Search This Blog

24.6.14

இஸ்லாமியர்க்கு இடஒதுக்கீடு கேள்விக்குறியா?





16ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவ வெறி பளிச்சிட்டது. தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸின் அறிவுரை பெற்றுதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். (டில்லியில் பேட்டி 12.4.2014)

தேர்தலில் பி.ஜே.பிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்ட நிலையில், அதன் அமைச்சர்கள் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கண்டுள்ளவற்றைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர் என்பதற்கு அடையாளம்தான் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளதாகும்.
முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல; பார்சிகள்தான் சிறுபான்மையினர்; புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அனைத்து சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும். குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இது சிறுபான்மையினர் அனைவருக்கான அமைச்சகம். 2001ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கின்படி, இந்தியாவில் 138 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதாவது 13.4 விழுக்காடு. எனவே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உண்மையில், பார்சிகள்தான் சிறுபான்மையினர். ஏனென்றால், அவர்களது எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்கள் சமுதாயம் அழிந்துவிடாமல் பாதுகாக்க அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது. காங்கிரஸ்தான் அவ்வாறு செய்தது. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் வாழ்வை முன்னேற்ற வழி அமைக்கும் ஒரு தீர்வாகிவிட முடியாது. அது ஒரு சாக்குப் போக்கு அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவதைப் பற்றியது அல்ல. அதை அனுமதிக்கவும் செய்யாது. நாங்கள் அனைவருக்காகவும் பாடுபடத் தயாராக இருக்கிறோம். புதிய அரசு சச்சார் கமிட்டியின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கல்வி மூலமாக வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டுமே தவிர சிறுபான்மை யினருக்கான கல்வி நிறுவனங்களை வளர்ப்பது கூடாது -_ இவ்வாறு நஜ்மா ஹெப்துல்லா கூறினார்.
------------------ (ஒன் இந்தியா தமிழ்.இன், 28.5.2014)
பிஜேபி அரசின் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சர் தாவர்சந்த் கெல்லட் கூறி இருப்பதாவது: முந்தைய காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு அளிக்க முயன்ற 4.5 சதவீத இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையிலானது என்பதால் அது சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறியுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மதரஸாக்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி மத்திய அரசு தரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.


இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால் பி.ஜே.பி.யினர் தங்களின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த கோதாவுக்குள் குதித்துவிட்டனர் என்பது வெளிப்படை.
நீதிபதி சச்சார் ஆணையத்தின் அறிக்கையில்  ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் கல்வியை இடையில் கைவிடுவதுதான். கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வருவதைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. 2008இல் சிறுபான்மையினருக்குப் படிப்புதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி 75 விழுக்காடு செலவினை மத்திய அரசும் 25 விழுக்காடு செலவினை மாநில அரசும் ஏற்கவேண்டும். இந்தத் திட்டம் தொடங்கியது முதல் குஜராத் மாநிலத்தில் எவர் ஒருவருக்கும் இந்தப் படிப்புதவித் தொகை வழங்கப்படவே இல்லை; மத்திய அரசு இதற்காக ஒதுக்கிய நிதி அனைத்தும் செலவிடப்படாமல் வீணாகப் போனது.

முதலில் இந்தத் திட்டம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்று குஜராத் அரசு கூறியது. ஆனால், இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டப்படி சரியானதுதான் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 2009இல் தீர்ப்பளித்தது. 1979ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் கல்விக்கு உதவும் திட்டம் ஒன்று இருப்பதாகவும், அதனால் இந்தப் புதிய திட்டம் தேவையில்லை என்றும் குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிறுபான்மை விவகாரத் துறை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் 52,260 முஸ்லிம் குழந்தைகளுக்குப் படிப்புதவி வழங்கலாம் என்று குறிப்பிட்டது. ஆனால், படிப்புதவி பெறாத மற்ற சிறுபான்மைக் குழந்தைகளிடம்  இது மன எரிச்சலை ஏற்படுத்தும் என்று கூறிய குஜராத் அரசு எவருக்கும் படிப்புதவித் தொகையை வழங்கவே இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வாறு 60,109, பிகாரில் 1,45,809, உத்தரப்பிரதேசம் 3,37,109 சிறுபான்மைக் குழந்தைகளுக்குப் படிப்புதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய சேம்பிள் சர்வே அமைப்பின் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி, டில்லி தேசிய பொருளாதார ஆய்வுக் கவுன்சிலின் அபுசாலே ஷெரீப் என்பவர், குஜராத் மாநிலத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கும் முஸ்லிம்களில் நால்வரில் ஒருவர்தான் இடைநிலைக் கல்வியை முடிக்கின்றனர் என்றும், குஜராத் நகர்ப்புறங்களில் உள்ள முஸ்லிம்கள் உயர்ஜாதி இந்துக்களைவிட எட்டு மடங்கு ஏழைகளாக இருக்கின்றனர் என்றும் கணக்கிட்டுக் கூறுகிறார்.
குஜராத் மாநில வங்கிகளில் சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்விக் கடன் கொடுப்பதில்லை. ஒரு எம்.பி.ஏ. மாணவன் 1.25 லட்சம் கடன் கேட்டபோது, சொத்து ஜாமீன் வேண்டும் என வங்கி கேட்டுள்ளது. ஆனால் 4 லட்சம் வரை சொத்து ஜாமீன் கேட்கப்படக் கூடாது என்பது விதி. கல்விக் கடன் கேட்பவர்களிடம் வருமான அறிக்கைகளும், பான்கார்டும் கேட்கப்படுகின்றன. இவை தேவையே இல்லை. குஜராத் மாநிலத்தில் தமது சிறுபான்மை எதிர்ப்புக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்ட நரேந்திர மோடிதான் இன்றைக்கு இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் என்பதை முக்கியமாக மனதிற் கொண்டால்தான் இன்றைய பி.ஜே.பி இந்துத்துவா அரசின் குடலைப் பிடுங்கும் சமூகநீதிக்கு எதிரான துருநாற்றத்தை உணர முடியும்.

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட சச்சார் ஆணையம் அளித்த சிபாரிசுகளைத் தொடர்ந்து முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் ஒன்று சென்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைக்கப்பட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீதம் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான (ளிஙிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வெளியே தனியாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதில் ஏதாவது சிக்கல் ஏற்படுமேயானால், அதிலிருந்து விடுபட ஒரு வழியையும் நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம் தெரிவித்துள்ளது.

மாற்று ஏற்பாடாக தற்போதைய இதர பிற்படுத்தப்பட்டவருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் 8.4 சதவீதம் அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், அந்த உள் ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியாக ஆறு சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவை கூடி (22.12.2011) சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடாக (ளிஙிசி- 27 சதவீதத்தில்) அளிப்பது என்று முடிவு செய்தது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு மூன்றரை சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டதே!
இந்த நிலையில் சட்டத்தில் இடம் இல்லை என்ற பூச்சாண்டி செல்லுபடியாகாது.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு ஏன் தேவை என்ற விருப்பு _ வெறுப்பினை நீக்கி கவனித்தாக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் உண்மை புலப்படாது.

இந்தியாவில் இஸ்லாமியர்களின் கல்வி நிலை

இந்தியச் சிறுபான்மை இனத்தவர்களாகிய முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் வெறும் 59.1 விழுக்காடு மட்டுமே. இந்திய முஸ்லிம் குழந்தைகளில் ஏறக்குறைய 35 விழுக்காட்டினர் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத நிலை இன்னமும் நீடிக்கின்றது. பள்ளியில் சேரும் முஸ்லிம் குழந்தைகள் 44 விழுக்காட்டினரே பள்ளிப்படிப்பை முடிக்கின்றார்கள். மீதி பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். கிராமப்புற முஸ்லிம்களுக்குள் பட்டப்படிப்பைப் பயின்றோர் எண்ணிக்கை 0.8 விழுக்காடு, நகர்ப்புறத்தில் 3.1 விழுக்காடு, மேற்பட்டப்படிப்பை முடித்தோர் எண்ணிக்கை 1.2 ஆகும். இந்திய அளவில் முஸ்லிம் பட்டதாரிகள் எண்ணிக்கை 3.6 விழுக்காடே ஆகும்.

பொருளாதார நிலையில் இந்திய கிராமப்புற முஸ்லிம்களுக்குள் 64.9 விழுக்காடு பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். 45 விழுக்காடு நகர்ப்புற முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், கிராமங்களில் உள்ள விவசாயத்தை நம்பியே உணவு உற்பத்தி இருந்து வரும் சூழல், விவசாயத்துறையிலாவது விற்பன்னர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்களா என்றால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
இந்தியாவில் ஏறக்குறைய 2 கோடி விவசாயிகள் சொந்தமாக டிராக்டர்கள் வைத்துள்ளனர். அதில் சொந்த டிராக்டர் வைத்துள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 2.1 விழுக்காடேயாகும். இதிலும் முஸ்லிம்களின் நிலை பாவமாகத்தான் உள்ளது. மிகப்பெரும் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்குள் முஸ்லிம் நிறுவனங்கள் ஒரு கை விரலுக்கும் குறைந்த எண்ணிக்கை எனில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை எப்படி என்று உணரலாம்.

ஊடகத்துறை

ஜனநாயகத் தூண்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஊடகத் துறையில் தமிழகத்தில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் ஆசிரியர், துணையாசிரியர், உரிமையாளர் போன்ற நிலைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 விழுக்காடே ஆகும்.
தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ ஊடகத்துறைக்குச் செய்திகளை வழங்கும் எந்தவொரு பெரிய நிறுவனமும் முஸ்லிம்களின் கையில் இல்லை.
இந்திய ஆட்சித்துறை

இந்திய ஆட்சித்துறைப் (அய்.ஏ.எஸ்.) பணியில் 1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 1069 ஆகும். இதில் 9 பெண்கள் உள்பட முஸ்லிம்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதாவது 2.92 விழுக்காடே ஆகும்.

அகில இந்திய அளவில் இன்றைக்கும் யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலுள்ள அய்.ஏ.எஸ். அந்தஸ்தில் பணியாற்றிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை 4456 ஆகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 132 அதாவது 2.96 விழுக்காடாகும். இந்திய அளவில் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் ஒரு முஸ்லிம்கூட, 01.08.2010 கணக்கின்படி இல்லை.

இந்திய அயலகப் பணி

இந்திய அயலகப் பணிக்காக (அய்.எஃப்.எஸ்.) 2002 முதல் 2010 வரை 9 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 407 பேரில் 9 பேர் மட்டுமே முஸ்லிம்கள்;  இது 2.2 விழுக்காடாகும். மத்திய தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) மூலம் 2001 முதல் 2010 வரை 10 ஆண்டுகளில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., அய்.எஃப்.எஸ். மற்றும் குருப் ஏ பணியிடங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 3240 ஆகும். இதில் முஸ்லிம்கள் 170 பேர், அதாவது 3.2 விழுக்காடாகும்.
ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி உள்பட வங்கிப் பணிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.2 விழுக்காடாகும்.

இராணுவம்
மத்தியத் தேர்வாணையம் மூலம் இந்திய மிலிட்டரி அகாடெமிக்கு 2011ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 242 பேரில் 2 பேரே முஸ்லிம்கள். அதாவது 0.8 விழுக்காடே ஆகும். அதே போல் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 579 பேரில் 3 பேரே முஸ்லிம்கள். அதாவது 0.5 விழுக்காடே ஆகும்.
மத்திய அரசுப்பணி
மத்திய அரசின் ஆறாம் மத்திய சம்பளக் குழுவின் பரிந்துரைப்படி உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளம் ரூபாய் 80,000 என நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படைச் சம்பளம் 80,000 பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை 208, இதில் முஸ்லிம்கள் வெறும் 4 பேர் மட்டுமே. அதாவது 1.92 விழுக்காடாகும். மத்திய அரசுச் செயலாளர்களாகப் பணிபுரியும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 78 பேர்கள். அவர்களுள் ஒருவர் மட்டுமே முஸ்லிம். அதாவது 1.28 விழுக்காடு ஆகும்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24.
இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் ஒரு இஸ்லாமியர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதேபோல் அதிகமாக இஸ்லாமியத் தொழில் அதிபர்கள் வாழும் மகாராஷ்டிராவிலும் ஒரு இஸ்லாமியர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.  மேற்குவங்கம் _ 8  ஜம்மு காஷ்மீர் _ 4  பிகார் _ 4  கேரளா _ 3  அஸ்ஸாம் _ 2  ஹைதராபாத் (சீமாந்திரா) _ 1  தமிழ்நாடு _ 1  லட்சத்தீவு _ 1
தமிழ்நாட்டில்...

தமிழக முஸ்லிம் மக்களின் மொத்த மக்கட்தொகை 8%க்கும் மேல். அரசுப்பணியில் வெறும் 1.9% பேர்தான் உள்ளனர். அதிகாரமிக்க அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் பணிகளில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர்.
காவல் துறையிலும் சதவீதக் கணக்கு மிகமிகக் குறைவாக உள்ளது.
இன்றைக்கு சிறுபான்மையினர் பற்றிப் பேசத் தலைப்பட்டுள்ளோம்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்; சென்னை மாநிலத்தில், நீதிக்கட்சி ஆட்சியின்போது இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பித்த ஆணைதான் அந்த அதிசயம். (அரசு ஆணை எண் 1880 -_ கல்வி _ நாள்: 15.9.1928).

மொத்தம் 12 இடங்கள் என்றால்
பார்ப்பனர் அல்லாதாருக்கு 5
பார்ப்பனருக்கு 2
முகமதியர் 2
ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்தவரும்    2
தாழ்த்தப்பட்டவர் 1
மொத்தம்     12
மொத்தம் 12 இடங்களில் சிறுபான்மையினருக்கும் 4 இடங்கள் என்றால் 33 சதவீதம் ஆகிறதே! முஸ்லிம்களுக்கு 16 சதவீதம் அளித்தது திராவிடர் இயக்க ஆட்சியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதிக்கட்சி அமைச்சரவையில் தான் முதன்முதலாக பி.கலிஃபுல்லா சாகிப் பகதூர் என்ற முஸ்லீம் அமைச்சராக இருந்தார். (1937)

கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதம் அளித்ததால் (15.9.2007) ஏற்பட்ட விளைவைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாததற்கு முன்பு 2006இல் மருத்துவக் கல்வியில் அவர்கள் பெற்ற இடம் வெறும் 46, 2007_2008இல் பெற்ற இடங்கள் வெறும் 57. 2008_2009 இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட மகத்தான மாற்றம் இதோ:

2008_2009இல் முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடங்கள் 80. அதேபோல பொறியியல் கல்லூரியில் 2007_2008இல் பெற்ற இடங்கள் 2125. இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் 3288. 2009_2010இல் பொறியியல் கல்லூரியில் பெற்ற இடங்கள் 3655.

இது மட்டுமல்ல. சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குக் கலைஞர் ஆக்கப்பூர்வமாகச் செய்தவை சாதாரணமானதல்ல.
1973இல் உருது பேசும் லப்பைகள், தெக்கனி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

சிறுபான்மையினர் நல ஆணையம் (13.2.1988), தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் (1.7.1999) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மய்யம், சிறுபான்மையினருக்கான தனி இயக்குநரகம் (6.4.2007) ஆகியவற்றை உருவாக்கியது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான்.

நியாயமான காரணங்களுக்காக _ உண்மையான திராவிடர் இயக்கத்தின் சமூகநீதிப் பார்வையில் செய்யப்பட்டவை இவை.
இதற்கு மாறாக காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், இந்துத்துவ, வெறிகொண்டு சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்குத் தடைக்கல் போடுவதற்கு இன்றைய பி.ஜே.பி. அரசு முனைப்புக் காட்டுமேயானால், அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

மதத்தையும், சமூகநீதியையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பி தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்ளும் வேலையில் இறங்கினால் அதனை யார்தான் தடுக்க முடியும்?




அ.இ.அ.தி.மு.க. பார்வையில்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கண்ணோட்டம் எப்படிப்பட்டது? இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இல்லையே! அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே! என்று பதிலளித்ததும், செய்தியாளர்கள், சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் இல்லை. கிறித்தவர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது கருத்தை வெளியிட்டார்.

                          ------------------------- (தீக்கதிர் _ 23.7.2004)



நீதிமன்றத் தீர்ப்பு
நாடார் ஜாதி என்பது, தமிழக அரசின் ஜாதிவாரிப் பட்டியலில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இந்தச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் இஸ்லாத்தைத் தழுவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்_2 தேர்வில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்றார்.

பின், தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், தீயணைப்பு நிலைய அதிகாரி பணி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவரை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருத முடியாது; அவரைப் பொதுப் பிரிவினராகவே கருத முடியும் என்று சொல்லி, அவருக்குப் பணி ஒதுக்க மறுத்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அலைக்கழிக்கப்பட்ட, இந்தப் பெண்ணுக்கு நீதிமன்றத்தை நாடி பரிகாரம் காணுவதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பெண் ரிட் மனுத்தாக்கல் செய்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தீயணைப்புத் துறை அதிகாரி பணி வழங்கும்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி _ உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெண்ணுக்கு இடஒதுக்கீடு பெறுவதற்கான முழு உரிமையும் இருக்கிறது. எனவே அவருக்கு தீயணைப்பு அதிகாரி பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.

                              ---------------(உணர்வு, ஏப்ரல் 18.2014)
இந்திய முஸ்லிம்களின் முதல் கல்வி நிலையம்.
மஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்ட் கல்லூரி -1875 மே 24இல் தொடங்கப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலாசாலை என்றானது.

வெள்ளைக்காரரான ஆலன் ஆக்டாவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் (1885 _ டிசம்பர் 28) கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதன் முழுப்பலனையும் சேதாரம் இல்லாமல் அனுபவித்தது இந்த நாட்டில் பார்ப்பனர்களே.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் என்ற ஒரு கருத்தை நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார். இது சரியானதுதானா?

1999இல் இயற்றப்பட்ட சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் இரண்டாம் பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியாவில் சிறுபான்மையினர் யார் என்பதற்கான அறிவிக்கையை இந்திய மத்திய அரசு 1993 அக்டோபர் 23 அன்று வெளியிட்டது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் சிறுபான்மையினர் என்று அதில் ஒப்புக்கொள்ளப்பட்டது. 2014 சனவரி 20இல் மீண்டும் இந்தப் பட்டியலில் சமணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

------------------ கவிஞர் கலி.பூங்குன்றன்  அவர்கள் “உண்மை”ஜூன் 16-30 - 2014  இதழில் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

விளக்கு

மோகனூர் சிவன் கோவிலில் கருவறை விளக்குச் சுடர் எவ்வளவுக் காற்றடித்தாலும் அணையாது எரியும். இங்குள்ள இறைவனுடைய பெயர் அசலதீபேஸ்வரர். இதன் பொருள் அணையாத விளக்குச் சுடராம்.

சவாலை சந்திக்கத் தயார் என்றால் சோதனை செய்ய நாங்கள் தயார்! கொசுறு ஒன் றுண்டு; எண்ணெய் இல்லாமல் அந்த விளக்கு எரியுமா? எண்ணெய்த் தீர்ந்து போன பிறகும் அணையாமல் எரியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82717.html#ixzz35W0JnGzc

தமிழ் ஓவியா said...


சோலார் (சூரிய) மின்வேலி அமைப்பதாகக் கூறி கருநாடகத்தில் தமிழர்களை வெளியேற்ற சதி?

மேட்டூர், ஜூன் 23_ தமிழ்நாடு - _ கருநாடகம் - எல்லைப் பகுதியில் சோலார் மின்வேலி அமைப்பதாகக் கூறி அங்கு வாழும் தமிழர்களை வெளியேற்றும் சதி வேலை கருநாடகத்தில் நடக்கிறது.

கர்நாடகா _ தமிழக எல்லையில், தமிழர் வசிக் கும் கிராமத்தில், சாலை யோரம் சோலார் மின்வேலி அமைக்கும் பணியை, கருநாடகா வனத்துறை துவங்கியுள் ளது. இதனால், கிராமத்தை விட்டு, வெளியேற முடி யாமல் முடங்கும் நிலையில், தமிழர்கள் உள்ளனர்.

மேட்டூர் அடுத்த, தமிழக எல்லையிலுள்ள கருநாடகா வனப்பகுதியில், பாலாற்றில் இருந்து ஒகே னக்கல் அருவிக்கு செல்லும் ரோட்டோரம், கோபி நத்தம், ஆத்துர், கோட் டையூர், மாறுகொட்டாய், ஜம்புருட்டு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இவற்றில், 420 தமிழ் குடும்பத்தினரும், 100 சோழகர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் வசிக்கின்றனர். கிராமங்களைச் சுற்றியுள்ள வனப்பகுதியை, வன உயிரின சரணாலயமாக, கருநாடகா வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பகுதியில் இருந்து, வனவி லங்குகள் வெளியேறுவதை தடுக்கவும், வளர்ப்பு கால்நடைகள், வனத்துக் குள் நுழைவதை தடுக்கவும், கருநாடகா வனத்துறை, ஆலம்பாடி கிராமத்தில், சாலையோரம் ஒன்றரை கி.மீ., துரத்துக்கு, சோலார் மின்வேலி அமைத்துள்ளது.

திட்டத்தை விரிவுபடுத் தும் பட்சத்தில், வனப் பகுதிக்குள் வசிக்கும் கிராமத்தவர், சாலையை தவிர, வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, ஜம்புருட் டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதா வது: கடந்த, 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கோபிநத்தம் மற்றும் இதர கிராமங்களில் மக்கள் வசித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.

வனப்பகுதியில், மக்கள் பெருக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, கிராமங்களில் வசிக்கும், 300 தமிழ் குடும்பத்தினர், வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என, ஆறு மாதத்துக்கு முன், கருநாடகா வனத்துறை, அறிவிக்கை கொடுத்தது.

தற்போது, ஆலம்பாடி கிராமத்தில், சோலார் மின்வேலி அமைத்துள் ளது. மின்வேலி அமைக் கும் பணியை,மேலும் விரிவுபடுத்ததிட்டமிட் டுள்ளது. இதனால், கால் நடைகளை நம்பி வாழு வோர், வனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கருநாடகா வனத்துறை, தமிழர் குடும்பங்களை வெளியேற்ற, மறைமுக நெருக்கடி கொடுக்கிறது.

தமிழக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, வனப்பகுதியில், மூன்று தலைமுறைக்கு மேல் வசிக்கும் குடும்பங்களை பாதுகாக்க, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82711.html#ixzz35W0mmM4c

தமிழ் ஓவியா said...


தாக்குப் பிடிக்குமா மத்திய அரசு?


எனது பெயர் கெடலாம் - என்னை மக்கள் வெறுக்கவும் செய்யலாம் என்று சில நாட்களுக்கு முன் பீடிகை போட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்படி ஏன் சொன்னார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இந்தக் குறுகிய காலத்தில் மத்தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியின் அறிவிப்புகள், முடிவுகள் நிச்சயமாகக் கெட்ட பெயரைக் கெட்டியாக சம்பாதித்துக் கொடுப்பவைதான் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், முன்பு எப்பொழுதையும்விட இப்பொ ழுது மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடியை வெகு துச்சமாகக் கருதுகிறார், சுண்டைக் காய்த் தீவான இலங்கை அதிபர் என்பதும் நிரூபணமாகி விட்டது.

எந்த விலைவாசியைக் காரணமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்தி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி மத்தியில் அமைந்ததோ, அதே காரணங்களை அட்சரம் பிறழாமல் எதிர்க்கட்சிகள் இன்றைய ஆளும் கட்சியை நோக்கித் திருப்பிச் சொல்லும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஆனால், இவ்வளவுச் சீக்கிரம் மக்களின் அதிருப் தியை இந்த ஆட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் என்று யாரும் எதிர்ப் பார்த்திருக்கவே முடியாது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள்தான். இந்த அத்யாவசியமான பொருள்களின் விலையைக்கூட நிர்ணயிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுத்தது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சி.

அதனைக் குற்றங்கூறி, சாட்டையை எடுத்துச் சுழற்றியது இதே பி.ஜே.பி.தான்; இப்பொழுது என்ன வாழ்கிறதாம்?

அதே தனியார் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் என்று மோடி ஆட்சியும் கூறி விட்டதே! அதோடு நின்றாலும் பரவாயில்லை.

இரண்டு நாட்களுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா? சமையல் எரிவாயு விலை மாதந்தோறும் ரூபாய் 10 உயருமாம். இதன் மூலம் குடும்பத் தலைவிகளின் மொத்து தயாராகி விட்டது என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து மிக முக்கியமான மரண அடி, சாதாரண மக்களும் அதிகம் பயன்படுத்துவது இரயில்தான். அந்த இரயில் கட்டணத்தை இதுவரை என்றும் கேள்விப் பட்டிராத - நடந்திராத வகையில் 14.2 சதவீத உயர்வு என்றால், கேட்கும் போதே தலையைச் சுற்ற வில்லையா? சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட் டுள்ளது (6.5 சதவீதம்) இதன் மூலமும் விலைவாசிகள் உயர்வு எகிறிப் பாயப் போகிறது.

ஏற்கெனவே பண வீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நிலையின் இடுப்பையும், முதுகையும் ஒரே நேரத்தில் பிளப்பது என்று மத்திய பிஜேபி அரசு முடிவு கட்டி விட்டதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் கட்டுக்கடங்காமல் கொந்தளித்து எழுந்துள்ளது. குறிப்பாக டில்லி, உ.பி., பீகார் போன்ற வட மாநிலங்கள் உக்கிரமாகக் கிளர்ந்துள்ளன. இந்தத் தீ எளிதில் அணைந்து விடப் போவதில்லை; எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாகப் பரவத் தான் செய்யும்.

இரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காரணம் சொல்லுகிறார்: சர்வதேச தரத்துக்கு இந்திய இரயில்வேயை உயர்த்திட இது தவிர்க்க முடியாதாம். இவர் இப்படி சொல்கிறார்; பிரதமர் மோடி என்ன சொல்லுகிறார்? இரயில்வே துறையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறுகிறார்.

இது என்ன முரண்பாடு? புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் உலகத் தரத்துக்கு இந்திய ரயில்வேயை எப்படி உயர்த்துவார்களாம்?

சர்வதேசத் தரத்திற்கு இரயில்வே மட்டும்தான் உயர வேண்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளில் நமது தரம் சர்வதேச தரத்தை எட்ட வில்லையே, அதற்காக அவற்றின்மீது வரிகளை விதிக்கலாமா?

நாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாக வளர்ப்பதன் மூலம்தான் அந்த நேர்த்தியான அணுகுமுறைகள் மூலம்தான் முறையாக அந்தச் சர்வதேசத் தகுதி எல்லையை எட்டிப் பிடிக்க வேண்டுமே தவிர, அகலக் கால் வைத்து அவதிப்படக் கூடாது. இன்னொரு காரணத்தையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பழைய காங்கிரஸ் ஆட்சியின் போதே மேற்கொள்ளப்பட்ட முடிவுதான் இரயில் கட்டண உயர்வு - நாங்களாகச் செய்த முடிவல்ல என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்லித் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். பழைய ஆட்சி செய்த தவறுக்காகத் தானே அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, பி.ஜே.பி.யை அந்த இடத்தில் உட்கார வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது இத்தகு காரணத்தை இந்த ஆட்சி சொல்லலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்? (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியே செயல்படுத்தவில்லை).

இந்தப் போக்குத் தொடருமேயானால் அய்ந் தாண்டைக் கடப்பது கூடக் கடினம்தான் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/82728.html#ixzz35W18t0MZ

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page-2/82727.html#ixzz35W1JZ1qg

தமிழ் ஓவியா said...


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:
சமூக நீதிக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி

-குடந்தை கருணா

அய்.அய்.டி கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் யிணிணி தேர்வினை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதி, அதில் 27000 தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அய்.அய்.டியில் 9784 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தரப்பட்ட நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு 2641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, நடத்தப்பட்ட தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 4085 பேர், பொதுப்போட்டியிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6726 மாணவர் கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முந்தைய அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டு, அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு அளித்திடும் மசோ தாவை நிறைவேற்றினார். அது உச்ச நீதிமன்றத்தில், பார்ப்பனர் களால் தடை பெற்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து 2008 முதல், அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப் பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதி, திறமை குறைந்துவிடும் என பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் JEE தேர்வில், பொதுப்போட்டியில், பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளி, 4085 மாணவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்பது சமூக நீதிக்கும், பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Read more: http://viduthalai.in/page-2/82733.html#ixzz35W1TGb6Z

தமிழ் ஓவியா said...


கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்

இந்தியா பெரும்பகுதி கிராமப்புறங்கள் நிறைந்த நாடாகும். அதே போன்று கருநாடக மாநிலத்திலும் கிராமங்கள் நிறைந்துள்ளன. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா கிராமப்புற மக்களுக்கும் சரி நிலையில் சென்றடை யாமல் உள்ளன. அந்த வகையில் முதலும் தலைமையானதுமான கழிப்பிட வசதியை எல்லாக் கிராமப் புற மக்களுக்கும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணியை தீவிர சிறப்புத் திட்டமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படவேண்டும்.

மனிதநேய மிக்க செயல்பாடுகளில் முக்கியம் கருதி செயல்படும் கருநாடக மாநில முதலமைச்சர் அவர்கள் இன்றி யமையாத எல்லா வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தினை செயல்வடிவம் கொடுத்து இரண்டு நிதியாண்டிற்குள் முடித் திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேணுமாய் முதலமைச்சர் அவர் களை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிராமப்புற பெண்கள் கழிவறைகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துகின்ற விழிப்புணர்வை தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக முக்கியத்துவம் பணிகளைச் செய்வதில் இந்தியாவிலேயே கருநாடகம், முதன்மை யாதென்ற செயலிலும், முதன்மையான தென்றே வரலாற்றுச் சுவடினை உரு வாக்கிட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல், சமூகச் சீர்திருத்தங்களை கிராமப் புறங்களில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் எல்லா கிராமபுறங்களிலுள்ள வீடு களுக்கு கழிவறைகளும், தாலுக்கா தலை மையிடங்களில் பொதுக் கழிவறைகளை அமைக்க வேணுமாய் மிகுந்த அக்கறை யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page-2/82732.html#ixzz35W1gcBTD

தமிழ் ஓவியா said...

முதியோர் - இளையோர் - கூட்டு இணைவதாமே!

15.6.2014 நாளிட்ட தீக்கதிர் - வண்ணக்கதிரில் - பொருள் பொதிந்த கட்டுரையொன்றை தோழர் அ.குமரேசன் அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார்.

இளைஞர்கள், குடும்ப உறவுகள் - உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது.

முதியவர்களாகும் நம் பெற்றோர்களிடம் குடும்பத்தில் உள்ள உறவுகள் எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக அறிவுப் பூர்வமாக எழுதியுள்ளார்,

... வசவுச் சொற்கள், உணவு பரிமாறுவதில் அலட்சியம், நோய் வாய்ப்படும் காலத்தில் காட்டப்படும் எரிச்சல் போன்ற நேரடி அவமதிப்பு களை விடவும் முதியோர் அனுபவிக் கிற கொடுமை ஒன்று உண்டு.

தங்களுடைய உணர்வுகளை, கருத்துகளை சிந்தனைகளை, எதிர் பார்ப்புகளை வெளிப்படுத்த முடிவ தில்லை என்ற கொடுமைதான் அது!

எந்த ஒரு பிரச்சினையிலும் பிள்ளைகள் கூடி முடிவெடுக்க அதில் தங்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை, அதற்குக் காரணம் முன் போல பொருளாதார அடிப்படையில் தாங்கள் தீர்மானிக்கிற இடத்தில் இல்லை என்று உணர்கிற பொழுதில் ஏற்படுகிற இழப்புணர்வு, எவர் ஒருவர் கம்பீரத்தையும் காணாமல் அடித்து விடும்.

நான் எதிர்பார்த்ததெல்லாம் என் பேச்சைக் கேட்க வேண்டும்; என்னிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். என்றெல்லாம் அல்ல. எல்லோரும் கலகலப்பாக அரட்டை அடித்துக் கொண்டும், ஜோக் சொல்லிக் கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டும் இருக்கிறபோது அதில் என்னை யும் சேர்த்துக் கொள்ள வேண் டும் என்பதுதான். சொந்தக் காரர்கள், நண்பர்களோடு இருக்கிறபோது, உள்நோக்கம் இல்லாத கேலிக்கு உள்ளாவதில் பதிலுக்கு அவர்களை நாம் கிண்டலடிக்கிற மகிழ்ச்சியே அலாதியானது - ஒரு பெரியவர் வெளிப் படுத்திய இந்த உணர்வு, மூத்தவர்களைக் கையாள்வது தொடர்பாக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது.

தமிழ் ஓவியா said...

மற்றொரு முக்கிய தகவலும் தருகிறார் தோழர் குமரேசன். உலகம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகை 1995ஆம் ஆண்டில் 54 கோடியே 20 லட்சமாக இருந்தது. 2025இல் அது 120 கோடியாக அதிகரிக்கும்.

உணவு ஊட்டச்சத்து, மருத்துவம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ஒப்பீட்டள வின் வளர்ச்சியின் காரணமாக மூத்தோர் மக்கள் தொகை இவ்வாறு பெருகுகிறது.

இந்த வளர்ச்சியின் பலன் முழுமை யடைவது என்பது அவமதிப்புகள் முடிந்து போவதோடு இணைந்ததாகும்.

முதியவர்களில் 4 முதல் 6 விழுக் காட்டினர் தங்கள் வீடுகளில் ஏதோ ஒரு வகையிலான அவமதிப்புகளை அனுப விக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. இது உலக அளவிலான ஒட்டு மொத்தக் கணிப்புதான். நாட்டுக்கு நாடு இந்த விழுக்காடு வேறுபடும்

- கூட்டுக் குடும்பம் இல்லாத நாடுகளின் குடும்பப் பிரச்சினை ஒரு வகை; கூட்டுக் குடும்ப முறை உள்ள நம் நாடு போன்ற நாடுகளின் பிரச்சினையின் பரிமாணம் பளிச் சென்று தெரியும்.

மருத்துவமும், உடல் ஆயுள் வளரு தற்குரிய உதவியைச் செய்கிறது; ஆனால் உள ரீதியாக மகிழ்ச்சியை வயதான முதியவர்களுக்கு இளையவர்கள் தங் களால் அளிக்க முடியும் என்ற உறுதி யுடன் அன்பு, பாசம், மரியாதை காட்ட முன் வர வேண்டும்.

வேகமாக (Fast Life) ஓடிக் கொண் டுள்ள இன்றைய வாழ்க்கைக் களத்தில், அதிக நேரம் மூத்தவர்களிடம் இளைய வர்கள் செலவழிக்க முடியாத நிலைதான். ஆனால் நேரம் முக்கியமல்ல; நண்பர் களே, இளைஞர்களே உங்கள் அன்பான இதமான விசாரிப்பும், இதய விரிப்பும், கனிவும் தான் முக்கியம்!

இது உங்கள் பெற்றோர் நலத்திற்காக நீங்கள் செய்யும் உதவியல்ல; உங்கள் எதிர்காலத்தைக் கருதியும்கூட, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வருங்கால தனிமைச் சிறையி லிருந்து, வருங்கால அலட்சிய அவமானத் தாக்குதல்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள, வருமுன்னர் காக்கவே, உங்கள் பெற்றோர்களிடம், முதியவர்களிடம் அன்பும் மரியாதையையும் காட்டி ஆக வேண்டும்; எப்படி என் கிறீர்களா? உங்களுக்கும் முதுமை வருமே! அப் போது உங்கள் பிள்ளைகள் - பேரப் பிள்ளைகள் உங்களை மதிக்க வேண் டும் என்று எதிர்பார்க்க அப்போது தான் உங்க ளுக்கு உரிமை உண்டு!

எனவே வீட்டில் உள்ள முதியவர்களுக்கென 24 மணி நேரத்தில் சில மணித்துளிகளையாவது ஒதுக்கி, கனிவு பொங்க விசாரியுங்கள்; கண் எதிரே காட்டும் மரியாதையை கண்ணுக்குப் பின்னும் காட்டி உங்களை கண்ணியத்திற்குரியவர்களாக உயர்த் திக் கொள்ளுங்கள்.

பிறக்கும்போது அழுது கொண்டே இந்த மண்ணுக்கு வந்தவர்கள், இறக்கும்போது மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு சிரித்துக் கொண்டே தம் மக்கள், தம் சுற்றம், தம் நட்பு வட்டம், சமூகம் - இவைகளிடமிருந்து விடை பெறுவதற்கு வாய்ப்பாக அது அமையும்!

முதியவர்களும், இளைஞர்களுக் குத் தொல்லையாக அமையாமல் புரிந்துணர்வோடு நடப்பது அவசியம்.

இளமையும் முதுமைக்கான அவர்தம் ஆதரவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் நிலையில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது? எத்தனைக் கோடி, எவ்வளவுப் பெரும் பதவி, எத்தகைய பெரும் பட்டம் - இவைகளால் அது உண்டா காது; உண்டாக்க முடியாது!

-கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/82729.html#ixzz35W1sPMno

தமிழ் ஓவியா said...


இதய நலம் காக்கும் வெங்காயம்


வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக் கிறது. சளி பிடித்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்ற தின்று, வெந்நீர் குடித்தால் சளி குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத் தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

நெஞ்சு படபடப்பு

நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங் காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயச்சாறு

* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Read more: http://viduthalai.in/page-7/82744.html#ixzz35W2Vq184

தமிழ் ஓவியா said...


உடலை சீராக வைத்திருக்கும் புரோட்டீன் உணவுகள்


ஆரோக்கியம் தரும் பருப்பு வகை சமையல்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட் டீன்கள் நிறைய உணவு வகைகளில் உள்ளன.

அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன் றவை உள்ளது. ஆனால், சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள் ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. அது ஓவ்வொன்றும் பல சத்துக்களை கொண் டுள்ளது. அவற்றில் பொதுவான ஓன்று என்றால் அதில் குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்,.

மேலும் இதனை தொடர்ச்சியாகவும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் பருப்புகளின் வகைகளையும் அவற்றின் பயன் களையும் அறிவோம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நிறைந்த அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டா சியம், அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்ப தற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டு மல்லாமல் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சைபயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன் கால்சியம், பொட்டாசியம் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் உணவுகள் எளிதில் செரிமானமடைவதோடு உடல் எடை மறறும் கொலஸ்ட் ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புசத்து, காப்பர், மாங்கனீசு, போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டக்கடலையின் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புசத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சினை களையும், ரத்தசோகை பிரச்சினைகளையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட் மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலைவிட இரு மடங்கு அதிக புரோட்டீனை கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வைட்மின்கள் பி6, இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டைபயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்கமுடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதயநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டா சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந் துள்ளது. இதனால் தசைச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும் தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமசத்துகளும், வைட்ட மின்களும் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடலாம்..

Read more: http://viduthalai.in/page-7/82743.html#ixzz35W2h8WJR

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

Read more: http://viduthalai.in/page-7/82749.html#ixzz35W2txaFP

Unknown said...

Hi can u keep Facebook and tweeter pleas

தமிழ் ஓவியா said...


அல்லா கிறித்தவர்கள் பயன்படுத்தலாமா?


கோலாலம்பூர், ஜூன் 24- "அல்லா" என்ற வார்த் தையை முஸ்லிம் கட வுளைக் குறிக்க மட்டுமே என்று மலேசிய உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. மலேசியாவில் சிறுபான் மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந் நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்நாட் டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேரில் 3பேர் ஏற்காமல் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். மலேசியாவில் 2007_லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத் தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத் துக்குக் கொண்டு செல்லப் பட்டது. முதல் கிழமை நீதிமன்றத்தில் கத் தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால், அத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது. பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக் கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச் சையை அடுத்து, அரசால் இந்தச் சொல் கிறித்த வர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டு களாகவே தாங்கள் பயன் படுத்தி வருவதாகக் கிறித்த வர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர் களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத் துகின்றனர். ஆனால், இந்த வார்த் தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம் களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற் றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருள்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடி வடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறி னார். இந்தத் தீர்ப்பை மறு ஆய்வ செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய இதழ்களில் வெளி வந்திருக்கும் செய் திகள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/82778.html#ixzz35c4TfW00

தமிழ் ஓவியா said...


முதியோர்களே, காலத்தைக் கட்டி அணையுங்கள்!

முதியோரின் ஆயுள் - வாழ்வு வளருகிறது; காரணம் மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி - அரிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் மருந்து வகைகள்.

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வளர்ச்சியே அறிவியலோடு தொழில் நுட்பமும் இணைந்து கொண்டதுதான்! அதனால் புதுப்புது மருத்துவக் கருவிகள் உண்டாக்கப்பட்டு எளிதில் கிடைக்கிறது! மனித வாழ்வு நீளுகிறது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், ஒரு சிப் போன்ற ஒன்று எளிதில் - கணினியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அணியும் காலணி (ஷூ Shoes)யிலோ அல்லது கழுத்தில் கட்டப்படும் டையிலோ சொருகி வைத்தவுடன், அதை அணிந்துள்ள வர்களது இதயத் துடிப்பு சீரின்மை யானாலோ, ரத்தக் கொதிப்பு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ ஆனாலோ இந்த சிப் மூலம் அவரது குடும்ப டாக்டருக்கு உடனே தகவல் சென்று விடுமாம்! உடனடியாக டாக்டர் விரைந்து வருவாராம்! சிகிச்சை தொடங்கப்படுமாம்!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் இன்சுலின் அளவு எவ்வளவு தேவை என்பதை ஒரு புதுக்கருவி, ஊசியேற்றுகையில் அவருக்குத் தகவல் தெரிவித்து, தேவையான அளவு (Optimum) போட்டுக் கொள்ள உதவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழில் நுட்பம் (Technology) மூலம் பெறும் பயன் அல்லவா?

இதுபோல தொழில் நுட்பத்தினால் நமக்கு நடக்கும் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சைகளை படுத்துக் கொண்டுள்ள மேசையிலிருந்தே, மயக்க ஊசி மூலம் மயக்கம் ஏறுகிற வரையில் பார்த்துக் கொள்ளலாமே! (எனக்கேகூட சில ஆண்டுகளுக்குமுன் அந்த இனிய வாய்ப்பு - பார்த்த வாய்ப்பு கிடைத்தது!)

முதியவர்களுக்கு மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் வரை, எந்த அறுவை சிகிச்சையையும் செய்திட மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தயங்குவதே இல்லை.

தந்தை பெரியார் அவர்களுக்கு அவர்தம் 90ஆம் ஆண்டு - 91ஆம் ஆண்டில் வேலூரில் டாக்டர் H.S. (Bhatt) பட் அவர்கள் குழுவினரால் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து அதற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் வாழ்ந்தாரே! (அவ ரது 5 ஆண்டு என்பது மற்றவர்களின் 15 ஆண்டு வாழ்வு நீட்டத்திற்குச் சமம் ஆகும்).

எனவே வாழ்வு நீட்டப்படுவது அதி சயம் அல்ல; அவர்கள் மகிழ்ச்சியாக வாழு கிறார்களா? என்பதுதான் முக்கிய கேள்வியாகும்!

அது உடலைப் பொறுத்தது அல்ல; உள்ளத்தைப் பொறுத்தது; மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது! அவரவர் மனநிலை சுற்றுச்சூழல் உரு வாக்கம் - சுறுசுறுப்பு, உழைப்பு இவைக ளைப் பொறுத்தது!

1. வெறும் குடும்பத்து உறுப்பினர்களை மட்டும் நம்பிக் கொண்டு வாழாமல், தங்களுடைய பொருளாதாரச் சுதந்தி ரத்தை இறுதி வரை தக்க வைத்தாலே மற்றவைகள் தானே சரியாகி விடும்! நாம் பிறர் கையை எதிர்பார்க்காமல், எளிமை, சிக்கன வாழ்வினால் ஏற்பட்ட சேமிப்பு நமக்கு என்றும் துணைவனாக நிற்கும் என்பது உறுதி. இறுதி நிகழ்ச்சிகள்கூட செலவின்றி முடிப்பதோடு அதனால் சமூக நற்பயன் விளையவும் கூடுமே! எப்படி என்கிறீர்களா?

அருகில் உள்ள மருத்துவக் கல் லூரிக்கு உங்கள் உடலைத் தந்துவிட உயில் - மரண சாசனம் எழுதி பதிவு செய்து விடுங்கள். அதன்மூலம் சுதந்திர மாக வாழ்ந்த மனிதன்; சுதந்திரமாகவே எவர் தயவுமின்றி இறுதிப் பயணத்தை மருத்துவக் கல்லூரியின் சவக் கிடங்கை நோக்கியே செல்லக் கூடும்! எந்தச் செலவும் இல்லை. கண்ணாடிப் பெட்டிச் செலவுதான் - அதுவும்கூட உயர் ஜாதியினால் தவிர்க்கப்படுகிறது. (மூங்கில் பாடைதான் சம்பிரதாயம்)

2. நல்ல நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டு காலை, மாலை நடைப்பயிற்சியின்போதோ அல்லது வசதியான நேரத்திலோ அவர் களோடு கலந்துரையாடி உறவாடும் நிலை எய்தினால், யாருக்கும் சுமை இல்லை; சுகம் உண்டு!

3. நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் அல்லவா? அவற்றை வாசித்து சுவாசிக்கலாமே!

காசு கொடுத்து வாங்க வேண்டாம். நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

4. கைத் தொலைபேசி, அய்-பேட் (i-pad) போன்றவை இருப்பின் உலகத்தையே அழைத்து, உலகச் செய்தி முதல் உள்ளூர் செய்திவரை, எந்த தகவல் பற்றித் தெரியவில்லை என்றாலும் கூகுள் போன்றவற்றைத் தட்டினால் உடனே கிடைக்குமே!

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்! என்பதற்கு புதுப்பொருள் கண்டு மகிழ்வுடன் மற்றவர்களுக்குக் குடும்பப் பாரமாய் இருக்காமல், சுதந்திர தாத்தாக்களாக, பாட்டிகளாக, அப்பா, அம்மாக்களாக வாழ்ந்து காட்டலாமே!

நம் சுயமரியாதை எப்போதும் நம் கையிலேயே இருக்குமே! இல்லையா?



- ஆசிரியர் கி.வீரமணி



Read more: http://viduthalai.in/page-2/82790.html#ixzz35c5Er3PV

தமிழ் ஓவியா said...


அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



சென்னை, ஜூன் 24- தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரி கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை. இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்பு வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக் கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத் திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண் டும் என உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-இன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய் யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தர விட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தர விட்டுள்ளார்.

கருணை அடிப்படையில் வழங் கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம் பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த வேண்டும்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/82798.html#ixzz35c5PiCI9

தமிழ் ஓவியா said...


இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துவரும் காசநோய் அறிகுறிகள்

மன அழுத்தம் அதிகரிக் கக்கூடிய அய்.டி. போன்ற தொழில்துறைகளில் பணி புரியும் இளைய தலை முறையினரிடம் உடல் ஆரோக்கியம் குறித்த பல பிரச்சினைகள் தோன்று வது என்பது சமீப காலத் தில் இயல்பாகக் காணப் படுகின்ற விஷயமாக உள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக காச நோயும் இடம் பெற்று வருகின்றது என்று கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை அளித்துள்ளனர்.

தற்போது தங்களிடம் வரும் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினர் மன அழுத் தத்தை அதிகரிக்கும் அய்.டி. போன்ற தொழில்துறை களில் பணி புரிந்து வருவது வெளிப்படையாகத் தெரி கின்றது. இவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்று தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்அய் ஆர்டி) முன்னாள் துணை இயக்குநரும், மருத்துவரு மான டாக்டர் மஞ்சுளா தத்தா குறிப்பிட்டுள்ளார்.

பணி புரிவோருக்கு ஏற்படும் மன அழுத்தமும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளுமே உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் விஷயங்களாகும் இவர் களிடத்தில் காணப்படும் காச நோய்க்கான பாதிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். எனினும் பணி நிமித்தம் ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிப்பதைக் காட்ட ஆழ்ந்த ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன என்று என் அய்ஆர்டியின் இயக்குநர் டாக்டர் சௌம்யா சுவாமி நாதன் கூறுகின்றார். அது மட்டுமின்றி நெருக்கமான மூடிய சூழலில் இவர்கள் பணி புரிவது நோய்த் தொற்றை பரப்புவதாகவே அவர் கருதுகின்றார்.

நுரையீரல் காசநோய் என்பது இவர்கள் மத்தியில் குறைவாகக் காணப்படும் போதும் வயிறு, இதயம், முதுகு, நிணநீர் முடிச்சு மற்றும் எலும்பு போன்ற பகுதிகளில் காணப்படும் வெளித்தெரியாத நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின் றார்கள். இதன் காரணமாக அவர்கள் காசநோய்க்கான சோதனைகளையோ, சிகிச் சையையோ எடுத்துக் கொள்வதில்லை. கருப்பை காசநோயால் தாக்கப்படும் இளம்பெண்கள் அதற் குண்டான சிகிச்சையை மேற்கொள்ளாமல் குழந் தைப் பேற்றிற்கான சிகிச் சையை மேற்கொண்டால் வருந்தத்தக்கதாகவே இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கின ருக்கு உள்ளுறை காசநோய் இருப்பதாக உலக சுகா தாரக் கழகம் தெரிவிக்கின் றது. இவர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் இந்த நோய்த்தொற்றின் அதிகரிக்கும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த அமைப்பின் கணக் கீடுகள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page-3/82819.html#ixzz35c6UNBZB

தமிழ் ஓவியா said...


தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள்


1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.

அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.

கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார்.

1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார்.

சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/82797.html#ixzz35c6l57MY

தமிழ் ஓவியா said...


வி.பி.சிங்


சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்!(1931)

எத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்?

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.

அந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.

இந்த ஆணையைப் பிறப்பித்த காரணத்தால், வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள அரசுக்கு ஆதரவு அளித்து வந்த பி.ஜே.பி. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, அதன்மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது.

கொஞ்சம்கூட களை இழந்துவிடவில்லை அவர் - முகமலர்ச்சியுடன் ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.

ஆட்சிக் கவிழ்க்கப்படு முன் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தோற்போம் என்று தெரிந்திருந்தும், அதற்கு வழிவகுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அருமை, அரு மையிலும் அருமையானது!

சமூகநீதியில் யார் எந் தப் பக்கம் என்பது இதன் மூலம் நாட்டிற்கு அடை யாளம் காட்டிடப் பயன் படுமே என்றார். (தமிழ்நாட் டின் அதிமுக உறுப்பினர் கள் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கைதூக்கினர்).

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைக் காணும்பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சிப் பெறு கிறேன் என்று வாயார - மனமாரப் புகழ்ந்தவர்.

சொட்டு நீர்கூட அருந் தாமல் மும்பையில் அவர் இருந்த பட்டினிப் போராட்டம், அவரது சிறுநீரகத்தைப் பாதித்தது. கடைசி வரை அதிலிருந்து அவர் மீள வில்லை.

அவருக்குச் சிறுநீரகம் அளிக்க நான், நீ! என்று முந்திக்கொண்டு கருஞ்சட்டை இளைஞரணித் தோழர்கள் சிறுநீரகம் கொடையளிக்க முன்வந்த துண்டு - நெகிழ்ந்து போனார் அந்த மன்னர் குல வழிவந்த மாண்பாளர்!

வாழ்க வி.பி.சிங்!

வளர்க அவர் நட்டு வித்த சமூகநீதிச் செடி! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82839.html#ixzz35h9ssTtO

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் பட்டாசு வெடித்து இரண்டு பேர் பலி


கள்ளக்குறிச்சி, ஜூன் 25_ விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்தில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமி வீதி உலாவின்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காண அப் பகுதியைச் சேர்ந்த ஏரா ளமானோர் திரண்டிருந் தனர். அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் வாண வெடி களை வெடித்து கொண் டிருந்தார்.

அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அருகில் சாக்கு மூட்டையில் மொத்தமாக வைத்திருந்த பட்டாசு குவியலில் விழுந் தது. இதனால் அனைத்து வெடிகளும் ஒரே நேரத் தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

இந்த வெடி விபத்தில் சிக்கி சப்பாணியும், வாண வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பித்தன் (40) ஆகிய இருவரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ரதி (29), இவரது மகள் சந்தியா (4) மற்றும் தீபா (15), கோமதி (15), கோகிலா (13), பழனி யம்மாள் (32), சித்ரா (29), லட்சுமி (50), சுப்பிர மணியன் (45) உள்பட 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம்பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. குணசேகரன் கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்துக்குச் சென்று நேரில் விசா ரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read more: http://viduthalai.in/e-paper/82845.html#ixzz35hA1oUov

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


மருத்துவம்

கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறார் களாம்?

தூய உள்ளம் - தேங் காய்ப் பருப்பு

மும்மலம் - மூன்று கண்கள்

குற்றங்கள் - நார்

தேங்காய் ஓடு உடைந் தால் வெள்ளையான தேங் காய்ப் பருப்பு வெளிப்படு கிறது. அதுபோல ஆண வம், கன்மம், மாயை என் னும் மும்மலக் கோட்டை நகர்ந்ததும் வெள்ளை உள்ளம் வெளிப்படும். இந்தத் தத்துவங்களை உணர்த்தவே இறை வனுக்குத் தேங்காய் உடைக்கப்படுகிறதாம்.

அது சரி, தேங்காயை உடைத்து பெரிய மூடியை தான் எடுத்துக் கொண்டு, சின்ன மூடியை, பக்தருக்குக் கொடுப்பதில் உள்ள சுரண்டல் தத்துவம் பற்றி ஏதும் இல்லையா ஆன்மீகத்தில்?

இந்தத் தத்துவங்களை யெல்லாம் சொன்னது யார்?

கடவுளா? உஞ்சி விருத்திப் பார்ப்பானா?

கற்பனை வளம் ததும் பும் கவிஞர்களா?

Read more: http://viduthalai.in/e-paper/82847.html#ixzz35hA9hU7L