Search This Blog

22.1.14

அதிகமாக விவாகரத்து நடப்பதால் ஒன்றும் கேடு ஏற்படப் போவதும் இல்லை!

ஏன் அதிகரிக்கின்றன விவாகரத்துகள்? 

விவாகரத்துப் பிரச்சினை குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுண்டு - விமர்சனங்கள் வெளிப்படுவதும், விவாதங்கள் நடைபெறுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

19.1.2014 நாளிட்ட தி இந்து (தமிழ்) ஏட்டில் இதே தலைப்பில் பலரிடம் கருத்துகள் கேட்டு, அவை வெளியிடப்பட்டுள்ளன.

சொல்லப்படும் காரணங்கள்:

1. பெரிய நகரத்தில் யாருடைய தலையீடும் இன்றி வாழலாம்.
2. கிராமங்களைப்போல் கேள்வி கேட்பார்களே என்ற பயம் இல்லை.
3. பணத் தேவையில்லை. கணவன் சம்பாதித்துதான் வருமானம் என்ற நிலை இல்லை.
4. உடனடியாக மறுமணமும் சாத்தியம்தான்.
5. பெண்களின் வேலையும், சுய சம்பாத்தியமும் அவர்களுக்குத் தன்னிறைவை அளித்துள்ளது.
6. அபரிமிதமான வருமானமும், குழந்தை இன்மையும் கூட முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
7. எனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று எளிமையாகக் கூறிவிடுகிறார்கள்.
8. திருமணத் தம்பதியினருக்கிடையே பேசிப் பொழுதுபோக்க பொதுவாக எந்த விஷயமும் இருப்பதில்லை.
9. மனப் பொருத்தமின்றி நடக்கும் திருமணங்கள்.

இதுபோன்ற காரணங்கள்தான் விவாகரத்துக்குக் காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஒன்றிரண்டு பொருத்தமாக இருக்கின்றன என்று சொன்னாலும், மேலே எடுத்துக்காட்டப்பட்ட காரணங்களால் ஒன்றிரண்டு ஆங்காங்கே நடந்தாலும் இவை எல்லாவற்றையுமே நியாயப்படுத்திவிட முடியாது.

பெண் சுயமாக சம்பாதிப்பதாலும், விவாகரத்து ஏற்படுகிறது - பணப் பிரச்சினை ஏதும் இல்லாத நிலை என்று பொருளாதாரம் முன்வைக்கப்படுகிறது.

பெண் படிக்கக்கூடாது; கணவனைச் சார்ந்தே வாழவேண்டும் என்ற மத ரீதியான தடை பெண்களின் மூளையில், சமுதாயத்தின் அபிப்ராயத்தில் விலங்காகப் பூட்டப்பட்டுக் கிடந்தது என்பதை முன்னிறுத்தினால் தான் பெண்களின் படிப்பு, அவர்களின் சுய சம்பாத்தியம் எந்த அளவுக்கு ஜீரணிக்கப்படுகின்றன என்பதை அறிய முடியும்.

ஆணைவிட பெண் அதிகம் சம்பாதித்தால், ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையைப் புறந்தள்ளிவிட முடியாது; அப்படியே சம்பாதித்தாலும், மனைவி சம்பாதிக்கும் முழுத் தொகையையும், சிந்தாமல், சிதறாமல் ஆணிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்ற ஆண்களின் அளவிறந்த ஆதிக்க மனப்பான்மைக்கு இந்தக் காலத்துப் படித்த, வருமானம் ஈட்டக்கூடிய பெண்கள் அடிபணிந்து போகவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படி எதிர்ப்பார்ப்பதைத்தான் எப்படி நியாயப்படுத்தவும் முடியும்?

ஆண் - பெண் உறவு என்பது ஆண்டான் அடிமை என்ற ரீதியில் இல்லாமல், தந்தை பெரியார் கூறும் நட்பு அடிப்படையில் இருக்குமானால், அந்த இடத்தில், ஆதிக்க மனப்பான்மையோ, தாழ்வு மனப்பான்மையோ ஏற்பட வழியில்லையே! குழந்தைப் பேறு இல்லையென் றால், அதற்குக் காரணம் என்னவென்று மருத்துவ ரீதியாக அறியக்கூடிய வாய்ப்புகள் இன்றைய கால கட்டத்தில் ஒளிமயமாகவே உள்ளன.

ஆனால், படித்தவர்களிடையே கூட, சமுதாய அமைப்பில் குழந்தை இல்லை என்றால், அதற்குப் பெண்தான் காரணம் என்று ஒருவழிப் பாதையாகவே முடிந்த முடிவுக்கு வரும் நிலை இன்றளவும் இருக்கத்தானே செய்கிறது.
அப்படி குழந்தையே இல்லை என்றாலும், என்ன குடிமூழ்கிப் போய்விடும்? ஆதரவற்ற இல்லங்களில் எத்தனையோ குழந்தைகள் உண்டே! ஒன்றை எடுத்து வளர்க்கக்கூடாதா?

நாயைக் கொஞ்சுகிறான் - இன்னொருவருக்குப் பிறந்த குழந்தையைக் கொஞ்சக்கூடாதா? என்ற நேர்மையான வினாவைக் கேட்டார் தந்தை பெரியார்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல் என்பதுதான் முக்கியம். கல்வியோடு தந்தை பெரியாரியலை சமுதாயத்தினூடே முன்னெடுத்துச் சென்றால், இந்தச் சமூகப் பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காண முடியுமே!

இவற்றையும் மீறி விவாகரத்து நடந்தால் அதனால் ஒன்றும் கேடு ஏற்படப் போவதும் இல்லை. அவரவர்களுக்கும் சுயமரியாதை உணர்வு இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த விவாகரத்துகளுக்குக் காரணம் என்றால், அதனையும் வரவேற்கவேண்டியதுதான். விவாகரத்து என்பதை ஒரு குற்ற உணர்ச்சியாகப் பார்ப்பதுகூட நம் ரத்தத்தில் தலைமுறை தலைமுறையாக ஊறி வந்த ஒரு வகையான தவறான அபிப்பிராயத்தின் எதிரொலியே!

மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை ஏற்றுக்கொண்டால், இதனை ஒரு பெரிய பிரச்சினை யாகக் கருதும் நிலை ஏற்படாது!

Read more: http://viduthalai.in/page-2/73847.html#ixzz2r55OMklY

                   -------------------” விடுதலை” தலையங்கம் 21-01-2014

91 comments:

தமிழ் ஓவியா said...

கழகத்தின் கோரிக்கை நிறைவேறும் நிலை ஏற்படுகிறது தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது


புதுடில்லி, ஜன.21- காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்கும் பணியினைத் தொடங்கிவிட்டது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிக்கின்ற வகையில், அதற்கென்று தனிச் சட்டம் வழங்கப்படுகின்ற வகையில் தேர்தல் அறிக்கை உருவாகிறது.

குறைந்தபட்சம் ரூ.100 கோடி முதலீடு அல்லது 1000 பணியாளர்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அதைப்போலவே தனியார் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து இட ஒதுக்கீடு, இலவச உயர் மெட்ரிக் கல்வி, வேலை கிட்டாத ஒவ்வொரு பட்டதாரிக்கும் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை என ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி மற்றும் நலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. இத்தகைய வழிமுறைகளுக்கு சட்ட ரீதியான வடிவம் கொடுக்கும் உறுதியினை தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் பொறுப்பு மூத்த கட்சிப் பொறுப்பாளர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் பேசிய பேச்சுக்களில், உரிமை சார்ந்த சில உறுதி மொழிகள் மேலோங்கி இருந்தன. அதனடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உரிமை சார்ந்த சட்ட வடிவங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்ற அய்க்கிய முன்னணி அரசின் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முயற்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம்மூலம் அனைவருக்கும் உணவு கிடைக்கும் உரிமைச் சட்டம் ஆகியன உருவாக்கம் பெற்று நடைமுறையில் உள்ளன.

சென்ற வாரம், மக்களின் செல்வாக்கைப் பெறுகின்ற வகையில், ராகுல் காந்தி ஒரு குடும்பத்திற்குரிய, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 9-லிருந்து 12 ஆக உயர்த்திடும் அறிவிப்பிற்கு ஆதரவு அளித்திட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மலைவாழ், பழங்குடியின வகுப்பினரின் வாக்கு வங்கியினை தக்க வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த இருபது ஆண்டுகளில் அவர்களின் வாக்குகளைப் பெறு வதில் சுணக்கத்தினை கண்டு வந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட உள்ள தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து அந்தந்த மாநிலங்களில் உரிய பிரதிநிதிகள், சமூக அமைப்புகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து ஆலோசிக்கும் வழமைகளும் தொடர்கின்றன.

தமிழ் ஓவியா said...

தேர்தல் காலங்களில் நிலவும் ஆளும் கட்சிக்கு எதிரான போக்கு குறித்து, கவனம் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இதர கட்சிகளை பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சியினரால் ஓரங்கட்டப் பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப் பினரை ஈர்க்கின்ற வகையில் செயல்படத் தொடங்கியுள்ளது.

அண்மையில் சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மொத்த 91 ரிசர்வ் தொகுதிகளில் 6 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் 38 ரிசர்வ் தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

2004 மற்றும் 2009 ஆம் ஆண்டைய தேர்தல் அறிக்கைகளில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த அய்க்கிய முன்னணி அரசு முனைப்பு காட்டிடவில்லை. வர இருக்கின்ற தேர்தல் அறிக்கையில் மீண்டும் இடம்பெறுகின்ற இட ஒதுக்கீட்டு உறுதிமொழி மாறுபட்ட தன்மை உள்ளதாய் அமைய உள்ளது.

தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை வலி யுறுத்தி தனிச் சட்டமே உருவாக்கப்படும் வகையில், தேர்தல் அறிக்கை இடம்பெற உள்ளது. சட்ட வடிவ நடவடிக்கைகள் இட ஒதுக்கீட்டு நடைமுறையினை கட்டாயமாக்கிடும் தன்மை வாய்ந்தவை. ரூ.100 கோடி முதலீடு அல்லது 1000 பேருக்குக் குறையாத பணியாளர்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களில் நடைமுறை காண உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இட ஒதுக்கீடு நடைமுறையில் அரசு உறுதியுடன் இருக்கும் நிலை குறித்து தனியார் துறையினர் அச்சப்படத் தொடங்கிவிட்டனர்.

இதற்குப் பதிலாக தனியார்த் துறையுடன் அரசினர் கலந்து பேசி, இட ஒதுக்கீட்டினை தனியார்த் துறை பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம் எனவும் கருத்து நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினரில் படித்த வேலை கிட்டாத பட்டதாரிகளுக்கு, வேலை பெறுவதற்கான திறனை, பயிற்சிமூலம் பெற்றுக் கொள்ள ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளித் திடவும் வகை செய்யப்பட உள்ளது.

மற்றுமொரு முக்கிய திட்டமும் கல்வி வாய்ப்பு கிட்டுவதில் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக கூறப்படுவது:

உயர்கல்வி வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்ற உண்மை நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மட்டும் கல்வி பெற்று வருகின்ற நிலைமையில், தரமுள்ள கல்வி பெற இயலாத உண்மையும் உலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/73870.html#ixzz2r58d5Vjs

தமிழ் ஓவியா said...


மோடி என்னும் பா.ஜ.க முகமூடி


நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கியுள்ளது. வகுப்புவாதச் சக்திகள், மதவெறிப் பிரச்சாரத்தை முக மூடிபோட்டுத் திட்டமிட்டு முடுக்கிவிட் டுள்ளன.

முதன்மை எதிர்க்கட்சியான பி.ஜே.பி. தன் கொள்கை இவை, இவற்றைச் செய்வோம் என்று கொள் கையைச் செயல் திட்டத்தை முன் நிறுத் துவதற்குப் பதிலாக, மோடியை முன் னிறுத்தி தேர்தல் களத்தில் இறங்கு கிறது.

கொள்கை, கோட்பாடு என்று எதையும் ஏன் கூறவில்லை, பொருளா தாரக் கொள்கை - வெளியுறவுக் கொள்கை எதிலும் காங்கிரசும், பி.ஜே.பி யும் பயணிப்பது ஒரே குதிரையின் மீது தான். இலக்கு இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.

இன்னும் விளக்க மாகச் சொல்வதாயின் காங்கிரசின் தாராளமயக் கொள்கைதான் பி.ஜே.பி யின் கொள்கை. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதும் கூட பி.ஜே.பி யின் கொள்கை தான். 2002-இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு பெற்றுப் போட்ட குழந்தையைத் தான் 2012-இல் மன் மோகன் தலைமையிலான அரசு தத்து எடுத்துத் தன் பிள்ளையாகப் பேர் சூட்டிக்கொண்டது.

பா.ஜ.க மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராக வழக்கமில்லா வழக்கமாக அறிவித்திருக்கிறது. அன்று குஜராத்தின் முதல்வர் மோடியின் அரசு சாதனை புரிந்த அரசு என்றும், அந்தச் சாதனை மாநில அளவில் இருந்து நாட்டளவில் மாறிவிடும் என்று திறமை யாக ஊடகங்களின் துணையோடு, பொய்யை விற்பனை செய்யக் கடை விரித்துள்ளது.


தமிழ் ஓவியா said...

அதே போல் தான் இங்கே தமி ழகத்தில் அ.தி.மு.க வின் ஆட்டமும். தில்லானா மோகனாம்பாள் திரைப் படத்தில் ரயில்பயணக் காட்சியில் பாலையா அவர்கள் என்ன ஒரே ஆட்டமாக இருக்கிறது என்பார். அதுபோல் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத அதிமுக அரசு அறிவிப்பு புஸ்வாணங்களாக விட்டுக் கொண்டிருக்கிற அதிமுக அரசு இன் னும் மின்சாரச் சிக்கலை தீர்த்த பாடில்லை. தொழில்கள் முடங்கிக் கிடக் கின்றன.

நாடு வளர்ச்சிப் பாதையி லிருந்து விலகித் தேக்க நிலையில் எங்கோ கிடக்கிறது. நாடாளுமன்றம், டில்லி செங்கோட்டை என்று கனவுகள் பலமாகத் தானிருக்கின்றன. இது இங்கே நம் கண்ணுக்கே தெரியும் கைப் புண். ஆனால் குஜராத் நாடு முழு மைக்கும் உள்ள நிலைமை தெரியாத மாநிலம்.

எனவே ஊடகங்களும், ஆதிக்க வர்க்கமும் - மோடி ஆதிக்க வர்க்கத் தவர் இல்லையென்றாலும் அவரை முன்நிறுத்தி நிழல் சண்டைக்குத் தயாராகி வருகின்றனர்.

மோடி என்பவர் தனி மனிதர் மட்டு மல்லர் - மதவாதச் சக்திகளின் முகமூடி. குஜராத் இந்தியா முழுமைக்கும் மாதிரி யல்ல. இந்த முகமூடியைக் கழற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் திராவிட உணர்வுடைய திராவிடர் ஒவ் வொருவருக்கும் உண்டு. ஒரு முறை ஏமாந்தால் - அவ்வளவு தான் - சமூக நீதி - வகுப்புரிமை எல்லாம் காற்றில் பறந்து ஓடிவிடும்.

மீடியாக்கள் போடும் மோடி வெளிச் சத்தில் கண் கூசிய சிலர் குஜராத்தில் பாலும், தேனும் ஒடுவதாகவும், குஜராத் போன்ற ஒரு நிர்வாகத்தை மத்தியில் மோடி தருவார் என்றும் உண்மை நிலவரம் தெரியாமல் உளறுவதைக் கேட்க முடிகிறது.

எனவே மோடியின் குஜராத் அரசு எவ்வளவு மோசமான நிருவாகத்தை நடத்தி வருகிறது? குண்டுச் சட்டிக் குள்ளே கூட குதிரை ஓட்ட முடியாத மோடி, வானத்தைக் கீறி வைகுந்தம் போவதாக, நாடு முழுவதும் குஜராத் தைப் போன்ற ஒரு நிர்வாகத்தை மத் தியில் தரப்போவதாகப் பொய் வலையை, மாய வலையை வீசி அப்பாவிகளின் ஓட்டுக்கள் எனும் மீன்களை வாரிச்சுருட்டி விடலாம் எனக் கனவில் மிதக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தெளிவாக்கி மோடி ஆபத்து எத்தகை யது என்பதைச் சற்று விளக்கமாகவே சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விளக் கங்கள் உண்மையிலேயே உறங்குபவர் களுக்கேயன்றி, உறங்குவது போல் நடிக்கும் மதிமுக போன்ற பரிதாபத் திற்குரியவர்களுக்கு அல்ல. ரகுராம் ராஜன் தலைமையிலான குழு குஜராத்தை அடிமேல் அடியாக அல்ல, இஞ்ச் மேல் இஞ்ச்சாக, மி.மீ மேல் மி.மீ. ராக அளந்து அளித்த அறிக்கை யின் ஒப்பீட்டளவில் கூட வளர்ச்சி யடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத்தை வைத்திடவில்லை.

தமிழ் ஓவியா said...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் வளர்ச்சி குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தான் குஜராத் இடம் பெற்று இருக்கிறது. அதுமட்டுமா? மனித வாழ்க்கைக்கு அடிப்படையான - மக்களுக்கு அரசு அளிக்க வேண்டிய கடமைகளில் இடம் பெற்றவையான கல்வி, சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம் ஆகிய சமூக நல மேம்பாட்டில் பல மாநிலங்களை விடக்குஜராத் பின் தங்கியிருக்கிறது. ஆகக் குஜராத் முன்னணி மாநிலமாக இருப்பதாகக் கூறுவது எவ்வளவு பொய் - துணியில், சல்லடையில் அல்ல ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

வகுப்பு வாதம் எனும் வன்கொடுமை

இன்றைக்குப் பன்னிரெண்டாண்டு களுக்கு முன் 2002-இல் இதே புண்ணியவாளர், இன்று பசுத்தோல் போர்த்திவரும் புலி நரேந்திரமோடியின் தலைமையிலான அரசு தூண்டிவிட்ட வகுப்புவாத வன்முறையில் 2,000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப் புலியின் இரத்தப்பசி அத் துடன் அடங்கி விடவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் போலி என்கவுண்டர் எனும் பூதத்தாலும் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். போலி என்கவுண்டர் என்பதெல்லாம் பொய் என்று கூடச் சிலர் வாதாடக் கூடும்.

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் போலி என்கவுண்டர்கள் நடத்திய காவல்துறை அலுவர்கள் 32 பேர் மீது சி.பி.அய் வழக்குத் தொடுத்தது அவர்கள் சிறையில் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

சிறையில் உள்ள டிஅய்ஜி வன்சாரா என்பவர் தமது பதவியை விட்டு விலகுவ தாக எழுதிய கடிதத்தில் அவரைப்போல் போலி என்கவுண்டர் செய்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, வழக்குத் தொடுத்த சி.பி.அய், இந்தப் போலி என்கவுண்டருக்கு ஆணை பிறப்பித்த நரேந்திரமோடி, நரேந்திரமோடியின் உள்துறை அமைச்சரான அமீத்ஷா ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, போலி என்கவுண்டர் என்பது மோடி அரசின் கொள்கைதான் என்று கூறியுள்ளதே நம் கூற்றுக்குச் சான்று.

இதில் ஒரு வேடிக்கை இந்த அமீத்ஷா தான் பாஜக யின் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் பொறுப்பாளர். பெரியார் சொல்வாரே நண்டைச்சுட்டு நரியைக் காவல் வைப்பது என்று அதுதான் இது.

முதலில் 2002-இல் இனப்படு கொலையில் ஒரு திறமையான நிர்வாகி எனக் கட்டுக்கதை கூறும் மோடியின் பங்கு குறித்துக் காண்போம்.

குஜராத்தில் சிறுபான்மையினர் குருதி கொட்ட, தீயில் கருகி வெந்தனர். வன்புணர்ச்சி, கொள்ளை ஆகியவற் றிற்கு உட்படுத்தப்பட்டார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய மோடி யின் அரசு எந்திரம், வெறிகொண்ட சங்பரிவார அமைப்புகள் மிகவும் சுதந் திரமாகச் செயல்பட அனுமதித்தது. பல இடங்களில் அந்த வன்முறைக் கும்ப லோடு பல இடங்களில் சேர்ந்து கூட்டுச் சதி செய்தது.

பல்வேறு சுயேச்சையான மக்கள் குழுக்கள் மோடி அரசின் காட்டுமிராண் டித்தனம் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டவை படித்தால், ஹிட்லர் காலத்து வன்முறை வெறியாட்டங்களை ஒன்றுமில்லாததாக்கிவிடும். ஒரு சில பக்கங்களுக்கு மேல் படிப்பது என்பதும் கடினம்.

குஜராத்தில் குழந்தைகள் மீது இரக்கமற்ற வன்முறையினை மதிப்பிட முயன்று விவரித்தவற்றை ஜனவரி 3, 2003-இல் ஃபிரண்ட்லைன் பத்திரிகை எடுத்துக்காட்டியது இவ்வாறு: எட்டு வயதான சதாம் எனும் சிறுவன் இந்தக் குழுவிடம் எவ்வாறு தாக்கினார்கள். பிறகு எனது தாயை நிர்வாணப்படுத் தினர் என்பதை உஸ்கோ நங்கா கர்தியர் என்று விளக்கினான்.

பெண்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட ஆய்வுக்குழுவில் ஒன்பது வயது சிறுவன் தானாக வந்து வன் புணர்ச்சி என்றால் என்ன என்று விளக்கினான் ப்லாத்கார் கா மத்லப் ஜட் அவ்ரத் கோநங்கா கர்தே ஹய்ன் அவுர் பிர் உசே ஜலா தேத்தே ஹய்ன் (வன்புணர்ச்சி என்பது பெண் ஒருத் தியை நிர்வாணப்படுத்தி எரிப்பது).

அந்த எழுத்தாளர் கூறுகிறார்: குழந்தையால் மட்டும் தான் இவ்வாறு சொல்ல முடியும். ஏனென்றால் இதுதான் மீண்டும், மீண்டும் நரோமா பாட்டியா வில் நடந்தது. பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு வன்புணர்ச்சி செய்யப் பெற்றுப் பின்னர் எரிக்கப் பெற்றனர். எரிப்பது என்பது வன்புணர்ச்சியின் ஓர் இன்றியமையாத பகுதியாக மாறியுள் ளது.

எனவே குஜராத் படுகொலையின் தொடக்கத்திலிருந்தே மோடி அரசும் உடந்தையாக இருந்துள்ளது. முதல மைச்சரோ மாநில அரசோ அல்லது அரசுத்துறைகளோ நடந்த நிகழ்வு களுக்குப் பொறுப்பாக்கப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை.

மாநில அரசின் பொறுப்பு மூடி மறைக் கப்பெற்றபோது மய்யத்தில் இருந்த வாஜ்பாய் அரசும், அதன் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் அமைதி காத்தன. அப்போதைய உள்துறை அமைச்சரான எல்.கே.அத்வானி தான் இந்த மூடிமறைக்கும் நிகழ்வின் முதன்மை மனிதர்.

2004-இல் தேர்தலுக்கு முன் பா.ஜ.க இந்தியா ஒளிர்கிறது எனும் பிரச் சாரத்தை முடுக்கி விட்டது. அந்தப் பிரச்சாரம் பயனற்றுப் போனது. 2009-இல் தேர்தலின் முன் அத்வானியை இரும்பு மனிதர் என முன்னிறுத்தி மேற்கொண்ட பிரச்சாரமும் எடுபடாமல் போயிற்று.

இப்போது 2014-ஆம் ஆண்டுத் தேர்தலை நரேந்திரமோடி விகாஷ் புருஷ் அதாவது வளர்ச்சிக்கான முன் மாதிரி என்று கூறப்பெறும் துடிப்பான குஜராத் குறித்துப் பேசிக்கொண் டிருக்கிறார்.

பி.ஜே.பி திட்டமிடப்பெற்ற ஊடகக் காட்சிகள், டுவிட்டர் பிரச்சாரங்கள் திரட்டி வரப்பெற்ற மக்கள் கூட்டங்கள் வாயிலாக மோடியை ஒரு ரட்சகர் என்று பேச்சாளர்களைக் கொண்டுக் அறி விக்கும் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற மக்கள் ஊதிப் பெரிதாக்கப் பெற்ற பலூனைக் காற்றைப் போகச்செய்து தொய்வடையச் செய்யக் காத்து இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/73849.html#ixzz2r59Hc1lT

தமிழ் ஓவியா said...

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுப்பு
அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழக மாணவரணியினரும் பங்கேற்பு

சென்னை, ஜன.21- சென்னை புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் செயல்பட இருக்கின்ற பல் நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் பேரா சிரியர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திசை மாற்றி, இடஒதுக்கீட்டை கொடுக்க மறுக்கும் அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து இன்று (21.1.2014) காலை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாணவரணி தோழர் தோழியர்களும் பெரும் திரளாக பங்கேற்றனர்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்டு நடைபெற்று வந்த சட்டப்பேரவைக் கட்டடத்தில், அ.தி.மு.க. அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், மூத்த ஆலோசகர்கள், பதிவா ளர்கள், நிலைய மருத்துவர்கள் ஆகியோருக்கான 83 இடங்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்றும்,

இந்தியா முழுவதிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஒப்பந்த அடிப் படையில் நியமனம் என்றும், தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சமதகுதி உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை விட, ஒன்றரை மடங்கு, இருமடங்கு அதிகம் என்றும், தமிழ்நாடு மருத்துவத்துறை பணி நியமன அமைப்பின் மூலம் விளம்பரம் செய்துள்ளது.

இந்தியாவிற்கே வழிகாட்டும் தந்தை பெரியார் மண்ணாம், சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்காக ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வி கற்கும் உரிமையையும், வேலைவாய்ப்பையும், இனமான தலைவர்களால் காலம் எல்லாம் போராடிப் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டை, தற்போது உயர்தரம் எனும் போலியான போர்வையில் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் அ.தி.மு.க. அரசின் இச் செயலைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், மற்றும் மற்ற கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (21.1.2014) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணியளவில் தி.மு.க. மாணவரணி சார்பில், இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாணவரணி தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தி.மு. கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட தி.மு. கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், குத்தாலம் க.அன்பழகன், கோவை கணேசுகுமார், பூவை சி.ஜெரால்டு, க.மகிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் இள.புகழேந்தி அவர்கள் இக்கண்டன ஆர்ப்பாட்ட தலைமையுரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஒலி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

இட ஒதுக்கீடுக்கு எதிரான தமிழக அரசினைக் கண்டித்து தி.மு.க., தி.க., மாணவரணியினர் போராட்டம்

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திராவிடர் கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாஸ், செல்வேந்திரன், கார்வேந்தன், தளபதி. வடசென்னை தோழர்கள் மரகதமணி, தளபதி பாண்டியன், சுரேஷ், காரல்மார்க்ஸ், பி.ஞானசேகரன், லோகேஷ்குமார், தமிழ்குடிமகன், பிரபாகரன், சந்தீப்குமார், சுகுமார்.

தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், கு.ஆறுமுகம், கோ.நாத்திகன், கே.எம்.சிகாமணி, அ.கமலக்கண்ணன், ஆ.இர.சிவசாமி, ஓவியச்செல்வன், பொழிசைக் கண்ணன், காரப்பாக்கம் இளவரசன், கார்த்திக், மாது, ஓட்டுநர் வேல்முருகன்.

திராவிடர் கழக சென்னை மண்டலச் செயலாளர் கும்மிடிப்பூண்டி பன்னீர்செல்வம், சோழவரம் சக்கரவர்த்தி, மல்லிகார்சுனா.

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக மாணவரணி தோழர்கள், அர்ஜூன், மு.அருண்குமார், இ.இரவிச் சந்திரன், அ.அரவிந்தன், அ.பிரபாகரன், ர.சந்திரன், க.சரவணன், க.காளிதாஸ் மற்றும் திராவிடர் கழக மாணவரணி தோழர் - தோழியர்கள் திரளாக இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/73869.html#ixzz2r59ff6bz

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் விழா


பெரியார் கண்ட வாழ்வியல் தொலைநோக்கானது சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் பெருமிதம்

மு.ஜஹாங்கீர் அவர்களுக்கு மன்றத்தின் பொருளாளர் நா.மாறன் சிறப்பு செய்தார்.

பெரியார் கண்ட வாழ்வியல் விழாவை சனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் Farrer Park MRT அருகில் உள்ள சிவில் சர்வீஸ் கிளப்பில் பெரியார் சமூக சேவை மன்றம் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நியமன நாடாளு மன்ற உறுப்பினர் இரா.தினகரன், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் துணை இயக்குநர் முனைவர் க.அன்பழகன் மற்றும் சிங்கப்பூர் புதியநிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

சிங்கப்பூர் தேசிய கவிஞர் கவிஞரேறு அமல தாசன் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டி பெரியார் விருது வழங்கி கவுரவிக்கபட்டார்.

மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகள் 2013இல் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் அவர்கள் பரிசளித்து பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் அவர்களுக்கு மன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் சிறப்பு செய்தார்.

தமிழ் ஓவியா said...


விழாவில் சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய பெரியார் பணி என்ற விழா மலரை இரா.தினகரன் வெளியிட சிங்கப்பூர் புதியநிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் பெற்றுக் கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விழா மலரை நன்கொடை அளித்து பெற்றுக்கொண்டார்கள்.

விழா தொடங்கியவுடன் பெரியார் பற்றியும் பெரியார் சமூக சேவை மன்றத்தின் பணிகளை பற்றிய ஓளிப்படங்களுடன் கூடிய காணொளி ஓளிப்பரப்பப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளரின் தொடக்க உரை

தமிழர்களிடத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை கூடாது சமத்துவமாக வாழவேண் டும் என்று கூறி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்! ஏன், எதற்கு, எப்படி? என்று சிந்திப்பதுதான் பகுத்தறிவு அதுதான் மனிதனுடைய ஆறாம் அறிவு என்று எளிமையாகசொன்னவர்.

ஆண், பெண் பேதம் கூடாது, என்று பெண்கள் சமஉரிமை பெறபோராடி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மனிதநேயம் மலர வேண்டும் என்று விரும்பி 95 ஆண்டு காலம் உழைத்தவர்.

தனது வாழ்நாள் முழுவதையும் மனித நேயத்திற் காகவும், தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துச் சமூகத்தில் பெரும் புரட்சியையும், மறு மலர்ச்சி யையும் ஏற்படுத்தியவர். யார்அவர்? அவர்தான் பெரியார்!!

முனைவர் க.அன்பழகன் அவர்களுக்கு மன்றத்தின் துணைத் தலைவர் மூ.மதியரசன் சிறப்பு செய்தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தமிழரின் வாழ்நிலையை.... அரை நூற்றாண்டு கால உழைப்பால் மாற்றியமைத்து, ஏற்றம் பெற வைத்த 20ஆம் நூற்றாண்டின் மகத்தான மனிதநேய சிந்தனையாளர்.

அவரின் பெயரில் நடைபெறும் விழாவில் இன்று நாம்இருக்கிறோம் எதற்காக பெரியாருக்கு பெருமை சேர்க்கவா? இல்லை இல்லை.

பெரியாரை பின்பற்றி நாம் பெருமைபெற, வாழ்வியலில் நாம் ஏற்றம்பெற, பலவாழ்வியல் சிந்தனைகளை தெரிந்துக்கொள்ள என்று கூறி விழாவை நல்லதொரு அறிமுகத்துடன் தொடங் கினார் நிகழ்ச்சி நெறியாளர் க.பூபாலன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலை மாணவிகள் இனியநிலா - பவதாரணி இணைந்து பாடினர்.

அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் நா.மாறன் தன்னுடைய உரையில் பெரியார் கொள்கையுடன் வாழ்ந்த என்தந்தை நாகரத்தினம் அவர்களும் மலையரசி அவர்களின் தந்தை முருகு. சீனிவாசன் அவர்களும், மதியரசன் அவர்களின் தந்தை சு.தே.மூர்த்தி அவர்களும் எங்களை பல பொது நிகழ்வுகளுக்கு அழைத்து சென்று பெரியா ரின் கருத்துகளை, மனிதநேய சிந்தனைகளை தெரிந்து கொள்வதற்கு வழிவகை செய்து, தமிழ்மொழி உணர்வுடன் வளர்வதற்கு வாழ்வியலை அமைத்துக் கொடுத்தார்கள். அந்தஉணர்வுடன் எங்களால் முடிந்த அளவுக்கு பொதுப் பணிகளில் ஈடுபட்டு செயல்படுகிறோம்.

அதேபோன்று உங்களுடைய பிள்ளைகளையும் முடிந்தவரை பொதுநிகழ்வுகளுக்கு அழைத்து வாருங்கள் அது அவர்களுக்கு நல்ல அனுபவங் களையும், நல்ல பொதுசிந்தனைகளை ஊக்குவித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மையாக அமைவதற்கு ஒரு வாய்ப்பாகும் என்றுகூறி அனைவரையும் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடலுக்கு மாணவிகள் சிறீ வைஷ்ணவதேவி, சிறீ விசாலாட்சிதேவியும் நடனமாடினார்கள்.

விழாவை தலைமை தாங்கி நடத்திய பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் தலைமையுரையில் மன்றத்தின் பணிகளை தொகுத்து கூறி, அதற்கு ஆதரவு கொடுக்கும் மக்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து, பெரியாரின் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

பரிசளிப்பு

தொடர்ந்து மன்றத்தின் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ் மொழி போட்டிகள் 2013இல் வெற்றி பெற்ற மாண வர்களின் பெயர்களை தொழில் நுட்பகல்லூரி மாணவி குந்தவி அழைக்க, மாணவர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் அவர்கள் வழங்கினார்.

தமிழ் ஓவியா said...

சிறப்பு விருந்தினர் உரை விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் சிறப்பு விருந்தினர்நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் அவர்களுக்கும் இவ்விழாவுக்கும் இரு சிறப்பான பொருத்தங்கள் விழாவின் நாயகரான தந்தை பெரியாரின் பெயர் ஈ.வெ.ராமசாமி, சிறப்பு விருந்தினரின் முழுப் பெயரோ இராமசாமி தினகரன். (கைதட்டல்) பெயர் மட்டும் பொருத்தமல்ல அவரின் செயலும் தான், இரா.தின கரன் அவர்கள் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை பற்றிய வெள்ளை அறிக்கை பற்றி பேசும் போது சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்பட்டபோது இருந்த சிங்கப்பூர் தமிழர்களின் எண்ணிக்கை விகிதம் கட்டிக்காக்கப்படவேண்டும் என்று சமூக நோக்குடன், தொலை நோக்கு பார்வை யுடன், சிங்கப்பூர் அரசிடம் கேட்டுக்கொண்டார். அதில் மேலும் ஒரு சிறப்பு நாடாளுமன்றத்தில் தமிழிலேயே உரையாற்றினார். (கைதட்டல்).

கவிஞரேறு அமலதாசன் அவர்களுக்கு சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் பெரியார் விருதை வழங்கி சிறப்பு செய்தார். உடன் வீ.கலைச்செல்வம், க.அன்பழகன், மு.ஜஹாங்கீர் உள்ளனர்.

தந்தை பெரியார் சமூகநீதிக்கொள்கையுடையவர், ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர். அதே போன்று இரா.தினகரன் அவர்கள் சமூக நோக்குடன், தொலை நோக்கு பார்வையுடன் செயலாற்றுகிறார் என்று கூறிநிகழ்ச்சி நெறியாளர்திரு இரா.தினகரன் அவர்களை சிறப்பு விருந்தினர் உரை வழங்க அழைத்த போது அனைவரும் கைத்தட்டி வரவேற்றார்கள்.

அவரது உரை வருமாறு:

தமிழ்ச் சான்றோர்கள் பல பேர் இந்த மழை நேரத்திலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூரில் என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அறிவதில் மிக வும் ஆர்வம் கொண்டேன்.

பெரியார் அவர்கள் தமிழகத்தில், தமிழக மக் களுக்காக ஏராளமான புரட்சிக் கருத்துக்களை யெல்லாம் எடுத்துரைத்து, இன்றைய தினம் தமிழ கத்தில் இருந்த ஏராளமான மூடநம்பிக்கைகளை தமிழ் மக்களிடத்திலிருந்து அகற்றுவதற்கு முழு முதற் காரணமாக வாழ்ந்திருக்கிறார்.

பெரியார் தோன்றிய காலத்தில், அவருடைய பெற்றோர் செல்வந்தராக இருந்திருக்கிறார்கள். அவர் நன்கு படித்து, பிறகு தொழிலதிபராக வாழ்ந்திருக்கிறார். அதற்குப் பின், ஈரோட்டு நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

செல்வந்தராகவும், வசதி வாய்ப்புகள் படைத்தவ ராக இருந்தவர், எதற்காக இதுபோன்ற புரட்சியான கருத்துகளையெல்லாம் மக்களிடையே திணித்து, போராட்டங்களை நடத்தி இருக்கிறார் என்றால், நிச்சயமாக தமிழ் மக்கள்மீது கொண்ட பற்று காரணமாகவும், தமிழ்ச் சமுதாயம் வளரவேண்டும் என்றும், ஒரு ஆழமான நம்பிக்கை அவர் மனதில் பதிந்திருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? எது தூண்டுகோலாக இருந்திருக்கிறது?

பெரியார் பணி விழா சிறப்பு மலரை இரா.தினகரன் வெளியிட மு.ஜஹாங்கீர் பெற்றுக் கொண்டார்

அவருடைய வாழ்வில் ஏற்பட்ட அனுபவங் களால், நிகழ்ச்சிகளால் உந்தப்பட்ட ஒரு எழுச்சி யால்தான் அவர் மனதில் இது தோன்றியிருக்கக் கூடும் என்று நான் அறிகிறேன்.

குறிப்பாக, இந்துக்கள் எல்லாம் காசிக்குச் சென்று, ராமேஸ்வரம் சென்றுவந்தால், எல்லா புண் ணியங்களும் கிடைக்கும் என்று நினைப்பார்கள்.

பெரியார் எதிர்த்திருக்கிறார்

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றில், காசிக்குச் சென்றபொழுதுதான், அவருக்கு ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டதாக நான் அறிகிறேன். காசியில் உள்ள உணவு கொடுக்கக்கூடிய ஒரு சத்திரத்தில் அவரை உள்ளே நுழையவிடவில்லை. காரணம், அவருடைய கூர்மையான மீசை. தோற்றத் திலும் செழிப்பான, வெண்மையான தோற்றத்தை உடையவராக இருந்தாலும், பெரியாரை அந்த சத்திரத்தில் நுழைய அனுமதிக்கவில்லை. பெரி யாருக்கோ பசி, உணவு கிடைக்கவில்லை.

அதற்கு என்ன காரணம்? மக்களை வேறுபடுத்தி, ஒரு சிலரை வெவ்வேறாக நடத்துகின்ற அந்த மனப்பாங்கை பெரியார் எதிர்த்திருக்கிறார். அதனை உணர்ந்து, இது தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக, ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் என்னென்ன செய்தி இருக்கிறார்கள் என்பதைப் படித்துப் பார்த்தேன். சிலவற்றை மட்டும் நான் அறிந்துகொண்டேன். இங்கே பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் கேட்டு, இன்னும் சிலவற்றை நான் அறிந்து கொண் டேன். பெரியார் அவர்கள் மற்ற மனிதரை மதிக்கத் தெரிந்தவர் என்பதை விளக்கமாகக் கூறினார்.

மற்றவர்களின் உணர்வினைப் புரிந்தவர் பெரியார்

திரு.வி.க. கடவுள் பக்தி உள்ளவர் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. திரு.வி.க. அவர்கள் பெரி யாருடைய வீட்டில் தங்கியிருந்தபொழுது, காலை யில் எழுந்தவுடன், திரு.வி.க. அவர்கள் ஆண்டவன் தரிசனம் செய்து, பூஜை செய்வதைத்தான் வழக்கமா கக் கொண்டவர். பெரியார் அவர்கள், திரு.வி.க. அவர்கள் எந்தக் கடவுளை வழிபடுவாரோ, அந்தக் கடவுளின் படத்தை வைத்து, பூஜைக்குத் தேவை யான எல்லாப் பொருள்களையும் வைத்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் உரையாற்றினார்.

அவ ருடைய பூஜைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் திரு.வி.க. அவர்கள் பூஜை செய்வதற்கு, தந்தை பெரியார் அவர்கள் ஏற்பாட்டினை செய் திருந் தார்கள் என்பதை நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் அன்பழகன் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

இதனைக் கேட்கின்றபொழுது, தன்னுடைய கருத்துக்கு மாறுபட்டு இருந்தாலும், அடுத்தவரின் மனது புண்படும்படியாக நடக்கக்கூடாது என்ப தைத்தான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்து கிறது. பகுத்தறிவு என்பது என்ன? மனிதன் ஒருவன் தான் பகுத்தறியக்கூடிய ஆறாவது அறிவினைப் பெற்றிருக்கிறான். எதைச் செய்தாலும், அதனை எதற்காகச் செய்கிறோம் என்பதை ஆராய்வதற்கா கத்தான் ஆறாவது அறிவாகும்.

மற்றவர்கள் செய்கிறார்கள், அதனால் அதனை நான் செய்கிறேன் என்பதுதான் மூட நம்பிக்கை.

வேறுபடுத்துவது என்பது மிகவும் கொடுமையானது

பிறப்பால் நாம் எல்லாரும் ஒன்றுபட்டவர்கள்; அதில் வேறுபாடில்லை. தான் எந்தக் குலத்தில் பிறந்தோம்; வசதி வாய்ப்புகள் படைத்த குடும்பத்தில் பிறந்திருக்கிறோமா, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்திருக்கிறோமா என்றெல்லாம் பார்க்க வேண் டியதில்லை. எல்லோரும் சமமாகப் பிறந்தவர்கள். அவர்களை வேறுபடுத்துவது என்பது மிகவும் கொடுமையானது.

ஆண் ஜாதி, பெண் ஜாதி என்பதைத் தவிர வேறொரு ஜாதியில்லை. நாம் எல்லோரும் ஒரு குலம் என்கிற கோட்பாட்டினை தந்தை பெரியார் அவர்கள் படைத்தார். சிங்கப்பூரைப் பொறுத்த வரையில், 1929 இல் ஈப்போவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றியிருக்கிறார்.

மாணவிகள் சிறீ வைஷ்ணவதேவி, சிறீ விசாலாட்சிதேவியும் நடனமாடினார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேலாக மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அவர் இங்குள்ள மக்களைச் சந்தித்து, பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். இரண்டாவது முறையாக, 1954 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார். அய்ரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். உலக நாடுகளில் எப்படி, என்னென்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார். அப்பொழுதுதான், தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாட்டில் ஏராளமான மூட நம்பிக்கைகளும், விஞ்ஞானத்திற்கு அப்பாற் பட்ட நடைமுறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டு, கோபமுற்று, எழுச்சியுற்று அதனையெல் லாம் மாற்றவேண்டும் என்று ஒரு முனைப்போடு செயல்பட்டிருக்கிறார்.

பெரியார் அவர்களை அன்போடு வரவேற்றார்கள்

தமிழ் ஓவியா said...


மலேசியா, சிங்கப்பூருக்குப் பெரியார் அவர்கள் வந்தபொழுது, பினாங்கு என்ற ஒரு சிறிய நகரத்தில் 50 ஆயிரம் பேர் பெரியாரை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள் என்பதை நான் அறிந்தேன். அதனைப் பார்க்கும்பொழுது, தந்தை பெரியார் அவர்களிடத்தில் தமிழர்களுக்கு ஒரு ஈர்ப்புத்தன்மை இருந்திருக்கிறது. அதனால்தான், அவரைச் சந்திப்பதற்கும், அவரின் உரையைக் கேட்பதற்கும் பெரியார் அவர்களை அன்போடு வரவேற்று இருக்கிறார்கள்.

அதற்குப் பின்னால், ஈப்போவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் மிகச் சிறப்பாக தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஊர் ஊராகச் சென்று, மக்களைச் சந்தித்து அவர்களுக் கெல்லாம் அளித்த ஆலோசனைகளை வழங்கியிருக் கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், நீங்கள் எல்லாம் இந்த நாட்டில் தொண்டு செய்ய வந்திருக்கிறீர்கள்; இந்த நாட்டினுடைய சட்டத் திட்டத்திற்கு உட் பட்டு, நீங்கள் எல்லாம் இந்த நாட்டினுடைய குடியுரிமை பெற்று, இந்த நாட்டினுடைய வளர்ச் சிக்காக, உங்களுடைய குழந்தைகளுக்கெல்லாம் நல்ல கல்வி கற்றுக் கொடுத்து, இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக நீங்கள் ஒத்துழைத்து, இந்த நாட்டோடு ஒன்று சேர்ந்து சிறப்பாக வாழுங்கள், முன்னேறுங்கள் என்றுதான் சொல்லி சென்றிருக் கிறார்.

சிறப்பு விருந்தினர் சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் அவர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்மொழி போட்டிகள் 2013இல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளைப்பற்றி அதிகமாக இங்கே சொல்லத் தேவையில்லை என்பதனால், அதனையெல்லாம் சொல்லாமல் சென்றிருக்கலாம். இன்றைய தினம் இருக்கக்கூடிய சிங்கப்பூரின் நகரத்தினை தந்தை பெரியார் அவர் கள் வந்து பார்ப்பாரேயானால், நிச்சயமாக மட் டற்ற மகிழ்ச்சியடைவார். காரணம் என்னவென்றால், தமிழர்களிடத்தில் மட்டுமல்லாமல், இங்கே ஜாதி களின் அடிப்படையில் எந்த ஒரு சலுகைகளையும் கொடுப்பதில்லை.

அரசாங்கமும் கொடுப்பதில்லை, மற்றவர்களும் கொடுப்பதில்லை. இங்கே மிலிட்டா கரசி என்று சொல்லக்கூடிய திறமைக்குத்தான் மதிப் பிருக்கிறது. அதே சமயத்தில், ஒருவர் வசதி குறைவாக இருந்தாலும், அவருடைய முழு திறமைகளையும் வெளிக்கொணர, படிப்பதற்கு, கல்வி கற்பதற்கு, பள்ளிக்கூடம் முதல், பல்கலைக் கழகம் வரை படிப்பதற்கும், படித்தபின் யார் திறமையானவர் களாக இருக்கிறார்களோ, நல்ல தகுதியான வேலை வாய்ப்பும், யார் திறமையானவர்களாக இருக்கி றார்களோ, அவர்களுக்கு எந்நேரமும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் விதவைத் திருமணம்

நமது சிங்கப்பூரில், பல இன, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருக்கக்கூடிய நாடு. பல மதங்களைப் பின்பற்றக்கூடியவர்கள் இருக்கக் கூடிய நாடு. இருந்தாலும், அதையெல்லாம் மீறி, இன்றைய தினம், கலப்புத் திருமணங்கள் ஏராள மாக நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் மொழியை யும் தாண்டி, நம்முடைய மதத்தையும் தாண்டி, அதற்கு மேலாகச் சொல்லப்போனால், இனத்தையும் தாண்டி, திருமணம் செய்யக்கூடிய ஒரு நிலை சிங்கப்பூரில் இருக்கிறது.

பெண்ணடிமை பற்றி, தந்தை பெரியார் அவர்கள் ஏராளமாக உரையாற்றியிருக்கிறார். அவர் அப்படி பேசவில்லையென்றால், தமிழகத்தில் பெண்கள் இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது.

பெண்ணடிமையை முழுக்க முழுக்க தந்தை பெரியார் அவர்கள் வெறுத்திருக்கிறார். சொற் பொழிவுகளையும், எழுச்சியான கருத்துகளையும் முன்வைத்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


ஆகவேதான், இன்றைய தினம் உலக நாடுகளில் பேசப்படுவதெல்லாம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, எங்கே, நாடாளுமன்றம்வரை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற அளவிற்கு அதனுடைய முக்கியத்துவம் நாளடைவில் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

இன்றைய தினம் நமது சிங்கப்பூரில்கூட, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நம்முடைய அமைச்சரி டம் ஒருவர் கேள்வி கேட்டார், பெண்களுக்கு என்னென்ன சிறப்புகளைச் செய்திருக்கிறீர்கள் என்று.

அப்பொழுது அமைச்சர் அவர்கள் பதில் கூறுகையில், இன்றைய தினம், இந்த நாடாளுமன் றத்தில், எத்தனை பெண்மணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிங்கப்பூரில் இருக்கிறார்கள், எத்தனை பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கோடிட்டுக் காட்டினார். அதுமட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களில், பெண்கள், தலைமை நிர்வாகியாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தானோ, பெரியார் விருதினை முதன்முதலில், ஒரு பெண்ணுக்கு மதிப்பிற்குரிய புஷ்பலதா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

பெண்களை அடிமைப்படுத்திய காலம் மாறி, தமிழ் மக்களிடத்தில், பெண்களுக்கு சம உரிமை கொடுக்கக் கூடிய காலமாக இன்றைய காலகட்டம் மாறியிருக்கிறது.

நாம் பெருமைக்கு வேண்டுமானால், தாய் நாடு, தாய் மண், தாய்மொழி என்று சொன்னாலும், நடைமுறையில் இல்லை என்பதை பெரியார் அவர்கள் முழுக்க முழுக்குப் புரிந்து, தெரிந்து இன்றைய தினம் மாற்றியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் இருந்திருந்தால், பார்த்திருந்தால் நிச்சயமாக அவர் மகிழ்ச்சியடைவார்.

அடுத்ததாக, பெண்ணைப் பற்றி பேசும்பொழுது, இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார்.

அதாவது, பெண்கள் விதவையாகிவிட்டால், அவர்களை மாற்றுத் திருமணம் செய்வதற்கு அனுமதிக்காத இருந்த காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் அது தவறு என்று சொல்லி, விதவைகள் திருமணம் செய்துகொள்ள நம்மால் முடிந்த ஆதரவினைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிய கருத்துகள் எல்லாம், விதவைத் திருமணம் என்பது சிங்கப்பூரில் இப்பொழுது ஒரு சாதாரணமாக ஒரு நிகழ்வாக இருக்கிறது. நம்முடைய இளைஞர்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்த அளவிற்கு வளர்ந்துவிட்ட சமுதாயமாக இருக்கின்ற காரணத்தினால், இன்றைய தினம் பெரியார், கண்ட வாழ்வியல் என்று சொல்லும் பொழுது, அவர் தமிழகத்தைப்பற்றித்தான் வேத னையோடு சொல்லியிருக்கிறார். இன்றைய தினம் சிங்கப்பூரைப் பார்த்திருந்தால், நம் தமிழ் மக்களின் நிலைமையைப் பார்த்திருந்தால், நிச்சயமாக அவர் மனதாரப் பாராட்டியிருப்பார்.

இன்னும் ஒரு 10 ஆண்டுகள் கிடைத்தால்....

எதற்காக இதனை கூறுகிறேன் என்றால், அவருடைய 90 ஆவது வயதில், தமிழகத்திலுள்ள திருச்சி நகரத்தில் உரையாற்றும்பொழுது, எனக்கு இன்னும் ஒரு 10 ஆண்டுகள் கிடைத்தால், நான் செய்யப்போவது என்னவென்றால், தமிழகத்தி லுள்ள இந்தப் பெண்ணடிமையை முழுக்க முழுக்க ஒழிக்கவேண்டும்; அடுத்ததாக, பெண்கள் விதவைத் திருமணங்களை வரவேற்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஜாதியை ஒழிக்கவேண்டும். இந்த மூன்றையும் அடுத்த பத்தாண்டுகளில் நான் தொடர்ந்து செய்ய ஆசைப் படுகிறேன். ஆனால், என்னுடைய உடல்நிலை சரியில்லை என்று சொன்னார். பெரியார் போன்ற தலைவர்கள் எல்லாம் வயது மூப்படைய, அடைய அவர்களுடைய சிந்தனைகள் எல்லாம் சமுதாயச் சிந்தனைகளாகத்தான் இருக்கின்றன.

நமது சிங்கப்பூரில் இருக்கக்கூடிய லீகுவான்யூ அவர்கள், அதாவது நமது தேசத் தந்தை என்ன சொன்னார் என்றால், அவர்களின் 90 ஆவது பிறந்த நாள் விழாவினை நாங்கள் கொண்டாடியபொழுது, நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் நடை பெற்ற விழாவில் அவர் உரையாற்றும்பொழுது, அவருடைய தொன்மையான குரலில் அவர் என்ன சொன்னார் என்றால்,

இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும், இந்த நாட்டிற்கு என்றென்றும் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்து, இந்த நாட்டை இன்று இருப்பது போல், என்றென்றும் எடுத்துச் செல்கின்ற கடமை உங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது; இந்த நேரத்தில் அதனை நான் ஞாபகப்படுத்துகிறேன். நீங்கள் அனைவரும் அதற்காகப் பாடுபடவேண்டும் என்று அவருடைய பிறந்த நாளில், அங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் அவர் ஞாபகப்படுத்தினார்.

அதேபோலத்தான், தந்தை பெரியார் அவர்கள் அவருடைய 90 ஆம் வயதிலும் சமுதாயச் சிந்தனையைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

நான்காம், அய்ந்தாம் பரிசுகள்...

ஆகவே, நமக்கெல்லாம் என்ன தெரிகிறது என்றால், இளைஞர்களாக இருக்கின்றபொழுது பல விஷயங்கள் புரிவதில்லை. பிற்காலத்தில்தான் புரி கிறது. ஆகவே, நமது இளைஞர்களுக்கு, இளமை யாக இருக்கின்றபொழுதே, நல்ல சமுதாயச் சிந்தனை களைத் தூண்டுவதற்காகவும்,

இந்த பெரியார் சமூக சேவை மன்றம் குழந்தைகளுக்குத் தமிழில் ஆர்வங் களை ஊட்டி, ஏராளமான போட்டிகளை நடத்தி, மற்ற இடங்களில் நடைபெறும் போட்டிகளில் மூன்று பரிசுகளைத்தான் கொடுப்பார்கள். ஆனால், இங்கே நான்காம், அய்ந்தாம் பரிசுகளையும் கொடுத் தார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன். அது மட்டுமல்லாமல், இரண்டு பேர்களுக்கு சில பரிசு களைக் கொடுத்தார்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் சேவைகள்...

தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் படிக்க, கற்க, கட்டுரையை எழுத, பேச, கவிதை எழுத அவர்களை இளமையிலே நல்ல சிந்தனையைத் தூண்டுவதற்காகவும், அதுமட்டுமல்லாமல், மனிதநேயத்துடன் இங்கே இருக்கக்கூடிய முதியவர்கள், மனநோய் வாய்ப்பட்டவர்களை ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த அமைப்பினை நான் பாராட்டுகிறேன். ஏனென்று கேட்டால்,

சிங்கப்பூரில் ஏராளமான செல்வந்தர்கள் இருந்தாலும், நாம் நம்மைவிட கீழே இருக்கக்கூடியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறுவதற்கு முன், அடுத்ததாக, இந்தப் பெரியார் விருதினைப் பெற காத்திருக்கின்ற கவிஞரேறு அமலதாசன் அவர்களை மனதாரப் பாராட்டி, மென்மேலும் அவர்களுடைய சேவை தொடரவேண்டும் என்று கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்! நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் சிறப்புரை வழங்கியதை அனைவரும் பாராட்டி வரவேற்றார்கள்.

பெரியார் விருது

ஆரம்பகால சிங்கப்பூரில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களுடன் இணைந்து பணி யாற்றியவரும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவராக சுமார் 18 ஆண்டுகள் இருந்து வழி நடந்தி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய கவிஞரேறு அமலதாசன் பற்றிய சிறப்புகளை மன்றத்தின் பொறுப்பாளர் திருமதிதமிழ்செல்வி எடுத்துக்கூறி கவிஞரேறு அமலதாசன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்படுவதை அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கவிஞரேறு அமலதாசன் அவர்களுக்கு முனைவர். க.அன்பழகன் பொன் னாடை போற்றி சிறப்பு செய்ய, நியமன நாடாளு மன்ற உறுப்பினர் திருஇரா.தினகரன் அவர்கள் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். பெரியார் பெருந்தொண்டர் முருகுசீனிவாசன்-குஞ்சம்மாள் குடும்பத்தின் சார்பாக வீ.கலைச்செல்வம் நிதி வழங்கி பாராட்டினார்.

பெரியார் விருது பெற்ற கவிஞரேறுஅமலதாசன் தனது ஏற்புரையில் தந்தை பெரியாரின் வருகையால் சிங்கப்பூர் தமிழர்களிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது தமிழ்வேள் கோ.சாரங்கபாணி, தமிழ் முரசு ஆசிரியராக இருந்த வை.திருநாவுக்கரசு, மூருகு.சீனிவாசன், சு.தெ.மூர்த்தி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து வந்தவர்கள், தந்தை பெரியாரின் தொண்டர்கள் என்று நினைவு கூர்ந்து அந்த காலங்களில் சிங்கப்பூர் தமிழர்களிடத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பெரியார் அவர்கள் தான் வித்தாக இருந்தார் என்று குறிப்பிட்டார்.

வாழ்த்துரை

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய பெரியார் பணி என்ற விழா மலரை திரு. இரா.தினகரன் வெளியீட சிங்கப்பூர் புதியநிலா ஆசிரியர்மு.ஜஹாங்கீர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரையில் தன்னுடைய கருத்துக்கு மாறுபட்ட சிந்தனை உடையவர்களையும் பெரியார் அவர்கள் மதித்து, உபசரிக்கும் பண்புடையவர் அதனால் தான் பெரியார் ஓர் ஈர்ப்பு சக்தியாக அனைவருக்கும் இருந்தார் என்று குறிப்பிட்டு அது போன்ற நல்ல பண்புகள், வாழ்வியல் தத்துவங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

பாடல்

தொடர்ச்சியாக உரை கேட்ட செவிகளுக்கு இனிமை சேர்க்கும் விதமாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலை மாணவிகள் இனியநிலா பவதாரணி இனைந்து சிறப்பாக பாடினார்கள்.

சிறப்புரை வழங்கிய பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய் யத்தின் துணை இயக்குனர் முனைவர் க.அன்பழகன் தன்னுடைய உரையில் பெரியாரின் வாழ்வியல் தத்துவங்களை, மனிதன் எப்படி வாழவேண்டும் என்று பெரியார் கூறியதை எளிமையாக எடுத்துக் கூறி விளக்கினார், மேலும் பாரதிதாசன் பாராட்டி யதை, யூனோஸ்கோ அமைப்பின் விருதை பற்றி குறிப்பிட்டு சுருக்கமாக பெரியாரின் மனிதநேய சிந்தனைகளை விளக்கி உரையாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இறுதியாக மன்றத்தின் பொருப்பாளர் ச.இராஜராஜன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கு வந்தவர்கள் பெரியார் விழாவை ஈராண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு பதில் ஆண்டுதோறும் நடத்துங்கள் என்று கூறி பாராட்டி விடைப்பெற்றார்கள்.

செய்தித் தொகுப்பு : க.பூபாலன், சிங்கப்பூர்.

Read more: http://viduthalai.in/page-8/73877.html#ixzz2r5AH0g5g

தமிழ் ஓவியா said...

அசுரர் (திராவிடர்) அழிப்புதான் தேவர் (ஆரியர்) வேலையா?

- கி.வீரமணி

தேவாசுர யுத்தம் என்று புராணங்களில் வருகின்றனவே அவைபற்றி தந்தை பெரியார் அவர்கள் தமது சுதந்திர சிந்தனை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்திப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள்.

தேவர் _அசுரர் போராட்டம் என்பது கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவரும் ஆரியர்_திராவிடர் போராட்டம் என்பதுதான்.

அக்காலத்தில் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்; இன்னும் பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைக்கப் படுகின்றனரல்லவா?

அசுரர்கள் என்றால் எளிதில் விளங்கிக் கொள்ள,

சுரபானத்தைக் குடித்தவர்கள்_சுரர்கள்

பூமியில் வாழுபவர்களுக்கு பூசுரர்கள் என்ற பெயர் உண்டு. புரட்சிக்கவிஞர் கவிதை வரிகளில்கூட

வான்சுரரை விட்டுவந்த பூசுரந்தம்... என்று வருகிறது.

சுரபானத்தைக் குடிக்காதவர்களுக்குப் பெயர் _ திராவிடர்களுக்கு _ அசுரர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு அசுரர் பெயரும் அசுரர் என்றே பெரும்பாலும் முடிகின்றதல்லவா? நரகாசுரன்

மகிழாசுரன்

அசுரேந்திரன் என்பவன் அசுரர்களுக்குத் தலைவன்.

அசுரேந்திரன் - 1.(அசு) அசுரத்தலைவன். கஜமுகாசுரன் பிறப்பதற்குக் காரணமானவன். 2.(அசு) தாருகன் குமரன். சூரனுக்குத் தனக்குற்ற துன்பமுணர்த்தி பிரமனால் அறுந்த கை வாரப் பெற்றவன். சூரபதுமனுக்குத் தந்தையின் மரணமுணர்த்தி யுத்தத்திற்கு அனுப்பியவன்.
தேவேந்திரன் - தேவர்களின் தலைவன்.

தமிழ் ஓவியா said...

அசுரர் யார்?

அசுரர் - சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் சகனத்திலுதித்து, அப்பிரமனைப் பெண்ணாக நினைத்து இச்சித்தமையால் அசுரராயினர். அமிர்த பான மொழிந்தவர்.
- அபிதானசிந்தாமணி, (பக்கம் 29), புதிய பதிப்பு.

புராணங்களில் _ இதிகாசங்களில் _ யுத்தம் என்பதே இந்த இரு சாராருக்கும்தான்!

இதில் உண்மையான பலம் பொருந்தியவர்கள் (கதைப்படி) அசுரர்களே.

தேவர்களைப் புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டியவர்கள். அவர்கள் சென்று மும்மூர்த்திகளிடம் முறையிட்டு அவர்களைத் துணைக்கழைத்து வந்து, சூழ்ச்சி, சூது, வாது முறைகளிலேயே இந்த அசுரர்களை (வீரத்தால் அல்ல) வீழ்த்தியவர்களாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

இரண்டு பிரபலமான கதைகளைச் சுட்டிக்காட்டினாலே போதுமானது.

பாற்கடலில் உள்ள மிகப்பெரிய விஷப் பாம்புகளைக் கண்டு பயந்து நடுங்கி, மஹாவிஷ்ணுவிடம் முறையிடுகின்றனர் தேவர்கள்.

தமிழ் ஓவியா said...

அந்த வாசுகி பாம்பை அடக்கி விஷத்தை _ எடுத்தபிறகு அதனுள் உள்ள அமுதத்தைப் பருகிடும் அரிய வாய்ப்புப் பெறலாம் என்ற ஆசையுடன் சென்றுகூற, தேவர்களும் அசுரர்களும் அப்பாம்போடு போராடுகிறார்களாம் _ கதைப்படி.

அசுரர்களுக்குத் தலைப்பக்கம் ஒதுக்கியும் தேவர்கள் வால்பக்கம் ஒதுக்கியும் (சூது, சூழ்ச்சி, புரிகிறதா?) ஒப்பந்தம், சரி பகுதி இருவருக்கும் என்பதே.

அதுவே நியாயமா? தலைப்பக்கம் உள்ளவனின் ஆபத்து, வால்பக்கம் உள்ளவனுக்கு உண்டா? இல்லை என்றாலும் அப்பாவி அசுரர்கள் போராடி அதனைக் கிழித்து, அமுதம் வெளியே வரச்செய்தனர்; செய்தபிறகு ஒப்பந்தப்படி 50 விழுக்காடு தர வென்ற தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) மனம் வரவில்லை. அவர்களை ஏமாற்றத் திட்டமிட்டு, விஷ்ணுவே இதற்குக் கர்த்தா! (அவன் யோக்கியதை எப்படி பார்த்தீர்களா?) மோகினி அவதாரம் எடுத்து, (பெரிதும் அசுரர்களை அழிக்க மோகினிகளே அந்நாள் முதல் இந்நாள் வரை பயன்படும் கருவிகள் போலும்!) ஒப்பந்தப்படி 50 விழுக்காடும் தராமல் மோகினியைக் காட்டி மயக்கி 100க்கு நூறு சதவிகிதத்தை (கல்வி, உத்தியோகங்களில் வகுப்புரிமை _ நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் வருவதற்கு முன்பிருந்ததுபோல) தாங்களே ஏகபோகமாக்கி அனுபவித்தனர்!

இதைவிட பெரும் சமூக அநீதி வேறு உண்டா? வைகுண்ட ஏகாதசி _ ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு என்ற பெயரில் பார்ப்பனத் திருக்கூட்டம் _ பூதேவர்கள் கூட்டம் உண்டு கொழுக்கிறது.

தூங்கும் கடவுளுக்கு ஆறுவேளை பூசையோடு, நைவேத்தியங்கள் _ பிரசாதங்கள் சாமி சாப்பிடுவதாகக் கணக்கெழுதி, தூங்கும் சாமியை திருப்பள்ளி எழுச்சி பாடி கிளப்பிக் கிளப்பிப் பார்ப்பது ஒருபுறமிருக்கட்டும்.

இதுபற்றி ஒரு நாளேடு, அர்த்தமற்ற இந்தப் புராணக் குப்பைகளை _ மூலையில் எறியாமல் மக்கள் மூளைக்கே ஏற்றிடும் அன்றாடத் திருப்பணிகளைச் செய்துவரும் ஏட்டில், திருமாலிடம் தோன்றிய ஏகாதசி என்ற தலைப்பில் 7-_1_2014இல் வந்துள்ள கதையைப் படித்தாலே, அசுரர் பலம் _ தேவர்_ஆரியர் பலம் தெளிவாக விளங்கும்.

முன்காலத்தில் முரன் என்ற அசுரன், தேவர்கள், ரிஷிகள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் நடத்திய யாகங்களை அழித்து மகிழ்ச்சியடைவான். மேலும் இந்திரனை வென்று, அவனை இந்திர லோகத்தில் இருந்து விரட்டியடித்தான். தேவலோகத்தில் இருந்த கற்பகவிருட்சம், காமதேனு போன்றவற்றைக் கவர்ந்து சென்று தன் இருப்பிடத்தில் வைத்துக்கொண்டான்.

முரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று, சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈசனோ, உங்கள் இன்னல்களைப் போக்கும் வல்லமை மகாவிஷ்ணுவிடமே இருக்கிறது. அனைவரும் அவரிடம் சென்று உங்கள் சங்கடங்களைத் தீர்த்து வைக்கச் சொல்லி வேண்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.

தமிழ் ஓவியா said...

இதையடுத்து தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணரைத் தரிசித்த தேவர்கள், தாங்கள் வந்த காரணத்தைக் கூறினர். சுவாமி! வெகு காலத்திற்கு முன்பு பிரம்மாவிடம் இருந்து தாளஜங்கன் என்ற பெரிய அரக்கன் தோன்றினான். அவனது மைந்தன் முரன் என்பவன், தேவலோகத்தை வதைத்து வருகிறான். தாங்கள் அருளிய சொர்க்கலோகத்தைத் தனதாக்கிக் கொண்டான். அஷ்டதிக்குப் பாலகர்களையும் விரட்டிவிட்டு, அந்தப் பதவியில் அரக்கர்களை நியமித்துவிட்டான். அவன் உலகை அழிப்பதற்குள் தாங்கள்தான் முரனை அழித்து உலகத்தைக் காத்தருள வேண்டும் என்றனர்.

திருமால், தேவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சங்கு சக்கரத்துடன் கருடன் மீது ஏறி முரனுடன் போரிடப் புறப்பட்டார். மகாவிஷ்ணுவுக்கும், முரனுக்கும் போர் மூண்டது. இருவரும் பல ஆயுதங்களைக் கொண்டு பலமாக மோதிக்கொண்டனர். யுத்தம் பல நாட்கள் நடந்தது. முரன் பெற்ற வரத்தால், திருமாலின் சக்கராயுதம், அவனைத் துன்புறுத்தியதே தவிர உயிரைப் பறிக்க முடியவில்லை.

யுத்தத்தால் களைப்படைந்த திருமால், விதரியாசிரமம் என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டார். முரன் திருமாலைத் தேடி, அங்கேயே வந்துவிட்டான். குகைக்குள் பள்ளிகொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, சூலாயுதப் படையை ஏவினான். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். திருமாலின் அபார சக்தியுடன் வெளிப்பட்ட அவள், வியக்கத்தக்க பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியவாறு போருக்கு ஆயத்தமானவள் போல நின்றாள்.

அந்தப் பெண்ணைக் கண்ட முரன், பெண்ணே! நீ என்னுடன் போர் புரியப் போகிறாயா? என்று கேட்டு ஏளனமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அடங்குவதற்குள், அந்தப் பெண் தன் ஆயுதத்தால் அவனை மண்ணில் சாய்த்திருந்தாள். சத்தம் கேட்டு சயனத்தில் இருந்து விழித்துக் கொண்ட திருமால், முரன் இறந்து கிடப்பதையும், அருகில் ஒரு பெண் நிற்பதையும் கண்டார்.

அந்தப் பெண்ணிடம் யார் நீ? என்று வினவினார். சுவாமி! நான் ஏகாதசி. உங்கள் கருத்தறிந்து, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்பட்டு முரனை அழித்தேன். இவை அனைத்தும் உங்கள் மகிமையே! என்று கூறினாள் அந்தப் பெண்.

மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, ஏகாதசிக்கு வரம் அளித்தார். நீ தோன்றிய இந்த நாளில் உபவாசம் இருந்து என்னை வழிபடுபவர்களுக்கு நான் சொர்க்கம் வழங்குவேன் என்று கூறினார்.

பெண்களை விட்டுத்தான் ஆரியம் _ தேவர்கள் _ தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டார்கள் என்பதன் மூலம் பெண்களையும் அல்லவா இழிவுபடுத்தி இருக்கின்றார்கள்?

பெண்களே, இதை நீங்கள் கண்டு வெகுண்டு எழவேண்டாமா?

இதை உணர்ந்துதான் வள்ளுவர் குறளில்,

தேவர் அனையர் கயவர் என்று தெளிவாகக் கூறினார். தேவர் என்பது ஆரியர்களையே!

அவர் காலத்தில் உலாவந்த புராணங்களையே அவர் உவமையாகக்கூட காட்டியுள்ளாரே!

இந்திரனே சாலும் கரி என்று முடியும் குறள் இதற்குப் போதிய சான்று அல்லவா?

எனவே, இன்றும் தேவாசுரப் போராட்டம் நீடித்துக்கொண்டே உள்ளது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரையில்கூட தேவாசுரப் போராட்டம் _ பார்ப்பனர்_அல்லாதார் போராட்டம்தானே சென்னை உயர் நீதிமன்றத்திலே வெடித்தது! முடியவில்லை... தொடர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

அய்யா இல்லாத வெற்றிடம்...!


- கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

தமிழ் ஓவியா said...

அவாளும் நம்மாளே?


- மதிமன்னன்

தமிழர்தம் மொழியையும் வாழ்வையும் கலையையும் அறிவையும் அழித்தது ஆரியமே. ஆரியத்தின் அழிம்புகளை ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டி எண்பித்தால் ஏற்க மறுத்திடும் ஏமாளிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கின்றனர். எதிர்த்தும் பேசி விதண்டாவாதம் செய்கின்றனர் பார்ப்பனர் திருந்திவிட்டனர் என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, அவரைத் தனித்துப் பிரித்துச் சுட்டக்கூடாது என்றும் அவாளும் நம்மாளே என்கின்றனர். பார்ப்பனரும் தமிழரே என்கின்றனர். எப்படியாம்?

பார்ப்பனர் திராவிட இனத்தவரா? தமிழர் திராவிட இனத்தவர். தமிழ்மொழி திராவிட மொழிகள் 40இல் ஒன்று. பார்ப்பனர் தமிழர் என்றால், ஆரியர் யார் என்ற வரையறை வேண்டாமா? ஆரியர் வந்தேறிகள் அல்லர் என்று ஆர்எஸ்.எஸ்சும் அவர்தம் பரிவாரங்களும் பேசத் தொடங்கி உள்ளனர். அப்படி என்றால், அவாள் ஏன் மொழியாலும் பழக்கவழக்கத்தாலும் வேறுபடுகின்றனர்? வேறெங்கும் போகவேண்டாம், பார்ப்பனர் தம்மைத் திராவிடர் என ஒப்புக்கொள்கின்றனரா? உடையால், பேச்சால், பழக்கவழக்கத்தால், வாழும் முறைகளால், வேறுபட்டுத்தானே காண்கின்றனர்?

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே எனக்கூறும் தொல்காப்பியம் (பொருள் 31) நான்குவர்ணப் பிரிவைச் சுட்டிக்காட்டுகிறது. ஓதுவதும் தூதுபோவதும் நால்வர்ணத்தாரில் உயர்ந்தோராகிய மன்னர்க்கும் பார்ப்பனர்க்கும் உரியது என்பதை அவற்றுள் ஓதலுந் தூதும் உயர்ந்தோர்மேன எனவும் தொல்காப்பியமே கூறுகிறது (பொருள் 28). பார்ப்பனர்க்குரிய புற அடையாளங்களைக்கூடக் கூறிடும் அந்த இலக்கண நூல், மெய்ப்பாடுகளின் எட்டு வகைகளையும் பாடல் 247இல் கூறுகிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று கூறுகிறது. அவாள் நவரசம் என ஒன்பதைக் கூறுகின்றனர். இந்த வேறுபாடு ஒருபுறம்.

அவாளின் தமிழ்ப் பேச்சு

முதல் மெய்ப்பாடாம் நகை (சிரிப்பு) என்பதை விளக்கும் வகையில் பாடல் 248 எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப்பட்ட நகை நான்கென்க எனக் கூறி நான்கு வகைகளில் சிரிப்புத் தோன்றும் என்கிறது. சிரிப்புக்கு இடமாகும் செய்கைகள் எவையெவை என்பதைச் சுட்டும்போது, ஆரியர் கூறும் தமிழின் கண்ணும் எனக் கூறுகிறது. பார்ப்பனர் பேசும் தமிழ் சிரிப்புக்கு இடமாகிறது என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இருந்து வரும் நிலை. 2014ஆம் ஆண்டிலாவது அந்நிலை மாறியிருக்கிறதா?

பாஷை, ஜலம், பிரசங்கம், உபன்யாசம், போஜனம், பரிகாரம், தர்மம், பரிகரித்தல், பகிஷ்காரம் என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் ஜெயேந்திர சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி போன்ற பார்ப்பனர் அனைவர்க்கும் பழக்கமாகவே உள்ளதே! இப்படிப் பேசியவரும், இப்படித்தான் பேச வேண்டும் எனத் தம் நண்பர்களாகிய பார்ப்பனரல்லாதாரை வற்புறுத்தியவரும் ஆன ஆள்தான் இங்கே தமிழ்த்தாத்தா! என்ன கொடுமை? இந்த அழகில் இவர்களும் தமிழர்களாம்!

தமிழ் ஓவியா said...

தமிழாக்குறிச்சி, தமிழ்ப்பாடி என்றெல்லாம் தம் ஊர்களுக்குப் பெயர் வைத்து மகிழ்ந்தனர் தமிழர். அவர்களின் ஊர்களை மாயவரம், (மயிலாடுதுறை) வேதாரண்யம் (மறைக்காடு), விருத்தாசலம் (முதுகுன்றம்) என்றெல்லாம் தம் வடமொழியில் மாற்றி வழங்கச் செய்து வருபவர்கள் பார்ப்பனர்கள்தானே! அவர்கள் தமிழர்களா?

நம் பண்பாட்டுக்கு மாறானோர்

சோறும் நீரும் விற்பனைக்கு உரியன அல்ல என்பது தமிழர் பண்பாடு. வறியவர்க்குச் சோறிடுவதும் ஊர்த் தொழிலாளர்க்கு இரவுச் சோறு தருவதும் தமிழர் பண்பாடு. இன்றளவும் இருந்து வருவதாகும். மாறாக, சோறு விற்கும் தொழிலைச் செய்துகொண்டும் அந்தக் கடைக்குத் தம் ஜாதிப் பெயரை வைத்துப் பீற்றுவதும் பார்ப்பனரின் வேலையாக உள்ளது. மனுதர்மப்படியே கூட சோறு விற்கக் கூடாது. இந்நிலையில் இவர்கள் தமிழர்களா?

மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் நாட்டின் வளமான பகுதிகளில் தங்கிக் கொண்டதோடல்லாமல் சுட்ட செங்கல்லால் வீடு கட்டிக் கொள்ளவும், மாடி வைத்துக் கட்டிக் கொள்ளவும் வீட்டில் குடிநீருக்காகத் தனித்தனிக் கிணறு வெட்டிக் கொள்ளவும் அரச அனுமதி பெற்று கட்டிக்கொண்டனர். அத்தகைய அனுமதியை மண்ணின் மக்களுக்கு வழங்க மறுத்தனர் அக்கால மன்னர்கள். அப்படி மன்னர்களை மயக்கி மந்தகாச வாழ்வு வாழ்ந்து வருபவர்கள் தமிழர்களா?

தமிழ் ஓவியா said...

தாய்மையைப் போற்றி, தாய் வழிச் சமூகத்தை வளர்த்தவர் தமிழர். வந்தவரான ஆரியர் தந்தை வழிச் சமூகமாக அதனை மாற்றி மகளிரைப் பண்டப் பொருளாக்கி விட்டனர். தாய்நாடு என நாம் சொன்னால் தந்தைநாடு என்பவர்கள் ஆரியர்கள். எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே என்றுதான் பார்ப்பன பாரதி பாடல் எழுதினான். இவர்கள் எப்படித் தமிழர் ஆவர்?

தமிழர் நாட்டில் 1834இல் தொடங்கப்பட்ட சென்னை உயர்நிலைப் பள்ளியில் (பின்னர் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இது முன்னோடி) 1855வரை தாழ்த்தப்பட்ட இன மாணவர் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பின்னர் அவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆங்கில அரசு அனுமதித்ததால், கல்விக்கழக மேலாண்மைக் குழுவிலிருந்து விலகியவர் பார்ப்பன உறுப்பினர் ஒருவர். மண்ணின் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் எப்படித் தமிழர் ஆவர்?

பார்ப்பனர் பலவகை

சங்க காலத்திலிருந்து இன்றுவரை பொருள் மாறாமல் வழக்கில் இருந்துவரும் சொற்கள் என இரண்டைக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். பரதவர்(மீனவர்), பார்ப்பனர் என்பனவே அவை. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல்காப்பியம்-_பொருள் 75) பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் (பாடல் 502) என்றும் தொல்காப்பியம் குறிப்பிடும். வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று (பாடல் 94) வரிகள் பார்ப்பனர் சங்கு அறுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. சங்கதனைக் கீறுகீறென அறுக்கும் கீரனோ என் பாட்டைப் பழுதென்பவன்? என்று சிவன் கேட்டதாக நாட்டார் பாடல் ஒன்று உண்டு. சிவன் எழுதி பார்ப்பனத் தருமிக்குக் கொடுத்த பாடலில் பொருள் குற்றம் கூறியமைக்காக நக்கீரனைப் பற்றிக் கூறிய சொற்களாம்.

தமிழ் ஓவியா said...

தூதொய் பார்ப்பான் எனக் கூறும் அகப்பாடல் (எண் 337) வரிகளால் அவாள் தூதுபோகும் தொழிலையும் செய்துள்ளனர். காதலன், காதலி இடையே தூதுபோகும் தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர்.

கர்நூல் மாவட்டம், கம்மம் வட்டத்தில் மாதங்கியை வழிபடும் பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளில் எருமைக்கறி சமைத்து மாதிகா இன மக்களுக்குப் பரிமாறுகின்றனர். மாதிகா ஜாதி ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி ஆகும். எருமைக் கறி விருந்து உண்ட மாதிகா ஜாதியினர் தம் வீட்டில் சமைத்த ஆட்டுக்கறியைப் பார்ப்பனர்க்குப் பரிமாறுகின்றனர். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழாவில் நடக்கிறது. (படிக்க: பண்பாட்டு அசைவுகள் _ ஆசிரியர் பேரா. தொ.பரமசிவம் _ காலச்சுவடு பதிப்பகம்). பார்ப்பனர் விலை குறைந்த மாட்டுக் கறியைத் தந்து விலை கூடிய ஆட்டுக் கறியைப் பெறுகின்றனர் என்பதையும் நோக்கலாம். ஆக, பார்ப்பனர்கள் இறைச்சி உணவுக்குப் பழகியவர்களே. சமணக் கொள்கையின் செல்வாக்கால் வெட்கப்பட்டு, கறி தின்பதை நிறுத்தியவர்கள். காலத்திற்கேற்ப வேசம் போடும் பார்ப்பனர்கள் தமிழர்களா?

நமது நிலை பற்றி பெரியார்

ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர்கள் மூவேந்தர் காலம் முதல் இன்றைய மூவர்ணக் கொடி காலம் வரையிலும் அரசர்களையும் அரசுகளையும் அடிவருடியும் அண்டிக் கிடந்தும் ஆதிக்கம் செலுத்திவருவது கண்கூடு. இதனை மனம் பொறாத தந்தை பெரியார் கொதித்துக் கேட்ட கேள்விதான் இவை!

தோழர்கள் ஆரியா எங்கே? சக்கரை எங்கே? வரதராஜூலு எங்கே? (திரு.வி.) கல்யாண சுந்தரம் எங்கே? பவானிசிங் எங்கே? தர்மலிங்கம் எங்கே? எல்லோரும் காங்கிரசு ஜாதிவிட்டு நீக்கப்பட்டாய் விட்டது. சிதம்பரம்பிள்ளை கதி என்ன ஆயிற்று? கள்ளு, சாராயம் குடித்துக் கொண்டு கஞ்சா, அபின் அடித்துக் கொண்டு திரிந்த ஒரு சுப்ரமணிய அய்யருக்கு பாரதி பட்டம் கொடுத்து இன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது... அவரைவிட யோக்கியமாக நாட்டுக்கு உழைத்த மற்ற குடும்பம் பல இன்று சோற்றுக்கு வழி இல்லாமல் திண்டாடுகின்றன என்று கேட்டார். (குடிஅரசு 6.6.1937).

இன்றைக்கும் இதே நிலைதானே! இன்றைய சூழலில் பெயர்களை மாற்றிப் பார்த்தாலும் நிலை ஒன்றேதானே!

அவர்களும் தமிழரே என்பவர்கள் இதனை உணரும் அறிவு பெற வேண்டாவா?

மேலாதிக்கம் ஒழிந்ததே
மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்து
வருணாச்சிர மமெனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
கொதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
எனப் பாடினார் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.

எல்லாமும் சாய்ந்தது, ஒழிந்தது, அழிந்தது, அடங்கியது, முடங்கியது என்று முடிந்துபோன நிலை கண்டு நாம் எக்காளம் எழுப்புவது எப்போது?

வேதமரபுக்கு எதிராகவும் விதைக்காது விளையும் கழனியாகவும் பார்ப்பனர்கள் இருந்ததை எதிர்த்தும் அவர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட வரி இல்லாத நிலங்களைத் திரும்பப் பெற்று மக்களிடம் ஒப்படைத்ததாலும்தானே, களப்பிரர் ஆண்டகாலத்தை இருண்ட காலம் என்று 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆசிரியர்கள் உள்பட பலரும் எழுதிவிட்டனர்!

இனி போடுவதற்கு வரியே கிடையாது என்று மக்களுக்கு வரி போட்டுக் கொடுமைப்படுத்தியவன் சோழன் ராஜராஜன். அவன் செய்த கொடுமைகளால் வேளாண் குடிகளுக்கும் வெட்டிக் குடிகளுக்கும் இடையே உறவு கெட்டது. இந்த இரண்டு வகைக் குடிகளுக்கும் கோவில்களுக்கும் இடையே உறவு கெட்டது. கோவிலின் ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக மகேந்திர சதுர்வேதிமங்கலம் கோவிலையே கொளுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டும்கூட சோழர்காலத்தைப் பொற்காலம் என்று எழுதுகிறார்கள். ஏன்?

களப்பிரர் காலத்தில் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டனர். இருண்டகாலம் என்று எழுதினர். சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் கொழுத்தனர். ஆகவே பொற்காலம் என்றனர். அவர்களது வாழ்நிலையை வைத்து வரலாற்றை எழுதுபவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் தமிழர்களா?

ஆரியர் சேர்க்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஆகாது என்றார் மறைமலை அடிகள். ஆண்ட தமிழில் ஆரியம் சேர்த்தார்

ஆயினும் தமிழர் நெறிகண்டு வேர்த்தார்

என பார்ப்பனரின் பண்பு பற்றிப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

ஆகவே அவர்கள் அற்ற நாம், திராவிடர் எனக் கூறினால்தான் கீர்த்தியால், அறத்தால் செழுமையால், வையப் போர்த் திறத்தால், இயற்கை புனைந்து ஓருயிர் நாம், நம் உயிர், இனம் திராவிடம் எனும் உணர்வு மேலோங்கினால்தான் மேலும் தாழ்வுறாமல் தப்பித்திட இயலும். மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்றிட இயலும்.

வந்தவர் வஞ்சகர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்

நாம் உணர்ந்தோம் அவரஞ்சி விழித்தார்

என்கிற நிலை நீடிக்க வேண்டும். செய்வோமா?.

தமிழ் ஓவியா said...

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்
உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய்! - பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ்உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகு தாய்! வளர்ப்புப் பாலே பயன்!நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுக உண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல் எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!





- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

ஊழ்

--------------கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?

ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!

என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?

சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!

இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.

அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

நன்றி : கலைஞரின் குறளோவியம்

தமிழ் ஓவியா said...

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!


கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).

கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்

இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்

நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.

அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.

- ஓவியம்

தமிழ் ஓவியா said...

காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்....


நரையாய் பூமுகத்தில் - புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட - இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் - உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த - நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் - சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை - கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை - உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ - அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் - கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் - எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் - இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு - அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் - பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு - நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா - உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை - உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் - உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் - நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு - தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல - பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே - ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன - இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் - அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் - சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் - நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க - ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை - ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு - அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ - கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க - நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் - உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் - அன்று
காததூரம் ஓடும்.

- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...

சங்ககாலம் பொற்காலமா? - ஒரு பகுத்தறிவுப் பார்வை


- பேராசிரியர் ந.வெற்றியழகன்

எதனைச் சங்ககாலம் என்பது:

சங்ககாலத் தமிழர் வாழ்வியல் _ பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னர் சங்கம் என்பது எந்தச் சங்கத்தைக் குறிக்கும்? என்று தெளிவுபடுத்துவது தேவை.

ஏற்கெனவே இருந்ததாகக் கூறப்பட்டு அவை கடற்கோளால் கொள்ளப்பட்டுப் போயின என்பது நமக்குத் தேவையில்லை.

அந்தச் சொல்லாடலில் நாம் சொல்லப்போவதும் இல்லை. நாம், சங்ககாலம் என ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது கடைச்சங்கம் என்று சொல்லப்படும் அமைப்பு இருந்த காலத்தையேயாகும். இதன் காலம் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும், ஆய்வு நோக்கம் கருதி கி.மு.500 _ கி.பி.100 என்கிற காலகட்டத்தை ஏற்று, அதனையே கடைச்சங்க காலம் என்றும், சுருக்கமாக, சங்க காலம் என்றும் கொண்டு அந்தச் சங்ககாலத் தமிழர் வாழ்வியல்பற்றி பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட்டிருக்கிறோம்.

இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புவது

சமுதாய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு _ என்னும் 400 பக்க அளவிலான ஒரு நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தைப் பொற்காலம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் காட்டுகின்றன.

ஆக, தமிழ்மொழியும் தமிழர் வாழ்வும் மேலோங்கி இருந்ததால் அந்தக் காலம் அதாவது சங்ககாலம் பொற்காலமாம்!

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே!

பொற்காலமாகத் திகழ்ந்த சங்ககாலம் போல இந்தக் காலம் இல்லையே? அந்தக் காலம் மறைந்து போயிற்றே? அந்தப் பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனதே! என, தமிழார்வம், தமிழ்ப்பற்றுணர்ச்சி காரணமாகப் பலரும் பாராட்டு மழையில் நனைகின்றனர். இது உண்மைதானா? ஆய்வு செய்ய இருக்கிறோம்! பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட இருக்கிறோம்.

இன்றைய ஏற்றம்

இயற்பியல், வேதியியல், பயிரியல், உயிரியல், வானியல், அணுவியல், பொறியியல், மருத்துவ இயல் முதலான அறிவியல் துறைகளின் பேருண்மைகள், பெருவிளைவுகள் இன்று மாந்த சமுதாயத்திற்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...


இலக்கிய எழுச்சி

தொன்மையும் வளமான தன்மையும், முன்மையும் கொண்ட நம் அன்னைத் தமிழ் பற்றியும், அதில் உண்டான இலக்கியங்கள் குறித்தும் நாம் பெருமிதம் கொள்வது இயற்கையே! அவ்வப்பொழுது, நிலவிய சமுதாய அமைப்பினை எதிரொளி(லி)க்கும் இலக்கியப் படைப்புகளும் தோன்றின என்பது உண்மை. அதுசரி, அதனால், சங்ககாலத் தமிழர் வாழ்வியல் பொற்காலமா?

ஆரியம் தழைத்திருந்த அந்தக் காலம்

பொதுவாகவே, இந்திய நிலப்பரப்பினர் அல்லது தமிழர்களின் பொற்காலம் என்று புகழ(ல)ப் படுவதற்குக் காரணம், அந்தக் காலம் ஆரியம் அல்லது பார்ப்பனியம் செழித்து, கொழித்து தழைத்து இருந்தமையே என புதிய வரலாற்றாசிரியர்கள் புகல்வர். சங்க காலம் அதனால்தான் பொற்காலமா? 7 பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு நம் பகுத்தறிவுப் பார்வையைச் செலுத்துவோம்!

பகுதி (1): தழைத்தோங்கிய தனியுடைமைக் கோட்பாடு

வள்ளல்களும் வறியவர்களும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்கள் பெரும்பாலும் மன்னர்களையும், குறுநில மன்னர்களையும் நிலக்கிழார்களையும் போற்றிப் புகழ்ந்து பரிசு பெற வறுமையில் வாடிய பாவலர்கள் பாடிய பாடல்கள், தம் வாழ்க்கையை நடத்துவதற்கு வேறு வழியின்றியே அவ்வண்ணம் பாட வேண்டிய நிலை இருந்தது.

கொடை மிகுந்ததாகவும் வள்ளல்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படும் சமுதாயம் வறுமை மிகுந்ததாகத்தானே இருக்கும்? மக்கள் வறுமை, பாவலர் வறுமை, கலைஞர்கள் துயரம் இவை நீக்க மன்னன் கொடைத் திறம் இவற்றைச் சங்க நூல்கள் விளக்கும்.

பசித்த வயிறு; பழங்கந்தல் உடை

வயிற்றில் பசியுடன், புறத்தில் பழங்கந்தல் உடையுடன் கூட்டங்கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கட் பிரிவினர் இருந்தனர். யாழ் கையிலே! பசி வயிற்றிலே! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடையிலே!! -என்ற பொருளில் கையது கடன் நிறை யாழே! மெய்யது
புரவலர் இன்மையின் பசியே! அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
இதன் பொருள்: பாணனே! (பாடிப் பரிசு பெற்று வாழும் பாடகன்) யாழ் கையிலே! பசி வயிற்றிலே!! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடுப்பிலே உடைய பாணனே! உன் பசி எங்கே தீரும் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மன்னன் கிள்ளிவளவனிடம் செல்வாயாக! இதுதான் பாடிப் பிழைக்க வேண்டிய பாணனுக்குக் கூறும்வழி. இது ஆலத்தூர் கிழார் பாடிய பாடலின் கருத்து.

இதிலிருந்து தெரிவது என்ன?

இதிலிருந்து இரு கருத்துகள் தெளிவு. ஒன்று, பசித்த வயிற்றுடனும் பழங்கந்தையுடனும் கூட்டங் கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கள் பிரிவினர் இருந்தனர். மற்றொன்று, பொன்னையும் பொருளையும் தேரையும் நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களையும் தம் பொருளாக்கிக் கொண்டு வாழ்ந்த மன்னவன் இருந்தான்.

இருப்பவன் - இல்லாதவன்

மன்னனைப் புகழ்ந்துபாடி, அவனிடம் பரிசு பெற்று வாழும் பாணனைக் காண்கிறோம். மக்கள் பற்றிய சமுதாய நிலை இது. உடையவன் _ இல்லாதவன் வாழ்ந்த நிலை இது! இருப்பவன் இல்லாதவருக்கு ஈந்து தன் ஈகைப் பண்பினைக் காட்டிக் கொள்கிறான். இது போற்ற வேண்டிய பண்புதான்! ஆனால், இருப்பவன் _ இல்லாதவன் என்ற நிலையில் அந்த ஈகை பிறந்தது என்ற சமுதாய நிலையை நாம் பொற்காலம் என்று கூறி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோமே? கற்றவர், கவிஞர், கலைஞர்கள் மன்னனைக் கண்டு கொடை பெற்றால் பிறர் நிலை _ கல்லாதார் நிலை, வாழ்வு எப்படி இருந்திருக்கும்? கொடை மிகுந்து காணப்படும் சமுதாயத்தில் வறுமை மிகுந்துதானே இருக்கும்?

பறைசாற்றும் பாடல்கள்

செல்வர்களும், வணிகர்களும் பல்லடுக்கு மாளிகைகளில் வாழ, வறியோரும் உழவர்களும் தனிச் சேரிகளில் இருந்தனர் எனப் பாடல்கள் பல பேசுகின்றன. இல்லை, பறைசாற்றுகின்றன.

தமிழ் ஓவியா said...

இருக்கும் இடம் எதுவோ?

சுற்றம் சூழ, சின்னஞ்சிறுவர்கள் எறும்புக் கூட்ட வரிசைபோல நீண்டு, சாரைசாரையாகச் சென்று கொண்டிருக்கின்றனர். எறும்புகளின் வாய் நின்ற முட்டைகள்போல சிறுவர்களின் கைகளில் சோற்று உருண்டைகள் காயும் கும்பியை நிரப்ப. ஒரு கவளச் சோற்றுக்காகப் பறக்கும் வேதனைக் காட்சி. பாணன் ஒருவன், அவர்களைப் பார்த்து வழி கேட்கிறான். வழி எதற்கு? தன் கொடிய நோய் நீங்க! என்ன நோய்? பசி, பசி, மருத்துவன் யார்? சிறுகுடிக்கிழான் பண்ணன் என்பவன், சங்ககாலத்தில் நிலவியிருந்த வறுமை நிலையை குளமுற்றத்துத்துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் இந்தக் காட்சியை உயிரோவியமாகத் தீட்டியுள்ளான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! என்பது அந்தப் புகழ்மிகு கிள்ளிவளவனின் பாடல் முதலடி. பொருளியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் அடிமை வேலைகள்; அதற்குரிய ஊதியம் பெறும் தொழிலாளிகளும் இருந்தனர்.

எப்படி இருந்தது?

சங்ககாலச் சமுதாயம் இன்றுள்ள வர்க்க சமுதாயத்தின் முன்னோடிதான் உடைமையாளர், அவன் கீழ் உழைத்தவன் என்ற வர்க்கப் பிரிவுகள், உடைமையாளனுக்கே ஆட்சி என்பதன் ஆணிவேர் சங்ககாலம்தான். இன்று உடையவன் _ இல்லாதவன், செல்வன் _ வறியவன் என்று இருப்பது போலவே சங்க காலத்திலும் மக்கள் பல வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தார்கள். இல்லாரும் இலர்; உடையாரும் இலர் என்ற நிலை சங்ககாலத்தில் இல்லை.

வர்க்கபேத வல்லாண்மை

சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்க பேதமற்ற வறுமையற்ற எல்லாரும் எல்லாமும் பெற்றிருந்த பொற்காலம் என்று நினைப்பது சரி அன்று. பத்துப்பாட்டில் வரும் நெடும்பாடல்கள் சோழ, பாண்டியர்களின் பேரரசுகள் பற்றியதாகும். கடற்கரை ஓரங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் நகரங்கள் தோன்றி மக்கள் வர்க்கப் பிரிவுகளாக வாழ்ந்த நிலையும் ஆண்டான் _ அடிமை வாழ்வும் வாழ்வின்றிச் சீரழிந்தோர் நிலையும் கண்ணாடி போல் விளக்கப்பெற்று ஒரு வர்க்க சமுதாயம் நிலவுடைமை, வல்லாண்மை அமைந்த அமைப்பு இருந்ததைக் காணமுடிகிறது.

பகுதி (2) : புகழ்வேண்டி மேற்கொண்ட போர்ப்பண்பு

சண்டைச் சமுதாயம்: சங்ககாலச் சமுதாயம் சண்டையிடும் சமுதாயம்; போர்ச் சமுதாயம். இளைஞர்கள் போர்க்கலன்கள் ஏந்தி போர்க்களம் சென்று போர் புரிவதே அவர்கள் கடமை.

இன்னின்னார் கடமை இதுதான்!

சங்கப்பாடல் ஒன்று கூறுவதைப் பார்ப்போம். பொன்முடியார் என்கிற பெண்பால் புலவர் தாய், தந்தை, அரசன், தொழிலாளி, மகன் முதலியோர்க்குரிய கடமைபற்றிப் பாடுகிறார். ஈன்று மகனை வளர்ப்பது ஒரு தாயின் கடமை; அவனை வீரன் ஆக்குவது தந்தையின் கடமை; வேல் வடித்துக் கொடுப்பது கொல்லன் கடமை; போர்ப்பயிற்சி தருவது மன்னவன் கடமை; வாள் எடுத்துப் போர்க்களம் புகுந்து, போரிடுதல் மகன் ஆகிய இளைஞனின் கடமை! என்பது, ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று தொடங்கும் அந்தப் பாடலின் கருத்து. இதிலிருந்து, ஒரு மகன், (இளைஞன்) போரிடுவதே அவனுக்கு இன்றியமையா கடமை என்று தெரிகிறது. அத்தோடு, பிள்ளையைப் பெற்று வளர்ப்பதுதான் ஒரு பெண்ணின் கடமை; வேறொன்றும் இல்லை எனத் தெரிய வருகிறதல்லவா?

ஓர் இளைஞன் கல்வியாளனாகவோ அறிஞனாகவோ, ஆகவேண்டாம்! (சான்றோன் என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் போர்வீரன் _ என்றே மூத்த தமிழாய்வறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.)

செத்து மடிந்த சின்னஞ் சிறுவன்

ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவர், முன்பு அவள் அண்ணன், கணவன் போரிடச் சென்று மடிந்த பின்னும், தன் சின்னஞ்சிறு மகனை, கையிலே வேல் தந்து களம் அனுப்பிய செய்தியைப் பாடுகிறார்.

தமிழ் ஓவியா said...

வீரமா? கோரமா?

பால்மணம் மாறாத பாலகன்கூட, போர்க்களம் புகுந்து போர்புரிவதைத் தவிர்க்க முடியாத நிலை சங்க காலத்தில் நிலவியதைக் காட்டுகிறது. இன்னும் சான்றுகள் நிறையக் காட்டலாம். விரிவஞ்சி விடுக்கின்றோம். போர்ச் சமுதாயத்தில் இளம் வீரர்கள் அல்லது சிறார்கள் கொத்துக் கொத்தாக மடிய நேர்ந்த உண்மையை மறுக்க முடியுமா?

கொள்ளையோ கொள்ளை!

இவை மட்டுமா? ஓர் அரசன் மற்றோர் அரசனை அழித்து அவன் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளை அடிப்பது அன்றைய சமுதாய நிலை. பாண்டியன் நன்மாறன் பிற நாடுகளைத் தாக்கி அழித்து அவர்களின் செல்வத்தை அள்ளிக் கொண்டு வந்தான்.

வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய புறப்பாடல் வழி இவ்வுண்மையை அறிகிறோம்.

இப்படிப்பட்ட அரசனைப் புகழ்ந்து பாடிய கவிஞர், புலவர்கட்குப் பரிசில் கிடைக்கும். போர்க்கள வெற்றி, பகையழித்த செயல் கொள்ளை கொண்ட பொருள்கள், பகை மன்னர் அழிதல் _ இவை வீரம் ஆகுமா?

பகுதி (3): ஆழமாய்ப் பதிந்த ஆரியப் பண்பாடு பாவாணரின் படப்பிடிப்பு

பழங்குடிப் பேதைமை; மதப் பித்தம், கொடை மடம் எனும் முக்குற்றமும் ஒருங்கு கொண்ட மூவேந்தரும் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பிராமணரை முற்றிலும் பின்பற்றியதால் கடைக்கழக(சங்க)க் காலத்தில் மதவியல், குமுகாய (சமுதாய) இயல், மொழியியல் என்னும் முத்துறையிலும் ஆரியம் வேரூன்றிவிட்டது _ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள். (நூல்: தமிழர் வரலாறு _ பக்கம் 248)

வேரூன்றிய வேதக்கருத்துகள்

அரண்மனைகளிலும், கோவில்களிலும், செல்வர் மாளிகைகளிலும், வழிபாடுகளும், சடங்குகளும் பிராமணர்களால் சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. _ (பாவாணர்: நூல்: திருக்குறள் தமிழ் மரபுரை_ பக்கம் 19)
சனாதனப் பிடிப்புகளும், வேள்விகளும் தமிழர் வாழ்வைச் சங்ககாலத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு வேதக் கருத்துகளும் புராணப் பெருக்கமும் நிலைபெற்றுவிட்டன. முதலில், வேள்விகளின் செல்வாக்கு பற்றிப் பார்ப்போம்.
வேத வேள்விகள்:

சங்க காலத்தில் நடந்த வேள்விபற்றி, சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தம் பின்வருமாறு நேரடி வருணனை செய்வதை முதலில் பார்ப்போம். விதானத்தடியில் பருந்துருவம் கொண்ட பல்வகை வேள்விச் சாலைகள்; விலங்கினங்களின் உயிரைச் செருக்கும் பலிபீடங்கள்; யூபம் என்ற (யாக) நெடுந்தூண்களில் கட்டப்பட்ட விலங்கினங்கள்; முத்தீச் செல்வர்கள் வளர்த்த அழற்குண்டங்கள்; முப்புரி நூலணிந்து, மான் தோலுடை பூண்டு அருமறை மந்திரங்களை அடுக்கடுக்காய் உச்சரித்து, அனல் கக்கும் குழியில் குடம் குடமாய் நெய்யை ஊற்றி, பல விலங்குகளின் உயிர்க் குலைகளை அறுத்தெடுத்து அதன் பச்சை இரத்தத்தைத் தீயில் பொழிந்து, வெட்டுண்ட உடலத்தை வாட்டி எடுத்து, வேற்றுலக வாழ்க்கைக்கும் இவ்வுலக இன்பத்திற்கும் வழிகாட்டும் விளக்கங்கள் _ (நூல்: வடிவிழந்த வள்ளுவம். பக்: 7-_8)

அள்ளி அள்ளி

பத்துப் பெருவேள்வி செய்து, இறுதி வேள்வி செய்கையில், தன் மனைவியுடன் விண்ணுலகடைந்ததாகச் சொல்லப்பட்ட பாலைக் கவுதமனார் பார்ப்பனருக்குத் துணையாயிருந்து வேள்வி நடாத்தி, பெருங் கொடைகளை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த வேந்தர் பெருமக்களும் சங்கத் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்தாம்!

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் தமிழ்நாடு அரசின் அறிவிக்கை


மருத்துவத் துறை பணி நியமன அமைப்பு (Medical Services Recruitment Board-MRB) கடந்த 27 ஆம் தேதி ஒரு அறிவிக்கையை (Notifi cation-10, date 27.12.2013) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் சிறப்பு மருத்துவமனை ஒன்றை (Super Speciality Hospital) உருவாக்குவது தொடர்பாக மருத்துவப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பதவிகளுக்குப் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை அது (12 பக்கங்கள் கொண்டது).



தமிழ் மண்ணில் தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றின் காரணமாக 1928 முதல் நடைமுறையில் இருந்துவரும் சமூகநீதிக்கு மரண அடி கொடுக்கும் அபாயகரமான அறிவிப்பு அது.

அறிவிக்கையின் நான்காம் பக்கத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்றப்படாது என்று மிகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா முழுவதும் இருந்தும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

3. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. சம்பள விகிதம் -_ தற்போது அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் தொகையைவிட மிகவும் கூடுதலாக அளிக்கப்படும். சம்பளத்திலும் வேறுபாடு.

எடுத்துக்காட்டாக,

தற்போது அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூ.70 ஆயிரம்; ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் உருவாகும் மருத்துவமனையில் பணியாற்றும் அதே கல்வித் தகுதியுடைய பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லட்சம்; தற்போது உதவிப் பேராசிரியருக்குச் சம்பளம் ரூ.40 ஆயிரம்; ஆனால், புதிய மருத்துவமனை உதவிப் பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒரு லட்சம்.

டிசம்பர் 27 அறிவிக்கை வெளியிடப்பட்டு, அவசர அவசரமாக விண்ணப்பிக்கப்படுவதற்கான கடைசித் தேதி ஜனவரி 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (ஏற்கெனவே உரியவர்களைத் தேர்வு செய்துவிட்டார்களோ...?)

சமூகநீதி பிறந்த தமிழ் மண்ணில் இப்படியொரு கொடுமையா!

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்து, அரசு விளம்பரம் செய்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

அதுவும், இந்த முறை ஆட்சிப் பொறுப்புக்கு (2011 இல்) வந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சமூக அநீதிக்கொடியை ஏற்றியே தீருவது என்கிற ஒரு முடிவோடு செயல்படுவதாகத் தெரிகிறது.

தமிழ் ஓவியா said...


பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனத்தில் ஆசிரியர் கல்விக்கான தேசிய ஆணையம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான தகுதி மதிப்பெண்ணில் தளர்வு அளித்திருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், திறந்த போட்டி, ஒதுக்கீடுப் பிரிவு அனைத்திற்கும் தகுதி மதிப்பெண் 60% என்று அறிவித்ததோடு அல்லாமல், சட்டமன்றத்திலேயே தகுதி அடிப்படை (Merit) என்பது அரசின் கொள்கை முடிவு என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த அரசு சமூகநீதிக்கு எதிரான ஒரு வழியில் பயணிக்க முடிவு எடுத்துள்ளது தெரிய வந்தது. (பார்ப்பன சங்க மாநாடுகளில் தொடர்ந்து கூறப்பட்டுவரும் கோரிக்கை இது!).

அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இப்படிப் பேரிடி போன்ற சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த முடிவை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.

கட்சிகளைக் கடந்து தமிழ்நாடு ஒன்றுபட்டு கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு அல்லாமல், அதற்கான போராட்டக் களங்களை உருவாக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

திராவிடர் கழகம் இதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இட ஒதுக்கீட்டில் வருமானவரம்பு விதியைப் புகுத்தினார். திராவிடர் கழகம் கடுமையான பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். தோல்விக்குப் பின், தன் தவறினை உணர்ந்து அந்த ஆணையை ரத்து செய்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது வரலாறு.

இப்பொழுதும் அதே சூழ்நிலை _- மக்களவைத் தேர்தல் வரும் ஒரு காலகட்டத்தில், சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள (MRB) அறிவிக்கையை ரத்து செய்து, தமிழ்நாட்டில் 85 ஆண்டுகாலமாகப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.

ஒப்பந்த அடிப்படை என்பது போன்ற குறுக்குச்சால் (முறைகேட்டுக்கு இது ஒரு வழி) ஓட்டுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.



கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

சிந்தனை


மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது.

நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான்.

மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம்.

சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்...

- லியானர்டோ டா வின்சி

தமிழ் ஓவியா said...

தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?


தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.

தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.

தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.

துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

- முகநூலில் வே. மதிமாறன்

தமிழ் ஓவியா said...

தரணிக்கு தமிழர் தந்த கொடை

- மஞ்சை வசந்தன்

புத்தாண்டும், பொங்கலும் தமிழர் விழாக்கள் என்று குறுக்கிச் சுருக்கிச் சொல்லக்கூடாது. அவை தரணிக்குத் தமிழர் தந்த கொடை; தரணி முழுமைக்கும் ஏற்றது, உரியது. தமிழர் உருவாக்கியது என்று சொல்லலாம். மாறாக, அது தமிழர்க்கு மட்டும் உருவாக்கியது அல்ல.

தமிழர் வாழ்வும், சிந்தனையும், கலையும், ஆய்வும், பண்பாடும், நாகரிகமும், மொழியும், மருத்துவமும் தமிழர்க்கு மட்டுமே உரியவை அல்ல. அவை உலகிற்கே உரியவை; உலகு உள்ளளவும் உகந்தவை.

யாதும் ஊரே யாவரும் கேளிர், இது தமிழர்க்கு மட்டும் உரியதா? இது சொல்லப்பட்ட காலத்திற்கு மட்டும் பொருந்துவதா? இது சொல்லப்பட்ட மொழிக்கு மட்டும் ஏற்றதா?

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இச்சிந்தனை பொருந்தாமல் போகுமா? அல்லது இதை மாற்றி, மறுத்து வேறு ஒரு சிந்தனையை வைக்க முடியுமா? அல்லது இதைவிட உயர்வாய், உலக நோக்கில், மனிதநேய மலர்ச்சியில், ஒற்றுமை, பாசம், நேசம், உறவு, உணர்வு செறிந்த ஒன்றை வேறு யாராவது இனி எதிர்காலத்திலாவது கூறிவிட முடியுமா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் வள்ளுவர் கூறியதைவிட வேறு எவராவது கூறியுள்ளனரா? கூறிவிட முடியுமா? இதைவிட உயரிய நோக்கு உலகில் உண்டா?

இயற்கை மருத்துவத்தில் இணையற்ற அறிவு:

தமிழ் ஓவியா said...


மாதுளையும் மிளகும் சேர்த்து உண்டால் மானுடர்க்குச் சிறந்தது, உடலுக்கும் குடலுக்கும் உகந்தது என்பது தமிழன் உண்டறிந்து, உண்மை கண்டறிந்து சொன்னது. மருத்துவம் இது சரியென்கிறது. நுரையீரலுக்குத் தூதுவளை தமிழன் கண்டது. உலக சுகாதார நிறுவனம் ஏற்கிறது.

வேம்பும், மஞ்சளும், உயர்ந்த மருத்துவப் பயன்தரும். கண்டவர் தமிழர். இன்று உலக மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.

கீழாநெல்லி _ மஞ்சள்காமாலை, கல்லீரல் நோய்களுக்குக் கைகண்ட மருந்து _ தமிழன் சொன்னான். இதைவிட்டால் மருந்தே இல்லை, உலகம் ஒத்துக்கொள்கிறது.

நிலவேம்பு காய்ச்சலுக்கு நிகரற்றது. தமிழன் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்து சொன்னான். அறிவியல் உலகம் இன்று வியந்து ஏற்கிறது. அரசும் பரிந்துரைக்கிறது.

பொன்னங்கண்ணியும், முருங்கையும், சோற்றுக்கற்றாழையும், நொச்சியும், ஆடுதொடா இலையும், முசுமுசுக்கையும், வல்லாரையும், கரிசாலையும், வில்வமும், துளசியும், செம்பருத்திப் பூவும், தாமரைப் பூவும், அருகம்புல்லும், மருதம் பட்டையும், அத்தியும் அனைவரையும் காக்கும் என்பதைத் தமிழன் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் அறிந்து சொன்னான். இன்று அனைத்து நாடுகளும் ஏற்றுத் தேடி அலைகின்றனவே!

அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயிரமாயிரம் மருத்துவச் செய்திகளைச் சொல்லலாம். அவ்வளவும் தமிழர் கண்ட, சொன்ன மருத்துவ அறிவுகள்; அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன்.

தமிழ் ஓவியா said...

பரதநாட்டியம்:

பரதம், பரதவர் என்பவை பரவை என்பதிலிருந்து வந்தவை. பரவை என்றால் கடல். கடல் சார்ந்து வாழ்ந்தவர்கள் பரதவர்கள். கடல் அலையில் படகு ஆடிவருவது போல் அப்பக்கமும் இப்பக்கமும் ஏறி இறங்கி ஆடுவது பரதநாட்டியம் எனப்பட்டது. இது தமிழர் கலை. ஆரியர் இதைக் களவாடி, தமதாக்க முயன்றபோது சொல்லாய்வில் தோற்றனர்.

தமிழர் உரிமையை எவர் களவாடினாலும், எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழ்ச் சொற்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்; தமிழர் எச்சங்கள் அவற்றை நிலைநாட்டிவிடும்! தமிழன் தொன்மையும், ஆழமும் அப்படி.

ஆரியம் களவாடியவையெல்லாம் இன்று அடுக்கடுக்காய் வெளிப்படுவது இப்படித்தான்! தொடர்ந்து வெளிப்படுத்தி தமிழர் சிறப்பை நிலைநாட்ட வேண்டியது தமிழ் ஆய்வாளர்களின் கட்டாயக் கடமையாகும்.

பெருமிடு தமிழர் கட்டியது!:-

எகிப்தில் உள்ள பெருமிடு தமிழர் கட்டடக் கலை; தமிழர் கட்டியது. எகிப்தில் வாழ்ந்ததும் தமிழர்; ஆண்டதும் தமிழர். அக்கட்டடக் கலைக்கு, நுட்பத்திற்கு, ஆற்றலுக்கு, அறிவியல் திறனுக்கு இணையாய் உலகில் எதைக் காட்ட முடியும்?
பெருமிடு என்பது தூய தமிழ்ச்சொல். இடுதல் என்றால் புதைத்தல், இடுகாடு என்றால் புதைக்கும் இடம் என்று பொருள். இறந்தால் புதைப்பது தமிழர் மரபு; இறந்தால் எரிப்பது ஆரிய மரபு.

தமிழர் மரபுப்படி சாதாரண எளிய மக்கள் இறந்தால், ஆறு அடி நீளத்திற்குச் சிறு குழிவெட்டி இடுவது (புதைப்பது) சிற்றிடு எனப்பட்டது. அரசர் இறந்தால் பெரிய அளவில் கட்டடம் எழுப்பிப் புதைப்பது பெரும்+இடு=பெருமிடு எனப்பட்டது. அதுவே பெரமிடு என்று மருவி அழைக்கப்படுகிறது.

பெண்ணுரிமை:

பெண்களைச் சம உரிமையுடன், உயர் நிலையில் போற்றியவர்கள் தமிழர்கள். சடங்கற்ற, ஜாதியற்ற, காதல் மணம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் செய்து கொண்டவர்கள் தமிழர்கள். தாலியில்லாமல் மாலை மட்டுமே மாற்றி மணம்புரிந்து கொண்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இதுதானே புரட்சி மணம். இப்புரட்சியை அப்போதே செய்தவர்கள் தமிழர்கள்!

மதமற்ற ஜாதியற்ற சமுதாயம்:

ஆரியர் நுழைவதற்கு முன் தமிழர் வாழ்வில், மதமும் இல்லை, கடவுளும் இல்லை; ஜாதியும் இல்லை, ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் இல்லை. எல்லோரையும் உயர்வாகவும், உறவாகவும் எண்ணி உயர்வாழ்வு வாழ்ந்தனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவும் மனிதநேயமும்:

தமிழர், ஆரிய கலப்பிற்கு முன் வாழ்ந்த வாழ்வு பகுத்தறிவு வாழ்வு. அவர்களிடையே எந்த மூடநம்பிக்கையும், மூடச் சடங்கும் கிடையாது.

அதேபோல், பிறருக்குத் தொண்டு செய்யவே வயது முதிர்ந்தநிலையில் குடும்ப வாழ்வு விட்டு, பொதுத் தொண்டு ஆற்ற அந்தண வாழ்வு மேற்கொண்டனர். அந்தணர் என்பது ஜாதியல்ல. அது பொதுத் தொண்டாற்றுவோருக்கான பெயர்.

காதலும், வீரமும், தொண்டறமும், பண்பாடும், பகுத்தறிவும், அறிவியலும், கலைநுட்பமும், நன்றி பாராட்டலும் தமிழர் வாழ்வின் அங்கங்கள்.

மாண்பின் உச்சம்:

ஓர் இழவு வீடு. கணவன் இறந்துவிட்டான். ஆற்றாத அழுகுரல் ஒருபக்கம்; இளம் வயதில் அவன் இறந்து போனதால் வேதனை விளிம்பில் அமைதி மறுபக்கம்.

ஒரு மூதாட்டி ஒரு நீர்ச்சொம்புடன் வெளியில் வந்தாள். எல்லோரும் அவளையே நோக்கினர். நீர்ச்சொம்பைத் தரையில் வைத்தவள், கையிலிருந்த முல்லை மொட்டுக்களில் ஒன்று என்று சொல்லி ஒரு மொட்டை நீர்ச்சொம்பில் போட்டாள். அடுத்து இரண்டு என்று சொல்லி இரண்டாவது மொட்டை நீர்ச்சொம்பில் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அங்கிருந்த அனைவரும் ச்சச்சோ... என்று நாக்கொலி எழுப்பி இரக்கத்தை வெளியிட்டனர். இறந்தவனின் மனைவி இரண்டு மாத கர்ப்பத்துடன் உள்ளாள். ஊர் அறிந்து கொண்டது. எதிர்காலத்தில், கணவன் இறந்தபின் பிள்ளை எப்படிப் பிறந்தது என்ற பழி, இழிப்பேச்சு வரக்கூடாது என்ற மனிதநேயத்தில், எவ்வளவு மாண்போடு, இழவு வேளையில், சொல்ல வேண்டியதை எவ்வளவு மாண்போடு, குறிப்பால் வெளிப்படுத்தும் மரபைத் தமிழர் கையாண்டனர் பாருங்கள்! இப்படியொரு மாண்பை, மனித நேய மலர்ச்சியை, உலகில் எங்காவது காணமுடியுமா? காட்ட முடியுமா?

பொங்கலும் புத்தாண்டும்:

பொங்கல் தமிழர் உருவாக்கிய விழாவானாலும், அது தமிழர்க்கு மட்டும் உரிய விழாவன்று. நன்றியுணர்வுடைய அத்தனை மனிதர்க்கும் அது உரியது. அவர்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நாட்டினராய், எந்த இனத்தினராய், எந்த மதத்தினராய் இருந்தாலும்.

உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி பாராட்ட எடுக்கப்படும் விழா இது. எனவே, இது எக்காலத்திற்கும் எல்லோருக்கும் உரியது; எல்லோரும் கொண்டாட உரிமையுடையது. எனவே, இது உலக விழா, உலக மக்களுக்கான விழா!

தை முதல் நாள் புத்தாண்டின் தொடக்கம் என்பது தமிழர் கணக்கீடு என்றாலும், தமிழர்க்கு மட்டுமல்ல உலகிற்கே உகந்தது; உரியது.

சூரியன் இருப்பு தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கி, நகரத் தொடங்கும் நாள் ஆண்டின் தொடக்கமாகத் தமிழர் கொண்டனர். அதை உலகின் பல நாடுகள் ஏற்றன. ஆங்கிலப் புத்தாண்டும் அதை ஒட்டியதே! ஏசு பிறப்பு ஆங்கிலப் புத்தாண்டு என்பது அறியாமை. ஏசு பிறந்தது டிசம்பர் 25. காலக் கணக்கீட்டிற்கு ஏசு பிறப்பதற்கு முன் பின் என்று கொள்ளப்பட்டதே தவிர ஆண்டு பிறப்பதற்கு அல்ல.

சூரியன் காலையில் தோன்றி மீண்டும் காலையில் தோன்ற ஆகும் காலம் ஒருநாள். ஒரு முழு நிலவு தோன்றி மீண்டும் ஒரு முழுநிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம். அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து வடக்குநோக்கி நகர்ந்து வடகோடிக்குச் சென்று மீண்டும் தென்கோடியை அடைய ஆகும் காலம் ஓராண்டு. ஆக, எல்லாம் இயற்கை நிகழ்வை அடிப்படையில் வைத்த கணக்கீடு. இது அறிவியல் அடிப்படையிலானது. ஆனால், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு, மூடநம்பிக்கையில் முளைத்தது. எனவே, தமிழர் கண்ட புத்தாண்டு அறிவுக்குகந்த உலகிற்கு உரிமையான ஆண்டு. எனவே, தை முதல் நாள் புத்தாண்டு என்பது உலகிற்கே உகந்தது! இது தமிழர்க்குச் சிறப்பு.

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். - பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

தமிழ் ஓவியா said...

தூங்காதே தமிழா தூங்காதே!


- பேராசிரியர் தொ.பரமசிவன்

பார்ப்பனியம் எங்கே சார் இருக்கிறது? அதெல்லாம் செத்துப் போய் நெடுநாட்களாகிவிட்டன. பிராமணர்கள் நம்மோடு கலந்து விட்டார்கள் என்கிற குரலை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கமுடிகிறது. இந்தக் குரலுக்கு உரியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அறிவுஜீவிகள் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் சொல்ல வருவது என்ன? பெரியாரியம் காலாவதி ஆகிவிட்டது என்பதுதான்.

ஆனால், தன்னுணர்ச்சியோடு பார்ப்பனியத்தை இவர்கள் கணித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் இராணுவ ரகசியங்கள் பாதுகாக்கப்படும் இடத்திற்கெல்லாம் செல்லும் உரிமை படைத்தவர். ஆனால், குக்கிராமத்துப் பிள்ளையார் கோவிலில் அய்ந்துக்கு அய்ந்து அடி (25 ச.அடி) அளவுள்ள எல்லைக்குள் மட்டும் அவருக்கு நுழைவதற்கு அனுமதி கிடையாது. அந்த 25 சதுரஅடி நிலம் பிறப்பினால் ஒரு ஜாதிக்கு மட்டுமே தனி உரிமை உடையதாக இன்றளவும் பேணப்படுகிறது. பார்ப்பனியம் உயிரோடு இருக்கிறதா? இல்லையா?

மண்ணுக்குக்கீழ் உள்ள கிழங்குகளும் பார்ப்பனர்களும்

தமிழ் ஓவியா said...

பிராமணர்களும் நம்மைப்போல புலால் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள். பிராமணர் வீட்டுச் சமையலறைக்குள் ஆம்லெட்டும் பீப்பும் போய்விட்டன என்கிறார்கள் இந்த அறிவு ஜீவிகள். உண்மைதான். ஆனால் இந்தச் சமையலறைக்குள் நாடார் ஜாதியினர் நட்டு வளர்க்கும் பனங்கிழங்கும் பதநீரும் இன்னும் செல்லவில்லை என்பது இவர்களுக்குத் தெரியுமா? மண்ணுக்குக் கீழே உள்ள எல்லாக் கிழங்கு வகைகளும் பன்றிகளுக்கும் சூத்திரர்களுக்கும் உரியவை என்ற பிராமண தர்மத்தின் வெளிப்பாடுதானே இவை.

அதுபோலவே பெரும்பாலும் கிழங்குகளை உணவாகக் கொண்டு நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவை பிராமணர்கள் உத்தராயண புண்ணிய காலத்து மகரசங்கராந்தியாகத்தானே கொண்டாடுகிறார்கள். கிழங்கு வகைகளைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்பட்டதுதானே அந்த ஏற்பாடு. மண்ணுக்குக் கீழே விளைவதனாலே வெங்காயம் பிராமணர்களாலே விலக்கப்பட்ட உணவுப் பொருளாகும். அதனால்தான் வசதியுள்ள பெருங்கோவில் மடப்பள்ளிகளில் இன்றுவரை வெங்காயமும் சிலி நாட்டிலிருந்து வந்த மிளகாய் வற்றலும் உருளைக்கிழங்கும் நுழையவில்லை என்பது இவர்களுக்குத் தெரியுமா? மிக அண்மைக் காலமாகத்தான் பிராமணர் அல்லாதாருக்கு வழங்கப்படும் புளியோதரையில் சிலி நாட்டு மிளகாய் வற்றல் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

கதவைச் சாத்துவதில்கூட வேறுபாடு!

வீட்டிலே உணவு உண்ணும் போது தெரு வாசல் கதவைச் சாத்தக்கூடாது என்பது நம் வீடுகளில் எழுதப்படாத விதி. ஆனால், பிராமணர் வீடுகளில் இன்னமும் தலைவாசல் கதவைச் சாத்திவிட்டுத்தான் உண்ணுகிறார்கள். பிராமணப் பூசைபெறும் கோவில்களில் உள்ள சாமிகளும் திரையிட்டு மறைத்துக் கொண்டுதான் தளிகை உண்ணுகின்றன. இரத்தப்பலிபெறும் நமது கோவில்களில் பலியிடப் பெறும் ஆடுகள் பலரும் காண பல மணி நேரம் தரையில் கிடக்கின்றன. அதுபோல ஊன் கலந்த படைப்புச் சோறும் பலரும் காணப் படைக்கப்பட்டுதான் பகிர்ந்துண்ணப்படுகின்றது. இந்த வழக்கத்தைப் பிராமண தர்மம் அனுமதிக்கிறதா? நம் வீட்டில் நீத்தார் நினைவுநாள், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வரும் பிராமணர்கள் நம் வீட்டில் சமைத்த உணவை உண்ணாமல் பச்சரிசியும், வாழைக்காயும், தட்சணையும் பெற்றுக் கொண்டு ஜாதி ஆச்சாரத்தையும் பேணிக்கொண்டு செல்வதைக் கவனித்திருக்கிறீர்களா?

காபி மேல் தட்டு! தேநீர் கீழ் தட்டு!

பெரியார் வெற்றிபெறும் வரை காபி மேல்தட்டு மக்களின் நாகரிக பானம் என்றும் தேநீர் அடித்தட்டு மக்களின் பானம் என்றும் குறிப்பாக இசுலாமியர்களின் பானம் என்றும் அறியப்பட்டு இருந்தது. பிராமணர் நடத்திய உணவு விடுதிகளில் தேநீர் கிடைக்காது. காபி மட்டுந்தான் கிடைக்கும். ஏனென்றால் காபி தாழ்த்தப்பட்ட மக்கள் உருவாக்கும் கருப்புக்கட்டியைத் தவிர்த்துவிட்டு வெள்ளைக்காரன் கொண்டு வந்த வெள்ளைச் சர்க்கரையைக் கொண்டு (சீனி, அஸ்கா) ஆக்கப்படும் பானம். கீழ் ஜாதிக்காரர்களால் ஆக்கப்பட்ட கருப்புக்கட்டியைத் தவிர்ப்பதற்காக உருவான பழக்கம்தான் இது. ஏழைப் பிராமணர்கள் கூட இன்று வரை கருப்புக்கட்டியைத் தவிர்த்துவிட்டு உருட்டு வெல்லத்தையே பயன்படுத்துகிறார்கள்.

பிராமணர்கள் புழுங்கலரிசியைத் தவிர்த்துவிட்டு பச்சரிசியைப் பயன்படுத்தியதன் நோக்கமே புழுங்கலரிசி கீழ் ஜாதி மக்களால் பயன்படுத்தப்பட்டது என்பதனால்தான். பெருநகர உணவகங்களில் ஸிணீஷ் க்ஷீவீநீமீ என்ற பெயரோடு இன்னும் பச்சரிசிச் சோறு நாகரிக உணவாகக் கருதப்படுகிறது. வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற புஞ்சைத் தானிய உணவுகள் நாகரிகம் குறைந்தவை என்று நமக்குக் கற்பித்தது பிராமணர் கையிலிருந்த ஊடகங்கள்தானே! பிராமண ஊடகங்களின் வலிமை இன்னும் குறையவில்லை.

ஈழத் தமிழர்களைப் பலி கொள்வதற்காக நேர்ந்து விடப்பட்ட இந்து ஆங்கில நாளிதழ் தன்னுடைய தமிழ்ப்பதிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்

- தந்தை பெரியார் 135ஆவது பிறந்தநாள் விடுதலை மலரிலிருந்து...

தமிழ் ஓவியா said...

நீர்ப் பசி

- கோவி.லெனின்

மாப்ளே.. வந்தது வந்துட்டோம்டா.. காசு கூட குறைச்சு ஆனாலும் பரவாயில்லை. அதுவரைக்கும் போயிட்டு வந்துடுவோம்டா

ஆமான்டா.. அதுவரைக்கும் போகலைன்னா, இவ்வளவு தூரம் நடந்து வந்தததுக்குப் பிரயோஜனமே இருக்காதுடா

-காணும் பொங்கலுக்காக திருவாரூரிலிருந்து பிச்சாவரம் வந்திருந்த நண்பர்கள் கூட்டத்துக்குள்தான் இந்தப் பேச்சு. காலையில் பஸ் பிடித்து மயிலாடுதுறை, சிதம்பரம் என மாறி மாறி வந்தபிறகு, சிதம்பரத்திலிருந்து கிளம்பிய டவுன்பஸ் அந்த 10 பேரையும் கிள்ளையில் இறக்கிவிட்டுவிட்டு புழுதியைக் கிளப்பியபடி போய்விட்டது. அங்கிருந்து நடராஜா சர்வீசில் மொட்டை வெயிலில் 5 கிலோமீட்டர் வந்தவர்களுக்கு, வழியில் கிடைத்த பனஞ்சுளைகள் மட்டுமே தாகம் தீர்த்து ஆறுதல் தந்தன. பிச்சாவரம் படகுத்துறைக்கு வந்து நின்றபோதுதான், காசு செலவாவதைக் கணக்குப் பார்க்காமல் அதுவரைக்கும் போய்வருவது பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கவுண்ட்டரில் டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக வந்த ஒரு படகோட்டிதான் அதற்குக் காரணம்.

தமிழ் ஓவியா said...

தம்பிகளா.. கவர்மென்ட்டு போட்டுல போனீங்கன்னா, கொஞ்ச தூரத்ததான் சுத்திக்காட்டுவாங்க. நம்ம படகுல வாங்க. கடற்கரை வரைக்கும் போயிடலாம். காசைப் பார்க்காதீங்க. இங்கிருந்து 5 கிலோமீட்டரு இருக்கும். அவ்வளவு தூரத்துக்கு வேற யாரும் உங்களக் கூட்டிக்கிட்டுப் போகமாட்டாங்க. யோசிக்காதீங்கப்பா.

படகோட்டி சொன்னதும், 5 கி.மீ. நடந்து வந்த நண்பர்கள் கூட்டத்துக்கு 5 கி.மீ. தண்ணீரில் பயணம் செய்யும் ஆசை வந்துவிட்டது. தங்களுக்குள் பேசி, ஒரு முடிவுக்கு வந்தவர்களாக, படகோட்டி கையில் பணத்தைத் திணித்தார்கள். இப்படி வாங்கப்பா என்றபடி ஏதோ ஒரு திசையில் அழைத்துச்சென்றார். நீளமான மரத்தைக் குடைந்ததுபோல இருந்த அந்த வல்லம், தண்ணீரும் சகதியுமாக இருந்த மறைவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில்தான் அவர்களை ஏறச் சொன்னார் படகோட்டி. குத்துக்காலிட்டுத்தான் உட்காரவேண்டும். ஒவ்வொருவராக உட்கார்ந்ததும், சத்தம் கித்தம் போடாதீங்கப்பா.. பதிவிசா உங்களைக் கூட்டிட்டுப்போறேன். இல்லேன்னா போட்டுல ரவுண்ட்ஸ் வர்ற அதிகாரிங்க புடிச்சிடுவாங்க என்று படகோட்டி சொல்ல, பூச்சாண்டி காட்டுறாருப்பா என்று கிசுகிசுத்துக்கொண்டார்கள் தங்களுக்குள்.

படகோட்டிக்குத் துணையாக இன்னொருவரும் வந்தார். இருவரும் துடுப்புப்போட, சகதி நீரைத் தாண்டி, அகலமான நீரோடைக்குள் நுழைந்தது வல்லம். கடல்நீர் உள்புகுந்து உருவான உப்புநீரோடை அது. 2800 ஏக்கர் அளவிலான இயற்கையின் பிரம்மாண்டம்தான் பிச்சாவரம். இருபுறமும் அடர்த்தியான புதர்க்காடுகள். பச்சைப்பசேலென அலையாத்தி செடிகள். அவை செடியா, குறுமரமா என வகைபிரிக்க முடியாதபடி இருந்தன. நிழல் விரித்த புதர்க்காடுகளுக்கு நடுவே, நீர்ப்பாதையில் வல்லம் மிதந்து சென்றது. தண்ணீர்ப் பயணத்தில் இப்படி ஒரு பசுமையான காட்டை நண்பர்கள் கூட்டம் எதிர்பார்க்கவில்லை. கீச்சீச்சென விதவிதமான பறவைகள் குரலெழுப்பின. நண்பர் கூட்டமும் பதில் குரல் கொடுத்தது.

தமிழ் ஓவியா said...

தம்பிகளா.. சத்தம் போடாதீக. இன்னும் நிறையப் பறவைங்களப் பார்க்கலாம். இது பெரிய காடு. தண்ணி எந்தப் பக்கமா ஓடி எப்படி வருதுன்னு அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு வாய்க்கால்கள் ஓடுது. இதோ இந்த இடத்துலதான், எம்.ஜி.ஆரு இதயக்கனி படத்தை சூட்டிங் புடிச்சாரு. அவரு மொதலமைச்சரான பிறகுதான் இந்தப் பிச்சாவரத்துக்கு மரியாதையே வந்துச்சி. அதுக்கு முன்னாடி இது கடத்தல்காரங்களோட ஏரியா. அதனாலதான் இப்பவும் இந்த மாதிரி வல்லத்துல வர்றவங்களைப் பார்த்தா, கடத்தல்காரனுங்கன்னு நினைச்சி ரோந்து வர அதிகாரிங்க துப்பாக்கியால சுடுவாங்க. அதனால அமைதியா வாங்க என பீதி கிளப்பினார் படகோட்டி. அப்புறம் ஏது சத்தம்? பசுமையும் அமைதியுமான நீர்வழிப் பயணம்தான். அரை மணி நேரத்திற்குப் பிறகு, பெரிய மண்திட்டு தெரிந்தது. பக்கத்தில் போய் வல்லத்தை நிறுத்திய படகோட்டிகள், போய்க் காத்து வாங்கிட்டு வாங்கப்பா. காத்திருக்கோம் என்றபடி பீடியைப் பற்றவைத்தனர்.

தமிழ் ஓவியா said...

வல்லத்திலிருந்து இறங்கிய நண்பர்கள் கூட்டம் மணலை நோக்கி ஓடியது. எதிரில் கண்ணுக்கெட்டியவரை நீலக்கடல். இந்தப்பக்கம், அலையாத்தி காட்டுடன் பரந்த நீர்நிலை, நடுவில் பெரிய மணல்பரப்பு, அந்தப்பக்கம் விரிந்த கடல். கற்பனை ஓவியத்தில் மட்டுமே சாத்தியப்படுவதை உண்மையாகவே வரைந்திருந்தது இயற்கை. மணல்பரப்பில் ஓடியாடியபடி ஆசைதீர ஆட்டம் போட்டார்கள் நண்பர்கள். நல்லவெயில். ஒதுங்குவதற்கு எந்த நிழலும் இல்லை. உடம்பெல்லாம் வியர்வை வழிய, ஆட்டம் போட்டதில் நண்பர்கள் கூட்டத்திற்குக் களைப்பு ஏற்பட்டு நாக்கு வறண்டு, தொண்டை காய்ந்தது. கடல்நீரும் உப்பு. நீரோடையும் உப்பு. தாகத்தைத் தணிக்க என்ன செய்வது எனப் பார்த்தபோது, மணல் திட்டில் சில குடிசைகள் தெரிந்தன. சரியான நீர்ப்பசியோடு அங்கே போய் தண்ணீர் கேட்டார்கள். எங்க வீட்டுத் தண்ணியெல்லாம் நீங்க குடிப்பீங்களா? என்றார் குடிசைப் பெண்மணி. தாகத்துக்குத் தண்ணிதாங்க வேணும். யார் வீட்டுத் தண்ணியா இருந்தா என்னங்க?

பெரிய சொம்பில் தண்ணீர் வந்தது. அதுவும் உப்புதான். கடல்நீரைவிட கரிப்பு கம்மி. தாகத்தை அடக்க அது போதுமானதாக இருந்தது.

இது என்ன ஊருங்க?

நடு முடகல் ஓடைன்னு பேரு. நாங்களெல்லாம் மீனவங்க. அதோ தெரியுதே அந்தக் கிராமத்துக்குப் பேரு சின்னவாய்க்கால். அந்தப் பக்கம் இருக்கிற ஊரு எம்.ஜி.ஆர் திட்டு. எல்லாருக்கும் கடல்தான் தெய்வம்.

அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் எங்க போய் வாங்குவீங்க?

வல்லத்துல ஏறி கிள்ளைக்குப் போய் வாங்குவோம். தீவாளி, பொங்கலுக்குத் துணிமணி எடுக்கணும்னா டவுனுக்குப் போவோம். அதான் சிதம்பரத்துக்கு.

உங்களுக்கு உதவி ஒத்தாசைக்கு யாரும் கிடையாதா?

ஏன் கிடையாது.. எல்லா மீனவ கிராமமும் உதவி ஒத்தாசையாத்தான் இருக்கும். நாங்க ஏதாவது சேதி சொல்லணும்னாலோ, பேசணும்னாலோ இதோ இந்தக் கொடி மரம் இருக்குதே இதிலே பச்சக்கொடி ஏத்துவோம். அதப் பார்த்துட்டு, அந்தக் கிராமத்துல உள்ளவங்களும் கொடி ஏத்துவாங்க. அப்படி ஏத்துனா, உதவி ஒத்தாசைக்கு வர்றோம்னு அர்த்தம். யாரு மொதல்ல கொடி ஏத்துறாங்களோ அந்தக் கிராமத்துக்கு வந்து பேசி, ஆகவேண்டிய உதவிகளைச் செய்வாங்க.

அரசியல்வாதிகளெல்லாம் வரமாட்டாங்களா?.. ஓட்டெல்லாம் போடுவீங்களா?

போட்டுல வந்து அழைச்சிட்டுப் போவாங்க.. ஓட்டுப் போடுவோம்.

யாருக்குப் போடுவீங்க?

என்ன இப்படிக் கேக்குறீங்க? ஓட்டுன்னா எம்.ஜி.ஆருக்குத்தான்
எம்.ஜி.ஆர்தான் இப்ப இல்லையே

அவரு இல்லாட்டி என்ன, அவரோட கட்சி இருக்குதுல்ல..

இன்னொரு சொம்பு தண்ணி கொடுங்க என்று கேட்டு -வாங்கிக் குடித்துவிட்டு, வல்லத்தை நோக்கி வந்தார்கள் நண்பர்கள். மறுபடியும் அலையாத்தி காடுகள் வழியே தண்ணீர்ப் பயணம். அதன் பசுமையைப் போலவே, தீவுகளாக வாழும் மீனவ மக்களைப் பற்றிய நினைவுகளும் பசுமையாக அவர்கள் மனதில் தங்கிவிட்டன. படகுப்பயணம் முடிந்தாலும் காலத்தின் பயணம் நிற்கவில்லை. மணல் திட்டுக் குடிசையில் சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு பிச்சாவரம் வந்தார்கள் நண்பர்கள். இந்த முறை நடராஜா சர்வீஸ் இல்லை. இனோவா, ஸ்கார்பியோ, ஸ்கோடா ரக வண்டிகளில் வந்திருந்தார்கள். படகுத்துறையும் நவீனமாகியிருந்தது. ஊராட்சித் தலைவரிடம் ஏற்கெனவே தகவல் கொடுத்திருந்ததால், மணல்திட்டு வரை கவர்மெண்ட் போட்டிலேயே போவதற்கு ஸ்பெஷல் ஏற்பாடு செய்திருந்தார். அலையாத்தி காடு, அழகழகான பறவைகள் என ஸ்டீம்போட்டில் நீர்ப்பயணம் தொடர்ந்தது. தசாவதாரம் படத்துல கமலஹாசனை சாமிசிலையோட கட்டி தண்ணியில தூக்கிப்போடுவாங்களே.. அந்த சீனெல்லாம் இங்கதான் எடுத்தாங்க என்றார் படகுக்காரர் பெருமையாக. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது என்று பாடின பொடிசுகள்.

நீர்வழி கடந்து, மணல் பகுதிக்கு வந்தபோது ஆச்சரியம். வெட்டவெளி, பொட்டல் வெயில் எல்லாம் மாறி பசுஞ்சோலையாகியிருந்தன. தென்னை மரங்கள் நிழல் தந்தன. சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க குடில்கள் இருந்தன. தண்ணீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஊஞ்சல், சறுக்குமரம் என குழந்தைகள் ஆசைதீர விளையாடின. அந்த இடத்திலிருந்து கிளம்பவே யாருக்கும் மனசு வரவில்லை. செல்போன்கள் படம் பிடித்தபடியே இருந்தன. படகுக்காரர் குரல் கொடுத்தார்.

திரும்பி வந்தார்கள். போட் கிளம்பியபோது, நண்பர்கள் கேட்டார்கள், இங்கே மீனவ கிராமங்கள் இருந்திச்சே.. அவங்களெல்லாம் வேற இடத்துக்குப் போயிட்டாங்களா?
என்ன இப்படிக் கேக்குறீங்க? சுனாமி வந்தப்ப அவங்க எல்லாம் தப்பிக்க வழியே இல்லாம தண்ணியிலே மூழ்கிச் செத்துப்போயிட்டாங்க. எல்லா கிராமங்களும் மொத்தமா அழிஞ்சுபோயிடிச்சி. அப்புறம்தான், இதை டூரிஸ்ட் ப்ளேஸ் ஆக்கியிருக்காங்க. நல்லா சுத்திப் பார்த்தீங்களா என்றார் படகுக்காரர்.

ஆழிப்பேரலை இப்போது அடிநெஞ்சில்...

தமிழ் ஓவியா said...

நேர்காணல் : ஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல்!


உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளின் பெயர்களைப் புதிதாய்க் கேட்போம். அங்கும் தமிழர்கள் இருப்பதைக் கேட்டு வியப்படைவோம். மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் தமிழர்கள் வாழ்வதில் நமக்கு ஆச்சர்யம் இல்லை. அதேபோல அய்ரோப்பிய நாடுகள் முழுக்கவும்கூட தமிழர்கள் நிறைந்துள்ளனர். இன்னும் சொன்னால் ஆப்பிரிக்க நாடுகளில்கூட நம்மவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவு. அதேபோன்று ஜப்பானிலும் தமிழர்கள் குறைவாய் இருக்கின்றனர்.

ஒ.. அந்த நாட்டிலா இருக்கின்றீர்கள்? என்கிற வியப்புக் கேள்விக்குள்ளே ஜப்பானும் வருகிறது. பொதுவாக வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் தங்களுக்குச் சிறப்புத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு. சொந்த நாட்டிற்குள் வரும்போது அந்த மிடுக்குத் தெரியும். அதேநேரம் வெளிநாட்டில் வசிக்கும் போது மிக இயல்பாகவே இருப்பர். தானுண்டு தன் வேலையுண்டு எனத் திகழ்வர். சக தமிழர்களைச் சந்திப்பதிலும், அறிமுகம் கொள்வதிலும் ஆர்வமின்றி இருப்பர். அந்த நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளில் பங்கேற்காமலும், பல நேரம் அது தொடர்பாய் அறியாமலுமே காணப்படுவர். இதற்கு ஆர்வமின்மை காரணமாக இருந்தாலும், வெளிநாட்டில் ஏன் இந்த வேண்டாத வேலை? இதனால் பணி பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? என்கிற பயமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படியா என்றால் கிடையாது. பத்தாயிரம் பேருக்குப் பத்து பேர் எங்காவது ஒரு மூலையில் வேலை செய்கிறார்கள். அந்தப் பத்துப் பேரைத்தான் சிறுபான்மை என்றும், உங்களால் என்ன செய்துவிட முடியும் என்றும் பெரும்பான்மை கேள்வி கேட்கிறது. ஆனால் அந்தப் பத்துப் பேர் உருவாக்குகிற நெருப்புப் பொறியில் தான் பல ஆயிரம் பேர் வெளிச்சம் பெறுகிறார்கள்.

அப்படியான பொறி வைக்கிற பணியை நம் தோழர் ஒருவர் செய்து வருகிறார். அதுவும் ஜப்பானில். அந்த நாட்டின் வரலாற்றிலே இல்லாத ஒன்றையும் அவர் செய்திருக்க, ஜப்பான் அரசாங்கம் அவரை மேலும் கீழும் பார்க்கிறது. ஆனால், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அவர் செய்த நேர்மையான முறைகள். சில நாள்கள் விடுப்பில் தமிழகம் வந்த அவரை, உண்மை இதழுக்காய் சந்தித்தோம். கொஞ்ச நேரம் அவருடன் இருப்போம், வாருங்கள். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் பெயர் இரா.செந்தில்குமார். மன்னார்குடி என் சொந்த ஊர். தஞ்சை பூண்டிக் கல்லூரியிலும், சென்னையில் மேற்படிப்பும் முடித்து, 2002 ஆம் ஆண்டு ஜப்பான் சென்றேன். 12 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கையோடு இன்னும் தொடர்கிறேன். உங்களின் கொள்கை என்பது? மன்னார்குடி தேரடி திடல் அருகே எங்கள் வீடு. அங்கு நடைபெறும் கூட்டங்கள் அனைத்தையும் நான் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். எனினும், நான் விரும்பியே கேட்டேன். அப்போது என் வயது பத்தாக இருந்தது. மிகச் சிறிய வயது. எனினும் திராவிடர் கழகக் கூட்டங்களும், கம்யூனிஸ்ட் கூட்டங்களும் எனக்குள் ஏதோ செய்து வந்தன. ஒரு விசயத்தை வீட்டில் ஒரு மாதிரி சொல்ல, கூட்டங்களில் வேறு மாதிரி சொல்கிறார்களே என்கிற சிந்தனையின் தொடர்ச்சியில் தொடங்கியது என் கருத்தாக்கம். என் வயது நண்பர்கள் விளையாட்டிலும், திரைப்படத்திலும் இருக்க நான் வேறு மாதிரியாகக் காணப்பட்டேன். கூட்டங்கள் நடைபெறும் தொடர் வேளைகளில், எல்லோரும் வீடுகளில் இருக்க, நான் மட்டும் மேடை முன் முதலில் நின்று, கடைசி ஆளாய்த் திரும்புவேன். இறுதியாய் எனக்கான கருத்தை உருவாக்க அதுவே காரணமானது.

கூட்டங்கள் கேட்பதற்கு வீட்டில் எதிர்ப்பு இல்லையா?

என்னமோ தெரியவில்லை, யாருமே எதிர்க்கவில்லை. ஒருவேளை, படிப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் நான் செயல்பட்டது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ் ஓவியா said...

பள்ளி இடைவேளையில், வாசல் முன்பு திராவிடர் கழகத் தெருமுனைக் கூட்டம் நடைபெறும். நன்றாக நினைவிருக்கிறது. சாரங்கன் அய்யாவை அங்கு பார்ப்பேன். இருக்கும் கொஞ்ச நேரத்திலும் தெருமுனைக் கூட்டம் கேட்டுவிட்டு, பள்ளிக்கு ஓடுவேன். இதுபோன்ற தெருமுனைக் கூட்டங்கள் நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுக விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படித்தான் நான் வளர்ந்து கொண்டேன்.

ஜப்பான் வாழ்வு குறித்துச் சொல்லுங்கள்?

தமிழ்நாட்டில் இருந்தவரை பல்வேறு கூட்டங்கள் செல்வதும், படிப்பதுமாக இருந்தேன். ஜப்பான் சென்ற பிறகு என்னால் வேலை, வீடு என்றிருக்க முடியவில்லை. அப்போது மனவெளிப் பயணம் (manavelippayanam.blogspot.in) என்கிற வலைப்பூ தொடங்கி எழுதி வந்தேன். தினமும் தமிழ்நாடு, இந்தியச் செய்திகளை ஒரு மணி நேரம் வாசித்து வந்தேன். இப்போதும் வாசிக்கிறேன். பணிச்சுமை அதிகம் இருந்தாலும், அதை வாசிக்காமல் இருந்தால் சுமை கூடுவதாய் உணர்ந்தேன். என் வாசிப்பில் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய இதழ்கள் உள்ளிட்ட எந்த ஒன்றையும் நான் விடவில்லை. ஜப்பானில் எங்காவது தமிழர்கள் கிடைத்தால் பேசி மகிழ்வேன். ஏனெனில், அங்கு நம்மவர்கள் குறைவு. இப்படியான வேளையில் அங்கு தமிழர் திருநாளில் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் மகிழ்வதற்கு அங்கு ஒன்றுமில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும், பயன் தரும் எதையாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. குறைந்தபட்சம் சமூகம் குறித்துப் பேசிக் கொள்ளவாவது தமிழர்கள் வேண்டும் என்பது என் ஆவலாக இருந்தது. தமிழர்கள் கிடைத்தார்களா?

கிடைத்தார்கள். பொங்கல் விழா குறித்துச் சொன்னேனே! அங்கு ஒன்றிரண்டு பேரைக் கண்டுபிடித்தேன். அவர்களுடன் நட்பு பாராட்டினேன். தொடர்ந்து என் முயற்சிக்குக் கொஞ்சம் தமிழர்கள் கிடைத்து வந்தார்கள். இப்படியான நிலையில்தான் ஈழப்போரில் தமிழர்கள் அநியாயமாய் செத்துப் போனார்கள். என்னால் ஜப்பானில் இருக்கவே முடியவில்லை. என்றாலும் எதையாவது செய்ய வேண்டும் எனத் தவித்தேன். எனக்குத் தெரிந்த அனைத்து இணையதளங்களிலும் எழுதிக் குவித்தேன். பேஸ்புக், ஆர்குட் போன்ற வலைத் தளங்களையும் ஆக்கிரமித்தேன். ஆனால் நான் செய்தது போதுமானதாக இல்லை. எனினும் என் செயல்கள் எனக்கு மேலும் சில நண்பர்களைத் தேடித் தந்தது. அந்த நேரத்தில் நீயா? நானா? என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஜப்பானில் பதிவு செய்யப்பட்டது. அதில் நான் பேசினேன். வேறு சிலரும் பேசினார்கள். அங்கே நாங்கள் அடையாளம் தெரிந்து கொண்டு, கைகோர்த்தோம். இப்படியான வேளையில்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இறப்பைக் கணினி வழி காண்கிறோம். என்ன செய்வதென்றே தெரியாமல், ஆனால் செய்ய வேண்டும் என்கிற கொதிப்பு அதிகமானது. உடன் நான்கு பேர் ஒன்று சேர்ந்து, ஒன்றைச் செய்தோம்.

தமிழ் ஓவியா said...

என்ன செய்தீர்கள்?

ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பொருளில் ஒரு விளக்க மனுவை, ஜப்பானிஷ் மொழியில் எழுதி, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கொடுக்கிறோம். ஒரு 0.30 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என ஆசியாவிற்கான வெளியுறவுத் துறை அதிகாரியிடம் கொண்டு விட்டார்கள். நாங்கள் பேசினோம். எல்லாவற்றையும் பேசினோம். எங்கள் தமிழர்களை ஜப்பானாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டோம். அந்த அதிகாரி அனுமதித்த முப்பது நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரமாகச் சந்திப்பை நீட்டித்தார். உங்கள் நியாயம் எங்களுக்குப் புரிகிறது, ஏற்கிறோம். ஆனால் இந்தியா எதனாலோ மறுக்கிறதே என்றார். எல்லா இடத்திலும் இந்தியா இடையூறாக இருக்கிறதே என எண்ணி, இந்தியத் தூதரகம் முன்பு நாங்கள் உண்ணாநிலைப் போராட்டம் செய்ய வேண்டும் என்றோம். அவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு அதுவெல்லாம் புதிது. வலியுடன் போராடி ஒரு வழியாய் அனுமதி பெற்றோம்.

காலை 8 முதல் 6 முடிய என்று நிர்ணயித்து, சில நிபந்தனைகள் கொடுத்தார்கள்.

நாங்களும் தேதி அறிவித்து, இணைய வழி விளம்பரம் செய்து, 30 தமிழர்களாவது கூடுவார்கள் என்று தயாரானோம். ஆனால் நூறு தமிழர்கள் உண்ணாவிரத இடத்தை நிரப்பிவிட்டனர். குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்தனர். சிலிர்த்துப் போனோம். போராட்டக் கோரிக்கைகளை தமிழ், ஆங்கிலம், ஜப்பானிஷ் ஆகிய மொழிகளில் எழுதி வைத்தோம். நிறையத் தமிழர்களும், ஒரு ஜப்பானியக் குடும்பமும் கையெழுத்துப் போட்டார்கள். இந்தியத் தூதரகம் என்ன செய்தார்கள்?

தமிழ் ஓவியா said...

இப்படிச் செய்வோம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள். அதுவும் பெருந்திரள் உணர்வோடு! உண்ணாநிலை முடிந்து கோரிக்கை கொடுக்கச் சென்றோம். தூதர் இல்லை, வேறு அதிகாரியிடம் கொடுங்கள் என ஒரு பஞ்சாபியைக் காட்டிச் சென்றார்கள். அவரிடம் பேசினோம். அவர் சொன்னார். நான் ஏற்கெனவே உங்கள் விசயங்களை அறிவேன். ஒரு அதிகாரியாய் உங்கள் நிலையை ஆதரிக்க மாட்டேன். தனி மனிதனாய் உங்கள் பக்கம்தான் நியாயம் என்பேன் என்றார். ஜப்பான் அரசாங்கம் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது வரலாற்றுச் சாதனை. இளைஞர்கள், நீங்கள் சாதித்துள்ளீர்கள் என்றார்கள்.

உங்களின் பணிகளில் வேறு என்ன?

முழுமதி என்கிற அறக்கட்டளையை நண்பர் ஒருவர் இயக்கி வருகிறார். அதில் அய்ம்பது பேர் அளவில் உறுப்பினர்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு உதவி செய்வது அதன் நோக்கம். பள்ளிகளைத் தத்தெடுப்பது, கல்வி உதவித் தொகை வழங்குவது எனத் தொடர்கிறோம். உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு தொகை வழங்குவோம். பிறந்த, திருமண நாள்களில் நம் தமிழர்கள் பணம் தருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, ஜப்பானில் புகுசிமா அணு உலை விபத்தின் போது நேரடியாகச் சென்று உதவிகள் செய்தோம். பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளிலும் உதவி வருகிறோம். சீனப் பொருள்கள் ஜப்பானைப் பாதித்துள்ளதா? இல்லை என்றே சொல்வேன். சாதாரண மற்றும் தொழில்நுட்பப் பொருள்களையும் ஒரு காலத்தில் ஜப்பானே தயாரித்தது. இப்போது சாதாரணப் பொருள்களை சீனா வழங்குகிறது. அதுபோன்ற பொருள்களை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால் தொழில்நுட்பப் பொருள்களில் ஜப்பான் மேலும் வளர்ந்தே வருகிறது. உலகமயத்தால் ஜப்பான் பாதிக்கப்பட்டுள்ளதா? உலகமயத்தால் ஜப்பான் பாதிக்கவில்லை. மாறாக, உலகமயம் மூலம் வெற்றி பெற்ற நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

ஜப்பான் மொழி?

ஜப்பானில் காஞ்சி என்கிற வடிவில் 2000 எழுத்துகள் உள்ளன. ஒரு ஜப்பானிய மாணவன் 8 ஆம் வகுப்பு முடிக்கும் போதே, இந்தக் காஞ்சி எழுத்துக் கொண்டு அவரால் எழுத, வாசிக்க முடியும். அவ்வளவு தாமதத்திலும் அவர்கள் மொழியை விடவில்லை. ஆனால் நமக்கு இருப்பதோ 247 எழுத்துகள். அதையே படிக்க மறுக்கிறோம். ஆங்கிலம் படிப்பவர்கள்கூட, தமிழைக் கண்டிப்பாக இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்கிற நிலை வேண்டும். தமிழே தெரியாத நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜப்பானியர்கள் குறித்து? நிறுவனங்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள். விளைவு மன அழுத்தம். இலக்கியம், புத்தகங்கள், திரைப்படம் குறைந்து விட்டன. அமெரிக்காவின் பண்பாட்டு ஆதிக்கம் அதிகரிக்கின்றது. ஆண்டுக்கு தற்கொலைகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் தொட்டுவிட்டது. மற்றபடி உண்மைக்கும், உழைப்புக்கும் பேர் பெற்றவர்கள். மத உணர்வு என்பது மிகச் சிறியது. ஒரு தெருவில், ஒரு வீட்டில், ஒரு கண்ணாடி உடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். (Broken Window Theory) இல்லாவிட்டால் அடுத்தடுத்த கண்ணாடிகளுக்கும் ஆபத்து வரும் என்கிறார்கள். அந்தக் கண்ணாடியை வீட்டுக்காரர் அல்லது பக்கத்து மனிதர் அல்லது வழிப்போக்கர் அல்லது அரசாங்கம் யாராவது சரி செய்ய வேண்டும். தவறினால் எல்லோருக்கும் ஆபத்துப் பரவும் என்பது அவர்களின் எண்ணம்.

பெரியார்?

அவர்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அடிமை மனப்பான்மையை ஒழித்தவர். மற்ற மாநிலங்களில் ஒரு சிலர் முற்போக்குப் பேசினர். ஆனால், பெரியார் பெரிய தாக்கம் செய்தவர். திராவிடர் கழகத்திற்கு அரசியல் வேண்டாம் என பெரியார் எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இயக்கம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு அது முக்கியக் காரணம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் பிறழாமல் இருப்பதற்கும் தேர்தல் மறுப்பு ஒரு சிறப்பு. பெரியார் அழுத்தமாகக் கொள்கையைச் சொன்னவர் என்கிறார்கள் சிலர். அப்படிச் சொன்னதாலே இந்தளவு தமிழ்ச் சமூகம் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து அக்கொள்கையை முன்னெடுத்து, சமூகத்தை மேம்படுத்துவோம். நன்றி.

சந்திப்பு:
வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

பாவேந்தர்


இதழுலகில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது.

அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.


திரையுலகில் பாவேந்தர்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். இவற்றில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(1947) என்ற படத்திற்கு அவர் எழுதியது பலருக்கும் தெரிந்திருக்கும். பாலாமணி(எ)பக்காத் திருடன் (1937), இராமானுஜர் (1938), கவிகாளமேகம் (1940), சுலோசனா (1944), பொன்முடி(1949), வளையாபதி(1952)ஆகிய படங்களும் பாவேந்தர் எழுத்தில் வெளிவந்தவை. சிவாஜி நடிக்க தயாரிப்பதாக இருந்த பாண்டியன் பரிசு மற்றும் மகாகவி பாரதியார் ஆகிய படங்கள் தயாரிக்கப்படவில்லை.

1937 தொடங்கி 1960 வரை 22 திரைப்படங்களில் பாவேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பின் ஏறத்தாழ 25 படங்களில் பாவேந்தர் எழுதிய கவிதைகள் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளன.



பாவேந்தரின் குறள் உரை

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 85 குறட்பாக்களுக்கு உரை எழுதியிருக்கிறார். இவற்றில் கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஒன்று. ஆனால், இதற்கு உலகின் தோற்றம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 13 பள்ளிகளில் 1907 முதல் 1944 வரை பாவேந்தர் பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்.

இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் என்ற இயற்கை விவசாயப் பண்ணையினை உருவாக்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். அண்மையில், மத்திய அரசின் காவிரிப் படுகையின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிப் போராடி வந்த நம்மாழ்வார் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ் ஓவியா said...

ஹெய்ல் ஹிட்லரய்யங்கார் - டான் அசோக்


அந்தச் சிறுவனுக்கு அகோரப் பசி. முதலாம் உலகப்போரில் அந்த நாடு வஞ்சிக்கப்பட்டதில் இருந்து பசி அவர்கள் நாட்டில் மூச்சுவிடுவதைப் போன்ற அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரண்டு வாய் சூப்புக்காக 3 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் கொடுமை அந்தச் சிறுவனை வாட்டியது. எவ்வளவோ சாதித்த இனம். எவ்வளவோ பெருமைகள் வாய்ந்த இனம். ஏன் இப்படி வரிசையில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது என அவன் மூளை அவனது இதயத்திற்கு சதா தந்தி அனுப்பிக் கொண்டிருந்தது. வரிசையில் நின்று நின்றே நண்பனாகிக் கொண்ட அர்மீன்ஸிடம் அடிக்கடி இதுபற்றி அந்தச் சிறுவன் பேசுவதுண்டு. மாலையில் சூப் குடிப்பதை மட்டுமே அன்றாட வேலையாக வைத்திருந்த அந்த இரு சிறுவர்களும் ஒருவழியாய் அவர்கள் நாடு முதலாம் உலகப்போரில் இவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்பட்டதற்கு தங்கள் நாட்டில் இருக்கும் மற்ற இனத்தவர்கள்தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். சில காலத்திற்குப் பிறகு அர்மீன்ஸ் தன் தந்தையுடன் இங்கிலாந்து சென்றுவிட்டான்.

-அந்த இளைஞனுக்குச் சிறை பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை. கருவறைக்குள்ளே மனிதர்கள் பிறக்கிறார்கள், சிறையறைக்குள்ளே தலைவர்கள் பிறக்கிறார்கள் என சூப் குடித்த நேரம்போக மற்ற நேரத்தில் அவன் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அதன்மேல் அவனுக்குத் தீர்க்கமான நம்பிக்கை உண்டு. சிறை அவனுக்குப் போதிமரமாக இருந்தது. நிறையச் சிந்தித்தான்! சிறையின் விளையாட்டு நேரத்தில் அந்த இளைஞன் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பான். ஒருநாள் அவன் தோள்களில் ஒரு கை விழுந்தது. சிறுவயது நண்பன் அர்மீன்ஸின் கை. வேறு வேறு காரணங்களுக்காக உள்ளே வந்திருந்தாலும் அவர்கள் நோக்கம் அவர்கள் நாட்டின் மீட்சிதான். மீண்டும் நெடுநேரம் பேசத் தொடங்கினார்கள். சிறுவயதில் பிரச்சினைகளை அலசியவர்கள் இப்போது தீர்வுகளைத் தேடினார்கள். மீதமிருக்கும் ஒருமாத சிறைவாழ்க்கை முடிவதற்குள் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டார்கள். ஆபத்தில்லாத எதிரி,

தமிழ் ஓவியா said...

ஆபத்தில்லாத துரோகி என்பவன் தலை வேறு முண்டம் வேறாகக் கிடப்பவன்தான் என அந்த இளைஞன் முடிவு செய்திருந்தான். அதையே தீர்வாகவும் நினைத்திருந்தான். அர்மீன்ஸ் மனதிலோ வேறு ஒரு திட்டம் இருந்தது. அர்மீன்ஸ் அந்த இளைஞனைப் போன்றவன் அல்ல. அவன் ஒரு பயந்தாங்கொள்ளி. ஆனால் புத்திசாலி. ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்திற்கும், பிறகு அங்கிருந்து இந்தியாவிற்கும் போய் பல வருடங்கள் தங்கியிருந்த அர்மீன்ஸ் இப்போது இன்னும் புத்திசாலியாகி வந்திருந்தான்.

அதனால் அவனுக்கு வேறு ஒரு தீர்வு தெரிந்திருந்தது. அந்தத் தீர்வை உள்ளடக்கி ஜெர்மனில் எழுதப்பட்டிருந்த ஒரு கையெழுத்துப் பிரதிப் புத்தகத்தையும் அவன் வைத்திருந்தான். இருவரும் தங்கள் தீர்வுகளை விடிய விடியப் பரிமாறி விவாதித்தார்கள். மாற்று இனத்தவர்கள் அனைவரையும் கூண்டோடு கொலை செய்வதுதான் ஒரே தீர்வு என எண்ணியிருந்த அந்த இளைஞனின் எண்ணம் ஒரேடியாக மாறியது.

தமிழ் ஓவியா said...

கொலையைவிடப் பெரிய, கொலையைவிடக் கொடூர வன்முறைகள் எல்லாம் இருப்பதை அன்றுதான் அந்த இளைஞன் அறிந்து கொண்டான். அர்மீன்ஸை உச்சிமுகர்ந்தான். நான் ஆட்சிக்கு வரும்போது நீதான் என் பிரதமமந்திரி. என் மகன் ஆளும்போது உன் மகன் பிரதம மந்திரியாக இருப்பான் என அன்றே அறிவித்தான். அர்மீன்ஸ் கொடுத்த புத்தகத்தை வாஞ்சையுடன் வாங்கி மார்பில் தழுவிக் கொண்டான். ஆம், இனி இந்த நாட்டை ஆளப்போவது இந்தப் புத்தகம்தான், இனி தன் இனத்தைக் காலாகாலத்திற்கும் அதிகாரத்தில் அமர்த்தப்போவதும் இதுதான் என முடிவு செய்தான்!

-- ஆட்சிக்கட்டிலுக்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு 2 மணி நேரம்தான் தூங்கினார் அவர். ஆனால் அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அதற்குத்தானே சிறுவயதில் சூப்புக்காக ஏங்கிய காலத்தில் இருந்தே ஆசைப்பட்டார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே முழுவீச்சில் பக்தியின், மதத்தின் முக்கியத்துவம் மக்களிடையே சதாசர்வ காலமும் பரப்பப்பட்டது. உணவுக்குத் தவித்த மக்கள் விடிவுக்காக எதையும் ஏற்கவும் செய்யவும் காத்திருந்தார்கள். ஆங்காங்கே ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. நாட்டின் பண்டையகால இதிகாச, இலக்கியக் கதாநாயகர்கள் எல்லாம் கடவுள்களாக மாற்றப்பட்டார்கள். கோவில்களில் அவர்களுக்குச் சிலைகள் நிறுவப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேல் அந்த நாட்டில் இருந்த மக்கள் நான்கு பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அதன்படியே அவர்கள் குடியுரிமையும் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தண்டனை என அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்பட்டது. முதல் மற்றும் முக்கியப் பிரிவாக தனது பிரிவை அறிவித்துக்கொண்டார் அந்த சர்வாதிகாரி. மற்ற இனத்தவர்கள் அடுத்தடுத்த பிரிவுகளாக ஒன்றன்கீழ் ஒன்றாக இருந்தார்கள். சிறைச்சாலையில் அர்மீன்ஸ் தனக்குக் கொடுத்த புத்தகத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தொடங்கினார் சர்வாதிகாரி.

தமிழ் ஓவியா said...

ஆரம்பத்தில் இந்த மாற்றத்தினால் பெரும்குழப்பம் நிலவியது. ஆனால் வறுமையும், படிப்பறிவின்மையும், பசியும் மக்களைச் சிந்திக்கவிடவில்லை. கீழே உள்ள பிரிவினர்களுக்கு கல்வி என்பது ஆடம்பரம் என புரியவைக்கப்பட்டு, உழைப்பின் உன்னதம் உணர்த்தப்பட்டது. மிக விருப்பமாக அரசின் ஆணைகளிலும், மாற்றங்களிலும் தங்களைத் தாங்களே புகுத்திக்கொண்டார்கள் அந்த மக்கள். தங்களின் குழந்தைகளை அரசு தங்களிடம் சொன்னதை அப்படியே சொல்லி வளர்த்தார்கள். முதல் தலைமுறையில் இருந்த குழப்பம் கொஞ்சம்கூட இரண்டாம் தலைமுறையில் இல்லை. நாடு மிக அமைதியாக இயங்கியது. நிலையான ஆட்சியும் நடந்தது. முதல் பிரிவினர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். அவர்கள் வாக்கு வேத வாக்கு என மக்கள் தீர்க்கமாக நம்பினார்கள். உரிமைக்காகச் சண்டை போட்டாலும் கீழே உள்ள மூன்று பிரிவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களேயொழிய முதல் பிரிவினரிடம் யாரும் பிரச்சினை செய்வதில்லை.

அகங்காரமும், ஆணவமும், அதிகாரமும்கூட முதல் பிரிவினரின் நற்குணங்களாக, உரிமைகளாக மக்களால் பார்க்கப்பட்டது.------ இரண்டாம் உலகப்போர் மூண்டது. யாரையெல்லாம் கொலை செய்யலாம் என அந்த இளைஞன் நினைத்தானோ, அவர்களையெல்லாம் ராணுவ வீரர்களாக ஆக்கினான். பீரங்கிகளின் முன் நாட்டுப்பற்றுடன் சென்று சர்வாதிகாரியின் புகழ் ஓங்குக எனக் கத்தியபடியே விழுந்தார்கள். மிகப்பெரிய வெற்றி இல்லையெனினும் யாராலும் சர்வாதிகாரியை நெருங்க முடியவில்லை என்பதே பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. எந்த இனப்படுகொலையும் நடக்கவில்லை என்பதால் சர்வாதிகாரிக்கு போருக்குப் பின்னும் நல்ல பேரே நிலைத்தது. ஒருவழியாக சூப்புக்காக ஏங்கிய காலங்களில் கனவுகண்டபடி தான் அழிக்க நினைத்த பிற இனத்தவர்களை எல்லாம் அடிமைகளாக்கிக் கொண்டார் சிறுவனாய் இருந்து இளைஞனாய் வளர்ந்து சர்வாதிகாரியாய் உயர்ந்த அவர். கொலையை விட மோசமான, ஆனால் குற்றம் எனக் கருதப்படாத அறிவுசார் வன்முறைகளில் கைதேர்ந்தவர் ஆனார். இரண்டாம் உலகப்போர் முடிந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆனாலும்கூட வழிவழியாக இதே அமைப்புதான் அந்த நாட்டில் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. மக்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை.

அடிமைத்தனம் கூட தங்கள் உரிமை என்ற அளவிலே அங்கே வாழ்கிறார்கள்.

முதல் பிரிவினர் வீட்டில் தங்களுக்குக் காபி கொடுக்கப்பட்டால் மற்ற மூன்று பிரிவினரும், குறிப்பாக நாலாவது பிரிவினர் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறார்கள். முதல் பிரிவு மக்களை நான்காவது பிரிவினர்கள் பெரும்பாலும் கோட்சே கோட்சே என சாமி என்ற பொருள்படும்படி அழைக்கிறார்கள்.

இந்த சட்டதிட்டங்களையும், வேதங்களையும் நிறுவிய முதல் சர்வாதிகாரியின் பேரன் அலோய் ஹிட்லர் இப்போது ஆட்சியில் இருக்கிறார். அவருக்கு உற்ற நண்பராக விளங்குகிறவர் அர்மீன்ஸின் கொள்ளுப் பேரன் அர்னூல்ஃப் அர்மீன்ஸ். ஜெர்மனி தேசிய அருங்காட்சியகத்தில் ஆக்சல் அர்மீன்ஸ் தன் நண்பன் அடால்ஃப் ஹிட்லர் என்ற இளைஞனுக்குச் சிறையில் அளித்த புத்தகம் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புத்தகத்தின் பெயர்... ஹ்ம்ம்... ஏதோ எழுதியிருக்கிறது.... பொறுங்கள்... ஆங்..... மனு தர்மம்!!

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியம். - (குடிஅரசு, 3.3.1929)

தமிழ் ஓவியா said...


24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படுவதற்கான 12 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; ஏற்கெனவே மூன்று பேர் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், ஒரு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தப் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை; தாழ்த்தப்பட் டோரில் அருந்ததியர் போன்றவர்களுக்கு வாய்ப்பு, காலங்காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை; அதுபோலவே, மீனவர், சலவையாளர், முடிதிருத்துவோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார் (விடுதலை, 17.1.2014).

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை உணர்வை வெளிப்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக் காலி இடங்களை நிரப்புவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்யவும் கோரி 24.1.2014 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் செவ்வனே செய்துகொண்டுள் ளனர். இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூகநீதியும், சுயமரியாதையும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் தோழர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாளான பொங்கல் விழாவில் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார் (17.1.2014).

திராவிடர் கழகத்தின் தொடர் பணியாகவும் அது அமைந்தே வந்திருக்கிறது என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே! இதே சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் அருகேகூட நீதித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில், பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு. அதற்கான நல் விளைவுகளும் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது.

நாளை மறுநாளும் இதே சமூகநீதி நோக்கத் தோடே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மதுரைக் கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கூட இதே காரணத்திற்காக நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்குரைஞர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இது தொடர்பாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் கர்ணன் அவர்களும் தானே முன்வந்து ஆர்ப்பரித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான இந்த மண்ணின் மனப்பான்மையை (Soil Psychology)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதி பதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மக் களுக்குத் தேவையான சட்டங்களை இயற்று கிறார்கள்; அந்தச் சட்டங்களைக்கூட செல்லாது என்று தடை செய்யும் அளவுக்கு உயர் அதிகாரம் படைத்த மய்யங்களாக உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட மய்யத்தில் வருணாசிரம உணர்வு, ஜாதீய உணர்வு நிலவும் ஒரு நாட்டில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது நீதித்துறையிலிருந்து தொடங்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகம் கொடுக்கும் இந்தக் குரல் சட்ட ரீதியானது; சமூகத் தளத்தில் முதன்மையாக எழுப்பும் இன்றியமையாத சமூகநீதிக்கானது.

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல், ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக் கிறோம்!!!

Read more: http://viduthalai.in/page-2/73918.html#ixzz2rArbUogj

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!


புரிந்துகொள்வீர்!

பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?

Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

அருண்ஜேட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர் பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73915.html#ixzz2rAuAe8te

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம்: எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கொந்தளிப்பு!


சென்னை, ஜன.23- நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் அவர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

நீதிபதிகள் மற்றும் நீதித் துறையின் மீதான நம்பிக்கை என்பது சமூக நீதியைக் காப்பாற் றுவதிலும்தான் அடங்கியிருக் கிறது. ஆனால், நீதிபதிகளின் நியமனத்தில் நீண்ட நெடுங்கால மாக சமூக நீதி பின்பற்றப்படுவ தில்லை. இது நீதியைக் காப்பாற் றும் முழுமையான நடவடிக்கை யாகாது. நாட்டின் ஆட்சி, நிர்வாக அமைப்புகளில், நிர்வகிப்பவர் களைத் தெரிவு செய்யும் முறை யில், சில குறைபாடுகளும் விமர் சனங்களும் இருந்தாலும், வெளிப் படைத் தன்மையே நடை முறையில் இருந்து வருகின்றது. ஆனால், நீதித்துறையில் மட்டும் அத்தகைய வெளிப்படைத் தன்மை இன்னும் வாய்க்காமல் இருக்கிறது. வெளிப்படைத் தன்மை இருப்பதனால்தான் நாட்டை நிர்வகிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண குடிமக்களிலிருந்து யாராவது ஒருவர் உயர் பதவியில் அமர முடிகிறது. இல்லையெனில், இந்த வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப் படும். 20 பேர் மட்டுமே - தாழ்த்தப்பட்டோர்

ஆனால், தகுதி மற்றும் திறமையைக் காரணம் காட்டி நீதித் துறையில் இது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது பெரும் அநீதியாகும். தற்போது, இந்தியா விலுள்ள அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நீதிபதிகளில் 20 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக பட்சமாக சென்னை உயர்நீதிமன் றத்தில் மட்டும் தாழ்த்தப்பட் டோர் 8 பேர் நீதிபதிகளாக இருக் கிறார்கள். அதிலும் 2 பேர் பதவி மூப்பின் அடிப்படையில் வந்தவர் கள். 6 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டவர்கள். முற்போக்கு மாநிலமாகக் கருதப்படக்கூடிய தமிழகத்தில், 16 பேர் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், வெறும் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பெரும் அவலம். அப்படி யென்றால் பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய இத்தகைய அவ லத்தைப் பார்க்கும்போது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள் ளது என்பது புரியும்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களி லும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கப்படவேயில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதேவேளையில், அனைத்து உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் முற்பட்ட வகுப்பின ரின் ஆதிக்கமே மேலோங்கியிருக் கிறது என்பதை அறிய முடிகிறது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதி கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள 12 பேர் கொண்ட பட் டியலில் முற்பட்ட வகுப்பின ருக்கே பெரும்பான்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனை எதிர்த்து வழக்குரை ஞர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். இந் தத் தெரிவுகள் தகுதி, திறமையின் அடிப் படையில் நடைபெற வில்லை என்பதை வழக்குரைஞர்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிப் போராடி வருகின்றனர். தகுதி யுள்ளவர்களிலிருந்து நீதிபதிகள் நியமிக்கப் பட வேண்டும் என்ப தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் தகுதி, திறமை உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரிலும் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. இத் தகைய ஒடுக்கப்பட்ட சமூகங் களிலிருந்து திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படை யானதாக இருக்க வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் வழக்குரைஞர் சமூகத்தின் போராட் டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று ஆதரிக்கிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களி லும், உச்ச நீதிமன்றத்திலும் நீதி பதிகள் நியமனத்தில் இடஒதுக் கீட்டைப் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு, நீதித்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73960.html#ixzz2rGtqS6nu

தமிழ் ஓவியா said...


அருண்ஜேட்லி சொல்லுவதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!


450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முசுலிம் மக்களின் அயோத்தி பாபர் மசூதியை இடித்த குற்றவாளி கள், அந்த இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்றும், அந்தத் திட்டம் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், பிஜேபியின் மாநிலங் களவைத் தலைவருமான அருண்ஜேட்லி பச்சை யாக, கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். (Economic Times Dated 22.1.2014) என்றால் இதனை எந்தத் தரத்தில் வைத்து எடை போடுவது?

பிஜேபியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே என்ன பேசினார்?

பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் - இதைச் செய் ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் (தினமலர் 9.12.2009) என்று சொல்ல வில்லையா?

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர்; எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி போன்ற பிஜேபியின் பெருந் தலைவர்கள்.

21 ஆண்டுகள் ஓடி விட்டன. இதற்குப்பிறகும் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை; இன்னும் சொல்லப் போனால் இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு இந்தியாவின் துணைப் பிரதமராக அத்வானி வந்தார், முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். உமாபாரதி மத்தியப் பிரதேசத் தில் முதல் அமைச்சராக வந்தார் என்றால், இந்தக் கேவலத்தை எந்த வார்த்தைகளால் எடுத்துச் சொல்லுவது?

இந்த இழி செயலைச் செய்ததன் மூலம் இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை இடித்து நொறுக்கினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கிழித்து எறிந்தனர். இந்நாட்டுக் குடி மக்களான சிறுபான்மை மக்களுக்குப் பாது காப்பற்ற ஒரு பயங்கரத் தன்மையை ஏற்படுத்தி விட்டனர்.

இப்பொழுது அடுத்த கட்டமாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் - அதனைக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெறச் செய்வோம் என்று சொல்லுகிற அளவுக்கு தங்களின் இழி குணத்தை, காட்டு விலங்காண்டித்தனத்தை பேட்டியாகக் கொடுக்கிறார்கள் என்றால், இந்திய நாட்டு மக்கள் மிகவும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இதன் மூலம் பயங்கரவாதத்தை, வன் முறையை தங்களின் கொள்கையாகக் கொண் டவர்கள், அணுகுமுறையாகக் கொண்டவர்கள் நாட்டை ஆளத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நிலை உள்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும் எத்தகைய அதிர்வை ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். பொய்ப் பிரச்சாரத்தில் புத்தியைப் பறி கொடுத்தால் அதன் ஒட்டு மொத்தமான விபரீதத்தை நாட்டு மக்கள்தான் அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது!

அதுவும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள 2000 சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிக் கொன்ற நரேந்திரமோடி, பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை; நாடு காடாகி விடுவதற்கு நாட்டு மக்களே துணை போய்விடக் கூடாது என்பதுதான் நல்லோர் களின் கவலையாகும்.

மோடி பிரதமர் ஆனால் நாடே குஜராத்தாக மாறும் - மதவெறியின் கோரத்தாண்டவம் நடக் கும்; அதன் விளைவாக மனித ரத்த ஆறு தான் ஓடும் - மீண்டும் மீண்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/73966.html#ixzz2rGu8ctAa

தமிழ் ஓவியா said...


போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா? ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!

- விடுதலை, 20.11.1969

Read more: http://viduthalai.in/page-2/73963.html#ixzz2rGuHZAEz

தமிழ் ஓவியா said...


பண வேட்டையா? மகிழ்ச்சியா? - எது தேவை? - கி.வீரமணி


வாழ்க்கையின் முக்கிய தேவைகள், அடிப்படைத் தேவைகள் - இவைகளுக் காக பணம் (செல்வம்) அவசியம் தேவை. அதனால் துவக்கத்தில் மகிழ்ச்சி ஏற்படும்; கவலைகள் இராது.

ஆனால் அது ஒரு எல்லை வரையில்தான். அது எல்லையைத் தாண்டி விட்டால், மகிழ்ச்சி நாளுக்கு நாள் குறையத் துவங்கும்.

இதை Law of Diminishing Returns என்று பொருளாதாரப் பாடத்தில் கூறுவார்கள். எளிய முறையில் இதை விளக்க வேண்டுமானால் முதலில் நமது தேவையின் உச்சத்தில் நமக்குக் கிடைக்கும் பணத்தின் மதிப்பு நமக்கு மிக அதிகம். அதுவே அதிகமாகி பின்னால் கிடைக்கும்போது, அதே அளவு மகிழ்ச்சியை தருவதாக அது அமையாது; காரணம் முதலில் ஏற்பட்ட நமது நெருக்கடி - தேவை குறையக் குறைய, அடுத்து வரும் பணத்தின் மதிப்பு - நம்மைப் பொறுத்தவரை குறைந்ததாகவே காணப்படும் அல்லது உணரப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் மகிழ்ச்சிக்கான கனவுத் திட்டமாக வைத்துள்ள நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் நிலையில் விலை உயர்ந்த கார் வாங்க எண்ணி, அதனை ஓட்டி மகிழ ஆசைப்பட்டு ஒரு Audi, Ferrari, BMW (ஆடி, பெராரி, பிஎம். டபுள்யூ) போன்ற விலை உயர்ந்த காரை வாங்கியவுடன் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்தான். அதிலே சிலர் மிதக் கவும் செய்வர்!

ஆனால் முதல் நாள், முதல் வாரம், முதல் மாதம், முதல் ஆண்டு - ஒரே மாதிரியான துவக்க மகிழ்ச்சி நீடிக்குமா? இருக்காதே - பரபரப்பு, இன்ப வேகம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்துதானே வரும்.

இதை மனோதத்துவ நிபுணர்கள், Hedonic Adaptation என்ற சொற்றொ டரில் கூறுகிறார்கள்.

பிறகு இந்த ஆசை குறைந்து இன்னொரு ஆசை துளிர்த்து அதற்கு மாறிடும், இறுதியில் அந்தப் பிடிப்பு அவ்வளவாக இருக்காது. தானே குறையும் மாறிவரும்.

இந்த சுழலை ‘Hedonic Treadmill’ என்ற சொற்றொடர் மூலம் குறிக் கிறார்கள் மனோதத்துவ துறையில் - உளவியலில் இந்த சுற்றி சுழலும் நிலை ஒரு விசித்திரம்-

செல்வம், அந்தஸ்து, புகழ் - இப்படி தொடரத் தொடர, ஆசை சில நேரங் களில் பெருகிக் கொண்டே இருந்து, உச்ச கட்டத்திற்குப் போனாலும் மகிழ்ச் சியை இறுதியில் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் நிலை சர்வ சாதாரணம்!

எனவே பண வேட்டையும், குவித் தலும் மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்காது; மாறாக மனக் கவலை அதிகரிக்கவே செய்யும். நிம்மதி மெல்ல நிதானமாக விடை பெற கதவைத் தட்டும்!

எனவே இதனைத் தடுக்க அளவான பணத்தைச் சேர்ப்பதோடு தேவையான அளவு பணம் ‘Enough money’ தேவை களுக்கு ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டால் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கும்.

மகிழ்ச்சி நம் மனதைப் பொறுத்தது தானே!

1. பொதுவாக பல்வகை அனுபவங்கள் தரும் மகிழ்ச்சி - வெறும் ஆடம்பர நுகர் பொருள்களால் வந்து விடாது.

2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதைப் படித்தபலரும் நோயற்ற வாழ்வே குறைவற்ற மகிழ்ச்சி என்றும் உணர வேண்டும். எனவே உடல் நலம், உடலில் சக்தியை, ஆற்றலைப் பெருக்கி, தக்க வைத்துக் கொள்ளல் வற்றாத மகிழ்ச்சி ஊற்றாக அமையக் கூடும்.

3. நல்ல நண்பர்களுடன், நல்ல மனிதர்களுடன், நல்ல உறவுகளுடன் கூடிக் கலந்து வாழ்ந்தால், மகிழ்ச்சியின் பரிமாணம் மிகவும் விரிந்து பரந்து நம் வாழ்வைப் பெருக்கும்!

4. தொடர்ந்து எரிச்சல்தரும் நிலைமை களை புத்திசாலித்தனமாக தவிர்த்து விடக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. கொடுப்பதில் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படவே செய்யும்!

கடைசி நேரத்தில் எதையும் செய் யாமல், திட்டமிடாமல் இருந்துவிட்டு பிறகு அதற்காக மிகவும் எரிச்சலும், கோபமும் கொண்ட அன்றாட வாழ்க்கை யாக உங்கள் வாழ்க்கை அமைந்தால், நரம்புகள் உடல் ரீதியாக பலவீனம் அடைந்து, நரம்புத் தளர்ச்சியை உரு வாக்கி விடக் கூடும். பிறகு மகிழ்ச்சி ஏற்பட முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். எதையும் திட்டமிட்டு, நிதானித்துச் செய்தால் இந்த எரிச்சல் ஏற்பட வாய்ப்பே வராது அல்லவா?

6. சில ஓய்வு பெற்றவர்கள், அடுத்த நாள் முதலே ஏதோ மிகப் பெரிய இழப்புக்கு ஆளானதுபோல கவலை யில் நரை, திரை மூப்பு அடைந்தவர் களாக காட்சியளிப்பதை நாம் காணு கிறோம்.

இது தேவையற்ற மனோ நிலை யாகும். பணியாற்றினோம்; பெருமை யோடு ஓய்வைச் சுவைப்போம் - பொதுத் தொண்டு, மற்றவர்க்கு உதவுதல், புதுப்புது அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாமே!

கற்றுக் கொள்ளுதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாதே! அது மகிழ்ச்சியைத் தருமே!

அதற்குமுன் செலவழிக்கத் தவறிய உங்கள் குடும்பத்தவர் தொடங்கி, வீடு, தெரு, ஊர், சமூகம், உலகம் என்று உத விடும் பணி எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வாரி வாரி வழங்குமே!

இதை மறக்கலாமா? எனவே பண வேட்டையா முக்கியம்? மகிழ்ச்சி ஊற்றைத் தோண்ட முயலுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73968.html#ixzz2rGubmMf2

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்க! கலைஞர் பேட்டி


சென்னை, ஜன. 23 - தூக்குத் தண்டனை கூடவே கூடாதென்ற எனது கருத்து இன்றைக்கு நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளி வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று பகலில் அண்ணாஅறிவாலயத்திலிருந்து இல்லத்திற்குப் புறப்பட்டபோது செய்தி யாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டார்.

கலைஞர் அவர்கள்அளித்த பேட்டி வருமாறு :-

செய்தியாளர்:- உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துஎன்ன? ஏற்கனவே நீங்கள்பலமுறை தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பலமுறை எழுதியவர் ஆயிற்றே?

கலைஞர்:- தூக்குத் தண்டனை கூடவே கூடாதுஎன்று இன்று நேற்றல்ல; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.இதைப் பற்றி நான் விரிவாக முரசொலியில் எழுதியிருக் கிறேன்.

செய்தியாளர் :- ராஜீவ்காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனுதாக்கல் செய்துள்ளநிலையில் சிறை யிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்துமா?

கலைஞர்:-அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில்முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடை வேன்.

ஸ்டாலின் கருத்துப் பற்றி...

செய்தியாளர் :- கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்றுகேட்டிருந்தார். அதுபற்றி உங்கள்கருத்து?

கலைஞர் :-பொதுவாகமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினைஅவர் தெரிவித் திருக்கிறார்.

செய்தியாளர் :- மாநிலங்கள்அவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு நீங்கள் எந்தெந்தக் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி யிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?

கலைஞர் :-இல்லை.

செய்தியாளர் :- தே.மு.தி.க.விடம் ஆதரவு கேட்கப்படுமா?

கலைஞர் :-பொறுத்திருந்துபாருங்கள்.

செய்தியாளர் :- மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை தே.மு.தி.க.விற்கு தி.மு. கழகம் விட்டுக் கொடுத்தால், மக்களவைத் தேர்தலில்தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று அந்தக் கட்சியின் சார்பில் கருத்துச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.க.விற்கும், தி.மு. கழகத்திற்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்தகருத்தும் பரிசீலிக்கப்படும்.
செய்தியாளர் :- மனிதநேயமக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க., இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டு மென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் களே?
கலைஞர் :-அவர்களுடைய நல்லெண் ணத்தை நான் பாராட்டுகிறேன். செய்தியாளர் :- தே.மு.தி.க.விற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்க லாமே?

கலைஞர் :-எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித் திருக்கிறோம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்தார்.

Read more: http://viduthalai.in/page-3/73987.html#ixzz2rGuuZT5v

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கருத்து

24.1.2014 அன்று முற்பகல் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் விடுத்த தி.மு.க.வின் கட்டுப்பாடு காக்கும் அறிக்கையின்மீது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.

குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. இதன் மூலம் பேருரு (விஸ்வரூபம்) எடுத்துள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கையாகும் இது என்பது தாய்க் கழகத்தின் கருத்தாகும்
.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை 24.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74016.html#ixzz2rMQx189h

தமிழ் ஓவியா said...

பாலியல் வன்கொடுமை

பொன்னேரியையடுத்த சோம்பட்டையைச் சேர்ந்த நாகதாஸ் என்னும் பேர் வழி, பெண் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட் டான். பெண் கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவன் பின் மறுத்தான். வழக்குத் தொடுக்கப்பட்டு - மேல் முறையீட்டில்தான் பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது - ஆசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

(டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்; நாடே கொந்தளித்தது; ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து வந்த நிலையி லும், தமிழ்நாடு அமைதி பூத்த தடாகமாகக் காட்சி யளிக்கிறது; ஊடகங்களும் கப்-சிப்! புதிய மனுதர்மம் அழகு நடை போடுகிறதோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRFt2CR

தமிழ் ஓவியா said...

நீதியரசர் சி.எஸ். கர்ணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் ஒரு வழக்கில் தலையிட்டு வெளிப்படையாக நடந்து கொண்டது - சட்டப்படி தவறு.

-முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு

(என்ன சட்டமோ, அதனை அவர் சந்திக்கவும் செய்வார்; கொலை புகழ் சங்கராச்சாரியார் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி பால சுப்பிரமணியம் என்பவர் நான் ஒரு சங்கராச்சாரி பக்தன்! என்று நீதிமன்றத்திலேயே பட்டவர்த்தனமாய் சொன்னாரே அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவாம்? இதிலும் ஒரு குலத்துக்கொரு நீதியோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRMRYHh

தமிழ் ஓவியா said...

வாரா(ய்) நீ வாரா(ய்) கடன்

வாராக் கடன் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் காணப்படுகிறது.
- ராஜீவ் டாக்ரு, ரிசர்வ் வங்கி செயலாளர்

(வாராக் கடன் பட்டியலில் உள்ள (அ)சிங்கங் களைத் தப்ப விட்டு விட்டு, ஏழை பாழையாம் சுண்டெலிகளை வேட்டையாடுவது என்ன நியாயமோ!)

அமெரிக்காவில்

அமெரிக்கப் பெண்களில் அய்ந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிப்பு. (மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அங்கு ஒளிபரப்பு செய்திருப்பார்களோ!)

கார்ட்டூன் திமுகவுடன் தேமுதிக கூட்டணி பற்றி தினமணி வைத்திய நாதய்யர்வாள் வட்டாரத்தில் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம் - ஆமாம், தினமணி நடு நிலை ஏடு நம்பித் தொலையுங்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRZfMCf

தமிழ் ஓவியா said...



இதோ ஒரு இரட்டை நாக்கு!

காங்கிரஸ் மதவாதத்தைத் தூண்டும் கட்சி; பா.ஜ.க.வோ மதச் சார்பற்ற கட்சி இப்படி சொல்லி யிருப்பவர் யார் தெரியுமா, 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்!

இரட்டை வேடம் - இரட்டை நாக்கு என்பது இந்துத் துவா கூட்டத்தின் இரட்டைக் குழந்தைகளோ!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRgq8rP

தமிழ் ஓவியா said...


கடவுள்களின் கையாலாகாத்தனம்!


எடப்பாடியில் கோவில் உண்டியலை உடைத்துக் கொள்ளை

எடப்பாடி, ஜன.24- எடப்பாடி அருகே உள்ள தாதாபுரம் பகுதியில் சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் ஆலயம் ஊரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் மாசி மாதம் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவி லில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். கோவில் திருப்பணி களுக்காக சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் திருக்கோவில்களில் தனித்தனி உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.

ஆண்டு தோறும் மாசிமாத திரு விழா முடிந்த பின்னர்தான் ஆண்டுக் கொருமுறை உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் ஆண்டு முழுவதும் கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சொக்கநாச்சி யம்மன் கோவிலில் வழக்கமான பூஜைகள் முடித்த அதன் பூசாரி செல்வராஜ் கோவிலின் வெளிமண்ட பத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவில் ஓசைபடாமல் கோவிலின் உள்பிரகாரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டி யலை அடியோடு பெயர்த்து எடுத்து அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று கோவில் சூலத்தின் (வேல்கம்பு) மூலம் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை கொள் ளையடித்துள்ளனர். ஆற்றங்கரையில் உண்டியலை வீசிய கொள்ளையர்கள் அருகில் இருந்த மாரியம்மன் கோவில் உண்டியலையும் அடியோடு பெயர்த்து எடுத்து கொள்ளை யடித்தபின் ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். அதிகாலையில் அந்தப்பக்கம் சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல்கள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

எடப்பாடி காவல்துறையினர் உண்டியல் கொள்ளை பற்றி விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் தஞ்சை நாகை சாலை அருகே மருதம் நகர் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கும் முன்பு சோமசுந்த ரேஸ்வரர் கோவில் புதிதாக கட்டப் பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை கோவிலின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள சில்வர் உண்டி யலும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து தஞ்சை தாலுகா காவல்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர்.

காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், யாரோ சில நபர்கள் நேற்று நள்ளிரவில் கடப்பாரை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கோவில் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு கோவிலுக்குள் இருந்து சுமார் 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை அடியோடு பெயர்த்து கோவிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் எடுத்து சென்று உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், கோவிலுக்குள் மற்றொரு அறையில் இருந்த பீரோவையும் சில நபர்கள் உடைத்து திறந்து பார்த்து உள்ளனர். அதில் பணமோ, நகையோ ஏதும் இல்லாததால் பீரோவில் இருந்த கோவில் பூஜை பொருட்களை கலைத்து விட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாரை, அரிவாள் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு சென்று உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவுச் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/74023.html#ixzz2rMRnPxaZ

தமிழ் ஓவியா said...


மோடியின் கரங்கள் அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்: முலாயம்சிங்


மோடியின் கரங்கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்' என்று முலாயம் சிங் (யாதவ்) குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலை களும், அடக்குமுறைகளும், கொடுமை களும் அரங்கேறின.

அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை.

கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஆனால், குஜராத்தில் படுகொலை களை அரங்கேற்றியதுபோல், இங்கும் அத்தகைய சம்பவங்களை நிகழ்த்தும் நிலையில் அவர் இல்லை.

குஜராத்தில் நடை பெற்ற இனக்கலவரத்துக்கு மோடிதான் முழுப் பொறுப்பு. அவரது கரங் கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்'.

குஜராத் அரசு வேலை யில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங் கியதா? விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததா? பெண்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத் ததா? இவற்றில் எதையும் செய்ய வில்லை. ஆனால், செய்ததாக புர ளியைப் பரப்புவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை மட் டுமே கொடுத்தது என்று முலாயம் சிங் யாதவ் பேசினார்

Read more: http://viduthalai.in/e-paper/74019.html#ixzz2rMRxGL9U

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/74025.html#ixzz2rMS9LPGg

தமிழ் ஓவியா said...


இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் ஒரு கடிதம்


அய்யா, சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்கள் நோக்கி வருமான வரி திடீர் சோதனைகளை அரசு நடத்துகிறது. ஏன்? கடவுளரது இல்லங்கள் நோக்கி இவைகளை நடத்தக்கூடாது? சினிமா நடிகர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தைப் பெற கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்; மற்றவர்களுக்கு ஒரு கேளிக்கையாவது அளிக்கிறார்கள்.

புனிதமான இடங்களில் நடைபெறுவது பச்சையாக இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன? நாம் கடவுள் நம்பிக்கையை இழக்கத்தானே அவை பயன்படுகின்றன? புனிதமான இடங்கள் எனப்படுபவைகளை அரசு தேசிய மயமாக்கட்டும். வறுமையை ஒழிப்போம் - வறுமையே வெளியேறு என்ற கோஷத்தினை அச்செல்வத்தினை எடுத்து விநியோகிப்பதன் மூலம் செயல்படுத்தட்டும்.

அதில் முக்கியமாக விழிப்புடன் இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அர்ச்சகர்களிடமிருந்து அதிகாரிகள் கொள்ளையாக அது மாறாமல் பார்த்துக் கொள்வதேயாகும். மேற்கண்ட கடிதம் 1.10.1972 இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஏட்டில் கல்கத்தாவைச் சேர்ந்த அருண்டுரோவர் என்பவரால் எழுதப்பட்ட ஒன்றாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMT1YPg3

தமிழ் ஓவியா said...


உறவின் முறையில் திருமணம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்


சென்னை, ஜன. 24- உறவு முறைகளில் திரும ணம் செய்வது குறைபா டுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக் கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

செவித்திறன் குறை பாடுள்ள குழந்தைக ளுக்கு செவியின் உள் பகுதியில் பொருத்தப் படும் காக்ளியர் கருவி பற்றிய விழிப்புணர்வு சி.டி. மற்றும் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா மருத்துவக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை, பேச்சு மற்றும் கேட்பு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மருத்துவர் ஏ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கே.மணிவாசன் மற்றும் மருத்துவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் பேசியது: குழந்தைகள் பிறந்த உடனேயே அனைத்து விதமான மருத்துவ சோத னைகளையும் தாமத மின்றி மேற்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே ஏற் படும் குறைபாடுகளை சற்று தாமதமாக தெரிந் துகொள்வதன் மூலம் அதை சரிசெய்வதில் பல் வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. காதுகேட்கும் திறன் குறைந்த மற்றும் முற்றிலுமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு காக் ளியர் கருவி பொருத்தப் பட்டவுடன் கேட்பியல் நிபுணர்கள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் ஆகி யோர் உதவியுடன் படிப் படியாக குழந்தைகளின் கேட்கும் திறன் மேம்படு கிறது.

இதுபோன்ற குறை பாடுகளுக்கு உறவின் முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. எனவே இதுகுறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த வேண் டும் என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/74056.html#ixzz2rMTHmhse

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகள் பார்வைக்கு

1972ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் புரட்சி எழுத்தாளர் சங்க சார்பில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் புரட்சி எழுத்தாளர்களின் கடமைபற்றி முடிவு எடுக்கப்பட்டது. சமூகத்தில் புரட்சி ஏற்பட வேண்டுமானால், வெறுமனே பொருளாதார மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்து விட்டால் போதாது;

அத்துடன் சமுதாயப் பிரச்சினைகளின் பிற அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் நிலவி வரும் மூடநம்பிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

கடவுள் நம்பிக்கையின் பிடி மக்கள் மத்தியில் தற்பொழுது பலமிக்கதாக உள்ளது. இப்பிடியை முறியடிக்க வேண்டும். இதற்கு எழுத்தாளர்கள் பாடுபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMThGzOM

தமிழ் ஓவியா said...


மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்: இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.

மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்து கொள்ள: உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/d/1vpMQHGnb QymYPIAxYoW8AFec27t6s6sUNMjA IJdGJUtzluRhC2G9 kqJI5aMS/edit.

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/ d/1oiaOxsjjbSFT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGIYX9I EUJH5Do8cP9 JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

https://docs.google.com/file/d/1yOaTDA5h&NrGk&uJazqlgFKXvViHqJm ZaFKeRn9v8mm9 ZTsrEKq UNPVCCwv/eidt

மேலதிக விவரங்களுக்கு: இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page2/74073.html#ixzz2rRo5t2Uy

தமிழ் ஓவியா said...


போகாத இடம்தன்னிலே போக வேண்டாம்


- மு.வி.சோமசுந்தரம்

விடுதலை வெளியூர் 23.7.2013 இதழில் ஒடிசா, பூரி ஜெகன்நாதர் தேரோட்டத் திருவிழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த அம்மையாருக்கு, பக்தி போதையும் பண மோகமும் கொண்ட அர்ச்சகப் பார்ப்பன பண்டாக்களால் அரங்கேற்றிய வன்முறைச் செயலை, ஊசி மிளகாய் நன்கு எடுத்துக்காட்டி, பார்ப்பன பாரதியைக் கொண்டே வழிமொழியச் செய்துள்ளது பொருத்தமாக இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் கொண்ட அக்ரகார அர்ச்சகர்கள் பணம் தின்னும் பேய்கள் என்பதை விளக்கும், பூரி ஜெகன்நாத விழாவில் நடந்த கொடிய செயலை வேதனை யுடன், சென்னையை சேர்ந்த திரு. பி.இராமதாஸ், தி இந்து (23.7.2013) இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதி யில் கூறியுள்ளதைக் காண்போம்.

பூரியில், சிட்டாரிஸ்ட் அம்மையா ருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி படித்தபோது நான் ஆச்சரியப்பட வில்லை. எழில் தோற்றத்துடனும், வழிபடத்தக்கதுமான லார்ட் ஜெகன்நாதன் கோயிலுக்கு யாத்ரீகர் களாக வரும் பெரும்பான்மையோ ருக்கும் இதே அவல நிலைதான். இதில் வித்தியாசம் இல்லை. ஒரு நண்பர் குழுவை 2011-ஆம் ஆண்டு ஒடிசாவுக்கு அழைத்துச் சென்றேன். மரத்தால் செய்யப்பட்ட ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா கடவுள் பொம் மைகள் கருவறையில் ஒளி வீசி காணப்பட்டன.

நாங்கள் (கூட்டத்தில்) மெதுவாக நகர்ந்து கருவறை அருகில் சென்ற போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை இழுத்து முரட்டுத்தனமாக வெளியே இழுத்தார்கள். அதில் ஒருவன் என்னை தள்ளி என் தலையை லார்ட் பாதங்களில் அழுத்தி, என்னை அசைய விடாமல், தலையைத் தூக்கவிடாமலும் வைத்து, நான் பல நூறு ரூபாய்களைக் கொடுத்தபிறகு என்னை விடுவித்தான். அர்ச்ககர்கள் எங்களை அடுத்ததாக கடவுள்களை சுற்றிவர சொன்னார்கள். அந்த குறுகிய பாதையில் வேறு பல அர்ச்சகர்களைப் பார்த்தோம். அவர்கள் மேலும் பணம் கொடுக்கும்படி நச்சரித்தார்கள்.

இது சூடுபட்ட பூனை போன்ற ஒருவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பாரி. மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டை யாக செயல்படத்தான் கோயில்கள் கட்டப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார். பணத்தை பறிகொடுத்த துடன், அறிவையும் அடைமானம் வைக்கத் தயாராக உள்ளவரை என்னவென்று அழைப்பது? முட்டாள் என்று அழையுங்கள் என்று சரியான பதிலை அறிவு ஆசான் சொல் லிவிட்டாரே.

தந்தை பெரியார் சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததை தத்துவமாக பாடல் வரிகளாக
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன் என
வடலூர் வள்ளலார் கூறியுள்ளார்.

இதே பூரி செகன்நாதன் கோயி லுக்குச் சென்ற மேனாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. காரணம் அவரின் கணவர் இந்து அல்லவாம். போகாத இடந் தன்னில் போவதால்தானே இந்த வேடிக்கை பிள்ளை விளையாட்டெல்லாம்.

Read more: http://viduthalai.in/page2/74074.html#ixzz2rRoLxjf4

தமிழ் ஓவியா said...


மார்பகப் புற்றுநோய் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்



மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உடலில் இருப்பதை ரத்த பரிசோதனையில் கண்டறியும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது இது மனிதர்களிடம் சோதனை முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை பயன்பாட்டுக்கு வந்தால், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page3/74076.html#ixzz2rRoZYKpR

தமிழ் ஓவியா said...


வரிப் பாக்கி டிமிக்கிகள்!



1. வோடாபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22146 கோடி
2. எல்.அய்.சி. ரூ.11,606 கோடி
3. ஆதித்யா பிர்லாடெல்காம் ரூ.3173 கோடி
4. எச்.டி.எஃப்சி வங்கி ரூ.2653 கோடி
5. ஆந்திரா பேவரேஜ் கார்ப்பரேசன் ரூ.2413 கோடி
6. பிரதீப் பாஸ்பேட்ஸ் ரூ.2374 கோடி
7. மைக்ரோ சாஃப்ட் இந்தியா ரூ.1999 கோடி
8. ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1856 கோடி
9. ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியம் ரூ.1753 கோடி
10. அய்.சி.அய்.சி.அய். வங்கி ரூ.1658 கோடி
ரூ.51,661 கோடி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpXgb00

தமிழ் ஓவியா said...

அந்தத் தீயும் - இந்தத் தீயும்

அந்தத் தீ: திருவண்ணாமலை நகரத்தில் நள்ளிரவில் கோயி லுக்குச் சொந்தமான கோயிலுக்கு எதிரே உள்ள 12 பாத்திரக்கடைகள் எரிந்து சேதமடைந்தன. வியாபாரிகள் அய்யோ, அய்யோ என்று வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

இந்தத் தீ: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கொப்பரையில் காடாவை யும், நெய்யையும் போட்டு எரித்தார்கள் கூடியிருந்த ஆயிரக்கான மக்கள் அரோகரா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpgkmdc

தமிழ் ஓவியா said...


சம்பிரதாயமும், ஆன்மீகமும் சங்கராச்சாரியாரின் காலடியில்


கோயில் வரலாற்றையேமீறி முதல் முறையாக காரில் சென்றார் சங்கராச்சாரியார்

சிதம்பரம், ஜன. 25- சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்பிரகாரத் தில் வெள்ளிக்கிழமை (24.1.2014) அன்று காஞ்சி ஜெயேந்திரர் தனது காரில் சென்றார். நட ராஜர் கோயில் வர லாற்றில் முதன் முறை யாக கோயில் உள் பிர காரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல் முறை. என்று பக்தர் களும் உள்ளூர்வாசி களும் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி கார் எல்லாம் கோயிலுக்குள் வரலாமா? விதிகளும் எல்லாம் அவர்களின் காலடியில்தானே.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஜெயேந் திரர் நேற்று காலை வந்தார். அவரது கார் கோயில் நடனபந்தல் வரை சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சி தர்கள் சார்பில் கும்ப மரியாதை, மேளதாளத் துடன் அவரை கோயி லுக்கு அழைத்து சென் றனர். பின்னர் மூல வரான நடராஜ சிலை வீற்றிருக்கும் சித்சபை ஏறி சாமி தரி சனம் செய்தார். முன்னதாக ஜெயேந்திரர் வந்த கார் நேராக கீழ் கோபுரத்தின் பக்கவாட்டு வாயில் வழியாக நடன பந்தல் அருகே சென்று நின்றது. சித்சபையில் நடராஜர் தரிசனத்தை முடித்து விட்டு முருகன் கோயில், சிவகாமசுந்தரி அம்பாள் ஆலயத்துக்கும் காரி லேயே சென்று வழிபட் டார்.

முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும் கோபுர வாயிலுக்கு வெளியிலேயே கார் நிறுத்தப்பட்டு அங் கிருந்து நடந்து வந்து தான் கோயிலுக்குள் செல்வார்கள். அறநிலை யத்துறை நிர்வாகத்தின் போது கடந்த அமைச் சர்கள் கார், கோயில் வாயில் அருகே வந்த போது பெரும் சர்ச்சைக் குள்ளானது, ஆனால் தற்போது ஜெயேந்திரர் கார் கோயிலின் நடன பந்தல் வரை சென்றது அப்பகுதி மக்கள் மத் தியில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

நடராஜர் கோயில் அறநிலையத்துறையிடம் இருந்து தீட்சிதர்கள் வசம் வந்ததையடுத்து ஜெயேந்திரர் கோயி லுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது. ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர்கள் வசம் வந்தது, அவர் களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. கோயில் உள்ளே இருக்கும்பாண் டிய நாயகர்கோயில் திருப்பணி மற்றும் குடமுழுக்கிற்கான முழு செலவையும் சங்கர மடமே ஏற்றுக் கொள் ளும் என்றாராம்!

Read more: http://viduthalai.in/e-paper/74093.html#ixzz2rRpqttk8

தமிழ் ஓவியா said...


காகிதப் புலிகளின் கணிப்புகள்!


16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி உறுதி என்றும், நரேந்திரமோடி இப்பொழுதே பிரதமராக ஆகி விட்டார் என்பது போலவும் ஊடகங்கள் ஒருமாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றன. கருத்துக் கணிப்பு என்னும் புழுதியைக் கிளப்பிப் பொது மக்களின் கண்களை மறைக்கப் பார்க்கின்றன.

பெரும் பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களும் தொலைக்காட்சி மற்றும் ஏடுகள், இதழ்களின் உரிமையாளர்களாகவும், பிரச்சாரகர்களாகவும் இருப்பதால் மோடி பிரதமர் ஆவது அவர்களின் சுயநல வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் உடைய தாக இருக்கும் என்ற உள்நோக்கத்தில்தான் இத்தகையப் பிரச்சாரப் பலூனை ஊதி ஊதி வண்ண வண்ணமாக வானில் பறக்க விடும் கண்கட்டு வித்தையைச் செய்து காட்டுகின் றனர்.

கீரிக்கும், பாம்புக்கும் சண்டை சண்டை என்று கூவி பொது மக்களை பெரிய அளவில் கூட்டி அவர்களிடம் பணம் பறித்து கடைசி வரை அந்தச் சண்டையை நடத்திக் காட்டாத தெரு வோரத்துக் கில்லாடிகள் போல இந்துத்துவா கூட்டம் செயல்படத் தொடங்கி விட்டது!

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி ஏடுகள் தொலைக்காட்சிகள் 37இல் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 315 பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப் பட்டவரோ பழங்குடியினரோ இல்லை. இதில் 49 சதவிகிதம் பார்ப்பனர்கள் (இவ்வளவுக்கும் இவர்கள் மூன்றே மூன்று சதவீதத்தினரே!) மராத்தாக்கள், படேல்கள், ஜாட்கள் என்று 88 சதவீதம் உயர் ஜாதியினர் ஊடகத் துறைகளில்.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர் ஊடகத் துறையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவே. பெண்களைப் பொறுத்த வரையில் ஊடகத்துறையில் உயர் பதவிகளில் பார்ப்பனர்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில், கணக்கில் கொண்டால்தான், கருத்துக் கணிப்பு என்ற பெயரால் மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தும் சூழ்ச்சிக்கான பின்னணி புரியும்.


இணையதளங்களைப் பொறுத்தவரையில் மோடி செய்யும் மோடி மஸ்தான் வேலை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

மோடியின் டுவிட்டர் என்ற இணையதளத் தில் பத்து லட்சம் பேர் இணைந்து விட்டனர் என்று பிரச்சாரப் பெரு வெள்ளம் அனைவர் மூக்கிலும் விரலை வைத்துப் பார்க்கச் செய்தது. இலண்டன் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளப் பொறியாளர் குழு, மோடியின் கணக்கில் உள்ளதில் 46 சதவீதம் போலி என்றும்; 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் என்றும் அம்பலப்படுத்தப் படவில்லையா!

இவற்றைப்பற்றி எல்லாம் - இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்த ஊட கங்கள் எந்த அளவு மோடியை அம்பலப் படுத்தின? மோடியை ஒரு பொய்யர் என்று எழுத முன் வந்தனவா?

2004 மக்களவைத் தேர்தலில்கூட பிஜேபி தான் வெற்றி பெறும் என்று இந்த ஊடகங்கள் எழுதவில்லையா? தேர்தல் முடிவு வேறு விதமாகத் தானே அமைந்தது. இதை அத்வானி சில நாட்களுக்கு முன் நினைவூட்டிட வில்லையா?

2009 தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சார விளம்பரம் பிஜேபிக்குக் கை கொடுத்ததா?

அதேபோல்தான் இப்பொழுது பிஜேபி பற்றியும், மோடி பற்றியும் திட்டமிட்ட வகையில் செய்யப்படும் பிரச்சாரமும், கருத்துக் கணிப்பும்! வாக்காளர்களே, ஏமாந்து விடாதீர்கள். விரியன் பாம்பை விலைக்கு வாங்காதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/74099.html#ixzz2rRqbXzyg

தமிழ் ஓவியா said...


வாழ்க்கை



ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமையவேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/74098.html#ixzz2rRqiQCoF

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சியும் பனகல் ராஜாவும்

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத் தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித் துவமோ பொருந்தியது என்று சொல்வதற் கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3,4, தடவை நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய் விட்டது. இதைப் போன்ற விளை யாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்ப தாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சி யாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்ற தாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக் கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்ட தானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்காரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப் பிராயம். கொஞ்ச காலமாக பனகல் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்ற தாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத் தின் மேல் குற்றம், அறியாமையின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பன ரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படியானதாகி விடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர் களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பராயனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவ நம்பிக்கை என்ன வென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரி களை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டு விட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட்டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசி யாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!
- குடிஅரசு - தலையங்கம்-04.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrMCgmA

தமிழ் ஓவியா said...

பெரிய அக்கிரமம்

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார்களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே.நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrV7QWm

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் ஞானோதயம்

ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும், அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத் தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக, மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலைவைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப் பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூபாய் பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பலம் குறைந்ததாகத் தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்கியதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச்சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்த தான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமுகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம் பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத் துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவை ஆகி விடு
கின்றது.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறுநன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசிய அயோக்கியத்தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்?, என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அதுபோல் பார்ப்பனரல்லாதாரிலே உள்ள கோடாலிக் காம்புகளை நினைக்கும்போது ஸ்ரீராஜகோபாலாச்சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.
- குடிஅரசு - தலையங்கம்-01.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrcykE0