Search This Blog

5.7.14

கடவுள் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் இலட்சணத்தை பாரீர்!

 சங்கராச்சாரியாரின் கொடும்பாவி எரிப்பு!


துவாரகை சங்கராச்சாரியார் சொரூபானந்த சரஸ்வதியாரின் 
கொடும்பாவியை சீரடிசாயிபாபாவின் பக்தர்கள் வடக்கே ஆங்காங்கே கொளுத்துகின்றனர்.

என்ன காரணம்? சீரடி சாயிபாபாவைப்பற்றி துவாரகை சங்கராச்சாரியார் தெரிவித்த கருத்துக்கள் வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளன.

அப்படி என்னதான் சொல்லி விட்டார் சங்கராச்சாரியார்? சீரடி சாயிபாபா ஒரு முஸ்லீம்; அவர் கடவுளின் அவதாரம் கிடையாது. அவரை உண்மையான இந்துக்கள் யாரும் வழிபடக் கூடாது என்று கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணமாகும்.

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் தன்னை சீரடி சாயிபாபாவின் பக்தை என்று கூறி யுள்ளதற்கும் துவாரகையார் கடுமையாக விமர்சித் துள்ளார்.

உமாபாரதியை ராமபிரான் பக்தை என்றுதான் இதுவரை  எண்ணியிருந்தேன் ஆனால், இப்பொழுது தான் உமாபாரதி சீரடி சாயிபாபாவின் பக்தை என்பது தெரிகிறது. அதனால்தான் உமாபாரதி போன்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று வாய்த்துடுக்காக துவாரகையார் பேசியுள்ளார்.

வடக்கே குறிப்பாக வாரணாசி பகுதியில் சீரடி சாயிபாபாவின் பக்தர்கள் அதிகம் என்பதால் அந்த வட்டாரங்களில்தான் துவாரகையாரின் கொடும் பாவிகள் அதிக அளவில் எரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்குப் பிறகாவது துவாரகையார் வாயை அடக்கிக் கொண்டு சும்மா இருக்கக்கூடாதா? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விபரீத வேலையில் சங்கராச்சாரியார் ஈடுபட்டு விட்டார்.

சாயிபாபாவை வழிபடுவது அதர்மம். அவர் ஒன்றும் கடவுள் அவதாரம் கிடையாது. சிலர் எனது கொடும் பாவியைக் கொளுத்தலாம். என்னை சிறைக்கும் அனுப்பலாம். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். சனாதன தருமத்தை காப்பாற்றுவதற்காகவே நான் தொடர்ந்து பாடுபடுவேன். சாயிபாபா அசைவம் சாப்பிடுபவர் சுன்னத்தை அவர் ஆதரித்துள்ளார். ஒரு முஸ்லிம் பக்கிரியை இந்துக் கடவுளோடு ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்ததோடு நிற்கவில்லை சீரடி சாயிபாபா பக்தர்கள். லக்னோவில் உள்ள உயர்நீதிமன்றத்திலும் துவாரகைப் பீடாதிபதிமேல் வழக்கும் தொடுத்துள்ளனர்.

நாம் சாயிபாபாவையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 
சங்கராச்சாரியார்களையும், அவர்கள் தூக்கித் தலையில் வைத்துக் கூத்தாடும் கடவுள் களையும் ஏற்றுக்கொள்வதில்லை.

அதே நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் இவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது எந்த அடிப்படையில் உள்ளது?

கடவுள் ஒருவர், அவர் பரம்பொருள், உருவம் அற்றவர்; எங்கும் நிறைந்தவர் என்றுதானே சொல்லிக் கொள்கிறார்கள்!

இந்த நிலையில் அவரவரும் மனதுக்குத் தோன்றியபடி பைத்தியக்காரன் கிழிக்கும் துணி போல உருவங்களை வைத்துக் கொண்டாடுவது முரண்பாடு அல்லவா?

அவர்கள் கூறும் கடவுள் தன்மைக்கேகூட விரோதமானது அல்லவா!  உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள் யாராவது இருந்தால் இந்தக் கடவுள் உருவங்களையும் அதற்காகக் கட்டப்படும் கோவில்களையும், திருவிழாக்களையும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டாமா?

இந்து மதத்துக்காரன் இன்னொரு மதத்துக்காரனின் கடவுளை மறுப்பது இன்னொரு மதத்துக்காரன் கண்ணோட்டத்தில் நாத்திகம் தானே?

துவாரகைப் பீடாதிபதி வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் சென்று பார்க்கட்டும்; அங்கு செல்பவர்கள் பெரும்பாலும் இந்துக்கள்தானே? அங்குப் போய் எதிர்க் குரல் கொடுப்பதுதானே?

புட்டபர்த்தி சாயிபாபாவுக்கும் முன்னோடி இந்தச் சீரடி சாயிபாபா. புட்டபர்த்தி சாயிபாபாவின் யோக்கியதை என்னவென்று தெரியாதா? வெறும் தந்திரக் காட்சிகளைச் செய்வதன்மூலம் பாமர மக்களை ஏமாற்றிப் பணம் குவித்த பேர் வழி தானே அவர்?

பிரபல தந்திர நிபுணர் பி.சி. சர்க்கார் நேருக்கு நேர் புட்டபர்த்தி சாயிபாபாவைச் சந்தித்து அவருக்கு முன்னாலேயே அவரைவிட சாமர்த்தியமாகப் பொருளை வரவழைத்துக் காட்டி புட்டபர்த்தியாரின் மூக்கை அறுக்க வில்லையா?
புட்டபர்த்தி சாயிபாபாவைக்கூட பகவான் சாயிபாபா என்று தான் அவரை மதிக்கும் பக்தர்கள் சொன் னார்கள். இந்து மதத்தில் கூறப்பட்ட பத்து அவதாரங் களுள் இந்தப் புட்டபர்த்தி உண்டா? அதுபற்றி ஏன் துவாரகைப்பீடம் வாய் திறக்கவில்லை.

சீரடி சாயிபாபா முஸ்லீம் என்கிறார். இந்தஇடம் தான் முக்கியமானது. காவி உடையில் மறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். புத்தி - குயுக்தி அவரை அறியாமலேயே வெளிவந்து விட்டது.

ஆன்மிகம் பேசும் மெய்யன்பர்களே! கடவுள் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் இலட்சணத்தை எண்ணிப் பாரீர்!

               ------------------------”விடுதலை” தலையங்கம் 4-7-2014

27 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிள்ளையார்

இந்தியாவில் மட்டுமல்ல - பிள்ளையார் ஜப்பானிலும் உள்ளார்; கணபதி கங்கிதேன், பினாயக்தேன் என்று அழைக் கப்படுகிறாராம். புத்தனுக்கு விநாயகர் என்று பெயர். இதை உல்டா பண்ணி தமிழ் நாட்டில் புத்தர் சிலைகளை உருமாற்றி விநாயகர் என்று அழைத்த சூழ்ச்சி, ஜப்பானிலும் அரங்கேறியுள்ளது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YKl8Rf7

தமிழ் ஓவியா said...


முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது. - (குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/83399.html#ixzz36YLVtMkW

தமிழ் ஓவியா said...

குழந்தை இறப்பை தடுக்க புதிய தடுப்பூசிகள்

புதுடில்லி, ஜூலை 4-_ குழந் தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய தடுப்பூசிகள் அனைத்து குழந்தை களுக்கும் இலவசமாக அளிக்க உள்ள தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் தார். இது குறித்து டில்லியில் பிரதமர் மோடி கூறியதாவது:

சர்வதேச தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகள் அளிக்கப்படு கின்றன. இந்த புதிய 3 தடுப்பூசிகளையும் சேர்ந்து 13 உயிர் பலியை ஏற்படுத்தும் நோய்களில் இருந்து 2.7 கோடி குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசிகள் அளிக்கப்படும்.

சிறு குழந்தைகளை தாக்கும் ரோடாவைரஸ், ருபெல்லா, போலியோ ஆகியவற்றுக்கு தடுப்பூசிகளும், பெரியவர்களை தாக்கும் ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் (மூளைக் கொதிப்பு மூலம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்) நோய்க்கான தடுப்பூசியும் படிப்படியாக அளிக்கப்படும்.

உலகளாவிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் இலக்கை அடைவதற்கும், குழந்தைகள் இறப்பு விகிதத்தை அடுத்த ஆண்டில் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கவும் இவை அளிக்கப்படு கின்றன. தற்போது இவை சில மருத் துவமனைகளில் கிடைத்தாலும், அனைத்து மக்களுக்கும் இதன் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவசமாக அளிக்க உள்ளது என்றார் மோடி. ரோடாவைரஸ் கிருமி மூலம் ஏற்படும் வயிற்று போக்கால் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. 10 லட்சம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் 300கோடி கூடுதல் சுமை ஏற்படுகிறது.

ருபெல்லா என்பது பிறவியிலேயே ஏற்படும் பார்வையின்மை, காது கேளாமை, இருதய நோயாகும். ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இந்த குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. போலியோவை ஒழிக்க ஏற் கெனவே சொட்டு மருந்து அளிக்கப் படுகிறது. தற்போது அத்துடன் போலியோ தடுப்பூசியும் அளிக்கப்பட உள்ளது. ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் தடுப்பூசிகள் 9 மாநிலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 179 மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அளிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/83402.html#ixzz36YMFD9xn

தமிழ் ஓவியா said...


இதுதான் பார்ப்பனீயம்!


50 ஆண்டுகளுக்கு முன் என்ற தலைப்பில் இன்றைய இந்து ஏடு (ஏப்.23) வெளியிட்டிருக்கும் செய்தி இது. இந்தச் சம்பவம் நடந்தது 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியாகும்.

லாலா லஜபதிராய் அவர்களையே பார்ப்பனர்கள் கோயிலுக்குகள் அனுமதிக்க மறுத்த சமுதாயக் கொடுமை பற்றிய செய்தி இது! இந்து ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தரப்படுகிறது.

நேற்று இங்கு வந்த லாலா லஜபதிராய், மாலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, மலபாரில் நடைபெறும் சமுதாயக் கொடுமைகளை கடுமையாக சாடினார்.

குறிப்பாக நம்பூதிரிகள் சமுதாயத்தில் காணப்படும் மோசமான திருமண சம்பிரதாய அமைப்பையும், அதன் காரணமாக ஏற்படுகிற ஒழுக்கக் கேடுகளையும், முறைகேடான பாலியல் உறவு முறைகளையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமை களையும் சுட்டிக் காட்டி, இவை எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் வைதீக பார்ப்பனீய கொள்கைகளை வீசி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் தீண்டாமையை ஒழித்து சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பத்மநாபசாமி கோயிலுக்குள் சென்று பார்வையிட வேண்டும் என விரும்பிய லாலா லஜபதிராய்க்கு கோயில் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இவ்வாறு இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNpjtl0

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலுக்கும் பாதிரியாருக்கும்

ஒருநாள் பாதிரியார் ஒரு வருக்கும் இங்கர்சாலுக்கும் நடை பெற்ற தர்க்கமாவது;-

பாதிரியார் ஞானஸ்நானம் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதற்கு இங்கர்சால் பதில் இறுத்த தாவது:

எனது ஞானஸ் நானம் சுத்தமாக குளிப்பதுதான்! அது தங்கள் ஞானஸ்நானத்தை விடச் சிறந்தது என்றார்.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNz2tzo

தமிழ் ஓவியா said...


நாங்கள் நாத்திகர்கள் ஏன்? (இது ஒரு அமெரிக்க நாத்திகர் வெளியீடு)


நாங்கள் நாத்திகர்கள் தான்! ஏனென்றால்,

1. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எங்களுக்கு போதிய ருஜூ இல்லை.

2. ஒரு கடவுள் இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அவசியமோ அவரால் ஒரு உபயோகமோ இருப்பதாக நாங்கள் கருதுவது இல்லை.

3. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வசக்தி வாய்ந்தவராய் இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமற்றவரே யாவார்.

4. ஒரு சக்திவாய்ந்த கடவுள் நல்லவராக இல்லா விட்டால் அவர் வணக்கத்துக்குரியவராகமாட்டார்.

5. சர்வசக்தி வாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி இருப்பதாக இருந்தால், எல்லாம் தோஷமற்றதாகவும், சம்பூர்ண மாகவுமிருக்கும்.

6. கடவுளால் உண்டாக்கப்பட்ட எல்லா உலகங்களிலும் இந்த உலகம் ஒன்று மட்டும் சிரேஷ்டமான உலகமாயிருக்கின்றதானால், அப்பொழுது மோட்ச உலகத்தைப் பற்றிக் கூறும் கதைகள் எல்லாம் பொய்யானவைகளாகத்தான் இருக்க வேண்டும்.

7. மனிதன் இடைவிடாமல் அடுத்தடுத்து விஞ்ஞான சாஸ் திரத்திலும், சுதந்திரத்திலும், சீர்திருத் தத்திலும் முயற்சி செலுத்திக் கொண்டே வந்திருக்கின்றபடியால், கடவுள் கொள்கை விவகாரத்திற்கு வந்துவிட்டதுடன் கடவுள் உணர்ச் சியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.

8. ஆதியில் மனிதர்கள் அறியாமை என்னும் அந்த காரத்தில் மூழ்கி இருந்த போது தனக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் கடவுள் தன்மை, கடவுள் செயல் எனக் கூற வேண்டியதாகி ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டு அதை அநுபவத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஆதிகால மனிதர்கள் ஒவ்வொன்றையும் தப்பிதமாகவே யூகித்துக் கொண்டு வந்தார்களெனக் கூறிவிட்டு, ஆனால், ஜீவனைப் பற்றி மட்டும் உண்மை யாகவே அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களெனக் கூறுவதும் பொருத்தமானதல்ல.

9. விஞ்ஞான சாஸ்திரங்களின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்டவைகள் யாவும், அவை கண்டுபிடிப்பதற்கு முன் அவைகள் ஒவ்வொன்றையும் கடவுளின் செயல்; கடவுளின் அற்புதம் எனக் கூறப்பட்டுக் கொண்டே வரப்பட்டது. ஏதாகிலும் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப் பட்டால், அப்பொழுது கடவுளின் தன்மையும், கடவுளின் அற்புதமும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடை கின்றன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டவைகளில் எதுவும் ஒன்று கூட கடவுளின் தன்மையை வலுப்படுத்த வேயில்லை.

10. கடவுள் தன்மை என்று இதுவரை பகிரங்கப்பட்டு வந்த விஷயங்கள் யாவையும் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, அவைகள் யாவும் இப்போது மனிதத் தன்மைக்கு அடங்கியவைகள் தான் எனவும், சூதும், மோட்சமும்தான் எனவும் நிரூபிக்கப்பட்ட வருகின்றன.

11. குற்றம் கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், எரிச்சல், தர்மசிந்தையில்லாமை ஆகியவைகள் யாவும், கடவுளின் தன்மைக்கு பொருந்தி இணக்கமாயிருக்கின்றது.

நாஸ்திகம் போதிப்பது யாதெனில்:-

கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒருவிதக் கடவுளும் இல்லை.

தாய் தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர் களையும், மனிதர்கள்தான் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை.

நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

நரகமென்பது கிடையாது. நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.

Read more: http://viduthalai.in/page-7/83413.html#ixzz36YO6RRtt

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

பதில்: புல்லு, வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போட்டால் பால் கறக்கும்!

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதெதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? -என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவைகள் ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து - அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் - சரவணப் பொய் கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தாம் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளையுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதானம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்;

இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-7/83408.html#ixzz36YOSB18K

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு மனித நேயத்தலைவர் லெவி பிராகலுக்குப் பாராட்டு விழா


வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக் காட்டிலும் வளர்ந்துள்ளோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல், ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் ஆகியோருக்கு பகுத்தறிவாளர்கழகத்தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் நினைவுப் பரிசாக நூலை வழங்கினார் (சென்னை, 3.7.2014)

சென்னை, ஜூலை 4_ வளர்ந்த நாடுகள் பொருளா தார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் அவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

சீரிய பன்னாட்டு மனித நேயத்தலைவரும், பன்னாட்டு மனித நேய,நன்னெறிகள் ஒன்றியம் (IHEU) நார்வே (அய்ரோப்பா) நாட்டின் மேனாள் தலை வருமாகிய லெவி பிராகல் அவர்களுக்கு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி, தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள அவருக்கு சென்னையில் வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது.

மின்னஞ்சல்மூலம் வாழ்த்தும், பாராட்டும்!

இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்னயா, இந்திய பகுத்தறிவாளர் அமைப்பு, கோவா தலைவர் சோமு, கேரள யுக்தி வாகினி என்னும் பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பில் கே.அனில்குமார், ஈகிள் நிறுவனம் சார்பில் பிரதாப்சிங் உள்ளிட்ட பலரும் மின்னஞ்சல்மூலம் இந்த விழாவுக்கு தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்திருந்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (3.7.2014) சென்னை வேப்பேரி, பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்றுப் பேசினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் லெவி பிராகல் ஆற்றிவரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிமுக உரை ஆற்றினார்.

ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் தந்தைபெரியார், கோரா ஆகியோரின் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர், லெவி பிராகல் உள்ளிட்ட அனைவருமே மனித நேயத்துக் காகவும், சுயமரியாதைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டுவரும் சமூகத்தொண்டர்கள் என்று ஆங்கிலத்தில் விரிவாகப் பேசினார். மேலும், தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பிவரும் இயக்கம், கல்விப் பணியையும் மேற்கொண்டு மனித நேயத் தொண்டை ஆற்றி வருவதாகத் தமிழர் தலைவர் ஆசிரியரைப் பாராட்டிப் பேசினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

சிறப்புரையாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை ஆற்றினார்.

டாக்டர் பட்டம் பெறவுள்ள பன்னாட்டு மனித நேய முக்கிய தலைவர் லெவி பிராகல் இந்தியாவுக்கு அறிமுகம் என்பது தந்தை பெரியாரால், அவர் கொள்கைகளால், திராவிடர் கழகத்தால்தான் என்றும், இதற்குமுன்பாக 1989ஆம் ஆண்டில் தொடங்கி, 25 முறை இந்தியாவுக்கு வருகை தந்து இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வருவதற்கானத் தேவைகள், விளையாட்டு வீரர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகள், வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டி பல்வேறு தகவல்களை சிறப்புரையில் குறிப்பிட்டார். லெவி பிராகல் பாராட்டு பெறுவதற்கான பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

லெவி பிராகல்

லெவி பிராகல் உரையின்போது தமிழர்தலைவருடன் இணைந்து ஆற்றிய பணிகள்குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்பதன்மூலம் மனித நேயம் சிறக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு லெவி பிராகல், தமிழர் தலைவர் ஆசிரியர் சளைக்காமல் பதிலளித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/83427.html#ixzz36YOycpms

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க தினத்தந்தி தலையங்கம்

குஜராத் அல்ல, தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது!

குஜராத்தில் முதல்மந்திரியாக பணி யாற்றிய நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அபரிமிதமான வெற்றிக்கு பிறகு, பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவருக்கு பிறகு யார் குஜராத் முதல்மந்திரியாக பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று நாடே உற்று நோக்கிக்கொண்டு இருந்தது. அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக 72 வயதான ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்று இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஆமதாபாத் நகரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பில் கலந்துகொண்ட அவர், குஜராத் மாநில போலீஸ் படையில் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்காக ஒதுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்த இடஒதுக்கீடு அனைத்து மட்டத்திலும் அமல் நடத்தப் படும் என கூறினார். அவரது அறிவிப்பு அந்த மாநிலத்தை பொறுத்தமட்டில், பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்குள் பல ஊடகங்கள் அனைத்து மாநிலங் களுக்கும் முன்னோடியாக இந்த அறி விப்பை குஜராத் முதல்மந்திரி வெளி யிட்டது போலவும், அனைத்து மாநிலங் களும் பின்பற்றவேண்டிய அறிவிப்பு போலவும் சித்தரித்துவிட்டார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்நாட்டின் வரலாற்றை கண்டிப்பாக படிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டுக்கென நீண்ட, நெடிய பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஒளி விளக்கான தந்தை பெரியார் சமுதாய சீர்திருத் தத்துக்கான அவரது போராட்டத்தில் மிக முக்கியமாக பெண்களின் முன்னேற்றத் துக்காகவும், பெண் விடுதலைக்காகவும் தான் போராடினார். பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக அச்சாரம் போட்டவர் தந்தை பெரியார் தான். அதுபோல, பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி யாரும், ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவி லோங்கி இவ் வையம் தழைக்கும் என்று பாடிவிட்டு, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று முழங்கினார். இத்தகைய பெரும்பேறு பெற்ற தமிழ்நாட்டில் 1989ல் முதல்அமைச்சராக இருந்த கருணாநிதி அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசு உத்தரவு பிறப்பித்தார். பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு புதுக்கணக்கு தொடங்கியது. 1991ல் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற முதல் பெண் முதல்அமைச்சர் என்ற பெருமையோடு பதவியேற்ற ஜெயலலிதாவின் சிந்தை யில் உதித்து அடுத்த ஆண்டே செய லுக்கு வந்த திட்டம்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் போலீசாரிடம் இருந்த திறமைகளை யெல்லாம் வெளியே கொண்டுவந்தவர் அவர்தான். 1995ல் போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு கருத்துரு வந்தபோது, அதை ஆரம்ப கட்டத் திலேயே நிராகரித்து கண்டிப்பாக 30 சதவீத இடஒதுக்கீடு அமல்நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். வீரதீர கமாண்டோ படைகூட பெண் போலீசில் இருக்கிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்களை வெளிநாடுகளில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளெல்லாம் வந்து பார்த்து, தங்கள் நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டு சென்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 773 பெண் போலீசார், அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். 199 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின் றன. இந்தியா முழுவதிலும் உள்ள மொத்தம் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தற்போது 7 மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளாக பெண்கள்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரும், 2 பெண் போலீ சாரும் இருக்கவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்றாலும், பொதுப்பட்டியலிலும் திறமை உள்ளவர்கள் போட்டியிட்டு தேர்வாக லாம். ஆக, அரசு பணிகள் என்றாலும் சரி, போலீஸ் துறை என்றாலும் சரி, பெண் களுக்கு இடஒதுக்கீடும், பெண்களின் திறமையை மிளிரச்செய்ததிலும் தமிழ் நாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டு கிறது. தமிழ்நாட்டின் அடிச்சுவடைப் பின்பற்றித்தான், மற்ற மாநிலங்கள் பெண் போலீசில் பல திட்டங்களை செயல் படுத்த தொடங்குகிறதே யல்லாமல், இன்னும் பெண் போலீசுக்கு இட ஒதுக் கீட்டையே தொடங்காத குஜராத்தை பார்த்து அல்ல.

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 5-7-2014

Read more: http://viduthalai.in/page-2/83484.html#ixzz36eEwilFx

தமிழ் ஓவியா said...


செத்தான்



நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83481.html#ixzz36eF8Xu1y

தமிழ் ஓவியா said...


வாஸ்து?

வாஸ்து என்ற ஒன்று மிக அதிகமாகப் பேசப் படும் காலம் இது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கட்டும் வீட்டுக்கு மட்டும் தானா இது? மற்ற மதக்காரர்கள் வீடு களைக் கட்டுவதே கிடையாதா? அவர்கள் வாஸ்து பார்க்கிறார்களா? மதச் சார்பற்றவர்கள் வீடு கட்டுவதில்லையா? அவர்கள் வாஸ்து பார்க்காததால் என்ன கெட்டு விட்டதாம்? ஒரே ஒரு கேள்வி - வாஸ் துவில் கழிவறைக்கு (Toilet) இடம் உண்டா?

சோதிடம் எப்படி அறிவியலுக்குப் பொருத்தமற்றதோ, அதே நிலைதான் வாஸ்துவுக் கும். எல்லாவற்றிற்கும் இந்து மதத்தில் அறி வுக்குப் பொருத்தமற்ற புராண சமாச்சாரங்கள் உண்டு. அது இதோ:

ஒரு சமயம், தேவ, அசுரர் யுத்தத்தில் பிருகு முனிவரும் அவரது பத் தினியும் அசுரர்களைப் பாதுகாத்துக் காப்பாற் றினர். இதனை அறிந்த தேவர்கள், பிருகு முனிவரின் பத்தினியின் தலையை வெட்டிவிட்ட னர். இதனைக் கண்டித்த பிருகு முனிவர் கோபம் கொண்ட சமயம் அவரது தேகத்தில் உண்டான வியர்வை பூமியில் விழுந்து, ஓர் அசுர உத்த மன் (வாஸ்து புருஷன்) உண்டாகித் தேவர்களை அழிக்க ஆரம்பித்தான். இதனை அறிந்த தேவர்கள் வாஸ்து புரு ஷனின் தலையிலிருந்து பாதம் வரை அவனது உடலை ஆக்கிரமித்து அவனை எழுந்திருக்க விடாமல் செய்தனர்.

அது சமயம் பிரம்மா அவன் பூமியிலிருந்து தோன்றியதால், அவனைப் பூமியின் புதல்வன் என்று கூறி, உன்னை மனிதர்கள் பூமியில் வீடு, கிராமம், பட்டினம், யாகசாலை, ஆலயங்கள் ஆகிய வற்றை உண்டாக்கும் சமயம் வழிபடுவார்கள்.

அதனால் உனக்கு அளவற்ற திருப்தி உண் டாகும் உன்னை வழிபடு பவர்கள் அனைத்து நலன்களும் பெறுவர் என வாஸ்து புருஷ னுக்கு வரமளித்தார். இதுதான் வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு.

எந்தக் காலத்திலோ, எந்தக் கிறுக்கனோ எழுதி வைத்த இந்தக் குப்பைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? முகலிவாக்கம் 11 மாடி கட்டடம் வாஸ்து பார்த் துக் கட்டப்பட்டதுதான். அவர்களின் வலைத் தளத்திலேயே இது இருக் கிறது.

61 பேர் பலி கொண்ட பிறகும் வாஸ்துவை, வாஸ்தவமாக நம்பு கிறீர்களா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83471.html#ixzz36eFOmaSI

தமிழ் ஓவியா said...


சாயிபாபாவின் சிலைகளை உடைப்போம் சங்கராச்சாரியாரின் சண்டியர்த்தனம்!

சாயிபாபா பற்றி இந்து மதத்தின் நான்கு பீடங் களுள் ஒன்றான துவா ரகா பீடத்தின் சங்கராச் சாரியார் சுவரூபானந்தா சமீபத்தில் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதாவது சாயி பாபா இந்து கிடையாது அவர் ஒரு முஸ்லீம் பாபா(பகீர் எனப்படும் பண்டாரம்) அவர் இந்து அல்ல. அவரைக் கும்பிடு பவர்கள் முட்டாள்கள் என்று குறிப்பிட்டிருந் தார். இந்த விவாதம் தற் போது மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. சாயி பக்தர்கள் இந்துக் களாக இருக்கும் பட்சத் தில் வீட்டில் உள்ள சாயி படங்கள் மற்றும் சிலை களை வீசிவிடவேண்டும் படங்களை எரித்து விட வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் சீர டிக்கு செல்லும் இந்து மதத்தவர்கள் தங்களின் மதத்திற்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள் என் பதை நினைவில் கொள் ளுங்கள் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனே நகரில் போராட்டம் நடத்திய சாயிபக்தர்களால் சங்கராச்சாரியார் மிகவும் கோபமடைந்து விட்டார். வியாழன் இரவு செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார் இந்துமததிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாயிபக்தர்கள் ஈடுபடுகி றார்கள். இது தொடரு மானால் சாயிபாபாவின் சிலைகள் உடைக்கப்படும் என்று அறிவித்தார்.

களத்தில் இறங்கும் அம்மணச் சாமியார்கள் அயோத்தியில் உள்ள ஜூனா அகாடா என்ற மடத்தின் அம்மண சாமி யார்களின் தலைவர் நரேந்திர கிரி கூறியதா வது, சங்கராச்சாரியார்கள் இந்துமத பாதுகாவலர்கள், அவர்களின் வாக்கு வேத வாக்கு! சீரிடி சாயிபாபா ஒரு முஸ்லீம் பண்டாரம், சிலர் குழுக்களாக சேர்ந்து தங்களதுபிழைப்பிற்காக அவரைக் கடவுளாக்கிக் கும்பிட்டு வருகின்றனர். மேலும் முஸ்லீம் சாமி யாரை இந்துக்கடவுளுக்கு சமமாக வைத்து வழிபடு கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலா கும். நாங்கள் சங்கராச் சாரியாவின் ஆணைக்காக காத்து இருக்கிறோம், சங்கராச்சாரியார் கூறியது போல் சாயிபாபா வழி பாட்டை இந்துமக்கள் கைவிடவேண்டும், மேலும் சாயிபாபாவின் படங்கள் மற்றும் சிலைகளை இந் துக்கள் தங்கள் வீட்டில் இருந்தும் கோவிலில் இருந்தும் அகற்றவேண் டும். சங்கராச்சாரியாரின் இந்தக் கட்டளையை கண்டுகொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கையில் இறங்கவேண்டிவரும்.

கறி தின்பவராம் சாயிபாபா

இது குறித்து மடத் தலைவர் கியான் மகந்த் கூறும் போதுசாயிபாபா முஸ்லீம் அவர் (மாட்டுக்) கறி உண்பவர், அவருக்கும் இந்துமத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது, அவரது வழிபாட்டை இந்துமக்கள் கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் கூட சாயிபாபாவை வழிபடு வது கிடையாது, அப்படி இருக்க இந்துக்கள் ஏன் அவரை வழிபடவேண் டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/83472.html#ixzz36eFXNFmJ

தமிழ் ஓவியா said...


முத்துலட்சுமி ரெட்டி மசோதா


(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)

1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் விபசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.

வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால், சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.

தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபசாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும்வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.

ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

- குடிஅரசு - கடிதம் -30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83438.html#ixzz36eHlierK

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி இப்போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்து வார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப் பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83445.html#ixzz36eHvBqDD

தமிழ் ஓவியா said...

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.



2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரசின் திக் விஜய் சிங்.

தமிழ் ஓவியா said...

கர்ப்ப காலத்தில் உறவு - இந்திரன் தந்த வரமா?


பிரம்மஹத்யம் அஞசலைன
ஜகரஹ யத் அபிஸ்வராஹ
சாமவதசரந்தோ தத அக்ஹம் புதா(ஹ)னம்
ப்ஹுமய் அம்பு(ஹ) துர்ம யொஸித்பயாஸ்
சதுரத வயப்ஹஜத த(ஹ)ரிய(ஹ) - பகவத் கீதை

மேலுள்ள வேதமொழிச் செய்யுளின் விளக்கம் இதுதான்.

இந்திரன் தெரியாத்தனமாக ஒரு பார்ப்பனனைக் கொலை செய்துவிட்டானாம். அவனுக்கு மிகவும் கொடுமையான பிரம்மஹஸ்தி தோசம் பிடித்துவிட்டதாம். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதைப் பங்கிட்டுக் கொடுக்க பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அனுமதியுள்ளது. தன்னுடைய தோசத்தைப் பெண்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானாம். அதற்குப் பரிகாரமாக பெண்கள் என்ன வரம் கேட்டார்கள் தெரியுமா? அதாவது தனது கர்ப்பகாலத்திலும் ஆண்களுடன் உறவு கொள்ளும் வரத்தை இந்திரனிடம் கேட்டு, கர்ப்பகாலத்திலும் உறவு கொள்ளலாம் என்ற வரத்தைப் பெற்றார்களாம். பெண்களுக்கு வரம் கேட்பதற்கு வேறு விசயமே இல்லை பாருங்க! எதிலும் இதே சிந்தனைதான்.



- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.

பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை


சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்.

அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 கோடி) மறுத்ததற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஒரு பொது மனுஷியாக எனக்குப் பொறுப்புகள் உள்ளன. என் சகோதரி மாநிறம் கொண்டவள். ஆனாலும் அழகானவள்.

இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்? என்கிறார் கங்கணா. மற்ற நடிகர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் ஓவியா said...

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்


மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.

விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.

இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிராமணாள் கபே!



ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த ஜாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்பட வேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?

தேவரும், நாடாரும், அய்யரும், அய்யங்காரும் ஜாதிப்பெயர்கள். பிராமணாள் என்பது ஜாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமைப் போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித் திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி அய்ம்பது தோழர்கள் புறப்பட்டு முரளி கபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடைத் தொழிலாளர்கள் மூலம் கழகத் தோழர்களைத் தாக்கிய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்த இயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப் பலகையை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப் பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போயின.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பனியம் படமெடுத்தாடத் தொடங்கியிருக்கிறது. ஆரிய பவன்களும், உடுப்பி ஹோட்டல்களும்கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மான உணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான். கொசுறுச் செய்தி: சிவகாசிப் பார்ப்பனர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் படிப்போம்


கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.



- ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி


அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.



1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.

அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.

(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.

- தம்பியப்பா

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் திருட்டு

நெகமம், ஜூலை 6_ கோவை அருகேயுள்ள நெகமம் தாசநாயக்கன் பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூஜாரி சதாசிவம் (வயது 55). இவர் தினமும் காலை 5 மணிக்கு கோவிலை திறந்து மாலை பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று மாலை கோவிலில் பூஜை முடிந்ததும் சதாசிவம் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பின்புற பூட்டு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கோவிலுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதற்குள் வைத்திருந்த தங்க கண் மலர் மற்றும் வெள்ளியாலான ஒட்டியாணம், கை, குடை ஆகியவை திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சதாசிவம் நெகமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதேபோல் தாசநாயக்கன் பாளையத்துக்கு பக்கத்தில் உள்ள மெட்டுவாவி அரிஜன காலனியில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக முருகன் (66) உள்ளார். இவர் சம்பவத்தன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தாலிக்கொலுசு 10, தாலி காசு 6, பித்தளை குத்து விளக்கு 2 உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து முருகன் நெகமம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூரில் பேருந்து மோதி அர்ச்சகர் சாவு

ஆத்தூர், ஜூலை 6_ ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள கோவில்களில் அர்ச்சக ராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் ஆத் தூருக்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் ஆத்தூர் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சிலை அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவரது மிதிவண்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்களிடம் 20 பவுன் நகை பறிப்பு

தாம்பரம், ஜூலை. 6_ குரோம்பேட்டை பாரதிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பா பிஷேகம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண் பக்தர்களிடம் சுமார் 20 பவுன் நகைகளை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/83517.html#ixzz36k5zdis2

தமிழ் ஓவியா said...


லெவி பிராகல் நல்ல சிந்தனையாளர்- மனிதநேய செயற்பாட்டாளர்



மதுரையில் நடைபெற்ற விழாவில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் பாராட்டு

மதுரை, ஜூலை 6_ பன்னாட்டு மனிதநேய நன் னெறி ஒன்றியத்தின் (மிபிணிஹி) மேனாள் தலைவர் லெவி பிராகல் நல்ல சிந்தனையாளர், மனிதநேய செயற் பாட்டாளர் என்று கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டிச் சிறப்புரையாற்றினார். மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (மிபிணிஹி) மேனாள் தலைவர் லெவி பிராகல் (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்) அவர்கள் கவுரவ டாக்டர் பெற்றமைக்கானப் பாராட்டு விழாவும், உலகமயமாகும் பெரியார் மனித நேயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் கலந்துரையாடலும் 5.7.2014 சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு , மதுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு வாய்ப்பு அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, அனை வரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார்.


தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் மனித நேயச் சிந்தனைகள் என்பது தனித்தன்மை கொண்டது. பெண் விடுதலையை அடிப் படையாகக் கொண்டது. தமிழர் தலைவர் எடுத்து வரும் பெரியாரின் கொள்கைகளை உலக மயமாக்க முயற்சி போற்றத்தக்கது. டாக்டர் லெவிபிராகலின் கட்டுரைகள், பேச்சுகளில் இருந்து கருத்துகளை எடுத்து அதனை தந்தை பெரியாரின் கருத்துகளோடு ஒப்பிட்டு உரையாற்றினார். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சிகளையும், தனித்தன்மை யினையும் குறிப்பிட்டு டாக்டர் லெவிபிராகல் அவர் களைப் பாராட்டி உரையாற்றினார். விஜயவாடா கோரா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் அவர்கள் தனது பாராட் டுரையில் லெவி பிராகல் அவர்கள் பலமுறை இந்தியா வந்துள்ளார், நார்வே நாடு என்பது அளவில் மிகச் சிறிய நாடு ஆனால் 5 இ-ல் ஒரு பகுதி மக்கள் நாத்தி கர்களாக உள்ள நாடு, மதம் இன்றைய உலகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல், அதனால்தான் தந்தை பெரியார், கோரா போன்றவர்கள் கேள்வி கேட்ப தையும், பகுத்தறிவையும் பரப்பினார்கள் என உரையாற்றினார். பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (மிபிணிஹி) மேனாள் தலைவர் லெவிபிராகல் அவர்கள், தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, சிறு வயதில் தான் கடவுளை நம்பியதையும், சர்ச்சுக்குச் சென் றதையும், பின்பு பகுத்தறிவுப் பாதைக்கு திரும்பியதை யும் குறிப்பிட்டார். கிறித்துவ மதத்தில் சடங்குகள் என்பவை மிக முக்கியமானவை. தொடக்கத்தில் நாத்தி கர்களாக மாறிய காலத்தில் இந்த சடங்குகள் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் பெயர் சூட்டுதல் போன்ற விழாக்களை நாங்கள் தனியாகத் தொடங்கினோம். அதன்பின் நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள். முதலில் 1500 ஆக இருந்த மனித நேய அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை, இப் பொழுது 85,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரை, தந்தை பெரியாரின் கொள்கை களை வீரமணி மூலமாகவே நான் தெரிந்து கொண் டேன். பெரியாரின் சுயமரியாதை என்ற வார்த்தை மிகவும் நுட்பமானது, ஆழமானது எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், தமிழர் தலைவர் தனது உரையில், இரத்தம் சிந்தாமல், அமைதி யாக அதிகார மாற்றம் ஏற்படுத்திய புரட்சி தந்தை பெரியார் நடத்திய புரட்சி. டாக்டர் விஜயம் தனது உரையில், மனப்பான்மை பற்றிக் கூறியதுபோல, மனப்பான்மையை மாற்றிய புரட்சி தந்தை பெரியாரின் புரட்சி. பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் தலைவரான மண்டல், மூளை யில் போடப்பட்ட விலங்கு பற்றி தனது பரிந்துரையில் குறிப்பிட்டார். சுயமரியாதைத் தத்துவம் மூளையில் போடப்பட்ட விலங்கை உடைக்கும் வல்லமை உடை யது. இந்த நாட்டில் செருப்புகூட 14 ஆண்டுகள் ஆண்டதாக கதை உள்ளது. ஆனால் மனிதர்கள் மதிக் கப்படவில்லை. வர்ணங்களால், ஜாதிகளாகப் பிரிக் கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டார்கள் . அதனை நீக்கத் தந்தை பெரியார் போராடினார். அவரால் கல்வி பெற்றோம், உரிமை பெற்றோம். லெவி பிராகல் அவர் கள் நல்ல சிந்தனையாளர். மனிதநேய செயற்பாட் டாளர். மக்களுக்காக உழைப்பவர். அதனால்தான் மக்கள் பல்கலைக் கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டம் அளிக் கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, உரையாற்றினார்.

உலகமயமாகும் பெரியாரின் மனிதநேயச் சிந்தனை கள் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது. மதுரையின் மிகப் புகழ்பெற்ற அகச்சுரப்பியல் மருத்துவர், டாக்டர் கு.கண்ணன் கலந்துரையாடலை தொடங்கி வைத்தார். பணி நிறைவு நீதிபதி பொ.நடராசன், பேரா.முனை வர் நம்.சீனிவாசன், பொறியாளர் எஸ்.மனோகரன், தி.மு.க.வின் சொற்பெருக்காளர் துரை.எழில்விழியன், மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் சவுந்திரராசன், ஆரியபட்டி ஆசிரியர் இராமசாமி, தொலைத்தொடர்பு தொ.மு.ச. மாநிலச்செயலாளர் அ.செல்லப் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

முடிவில், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சுப.முருகானந்தம் நன்றி கூறினார். நிகழ்வில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மதுரை வே.செல்வம், இராசபாளையம் இரா.திருப்பதி, வழக்குரைஞர்கள் இன்பலாதன், கணேசன், தமிழ்மணி, பி.கே.இராஜேந் திரன், பகத்சிங், கதிர், கேசவன், மீ.அழகர்சாமி, க.அழ கர், ந.முருகேசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மா.பவுன்ராசா, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மன்னர் மன்னன், செயலாளர் பி.பால்ராசு, கல்வியாளர் வி.வீரி(செட்டி) பா.சடகோபன், அழகு பாண்டி, கனி, போட்டோ இராதா, எல்.அய்.சி. செல்ல. கிருட்டிணன், மார்க்கிசன், பீபிகுளம் சுரேசு, பி.ஆர்.சி. சந்திரன், விராட்டி பத்து சுப்பையா, நல்லதம்பி, திரு மங்கலம் சி.பாண்டியன், பேக்கரி கண்ணன், அனுப் பானடி பவுன்ராசா, ஆசிரியர் மணி, ஆட்டோ செல் வம், மோதிலால், பலசரக்குக் கடை மாரிமுத்து, பேரா. டாக்டர் சி.மகேந்திரன், அனுப்பானடி மோகனசுந்தரம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். ஆக்கபூர்வமான கலந்துரையாடலாகவும்,கொள்கை பரப்புரை _ பாராட்டு விழாவாகவும் இந்த விழா அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/page-8/83554.html#ixzz36k7ibFJi