Search This Blog

3.9.13

தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா?

தீபாவளி - முட்டாள்தனம்


தோழர்களே!

தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக் கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூக்ஷிக் காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோக்ஷம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மததர்மமா? தேசீய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டி ருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும் போல் காணப்படுகின்றன. இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு: ஒவ்வொரு சு.ம.சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றி பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக் கோருகிறோம்.

-----------------------தந்தைபெரியார் -  ”குடி அரசு” - அறிக்கை - 15.10.1933

22 comments:

தமிழ் ஓவியா said...


இலக்குவனார்


1973 செப்டம்பர் 3 - தமிழர்கள் நினைவு கூர வேண்டிய முக்கிய நாள். நமது பேராசிரியர் சி. இலக்குவனார் அன்றுதான் மறைந்தார்.

தந்தை பெரியாரின் சீடர்; திராவிட இயக்கத் தீரர் - மூடநம்பிக்கையின் வைரி. தமிழுலகிற்கு தலை சிறந்த நூல்களைத் தந்த பெருமகன். தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரும் புலவர். இலக்குவனார் மொழி பெயர்த்த அந்த நூலைத் தான் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் சென்ற போதும் தன்னோடு எடுத்துச் சென்று தமிழன் பெருமையை, தமிழன் சீர்த்தியை அமெ ரிக்கப் பெருமகன்களுக்கு வழங்கியதன் மூலம் அறியச் செய்தார்.

எழிலரசி, தமிழிசைப் பாடல்கள், மாணவர் ஆற்றுப் படை, துரத்தப்பட்டேன், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து எனும் செய்யுள் நூல்கள், எல்லோரும் இந் நாட்டு மன்னர் (இரு தொகு திகள்) அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ் கற்பிக்கும் முறை ஆகிய ஆய்வு நூல்கள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்) கரும வீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் ஆகிய வரலாற்று நூல் களையும் வழங்கிய எழுத்து வள்ளல் இலக்குவனார்.

சங்க இலக்கியம், (கிழமை இதழ்) இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்) திராவிடக் கூட்டரசு (திங்கள் இருமுறை) குறள் நெறி (திங்கள் இரு முறை), குறள் நெறி (நாளிதழ்) ஆகிய தமிழ் இதழ்களையும், ஆங்கில இதழ்கள் னுசயஎனையை குநனநசயவடி (திங்கள் இருமுறை) முரசயட சூநச (திங்கள் இரு முறை) ஆகிய இதழ்களையும் நடத்திய எழுச்சித் தமிழர் அவர்.

அவர்தம் சிறப்புக் கருதி அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள் தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல் காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படை தளபதி, செந் தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்ற பெருமைமிகு மணிமகுடங்களுக்குச் சொந் தக்காரர்.
அவருடைய தமிழ் -தமிழர் உணர்வால் ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணியாற்ற முடியாமல் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டவர் - ஆனா லும் உள்ளம் தளராத உருக்கு நெஞ்சுக்குச் சொந் தக்காரர்.

1965 இந்தி எதிர்ப்பின் போது சிறைப் பிடிக்கப்பட் டார். அவர் பற்றி நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?

இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந் தவர், இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால் அரசுக்கும், அமைச்சர்களுக் கும் பாதுகாப்பு இராது என்று சொல்லப்பட்டது - இலக்குவனாரின் உணர்வுக் கான வெள்ளிக் கீற்றே!
இலக்குவனார் வழியில் பேராசிரியர் மறைமலை உள் ளிட்ட அவரின் செல்வங்கள் தமிழ்த் தொண்டு சிறப்பாக ஆற்றி வருவது பாராட்டிற் குரியது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வாஸ்து வாங்கிய பலி!


சென்னை - புழல் அருகே, விநாயகபுரம் என்ற இடத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி, நெஞ்சை உலுக்குகிறது.

வாஸ்துவை நம்பியதால், நான்கு பேர் பலியா னார்கள் என்பதுதான் அந்தத் துயர நிகழ்வாகும்.

அழகு நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மாடியில் அதற்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டது. செப்டம்பர் முதல் தேதி அதிகாலை 4.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை யாகக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்காக பல்லாவரத்திலிருந்து பார்ப்பனப் புரோகிதர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார்.

விளம்பரப் பலகை வைக்க வேண்டும் அல்லவா! அதற்காக திலகராஜ், சினேகா, நவீன் சந்திரன் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனரான ராமமூர்த்தி ஆகியோர் மேல் மாடிக்குச் சென்றனர். அழகு நிலையத்திற்குப் பெயர், லட்சுமி அழகு நிலையம். விளம்பரப் பலகையை வாஸ்து சாஸ் திரப்படி வைக்குமாறு அர்ச்சகப் பார்ப்பனர் ராம மூர்த்தி சொன்னார். அய்யர் சொன்னதற்கேற்ப, அப்படியும், இப்படியுமாக விளம்பரப் பலகையை மாற்றி, மாற்றி வைத்தனர். கடைசியாக, அவர் சொன்னபடி விளம்பரப் பலகையைத் திருப்பிய போது, மேலே சென்ற உயர்மின் அழுத்த மின்சாரக் கம்பி, விளம்பரப் பலகையின்மீது பட்டதுதான் தாமதம்; விளம்பரப்பலகையில் கை வைத்த அந்த நான்கு பேர்மீதும் (புரோகிதப் பார்ப்பனர் உட்பட) மின்சாரம் பாய்ந்ததால் அதே இடத்தில் பரிதாப கரமான முறையில் மரணம் அடைந்தனர் என்பது, துயரம் மிகுந்த நெஞ்சைப் பிழியும் சம்பவமாகும்.

மூடத்தனமான வாஸ்துவை நம்பியதால், விலை மதிக்கப்பட முடியாத நான்கு மனித உயிர்கள், பரிதாபகரமான முறையில் பறி போனதே!

சமீப காலமாக இந்த வாஸ்துவை விளம்பரத் தால் ஊதிப் பெருக்கச் செய்து விட்டனர். வீடுகளில் இப்போதெல்லாம் கரு நிறமான (னுயசம ஊடிடடிரச) வண்ணங்களைப் பூச ஆரம்பித்துள் ளார்கள் - காரணம் வாஸ்து சாஸ்திரமாம்.

முதலில் ஒரு கேள்விக்கு, வாஸ்து நம்பிக்கைக் காரர்கள் பதில் சொல்லட்டும், பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் கழிவறை வைக்கலாமா? கழிவறைபற்றி வாஸ்து சாஸ்திரத்தில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா?

வாஸ்து என்பது திசையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சூரியச் சுழற் சியைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்படுகிறது.

சூரியன் நிலையானது. அது மேற்கு நோக்கி நகரவில்லை. ஆனால் காலையில் சூரியனை நோக்கிச் செல்கின்ற ஒரு புள்ளியானது, மாலையில் சூரியனிலிருந்து விலகிச் செல்லுகிறது. அதாவது காலையில் கிழக்கு நோக்கி நகரும் மனிதன் மாலையில் மேற்கு நோக்கி நகருகிறான்.

புரியும்படிச் சொன்னால் காலையில் கிழக்காக இருக்கும் திசை மாலையில் மேற்காக மாறுகிறது, இந்த அடிப்படை புரியாமல் திசையை வைத்து வாஸ்து கரணம் போடுவதை நினைத்தால் வயிறு குலுங்கச் சிரிப்பாய் வருகிறது.

பி.என். ரெட்டி, என்பவர் வாஸ்து என்பது விஞ்ஞானம் என்று நிரூபிக்கபடாதபாடுபட்டார். திருப்பதி கோயிலுக்கு, மற்ற கோயில்களைவிட அதிக வருமானம் வருவதற்குக் காரணம் வாஸ்து முறைப்படி அது கட்டப்பட்டதுதான் என்றெல்லாம் எழுதினார். அவரைப் பார்த்து பிரபல பகுத்தறிவாளர் பிரேமானந்தா வினா ஒன்றை முன் வைத்தார். குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் கோயிலும் முழுமையாக வாஸ்து அடிப்படையில்தானே கட்டப் பட்டது? மிகப் பெரிய பணக்காரக் கோயிலாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட கோயில் அது. அந்தக் கோயில்மீதுதானே கஜினி முகம்மது படையெடுத்துப் பெரும் பொருளைக் கொள்ளை கொண்டு சென்றான்? என்று பிரேமானந்தா கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே!

யாகம், நல்ல நேரம், லட்சுமி (அழகு நிலையத் தின் பெயர்), புரோகிதம், வாஸ்து இவையெல்லாம் என்னாயிற்று?
புழல் பகுதியில் ஏற்பட்ட உயிர் பலிக்கும் பிற காவது மக்கள் புத்தி கொள் முதல் பெறட்டும்!

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டரின் கொள்கை உள்ளம்


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம் பலப்பல! நான் ஒரு பச்சை நாத்திகன். 60 ஆண்டு கால விடுதலை வாசகன். 1942இலேயே குடியரசுப் பத்திரிகை வாசிப்பு மூலம் சுயமரியாதைக்கார னானவன். 1944-இல் இருந்து கருஞ்சட்டையணிந்து தி.க.வாகி, ஒருங்கிணைந்த நன்னிலம் தாலுகா தி.க.வில் சொரக்குடி வே. வாசுதேவன், புத்தகரம் பி. செயராமன் போன்றோருடன் இணைந்து, பல பொறுப்புகளை ஏற்று கழகத் தொண்டாற்றியவன். 1955-இல் திருப்புகலூர் சின்னப்பிள்ளை என் கின்ற ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன்.

1981இல் தங்கள் தலைமையிலும், வே. சற்குணம் (திருமருகல் ஒன்றிய முன்னாள் பெருந் தலைவர்) முன்னிலையிலும், என் மகன் மதிவாணனுக்கு இராகு காலத்தில் திருமணம் செய்வித்தேன். இன்று அவனுடைய மகன்கள் மூவரும் சென்னையிலும், வெளிநாட்டிலும் சிறந்த பொறியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். மகன் மதிவாணனும் CRC இல் பணிபுரிந்து வருகிறான். குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை.

நான், சென்ற 6.5.2012-இல் தி.க. சார்பில் திருமருகலில் நடந்த உடற்கொடை வழங்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உடற்கொடை தந்து, தங்கள் கையால் உடற்கொடை சான்றிதழ் பெற்றுள்ளேன். இந் நிகழ்ச்சி 8.5.2012-இல் விடுதலையில் மற்றவர்களோடு என் பெயரும் சேர்ந்து வெளி வந்துள்ளது. தற்போது எனக்கு வயது 85. ஓரளவு உடல் நலத்தோடு நடமாடுகிறேன். எஞ்சிய காலத்தையும் இதே கொள்கை உறுதியோடு வாழ்ந்து முடிப்பேன்.
வாழ்க பெரியார்.

T.R.M. கிருட்டிணன், மேலப்பகுதி, திருப்புகலூர் அஞ்சல், நாகப்பட்டினம் தாலுக்கா.

தமிழ் ஓவியா said...


ராகுவாம்!


ஜோதிடம் - அதுவும் இந்திய ஜோதிடம் இருக் கிறதே - அதை ஒரு கணம் நினைத்தால் போதும் வாந் தியும், பேதியும் சேர்ந்தே வந்துவிடும்.

இன்னும் நவக்கிரகங் களைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். யுரேனஸ், நெப்டியூன் என்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவே - அவைபற்றி ஜோதிட ஜாதகத்தில் எந்தக் குறிப்பும் கிடையாது. எந்தக் காலத்திலோ எந்தக் கிறுக் கனோ எழுதி வைத்ததை வைத்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது.

ராகு, கேது என்று இரு கிரகங்களாம். அப்படி கிர கங்களே கிடையாது என்பது விஞ்ஞான முடிவு!

ஆனாலும், இன்னும் வெட்கம் சிறிதும் இல்லாமல் ராகு, கேதுபற்றி எழுதுகி றார்களே, அறிவைக் கெடுக் கும் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

ராகுவின் புராண அளப் பைக் கேளுங்கள், கேளுங் கள்!

பாற்கடலைக் கடைந்த போது (பாற்கடல், தயிர்க் கடல், நெய்க்கடல் இவை எங்கே இருக்கின்றனவாம்?) அமுதம் கிடைத்ததாம் - அதை யார் பருகுவது என்று தேவர்களுக்கும், அசுரர் களுக்கும் சண்டையாம். உடனே மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து சினிமா நடிகைபோல தோன் றினானாம். அவள் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர் தத்தைப் பெறுவதில் கோட்டை விட்டு விட்டார் களாம்.

சுவர்பானு என்னும் ஒரு அசுரன் மட்டும் சுதாரித்துக் கொண்டு தேவர்கள் அமரும் பந்தியில் போய் சூரியனுக் கும், சந்திரனுக்கும் இடையில் போய் குந்தினானாம். மோகினி அமிர்தத்தை வழங் கிக்கொண்டு இருந்தபோது அவனும் வாங்கிச் சாப்பிட்டு விட்டானாம் - சூரியனும், சந்திரனும் இவன் அசுரன் என்று சொன்னார்களாம்.
கோபம் கொண்ட மோகினி, சுவர்பானுவின் தலையில் தன் கையிலிருந்த கரண்டியால் அடித்தாளாம். சுவர்பானுவின் தலை ஒரு பக்கமும், உடல் இன்னொரு பக்கமும் தனித்தனியாக விழுந்ததாம். அவன் தேவா மிர்தம் உண்டதால் சாக வில்லையாம்.

அவன் கைகளும், தலை யும் பர்ப்பரதேசத்தில் (அது எங்கு இருக்கிறதாம்?) போய் விழுந்ததாம்.
அந்தத் தேசத்து அரசன் பைடீசனசன் என்பவன் அவற்றை எடுத்துச் சென்று வளர்த்தானாம்.... அரசனால் வளர்க்கப்பட்ட அந்தக் கையும், தலையும்தான் ராகு வாம்.
ராகு விஷ்ணுவை நோக் கித் தவம் இருந்து, கறுத்தப் பாம்பின் உடலையும் கிரகப் பதவியும் பெற்றானாம்.
சூரிய, சந்திரர் இருவரும் மோகினியிடம் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் அவர்களைப் பிடிக்கத் தொடங்கினானாம் கேது. அதுவே சந்திர, சூரியக் கிரகணமாம்.
எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் கூறுவது போல, சாராயம் குடித்த பைத்தியக்காரனுக்குத் தேள் கொட்டினால் எப்படி உளறு வானோ - அப்படி உளறித் தள்ளியுள்ளார்களே!
ஆன்மிக இதழ்கள் இன் றைக்கும் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களே!
வெட்கம்! மகாவெட்கம்!!
- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


காவல்துறை கவனத்திற்கு...



நமது காவல்துறையில் பணியாற்றுவோர் கவனத்துக்குத் தேவையான தகவல் தாய்லாந் திலிருந்து கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் குற்றங்கள் பெருகிய நிலையில், அதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அரசின் கவனம் காவல்துறை பக்கம் சென்றது. காவல்துறையில் பணியாற்றுவோர் தொந்தியும், தொப்பையுமாக இருந்தால் எப்படி அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்? 60 சதவிகிதக் காவல் துறையினருக்குத் தொப்பை விழுந்திருந்தது. 60 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, எடையைக் குறைக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...



எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


கோவில் தங்கம் குறட்டைவிட வேண்டுமா?


நாட்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதுபற்றி, மிகப்பெரிய அளவில் பேசப் படுகிறது. நாடாளுமன்றத்தில் கடும் புயற்காற்று வீசுகிறது. ஊடகங்களில், விவாதப் போர்கள் நடந்துகொண்டுள்ளன.

உண்மைதான் - இதிலிருந்து இந்தியாவை மீட்கவேண்டியது அவசியமே!

இதற்கொன்றும் வழியில்லாமலும் இல்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்காக அலைவது, அழுவது புத்திசாலித் தனமல்ல.

ஒரு கருத்து கசிந்தது. இந்தியாவில் கோவில் களில் உள்ள தங்கங்களை, சொத்துக்களை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதா? என்ற அறிவார்ந்த வினா பொறி தட்டிக் கிளம்பியுள்ளது. அப்படி ஒரு கருத்து அரசுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்தன. அதற்குள்ளாக இந்துத்துவாவாதிகள் தொடை தட்டி, தோள் தட்டிக் கிளம்பி விட்டனர்.

மக்களைப் பற்றி, அவர்களுக்கு எப்பொழுதுமே கவலை இருக்காது; கல்லு சாமிகள், குழவிக் கற்கள்மீதுதான் அவர்களுக்கு அக்கறை. அந்தக் கடவுள் சிலைகள் இருந்தால்தான் உயர்ஜாதித் தன்மை காப்பாற்றப்படும். அந்தச் சிலைகளை மூலதனமாக வைத்துத்தான், தங்கள் புரோகிதச் சுரண்டலை, வெகுஜோராக நடத்த முடியும்.

சிதம்பரம் நடராஜன் கோவில் சங்கதி என்ன? தீட்சிதர்கள் கையில் அந்தக் கோவில் இருந்த போது, வருமானம் என்ன? இப்போது வருமானம் என்ன?

திருப்பதி கோவிலில் நடக்கும் மோசடிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டனவே! மன்னன் கிருஷ்ணதேவராயன் திருப்பதி கோவி லுக்கு அளித்த நகைகள், கிரீடங்கள் எங்கே? எங்கே? என்ற கேள்விகள் எழவில்லையா? டாலர் ரங்காச்சாரி ஊழல்கள் வெளிச்சத்திற்கு வர வில்லையா?

திருப்பதி கோவில் நகைகளின் கணக்குகளை சரி பார்க்கவேண்டும் என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே!

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாட்டில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கோவில் நகைகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறபோது பூமிக்கும் விண்ணுக்கும் குதிப்பானேன்?

இதுபற்றி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், விடுதலையில் இரண்டு ஆண்டு களுக்குமுன் அறிக்கை ஒன்றில் தெளிவு படுத்தினார் (விடுதலை, 5.11.2011).

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்து, புட்டபர்த்தி சாய்பாபா மடத்தில் திரண்ட சொத்துகள், குரு வாயூரப்பன் கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்க நகைகள், வைரங்கள் இவற்றை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் கொடுத்த சொத்துக்களை மக்களுக்கே திருப்பிக் கொடுப் பதில் தவறு ஏதும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்!

இந்த நேரத்தில், அதனைச் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். தங்கத்தைச் சேமிக் காதீர்கள் - வாங்காதீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர், மக்களுக்கு வேண்டுகோள் வைக்கும் இந்த நேரத்தில், ஒன்றுக்குமே பயன்படாமல் தூசு படிந்து, முடங்கிக் கிடக்கும் - குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் கோவில் நகைகளைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்!

தங்கம் அரசாங்கத்தின் ரிசர்வ் வங்கியில் இருக்கவேண்டிய பொருளே தவிர, சிலைகளின் கழுத்திலும், மனிதர்களின் உடலிலும் ஜொலிக் கின்ற பண்டமல்ல.

கடுமையான நோய்க்குத் தீவிர சிகிச்சைப் பிரிவு இருப்பதுபோல, பொருளாதார நிலையில் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இந்தியா, தப்பிப் பிழைக்க - தங்கம் அனைத்தும் அரசின் கஜா னாவுக்கு வந்து சேரவேண்டும் என்ற சர்வாதிகார சட்டம் போட்டாலும் தவறு இல்லை.

தமிழ் ஓவியா said...


வ.உ.சி.


வ.உ.சி.

இந்தியாவின் விடு தலைப் போராட்ட வரலாற்றில் தியாகச் செம்மல் தகுதியில் முதல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய வர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரே! அந்தப் பெருமகனார் பிறந்த பொன் னாள் இந்நாள் (1878).

வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். தன் வாழ்க்கையை வளமைப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தால் வழக்குரைஞர்கள் அரிதாக இருந்த அந்தக் கால கட் டத்தில் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாமே.

சுதந்திரத் தீயில் குறித்து இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று, சிறையில் செக்கு இழுத்தது அல்லாமல் அவரது வழக் குரைஞர் அந்தஸ்தும் வெள் ளைக்கார அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. கடைசிக் காலத்தில் எண்ணெய்க் கடை வைக்கும் நிலைக்கு அந்த எண்ணக் கடலின் வாழ்க்கை வண்டி குடை சாய்ந்தது.

தொழிலாளர்களுக்காக அவர் கொடி பிடித்தவர் மட்டு மல்ல - அந்தக் கோட்பாட்டில் கொட்டைப் போட்டுப் பழுத்த மரமானவர்.

கோயில்பட்டிக்கு ஒரு நாள் ஆச்சாரியார் (ராஜாஜி) வ.உ.சி.யைத் தேடி வருகிறார். தன்னோடு கோவை வரை வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்காமல் பயணப்பட்டார் வ.உ.சி.,

இரயிலில், பயணம் நேரம் முழுவதும் தொழிலாளர் களின் பிரச்சினைகள்பற்றி கேள்வி கேட்டுத் துளைத் தார் ராஜாஜி.

எல்லாவற்றிற் கும் நிதானமாக நிறை தரும் கருத்துக்களைக் கூறி வந் தார் வ.உ.சி.

கோவை வந்தாயிற்று; அப்பொழுதுதான் வ.உ.சி.க்கு தெரிகிறது - ராஜாஜி ஒரு தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக - அதைப் பற்றித் தெரிந்து கொள்வதற் காகத் தான் தம்மை அழைத்து வந்தார் என்ற உண்மை.

ராஜாஜி அந்தத் தொழி லாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்;

பேச்சு முழுவதுமே வ.உ.சி.யிடம் ரயில் பயணத்தில் கேட்டறிந்தவை தான்!

ராஜாஜி பேசி முடித்த வுடன் அவர் அருகில் சென்று ஒரு கருத்தைவிட்டு விட்டீர் களே என்று நினைவுபடுத் தினார் வ.உ.சி. பேசி அமர்ந்து விட்டேனே என்ன செய்வது என்று கையைப் பிசைந்தார்.

கூட்டத் தலைவரின் அனுமதி பெற்று 10 நிமிடம் உரையாற்றினார்; வ.உ.சி., பேச்சைக் கேட்ட தொழிலாளர் கள். பேசுங்கள்! பேசுங்கள்!! என்று குரல் கொடுத்தனர்.

ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அது சாதாரணமா?

மறுநாள் ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டினார் வ.உ.சி.; ராஜாஜியின் முழுப் பேச்சும் இடம் பெற்றது.

கடைசி ஒரு வரியில் வ.உ.சி.யும் பேசினார் என்றிருந்தது.

என்ன செய்வது! அவர் ஆச்சாரியார் ஆயிற்றே! இவரோ சூத்திரர் ஆயிற்றே! தந்தை பெரியாரோடு இணைந் தார் -

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் மனம் விட்டு ஏன் பேசினார் என்பது இப் பொழுது விளங்கி இருக்குமே!

- மயிலாடன் 5-9-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


காவிரி நீரிலும் அரசியலா?



காவிரி நீர் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்து ஆக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு அல்ல; கருநாடக மாநில அரசே! அம்மாநிலத்தின் எல்லையில் காவிரி உற்பத்தியாகிறது என்கிற ஒரே காரணத்துக்காக கீழ்ப்படுகையில் உள்ள தமிழ் நாட்டுக்கு அதில் உரிமை கிடையாது என்கிற செருக்குத்தனம் கருநாடக மாநில அரசுக்கு இருந்து வருகிறது.

இந்திய சட்டமும் சரி, சர்வதேச சட்டங்களும் சரி கருநாடக அரசின் பக்கம் இல்லை என்பதை அம்மாநில அரசு உணராதது அறியாமையல்ல - தன்னல வெறியில் நியாயத்தைப் புறக்கணிக்கும் புத்திப் பேதலிப்பாகும்.

கருநாடகத்தைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் போக்கில் நேர்மையான சிந்தனைத் தடம் இருப்பதில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையை அரசியலாக்கி ஆதா யம் பெறும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு விட்டது. மேலும், புரியும்படிச் சொன்னால் காவிரிப் பிரச்சினையை மாநில மக்களின் வெறி உணர்ச் சிக்குத் தீனி போடும் பண்டமாக கருநாடகாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றி விட்டன. ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் நிலை அல்லது நாயர் பிடித்த புலி வால் என்றும் கூறலாம்.
மத்திய அரசோ தன் பொறுப்பை கடமையை, சட்டத்தின் நிலையை உணர்ந்த - மத்திய அரசாக இருப்பதில்லை. பாம்புக்கும் நோகாமல், கொம்புக் கும் நோகாமல் மத்திய அரசு நடந்து கொள்ள முயற்சிக்கிறது.

சட்டப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் மத்திய அரசே நடந்து கொள்ளத் தடுமாறும்போது, மாநில அரசுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

உச்சநீதிமன்றம் 2007இல் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையிலும், அதனைச் செயல் படுத்த முன்வராதது ஏன்? நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட வேண்டியது - மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையும் - பணியும் ஆகும்.

சட்டப்படி ஓர் அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் போராடுவது என்பது ஒரு விசித்திர நிலையே!

நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிட வேண்டும் என்பதற்காகப் போராட்டம்; அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற் காகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நீதிமன்றத்தை மறுபடியும் மறுபடியும் அணுக வேண்டியுள்ளது என்றால் சட்டம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற வினாவை அது எழுப்புகிறது.

மத்திய அரசின் இந்த இயலாமையை நன்கு புரிந்து கொண்ட கருநாடக மாநில அரசு, கருநாடக மாநில எல்லைக்குள், காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட முனைந்துள்ளது. இது சட்டப்படி தவறாகும். எந்த ஓர் அணையை, மாநிலம் கட்டுவதாக இருந்தாலும் அதன் கீழ்ப் பகுதியில் உள்ள பாசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது; சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதே சட்டத்தின் நிலைப் பாடாகும்.

எந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் குப்பைக் காகிதம் என்று கருதுகிற கருநாடக மாநில அரசின் அத்துமீறும் போக்குக்கு என்னதான் பரிகாரம்?

தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் விவாத மேடையில் பங்கேற்ற தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை முக்கியமாக முன் வைத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 262ஆம் பிரிவின்படி நதி நீர் பங்கீடு தொடர்பாக மாநிலங் களுக்கிடையே ஏற்படும் தாவாவைத் தீர்க்க, நதி நீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter-State Disputes Act) இருக்கிறதே அது ஏன் செயல்படுத்தப்பட வில்லை என்று அர்த்தமுள்ள வினாவை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசானா லும் சரி (UPA) பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசனாலும் சரி (NDA) நடுவண் அரசு என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். முதற் கட்டமாகக் கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் முயற்சியைத் தடுப்பது மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையாகும்.

தமிழ் ஓவியா said...


பெரிய மூடன்



தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
(விடுதலை, 21.6.1964)

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கழகத்திற்கு வயது 43 ஆண்டுகள்


1970 இதே தேதியில்தான் (6.9.1970) தந்தை பெரியார் அவர்களால் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி.வீரமணி, அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளராக இருந்த சி.டி. நடராசன் ஆகியோர்களும் அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இப்பொழுதுதான் மனிதர்கள் கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன் என்று தனக்கே உரித்தான தனித்த சிந்தனையுடன் தந்தை பெரியார் கூறினார்; அதற்கு அவர் கூறிய காரணம் சிந்தனைக்கு விருந்தளிப்பதாகும்.

மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதிதானே. அப்படிப் பட்டவன் இன்றைக்குத்தான் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறான் என்றால் என்ன பொருள்? என்ற கேள்வியிலே அதற்கான விடையைத் தந்தார்கள்.

பகுத்தறிவின் சிறப்பைப் பற்றி தந்தை பெரியார் கூறிய அளவுக்கு உலகில் இன்னொரு அறிஞர் கூறிச் சென்றுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டே கிடையாது.

உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவன் எல்லையற்ற அறிவுச்சக்தி பெற்றிருப்பதுதான்; மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி, மிக மிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால் மிக மிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம் ஞானபூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்ட வெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள் என்றார் தந்தை பெரியார் (விடுதலை 22.5.1961).

மனித அறிவுதான் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது. மின்சாரம் ஒன்றினால் மகத்தான புரட்சி ஏற்படவில் லையா? எல்லாத் துறைகளிலும் மனிதன் இன்றைக்கு வளர்ச்சியில் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான் என்றால் அதற்குக் காரணம் மனிதன் பகுத்தறிவைத் தங்குத் தடையின்றிப் பயன்படுத்தியதால்தான்.

அந்தப் பகுத்தறிவைப் பாழும் கடவுள், மத மூடநம்பிக்கை இருளில் தொலைத்ததால் அல்லவா வளர வேண்டிய நமது சமூகம் வளராமல் தேக்க நிலையை அடைந்து விட்டது.

அதனால்தான் தந்தை பெரியார் பகுத்தறிவுத் தொண்டை தம் வாழ்நாள் முழுவதும் செய்தார்; நாடெங் கும் பகுத்தறிவு அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

பகுத்தறிவாளர் கழகம் கடந்த காலங்களில் சிறப்பான மாநாடுகளை நடத்தியதுண்டு; பகுத்தறிவுக் கண்காட்சி களை ஏற்பாடு செய்ததுண்டு. உலக நாத்திக மாநாட்டை திருச்சியில் நடத்தவில்லையா?
பெரும்பாலும் அரசுப் பணியாளர்கள் இந்த அமைப்பில் பங்கு கொண்டு பணியாற்றினர் இந்த அமைப்பின் வீச்சினைக் கண்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மருண்டே போனார். அரசுப் பணியாளர்கள் கடவுள் நிந்தனை செய்வதில் ஈடுபடலாமா? என்றெல்லாம் கூடக் கேட்டார் அந்த அளவுக்குப் பகுத்தறிவாளர் கழகத்தின் தாக்கம் இருந்தது.

நெருக்கடி காலத்தில், பார்ப்பன ஆதிக்கப் பாம்பு தலை தூக்கி ஆடிய கால கட்டத்தில், பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்றிய, அரசு ஊழியர்கள் பழி வாங்கப்பட்டார்கள் அதன் காரணமாக, இடையில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான்; என்றாலும், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீண்டும் அந்த அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்து அதன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

மகாராட்டிரத்திலே பகுத்தறிவுப் பணிகளைச் செய்து கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதையொட்டி அவர் நினைவை மிகச் சரியாகப் போற்றும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தை மகாராட்டிர மாநில அரசு நிறைவேற்றி யுள்ளதானது - வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு மாநிலத் திலும், ஏன் நாடாளுமன்றத்திலும்கூட இத்தகு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 51A(h) விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தும் நிலையில், பகுத்தறிவாளர் கழகம்தான் அந்த சரத்தைச் சரியாகக் கடைபிடிக்கிறது என்று சொல்லவேண்டும்.

மதச் சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொண்டு, அதற்கு மாறான செயல்களை செய்து கொண்டுள்ளது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக விருந்தபோது, அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு திகழ வேண்டும் என்பதற்காக அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்கள், உருவங்கள், படங்கள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இன்றைய தினம் நடை பாதைகள் எல்லாம் கோயில்களாகி மக்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகளை உண்டாக்கிக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் பகுத்தறிவாளர் கழகத்திற்கு மிக அவசியமான பணிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நிறைவேற்றிட பகுத்தறிவாளர் கழகத்தை ஒவ்வொரு ஊரிலும் துவக்கி, இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த மகத்தான கடமையினை ஆற்றுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

யாகம் செய்தால் மழை வருமா?

மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும். மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை.

- தினமணி, 6.6.1988

தமிழ் ஓவியா said...


உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!


உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!

கிரேக்கப் புராணத்தின்படி குரோ ணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால்தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்

பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீ ரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கை களே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.
இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

தமிழ் ஓவியா said...


தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)

சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!

இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரை யாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னு டைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண் மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

தமிழ் ஓவியா said...

கருத்து


மதுபோதை, சினிமா போதை, கோவில் திருவிழா, அரசியல் கட்சித் தேர்தல், கல்வியில் மூடநம்பிக்கை இவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றன. நாடு வளர்ச்சியடைகிறதாக ஆட்சியாளர்கள் புள்ளி விவரத்தைக் காட்டுகிறார்கள். விவசாயம் மட்டும் தேய்ந்து போனது ஏன்? கடந்த 15 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளில் 38 கோடி மக்கள் தினமும் உணவின்றி படுக்கச் செல்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தேசிய அவமானமல்லவா!

- நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி

பிறமொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகன்றன. ஆனால், இதே நூல்கள் தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகே மொழிபெயர்க்கப் படுகின்றன. இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள்கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வரவேண்டும்.

_அவ்வை நடராஜன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

மாணவர்கள் சரித்திரம், வேதியியல், பூகோளம், ரசாயனம், கணிதம் போன்ற பாடங்களுடன் கட்டாயம் இயற்கை இடர்ப்பாடுகள் போன்ற காலங்களில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை மேற்படிப்புக்கு ஓர் அடிப்படைத் தகுதியாக எப்போது நிர்ணயிக்கிறோமோ அப்போதுதான் நமது சமூகம் மேம்படும்.

- வி.ராமசுப்பிரமணியன், நீதிபதி, உயர் நீதிமன்றம்.

தமிழ் ஓவியா said...

கல்விக்கே முதலிடம்


வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வது _ வழிநடத்திச் செல்வது இன்றைய இளைய தலைமுறையின் எண்ணத்தில் _ செயலில்தான் உள்ளது. 18 வயதிலிருந்து 30 வயதுவரை உள்ள இளைஞர்களிடையே, 14 கருத்துகளை முன்வைத்தபோது கல்விதான் தங்களுக்கு முதலில் தேவை என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே _ சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

கல்விக்கு அடுத்த நிலையில், ஊழல், வேலை, விலைவாசி உயர்வு, சுகாதாரம், பொருளாதாரம்... என்று சென்று அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை 13ஆம் இடத்தையும் பாகிஸ்தான் பிரச்சினை 14ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ, பட்னா, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஜூலை 16 அன்று எடுத்த இந்தக் கணிப்பு, இளைஞர்கள் தங்கள் தேவையை நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையும் அரசியல்வாதிகள் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

தமிழ் ஓவியா said...

கொலைவெறி கொண்ட மூடநம்பிக்கை


இனி அவரால் பேச முடியாது. காலையில் நடைப்பயிற்சி சென்ற அவர், சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். ஆனால், அவருக்காகப் பலர் பேசுகிறார்கள். அவர் எதைப் பற்றிப் பேசினாரோ அதைச் சட்டமாக்குங்கள் என்று உரக்கப் பேசுகிறார்கள்.

அவர்.. நரேந்திர தபோல்கர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பகுத்தறிவுவாதி. சதாரா மாவட்டத்தில் சோஷலிச இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். சர்வதேச அளவிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்றவர். மருத்துவம் பயின்று டாக்டரானவர். உடல் நோயைவிட தீவிரமாகச் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது சமூகத்தில் பரவியுள்ள நோய்தான் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்தார் தபோல்கர். மதம், ஜாதி, கடவுள், புராணம், சடங்கு, சம்பிரதாயம், இத்யாதிகளின் பெயர்களால் இந்தியாவில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கை எனும் நோய்க்குச் சிகிச்சையளிக்காமல் சமூகத்தை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியாது என்பதுதான் அவரது நிலை.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மகாராஷ்ட்ரா அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். போலிச் சாமியார்கள், மாந்த்ரீகர்கள், அற்புத சக்தியால் குணமளிப்பதாகச் சொல்பவர்கள் இவர்களுக்கு எதிரான இந்த இயக்கம் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல கிராமங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வரை பரவியது.

நான் கடவுளுக்கோ மதத்திற்கோ எதிரானவன் அல்ல. அந்த நம்பிக்கைகளின் பெயரால் நடைபெறும் மோசடிகளைத்தான் அம்பலப்படுத்துகிறேன் என்று அடிக்கடி சொல்வார் தபோல்கர். கோவில் கூடாது என்பதல்ல. அது, கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என இங்கே பராசக்தி பேசிய அதே வசனத்தின் சாரம்தான் தபோல்கரின் வார்த்தைகளிலும் இருந்தது. அதை மதவாதிகளும் பழைமைவாதிகளும் பொறுத்துக் கொள்வார்களா?

மிரட்டல்கள், தாக்குதல்கள் என பல நெருக்கடிகளுக்குள்ளானார் நரேந்திர தபோல்கர். ஆனாலும், அமைதியாகவே இருந்தார். காவல்துறையிடம் புகார் கொடுக்கக்கூட அவர் முன்வரவில்லை. கபடி ஆட்டக்காரராயிற்றே.. எந்தக் கோட்டைத் தாண்டும்போது எதிராளியை மடக்கலாம். எந்த எல்லையை நெருங்கும்போது எதிராளி நம்மை மடக்குவான் என்பதையெல்லாம் உணர்ந்தே இருந்தார். ஆனாலும், அவருடைய இயக்கப் பணிகள் தொடர்ந்தபடியே இருந்தன.

பார்வையற்றவர்களுக்குக் கண்ணொளி தருகிறேன் என ஒரு சாமியார் அற்புதம் நடத்துவதாக அறிந்து, ஒரு கிராமத்தில் அவருடன் நேருக்கு நேர் வாதம் செய்து, அற்புதத்தை ஊரறிய நிரூபிக்கச் சொன்னார் தபோல்கர். தன்னுடைய பெருந்திரளான பக்தகோடிகளுடன் அந்த சாமியார் வந்திருந்தபோதும் தபோல்கரின் சவாலை அவரால் ஏற்கமுடியவில்லை. செல்வாக்கு மிக்க பல சாமியார்களுக்கு எதிராக தபோல்கரும் அவரது இயக்கத்தினரும் போராட்டங்களை நடத்தியபோது மோதல்கள் ஏற்பட்டன. ஆள்வோரும், காவல்துறையும் எப்போதும் ஆன்மீக வியாபாரிகளின் பக்கம்தான் நிற்கும். அதையும் மீறி தபோல்கரின் இயக்கத்தினர் போராடினர்.

அகமத்நகரில் உள்ள ஷனி ஷிங்நாபூர் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என அவர் போராடியபோது, பழைமைவாத இயக்கங்கள் அவருடன் மோதின. கடைசியில், நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அவருக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்தபடியே இருந்தன. அவரோ, இதுபோன்ற இயக்கத்தில் இருந்துகொண்டு சுதந்திரமாக நம் கருத்துகளை வெளிப்படுத்துவதேகூட இந்த நாட்டில் ஒரு போராட்டம்தான் என்றார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மகாராஷ்ட்ரா அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவருடைய போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தது. மதவெறியர்கள் அவரைக் குறிவைத்தபடியே இருந்தனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி பூனாவில் ஓம்கரேஷ்வரர் பாலம் மீது காலை நேரத்தில் அவர் நடந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நரேந்திர தபோல்கரை சுட்டுத்தள்ளினர். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அதே இடத்தில் விழுந்து இறந்தார் தபோல்கர்.

அவரது படுகொலை மாநிலம் முழுவதும் உள்ள அவரது இயக்கத்தினரிடமும் ஆதரவாளர்களிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் இரங்கல் ஊர்வலங்கள் நடந்ததுடன், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்று என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது.

கடவுள் பெயரை வியாபாரமாக்கி மனிதர்களை ஏமாற்றாதே என்கிறது பகுத்தறிவு. கடவுளையும் சேர்த்து ஏமாற்றிவிட்டு மனிதர்களின் உயிரைப் பறிக்கிறது மூடநம்பிக்கை வெறி.

- கோவி.லெனின்

தமிழ் ஓவியா said...

தொலைத்ததைத் தேடவும் கருவி வந்தாச்சு..!


பேனா, பென்சில், சாவி, ரிமோட் போன்ற சிறிய பொருள்களிலிருந்து முக்கிய ஆவணங்கள், பணம் போன்றவை வரை அனைத்தையும் வைத்த இடத்தினை மறந்துவிட்டுத் தேடுவதிலேயே அதிக நேரத்தை நம்மில் பலர் செலவு செய்கிறோம். நேரம் வீணாவது மட்டுமன்றி, தேவையில்லாத மன உளைச்சல், அதனால் பிறர்மீது கோபப்படும் சூழல் ஏற்படுகிறது.

இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட உதவும். சென்சார் கருவியை ஜெர்மன் நாட்டின் உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான புளோரியா சாப் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் அல்லது கணினியுடன் இணைத்து அதில் உள்ள தேடுதல் மூலம் ஓரிரு வினாடிகளில் தேடும் பொருளினைக் கண்டுபிடித்துவிடலாம்.

பைன்டு மை ஸ்டப் என்ற இந்தக் கருவியின் உதவியுடன் நாம் தொலைத்த பொருளின் பெயரை கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். ஓரிரு வினாடிகளில் நாம் தொலைத்த பொருள் இருக்கும் இடத்தைத் தெரிவித்து விடுமாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, டிரான் மீட்டர் மற்றும் சிப்ஸ் மிகவும் சிறிய அளவில் இருக்கும்.

இதன் விலையும் மிகவும் குறைவு. இன்றைய உலகில் கணினியுடன் நாம் எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். மேலும், தொலைப்பேசித் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் போனில் இந்தக் கருவியைப் பொருத்தலாம். அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் இந்தக் கருவியின் விலை ரூ.5,000 வரை இருக்கும் என்று விஞ்ஞானி புளோரியா சாப் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணம்


அய்.நா. மனித உரிமைக் குழுவின் செயலாளர், நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவுக்குச் செல்கிறார்.

இந்த செப்டம்பர் மாதம் மனித உரிமைக் குழுக் கூட்டம்கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு, அவருக்கு இருக்கிறது.



இந்தநிலையில் அவர் இலங்கைத் தீவுக்குச் செல்லுவது - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இலங்கைத் தீவின் அரசியல் சமுதாயப் பிரச்சினைகள், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை நல்ல அளவு அறிந்தவர் நவநீதம் பிள்ளை. அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இலங்கை அதிபருக்குக் கிடையாது என்றாலும் நவநீதம் பிள்ளை அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவரல்லர்.

(1) இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் உள்ளன? தமிழர்களுக்கான சொந்தமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா? தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

2) தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றிய விவரம். தமிழர் பகுதிகளின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதன் உண்மை நிலைகள்.

3) தமிழர் வாழும் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை. இராணுவத்தினரால் தமிழர்களுக்குத் தொடரும் அன்றாடத் தொல்லைகள்.
இளைஞர்களின் கெதி என்ன?

4) ஈழத் தமிழர்களில் வாலிபர்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலை, அவர்கள் உயிரோடு உள்ளார்களா? இன்னும் சித்திரவதை முகாம்களில் இருக்கின்றனரா?

துணைவர்களைப் போரில் பலி கொடுத்த இளம் பெண்களுக்கான மறுவாழ்வுக்கான திட்டங்கள் உண்டா?

4) முள்வேலி முகாம்கள் முற்றாக நீக்கப்பட்டு விட்டனவா?

5) சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன?

தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே அவர்களின் நிலை என்ன? 6) வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. அது ஜனநாயக முறையில் நடக்குமா? அய்.நா. பார்வையாளர் அனுமதிக்கப்படுவாரா?

(எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே போன்றவர்களையும்கூட சந்திப்பது அவசியம்)

7) போர் முடிந்த பிறகு இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைக் குழு அய்.நா.வில் அறிக்கையாகக் கொடுத்தது (13.3.2012). இதுகுறித்து இன்றைய நிலையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது அறியப்பட வேண்டும்.

8) அய்.நா. நியமித்த மூவர் குழு அளித்த அறிக்கையில் (13.4.2011) சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் எந்த அளவு களையப்பட்டுள்ளன?

9) குறைந்தபட்சம் இலங்கை அரசு தங்களுக்குத் தாங்களே அழைத்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. (பெயர் பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு) அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவையாவது நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

10) இந்தியா அளித்த நிதி உதவியின் பலன்கள் முறையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா?

11) போரின் போது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் என்னென்ன? உண்மையில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?

12) ஈழத் தமிழர்களைப் பல வகைகளிலும் துன்புறுத்திய பெண்களைப் பாலியல் வேட்டையாடிய சிங்களவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

13) ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க எந்தெந்த நாட்டு இராணுவம் துணை புரிந்தது?

14) இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் எந்தெந்த வகைகளில் இருந்தன? 15) ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்க வாய்ப்பு உண்டா?

16) பொதுவாக, பொது மக்களின் அபிப்ராயம் _- ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது? ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மத்தியில் எது தீர்வு என்று கருதுகின்றனர்? என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து மனித உரிமைக் குழுவின் செயலாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளை அவர்கள் கொடுக்கும் அறிக்கை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசு நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அதையும் கடந்து அவர்தன் கடமையைச் சிறப்பாகச் செய்வார் என்றே நாம் மட்டுமல்ல _- உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன.
அவர் பயணம் வெற்றியடையட்டும்!

- கி.வீரமணி
ஆசிரியர்