Search This Blog

21.7.14

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்? - பெரியார்


தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந் நியாசம் இருக்குமென்று எதிர் பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


தமிழ் பாஷை


நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங் கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.
  

என்னை என் வீட்டார் படிக்கவைக்கக் கருதிய தெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்க மாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போது மென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட் டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பிவிட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டு மென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்பு வார்.  


அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழை யறக் கூட எழுத முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத் துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.


பொதுவாகவே பள்ளிக் கூடங்களி லும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்பந்த முண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேச வேண்டியவனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும்போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும் படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசு வதைக்கொண்டு திருப்தி அடை யுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.


தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்


தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.


தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது. அது மூடப் பற்று - மூடபக்தியே ஆகும். குணத்திற் காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக் காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்றுவைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.


எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார் களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...


உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரி டத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன் களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும் வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக் கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக்கும் - பிள்ளைக் கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்து விட்டால் பிள்ளையைப்பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்து போனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசி களில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண்பிள்ளை இறந்து போனால் படுவ தில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச் சியோ, இன் பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுப விப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ் வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என் றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர் பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந் தால் அதனால் நஷ்டமேற்படும் அளவை யும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.


அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க் கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.


நாடும் - காலமும்


ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு வித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்துவருவது டன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பது முண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.


ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடிய தாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.


இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப் படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என் பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித் துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன் னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத் தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக் கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன் னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக் கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.


பழங்காலம்


பழம் பெரியார்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர் களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற்போக் கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக் கிறோம்.  இனியும் எவ்வளவோ காரியங் களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.


முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்த தாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறை கூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந் தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என் கிறேன்.


இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமை யர்கள் கேட்கலாம்.  பழங் காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச்சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன்களும் உடைய னவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்; பூகம்பத்தால் மறைந் தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப் போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்துதான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப் பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான் மையான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணாக் கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர் களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.


தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன்படுத்துவதுமில்லை.  உதாரண மாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற் றுக்கு சோச்சி என்றும், படுத்துக் கொள்வதற்கு சாச்சி என்றும் சொல் லிக்கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்து கிறோம்?  அது போலவே பாஷைகள் காலத் துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்க படி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.


தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத் தில் இல்லாத பல காரியங்கள் அரசி யல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இருக்கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப் பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விட லாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப் பதும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.


தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற் பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ் வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.



                   ----------------21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு- "குடிஅரசு" - சொற்பொழிவு - 06.08.1939

4 comments:

தமிழ் ஓவியா said...


திண்டிவனம்




விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே 80 ஆண்டு களாக நடைபெறும் ஒரே நாத்திக நாளேடு விடுதலை விடுதலை விடுதலையே! அதில் 52 ஆண்டுகள் ஆசிரியராகத் தொடர்ந்து, பணியாற்றி கின்னஸ் சாதனை பொறித்தவரும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே!

இன்றைக்குத் தமிழ் நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை மட்டுமே குறிக்கிறது என் றால் அதன் வீரியத்துக் குள்ளிருக்கும் வித்து மிக வும் முக்கியமானது!

விடுதலை தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனை களை, மனிதநேயத் தத்து வங்களை ஆசிரியராக இருந்து தமிழ்நாட்டு மக் களுக்கு அறிவு கொளுத்தி வருகிறது. அந்த வகையில் விடுதலையின் ஆசிரி யரை ஆசிரியர் என்று விளிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

சமுதாயத்தைப் புரட் டிப் போட்ட பணியிலும், சமூக நீதிக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்வதிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே

ஆசிரியர் அவர்களின் 50 ஆண்டு விடுதலை பணியையொட்டி 50 ஆயி ரம் விடுதலை சந்தாக் களைத் திரட்டித் தந்து சாதனை படைத்த கருஞ்சட்டைத் தோழர்கள், இப்பொழுது 12 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணி யில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார் பில் நடத்தப்படும் களப் பணி பட்டறைகளில் இது. முக்கிய கருத்தாக எடுத் துக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (19.7.2014) திண்டிவனத்தில் நடை பெற்ற களப் பணிப்பட்ட றையில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் ஒரு கருத்தை முன் மொழிந்தார்.

கழகப் பொறுப்பாளர் கள் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு நான்கு சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கும் யோச னையை முன் வைத்தார்.

எதிலும் முன் குரல் கொடுக்கும் திண்டிவனம் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு க.மு. தாஸ் அவர்கள் அடுத்த கணமே தங்கள் குடும்பத்தின் சார் பில் இதோ நான்கு ஆண்டு சந்தா என்று கூறி அதற்கான தொகை ரூ.4,800அய் கழகப் பொருளாளரிடம் அளித் துப் பலத்த கரவொலியை ஒருங்கே பெற்றார்.

திண்டிவனம் முன் மொழிந்து விட்டது; திரா விடர் கழகத் தோழர்களே, இதனை தமிழ்நாடு முழு வதும் செயல்படுத்தலாம் அல்லவா!
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84383.html#ixzz383nX7CIC

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல் அமைச்சரும், கலைஞரும், தமிழக அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல்! முழு மனதுடன் திராவிடர் கழகம் வரவேற்கிறது


சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல் அமைச்சரும், கலைஞரும், தமிழக அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல்!
முழு மனதுடன் திராவிடர் கழகம் வரவேற்கிறது

சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகரங்களில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இந்தி வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. அரசின் ஆணையை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதியன்று மத்திய அரசு அலுவல கங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆகஸ்டு 7 முதல் 13 முடிய இந்தியா முழுமையும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் என்ற ஒன்றைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சமஸ்கிருதத்துக்கு மட்டும் முக்கியம் ஏன்?

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுள் சமஸ்கிருதமும் ஒன்று. 22 மொழிகளில் மிக மிகக் குறைவானவர் பேசுவதாக ஒரு புள்ளி விவரம் உள்ள செத்த மொழி இது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத நூற்றுக்கணக்கான மொழிகளும் இந்தியத் துணைக் கண்டத்தில் உண்டு.

இந்த நிலையில் கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிக்கேற்ப செத்து ஒழிந்து சுண்ணாம்பாகிப் போன - மக்களால் பேசப்படாத சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கும் வேண்டாத ஒரு வேலையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஈடுபட்டு வருகிறது.

கலாச்சாரத் திணிப்பே!

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு ஆரிய - பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் குறியீடாகும். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ். வேத நூல் என்று கருதப்படுகிற Bunch of Thoughts எனும் நூலில் மிக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். 1937இல் சென்னை மாநிலத்தில் பிரதம அமைச்சராகவிருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும் பொழுதும் சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று அதன் இரகசியத்தைக் கக்கி விட்டார்! அதே போல், சத்தியமூர்த்தி அய்யரும் சமஸ் கிருதம் கற்கவே, இந்தியை முதல் கட்டமாகப் படிக்க வேண்டும் என்றார்.

ஓராண்டு முழுவதும் சமஸ்கிருதம் - நினைவிருக்கிறதா?

அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி இந்தியா முழுமையும் ஓராண்டு முழுவதும் சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து, அதற்கு ஏராளமான அரசு நிதியை ஒதுக்கினார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திட சமஸ்கிருதம்

இன்னும் சொல்லப் போனால் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒரு கால கட்டத்தில் வைத்திருந்தனர் என்றால் அவர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் தலையிட, அன்றைய நீதிக் கட்சி ஆட்சியில் பிரதமராகவிருந்த பனகல் அரசர் அந்த நிபந்தனையை ஒழித்துக் கட்டினார். அந்த நிபந்தனை மட்டும் தொடர்ந்திருந்தால் பார்ப்பனர் அல்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் மருத்துவர்களாக ஆகி இருக்க முடியுமா என்பதை நன்றியுணர்வுடன் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியையெல்லாம் புரிந்து கொண்டால் தான் இப்பொழுது மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்தி வாரம் கொண்டாடக் கட்டளையிட்டதன் சூழ்ச்சியும், மர்மமும், நோக்கமும் எத்தகையவை என்பது விளங்கி விடும்.

முதல் அமைச்சரின் எதிர்ப்பு -வரவேற்கத்தக்கது

தமிழக முதல் அமைச்சரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பாராட்டத்தக்கதும் ஆகும்.

திமுகவின் தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் தொடக்கத்திலேயே எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபியைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்துள்ளனர்; கண்டனங் களையும் வெளிப்படுத்தினர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏன்?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் இந்தவுணர்வு வெடித்துக் கிளம்பியிருப்பதற்குக் காரணம் - இது தந்தை பெரியாரால் உழுது பயிரிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட மண் - திராவிடர் இயக்கம் வீறு நடைபோட்ட பூமி! அதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆகஸ்டு ஒன்றில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு தன் முடிவைக் கைவிடாவிட்டால் வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அலுவலகத்தின்முன் கண்டன ஆர்ப்பாட்டம்! கண்டன ஆர்ப்பாட்டம்!! நடத்தப்படும். சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை ஆகிய பெரு நகரங்களில் ஒரு மத்திய அரசு அலுவலக முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் சாஸ்திரி பவனில் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் சாஸ்திரிபவன் முன்னிலையில் நடை பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நானே தலைமையேற்பேன்.

திருச்சியில் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு, மதுரையில் அமைப்புச் செயலாளர் வே. செல்வம், கோவையில் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகிப்பர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் இனமான, மொழி மான உணர்வுடன் கட்சி களும், அன்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் அழைக்கின்றோம்.

தோழர்களே முனைவீர்!

தோழர்களே, இந்தப் போராட்டத்தை உடனே நல்ல அளவு விளம்பரம் செய்யுங்கள்; ஆர்.எஸ்.எஸின் அஜண் டாவில் உள்ள ஒவ்வொன்றையும் செயல்படுத்தமுனையும் மத்திய பிஜேபி அரசின் போக்கை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவும் இதனை ஒரு வாய்ப்பாக கருதுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



சென்னை
20.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84384.html#ixzz383no8WRG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


சிவபெருமான்

சிவபெருமான் சந்தி ரனை முடியில் தரித்த புனைக் கதையை இன் றைய தினமணி ஏடு வர லாறு என்று எழுதி யுள்ளது.

சரி இருக்கட்டும். சந்திரன் தன் குருவான வியாழ பகவானின் மனைவி தாரையைக் கற்பழித்த தால் முனிவரின் சாபத்தால் கலை குறைந்தது (கிரகணம்) என்பதைத் தினமணி மறைத்தது ஏனோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/84385.html#ixzz383oYXMUj