Search This Blog

2.1.10

தோழர் ஜெயகாந்தன் எந்தப் பிள்ளையாரை நினைத்துக் கொள்கிறார்?


பிள்ளை - யார்?

சென்னை கண் மருத்துவமனை இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்த கருத்து இவ்வெழுத்தாளரின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தைத் தெ(ரி)ளிவிக்கிறது.

எதிலும் வித்தியாசமான சிந்தனையாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விலகிப் போகும் விபரீதம் இதில் விவரமாகவே யிருக்கிறது.

நான் நாத்திகன்; ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப் பேன்-இதுபக்தியல்ல என்று பேசியிருக்கிறார்.

பக்தர்களும் பரிகசிப்பார்கள்; பகுத்தறிவாளர்களும் ஏளனம் செய்வார்கள். எதிலும் திட்டவட்டமான சிந்தனை இல்லாதவர்கள் இப்படிதான் ஆப்பதனை அசைத்துவிட்டு அபாயகரமாகச் சிக்கிக் கொள்வார்கள். ஆத்திகம், நாத்திகம், பக்தி இவை எதிலும் தெளிவில்லாதவர் என்பதைத் தெளிவாகவே இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டாரே!

நாத்திகன் என்றால் யார் என்ற சிந்தனையில் தெளிவாக இருந்தால் பிள்ளையாரை எப்படி பிடிக்கும்? ஒருக்கால் சாணியை, களிமண்ணைப் பிடித்து வைத்துப் பிள்ளையார் என்று கூறி விடுவதால் பிடிக்கும் என்கிறாரோ ஒரு வார்த்தை விளையாட்டுக்காக! (எழுத்தாளர் அல்லவா!)

நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன் என்கிறார்.

சரி, நினைத்தால் என்ன நடந்ததாம்? கண் மருத்துவமனை விழாவில் இப்படி பேசுவதற்கு முன்புகூட பிள்ளையாரை நினைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசியிருப்பாரோ! பிள்ளையாரை நினைத்துக் கொண்டு பேசினால் இப்படித்தான் தத்துப்பித்தென்று திரிபுவாத நோய்க்கு ஆளாக நேரிடும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இவர் எழுதும் எழுத்துகளுக்கெல்லாம் உரிமை கொண்டாடப் போகிறவர் பிள்ளையாரா? தோழர் ஜெயகாந்தனா? எந்தப் பிள்ளையாரை நினைத்துக் கொள்கிறார்? ஒரு பிள்ளையாரா - இரு பிள்ளையாரா? ஒரு நீண்ட பட்டியலே உண்டே!

பார்வதி தேவியாரின் அழுக்கில் பிறந்த பிள்ளையாரா? சிவன் ஆண் யானையாகவும் பார்வதி பெண் யானையாகவும் மாறிக் கலவி செய்து ஈன்றெடுத்த யானை முகப் பிள்ளையாரையா?

சமுத்திர ஸ்நாதனம் செய்து கடலையே தம் தும்பிக்கையால் குடித்து, அதன்பின் சிறுநீராகக் கழித்ததால் கடல்நீர் உப்புகரிக்கும் நிலைக்கு ஆனதாக உளறப்படும் புராணப் பிள்ளையாரையா?

அம்மாவைப் போலவே தனக்கு மனைவி வேண்டும் என்ற கேட்ட வக்கிரப்புத்தி படைத்த ஆலமரத்தடி பிள்ளையாரா? எழுதவே கூச்சமாக இருக்கிறதே.. அந்த வல்லபை கணபதியையா?

போயும் போயும் பிடித்தாரே முருங்கைக் கொம்பை!

தோழர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துகளுக்கு இருக்கும் கம்பீரத்தையும் ஆளுமையையும் விநாயக சதுர்த்தியன்று பிள்ளையாரைக் கடலில் கரைப்பதுபோல ஆன்மீகக் கடலில் விழுந்து கரைத்துவிட வேண்டாம்!

என்ன இருந்தாலும் தோழர் ஜெயகாந்தன் ஒரு தமிழர் ஆயிற்றே!

--------------- மயிலாடன் அவர்கள் 2-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பெரியார் சிக்கனக்காரரா? கஞ்சதனமானவரா?

வாழ்க்கையில் சிக்கனம் என்று சொன்னால்
சிந்திப்பதில் சிக்கனம் கடைப்பிடிக்கிறார்களே!
பெரியார் கருத்தை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்

வாழ்க்கையில் சிக்கனம் தேவை. ஆனால் சிந்திப்பதில் சிக்கனம் கூடாது என்று சொல்கிறேன் என்று தந்தை பெரியார் சொன்ன கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உழைத்தவர்களுக்கும் பலன்

யார் உழைத்தார்களோ அவர்களுக்கு அந்தப் பலன் கிடைக்க வேண்டும். பல நேரங்களில் உழைத்த மக்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை. உழைப்பை உறிஞ்சக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள்தான் இருக்கிறார்கள்.

எனவே உழைப்பை உறிஞ்சக் கூடியவர்களுக்கு ஊடகங்கள் இருந்தன. அந்த மக்களிடம் தான் பிரச்சாரக் கருவிகள் இருந்தன. அந்த மக்கள் தான் ஆட்சிப் பொறுப்பாளர்களை ஆட்டிப்படைப் பவர்களாக இருந்தார்கள். அரசர்கள் காலத்திலேயிருந்து நம்மவர்கள் காலம் வரை.

எனவே தான் பெரியாரவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நீ என்ன வேண்டுமானாலும் சொல், எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னார்.

என்னை திட்டியவர்கள்தான் அதிகம்

துணிச்சலாக என்னைப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனையிலேயே எதிர்நீச்சல் தத்துவம் என்பது தான் முக்கியமானது. அற்புதமான ஒரு தத்துவம்.

பெரியாரை வாழ்த்தி சொன்னபொழுது உங்களுடைய வாழ்த்துக்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை என்று சொன்னார். உடனே எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அடுத்து உடனே பெரியார் சொன்னார்.

என்னை வாழ்த்தியவர்கள் குறைவு. என்னைத் திட்டுகிறவர்கள்தான், என்னை வசைபாடுகிறவர்கள்தான் அதிகம். உங்களுடைய வாழ்த்துக்காக நான் மகிழ்ந்தால் வசைபாடுகிறார்கள் பாருங்கள், அதற்காக நான் மிகவும் துன்பப்பட வேண்டிருக்கும்.

என்னைப் பொறுத்தவரையிலே வாழ்த்தும் ஒன்றுதான், வசவும் ஒன்றுதான் என்று கருதக் கூடியவன் என்று தந்தை பெரியார் சொன்னார். அது இலக்கு நோக்கிய வாழ்க்கை.

ஜாதி தத்துவம் வருகின்ற நேரத்திலே அதற்கு கர்ம வினைப்பயன் என்று ஒரு தத்துவம் சொன்னார்கள். கர்மா, கர்ம வினைப்பயன் என்பதற்கு என்ன தத்துவம் என்றால் அதற்கு ஆத்மாதான் அடிப்படை என்று சொன்னார்கள்.

இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த மக்களிடம் ஆத்மா என்பது கற்பனை என்று மிகத் தெளிவாக தந்தை பெரியார் சொன்னார்.

லீக்குவான்யூ சொன்னார்

இங்கே நம்முடைய இலக்குவன்தமிழ் சொன்னார். சிங்கப்பூரை உருவாக்கிய நவீன தந்தையாக கருதக்கூடிய மிகப்பெரிய ஆற்றலாளர், மூத்த மதிவுரை அறிஞராக இருக்கக் கூடிய லீக்குவான்யூ அவர்கள் பல துறைகளிலே சிறந்தவர்.

இவர் தந்தை பெரியாரைப் படித்துவிட்டு சொன்னார் என்று நான் சொல்லமாட்டேன். இரண்டும், இரண்டும் கூட்டினால் நான்கு என்றால் சிங்கப்பூரில் கூட்டினாலும் நான்குதான், இந்தியாவில் கூட்டினாலும் நான்குதான், அமெரிக்காவில் கூட்டினாலும் நான்குதான். லீக்குவான் அவர்களுடைய பேட்டி பத்திரிகையிலே வந்தது. நான் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற நூலில் கூட இதுபற்றி செய்தி வந்திருக்கிறது. பல பதிப்புகள் கீதையின் மறுபக்கம் வெளிவந்துவிட்டது.

லீக்குவான்யூ சொல்லுகிறார். நான் ஆழ்ந்த மதப்பற்று உடையவன் அல்லன். ஆத்மா பற்றி நீங்கள் பேசினால் ஆத்மா என்றால் என்ன என்று கேட்க விரும்புகிறேன். மனிதனின் உணர்வே ஆத்மா என்றால், உணர்வு என்பது நரம்பு மண்டலத்தைச் சார்ந்ததாயிற்றே. குறையலாம். கூடலாம். நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கு மனிதன் ஆட்படுகின்றான்.

ஆத்மா நிலையான ஒன்று என்றால் ஏன் இந்த மாறுபாடுகள்? ஆத்மா என்ன என்பதை என்னால் விளக்கிக் கூற முடியாது.

ஒரு மனிதனுக்குள்ளே இருந்து இயங்குகின்ற காற்றுப் போன்றது என்று சொல்ல விரும்புகிறீர்களா?அவனது உடல் அழிந்த பிறகு சுழன்று கொண்டேயிருக்கும் என்று கூறுகிறீர்களா?

ஆத்மா வில் எனக்கு நம்பிக்கையே இல்லை என்று லீக்குவான்யூ சொன்னார். எனவே பெரியாருடைய கருத்துகள் உலகளாவிய சிந்தனை உள்ள கருத்துகளாக வந்திருக்கின்றன.

திறந்த மனதோடு சிந்தித்தார்

பெரியாரைப் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டும் என்பதல்ல. கால ஓட்டத்தில் இப்படிப் பட்ட துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் திறந்த மனதோடு சிந்திக்கிறார்கள். அப்படி திறந்தமனதோடு சிந்திக்கின்ற பொழுது அறிவு நாணயத்தோடு சில செய்திகள் சொல்லுகிறார்கள்.

எனவே தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் என்பதிருக்கிறதே, அது சிறந்தது; மிக முக்கியமானது. அதனால் என்ன லாபம்?

நாம் மருந்தை எடுத்துக்கொள்கிறோம். மருந்துகளை டாக்டர் எழுதி கொடுக்கிறார். மருந்து கடைகளில் உள்ள மருந்துகள் எல்லாம் வியாபாரம் ஆக வேண்டாமா? டாக்டரிடம் காருண்யம் காட்டுவதற்காகத்தான் நான் மருந்து சாப்பிடுகிறேன், அதனால்தான் உணவைவிட நான் மருந்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்ல. மருந்தை நாம் எதற்காக சாப்பிடுகிறோம், எதற்காக எடுத்துக்கொள்கிறோம், நம்முடைய நோய் தீர நாம் மருந்து சாப்பிடுகிறோம்.

பெரியார் கண்ட வாழ்வியல் என்பது பெரியாருக்காக அல்ல. நாம் பின்பற்றினால் அதனால் வெற்றி அடைவோம்.

சிறிய செய்திகளில் கூட கவனம்

தந்தை பெரியார் சிக்கனக்காரர். அய்யா அவர்கள் சின்னச் சின்ன செய்திகளில் கூட கவனமாக இருப்பார்கள். பெரியார் திரைப்படத்திலே வந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அய்யாவும், அண்ணாவும் ரயிலுக்குப் புறப்படுகிறார்கள். நேரடியாக ரயிலில் திருச்சிக்குப் போக கரூரில் இறங்கி மீண்டும் டிக்கெட் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். அய்யா அவர்கள் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றிப் பணியாற்றக் கூடியவர் அண்ணா அவர்கள். அய்யா அவர்களிடத்திலே அடக்கமாக இருந்து பழக்கப்பட்டவர்கள்.

சிக்கனக்காரர் ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக திருச்சி செல்ல வேண்டும். அரைமணி நேரம் கரூரில் இறங்கி நிற்க வேண்டும். அண்ணாதுரை! இரண்டு டிக்கெட்டுகள் கரூருக்கு வாங்கி வாருங்கள் என்று அய்யா சொல்லுகிறார். அண்ணா சொல்லுகிறார். அந்த ரயில் திருச்சிக்கு நேராகத்தான் போகிறது. திருச்சிக்கே வாங்கிவிடுவோமே என்று சொல்லுகிறார். அதற்கு பெரியார் சொல்லுகிறார். இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நாம் நேரடியாகப் போனால் ஒரு ரூபாய். கரூருக்கு இறங்கி டிக்கெட் வாங்கினால் 75காசுதான். ஒரு டிக்கெட்டிற்கு நான்கணா குறைவு. நமக்கு இருவருக்கும் சேர்த்து இப்பொழுது எட்டணா மிச்சமாகிறது என்று அய்யா அவர்கள் சொன்னார். ஆகவே, அய்யா அவர்கள் சிக்கனக்காரர். சிக்கனம் என்று சொல்லும் பொழுது அவர்கள் கருமி அல்லர். கஞ்சர் அல்லர். பெரியார் கஞ்சர் என்ற தவறான கருத்தை பரப்பினர். மக்கள் ஆடம்பரமாக வாழாமல் எளிமையாக வாழுங்கள் என்று சொன்னார். அந்த எளிமையை தந்தை பெரியார் அவர்களே பின்பற்றிக் காட்டினார்.

எதிலே சிக்கனம் காட்டக் கூடாதோ

ஆடம்பரம் என்பது என்ன? பெரியார் விளக்கம் சொன்னார். தேவைக்கு மேல் வாழ்வது ஆடம்பரம்; தேவைக்கு ஏற்ப செலவழிப்பது சிக்கனம்; தேவைக்கே செலவழிக்காததற்கு பெயர் கருமித்தனம்.

ஆகவே நீங்கள் சிக்கனக்காரராக இருங்கள். கருமித்தனக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டுச் சொன்னார். மற்றவர்கள் சிந்தனையிலே சிக்கனவாதிகளாக இருக்கிறார்கள். எதிலே சிக்கனம் காட்டக் கூடாதோ அதிலே சிக்கனம் காட்டுகிறார்கள். எதிலே தாராளமாக இருக்க வேண்டுமோ அதிலே தாராளமாக இருப்பதில்லை. மிக அழகாக அறிவுறுத்தினார்கள். அதனால்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர் என்று சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். என்ன மூன்றாவது வரை கூட படிக்காதவரை முதல் பேராசிரியர் என்று சொல்லுகிறார்களே என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

கையெழுத்திற்கு நான்கணா

அந்தப் பேராசிரியருக்கு மாலை நேர வகுப்புகள் இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சந்திப்பார்கள். மணிக்கணக்கிலே அவர்கள். பேசுவார்கள். இதுதான் மக்களை சீர்திருத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் சொன்னார்கள். ஒரு நல்ல வாழ்க்கையை மக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். என்று சொன்னார். எளிமையை வற்புறுத்தி சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்.

கையெழுத்து போடுவதற்குக் கூட தந்தை பெரியார் அவர்கள் நான்கணா கேட்டு வாங்கினார். அய்யா அவர்களுடைய நாணயத்தைப் பாருங்கள். நீங்கள் என்னுடைய புத்தகம் ஒன்றை வாங்கி வந்திருக்கிறீர்கள். ஆகவே கையெழுத்துப் போடுவதற்கு எனக்கு நான்கணா தேவையில்லை என்று சொன்னார்.

அதைவிட ஃபோட்டோ எடுத்துக்கொண்டால் கூட அய்ந்து ரூபாய் என்று வைத்திருந்தார். அப்பொழுது அய்யா அவர்களுடைய செயலாளர் இமயவரம்பன் இருப்பார். நாங்கள் எல்லாம் கூட இருப்போம். கட கட வென்று நண்பர்கள் ஒளிப்படம் எடுப்பார்கள். நாங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லுவார்கள். பக்கத்திலிருந்து பணத்தை வாங்கிக்கொண்டிருப்போம் நாங்கள். பத்து பேர் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள். அவர்கள் சென்ற பிறகு பணத்தை அய்யா அவர்களிடம் கடைசியாகக் கொடுப்போம். பணத்தை கொடுத்தவுடன் அய்யா அவர்கள் எண்ணிப்பார்ப்பார்.

எண்ணிப்பார்க்க வேண்டும்

யார் பணம் கொடுத்தாலும் எண்ணிப்பார்க்க வேண்டும். வாழ்வியல் சிந்தனையில் கூட நான் எழுதியிருக்கின்றேன். கருத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும், காசையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்க்காமல், அப்படியே வைக்காமல் அய்யா அவர்கள் கொஞ்சம் கூட கூச்சமோ சங்கடமோ படாமல் எண்ணிப் பார்ப்பார்.

ஒருவரிடம் பணம் வாங்குவதை விட்டுவிட்டீர்களே, சரியாக நீங்கள் வாங்கவில்லையா என்று கேட்டார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கூட்டம் அதிகம்.

அடுத்து அய்யா அவர்கள் சொன்னார். பல்பு பத்து தடவை எரிந்ததே! (அய்யா அவர்கள் எப்படிக் கணக்கிட்டிருக்கிறார்கள் பாருங்கள். இப்பொழுது வேறுவிதமான கேமரா வந்தாகிவிட்டது). பத்து தடவை பல்பு எரிந்திருக்கிறது. ஒன்பதற்குத் தானே நீங்கள் பணம் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லுவார்.

தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு சிக்கனமாக சேர்த்த பொருள் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் சொன்னதைப் போல, அருட்கொடையாக மக்களுக்கே கொடுத்து விட்டுச் சென்றார். தனது குடும்பத்திற்கு என்று அவர்கள் எதையும் வைக்கவில்லை.

பெரியாரின் அறக்கட்டளை

அனைத்து சொத்துகளையும் அறக்கட்டளையாக்கினார். அதன் விளைவுதான் இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாக உருவாகியிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிக்கனம் மருத்துவமனைகளாக உருவெடுத்தி ருக்கின்றன. 75 ஆண்டுகளை கொண்டாடக் கூடிய விடுதலை நாளேடு உலகில் ஒரே பகுத்தறிவு தினசரி நாளேடாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

எனவே பெரியார் கண்ட வாழ்வியல் என்பதிருக்கிறதே, ஆடம்பரமற்று நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வாழுங்கள்; சேமியுங்கள் என்று சொல்லுவார்கள்.


-------------------தொடரும்.... “விடுதலை” 1-1-2010


1.1.10

2010ஆம் ஆண்டை செழுமைப்படுத்துவோம்!



ஒவ்வொரு நாளும் புது நாள் தான்- புதுப்பிறப்புதான். இதில் ஆண்டுப் பிறப்பு என்பதை ஒரு வரவு -செலவு கணக்காகக் கொண்டு சிந்திப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டில் உலகளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் நடைபெற்ற நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்ப்பதன் மூலம் புத்தாண்டின் போக்கு எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடலாம்.

உலகெங்கும் வன்முறைப் போக்கு தலைவிரித்தாடியுள்ளது. அதுவும் மதங்களின் பெயரால் அது நடந்திருப்பது - மதத்தைப் பற்றிய கணிப்பில், நம்பிக்கையில் மறுபரிசீலனையை ஏற்படுத்துவதற்குப் பயன்பட வேண்டும். அடிப்படைவாதம் என்கிற போக்கு அபாயகரமானது என்பதை மக்கள் நேரிடையாகவே அனுபவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும், பாலஸ்தீனத்தின்மீதும் என்ன நடந்தன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தலைக்கொழுப்பேறி, அந்த நாட்டின் மண்ணுக்குரிய பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததோடு அல்லாமல், பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை உயிரை மட்டும் அனுமதித்து சித்திரவதை செய்து கொண்டு இருக்கிறது. மும்பையில் தாஜ் ஓட்டலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் சகித்துக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். பொருளாதாரத்தில் வளர வேண்டிய இந்த பாகிஸ்தான் நாடு ஏன் இந்த வம்பு தும்புகளில் தலையை நீட்டுகிறது என்று தெரியவில்லை. பாகிஸ்தானுக்குள்ளும் மதத்தின் பெயரைச் சொல்லி அன்றாடக் கலவரங்கள்!

இந்தியாவிலோ மாலேகாவ் குண்டு வெடிப்பு பல அதிர்ச்சித் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள்; இந்துத்துவாவின் கொடிய கரங்கள் இந்திய இராணுவம் வரை உறை போட்டு ஊடுருவியிருக்கிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு! இந்து ராஷ்டிரம் அமைக்க திட்டம்; இஸ்ரேலின் துணையோடு அதை முடிப்பது வரை திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆபத்தான பேர் வழிகளை மிக சாமர்த்தியமான முறையில் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிய உளவுத்துறை அதிகாரி ஹேமந்த்கார்க்கரே படுகொலை செய்யப்பட்டது எப்படி? அதில் சதி இருக்கிறது என்கிற சந்தேகம் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்திய அமைச்சர் அப்துல்ரகுமான் அந்துலேக்கே ஏற்பட்டது என்றால் சாதாரணமா? இந்துத்துவா சதிப் பின்னல் இந்தியாவில் பலமாக இருக்கிறது என்று எண்ணுவதற்குச் சரியான காரணங்கள் இருக்கின்றன.

இவ்வளவையும் தாண்டி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதவாத சக்திகள் மண்ணைக் கவ்வின என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மதவாத சக்திகளால் ராமன் என்ற கற்பனை இதிகாசப் பாத்திரத்தைக் காட்டி முடக்கப்பட்டு இருப்பது வெட்கித் தலைகுனியத் தக்கதாகும். 2009 இல் ஏற்பட்ட கொடுமைக்கு 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுந்து பழி தீர்க்க வேண்டும் என்ற சூளுரையை இந்நாளில் எடுத்துக் கொள்வோம்!

தந்தை பெரியார் அவர்கள் காண விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கனவு - 2010 இல் நனவாகும் என்பதில் அய்யமில்லை. 2010 இல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவது தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சித் திசையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

2009 இல் ஒரு முக்கிய தீர்ப்பு - பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்படும் எந்த மதக் கோயில்களையும், சின்னங்களையும் இடித்துத் தள்ள வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பாகும்.

கழகத் தோழர்கள் இத்தகு கோயில்களை அடையாளம் கண்டு மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் மக்கள் மத்தியில் மத மாச்சரியங்களை உண்டு பண்ணும் அடையாளங்கள் இல்லாமல் போகும்.

2009_இல் சாமியார், கோயில் அர்ச்சகர்களின் காலித்தனங்கள் பக்தியுள்ள மக்களையும் விழிப்புறச் செய்துள்ளன.

காவல்துறையில் ஒரு தனிப் பிரிவையே ஏற்படுத்தி சாமியார்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து உடனுக்குடன் உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக ஆக்கப்பட்டு வருகின்றன. இதில் காவல்துறை சரியான கண்காணிப்புத் தேவை; கவனத்துடன் செயலாற்றி குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது.

யாராகவிருந்தாலும், சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டை அரிமா நோக்காகக் கண்டு 2010ஆம் ஆண்டைச் செழுமைப்படுத்துவோமாக!


--------------------"விடுதலை” தலையங்கம் 1-1-2010

தமிழ் இசை விழா ஒரு பார்வை


தமிழிசை?

இது ஓர் இசை விழா பருவம்; சென்னையில் எங்கு பார்த்தாலும் இசை நிகழ்ச்சிகள் அடைமழையாகக் கொட்டுகின்றன.

இதுகுறித்து தினமணி (31.12.2009, பக்கம் 2) என்ன எழுதுகிறது?

தமிழ் இசை விழா என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏன் இத்தனை தீட்சிதர்களும், வாசுதேவாச்சாரிகளும், புரந்தரதாஸர்களும்? நடத்துகிறவர்கள் நடத்துகிறார்கள். பாடுகிறவர்கள் பாடினால்தானே? இப்படி விமர்சனம் செய்வது தினமணி- கவனம் இருக்கட்டும்; சென்னை ராணி சீதை மன்றத்தில் திங்களன்று நடந்த, இசை நிகழ்ச்சி பற்றிதான் தினமணி இப்படி விமர்சித்திருக்கிறது பானை சோற்றுக்கான ஒரு பருக்கையின் பதம் இது. நடப்பது தமிழிசைதானா என்று நாம் வினா எழுப்பினால், இவாளுக்கு வேறு வேலையே இல்லை. கட்டிய வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவதுதான் இவாளின் பிழைப்பு என்று எரிச்சலைக் கக்குவார்கள்.

சொல்லுவது தினமணி ஆயிற்றே! இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? தினமணிக்கே பொறுக்க முடியவில்லையென்றால், தலைநகரில் நடப்பவை தமிழிசை விழா என்ற முகமூடியில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகள் தாம் என்பதில் அய்யம் என்ன?

இவ்வளவுக்கும் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் மும்மூர்த்திகள் தியாகையர் (1767_1847), சியாமா சாஸ்திரி (1762_1827), முத்துசாமி தீட்சிதர் (1776_1835) இவர்களுக்கு முன் கீர்த்தனைகளைச் சமைத்துத் தந்தவர்கள். தமிழ் மும்மூர்த்திகள்தாம். அருணாசலக்கவிராயர் (1712_1779) சீர்காழி முத்துத்தாண்டவர் (1525_1600) தில்லை விடங்கன் மாரிமுத்தாபிள்ளை (1712_1787) இவர்களும் பக்திப் பாடல்களைப் பாடியவர்கள்தாம்!

என்ன வேறுபாடு? பார்ப்பனர்கள் பாடியது எல்லாம் தெலுங்கில்; தமிழர்கள் பாடியதெல்லாம் தமிழில்!

தமிழ், தமிழர் என்றாலே பார்ப்பனர்களுக்கு வேப்பங்காய்தானே! அதனால்தான் தமிழிசை விழா என்றாலும், ஆங்கே தமிழைத் தவிர்த்து மற்ற மொழிப் பாடல்களின் தூக்கல்!

ஒரு நாள் குமாரசாமி கடவுளே வந்து முத்துசாமி தீட்சிதர்வாள் வாயில் கற்கண்டு போட்டுவிட்டு, மயில் ஏறி மறைந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகள் தமிழ் மும்மூர்த்திகளுக்குக் கிடையாதே! இவ்வளவுக்கும் தமிழ் மும்மூர்த்திகள் ராமா, கந்தா என்று கீர்த்தனைகள் பாடியவர்கள்தாம் என்றாலும், அவாளுக்கு உள்ள மரியாதை இவாளுக்கு இல்லை இசை உலகில். (ஆரியர் _ திராவிடர் எங்கே இருக்கிறது என்பவர்களுக்கு இது அர்ப்பணம்).

நடத்துகிறவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்று தினமணி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அழைக்கும் போதே கறாராகக் கூறக் கூடாதா?

திருவையாறு தியாகையர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி விநாயகரே என்ற தமிழ்ப் பாடலைப் பாடினார் என்பதற்காக சந்நிதானம் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டுக் கழித்ததற்குப் பிறகுதான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடினார் என்பதை மய்யப்படுத்தி கலைஞர் அவர்கள் தீட்டாயிடுத்து (மு.க. என்ற பெயரில்) குடிஅரசு இதழில் (9.2.1946, பக்கம் 7) எழுதினாரே அந்த நிலை அவ்வளவு பச்சையாக இன்று இல்லாதிருக்கலாம். நடப்பவற்றைப் பார்க்கும்பொழுது பாம்புகள் அந்த நஞ்சைக் கன்னத்தில் அடக்கித்தான் வைத்திருக்கின்றன என்பதில் மட்டும் மாற்றமில்லையே! -

--------------------மயிலாடன் அவர்கள் 1-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பெரியாருக்கும், மற்றத் தலைவர்களுக்கும், இருக்கிற வேறுபாடு என்ன?

பாராட்டுக்கு கூச்சப்பட்டார் கடமையை செய்ய வெட்கப்படக் கூடாது என்று சொன்னார்
தந்தை பெரியார் கருத்தை மேற்கோள் காட்டி தமிழர் தலைவர் உரை

பாராட்டுக்கு கூச்சப்பட்டார். கடமையை செய்யும் பொழுது வெட்கப்படக் கூடாது என்று சொன்னார் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் என்ன சொன்னாரோ....

தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டும் பொழுது என்ன சொன்னாரோ அதையே நான் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய அறிவு ஆசானின் பாடம்தான் எனக்கு எப்பொழுதும். அய்யா சொன்னார். இங்கே என்னைப் பாராட்டிப் பேசினார்கள்.

வேறொன்றும் தண்டனை வேண்டாம். மேடையில் ஒருவனை உட்கார வைத்துப் புகழ்வது இருக்கிறதே அதுதான் மிகப்பெரிய தண்டனை என்னைப் பொறுத்த வரையிலே. என்னைத் தாக்கினால் எனக்கு உற்சாகம் வரும். என்னைப் புகழ்ந்தால் எனக்கு வெட்கம் வருமே தவிர அதற்கு மேலே போக முடியாது என்று சொன்னார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலேதான் நீங்கள் பாராட்டிச் சொல்லும்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தைத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

இங்கே பேசியவர்கள் ஒரே சிந்தனையோடுதான் பேசினார்கள். கவிஞர் நம்முடைய அன்பழகனும் ஒரே சிந்தனையோடுதான் கருத்துகளை எடுத்துச் சொன்னார்.

வெட்கத்தினால் கஷ்டப்பட்டதில்லை

தந்தை பெரியார் சொன்னார். பாரம் சுமக்கும் பொழுது மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர (மக்களுக்கு எளிமையான முறையிலே புரியும்படி சொன்னார்) வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இது வாழ்வியல் சிந்தனையிலே மிக முக்கியமானவை.

நண்பர்கள் வருகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருகிறார். எதிரே தன்னுடைய நண்பர் வந்துவிட்டார். உடனே என்ன செய்வார்? தான் தூக்கி வந்த குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து இதை பிடியம்மா என்று சொல்லி கொடுத்துவிடுவார். பல ஆண்கள் அவசரமாக இப்படிக் கொடுத்து விடுவார்கள்.

கடமையை செய்யும்பொழுது

அய்யா அவர்களைப் பொறுத்தவரையிலே கடமையை செய்யும் பொழுது வாழ்க்கையிலே வெட்கப்படக் கூடாது என்று சொல்லுவார்.

கடமையை செய்யும்பொழுது வெட்கப்படத் தேவையில்லை என்று கருதி ஒரு புது உலகை அவர்கள் உருவாக்கிக்காட்டினார்கள். அந்த புது உலகு சாதாரணமான உலகு அல்ல. அதிலே சடங்கு சம்பிரதாயம் மூடநம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அறிவு பூர்வமான சிந்தனையை உருவாக்க வேண்டும்.

நம்முடைய நாட்டிலே சடங்குகளுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் உண்டா? இல்லை.

வேடிக்கையாக ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன். ஒரு சாமியார் ஒரு மடத்தில் இருந்தார். உங்களுக்கெல்லாம் தெரியும் சாமியார்களைப் பற்றி. சாதாரண ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு இருப்பார். இரண்டை வைத்திருப்பார்கள். ஒன்றை கட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னொரு துண்டை காய வைத்திருப்பார். மாற்றி மாற்றி கட்டிக்கொள்வார். சாமியாருக்கு எலித்தொல்லை

சாமியாருக்கு எலித்தொல்லை. அதற்காக ஒரு பூனையை கொண்டு வந்தால் பரவாயில்லை என்று நினைத்தார். சாமியாருடைய துண்டை, எலி அடிக்கடி இழுத்துக்கொணடு போய் விடுகிறது என்பதைக் கண்டார். தன்னுடைய சீடர் ஒருவரைப் பிடித்து அப்பா எப்படியாவது ஒரு பூனையைக் கொண்டு வா என்று கேட்டார். பூனை துணியைக் கொண்டு போவது தடுத்து விடலாம். ஆகவே பூனையை வளர்க்கலாம் என்று சொன்னார். பூனை பகலில் வந்தது. பகலில் பூனையைக் கட்டி வைத்தார். மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் என்பதற்காக. இரவில் எலியைப் பிடிக்க பூனையை அவிழ்த்து விட்டார்.

அதே மாதிரி அந்தப் பூனை இரவிலே எலியைப் பிடித்து விட்டது. சாமியாருக்குத் தொல்லைகள் குறைந்தது. தினம் அந்தப் பூனைக்கு உணவு கொடுத்துவிட்டு மாலை நேரம் ஆனால் அவிழ்த்து விடுவார். இந்த மாதிரி நிலை இருந்தது. குருவும் செத்துப் போனார். பூனையும் செத்துப் போய்விட்டது. அடுத்தபடியாக இன்னொரு சீடரும் வந்து விட்டார்.

பூனையால்தான் எல்லாமே

எல்லோரும் சேர்ந்தார்கள். நம்முடைய குருநாதர் பூனையை வைத்துக்கொண்டுதான் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

எனவே பூனையைத் தேடிப்பிடித்து கட்டினால் தான், மந்திரம் சொல்ல முடியும் என்று முடிவெடுத்தார்கள். செத்துப் போன பூனைக்குப் பதிலாக இன்னொரு பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான், மந்திரம் சொல்ல முடியும் என்று வந்த சாமியாரும் மற்றவர்களும் சொன்னார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்புதான் அந்தப் பூனை இருக்கும். எனவே இன்னொரு பூனையை கொண்டுவந்தார்கள். இதுதான் சடங்கினுடைய வரலாறு.

முதலில் தொடங்கிய பொழுது ஒரு காரணம் உண்டு. ஆனால் அதற்குப் பிறகு அது தொடர்ந்தது என்றால் அதுதான் மூடநம்பிக்கை. நமது வீடுகளில் தமிழ்நாட்டில் உள்ள வீடுகளின் உயரங்களைப் பார்த்தீர்களேயானால் குறைவு. பழைய வீடுகளைப் பார்த்தாலே தெரியும். வாசல்படியே குறுகலாக இருக்கும். நாம் யாரையாவது விருந்தினரை அழைத்தால் அவர்களிடம் சொல்லுவோம்.

அய்யா பார்த்து வாருங்கள். தலையில் இடித்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லுவோம். பிள்ளை பரிட்சைக்கு அவசரமாகப் புறப்படுகிறது. அப்படி புறப்படுகிற நேரத்தில் திடீரென்று முட்டிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டிலே இருக்கிறவர்கள், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து தம்பி என்னவோ தெரிவில்லை. தேர்வுக்குப் போகும்பொழுதே தடுக்கிறது. ஆகவே உட்கார் ஒரு குவளை தண்ணீர்குடி என்று அச்சத்தை உருவாக்கினவுடனே அவர்களுக்கே புரியவில்லை. என்னமோ தெரியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

மாணவன் தேர்வுக்குப் போகிறான். தேர்வுத் தாள் வருகிறது. தேர்வுத் தாளும் என்னவோ தெரியவில்லை, விடையும் என்னமோ தெரியவில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்கள்தான் பளிச்சென்று சொன்னார். என்னமோ தெரியவில்லை என்று சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?

இவனோ 6அடி உயரம், வாசல் காலோ 5 அடி உயரம். இவன் குனிந்து போனால் தான் வாசல்கால் இடிக்காமல் செல்ல முடியும்.

வாசல்காலை 7 அடி வை எப்படி முட்டுகிறது என்று பார்ப்போம். என்னவோ தெரியவில்லை என்று ஆராய்ச்சி பண்ணலாம்.

சிறு செய்திகளில் கூட ஆகவே சிறு செய்திகளில் கூட மனிதன் மூடநம்பிக்கை அற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். அறிவுப் பூர்வமாக மக்கள் சிந்திக்க வேண்டும் என்பது பெரியார் கண்ட வாழ்வியலிலே முக்கியமானது.

நம்பிக்கைதான் மனிதனை உயர்த்தும் என்ற எண்ணத்தை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கி மேலே கொண்டு போனார்கள். பெரியாருக்கும், மற்றத் தலைவர்களுக்கும், இருக்கிற வேறுபாடு என்ன? காலம் காலமாக ஜாதித் தத்துவம் மனிதர்களைப் பிரித்து வைத்தது. ஜாதிக்கு என்ன ஆதாரம் சொன்னான். இது கடவுளால் உண்டாக்கப்பட்டது. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மூடநம்பிக்கைகள் எப்படி ஊடுருவின?

ஆத்மா கூடுவிட்டு கூடு போகிறது என்று சொல்லுகிறார்கள். கர்ம வினைப்பயன் நீ ஏன் கீழ் ஜாதியாக இருக்கிறாய்? உழைப்பதற்கு ஒரு பிரிவினர். அதனுடைய பலனை அனுபவிப்பவர்கள் இன்னொரு பிரிவினர்.

அய்யா அவர்கள் வாழ்வியலை எப்படிப் பார்த்தார்கள் என்று சொன்னால் ஒருவன் எஜமானன், இன்னொருவன் அடிமை என்று இருக்கக் கூடாது. மிகப்பெரும்பாலோர் சுரண்டப்படக் கூடியவர்கள்.

மூடநம்பிக்கை கருத்துகள் சமுதாயத்தில் வளர்ந்ததினாலே எப்படிப்பட்ட சிந்தனைகள் ஊடுருவின, பண்பாட்டுப் படைஎடுப்பு காரணமாக நம்முடைய தலைவிதி அவ்வளவுதான் அன்றைக்கு அழுத்தி எழுதியவன் தலை எழுத்தை அழித்தா எழுத முடியும். எவன் உன் தலையில் எழுதியவன்? அவனை நான் தேடுகிறேன் என்று ரொம்பத் துணிச்சலாக கருத்துகளை சொல்லி பேசக்கூடியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

கடுமையாக உழைக்க வேண்டும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர். (குறள்_620)

திருக்குறளில் தலைவிதி தத்துவம் மட்டுமல்ல. உழைப்பு வேண்டும். வாழ்க்கை என்று சொன்னால சோம்பல் இருக்கக் கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும்

--------------------தொடரும் ......”விடுதலை” 31-12-2009