Search This Blog

24.7.14

இந்தியப் பொருளாதாரம் - பெரியார்



    சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசாய் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்கு தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம் காசு புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.

    ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில்காரர்கள், கூலியாள்கள், ஏவலாளர்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப்பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக எதுவும் கொடுப்பதில்லை. எனக்குத் தெரிய 40, 50 வருஷங்களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப்பவன், தோட்டங்களுக்கு கலப்பை ஏர் செய்து கொடுப்பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன். சுவர் வைப்பவன் முதலியவர்கள் எல்லோரும் தானியம்தான் வாங்கிக் கொள்ளுவார்கள். சில ஆட்களுக்கு வருஷத்திற்கு இவ்வளவு என்று இருக்கும்.

    பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றத்தைத் தவிர, சாதாரண ஜனங்கள் பணமாய் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

    பெருத்த மிராசுதாரர்களிடமும் அரசாங்கப் பழக்கம் முதலியவைகளிலும் பணம் புழங்கினதனாலும், அதுவும் மிகச்சிறு நாணயமாகத்தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டு பாஷை அல்ல, நாணயமுமல்ல, சின்னப்பணம் அதாவது ரூபாய் 1-க்கு 10 - கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வம் உள்ளவனையும், பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்னும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவைகளிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக்கணக்கில்தான் கணக்கு சொல்லுவதாகும்.

    சமீபகாலம்வரை கூட மலையாளத்தில் திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் சிவில் கோர்ட்டில் ரூபாய் என்று பிராது போடுவதில்லை. ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும், அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக்கையைக் காட்டித்தான் பிராதுபோடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.

    ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையைவிட, சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால் பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்லமாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்தது அல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

    இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால், வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலை இல்லை. இதுபோலவே இதற்கு முன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும் முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
    ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பறா உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறுபல காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளின் முக்கியமானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.

    மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் எவ்வளவு விளைந்தாலும் அநேகமாய் எல்லாவற்றையும் மேல்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத்திலும் வேறு எப்பாகத்திலும் காணமுடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால் இந்த உலகம் உள்ளவரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும், குடிகளுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், குடியானவனுக்கும் மிராசுதாரனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100-க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவு கூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே, இம்முறைகளும் முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜென்மம் ஆகிய கொள்கைகளும் இந்தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்தியதானாலும், பொன் விளையும், புண்ணிய பூமியானாலும் தபோதனர்கள் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், முனிகள்_ரிஷிகள், மகாத்மாக்கள், பிறந்த நாடானாலும் பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும் தரித்திரமும், கூலியும், இழிவும் பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தர சொந்தமானதேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

    நம்முடைய பொருளாதாரக் கஷ்டமெல்லாம் முதலாவது அநாவசியமான செலவுகளும், அவற்றிற்கும் அதிக செலவுகளுமாகும். இந்திய மக்களில் நூறுக்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அநாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கை யானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்ற வர்களின் சுகபோகத்திற்கும் செலவு செய்யப்படுவதினாலேயே வீணாய் விடுகின்றன.

    இரண்டாவது, சுலபத்தில் ஒருபக்கமாக பொருள்களெல்லாம் போய்ச் சேரும்படியாகி விடுகின்றன.

    மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும், குறைந்து வரும்படிக்கே செலவாகும்படியான முறைகளே இங்கு வெகுகாலமாய் இருந்து வருகின்றன. அதாவது,

    புத்தியைச் செலவழித்து குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவும் துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணமாகும்.
    சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.

    பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத்தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்கலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம், முதலியவைகளால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்துவிடுவதுடன் சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது.

    இவை மாத்திரமல்லாமல் நாட்டின் பொருளாதார நிலைமை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், யந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருள்களையெல்லாம் மேற்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல் மற்றும் உற்சவம், பூசை ஆகியவைகளுக்கு பண்டு, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும் பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.

    ஆகவே, இந்த மாதிரியாக எல்லாம் எல்லாப் பொருள்களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீரடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதார கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல்நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம்.

    போகயோக்கியங்களை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட, அதாவது 30, 40, 50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததைவிட, அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனையைக் காப்பியடித்து படிப்படியாக உயருகின்றோம். இவையெல்லாம் நமக்குத் தகாதென்றோ குற்றமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுகபோகத்தையும் உயர்த்திக் கொண்டு போகின்றாரோ அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

    மேல்நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு லாபம் அடைகிறான். அதனால் அவர்கள் சுகம் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா; மேல்நாட்டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமேயொழிய வேலை சாமார்த்தியம் அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல்நாட்டார் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாதனங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல்நாட்டுச் செல்வத்தையும், அறிவையும், ஊக்கத்தையும் செலவு செய்து அந்த நிலையடைந்திருக்கின்றான். அப்படிப்பட்டவனைப் பார்த்து வேலை செய்வதிலும், சம்பாதிப்பதிலும் காப்பியடிக்காமல் அதாவது, அதுபோல் நடக்காமல் அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பியடித்து அவனைப்போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

    நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப்போன கைத்தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக, இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டும். கைத்தறியால் வேஷ்டி நெய்ய வேண்டுமென்கின்றார்கள். போராக்குறைக்கு தக்கியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதாரப் பக்தியாகக் குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படுகிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் ராட்டினத்தில் நூல் நூற்றால் கால்ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் 100க்கு 1 அணா அல்லது அதிகமானாலும் 0_-1_-6 அணா கூலிதான் அடையக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக்கூடும்.
    மேல்நாட்டானோ ஒரு ஆள் ஒரு நாளையில் இதைவிடக் குறைந்த நேரத்தில் இதைவிடக் குறைந்த கஷ்டத்தில் இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று தினம் 2 ரூபாய் சம்பாதிக்கிறான். ஆகவே, மேல்நாட்டார் தினம் 2 ரூபாய் சம்பாத்தியத்திற்கும் நம் நாட்டார் தினம் 2 அணா சம்பாதிக்கவும் இதுவும், மற்றும் இதுபோலவே விவசாயத்துறையிலும் வியாபாரத் துறையிலும் உள்ள காரணங்களாகுமே யல்லாமல் வேறு ஒரு காரணமும் அல்ல. சமூகச் சீர்திருத்த சம்பந்தமான விஷயங்களுக்கு நமது பண்டிதர்கள் எப்படி தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக் கால நாகரிகத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம் செய்யப் பார்க்கின்றார்களோ அதுபோலவே நமது தேசியப் பொருளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத் தொழில்களைக் கண்டுபிடித்து அந்தத் துறையில் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.
    ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும் கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக்கொண்ட தலைவர்களுமே காரணமல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது எனது அபிப்பிராயம்.

    சகோதரர்களே! வருஷம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவைகளுக்குச் செலவாவதை மறுக்கின்றீர்களா? பல கோடிக்கணக்கான ரூபாய்கள் சாமி, கோயில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகியவைகளுக்காக அடங்கி முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின்றீர்களா? எனவே, இந்தத் துறைகளில் எல்லாம் புதிய முறை ஆராய்ச்சி முறை மேல்நாட்டு முறை ஆகியவைகளில் கைத்தொழிலும், வியாபாரமும், விவசாயமும் செய்யப்பட்டு குருட்டுப் பழக்கம் மூடநம்பிக்கை சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவைகளிலிருந்து மீண்டுவிட்டோ மானால், நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படி செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள்.

    எனவே, எனக்குக் கொடுத்த விஷயத்தின் தலைப்பில் எனக்குத் தோன்றியதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா? என்று யோசித்துப் பார்த்து உங்கள் மனதிற்குச் சரியென்று தோன்றியதை வைத்துக்கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய் கேட்டுக்கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.

    ----------------------27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லீம் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து தந்தை பெரியார் ஆற்றிய உரை-- "குடிஅரசு" - 18.01.1931

    45 comments:

    தமிழ் ஓவியா said...


    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியல் படிப்பா? உடனே கைவிடுக! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவது ஜனநாயக நெறிமுறையல்ல!

    அரசு எடுத்துக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியல் பாடத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

    அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டப் பிரிவுகள் பற்றிய அறி விக்கையை (PROSPECTUS) ஓய்வு பெற்ற கல்வி அதி காரியும் மாநில பகுத்தறிவாளர் கழகத்துணைத் தலைவரு மான மானமிகு. ம.அழகிரிசாமி அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றது.

    சோதிடப் பாடத்திட்டமாம்!

    ஓர் அதிர்ச்சியான தகவல்! அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பட்டப்படிப்புப் பற்றி (MA-ASTROLOGY) விவரிக்கப்பட்டு இருந்தது. (1) பயிற்சிக் காலம் இரண்டாண்டுகள் (2), கல்வித் தகுதி அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முதலாம் ஆண்டு: தாள் ஒன்று - சோதிடவியலின் அடிப்படை, தாள் 2 - முகூர்த்தம், தாள் 3 - சாதக பலன்களை நிர்ணயித்தல், தாள் 4 - அஷ்டக வர்க்கம், தாள் 5 - அஷ்ட பலம், தாள் 6 - வாஸ்து சாஸ்திரம்

    இரண்டாம் ஆண்டு: தாள் 7 - சாதக பலன்களை நிர்ணயித்தல், தாள் 8 - பிரசன்னம், தாள் 9 - தாஜிசம், தாள் 10 - மேல்நாட்டு முறை சோதிடம், தாள் 11 - சம்ஹிதை, தாள் 12 - ஆய்வேடு மற்றும் வாய்மொழித் தேர்வு

    இதே போல இளங்கலை சோதிடவியல் பாடங்கள் (BA-ASTROLOGY)
    இவற்றைப் பார்க்கும்பொழுது ஒரு புறம் வேதனையும், இன்னொரு புறம் நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றன.

    வானவியல் வேறு - சோதிடம் வேறு!

    அறிவியலை வளர்க்க வேண்டிய ஒரு பல்கலைக் கழகத்தில் மூடத்தனத்தை கற்பிக்கிறார்களே அது சரியானது தானா? என்ற வினா எழுகிறது

    வானவியல் (ASTRONOMY) என்பது வேறு, சோதிட வியல் (ASTROLOGY) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்னது அறிவியல், பின்னது மூடவியல் போலி அறிவியல் ஆகும் (PSEUDO SCIENCE)

    விஞ்ஞானிகள் எதிர்ப்பு

    1975 ஆம் ஆண்டு 18 நோபல் பரிசு பெற்ற விஞ் ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.

    மக்களின் வாழ்க்கைக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப்பூர்வமான ஆதாரமும் கிடையாது.

    சோதிடம் பொது மக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து, பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்த சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)

    அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

    மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A-(h) பிரிவில் அடிப்படைக் கடமைகள் என்பதில் விஞ்ஞான மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் கேள்வி கேட்டு ஆராய்வு போக்கு சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக மூடநம்பிக்கையின் மொத்த வடிவமான சோதிடத்தைச் சொல்லிக் கொடுப்பது சட்ட விரோதம் அல்லவா?

    சோதிடவியலைக் கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் பாடம் இடம் பெற்றிருந்ததை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதாலும், விளக்கத்தாலும் அப்பல்கலைக் கழகங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதனைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் சட்டத்துக்கும், விஞ்ஞானத்துக்கும் விரோதமான சோதிடவியல் பாடத்திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

    அரசின் முடிவை எதிர்பார்த்து அடுத்த கட்ட கழக நடவடிக்கை பிறகு அறிவிக்கப்படும்.



    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்

    சென்னை 24.7.2014

    Read more: http://viduthalai.in/e-paper/84575.html#ixzz38RMn1W1Q

    தமிழ் ஓவியா said...


    அண்ணாநூலகம் படும்பாடு!




    அண்ணா நூற்றாண்டை யொட்டி அண்ணா நினைவு நூலகம் சென்னை கோட்டூர் புரத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப் பட்டதால் அதனை மருத் துவமனையாக மாற்ற முயற்சி செய்தார் தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா - நீதிமன்றத் தடை காரணமாக அம்முயற்சி தடைப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பணி வரன்முறையின்றி அல்லல்படுகின்றனர். வேறு வழியின்றி உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர்.

    Read more: http://viduthalai.in/e-paper/84572.html#ixzz38RMxXvsz

    தமிழ் ஓவியா said...


    விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?



    அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த உரிமை படைத்ததாகும்.

    அவ்வாறு விசாரணை நடத்த உள்ள குழுவினர்க்கு இந்தியாவுக்கு வந்து விசாரணை நடத்திட இந்தியா விசா வழங்கவில்லை என்பது எவ்வளவுப் பெரிய மனிதாபிமானமற்ற முறையற்ற செயல்!

    இனப்படுகொலையாளன் ராஜபக்சே பக்கம்தான் இந்தியா இருக்கிறது என்பதை இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் ஒப்புக் கொள்ளவோ, உணரவோ தவறியவர்கள்கூட இந்தியாவின் இந்த அணுகுமுறை மூலம் துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும்.

    பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், இன்னொரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியும்கூட இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே (Genocide)
    என்று சொன்ன பிறகும் கூட இந்தியா இப்படி நடந்து கொள்வது கண்டனத் திற்குரியதே!

    மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் சுத்த மோசம்; இலங்கை அரசு பக்கம் சார்ந்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குத் துணை போன அரசு; இந்த ஆட்சி போய் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்துக்கு வந்தால், அதுவும் நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும்; ஈழத் தமிழர்கள் வாழ்வில் விடிவெள்ளி முளைக்கும் தமிழக மீனவர்கள் வாழ்வில் புது அத்தியாயம் பூக்கும் என்றெல்லாம் நம் மக்களை நம்பச் செய்ய தொண்டை வறளக் கத்திய வர்கள் இப்பொழு தெல்லாம் தமிழர்கள் மத்தியில் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

    மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கத் தவறி விட்டது இந்தியா என்று குற்றப் பத்திரிகை படித்தவர்கள், இப்பொழுது மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் தடை செய்து விட்டதே - மோடியின் பிஜேபி அரசு, இதற்கு என்ன பரிகாரம்?

    தனக்குத் தானே விசாரணைக் குழு அமைத்து (LLRC) நாட்டில் ஒன்றும் நடந்து விடவில்லை; ஈழத் தமிழர் இப்பொழுது நல வாழ்வில் தான் திளைக் கிறார்கள் என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொண்டது ராஜபக்சே அரசு.

    அய்.நா.வால் அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு விரிவாக விசாரணை செய்து தனது அறிக்கையை அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனிடம் அளித்து விட்டது (13.4.2011).

    ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறிவிட்டார் கொடுங்கோலன் ராஜபக்சே. அய்.நா.வுக்குள்ள அதிகாரம் என்ன? மரியாதைதான் என்ன? மேல் நடவடிக்கைதான் என்ன?

    ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் பட்டியலிட்டு விட்டது அந்தக் குழு இப்பொழுது.

    அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழு - தொடக்கத்திலேயே தடுமாறும் நிலைக்கு ஆளாகி விட்டது.

    ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமானது என்று உலக நாடுகள் அத்தனையும் உணருகின்றன. பல நாடுகள் வெளிப்படையாகக் கூறவும் செய்தன. என்றாலும் இந்தியா மட்டும் கல்லுளி மங்கனாகவே இருந்து வருகிறது.

    இந்தியாவில் நாடாளுமன்றம் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பூகம்பம் வெடித்திருக்க வேண்டாமா?
    நாடாளுமன்றத்தில் என்னென்ன வெல்லாமோ நடந்திருக்கின்றன. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்காதது ஏன்?

    கேரளத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலியக் கப்பல் படையினரால் சுடப்பட்ட பொழுது கொந் தளித்தவர்கள், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி தமிழர் களையும் மனிதநேய வாதிகளையும் அவமதிப்பதாகும்.

    தேசிய ஒருமைப்பாடு பேசும் கட்சியினர்கள் தமிழர் பிரச்சினை என்கிற போது ஒதுங்கிக் கொள்வது ஏன்?

    தமிழ்நாடு சட்டப் பேரவையும் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. விசாரணைக் குழு இந்தியா வருவதற்கு அனுமதி மறுப்பது குறித்து, சட்டப் பேரவையில் தீர்மானம்கூட நிறைவேற்றலாமே!

    எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொடுத்தால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிராகரிக்கப்படும் நிலையில், முதல் அமைச்சரே அந்தக் கடமையை எடுத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றி நல்ல பெயரைச் சம்பாதிக்கலாமே.

    அதன் மூலம் இந்தத் தொடருக்கு ஒரு வகையில் முக்கியத்துவம் கூடக் கிடைக்குமே; செய்வாரா முதல் அமைச்சர்? எங்கே பார்ப்போம்!

    Read more: http://viduthalai.in/page-2/84583.html#ixzz38RNWNhw4

    தமிழ் ஓவியா said...


    பதவி ஆசை


    பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.

    - (விடுதலை, 3.5.1965)

    Read more: http://viduthalai.in/page-2/84581.html#ixzz38RNdhWhb

    தமிழ் ஓவியா said...


    சு.சாமியின் திமிர் பேச்சு


    யாழ்ப்பாணம், ஜூலை 24_ ஈழச்சிக்கல் அங்குள்ள தமிழர்களின் சொந்தப்பிரச்சினை, இதில் எந்த அயல்நாட்டுத்தலையீடும் கூடாது என்ற சு.சாமியின் திமிர் பேச்சிற்கு பதில் கூறும் விதமாக சண்டே அப்சர்வருக்கு பேட்டியளித்த இரா. சம்பந்தன் கூறியதாவது பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றத்தில் இருந்து தப்புவிக்க வைக்கும் பொருட்டு வெளிப்படையாக பேசுகிறார் நீதிக்கு புறம்பாக பேசி நிலமையை மேலும் சீர்குலைக்க வேண்டாம் என்று தனது பேட்டியில் கூறினார். நேற்று இலங்கைக்கு அரசுமுறைப்பயணமாக சென்ற சு.சாமி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ஈழத்தமிழர்கள் பலவித சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் அது அவர்களின் சொந்தப்பிரச் சினைகள். இதில் எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது. அவர்கள் இலங்கை அரசுடன் பேசி தங்களது சிக்கல்களுக்கு தீர்வுகாணவேண்டும் என்றும், இலங்கையில் இனவாதம் எதுவும் கிடையாது அவ்வாறு கூறுவது முன்னாள் தீவிரவாதிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவாக செயல்படும் சில அந்நியச்சக்திகள் பரப்பிவிடும் பொய்ப்பிரச்சாரம், இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு பிறகு பிரிவினைத்தீவிரவாதிகளை வென்று தற்போது இலங்கையில் அமைதியை மேற்கொண்டு வருகிறது, இங்கு நடந்த இனப் படுகொலை என்பது எந்த ஒரு நாடும் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்

    இந்தியா 13-ஆவது சட்டத் திருத்தம் பற்றிக் கூறினாலும் அதை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பு நரேந்திரமோடி தலைமை யினாலான அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது. மேலை நாடுகளில் சில தீவிரவாதச் செயல்களின் ஆதரவாளர்கள் இலங்கைமீது போர்க்குற்றம் சுமத்துவது பொய்யானது என்றும் தனது பேட்டியில் கூறியிருந்தார். இது குறித்து சண்டே அப்சர்வர் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பதிலளித்தபோது

    அதிபர் மகிந்த ராஜபக்சே 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார். சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.

    புதுடில்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சேவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

    அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வேயை சு. சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும்,நார்வே இலங் கையில் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியில் மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது.

    விடுதலைப் புலிகளை அமைதிப்பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது.

    ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப் பட்டாலும், நார்வே, எடுத்த முயற்சிகள் மதிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சு.சாமி தனது பேட்டியின் தொடர்ச்சியாக இலங்கைக்குள் நார்வே நாட்டினரை எந்த ஒரு காரணம் கொண்டும் அனுமதிக்க்கூடாது, அந்த நாட்டினரால் இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பெருத்த பின்னடைவை சந்தித்தது நார்வே தலையீட்டின் போது விடுதலைப்புலிகள் தங்களின் பலத்தை கூட்டிக்கொண்டனர். இலங்கையில் தற்போதுள்ள அமைதி தொடர்வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் நார்வே நாட்டினர் எந்த ஒரு காரணம் கூறிக்கொண்டு வந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்

    Read more: http://viduthalai.in/page-3/84597.html#ixzz38RObQofd

    தமிழ் ஓவியா said...


    ஓவியக் கலைஞர்கள் கவனத்திற்கு...


    திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அணிகளிலும் இருக்கக் கூடியவர்கள், பெரியார் கொள்கையேற்றுச் செயலாற்றும் இயக்க ஆதரவாளர்களில் தொழில் முறை ஓவியர்கள், தொழில்முறை அல்லாத ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள், ஓவிய விரும்பிகள், சுவரெழுத்து / தட்டி விளம்பரப் பணியாளர்கள், கணினி/ வரைகலை தொழில்நுட்ப ஓவியர்கள், கேலிச்சித்திரம் வரைவோர், சிற்பக் கலைஞர்கள், துணி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு ஓவிய ஊட கங்களிலும் பணியாற்றக் கூடியவர்கள் உள்ளிட்டோர் தங்களைக் குறித்த விவரங்களையும், தங்களின் சிறப்புகளையும் தொடர்பு முகவரி, எண் ஆகிய வற்றையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் தத்தமது பகுதிகளில் உள்ள நமது தோழர்களில் மேற் கண்டோரை அடையாளம் கண்டு விவரம் அனுப்பிட வேண்டுகிறோம்.

    மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_7. தொடர்பு எண் : 94442 10999

    Read more: http://viduthalai.in/page-3/84603.html#ixzz38ROvpvBO

    தமிழ் ஓவியா said...


    நிமிர்ந்து உட்கார்ந்தால் நிறைய படிக்கலாம்


    தேர்வு நேரத்தில் அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?

    குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸி ஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம்.

    பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடு வோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறை பாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை. எனவே நன்றாக நிமிர்ந்து உட் கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.

    Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPHM9Hm

    தமிழ் ஓவியா said...

    பள்ளிகளில் தோப்புக்கரணம் தண்டனை ஏன்?: ஆய்வு

    சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள். காது மடல்களைப் பிடித்து தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குமாம்.

    மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

    Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPcPara

    தமிழ் ஓவியா said...


    சர்க்கரை நோயா? காரணம் என்ன?


    சென்னை, ஜூலை 24_ சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்தியர்களின் உணவு முறை குறித்து ஆராய வேண்டும் என சுவீடன் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் கூறினார்.

    தமிழ்நாடு, புதுவை நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் இந்திய நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் சர்வதேசக் கருத்தரங்கமும் சென் னையில் சனிக்கிழமை தொடங்கியது.

    இந்த கருத் தரங்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இதய நோய்கள் ஆராய்ச்சி யாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் பேசியதாவது:

    இந்தியர்களின் உணவுப் பழக்கம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்தியர்கள் அதிக அளவி லான உணவைச் சாப்பிடு கின்றனர்.

    சுவீடன் நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நாங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப் பிடுகிறோம். ஆனால் வெப்ப நாடான இந்தியா விலும் அதிக கலோரிகள் கொண்ட உணவை மக்கள் சாப்பிடுகின்றனர். அதிக கலோரிகள் கொண்ட உணவை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு பாலில் செறிவூட்டப் பட்ட கொழுப்பு இருக் கிறது; எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதோ பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியும், வைட்ட மின் டி உள்ளிட்ட பல் வேறு சத்துகளும் நிறைந் துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

    பால் ஒரு கொழுப் புள்ள பொருளாக மட்டும் பார்க்கப்படாமல், உட லுக்குத் தேவையான சத்துகள் நிறைந்த பொரு ளாகவும் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் யாருக்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு குடும் பத்தின் உணவு முறையை ஆராய வேண்டியது அவசியம்.

    ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோரின் உணவு முறை யை ஆராய்ந்தால், அவர் களுடைய வாரிசுகளுக்கு சர்க்கரை நோய் அல்லது இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என் பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தெரிவித்தார்.

    Read more: http://viduthalai.in/page-5/84582.html#ixzz38RPrKBZp

    தமிழ் ஓவியா said...


    வச்சனந்தி மாலை

    சமஸ்கிருதம் - நம் மொழியை நான்காகப் பிளந்தது!

    சமஸ்கிருத - இந்து மதம் நம்மை நான்கு கூறுகளாக்கி நாலாஞ் ஜாதி ஆக்கியது.

    தமிழ் எழுத்துக்களில் கூட வருணாசிரமத்தைத் திணித்தது.

    பாட்டியலில் பன்னீருயிரும்
    முதலாறு மெய்யும்
    பிராமண வருணமாம்!
    அடுத்த ஆறு மெய்கள்
    சத்திரிய வருணமாம்!
    அடுத்த நான்கு மெய்கள்
    வைசிய வருணமாம்!
    பிற இரண்டு மெய்யும் சூத்திர வருணமாம்

    அதோடு விட்டதா ஆரியம்?

    ல,வ,ற,ன - நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ,ள என்பன சூத்திர எழுத்துக்களாம். ழ,ற,ன மூன்றும் வைசிய சூத்திர எழுத்துக்களாம். தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழவும், றவும் வட மொழியில் இல்லை - எனவே அதனை சூத் திரப் பட்டியலில் இணைத்து விட்டனர்.

    அத்தோடு விட்டு விட்டார்களா? பாவிலும் பார்ப்பனப் பாணத்தைத் தொடுத்துவிட்டனர்.

    பாக்களில் சிறந்தது வெண்பாவாயிற்றே! அது பார்ப்பனர்களுக்காம். ஆசிரியப்பா சத்திரியருக் காம் (அரசருக்காம்!) வைசியருக்கு கலிப்பா வாம்! சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்.

    கலம்பகம் எப்படி இருக்க வேண்டுமாம்? தேவருக்கு 100 செய்யு ளும், பார்ப்பனர்களுக்கு 95 செய்யுளும் அரச ருக்கு 90 செய்யுளும் - அமைச்சருக்கு 70 செய் யுளும் - வணிகருக்கு 50 செய்யுளும் - மற்றவர் களுக்கு 30 செய்யுளும் பாட வேண்டுமாம். இது பாட்டியல் விதியாம்.

    இப்படி ஆரியம் - சமஸ்கிருதம் தமிழர் களுக்கு, தமிழ் மொழிக்கு செய்த வஞ்சகமும், துரோகமும் அட்டூழிய மும் கொஞ்சமா நஞ் சமா? வச்சனந்தி மாலை என்ற நூலையே இதற் காக நூலோர் தொகுத் துள்ளனர்.

    தந்தை பெரியாரிடத் தில் 1937இல் உதைபட்ட ஆரியம் மீண்டும் மீசை முறுக்கித் தோள் தட்டு கிறது - காரணம் அதிகார பீடத்தில் அவாள் (ஆர். எஸ்.எஸ்.)ஆயிற்றே.

    இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அறுதியிட்டுக் கூறிவிட்டபின் அவா ளுக்கு வேறு அட்டி என்ன!

    வாலாட்டிப் பார்க் கிறது - தமிழ்நாட்டில், தந்தை பெரியார் மண் கொடுக்கும் சாட்டையில் ஜென்மத்துக்கும் திரும் பிப் பார்க்கக் கூடாது!

    ஆகஸ்டு ஒன்று நினைவிருக்கட்டும் ஆர்த்தெழுவீர்!

    - மயிலாடன்

    Read more: http://viduthalai.in/e-paper/84634.html#ixzz38UJLCgho

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மிகம்?

    தத்துவம்

    பிராமணனான இராவணனை சம்ஹாரம் செய்ததால் ராமருக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷத்தைப் போக்கிக் கொண்ட இடம்தான் ராமேசுவரமாம்.

    ராவணன் பிராமணனா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அது என்ன பிராமணனைக் கொன்றால் மட்டும் தோஷம்! மற்றவர்களைக் கொன்றால், மான் கறி பிரி யாணியா? இராமாயணம் கூறும் தத்துவம் இது தான்.

    Read more: http://viduthalai.in/e-paper/84641.html#ixzz38UJmJ6LS

    தமிழ் ஓவியா said...

    அநாகரிக அரசியல்!


    சிவசேனா என்ற அமைப்பு சங்பரிவார் வட்டத்தைச் சேர்ந்தது என்றாலும் சிறுபான்மையின மக்களை எதிர்ப்பதிலும் மகாராட்டிரத்தைத் தவிர்த்த வேறு மாநில மக்களை எதிர்ப்பதிலும் சங்பரிவார்க் கும்பலுக்கு அப்பனாகத் தான் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

    அந்த வகையைச் சேர்ந்ததுதான் டில்லியில் உள்ள மகாராட்டிர மாநில இல்லத்தில் நடந்த அநாகரிகச் செயல்!

    கடந்த வாரம் டில்லியில் உள்ள மகாராட்டிர பவனுக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர்கள் சென்றுள்ளனர். மகாராட்டிரப் பாரம்பரிய உணவைக் கேட்டுள்ளனர்.

    ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் சப்பாத் தியைப் பரிமாறி உள்ளனர். இதனால் சீற்றம் அடைந்த சிவசேனை உறுப்பினர்கள் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக இழுத்து அவர் வாயில் சப்பாத்தியைத் திணித்துச் சாப்பிட வைத்துள்ளனர். அந்த மேற்பார்வையாளர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டவர் என்பதால் பிரச்சினை பேருரு எடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆவேசப் புயல் சுழன்று சுழன்று அடித்தது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    தமிழ் ஓவியா said...

    இதில் என்ன கொடுமை என்றால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது என்று எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துள்ளார். எல்.கே. அத்வானி மட்டும் தான் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். மற்ற பிஜேபியினர் நழுவிக்கொள்கின்றனர். இவற்றிற்கு மேலாக மகாராட்டிர அரசு இந்தப் பிரச்சினைமீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. வரவேற்கத் தக்கதாகும்.

    சம்பந்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் பாபுராவ் விச்சாரே உலகறிந்த கிரிமினல், அவர்மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன. கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது. கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்துக்குப் பங்கம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்தது, போலி கையொப்பமிட்டுப் பண மோசடி செய்தது, பெண்களைப் மானப்பங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களைத் தாக்கியது என்று மொத்தம் 20 கிரிமினல் வழக்குகள் இந்தப் பேர் வழிமீது உண்டு. (விவரம் தனியே காண்க).

    எப்படிப்பட்டவர்கள் எல்லாம் சிவசேனாவில் உள்ளவர்கள் பார்த்தீர்களா? இவர்களுக்கு வாக்களித் துப் பொது மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! (ஜனநாயகத்தைக் காலி நாயகம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கான விளக்கம் இங்குக் கிடைத்து விட்டதல்லவா!)

    16ஆவது மக்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம். இது கடந்த தேர்தலைவிட (2009) 4 விழுக்காடு அதிகமாம்! (ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று திருப்தி அடையலாம்!)

    டில்லியில் 7 உறுப்பினர்களுள் 5 பேர்கள், பிகாரில் 40 உறுப்பினர்களுள் 27 பேர்கள், மகாராட்டிரத்தில் 48 உறுப்பினர்களுள் 30 பேர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 42 உறுப்பினர்களுள் 20 பேர்கள், கேரளாவில் 20 உறுப்பினர்களுள் 9 பேர்கள், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களுள் 28 பேர்கள், குஜராத்தில் 26 உறுப் பினர்களுள் 9 பேர்கள், கருநாடகத்தில் 28 உறுப்பினர்களுள் 9 பேர்கள், ஜார்க்கண்டில் 14 உறுப்பினர்களுள் 4 பேர்கள், அசாமில் 14 உறுப்பினர்களில் 4 பேர்கள் இமாசலப்பிரதேசத்தில் நான்கு உறுப்பினர்களுள் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் 29 உறுப்பினர்களுள் 7 பேர்கள், உத்தரகாண்டில் 5 உறுப்பினர்களுள் ஒருவர், மேற்கு வங்காளத்தில் 42 உறுப்பினர்களுள், 8 பேர்கள், ஒடிசாவில் 21 உறுப்பினர்களுள் 4 பேர்கள், தமிழ் நாட்டில் 39 உறுப்பினர்களுள் 7 பேர்கள், ஜம்மு-காஷ் மீரில் 6 உறுப்பினர்களுள் ஒருவர், அரியானாவில் 10 உறுப்பினர்களுள் ஒருவர், சத்தீஸ்கரில் 11 உறுப்பினர் களுள் ஒருவர், வடக்கு கிழக்கு மாநிலங்களில் 14 உறுப்பினர்களுள் ஒருவர், பஞ்சாபில் 13 உறுப்பினர் களுள் ஒருவர் ராஜஸ்தானில் 25 உறுப்பினர்களுள் ஒருவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்றால், நம் நாட்டின் ஒழுக்கத்தை, ஜனநாயக யோக்கியதையை எளிதில் எடை போட்டு விடலாமே!

    அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்று பதவிப் பிரமாணம் செய்தவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா?

    ஆந்திராவிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தூதராக பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா அம்மாநில முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைக் கூட பிஜேபி எம்.பி. எதிர்க்கிறார் - காரணம் அந்த வீராங் கனை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான்.

    குடியரசு தலைவர் அளிக்கும் இஃப்தார் விருந்தையே பிரதமராக இருப்பவர் புறக்கணிக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

    இரண்டு மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு விபரீதங்கள் என்றால், மீதிக் காலம் எப்படி நகரப் போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

    இந்த மதவாத சக்திகளுக்கு ஊடகங்களும் துணைப் போவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!

    Read more: http://viduthalai.in/page-2/84650.html#ixzz38UK25bGQ

    தமிழ் ஓவியா said...


    முஸ்லிம் மேலாளர் வாயில் சப்பாத்தியைத் திணித்த இந்த ராஜன் பாபுராவ் விச்சாரே - யார்?

    சிவசேனா நாடாளுமன்ற உறுப்பின ராக இவர் மீதுள்ள காவல் நிலையத்தில் பதிந்த வழக்குகளின் விவரம் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதி வானவை)

    இவர்மீது கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது, கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தனியா ருக்கு சொந்தமான இடத்தை ஆக்ர மித்தது, போலி கையெழுத்துப் போட்டு பண மோசடி செய்தது, பெண்களை மானபங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களை தாக்கியது என மொத்தம் 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவற்றின் விவரங்கள்:

    1) CRI 163/07/RCC 198/08 வாக்ளே எஸ்டேட் காவல்நிலையம் - தானே.

    2) CRI 193/06 Sum CC 6252/2006 மாவ்படா காவல் நிலையம் - தானே.

    3) CRII 73/11 நாவ்பாடா காவல் நிலையம் - தானே.

    4) 4472/10 தானே காவல் நிலையம்

    5) CRI 290/11 Under Section 143, 149.

    6) CR II 39/2006 Under Section 37(3), 135, மும்பை காவல் சட்டத்தின்படி கைதாகி பிணையில் வெளியே வந்தவர்.

    7) CRII 3033/09 Under Section 37(3), 135 கபூர்வாடி காவல் நிலையம் - தானே.

    8) CRI 290/11 Under Section 143,149,323,342 of IPC with Sec. 37(1)1325
    கல்வா காவல் நிலையம்.

    9) CRII 3054/04 Under Section 37/(3)135

    10) CRII 188/5 Under Section 37(3) 135

    11) CRII 128/07 Under Section 291, 278, 188 of IPC with Sec.37(3) 135 O

    12) CRII 73/11 Under Section 188, 268, 290, 291 with Sec. 6 of Environment Act 1986 and Under

    Sec.33 (N) 113, 181, 136.

    13) CRII 64/06 Under Section 37(3)135.

    14) 193/06 Under Section 323, 504, 506, 143, 145, 147 of IPC

    15) CRI 240/89 Under Section 143/147,336,337,353,427 of IPC

    16) CRII 04/93 Under Section 37(3) 135.

    17) CRII 08/93 Under Section 37(3)135, 36/135

    18) CRII 73/06 Under Section 37(3) 135.

    19) CRII 92/11 Under Section 37(3)135.

    20) CRI 165/07 Under Section 353, 143,145,147, 148,149,427,504 of IPC

    Read more: http://viduthalai.in/page-2/84656.html#ixzz38UKr8csO

    தமிழ் ஓவியா said...


    ஆச்சாரியாரின் குழப்பமும் அண்ணாவின் பதிலும்!


    சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

    திருநீறு, நாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

    "சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக்குறியி லிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லா ருக்கும் தெரியும் படியாகப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக் கிறார்கள்.''

    இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகிறார். சைவர் களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்வோம்.

    திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரே தவிர, அவருக்குக் குழப்பம் வரா மலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர் களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியில் நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

    "எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

    எப்படி இருக்கிறது வாதம்! எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு!'

    திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சாரியாள் சொல்லி யிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான் - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

    வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும் - எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

    நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சாரியாரின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

    எதிலும் உறுதிப்பாடும் உத் வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

    இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப்படுவதிலே ஆச்சரியமென்ன.

    - தம்பிக்கு கடிதம் என்ற நூலில் அண்ணா

    Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UM0RVRt

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழி

    ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டுவிட்டான்.

    Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UM9kbb7

    தமிழ் ஓவியா said...

    காசியில் இறக்க முக்தி!

    சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தரு வார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

    கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

    Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UMFjDNb

    தமிழ் ஓவியா said...


    காஞ்சி என்றால் அண்ணா!


    சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் தன்னிகரற்று விளங்குபவர் திருமுருக கிருபானந்தவாரியார். அவர் பம்பாயில் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றும்பொழுது தமக்கு முன்னே திரண்டிருந்த பொது மக்களை நோக்கி அவர் அடியிற் கண்டவாறு புதிர் போட்டாராம்.

    ...சில பெரியவர்களுடைய ஊர்களைச் சொன்னாலே அவர்கள் பெயர் என்ன என்பது தெரிந்து விடும். உதாரணமாக அரியக்குடி என்றால் யாரை குறிக்கும் தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினாராம் வாரியார்.

    இராமானுச அய்யங்கார் என்றனராம் கூட்டத்தினர்.

    இவ்வாறே இன்னும் சில ஊர்களை அவற்றுக்குரிய மனிதர்களின் பெயர்களைக் கேட்டு வந்தவர் இறுதியாக,

    காஞ்சி? என்றாராம். உடனே குழுமியிருந்த பொதுமக்கள், அண்ணாதுரை! அண்ணாதுரை என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனராம்.

    இதைக் கேட்டதும் அயர்ந்து போனாராம் கிருபானந்தவாரியார். காஞ்சி என்றதும் பொது மக்களுக்குக் காமகோடி பீடாதிபதி, சங்கராச்சாரியார் நினைவுதான் வரும். அவர் பெயரைத்தான் கூறுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கூட்டத்தினரோ அண்ணாவின் பெயரை முழங்கியது அவருக்கு அளவற்ற வியப்பை அளித் திருக்கிறது.

    Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMN8spQ

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பனீயம்!

    கடிவாளம் சிறியது, ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை, ஆனால் மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்.

    அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்த சமூகத்தாரின் செல்வாக்கு நிச்சயம் வளரும்... இதனால் தான் பார்ப்பனீயம் என்னும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

    26.10.1947 திராவிட நாடு இதழில் அண்ணா

    Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMbkUzs

    தமிழ் ஓவியா said...

    பச்சை நாஸ்திகம்

    சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்

    சாத்திரத்தைச் சுட்டு- மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து, சுகம் பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

    - தந்தை பெரியார் குடிஅரசு - 5-5-1929

    Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMjDgF9

    தமிழ் ஓவியா said...


    குங்குமம் விபூதி பற்றி


    பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்! நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச் சியே பண்ணி தீஸிஸ் கூட சப்மிட் செஞ்சிருக்காங்க. கலப்பட விபூதி பக்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சிலக் குடும்பங்கள் பாரம் பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு. இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற் பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிக மாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார். (நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997)

    Read more: http://viduthalai.in/page4/84802.html#ixzz38op45Q2V

    தமிழ் ஓவியா said...


    அவமதிக்கப்படும் 50 சதவீத முதியோர்கள்.


    நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம்பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி 'உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக' அனுசரிக்கப்படு கிறது. இதை அனுசரிக்கும் வகையில் கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை பெங்களூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டு களாக நாட்டி லுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம்.

    அதில் 50 சதவீதமான முதியவர்கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 38 சதவீதமும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த அவமதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    நாட்டிலே பெங்களூரில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் அவமதிக்கப்படு கிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டெல்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.

    இதில் 77 % அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். நாட்டில் 61% முதியவர்கள் தங்களுடைய மருமகளா லும், 59 சதவீத பெற்றோர் தங்களுடைய மகனாலும் அவமதிக்கப்படுகின்றனர். பெங்களூரை பொறுத்தவரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமகளாலும் அவமதிக்கப்படுகின்றனர்.

    ஆண்டுதோறும் முதியவர்களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள்'' என்றார்கள்.

    முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக் கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லாததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.

    Read more: http://viduthalai.in/page5/84804.html#ixzz38opKKUSF

    தமிழ் ஓவியா said...


    அமெரிக்காவை அதிர வைத்த பறை இசை


    செயின்ட் லூயிஸ் (மிசௌரி, யுஎஸ்): 2014-ஆம் ஆண்டு ஃபெட்னா விழாவில் தமிழரின் கலாச்சார அடை யாளமான பறை இசை நிகழ்ச்சிகளை கட்டியது. வந்திருந்த பார்வையாளர் களை மயிர்க்கூச்செரியும்படி அமைந்தது இந்த பறை இசை நடன நிகழ்ச்சி. 2014, ஜூலை 4, 5 தேதிகளில் செயிண்ட் லூயிஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27ஆம் ஆண்டு தமிழ்விழா நடந்ததது. வடஅமெரிக்க தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழைக் கொண்டாடிய இந்த இரு தினங்களும், நண்பர்கள் அனைவரும் உற்றார்களாகவும், உறவினர்களாகவும் மாறிய நாட்களாக மாறிப் போயின என்றால் மிகையல்ல. நகரின் பிரதான சாலைகளில் பாரம்பரிய உடையில் தமிழர்கள். செயின்ட் லூயிஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு தமிழால் மணத்தது. தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி இரு தினங்களும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைப்பெற்றதுதான், தமிழனின் கலாச்சார அடையாளமான பறை நிகழ்ச்சி.

    பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி அல்லது பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், அதற்கு தாய்த் தமிழகத்திலிருந்து கலைஞர்களை வரவழைக்க வேண்டி யிருந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, பறை இசை நடன நிகழ்ச்சி நடத்துவதில், தேர்ந்த கலை ஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொற்செழியன் மற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக நின்ற பேரவையின் தலைவர் தண்டபாணி குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்

    பறை இசை கலைஞர்கள் இந்த பறை நடனக் குழுவில், பொற்செழியன், ரமேஷ், கோவிந்தராஜ், அசோக், நந்தகுமார், பாலா, தினேஷ், பிருத்வி ராஜ், யசோதா, ரம்யா, கவிதா, புவனா, வீணா, ஜெயஸ்ரீ ஆகியோரும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வலர்களாக ஆதிசரண், கனிஷ்க், ஜோதம்,ரியா, ரித்தன்யா ஆகிய சிறார்களும் இதில் மனமகிழ்வுடன் பறையாடினர்.

    பெரும் வெற்றி தமிழ் கலைகளைக் காக்கும் பொருட்டு இக்குழுவினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. குறிப்பாக 2014 ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியில் முக்கியப் பங்கு பறை இசை நடனம் மற்றும் தமிழரின் தொன்மை கலைகளான தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக் கூத்து போன்ற வற்றுக்கும் உண்டு.

    அமெரிக்க பேராசிரியர்கள் இதில் பெருமைப்பட வேண்டியது, ஒக்கல ஹாமா பல்கலைகழகத்தின் இசைப் பேராசிரியர் ஜோயி செரினியன் மற்றும் ஏரன் பேகி தமிழ் பறை நடனக் குழுவி னருடன் இணைந்து சிறப்பித்ததுதான். அவர்களுடைய பறை பட்டறையும் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கி யது. ஆம்... நம் தமிழரின் பறை இசையை மையமாக வைத்து அமெ ரிக்கர்கள் பறைப் பட்டறை நடத்து வதை தாயகத் தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    பறையால் விண்ணதிரட்டும் இசை மனதை மகிழ்வூட்டும், அமைதியாக்கும், ஆவாரப்படுத்தும், சுத்தமாக்கும். நம் முன்னோர்கள் கண்ட பறை, அமெ ரிக்கன் தமிழ் பறை குழுவின் மூலம் புது பரிமாணத்தை அடைந்துள்ளது. அவர்களின் முயற்சி தமிழரின் பறையை விண்ணை முட்டச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்கன் தமிழ் பறை குழுவினர், பறை உலகறிய செய்வதற்கு என்றும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. இக்கலையை கற்றுக்கொள்வதற்கோ, மேடையில் கண்டு ரசிக்கவோ அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றனர்.

    தமிழகத்தில் எந்த ஒரு விழா என்றாலும் மலையாளத்தாரின் செண்டைமேளத்தையும் பார்ப்பனர் புகுத்திய கலாச்சாரத்துடன் கொண் டாடி வரும் வேலையில் அமெரிக் காவை அதிரவைத்த பறைஇசை இனி அனைத்து பொது நிகழ்ச்சியிலும் ஒலிக்குமாம், எந்த தமிழிசையை அமங் கலம் என்று ஒதுக்கிவைத்தார்களோ அதே இசை இன்று மேற்குலகில் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

    Read more: http://viduthalai.in/page5/84803.html#ixzz38opVgRtU

    தமிழ் ஓவியா said...


    தந்தை பெரியார் பொன்மொழி



    மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன். மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

    Read more: http://viduthalai.in/page6/84806.html#ixzz38opiron9

    தமிழ் ஓவியா said...


    உயிர் உருவாகிறது, படைக்கவில்லை

    1. வெள்ளை புழு: ஆம் செம்மறி ஆட்டு புழுக்கை (சாணி) அள்ளி ஓரி டத்தில் (குப்பைக் குழி) தினம் 4, 5 தட்டுக்கூடை அளவுக்கு ஆறுமாதம் வரையில் அதன் மேல் போட்டு வந்து அதன்பின் ஓரளவு மழை அதாவது தண்ணீர் தெளித்து காயாமல் நனைந்து இருக்க வேண்டும். அதன்பின் அதனை மண்வெட்டியால் அள்ளும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலே இரண்டு மூன்று அங்குல நெட்டு அரை ஒரு அங்குலம் உள்ள வெள்ளை நிறமுள்ள பூச்சி உயிருடன் இருக்கிறது.

    2. எருவில் புழு: மாடுகளை மேய்க்க நிலத்துப்பக்கம் போகும்போது அதன் எருவில் அடுத்த நாள் பார்க்கும்போது சிறு வெள்ளை புழுக்களும் இருக்கிறது அதை காக்கை கொத்தி இரையாக்கிக் கொள்கிறது எல்லா இடங்களிலும் இவ்விதம் ஏற்படுவதில்லை உப்பு நிலம், உவட்டுத்தரை, கந்தகத்தரை, உவர்மண் இப்படி உள்ள இடங்களில் புழுக்கள் தோன்றுவதில்லை.

    3. ஈசல்: மழை பொழியும் போதெல்லாம் இல்லை; அய்ப்பசி கார்த்திகை மாத வாக்கில் மழை பொழிந்தால் உடனே ஈசல் என்ற பறக்கும் உயிரினம் மிக அதிகமான அளவில் உருவாகிறது கொஞ்ச நேரத்தில் இறக்கை உதிர்ந்து தரையில் இளைகிறது. உருமாற்றம் ஆகிறது. இது உணவாகவும் பயன்படுகிறது.

    4. பனம் மட்டை: பனம் மட்டையை அடர்த்தியாக ஆறுமாத அளவில் அடுக்கி வைத்து அதில் பலமுறை மழை பொழிவு அல்லது பலமுறை தண்ணீர் தெளித்தால் கருப்பு நிறப்பூச்சி, அட்டை மாதிரி உயிருடன் கூடுதலாக உருவாகிறது.

    5. தேள்: பழைய பனம் மட்டை, பழங்கூரை, வரகு, வைக்கோல், சாம்பல் இவைகளை ஒரே இடத்தில் போட்டு அதிகம் காயாமல் தண்ணீர் தெளித்து வந்தால் ஆறுமாத அளவில் தேள் உயிரினம் தோன்றுகிறது.

    6. சிகப்பு அட்டை: இற்றுப்போன மட்டை, வைக்கோல், கூரை, பழைய வீடுகளில் மழைக்காலங்களில் சிகப்பான அட்டை உயிருடன் உண்டாகிறது.

    7. பாசி: தண்ணீர் உள்ள தொட்டி யில் உயிரான பாசம் ஏற்படுகிறது குறைவான தண்ணீர் உள்ள கிணற்றில் கொடி போன்ற பாசி உயிருடன் உண் டாகிறது. இவை எனது கவனிப்பில் தென்பட்டவை: இடத்திற்கு ஏற்பவும் பொருள்கள் மூலமும் தட்ப வெப்ப பருவகாலங்களில் உயிரினம் ஏற்பட்டு அதுவே வளர்ச்சியின் மூலமாக மனிதன் என்ற உயிரினம் உருவாயிருக்க வேண்டும் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி சரிதான் கடவுள் என்பது ஒரு பொருள் கூட இல்லையே; அப்படி இருக்க, இல்லாத பொருள் எப்படி எதையும் உருவாக்க முடியும்?

    8. விட்டில்: ஆறுமாத அளவில் ஒரே இடத்தில் பல தென்னம் மட்டைகள் காய்ந்து இற்றுப் போய் இருந்தன. மழை பொழியும்போது அந்த மட்டையில் இருந்து விட்டில்கள் பொரி வானம் போல 50 அளவில் பறந்தன. கால நிலைக்கேற்ப உயிரினம் தோன்றும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

    கோழி: கோழி முந்தியா? முட்டை முந்தியா? உயிர் இனம் கோழி தான் முந்தியது. ஆம், இவ்விதம் செல்கள் உருவாகி அதற்கேற்ப உயிர் இனம் தோன்றி இருக்கும். இதன் பின்தான் இன சேர்க்கை ஏற்பட்டு உற்பத்தி ஆகிறது ஒவ்வொன்றும் அபிவிருத்தி ஆகி இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. முதலில் செல் உருவாக வேண்டும் இவை சேர்ந்து உயிர்ப் பொருள் உருவாகி நிறங்கள் வடி வங்கள் ஆண்பால். பெண்பால் அமை வதற்கு செல்களே காரணமாகின்றன. கடல், மழை, இப்படி பல இடங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிர் இனம் தோன்றி ஆண், பெண் என்பன தோன்று கின்றன. அதன்பின் தான் இனச் சேர்க்கை மூலமாக, முட்டை மூலமாக அல்லது குஞ்சு, குட்டி போன்றவை உருவாகின்றன. இதன்படி பார்த்தால் கோழிதான் முந்தியது.

    Read more: http://viduthalai.in/page7/84808.html#ixzz38opvRna6

    தமிழ் ஓவியா said...


    இந்த நாள்!


    29.07.1944இல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் முத்தையா டாக்கிஸ் திரைப் பட அரங்கில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் கழக மாநாட்டில் அகவை பதினோர் வயது நிரம்பாத நிலையில் சிறுவன் வீரமணியை மேசை மீது தூக்கி நிறுத்தி மனப்பாடம் செய்த பேச்சுத் தொகுப் பினைத் தங்குதடையின்றி பேசி மாநாட்டிற்கு வந்திருந்தோர் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாள்.

    இந்த மேடையில் சிறுவன் வீரமணியின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வீரமணியின் பேச்சைப் பாராட்டிப் பேசும்போது இப்பொழுது பேசிய சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்.

    சிறுவன் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார் அண்ணா. தந்தை பெரியார் மேடையில் அகமகிழ்வு அடைந்தார். மாநாட்டுப் பந்தலே கையொலியால் அதிர்ந்த நாள்! இந்த நாள்!!

    Read more: http://viduthalai.in/e-paper/84827.html#ixzz38orBRK3p

    தமிழ் ஓவியா said...

    இன்றைய ஆன்மிகம்?

    கோட்புலி நாயனார்

    சோழர்களின் படைத் தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத் திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந் தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத் தில் சேமித்து வைத்திருந் தார்.

    ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்த போது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசிப் பட்டினியால் வாடிய அவருடைய உறவினர் கள் அந்த நெல்லைப் பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபகரித்த அவர்கள் அனைவரையும்வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.

    இதைப் படிக்கும் பொழுது என்ன தோன்று கிறது? அன்பே சிவம் என்பது இதுதானோ! பக்தி இருக்கும் இடத்தில் கொலை வெறிதான் மிஞ்சும் போலும்!

    Read more: http://viduthalai.in/e-paper/84838.html#ixzz38orSoOkC

    தமிழ் ஓவியா said...

    இந்த மலட்டு விதை விவசாயத்தின் வாழ்வா தாரத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியது என்று தெளிவாக தெரிவித்து விட்டதே! இந்த அடிப்படையில் கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது.

    இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, பழைய பிஜேபி அரசு (1998) தொடங்கியதைப் புதுப்பித்துக் கொள்ள தோள் தட்டிக் கிளம்பியுள்ளது.

    அறுபது நாட்களுக்குள் இவ்வளவு விபரீதங்கள் என்றால் வரும் காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதிதான் மக்கள்முன் நிற்கிறது.

    இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84) அது எப்படியோ நாசமாக போகட்டும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அவர்கள் நம்பும் அந்த பாவப்பட்ட தொழிலில் தான் இந்தநாட்டில் கோடானு கோடி விவசாயப் பெருங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திண்டோள் பொங்கி எழுந்தால் அவற்றை எதிர் கொள்ளும் சக்தி எந்த அரசுக்கும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

    Read more: http://viduthalai.in/page-2/84841.html#ixzz38orhYiwR

    தமிழ் ஓவியா said...


    தீராது



    பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந் தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

    - (குடிஅரசு, 17.8.1930)

    Read more: http://viduthalai.in/page-2/84840.html#ixzz38orrEooA

    தமிழ் ஓவியா said...


    தொண்டை வலிக்குத் தீர்வு


    தொண்டை வலி என்பது எல்லா வயதினருக் கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ் வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும் போதும் சிரமம் இருக்கும்.

    எனவே இதை விரட்ட சில வழிமுறைகள்...

    சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாள்களில் குணமாகி விடும்.

    சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

    இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும் பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா தேநீர் குடித்தால் நல்லது. மசாலா தேநீர் என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

    இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

    எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

    மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

    தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

    தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

    Read more: http://viduthalai.in/page-7/84816.html#ixzz38oteWMex

    தமிழ் ஓவியா said...


    வயிறு பிரச்சினைகளைத் தீர்க்கும் கறிவேப்பிலை....

    தமிழர்களின் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசி மிகுந்ததாகவும், வாசனை மிகுந்ததாகவும் மாறும்.

    கறிவேப்பிலை தென் னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் தென்னிந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.

    இலங்கை, இந்தியா தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படு கின்றது.

    தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர் களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி.. இதுகுறித்து அரசு சித்தா மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: கறிவேப்பிலை தூக்கி எறிவதற்கல்ல, உண்பதற்கே.

    புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி. இவற்றால் கண் பார்வைக் கோளாறுகள் வராது. எலும்புகள் ஏற்றம் பெறும். சோகை நோய் அண்டாது. தொற்று நோய் ஊரில் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.

    புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவும். சிறப்பாக வாய்ப்புண் குணமாகும். பல் ஈறு வலுவாகும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டியடிக்கும் வலிமை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்கும். செரிமான சக்தியை மிகுவிக்கும். பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலைத் தொலைக்கும்.

    தலைமுடி வளரவும், வனப்பாக விளங்கவும், கண்களுக்கு ஒளிதரவும், சுக்கிலம் விருத்தியடையவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். பசி எடுப்பதில்லையா? செரிமான மந்தமா? கறிவேப் பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி கிளர்ந்தெழும்

    Read more: http://viduthalai.in/page-7/84818.html#ixzz38ottkYaW

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மிகம்?

    ஆடி மாதம்

    ஆடி மாதத்தில் 1,10,19,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுப பலன் உண்டாம். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் உண்டாம்.

    7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பண வரத்து இருக்குமாம்.

    ஒரு நாளில் பிறந்தால் போதும், திறமை முக்கி யம் இல்லை; உழைப்பு முக்கியம் இல்லையா? இது ஒரு சோம்பேறித்தன மான நம்பிக்கையை அல்லவா வளர்க்கும்!

    Read more: http://viduthalai.in/page1/84723.html#ixzz38ouKCkRt

    தமிழ் ஓவியா said...


    மூட மக்கள்


    ஒவ்வொருவனும் தன்னை அன்னி யன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

    - (விடுதலை, 24.9.1950

    Read more: http://viduthalai.in/page1/84714.html#ixzz38oudCrNg

    தமிழ் ஓவியா said...

    தமிழ்நாடும் பாலியல் வன்கொடுமையும்


    தேசிய ஆவணக் கழகம் (National Crime Records Bureau) என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர்ஆவணக் காப்பகமாகும்.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக் கைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.41 சதவீதம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

    நாட்டில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லை களுக்கு அதாவது 4 முதல் 18 வயது வரையிலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 280 என்றும், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கை 395 எனவும், 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களில் பாதிப்புக்குள்ளான வர்கள் 93 பேர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 16 பேர் பாலியல் கொடுமைக் குள்ளாகி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களாக இருக்கின்றன.

    இதிலே இன்னும் கொடுமையென்றால் பாலியல் வன்முறைக்குள்ளான 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 61. அத்துடன், 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளில் பாலியல் கொடுமைக் குள்ளானவர்கள் 78 பேர்.

    அண்மையில்கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டையில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யுள்ளார்.

    2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475. 2012ஆம் ஆண்டில் அது 7ஆயிரத்து 192. அது மட்டுமல்ல;

    பாலியல் கொடுமைகள் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு 923. அதே 2012இல் 677.

    தமிழ்நாட்டில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட தற்காக நாடே பொங்கி எழுந்தது. நமது அண்டை மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்காகக் கடும் கண்டனப் புயல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

    தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்திருந்தும் ஒன்றும் நடக்காததுபோல மூடி மறைக்கப்படுவது - ஏன்? தமிழ் நாட்டு ஊடகங்களும் வாய் மூடி மவுனம் சாதிப்பது - ஏன்?

    சட்டப் பேரவையில் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றால் - மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும்?

    உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது என்றாலே அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

    எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, ஊடகங்கள் என்றாலும் சரி நாட்டில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தினால் தானே ஆளும் கட்சியும் சரியான திக்கில் பயணிக்க முடியும்? செயல்பாட்டிலும் வேகத்தை முடுக்கி விட முடியும்.

    பெண்ணென்றால் ஓர்ஆணுக்குச் சமையல் காரி ஓர்ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்

    (குடிஅரசு 21.7.1946).

    சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றங் கொண்டு வரப்பட வேண்டும்.

    இத்திசையில் கல்வியில் பெரும் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் ஏன் அடிமையானாள்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் கல்லூரிகள் மட்டத்தில் இடம் பெற்றாக வேண்டும்.

    குறிப்பிட்ட வயதுக்கு மேலான மாணவர், மாணவி யர்கள் மத்தியில் பாலியல் கல்விபற்றித் தேவையான அளவில் கற்பிக்கப்பட வேண்டும்.

    தமிழ் ஓவியா said...

    ஆபாசமாக அருவருப்பாக, அநாகரிகமாக நாட்டு நடப்புகள் இருப்பதைவிட, இந்தப் பாலியல் கல்வி எப்படித் தவறானதாகும்? இதில் போதிய புரிதல் இல்லாமையும் தவறுகள் நடப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியுமா? போதும் போதாதற்கு நமது ஊடகங்களும், சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் இளம் உள்ளங்களைப் பாலியல் வெறி உணர்வுகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

    வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அட்டைப் படங்கள் என்பவை - அரை குறை ஆடையுடன் கூடிய சினிமா நடிகைகளின் படங்கள் என்பது நிரந்தரமாகி விட்டனவே!

    நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று நிகழ்வுகள் நடக்கும் அந்தந்த காலங்களில் மட்டும் கூக்குரல் போடுவதும், சில நாட்களில் மறந்து விடுவது என்பதும் ஒரு தீய வட்டச் சுழற்சியாக அல்லவா இருக்கின்றது.

    குற்றங்கள் நடக்கின்றன என்றால் அதற்கான மூலவேர் எங்கு இருக்கிறது என்று கண்டாய்ந்து அதனை வேரும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?

    பெண்கள் என்றால் உடல் வன்மையற்றவர்கள் ஆண்கள் பலசாலிகள் என்ற மரபணுவை மாற்றி அமைத்திட விஞ்ஞான மார்க்கத்தை தேடுவதிலும் குற்ற மில்லை; தற்காப்புப் பயிற்சிகள் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து தற்காப்புக்காக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. அரசு சிந்திக்கட்டும் ஊடகங்களும் மனம் விரியட்டும்!

    Read more: http://viduthalai.in/page1/84713.html#ixzz38ounIXmT

    தமிழ் ஓவியா said...


    பாசிசத் தொழிற்சாலையாகிறதா, குஜராத் மாநிலம்?


    - குடந்தை கருணா

    சென்ற ஜூன் 30-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள 42000 தொடக்கப்பள்ளி, மற்றும் இடை நிலைப் பள்ளிகளுக்கும், அரசு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், தினாநாத் பாத்ரா என்பவரின் ஆறு புத்தகங்களையும், துணைப்பாடமாக, கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சரி. யார் இந்த தினாநாத் பாத்ரா? சிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் தலைவராக இருந்த, பாத்ரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்; இவர் தான், அமெரிக்க பேராசிரியர் வென்டி டோங்கியர் எழுதிய இந்துக்கள்; ஓர் மாற்று வரலாறு என்கிற புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்.

    இந்த பாத்ராவின் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது? இந்து கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ற போர்வையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இனி, பிறந்த நாளுக்கு, மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென் றால், இது மேற்கத்திய பண்பாடு. அதற்குப் பதிலாக, ஓர் விளக்கை ஏற்றி, காயத்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

    வரலாற்றுப் பாடங்களில், இந்தியாவின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படி, தற்போதைய, இந்திய வரைப்படம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், பர்மா, இலங்கை நாடு களையும் உள்ளடக்கிய வரைபடம் தான் இந்தியா என வரையப்பட வேண்டும். ஏனென்றால், இதுதான், பண்டைய அகண்ட பாரதம், என பிள்ளைகளுக்கு சொல்லப்பட் டுள்ளது.

    இது குறித்து, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சவுடா சாமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பாடங்கள் அனைத்தும், பள்ளிகளில் கட் டாயப்பாடம் என்று கூறி உள்ளார்.

    குஜராத்தில் 2002இல் நடை பெற்ற மதக்கலவரத்தின் மூலமாகத் தான், மோடி அடையாளப்படுத்தப் பட்டார். இந்துக்களிடையே, முஸ்லீம் விரோதப் போக்கை உருவாக்கி, அதன் காரணமாக தொடர்ந்து குஜராத்தில் அவர் பெற்ற அரசியல் வெற்றி, பிரதம ராவதற்கான காரணமாக அமைந்தது.

    மோடியிடம் குஜராத்தில் அவரது உத்தரவிற்கு பணிந்து வேலை பார்த்த அதிகாரிகள்தான், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் அவருக்குத் துணையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

    குஜராத் கலவரம் நடை பெற்றபோது, உள்துறை அமைச்ச ராக இருந்து, பல போலி கொலை குற்றங்கள் செய்த அமீத்ஷாதான் தற்போது பாஜகவின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மகாத்மா என உலகம் முழுவதும் பரப்பப்பட்டுவரும், காந்தி, குஜ ராத்தில் பிறந்திருந்தாலும், காந் தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸைக் கண்டிப்பதுபோல், காப்பாற்றிய, குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலுக் குத்தான், மோடி சிலை வைக்க இருக்கிறார். அதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளார்.

    தற்போது, பள்ளிக்குழந்தைகள் மனதில், காலத்திற்கும் நிற்கும் வகை யில், பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, இந்துத்துவா விஷ விதை விதைக்கப்படுகிறது. பாசிசப் பார்த்தினீயம் உருவாக்கப்படுகிறது.

    இவையெல்லாம்தான் நடை பெறும் என்று நாம் படித்து படித்துச் சொன்னோம்; இடித்தும் சொன் னோம். ஆனால், இங்கே உள்ள சில தலைவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றினார்களே; இவர் களெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

    Read more: http://viduthalai.in/page1/84716.html#ixzz38ovLY4Iw

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழி

    என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருப வர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது.

    தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட் டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக் காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.

    Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owA7lNy

    தமிழ் ஓவியா said...


    சேலம் வன்னியர் குலச்சத்திரியர் மகாநாடு


    ஆகையால், சகோதரர்களே! இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான ஜாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற ஜாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த ஜாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

    சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆகவேண்டாமா? இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிப்பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் கண்காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

    இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமான தாகுமா? என்பதை நீங்களே யோசித் துப்பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம்ம நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக்கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரிய மானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின் றார்கள்.

    நாம் இன்றையதினம் யார் சத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக் கின்றோம். சத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெயரினால் என்ன லாபம்? அந்தப்பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டுவிட்டது? எந்தத் தேசத்தைப் பிடித் தோம்? எதை ஆளுகிறோம்? யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம்? ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே.

    எனது நாடார் நண்பர்கள் அனேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்துகொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன்.

    உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மைல் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதன் மணிக்கு 50 மைல் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலையில் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளி மலை.

    அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு, தலையில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும், வெள்ளைக்காரன் கைலாயத் திற்கு போய் பரமசிவனின் தலையைப் பிடித்து ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான்.


    தமிழ் ஓவியா said...


    ஆரியம் தான் சமஸ்கிருதம் - உஷார்! உஷார்!!


    சமஸ்கிருதம் ஒரு மொழிதானே?

    இதற்குப் போய் முண்டா தட்டுவதா? என்று சிலர் முணுமுணுப்பர் - அவர்கள் விரிக்கும் வலையில் வீழாதீர்!

    தமிழை - தமிழர்களைத் தாழ்த்த வந்த தாம்பு அது - தமிழை நான்கு கூறு போட்டதும் அதுதான் - மக்களை நான்கு கூறு போட்டதும் அதுதான்.
    கோவிலுக்குள்ளிருந்து தமிழை வெளியேற்றியதும் இதுதான்.

    தமிழனைப் பிடரியைப் பிடித்துத் தள்ளியதும் - தள்ளி வருவதும் அதுதான்.

    அர்ச்சனை மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் குரல் கிளம்பிய நேரத்தில், ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றம் சென்றார். அவர் பெயர் வி.எஸ்.சிறீகுமார்; ஹிந்துக் கோவில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவராம். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

    ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களை மாற்ற அறநிலையத் துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

    அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின்போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

    சமஸ்கிருத மொழி மூலமாக கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும். இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் என்று மனு தாக்கல் செய்தார் மனுவாதியான பார்ப்பனர்.

    தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழர்கள் கொடுக்கும் தட்சணையால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தமிழை வெறுக்கின்றனர் - சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

    நம் தமிழர்களை வெறுக்கும், நம் தமிழை மறுக்கும் சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தத்தான் சமஸ்கிருத வாரம்!

    உஷார்! உஷார்!!

    தமிழர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்த ஆகஸ்டு முதல் தேதி களம் காண்போம் தோழர்களே!

    கருஞ்சட்டைச் சேனையே, தயார், தயார் தானா?

    Read more: http://viduthalai.in/page1/84698.html#ixzz38oxGNAH4

    தமிழ் ஓவியா said...


    சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

    சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?

    ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?

    முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

    கி.வீரமணி

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
    இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

    கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல - போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை - அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

    அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

    அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் - இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

    தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

    குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

    இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

    இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை. முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

    1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

    2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

    இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

    மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

    மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

    ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

    ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

    மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

    முதல் அமைச்சர் கவனிப்பாரா?

    ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல் பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?


    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்

    சென்னை
    29.7.2014

    Read more: http://viduthalai.in/e-paper/84886.html#ixzz38udDxLea

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மிகம்?

    ஆடி மாதம்

    ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒரு முறை பார்வதிதேவி, சிவபெருமானை விட்டு விலகி இருந்தாள். இதை அறிந்த ஆடி என்னும் அசுரன் சிவபெருமானது தனிமையைப் பயன் படுத்திக் கொண்டு பாம்பு உருவம் எடுத்து உள்ளே நுழைந்தான். பிறகு பார்வதி தேவியாக உருமாறினான். சிவபெருமான் அருகில் சென்றான்.

    தன்னோடு சேர்ந் திருக்க வந்திருப்பது ஆடி அசுரன் என்பதை சிவ பெருமான் உணர்ந்து கொண்டார். அசுரனுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது.

    கயிலையில் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்ட ராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பி யாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத் தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில் தவறாமல் இறை வழிபாடு செய்து பயன் பெறலாமாம்.

    இந்துப் புராணம் என்று எடுத்துக் கொண்டால் அசுரன் என்ற பாத்திரம் எப்படியோ வந்து புகுந்து விடும். அசுரன், அரக்கன், ராட்சதன் என்று எங்கு சொல்லபட்டு இருந்தாலும் அவன் வேறு யாருமல்ல- திராவிடன் தான் என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

    இந்தக் கதையிலும்கூட அசுரன் கேவலமான தாகத்தான் படைக்கப் பட்டு இருப்பதைக் கவனிக் கத் தவறக் கூடாது; இந்தக் கதையும் சற்றும் அறிவுக் குப் பொருந்துகிறதா என் பதையும் ஆன்மிக சிரோன் மணிகள் சிந்திக்கட்டும்!

    Read more: http://viduthalai.in/e-paper/84892.html#ixzz38udceXyF

    தமிழ் ஓவியா said...


    தொல்லை



    வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
    (குடிஅரசு, 19.9.1937)

    Read more: http://viduthalai.in/page-2/84893.html#ixzz38ue3o7aL

    தமிழ் ஓவியா said...

    கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

    இந்நாள் :

    கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

    13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள். விழாவில் அமைச்சர்கள் ப.உ. சண்முகம், எஸ். இராமச்சந்திரன், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோரும் அன்பில் தர்மலிங்கம், முன்னாள் எம்.பி.யும் சென்னை மாநில கூட்டுறவு வங்கியின் மேனாள் தலைவருமான ஆர். கனகசபை, எம். செல்வராஜ், (தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர்), சிதம்பரம் பிரபல டாக்டர் கே. அரங்கசாமி எம்.பி.பி.எஸ். (முன்னாள் எம்.பி.) வி.வி. சாமிநாதன், ஆர்.கோவிந்தராசன் எம்.எல்.ஏ., ஆர். சுப்பிரமணியம், (கடலூர் நகராட்சி தலைவர்) உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர். விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

    தந்தைபெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா கடலூரில் ஒரு மாபெரும் இன எழுச்சி விழாவாக நடைபெற்றது. சிலை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பிற தோழர்களும், அமைச்சர் பெரு மக்களும் ஆற்றிய பாராட்டுரைகள் பகுத்தறிவு முழக்கங்களாக அமைந்தன. முன்னதாகவே கடலூர் நகராட்சி வரவேற்பளித்து மகிழ்ந்தது.

    விழாவிற்கு அய்யா அவர்களும் நாங்களும் சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்குரைஞருமான எஸ். ஜனார்த்தனம் அவர்களின் (பிறகு இவர் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதி மன்ற நீதிபதியாகி ஜஸ்டீஸ் எஸ். ஜனார்த்தனம் ஆகி, ஓய்வு பெற்ற பின்பும் மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஆகவும், பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டவர்) இல்லத்தில் தங்கி இருந்த அய்யா அவர்களை கழகத் தோழர்களும், பிரமுகர்களும் குடும்பங் குடும்பமாக வருகை தந்து சந்தித்து, தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துச் சென்ற வண்ணமாக இருந் தனர். விழாவையொட்டி நகரமெங்கும் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் பந்தல்களும் கலை வண்ணம் குலுங்க காட்சி அளித்தன. கழகக் கொடிகள் எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடி அனைவருக்கும் நல்வரவேற்பு அளிப்பதுபோல இருந்தன.

    விழா சார்பாக மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள். சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி நின்று மலர் மாலைகள் அணிவித்து, அன்பளிப்பாக பழங்களும், ரூபாய் நோட்டுகளும் வழங்கி, தங்களை வாழ வைத்த தானைத் தலைவருக்குத் தன் நன்றிக் காணிக்கையைத் தெரிவித்துக் கொண்டனர்.

    பல்லக்கில் துவக்கத்தில் தந்தை பெரியார் அவர்களும் பவனி வந்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் பல்லக்கில் அமர்ந்து வர மிகவும் கூச்சப் பட்டு எங்கேயிருக்கிறார் என்று எவருக் கும் சொல்லாமலேயே தேவனாம் பட்டினம் கடற்கரை அருகில் இருந்த ஈ அய்.டி. பாரி நிறுவன பங்களாவுக்கு சென்று விட்டார். ஊர்வலத்தில் தந்தை யும் தனயர்களும் அமர்ந்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கடலூர் மக்கள், தந்தைபெரியார்மீது செருப்பு வீசியவர் கள், அய்யாவின் கொள்கை வெற்றியைக் கண்டு பூரிக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தோம்.

    அய்யாவை மட்டும் அமர வைத்து திருப்பாதிரிப்புலியூரில் ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு, காரை எடுக்கச் சொல்லி, கலைஞர் சென்ற தேவனாம் பட்டினம் பங்களாவை அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கும் அமைச்சர் களுக்கும் இது அதிர்ச்சி! அவர்கள் ஊர்வலத்தில் வந்தே ஆக வேண்டும் என்று உரிமையெடுத்துக் கொண்டு வற்புறுத்தினேன். வேறு வழியின்றி, ஒப்புக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நோக்கி முதல்வருடன் நானும் அமைச்சர்களும் வந்தோம்!

    உங்களுடன் எப்போது போட்டி யிட்டாலும் வீரமணி வென்று விடுகிறார் என்று அமைச்சர் ப.உ. சண்முகம் உட்பட அனைவரும் வேடிக்கையாகக் கூற, முதல்வர் கலைஞர், அவர் பிடிவாதமாக எதையும் சாதித்தே தீருவார் என்று கூறி ரயில்வே கேட் அருகில் ஊர்வலம் வரும்போது முதல்வரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்தோம்.

    தமிழ் ஓவியா said...

    ஜாதியை ஒழிக்க வந்த செம்மல் பெரியார் வாழ்க! இனக்காவலர் பெரியார் வாழ்க! சிந்தனை சிற்பி பெரியார் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் ஊர் வலம் முடிவுவரை கேட்டுக் கொண்டி ருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரிபுலியூர் கடைத் தெரு) வந்து கொண்டிருக்கையில் முதல்வர் கலைஞர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களும், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பல்லக்கிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் அமர்ந்து கொண்டார்கள். இந்தக் காணற்கரிய காட்சியைக் கண்ட தமிழர் இனம் அப்படியே உணர்ச்சி எல் லையின் உருவமாகி விட்டது! உணர்ச்சி வயப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. பெரியார் வாழ்க என்ற ஒலி முழக்கத்துடன், தஞ்சை கலைஞர்களின் அதிர்வேட்டுச் சத்தம் விண்ணையும் பிளக்கச் செய்தது. இந்த இடத்தில் மேலவைத் தலைவர் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள் அய்யா அவர் களுடன் அலங்கார பல்லக்கில் அமர்ந்து கொண்டார்கள். மக்கள் சமுத்திரத்தின் ஒட்டு மொத்த வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    அதற்கு முன்பு அங்கே அய்யா அவர்களுக்கும் அமைச்சர் பெரு மக்களுக்கும் எனக்கும் நகராட்சி மன்றத்தின் சார்பாக வரவேற்பு இதழ்கள் படித்தளிக்கப்பட்டன. அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

    Read more: http://viduthalai.in/page-2/84895.html#ixzz38ueHYmcB

    தமிழ் ஓவியா said...


    எப்பொழுதும் தொடரும் சமூகநீதிக் குடும்ப உணர்வு

    நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சமூகநீதியின் நடைமுறைக்குப் பங்களித்த முக்கியமான தலைவர் ஆவார். சமூகநீதிக்கான உந்துதல் உணர்வினை பெரியார் இயக்கத்திலிருந்தும், இயக்கத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடமிருந்தும் பெறுவதாக அடிக்கடி, கூட்ட மேடைகளில் வெளிப் படுத்தியவர்.

    சமூகநீதி சார்ந்த பொது நிகழ்ச்சிகள் அய்தராபாத் நகரில் நடைபெறும் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமது சொந்த விருந்தினராகக் கருதி அன்பினைப் பொழிந்தவர். தமிழர் தலைவரை விடுதியில் தங்கிட அனுமதிக்கமாட்டார்கள். தமது வீட்டிலேயே தங்க வைத்து, உணவு அளித்து ஒரு குடும்ப உணர்வோடு, கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர்.

    நீதியரசர் மறைந்த பின்னரும், அவர்தம் பெயரால் அமைந்த கல்வி அறக் கட்டளை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட தமிழர் தலைவர் அய்தராபாத் நகருக்குச் செல்லும் பொழுதெல்லாம் நீதி யரசரின் குடும்பத்தாரும் அதே வழக்கத்தை - வீட்டிலேயே தங்க வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றபின் வழி அனுப்பிடும் வழக்கத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

    தமிழர் தலைவருடன் செல்லும் பிற தோழர்களும், நீதிபதி சுவாமி குடும்பத்தார்களின் விருந்தோம்பில் திளைத்திடுவர். சுவாமி அவர்களின் துணைவியார் ஜெயலட்சுமி அம்மையார், மகள் சவீதாகுமாரி, மருமகன் சுதாகர் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் தமிழர் தலைவரின் வருகையை சொந்தக் குடும்பத்தவர் வருகையாகவே கருதிடும் வழக்கம் இந்த முறை சென்றபொழுதும் தொடர்ந்தது.

    நீதியரசர் சுவாமி அவர்களின் சமூகநீதிக் கொள்கை உணர்வு, குடும்ப உணர்வாகவே தொடர்வது மிகவும் பாராட்டுதலுக்குரியது; அனைவரும் போற்றத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page-8/84885.html#ixzz38ufxwonY