Search This Blog

16.11.12

ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்-பெரியார்

திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா
5 வது சுயமரியாதை மகாநாடு
ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்

தோழர்களே!

சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.

இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு சௌகரியமில்லாதது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர் களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலக்ஷியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

இயக்கம் எங்கு போய் விட்டது. அவர்களை விட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான்.

இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத்தில் சுயநலம் கருதுபவர்களை கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.

எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.

தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய் விட்டது என்று சொல்லிக்கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள்; சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக்கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?

இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீரவேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டமால் இருப்பதுகூட நலமென்றே கருதுகிறேன்.

ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை

இந்த லக்ஷணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லக்ஷணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம் தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்?

இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே அக்கட்சியையே வைது கொண்டிருப்பதனால் மகாநாடு எப்படிக்கூட்ட முடியும்?

நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்மந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து விட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம் முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது.

மற்றும் நாளையும் மகாநாடு கூட்டவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதன் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர் களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார் தான் ரயில் சார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.

இயக்கம் என்றால் எவனோ ரயில் சார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரையும் பயங்காளி என்றும், கோழை என்றும், மந்திரிகள் மாய்கையில் மறைந்து விட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றவரை வைதுவிட்டுப் போய் விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொருப்பில் செலவு செய்கிறேன். பல தடவை 1000, 2000 மொத்தமாக செலவு செய்துவருகிறேன். மாதம் 10 பிரசங்கங்களுக்குக் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயலாவுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லக்ஷியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்குமேல் மற்றவர்கள் சாதிப்பதோ மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.

இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல் ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத் தான் இந்த "இழிவு" பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ, வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

காங்கிரசில் உழைத்தபோது எனக்கும், என் குடும்பத்துக்கும் தகுதிக்கு மேற்பட்ட புகழ் கிடைத்தது.

அப்போது சில பதினாயிரக்கணக்கான ரூபாயில் புகழ் சம்பாதித்தேன். இப்போது பல பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவும் நஷ்டமும் அடைந்து இகழ்ச்சி அடைகிறேன்.

என்னவென்றால் 1922 வருஷத்திய சகல கட்சி மகாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப்பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்சு காந்தியாருக்கு என்னவேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வ கட்சி மகாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டு வரும்படி செய்தார். அதில் சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை "உமக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அப்போது காந்தியார் எனக்கு என்னவேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுப் பதில் சொல்லுகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார், என் மனைவியும், என் தங்கையும்தான். இது 1922ம் வருஷம் ஜனவரி மாதம் 19ந் தேதியிலோ 20ந் தேதியிலோ ஹிந்து பத்திரிகையில் இருந்தது. இதை திருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார். இதற்கு மேல் எனக்கு இன்னும் என்னவேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத்துரோகி, மதத்துரோகி, நாஸ்திகள், கோழை, சர்க்கார் தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும் நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படவேண்டுமென்று கருதி சில திட்டங்களைக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன்.

இனியும் சாகும்வரை அந்தப்படியே உழைத்து வரத்தான் செய்வேன்.

நான் பயந்துவிட்டது

நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன்.

நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது.

அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம்கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும். எனக்கு இந்த 2, 3 வருஷத்தில் எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டது? தோழர் ஜீவானந்தம் எழுதிய வியாசத்தைப் பத்திரிகையில் போட்டதற்காக 2000 ரூபாய் ஜாமீன் கொடுத்தேன். கல்வியைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக நானும் என் தங்கையும் சிறைப்பட்டோம். அபராதமும் கோர்ட் செலவுமாக ரூபாய் 2000க்கு மேல் செலவாகி விட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் மற்றொரு மொழி பெயர்ப்புக்காக என் தமையனாரும் சிறைப்பட்டார். அதற்கும் ரூ.1000 வரை செலவு ஏற்பட்டது. பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கப்பத்திரிகை மற்றொன்றுக்கும் ஜாமீன் கேட்கப்பட்டு நின்றுவிட்டது. இதைப்பார்த்த பல தோழர்கள் ஓடி விட்டதுடன் துரோகம் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை.

ஜெயிலில் எனக்கு என்ன கஷ்டம்? எ. கிளாசில் போட்டார்கள். இனியும் போடுவார்கள். 6 மாதமாவது ஜெயிலுக்குப் போனால்தான் என் உடம்பு இனியும் 2 வருஷத்திற்கு உழைக்க சௌகரியம் கொடுக்கும். நிற்க,

இயக்கத்திற்காக ஆரம்பமுதல் இந்த நிமிடம்வரை யாரிடத்திலாவது கால் அணா வசூல் செய்திருக்கிறேனா? அல்லது இயக்கத் தொண்டர்களுக்கு என் சக்தியனுசாரம் அவ்வப்போது உதவாமல் இருந்திருக்கிறேனா? என் குடும்பநிலை எவ்வளவு கஷ்ட நஷ்டத்திற்கும், கேட்டிற்கும் ஆளாகிவிட்டது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் எனது எஸ்டேட்டும் வருவாய்களும் எப்படி நாசமானாலும் அவற்றை லக்ஷியம் செய்யாமல் இயக்கத்திற்கு என்னால் கூடியதைச் செய்யாமல் இருந்ததே இல்லை. பார்ப்பனர் தொல்லையால், அரசாங்க தொல்லையால் எனது குடும்ப வருவாய் 100க்கு 25 வீதமாய் விட்டது. இப்படி எல்லாம் ஆனது ஒருபுறமிக்க,

யாரை நம்புவது?

இன்று எந்தத் தோழர்களை நம்பி நான் துணிந்து ஜெயிலுக்குப் போக முடியும்? ஒரு வருஷம் ஐரோப்பா கண்டத்திற்குப் போய் இருந்தேன். இயக்க நிர்வாக சபை அழிந்துவிட்டது. சென்ற வருஷம் 6 மாதம் ஜெயிலுக்குப் போனேன். மகாநாடு கூட்ட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு பிரசாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவுடமை என்று சொன்னவுடன் பணக்காரர்கள் பறந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் புத்திசாலித்தனமாய் காரியம் நடத்தாவிட்டால் இயக்கம் நடக்குமா? கடவுள் மதம் ஜாதி ஆகியவைகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமையும் இழிவும் ஒழியவேண்டாமா? ஏதோ இரண்டொரு ஆட்கள் அதுவும் சுயநல விஷயமாய் அபிப்பிராயபேதம் கொண்ட ஆட்களின் விஷமப் பிரசாரத்துக்கு பயந்து கொண்டு நான் வீரனாய் விட்டால் இயக்கம் போகும் கதி என்ன? எப்படியோ போகட்டும் நம் கடமையை செய்வோம் என்பதை எல்லா சமயத்திலும் முட்டாள் தனமாய் நான் பின்பற்றுபவனல்ல ஆகின்ற அளவுக்கு காரியம் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி நடக்க வழியில்லாமல் இல்லை.

இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும் பொதுவுடமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான் பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது.

ரஷ்யப் பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப் பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்து கொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர யாரோ ஒருவர் கோழை என்று சொல்வாரே என்று பயந்து கொள்ளவில்லை.

இவைகளையெல்லாம் உத்தேசித்தே சுயமரியாதை இயக்கத் திட்டம் இவ்வளவுதான் என்பதாக ஒரு வருஷத்துக்கு முன்பு (10335ல்) வெளிப் படுத்திவிட்டேன். அதன் பிறகே தாராளமாய் வேலை செய்ய முடிகிறது.

இதையும் தடுத்தால்

நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்க மில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் "புகழை"யும் "வீரப்"பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.

இந்த அரசாங்கத்தை "ஐ தீடிடூடூ ட்ஞுணஞீ ணிணூ ஞுணஞீ" என்று சொன்ன காந்தியார் கூற்று என்ன ஆயிற்று?

"நாங்கள் 35 கோடி பேர்களும் நாய்களோ, ஈனப் பன்றிகளோ" என்று சொன்ன தேசாபிமானிகள், தேசிய வீரர்கள் கதி என்ன ஆயிற்று?

ஆட்டிடையன் ஆடுகளை பட்டிக்குள் விரட்டுவது போல் இன்று காந்தியாரே "தேசிய வீரர்களை" சட்டசபைக்குள் போய் ராஜ பக்தியாயும், ராஜ விஸ்வாசமாயும், ராஜ சந்ததிகளுக்கும் ராஜாங்க சட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாயும் சத்தியம் செய்து "மானங்கெட்டு, மரியாதை கெட்டு" திரியும்படி இப்போது விரட்டி அடிக்கவில்லையா?

அவ்வளவு கேவல நிலைக்கு நாம் இன்னும் போகவில்லை.

நமக்கு பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் ஆகிய 3 எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால் முறையாக ஒவ்வொன்றாக ஒழிப்போம். இதற்காக நம்முடைய சுயநல வீரப்பிரதாபத்தில் கடுகளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? இதை உத்தேசித்தே என் தமையனாரை அரசாங்கத்தினிடம் ராஜத்துவேஷம் பரப்புவதில்லை என்று சொல்லி வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு விடுதலை அடையும்படி சொன்னேன். சர்க்காரின் நிலைமையையும் அவர்களது நடத்தையையும் சக்தியையும் யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். சர்க்கார் சக்தி லேசானதல்ல. உலகத்திலேயே சக்தியும், தந்திரமும் பொருந்திய சர்க்கார் பிரிட்டிஷ் சர்க்காராகும். மேடையில் கூப்பாடு போட நம்மை அனுமதித்து விட்டதாலேயே நாம் பெரியவர்கள் சர்க்கார் சின்னவர் என்று எண்ணிவிடக்கூடாது. எதிரியின் பலம் அறியாமல் வீரம் பேசுவது பொறுப்பை உணராததாகும். எப்பொழுது எதற்காக சர்க்காரோடு போராடுவோம் என்பது எனக்குத் தெரியும்.

காங்கிரசுக்காரர்கள் தொல்லையின் மீது சர்க்கார் கண்ணோட்டம் இருந்தபோது நம்முடைய பொதுவுடமைப் பிரசாரத்தை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தங்களுடைய சட்ட மறுப்பையும், மறியலையும், எதிர்ப்பையும் விட்டுவிட்டு ராஜவிஸ்வாசப் பிரமாண சரணாகதிக்கு வந்த பின்பு நம்மீது கண் வைத்தார்கள்.

2, 3 கோடி ரூபாய் செலவு செய்து பல லக்ஷம் பேரை ஜெயிலுக்கு அனுப்பி புத்தி பெற்ற காந்தியாரையும் காங்கிரசையும் பார்த்தாவது நாம் புத்திசாலித்தனமாய் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாங்கள் எங்கள் குடும்பம் மாத்திரம் கெட்டு ஜெயிலுக்குப் போனதிலும் திருத்திக்கொள்ள முடியாவிட்டால் நாம் பைத்தியக்காரராகி விட மாட்டோமா? நம் தோழர் களின் யோக்கியதை யாருடையது எனக்குத் தெரியாது?

இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கியதை போய்விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருந்திருக்கும்? அவர்களுக்கு மேடை ஏது? என்று யோசித்துப் பார்க்கட்டும்.

ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் நம் அபிப்பிராயம் தெரிவிக்க இன்று இந்த மேடை கிடைத்திருக்குமா?

பார்ப்பான் பின்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தே மாதர கோஷமும், காந்திக்கு ஜே கோஷமும் போட்டால் ஒழிய பலருக்கு சாப்பாட்டிற்கு ஆவது வழி கிடைத்திருக்குமா? நம்மிடம் வீரம் பேசிக் கொண்டு நம்மைக் கோழைகள் என்று சொல்லிக்கொண்டு போனவர்களின் வாழ்க்கை இன்று எப்படி நடக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் பணம் வாங்கினார்கள்? யாரை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்? யார் நிழலில் அவர்கள் வாழ்கிறார்கள்? எந்த கொள்கையை விட்டுக்கொடுத்தார்கள்? அவரவர்கள் பணம் செலவு செய்து எலக்ஷனில் ஜெயிக்கிறார்கள், உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். மற்றப்படி அக்கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிக்கும் வீரர்கள் என் எதிரில் வரட்டும் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சு.ம. இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதியும் இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல.

ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்துவருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதானால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடமையும் போலி புலி வேஷம்போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது.

சர்க்கார் உத்திரவு மீறுவதே சமதர்மமாகி விடாது. உத்திரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம்.

ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சு.ம. இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அநுகூலமாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடமை என்றோம். சர்க்கார் பொதுவுடமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது.

மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.

ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.

------------------திருத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 21.03.1936 இல் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.'"குடி அரசு" சொற்பொழிவு 29.03.1936

12 comments:

தமிழ் ஓவியா said...


துறவியும் - நடன மாதும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரில் பயணம் செய்யும்போது, வானொலி கேட்கும் பழக்கமுடையவன் என்பதால் இரண்டு நாள்களுக்குமுன், 75ஆம் ஆண்டு விழாவைக் கொண் டாடும் சென்னை வானொலியைக் கேட்கும்போது, இலக்கியப் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது கணீர் குரலில் கதையொன்று ஒலித் தது!

ஒரு ஊரில் ஒரு துறவி. அவர் நமது ஆனந்தாக்களைப் போன்றவர்கள் அல்லர். உண்மையான துறவி - அவருக்குள்ள சிறப்பு சிறப்பாக ஓவியம் வரைதல்.

எவரையும் சிறப்பாக உயிரோட்டத் துடன் அவர் வரையும் ஓவியங்களால் இந்தத் துறவி பிரபலமானார்; ஆனால் அவரிடம் சென்று எவர் ஓவியம் வரையுமாறு கேட்டாலும் அதிகமான கட்டணம் கேட்பாராம்! அவரது வியத்தகு திறமையைப் போற்றுவதால், அதிக கட்டணம் கொடுப்பதற்கு பலர் தயங்குவதில்லையாம்!

இவரது பெருமையை, ஓவியத் திறமையைக் கேள்வியுற்று ஒரு நாட்டியக்காரியான பெண்மணி - அவரும் ரொம்ப பிரபலமானவர்தான் - தனது ஓவியத்தை இந்தத் துறவி வரைவாரோ மாட்டாரோ தெரிய வில்லை; எதற்கும் நேரிற் சென்று கேட்டுப் பார்ப்போமே என்று எண்ணி, அவரிடம் சென்று தனது வேண்டு கோளை - விருப்பத்தைத் தெரிவித்தார். கட்டணம் மற்றவர்கள் தருவதைவிட மூன்று மடங்கு நீங்கள் எனக்குத் தர சம்மதம் தெரிவித்தால் ஓவியமாக உங்களை வரைந்து கொடுப்பேன் என்றார்.

இருவரும் ஒப்புக் கொண்டு, ஓவியம் வரைந்து முடிந்தவுடன், வேண்டுமென்றே அவரைச் சிறுமைப்படுத்த எண்ணிய நாட்டியக்காரியான அந்த நடன மங்கை, இது என்ன ஓவியம் என்னை மாதிரியே இல்லை; எனக்குத் தேவையில்லை என்று கூறி பணத்தை மட்டும் கொடுத்து, வீசி விட்டு போய்விட்டார். இவரோ அதற்காக சலனப்படவே இல்லை! இப்படி இவரை அவமானப்படுத்தியும் மனுஷன் கவலைப் படவே இல்லையே; இவரை வேறு வகையில் சிக்க வைக்க வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு விஷமத் திட்டத்தைப் மனதிற்குள் போட்டுவிட்டு, அவரிடம் சென்று, அந்த ஓவியம் தான் சரியாக இல்லை; இன் னொரு ஓவியம் வரையுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை எனது உள் பாவாடையை தருவேன். அதில் என் உருவ ஓவியத்தை வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்.

துறவி, வரைவேன்; ஆனால் அதற்கு ஆறு மடங்கு கட்டணம் தர வேண்டும் - ஒப்புவீர்களா? என்றார்! உடனே இருவரும் ஒப்பந்தம் முடித்து விட்டபின், இந்தப் பெண்மணிக்கு மனதிற்குள் ஏமாற்றம் - சரியென்று வெளியே கிளம்பிவிட்டார்.

சில நாள்கள் கழித்து, நடன மாது காரில் போகும்போது வேறு ஒரு கிராமம் வழியே செல்லுகிறார். அங்கே ஒரு புறத்தில் இந்த துறவி நின்று யாரிடமோ எதையோ அந்த ஊரின் மக்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் துறவி அந்த ஊரைவிட்டு, இங்கே வந்திருப்பது ஏன் என்று விசாரித்தபோது, அம்மா இவர் தனது ஓவியங்கள் மூலம் திரட்டிய பெரும் பணத்தை எங்களூரில் சாலை, பள்ளிக் கூடம், மக்களுக்கு உதவிகள் - இப்படியே செலவழித்து, எங்கள் ஊரையே மிகப் பெரிய புதுமைபுரியாக மாற்றிட நாளும் உழைக்கிறார்; இப்படிப் பட்டவரை எளிதில் எங்கும் காண முடியாது என்ற சொன்னவுடன்தான் அவர் ஏன் எவ்வளவு அவமானத்தையும் பொதுக் காரியத்திற்காக தொண்டுக் காக ஏற்றுக் கொண்டு அப்படி பணம் திரட்டினார் என்பது அந்த நடன மங்கைக்குப் புரிந்தது!

பணத்தாசை பொது வாழ்வில் உள்ள சிலருக்கு ஏன் வருகிறது என்பது புரிகிறதல்லவா?

பொது வாழ்வில் மானம் பாராது பணி செய்யும் வகையில் பணம் திரட்டி அதை தனது ஜாதிக்கோ, உற்றார் உறவினர் களுக்கோ, வைத்துவிட்டு, அல்லது உயில் எழுதி வைத்துவிட்டுப் போகாமல் தொண்டறம் புரிந்த தந்தை பெரி யாரின் பணத்தாசை பற்றி பலர் பேசியதுதான் நினைவுக்கு வந்தது!

கையெழுத்துக்குக்கூட நாலணா, புகைப்படம் எடுக்க அய்ந்து ரூபாய் என்று கட்டணம் இப்படி வசூலித்து தனது சொந்த செல்வத்தையும் பொது மக்களுக்கே தந்து, பல்கலைக் கழகங் களும், மருத்துவமனைகளும், பகுத் தறிவுப் பிரச்சார பரப்புரை நிலையங் களும், கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோரை காக்கும் தொண்டறப் பணிகளுக்காகவும் அவர் திரட்டிய செல்வம் - பெரியாரின் திரண்டதனம் என்று சிலரால் வர்ணிக்கப்பட்டதற்குப் பொருள் அவருக்குப் பிறகு மக் களுக்குப் புரிந்தது.

தோழர் பொன்னீலனின் கதையைக் கேட்டபோது, பெரியாரையே அவரது தொண்டறத்தை உருவகப்படுத்திய தாகவே எங்களுக்குத் தெரிந்தது!

பணத்தைச் சேர்ப்பது முக்கியமல்ல. எதற்காக அது பயன்படுகிறது என்ப தல்லவா முக்கியம்!

துறவிகளுக்கு இப்படி ஆசை வந் தால் அதுவும் பொது நலத்தின் பாற் பட்டதென்றால் அது விரும்பத்தக்கதே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சில்லறைப் பிரச்சினையல்ல!


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு - இன்றைய தினம் நெருக்கடியான ஒரு காலகட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

வரும் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்குமுன் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டம் செயல்படுத்தப்படாமல் அறவே முடக்கப்பட்டது.

இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் எந்த நிலைக்கு ஆளாகப் போகிறதோ!

இந்தக் கூட்டத்தின் தொடக்க நாளே - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குப் பெரும் சோதனை யாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பான மத்திய அரசின் முடிவின்மீது வாக் கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக்கோரி இடதுசாரிகள் தாக்கீது ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

மற்ற மற்ற பிரச்சினைகளிலும் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இடதுசாரிகளும், பி.ஜே.பி.யும், திரிணாமுல் காங்கிரசும் ஒத்த முடிவோடு இந்தப் பிரச்சினையைக் கையாளப் போவது உறுதியாகி விட்டது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. போன்ற கட்சிகளேகூட இந்தப் பிரச்சினை குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும் என்று அறிவித்திருப்பது மத்திய அரசுக்குக் கூடுதலாக ஏற்படப் போகும் நெருக்கடியாகும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற கருத்தினை ஏற்கெனவே திமுக கூறி வந்துள்ளது. கூட்டணியில் இருக்கிறது என்பதற்காக மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் தனிக் கருத்துக் கொண்டிருப்பது ஒன்றும் குற்றமான செயல் அல்ல. பெட்ரோல், சமையல் எரிவாயு போன்ற அன்றாட வாழ்க்கைப் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினை களில் திமுக தன் கருத்தை வலுவாக எடுத்துத்தான் வைத்துள்ளது.

வாக்கெடுப்பு என்று வந்தால் மத்திய அரசின் நீட்சி எந்த அளவுக்குச் சாத்தியக் கூறு என்பது கேள்விக் குறிதான். அப்படியே வெற்றி பெற்றாலும் கூட அன்றாடம் மக்களைப் பாதிக்கச் செய்யும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற முடிவு, காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெகு மக்களின் வெறுப்பை, எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. அது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய முதலீட்டால் ஏற்படப் போகும் பார தூர விளைவுகள் குறித்துப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இதற்குமுன் பல தரப்பிலும் இதுகுறித்து விவாதிக் கப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகள் என்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மிக முக்கியமான பாத் திரத்தை வகிக்கக் கூடியவர்கள்; கோடிக்கணக்கான மக்கள் இதில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் என்ற நிலையைத்தான் இது ஏற்படுத்தும். வணிக அமைப்புகளும் தன் வன்மையான எதிர்ப்பைப் பல வகைகளிலும் வெளிப்படுத்தியுள்ளன.

வெளிநாடுகளில் நுழைந்த அந்நிய முதலீடுகள் அங்கெல்லாம் எத்தகைய விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்கிற விவரங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன.

வெகுதூரம் போக வேண்டாம். குளிர் பானங்களில் வெளிநாடுகளை அனுமதித்த நிலையில், இந்த மண்ணில் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த வின்சென்ட் சோடா, காளிமார்க் சோடா நிறுவ னங்கள் காணாமற் போய்விடவில்லையா?

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு நிலத்தடித் தண்ணீரைத் தோண்டி எடுத்து, மிக வசீகரமான லேபிள்களை ஒட்டி, நம் தலையிலே கட்டி, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் என்ற பட்டு மெத்தையில் படுத்துப் புரண்டு கொண்டு நிற்பதை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

நம் ஊர் தண்ணீரை வெளிநாட்டு வியாபாரி களால் நமக்கே விற்கப்படும் அவலத்தை என் னென்று சொல்ல? இவ்வளவுக்கும் நம் கிணற்று நீரை மொண்டு சுட வைத்துக் குடிப்பதைவிட, இந்த வியா பார தண்ணீர் எந்த வகையிலும் பாதுகாப்பானதும் அல்ல.

அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும்; சுதேசிப் பொருள்களை வாங்க வேண்டும் என்று ஒரு காலத்தில் இயக்கம் நடத்திய காங்கிரஸ், இப் பொழுது என்னடானென்றால் அந்நிய முதலாளி களே, வருக! எங்கள் சுதேசிப் பொருள்களை ஒழித்துக் கட்டுக என்று தாம்பூலம் கொடுத்து வரவேற்பது நாட்டின் தன்மானத்துக்குக்கூட இழுக்காகும்.

வாக்கெடுப்பு அபாயமும் தலைக்குமேல் தொங்கும் வாளாக இருக்கிறது காங்கிரஸ் இதனை வெறும் சில்லறைப் பிரச்சினையாகக் கருத வேண்டாம் - எச்சரிக்கை!16-11-2012

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை. _ (விடுதலை, 26.4.1972)

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த இனப்படுகொலை


இலங்கையில் நடந்த இனப்படுகொலை: அய்.நா. அதிகாரிகள் தடுக்க தவறி விட்டனர்
அய்.நா. விசாரணை அறிக்கை

நியூயார்க், நவ.15-இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற அய்.நா. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு உச்சகட்ட போரின்போது, சுமார் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க, முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையில் ஒரு குழுவை அய்.நா. சபை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை ஐ.நா. சபை யிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்கள் கசிந்து விட்டன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கையிலும், தலைமை அலு வலகம் அமைந்துள்ள நியூயார்க் கிலும் ஐ.நா. அதிகாரிகள் மிக அஜாக்கிரதையாக நடந்துள்ளனர். இலங்கையில் இருந்த அய்.நா. அதிகாரிகளின் செயல்பாடு நீண்ட தயக்கமானதாக இருந்தது. பாதிக்கப் பட்ட மக்களின் உரிமையைக் காக்க போராட வேண்டியவர்கள், அதைக் கண்டுகொள்ளாதது வருத்தமான விஷயம்.

போரில் அப்பாவி மக்களை பாது காக்க வேண்டிய பல மூத்த அதிகாரி கள், தங்களுடைய பொறுப்புகளை மறந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டனர். இதேபோல் நியூயார்க்கில் இருக்கும் அய்.நா. சபை தலைமை அலுவலகமும் பிரச்னைக் கான வழியை கண்டறிந்து, அதற்கான தீர்வை எடுக்க தவறிவிட்டது.

சாதாரண வர்த்தக பரிமாற்றங் களை போன்றுதான், இலங்கையில் இருந்த அய்.நா. அதிகாரிகளும், தலைமை அலுவலகத்தில் இருந்த அய்.நா. அதிகாரிகளும் முடிவுகளை மேற்கொண்டனர்.

பொறுப்புகள் மற்றும் சர்வதேச விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் மவுனம் காத்துள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் அந்த சமயத் திலேயே சரியான நடவடிக்கைகளை எடுத்து அப்பாவி தமிழர்களின் படுகொலையை தடுத்திருக்க முடியும்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டோம்: அய்.நா. செயலர் பான் கி மூன் ஒப்புதல்

இலங்கை இறுதிப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடு கள் சபை தவறிவிட்டது என்ற அய்.நாவின் சார்லஸ் பெட்ரியின் கருத்தை ஏற்பதாக பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித் துள்ளார்.

இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற் கொண்ட நடவடிக்கைகள் தொடர் பாக சாலர்ஸ் பெட்ரியை அறிக்கை தாக்கல் செய்ய ஐ.நா. உத்தரவிட்டி ருந்தது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி இருந்த நிலை யில் முழு அறிக்கையும் நேற்று பான் கி மூனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை வெளியிட்ட பிறகு கருத்து தெரிவித்துள்ள பான் கி மூன். தமது உள்ளக குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள் கிறோம். இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் அய்க்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயல்படுத்தவில்லை. இதனை அய்க்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் அய்க்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை இழக்காமல் இருக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராசிரியர் உரை


ஈழத்தமிழர்களுக்கு நீதி - நியாயம் கிடைக்க வேறுவழி கிடையாது என்பதால்

அய்.நா. மன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

டெசோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராசிரியர் உரை

சென்னை, நவ.16- ``ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க இதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதால், கலைஞரின் ஆணையை ஏற்று இருவரும் அய்.நா. மன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் குறிப்பிட்டார்.

டெசோ சார்பில் 11.11.2012 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வது வாழ்த்துவதற்காகத்தான். வயது ஒரு காரணம், பொறுப்பு ஒரு காரணம். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த நல்ல பணியை சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கின்ற கலைஞருடைய தூதுவராக அய்க்கிய நாடுகள் சபை மன்றத்திலே டெசோ தீர்மானங்களை எடுத்து வலியுறுத்தி சொல்லி வந்திருக்கின்ற நம்முடைய ஸ்டாலின் அவர்களையும், பாலு அவர்களையும் நான் உளமாற வாழ்த்துகிறேன்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்குவதற்கான தகுந்த முயற்சி!

எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சொன்னதைப் போல இது ஒரு சாதாரண காரியமல்ல. மகத்தான சாதனை என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஈழத் தமிழர்களுடைய எதிர்காலத்தை மறுபடியும் ஒளிமயமாக ஆக்குவதற்கான தகுந்த முயற்சி நடைபெற்று இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னாலே டெசோவை தோற்று வித்தபோது பல ஊர்களிலே டெசோ மாநாடுகளை நடத்தி, பேரணிகளை நடத்தி வலியுறுத்தியபோது இருந்த நிலை வேறு. இடைக்காலத்திலே ஏற்பட்ட நிலை வேறு. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோது சிங்கள அரசிடத்திலே யாரும் எந்த ஒரு நியாயத்தையும் சொல்லக் கூடிய ஒரு நிலை இல்லாத ஒரு சூழல் இருந்தது. இந்திய அரசும், தமிழகம் சார்பாக வாதாடுகின்ற இடத்திற்கு வரவேயில்லை. இந்தப் பிரச்சினையை தாங்கள் அணுகுவதாகக் காட்டிக் கொண்டார்களே தவிர, தமிழர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு நமக்கு உண்டு என்று மத்திய அரசு கருதவில்லை. அதனுடைய விளைவு பல்வேறு வகையிலே பாதிப்பு ஏற்பட்டது. தி.மு.கழகம் தகுந்த முறையில் தலையிடுவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வரும்போது உரிய முறையிலே செயலாற்று வதற்கு என்றைக்கும் தயாராக இருந்தது. ஆட்சிக்காகவோ, பதவிக்காகவோ, அதிகாரத் திற்காகவோ ஈழத் தமிழர்களை நாம் கைவிடவில்லை. பதவி இழந்தாவது ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியுமேயானால் என்றைக்கும் நாம் தயாராகத்தான் இருக் கிறோம். ஆனால் அந்த வாய்ப்பு முறையாக அமையவில்லை.

கலைஞரிடம் பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தவர் ராஜீவ்காந்தி!

தமிழ் ஓவியா said...

இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், தமிழர்களுக்கு எதிரி தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள். தமிழினத்தை பாதுகாக்கிற கடமையைச் செய்வதற்குக் கூட உலை வைப்பவர்கள் இருக் கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மத்தியிலே பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்கள் இந்த ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் யாரால் முடியும் என்று நீண்ட காலம் யோசித்து, கலைஞர் ஒருவர்தான் அதைத் தீர்க்கக் கூடியவர்; எனவே கலைஞரிடத்திலே பேசி, அப்போது கலைஞரும், ராஜீவ்காந்தியும் ஒரே கூட்டணி அல்ல. சில மாறுபாடுகள் உண்டு. இருந்தாலும் கலைஞரிடத் திலே பேசினால் அவர் பேசி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கையிலேதான் ராஜீவ் காந்தி அவர்கள் கலை ஞரையும் முரசொலி மாறனையும் அழைத்து பேசி, வெளி நாட்டுப் பிரச்சினையை கவனிக்கக் கூடிய அமைச்சரையும் நிலைமைகளை விளக்கி, கலைஞரிடத்திலே சொல்லுங்கள் என்று கேட்டு, கலைஞரும் ராஜீவ் காந்தியினுடைய அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு இலங்கைக்குச் செல்கிறேன் என்று ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார்.

தமிழ் ஓவியா said...

முரசொலி மாறன் அவர்கள் கலைஞர் செல்வதற்கு முன்னாலே இலங்கைக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதற்கான சூழலை உருவாக்கிவிட்டு வருவதற்கு மாறனும் தயாராக இருந்தார். கலைஞர் ஒருவேளை அந்தச் சூழல் ஒத்துவந்து கலைஞர் சென் றிருப்பாரேயானால் விடுதலைப் புலிகளினுடைய தலைவரே இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு தோழனாக இலங்கையிலே இருக்கக் கூடிய அந்த நல்ல நிலைமை ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகள் எவ்வளவு பெரிய போராடும் சக்தியாக இருந்தாலும் கூட, தன்னுடைய உரிமை காப்பாற்றப்படுகிறது, தாங்கள் கேட்ட ஒரு தனி நாடு என்றஅமைப்பு இல்லாவிட்டாலுங்கூட, தனி நாட்டு அமைப்புக்குத் தேவையான சூழ்நிலை உருவாகிறது, இலங்கை அரசோடு சமாதானம் செய்து கொள்ளக்கூடிய, மரியாதையோடு சமாதானம் செய்து கொள்ளக் கூடிய ஒரு நிலைமை ஏற்படுகிறது. அதற்கு ராஜீவ் காந்தியே துணை நிற்கிறார் என்ற நிலைமைகள் எல்லாம் இருந்து எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளினுடைய தலைவருக்கு இந்த நாட்டிலே இருந்து சென்ற ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தையிலே இடம் கொடுத்து ஏமாந்துவிடாதே என்று அவரிடத்திலே தவறான கருத்துக்களைச் சொல்லி, அது காரணமாக கலைஞர் இலங்கைக்குப் போக முடியாத நிலைமை ஏற்பட்டது.

அவருடைய நோக்கப்படி, விடுதலைப் புலிகளினு டைய நோக்கப்படி ஏதோ சில காரணங்களால் ராஜீவ் காந்தியிடத் திலே அவர்களுக்கு மாறுபாடு இருந்திருக் கிறது, அந்த மாறுபாடு வேறு விதத்திலே வெடித்து, தமிழ்நாட்டிலே நாம்தான் அதனுடைய விளைவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டோம். பழி நம் மீது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஏதோ சில காரணங்கள். எப்படியோ நடைபெற்றது. அந்த வழக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட பேசப்படுகிறது. ஆனால், தி.மு.கழகத்தின் மீது ஏதோ காங்கிரஸ் தலைவர் களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டதாக ஒரு தவறான செய்தியைப் பரப்பி ஒரு தேர்தலில் நம்மைத் தோற்கடித்தார். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, ஈழத் தமிழர்களைக் காக்க நம்மால் என்ன செய்ய முடியும்? அது எப் பொழுது செய்ய வேண்டும்? நாம் பெரியாரின் பிள்ளைகள், அண்ணாவின் தம்பிகள், திராவிட இனத்திற்காக வாதாடி யவர்கள்.

தொப்புள்கொடி உறவைநாம் மறந்து விடக்கூடாது!

இன்றைக்கும் நம்மை விட்டால் திராவிட இனத்திற்கோ, தமிழனுக்கோ வேறு ஒரு சக்தி இல்லை. நாம் அதற்காகப் போராடித் தீர வேண்டும். தொப்புள் கொடி உறவை மறந்து விடக்கூடாது. ஈழத்திலே தமிழன் அழிந்தாலும், தமிழ்நாட்டிலே தமிழன் அழிந்தாலும் தமிழன் அழிக்கப்படுகிறான். தமிழனை அழிப்பதற்கு என்று இந்த நாட்டிலே யார் யாரோ இருக்கிறார்கள். ஆக அப்படி ஒரு விளைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கலைஞர் அவர்களோ, தி.மு.கழகத்திலே உள்ள முன்னணியினரோ என்றைக்கும் நாம் தயாராக இருந் தோம். ஆனால் சூழ்நிலை இடம் தரவில்லை, செயல்பட முடிய வில்லை. அவ்வப்போது அந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்திருக்கிறோம். அந்த அடிப்படை யிலேதான் இப்போது டெசோ மறுபடியும் தோற்று விக்கப்பட்டு, குரல் எழுப்பப்பட்டு அய்.நா.விலே போய் கேட்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


என்று தொலையும் இந்தச் சாதி?


சாதியெனும் பகையுணர்ச்சி வாழு மட்டும்
தமிழ்நாட்டின் முன்னேற்றம் கானல் நீரே!
நீதிமுதல் நெறிமுறைகள் பிறர்க்கும் தந்து
நிலைத்திருந்த பெருமையெல்லாம் மண்ணிற் சாயும்!

சாதியினால் நிம்மதியும் அழிந்தே போகும்!
தலைமுறைகள் பலங்குன்றிச் சாயும் அந்தச்
சாதியினைத் தவிர்த்தொன்றும் வாழ்வதில்லை!

தமிழகமே! இனியுனக்கு மீட்சி இல்லை!

- கண்ணதாசன்

சாதி மதங்களைப் பாரோம் - உயிர்
ஜன்மம் இத்தேசத் தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தவரா யினும் ஒன்றே!
சாதிக் கொடுமை கள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

- பாரதியார்

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல் தமக்குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயனவாம் என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீயெனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!

- பாரதிதாசன்

சாதி குலமில்லை சற்குருவறிந்தால்
... நித்தியம் இதுவே

-சேச யோகியார்

குலமு மொன்றே குடியுமொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே!
தென் திசைப் புலையன் வடதிசைக் கேகிற்
பழுதறவோதிப் பார்ப் பானாவான்!
வடதிசைப் பார்ப்பான் தென்றிசைக்கேகில்
நடையது கோணிப் புலையனாவான்!

- கபிலர்


சாதி பேதங்கள் சொல்லுகிறீர் - தெய்வம்
நானென்றொருடல் பேத முண்டோ? - கொங்கண நாயனார்
காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என் குலஞ்சுக் கிலந்தான் மைந்தா,
தோணப்பா தோணாமற் சாதிபேதஞ்
சொல்லுவான் சுருக்கமாய்ச் சுருண்டு போவான்!

- காக புசுண்டர்

... நகையாதே, மானிடர் பல் சாதி என்று
நம்பாதே. நல்வழியின் காலைப் பாரே!

- அருணாசல குரு

சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சகத்தோர்க்கேயல்லாது சற்சாதுக்களுக்கோ
சமயத்திலேறின பேர் சித்தம் மாறுமோ
சித்தர் சித்தாந்தந் தேர்ந்தாடு பாம்பே!
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்!

- பாம்பாட்டிச் சித்தர்

ஒவ்வா வென்ற பல சாதி - யாவும்
ஒன்றென்றறிந்தே உணர்ந்துற வோதிப்
- பாபஞ்செய்யாதிரு மனமே!

- கடுவெளி சித்தர்


தொகுப்பு: திருமங்கலம் மணிமாறன்

தமிழ் ஓவியா said...


அறிஞர்களின் அறிவுரைகள்


மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவ னாவது, ஆண்களுக்காகவே இருக் கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக் கிறதா என்று பாருங் கள். இது என்ன நியாயம்?


- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!


- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப் படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!


- இங்கர்சால்


மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்க விடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.


- லெனின்


உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதியாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.


- சார்லஸ் பிராட்லா


ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.


- மான்டெயின்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை கலைஞர் அவர்களுக்கு பிரிட்டீஷ் தமிழ்க் கன்சர்வேட்டிவ்ஸ் துணைத் தலைவர் பாராட்டு

லண்டன், நவ. 16- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு `பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேட் டிவ்ஸ் துணைத் தலைவர் டாக் டர் அர்ஜுன சிவாநந்தன் எழுதி யுள்ள கடிதத்தில், ``இலங்கைத் தமிழர் களுக்காக கடந்த 50 ஆண்டு களாக தாங்கள் (தலைவர் கலை ஞர்) செய்துள்ள தியாகங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் தலைவர் கலை ஞர் அவர்களுக்கு அதன் பொதுச் செயலாளர் வி.ரவிக்குமார் எழுதி யுள்ள கடிதத்தில், `உலகத் தமிழர் மாநாட்டில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டா லின் அவர் களையும், டி.ஆர். பாலு எம்.பி., கே.எஸ்.இராதா கிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி. ஆகியோரை கலந்து கொள்ளச் செய்தமைக் காக தலைவர் கலைஞர் அவர் களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களையும் அனுப்பி யுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேட்டிவ்ஸ் துணைத் தலைவர் டாக்டர் அர்ஜுன சிவாநந்தன் எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:-

பிரித்தானிய தமிழர் பழமை வாதிகளை பழமை வாதிக் கட்சி யில் இணைப்பு அளிக்கப்பட்ட தற்கு தங்களது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறோம். சர்ச்சில், வெலிங்டன் போன்ற பெரும் தலைவர்கள் இருந்த கட்சியில் முதல் முறையாக ஒரு இனக் குழுவிற்கு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தமி ழர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு அளித் துள்ள பங்களிப்பிற்கு அங்கீகாரமாகும். மேலும், தெற்கு இங்கிலாந்தில் தமிழர்கள்தான் மிகப் பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்ற உண்மை யையும் பிரதிபலிக்கிறது.

தொடர்பு கொள்வோம்!

தலைவர் என்ற முறையில் தங் களது செயல்பாடு கள் உலகெங் கும் உள்ள தமிழர்களின் பல தலைமுறையினருக்கு ஊக்க மளிக்கும். இலங்கைத் தமிழர் களுக்காக கடந்த 50 ஆண்டு களில் ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையம் உட்பட பல இடங் களில் தங்களுடைய தலை யீட்டுக்காகவும், தாங்கள் செய் துள்ள தியாகங்களுக்காகவும் நாங்கள் குறிப்பாக நன்றியுடைய வர்களாக இருக்கிறோம்.

உலகத் தமிழ் இயக்கத்திற்குத் தாங்கள் தொடர்ந்து தலைமை வகிக்கும் வகையில் தாங்கள் நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற நாங்கள் வாழ்த்துகிறோம். உலகத் தின் செயல்திட்டத்தில் தமிழர் களின் உரிமைகள் மற்றும் நல னுக்கு உரிய இடம் கிடைக்க தாங்கள் மற்றும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைமை யுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்ள விழைகிறோம்.

இவ்வாறு அவர் தனது கடிதத் தில் கூறியுள்ளார்.

தீர்மானங்கள்

உலகத் தமிழர் பாதுகாப்பு தமிழ் மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்

பிரித்தானிய நாடாளுமன்றத் தில் நவம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் இலங்கை பற்றிய அறிக் கைக்கு, குறிப்பாக அங்கு அரசியல் காரணங்களுக்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியமைக்காகவும் எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டப்ளினில் நடைபெற்ற இலங்கை மீதான நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் பரிந்துரை களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பிறகும் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் தேசத்தை தொடர்ந்து நாசப் படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலை கொள்வதுடன் உடனடி யாக தமிழ் மக்கள் மீது நடத்தப் படும் தற்போதைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் தேசத்திற்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங் கள், தமிழ் மக்களின் இனப் படுகொலை ஆகியவற்றைப் பற்றி உடனடியாக சர்வதேச சுதந் திரமான விசாரணைக்கு ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் கோர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம்.

தமிழ்த் தேசம்!

சர்வதேச சமுதாயத்தின் தலைவர்களை நாங்கள் பின்வரும் கோரிக்கைகளுக்காக வலி யுறுத்துகிறோம்.

1) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி களில் நிலவும் உண்மை நிலை களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகை யில் தகவல்கள் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

2) இலங்கை அரசால் தமிழ் தேசம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) தமிழர்களின் பாரம் பரிய தாய் மண்ணை சிங்கள மயமாக்கும் போக்கை நிறுத்த வேண்டும்.

4) தமிழ் மக்களின் தாய் மண்ணில் ராணுவத்தை வெளி யேற்றி மக்கள் தங்களது ஜன நாயக உரிமைகளை செயல் படுத்த அனு மதிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


அசல் நாத்திகம்!


தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.

சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.

இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.

ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?

சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!

என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!

வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!

வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?

முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?

உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.

அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.

மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!

வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!

- மயிலாடன்17-11-2012

தமிழ் ஓவியா said...


நவம்பர் 25 அழைக்கிறது!


திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!

எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.

ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.

திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.

நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.

துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.

சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.

மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.

அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.

முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.

ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!

நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012