Search This Blog

1.11.12

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரிவினரான சைவர் ஏற்றுக் கொள்வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தது.  ஒன்பது முடிந்துவிட்டது. ஒன்று மீதி உள்ளது.  அது கல்கி அவதாரம்  என்றெல்லாம் புராணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.

நாம்தான் வேதங்களைப் படிக்கக்கூடாது. நாம் படிப்பதற்காகத்தான் புராணங்களே எழுதப்பட்டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவதாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான்  எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவதாரம் தான் என்று கூறிப் பெண்களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.

முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது. இரண்டாம் அவதாரம் ஆமை. இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது.   மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. நான்காம் அவதாரம் நரசிம்மம். பாதி விலங்கு, பாதி மனிதன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விகடன், காமகோடி, ஆன்மீகம் அருள்சோதி என்றெல்லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.

கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம், மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன்  இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை  14 ஆம் அவ தாரம் நரசிம்மம்  15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசுராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.

பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்தான் அதன் அவதாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றியின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!

பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே விஷ்ணுவே_- பூமாதேவிக்குச்  சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்யபன்,- அதிதி தம்பதிகளின் புத்திரன், விசுவாஸ்வனன். அவன்தான் சூரியன் என்கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்திலேயே சூரியனை அறிமுகப்படுத்திவிட்டு 15 ஆம் புராணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?

இதே வராக (பன்றி) அவதாரத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்டதாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமிதேவியை எடுத்ததாம். அதன் வேண்டுகோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளியதாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புராணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).
யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை  பெரிய திருமொழிப் பாசுரம்

ஏனாகி உலகிடந்து அன்று இருநிலனும்
பெருவிசும்பும் தாளாய பெருமான்
எனப் பாடுகிறது. பிறகு நரகாசுரன் எங்கே வருகிறான்?

கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கடலுக்குள் நுழைந்தார். இரண்யாட்சதனுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவியும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?

ஒரு மாநிலத்தில் வாமன அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதையுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.

ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.

இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதையளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...

புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும் கூடப் புத்திசாலித்தனம் தேவைப்படுமே!  பலப்பல நபர்கள் பலப்பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதைகள்தான் புராணங்கள்!  அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!


                                  -----------------------------விடுதலை, 19.10.2006

11 comments:

தமிழ் ஓவியா said...


பஞ்ச கச்சமும், உச்சிக்குடுமியும்!



தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கக் கூடியவர்கள், பார்ப்பனர் களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சம் கட்டி, உச்சிக்குடுமி வைத்துதான் கோவில் பணிகளைச் செய்யவேண்டும் என்று இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் களாம்.

இதன்மூலம் இந்த ஆட்சி எதனை கட்டிக் காக்க விரும்புகிறது? இந்துக் கோவில்கள் என்றால் அது பார்ப்பனர்களுக்குரியது - அதன் செயல்பாடுகள் அனைத்தும் பார்ப்பனீய முறையில் மட்டுமே அமைய வேண்டும். பக்தர்கள் மனதிலும் இந்த நிலை உறுதிப் படுத்தப்படவேண்டும் என்பது இதன் பின்னணியில் இருக்கக் கூடிய மனவோட்டம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்துச் சென்றுள் ளார். அதற்காக பல்வேறு வடிவங்களில் திராவிடர் கழகம் போராடிக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரத்தையும் செய்துகொண்டு இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையையேற்று தி.மு.க. அரசு சட்டம் செய்தது. தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி மகராசன் தலைமையிலும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலை மையிலும் தனித்தனியாக ஆணையங்கள் அமைக்கப் பட்டு, அவற்றின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன;

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க கம்பரசன்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டதே! அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அவர்களைப் பணியில் நியமனம் செய்யும் ஆணையைப் பிறப்பிக்கும் ஒரு காலகட்டத்தில், பார்ப் பனர்கள் தங்களுக்கே உரித்தான ஜாதீய ஆணவத் துடனும், கோவில்களில் உள்ள தங்களின் ஏகபோக ஆதிக்கம் எந்த வகையிலும் பறிபோய்விடக் கூடாது என்கிற பிடிவாதத்தின் அடிப்படையிலும் அவர்களின் ஆன்மீகக் குருவான சங்கராச்சாரியார், அரசியல் குரு வான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஆகியோரின் அனுசரணையோடும், பரிந்துரைகளோடும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

மீண்டும் அரசு ஆணைகள் பிறப்பிக்கும்போது, மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று முடக்குவதை தங்களின் பிழைப்பாகக் கொண்டுள்ளனர், செயல்பட்டும் வருகின்றனர்.

தங்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இடை இடையே முட்டுக்கட்டை போட்டாலும், அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கச் செய்யும் வரை திராவிடர் கழகம் ஓயப்போவதில்லை.

ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் சேர்த்து 207 பேர்கள் பணியில் சேரத் தயாராகவே உள்ளனர். இத்தகு நிலையில், அர்ச்சகர்கள் பஞ்சகச்சம் கட்டியிருக்கவேண்டும். உச்சிக்குடுமி வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பிப்பதன் நோக்கம் என்ன?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறை வேறப் போவதில்லை - செயலுக்கும் வரப் போவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டார்களா? அப்படியே செயல்பாட்டுக்கு வந்தாலும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற ஜாதிக்காரர்களும்கூட பஞ்ச கச்சம்தான் கட்டவேண் டுமா? உச்சிக் குடுமியும் வைக்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமா?

உச்சிக்குடுமியும், பஞ்ச கச்சமும்தான் அர்ச்சகர் களின் அடையாளம் - அவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது? அப்படி சொல்லப்பட்டு இருந்தால் இதுவரை அதுபற்றி ஏன் அறிவுறுத்தப்படவில்லை - கட்டாயப்படுத்தப் படவில்லை? இந்தத் திடீர் ஞானோதயத்துக்கு என்ன பின்னணி?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை பதில் அளிக்குமா? இந்து அறநிலையத் துறையின் இந்தச் சிந்தனை - முடிவு - போக்கு - உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றிய வழக்கில் நியாயமாக நடந்துகொள்ளுமா என்ற அய்யப் பாட்டை ஏற்படுத்தக் கூடியதல்லவா!

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்ற சட்டத்தைப் புறந்தள்ளியது. விவேகானந்தர் இல்லத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட்டது முதற்கொண்டு அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சி பா.ஜ.க.வின் சாயலைக் கொண்டுள்ளது என்று கருத இடம் அளிக்கிறதே!31-10-2012

தமிழ் ஓவியா said...


தீபாவளிபற்றி...?


காளை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும் பசுங்கன்றுதான் பிறக்கும்! எருமைக் கன்றுக்குட்டி பிறக்காது.

விஷ்ணு கடவுளின் அவதாரத்துக்கும், பூமிக் கடவுளச்சிக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரப் பிள்ளை?

******

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யாட்சதன் கடலில் ஒளிந்து கொண்டான் எனத் தீபாவளிக் கதை கூறுகிறது!

பூமி தட்டையா? தட்டையாக இருந்தால்தானே சுருட்ட முடியும்? பூமி உருண்டையானது என்கிற அறிவே இல்லாதவனால் எழுதப்பட்டதுதானே இந்தத் தீபாவளிக் கதை?

தமிழ் ஓவியா said...


நீரோ மன்னன் மோடியின் மோசடி


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந் திருக்கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலி பயனாளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள் .

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.

மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்பதாக காணப்பட்டது. இப்போது அது போலித் தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

தமிழ் ஓவியா said...


ராஜீவ் காந்தி கொலை: முக்கிய திருப்பம் எம்.கே. நாராயணன்மீது பார்வை!


சென்னை, அக். 31- ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய வீடியோவை மறைத்ததன்மூலம் மத்திய உளவுப் பிரிவின்முன்னாள் இயக்குநரும், இன்றைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன்மீது பார்வை திரும்பியுள்ளது.

சி.பி.அய். முன்னாள் அதிகாரி கே. ரகோத்தமன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை விசாரணை அதிகாரி யாக இருந்தவர் கே.ரகோத்தமன். ராஜீவைக் கொல்ல நடைபெற்ற சதி: சி.பி.அய். ஆவணங்களில் இருந்து' (Conspiracy to Kill Rajiv Gandhi - From CBI files) என்ற புத்தகத்தில் அவர் இந்த பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

சென்னை அருகே சிறீபெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலைக்கு அடுத்த நாள் எம்.கே. நாராயணன் அன்றைய பிரதமரான சந்திரசேகருக்கு விடியோ ஆதாரம் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

நாராயணனின் ரகசிய கடிதத்தில்...

ரகோத்தமன் தனது புத்தகத்தில் இணைத்துள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:

ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. அங்கு தடுப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு யாரும் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தன.

கொலையாளி (தனு) பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு, ராஜீவ் காந்தி வரும்போதுதான் வந்தாரா அல்லது அவரை வரவேற்க நின்றிருந்தவர்களுடன் ஏற்கெ னவே இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.

இது தொடர்பான விடியோ ஆதாரம் இப் போது ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. அந்த கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விடியோ ஆதாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் எம்.கே. நாரா யணன் தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ரகோத்தமன்.

பொதுக் கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி வந்த பிறகே தனு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்ததாக தமிழ்நாடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறீபெரும்புதூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதற்காக உள்ளூர் விடியோகிராபர் ஒருவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமித்தி ருந்தனர். நீதிபதி வர்மா கமிஷன் இந்த விடியோ தொடர்பாக குறிப்பிட்ட பிறகே சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு இதுகுறித்து தெரியவந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் பார்வைக்கு இந்த விடியோ கொண்டுவரப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது என்று ரகோத்தமன் நிருபர்களிடம் கூறினார்.

நீதிபதி வர்மா கமிஷனின் ஆவணங்களில் இருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்து அவர் தனது புத்தகத்தில் இணைத்துள்ளார்.

நாராயணன் மறைத்தது ஏன்?

இந்த வீடியோ ஆதாரத்தை மறைத்தது தொடர் பாக எம்.கே. நாராயணன் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது. ஆனால், எங்கள் குழுவின் தலைவர் கார்த்திகேயன் இந்த விசாரணையை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் ரகோத்தமன் கூறினார்.

இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டபோது, புத்தகத்தைப் படித்த பிறகே இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்ல முடியும் என்றார்.

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனின் கருத்தை அறிவதற்காக அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர காவிரி கண்காணிப்புக்குழு ஆணை


புதுடில்லி, அக். 31- காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஆய்வு செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இன்று புதுடில்லி யில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழு தமிழ்நாட்டுக்குத் தண் ணீர் திறந்துவிட கரு நாடகத்துக்கு உத்தரவிட் டது.

காவிரி கண்காணிப் புக் குழுவின் கூட்டம் இன்று (31.10.2012) டில் லியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வரு மாறு:

காவிரி கண்காணிப் புக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்துள்ளது. இம்முறையீட்டை அடுத்து இருமாநில அரசுகளும் ஒரு வாரத்தில் எழுத்துப் பூர்வ அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தரவேண் டும் என்று கருநாட கத்துக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.
அக்டோபரில் தர வேண்டிய 1.5 டி.எம்.சி. யையும் சேர்த்து 5.5 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்றும் அக் கூட்டத்தில் கருநாடத் துக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 15 ஆம் தேதிக்குள் 5.5 டி.எம்.சி. தண்ணீர் தர உத்தரவு

காவிரி கண்கணிப் புக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டுக்கு கரு நாடகம் இன்னும் 48 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்.

கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கூடிய காவிரி ஆணைய கூட்டத்தில், அக்டோ பர் 15 ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரி யில் வினாடிக்கு 9 ஆயி ரம் கனஅடி வீதம் தண் ணீர் திறந்து விடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். அந்த உத்தரவை செயல் படுத்த கருநாடகம் மறுத்ததால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டதை தொடர்ந்து கரு நாடகம் தண்ணீர் திறந்து விட்டது.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே தண் ணீரை கருநாடகம் நிறுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து கருநாடகத் தின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கருநாட கத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

காவிரியில் கருநாட கம் எவ்வளவு தண்ணீர் திறந்து விடுகிறது என் பதை கண்காணிக்கு மாறு காவிரி கண் காணிப்பு குழுவுக்கு காவிரி ஆணையம் ஏற் கெனவே உத்தரவிட்டுள் ளது. அதன்படி கண் காணித்து வரும் கண் காணிப்பு குழுவின் கூட் டம் கடந்த திங்கள் கிழமை நடைபெறுவ தாக இருந்தது. தமிழ் நாடு கேட்டுக் கொண்ட தன் பேரில் தள்ளி வைக் கப்பட்ட கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று (31.10.2012, புதன் கிழமை) நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், நாள்தோறும் 2 டி.எம்.சி. வீதம் 24 நாள்களுக்கு 48 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கரு நாடகத்துக்கு உத்தர விடக் கோரி தமிழக அர சின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஜே.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (30.10.2012) விசார ணைக்கு வந்தது.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.


மத்திய அமைச்சரான சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கவிஞர்கள் கூட்டம் ஒன் றில் பேசும்போது, கிரிக் கெட் வெற்றி படிப்படியாக அலுத்துப் போய்விடும்; இது நாளாக, நாளாக மனைவியின் வசீகரம் குறைந்துவிடுவதைப் போன்றதாகும் என்று வக்கிரப் புத்தியோடு உளறியது - பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

பொதுவாகவே இது ஓர் இந்து மதச் சிந்தனை யாகும். இந்து மதத்தில் எந்த இடத்தில் கைவைத் தாலும் இந்த வக்ரம்தான் படம் எடுத்தாடும். இந்து மதக் கடவுள்கள்பற்றிய புராணங்களும், இதி கா சங்களும்கூட இவற்றைத் தான் தூக்கிப் பிடிக்கும். ஓம் என்று சொன்னால் ஆண் - பெண் சேர்க்கை என்று கூறி, அதற்கு ஏகப்பட்ட தத்துவார்த்த வண்ணங்களைப் பூசுவார் கள். அதே பாணியில் தான் மத்திய அமைச்சர் பேசி இருக்கிறார்.

இதனை அரசியல் படுத்த விரும்பிய யோக் கியப் பொறுப்பு(?) மிக்க பா.ஜ.க. என்ன செய்தது தெரியுமா? அவனை அனுப்பாதே - அவன் கலகம் செய்துவிடுவான் - என்னை அனுப்பு செருப்பால் அடித்து வரு கிறேன்! என்று சொன்ன வன்போல நடந்துகொண் டுள்ளது பி.ஜே.பி.

அமைச்சரைக் கேலி செய்வது என்ற பெயரால் இந்தி திரைப்பட நடிகை ராக்கி சவந்து என்ப வரும், அமைச்சர் ஜெய்ஸ் வாலும் கல்யாண கோலத் தில் இருப்பதுபோன்ற காட்சியைக் கணினி மூலம் கிராபிக்ஸ் செய்த படத்தை சுவரொட்டி களாக அச்சிட்டு, கான் பூர் நகரம் முழுவதும் பி.ஜே.பி.யினர் ஒட்டி தங்களின் வக்கிர வழி சலை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

தன்னை அவமானப் படுத்திய, அலங்கோல மாக சுவரொட்டி அடித்து ஒட்டியவர்கள்மீது கடு மையான விமர்சனங் களை முன்வைத்துள்ளார் நடிகை ராக்கி சவந்து..

எந்த அரசியலிலும் ஈடுபடாத என்னை ஏன் இப்படி அவமானப்படுத்து கிறீர்கள்? என்பதோடு நில்லாமல், பி.ஜே.பி.யில் அதிகாரபூர்வ உறுப்பினர் களாக ஏராளமான நடி கைகள் இருக்கிறார்களே - ஹேமாமாலினி இல் லையா? ஸ்மிருதி ராணி இல்லையா? அவர்கள் படத்தை இணைத்துப் போடவேண்டியதுதானே என்று வெடித்துக் கிளம்பிவிட்டார்.

அரசியலின் தகுதி எந்த அளவுக்குச் சாக் கடையாகி விட்டது; அதுவும் தார்மீகப் பண்பு கள் பற்றி வக்கணை பேசும் பி.ஜே.பி. எந்த அளவுக்கு வக்கிர மலக் குட்டையாகி இருக்கிறது பார்த்தீர்களா?

- மயிலாடன் 31-10-2012

தமிழ் ஓவியா said...


மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்


டெசோ மாநாட்டு தீர்மானத்தை அய்.நா. மன்றத்தில் அளிக்க மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்

சென்னை, அக். 31- சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் டெசோ மாநாடு நடை பெற் றது. இதில் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல வழிவகை ஏற்படுத்த வேண்டும் மற்றும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை அய்.நா. மன்றத்தில் அளிக்க விரிவான மனுவும் தயாரிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கலைஞரிடம், பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அய்.நா. மன் றத்தில் சமர்ப்பிக்க உள்ள டெசோ மாநாட்டு தீர்மானங்கள் காட்டி ஒப்புதல் பெற்றனர்.
இந்த தீர்மானங்களை அய்.நா. மன்றத்தில் அளிக்க மு.க.ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். அப்போது விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

டெசோ மாநாட்டு தீர்மானங்களை நானும் டி.ஆர்.பாலுவும் நியூயார்க் அய்.நா. மன்றத்தில் ஒன்றாம் தேதி கொடுக்கிறோம். 3 ஆம் தேதி ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமைக் கழகத்திடமும் இதேபோல் மனு கொடுக்கி றோம். பின்னர் லண்டனில் இலங்கை தமிழர் களை ஆதரித்து பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் தி.மு.க. சார்பில் கலந்து கொள்கிறோம்.
- இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ் ஓவியா said...


கடலூரில் தமிழர் தலைவருக்கு விருது


கடலூர் செப்.30- கடலூர் மாவட்ட கமல் நற்பணி இயக்க மாவட்ட தலைமை அமைப்பின் சார்பில் மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (25.9.2011) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. மாநில நற்பணி இயக்க தலைவர் கோவை தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிருவாகி கமல் ரவி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மண்ணின் மைந்தர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சீர்திருத்தப் பணியில் சிறந்து விளங்கும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கும் அரசியல் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு இருக்கும் முருகு மணிக்கும், இலக்கிய துறையில் சாதனை படைத்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், கல்விப் பணியில் சாதனை படைத்து சிறந்த விளங்கும் புனித வளலானார் கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்களுக்கும், மக்கள் பணியில் சிறப்பாக செயல்படும் மணிரத்னத் திற்கும், பொதுத் தொண்டில் சிறப்பாக செயல்படும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ண னுக்கும், அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாநில தலைவர் கோ. சூரியமூர்த்திக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.

தமிழர் தலைவரின் அருமை - பெருமை

தமிழர் தலைவரின் சிறப்புகளை, அருமை பெருமை களை, கடலூரில் பிறந்து உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கைகளை பறைசாற்றி வரும் தொண்டினைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்ட விருதை தமிழர் தலைவர் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு பெற்றுக் கொண் டார்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, கழக துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திர சேகரன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொறுப் பாளர் அரங்க ரகு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி யில் கழகப் பொறுப்பாளர்கள் சோ. தண்டபாணி, நா. தாமோதரன், தென். சிவக்குமார், அய்ங்கரன், சின்ன துரை, இசக்கிமுத்து, இரா. மாணிக்கவேல் முதலான மற்றும் கழக தோழர்கள், கமல் நற்பணி இயக்க அனைத்து மாவட்ட நிருவாகிகளும், மன்ற உறுப் பினர்களும் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தீவில் உண்மையான பூர்வ குடிகளான தமிழர்களை முற்றாக அழித்துத் விட்டு, அது சிங்கள இன நாடாக முற்றாக மாற்றும் ஒரு வன்முறை வெகு காலமாகவே நடந்துவருகிறது.

அதில் ஒரு உச்சக் கட்டம்தான் மூன்றாண்டு களுக்கு முன் ராஜபக்சே தலைமையில் அமைந்த சிங்கள இனவாத அரசின் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட போர் ஆகும்.

வாழ்வுரிமைக்காக இலங்கைத் தீவில் சுதந்திரப் போர் நடத்தி வந்த அந்தத் தீவுக்குரிய மக்களை அழிக்கும் வேலையைச் செய்தது - சிங்கள இனவாத அரசு!

சீனா, ருசியா, பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளின் இராணுவ உதவி, ஆயுதங்களைத் துணையாகக் கொண்டு தமிழின அழிப்பு வேலையில் (Genocide)
இறங்கி அதில் பெரும் அளவு முடிந்தும் விட்டது.

அழிக்கப்பட்ட தமிழர்கள்போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வுரிமை சுயமரியாதையுடன் காப்பாற்றப்படுவதற்கான முயற்சிகள் உலகெங்கும் முகிழ்த்துள்ளன.

அதில் ஒரு முக்கியமானது இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது தான் டெசோவாகும்.

இன்றைய நிலையில் இந்தத் திசை நோக்கி தான் காய்கள் நகர்த்தப்பட வேண்டியுள்ளன.

இதனைத் திசை திருப்பும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இயங்கும் சில அமைப்புகள், டெசோமீது விமர்சனக் கணைகளைத் திருப்பியுள்ளன.

சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அனைத்துத் தரப்பினருக்கும் கனிவான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். முதலில் நம்மிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உறுதியாகச் செய்து கொள்வோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு டெசோவையும், அதன் தலைவரையும் பலகீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பல அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் நடந்து கொண்டு வருவது, டெசோவைக் கேலி செய்வது என்பதெல்லாம் சிங்கள இனவாதத்தின் ஊற்று ராஜபக்சேக்குக் கூடுதல் பலத்தை கொடுக்கவே பயன்படும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியலைக் கொண்டு வந்து திணித்து, காழ்ப்புணர்ச்சியோடு மேடைகளைப் பயன்படுத்தினால், நமது நாட்டில் உள்ள பரம்பரை எதிரிகள் சிண்டு முடியும் வேலையில் இறங்குவார்களே - அதற்கு இடம் கொடுக்கலாமா என்கிற பொருள் நிறைந்த ஆழமான கருத்தை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.

டெசோவின் தலைவரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் இரும்பு மனப்பான்மையோடு எதிர்வாதம் செய்து கொண்டிருந்த - அதிகாரம் கிடைத்ததும் ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் பல வகைகளிலும் ஒடுக்கிய ஒருவருடன் நெருக்கம் காட்டியது - மன்னிக்க முடியாத, சீரணித்துக் கொள்ளவே முடியாத கீழான போக்கே!

ராஜபக்சே எந்த எல்லைக்குப் போயிருக்கிறார்? ஏதோ இன்னொரு நாட்டோடு யுத்தம் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக போர் நினைவுச் சின்னம் நிறுவியதுபோல சொந்த நாட்டு மக்களான தமிழர்களைக் கண் மூடித்தனமாக - பல நாட்டு இராணுவ உதவியுடனும், ஆயுதங் களுடனும் அழித்தொழித்ததற்காக போர் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதை உலகம் ஏற்குமா?

கொலைக் குற்றவாளியாக அய்.நா.வால் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலகில் ஓங்கி ஒலிக்கும் கால கட்டத்தில் ராஜபக்சே இன்று நிறுவியுள்ள வெ(ற்)றிச் சின்னம் அவருக்கு எதிராக அமையப் போகும் என்பதில் அய்யமில்லை.

சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அதற்கு மேலும் அடி எடுத்துக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் ஓவியா said...


புரோகிதன்


கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே செல்ல முடியும். அவர்கள் தான் அர்ச்சனை செய்ய உரிமை பெற்றவர்கள் - தகுதி உடையவர்கள் - ஆகமங்கள் அப்படித்தான் கூறுகின்றன என்று வக்கணைப் பேசும் பார்ப்பனர்களைக் காண முடிகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வகையில் வாதாடுகிறார்கள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில்கூட சொல்லு வார் ராத்திரி பூராவும் மாமா வேலை செய்துவிட்டு, காலை யில் அர்ச்சகனாகப் பணி யாற்றுகிறானே! என்று கூறுவதுண்டு.

இப்பொழுது அதையும் தாண்டி புரோகிதப் பார்ப் பனர்களும், அர்ச்சகப் பார்ப் பனர்களும் தனி ஒழுக்கம் ஏதுமின்றி தண்ணீர் ஒழுக் கத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

பவானி கூடுதல் துறை யில் இறந்தவர்களுக்காக ஆத்மா(?) சாந்தி அடைய பரிகாரப் பூஜைகள் (திவசம், கருமாதி முதலியன) நடத்தப் பட்டு வருகிறது.

அங்கு புரோகிதராக இருந்து வந்தவர் தம்மிடம் வந்த திருப்பூர் குடும்பத்தினரை மற்றொரு புரோகிதரான சீனிவாசன் என்பவரிடம் அனுப்பி வைத்தார்.

அந்தப் புரோகிதப் பார்ப் பான் சரியான குடி போதை யில் பெருங்குடி மகனாக உருண்டு கிடந்திருக்கிறார்.

இறந்து போன தங்கள் பெற்றோர்களுக்கு தடபுட லாக விருந்து பார்சலை அனுப்ப வந்த திருப்பூர் குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். விஷயம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் நடராஜ் என்பவருக்குச் சென்றது.

அதனைத் தொடர்ந்து இரு புரோகிதப் பார்ப்பனர் களையும் அந்த அதிகாரி தற்காலிக வேலை நீக்கம் (Suspension) செய்துள் ளார்.
(ஆதாரம்: மாலை மலர் ஈரோடு பதிப்பு - 29.10.2012 முதல் பக்கம்)

குடிக்கும் - பார்ப்பானுக் கும் நெருக்கமான உறவு உண்டு என்பது தெரிந்தது தான். அவர்கள் சுரா பானம் குடித்ததனால் சுரர் என்று அழைக்கப்பட்டனர். திராவி டர்கள் குடியை மறுத்ததால் அசுரர் (சுரர் என்பதற்கு எதிர்ப்பதம்) என்று புராணங் களிலும், வேதங்களிலும் எழுதி வைத்து விட்டனர்.

இது புரியாமல் குடிகாரப் பார்ப்பனர்களாகிய சுரர் களை ஒழுக்கவான் என்றும், குடிக்க மறுத்த மக்களை அசுரர்கள் என்றும் கூறி அவர்கள் ஒழுக்கம் கெட்டவர் போலவும் தலைகீழாகப் புரட்டிவிட்டனர். (பகுத்தறி வைப் பயன்படுத்தாவிட்டால் இதுபோன்ற புரட்டல் உருட் டல்களுக்குப் பலியாக வேண்டியதுதான்)

காஞ்சீபுரத்தில் மச்சேஸ் வரர் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயிலுக்கு வந்த பெண்க ளிடம் கர்ப்பக் கிரகத்திலேயே உடலுறவு கொண்டான்; அவற்றைப் படம் பிடித்தும் வைத்திருந்தான் என்பதும் சாதாரணமா?

இந்த யோக்கிதையில் உள்ள பார்ப்பனர்கள் கர்ப்பக் கிரகத்தில் உள்ள சாமி சிலைகளைத் தொடலாமாம்; அர்ச்சனை செய்யலாமாம்; முறைப்படி பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் ஒழுக்கவாதிகளாக இருந்தா லும் பிறப்பின் காரணமாக கர்ப்பக் கிரகத்திற்குள் போகக் கூடாதாம்! அப்படி போனால் சாமிக்குத் தீட்டுப் பட்டு விடுமாம். இந்தப் பார்ப் பனீய பம்மாத்தை உடைத்து எறிய வேண்டாமா? - மயிலாடன் 30-10-2012

தமிழ் ஓவியா said...


தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?



திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் மதுவையும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

- விடுதலை, 27.10.2005