Search This Blog

26.9.13

தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமை த்தன்மையும்


 
பகுதி | - தமிழின் தனித்தன்மைகள் பொய்யா? போலியா?
தமிழ் நம் மொழி; அது செம்மொழித் தகுதியை நடுவண் அரசு மூலம் ஒப்பாணை பெற்றுத் திகழ்வது தமிழர்க்கெல்லாம் பெருமையும் பேருவகையும் தருகிறது.

செம்மொழி என்று சொல்வதைவிட, தமிழ் உயர்தனிச் செம்மொழி என வழங்கப்படுதல் மேலும் சிறப்பளிப்பதாகும்.

இத்தகு, பெருமையும் பெரும்புகழும் தமிழுக்கு இயல்பாக, இயற்கையாக, மெய்ம்மையாக இருத்தல் வேண்டும்.

பொய்யான புகழோ, போலியான புகழோ தமிழ் பற்றிய உணர்ச்சிப் பெருக்கத்தைத் தான் காட்டுமே தவிர, அறிவு வெளிப்பாட்டினைக் காட்டாது. விழைவோ வேணவாவோ நம் தமிழுக்குப் பெருமை தாராது.

போற்றப்படும் புனைந்துரை

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி... என, நம் தமிழினத்தையோ, தமிழ்மொழியையோ குறிப்பிடுவது அறிவியலுக்கு முற்றிலும் மாறானது.

கல்தோன்றி மண் தோன்றாக்காலம் உயிர் தோன்றாத 300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

அந்தக் காலத்தே, அதாவது, ஓருயிரணு (Mono cell) உயிரியே (Organism) உருவாகாத காலத்தே உயிரியின் உருவாக்கி (Evolution) யின் உச்சகட்டமான மாந்த இனத்தின் ஒரு பகுதியான தமிழினம் தோன்றியது என்பது புனைந்துரையேயாகும்.

இத்தகைய புகழ், தமிழுக்கு மெய்யான புகழினைத் தருமா? தாராது! அது, வெற்றுப்புகழே; வீண்புகழேயாகும்.

உண்மையான, இயல்பான, நிலையான புகழ் ஒன்றுமட்டுமே நம்மருமைச் செந்தமிழுக்கு, பெருமையும் தகைமையும் அளிக்கவல்லது.
இவ்வாறு, கூறுவது, தமிழைக் குறைத்து மதிப்பிடுவது என அறிஞர்கள் கருதக்கூடாது. உண்மையான புகழே உறுதியான, உயர்வான, நிலையான, நெடிய புகழ் ஆகும். இத்தகைய மெய்யான பெருமைகளுள் சிலவற்றை இனி நாம் எடுத்துக்காட்ட இருக்கிறோம்.

தமிழ் பெற்ற தகைமை

தொன்மை, முன்மை,
எண்மை, ஒண்மை,
இளமை, வலிமை,
தாய்மை, தூய்மை,
செம்மை, மும்மை,
தனிமை, இனிமை,
பெருமை, திருமை,
இயன்மை, வியன்மை.
(மொழிஞாயிறு பாவாணர்)

ஆகிய 16பேறுகளும் நம் பைந்தமிழ் மொழிக்கு உரியன.

(எண்மை -_ எளிமை; மும்மை _ மூன்றுதன்மை இயல், இசை, கூத்து;
தனிமை _ தனித்தன்மை;
திருமை _ சொல்வளம்;
இயன்மை _ இயற்கை;
வியன்மை _ பரந்துபட்ட தன்மை;
ஒண்மை _ விளக்கம் தரும் தன்மை.)
இங்கே, தனிமை என்ற சொல் நாம் நம் கட்டுரையில் வழங்கும் தனிமை என்பதனின்றும் வேறானது: மேலே குறித்ததில் தனிமை - ‘Speciality’ என்பது. நாம் குறிப்பிடுவது ‘Isolation’ _ என்ற பொருளில்.

இலையின் நிலை

இலை என்ற பொருளில், பயிருக்கெல்லாம், இந்த ஒரு சொல்லே இல்லாமல் (Leaf) பயிர் வேறுபாட்டிற்கேற்ப பல சொற்கள் தமிழில் உள.
வாழையின் இலை _ வாழை இலை;
நெல்லின் இலை _ நெல் தாள்;
கரும்பின் இலை _ கரும்புத் தோகை;
பனை (தென்னை) இலை _ பனை (தென்னை) ஓலை.
ஆக, இலை, தாள், தோகை, ஓலை _ பல சொற்கள் தமிழில் உள.

மலர் என்பதன் பலநிலை

அரும்பு -_ தோன்றும்போது;
முகை _ முகிழ்க்கும் வளர்ச்சியின்போது;
மொட்டு _ முகையின் வளர்ச்சியின்போது
போது _ இதழ் விரியும்போது
மலர் _ மலரும்போது;
பூ _ நன்கு முழுதும் பூத்தபொழுது;
செம்மல் _ வாடியபொழுது;
வீ _ வாடி, கீழே விழும்பொழுது.

பார்ப்பதில் பலவகை

விழித்தல் _ கண்திறந்து பார்த்தல்;
பார்த்தல்_இயல்பாக_குறிக்கோள் இன்றிப் பார்த்தல்.
நோக்குதல் _ குறிக்கோளோடு கூர்ந்து பார்த்தல்.
காணுதல் _ தேடி அல்லது போய்ப்பார்த்தல்.
நோடுதல் _ சோதித்துப்பார்த்தல் (நோட்டம்)
நாடுதல் _ ஆய்ந்துபார்த்தல்.

ஏ! அப்பா! _ இத்தனை பொருளா?

தமிழில், ஒரு சொல் ஒரு பொருளையோ, பல பொருள்களையோ கொண்டிருத்தல் இயல்பு.

ஆனால், ஒரு தமிழ்ச்சொல் அதுவும் _ ஈரெழுத்து ஒரு மொழி _ சொல்லும் இடம், சொல்லும் நேரம், சொல்லும் சூழல், சொல்லும் வாய்ப்பு முதலியவற்றிற்கு ஏற்ப, பொருள் வேறுபாடுகளை உணர்த்தும் பாங்கினை இப்பொழுது எடுத்துக் காட்டுகளுடன் பார்ப்போம்.

சபாஷ்! சரியான போட்டி!

1. வலிமைப் பொருள் _ சபாஷ்! சரி (வலிமை)யான போட்டி!
2. இசைவு _ சரி (சம்மதம்) என்று சொல்லப்பா!
3. ஆனாலும் _ கணவனும் சரி (ஆனாலும்) மனைவியும் சரி (ஆனாலும்) விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் முறை.
4. நேர் (ஈடு) _ கணக்கு சரி நேர்(ஈடு)யாய்ப் போயிற்று.
5. குறித்த _ சரியான (குறித்த) நேரம்!
6. தக்க _ சரியான நேரத்தில் பணம் கொண்டு வந்துவிட்டீர்களே?
7. ஒத்து _ உனக்கும் எனக்கும் சரி (ஒத்து) வராது!
8. கவனம் (உற்று) _ சரியாய்க் கேள்!
9. நேரான (நேர்மையான) _ சரியான (நேர்மையான) பாதையில் போ!
10. கெட்டி _ சரி (கெட்டி)யாய்ப் பிடித்துக்கொள்.
11. நல்ல (செம) _ சரியான இலாபம்!
12. நன்றாக _ சரியாகப் பார்த்தாயா?
13. பொல்லாத _ சரியான வாயாடி!
14. சமம் _ சரிநிகர் சமானம், சரிக்குச்சரி.
15. இத்தோடு _ சரி (இத்தோடு) விடுங்கள்.
16. போதும் _ சரி (சரி) நிறுத்து.
17. தவறற்ற தன்மை _ அவன் கூறுவது சரியா? தவறா?
போதும்! நாமும் இத்தோடு எடுத்துக்காட்டு களை நிறுத்திக் கொள்கிறோம். சரிதானே?

தனக்குவமையில்லாத தனித்தன்மை

மேலே காட்டியவை மட்டுமன்றி ஏராளமான தனித்தன்மை, தனக்குவமை இல்லாத தனித்தன்மை (Uniqueness) உடையது நம் தமிழ்மொழி! ஒரு சிலவற்றை மட்டுமே இங்குக்காட்டியுள்ளோம்!

               பேரா.ந.வெற்றியழகன் - தமிழின் தனிமைத்தன்மை பற்றி ஆராய்வோம். ஜூலை  ”உண்மை” 1 15 2012
 ***********************************************************************************
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்

பகுதி II - தமிழின் தனித்தன்மை

தவிர்க்க இயலாத தத்துவம்

மாற்றம் என்பது மாறாத உலகத்தியற்கை; எத்துறையும் இதில் விலக்கன்று. மொழியும் இதிலடங்கும். தமிழ்மொழியும் இதிலடங்கும்.

சமுதாயம் மாற்றம், வளர்ச்சி இவற்றிற்கேற்றபடி மொழியிலும் மாற்றம், வளர்ச்சி ஏற்படும்; ஏற்படவேண்டும். இது, தவிர்க்க இயலாத் தத்துவம் _ விதி _ நியதி _ இயற்கைச் சட்டம்.

தமிழின் இன்றியமையாத அடிப்படையான இலக்கண அமைதியை இந்த மாற்றம் அடிப்படையில் வைத்து ஆராய்வோம்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?

நம் தமிழ்மொழி _ தனித்தன்மைகள் கொண்ட நம் தமிழ்மொழி, தவிர்க்க இயலாத சில அல்லது பல மாற்றங்களை வளர்ச்சி நோக்கில் கையாள வேண்டும்.

இல்லையேல்,

தமிழ் காலத்தால் பின்தங்கி, பிற்போக்கு நிலைபெற்று, பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் அது தனிமையாகிவிடும். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.

வருந்தத்தக்க இந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்கப்பட வேண்டும் என்றால் இலக்கணத்தில் இன்றியமையாத சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்புடைய புத்திலக்கணத்தின் இன்றியமையாமை

மொழிவளர்ச்சியும், புதிய இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. மொழிவளர, புதிய இலக்கணங்களும் தோன்றியாக வேண்டும்; தோன்றியேயாக வேண்டும். இன்றேல், மொழியில் குழப்பங்கள், தெளிவின்மை மிகுதியாகும். மொழிவழக்கில், ஓர் ஒருமைப்பாடும் (Uniformity) செம்மையும், சீர்திருத்தமும் (reform) இல்லாமல் போய்விடும். விளைவு?

நம் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும். ஓடும் நீரோடையாக அல்லாமல் தேங்கிய குட்டையாகிவிடும். ஆதலின், மொழிவளர, புதிய இலக்கணங்கள், காலத்தின் போக்குக்கு இயைப _ ஏற்ப தேவை என்பது தெளிவாகும்.
அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்:
முக்காலமும் தற்காலமும்

வந்தான், வருகிறான், வருவான் - என்கிற முக்கால வினைகள்தான் பண்டைய இலக்கணத்துடன் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த முக்காலங்களோடு, வந்துவிட்டான்;
வந்திருக்கிறான்;
வரப்பார்த்தான்;
வரமுடியும்;
வரவேண்டும்;
வரலாம்; என்பன இன்றைய வழக்காற்றில் உள்ளன. இவற்றைத் தவிர்க்க இயலாது; பழைய இலக்கண வழக்கில் இல்லை என விலக்க இயலாது; முடியாது, முயன்றால், தமிழ் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.

பலர்பால் வினைமுற்று படும்பாடு

ஆசிரியர் வந்தார் என்பதில் ஆசிரியர் என்பது பலர்பால்; வந்தார் என்பது பலர்பால் வினைமுற்று. இன்று, அது உயர்திணை ஒருமைப் பலர்பாலுக்கு உரியது.

வேற்றுமொழி எழுத்துகளின் பயன்பாடு

தனித்தமிழ் சொற்களை எழுத வடமொழிக் கிரந்த எழுத்துகள் தேவையில்லை. ஆனால், வேற்றுநாட்டுப் பெயர்; ஆள் பெயர்கள்; இடப்பெயர்கள்; வேற்றுநாட்டார் உண்டாக்கி நாம் பயன்படுத்தும் பொருள்களின் பெயர்கள்; போன்றவற்றைக் குறிக்கும்போதும் தமிழ் எழுத்துகளில் குறிக்கப்பட முடியாத போதும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம். இதனால், தமிழ்ப் பண்பாடோ, தனித்தன்மையோ கெடுவதில்லை.

எடுத்துக்காட்டு

ஆகஸ்டு - இதனை அப்படியே எழுதலாம். ஆகச்சுட்டு என்று எழுதவேண்டியதில்லை. பெர்னாட்ஷா - இதனை, பெருனாருடுசா என எழுத வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தன்மை காக்கும் நோக்குடன் மேற்கண்டவாறு குறித்தால் அந்தச் சொற்கள் நாம் எதை, யாரைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோமோ அவற்றை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறதல்லவா?

தலைநிமிரவா? தடம் புரளவா?

பழமை, பழம்பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித்தன்மை, தூய்மை முதலானவை நாம் தலைநிமிரவும் பயன்படலாம்; தடம் புரளவும் பயன்படலாம்.
நீரோடும் நிலத்தோடும்

அறிவியல் _ தொழில்நுட்பம் (Science - Technology) என நாம் இன்று குறிப்பிடும் கல்வித்துறை முழுமையாக மேலைநாட்டினரின் படைப்பாகும்.

தனித்திருந்து வாழும் தவமணி

நாம் அறிந்த, நம் நாடு கண்ட தொழில் நுட்பம் நம் மொழியில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பம் நம் மொழியிலிருந்து விலகி நிற்கிறது என்பது இல்லை. அது, நம்மிடமிருந்தும், நம் மண்ணிலிருந்தும் விலகி நிற்கிறது. தனித்திருந்து வாழும் தவமணியாக நம் மொழி _ செம்மொழி இருக்கிறது. இதனால், தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.

அய்யா வழியில் அடிகளார்:

தந்தை பெரியாரின் கருத்துக்கு, தமிழ்மா முனிவர் குன்றக்குடி அடிகளார் பின்வருமாறு விளக்கம் தந்தார். இன்று வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானம் _ தொழில்நுட்பம் தமிழில் உண்டா? என, பெரியார் கேட்டார். ஆம்! காலத்திற்குக் காலம் தமிழ் வளரவேண்டும். உலகம் தழீஇய(தழுவிய) ஒட்பத்துடன் (சிறப்புடன்) வளரவேண்டும். அங்ஙனம் தமிழ் வளர்ந்ததா? வளர்க்கப் பெற்றிருக்கிறதா?... இன்று, தமிழ் அறிவியல் தமிழாக வளரவில்லை; வளர்க்கவேண்டும் என்ற முனைப்பும் இல்லை. தெருவில் வழக்கமான பட்டிமன்றம்தான்! கைகேயியா? கூனியா? என்பன போன்ற தலைப்புகள்...

காலந்தொட்டு இயைந்த நிலையில் தமிழன் தன்னை வளர்த்துக் கொள்ளாது போனால் அவன் தலைவர் பெரியார் பார்வையில் காட்டு மிராண்டிதான்! அவன் பேசும் மொழியும் காட்டுமிராண்டி மொழிதான்! (பெரியார் 116ஆம் பிறந்தநாள் விடுதலை மலர்)

அறிவியல் தமிழாக்கத்திற்கான சிலவழி முறைகள் புதிய சொற்கள் புனைவதா?

எல்லாப் பிறமொழிச் சொற்களையும் அவற்றை அப்படியே ஒலிக்காமல் அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பதோ புதிய சொற்கள் புனவைதென்பதோ இயலும் ஒன்றல்ல; தேவையானதுமல்ல. அவற்றை அப்படியே தாய்மொழியில் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடாது.
அவற்றை மொழிபெயர்த்தே ஆதல் வேண்டும் என்று அடம்பிடித்தால் தமிழ்மொழி தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும்.
அய்யமில்லை! அதேசமயம், நடைமுறைத் தடுமாற்றத்தால், தெளிவின்மையால் தமிழ் தனிமைப்பட்டுவிடும்.
சான்றாக, புதிய ஆங்கில மருந்துகளான பென்சிலின் (Pencillin), ஸ்டெரப்டோமைசின் (Streptomycin), இன்சுலின் (Insulin) முதலான பெயர்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியமை அல்ல.

தனித்தன்மையா? தனிமையா?

நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி அறிவு வளர்ச்சியில் நம்மைத் தனிமைப்படுத்துவதோடு தமிழையும் தனிமைப்படுத்தி விடுகிறோம்.
மாற்றம் எதுவுமின்றி உலக அளவில் பொதுமையாகப் பயன்பாட்டில் உள்ள குறியீடுகள் (symbols) இவற்றைத் தமிழில் எழுதித்தான் ஆகவேண்டும் என்பது இல்லை.

அவ்வண்ணம், குறித்தால்தான் தமிழ்ப்பற்று, தமிழுணர்வு இருப்பதாகக் கூறுதல் சரியான அணுகுமுறையோ, கொள்கையோ ஆகாது.
சான்று பி2ளி இருமடங்கு நீரிய (Hydrogen)மும் ஒரு பங்கு உயிரிய (Oxygen)மும் இணைவதால் உண்டாவது நீர். இது வேதியியல் விளைவு. இதற்கான உலகளாவிய குறியீடுதான் பி2ளி என்பது. இதனை, ஆங்கில மொழிச் சொற்குறியீடு என்பதால் நீ2உ _ என்று தமிழ்மொழியாக்கம் செய்தல் கூடாது.
அறிவியல் மாணவர்கள் குழப்பம் அடைவர். மாற்றமில்லாது அப்படியே பயன்படுத்த வேண்டிய சொற்களை ஏற்றல்.
சான்று: ஓம் (Ohm),, ஆம்பியர் (Ampere) டயர் (Tyre) இவற்றிற்கு வேறு பெயர்களைத் தமிழில் காண, உருவாக்க முயல்வது தேவையற்றது.
மேற்கண்ட பெயர்கள் அவற்றுடன் தொடர்புடைய இயற்றுநர் (Inventor) பெயர்களைத் தாங்கி நிற்பன. இவற்றை மொழிபெயர்த்தல் என்ற எண்ணமே, முயற்சியே தேவையில்லை. செய்தால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.

எழுத்துச் சீரமைப்பு

தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான முதல்படி எழுத்துச் சீரமைப்பு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தந்தை பெரியார் அவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தில் ஒரு பகுதி அரசுஆணையாக எம்.ஜி.ஆர். அவர்களால் வெளியிடப்பட்டது.

குறைந்த குறியீடுகள்

தந்தை பெரியார் அவர்கள் ஐ, ஔ, என்ற 2 உயிரெழுத்துகளுக்குப் பயன்படுத்திய மாற்றங்கள் மட்டும் அரசு ஆணையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. தமிழ் வரிவடிவத்தில் கடந்த 2000 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பல. அறவே, அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு வரிவடிவம் மாறுபட்டுள்ளது. இப்போதைய வரிவடிவங்களில் சில வீரமாமுனிவரால் மாற்றம் செய்யப்பட்டன. ஒலிகளுக்காக, நாம் அமைக்கும் குறியீடுகள் மிக எளிய _ முடிந்த அளவு குறைந்த எண்ணிக்கையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

பெரியாரைத் துணைக்கோடல்:

தந்தை பெரியார் அவர்கள் 1948_ல் கூறிய பின்வரும் கருத்தினை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

மாற்றுவதும், திருத்துவதும் எதற்கும், யாருக்கும் இழிவாகவோ, குற்றமாகவோ ஆகிவிடாது. பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக்காலத்திய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம்.

மொழி என்பது, உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போராட்டக் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். _ (தந்தை பெரியார் கட்டுரைத் தொகுப்பு. பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியிடு, திருச்சி-_1948)

தனித்தமிழின் தகைமை காப்போம்!

வரம்பு மீறி, தேவையில்லாமல், தாராளமாக வரைமுறையில்லாமல் அயல்மொழிக் கலப்பு தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டியது; தடுத்து நிறுத்தப்படுவதற்கு உரியது ஆகும்.

ஓர் இனத்திற்கும் மொழிக்கும் தனித்தன்மை உண்டு. அது, தேவைப்படும் போதெல்லாம் பாதுகாக்கப்படல் வேண்டும்; முடிந்தவரை வளர்க்கப்படல் வேண்டும். அதற்காக, ஓர் இனமோ, மொழியோ, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதல் கூடாது.

பாதையும் பயணமும்

கடந்த கால வரலாறு; இன்றைய நடைமுறை; அனைத்துக்கும் மேலாக, உலகு அளவிய கோட்பாடு ஆகிய அனைத்துக்கும் மாறான பாதையில், நம் மொழி _ தமிழ்ப் பயணமும்; முயற்சியும் சென்றுவிடுதல் கூடாது!
காப்போம்! தவிர்ப்போம்!!

நாம், நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி, நாளுக்குநாள் நம்மை அறிவுலக வளர்ச்சிப் பாதையில் தனிமைப்படுத்துவதோடு, நம் தமிழையும் தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறோம்.
தனிமைப்படலும் (Isolation), தேக்கமும் (Stagnation) வளர்ச்சிக்கு வழி அன்று. தமிழின் தனித்தன்மையைக் காப்போம்! அதே சமயம், தமிழ் தனிமைத்தன்மை அடைவதைத் தவிர்ப்போம்!
------------------ பேராசிரியர் ந.வெற்றியழகன் ------”உண்மை”ஜூலை 16 31 2012

18 comments:

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் கவிதை !
==================
இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும் !

(திராவிடநாடு 1956)

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை



பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


தகுதி திறமை பேசும் அ.இ.அ.தி.மு.க. அரசு


செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆண்டாண்டுக் காலமாக அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த சமூக நீதியின் ஆணி வேரை, வெட்டும் ஓர் ஆபத்தான வேலையில் திட்டமிட்ட வகையில், இறங்கி விட்டதாகத் தெரிகிறது.

மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களே, சமூகநீதியின் தலையில் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு) கை வைத்ததன் பலனை, 1980 மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாக அனுபவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அவர் சந்தித்த மகத்தான மரண அடியாகும் அது.

தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்றினை எந்தக் காரணத்தாலோ, உணர மறுத்தால் 1980இல் எம்.ஜி.ஆர். அவர்கள், மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது போலவே, 2014 மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பெரும் அளவில் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கு மரண அடியை அ.இ.அ.தி.மு.க. அரசு கொடுத்து விட்டது.

தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அதற்கு மாறாக உயர் ஜாதியினருக்கு என்ன தகுதி மதிப்பெண்ணோ அதே தகுதி மதிப்பெண்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு - இதுவரை, தமிழ் மண் கட்டிக் காத்து வந்த சமூக நீதிக்கு, வெட்டப் பட்ட சவக்குழி அல்லாமல் வேறு என்ன?

69 சதவீத இடஒதுக்கீட்டைக் கட்டிக் காக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட ரீதியாக, வழிகாட்டி அதற்கான மசோதாவையும் உருவாக்கித் தந்து, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சட்டமாக்கச் செய்தார்.

இன்று சோ இராமசாமிகள் ஆலோசகர்களாக இருக்கின்ற காரணத்தால், சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கிறார் என்று தானே பொருள்?

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் இவ்வாறு கூறுகிறது.

The State Govt has taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation to any of the categories என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி திறமை என்பதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு, என்று கூறுகிறது அரசின் பிரமாணப்பத்திரம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்கிற பிரச் சினையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், எல்லாவற்றிலும் ஆதிக்கக் கொடியைக் கையில் ஏந்திய பார்ப்பனர்கள் எந்தத் தகுதி - திறமையைப் பேசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதத்தை வைத்தார்களோ, அதே பார்ப்பனர் வாதத்தைதான் செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு இன்றைக்கு வைத்துள்ளது - அதுவும் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரமாகவே தாக்கல் செய்துவிட்டது.

சமூகநீதிப் போராளிகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடும் ஒரு நிலையை அ.இ.அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்து விட்டது.

தகுதி - திறமை மோசடி பற்றி தந்தை பெரியார் கூறாததா? கல்வி வள்ளல் காமராசர் கூறாததா?

அறிஞர் அண்ணா பேசாததா?

ஒடுக்கப்பட்ட மக்களே, சமூகநீதிக் களத்தில் இறங்கிடத் தயாராவீர்!

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் வானொலி உரை


பெருமதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (17.9.2013), வானொலியில் தாங்கள் ஆற்றிய உரை, சொற்செறிவும், பொருள் ஆழமும் கொண்டு, தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டியது. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல், அறிவுப்பிழம்பாய்த் திகழ்ந்த அந்த உரையில், தாங்கள் கூறிய

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தால் அழியாதவை; கருத்தால் நிலையானவை; பயன்பாட்டால் இன்றும், என்றும் வேண்டப்படுபவை என்ற முடிவுரை, நெஞ்சை நெருடியது. அந்த உரையில் தொண்டறச் செம்மல் என்ற தலைப்பே, ஈர்ப்புடையது அவர் (பெரியார்) பதவியை நாடாதவர்; புகழைத் தேடாதவர்; பொதுவாழ்வில் நேர்மையும், சிக்கனமும் கொண்ட, தொண்டறச் செம்மல், என்ற வாசகங்கள் பெரியாருக்குப் புகழாரம் சூட்டின.

அவருடைய சொந்த சொத்துக்களும், மக்கள் அவருக்கு கொடுத்த பணமும், இப்போது கல்விக் கூடங்களாக, மருத்துவமனைகளாக, பிரச்சார நிறுவனங்களாக காப்பகங்களாக விளங்குகின்றன என்ற விளக்கம், தந்தை பெரியாரைத் தொண்டறச் செம்மலாகப் படம் பிடித்தது. கிரேக்க அறிஞன் சாக்ரடீசுக்கு வாய்த்த பிளோட் டோவின் பெயர் என் நெஞ்சில் நிழலாடியது.

- வீ.செ.கந்தசாமி, சென்னை- 14

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந் தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை)

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

தமிழ் ஓவியா said...


செப் 27: (இன்று) : உலக சுற்றுலா தினம்


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொரு ளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக்கருத்து.

சுற்றுலா பலவிதம்

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட் டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங் களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010 ஆம் ஆண் டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகை ஈர்க்கும் நாடு எத்தனை பேர்

பிரான்ஸ் 8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா 6 கோடியே 70 லட்சம்
சீனா 5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின் 5 கோடியே 77 லட்சம்
இத்தாலி 4 கோடியே 64 லட்சம்
துருக்கி 3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி 3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து 2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா 2 கோடியே 57 லட்சம்
மலேசியா 2 கோடியே 50 லட்சம்

தமிழ் ஓவியா said...


சாயிபாபா பக்தரின் கண் இப்பொழுதுதான் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.

சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம்.

அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலாளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


அறிவியல் சிந்தனை



பண்டைய கிரேக்கத்தில் அறிவியல் சிந்தனை தழைத்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல் சூழல்தான். கிரேக்கத்தின் நகர அரசுகள் அறிவியல் சிந்த னைகளுக்குத் தடை விதிக்க வில்லை. கிரேக்க அறிவியல் தத்துவ ஞானிகள் இயற்கையையும், இயற்கை நிகழ்வுகளையும் புதிய கோணத்தில் அணுகுவதற்கு இந்த நகர அரசுகள் தந்த சுதந்திரம் பெரும் உதவியாக இருந்தது.

எனினும் இங்கும் அரசியல் செயல்கள் ஒரு சில சமயங்களில் அறிவியலை பாதித்தன என்பதற்கு ஆர்க்கிமிடிஸின் இறப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.

உரோமானிய மன்னன் கிரேக் கத்தின் மீது படையெடுத்தபோது உரோமானியத் தளபதி ஆர்க்கி மிடிஸிக்கு எந்த வித பாதிப்பும் ஏற் படக் கூடாது என்று கட்டளை யிட்டிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் மணலில் வடிவக் கணிதவியல் (Geometry) படத்தை வரைந்து கொண்டிருந்த போது ஒரு போர் வீரன் அவரை யாரென்று அறியாமல் கொன்று விட்டான்.

தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுபோர் வீரனை விலகுமாறு அவர் செய்த சைகையைத் தவறாகப் புரிந்து கொண்டயோர் வீரன் அவரைக் கொன்றது அறிவியலுக்கு செய்த மிகவும் பாதகமான செயலாகும்.

(அறிவியலின் வரலாறு பேரா கு.வி. கிருஷ்ணமூர்த்தி பக்.36).
- _ க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்


தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது. ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் பிறந்ததால்...

சுய மரியாதைச் சொரனை பிறந்தது
சூது மதியாளர் சூழ்ச்சி தெரிந்தது
பார்ப்பாரப் புளுகு பஞ்சாய் பறக்குது
பகுத்தறிவு தெளிவு பாங்காய் சிறக்குது
ஆன்மீகப் பயிரு காய்ந்து கருகுது
ஆரிய வயிரு வெந்து ஏறியது

பள்ளிக்கூடம் பல்கிப் பெருகுது
கல்லூரிக்கல்வி கடல்போல் வளருது
எல்லார்க்கும் படிப்பு இலட்சிய மானது
இல்லார்க்கும் படிப்பு எளிதாய் ஆனது
பஞ்சமர் சூத்திரர் அறிவு வென்றது
பார்ப்பனர் சாத்திரம் அழிந்து ஒழிந்தது

திராவிடர் இனத்திற்கு முகவரி பிறந்தது
ஆரியர் இனத்திற்கு ஆணிவேர் அறுந்தது
ஜாதி சனாதனம் தூக்கில் தொங்குது
சங்கர ஆச்சாரிக்கு தூக்கு நெருங்குது
பெரியார் கொள்கை உலகம் சுற்றுது-சுய
மரியாதை உலகம் இனிதான் பிறக்குது -
- அதிரடி க.அன்பழகன்

தமிழ் ஓவியா said...


சந்திரனில் நீர்


இந்திய செயற்கைக்கோள் சந்திராயன் சேகரித்து கொடுத்து தகவல்களின் அடிப்படையில் சந்திரனில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது என்று யு.எஸ். வான்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா கூறியுள்ளது. சந்திரனின் தரைக்குள் கண்டறியப்படாத ஆழத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களை அதன் தரையில் காணப்படும் கனிம துகள்கள் காட்டுகின்றன என்றும் அது கூறுகிறது. இந்த ஆய்வு தகவல் நேச்சர் ஜியாகிராபிக் இதழில் வெளியாகியுள்ளது. சந்திரனின் உள்பகுதி முன்பு நினைத்தது போல் வறண்டு போய் கிடக்கவில்லை என்பதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கிரகங்களின் புவியியல் நிபுணர் ரேச்சல் கில்மா கூறுகிறார். இவர் லாரல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் சோதனைச்சாலை யில் பணியாற்றுகிறார்.

சந்திரனில் உள்ள பாறைகள் எலும்பு போல் காய்ந்து போய் உள்ளன என்று நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். அப்போல்லோ செயற்கைக் கோளில் கிடைத்த மாதிரிகளில் காணப்பட்ட நீர்த்திவலைகள் பூமியின் மிச்ச சொச்சங்கள் என்றும் கூறினர்.

இதுவெல்லாம் தவறு என்று தற்போதைய சந்திராயன் கொடுக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் சொன்னார். அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய புதிய சோதனைச்சாலை தொழில் நுட்பங்கள் சந்திரனின் உட்பகுதி முன்னர் நினைத்தது போல் காய்ந்து போய் கிடக்கவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை



பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

தமிழ் ஓவியா said...


மோடியின் முகத்திரை கிழிந்தது



குஜராத்தைப் பாருங்கள், மோடியின் நிகரற்ற ஆற்றலால், இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் வளங் கொழிக்கும் பூமியாக ஜொலிக்கிறது பாரீர்! பாரீர்!! என்று இந்தியா முழுவதும் செய்து வந்த பிரச்சாரப் பலூன் உடைந்து சிதறி விட்டது - அது ஒரு திட்டமிட்ட உயர் ஜாதி இந்துத்துவா - மற்றும் பெரு முதலாளி களின் பெரும் பிரச்சாரம் என்பது அதிகார பூர்வமான ஒரு அறிக்கையின் மூலம் அம்பலமாகி விட்டது.

பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோச கராக இருந்த ரகுராம்ராஜன் (இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர்) தலைமையில், அமைக்கப்பட்ட குழு இந்திய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார நிலைகள்பற்றி ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றினைக் கொடுத்துள்ளது.

மூன்று வகை நிலைகளை அது அட்டவணைப் படுத்தியுள்ளது.

முதல் நிலையில், சிறப்பாக உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட ஏழு. இந்த ஏழு மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை என்பதை, நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் 10 என்ற அட்டவணையில், குஜராத் இல்லை என்று வேண்டுமானால், முதுகைத் தட்டிக் கொள்ளலாம்.

குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பதினொன்று. அதில் 7ஆவது இடத்தில், குஜராத் மாநிலம் இருக்கிறது.

இந்த ஆய்வு என்பது, அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல; பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுதான் வெளியில் கொண்டு வந்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, நரேந்திர மோடி பிரதமராக வந்தால் இந்தியாவைக் குஜராத் ஆக்குவார் என்று தம்பட்டம் அடிப்பது ஏன்?

வேண்டுமானால் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளலாம்; இந்தியா, குஜராத் மாநிலம் போல குறைவான வளர்ச்சியுடைய நாடாகப் பந்தயம் கட்டி மாற்றிக் காட்டுவோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார மேதையும், அதற்காக நோபல் பரிசு பெற்றவருமான, அமர்த்தியாசென், அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவரல்லர்.

பொதுக் கண்ணோட்டத்தில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தினார்.

Modi could have also taken both of the facts, that Gujarat record in education and health care is pretty bad and he has to concentrate on that என்றாரே!

குஜராத் மாநிலத்தில் கல்வி வளர்ச்சியிலும், சுகாதார வளர்ச்சியிலும் முதல் அமைச்சர் மோடி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவை இரண்டிலும் குஜராத் மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினாரே - இதற்கு எந்த வகையிலும் அரசியல் முத்திரை குத்த முடியாதே!

இராமச்சந்திரகுகா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்களுக்கும் மோடி பற்றிய கணிப்பு என்ன என்பது ஊரறிந்த உண்மையாகும்.

ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, மோடிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் ஆட்சி குறித்து வழக்கம்போல வாய்த்துடுக்காக மோடி பேசியதற்குத்தான் ஆந்திர முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

அறியாமை பாவமல்ல; ஆனால் திட்டமிட்ட அறியாமை பாவமேதான்! அதுதான் பொய் கூறிய மோடி! ஆந்திரா, குஜராத் திறமை வளர் நிலைபற்றி முழு அளவில் அறிந்திருந்தும், மக்கள் முன்பு பல தவறான தகவல்களை அளித்துள்ளார் மோடி. அவருடைய தரத்துக்கு அது நல்லதல்ல.

ஆந்திர மாநிலம் 3.25 லட்சம் இளைஞர்களுக்கு திறமை வளர் பயிற்சிகளை அளித்துப் பணிகளில் அமர்த்தியுள்ளது. குஜராத் 52,000 இளைஞர்களுக் கும், தமிழ்நாடு 1.6 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளன. ஆனால் வேலைகள் கொடுக்கப்பட வில்லை என்று ஓங்கி அடித்தார் ஆந்திர முதல் அமைச்சர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பார்கள்; மோடியின் பொய்ப் பிரச்சாரமும் உரிய காலத்தில் அம்பலமாகி விட்டதே!

தமிழ் ஓவியா said...


பாரதத்தாயின் துயரம்

- சித்திரப்புத்திரன்

ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய்.

என் மக்களில் பெரும்பாலோரை அயோக் கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேக அயோக்கி யர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால், எனது அருமைப் புத்திரனான காந்திமகான் எனக்காகச் செய்த தவமும், தியாகமும், ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா?

நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால், எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்கார முடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப்பேசிய அயோக்கியர்களும், சுயநலக்காரர்களும், துரோகிகளும் ஜனப்பிரதிநிதிகள் ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தைக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி?

காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன். விடுதலை பெறுவேன். சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.

பாரதத்தாய் தனது மக்களுக்குச் சொல்வது.

ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும், உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னைப் பாழாக்குகிறது. காலரா, பிளேக், வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது,

ஆனால் காங்கிரஸ் சுயராஜ்யம் தேசியம் என்னும் வியாதிகளோ எனது, முப்பத்து முக்கோடி மக்களையும், அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும், அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளைகொண்டு பாழ்பண்ணிக் கொண்டு வருகிறதே, இதை கவனிப்ப தில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இது தானா அடையாளம்?

இவ்வியாதிகளின் பேரால் வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன் இன்னும் வை இன்னும் வை என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?

எவனாவது ஒரு காங்கிரஸ்காரன், இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேண்டுமென்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன், மக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்கள் அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியுள்ள வர்களாகிறீர்கள்.

பிராமணியம், பிரிட்டாணியம் இந்த இரண்டைவிட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டாணியத்தை கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசியமும், இரண்டாவது ஆக பிராமணியத்தையும் தொலைக்க வேண்டும். பிராமணியத்தை நிதானமாகக்கூட ஒழிக்கலாம்.

அவசரமாக தேசியத்தைத் ஒழிக்க வேண்டும். ஏனெனில், தேசியமே பிரிட்டானியத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசியத்தை இடித்து விட்டால் பிரிட்டானியம் ஆடிப்போகும். தேசியமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானியம் உண்மையான சுதேசியமாய் விட்டிருக்கும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.06.1927

தமிழ் ஓவியா said...


ஒரு சமாதானம்

சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் நாயக்கரின் நய வஞ்சகம் என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்த கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்கு கொஞ்சகாலத்திற்கு முன் எழுதியதாக காட்டப்பட்டிருந்த கடிதத்திற்குச் சமாதானமாகவும் அடுத்த வாரம் எழுதுவதாக பதில் எழுதியிருந்தோம்.

அதை உத்தேசித்து அநேக கனவான்கள் நமக்கு பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது, நாம் எழுதப்போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் இஷ்டப்படி கண்டித்து நாயுடுவுக்கு பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்;

இவ்விதம் இருவர் சண்டை போட்டுக்கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும், இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையின் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன.

இவ்வளவும் நாம் இந்த வாரத்தில் பிரசுரிக்கும் போது பதில்களுடன் சேர்ந்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன. நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே, நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாக நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ் விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக்கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்திவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்.

ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்கு கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்ததோடு, அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும், ஸ்ரீலஸ்ரீ கைவல்யசாமிகள் முதல் பல பெரியவர்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலே தான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும், அவசியமில்லா வீரியமும் பெரியதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிருப நேயர்கள் மன்னிக்க வேண்டும்.

இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாக கூறுவோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 29.05.1927

தமிழ் ஓவியா said...


மித்திரன் நிருபரின் அயோக்கியத்தனம்


நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிருபர் ஒருவர் மிகவும் அயோக்கியத்தனமான ஒரு நிருபத்தை மித்திரனுக்கு அனுப்பியிருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும், அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிருபர்களும் மானம், வெட்கம், சுத்த ரத்தவோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்ப தாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிருபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை.

இதன் காரணமும் நமக்குத் தெரிவ தில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும், யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோப்போர் கோக்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.

நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியா லயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும், அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்கட்டுரை - 12.06.1927