Search This Blog

27.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -7

இதுதான் வால்மீகி இராமாயணம்





("இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.")


பால காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி

ஸ்வாமித்திரன் பின்னரும் சொல்லத் தொடங் கினான் :-

அயோத்தியில் அரசாண்ட சகர மன்னனுக்குக் கேசினி வயிற்றில் அசமஞ்சன் என்றொரு பிள்ளை பிறந்தான்.  சுமதி ஒரு கருப்பிண்டத்தைப் பெற, அது வெடித்து அதிலிருந்து அறுபதினாயிரம் கருக்கள் வெளியாயின.  அந்தக் கருக்கள் நெய்க்குடங்களில் இட்டு வளர்க்கப் பெற்றன.  வெகு காலஞ் சென்றபின், அந்தக் கருக்கள் அறுபதினாயிரம் குழந்தைகளாயின.  அசமஞ் சனுக்கு அஞ்சுமான் என்று ஒரு மகன் பிறந்தான்.  அச மஞ்சன் தீயவனானதால், ஊரிலிருந்து துரத்தப்பட்டான்.  ஒருகால் சகரன் அசுவமேதயாகம் செய்யத் தொடங்கினான்.  யாகக் குதிரையைக் கெட்ட எண்ணம் கொண்டவனாகிய இந்திரன் ஒரு நாள் இராக்கத உருவங்கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு போய்விட்டான்.
அதைத் தேடத் தொடங்கிய அறுபதினாயிரவரும், கண்டவர் களையெல்லாம் திருடரென நினைத்து அடித்துத் தொந் தரவும் செய்தார்கள்.  அதுகண்ட தேவர்களும், அசுரர்களும் மிகவும் பயங்கொண்டு நான்முகனைப் பார்த்து, பூமி முழுவதும் சகர புத்திரரால் பிளக்கப்படுகிறது.  யாவரும் துன்புறுகின்றனர் என்றனர்.  நான்முகன், அஞ்சாதீர்!  அவர்கள் கபிலமுனியால் சாம்பராக்கப்படுவார் என்றனுப் பினன்.  அறுபதினாயிரவரும் பூமியைத் தோண்டிக் கீழ்ப் பூமிக்குப் போய், அங்கே கபில முனிவரருகே குதிரையைக் கண்டு அவரைத் துன்புறுத்த, அவரது சினத் தீயால் சகரர்கள் சாம்பராயினர்.  அதனையறிந்த அஞ்சுமான் கபிலரை தன் பிள்ளைகள் இறந்த வருத்தத்தால் வாடி அவர்களை உய்விக்கும் வழியைத் தேடிச் சகரன் முப்பதினாயிரம் ஆண்டுகள் ஆண்டபின் இறந்தான்.  கருடனால் தன் சிறிய தந்தையாரை உய்விக்க வழி, கங்கையைக் கொண்டுவருவதே என அறிந்த அஞ்சுமான், சில காலம் அரசாண்டுத் தனது மகன் திலீபனுக்குப் பட்டங்கட்டி முப்பத்தீராயிரமாண்டு தவம் புரிந்தும், கங்கையைக் கொணராமலே இறந்தான்.  திலீபன் முப்பதினாயிரமாண்டுகள் ஆண்டான்.  அவனாலும் கங்கையைக் கொண்டுவர முடியவில்லை.  அவன் மகன் பகீரதன் பட்டத்துக்கு வந்தான்.  அவன் நான்முகனை நோக்கி ஆயிரமாண்டுகள் தவம் புரிந்தான்.  நான்முகன் பகீரதன் முன் தோன்றி, இதோ கங்கை உன் எண்ணப்படி நடக்கக் காத்துக் கொண்டிருக்கிறாள்.  கங்கையைத் தரிப்பதற்குச் சிவபிரான் ஒருவரே வல்லவர்.  ஆதலின் அதுபற்றி அவரைக் கேட்டுக் கொள் என்று கூறிக் கங்கையையும் பகீரதன் விருப்பப்படி நடக்கச் சொல்லி விட்டு மறைந்தான்.  உடனே பகீரதன் சிவபிரானை நோக்கி ஓராண்டு தவம் புரிந்தான்.  அவரும் மகிழ்ந்து தோன்றி யருளினார்.  கங்கை சிவபிரானது சடையில் மறைந்தனள்.  பின் பகீரதன் வேண்டுதலால், ஒரு சிறிது விடப்பட்ட கங்கை ஏழு நதிகளானாள்.  அவற்றில் மூன்று கிழக்கு முகமாகவும், மூன்று மேற்கு முகமாகவும் ஓடின.  ஏழாவதாகிய கங்கை பகீரதன் பின் சென்று சகரபுத்திரர் அறுபதினாயிரவரையும் நற்கதிக்கேற்றினாள்  இவ்வாறு கோசிகன் கூறக் கேட்டு மகிழ்ந்து, இராமனும் இலக்குவனும் தூங்கினர்.  விடிந்தவுடன் அவர்கள் கங்கையைக் கடந்து, வடகரையடைந்து, விசாலை என்ற நகரைக் கண்டனர்.
மேலே கண்ட வரலாற்றை ஆராயுமிடத்துச் சுமதி என்ற பெண் வயிற்றிலிருந்து வெடித்த அறுபதினாயிரம் கருக்களும் நெய்க்குடத்தில் போடப் பெற்று வணங்கப் பெற, அவை அறுபதினாயிரம் குழந்தைகளாயின என்ற வரலாறு மிகவும் வியப்பாகவும், இயற்கைக்கு மாறாகவும் இருக்கிறது.  அறிஞர் மேலே காட்டப்பெற்ற விந்தையைச் சிந்திப்பாராக!  அறிஞராகிய கம்பரோ, இவ்வியற்கைக்கு மாறான வரலாற்றைக் குறிக்காது அறுபதினாயிரம் குழந்தைகள் பிறந்தனர் என்று மட்டும் குறித்தனர். 



இக்கதையில் இந்திரன் இவ்வாறு சகரன்மீது பொறாமை கொண்டு அதன் பயனாக மிக்க இழிந்த செயலாகிய திருட்டை, வேற்றுருக்கொண்டு செய்வானானால், அவனுடைய குடிகளான தேவர்கள் எவ்வளவு கள்ளத்தனமுடையவர்களாக இருக்கவேண்டும்?  இவர்களை ஒறுக்காது தெய்வம் அருளிற்றென்றால், அத்தெய்வத்தின் பெருமையை என்னென்பது?  பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகிய கொலையை இந்திரன் செய்ததை முன்னர்க் கண்டோம்; இப்போது மற்றொன்றாகிய களவு செய்ததைப் பார்த்தோம்.  இனி இவன் என்னென்ன செய்கிறானோ?  மேலே காண்போம்.  இந்திரன் செய்த இக்களவு அறுபதினாயிரம் பேர்களின் அழிவில் முடிகிறது.  அறுபதினாயிரவரும் கண்ட கண்ட பேர்களை யெல்லாம் துன்புறுத்தினர்.  அதுகண்டு களவில் கைதேர்ந்த தேவர் களும் இந்திரனும், அஞ்சி நான்முகனையடைந்து காக்க வேண்டுகின்றனர்.  இத்தேவர்களின் வீரந்தானென்னே!  இத் தீயோர்களுக்கு நான்முகன் தேறுதல் கூறுகின்றானாம்!  இதனால் இந்த நான்முகனைப் பற்றித்தான் யாது கூறுவது?
வால்மீகி முனிவர் சகரன் முப்பதினாயிரம் ஆண்டுகள் ஆண்டானென்றும், அஞ்சுமான் சில காலம் ஆண்டு, பின் 32,000 ஆண்டுகள் தவம் புரிந்தானென்றும், திலீபன் 30,000 ஆண்டுகள் ஆண்டானென்றும் கூறுகின்றனர்.  இவை நம்ப முடியாதவைகளாயுள்ளன.  யோகிகளாயிருப்போர் யோக மகிமையால் நெடுங்காலம் வாழலாம்.  போகிகளாகிய இம்மன்னர் இவ்வளவு காலம் எவ்வாறு வாழ்ந்தனரோ!  இவ்வாறு இவர்கள் நெடுங்காலம் ஆண்ட வரலாற்றைக் கம்பர் அஞ்சுமானுக்குப் பின் அவன் வழியில் பகீரதன் தோன்றினன் என்கின்றனர்.

பகீரதனைப் பற்றிக் கம்பர் கூறும் வரலாறு வால்மீகி யோடு மாறுபடுகிறது.  பகீரதன் 1000 ஆண்டுகள் நான்மு கனைக் குறித்துத் தவம் செய்தான்.  நான்முகன் கங்கைக்கு உத்தரவு தந்தபின், பகீரதன் ஓராண்டு சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தனன் என்றார் வால்மீகி.  கம்பரோ, அவன் நான்முகனை நோக்கி 10,000 ஆண்டுகளும், சிவபெருமானை நோக்கி 10,000 ஆண்டுகளும், கங்கையை நோக்கி 5000 ஆண்டுகளும், திரும்பவும் சிவ பெருமானை நோக்கி 2000 ஆண்டுகளும், மறுபடியும் கங்கையை நோக்கி 2000 ஆண்டுகளும் ஆக 30,000 ஆண்டுகள் தவம் புரிந்தானென்கிறார்.  வால்மீகி 1001 ஆண்டுகளென்றதை இவர் 30,000 மாகப் பெருக்கினார்.  ஒன்றை 1000, 10,000 ஆகப் பெருக்கிக் கூறுவது கம்பர் போன்ற கவிகளின் திறமை போலும்!  நான்முகனை நோக்கி 1000 ஆண்டு தவம் செய்தானென்று வால்மீகி கூறியதைப் பதினாயிரமாண் டென்றும், சிவபெருமானை நோக்கி ஓராண்டு தவம் செய்தானென்பதை இரண்டு தடவையாகப் பன்னிரண்டரை யாயிரமாண் டென்றும் கம்பர் கூறுகிறார்.

மேலும், கங்கையை நோக்கித் தவம் செய்ததாகவே வால்மீகி கூறவில்லை.  அப்படியிருக்க அவளை நோக்கி முதன் முறை 5000 ஆண்டுகளும் பின் 2000 ஆண்டுகளும் தவம் செய்தான் பகீரதனெனக் கூறுகிறார்.  மேலும், கங்கையிலே சகர புத்திரருக்கு உய்வெனக் கருடன் அஞ்சுமானிடங்கூற, அவன் அறிந்தனனென வால்மீகி கூறுகிறார்.  இதற்கு மாறாகக் கம்பர், அஞ்சுமானுடைய பேரனாகிய பகீரதன் தனது குருவாகிய வசிட்டனுடைய சொல்லின்படி நான்முகனை நோக்கித் தவம் செய்ய, நான்முகன் தோன்றி அவனிடம் கங்கையாலேயே சகர புத்திரர் உய்யவேண்டுமெனக் கூறினானெனப் புதுக் கதை கட்டினார்.  கங்கை பாதாளஞ் சென்று அறுபதினாயிரம் பேர் நற்கதி அடையச் செய்தவுடன், நான்முகன் தோன்றிப் பகீரதனைப் பாராட்டி அவனூருக்குப் போகும்படி கூறுகிறான் என்று வால்மீகி முனிவர் கூறுகிற கதையைக் கம்பர் கூறவில்லை.  சிவபெருமான் கங்கையில் ஒரு பகுதியை ஜடையிலிருந்து கீழே விட்டவுடனே, அது ஏழு நதிகளாக ஆயிற்று.  அவற்றில் ஒன்றே கங்கையென்று வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, கங்கை ஒன்றே சடையி லிருந்து வந்ததென்றார்.  இனி மேற்சொல்லுவோம்.  இதுவரை கூறிய சகரவரலாறும், வால்மீகி முனிவருடைய பாலகாண்டம் 38, 39, 40., 41, 42, 43, 44 ஆகிய ஏழு சருக்கங்களில் கூறப்பெறுவது, இனி 45, 46, 47 ஆம் சருக்கங்களின் கதையைக் கவனிப்போம்.  அது வருமாறு :-

விசாலை நகரத்தை விஸ்வாமித்திர முனிவன் அரசகு மாரருடனடைந்ததும், இராமன் அவ்வூரின் வரலாற்றைக் கூற வேண்டினன்.  உடனே முனிவன் அவ்வரலாற்றைக் கூறினன்.
                                     

இந்திரன் சம்பந்தமாக நடந்த கதையைச் சொல்லுகிறேன் கேள்.  இராமா!  முன்பு கிருதயுகத்தில் திதி என்பவளுக்கு அசுரர்களும், அதிதி என்பவளுக்குத் தேவர்களும் பிறந் தார்கள்.  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் என்ன செய்தால் சாவில்லாமலும் கிழத்தனமில்லாமலும் இருக்கலாமென்ற எண்ணமுண்டாயிற்று.  அவர்கள் ஒன்றுகூடி அவ்வாறு எண்ணிப் பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமுதத்தை உண்டால், அவ்வெண்ணம் முற்றுப்பெறுமெனத் தீர்மானித்துக் கடையத் தொடங்கினர்.  கடலிலிருந்து முதலில் தன்வந்திரியும், பின் அறுபது கோடி அப்ரசப் பெண்களும் தோன்றினர்.  அவர்களை ஒருவரும் கைப்பற்றவில்லை.  பின் வாருணி என்ற பெண் என்னை யாராவது கைப்பற்றுங்கள் என்று கூவித் தோன்றினாள்.  அவளைத் தேவர்கள் கைப்பற்றினர்.  அவளைக் கைப்பற்றினதால், அவர்கள் மயிர்க்கூச்சடைந்து மிக மகிழ்ச்சியுடைவர் களாயினர்.

பிறகு ஒரு குதிரையும் கவுத்துபம் என்னும் மணியும் தோன்றியபின் அமுதமும் தோன்றிற்று.  அவ்வமுதத்தை எடுத்துக் கொள்வதைப் பற்றித் தேவர்களும், அசுரர்களும் சண்டை தொடங்கினர்.  அசுரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.  திருமால் மோகினி உருவெடுத்து அமுதத்தைக் கொண்டு போய் விட்டார்.  இந்திரன் அவரைப் பணிந்து அமுதத்தை வாங்கிக் கொண்டு அசுரர்களையும் கொன்று அரசு செலுத்தினான்.  பிள்ளைகளை இழந்த திதி, வருந்தித் தனது கணவனாகிய காசிபனை யடைந்து தன் வருத்தங்களைக் கூறி இந்திரனைக் கொல்ல ஒரு மகனைத் தர வேண்டினள்.  அம்முனி அவளைத் தொட்டுத் தேறுதல் கூறி, நீ ஆயிர மாண்டு நல்லொழுக்கத்தோடு தவம் செய்தால் இவ்வேண்டு தல் நிறைவேறும் என்றதும், மகிழ்ந்து தவம் செய்தாள்.  அவள் தவம் செய்கையில், இந்திரன் அவளுக்குத் தக்க பணிவிடை செய்தான்.

அவன் அவளுக்கு வேண்டிய தீ, பழம், தருப்பை முதலியவற்றைத் தந்தான்.  அவன் அவளுக்குச் சிரமத்தைப் போக்கும்படியான உடம்பு பிடித்தல் முதலிய பணிவிடை யாவும் எக்காலத்திலும் செய்து கொண்டிருந்தான்.  அவள் தவம் முடியப் பத்து ஆண்டுகளிருக்கும்போது, உனக்குத் தம்பியுண்டாகப் பத்து ஆண்டுகளே உள.  அவன் உன்னை வெல்வதிலேயே எண்ணமுள்ளவனாயினும், உன்னோடு ஒற்றுமையா யிருக்கும்படி சொல்வேன்.  அவனோடு நீ நீடுவாழ்க என்றனள்.  ஒரு நாள் அவள் நடுப்பகலில் தலைமாட்டில் காலை வைத்துத் தூங்கினாள்.  அவள் தலை மாட்டில் காலும், கால்மாட்டில் தலையுமாகப் படுத்துத் தூங்கியதால், ஒழுக்கந் தவறியவளாயினாள்.  அதுகண்ட இந்திரன் அவளுடைய கருவை அழிக்க நல்ல தருணமாயிற் றென மகிழ்ந்தான்.  அவன் அவளுடைய பெண் குறி வழியாக உள்ளே புகுந்து கருப்பத்திலிருந்த குழந்தையை ஏழு துண்டுகளாக அறுக்கத் தொடங்கினான்.  அக்குழந்தை அழத் தொடங்கிற்று.  அதனால், திதி விழித்துக் கொண்டாள்.  இந்திரன் அழ வேண்டாம் அழ வேண்டாம் என்று சொல்லிக் கொஞ்சமும் மனமிரங்காமல் மிகக் களிப்போடு அதைத் துண்டித்து விட்டான்.  பின் இந்திரன் பெண் குறி வழியாக வெளியே வந்துவிட்டான்.  அந்த ஏழு துண்டுகளும் ஏழு மருந்துகளாயின.  இதுதான் திதியின் கருவை இந்திரன் அழித்த இடம்.  வெகு காலத்தின் பின், விசாலன் என்ற ஓர் அரசன் இவ்விடத்தில் விசாலை என்று ஒரு நகரையுண்டாக் கினான்.  அந்நகரே இது.  இதில் அம்மன்னவனின் வழியில் வந்த சுமதி என்ற மன்னன் அரசாள்கிறான்  இவ்விதமாகக் கோசிக முனிவன் கூறினான்.

                        ------------------------"விடுதலை” 24-06-2014

Read more: http://viduthalai.in/page-3/82814.html#ixzz35c5aBJUU

42 comments:

தமிழ் ஓவியா said...


சீச்... சீ... இந்தப் பழம் புளிக்கும்




உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஏற்க மறுக்கப்பட்ட மன்னார்குடி கோபால் சுப்ரமணிய அய்யர் வாபஸ் கேட்கிறார்!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், அவர் நீதிபதிகள் நியமன பட்டியலில் இருந்து தன் பெயரை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 4 பேர் பெயரை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அவற்றில், கோபால் சுப்பிரமணி யத்தை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல், பரிந்துரையை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தலைமை நீதிபதி லோதாவுக்கு கோபால் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் நீதிபதி நியமனத்துக்கான பட்டியலில் இருந்து என் பெயரை நான் விலக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/82904.html#ixzz35nMtZ1A9

தமிழ் ஓவியா said...

கூடுதல் புதிய ரயில்வே கட்டணம்: மறுபரிசீலனைகள் தேவை

லாலுபிரசாத்திடம் அறிவுரை பெறுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும் எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு

திரு. நரேந்திரமோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 30 நாள் ஆட்சியில் டீசல் விலை உயர்வு, சர்க்கரை விலை உயர்வு தற்போது பயணிகளுக்கான ரயில் கட்டணங்களை உயர்த்தி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முந்தைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் அவர்கள் 5 ஆண்டு கட்டண உயர்வே இன்றி, ரயில்வே துறையை லாபம் சம்பாதிக்கும் துறையாக உயர்த்திக் காட்டினார் என்பதை எடுத்துக் காட்டி அவரிடம் அறிவுரை பெறுங்கள் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நேற்று (25.6.2014)முதல் ரயில் கட்டணங்கள் பயணி களுக்கு 14.2 சதவிகிதமும் சரக்குக் கட்டணம் 6.5 சதவிகித மும் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உயர்த்தப்பட்டது, அமுலுக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே முன்பதிவு செய்து, பணம் கட்டி, டிக்கெட் வாங்கிய பயணிகளும்கூட பயணத்திற்கு முன் கூடுதலாக உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விட வேண்டும் என்பது வாணிப அறவிதிகளுக்கேகூட புறம்பானது.

நடுத்தர பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்

விமானங்களுக்கு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி விட்ட பிறகு, விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டால், பழைய டிக்கெட் வாங்கிய பயணிகளை அது பாதிக்காது; புதிதாய் வாங்குபவர்களுக்கு மட்டும்தான் புதிய கட்டணம் செயல்படுத்தப்படும்.

ஆனால், புதிய அரசோ அப்படிக் கூடச் செய்யவில்லை.

அதுவும் ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்னாலேயே இப்படிக் கட்டண உயர்வால் பயணிகள், நடுத்தர பயணிகள் மிகவும் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ரயில்வே துறை அமைச்சரான திரு. சதானந்தா கவுடா அவர் கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத்தான் நாங்கள் செயல்படுத்துகி றோம் என்று சொல்வது ஏற்கப்பட முடியாத விளக்கம் ஆகும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி நிறுத்தி வைத்ததே மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சித்தானே?
அதை மூச்சுமுட்ட எதிர்த்ததனர் இன்றைய பா.ஜ.க .வினர் அன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து!

முந்தைய ஆட்சியை பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றியதே இதுபோன்ற விலைவாசி ஏற்றம், பண வீக்கம், பெட்ரோலியப் பொருள் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சினைகளால்தானே!

30 நாள் ஆட்சியில் எல்லாம் வெறும் சலவைக்குறிதான்!

இப்போது கடந்த 30 நாள் ஆட்சியில் எல்லாம் வெறும் சலவைக் குறி போடுவதுபோல எல்லாம் முந்தைய அரசு போட்டதை அப்படியே செயல்படுத்துவதும், கேட்டால் கசப்பு மருந்து என்று சமாதானம் கூறுவதும் எவ்வகையில் நியாயமாகும்?

தமிழ் ஓவியா said...


எடுத்த எடுப்பிலேயே கசப்பைத் தருவது என்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

டீசல் விலை உயர்வு

சர்க்கரையும் (கசப்பாகி விட்டது) - விலை உயர்வு

காய்கறி, வெங்காயம் விலை ஏற்றம்.

பண வீக்கம் குறையவில்லை என்பதோடு அதிகரித்துள்ள நிலை.

சரக்குக் கட்டணத்தில், உணவுப் பொருளும், மளிகை யும்கூட விலையேற்ற வாய்ப்பு. இவ்வளவும் ரயில்வே மற்றும் பொது பட்ஜெட்டு களுக்கு முன்பே!
அவை இரண்டும் யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கான முன்னோட்டமாக வந்து விட்ட நிலை.

கசப்பு மருந்தில்கூட ஓரளவு கசப்பு இருந்தால்தான் மருந்து உடலுக்குள் செல்லும்; இன்றேல் குமட்டி வாந்தியாகுமே தவிர துளி மருந்தும் உள்ளே செல்லாது என்பது திரு. மோடிஅரசு அறியாததல்லவே!

ரயில்வே கட்டணம் உயர்த்தாமல், ரயில்வே துறையின் பொருளாதாரத்தைச் சீர் செய்ய முடியாது என்ற அதிகாரிகளின் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு தலையாட்டும் அமைச்சர்கள் கூற்று கண்டனத்திற்குரியது.

லாலுபிரசாத்திடம் அறிவுரை பெறுங்கள்

மிகவும் கேலிக்குரியவராக ஊடகங்களால் சித்தரிக்கப் பட்ட லாலு பிரசாத் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A-I) அரசில் ரயில்வே அமைச்சராக இருந்து சாதனை மேல் சாதனை செய்தாரே எப்படி அது சாத்தியமாயிற்று?

5 ஆண்டு கட்டண உயர்வே இன்றி, சரக்குக் கட்டணம்கூட அதிகமாக உயர்த்தாமலேயே, ரயில்வே பட்ஜெட்டின் முந்தைய நட்டங்களைப் போக்கி, லாபம் சம்பாதிக்கும் துறையாக உயர்த்திக் காட்டி விட்டு பொது பட்ஜெட்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்தாரே அந்த அற்புதத்தை அவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது? அவர் என்ன அற்புத விளக்கையா? அலாவுதீன் கதையில் வருவதுபோல வைத்திருந்தா சாதித்தார்?

அவரை ஹார்வர்டு பல்கலைக் கழகத் தொழில் துறையினர் அழைத்து, இச்சாதனைபற்றி விளக்கிட வேண்டினரே அது மக்களுக்கு மறந்து விட்டதா?
அவரை நட்பு ரீதியாக அழைத்து ஆலோசனை கேட்டால் மகிழ்ச்சியாகத் தர முன் வருவாரே!

வட நாட்டில் ஓடும் ரயில்களில் பெரும்பாலோர் டிக்கெட்டே வாங்காமல் பயணம் செய்வது மிகவும் அதிகம்! தென்னாட்டில் பொதுவாக டிக்கெட்டில்லா பயணங்கள் மிக மிக அரிது. எனவே அதை இறுக்கிப் பிடித்து, கெடுபிடி காட்டி, டிக்கெட் பரிசோதகருடன் துப்பாக்கி போலீசாரும் இணைந்து வசூலித்தால், பெருந் தொகை பல கோடி ரூபாய் நாளும் வசூலிப்பதன் மூலம் மொத்தமாகக் கிடைக்கும்.

அதுபோல ரயில் பெட்டிகளில் தனியார் விளம்பரங் களைச் செய்து, வருவாயைப் பெருக்கலாமே!

விளம்பரங்கள் மூலம் வருவாயைப் பெருக்கலாமே!

ஏற்கெனவே ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகள், கேன்டீண்களின் குத்தகைத் தொகைகள் இவைகளை மறு ஆய்வு செய்தால் கணிசமான தொகை கிடைக்குமே!
இப்படி பல நிபுணர்கள், ஓய்வு பெற்ற ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கேட்டுச் செயல்பட்டால், இப்படி தேவையின்றி கட்டண உயர்வு என்ற சுமையை பயணிகள்மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

வரும் பட்ஜெட்டுகளை (ரயில்வே - பொது பட்ஜெட்டுகள்) மேலும் மேலும் சுமைகளை ஏற்றி கசப்போ கசப்பு என்று தந்தால் மக்களின் கடும் எதிர்ப்பை இவ்வளவு விரைவில் சம்பாதித்த சாதனைதான் மிஞ்சும்.

எனவே, மறுபரிசீலனை, நிதானப் போக்கு தேவை.




கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை 26-6-2014

Read more: http://viduthalai.in/e-paper/82903.html#ixzz35nNGgPlw

தமிழ் ஓவியா said...


ஒரு மாத கால பிஜேபி ஆட்சி

முந்தைய மன்மோகன்சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகம் எங்கும் தேக்கமடைந்த பொருளாதார சரிவு போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வில் விலைவாசி உயர்வு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பல பொய்களைக் கூறி பெரும் அறுவடை செய்து பா.ஜ.க. அரசு பதவிக் கட்டிலில் அமர்ந்தது.

பிரச்சாரம் முதலே விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, சமமான கல்வி போன்றவை தான் முக்கியமாக இருந்தது. இந்த மூன்றுமே மக்களின் அடிப்படை தேவைகள் ஆகையால் எளிதில் நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சியினரையும் பின் வாங்க வைத்து விட்டார் மோடி.

ஆனால் நடந்தது என்ன?

இதோ 30 நாட்கள் அரசின் நடவடிக்கை குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாத்திரமே மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து நல்லாட்சி என்று கூறியுள்ளனர். மற்ற 75 விழுக்காடு மக்கள் மோடியின் ஆட்சியை வசைபாடித் தாக்கியுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சினையை மய்யமாகக் கொண்டு மோடியின் ஆட்சியை வெறுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் விலைவாசி மற்றும் சிக்கலான நடவடிக்கைகளில் கை வைப்பார்கள். ஆனால் மோடியோ ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே தனது பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் விலைவாசி உயர்விற்கு சமிக்ஞை காட்டி விட்டார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் வரவு செலவு அறிக்கையில் மானியங்கள் குறைக் கப்படும் என்ற அபாய அறிவிப்பு வேறு வந்துள்ளது.

இது வட மாநிலங்கள் முழுவதிலும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது அரசு விவசாயிகளுக்குத்தான் அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. அப்படி மானியம் குறைக்கப்படும் போது விவசாயப் பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மராட்டியம் குஜராத் மத்தியப் பிரதேசம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில் மானியம் குறைக்கப்படுமேயானால் அரசே தற்கொலைக்கு தள்ளி விடும் நிலை உருவாகி விடும்.

தமிழகத்திலும் மோடி அரசு குறித்த வெறுப்பலை அதிகமாகவே வீசுகிறது. முக்கியமாக இதுவரை எந்த அரசும் மாநில அரசின் மொழிக் கொள்கையில் தலையிடாமல் இருக்கும்போது, தடாலடியாக இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பை துவங்கியுள்ளது. இது தமிழகம் மாத்திரமில்லாமல் பல மாநிலங்களிலும் பெரிதும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சிற்காக ஒரு அறிக்கையை விட்டு இந்தி திணிப்பை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறினாலும், உள்ளூர் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்தி வழக்கு மொழி அல்லாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்களை மெல்ல மெல்ல தலைமைப் பதவிக்கு அமர்த்தும் வேலை நடக்கிறது. இது அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ரயில்வே மற்றும் மத்திய வெகுசன அலுவலகங் களான பாஸ்போர்ட், கனரக தொழிற்சாலை, வங்கிகள் போன்றவற்றில் இந்த மாற்றம் வெகுவாக நடந்து வருகிறது.

ரயில்வே தேர்வில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாத்திரமல்லாமல் இந்தி பேசும் மாநிலத்த வர்களை அதிகம் தென் மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது.

30 நாட்களில் மோடியின் அரசு மோசமான அரசாக அமைந்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிஜேபியினர் என்னென்னவெல்லாம் பேசினார்கள்! ஆளும் கட்சியான நிலையில் வேறு குரலில் பேசுவதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.

நாடாளுமன்ற கூட்டம் நடத்திட சில நாள்களே உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள் ளனர் - இப்படி செய்வது கொல்லைப் புறவழியில் கொள்ளையடிப்பது என்று கூறினவர்கள்தான் - பட்ஜெட் கூட்டத்துக்கு முன் ரயில் கட்டணத்தை இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/82910.html#ixzz35nNagx3c

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில் தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

Read more: http://viduthalai.in/page-2/82909.html#ixzz35nNlzQq1

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள்

சர்வதேசத் தொழில் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்த பிறகு 22 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த மகாராஷ்டிரா மாநில தொழில்துறை வளர்ச்சி 2008 முதல் வெகுவேகமாக சரிவை நோக்கி சென்றது.

பொருளாதார நிபுணர் களுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால் வெகுவிரைவிலேயே ஒரு உண்மை தெரிந்தது. உதிரி பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு வெகுவேகமாக சரியத்துவங்கியது. இதன் சங்கிலித்தொடர் பாதிப்பு இந்தியப் பொருளா தாரத்தையே புரட்டிப்போட்டது.

காரணம் குட்கா என்னும் போதைப்பொருள் 9 வயதில் இருந்து 27 வயதிற்குள்ளானவர்களை பாதித்தது, இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 23 விழுக்காடு இளம் தலைமுறையினர் அடிமையானார்கள். 2012 மாத்திரம் மராட்டிய மாநில சுகாதாரத்துறை புகையிலை போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடிகளை செலவு செய்தது. உடனடியாக ஆபத்துகால நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர மாநிலம் குட்கா என்னும் போதைப்பொருளைத் தடை செய்தது மட்டுமல்லாமல் விற்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்கு அனுப்பியது. இதனை அடுத்து மிகவும் அபாயகரமான இந்த போதைப்பொருளின் ஆபத்தை உணர்ந்த பல மாநிலங்கள் தடைசெய்தது.

இன்றும் போதைப்பொருள் இந்திய பொருளாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தும் பொருளாகவே திகழ்கிறது, இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் போதை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு அய்.நா தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் உபயோகிப்பவர்களாக உள்ளனர் என்று அய்.நா அறிக்கையில் கூறுகிறது. போதை என்றாலே பொரும்பாலானோர் மது மற்றும் புகையிலைத்தொடர்பானவைகள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அநேகமாக நடக்கிறது, எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருட்கள் கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் ஊக்க மருந்து ஒயிட்னர் மற்றும் சிலவகைப் பெயிண்டுகள் கூட போதை வஸ்துக்களாக பயன்படுத்தப்படுகின்ற்ன. இவை உடல்மனது இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் கேடாக அமைந்து விடுகிறது,

அறியாமை விரக்தி உளவியல் குறைபாடுகள் பொழுதுபோக்கு தற்காலிக உற்சாகம் தேவைப் பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது, இதுவே பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவருமே போதைப்பொருள் உபயோகித்து வருகின்றனர். . ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகிறது ஒரு ஆயுதம் போதைப் பொருளாகும். உலகில் வர்த்தகத்தில் இராணுவத் தளவாடம் மற்றும் எரிஎண்ணெய் வர்த்தகத்திற்கு இணையாக போதைப்பொருள் வணிகம் உள்ளது. மற்ற இரண்டும் சட்டரீதியாக என்றால் போதைப்பொருள் சட்டவிரோத வணிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது, ஆகவே போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். விற்பனையை தடைசெய்தால் மாத்திரமே இதனைத் தடுக்கமுடியும்.

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985_இன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ஆம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல் படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-3/82927.html#ixzz35nOUQ2nl

தமிழ் ஓவியா said...

சமரச தேநீர்க் கடை மூலம் ஜாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்திய வதிஷ்டாசேரி முனுசாமி நினைவுக் கல்வெட்டு திறப்பு-கழகக் கொடியேற்றம்


செம்பனார்கோயில், ஜூன் 26_-நாகை மாவட் டம் (மயிலாடுதுறை கழக மாவட்டம்) செம்பனார் கோயில் ஒன்றிய தி.க செயலாளர் 85 வயதின ரான பெரியார் பெருந் தொண்டர் அ.ந.முனுசாமி கடந்த 5.6.2014 அன்று மறைவுற்றார். ஒடுக்கப் பட்ட சமுதாயத்தில் பிறந்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக் கும், அறிவு வளர்ச்சிக்கும் வட்டார மக்களின் அகங் குளிர உழைத்திட்ட முனு சாமி மக்களால் போற் றப்படும் பெரியார் தொண்டராக, தலைவ ராக மதிக்கப்பட்டுள்ளார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி வதிஷ்டாசேரி யில் 22.6.2014 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட தி.க தலைவர் எஸ்.எம்.செகதீசன் தலை மையில் நடந்தது. மாவட்ட தி.க செயலாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தார். உறவினர்களும், நண் பர்களும், தோழர்களுமாக அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டு முனு சாமியின் தொண்டுக்கு பெருமை சேர்த்தனர். தங் களின் உயர்வுக்கு தலைவர் முனுசாமியே காரணம் என பலர் பறைசாற்றினர். சாலையின் இருமருங்கி லும் கழகக்கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தன. அமைய உள்ள அவரின் நினைவு மண்டபத்துக் கான கல்வெட்டினை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் ஏ.சி.என். விசயபாலன் திறந்தார்.

நினைவிடத்தில் கழகக் கொடியினை திமுக தலை மைச் செயற்குழு உறுப்பி னர் குத்தாலம் பி.கல் யாணம் ஏற்றினார்.

நினைவுக்கல்வெட் டினை கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார். மண் டப அடிக்கல்லினை சீர் காழி செகதீசனும், கி.தள பதிராஜூம் எடுத்து வைத் தனர். சுயமரியாதைச் சுடரொளி அ.ந.முனுசாமி படத்தினை திறந்து வைத்து கழகப்பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் நீண்டதொரு நினைவுரையாற்றினார்.

ஒன்றிய திமுக செய லாளர் ஞானவேலன், ஒன்றிய தி.க தலைவர் ச.முருகையன், விவசாய அணி அமைப்பாளர் கு. இளமாறன், மயிலாடு துறை நகர தி.க தலைவர் என்.தியாகராசன், கொள் ளிடம் ஒன்றிய தி.க செய லாளர் பாண்டுரங்கன், நகர தி.க செயலாளர் நாகரெத்தினம், நகர துணைத்தலைவர் சீனி. முத்து, கழக பேச்சாளர் புலவர் சு.இராவணன், எஸ்.கண்ணையன், என்.ஜி.கே., காங்கிரஸ் தலைவர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் இராமதாசு, பனங்குடி கிருட்டிணமூர்த்தி ஆகி யோர் நினைவுரையாற்றி னர்.

ஜாதி ஒழிப்புக்கு
சமரச தேநீர்க் கடை

தொடக்க காலத்தில் ஜாதிய ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. பார்ப்பனர்கள் குடி யிருப்பு பகுதிகளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் சென்றால் அடிதான், அவ மானம் தான், திராவிடர் கழகம் போராடி போரா டித்தான் எங்கள் மீதான அவமானங்கள் துடைக்கப் பட்டதாக பேசிய பலரும் குறிப்பிட்டனர். தேநீர் நிலையங்களில் தாழ்த்தப் பட்டவர்கள் என்பதற் காக எங்களுக்கு தேநீர் தர மறுத்தார்கள். சில கடை களில் கொடுத்தாலும் மூங் கில் குழாய் வழியாகத் தான் ஊற்றுவார்கள். அந்த கொடுமையிலிருந்து மீட்பதற்காக செம்பனார் கோயில், சங்கரன்பந்தல், பெரம்பூர், வதிஷ்டாசேரி பகுதிகளில் தோழர் முனு சாமி சமரச தேநீர்க் கடை களை திறந்து அனைத்துச் சாதியினர்க்கும் சமமாக தேநீர் கொடுக்கும்படியாக ஆக்கிய அவரின் செயலை மறக்க முடியாது. இது போன்ற எத்த னையோ உரிமைகளை தந்தை பெரியார் வழி நின்று பெரியார் பெருந் தொண்டர் முனுசாமி பெற்றுக் கொடுத்திருக் கிறார் என்பதை நினைவு ரையாற்றிய பலரின் பேச்சில் உணரமுடிந்தது. கட்டுப்பாடுமிக்க இராணுவ சிப்பாய் போல கழகத் தொண்டராக விளங்கியவர் முனுசாமி கழகம் அறிவித்த அனைத்து போராட்டங் களிலும், விசயலட்சுமி என பிள்ளைகளும், அஞ் சம்மாள் எனும் துணை வியாரும், புத்தர், மணி யம்மை, செல்வேந்திரன் என பேரக்குழந்தைகளும் கொண்ட அவரின் குடும் பத்தில் புத்தர் கழகத்தின் பணியை தொடர்கிறார். திராவிடர் கழகக் கொடியை இந்த பகுதியில் பட்டொளி வீசி பறக்கச் செய்வேன் என அவர் உறுதியளித்தது எங் களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

ஒடுக்கப்பட்ட சமுதா யத்தில் பிறந்தாலும் பெரியார் கொள்கையை பரவச் செய்ததன் பல னாக அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தி னரால் பெரிதும் மதிக் கப்படக்கூடியவராக தோழர் முனுசாமி திகழ்ந் ததை காண முடிந்தது. பெரியாரின் தொண்டர் கள் மறைந்தால் புதைக் கப்டுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறார்கள் என்பதை தோழர் அ.ந. முனுசாமியின் மறைவு உணர்த்திய பாடமாகும். நினைவுரையாற்றிய பலர் கண்ணீர் மல்க வீரவணக் கம் தெரிவித்த காட்சி அந்த பெரியார் தொண் டருக்குள்ள சிறப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இறப்பதற்கு முன்பே மரண உயில்

தாம் இறந்த பிறகு எவ்வித சடங்குகளுமின்றி தமது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். கொள்கை அடிப்படை யிலேயே எல்லா நிகழ்வு களும் அமைய வேண்டும் என மரண உயில் எழுதி வீட்டில் மாட்டி உள் ளார்.

முனுசாமியின் உணர்வு மதிக்கப்பட வேண்டியது

கழகப்புத்தகங்கள், விடு தலை இதழ்கள் ஒழுங்க மைவுடன் வைத்துள்ளார். தமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பயன்படுத் திக் கொள்ளும் வண்ணம் குறிப்பெழுதி வைத்துள்ள தோழர் முனுசாமியின் உணர்வு மதிக்கப்பட வேண்டியது. அவரின் மகன் பாரதிதாசன் முன் னின்று கழக லட்சிய அடிப்படையில் அனைத்து நிகழ்வுகளை யும் அமைத்திருந்தது பாராட்டுக்குரியது. 2 நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம்

இலட்சியத் தொண்ட ராக 85 வயதிலும் உறுதி குலையா மாவீரராக மறைந்த தோழர் அ.ந. முனுசாமி வாழ்க! என அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தினர்.

Read more: http://viduthalai.in/page-2/82937.html#ixzz35nP9USl8

தமிழ் ஓவியா said...


கத்திரி வெயில் எனும் மூடநம்பிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார்.

கத்திரி வெயில் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்கு கின்றனர்.

கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ். ஆர்.ரமணன் கூறியதாவது:

கத்திரி வெயில் என்பது 100 சதவீதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. மேஷ ராசியில் சூரியன் நுழைவதை கத்திரி வெயில் என்பார்கள். வானிலை துறை ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான்.

இது ஆண்டு தோறும் நிகழும் இயல்பான செயல். எனவே கத்திரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் என தனியாக தலைப்பிட்டு ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதுமில்லை.

Read more: http://viduthalai.in/page-7/82939.html#ixzz35nPZdv00

தமிழ் ஓவியா said...

மீண்டும் திரும்பக் கூடாது நெருக்கடிகால நிலை! அவசர நிலை அறிவிப்பு நாள் 39 ஆவது ஆண்டு நினைவு வருகிறதா? (ஜூன் 25) கருத்தரங்கம்


சென்னை, ஜூன் 26- சென்னை எழும்பூரிலுள்ள ஜே.ஜே. அரங்கத்தில் 25.6.2014 அன்று மாலை 6.30 மணியளவில் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் சார்பில் அவசர நிலை அறிவிப்பு நாள் (ஜூன் 25) 39 ஆவது ஆண்டு நினைவு வருகிறதா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

1975 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். நாடெங்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவை தலைவிரித் தாடின. ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, முழுப் புரட்சியை அறிவித்தார்.

பிகார், உத்தரப்பிர தேசம், மகாராஷ்டிரா உள்பட நாடெங்கிலும் மாணவர்களும், இளைஞர்களும் மத்திய ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெறு கிறார்கள். நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்தார். தலைவர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டனர்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடும் உரிமை, கூட்டம் போடும் உரிமை, சங்கம் நடத்தும் உரிமை, போராட்டம் நடத் தும் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டன. இன்றைய இளைய தலைமுறையினர் இதுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு மிசா கொடுமை கால அனுபவங்களை தெரிவிக்கும் வகையில், இக்கருத்தரங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்டச் செயலாளர் டி.எஸ்.எஸ்.மணி, மாவட்டத் தலைவர் பேராசிரியர் சங்கரலிங்கம், அகில இந்திய செயலாளர் வி.சுரேஷ், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி தேவ சகாயம், திருச்சி சிவா எம்.பி., மருத்துவர் காந்தராஜ், திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆகி யோர் உரையாற்றினர். த.வி.ராகராவ் நன்றியுரையாற்றினார்.

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசாயம் தமதுரையில்,
ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் வாழ்ந்த மாவட்ட ஆட்சியராக நான் பணியாற்றினேன். அப்பொழுது, நெருக்கடி காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை நெருங்கி சந்திக்கும் வாய்ப்பை பலமுறை பெற்றேன்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களுக்கு, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகள் தேடி வந்த பொழுதும், அந்தப் பதவிகளுக்குச் சென்றால், மக்களின் தேவைகள் அறிந்து, அவர்களுக்காக போராட முடியாது என்கிற காரணத்தினால், தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக் காகவே போராடிய போராளி, மற்றவர்களைவிட தனி மனிதராக போராடி, நாடு சுதந்திரம் அடைவதற்கும், ஜனநாயக முறையில் மக்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கும் போராடினார். கல்வி வள்ளல் காமராசரோடு நெருங்கிய நண்பராக இருந்தவர்.

நெருக்கடி கால நிலையில், பல்வேறு இன்னல்களை அனுப வித்தவர் என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி தன்னுரையை நிறைவு செய்தார்.

மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தமதுரையில்,

நெருக்கடி கால நிலையை பிரகடனப்படுத்தியபொழுது, சென்னை பொது மருத்துவமனையில் பாலியல் நோய் மருத் துவராகப் பணியாற்றினேன். அப்பொழுது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு வாரம் மூன்று நாள்கள் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு சென்று வரக்கூடிய ஒரு மருத்துவராக நான் பணியாற்றினேன்.

அப்பொழுது ஆசிரியர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, சிட்டி பாபு மற்றும் தி.க., தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிறை அதிகாரிகளால் கொடுமையாகத் தாக்கப்பட்டதை நேரில் கண்டவன்; முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் போன்றவர்களை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததை நினைவு கூர்ந்தார்.

மிசா கைதிகளுக்கு உதவு கிறேன் என்கிற காரணத்தால், என்னை பணியிடை நீக்கம் செய்து, விசாரணை தாக்கீது அனுப்பி, சுமார் ஒரு மாத காலம் அதற்காக நான் பதில் எழுதி, அவர்கள் அதனை ஏற்காமல், திரும்பத் திரும்பத் திருப்பி அனுப்பினர்.

தமிழ் ஓவியா said...


இறுதியாக, என்னை கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டபொழுது, மிசா காலம் முடிந்து, இந்திரா காந்தி கைது செய்யப்படுகிறார். இதுபோன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி மருத்துவர் காந்தராஜ் நினைவுரையாற்றினார்.

திருச்சி சிவா எம்.பி., தமதுரையில்,

மிசா காலம் அறிவிக்கப்பட்டபொழுது, நான் திருச்சி கல்லூரியில் எம்.ஏ. பயின்று வந்தேன். அப்பொழுது என்னை கைது செய்வதற்கு காவலர், கல்லூரி முதல்வர் அறையில் காத்துக் கொண்டிருந்தார். எனக்கு அந்தத் தகவல் தெரிந்த வுடன், நான் தப்பித்து, 10 நாள்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தேன்.

பின்னர், நாம் எந்தத் தவறும் செய்யவில்லையே, பிறகு ஏன் தலைமறைவாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், நான் நேராக வீட்டிற்குச் சென்றேன். இரவு தூங்கிவிட்டு, காலையில் விழிக்கும்பொழுது, எனது வீட்டின் கீழ்தளத்திலிருந்து, சிவா ஓடிவிடு! சிவா ஓடிவிடு! போலீஸ் வந்திருக்கு என முதியவர் ஒருவர் குரல் கொடுத்தார்.

அதற் குள்ளாக, காவலர்கள் மேலே வந்துவிட்டனர். எனது நண்பர் களுடன் நான் இருந்தபொழுது, சிவா என காவலர் அழைத்த வுடன், நான் எழுந்தேன். அப்பொழுதுதான் அவர்களுக்கு நான்தான் சிவா என்பதே தெரிந்தது!

என்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறி, காவல் நிலையம் வந்தவுடன், துணை ஆய்வாளரிடம், சிவாவை கைது செய்துவிட்டோம் என்று காவலர்கள் கூறினர். அப்பொழுது தான் எனக்கே தெரியும் நாம் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்று.

பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். சுமார் ஓராண்டு காலத்திற்கு மேலாக கழகத் தோழர்களுடன் சிறையில் இருக்கக்கூடிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

சிறையிலிருந்து வெளியே அனுப்பினர். அப்பொழுது என் முன் இருந்த கேள்வி, நான் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி, வேலைக் குச் செல்வதா? அல்லது தலைவர் கலைஞரின் தலைமையை ஏற்று சமுதாயப் பணி செய்வதா? என்ற எண்ணம் தோன்றியது.

சிறையில் இருந்த அனுபவம் எங்களை மிகவும் பக்குவப்படுத்தியது; ஆகையால், நம்மைப் போன்ற சாதாரண மக்கள், சுயமரியாதையோடு சீரிய வாழ்வு வாழவேண்டும் என்றால், தலைவர் கலைஞர் தலைமையின்கீழ் பணியாற்றுவது என்ற முடிவோடு இன்றுவரை என் பணி தொடருகிறது என்று பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமதுரையில்,

நெருக்கடி காலகட்டத்தில் என்னை கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது, எட்டடி கொட்டடியில் ஏராளமான சிரமங்களை அனுபவித் ததால், இன்றைக்கும் நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும்; இதைவிட இன்னும் கீழே நாங்கள் இனி செல்ல மாட்டோம்.

விடுதலை நாளிதழின் மேலாளராக இருந்த சம்மந்தம் அவர்கள், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த சிறிது காலத்திலேயே மிசாவில் கைது செய்யப்பட்டு, எங்களோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காவல்துறையினர் தாக்க முற்றப்பட்டபொழுது, அவர் இப்பொழுதுதான் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார், அவரை அடிக்காதீர்கள் என்று நான் தடுத்தபொழுது, அந்தக் குச்சியினுடைய முனை (இரும்பிலானது) என் கண்களுக்குக் கீழே பட்டு, என்னுடைய மூக்கு நரம்பு பாதிக்கப்பட்டது. அதனால், அவ்வப்பொழுது வலி வரும்;

பிரபல மருத்துவர் மோகன் காமேசுவரன், லண்டன் ராயல் மருத்துவமனை தொடர்பில் இருந்தபொழுது, அவரி டமும் நான் சிகிச்சை பெற முயற்சி செய்தேன். அமெரிக்கா சென்றிருந்தபொழுது, அங்கேயும் முயற்சி செய்தேன். ஆனால், இன்றுவரை அதனை சரி செய்ய முடியவில்லை. அதேபோல், ஆர்க்காடு வீராசாமிக்கு காது கேட்க முடியாமல் போயிற்று.

சிட்டிபாபு போன்றவர்களின் உயிரும் மிசா கொடுமையால் நடைபெற்றது என மேலும் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக் கூறி, மிசா கொடுமைகள்பற்றிய நூலை ராமகோபாலன் எழுதியுள்ளார். அண்மையில் அந்த நூலை படிக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அந்நூலில் குறிப்பிட்டுள்ள இரட்டை அளவுகோல் களை எல்லாம் எடுத்துக்கூறி தமிழர் தலைவர் தமது உரையை நிறைவு செய்தார்.

Read more: http://viduthalai.in/page-8/82921.html#ixzz35nQAxcCB

தமிழ் ஓவியா said...


உங்கள் எதிரிகளை அழிக்க இதோ ஒரு வேடிக்கையான வழி!



நம்மில் பலரும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மிக மிக வேகமாக, அளவுக்கு அதிகமான - ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்காக ஏதோ ஒரு பி.எச்.டி., (Ph.D.) ஆய்வே செய்வது போல் முடிவு எடுத்து, மாதக் கணக்கில் நேரம், நினைப்பு, உழைப்பு, (பணம்) நிதி முதலியவைகளை தேவைக்கு அதிகமாகவே செலவழிப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, தங்களது பிள்ளை உயர்நிலை மேனிலைப்பள்ளி மட்டத்தில் படிப்பை, முடித்து (அதற்கும் Graduation) பட்டம் பெறுதல் என்பது போன்ற நிகழ்ச்சி வைத்துத்தான் அமெரிக்காவில் பள்ளிகளிலிருந்து வெளியே (பாஸ் செய்த பிறகு) செல் லும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் முன்னி லையில் நடத்திடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடுத்து பிள்ளைகளை எந்த மேல் படிப்பு கல்லூரிக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் என்று முடிவு எடுப்ப தற்குள் தலையைப் பிய்த்துக் கொள் ளுவது அங்கே சர்வ சாதாரணம்! (பெற்றோருக்கு பொறுப்பு இருப்பதால் தான் அந்தக் கவலை; மற்றும் நிதிச் சுமைப் பொறுப்பும் உள்ளதே) அதற்காக பல மாத இடைவெளியில் ஊண் - உறக்கம் இன்றிக்கூட பலரையும் அணுகி அறிவுரை - ஆலோசனை கேட்பார்கள். நம் நாட்டில் அவ்வளவு தூரம் ஆராய் வார்களா என்றால் அதில் சில பெற்றோர்கள் 75 அல்லது 80 விழுக்காடு கவலை எடுத்துக் கொள்ளும் நிலை உண்டு.

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரத்தான் என்பது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டதே தவிர வேறில்லை!

அதே போன்று நம் நாட்டில் பெண் பார்ப்பதற்கு - மகளிர் பலர் புடவை, நகைக் கடைகளில் சென்று பொருள் வாங்கு வதிலும் சரி, ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - கேள்வி மேல் கேள்வி, பல புடவைகளை சளைக்காமல் சர்வே செய்தல் இவைகள் எல்லாம் உண்டு; காரணம் பணம் அதிகம் கொடுத்து வாங்கும்போது; கவலையோடு ஆராய வேண்டாமா?

(மருந்துகளை டாக்டர்கள் பரிந் துரைத்த நிலையில் அவசரமாகச் சீட்டைக் கொடுத்து வாங்கிடும் இவர்கள் அதன் காலக் கெடுவைப்பற்றிக்கூட (Expiry Date)
கவனித்து ஆராய்வதில்லை. சில நேரங்களில் காலாவதியான மருந்து களைக்கூட கவனிக்காமலே உட் கொள் ளவும் செய்கின்றனர்!)

அதிக தகவல்களைச் சேர்த்து, மாய்ந்து மாய்ந்து அதன் பிறகே இறுதி முடிவு என்று செயல்படும் வழமை உள்ளவர்கள் மனோ தத்துவ ரீதியில் ‘Information Bias’ தகவல் தேடிடும் சார்பு நிலை மையாளர் என்றே பெயரிடப்பட்டுள்ளனர்!

தேவைக்கு அதிகமான - களைப்பும், சோர்வும் அடையும் அளவு மண்டை யைக் குடைந்து கொள்ளுதல் பற்றி உளவியலாளர்கள் கூறும்போது,

உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம்; மிக அதிகமான தகவல்களை அவர்களுக் குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் குழப்பத்தில் ஊறியே அவர்கள் தோற்று விடுவார்கள் என்று வேடிக்கை யாகச் சொல்கிறார்கள். அதற்குத்தான் சதா தகவல் தேடும் சார்பாளர்களாக அவர்கள் அமர்ந்து எளிதில் முடிவு எடுக்க வேண்டிய முடிவுகளைக்கூட, மண்டை பிளந்து, ‘Cerebral Hemorrhage’ மூளையே ரத்தக் கொதிப்பின் உச்சத் திற்குச் சென்று, மூளை வெடித்தது மாதிரி ரத்தம் வழியும் அவலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று பரிதாபப்பட்டுக் கூறுகிறார்கள்!

எனவே, எண்ணித் துணியுங்கள்; என்பதன் முழுப் பொருள் புரிகிறதா?

தேவைக்கேற்ற (ஓரளவு) தகவல் களை வைத்தே முடிவுக்கு வாருங்கள் - பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு காணுங்கள்.

அதற்காக அளவு மிஞ்சிய தகவல் திரட்டி பயனற்றுப் போகாதீர்கள் என்பது நல்ல உளவியல் சார்ந்த அறிவுரைதானே!

என்ன பின்பற்றுவீர்களா? எதிரி களை அடக்க ஏராள தகவல் களைத் தீனியாகத் தந்தால் அது செரிக்குமா? செரிமான மாகாமல் வயிற்றில் புரட்சி உண்டாக்கி சோதனைக்கும் சோர்வுக் கும் ஆளாக்கும் அல்லவா அது போலத் தான்.

அளவுக்கு அதிகமானால் அமிர்த மும் நஞ்சு - என்பதற்கு இதனையும் ஒரு புது விளக்கமாக - உளவியல் ரீதியில் எடுத்துக்கொண்டு, ஒரு குறிப் பிட்ட அளவிலேயே தெளிவான, குழப்பமில்லாத முடிவு எடுங்கள் - வெற்றி நிச்சயம்!


- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/e-paper/82964.html#ixzz35tGUue4m

தமிழ் ஓவியா said...


குடியரசு தலைவரின் இந்துமதப் பிரச்சாரம்


இந்தியப் பாரம்பரிய ஆராய்ச்சி அமைப்பை தோற்றுவித்த அவ்வமைப்பின் தலைவரான சுவாமி சிவானந்த சரஸ்வதி என்சைக்ளோ பீடியா ஆஃப் இந்துயிசம் என்ற இந்து மதக் கலைக் களஞ்சிய நூலை வெளியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வேலை, திறமை, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஆகிய நான்கையும் கொண்ட முழுமையான நிலை, தர்மம், அன்பு, மோட்சம் ஆகிய நான்கும்தான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்பதை இந்து மதத் தத்துவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மனித செயல்பாட்டின் நடுநிலையான போக்குதான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் விளக்குகிறது.

இந்து மதம் என்பது பின்பற்றப்படும் ஒரு வழிமுறை மட்டுமல்ல; மெய்யறிவின் கூட்டமைப்பு. அதை விவரிக்க முடியாது; அனுபவிக்க மட்டும்தான் முடியும் என முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனை வருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், புத்தொளி கிடைக்க வேண்டும்; யாரும் துன்பப்படவோ, வேதனையடை யவோ கூடாது என்பதுதான் இந்து மதத்தின் உயரிய தத்துவம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடில்லியில் பேசியுள்ளார் (தினமலர் 24.6.2014).

ஓர் இந்து மதக்காரர் என்கிற முறையிலும் அதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் என்ற முறையிலும் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைத் தாண்டி பெரும் பொருள் இருப்பதாகக் கருதுவதற்கு இடம் இல்லை. அவர் நிதி அமைச்சராக நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் அளிக்கும் போதேகூட பல இந்து மதக் கடவுள்களை அழைத்தது உண்டு. இதில் மதச் சார்பற்ற தன்மையை அவர் கடைப் பிடித்ததில்லை. முதலில் ஒரு கருத்து முக்கியமானது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; அதற்கென்று ஒரு நிறுவனர்; அதற்கென்று தனித்த ஒரு வேத நூல். அதன் தோற்றம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஏதும் இருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றில் முரண் பாடுகளுக்கோ பஞ்சமில்லை. முரண்பாடுகளை பலகீனமாக எடுத்துக் கொள்வ தற்குப் பதிலாக முரண்பாடுகளையும்கூட சிறப்பு அம்சமாகக் கொள்ளும் மனப்பான்மை இந்து மதவாதிகளுக்கு உண்டு. காரணம் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை - இதனை ஒரு வகையில் சாமர்த்தியமாகவே கருதுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தன்னுரையில் எந்த ஓர் இடத்திலும் இந்து மதத்தின் கொள்கையில் சமத்துவத் துக்கு இடம் உண்டு என்று குறிப்பிடாதவரை மகிழ்ச்சி தான்.

குறிப்பாக இந்து மதத்தில் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று பொருளாகாது; அப்படி என்றால் வேத மறுப்புதான் இங்கு நாத்திகம்.

இத்தகைய நாத்திகர்களுக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்று வைத்திருப்பதானது எந்த வகையில் சரி?

வேதங்களை மறுத்து விட்டால் இந்து மதம் எங்கே இருக்க முடியும்? இதுபற்றி எல்லாம் மெத்த படித்தவர் களும், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களும் ஏன் சிந்திக்கவில்லை?

பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தை ஏற்படுத்தி விட்டு - ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு வகை தர்மம் என்று அறுதியிட்டு விட்டு, அந்தத் தர்மத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்று கோடு கிழித்துக் காட்டி விட்டு, அதற்குப் பிறகு அம்மதத்தில் நடு நிலைப் போக்கு என்று எப்படி சொல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

அரசனுடைய கடமையே வருண தர்மத்தைக் காப் பாற்றுவதுதான் - வருண தர்மத்தை மீறினால் அரசன் தண்டத்தை (வன்முறையை) பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு மதம் எப்படி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய முடியும்?

தலை எழுத்தின்படி நடந்து கொள்! அதில் திருப்தி அடை! அப்படி நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் மோட்சம் நம்பு - என்பது ஒரு மதமா? சுரண்டலுக்கான ஒரு வகை தந்திர அமைப்பு முறையா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தீண்டாமை என்பதேகூட க்ஷேமகரமானது என்று சொல்லக் கூடியவர் தான் இந்து மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய லோகக் குரு என்று போற்றக் கூடிய சங்கராச்சாரியார். அந்த சங்கராச்சாரியார்களைத் தண்டனிட்டுப் போற்றக் கூடியவர்கள்தாம் இந்நாட்டுப் பெரிய பதவிக்காரர்கள்! (காசியில் கங்கை நீரால் சங்கராச்சாரியாரின் காலைக் கழுவிக் குடிக்கவில்லையா அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்?)

குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய நூலை வெளியிடுவது கூட வேண்டாத ஒன்றுதான் - வேலியே பயிரை மேயலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/82963.html#ixzz35tGtS7Dx

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தை புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/e-paper/82962.html#ixzz35tH7kZ64

தமிழ் ஓவியா said...


எங்க மகேசனைப் பார்த்தீங்களா - அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!


இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண் டிருக்கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங்களிலே.... கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா?

சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ரமணியன் போஸ் கிடைத்ததா?

தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா?

வள்ளியோடு பள்ளிகொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா கிளிக் ஆகவில்லை!

கூரான கற்கள் படிந்த புழுதி களையும், மணல் மேடுகளையும் தான் வைக்கிங் படம்பிடிக்க முடிந் ததா?

அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்று கூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே?

வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் முகவெட்டை இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா?

வாயைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டியவனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்புகிறோம்; எங்களை ஆற்றுவாரில்லையா? தேற்றுவாரில்லையா?

பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக்கிறீர்கள்? சொல்லித் தொலை யுங்களேன்! அங்கேயாவது அமெரிக் காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.

- விடுதலை, 22.7.1976 (சென்சாரால் வெட்டப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHcpegl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கி றவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டி யவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லு வதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHoOPf9

தமிழ் ஓவியா said...


அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்


மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டு போகின்றது, அம்மன் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டு போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை, மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது, அச்சு ஒடிகின்றது.

இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் இந்த விக்கிரகங்களில் புனிதத் தன்மை அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா! தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோட்டீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் - பாப்பராய் போகிறான் என்பதை பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.

இன்னும் ஒன்றுதான் - அப்புறம் ஒன்றுமில்லலை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதுண்ணு நினைக் கின்றீர்கள்.

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தை படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.

பதில்: சரி. அப்படியானால் அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர்: கடவுளை படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.

பதில்: அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்.

பதில்: சரி.நல்ல காரியமாச்சு. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

-சித்திரபுத்திரன், குடிஅரசு (4.1.1931)

Read more: http://viduthalai.in/e-paper/82995.html#ixzz35tI6dfGi

தமிழ் ஓவியா said...


பைபிளில் ஜாதி வெறி!


அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIIjl6B

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 27) உலக நீரிழிவாளர் தினம்



நீரிழிவு சர்க்கரை வியாதி என்ற உடனேயே இன்று பெரும்பாலானோர் பயத்தில் மூழ்கிவிடுகின்றனர். அக்காலத்தில் இயற்கைக்கு உகந்த உணவை உண்டு வந்தனர். ஆகையால் சர்க்கரை நோய் அவர்களைத் தாக்கவில்லை, இன்று நாம் பலவகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம் ஆகவே எளிதில் சர்க்கரை வியாதிக்கு ஆளாகிவிடுகிறோம் என்றும் சிலர் கூறுவார்கள். மனிதர்களுக்கு நாகரிகம் வளர வளர வசதிகள் பெருகுகின்றன. ஆகவே நாகரிக ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்கிறோம். உடலும் தன்னை மாற்ற முயல்கிறது. இதுதான் பரிணாமவளர்ச்சி என்று கூறுகிறோம். கடந்த 200 ஆண்டுகளில் பல உயிர்க்கொல்லி நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையின் வளர்ச்சி. உடலில் உள்ள சர்க்கரை அளவை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் உலகமெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். முன்பு சர்க்கரை நோய் வந்தவர்கள் உடல் பாகத்தில் ஏதாவது பாதிப்பு ஏறப்பட்டால் அந்தப் பாகத்தையே வெட்டி எடுத்துவிடும் நிலை இருந்தது. இன்று அப்படி அல்ல.

பாகிஸ்தானின் பிரபல மட்டைப்பந்து வீரர் வாசிம் அக்ரம் தன்னுடைய 31 வயதில் முதல்நிலை சர்க்கரை நோய்க்கு ஆளானவர் (type-1 diabetes) இந்த நிலை நோயுள்ளவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு விரை விலேயே மரணத்தை அடைந்து விடுவார்கள். பிரபல நகைச்சுவை சிரிப்பு நடிகர் உசிலைமணி இந்த type-1 diabetes
தாக்கத்தால் நீண்ட நாட்களாக மிகவும் வேதனைக் குள்ளாகி இறுதியில் மரணமடைந்தார்.

ஆனால், இன்று எந்த வகை சர்க்கரை நோயானாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீண்ட நாட்களாக உயிர் வாழமுடியும். மிகவும் ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு உயரும் தன்மையை கொண்ட வாசிம் அக்ரம் கூறுவதைக் கேளுங்கள்.

தொடக்கத்தில் எனக்கு type-1 diabetes உள்ளது என்றவுடன் என்னுடைய பயிற்சியாளர்கூட பயமுறுத்தி விட்டார். பாகிஸ்தானில் பெரிய மருத்துவர்கள் கூட என்னை அச்சுறுத்தினர். முக்கியமாக மட்டைப்பந்து விளையாட்டைக் கைவிடக்கூறினார்கள். ஆரம்பத்தில் எனக்கு ஒரு பயம் தான் இருந்தது. என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் சில இந்த வகையான சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்தும் இன்றும் ஆரோக்கியமாக வாழும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். முக்கியமாக முன்பிருந்ததைவிட அதிக நேரம் உற்சாகமாக தங்களு டைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர்.

சில நாள்கள் அவர்களுடன் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டேன். அது ஒன்றும் பெரிய சிரமமான செயல் அல்ல. பாகிஸ்தான் திரும்பிய பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தேன். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல புதிய நல்ல திருப் பங்கள் ஏற்பட்டன.

அதிலிருந்து என்னுடைய வாழ்க் கையில் பெரும் பங்கை நீரிழிவு நோய் என்ற மாயையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கி விட்டேன். இன்று யாரும் என்னை type-1 diabetes-ஆல் பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது.

கலகலப்பான வாழ்க்கை, உணவுக்கட்டுபபாடு, மருத் துவர்களின் ஆலோசனைஎல்லாவற்றையும் விட குடும்பத் தாரிடமும், பழகும் பிற நபர்களிடமும் இன்முகத்துடன் பழகி சுற்றுப்புறச்சூழலைக் கலகலப்பாக வைத்துக் கொண்டாலே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

Read more: http://viduthalai.in/page-8/82993.html#ixzz35tInUCBz

தமிழ் ஓவியா said...

னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம்


கனடாவில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக He/She என்பதற்குக்குப் பதிலாக Xe என்கிற பாலின பொதுச் சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கனடியன் சிட்டி பள்ளியின் நிர்வாகம் இந்த மாற்றத்தை அங்கீகரித்து உள்ளது. புதிய மாற்றத்தின்படி He/She என்பதற்குப் பதிலாக ‘Xe’, என்றும், him/her என்பதற்குப் பதிலாக ‘xem’, என்றும், his/her என்பதற்குப் பதிலாக ‘xyr’ என்றும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தைகளிடையே கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது குழப்பங்கள் இல்லாமல், பாலின வேறுபாடுகள் இன்றி (unisex) கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் மைக் லோம்பர்டி கூறும்போது, நாங்கள் குழந்தைகளுக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பள்ளியில் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று கூறினார். பெற்றோர்கள் இந்த மாற்றங்கள்குறித்து கேட்கும்போது, ஆறு வயதுள்ள குழந்தைகள் மத்தியில் பாலின அடையாளங்கள் பெரிதாக புரிவதில்லை. அவர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டி உள்ளதால் குழப்பங்களை அடைகிறார்கள். இந்த மாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கும்முன்பாக விவாதங்களுக்கான கூட்டங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காரசாரமாகவே நடைபெற்றது. கோபத்துடன் உள்ள பெற்றோர்கள் தரப்பில் செரில் சாங் என்பவர் குற்றச்சாட்டாகக் கூறும் போது, விவாதக்கூட்டத்துக்கு பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த விவாதம் பொருளற்றது. பிரிக்கும் அரசியலாகி உள்ளது. இதனால், மக்கள் கோபத்துடனும், நிலைகுலைந்தும் உள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/83019.html#ixzz35z6RHjfV

தமிழ் ஓவியா said...


திக்கெட்டும் முரசு கொட்டும் பெரியார் கொள்கைகள்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத்தலைவர் பேரா. டாக் டர் யுர்லிக் நிக்லசும், துணைத்தலைவர் திரு.சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப் பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங்கப்பட்டது.

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாயிண்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தந்தை பெரியாரின் தன்மான இயக்க மான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் வகுப்பு எடுத்தார்.

இப்படிப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிறபகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக, பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக சுவன்வோர்ட், செயலாள ராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பின் (அமெரிக்கா) வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து, தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கை களை, அவர் காண விரும்பிய சமுதா யத்தைப் படைக்க தன் பணியைச் செய்யும் என பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங்களை வழங்கியும் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன் ஆகியோர், பெரியார் புத் தகங்களை அரங்கில் அமர்ந்து விற்பனை செய்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் 1932இல் மேற்கொண்ட ஜெர்மனி பயணத்திற்குப் பிறகு, இப்போது தமிழர் தலைவர் கொலோன் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப்பட் டுள்ளது.

தொகுப்பு: இலக்கியா

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (ஜூன் 16-30 2014)

Read more: http://viduthalai.in/page4/83020.html#ixzz35z85WAvs

தமிழ் ஓவியா said...


வேற்று கிரகவாசிகளைக் கண்டறிய நாசா நிறுவும் மிகப்பெரிய தொலைநோக்கி


ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகளைக் கண்டறிவதற்கு, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கியை, விண்வெளியில் நிறுவ, நாசா திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனின், போர்ட்ஸ்மவுத் நகரில் நடந்த தேசிய வானவியல் கூட்டத்தில், ராயல் வானவியல் கழகத்தின் தலைவர் மார்ட்டின் பார்ஸ்தோ, இத்திட்டம் குறித்து கூறியதாவது: இதற்காக, பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில், 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள, 'ஹபல்' தொலைநோக்கியை விட, நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியில், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கோள்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும், வேற்று கோள்களில், உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொலைநோக்கியை, பூமியில் தயாரித்து, ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு, தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ஆம் ஆண்டுக்குள், தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் இவ்வாறு, மார்ட்டின் பார்ஸ்தோ கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/83021.html#ixzz35z8PQVML

தமிழ் ஓவியா said...


ஒரு நாட்டுக்கு 37 அலுவலக மொழிகள்


193 நாடுகள் நாடுகளாக அங்கீ கரிக்கப்பட்டவையாகும். 178 நாடு களில் தேசிய அளவில் அலுவலக மொழிகள் உள்ளன. அவற்றில் 51 நாடுகள் பொதுவான அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது. 28 நாடுகளில் பிரெஞ்சு உள்ளது. 19 நாடுகளில் அரபு மொழியும், 19 நாடுகளில் ஸ்பானிஷ் மொழியும் அலுவலக மொழியாக உள்ளன. 8 போர்த்துகீசிய நாடுகள் மற்றும் மகாவா நாட்டில் போர்த்துகீசிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. 7 நாடுகளில் எந்த மொழியுமே அலுவலக மொழியாக இல்லாமல் உள்ளன.

27 மொழிகளை அலுவலக மொழிகளாக இரண்டு நாடுகள் கொண்டுள்ளன. அதில் தேசிய மொழி களும் அடக்கம். இவை மாற்றங் களுக்கு உட்படாதவை ஆகும்.

உலகில் அதிக எண்ணிக்கையில் பேசக்கூடிய, 1.2 பில்லியன் மக்கள் தாய்மொழியாகக்கொண்டு பேசக் கூடிய சீன மொழி இரண்டு நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது.

சுவாஹிலி மொழி 8 இலட்சம் மக்கள் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு, 4 நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது. 84 மில்லியன் மக்கள் தாய் மொழியாகக் கொண் டுள்ள ஜாவனீஸ் எந்த நாட்டிலும் அலுவலக மொழியாக இல்லை.

சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எரித்ரியா, தி ஹோலி சி, லக்சம்பெர்க், சான் மரீனோ, சுவீடன், துவாலு, அய்க்கியப் பேரரசு(யூ.கே), அய்க்கிய நாடுகள்(யு.எஸ்) உருகுவே, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் அலுவலக மொழி என்று ஏதும் கிடையாது. அமெரிக்க ஆங்கிலம் மட்டுமே நிறுவனங்களின் மொழியாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் 23 மொழிகள் அலு வலக மொழிகளாக உள்ளன.பல்வேறு தேசியங்களைக்கொண்டுள்ள பொலிவியாவில் 37 மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. முதல் மொழி ஸ்பானிஷ் அல்லது காஸ்டெலினா மற்றும் அந்தப் பகுதி தாய் மொழி.

Read more: http://viduthalai.in/page5/83025.html#ixzz35z8kEHk1

தமிழ் ஓவியா said...


மூன்றாம் இடத்தில்.... செபிர் நிறுவனத்தின் கணிப்பு


இன்னும் 15 ஆண்டுகளில், பொருளாதார வலிமையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என லண்டனைச் சேர்ந்த ஆலோசனை சேவை நிறுவனமான செபிர் தெரிவித்துள்ளது. செபிர் நிறுவனத்தின் மதிப்பீடு களின்படி 2028 இல் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கும். தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வரும் ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அந்த ஆண்டில் மெக்சிகோ ஒன்பதாவது இடத்திலும், கனடா பத்தாவது இடத்திலும் இருக்கும்.

செபிர் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு உலக பொருளாதார அட்டவணைப்படி இந்தியா தற்போது 11ஆவது பெரிய நாடாக உள்ளது. 2018இல் நம் நாடு 9ஆவது இடத்திற்கு முன்னேறும். 2023இல் மேலும் முன்னேறி 4ஆம் இடத்தை பிடிக்கும். 2028இல் 3வது இடத்தை பிடிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதார பலம் 6.56 லட்சம் கோடி டாலராக இருக்கும் என செபிர் கணித்துள்ளது. தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1,75,800 கோடி டாலராக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றம் நன்றாக உள்ளது. இந்நாடுகளின் வளர்ச்சி வேகம் இதே அளவில் நீடிக்கும்பட்சத்தில், 2018ஆம் ஆண்டில் இரஷ்யா 6ஆம் இடத்தில் இருக்கும். இந்தியா 9ஆம் இடத்திலும், மெக்சிகோ 12வது இடத்திலும், கொரியா 13ஆவது இடத்திலும்,துருக்கி 17வது இடத்திலும் இருக்கும் என செபிர் கணித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
(வளர்தொழில் ஜூன் 2014 பக்.32)

Read more: http://viduthalai.in/page5/83024.html#ixzz35z9DXpiI

தமிழ் ஓவியா said...


நம் வீட்டில் எந்த நூல்கள்?

20.6.2014 நாளிட்ட விஜய பாரதம் இதழில் அதன் ஆசிரியர் 34 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு இந்துக்களுக்கு நூலகம் அமைக்கவும் அதில் கீழ்க்கண்ட நூல்கள் அவசியம் இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.

இதோ ஒவ்வொரு ஹிந்துவின் வீடுகளிலும் சின்னஞ் சிறு நூலகம் அமைய வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அதில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு ஞாயிறுதோறும் கிறித்துவர் கைகளிலே பைபிள் புத்தகங்களோடு குடும்ப சகிதம் சர்ச்சுக்கு செல்லக்கூடிய காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் நம்முடைய இந்துக்களின் வீடுகளில் நமது சமய புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அது ஒரு கேள்விக் குறி தான்.

குறைந்தபட்ச புத்தகங்களையாவது நமது வீடுகளில் அவசியம் வைத்து இருக்க வேண்டும்.

1) சிறீமத் பகவத் கீதை (இறைவன் மனிதனுக்கு சொன்னதாம்) 2) திருவாசகம் (மனிதன் இறைவனுக்கே சொன்னதாம்) 3) திருக்குறள் (மனிதனுக்கு மனிதன் சொன்னதாம்) 4) ராமாயணம் 5) மகாபாரதம் 6) பாரதியார் பாடல்கள் 7) ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு. 8) அர்த்தமுள்ள இந்து மதம் 9) பஜனை பாடல்கள் 10) சுவாமி விவேகானந்தர் வரலாறு.

இப்படி விஜய பாரதம் இதழ் இந்துக் களுக்கு அறிவுரை கூறி உள்ளது.

அதில் எப்படியோ திருக்குறளையும் இணைத்து விட்டார்கள் ஏமாற்று வேலை தான். இதில் கிறித்துவர்களையும் பைபிளையும் சொல்லிவிட்டு இஸ்லாமியர்களையும், குரானையும் விட்டுவிட்டார்கள். அதே இதழில் மகான்களின் வாழ்வில் என்று தலைப்பிட்டு அதில் எனக்கு உறக்கம் எப்படி வரும்? என்று அம்பேத்கர் அவர்களின் படத்தை போட்டு செய்தியை திசை திருப்பி எழுதி இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்தால் எப்படித் தான் உறக்கம் வரும் அம்பேத்கர் அவர்களுக்கு?. மகான்களின் வாழ்வில் என்று குறிப்பிடும் விஜய பாரதம். அம் பேத்கரை இந்து மதவாதியாக்கி மகான் பட்டம் சூட்டி இருக்கிறது, மறுபக்கம் அம்பேத்கர் சமூகம் இழிநிலை சமுதாய மாக வைத்திருக்கிறது. பார்ப்பனியம் இதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் பிரித் தாளும் சூழ்ச்சி (தாழ்த்தப்பட்ட மக்கள் விஜய பாரதத்தை பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி).

எனவே திராவிடர்களாகிய தமிழர்கள், தனக்கு மானமும், அறிவும், சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவும் புரட்சி எண்ணத் தையும் உருவாக்கி மனிதனை மனிதனாக்கி தலைவர்களைப்பற்றி படியுங்கள். தமி ழர்களின் வீடுதோறும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்கள் கீழ்க்கண்டவைகளாக இருக்கட்டும்.

1) திருக்குறள் 2) விடுதலை, உண்மை 3) குடியரசு 4) ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? (அம்பேத்கர்) 5) ஆரிய மாயை (அறிஞர் அண்ணா) 6) பாரதிதாசன் பாடல்கள் 7) தந்தை பெரியார் வரலாறு 8) இராமாயண பாத்திரங்கள் (தந்தை பெரியார்) 9) கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி) 10) தமிழிசைப் பாடல்கள் 11) இராவண காவியம் 12) வாழ்வியல் சிந்தனைகள்

மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் (பெரியார் புத்தக நிலையங்களில்) கிடைக் கும். வாங்கிப் படித்து உண்மையை உணர்ந்து மூளைக்கிடப்பட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டும்.

மதங்கள் மாளட்டும், ஜாதிகள் அழி யட்டும்

சமத்துவம் மலரட்டும்

- அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page6/83026.html#ixzz35z9Qhji9

தமிழ் ஓவியா said...


பவுத்த வெறியர்களின்ஆபாசம் வட்டரக்க விஜித தேரருக்கு பலவந்தமாக சுன்னத்து


இலங்கையில் கடந்த வாரம் தாக்கப் பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்கு தலின் போது தனக்கு சுன்னத்து எனப் படும் விருத்தசேஷனம் செய்யப்பட் டதாகக் கூறினார் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மிதவாத பவுத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரரை சந் தித்து திரும்பிய அவர் வழக்குரைஞரான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை கூறியுள்ளார்.

ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக் குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்ட ரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் வீசி எறியப்பட்டுக் காணப்பட்டார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக் கியதாகக் கூறியதாக அவரது வழக் குரைஞர் முன்னதாக கூறியிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப் பையே குற்றஞ்சாட்டுகிறார் என்று அவர் வழக்குரைஞர் கூறியுள்ளார்.
-பிபிசி தமிழோசை, 23-_6_-2014

Read more: http://viduthalai.in/page6/83027.html#ixzz35z9bRjhn

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

####

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

Read more: http://viduthalai.in/page6/83028.html#ixzz35z9nQFXv

தமிழ் ஓவியா said...

இதுதான் ஹிந்துத்துவா



கலாச்சார, மத மற்றும் அரசியல் இலக்குகளையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இந்து தர்மம் எனும் இந்து மதம், இந்து சன்ஸ்கிருதி எனும் இந்து கலாச்சாரம், இந்து ராஷ்டிரா எனும் இந்து தேசம் ஆகியவற்றின் உயர்வுக்காக சேவை செய்வதே தனது கடமையாகக் கொண்டு சங்கம் செயலாற்றி வந்தது.

சங்கத்தின் முன்னாள் தொண் டரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மீது விதிக்கப் பட்ட அரசின் தடையை விலக்கிக் கொள்வதற்கு, குறைந்த அளவு பொது மக்களின் கண்களுக்குத் தோன்றும்படி யாவது, அரசியல் கோணத்திலான தனது செயல்பாடுகளை சங்கம் கை விடவேண்டுமென்று 1948 ஜனவரியில் சங்கத்திற்கு படேலினால் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது.

அதன்படி சங்கத்தின் மறைமுகமான செயல் திட்டத்திலிருந்து ஹிந்து ராஷ்டிரா என்ற சொல்லை நீக்கிய சங்கம் தாங்கள் முழுமையான ஒரு கலா சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று அரசுக்கு உறுதியளித்தது. (பக்கம் 13-_14)

ஹிந்து மதத்தின்பால் தான் கொண் டிருந்த பாசமிகுதியின் காரணமாக சாவர்க்கர் தான் எழுதிய ஹிந்துத்வா என்ற பெயர் கொண்ட நூலில் தான் உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஆற்றல் நிறைந்த, வலிமை வாய்ந்த செயல்முறையான ஹிந்துத்வா என்ற சொல்லில் தங்கள் நோக்கங்கள் நிறை வேற்றப்படுவதற்கான நல்வாய்ப்புகள் இருப்பதை சங்கம் கண்டுகொண்டது. சாவர்க்கரைப் பொறுத்தவரை ஹிந் துத்துவா என்பது ஒரு மதம் என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டது அல்ல. அவரைப் பொறுத்தவரை இந்திய தேசத்தின் ஹிந்துக்கள்

(1) ஒரு பொதுவான கலாச்சாரத் தினால் கட்டுண்டிருப்பவர்கள்;

(2) பொதுவான ஒரு வரலாற்றினைப் பெற்றிருப்பவர்கள்;
(3) தங்களுக்கென ஒரு பொது மொழியினைப் பெற்றிருப்பவர்கள்;
(4) தங்களுடையது என்ற இந்திய தேசத்தைப் பெற்றிருப்பவர்கள்;
(5) தங்களுடையது என இந்து என்ற ஒரு தனி மதத்தினைப் பெற்றிருப்ப வர்கள் ஆவர்.

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர் என்ற முழக் கங்கள் சங்பரிவாரத்தின் அடிப்படை யான, ஆதிக்கம் செலுத்தும் முழக்கங் களாக ஆயின.
ஹிந்துத்துவ அமைப்பின் மறைமுக மான செயல்திட்டம்:

தமிழ் ஓவியா said...

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து

ஹிந்து என்றழைக்கப்படும் ஒருவன் யார்? சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை பரவியிருக்கும் பாரதவர்ஷமாகிய இந்த தேசத்தை தனது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், தனது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டி லாகவும் கருதி பாவிக்கும் ஒருவன்தான் ஹிந்து என்பவன்.

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 38-_39)

சிந்து என்ற சொல்லின் வளர்ச் சியைத் தேடும் நமது முயற்சியில், சன்ஸ் கிருதி என்ற சொல்லையே இதுவரை நாம் சார்ந்து, நம்பி வந்துள்ளோம். தற்போதுள்ள வேறு எந்த சொற் களையும் விட சிந்துஸ்தான் என்ற சொல்லே இந்திய தேசம் என்ற வளர்ந்து வரும் கோட்பாட்டை மேலான முறையில் விவரிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நிலையில் நமது தேடுதல் என்னும் நூலின் நுனியை நாம் விட்டுவிட்டோம். குறுகிய மனப்பான்மையும், பழமைவாத மும் கொண்ட ஆர்யவர்த்தா என்னும் சொல்லின் முக்கியத்துவத்தை சிந்துஸ் தான் என்ற இந்த சொல்லுக்கு அளிக் கப்பட இயன்ற வாய்ப்பினை முறியடிப் பதற்கான அதே நோக்கத்துடன்தான், ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு ஏதுமில்லாத முறையிலும், கட்சி வண்ணம் பூசப்படாமலும் இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாக, ஒரு வல்லுநரின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தா என்பது

(நான்கு வர்ணங்கள் நடைமுறை இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிலேச்சர் நாடு என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆர்யவர்த் தாவோ அதனையும் தாண்டி வெகு தொலைவில் இருப்பதாகும்.)

ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 115)

அதனால், எட்டப்பட்ட முடிவு களைத் தொகுத்துக் கூறும்போது, இந்து எனப்படும் ஒருவன் சிந்து முதல் சிந்து வரை - அதாவது சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தையர் (பித்ரு) நாடாகக் காண்பவனாகவும், அந்த இனத்தின் ரத்தத்தின் வழி வந்த வனாகவும், அவனது நுண்ணறி விற்கான முதல் ஆதாரத்தை வேதகால அய்ந்து சிந்துநதிகளில் தேடிக் காணத் தக்கவனாகவும், தொடர்ந்த தனது முன்னேற்றப்பாதையில் தான் எவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அந் நாட்டுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ப வனாகவும் இருக்கும் ஒருவனே இந்து என அறியப்படுபவன்ஆவான்; பொது வான அவர்களது செம்மொழியான சமஸ்கிருதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அந்த இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்று வந்து அதனையே தனது கலாச்சாரமாகக் காண்பவன் ஆவான்; ஒரு பொதுவான வரலாறு, பொதுவான இலக்கியம், கலை, கட்டடக் கலை, சட்டம் மற்றும் நீதி பரிபாலனம், சடங்குகள், சம்பிரதா யங்கள், விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவன் ஆவான்; அனைத்துக்கும் மேலாக, இந்த சிந்துஸ்தான் என்னும் நாட்டினை புண்ணிய பூமியாக (புனித தேசமாக), தனது மதத் தலைவர்கள் மற்றும் தேவதூதர்கள், குருக்கள், கடவுள் மனிதர்கள் வாழும் தேசமாக வும், வழிபாட்டிற்காக தலயாத்திரை செய்யும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன் ஆவான்.

ஹிந்துத்துவாவிற்கு மிகமிக முக்கிய மானவையாவன:
ஒரு பொதுவான நாடு (ராஷ்டிரா),
ஒரு பொதுவான இனம் (ஜாதி)
ஒரு பொதுவான கலாச்சாரம் (சன்ஸ்திரி)

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஒன்றுதிரட்டி மிகச் சுருக்கமா இவ் வாறு கூறலாம்:

எவன் ஒருவனுக்கு சிந்துஸ்தான் ஒரு பித்ரு பூமியாக மட்டுமல்லாமல் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ அவனே ஹிந்து எனப்படுபவன்.

ஹிந்துத்வாவின் முதல் இரு முக்கிய தேவைகளான தேசம் மற்றும் ஜாதி ஆகியவை மிகமிகத் தெளிவாக பித்ரு பூமி என்று குறிப்பிடப்பட்டு பொருள் கொள்ளப்படுவதாகும். அதே நேரத்தில் மூன்றாவது முக்கியத் தேவையான சன்ஸ்திரி (கலாச்சாரம்) மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் புண்ணியபூமி என்ற சொல்லால் குறிப் பிடப்படுகிறது. இந்த சன்ஸ்திரி என்பதில் புண்ணிய பூமி எனப்படும் புனித பூமியைக் குறிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், கொண் டாட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

- அ. பாலகிருஷ்ணன்

Read more: http://viduthalai.in/page6/83029.html#ixzz35zA2hr5w

தமிழ் ஓவியா said...


காவித் தலைவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதையாம்!


சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சாமிகள் என்னும் சிருங்கேரி சங்கராச் சாரி காலடியில் உள்ள கோயில்களுக்கு செல்லும்போது பயணியர் விடுதியில் அவருக்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட் டுள்ளது.

ஆதிசங்கரர் பிறந்த இடமாகிய பெரியாறு ஆற்றங்கரைப்பகுதியை ஒட்டியுள்ள காலடியில் ஆதிசங்கரரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

15ஆண்டுகளுக்குப்பின்னர் 2010ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரி கால டிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அரசின் சிறப்பு விருந்தினராக இருக்கிறார். விசாக சுக்ல பஞ்சமியில் ஆதிசங்கரர் பிறந்த நாளை மே 18இல் தத்துவவாதியின் நாளாக மாநில அரசு கொண்டாடுகிறது. மே 7ஆம் தேதி 2010 அன்று சிருங்கேரி சங்கராச்சாரி வருகையின்போது கேரள மாநில தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தவரான ஜோஸ் தெட்டாயில், தேவஸ்வ அமைச்சர் இராமச்சந்திரன், கடன்னபள்ளி மற்றும் திருவாங்கூர் அரச பரம்பரையின் தலைவரான உத்ரோதம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஆதிசங்கரர் மற்றும் சாரதாம்பாள் கோயில் வளாகத்தின் கிழக்கு நுழை வாயில் பழமையான கேரளா பாணி யில் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்பட் டது. சிருங்கேரி சங்கராச்சாரி கோயிலைப் பார்வையிட்டபின் கூறும்போது, காலடி தீர்த்த ஷேத்திர மாக உள்ளது. சிருங்கேரி மடத்தின் பிரதிநிதியாக வருகைதரும் சிருங்கேரி சங்கராச் சாரிக்கும் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.என்.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் சங்கரரின் பிறந்த இடம் அறியாமல் இருந்துவந்தது. 33 ஆம் சிருங்கேரி சங்கராச்சாரி சச்சிதானந்தா ஷிவபினவா நரசிம்ம பாரதி சாமி மற்றும் திருவாங்கூர் மகாராஜா சிறீமூலம் திருநாள் ராமவர்மா ஆகியோர் சேர்ந்து ஆதி சங்கரரின் பிறந்த இடத்தைக் காலடி என்று கண்டறிந்தனர்.சிருங்கேரி மற்றும் சங்கராச்சாரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாக காலடி உள்ளது என்றார்.

1910ஆம் ஆண்டில் மகா சுக்ல துவாதசியில் இரண்டு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மே 14இல் தொடங்கி ஆதிசங்கரரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட் டங்கள் மே 31 வரை நடைபெற்றுள்ளது. பூர்ணஹத்தியின் ஆதி ருத்ர மகாயாகம் சிருங்கேரி மடாதிபதியின் முன்னிலை யில் நடைபெற்றுள்ளது. விழாவை யொட்டி வித்வத் சபாக்களில் வேதங்கள் ஓதப்படுகின்றனவாம். மே 18ஆம் தேதி அன்று சிருங்கேரி சங்கராச்சாரியால் சிறப்புப் பூசை செய்யப்படுகிறதாம். அப் போது, வேதங்கள் பயின்ற வித்துவான் கள் விருதுகள், சான்றுகள் அளித்துப் பாராட்டப்படுகின்றனர். தி இந்து ஆங்கில நாளிதழ், 14-.5.-2010

Read more: http://viduthalai.in/page6/83032.html#ixzz35zAs7p4J

தமிழ் ஓவியா said...


அரிது! அரிது!!

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!!

உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page6/83033.html#ixzz35zB2suJz

தமிழ் ஓவியா said...

திரவுபதையின் ஆசை


திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்?

1) தருமன் -சதா வேதாந்தம் பேசுவான்.

2) பீமன் - உடல் பெரியவன் குண்டன் சாப் பிட்டுக் கொண்டே இருப் பான்.

3) அர்ச்சுனன் - ஏகப் பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணி னாலும் அர்ச்சுனன் மனைவிகளை எண்ணவே முடியாது). 4. நகுலன், 5. சகா தேவன்

எனது பிள்ளைகள் மாதிரி. எனவே கர்ணன் மீது ஆசைப்பட்டேன் என்கிறாள் திரௌபதி. (வியாசர் பாரதம்)

இந்த ஆன்மிகத்தை ஏற்கத் தயார் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/83044.html#ixzz35zCePPHy

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/83046.html#ixzz35zCwuW3d

தமிழ் ஓவியா said...


பாலாறா? பாழாறா?



தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் தொல்லைகள் தலை தூக்குகின்றன. கருநாடகத்தி லிருந்து காவிரிக்குத் தொல்லை என்றால் கேரளாவி லிருந்து முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் முட்டுக்கட்டை!

இப்பொழுது ஆந்திராவிலிருந்து அறைகூவல் இவ்வாற்றின் பிறப்பிடம் கருநாடகம் என்றாலும் 60 மைல் அம்மாநிலத்தில் ஓடி ஆந்திர மாநிலம் குப்பத்தில் கால் பதிக்கிறது. குப்பம் மாவட்டத்தில் 30 மைல் பயணமாகி தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூரில் புகுகிறது. வேலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக வழிந்தோடி கல்பாக்கம் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழ்நாட்டில் இதன் ஓட்டம் 140 மைலாகும்.

இந்தப் பாலாறு வேலூர் மாவட்ட மக்களுக்குப் பால் வார்க்கும் நதியாகும் அம்மாவட்டத்தில் 49 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலாற்றால் பயன் அடைகிறது. 300 ஏரி குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாலாற்றங் கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை முக்கிய பயிர்களாகும்.

பாலாற்றின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டும் வருகின்றன.

மைசூர் மாநிலத்திற்கும், சென்னை மாநிலத்திற்கும் இடையில் எப்படி காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ அதுபோலவே பாலாற்றுப் பிரச் சினையிலும் ஓர் ஒப்பந்தம் 1892இல் போடப்பட்டது.

அதன்படி பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டக் கூடாது; அணைகளின் உயரத்தையும் நீட்டக் கூடாது.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலம் எப்படி ஒப்பந்தத்தை எல்லாம் உடைத்துத் தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்து கொண்டு வந்துள்ளதோ, அதே புத்தியில் பாலாற்றுப் பிரச்சினையிலும் கருநாடகம் நடந்து கொண்டது. ஆனால், பேந்த மங்கலம் என்னும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த அணையை ஒப்பந்தத்தை மீறி 15 அடியிலிருந்து 30 அடியாக உயர்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் பாலாற்றின் குறுக்கே ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டிக் கொண்டது.

கருநாடக அரசு தன் பங்குக்கு ஒப்பந்தத்தை உடைத்தது என்றால் ஆந்திர அரசு தன் பங்குக்கு ஏதாவது தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய வேண்டாமா?

1892 ஒப்பந்தத்தை மீறி குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரம் உள்ள 22 தடுப்பு அணைகளை 30 மைலுக்குள் கட்டி முடித்துக் கொண்டது.

இதனால் இயற்கையாகப் பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீர் செயற்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அணைகள் நிரம்பி வழியும் தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வந்து சேர முடியும்.

இதன் காரணமாகவே பாலாறு பாழாறாகிப் போய் விட்டது. 1892 ஒப்பந்தப்படி பாலாற்று நீர் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர மாநிலங்களில் சம அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் பழி வாங்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமே.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர்ப் பாசனமும், பாசன நீர்ப் பாசனமும் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையில் குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாக ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திருவாளர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டின், வடக்கு மாவட்டங்களின் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுவது போல ஒன்றை அறிவித்துள்ளார்.

குப்பத்தில் பாலாற்றில் புதிய அணை ஒன்றைக் கட்டி, ஒரு துளி நீரும் வீண் போகாமல், ஆந்திர விவசாயிகளின் நன்மைக்காகத் திட்டங்கள் தீட்டுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரும் தமிழ்நாட்டு உரிமையை மீட்பேன் என்று கூறியுள்ளார்.

இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை இந்நாள் முதல்வர் ஜெயலலிதா சீண்டியுள்ளது தேவையற்ற ஒன்று.

ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடியவர் இது போன்ற தமிழ்நாட்டு நலனைச் சேர்ந்த பொதுப் பிரச்சினையில், கிடைக்கக் கூடிய ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல், பொதுப் பிரச்சினையில்கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று காட்டிக் கொள்வது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வட மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் போதிய பயன் கிடைக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-2/83047.html#ixzz35zD5DagJ

தமிழ் ஓவியா said...


ஊழலைப்பற்றி ஏன் பேசவில்லை?


கேள்விக்குப் பதில்

ஊழலைப்பற்றி தாங்கள் பேசவில்லையே, ஊழலைப்பற்றி தங்களின் கருத்தென்ன? என்று பொதுக்கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுதி அனுப்பினார்.

அதற்குப் பதில் அளிக்கும் முறையில் தமிழர் தலைவர் கூறியது: ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் வராதவரை ஊழலை ஒழிக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாகும். 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மன நிலையில் மக்கள் இருக்கும் நாட்டில் லஞ்சம் ஒழியுமா? (பலத்த கரஒலி!)

இப்படி லஞ்சம் வழங்கியதை எங்களால் தடுக்கவே முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே சொல்லும் நாட்டில் ஊழல் சுலபத்தில் அழியுமா? உண்மையைச் சொல்லப்போனால் லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது? பூஜை அறையில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. பிரார்த்தனை என்பது என்ன? ஒன்றைக் காணிக்கைச் கொடுப்பது என்பது என்ன? கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதுதானே?

இந்த லஞ்சத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் வினா எழுப்பியபோது பலத்த கரஒலி!

- கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் (27.6.2014)

Read more: http://viduthalai.in/page-4/83067.html#ixzz35zDwEjIG

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும், சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையாயிருக்கு மானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்துவார் களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப்பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83064.html#ixzz35zFCGk5l

தமிழ் ஓவியா said...


இரட்டை வெற்றி

பன்னீர்செல்வம் உயர் திருவாளர் ராவ் பகதூர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந் தெடுக்கப் பட்டவிஷயம் முன்னமேயே வாசகர் களுக்குத் தெரிவித்திருக்கிறோம்.

ஆனால், அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்பந்த மான ஆட்சேபணைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாதகாலம் அந்தத் தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம்கடத்தி வந்தார்கள்.

ஆனாலும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சி யைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டுவிட வில்லை.

ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்ல வென்று எதிர் அபேட்சகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின் றார்கள். அதன் தீர்ப்பு அனேகமாய் முடிவில் இப்படியே தான் ஆகி மூன்று வெற்றி ஏற்படக் கூடுமென்று இப்போதே முடிவுகட்டி விடலாம்.

எலக்ஷன்கள் நடந்ததும் எதிர் அபேட்சகர் தனது திருப்திக்கும் தனது கட்சியார்களின் திருப்திக்கும் இம்மாதிரி ஆட்சேபங்கள் கிளம்புவதும் அநேகமாய் எங்கும் இயற் கையாகவே இருந்து வருகின்றது. ஆனால் 100-க்கு தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தேர்தல் ஆட்சேபங்கள் தோல்வி அடைந்தே வருவதும் சகஜமாகவும் இயற்கை யாகவுமே இருந்து வருகின்றது.

எனினும் இம் மாதிரி சம்பவங்கள் வெற்றி பெற்றவர் களுக்கு வெற்றி மகிழ்ச்சியடைய இரண்டு சந்தர்ப் பங்களையும் தோல்வி அடைந்த வர்கள் ஏமாற்றம் அடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் அளித்து வரு வதும் அனுபவத்தில் கண்டதேயாகும். சுகமும் துக்கமும் மாறி மாறியும் தொடர்ந்து தொடர்ந்தும் வருவது இயற்கையேயாகு மன்றோ!

எம்.கே.ரெட்டி

உயர் திருவாளர் திவான் பகதூர் எம். கே. ரெட்டியவர்களும் செங்கல் பட்டு ஜில்லாபோர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்டார் என்கின்ற சேதியை கேட்க வாசகர்கள் மிகுதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.

திரு. எம். கே. ரெட்டி அவர்களின் ஜில்லாபோர்டு நிருவாகமும் திரு. பன்னீர் செல்வத்தின் நிருவாக மும் பார்ப்பனரல்லாதார் சமூக நன்மை யையும் சுயமரியாதைக் கொள்கை யையுமே பெரிதும் தழுவி நடந்துவந்த காரணமே அவ்விரு போர்டு தலைவர் தேர்தலுக்கும் சற்று எதிர்ப்பும் சூழ்ச்சியும் பலமாய் இருக்க நேரிட்டது. ஆனாலும் அவ்விரு போர்டு தலைவர்களும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டதானது நமது இயக்கத்திற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 06.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFKi2ZL

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமோ? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி என்று நீ சிந்திப்பதில்லை. நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது?

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFX1J94

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?

என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFeqWbm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின்போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப்பனர்களின் தாசானுதா சராய் இருந்தவருமான திரு.முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் அய்யங்காரும் மற்றும் நிருவாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எ.சத்தியமூர்த்தி சாஸ்திரி, ஆர்.சீனிவா சய்யங் கார் முதலியவர்கள் நிருவாக சபையில் ராஜினாமா செய்து விட்டார்கள்.

காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில், கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆட்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய தானங்களும் அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது.

இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும்படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப்பட்ட ஆட்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலே யே காங்கிரசைப் பார்ப்பனர்கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்து ஓடுகின்ற ஆட்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகுவீரத் துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர் மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரதாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகம் தேர்தல் தாபனங்களைக் கைப்பற் றுவதுமேதான் இந்தப் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசிய லட்சியம் என்பதையும் அதற்கு வழி இருந்தால்தான் பூரண சுயேச்சையில் கலந்தி ருப்பார்கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களைக் குலாம் என்றும் சர்க்கார்தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒருசமயம் ஜெயிலுக்குப் போகவேண்டியதா யிருந்தால் இராஜினாமா கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்பதையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83072.html#ixzz35zFmL2tF

தமிழ் ஓவியா said...

அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/83140.html#ixzz365EdNmJf

தமிழ் ஓவியா said...

அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/83140.html#ixzz365EdNmJf