Search This Blog

8.6.12

முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு!-கி.வீரமணி

திருச்சி - புத்தூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பகுதிக்குச் சூட்டப்பட்டு இருந்த பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரை மறைப்பதா?

முதல் அமைச்சருக்குத் தெரிந்துதான் நடந்ததா? முதல் அமைச்சர் தலையிடுவாரா?

தமிழர் தலைவரின் அறிக்கை



திருச்சி - அரசு பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்குச் சூட்டப்பட்டிருந்த பெரியார், அன்னை மணியம்மை பெயர்களை நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மேலே காட்டியுள்ள ஆணை 3 நாள்களுக்கு முன் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பெயரில் வந்துள்ளது; இப்படி ஒரு மாற்றத் திற்குரிய காரணங்கள் என்னவென்பது புரியவில்லை.

இதனுடைய வரலாறு என்ன?

இதனுடைய வரலாறு தற்போதுள்ள தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் அவர்களுக்கும் தெரிய வேண்டும்.

1965-66-லேயே திருச்சியில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி (பெரிதும் ஒடுக்கப்பட்ட சமுதாய ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தவர்கள் பயன்பட) வர வேண்டும் என்பதற்கு, தந்தை பெரியார் அவர்கள் தமது அறக் கட்டளையிலிருந்து அய்ந்தரை லட்ச ரூபாய் (5.5. லட்சம் ரூபாய்கள்) தமிழக அரசு, அந்நாள் முதல் அமைச்சர் எம். பக்த வத்சலம் அவர்களிடம் கொடுக்கப் பட்டது. அந்தக் கல்லூரிக்கு பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் கலை அறிவியல் கல்லூரி என்றும் அரசால் பெயர் சூட்டவும் பட்டது. அன்று முதல் இன்று வரை பல்லாயிரம் மாணவர்கள் படித்து பட்டதாரியாகி, அதில் சிலர் நாடாளுமன்றவாதிகளாகவும் ஆகியுள்ளனர்! அந்த நிலையில், திருச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலம் காக்க ஒரு பிரிவு (Pediatric Ward) இல்லை என்ற குறையைப் போக்க நினைத்த அந்நாள் மருத்துவத்துறை இயக்குநர் (டைரக்டர் ஆஃப்மெடிகல் சர் வீஸ்) டாக்டர் ஏ.பி. மரைக்காயர் அவர்கள் என்னிடமும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரிடமும் இத் தேவையைக்கூறி, நன்கொடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்!

இதை அம்மா, அய்யாவிடம் சொன்னவுடன், அய்யா அவர்களும் (1966-ல்) நிச்சயம் உதவுவோம் என்று கூறி விடுங்கள் என்றார்கள்.

அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது...

அதன்படி ஒரு லட்ச ரூபாயை பெரியார் அறக் கட்டளை சார்பில் அய்யா அவர்கள் அளிப்பதாக அறிவித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் 1967-இல் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அந்த நிலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் அய்யா காசோலை (Cheque) தந்து, என்னை முதல்வர் அண்ணா அவர்களிடம் நேரில் சென்று கொடுத்து விட்டு வருமாறு பணித்தார்கள். நான் அண்ணாவை ஆட்சிக்கு அவர் வந்தவுடன் அவர் வீட்டில் சந்தித்த முதல் சந்திப்பு அது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அய்யாபற்றி விசாரித்து வணக்கம் தெரிவிக்கும்படிக் கூறி, காசோலையைப் பெற்றுக் கொள்ள அன்றைய மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சாதிக் பாட்சா அவர்களையும் உடன் வரச் சொன்னார்.

என்ன அண்ணா, தந்தை பெரியார் இன்னும்கூட கூடுதல் தொகை கொடுத்திருக்கலாமே! என்று சொன்னவுடன், முதல்வர் அண்ணா குறுக்கிட்டு சாதிக் உனக்குத் தெரியாது எனக்கும், வீரமணிக்கும் தெரியும். அய்யாவைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய தொகை இது தெரியுமா? என்று சிரித்துக் கொண்டே நன்றி கூறுங்கள் என்றார்.

முதல்வர் அண்ணா பங்கேற்றார்

ஒரு சில வாரங்களுக்குப்பின் திருச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு 2,3 நாள்கள் நடைபெற்றது. அதில் ஒன்பது அமைச்சர்களும் கலந்து கொண்டனர்; அந்த நேரத்தில் அய்யா அம்மாவையும் அவ்விழாவிற்கு அழைத்து, குழந்தைகள் பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழா மிகவும் சிறப்பான அரசு விழாவாக நடைபெற்றது.

அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதில் முதல் அமைச்சர் அண்ணாவின் உரை அற்புதமான உரை; அய்யா அவர்கள் இறுதியாக உரையாற்றினார்கள் 31.1.1968. (கீழே பக்கம் காண்க).

அதிமுக ஆட்சியில் பெரியார் மணியம்மை பெயர் இருக்கக் கூடாதா?

அந்தக் கட்டடம் கட்டி இயங்கத் துவங்கி, சுமார் 44 ஆண்டுகள் ஆகி, நடைமுறையில் இருந்து வந்த ஆவணங்களில் இப்படி திடீரென்று மாற்ற ஆணை பிறப்பித்தது என்ன நியாயம்? இதற்கு என்ன தேவை? என்ன நோக்கம்?

பெரியார் - மணியம்மை பெயர் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருக்கக் கூடாதா?

அண்ணா செய்ததைக்கூட இப்படி மாற்றுவது அசல் விஷமத்தனம் அல்லவா இது! ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளின் சில்லறை விஷமம் அல்லாமல் வேறு என்ன?

ஏற்கெனவே அண்ணா ஆட்சி; கலைஞர் ஆட்சி (தி.மு.க. ஆட்சி) அதன்பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி, (இந்த ஆட்சியே இரண்டு முறைகள் இருந்தபோதும்) மாற்றப்படாமல் இருந்ததே இப்பொழுது திடீரென்று இப்படி ஒரு மாற்ற ஆணை ஏன்?

முறைப்படி முதல்வரிடம் முறையீடு!

நேற்று கொதித்தெழுந்தார்கள் - திருச்சி வாழ் பொது மக்கள் - கட்சி, ஜாதி, மத வேறுபாடு இன்றி! முக்கிய பொறுப்பாளர்கள் ஆவேசப்பட்டனர். எந்தவித ஆர்ப்பாட்டம், கிளர்ச்சிகளில் இதற்காக ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிகாரம் தேடிட, பழைய நிலை நீடிக்க முயலுவோம்.

அடுத்த கட்ட நடவடிக்கை

அது தாமதமின்றி, உடனடியாக நியாயம் கிடைக்காவிடில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று சமாதானப்படுத்தியுள்ளோம்!
தமிழக முதல் அமைச்சர் அவர்கள் நிலைமையைத் தெளிவுபடுத்தி, ஏற்கெனவே இருந்தபடி (Status Quo Ante) ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

-----------------------கி.வீரமணி- தலைவர், திராவிடர் கழகம் 7-6-2012

திருச்சி - புத்தூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் பெரியார், ஈ.வெ.ரா. மணியம்மைக் கட்டடத் திறப்பு விழா

பேராசான் தந்தை பெரியார் ஆற்றிய உரை இதோ:

31.12.1967 இல் திருச்சி புத்தூர் அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பகுதி பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மைக் கட்டடத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரை, பொதுப் பணித்துறை அமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரை:

மாண்புமிகு பொதுத்துறை அமைச்சர் அவர்களே! மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே! உயர்திரு டாக்டர் மதுரம் அவர்களே... மற்றும் தாய்மார்கள் அவர்களே! தோழர்களே, மணியம்மையார் அவர்களே (சிரிப்பு)

மணியம்மை குழந்தைகள் மருத்துவமனை

இன்றைய தினம் நம் பொதுத்துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டபடி இந்த விழா திருமதி மணியம்மையார் பேரால் நிறுவப்பட்ட குழந்தைகள் பகுதி கட்டடத்தை திறந்து வைத்ததற்காக ஆகும்.

இச்சிறு பகுதி மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டுமென்பது மணியம்மையாருக்கு ஆசை ஏற்பட்டதன் பலனாக, முன்னது அமைச்சரவையில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. நமது டாக்டர் உயர்திரு மதுரம் அவர்கள் இதிலேயும் பங்கு எடுத்துக் கொண்டு அதை அமைக்க முயற்சித்தார்கள். ஆனால், அப்பொழுது இது முடிவு பெறவில்லை.

இப்பொழுது அருமை அமைச்சர் அவர்கள் (அண்ணா முதல்வராக) வந்த பிறகு சீக்கிரத்திலேயே முடிவு ஏற்பட்டு நான் நினைக்கிறேன். பட்ஜெட்டிலே கூட செய்யப்படாத காலம் என்றாலும் நமது முதலமைச்சர் (அண்ணா) அவர்கள் இந்த விஷயம் தெரிந்த உடனே எப்படியாவது சீக்கிரம் முடித்து விடுகிறேன். ஏதோ நீ கொடுக்கிறதைக் கொடு என்று கேட்டார்கள். (சிரிப்பு) உடனே அவருக்கு நான் ஒரு லட்ச ரூபாய்க்குச் செக் எழுதி கொடுத்துவிட்டேன். அவர் எடுத்துக் கொண்ட அவசர நிகழ்ச்சியானது உடனேயே துவக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. ஏற்பட்டு கொஞ்ச நாளைக்கு முன்னேதான் இங்கு வந்து இதற்காகவே அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அடிக்கல் நாட்டு விழா நடந்து சுமார் 3,4 மாதத்துக்குள்ளாக இரண்டரை லட்சத்துக்கு மேல் செலவுள்ள இந்தக் கட்டடம் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு நல்ல வண்ணமாக நம் இன்ஜினீயர் அவர்கள், டாக்டர் அவர்கள் முயற்சி எடுத்து, முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பிறப்பைத் தவிர்ப்பீர்! பிறந்ததைக் காப்பீர்!

இந்த நாட்டுக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் வேண்டுமென்று நீண்ட நாளாக மக்களுக்குள் விருப்பம் இருந்தது. அந்தப்படிக்கே நான் இந்த முயற்சி எடுத்துக் கொண்டேன்.

ஒரு பக்கம் நான் மக்கள் குழந்தை பெக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் (சிரிப்பு) இன்னொரு பக்கம் குழந்தைகள் எல்லாம் வளர்க்க வேண்டும் உயிரோடு இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணுகிறவன் சாதாரண ஜனங்களுக்கு இது கொஞ்சம் ஒரு விடுகதையாகத் தோணலாம்.

ஏன்னா அங்கே பிள்ளை பெக்க வேணாகிறான், இங்கே பிள்ளையெல்லாம் வளர்க்க வேணும்கிறான். (சிரிப்பு, கைதட்டல்) பிள்ளை பெக்கிறது குறைந்து போகும்.ஆனதினாலே சுருக்கமான அளவில் பிள்ளைகள் பிறந்தாகணும். அதை நல்ல வண்ணம் பாதுகாக்க வேணும். பிள்ளையே இல்லை என்கிற குறை நீங்கும் என்கிற எண்ணத்தினால் தான் இம்மாதிரி சொல்ல வேண்டியிருக்கு.

ஆகவே இந்த ஊருக்கு (திருச்சிக்கு) நமது பொதுத் துறை அமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்கள் வேடிக்கையாகவே சொன்னார்கள். இன்னும் பலவற்றிற்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று. (சிரிப்பு) ஏதோ கொடுக்க வேண்டியவர்களுக்கு சக்தி அனுஷாரம் வசதிக்கு ஏற்ப செய்வதிலே நான் ஒண்ணும் ஆட்சேபிக்கலே. ஏதோ என்னாலானதைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே இந்தக் கட்டடத்தை இவ்வளவு சீக்கிரத்திலே முடித்து நல்ல முறையில் நடக்க வேண்டியதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டாக்டர் அவர்களுக்கும் மற்றும் அரசாங்கத்தவர்களுக்கும் நன்றி செலுத்தி விட்டு என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.

வணக்கம்.

6 comments:

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை: சோகத்தில் ஆதீனம்



சாமியார் நித்யானந்தா பேட்டியின் போது, "கன்னட "டிவி' சேனல் நிருபர்' நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது.

சாமியார் நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 2004 முதல், 2010 வரை, நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு வைத்திருந்தவர். இவர், "கன்னட "டிவி' சுவர்ணா'வில் அளித்த பேட்டியில், "நித்யானந்தா, காவி அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை தொடர்பு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்' என்று கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு பொய்: இந்த பேட்டிக்கு பதிலளிக்க, பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிருபர்களிடம் நித்யானந்தா கூறியதாவது: ""ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டு பொய்யானது. என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதை உணர முடியாது. என் ஆசிரமத்துக்கு வந்த போது, அவரது நோயை குணப்படுத்த முயற்சித்தேன். ஆனால், என் மீது குற்றம் சாட்டியுள்ளார். பீடத்தில் ஆண், பெண் சீடர்கள், பக்தர்கள் உள்ளனர். பூஜை, தியானம் நடந்து வருகிறது. யாரையும் வசியப்படுத்தவோ, தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதோ இயலாத காரியம். ஆர்த்தி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவருக்கு, ஹெச்.ஐ.வி., சம்பந்தமான, "ஹெர்பஸ் 2' என்ற நோய் உள்ளது. ஆர்த்தி ராவுடன் தொடர்பு வைத்திருந்தால், எனக்கும் அந்த நோய் வந்திருக்கும். இது தொடர்பாக ரத்தப் பரிசோதனை செய்ய நான் தயார். அவர் தயாரா. இதுபற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

நிருபர் கேள்வி: இந்த நேரத்தில், ஸ்வர்ணா, கன்னட, "டிவி' நிருபர் அஜித், நித்யானந்தாவுக்கு கோர்ட் அனுப்பிய சம்மன் ஒன்றின் நகலை காண்பித்து, "நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வாங்கிக் கொள்ள மறுத்தது ஏன்?' என்று கேட்டார். அதற்கு நித்யானந்தா, "எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. வழக்குகளை சட்டப்படி சந்தித்து வருகிறேன். தலைமறைவாகவில்லை. உங்கள் கண் முன்பே நிற்கிறேன்' என்றார். அப்போது, "டிவி' நிருபர், "சம்மன் நகலை காண்பித்து, சம்மனை வாங்காமல், திருப்பி அனுப்பியுள்ளீர்கள். சம்மனை பெறாவிட்டால், நீதிமன்றம் விட்டு விடாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி மீண்டும் வாரண்ட் வரும்' என்றார். இதனால், கோபமடைந்த நித்யானந்தா, பத்திரிகையாளர் சந்திப்பில், மற்றவர்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகையாளர்கள் தவிர, மற்றவர்களை வெளியேற்றுங்கள் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் சீடர்கள், நிருபர் அஜித்தை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பு சூழ்நிலை உருவானது. நிருபர்கள் சிலர், கை கலப்பை கட்டுப்படுத்த முயன்றனர்.

அமைதியாக ஆதீனம்: உடனடியாக நித்யானந்தா, "பிரஸ் மீட்டுக்காக அழைத்தேன். ஆனால், தேவையின்றி சட்ட விஷயங்கள் பேசுகின்றவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில், பக்தர்களும், சீடர்களும் அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்' என்றார். பேட்டியின் போது, அடிக்கடி மாஜி நடிகை, ராகசுதாவை அழைத்து, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இந்த ரகளையின் போது, மதுரை ஆதீனம், தன் கன்னத்தில், "கை' வைத்தவாறு, சோகமாக பார்த்து கொண்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...

திருச்சி மருத்துவமனை பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு: முதல் அமைச்சரின் ஆணைக்கு நமது நன்றி!


திருச்சியில் உள்ள கி.அ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 44 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் நலப் பிரிவு EVRM Medical Ward என்ற பெயரை மாற்றம் செய்து, வெறும் குழந்தைகள் நலப் பிரிவு என்றுதான் இனி அழைக்கப்படல் வேண்டும் என்ற ஆணை (கடந்த 4ஆம் தேதி ஜூன் 2012) வழங்கப்பட்டதைக் கண்டித்து எழுதி இருந்தோம். *(7.6.2012) முதல் அமைச்சர், அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்த குழந்தைகள் நலப் பிரிவுக்கு 1 லட்ச ரூபாய் பெரியார் அறக் கட்டளையிலிருந்து அய்யா அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டு, பிறகு அண்ணா முதல் அமைச்சர் அவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். மொத்தம் 9 அமைச்சர்கள் முன்னிலையில் அய்யா அம்மா பெயர்களை அறிவித்து மகிழ்ந்ததை நாம் எழுதியிருந்தோம்.

அத்துடன் இந்த மாதிரி தேவையற்ற, சர்ச்சையைக் கிளப்பும் இந்த ஆணை முதல் அமைச்சரின் தகவலுக்கே போகாமல் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதால் முதல் அமைச்சரின் கவனத்துக்கு என்று எழுதி இந்தஆணையை ரத்து செய்து (Restore Status quo Ante) என்பதை வேண்டுகோளாக வைத்திருந்தோம்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்திற்குச் சென்று உடனடியாக இதற்குப் பரிகாரம் தேடப்பட்டு, பழைய ஆணை ரத்து செய்யப்பட்டு, புது ஆணை பழைய பெயராலேயே கட்டாயம் அழைக்கப்படல் வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

மாண்புமிகு முதல் அமைச்சருக்கு நமது நன்றியைத் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமைக்குப் பாராட்டையும் தெரிவிக்கிறோம்.

இனி இதுபோன்ற ராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளையும் சரியான கண்டிப்புக்கு ஆட்படுத்துதலும் அவசியம் ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 11-6-2012

தமிழ் ஓவியா said...

புதிய இராணுவத் தளபதியின் அறிவுரை


இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள் ளார். இராணுவத் தலைமையகத்தில் அய்ந்து முக்கிய மான பதவிகளை வகித்த சிறப்புப் பெற்றவர் இவர்.

பதவியை ஏற்றுக் கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை.

இராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் அரசியல் சார்பற்ற முறையிலும், மதச் சார்பற்ற முறையிலும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் இராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்க் கும்பலின் ஊடுருவல் கணிசமாக உள்ளது என்பதற்குப் பல நிகழ்வுகளும் ஆதார ங்களும் இருக்கவே செய்கின்றன.

இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமிக்கப்பட்டனர் என்று விமானப்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் போட்டு டைக்கவில்லையா?

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி. ஆட்சியில் சேர்க்கப்பட்டனர் என்றால் அந்த நிலையைக் கூர்மையாகச் சிந்தித்தால் உண்மை என்ன என்ற நிலைமை புரியுமே!

பி.ஜே.பி.யின் தேசியச் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவத் தலைமை அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலைமை கூட உண்டே!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியார்? சிறீகாந்த் புரோகித் என்ற பார்ப்பனர் இராணுவ அதிகாரி அல்லவா?

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து வெளியில் கிடைக்க முடியாதவை - இராணுவத் துறையில் மட்டும் பயன்படுத்தப்படக் கூடியவை; அதனை மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தியுள்ளனர் என்றால் இராணுவத்தில் இவர்கள் எந்தளவு ஊடுருவியிருக்கின்றனர் என்பது விளக்காமலேயே விளங்கும்.

இவர்கள் இராணுவப் பள்ளிகளையும் நடத்து கின்றனர். இங்கு பயிற்சி பெறுவோர் ஆயிரக் கணக்கில் இராணுவத்துக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றனர். மாலேகான் குண்டு வெடிப்பில் முதல் குற்ற வாளியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான சிறீகாந்த் புரோகித்தின்மீதுள்ள குற்றச்சாற்று என்ன?

இந்து ராஷ்டிரம் அமைக்கத் திட்டமிட்டு அரசியல் சட்டம், கொடி போன்றவற்றையும் எழுதியும், வடிவமைத்தும் வைத்திருந்தனர். இசுரேலுடன் தொடர்பு கொண்டு போட்டி அரசாங்கம் ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்பது அவர் மீதுள்ள முக்கிய குற்றச்சாற்றாகும். இந்தியாவிலிருந்து வெளியேறி இசுரேலிடம் சரண் அடைந்து போட்டி அரசினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாற்று என்ன சாதாரணமா?

இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து உரிய முறையில் ஆய்வு செய்தால், புதிய இராணுவத் தளபதி ஜெனரல் விக்ரம்சிங் தெரிவித்த அறிக் கைக்கு ஆழமான பின்னணி உண்டு என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாமே!

சங்பரிவார்க் கும்பல் இராணுவத்தில் ஊடுருவல் என்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல; இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும் பேராபத்தாகும்.

இந்து ராஷ்டிரத்தை அமைத்தே தீருவோம் என்ற கொள்கையுடைய சங்பரிவார்க் கும்பல் இராணுவத் தில் ஊடுருவி இருந்தால், அது இராணுவத்தில் மதச் சிக்கலை உண்டாக்குவதோடு அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கும் ஆபத்தாக முடியக் கூடிய நிலை தான் ஏற்படும்.

எனவே புதிய தளபதியின் அறிவுரை மிக மிக முக்கியமானது. பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் இராணு வத்தில் புகுத்தப்பட்டவர்கள்பற்றி ஆய்வு செய்து அவர்களை வெளியேற்றுவது அவசர அவசியமான கடமையாகும்.

வரலாற்றில் காட்டிக் கொடுப்பது என்பது பார்ப் பனர்களுக்குக் கை வந்த கலையாகும். உஷார்! உஷார்!! 11-6-2012

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை வதைபடுவதற்கா? - மருத்துவர் -சரோ இளங்கோவன்

தந்தை பெரியார் அரும்பாடு பட்டு பெண்ணுரிமையையும் கல்வி உரிமையையும் வாங்கித் தந்தார். இதனால் பயனடைந்த பலர் கல்வி பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி வாழ்கின்றனர்.அதனுடன் கூடிய பொறுப்பும், நன்றியும் போற்றி மகிழ்வுடன் வாழ வேண்டிய காலத்தில் பலர் உள்ளனர்.

ஆனால் இதில் சிலர் நல்ல வேலை, கை நிறைய பணம் இருந்தும் வாழ்வில் மகிழ்வில்லாமல் குழப்பத் திலும் கோளாறிலும் சீர் குலைந் திடுவது மிக்க வருத்தமளிக்கின்றது. அதிலும் அமெரிக்கா வந்து வாடும் இணையத்தில் வேலை செய்யும் பல இளையவர்கள் வாழ்வில் இணை யாமல் பிரிவது மிகுந்து வருகின்றது

கருத்து வேறு பாடுகள், மற்ற குடும்பத்தினரின் அர்த்தமற்ற தலை யீடும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. குழந் தைகளின் இன்பத்தை அனுபவிக்கத் தெரியாமல் அவர்களையும் வாட்டி வதைக்கும் செயல்கள் நடந்து விடுகின்றன.

அண்மையில் ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். கணவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இளங் குழந்தையை அரசு கண்காணிப்பில் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டது. இனி மருத்துவம், வழக்கறிஞர், நீதி மன்றம், மன மருத்துவம் என்று சட்டம் ஆட்டிப் படைத்து விடும்.

கல்லூரியில் கணினி மட்டும் படிக்காது சில வாழ்க்கைச் சிக்கல் களையும் எதிர் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். விட்டுக் கொடுக்கும், சிந்தித்துச் செயல் படும் திறன் பெற வேண்டும்.பெரும்பாலான இளைஞர் கள் இப்போதெல்லாம் குழந்தை வளர்ப்பில் நன்கு திறமையுடன் உள்ளனர்; சேர்ந்து உழைத்து மகிழ் வுடன் வாழ்கின்றனர். ஆனால் தொல் லையில் உள்ளவர்கள் யாருடனும் பேசாமல், பழகாமல் ஒதுங்கிக் கடைசியில் பெரும் விலை கொடுத்து வாழ்க்கையையே கெடுத்துக் கொள் கின்றனர். ஆங்காங்கே பல உதவும் அமைப் புகள் உள்ளன.

மனநல வல்லுநர்கள் பலர் உள் ளனர். ஆரம்பத்திலேயே போனால் எளிதில் தீர்த்துச் சரி செய்து விடலாம்.

ஆனால் அதில் பயன் பெறுவோர் மிகவும் குறைவு. வரட்டுத் திமிரும் நீ தான் போக வேண்டும் , நான் எதற்குப் போக வேண்டும் என்ற பிடிவாதமும் வாழ்க்கையை குலைக்கலாமா? வாழ்க்கை வாழ்வதற்கா? இல்லை வதைபடுவதற்கா?
11-6-2012

தமிழ் ஓவியா said...

திருவிழாக்களிலும் கூட ஜாதிப் பாகுபாடு

உசிலம்பட்டி, ஜூன் 11- கிராமங்களில் திருவிழாக்களிலும் கூட ஜாதி பாகுபாடு தலை விரித்தாடுகிறது. உசிலம்பட்டி அருகே உள்ள தும்மகுண்டு கிராமத்தின் உள்ளூர் கோவில் திருவிழாவின்போது, கிராமத்தின் குளத்தில் தங்கள் முளைப் பாரியைக் கரைக்க தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் உயர் ஜாதியினரால் தடுக்கப் பட்டதால், இக்கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

இதனால் ஏற்பட்ட ஜாதிக் கலவரத் தை உசிலம்பட்டி கோட்ட ஆய்வாளர் தலை யிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதைப் பற்றி விசாரிக்க தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினரும் கம்யூனிஸ்டு கட்சியினரும் இந்தக் கிராமத்துக்குச் சென்றபோது உயர் ஜாதியினர் ஊருக்குள் அவர்களை வரவிடாமல் தடுத்து நிறுத் தினர். இது பற்றி சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட் டுள்ளது. இதனையடுத்து காவல் துறை யினர் அக்கிராமத்துக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த பெண்களை எழுப்பி அவர்களின் கணவர்களைப் பற்றி விசாரித்தனராம். இதனால் எரிச்ச லடைந்த கிராமத்தினர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனராம். திருமங் கலம் உதவி காவல்துறை கண்காணிப் பாளரும், வட்டாட்சியரும் பேச்சு வார்த்தை நடத்தி கிராமத்தினரை அமைதிப்படுத்தினராம். 11-6-2012

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி அடுத் துள்ள மேலவாசல் குமரபுரத்தில் இந்திரா காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சதாசிவம் கதிர் காமவள்ளி கல்வி நிறுவனத்திற்கு உள்பட்ட அருணாமலை கல்வியியல் கல்லூரியில் பெரியார் சிந்தனை மய்யம் துவக்க விழா நடைபெற்றது. 27.4.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்வி நிறுவனங் களின் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். அருணாமலை கல்வியியல் கல்லூரி நிருவாக இயக்குநர் தரங்கை ச.பன்னீர்செல்வம், அருணா மழை ஆசிரியர், பயிற்சி நிருவாக இயக்குநர் சி.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரடி அன்பழகன்

இதில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கலந்து கொண்டு பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் என்ற தலைப்பில் பெரியார் சிந்தனை மய்யத்தை துவக்கி வைத்து பேசும்போது, மருத்துவர், பொறியாளர் படிப்பும் பணியை விட ஆசிரியர் படிப்பும், பணியும் உயர்ந்த நிலையை அடைய கூடியவர்களை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆசிரியர் பயிற்சியுடன் உளவியல் கல்வியையும் கற்று எதிர்கால சந்ததி யினருக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் களுக்குள்ளது. அதற்கு காரணம் சமுதாய மாற்றம் செய்யும் சக்தி ஆசிரியர் பணியால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற சிந்தனை தோன்றினாலே தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஆண்டுதோறும் சதய விழா எடுக்கும் தமிழக அரசு கல்லணையை கட்டிய கரிகாற் சோழனுக்கு விழா எடுக்காமல் இருப்பது எதனால் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

இங்கு விழா துவங்கும் போது மாணவிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடினர். இந்த பாடலில் இரண்டு வரிகள் நீக்கப்பட்டு தற்போது பாடி வருகிறோம் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இதுபற்றி சிந்தனை தோன்றினால் விளக்கம் கிடைக்கும்.

பெண்களின் நிலை

நான்கு வகை வர்ணங்களுக்கு அடுத்த நிலையில் தான் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். திருவி தாங்கூர் தேவஸ்தானத்தில் பெண்கள் ரவிக்கை அணிந்தார்கள் என்ற காரணத்தினால் மார்பகங் களை வெட்டிய நிகழ்ச்சியும், ரவிக்கைக்கு வரிபோடும் முறையும், கோவில்களில் பொட்டு கட்டுதல் என்ற தேவதாசிமுறையும் இருந்தது பல நூற்றாண்டுக்கு முன் அல்ல. நாம் வாழும் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தான் இந்த கொடுமைகள் பெண்களுக்கு எதிராக இருந்து வந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெரியார் கருத்துகளை டாக்டர் முத்துலட்சுமிரெட்டி சட்டமன்றத்தில் எதிரொலித்து பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பெரியாரின் போராட்டம் வெற்றி பெற்று பொதுமகள், விலை மகள் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையைச் சட்டம் போட்டு தடைவிதித்தது அரசு. இதற்கு காரணம் பெரியார் சிந்தனைதான்.
கற்புகரசிக்கு அடையாளம் கண்ணகி என கூறி சென்னையில் அரசு சார்பில் கண்ணகிக்கு சிலை வைத்த போது, அதனை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். நாட்டில் சரிபாதி பெண்கள் எண் ணிக்கை இருக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் தான் கற்புகரசியா என வெளிநாட்டுக்காரன் கேட்டால் என்ன பதில் சொல்வது என பகுத்தறிவு கொண்டு கேள்வி எழுப்பியதுடன் சிலையை பெண்கள் உடைத்து எறிய வேண்டும் என்ற எழுச்சி சிந்தனையை உருவாக்கி முழக்கமிட்டவர் பெரி யார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சொத் தில் சரிபங்கு வழங்க வேண்டும் என்பதுடன் ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண் ணுக்கு உண்டு என்றவர் பெண்கள் தன்னம்பிக்கை யுடன், சுயமரியாதையு டன் வாழ திருமணத் திற்கு கற்பனையை அகற்ற விட வேண்டும் புரட்சிகருத்து களை வித் திட்டவர் பெரியார்.

1929ஆம் ஆண்டிலேயே....

1929ஆம் ஆண்டி லேயே துவக்கப்பள்ளி களில் பெண் களை மட்டுமே ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீதிக்கட்சி மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற் றியவர் பெரியார். பெண் களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதுடன், விளை யாட்டு, கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பெரியார். இதனால்தான் இன்று அரசியல், கல்வி, விளை யாட்டு, வேலை வாய்ப்புகளில் பெண்கள் சாதனையாளர் களாக விளங்க காரணம் பெரியார் சிந்தனை புரட்சிதான்.

மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு பாட்டிகள் சாமியாடிய காலம் மாறி பெரியாரின் பகுத்தறிவு புரட்சி மூலம் பேத்திகள் கணினி உலகத்தில் கோலோச்சி வருகின்றனர். மாணவிகள் அறிவியல் கருத்து என்பது வேறு, அறிவியல் மனப்பான்மை வேறு என்பதை உணர வேண்டும். எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும், அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுயமரியாதை உணர்வுடன் முன்னேற்றப் பாதையில் புதிய உலகம் படைக்க பெரியார் சிந்தனைகளை துணை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார் அதிரடி அன்பழகன்.11-6-2012