Search This Blog

16.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 12



(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


பால காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம்

கவுசிகன் மேற்குத் திசையை யடைந்ததும், அம்பரீஷன் என்ற மன்னன் ஒரு யாகம் செய்யச் சகரனுடைய யாகப் பசுவைத் திருடிய பழைய திருடனாகிய கீழ்மகன் இந்திரன், இந்த யாகப் பசுவைத் திருடிப்போய் விட்டான்.  அதனைத் தேடிக் காணாத மன்னன் ஒரு நரப்பசுவைத் தேடினான்.  இதனால், நரமேதமென்பது அக்காலத்தில் சர்வ சாதாரணமென்பது தெரிய வருகிறது.  நரமேதமானது, மனிதனைக் கொன்று நெய்யிலிட்டுப் பொறித்துத் தின்னும் யாகம்.  கம்பரோ, அம்பரீஷன் யாகப் பசுவை இந்திரன் திருடியதைக் கூறாமல், முதலிலேயே அவன் நரமேதம் செய்யத் தொடங்கினான் என்று கூறுகிறார்.  இது தவறுதான்.  கம்பர் பாட்டு வருமாறு:
குதைவரி சிலைவாட் டானைக்
கோமகன் அம்ப ரீடன்
சுதைதரு மொழியன் வையத்
துயிர்க்குயி ராய தோன்றல்
வதைபுரி புருட மேதம்
வகுப்பவோர் மைந்தற் கொள்வான்,
சிதைவிலன் கனகந் தேர்கொண்
டடவிக டுருவிச் சென்றான்

இப்பாடலில் அம்பரீட மன்னன் உலகில் உயிருக்குயிர் போல மிக நல்லவனென்றும், கொலை வேள்வியாய புருடமேதம் செய்யத் துணிந்து ஒரு மைந்தனை விலைக்கு வாங்கப் பொன்னோடு போனான் என்றும் கூறப் பட்டுள்ளது.  உயிருக்குயிரான மன்னன் கொலை வேள்வி யிலும் மிகக் கொடியதாய புருடமேதத்தை எவ்வாறு செய்யக் துணிந்தானோ தெரியவில்லை.  கம்பர் மன்னனை முதலில் நல்லவனென்று கூறிவிட்டுப் பின் அதற்கு மாறாகக் கொலையிற் கொடியான் என்றார்.  இது எவ்வாறு பொருந்துவதோ?  மனிதனைக் கொன்று அவ்வுடலைத் தின்பதாய இக்கொடிய வேள்வியைச் செய்தோர் இழிதகைமைதானென்னே!  இவ்விழிதகைய கதைகளை மிக நல்லனவென்று பாராட்டிப் படிப்போரை அறிவிலர் என்று கூறவோ, அன்றி இழிகுணரென்று புகலவோ அறிகிலம்.  அறியாமை யென்றே கூறி அமைவோம்.
மன்னன் நரவேள்விக்காக ஒரு மனிதனை விலைக்கு வாங்கினான்.  ஆடு மாடுகள் விலைக்கு வாங்குவதுபோல மனிதர்களையும் விலைக்கு வாங்குவது அக்காலத்து ஆரியர் வழக்கம் போலும்!  அரசாங்கத்தார் தடை செய்யாதிருப்பரேல், இக்காலத்திலும் மனிதர்களை விலைக்கு வாங்கவும், நரவேள்வி நடத்தவும் செய்வார் போலும்!

மன்னன் விலைக்கு வாங்கிவந்த பையன் விஸ்வா மித்திரனைத் தஞ்சமடைந்தான்.  முனிவன், தன் மக்கள் நால்வரில் ஒருவனை அவனுக்குப் பதிலாக அனுப்ப முயல்கிறான்.  அவர்களோ தம் தந்தை செயலை இகழ்ந்து, அது நாயிறைச்சியைத் தின்னலினும் கேடு கெட்ட தென்கின்றனர்.  உடனே முனிவன் தன் மக்களை நாயிறைச்சியைத் தின்று பலகால் அமையச் சபிக்கிறான்.  முனிவனுடைய மக்கள் கூறிய கூற்றுகளைக் கம்பர் கூறாது மறைத்து அவர்கள் மறுத்துப் போயினர்; தந்தை சபித்தான் என்று மட்டும் கூறுகின்றனர்.  கோசிகன் முன்னரும் வசிட்டன் மக்களை நோக்கி, நாயிறைச்சி யைத் தின்றுத் திரிக எனச் சபித்தமை கண்டோம்.  இது இம்முனிவனுக்கு நாயிறைச்சி தின்ற வாசனையாலெழும் சொற்கள் போலும்!  அதுவும் நாய் வாலைத் திருடி இவ்விஸ்வாமித்திரன் உண்டவனாவான்.
நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாம் காதிமகன்
என்கிறது சோமேசர் முதுமொழி வெண்பா.

அம்பரீஷனது யாகத்தின் பின்வரும் கவுசிகன் மேற்குத்திசையில் தவம் செய்து கொண்டிருந்தான்.  அப்போது மேனகையுடைய மையலிற்பட்டான்.  பின் உண்மையறிவுற அவளைச் சபியாது இனிய சொற் கூறியனுப்பினான்.  இதற்கு மாறாகக் கம்பர் கூறுகிறார்.  இச்செய்தி கிழக்குத் திசையில் நடந்ததாகக் கூறுவதோடு, அவளை முனிவர் மண்ணில் மனிதப் பிறப்பெடுக்கச் சபித்தனரென்றும் கூறுகிறார்.  அத்தோடு வால்மீகி மேனகை என்று கூற, கம்பர் திலோத்தமையென்று அப் பெண்ணை மாற்றிக் குறித்தார்.  மிகவும் பொறுமை யுடையராகிய வால்மீகி கூறும் விஸ்வா மித்திரனைக் கம்பர் கொடிய கோபக்காரனாகக் காட்டியது வியப்பே.

முனிவன் வடதிசையை யடைந்தபோது, திருட்டுக் காமியான இந்திரன் அரம்பையை ஏவி முனிவனை மயக்கத் தூண்டுகிறான்.  பின் அரம்பை தண்டனைய டையக் கண்டு பயந்து ஓடுகிறான்.  இத் தீயோனை நம்பி அரம்பை சென்றது, மண் குதிரையை நம்பி ஆற்றிலிறங் கியது போலாயிற்று.  இக்கதையைக் கம்பர் முற்றிலும் கூறாது விட்டுவிட்டார்.

தன்னுடைய தவத்தைக் கெடுத்த மேனகையைச் சபித்து விடுத்த முனிவன், தன் முன்வந்து நின்ற அரம்பையைக் கல்லாய்க் கிடக்கச் சபிக்கிறான்.  இக் கதையைத்தான் கண்டு மயங்கிய கம்பர், அகலிகையை முனிவன் கல்லாகக் கிடக்கச் சபிக்கின்றனனென்றும் கூறினர்போலும்.  வட திசையில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்திருக்க இவற்றையெல்லாம் கூறாது, இத்திசையில் முனிவன் பிரமரிஷிப் பட்டம் பெற்றான் என்கிறார் கம்பர்.  வால்மீகியோ, அவன் கீழ்த்திசை சென்று கடுந் தவம்புரிந்து அப்பட்டம் பெற்றானென்கிறார்.
கீழ்த் திசையில் இந்திரன் உணவிரந்தது முதலிய செயல்களைச் செய்தமையைக் கம்பர் விடுத்தார்.  நான்முகன் பிரமரிஷிப் பட்டம் தந்தபின் கோசிகன் அவனை நோக்கி, வசிட்டன் அதனை ஒப்புரைத்தல் வேண்டுமென்று கூற, அவ்வாறே அவ்வசிட்டன் கோசிகன் முன் வந்து ஒப்புகின்றனன்.  இவ்வரலாற்றிலும் கம்பர் பல மாறுபாடுகள் செய்தமை புலனாகின்றன.  இனி மேற்செல்லுதும்.

மறுநாள் காலையில் விஸ்வாமித்திரன் சனக மன்னனை நோக்கி, இராமனும் இலக்குவனும் சனகனிட மிருந்து வில்லைப் பார்க்க விரும்புவதாகக் கூறினன்.  உடனே சனகன், முன்னொரு காலத்தில் தக்கன் என்பவன் ஒரு யாகம் செய்தான்.  அந்த யாகத்துக்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள்.    சர்வேஸ்வரனாகிய சிவ பெருமான் அந்த யாகத்திற்கு அழைக்கப் பெறவில்லை.  அதனால் அவர் கடுங்கோபங் கொண்டு வில்லை வளைத்து நாணேற்றி, ஏனைய தேவர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளிவிடுவதாகக் கூறினார்.  அப்போது எல்லாத் தேவர்களும் அஞ்சி, அம்மகா தேவரைச் சரணமடைந்து துதித்தனர்.  அதனால் சிவபெருமான் சினந்தணிந்து, அவர்களிடத்தில் அன்பு கொண்டு அவ்வில்லைக் கொடுத்து விட்டார்.  அவர்கள் அதை என்னுடைய முன்னோருள் ஒருவனாகிய தேவராதனிடம் வைத்துவைக்கும்படிக் கொடுத்தனர்.  அவ்வில்லே இது.  பிறகு நான் ஒருமுறை யாகம் செய்யும் போது கண்டெடுத்த சீதை என்ற பெண்ணை, இவ் வில்லை வளைத்து நாணேற்றுபவனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதாகக் கூறினேன்.

பல மன்னர் இதை வளைக்க முயன்று அவமான மடைந்து என்னோடு போரிட்டனர்.  நான் தோல்வி யுற்றுப் பின் தேவர்களுடைய உதவியாலே பெற்ற சேனைகளால் அவர்களை வென்றேன்; அதுமுதல் இவ் வில் வளைக்கப் பெறாமலிருக்கிறது.  இவர்கள் இதை வளைத்தால், இவர்களுக்குச் சீதையைக் கொடுப்பேன் என்று கூறினன்.  அவ்வில் வைத்திருந்த இரும்புப் பெட்டிக்கு எட்டுச் சக்கரங்கள் உண்டு.  அதை அய்யா யிரம் பேர்கள் இழுத்து வந்தனர்.  தேவர்களாலும் அசுரர் களாலும், ராக்ஷஸர்களாலும் ஏனையோராலும் எடுக்க முடியாத அவ்வில்லை, இராமன் ஒரு கரத்தால் தூக்கி நிறுத்தி வளைத்தான்.  வில்லும் ஒடிந்தது.  அவ்வொலி கேட்டுப் பூமி நடுங்கிற்று.  எல்லோரும் மூர்ச்சையடைந் தனர்.  சனகன் மிக மகிழ்ந்து தனது மகளை அவனுக்குத் திருமணம் முடிக்கத் தீர்மானித்து, முனிவனுடைய சம்மதம் பெற்றுத் தசரதனை அழைத்துவர அயோத்திக்கு மந்திரிகளை அனுப்பினான்.
அந்தத் தூதர்கள் நான்காம் நாள் அயோத்தியை யடைந்து, தசரதனைக் கண்டு பல அரசர்களாலும் வளைக்க முடியாத வில்லை,  இராமன் வளைத்துச் சீதையை மணக்க உரியவனான செய்தியைக் கூறி மிதிலைக்கு அழைத்தனர்.  மறுநாள் தசரதன் அயோத் தியை விட்டுப் புறப்பட்டு அய்ந்தாம் நாள் மிதிலையடைந் தான்.  சனகன் அவனுக்கு முகமன் கூறி உபசரித்தான்.  தசரதன் தன் மக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.


பின் சனகன் தன் தம்பியாகிய குசத்துவசனை யழைத்துவரத் தூதுவரை யனுப்பினான்.  அவர்கள் இந்திரனது கட்டளைப்படி திருமாலை அழைத்துவரச் செல்லும் தேவர்களைப் போலச் சென்று அவனை அழைத்து வந்தனர்.  சனகனும் குசத்துவசனும் தசரதனை அழைத்து வரச் செல்ல, அம் மன்னனும் தனது புரோகிதனுடன் வந்து சேர்ந்தனன். = தசரதனுடைய வேண்டுதலினாலே வசிட்ட முனிவன் தசரதனுடைய குலக்கிரமத்தைக் கூறினான்.
தசரதன் குலமுறை பின்வருமாறு :- பிரமன், மரீசி, காசியபன், சூரியன், மநு, இக்ஷ்வாகு, குட்சி, விகுட்சி, பாணன், அநரண்யன், பிருது, திரிசங்கு, துந்துமாரன், மாந்தாதா, சுசந்தி, துருவ சந்தி, பரதன், அசிதன், அசமஞ்சன், அஞ்சுமான், திலீபன், பகீரதன், ககுத்தன், ரகு பிரவிருத்தன் (இவன் வசிட்டனால் சபிக்கப் பெற்று ராக்ஷஸனானவன்), சங்கணன், சுதர்சனன், அக்கினி வர்ணன், சீக்கிரகன், மரு, பிரசுச்ருகன், அம்பரீடன், நகுடன், யயாதி, நாபாகன், அசன், தசரதன்.


இக்கொடி வழியைக் கேட்ட சனகன், தனது கொடி வழியையும் கூறினான்.  அது வருமாறு:  சிமி, மிதி, உதாவசு, நந்திவர்த்தனன், சுகேது, தேவராதன், பிருகத்ரதன், மகாவீரன், சுத்ருதி, திருட்டகேது, ஹர்யச்வன், மரு, பிரதிந்தகன், கீர்த்திரதன், தேவபீடன், விபுதன், மகீக்ரகன்,  மகாரோமன், சுவர்ணரோமன், ஹிரஸ்வரோமன், சனகன்-இவ்வாறு கலியாணத்தின்முன் கொடிவழி கூறுவது மரபு.


இக்கொடி வழியைக் கூறிய சனகன், என் மகள் சீதையைக் கேட்டு நிர்ப்பந்தித்த சாங்காச்ய நகர மன்னனைக் கொன்று என் தம்பி, குசத்துவசனை அவ்வூருக்கு அரசனாக்கினேன்.  என் முதல் மகளாகிய சீதையை இராமனுக்கும், இளையவள் ஊர்மிளையை இலக்குவனுக்கும் தருகிறேன்.  இதுவே நிச்சயதார்த்தம் என்று புகன்றனன்.  அது கேட்ட விஸ்வாமித்திரன் மிக நன்று.  உன் தம்பியின் பெண்களைப் பரதனுக்கும் சத் துருக்கனுக்கும் கொடுக்க வேண்டும் என்று சொன்னான்.  சனகனும் அதற்கு இணங்கினான்.  பின் தசரதன் தான் இறங்கியிருக்கிற இடத்திற்குப் போய்க் கோதானம் முதலியன செய்திருந்தான்.  மேலே கண்ட வரலாற்றை ஆராய்வோம்.
                   ----------------------"”விடுதலை” 15-7-2014

Read more: http://viduthalai.in/page-3/84105.html#ixzz37am8Afk1

30 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. ஆட்சியில் வரலாற்றைக் காவிமயமாக்கத் திட்டம்!


சங் பரிவாரைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வுக்குத் தலைவராம்

- கண்டனங்கள் வலுக்கின்றன -.

புதுடில்லி, ஜூலை16- இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் Indian Council of Historical Research (ICHR) தலைவராக எல்லப்ரகதாசுதர்ஷன் ராவ் என்பவர் தற் போதைய மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் இந்த நிறுவனத்தை காவிமயமாக்கியதை, இந்த நியமனம் நினைவுபடுத்துவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஒருவரை ஒரு பணியில் நியமிக்கும்போது, அவர்குறித்த தகவல்களை அறியாமல் இருந்தால் அரசு ஒன்றுமில்லாமல் ஆகிவிடாதா? என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ரொமீலா தாப்பர் எழுதியுள்ள கட்டுரையில் இந்த வினா வைத் தொடுத்துள்ளார்.

மனிதவள வளர்ச்சித்துறைசார்பில் இந்த வாரத்தில் ராவ் நியமனம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே, இளங்கலையில் நான்காண்டு பட்டப்படிப்பு என்று யுஜிசி, டில்லி பல்கலைக் கழகம் முதலில் கூறிவிட்டு, பின்னர் பின்வாங்கி உள்ளது. ராவ் இணையத்தில் தன்னுடைய பிளாக்கில் (Blog) பல ஆண்டுகளுக்கு முன்பாக, சுற்றுலா மேலாண்மை மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவராக, ககாதியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியுள்ளார். அவருடைய கருத்துக்கள் அப்படியே தலைவரின் நாட்குறிப்பு (Chairperson’s Diary) என்கிற தலைப்பில் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் வாயிலாக நடத் தப்பட்ட மாதிரிப்பள்ளிகளில் மேற்குலகின் வரலாறுகள் என்னும் ஆய்வில், பூஜ்யசிறீ, மகாமகோபாத்யாயா டாக்டர் கே.சிவானந்த மூர்த்திஜி என்பவருக்கு எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதாக இந்த ராவ் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், அவரைப்பற்றிக்கூறுமபோது, தான் எப்போதுமே ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர் அல்ல என்று கூறுகிறார். டி.என்.ஜா போன்ற வரலாற்றாசிரியர்கள் கூறும் போது, ராவ் சங்பரிவாரங்களின் கருத்துக்களைக் கொண்டு, இந்திய அறிஞர்கள் குழுவிலும் இருப்பது மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் இருப்பதும் என்பது ஒன்றோடொன்று இணைய முடியாமல் இருப்பதாக உள்ளது.

வரலாற்றாசிரியர் டி.என்.ஜா,மகாபாரதம் நடைபெற்ற காலத்தைக் குறிப்பிட முடியுமா? என்று ராவிடம் கேள்வி எழுப்புகிறார். மேலும் டி.என்.ஜா கூறும்போது,மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மட்டும் இந்த கேள்வியைக் கேட்க வில்லை. நமக்கு முன்னோரான தத்துவார்த்தவாதியான மாதவாச்சார்யாவும் 13ஆம் நூற்றாண்டில் கேள்வியை எழுப்பி உள்ளார் என்று கூறுகிறார்.

பழமையைத் தூக்கிப் பிடிக்கும் பணியாக 2007ஆம் ஆண்டில் ராவின் பிளாக்கில் இந்திய ஜாதி அமைப்பு முறை குறித்து எழுதியுள்ளார். பேராசிரியர் டி.என்.ஜா நகைச்சுவையாக, கடந்த காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார். ஆனால், அந்த அமைப்பு முறை இருந் திருந்தால், மோடி பிரதமராக வந்திருக்கவே முடியாது என்று கூறுகிறார். பேராசிரியர் ராவ் சமூகத்தின் மோச மானதாக ஜாதி முறையைப்பார்க்காமல் உள்ளார். ஜாதீயமுறையிலான அதே கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுவது என்பது முசுலீம்கள் நுழைவு மற்றும் அதைத்தொடர்ந்து அவர்களின் ஆட்சி ஆகிய வற்றைக்கொண்டு வந்ததுபோல் மோசமான நிலையில்தான் கொண்டு சேர்க்கும்.

இதுபோன்ற அனைத்துப் பணி நியமனங்களும் வேறு பாடின்றி அரசியலில் இருப்பது இயற்கைதான். 1998 ஆம் ஆண்டில் வரலாற்றுப்பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பிர மணியன் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கூறும்போது, பேராசியர் ராவ் வரலாறு குறித்து கருத்துக்கூறுவதற்கு சுதந்திரம் உள்ளவர்.

அவருடைய ஜாதி முறை குறித்த கருத்துக்கள் குறித்த பிரச்சினை உண்மையைக் கூற வேண்டுமானால், எழுத்துமூலம் தேர்வின்போது அளிக்கப் படவில்லை. ராவ் போன்றவர்களை இந்திய வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவராக நியமிப்பது என்பது தேசிய அளவில் அறிவியல் ரீதியாக வரலாற்றை எழுதும்போது தவறான வழிகாட்டுதலையே அளித்துவிடும் என்று டி.கே.வெங்கடசுப்பிரமணியன் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/84137.html#ixzz37eKGTkaz

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் நரபலியா?



சேலம், ஜூலை 16_ சேலம் அருகே புதையல் எடுப்ப தற்காக பள்ளிக் குழந்தை களை கடத்தி நரபலி கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக கிராம மக்கள் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் அலுவலகத் திற்குத் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 50-_க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-

பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-_ மாணவியர் மந் தைமேடு என்ற இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகு தியில் புதையல் எடுப்பதா கக் கூறி வெளியூர்களைச் சேர்ந்த சில நபர்கள் வந்து தங்கி உள்ளனர். அங்குள்ள ஒருவரின் வீட்டில் தங்கி இதற்காக யாகம் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

யாகம் முடிந்தவுடன் நரபலி கொடுக்கவும் திட்ட மிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்காக எங்கள் பகுதியில் இருந்து பள்ளிக் கூடத்திற்கு சென்ற தாம ரைச்செல்வி, மகேஷ், சந் தோஷ், சக்திவேல் ஆகிய மாணவ_ மாணவிகளிடம் நைசாக பேசியுள்ளனர். அப் போது சாக்லேட், பிஸ்கட் தருகிறோம், எங்களுடன் வாருங்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் பயந்து போன சிறு வர்,-சிறுமியர் பள்ளிக்கூடத் திற்கு வேகமாக சென்ற போது அவர்களை துரத் திச் சென்று பிடிக்க முயற்சி செய்துள் ளனர்.

எங்கள் பகுதியில் தங்கி யாகம் நடத்துபவர்கள் சில குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களில் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அந்த நபர் களின் செயல்பாடு பள்ளி செல்லும் குழந்தைகள் மற் றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் குழந்தைகளின் உயி ரைக் காப்பாற்றவேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்

Read more: http://viduthalai.in/e-paper/84141.html#ixzz37eKiGhef

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரமாம்!


பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தாலும் அமைந்தது - அந்நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது.
குறிப்பாக சமஸ்கிருதக் குடும்பத்தினைச் சேர்ந்த இந்தியைத் திணிக்கும் வேலையில் அது இறங்கிவிட்டது.

மத்திய அரசின் கடிதப் போக்குவரத்துகள் இனி இந்தியில் இருக்கவேண்டும்; பொதுத் துறை வங்கிகளும், இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியும் இதனைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. சென்னையைச் சேர்ந்த பெல்சன் அண்ட் பெல்சன் சட்ட ஆலோசனைக் குழுமம் ஒரு வழக்குத் தொடர்பாக சில தகவல்களைத் திரட்ட தகவல் உரிமைச் சட்டத்தின்படி மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்படி கடிதம் ஒன்றை எழுதியது - மே மாதத்திற்கு முன்னர்; இந்தக் கடிதத்திற்கு ஆங்கிலத்தில் பதில் கடிதங்கள் வந்தன.

ஆனால், மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்த பிறகு வரும் கடிதங்கள் அனைத்தும் இந்தியில்தான் இருக்கின்றன.

பி.ஜே.பி. அரசு இந்தியைத் திணிக்க முயன்ற நேரத்தில், முதல் எதிர்ப்புக் குரல் திராவிடர் இயக்கப் பூமியான, திராவிடர் இயக்கம் உழுது பக்குவப்படுத்திய பூமியான தமிழ்நாட்டிலிருந்துதான் வெடித்துக் கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த கவலைகள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையானது கடந்த 2014 மார்ச் 10 ஆம் தேதியன்று இந்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நடைமுறையை உறுதி செய்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், ஏ பிரிவு மாநிலங்கள் அதாவது இந்தி பேசக் கூடிய மாநிலங்கள் சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள் ளது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக்குகள் ஆகியவற்றில் இந்தியும், ஆங்கிலமும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது - இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே உரியது.

இந்தி பேசாத மாநிலங் களுக்குப் பொருந்தாது. மேலும் இந்தி பேசுகிற மாநிலங் களுடனான இணைப்பு மொழியாக இந்தி இருக்கும் என்ற நடைமுறையை இந்த சுற்றறிக்கையும் உறுதி செய்கிறது. இதையேதான் மே 27 ஆம் தேதியன்று உள்துறை அமைச் சகமும் உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பியது.

இதனால் இந்தி பேசுகிற மாநிலங்களில் சமூக வலைதளங்களில் இந்திக்கு கட்டாயம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது ஒரு புதிய கொள்கையும் அல்ல... இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியும் அல்ல... இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், நடந்தது என்பதோ வேறுதான்.

தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. ஏற் கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்பட உத்தர விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளன. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங் களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட் டுள்ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவல கங்களில் 11 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சம் பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையொப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப்போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகக் கடிதங்கள், பதவி உயர்வு ஆணை கள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தியைப் படிப்படியாகத் திணிப்போம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அத்தோடு நின்றாரா? நாட்டு மக்கள் எல்லோரும் சமஸ் கிருதத்தைப் படிக்கவேண்டுமாம்; சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டால் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாமாம்! (இவர் எத்தனை மொழியைக் கற்றுத் துறை போனவர் என்று தெரியவில்லை).

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில் (14.7.2014) திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து - எவ்வளவுத் துல்லியமானது என்பதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு உறுதிப்படுத்திவிட்டது.

சமஸ்கிருதக் கலாச்சாரத்தை பார்ப்பனர் அல்லாத மக்கள்மீது திணிப்பது திட்டமிட்ட பார்ப்பனியப் பண் பாட்டுப் படையெடுப்பே!

வரும் ஆகஸ்ட் 6 முதல் 13 வரை சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் என்றும் அறிவித் துள்ளார்.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, அரசின் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவிட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

பா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பன ஆட்சியாகத்தான் இருக்கும் என்று தொலைநோக்கோடு திராவிடர் கழகம் எச்சரித்தது. ஆனாலும், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு தோளில் நீளக் கறுப்புச் சால்வை அணிவித்துக் கொண்டு முழங்கியவர்களும் மணியான அறிவுஜீவிகளும், பாட்டாளிப் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டுள்ளவர் களும் தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்தத் துரோகத்துக்குக் கழுவாய்தான் ஏது?

உண்மையான திராவிடர் இயக்கத்துக்கு அதிகமான வேலை காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை!

தயாராவீர் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/84146.html#ixzz37eKwzuVk

தமிழ் ஓவியா said...


கர்மா - விதியை நம்பினால்...


கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

Read more: http://viduthalai.in/page-2/84145.html#ixzz37eL5l3lV

தமிழ் ஓவியா said...


காந்தி கொலை வழக்கு தொடர்பான வரலாற்றை மாற்றி எழுதும் பாஜக முயற்சிகளை முறியடிப்போம்!


பிற ஏட்டிலிருந்து...

காந்தி கொலை வழக்கு தொடர்பான வரலாற்றை

மாற்றி எழுதும் பாஜக முயற்சிகளை முறியடிப்போம்!

மாநிலங்களவையில் ஜூலை 9 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாட் டின் வரலாறு சம்பந்தப்பட்ட ஆவணங் கள் அடங்கிய ஏராளமான எண்ணிக்கை யிலான கோப்புகள் அழிக்கப் பட்டது சம்பந்தமாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலை வர் ஆட்சேபணை எழுப்பியதைத் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டதைப் பார்த்தோம். பி.டி.அய். செய்தி ஜூன் 23 அன்று பிடிஅய் செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டி ருந்தது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளைக்கிணங்க, மத்திய உள்துறை அமைச்சகம் தூய்மைப்படுத்து கிறோம் என்ற பெயரில் ஒரு மாதத்திற் குள்ளாகவே சுமார் ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துவிட்டன ... என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும், ... (மத்திய உள்துறை அமைச்சகம் அமைந் துள்ள) நார்த் பிளாக்கில் உள்ள ஸ்டீல் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த கோப்பு களைப் பார்வையிட்டபோது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல கோப்புகள் காணப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட் டிருந்தது. ஆர்வத்தைக் கிளப்பிய அத் தகைய கோப்புகளில் ஒன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்ப வம் குறித்து அதிகாரபூர்வமாக அறி விப்பதற்கு முன் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டம் பற்றியது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி யது என்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவரும் நினைவு கூர் வார்கள். இந்த செய்தியை நாட்டு மக் களுக்கும் உலகத்திற்கும் எப்படி அறி விப்பது என்பது குறித்து அதிர்ச்சிய டைந்த அரசியல் தலைமையும், அரசாங் கமும் ஆடித்தான் போயிருந்தன. இது தொடர்பாகத் தீர்மானித்திட அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைச் சரவைக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். விவாதங்களுக்குப் பின்னர், அகில இந்திய வானொலிமூலம் பிரதமரே இப்படுகொலை செய்தியை அறிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. நம்மிடையே வாழ்ந்துகொண்டிருந்த ஒரு விளக்கு அணைந்து விட்டது என்று தொடங்கும் அவரது பேச்சு இன்றுவரை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்பட்டு வந்த உரையாகும். திரித்து எழுத... இந்த செய்திகுறித்து அரசாங்கத்திட மிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பாஜக தவிர ஒட்டுமொத்த நாடாளு மன்றமே எழுந்து நின்றது. அரசாங்கம் இந்த செய்தியை மறுத்த போதிலும் இந்தியாவின் வரலாற்றைத் திரித்து எழுதிட நரேந்திரமோடியின் தலைமையி லான பாஜக அரசாங்கம் தன் வேலை களைத் துவக்கி விட்டது என்று ஆழமான முறையில் சந்தேகங்கள் எழுந்திருப்பது தெளிவு.

மகாத்மா காந்தி படுகொலை குறித்து, அரசின் அதிகாரபூர்வ பதிவேடுகளிலி ருந்து ஆர்எஸ்எஸ் அல்லது அதன் உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பாக எந்த சாட்சியம் இருந்தாலும், அதனை அழித்தொழித்திட முயற்சிகள் மேற்கொள் வதுடன், இன்றைய இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற - ஜனநாயக குணாம்சத்தை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு அது இன்றைக்கும் முயற்சிப்பதும், தெள் ளத்தெளிவான ஒன்றேயாகும். இத்தகைய ஆர்எஸ் எஸ்-இன் திட்டம் விடுதலைப் போராட்ட காலத்தில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. சுதந்திர இந்தியா வில் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத் தின் அடிப்படைகளின் மேல் அரசமைப் புக் குடியரசு நிறுவப்பட்டது. ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நவீன இந்தியக் குடியரசை தன்னுடைய இந்து ராஷ்ட் ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததை இது தடுத்திடவில்லை.


தமிழ் ஓவியா said...

ஒத்தி வைத்ததை உடனே நிறைவேற்ற...

நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் 31 சதவீத அளவிற்கு மட்டுமே வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும், அபரிமிதமான அளவில் பெரும்பான் மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக இந்தியக் குடியரசைத் தங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்திட அனைத்து முயற்சிகளையும் இப்போதே தொடங்கி விட்டன. முன்பு அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலிருந்த பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசங் கம், கூட்டணியினர் கட்டாயத்தின் கார ணமாக, தங்கள் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பின்னுக்குத் தள்ளி வைக்க வேண்டிய நிலையிலிருந்தது.

ஆனால், இப்போது தங்கள் திட் டத்தை எவ்வித சிரமமுமில்லாமல் நிறை வேற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதுபோல் தோன்றுகிறது.இவர்கள் தங்கள் குறிக்கோளை நிறைவேற்றிட வேண்டுமானால், மத வெறியைக் கூர் மைப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்குவதோடு வரலாற்றை மிகப்பெரிய அளவில் மாற்றி எழுத வேண்டியதும் தேவையாகும். பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்திடுவோம் என்று பேசியிருப்பது குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளி யிட்டுள்ளன. (இந்துஸ்தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). இதனை நாங்கள் முன்பும் செய்ய முயற்சித்தோம். இப்போது மீண் டும் தொடர்வோம், என்று அவர் கூறியி ருக்கிறார். இப்போது மீண்டும் ஆர்எஸ்எஸ் அடிப்படைகளுக்குத் திரும்பிட ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பார்க்கி றார்கள். படேலுக்கு வந்த இளைஞனின் கடிதம் ஜவஹர்லால் நேருவால் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்ப டையில் அப்போது உள்துறை அமைச் சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த சர்தார் படேல், மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள்தான் தற்போதைய ஆட்சியாளர்களால் அழிக் கப்பட்டிருக்கின்றன என்று இப்போது நமக்குக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


1948 பிப்ரவரி 4 தேதியிட்டு சர்தார் படேலால் தயா ரிக்கப்பட்ட அரசின் அறிக்கையானது, சங்பரிவாரத்தின் ஆட்சேபகரமான மற் றும் ஊறு விளைவிக்கக்கூடிய நடவடிக் கைகள் எவ்விதத் தங்குதடையுமின்றி தொடர்கின்றன. சங்பரிவாரத்தின் நடவடிக்கைகள் பலரைப் பலி கொண்டுவிட்டன. இதில் மிகவும் சமீபத்தில் நம்மால் பெரிதும் நேசிக்கப்பட்ட காந்திஜி அவர்களையே இழந்து நிற்கிறோம், என்று குறிப்பிட்டி ருந்தது. மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்த பியாரேலால் தன்னு டைய மகாத்மாகாந்தி என்னும் புத்தகத் தின் கடைசி அத்தியாயத்தில் பின்வரு மாறு நினைவு கூர்கிறார்: மகாத்மா காந்தி படுகொலை செய்யப் பட்ட பின்னர் ஓர் இளைஞனிடமிருந்து ஒரு கடிதம்சர்தார் படேலுக்கு வருகிறது. அக்கடிதத்தில் அந்த இளைஞன் கூறி யுள்ள கூற்றின்படி, ஆர்எஸ்எஸ் இயக்கத் திற்குள் ஏமாற்றப்பட்டு சேர்ந்து விட்டேன் என்றும் ஆனால் பின்னர் விரக்திய டைந்து விட்டதாகவும் கூறியிருப்பதுடன், கொலை நடைபெற்ற வெள்ளிக்கிழமை யன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை நல்ல செய்தி கேட்பதற்காக வானொலிப் பெட்டிகள் முன்பு காத்துக்கொண்டிருங் கள் என்றெல்லாம் முன்ன தாகவே ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அறிவுறுத் தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் அக் கடிதத்தில் விவரித்திருந்தார். செய்தி வெளியானபின், டில்லி உட்பட ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல மய்யங்களில் இனிப்பு கள் விநியோகிக்கப்பட்டன. (பக்கம் 756).

ஆவணங்களை அழிப்பது ஒரு பகுதி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இத்தகைய வரலாற்றுப் பதிவுகளைத்தான் அதன் இன்றைய அரசியல் அங்கமாகத் திகழும் பாஜகவின் நரேந்திர மோடி அரசாங்கத் தால் அழிக்க கோரப்பட்டிருக்கிறது. பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட இந்திய சமூகம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றி வேற்று மையில் ஒற்றுமை காணும் வளமான மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய வளமான நாகரிக வர லாற்றை மறுதலிக்கக்கூடிய விதத்தில் நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதிட வேண்டும் என்கிற ஒட்டுமொத்த திட்டத் தின் ஒரு பகுதிதான் இவ்வாறு வரலாற்று ஆவணங்களை அழித்தொழித்த நடவ டிக்கையாகும். இந்தியாவின் வரலாறு என்பதை இந்து தேசத்தின் பெருமை யைக் கூறும் வரலாறாகவும், இது இந் துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் மாற்றி எழுதவேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாகும். அதன் ஒருபகுதியே வரலாற்று ஆவணங் களை இவ்வாறு அழித்தொழித்த நட வடிக்கை.

உடனடி ஆபத்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டு மானால், தற்போது இருந்து வரும் ஒட்டு மொத்த கல்வி முறையிலும் மாற்றத்தைப் பெரிய அளவில் இவர்கள் கொண்டு வரவேண்டும். அதற்கான வேலைகளிலும் இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரங் கள் இறங்கி இருக்கின்றன. இக்கும்ப லிடமிருந்து வந்துள்ள உடனடி ஆபத்து இதுவாகும். இதனை எதிர்த்து முறி யடித்திட நாட்டுப்பற்றுள்ள அனைவரும் அணிதிரண்டிட வேண்டும்.ஆர்எஸ்எஸ்/பாஜக/நரேந்திர மோடி அரசாங்கம் தன்னுடைய ஆபத்தான சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறது. இவர்களின் இத்தகைய இழிமுயற்சிகளிலிருந்து நம் மாபெரும் நாட்டின் வளமான வேற்றுமை யில் ஒற்றுமை காணும் பண்பினைப் பாது காத்திட, நாட்டைப் பாதுகாத்திட நாட்டுப் பற்று கொண்ட அனைவரும் அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

- தமிழில்: ச.வீரமணி; பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

நன்றி: தீக்கதிர், 14.07.2014

Read more: http://viduthalai.in/page-2/84147.html#ixzz37eLE2Ixv

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் கங்காப் பிரவாக் பாதனம் என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் ஆணை போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

புற்றுநோயை உண்டாக்கும் கங்கை நீர்


இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த நீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருள்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்ய அறிக்கை தெரிவித்துள்ளது.

நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய கங்கை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்ததாக என்சிசிஎம் தலைவர் டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் காணப்படும் நச்சுத் தன்மையானது புற்றுநோய் உள்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை 8.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக்கழகம் போன்ற வாணவேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு - வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாகவும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கையிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டியவர்களே ஆவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங்களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது _- மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது _- நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும்போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் _- நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படக்கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (ஸிமீணீநீவீஷீஸீ) தெளிவாக்குகிறது.

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்தியபோதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப்பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்கள் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (Consensual Approach) முன்பே செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கருத்து


குறைந்த நிலப்பரப்பில் குறைவான தொழிலாளர்களுடன் அதிக உற்பத்தி கிடைக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம், கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது போன்றவற்றிலும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
இப்போது இருக்கும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் நடும் தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளியைக் களையவேண்டும்.

- பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்.

தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். அவ்வாறு தமிழர்களிடையே முதலில் தமிழ்ப்பற்று வளர்ந்தால்தான் பிறமொழிகளின் திணிப்பை எதிர்கொள்ள முடியும். -கவிப்பேரரசு வைரமுத்து

செல்பேசி, மின்-அஞ்சல், முகநூல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவோர் அடையாளம் தெரியாத பெயர்களில் தங்களுக்கு வரும் தகவல்களைக் காண ஆர்வம் காட்டக்கூடாது. தகவல் தொழில்நுட்பத்தை நல்ல நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் சைபர் குற்றங்கள் குறையும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் இணையதளத்தில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

- லத்திகா சரண், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர்

வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலக நேரிடும்போது அதற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீதிபதிகளிடமிருந்து உண்மையான காரணத்தைக் கொண்டு வருவதற்காக ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிடுகின்றன. பின்னர் அந்த யூகங்களுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகும்போது இந்தக் காரணங்களால் விலகுகிறேன் என்று கூறுவது நல்லது.

- பாலி நாரிமன், மூத்த வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

உடல்நலனை பாதிக்கும் சாண எரிபொருள்

உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அய்.நா. கூறியுள்ளது.

இந்தியாவில் சுத்தமான எரிபொருள் அனைவரும் வாங்கும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 85 விழுக்காடு கிராமப்புற வீடுகளில் சாண எரிபொருளையே (பயோமாஸ்) பயன்படுத்துகின்றனர். 45 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சாணத்தைத் தட்டி அதனை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்துவதால் அதிலிருந்து காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும் அளவு புகை வெளியாகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 300லிருந்து 3000 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு அடைவதுடன், உடல் நலத்தையும் பாதிக்கிறது. எனவே ஸ்டவ்களை அதிகம் பயன்படுத்தச் செய்வது புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சி



பக்கவாதம் என்றாலே இன்னும் கிராமப் புறங்களில் செய்வினை, மந்திரம் செய்து கை கால்களை யாரோ முடங்கச் செய்துவிட்டார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது மருத்துவ அறிவியல்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பசைச் சேர்ந்த லான் புர்கர்ட் என்பவர் நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கடல் நீரினுள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் சிக்கி மண் குதிருக்குள் மாட்டிக் கொண்டார். நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை கால்களை அசைக்க முடியாத நிலைக்கு ஆளானார். 19 வயதில் இந்த நிலைக்கு வந்த லான் புர்கர்ட்டிற்கு தற்போது 23 வயது ஆகிறது.

அவரது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த சிப் லான் புர்கர்ட் நினைப்பதை _ எண்ண ஓட்டத்தை ஒரு கணினியின் மூலம் மொழிபெயர்க்கும் தன்மையுடையது.

எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலைத் தூண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளும் கணினியிலிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயலாற்றக்கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலதுகரத்தில் பொருத்தப்பட்டது. கணினியுடன் இணைக்கப்பட்ட தூண்டியின் மூலம் அவரது கையின் தசைகளைச் செறிவுடன் தூண்டக் கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்தக் கட்டளைகளின்படிச் செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையின் மூலம் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைச் செயல்படுத்த முயன்றபோது, திறந்திருந்த வலது கையினை முழுமையாக மூடி முஷ்டியாக்கவும், மூடிய கையினை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் செய்ததுடன், விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மூளை பாதிப்படைந்து உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலிருக்கும் பக்கவாத நோயாளிகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் திருப்புமுனையான மருத்துவப் புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூட மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : சைவம்

கி.தளபதிராஜ்

இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.

சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?
சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?
சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?
சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.

சாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்?
..........????

வெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

செட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.

நாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

நாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.

அசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.

உலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.

சைவம் பார்க்க! அசைவம் சாப்பிட!!

தமிழ் ஓவியா said...

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்



உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.



தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன்.

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலும் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முதுகலைப் பட்டத்தைத் தமிழில் முடித்து முனைவர் பட்ட ஆய்வினையும் தமிழ்ப் பாடப் பிரிவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல சுலபலமானது அல்ல என்று ஜெயசீலன் கூறியுள்ளார். மேலும், தமிழ்மொழியில் படிக்க தனியான பயிற்சி மய்யங்கள் இல்லை. தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தமிழில் படிப்பது என்பது அதிக உழைப்பைக் கோருவது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் மூவர் தமிழில் படித்துத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இன்னும் நிறையப் பேர் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கான தரவுகளை அதிகம் கொண்டுவர வேண்டியது அரசு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழிலேயே தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று 5.1.1994 அன்று உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தச் சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை ரத்து செய்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர்,

தமிழகத்தில் 1956ஆ-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976ஆ-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்தத் திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்பு, தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் பொதுவிதிகள்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதேபோல, தமிழே சென்னை உயர்நீதிமன்ற மொழியாகவும் மாறும் நாள் எந்நாளோ?

தமிழ் ஓவியா said...

உடம்புக்கு நல்லது மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்


உடம்புக்கு நல்லது

மாற்று வழிகளல்ல
மனவலிமையே முக்கியம்

புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏனோ விடுவதில்லை.

சிகரெட் பழக்கத்தை விடப் போகிறேன் என்று சொல்லும் சிலரும் புகையிலை சிகரெட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு மாற்று வழிதான் ஈ-_சிகரெட்.

ஆனால் ஈ_-சிகரெட் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழி கிடையாது. அதை பயன்படுத்தி புகைக்கும் பழக்கத்திலுருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் நாங்கள் உள்பட பலர் என்கிறார்கள் பல முறை புகையை விட்டவர்கள்.

இந்த ஈ_-சிகரெட் ஒரு சரியான ஃபோர்ஜரி, நூறில் இரண்டு பேர்தான் இதை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரெட் புகைய ஆரம்பித்துவிடும். காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து மீளவே முடியாது. சாதாரண சிகரெட்டுகளால் புகைவழியாக உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை இந்த ஈ-_சிகரெட் திரவ வடிவத்தில் புகையின்றி கொடுக்கிறது. இதனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு குறைவது இல்லை. ஈ_சிகரெட்டை எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட அதிகம் பயன்படுத்தும் ஆவல் வரும். இதனால் ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும். அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாகும்.

எனவே புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை -சிகரெட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! என்கிறார் ஒரு முன்னாள் புகைஞர்.

புகையை நிறுத்த முயலுவோருக்கு ஊக்கம் அளிப்பதற்கென்றே முகநூலில் https://www.facebook.com/groups/whyquit/ என்ற குழுவில் குவிகிறார்கள் புகையை வென்றவர்கள்.

- தளபதி பாண்டியன்

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கிறதா?


பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும்

1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும்.

அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் பேட்டிகூட வெளிவந்தது.

பாலசந்தர், பாரதிராஜா பிராமண சமுதாயத்தைத் தாக்கிப் படம் எடுத்திருக்கலாம்; இனிமேல் எவரும் அதுபோல் எடுக்க முடியாது. அவர்கள் படம் எடுத்த காலங்களில் பிராமணர்களுக்கென்று சங்கம் இல்லை. இனி அது நடக்காது என்றெல்லாம் திருவாளர் காசிராமன் கொடுத்த பேட்டி கல்கி இதழில் வெளிவந்தது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்கியில் (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அது இதோ!

ஞானபீடம் என்ற ஒரு நாடகம்

வெகுநாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது!

ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!

மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேதவித்தான சங்கரனாகவும், மிராசுதாரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக் கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டு, சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவர் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ் டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.

இதுதான் கல்கி கூறும் தகவல்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கதுதான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். ஜாதிப் பிரச்சினைபற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும் இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக்கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.

இப்பொழுதுதான் உச்சக் கட்டமான முக்கியக் காட்சி. இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.

நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் -_ இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடி உள்ளனர்.

பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கான்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.

நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதை எல்லாம் சொல்லுகிறது.

சங்கர மடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையே இல்லை.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கமுக்கமா வச்சிருககாங்க்....



ஹீரோ சான்ஸ் போச்சே!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது.

மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு விருந்துண்ண வருகிறேன் என்று உற்சாகமூட்டினார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன. பதவியேற்காத நிலையில் இப்படி ஒருவர் பேசமுடியுமா? இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்றெல்லாம் தெரியாமல் இப்புரளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, தேர்தலெல்லாம் முடிஞ்சு போச்சு, இன்னும் உங்க ரீலை முடிக்கலையா நீங்க? என்று மோடியின் விளம்பரக் குழுவுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

அந்த அளவுக்கு தேர்தல் பிரச்சார புரளிகளைப் போல, அதன் பிறகும் கொடுத்த காசுக்கு மேல கூவிக் கொண்டிருந்தது அவரது டீம். மோடி வந்ததும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக சிங்களக் கடற்படையைத் துவம்சம் செய்வார் என்று சொன்னவர்கள், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறார். இந்நிலையில்தான் செவிலியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் வெளிவந்தது. உலகளவில் கவனம் பெறப்போகும் இந்த விவகாரத்தில் மோடியின் ஹீரோயிச இமேஜை உயர்த்துவது எப்படி, மோடியை சர்வதேச இராஜதந்திரியாகக் காட்டுவது எப்படி என்றெல்லாம் அதுக்குன்னு இருக்கும் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஆனால், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளால் செவிலியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்ததும் சான்ஸ் போச்சே என்று புலம்புகின்றனராம் மோடியும், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுதும் கும்பலும்.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!


இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது! - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ்

காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடே தொடரும்! - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் பேட்டி

பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!

புதுடில்லி, ஜூலை 17_ இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய பின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர் களிடம் பேசும்போது இந்தக் கருத்தை வழி மொழிந் தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கிடைக் கும் என்று தமிழ்நாட்டில் துள்ளிக் குதித்தவர்களின் நெற்றியை இழுத்துப் பட்டை நாமத்தைச் சாத்தி விட்டது பி.ஜே.பி. ஆட்சி.

இந்தியப்பிரதமர் எங்களின் நிலையை நன்கு அறிந் திருக்கிறார். அவரது அனைத்து நடவடிக்கைகளும் எங்களுக்கு ஆதரவாக அமையும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறுகிறார்

இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டில் நமக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்து வருகிறது என சமீபத்தில் டில்லி வந்து சுஷ்மா சுவராஜை சந்தித்துவிட்டுச் சென்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார். இது தொடர் பாக அவர் லங்கவேப் என்ற அரசு இணையதளப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் விரிவு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நமது அதிபர் அனைவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல சந்திப்புகளை நிகழ்த்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நான் டில்லி சென்று சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்தேன். சுஷ்மா சுவராஜ் இலங்கையுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் விதமாக நம்பிக்கையான பல உறுதிமொழிகளைக் கூறினார். முக்கியமாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு என்ற அச்சுறுத்தலை தொடர்ந்து வைத்து வரும் வேளையில் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பேச்சு நமக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கையில் நடந்து வந்த தீவிரவாதச் செயல்களை நமது அதிபர் தலைமையில் அடக்கி வைத்தோம். உலகெங்கும் சிதறியுள்ள தீவிரவாதிகளின் ஆதவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கின்றனர். மேலும் பொய்யான தகவலை மேற் குலகிற்கு வழங்கி நம்மீது அழுத்தம் கொடுக்க முயல் கின்றனர். சில மேற்குலக நாடுகளுக்கு அவர்களின் சொந்த லாபம் கருதி இலங்கை மீது பெரிய அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் ஒன்று கூடி தடுத்து வருகிறோம். இந்த நிலையில் நரேந்திர மோடி அரசின் பதவியேற்பு நமக்கு மிகவும் சாதக மானதாகும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கும் வரை மேற்குலக நாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது, நமது முடிவில் என்றும் உறுதியாக இருப்போம்.

மோடி அரசின் ஆதரவு

முக்கியமாக இந்தியாவும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆகையால் தான் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றிணைந்து உலக அரங்கில் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதே நேரத்தில், மோடி அரசும் நமக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதை இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிபடக் கூறினார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது

தமிழ் ஓவியா said...

'உள்நாட்டுப் போருக்கு பிறகு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள், வாழ் வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இலங்கை எமது நட்பு நாடு மாத்திரமல்ல; கலாச்சார ஒற்றுமை கொண்ட நாடும்கூட; அய்நா விசாரணைக் குழு அமைக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே முன்னாள் அரசின் நிலைப்பாட்டையே நாங்களும் கையாள் வோம் என்று உறுதிபடக்கூறினார்.

மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. என்று அந்த இணைய தளத்திற்கு ஜி.எல்.பிரீஸ் பேட்டியளித்தார்;

முந்தைய காங்கிரஸ் நிலைப்பாடே தொடர்கிறது!:சையத் அக்பருதீன்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மா _ ஜி.எல்.பிரீஸ் சந்திப்பின்போது இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட் டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் வலிமை பெற்று வருவதைக் காட்டுகிறது. இலங்கையில் அய்.நா. மனித உரிமைகள் பேரவை யின் விசாரணைக் குழு மேற்கொள்ளவுள்ள நட வடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப் பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அய்.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று பதி லளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அக்பருதீன்.

இலங்கை இராணுவ செய்தி இணையதளம்

இலங்கையில் நடந்தது தண்டனைக்குரிய குற்ற மல்ல, இலங்கையின் அனைத்து முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்! என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளதாக இலங்கை இராணுவச் செய்தி இணையதளம் (http://www.defence.lk/) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றவிசாரணை என்ற பெயரில் தீர்மானம் கொண்டுவந்தால் இலங் கைக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுப்போம் என்றும், மேலும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் நடைபெறவில்லை, அங்கு நடந்தவை அனைத்தும் தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளே என்றும் இந்திய அரசாங்கம் கூறியதாம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமி ழர்ப் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று துள்ளிக் குதித்து தமிழ்நாட்டு மக்களிடம் உத் தரவாதம் கொடுத்த கட்சிகள், தலைவர்கள் இந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டிய குற்றவாளி களாகவே கருதப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/84194.html#ixzz37mKFzwtm

தமிழ் ஓவியா said...

வழிக்கு வந்தது கிரிக்கெட் கிளப்!

வேட்டி அணிவது தொடர் பாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் முதலமைச்சரின் அறி விப்புக் காரணமாகவும் கிரிக் கெட் கிளப்பின் விதிமுறை களை மாற்றத் தயாராக இருப்பதாக கிளப்பின் தலை வர் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84188.html#ixzz37mLEiaiP

தமிழ் ஓவியா said...


பழைமைப் பித்துக் கோழையாக்கும்

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். - (குடிஅரசு, 18.12.1943)

Read more: http://viduthalai.in/page-2/84205.html#ixzz37mLZlFCm

தமிழ் ஓவியா said...


பிரதமரும்-கட்சித் தலைவரும்!


பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல மோடிக்கேற்ற ஜோடியாக இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

உண்மையைச் சொல்லப்போனால், எல்லா வகைகளிலும் எல்லாமுமாக நரேந்திர மோடிக்கு இருக்கக் கூடியவர் தான் இந்த அமித்ஷா.

அசல் ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி ஏடே கூட நேற்று (16.7.2014) தீட்டிய தலையங்கத்தில் அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராக அமைத்துக் கொண்டது மோடிக்கு மரியாதை சேர்க்காது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

தினமணி எழுதுகிறது:

அமித்ஷாவின் அரசியல் திறமைகள்பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேநேரத்தில் கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித்ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது - தார்மீக ரீதியில் சரியானதுதானா என்ற கேள்விக்கு மன சாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது! என்கிறது தினமணி

பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மூச்சு முட்ட எழுதி வந்த - செய்திகளை அந்தக் கோணத்தில் சித்தரித்த தினமணியே, அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டு வந்தது மனச்சாட்சியற்ற செயல் என்று காலை வாரிவிட்டதே!

குஜராத் மாநிலத்தில் காவல்துறை டி..அய்.ஜி.யாக இருந்த வன்சாரா, வெளியிட்ட அறிக்கை மிக முக்கியமானது.

போலி என்கவுன்டர்களுக்கு குஜராத் முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பு. அவர்கள் வழிகாட்டியபடிதான் போலி என்கவுன்டர்கள் நடந்தன.

நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களுக்கு ஆணையிட்ட, வழிநடத்திய முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றவாளிகள்தான் என்று சொன்னாரே!

இந்தியாவிலேயே மோடி ஆண்ட குஜராத்தில்தான், காவல்துறை அதிகாரிகள் 32 பேர் அதிக எண்ணிக்கை யில் கைது செய்யப்பட்டனர். மோடி அரசாட்சி எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?

என்கவுன்டரில் அமித்ஷாவின் பங்குபற்றி தினமணி தனது தலையங்கத்திலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா 2010 இல் அந்த வழக்கின் பின்னணியில், பதவி விலகியவர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக் கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்று தினமணி தலையங்கத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதே, என்ன பதில்? இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகப் பண்பாட்டின் தலைசிறந்த அரசியல் ஒழுக்கமா?

உத்தரப்பிரதேசத்திலும், மோடியின் பிரதிநிதியாக இருந்து தேர்தலில் மொத்தம் 80 இடங்களில் 73 இடங் களில் பி.ஜே.பி. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று மகுடம் சூட்டுகிறார்கள்; இருக்கட்டும், அந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறை என்ன? மதக் கலவரத்தைத் தூண்டியதுதானே? படுகொலைகள் எத்தனை? இலட் சக்கணக்கான சிறுபான்மையினர் முகாம்களில் தஞ்ச மடைய நேர்ந்த அவல நிலைக்கு இவர்தானே பொறுப்பு?

மதக்கலவரத்தை நடத்தி இந்து வாக்கு வங்கி, முஸ்லிம் வாக்கு வங்கி என்று கூறு போட்டு, வாக்குகளை அள்ளியதுதானே அவர் மேற்கொண்ட யுக்தி.

தேர்தல் நேரத்தில் அவர் என்ன பேசினார்? மக்களை எப்படித் தூண்டினார்?

உத்தரப்பிரதேச மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் ஒரு கவுரவப் பிரச்சினை. முசாபர் நகர் கல வரத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கு வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். கலவரத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

உணவு, தூக்கம் இல்லாமல்கூட மனிதன் உயிர் வாழலாம். பசி, தாகம் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், அவமதிக்கப் பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். நமக்கு நீதி கிடைக்கவில்லை. முன்பெல்லாம் அம்புகளையும், வாளையும் வைத்து, பழிவாங்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை. ஓட்டுப் பதிவு இயந்தி ரத்தில், பட்டனை அழுத்தினாலே பழிவாங்க முடியும் என்று பேசியவர் தான் பி.ஜே.பி.யின் இன்றைய அகில இந்தியத் தலைவர்.

குஜராத்தில் மதக் கலவரத்தை ஊக்குவித்தவர் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் அதையே செய்தவர் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்.

நாடு எங்கே போகிறது? எதிர்காலம் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் காலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம், வெகுமக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு, வெகுமக்களா தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

விழிப்புணர்வு தேவை! தேவை!!

Read more: http://viduthalai.in/page-2/84208.html#ixzz37mLiOB00

தமிழ் ஓவியா said...


மனித எலும்புகள் பற்றி அறிவோம்


* மனிதனின் மண்டை ஓட்டில் 22 எலும்புகள் உள்ளன.

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள் தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

* எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பேட்

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

* மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்பு களின் எண்ணிக்கை 206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ் ஞானிகள் பீமர் என்று அழைக் கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30

* கால் பாதங்களிலுள்ள எலும்பு களின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர் பிரினாலஜி

Read more: http://viduthalai.in/page-7/84202.html#ixzz37mMCGu36

தமிழ் ஓவியா said...


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/84201.html#ixzz37mMNEPr4

தமிழ் ஓவியா said...


நட்புக்கு காரணம் மரபணுக்களா?


நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறி முகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப் பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப் பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளி யிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப் போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களை விட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது முன் பின் அறிமுகம் இல்லாத வர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத் தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா-பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப் படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

ஆனால் இவர்களின் இந்த கண்டு பிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையான வர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த வர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகு முறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page-7/84204.html#ixzz37mMa8OGz