முதன்மையானவை. இவை ஏதோ ஒரு தனி நபரின் கருத்துகள் அல்ல. திட்டமிட்டு, நன்கு சிந்தித்து, தனது ஆதிக்கத்தை அரங்கேற்ற அடிப்படை வகுத்து இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலில் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தான் என்ற. கருத்தின் உள்ளடக்கம், தத்துவம், இலக்கு என்ன? அதன் விரிபொருள் என்ன?

இந்துமதம் ஒன்றே இந்தியாவின் மதம். இந்து மதக் கோட்பாடுகளே இந்தியக் கலாச்சாரம் _ என்பதன்மூலம், இந்து மதத்தைச் சேராத கிறித்துவ, இஸ்லாமியர்கள்கூட இந்துக்களே என்று வலியுறுத்துகின்றனர்.

தமிழ் ஓவியா said...

அதன் பொருள் என்ன?

கிறித்துவமதம் உலகப் பெருமதமாக இருக்கலாம். இஸ்லாம் அதற்கு அடுத்த நிலையில் வளர்ந்திருக்கலாம். என்றாலும் இந்தியாவிற்குள் அம்மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் இந்து மதத்தையே ஏற்க வேண்டும். இந்துமதச் சித்தாந்தங்கள்படியே வாழ வேண்டும் என்கின்றார்.

இதன்மூலம் அவர்கள் சொல்வது என்ன? கிறித்தவராயினும், இஸ்லாமியராயினும் இனி இந்தியாவிற்குள் இருக்க வேண்டுமென்றால், இந்து மதத்தை _ அதன் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் நாட்டைவிட்டுச் சென்றுவிட வேண்டும்.

அடுத்து புத்தமும், சமணமும் இந்து மதத்தின் பிரிவுகளே! எனவே அவர்களும் இந்துக்களாகிவிட வேண்டும்.

இந்துமதச் சிந்தனைகளை எதிர்த்து, ஆன்மா, கடவுள் இவற்றில் நம்பிக்கையில்லாமல் அறிவார்ந்த, மனிதநேய மலர்ச்சியில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை மதமாக்கி, அதை இந்து மதத்தோடு கலக்க முயற்சிக்கும் திட்டமே இக்கருத்து.

தமிழ் ஓவியா said...

மூன்றாவதாக, கடவுளை, மதத்தை ஏற்காத, நம்பாத நாத்திகர்களும் இந்துக்கள் தானாம். அவர்களும் இந்து மதத்தை இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டுமாம்.

ஆக, இம்மூன்று கருத்துகளின் மூலம் அவர்கள் முன்வைக்கும் முடிவு என்ன?

இந்தியாவிற்குள் வாழும் எவரும், அவர் எந்த நம்பிக்கை, கொள்கை, கலாச்சாரம் உடையவராயினும் அவர்கள் கட்டாயம் இந்துக்களாகிவிட வேண்டும். இந்தியா இந்துதேசம்; இந்துத்துவாதான் அதன் கலாச்சாரம்.

இதை ஏற்றே மக்கள் வாக்களித்துள்ளனர். மோடி இந்தியாவை வல்லரசாக்குவார் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மோடியின் வேலை இந்தியாவை வல்லரசாக்குவது அல்ல. இந்தியாவை இந்து நாடாக்குவது மட்டுமே! என்பதே மேற்கண்ட கருத்துகளின் இலக்கு, முடிவு, செயல்திட்டம் எல்லாம்.

நாத்திகர் தன்னம்பிக்கை அற்றவர்கள். இப்படிக் கூறும் பைத்தியக்காரர்கள் கையில் ஆட்சியென்றால் இனி இந்தியாவின் நிலையென்ன?

இறை மறுப்புக் கொள்கையாளன் நாத்திகன். இறையை நம்பாதவன் என்றாலே தன்னை நம்புகின்றவன் என்று பொருள். மாறாக கடவுளை நம்புகிறவன் தன்னை நம்பாதவன். நம் கையில் எதுவும் இல்லை; எல்லாம் இறைவன் செயல் என்பவன். அப்படியிருக்க இந்த உண்மைக்கு முற்றிலும் மாறாக இவர்கள் பேசுகிறார்கள் என்றால் தெரியாமல் பேசவில்லை; தெரிந்தே பேசுகிறார்கள்!

தாதா ராஜ்யம் நடத்த தடியேந்திவிட்டார்கள். சரி, தப்பு, தருமம், நேர்மை இதெல்லாம் இல்லை; நாங்கள் சொல்வதே தருமம். அதுவே சரி. அதை அப்படியே ஏற்பதே மக்களின் வேலை. பகுத்தறிவு, ஜனநாயகம், மனித உரிமை இவையெல்லாம் மண்ணில் போட்டு மூடு என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதே இதன் பொருள். அது மட்டுமல்ல, ஆட்சிப் பீடமே ஆர்.எஸ்.எஸ். பிடியில்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதும் பொருள்.

ஆக, பிற மத மக்களுக்கும், மனிதநேயச் சிந்தனையாளர்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும், பெண்ணுரிமைச் சிந்தனையாளர்களுக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும், பன்மைத் தன்மை பேணும், காக்கும், பின்பற்றும் நடைமுறைக்கும் முற்றிலும் எதிரான, சற்றும் நியாயமில்லா, பாசிசக் கொள்கை பறையறையப்பட்டுவிட்டது.

இனி மேற்கண்டவர்கள் விழிப்போடிருந்து, ஒன்றுபட்டு, கிளர்ந்தெழுந்து மக்களாட்சி மாண்பு காக்க வேண்டியது உடனடிக் கடமையாகும்.

இல்லையென்றால் வெறிப்பிடித்தவர்களின் வேட்கையால் இந்த நாட்டின் எதிர்காலம் எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் எச்சரிக்கை!

- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் சூளுரை

இந்தியா - விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அந்நாடு - பலவகையான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் ஒரு நாடான போதிலும்கூட, அது வளர வேண்டிய அளவுக்கு வளராமல் மிகவும் கீழான நிலையில் இருப்பதற்கு மூலகாரணம் அங்குள்ள ஜாதி முறைதான். அந்தத் தீமையை ஒழிக்காவிட்டால் அந்த நாடு எளிதில் முன்னேற முடியாது என்று சில மாதங்களுக்குமுன் வெளியிட்ட ஒரு நூலில் (உலகத்தின் பல நாடுகளைப்பற்றிய எனது கண்ணோட்டம் என்ற ஒரு ஆங்கில நூலில்) நவீன சிங்கப்பூரின் தந்தை என்று கருதப்படும் லீக்வான்கியூ அவர்கள் எழுதியுள்ளார்கள்.



சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் ஜாதி- தீண்டாமை _ அதன் காரணமாக ஜாதிப் பஞ்சாயத்துகள் (காப்பஞ்சாயத்து என்று வடபுலத்தில் ஹிந்திக்காரர்களால் அழைக்கப்படுவது) ஜாதி மறுப்பு, காதல் திருமணங்கள் படித்த இளைஞர்களிடையே ஏற்பட்டால், ஜாதி வெறியர்கள் அவர்களைக் கொலை செய்வதும், ஜாதி வெறி பிடித்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களுமே இதற்குத் தூண்டுதலாக அமைதலும் நாளும் குறைவதாகவே தெரியவில்லை.

பெரியார் பிறந்த மண்ணில் தமிழ்நாட்டில் - இந்த ஜாதி வெறி, சில அரசியல் பதவி வேட்டைக்கார சந்தர்ப்பவாதிகளால் நாளும் நீர் ஊற்றி, உரம் போட்டு வளர்க்கப்படுகிறது.
ஜாதியை அரசியல் மூலதனமாக்கி, அதன் மூலம் எப்படியாவது பதவி சிம்மாசனத்தில் அமர நினைக்கும் இவர்களால் அப்பாவி இளைஞர்கள் _ வளர வேண்டிய இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி வெறி என்ற புற்று நோய்க்கு ஆளாகி, வாழ்நாளை வீணாக்கி, வீழ்ந்து வருகின்றனர்!

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில், மீண்டும் ஜாதி வெறி, மதவெறிக்குப் புத்துயிர் ஊட்ட, ஆட்சியும், அரசியலும் அருமையான கருவிகள் என்ற நோக்கோடு ஊடகங்களின் துணையோடு பழைய கருப்பனாக - பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த குலதர்ம சமுதாயம் மீண்டும் தோன்றுவதற்கு கடுமையான முயற்சிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதன்மூலம், தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றனர்.

ஜாதியின் தேவை, மேன்மையை நியாயப்படுத்தியும், சிலாகித்தும் பேசும் அளவுக்கு இப்போது இந்த மண்ணில் ஒரு குருட்டுத் தைரியம் முளைத்துள்ளது. இந்த அறைகூவலை ஏற்க நாம் (திராவிடர் கழகம்) மட்டுமல்ல, அனைத்து முற்போக்கு சக்திகளும் முண்டா தட்டி களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

சமுதாய ஒருமைப்பாடு இன்றி, தேசிய ஒருமைப்பாடோ, மற்ற எந்த வெங்காயமோ ஒரு போதும் ஏற்பட முடியாது.

உண்மைச் சுய ஆட்சி வரவில்லை. இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது. இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா? என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் பிறந்துவிட்டது. தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் எடுக்கும் சூளுரை - ஜாதித் தீண்டாமை ஒழிப்புக்காக அனைத்துக் கள அறப்போரில் ஈடுபடுவது என்பதேயாகும்!

ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஓர் அணியாக ஆக்கிச் செயல்பட திட்டம் வகுப்பது அவசர அவசியமாகும்.

தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம், தாசம்பட்டி என்ற ஊரில் தேநீர் சிற்றுண்டிச் சாலை நடத்தும் சில கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, தீண்டாமையைப் பாதுகாத்து, ஜாதியைப் பாதுகாக்கும் முறை இருப்பதாகப் புகார் வந்ததையொட்டி, தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் (மாவட்ட எஸ்.பி) அவர்கள் ஆணையின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் இதுபற்றி நடவடிக்கை எடுத்து, இரட்டைக் குவளை வைத்து, தேநீர்க் கடை நடத்துவோர்மீது வழக்குப் போட்டு, கைது செய்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. மற்ற மாவட்ட காவல் துறையினரும் பின்பற்ற வேண்டியதாகும்.

பாலக்கோடு வட்டம், நம்மாண்டஹள்ளி பகுதியிலும், இதுபோல சிலர் இதே குற்றத்திற்கு தீண்டாமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.

இதுபோலவே இம்மாவட்டத்தின் பிற பகுதிகளான அரூர், பொம்மிடி, பாபிரெட்டிப் பட்டி - போன்ற பகுதிகளிலும்கூட உள்ளன என்று பல ஏடுகளில் செய்திகள் வருகின்றன.

அந்த மாவட்டத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டில் வேறு சில மாவட்டங்களிலும்கூட இந்த இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.

தேநீர்க் கடைகளில் சட்டம் ஊமையாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது!

இந்த தர்மபுரி நடவடிக்கைபோல எங்கும் பரவலாக சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த ஜாதிவெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க குண்டர்சட்டம் போன்றவை பாய்ச்சப்பட்டால்கூட தவறல்ல.

ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் மட்டும் போதாது; இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளின் துணையும், செயலும் தேவை! தேவை!!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!


பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

நாவலாசிரியரின் நகைச்சுவை

இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள் (1)



சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!

சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,

என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)

பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!

மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.

இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.

அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.

இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!

நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.

இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.

தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.

அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.

அதுபற்றி நாளை எழு துகிறேன்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/88581.html#ixzz3F2j1uwWX

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பல்லி

என் நண்பர் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பார்த்துப் பார்த்து 6 மாதங்களாக கஷ்டப்பட்டு மிக அழகான வீட்டைக் கட்டினார். மிகச் சிறப்பாக திறப்பு விழா செய்தார். 5 லட்சம் செலவு செய்தால் கூட அப்படி ஒரு அம்ச மான வீட்டை கட்ட முடியாது. இருந்தாலும் குடும்பத்தோடு குடிபோன வர் 6 மாதங்களில் கட்டிய வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார். காரணம், ஒரு பல்லிகூட வீட்டில் இல்லையாம். பல்லி இருந்தால்தான் வீட்டில் லட்சுமி இருப்பாள். பல்லி இல்லாத வீடு பாழ டைந்த வீடு என்றார். இந்தக் காலத்தில் இப்படியுமா மனிதர்கள்? ஒரு வார மலரில் இப்படி ஒரு பெட்டிச் செய்தி.

அதெல்லாம் சரி, அந்த லட்சுமியான பல்லி சமையலில் விழுந்து, அதனைச் சாப்பிட்டிருந்தால் நேர டியாக பரலோகம் தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88560.html#ixzz3F2jeZXfa

தமிழ் ஓவியா said...

நவகண்டம்


தி தமிழ் இந்து ஏட்டில் (21.9.2014, பக்கம் 11) விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு என்ற தலைப் பில் ஒரு தகவல்:

வரலாற்று ஆய்வாள ரும், எழுத்தாளருமான இரா.முருக வேள் எழுதியிருக் கும் மிளிர்கல் வரலாற்று நாவலில் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து உயிர்த் தியாகம் செய்பவர் களைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம்: 200 ஆண்டு களுக்கு முன்புவரை தமிழ் சமூகத்தில் சுயபலிகள் இருந் தன. மன்னர் உடல்நலம் பெறு வதற்கு, போரில் வெற்றி பெறு வதற்கு மற்றும் ஊர்ப் பொது நன்மைக்கு இது போன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி, மரத்திலோ, ஒரு கம்பத் திலோ இணைத்து கட்டி விடுவார் கள். பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த குழந்தை களும், பெண்களுமே பலி யிடப்பட்டனர் என்றார் என்று தமிழ் இந்து ஏட் டில் செய்தி வெளிவந்துள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து கொள்வதற்கு அரிகண்டம் என்று பெயர். நவகண்டம்/அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனை வரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடை வாளும், மார்பில் கவசமும் தரித்து, போர் வீரன்போல் போர்க் கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்குப் பூஜை முடித்து பின்பு, தனது இடது கையி னால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட் டிக் கொண்டு இறப்பார்களாம்.

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள்!

1. வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படு கிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக் கையில் நவகண்டம் கொடுக் கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அர சனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவ கண்டம் கொடுக்கப்பட்டது.

3.நோயினால் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல், வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண் டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்குள்ளாகும் போது, அவ்வாறு சாகாமல் அரசின் அனுமதியுடன் நவ கண்டம் கொடுத்துக்கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க் காயத் தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்கவேண்டிய கடமை கள் ஏதும் இருக்குமாயின், தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக் கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப்பெரிய அவமானத்தை பெற்ற பின், அதற்குமேல் வாழ விரும் பாமல், சாக விரும்புகிறான். ஆனால், கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத் துக் கொள்வது.

பிற்காலத்தில் கோவில் கட்டுவதற்கு, தடைப்பட்ட தேரோட்டத்தை நடத்துவது உள்பட்ட காரணங்களுக்காக வும் மேல்ஜாதிக்காரர்களால் கீழ்ஜாதிக்காரர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் நவகண்டம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தப்பட்டார்கள்; இதில், கீழ்ஜாதிப் பெண்களும், குழந் தைகளும் கூட விதிவிலக்கு இல்லையாம்.

என்ன கொடுமையடா இது! கொடூரமான மூட நம் பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அதற்குக்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கா ரர்கள்தான் கிடைத்தார்களா?
நவகண்டம்/அரிகண்டம் என்ற சொற்களைப் பார்க்கும் பொழுது, இவை தமிழ்ச் சொற் கள் அல்ல. இது அயல்வழி ஆரிய ஆதிக்கத் திணிப் பாகவே தோன்றுகிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88140.html#ixzz3F2jxtcOc

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உல்டாவா?

கோவில்= கோ+இறை வன். இல் - இல்லம்; அதா வது இறைவன் தங்கும் இடம் என்று பொருள். ஆலயம் என்ற சொல் லுக்கு ஆன்மா லயிக்கும் இடம் என்று பொருள். கடவுள் என்றாலும் இதே பொருள் உண்டு. கட என் றால் கடந்தவர் என்று அர்த் தம். உள் என்றால் உள்ளம் என்று பொருள். கடவுள் என்பவர் உள்ளத்தையும் கடந்தவர் என்று பொருளா கும் என்கிறது ஓர் ஆன் மிக இதழ் (19.8.2014).

உள்ளத்தையும் கடந்த வர் கடவுள் என்றால், உள்ளமே கோவில்; அதில் உறைபவன்தான் இறை வன் என்று சொல்லுவ தெல்லாம் உல்டா தானா?

Read more: http://viduthalai.in/page1/88146.html#ixzz3F2kA4Ueg

தமிழ் ஓவியா said...

மூன்று பேய்கள் - அய்ந்து நோய்கள்!


நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று. அவை 1. கடவுள், மதம், சாஸ்திரம் 2.ஜாதி 3.ஜனநாயகம்.

நம்மை அரித்துவரும் நோய்கள் அய்ந்து. அவை 1. பார்ப்பான் 2.பத்திரிகை 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5. சினிமா

Read more: http://viduthalai.in/page1/88147.html#ixzz3F2kL1XYy

தமிழ் ஓவியா said...

திரிபுரா முதல்வரும் எச்சரிக்கிறார்!


மதச்சார்பற்ற இந்தியாவை ஹிந்து மக்கள் தேசமாக்க முயற்சிக்கிறது - மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. என்று நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார். இவர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர் (மார்க்சிஸ்டு) என்பதால் இப்படிக் கூறுகிறார் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது.

பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக்கொண்டு கடந்த 16 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் கூட இந்த நான்கு மாதங்களில் இதே கருத்துக்கு வந்துள்ளன என்பதும் கண்கூடு!

பிரதமர் நரேந்திர மோடியே ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர் என்பதும் தெரிந்த ஒன்றே! ஆர்.எஸ்.எஸ். தலைமை கிழித்த கோட்டைத் தாண்ட முடியாது; கொஞ்சம் அய்யப்பாடு ஏற்பட்டால்கூட பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவார் மோடி.

மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சியில் இருந்தபோது ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் அய்க்கியமானாலும், ஆர்.எஸ்.எஸ். பிடி யிலிருந்து விலக முடியாது - அதன் தொடர்பை அறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி, ஜனதா அமைச்சர வையிலிருந்து வெளியேறியவர்கள் ஆயிற்றே! ஜனதாவிலும் உறுப்பினர், ஆர்.எஸ்.எஸிலும் உறுப்பினர் என்கிற இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மதுலிமாயி போன்றவர்களும், ஜனதா தலைவர் களும் அறுதியிட்டுக் கூறிய நிலையில், அமைச்சர் பதவிகளைவிட ஆர்.எஸ்.எஸ்.தான் முக்கியம் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டவர்கள் ஆயிற்றே!

இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டால்தான் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யின் சிண்டு ஆர்.எஸ். எஸின் சர்சங்க் சலாக்கின் (தலைவரின்) கையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

சித்தாந்தத்தை வகுப்பது ஆர்.எஸ்.எஸ். என்பதால், அதன் கை மேலோங்கி நிற்கிறது. அந்த முறையில் இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினாலும், அதற்குமேல் எவரும் வாய் திறக்க முடியாத நிலை!
நரேந்திர மோடியைப் பொறுத்தவரை தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொன்னவர்தானே! இவற்றை யெல்லாம் கவனமாகக் கணக்கில் கொண்டால் திரிபுரா முதலமைச்சர் கூறுவதன் உண்மையின் அருமை புரியும்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மதவாதம் மதம் பிடித்த யானையாக தறிகெட்டு ஆட்டம் போடுகிறது. உத்தரப்பிரதேசத்தை மதக்கலவரப் பூமியாக மாற்றிவிட்டது.

இப்பொழுது லவ்ஜிகாத் என்ற ஒன்றை ஆர்.எஸ். எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கிளப்பி விட்டு இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, மத மாற்றம் செய்வதாகப் புரளியைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்விளைவை ஏற்படுத்தி, பி.ஜே.பி.யை மண்ணைக் கவ்வச் செய்த பிறகும் புத்திக் கொள்முதல் பெற்றதாகத் தெரியவில்லை.

சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவிற்கு வந்தார் அல்லவா - அப்பொழுதும் ஒரு கூத்து பி.ஜே.பி. ஆட்சியால் அரங்கேற்றப்பட்டது; அது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சீன அதிபர் வந்தபோது அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் விடுதியில் (ஓட்டல்) பணியாற்றி வந்த வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சீன அதிபர் தங்கி இருந்த நாளில் வேலைக்கு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் பணியாற்றியவர்கள் இந்து தோற்றத்துடன் சீன அதிபரை வரவேற்றனராம். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாம்.

இதுகுறித்து அசாம் முதலமைச்சர் தருண் கோகய் கடுமையாக தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த உத்தரவு வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்ப தாகும். எங்களை நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா? அல்லது இந்தியாவின் குடிமக்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? இது எந்த வகையில் சரி? என்ற அர்த்தமுள்ள வினாவை சுயமரியாதையுடன் எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வர, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது நிலைமை? நான்கு மாதங்களுக் குள்ளேயே இப்படி தலைவிரி கோலமாக இந்துத்துவா ஆட்சியாக ஆட்டம் போடுகிறது என்றால், இன்னும் சொச்சகாலம் எப்படிக் கழியும் என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது.

மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமைப் பலத்தால்தான் இந்த ஆபத்தை முறியடிக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page1/88148.html#ixzz3F2kULiK3

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அம்பிகை

அம்பிகையாகிய அன்னையை நவராத்திரி காலத்தில் தியானிப்பதால் வழிபடுவதால் சகல பாவங்களும் நிவர்த்தி யாகும், சிறப்பும் மேன் மையும் ஏற்படும் என்பது அய்தீகமாம்.
கடந்த வருடம் இதே நவராத்திரியில் அம்பி கையை வழிபட்டவர் களுக்கு என்னென்ன பாவங்கள் நீங்கின? என் னென்ன மேன்மைகள் சிறப்புகள் வரவுகள் அமைந்தன என்று எந்தப் பக்தராலாவது கணக்குப் போட்டுச் சொல்ல முடி யுமா? நேரமும், பொரு ளும் பூஜைக்காக செல வழிக்கப்பட்டதைத் தவிர கண்ட பலன் என்னவாம்?

Read more: http://viduthalai.in/page1/88108.html#ixzz3F2ktvWO5

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/88110.html#ixzz3F2l6Oep9

தமிழ் ஓவியா said...

பதில் கூறட்டுமே!

செண்பகக் காட்டிலும் (தினைப்புனத்து) பரண்மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளி யின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளை யும், வளையல்களை அணிந்த புதுமூங்கில் அனைய தோள் களையும், சந்திரனை ஒத்த (குளிர்ந்த) ஒளி வீசும் முக மென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும் இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம்( நாத நாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகு வாய்ந்த தம்பலப்பூச்சி (இந்திரகோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்தர சாபம் (இந்திரவில் - வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு குழைகளைத் தூக் குகின்ற காதணியும், இந்த்ர நீலம் (நீலோற்பவ மலர்) போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி மகிழ்ந்த பெருமாளே வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல. ஆனால் எழுதுவ தற்கு அரிதான வள்ளியின், இந்தளாம்ருத வசனத்தை யும் எழுதினார் என்கிறார் அருணகிரிநாதர். இது முருகன் திறத்தைக் காட்டு கிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர் என் கிறார் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளை. முருகன் வள்ளியின் உரு வத்தை சித்திரம் தீட்டி யதைப் போல திருப்புகழ் வெள்ளி விழா மலரின் (திருப்புகழ் வைபவம்) அட் டையில் ஓர் அற்புதமான ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

திருப்புகழ் வெள்ளி விழா மலர் இணையதளம்

கடவுளைக் கற்பித்தவர் கள் எப்படியெல்லாம் தங்கள் கை வண்ணங்களைக் காட் டுகிறார்கள். முருகக் கடவுள் ஓவியராம். வள்ளியின் அங் கங்களை எல்லாம் அப் படியே தீட்டினாராம்.

முருகனாகட்டும், சிவனா கட்டும், விநாயகனாகட்டும், பார்வதியாகட்டும், லட்சுமி யாகட்டும், சரஸ்வதியாகட் டும், விஷ்ணுவாகட்டும், பிரம் மாவாகட்டும், ராமனாகட் டும், கிருஷ்ணனாகட்டும் இவர்களையெல்லாம் நேரில் பார்த்தவர்கள் யார்? படம் பிடித்தவர்கள் யார்?

மணிவர்மா என்ற ஓவி யரும் கொண்டையராஜ் போன்ற ஓவியரும் இல்லா விட்டால் இந்தக் கடவுள் களின் உருவங்கள் யாருக்குத் தெரியும்?

உண்மையிலேயே இந்தக் கடவுள்களைப் படைத்த பிரம்மாக்கள் இந்த ஓவியர்கள் தாம்.

பிரபல சிற்பியான கணபதி ஸ்தபதி அவர்கள் கல்கி இதழுக்கு ஒரு முறை பேட்டி அளித்தார்!

ஒரு கடவுள் சிலையை வடிக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ருபமா ஒரு கல்லில் அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்பட றீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பதான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்க தானே! எங்கக்கிட்ட அப்படி என்னதான் விந்தை இருக் குன்னு தெரிஞ்சுக்க வேண் டாமா? (கல்கி 11.6.2006)

இப்படி சொல்லியிருப்ப வர் சாதாரணமானவர் அல்லர்! எத்தனையோ கடவுள் சிலைகளை உரு வாக்கிக் கொடுத்த மிகப் பெரிய சிற்பி!

டாண்டாண் என்று கேள்வி கேட்கிறாரே!

கல்லைக் கடவுள் என்று கும் பிடும் பக்த சிரோன்மணி களும், தினமணிகளும் பதில் கூறட்டுமே பார்க்கலாம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88067.html#ixzz3F2m4Tz8Y

தமிழ் ஓவியா said...

சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page1/88056.html#ixzz3F2mRHbih

தமிழ் ஓவியா said...

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.

உடல் வெப்பக் கடுப்பு அகல...

பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு...

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும் வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க

அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page1/88076.html#ixzz3F2n0G9jw

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குண மாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை வாதம் மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம் ஆகிய வற்றைப் போக்கும்.

சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட செரிமான மின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும். ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும். ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்ற வற்றையும் கட்டுப்படுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page1/88077.html#ixzz3F2nBuAtH

தமிழ் ஓவியா said...

அட, அண்டப்புளுகு தினமலரே!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?

வெளியிட்டது - ஆனால், விஷமமாக!

இதோ தினமலர்....

நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.

பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:

கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!

தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?

இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;

என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?

கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?

தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/88079.html#ixzz3F2nQsAnV

தமிழ் ஓவியா said...

பெரியார் அய்யா பரவாயில்லையே!

திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் களுள் ஒருவரான டி.ஆர்.பாலு அவர்களைச் சந்தித்து உடல் நலம் பேணிட பரிந்துரைத்த பின்னர், மும்பை பிரிச் கேண்டி மருத்துவமனையிலிருந்து கிளம்பிய தமிழர் தலைவர் வாகனப் பயண நேரத்தில் உடன் பயணித்த இயக்கப் பொறுப்பாளர்களுடன், கடந்த காலங்களில் மும்பை நகருக்கு வந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட்ட நாள்களை நினைவு கூர்ந்தார். தோழர் சு.குமணராசன் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா 1979 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பொழுது அதில் தமிழர் தலைவர், திராவிடர் இயக்க முன்னோடித் தலைவருள் ஒருவரும் மேனாள் நாடாளு மன்ற உறுப்பினருமான ஏ.வி.பி. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டதை எடுத்துச் சொன்னார். அந்நாளில் மும்பைக்கு தந்தை பெரியார், இயக்க நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் பொழுதெல்லாம், தோழர்களின் இல்லத்தில் தங்கி, அவர்கள் ஏற்பாட்டில் சமைக்கப்பட்ட உணவினை அருந்தி மகிழ்வது வழக்கம். தந்தை பெரியாரது மறைவிற்குப் பின்னர் தமிழர் தலைவரும் அதே வழக்கத்தினைக் கைக் கொண்டார்.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்த வேளையில், உணவருந்த தனியார் உணவகத்திற்குச் செல்லலாமே! என ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் கூறிய வேளையில், உணவகத்திற்கு ஏன் செல்லவேண்டும் தோழர்கள் ஏற்பாடு செய்து சமைத்த உணவினையே அருந்தலாமே! என தமிழர் தலைவர் பதிலுரைத்த நிலையில், பெரியார் அய்யா பரவாயில்லையே! என அன்பு கலந்த மனநிலையினை ஏ.வி.பி.ஆசைத்தம்பி வெளிப் படுத்தினார். சிக்கனம் என்பது பெரியார் இயக்கத்தவரின் தனித்துவப் பண்பாடு, என தமிழர் தலைவர் கூறியது உடன் பயணித்த தோழர்களின் கவனத்தை - கருத்தை ஈர்த்தது.

Read more: http://viduthalai.in/page1/88040.html#ixzz3F2oicDfq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அழகே அழகு!

கடவுள்களில் வித்தி யாசமாக யானை முகம் உடையவர் விநாயகர். இவருக்கு சுகமன் என்று பெயர் உண்டு. இதற்கு நல்ல முகத்தை உடை யவர் என்று பொருளாம் - ஆன்மிக இதழ் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

சிரிக்காதீர்! ஆன்மிகத்தில் எதுவுமே அனர்த்தம் தான் விநாயகன் அழகன் என்றால் பக்தர்கள் வீட் டில் விநாயகர் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவார்களா?

Read more: http://viduthalai.in/page1/87975.html#ixzz3F2pFrk00

தமிழ் ஓவியா said...

பிருந்தாவன விதவைகள் இந்து மதத்தின் அடையாளங்கள்

இந்திய பெண்கள் ஆணையம் (NATIONAL COMMISSION FOR WOMEN) வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது, பிருந்தாவனத்தில் உள்ள மொத்த விதவைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டும். பிருந்தாவனத்தில் உள்ள முக்கிய 4 மிகப்பெரிய ஆசிரமங்களில் 30,000 விதவைகள் உள்ளனர்.

அங்கு மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. இவற்றில் 30 ஆசிரமங்கள் தவிர மற்ற அனைத்துமே அனுமதியின்றி சட்டவிரோதமாக துவங்கப்பட்டவை; விதவைப்பெண்கள் அனைவரும் அயல்நாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பராமரிக்கப் படுகின்றனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கணவனை இழந்த பெண்களை மதுராவிற்குக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதற்காக பல தரகர்கள் வேலை பார்க்கின்றனர். சில ஆசிரமங்களில் விதவைகளை கொண்டுவருவதற்காக தரகர்களுக்கு கையூட்டு கொடுக்கப்படுகிறது. அனுமதிபெற்ற ஆசிரமங்கள் விதவைப் பெண் களுக்கு கொடுக்கும் ஊதியம் படித்தவர்களாக இருந்தால் மாதம் 5 ரூபாய், படிக்காதவர்களாக இருந்தால் 2 ரூபாய். விதவைகளில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட விதவைகள் 2005 ஆம் ஆண்டு 60 பேருக்கு மேல் இருந்தனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட விதவைகள் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். பிரபல அரசு அனுமதிபெற்ற ஆசிரமங்களில் 140 இளம் விதவைகளும், அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கும் ஆசிரமங்களில் 800 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

திருவிழா நாட்களில் இவர்களுக்கு கொடுக்கும் உணவுப்பண்டம், பணம் மற்றும் இதரப் பொருட்களை பள்ளிக் குழந்தைகள், பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதி சாமியார்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டுமாம்.

இங்குள்ள 27 அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வெறும் 302 விதவைகளுக்கு மாத்திரம் வங்கிக்கணக்கு உண்டு ;அதுவும் முதியோர் பென்சன் பெறுவதற்காக; அதிலும் கையூட்டு பெற்றுக்கொண்டு தான் மீதிப் பணம் தரப்படுகிறது.

இது போன்ற கேடு கெட்டத்தனம் இந்த அர்த்தமற்ற இந்து மதத்திற்கே உரித்தான தனிக் குணாம்சமாகும். கணவனை ஒரு பெண் இழந்து விட்டால் அத்தோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருள். உயிரோடு வாழ்வதாக இருந்தாலும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் விதவை என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பெண், பல்வேறு அவமானங்களைச் சுமந்தே தீர வேண்டும். தோற்றம், நடை, உடை பாவனை சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலுமே அவமானப்படுத்தப்படும் நிலைதான்.

உயர் ஜாதி என்றும், பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் வீட்டில்கூட கணவனை இழந்த பெண் மொட்டை அடிக்கப்பட்டு, வெள்ளைப் புடவையை உடுக்கச் செய்து, மொட்டைப் பாப்பாத்தி என்ற அழைக்கப்படும் நிலைதான்.

ஏதோ தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றி, சுயமரியாதை இயக்கம் கண்டு, மறுமலர்ச்சி உண்டாக்கப்பட்டதால் பார்ப்பனர்கள் வீட்டில்கூட பெண்களுக்கு மரியாதை கிடைத்தது. தந்தை பெரியார் தோன்றாத வட இந்தியாவிலோ என்ன நிலை என்பதற்கு அடையாளம்தான் இந்தியப் பெண்கள் ஆணையம் தந்துள்ள புள்ளி விவரங்களும், தகவல் களும் - பிருந்தாவனத்தில் நடந்து கொண்டிருக்கும் அநாகரிகங்களும் ஆகும். இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போவதாக நீட்டி முழக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும், ராமராஜ்ஜியத்தை உண்டாக்க எங்களுக்கு வாக்களி யுங்கள் என்று உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்கு சேகரித்த நரேந்திர மோடியும் முதலில் பிருந்தாவனம் செல்லட் டும்; அந்த விதவைப் பெண்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யட்டும்!

இந்து மதத்தில் பெண்கள் அதிலும் குறிப்பாக விதவைப் பெண்கள் இப்படித்தான் கேவலப்படுத்தப் படுவார்கள்; இந்த அவமதிப்பு சாஸ்திர ரீதியானது என்று ஒருக்கால் இந்த இந்துத்துவா கூட்டம் சொன்னாலும் சொல்லும், யார் கண்டது?

இந்த நேரத்தில் நாம் வைக்கும் வேண்டுகோள் -இந்துப் பெண்களே, உங்களின் உரிமையும், மரியாதை யும் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதலில் இந்த இந்து மதத்துக்கு முழுக்குப் போடுங்கள். இந்து மதத்தில் அவமானப்படுத்தப்படும் பெண்களை மீட்டெடுங்கள்!

Read more: http://viduthalai.in/page1/87987.html#ixzz3F2pQvktb

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2psDiNy

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று!

மதாசாரியார்கள், குருக்கள், இறைவன் புதல்வர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள். அவர்களில் பலர் தொழில் செய்வதில்லை; கைத் தொழில் செய்யவில்லை.

பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காக பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களை படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், என்றும் துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள். -ராபர்ட் இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2pzEai6

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2q6Gi57

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2qHsH4K

தமிழ் ஓவியா said...

வடமொழியில் சிபாரிசா?

தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒருசாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர், குயில், புதுச்சேரி, 12.8.1958

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qRjsGr

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ் வில் ஒருவன் பெற்றி

ருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படு கிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான் றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qZHm6Q

தமிழ் ஓவியா said...

இந்தி திணிப்பு வேண்டாமே!

பிற இதழிலிருந்து

இந்தி திணிப்பு வேண்டாமே!


இந்தி திணிப்பு என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த மண்ணில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இன்று, நேற்றல்ல, 1937ம் ஆண்டே தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்தியை கட் டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பொங்கி எழுந்தார். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போராட்டத் தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறையில் உயிரிழந்தனர். 1,198 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட் டத்தின் விளைவாக காங்கிரஸ் அர சாங்கம் ராஜினாமா செய்தது. அப்போது கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபு இந்த உத்தரவை திரும்பப்பெற்றார். அன்று பெரியார் ஏற்றிவைத்த இந்தி எதிர்ப்பு உணர்வு, இன்றும் தமிழர்கள் நெஞ்சங்களில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தி திணிப்பில் பலமுறை முயன்று தோல்வி அடைந்த மத்திய அரசாங்கம், மீண்டும் 1965ம் ஆண்டில் ஜனவரி 26ந் தேதி குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த தமிழ்நாடே போர்க்களம் ஆகியது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் மாபெரும் போராட்டமாக தொடங்கி அவரும், மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிரொலியாக சி.பா.ஆதித்தனார் பாது காப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவையில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டமாக பற்றி எரிந்தது. 18 நாட்கள் நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 63 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கும், அன்று முதல் தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி, மாறி ஆட்சிக்கு வருவதற்கும் வித்திட்டது, இந்த இந்தி திணிப்பு முயற்சிதான். அதன்பிறகும் தொடர்ந்து இந்த முயற்சி கள் தலையெடுத்த நேரத்தில் எல்லாம் கிள்ளி எறியப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழிபேசும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆட்சியில் இந்தி திணிப்பு இருக்காது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், இந்தி அவரையும் கையில் எடுத்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசாங்க அதிகாரிகள் டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அலுவல் ரீதியான உத் தரவுகளை தெரிவிக்கும்போது ஆங்கிலத் தோடு, இந்தியையும் பயன்படுத்த வேண் டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், இல்லை, இல்லை இது இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டது. சமூக வலைத்தளங்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு என தனியாக இல்லையே, இது எப்படி சரியாக இருக்கும் என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இப்போது திடீரென பட்டப்படிப்பு களில் இந்தியும், ஆங்கிலமும் முக்கிய பாடமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக் கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. இது மட்டுமல்லாமல், ரெயில்வே துறை, பொது காப்பீட்டுத்துறை போன்ற வற்றின் மத்திய அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்கவேண்டும், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி யில் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திடீரென நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், 85 முதல் 90 சதவீதம் வரை மக்கள் இந்தி தங்கள் தாய்மொழி இல்லையென்றா லும், அந்த மொழியை புரிந்து கொள் வார்கள் என கூறி, ஏதோ ஒரு முயற் சிக்கு அச்சாரமிட்டு இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய், இந்தி உள்பட அனைத்து மொழிகளும் அந்த தாய்க்கு பிறந்த சகோதரிகள் என கூறியிருக்கிறார். ஒரு வாதத்துக்காக அவர் சொல்வதை ஏற்றுக் கொண் டாலும், எல்லா மொழிகளும் சகோ தரிகள் என்ற நிலையில், ஒரு சகோதரி யான இந்திக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது சரியா?, நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நேரத்தில், இந்தி திணிப்பு வேண்டாமே!

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 17.9.2014

Read more: http://viduthalai.in/page1/87937.html#ixzz3F2rFE19Q

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

செவ்வாய்க் கிழமைக் குத் தனிச் சிறப்பு உண்டு. செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தி திதியும் சேர்ந்தால் அது சாபங் களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும் என்கிறது ஓர் இதழ்.

இது உண்மையானால் செவ்வாயில் கல்யாணம் முதலிய நல்ல காரியங் களைச் செய்யத் தயங்கு வது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/88627.html#ixzz3F8MpBPwO

தமிழ் ஓவியா said...

பெண்கள் உடை:
சர்ச்சையில் சிக்கிய யேசுதாஸ்!

திருவனந்தபுரம், அக்.3- பெண்கள் ஜீன்ஸ் அணி வது குறித்து பிரபல பாடகர் யேசுதாஸ் தெரி வித்த கருத்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள் ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசா ரத்திற்கு எதிரானது என்றார். பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொந் தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் யேசுதாஸ் கூறி யுள்ளார். எளிமை மற்றும் உயர் பண்புகளை கொண்ட இந்தியாவின் கலாசாரம், ஜீன்ஸ் அணி வதன் மூலம் சீர்கெடுவ தாகவும் யேசுதாஸ் தெரி வித்தார். யேசுதாஸின் இந்த கருத்துகளுக்கு கேரள மகிளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதனை கண் டித்து திருவனந்தபுரத்தில் பேரணியும் நடைபெற்றது. யேசுதாஸின் கருத்துகள் ஏற்கதக்கதல்ல என்றும், பெண்களின் சுதந்திரத் திற்கு எதிரான என்றும் மகிளா காங்கிரஸ் தலை வர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார். அனைத்து இந்தியர்களாலும் மதிக்கப் படும் ஒரு பாடகர் பெண் களின் உடை குறித்து இவ்வாறு கருத்து கூறுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/88626.html#ixzz3F8N7BBpT

தமிழ் ஓவியா said...

எதிர்க்காமல்...

மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது. - (விடுதலை, 5.11.1967)

Read more: http://viduthalai.in/page-2/88653.html#ixzz3F8Nbhksx

தமிழ் ஓவியா said...

ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108 யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8OwmSlJ

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8P5lml1

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

************

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PLvmz9

தமிழ் ஓவியா said...

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!

பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய

தாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PUJ6dO

தமிழ் ஓவியா said...

என்றும் தொடரும்... எம் இனிய பயணம்!


இன்று நமக்கெல்லாம் விழிதிறந்த வித்தகர் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாள் பெருநாள் - திராவிடத்தின் திருவிழா!

அறியாமை இருளில் கிடந்து அவலத்தில் உழன்ற நமக்கு, அறிவொளி பாய்ச்சிய அறிவு ஆசானாம் நம் பகுத்தறிவுப் பகலவன் இந்தப் பாருக்குக் கிடைத்த நாள்! செப்டம்பர் 17.

பிறவி இழிவைச் சுமந்து, காலங்காலமாய்
தற்குறித்தனத்தைத் தம் உடைமை எனக் கருதி,
சிந்திக்கத் தெரியாத
அடிமைகளாய் வாழ்ந்த கோடானுகோடி மக்களுக்கு
அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு
சுயமரியாதைச் சூடுகாட்டி நம்மைத் தட்டி எழுப்பிய
ஏந்தலின் பிறந்த நாள் என்ற அறிவுத்திருநாள்!

அவருக்கு விழா என்பது நமது விடுதலையின்
விடிவெள்ளியின் வெளிச்சம் நம்முள்
பாய்ந்த நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள்!

நம் மக்கள் பயன்பெற்று நாம் நிமிர்ந்த நாள்!

சமத்துவம் அறியா மக்களுக்கு அதை அடைய
சரித்திரப் போராட்டங்களை நடத்தி சரி நிகர்
வாழ்வைப் பெற்ற நம் அருட்கொடை வள்ளலின்
பிறந்த நாள்!

பண்பாட்டுப் படையெடுப்பால் வீழ்த்திட்ட
ஆரியத்தை எதிர்த்து, அறப்போர்க் களத்தில்
நம்மை நிறுத்தி போராடச் செய்த
நம் அய்யாவின் பிறந்த நாள் இன்று!

அவர்கள் உருவத்தால் இன்று நம்மோடு இல்லை.
ஆனால், உணர்வால், தத்துவத்தால், இலட்சியமாய்
நம் இரத்தத்தின் அணுக்களாகி இரண்டறக்
கலந்துவிட்டார்!

பெரியார் தத்துவங்கள் நமது குருதி ஓட்டம்
என்றும் நமது கழகம் என்ற கலத்திற்கு
கலங்கரை வெளிச்சமும் அவருடைய வழி
முறைகளே!

அவர் போட்டுத் தந்த பாதை நமக்குத்
தடம்புரளாப் பாதை,
அவர் வகுத்துத் தந்த கோட்பாடுகளும்
கொள்கைகளும் நம் உயிர் மூச்சு!
அவர் காண விரும்பிய, ஜாதியற்ற சமூகம், நமது இலக்கு!
மூட நம்பிக்கைகள் ஒழிந்த பகுத்தறிவு வாழ்க்கை முறை - சுயமரியாதை வாழ்வு -
அனைத்துலகத்தின் உடைமையாய் மாறிட
அலுப்பின்றி உழைத்து,
அகிலத்தை ஏற்கச் செய்வதே நம் இலக்கும்
இலக்கு நோக்கிய பயணமும்!
எத்தனை இடர்கள், இமயமான
எதிர்ப்புகள், உடனிருந்தே கிளம்பும் துரோகங்கள்
- இவைகளையெல்லாம் எதிர்கொண்டும்
எமது பயணம் இலக்கினை அடையும்
இனிய பயணமாகத் தொடரும்
என்ற சூளுரை ஏற்கும் நாளே இந்நாள்!

வேடிக்கைத் திருவிழா அல்ல
வினை முடிக்க விண்கலமாய்ப் புறப்படும்
ஆயத்த நாள் இன்று!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பும்,
சமூகநீதி களத்தின் தொடர் அறப் போர்களும்
பெண்களை நோக்கிய வன்கொடுமைகளுக்கு
வகையான முடிவுகளை ஏற்படுத்தும்
விழிப்புணர்வுக் கடமையும்
எம்மை அய்யா தந்த
அறிவுச் சுடருடன் அயராப் பணி
யாளர்களாக விரைவுபடுத்தும்
சோர்வறியா சுயமரியாதைப்
படையாய் களத்தை நோக்கிய
பயணத்தின் மற்றொரு மைல் கல்லே -
136 ஆம் பெரியார் ஆண்டின் தொடக்கம்!

தொடங்கிய பயணம் தொய்வின்றித் தொடரும்!

வெற்றி நமதே!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
17.9.2014

Read more: http://viduthalai.in/page1/87881.html#ixzz3F8QQXgS6

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்

அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்

தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்

சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

Read more: http://viduthalai.in/page1/87892.html#ixzz3F8RxMiuq

தமிழ் ஓவியா said...

நாம் யார்?


சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பித்து என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத் திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கை யையும் உடையவராய் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

- தந்தை பெரியார், குடிஅரசு: 3.5.1931

Read more: http://viduthalai.in/page1/87897.html#ixzz3F8S6F6QC

தமிழ் ஓவியா said...

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!


குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

Read more: http://viduthalai.in/page1/87913.html#ixzz3F8SJVTQA

தமிழ் ஓவியா said...

தாய்மையையும் விஞ்சி


தாய்மையையும் விஞ்சிய தகைமையாய்,
தலைமைப் பண்பின் இலக்கணமாய்,
மன்பதைக்கு கலங்கரையாய்,
மனித நேய பேரொளியாய்,
தன்மானச் சுடரொளியாய்,
தகத்தகாய சூரியனாய்,
சூத்திரர்கள் காவலராய்,
சுரந்து நிற்கும் சிந்தை ஊற்றாய்,
பகுத்தறிவு கருவறையாய்,
பகைவருக்கு நெருப்பறையாய்,
உணர்வெழுப்பும் ஓங்காரமாய்,
ஓய்வறியா உயிர்நதியாய்,
சாதி ஒழிப்பின் அடையாளமாய்,
சமத்துவத்தின் ஆர்ப்பரிப்பாய்,
பெறற்கரிய பெட்டகமாய்,
பெண்ணுரிமை போராளியாய்,
வெண்தாடி வேங்கையாய்,
வீறு கொண்ட எரி மலையாய்,
வாழ்ந்திட்ட வைக்கம் வீரர், தந்தை பெரியார்,
தந்தையின் தடத்திலே தமிழர் தலைவர்!
தமிழர் தலைவர் கரம் கோர்ப்போம்!
தந்தை பெரியார் புகழ் சேர்ப்போம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி (தி.க.மாநில பொதுச்செயலாளர்)

Read more: http://viduthalai.in/page1/87915.html#ixzz3F8UWSSjO

தமிழ் ஓவியா said...

எதிர்வினை புரிந்த குரல் கவிஞர் கண்ணிமை


வினையாற்றிய வல்லாளர்களால்
ஊர்ப்பெயர் வரைபடத்தில் பதிந்ததுண்டு
பெரியாரால் இசை குவித்தது
நீரோடை என்னும் ஈரோடு
இவரை நெருப்பாக்கியது
இக்கந்தக நிலம்
கல்வி கேள்விகளாலும் கண்களாலும்
அச்சம் கண்டறியாத
எஃகின் வார்ப்படம்
இவரது கூர் நகங்கள்
கீறிக் கிழித்தது பழம்பஞ்சாங்கம்
பூவாங்கிக் கொடாதே
ஓர்... புத்தகம் வாங்கிக் கொடு
என்ற புதிய பொருள் மொழி
நால்வருணம் என்ற சொல்
மீளவும் முளைவிடாதவாறு
அடக்கம் செய்தவர்
கேள்விகளால் புலர்ந்த கிழக்கு
தனித்துச் சுட்டப்படும் தடம்
பகுத்தறிவுப் பாசறை
சுற்றிச் சுழன்ற கடற்சூறை
திருவிடத்தின் அகண்ட திரை
பகுத்தறிவுப் படைவீடு
அறிவு முகந்து புகட்டிய
காலக் கணியன்
மடமை இருள் அப்பிக் கிடந்த
உச்சிப் பகல்
கூனிக் குறுகிய மனிதன்
விடுதலை அறியாப் பாமரன்
கற்றலின் சீர் மறந்து
அடிமை வயப்பட்ட ஏழ்மை
படைத்தவன் எழுதிய விதி பசி
என வாழ்ந்த ஊமை
இன்னவாறான இருப்பின் பொதிகளை
அறுத்துக் கூறிட்ட அறக் கூற்றுவன்
வான்வெளியில் உயர நிற்கும்
ஒற்றைக் கோள்
உயர்வு நவிற்சி இல்லாத எளிய உரு.
இறைவீடு எல்லோர்க்கும் பொது என்று
வைக்கம் நுழைந்த
வரலாற்றுத் தோற்றுவாய்
திரியும் தீக்குச்சியும் வைத்து
வல்லினங்களை உரசி எறிந்தவர்
எரிபொருள் வெடிபொருள் நிரப்பும்
ஆரியப் படை கடந்த
கொங்குச் சோழன்
கருஞ்சட்டை அணி வரிசைகளால்
இருளின் அடர்த்தி அமிழ்த்துச்
சுவடின்றிச் செய்த சூரிய விளக்கு
தந்தை பெரியார் கடந்து ஒலிக்கும் என்றும்
எதிர்வினை புரிந்த குரல்!

Read more: http://viduthalai.in/page1/87880.html#ixzz3F8V1QN8z

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி எப்படி?


இந்தி திணிப்பு என்பதில் காங்கிரஸ் ஆட்சிகூட இலை மறை காய் மறையாக இருந்து வந்துள்ளது. இந்தி யாவிலேயே தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் மட்டுமே கலாச்சார ஆதிக்க எதிர்ப்பில் முன்னணி எரி மலையாக என்றும் எழுந்து நிற்கக் கூடியது!

இந்தி என்பது ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பின் ஒரு கூர்முனையாகும்; இந்தியில் இலக்கியம் என்று மெச்சத் தகுந்ததாக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும் நூல் துளசிதாசரின் இராமாயணமாகும்.

துளசிதாசரின் இராமா யணம் என்ன கூறுகிறது? இதோ இராமன் பேசுகிறான்:

பிராமணர்களை வெறுப் போர் என்னால் விரும்பப்பட மாட்டார்கள். பிராமணர் களின் செல்வாக்கிற்குட்பட்டு இருக்கின்ற பிர்மாவும், சிவனும், பிற கடவுளரும் பிராம்மணர்களை விசுவாசத் துடன் வழிபடுகின்றனர்.

பிராமணன் ஒருவன் சாபம் கொடுத்தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற் களைப் பேசினாலும்கூட அந்தப் பிராமணன் வழிபடத் தக்கவன்.

இந்தவுலகில் ஒருவன் செய்யத்தக்க நற்செயல் ஒன்றே ஒன்றுதான். அந்த நற்செயல் என்பது பிரா மணர்கள், ரிஷிகள் முனிவர் களின் பாதங்களை வணங்கு வதுதான். அவ்வாறு செய் தால் கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று இராமன் கூறுவதாக துளசி தாசரின் இராமாயணம் கூறுகிறது.

இதனைத்தான் இந்தி யைப் படிப்பதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகி றோம் என்று சுட்டிக் காட்டினார் தந்தை பெரியார்.

1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தையும், மனு தர்ம சாஸ்திரத்தையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எனவே இந்தி மொழி என்றாலும், அதன் தாயான சமஸ்கிருதம் என்றாலும் அவை பரப்புவதெல்லாம் வருணாசிரம நோய்களைத் தான், பார்ப்பன ஆதிபத்தி யத்தைத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்துத்துவாவை வலியுறுத்தும், இந்து ராம ராஜ்யத்தை உண்டாக்குவ தாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சிப் பீடம் ஏறிய பி.ஜே.பி. ஆட்சி இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் ஆச்சரியப்படுவ தற்கு என்ன இருக்கிறது?

அய்.நா.விலேயே பிரதமர் நரேந்திரமோடி இந்தியில் பிளந்து கட்டப் போகிறார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீட்டி முழங்குகிறார். வாஜ்பேயி கூட அய்.நா.வில் இந்தியில் தான் பேசினார் என்றெல் லாம் கூடக் கூறியுள்ளார்.

இதுபற்றிய ஒரு தகவல் குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் வாஜ்பேயி குறித்து அறிஞர் அண்ணா சொன்ன தகவல் அது.

ஜன சங்கத்தைச் சேர்ந்த வாஜ்பேயி என்னும் உறுப் பினர் ஆங்கிலத்தில் நன் றாகப் பேசக் கூடியவர் அவர் மாநிலங்களவையில் பேசும் போதெல்லாம் இந்தியி லேயே பேசுகிறார். அவரிடம் நான் நண்பர் என்ற முறை யில் கேட்டேன்.

நீங்கள் பேசுவதையெல்லாம் நாங் கள் புரிந்து கொள்ள வேண் டாமா? ஆங்கிலத்தில் பேசக் கூடாதா? என்று. அதற்கு அவர் நான் வெளியில் வந் ததும் உங்களுக்கு ஆங்கிலத் தில் விளக்கிச் சொல்லு கிறேன். உள்ளே இந்தியில் தான் பேசுவேன் என்றார்.

இங்குள்ளவர்களுக்கு இது இந்தி வெறியாகப்பட வில்லை. போலீஸ் ஸ்டே ஷனை காவல்நிலையம் என்று சொன்னால் தமிழ் வெறியாகப்படுகிறது என்றார் அண்ணா.(சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவை 1963-64-இல் வெளியிட்ட சிறப்பு மலரில்).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/87835.html#ixzz3F8YulAcS

தமிழ் ஓவியா said...

வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page1/87831.html#ixzz3F8ZNEGbk

தமிழ் ஓவியா said...

வேட்பாளரை கடவுள் கைவிட்டதால், சென்னை உயர்நீதி மன்றத்தில் சரண்!


"ஜனநாயகம் என்பது காலிகள் நாயகம்" என்ற தந்தை பெரியாரின் பொன் மொழியை மெய்ப்பிக்கும் வகையிலும், 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற கதைப்பை பொய்ப்பிக்கும் வகையிலும் ஒரு நிகழ்வு மதுரையில் நடைபெற்றுள்ளதை நமது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான்.

விவரம் வருமாறு:- மதுரை மாநகராட்சி தேர்தலில் 85-ஆவது வட்டத்திற்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வைச் சேர்ந்த அரிகரசுதன் விண்ணப்பித் திருந்தார். விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மதுரையில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோவி லில் பயபக்தியுடன் "சாமி" கும்பிட்டு விட்டு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பித்தார். ஆனால் நடந்ததோ பயங்கரமான

அதிர்ச்சி! அவர் வேட்பாளர் மனு வைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் அ.தி.மு.க. வேட்பாளர் லதா போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் உதவி தேர்தல் அதிகாரி அறிவித்து அதற்கான சான்றிதழையும் அளித்து விட்டார்.. "தான், மனுவைத் திரும்பப் பெற்றதைப்போல, போலி மனுவைத் தயாரித்து, அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாகவும் . எனவே தனக்கு நீதி வழங்க வேண்டு மெனக் கேட்டும் "சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உதவித் தேர்தல் அதிகாரி கதவைப் பூட்டி விட்டு ஆணையாளர் அறையில் ஒளிந்து கொண்டதாகவும் தனது மனுவில் குறிப் பிட்டுள்ளார். நீதியரசர் திரு டி.எஸ். சிவஞானம் வழக்கை விசாரித்து வருகிறார்.

ஜனநாயகம் எப்படிக் கேலிக் கூத்தாகிறது என்பதை, தந்தை பெரியார் அவர்கள் காலிகள் நாயகம் என்று உரைத்தது, இப்பொது மக்களுக்கு உறைக்கும்!

அது சரி! வழக்குத் தொடர்ந்தவர், "இம்மையில் நன்மை தருவார்" கடவுள் தன்னை ஏமாற்றியதையும் மனுவில் குறிப்பிட்டு அவர் மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தால் வரவேற்கலாம்! . கட வுளையும், நம்பிக்கையையும் மட்டுமே பேசும் பா.ஜ.க.வும் கடவுளைக் கைகழுவி, விட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டது நல்லதொரு திருப்பமே!

- தி.ப.பெரியாரடியான்,
தூத்துக்குடி

Read more: http://viduthalai.in/page1/87829.html#ixzz3F8ZVYAYu