Search This Blog

22.4.14

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்-கல்கி விமர்சனத்திற்கு விளக்கம்

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

கல்கி விமர்சனத்திற்கு நமது விளக்கம்

பழ.அதியமான் எழுதிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் எனும் நூலுக்கு கல்கி வார ஏடு (30.03.2014) விமர்சனம் எழுதி இருக்கிறது. அவ்விமர்சனத்தின் இறுதிப் பகுதியில் அதன் கும்பி எரிச்சலைக் கொட்டித் தீர்த்து இருக்கிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். அதுபோல விவரக்குறைவு காரணமாக எழுதிவிட்டது கல்கி. கல்கி எழுதிய இறுதிப் பகுதி வருமாறு:

ஜாதி வித்தியாசத்தை எதிர்ப்பதுதான் நாயுடுவின் ஈ.வெ.ரா.வின் நோக்கம் என்றால், இதே காலகட்டத்தில் _ சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காமல் இருந்தார்களே,
அது பற்றிய போராட்டம் ஏன் நடத்தப்படவில்லை

இப்படிக் கேள்வியோடு முடிகிறது கல்கியின் நூல் விமர்சனம். இதன் மூலம் சேரன்மாதேவியில் நடைபெற்றது தவறு என்பதைக் கல்கி ஒப்புக் கொள்கிறது. அதற்காக நாம் கல்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனி கல்கி எழுப்பி இருக்கிற வினாவைப் பற்றிப் பார்ப்போம். கல்கி சொல்கிற விமர்சனம் என்ன? தாழ்த்தப்பட்டோரைக் கல்லூரியில் சேர்க்காத பச்சையப்பன் அறக்கட்டளையை எதிர்த்து பெரியாரும் வரதராஜுலு நாயுடுவும் ஏன் பேராட்டம் நடத்தவில்லை என்கிறது கல்கி! பெரியார் தமது பொது வாழ்க்கையின் தொடக்கக் காலத்திலிருந்து தாழ்த்தப்பட்டோருக்காக செய்த நன்மைகள் பல பதிவுகளில் காணக் கிடைக்கின்றன. வரதராஜுலு நாயுடுவும் ஒரு சமர்கள வீரர். பெரியாரின் நண்பர். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை காட்டியவர். இவர்கள் இருவரும் செய்த அய்ம்பெரும் பணிகள் குறித்து எந்தவிதப் பாராட்டையும் தெரிவிக்கவில்லையே கல்கி, அவற்றை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு அல்லவா  இந்தக் குறையைக் கல்கி சொல்லி இருக்க வேண்டும். 

குருகுலப் போராட்டத்தில் வ.வே.சு.அய்யர் செய்தது தவறு என்று நேரடியாகச் சொல்ல மனம் துணியவில்லை கல்கி. சுற்றி வந்து மூக்கைத் தொடுகிறது.
சேரன்மாதேவி குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து நிதி உதவி பெற்று நடைபெற்றுவந்த அமைப்பு. காங்கிரஸ்  எல்லா மக்களுக்குமான கட்சி. அது ஒரு பொது அமைப்பு. விடுதலைப் போராட்டக் கட்சி. எல்லா மக்களுக்கும் விடுதலை கோருகிற கட்சி. சமத்துவம் பேசுகிற கட்சி. அக்கட்சியிடமிருந்து நிதி பெற்று நடத்தப் பெறும் குருகுலம் எல்லா மாணவர்களுக்கும் சம நிலையில் அமரவைத்து அல்லவா உணவு வழங்க வேண்டும். பார்ப்பன மாணவர்களுக்குத் தனி இடம்; பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குத் தனி இடம் என்று அனைத்து மக்களுக்குமான விடுதலையைக் கோரிப் போராடுகிற ஒரு கட்சியின் நிதி எப்படிப் பயன்பட முடியும்?

பார்ப்பனருக்கான அமைப்பின் நிதியினால் பார்ப்பனருக்கு மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பார்ப்பன அமைப்புக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிதியினால் பார்ப்பன மாணவர்களை மட்டும் சிறப்பாகக் கவனிக்கலாம்; உணவு வழங்கலாம். குருகுலத்திற்கு வழங்கப்பட்ட நிதி காங்கிரஸ் எனும் அனைத்து மக்களுக்கான அமைப்பிலிருந்து பெறப்பட்ட நிதியாகும். எனவே அதன் பயன்பாடு என்பது பாகுபாடு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும் என்று கருதியே சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நடைபெற்றது.

பச்சையப்பன் அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சிபோன்ற பெரிய அமைப்பு அல்ல. அது ஒரு கட்சியுமல்ல. அதன் இயங்கு எல்லை என்பது காங்கிரசை ஒப்பிட மிகமிகச் சிறியது. பச்சையப்பன் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டபோது அதன் நோக்கம், குறிக்கோள் என்று அதன் விதிகளில் சொல்லப்பட்டு இருக்கும் இந்த அறக்கட்டளையின் பயன் இந்துக்களுக்கு மட்டுமே சேரவேண்டும் என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.

வர்ணாசிரமக் கோட்பாட்டின்படி நால்வர்ணத்தில் தாழ்த்தப்பட்டோர் அடங்காமையால்  இதைப் பயன்படுத்திக் கொண்டு டிரஸ்டிகள் பச்சையப்பன் கல்லூரியில், ஆரம்பப் பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு நடந்து வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியார் வன்மையான தமது எழுத்தின் மூலம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கநாதம் செய்து இருக்கிறார். போராட்டத்திற்கு முன் அறிவிப்பு போல எச்சரிக்கை செய்து இருக்கிறார். சூத்திரனைப்போல தாழ்த்தப்பட்டவன் நால்வர்ணத்தில் இல்லாமையால் இனஇழிவு இல்லாதவனாக சூத்திரனைப் பார்க்கிலும் உயர்ந்தவனாகத் தாழ்த்தப்பட்டவன் ஆகிறான். எனவே, தாம் தாழ்த்தப்பட்டவனாகப் பிறக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர் பெரியார். அத்தகைய பெரியார் பச்சையப்பன் அறக்கட்டளையினர் தாழ்த்தப்பட்டவர்களைக் கல்லூரியிலும், பாடசாலையிலும் சேர்க்கவில்லை என்பதற்கு எப்படி எழுதுகிறார் என்று படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறது. கல்கிக்கு இந்த எழுத்துகள் தெரிய நியாயமில்லை; ஏனெனில் இது தெய்வத்தின் குரல் இல்லை.

"ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அன்னிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள், இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது. ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்".  - குடிஅரசு _ கட்டுரை - 27.11.1927

இதைவிட ஒரு போர்க்குணம் வேண்டுமா? பெரியாரைத் தவிர யாரால் இப்படி எழுத முடியும்?

காந்தியார் 1927ஆம் ஆண்டு மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். முதல் முறையில் 24.08.1927 முதல் 23.10.1927 வரை இரண்டு மாதங்கள் இங்கே தங்கி சுற்றுப்பயணம் செய்தார். கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமை ஆகிய கொள்கைகள் பற்றிப் பேசினார். 06.09.1927 அன்று பச்சையப்பன் கல்லூரியில் காந்தியார் பேசினார். அதுபோது அவர் பச்சையப்பன் டிரஸ்டிகளுக்கு ஒரு வேண்டுகோள் விட்டார். காந்தியாரிடமே மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட மாணவனை ஆரம்பப் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று பள்ளித் தலைமை ஆசிரியரே தெரிவித்த சம்பவங்கள் எல்லாம் கல்கிக்குத் தெரியாமல் இருக்க முடியாது. காந்தியாரால் வேண்டுகோள்தான் விடுக்க முடிந்தது.

பெரியாரின் கடுமையை காந்தியாரின் பேச்சில் காணமுடியுமா? 1927 நவம்பரில் பெரியார் எழுதியதற்குப் பிறகு நிலைமை என்ன? திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களில் பச்சையப்பன் டிரஸ்ட் பிரச்சினை 28_ஆவது தீர்மானமாக இடம்பெற்று இருக்கிறது. அத்தீர்மானம் வருமாறு:

சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொண்டதோடு அவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது.

அதற்கு மாறாக நின்ற திரு. வெங்கடேசுவர சாஸ்திரலு என்ற பார்ப்பனரைக் கண்டிக்கிறதோடு, அக்கூட்டத்தாரை இனி டிரஸ்டிகளாக நியமிக்கக் கூடாதென்றும் பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது.
மேலும் சமூக ஒற்றுமையையும், நியாயத்தையும் கருதி பச்சையப்பன் கலாசாலையில் கிறிஸ்தவ மாணவர்களையும் மகமதிய மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

_ குடிஅரசு (11.12.1927)

வெங்கடேசுவர சாஸ்திரலு என்பவரால்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலோ பாடசாலையிலோ சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை கல்கி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். தீர்மானத்தின் மூன்றாவது பாரா கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் பச்சையப்பன் கலாசாலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதைப்பற்றி கல்கி ஒன்றும் சொல்லவில்லையே! ஆனால் பெரியார் சொல்லுகிறாரே!

1994ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சாதனையாளர்கள் எனும் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அந்நூலில், 06.09.1927 அன்று காந்தியடிகள் பச்சையப்பன் கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்த்தினார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் பார்த்துத்தான் இந்திய மாணவர் சமுதாயத்தைப் பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தன் மனதில் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் காந்தியடிகள் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படியும் நீதிமன்ற ஆணையின்படியும் பச்சையப்பன் கல்லூரியில் ஹரிஜன மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை நாம் எடுத்துரைத்தவற்றை, நடந்த நிகழ்வுகளைப் பார்க்கிறபோது பெரியார் பச்சையப்பன் அறக்கட்டளையை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. ஏனெனில், பெரியாரின் குடிஅரசு கட்டுரைக்குப் பிறகு _ காந்தியாரின் வேண்டுகோளுக்குப் பிறகு _ நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்களை பச்சையப்பன் கல்லூரியிலும் பாடசாலையிலும் டிரஸ்டிகள் சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டுவிட்டனர். இதற்குப் பிறகு பெரியார் ஏன் போராட வேண்டும்? நோக்கம்தான் நிறைவேறிவிட்டதே! இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் கல்கிக்கு விளங்காமல் போகுமா?

 -------------- க.திருநாவுக்கரசு  அவர்கள்  ஏப்ரல் 16 -30 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை


74 comments:

தமிழ் ஓவியா said...

எஃப்.அய்.ஆர் பதிவு

பாட்னா, ஏப்.21:-தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்தில் எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விட வேண்டும் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியி ருந்தார். இதை காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத் தில், மதம் மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய நினைக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்குமாறு தண்டனை வழங்க வேண்டும். என்று மிட்டல் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbJxsY2

தமிழ் ஓவியா said...

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


மோடியை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் ஓடுங்கள் என்றார் பிஜேபிக்காரர் ஒருவர்

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்டுங்கள் என்கிறார் வி.எச்.பி. தலைவர் தொகாடியா!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தவெறி என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகும் - எச்சரிக்கை!

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

இந்துக்கள் பகுதிகளில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும் என்று எச்சரித்து, மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ்சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19ஆம் தேதி பேசும்போது.

நரேந்திரமோடியை பிரதமராக விடாமல் தடுப் பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

எஃப்.அய்.ஆர். மட்டும்

பிகாரின் நவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் மோடியின் தீவிர ஆதரவாளராம். 2005 முதல் 2013 வரை பிகார் மாநில அமைச்சராகவும் இருந்தவர்.

இந்த மேடையில் இவருடன் பா.ஜ.க.வின் முந்தைய தலைவரான நிதின் கட்காரியும் (ஆர்.எஸ்.எஸ்.) மேடையில் உடன் இருந்து அவர் முன்னிலையில்தான் இப்படி கிரிராஜ்சிங் பேசியுள்ளார்.

நிதின்கட்காரி இதை ஆட்சேபித்தோ, பிறகு மறுத்தோ பேசவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...

இவர்கள் இருவரின்மீது பிகார் தேர்தல் ஆணையர் இ.பி.கோ. மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எஃப்.அய்.ஆர். போட்டிருக்கிறாரே தவிர, அவர்களைக் கைது செய்யவில்லை இதுவரை!

இரண்டாவதாக, மோடி ஆளும் குஜராத்தில் (இன்று (21.4.2014) காலை வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுச் செய்திப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத அமைப்புக்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசியுள்ளனர். (இவர்களின் தலைவர்கள் எல்லாம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது). கல்லால் அடித்து விரட்டுங்கள்

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் பவந்தர் பகுதியில் முஸ்லீம் வியாபாரிகள் இந்துக்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு முன் பஜ்ரங்தளம் அலுவலகம்! என்று போர்டு மாட்ட வேண்டும்; அந்த வீட்டை நாம் ஆக்கிரமித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு குஜராத்தில் உள்ள சட்டப்படி இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் அசையா சொத்துக்கள் வாங்குவது சட்ட விரோதம் என்ற(Inter Community Sale of Immovable Property) மோடி அரசு சட்டப்படி (Disturbed Areas Act) தவறு என்று வலுக்கட்டாயமாக அதை இந்து அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; 48 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் கற்களை வீசுங்கள், டயரைக் கொளுத்தி எறியுங்கள் - தக்காளியை வீசுங்கள்! வழக்குப்பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி, இரவில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களையே தூக்கில் போடவில்லை; அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் வி.எச்.பி. தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

தலைக்கொழுத்துப் பேசி பச்சையாக குஜராத்தில் வன்முறை வெறியாட்டத்தைத் துவக்கி மீண்டும் 1992 பாபர் மசூதி - 2002 குஜராத் கலவரங்களைப் புதுப்பிக்க அச்சாரப் பாட்டு பாடுகிறார்கள்!

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?

மோடி பதவிக்கு வரவில்லை; இப்போதே இப்படி இவர்கள் ஹிட்லர் மொழியில் பேசுகிறார்கள் என்றால் அதன் விளைவு என்னவாகும்? நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும்!

நரிக்கு நாட்டாண்மை என்றால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்! என்ற நிலை தானே ஏற்படும்?

வாக்காளர்களே சிந்தியுங்கள் - மதச் சார்பற்ற சக்திகள் விழித்தெழ வேண்டிய மிக முக்கியமான நேரம் இது! பி.ஜே.பி.க்குத் துணை போகக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும், சமதர்ம அரசாக சமூக நீதி அரசாக, மத்திய அரசு அமையவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கவும், சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாசிசத்திலிருந்தும், மதவெறிகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற முன் வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



21.4.2014
திருச்சி (முகாம்)

Read more: http://viduthalai.in/e-paper/79026.html#ixzz2zZbQ8OeB

தமிழ் ஓவியா said...


என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன் மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத் தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத் திலும் இருந்து வந்த நிலைமையேயாகும். - (விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/79032.html#ixzz2zZc4qimg

தமிழ் ஓவியா said...


பச்சை பதவி வெறி


2006-2007-ல் தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் சிறப்பு பொரு ளாதார மண்டலம் அமைத்திட திட் டங்கள் தீட்டப்பட்டது. இவற்றை பாமக நிறுவனர் கடுமையாக எதிர்த்தார். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட புளிச்சலூர் பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்திட, பாமக எதிர்ப்பு தெரிவித்தது. உடனே அனைத்துக் கட்சி கூட்டம் 22.5.2007-ல் கலைஞரால் கூட்டப்பட்டு, அதில் பங்கேற்ற பாமக, மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று, புளிச்சலூர் பகுதியல் லாமல், மக்களை வெகுவாக பாதிக் காத பகுதிகளை கையகப்படுத்தி விமான நிலையம் அமைத்திட ஓர் ஒருமித்த கருத்தை உருவாக்கினார்.

இது கலைஞரின் அணுகுமுறை.

ஆனால், குஜராத்தில் நடப்பது என்ன?

பாமக, மதிமுக புகழும் மோடி யின் ஆட்சியில், கடலோரப்பகுதியில் அதானி குழுமத்திற்கு, ஒரு சதுர அடி ரூ.1500 உள்ள நிலங்கள், ரூ.1 முதல் ரூ.32-க்கு தொழிற்சாலை நடத்துவ தற்கு, மக்களின் ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், அதானி குழுமம், இந்த இடங்களில் பெரும்பான்மை யான நிலங்களை, வேறு நிறுவனங் களுக்கு, அதிக விலையில் விற்றுவிட் டார்கள்.

எஸ்ஸார் நிறுவனத்திற்கு, ஹஜிரா பகுதியில் 7,24,687 சதுர அடி நிலம், மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதனால், குஜராத் அரசுக்கு ரூ.238.50 கோடி நஷ்டம்.

மகுவா பகுதில் விளை நிலங் களை, தரிசு நிலங்கள் என மோசடி யாக அறிவித்து, 15000 மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, சிமெண்ட் தொழிற்சாலை அமைத் திட, 269 ஹெக்டேர் நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு அளித்தவர் மோடி.

மேற்கு வங்கத்திலிருந்து டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற் சாலையை குஜராத்திற்கு கொண்டு வந்து 1100 ஏக்கர் நிலத்தை, ஒரு சதுர மீட்டர் ரூ.900 என்று விற்றவர் மோடி. இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.10000. தமிழ் நாட்டில், கலைஞர், மற்ற கட்சிகளின் கருத்தை யும், மக்களையும் மதித்து, முடிவு எடுக்கிறார். அவர் ஒழிய வேண்டும்; திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது பாமகவும், மதிமுகவும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்காக, விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி, குறைந்த விலைக்கு வாங்கி, பல்லாயிரம் விவ சாயிகளின் வாழ்க்கையைச் சிதைத்து, சில முதலாளிகளுக்கு சாதகம் செய் யும் மோடி, எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் முடிவு எடுக்க வில்லை; ஏன், தனது அமைச்சரவை யைக்கூட்டி எந்த முடிவும் எடுப்ப தில்லை. அத்தகைய மோடி வெற்றி பெற வேண்டும் என இங்கே தொண் டையை உயர்த்தி முழக்கமிடுகிறது பாமக, மதிமுக.

ஆக, நோக்கம், பொருளாதார வளர்ச்சியும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை; பச்சை பதவி வெறி. இவர்களுக்கு தக்க பாடம் அளித்திட மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பு தான் ஏப்ரல் 24.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79037.html#ixzz2zZccxL13

தமிழ் ஓவியா said...



மோடிமீது நீதிமன்றங்கள் வைத்த மொத்துகள்!

புதுடில்லி, பிப்.21 (2002)- குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட படுகொலைகளின்போது கொல் லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடையாளம் தெரியாத 28 பேரின் உடல் களை தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ் டா செட்டால்வாட் மீது விசா ரணைக்கு மாநில அரசு ஆணை யிட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அவரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள போலியான வழக்குதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002இல் மதவெறி சக்திகளால் சிறு பான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர் வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட வில்லை எனக்கூறி புதைக்கப் பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்ற வியல் சட்டத்தின் கீழ் அவர் மீது விசா ரணைக்கும் ஆணையிடப் பட்டது. இதை எதிர்த்து ஷெட்டால் வாட் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவின் மீது செவ்வாயன்று (பிப்.21) விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, இது மனுதாரரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்கு தான் என்று கூறியது. இது போன்ற வழக்குகள் மாநில அரசுக்குப் பெருமை சேர்க்காது, என்றும் நீதிபதிகள் கூறினர். மாநில அரசு இந்த விசாரணையைத் தொடர்வது முறையல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால்வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷ் படித்துப்பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோ சனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக் கறிஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

***

புதுடில்லி ஜூன் 2 (2008)

பிரபல சமூகவியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆசிஷ் நந்தி 2007 குஜராத் தேர்தல் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரியவை எதுவும் இல்லையென்று உச்சநீதிமன்றம் மோடி அரசின் தலையில்குட்டு வைத் துள்ளது.

2007 குஜராத் சட்டமன்றத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரை சமுதாயத்தின் இரு பிரிவு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டது என்றும் இதனால் மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் குஜராத் அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நந்தியின் கட்டுரை குறித்து வி.கே. சக்சேனா என்பவர் தொடுத்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் துணை காவல் நிலையம் நந்தியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆசிஷ் நந்தி உச்சநீதிமன்றம் சென்றார்.

அவர் அப்படி என்ன எழுதி விட்டார் என்று வாரண்ட் பிறப் பித்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் ஜி.எஸ். சாங்கி ஆகிய இருவரும் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதிகள் இல்லை என்று குறிப்பிட் டனர். மகாத்மாகாந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்தவர்களால் விமர்சனங் களை ஏன் தாங்கிக் கொள்ள முடிய வில்லை என்றும் அவர்கள் வினவினர்.

பலவீனமான இலக்கு

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் போன்ற பலவீனமான இலக்குகளைத் தாக்குவதால் நாடு பயன் அடையாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முதலில் ஒட்டு மொத்தமான விமர்சன மாக இருந்தபோதும் பின்னர் குஜராத் மாநில அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். தன் மனதில் பட்டதை கட்டுரையாளர்களால் எழுத முடிய வில்லை என்றால் அந்நிலை நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்றும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

குஜராத் மாநில அதிகாரிகள் ஆசிஷ் நந்தியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நந்திமீது பிறப்பிக்கப் பட்ட சம்மன்களும் தடை செய்யப் பட்டன. அவருக்கு இனிமேல் சம்மன் கள் அனுப்பக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

Read more: http://viduthalai.in/page-2/79036.html#ixzz2zZckEsos

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


கேள்விப்பட்டதுண்டா?

ஓர் ஆட்சியில் 32 உயர் மட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த அந்த 32 காவல்துறை அதிகாரிகளும், ஒரு மாநில முதல் அமைச்சர்மீது குற்றஞ்சாட்டுவதுபற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதுண்டா? ஆம், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான் இந்த நிருவாக லட்சணம்!

கேள்விப்பட்டதுண்டா?

ஒரு மாநில முதல் அமைச்சரை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்த பிறகும்கூட, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் அவர்.



கேள்விப்பட்டதுண்டா?

போலி என்கவுண்டர் தொடர்பான ஒரு வழக்கில் இந்த மாநிலக் காவல் துறையை நம்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் சொன்னதற்குப் பிறகும்கூட இதுகுறித்து அலட்டிக்காமல் ஆட்சிப் பொறுப்பில் ஒட்டிக்கொண்டு இருந்த முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இப்பொழுது நாடு நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி தான் அவர்!



கேள்விப்பட்டதுண்டா?

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டும் தனக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று சொன்ன முதல் அமைச்சரை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?

முதன் முதலாக - குஜராத்தை ஆளும் மோடி என்ற ஒருவரை இப்பொழுது தான் கேள்விப்பட்டுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-2/79031.html#ixzz2zZd5MdYt

தமிழ் ஓவியா said...


சமச்சீர் கல்வியை ஒழிக்க நினைத்தது யார்?


சமச்சீர் கல்வியை ஒழிக்க நினைத்தது யார்? பாடப் புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை மறைத்தது யார்?

இதுதான் அண்ணா ஆட்சியா? தமிழர் தலைவர் கேள்வி

நெய்வேலி, ஏப். 21- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக அவற்றையெல்லாம் மாற்றிய ஜெயலலிதா அம்மையார் நடத்துவது அண்ணா ஆட்சியாக இருக்குமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கடலூர் மக்களவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் கொ. நந்தகோபால கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து திரா விடர் கழகம் சார்பில் நெய்வேலியில் 19.4.2014 அன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

யுத்தத்தில் தான் உண்மைகள் பலியாகும் என்பார்கள். ஆனால் தேர்தல் களத்தில் உண்மைகள் பலியாகின்றன. உண்மைக்கு மாறாக பிரதம வேட்பாளர் ஆக அறிவிக்கப் பட்டுள்ள மோடியிலிருந்து, சாதாரணமானவர்கள் வரை ஊடகங்கள் பெரிய பலூனாக ஊதி, பெரிதாக்குகின்றன. எனவே தான் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது.

அறிவியல் ரீதியாக ஜனநாயக முற்போக்கு கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது, காரணம் பதுங்கி இருந்தவர்கள், மறைந்து இருந்தவர்கள் எல்லாம் வெளியே வந்து உண்மை யைப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். நிச்சயமாக வெற்றி பெறப்போவது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தான்.

சூரியன் உதிப்பது நிச்சயம்!

காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ, கவிஞர் கேட்டார் அல்லவா? அதுபோல காரிருள் கவ்விக்கொண்டு இருந்தாலும், சூரியன் உதிப்பது நிச்சயம். வெற்றியை உதிக்கப்போவது சூரியன் தான்!

நாங்கள் தமிழ்நாடு முழுவதும் 30 தொகுதிகளுக்கு மேல் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, மக்களை நேரடியாக சந்தித்துவிட்டுவந்து இருக்கிறோம். வெற்றிக்கனி திமுக-வுக்கு கிடைப்பது தெரிகிறது. ஆனால் இந்த முறை மக்களுக்கு இருக்கிற கோபம் ஆட்சியாளர்கள் மீதும் மதவெறியர்கள் மீதும் இருக்கிறது.


தமிழ் ஓவியா said...

எவ்வளவுதான் ஊடகங்கள் ஒப்பனைகள் போட்டு காட்டினாலும் கூட அந்த ஒப்பனைகள் எல்லாம் கலைந்து போகக்கூடிய அளவிற்கு மக்கள் மூன்றாண்டுகள் தங்கள் வேதனையை மனதில் நிறுத்தி உள்ளார்கள். அவர்கள் தெளிவாக உள்ளனர். பெரிய மாற்றத்தை விரும்பியுள்ளனர். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே வெற்றி பெறச் செய்வார்கள்.

பாதுகாப்புத் தேவை என்று நினைத்தால்...

இதுவரையிலே, மற்ற அணிகளில் சிறுபான்மை சமூகத் தினருக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை. தர மறுத்தார்கள். இந்த அணியை போல் (திமுக) சிறுபான்மை சமுதாய மக்கள் ஒரே குரலில், ஒரே உருவத்தில், ஒரே தோற்றத்தில், ஒரே முடிவோடு இருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த அணிக்கு வாக்கு அளித்தால் தான் இந்த நாடு இருண்ட காலத்தில் இருந்து வெளியே வரமுடியும் என்ற அளவில் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். தங்களுக்கு ஒரு பாது காப்பு தேவை என்று நினைத்தால், நிச்சயம் மோடி வித்தை நடக்காது. நடக்க விடக்கூடாதுஎன்பதை மக்கள் தெளிவாக மனதில் நிறுத்தி உள்ளார்கள்.

பாஜக தலைமையிலான மற்ற அணிகள் கூட்டணியாக இல்லாதது கூட வருத்தம் இல்லை. சீட்டணியாக இருப்பது கூட வேதனையாக இல்லை அவர்கள் கூத்து அணியாக இருக்கிறார்கள்.

பரிதாபத்திற்குரியவர்கள்

இந்த கூட்டணியில் (திமுகவில்) யாருக்காவது முரண் பாடு உண்டா? டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த 90 வயதிலும், தள்ளாத வயதிலும் கூட சாலை வழியாக பயணம் செய்து முதலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார் என்றால் இதுதான் ஒற்றுமை(யான) சமுதாய கூட்டணி; அந்த கூட்டணியில் (பாஜகவில்) பாருங்கள். என் கட்சிகளுக்கு மட்டும் தான் போவேன். குறிப்பாக என் மகனுக்காக மட்டும்தான் முடிந்தால் போவேன் என்று சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். ஏதோ சமூகக்கூட்டணி என்றவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகி பரிதாபத்திற்கு உரியவர்களாக காட்சி அளிக்கிறார்கள்.

தந்தை பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு சொன்ன விளக்கம். அனைவருக்கும் அனைத்தும் என்ப தாகும். அனைவருக்கும் அனைத்தும் என்பதிலே அனைத் தும் அடக்கம் என்று ஏற்றுகொள்கிற சமூகநீதி மற்ற கூட்டணி யில் இருக்கிறதா? அவர்கள் 300 இடத்திற்கு மேல் வரு வார்கள் என்று குத்தகைக்கு எல்லாம் எடுத்து, ஊடகக்காரர் களுக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள்; கருத்துக்கணிப்பு எப்போதும் சரியாக வந்தது கிடையாது. அது கருத்துக் திணிப்பு.

மோடி சினிமா எடுக்கப் போகிறாரா?

மோடி அலை வீசினால் ஏன் நடிகரை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறார்? சினிமாவுக்கு போகப்போகிறாரா? இல்லை பெரிய சினிமா எடுக்கப்போகிறேன் என்று சொன்னால் கால்ஷீட் கிடைக்குமா? என்று அவர்களிடம் (நடிகர்களிடம்) கேட்கலாம். பிரதமராக வேண்டியவர் இவ்வளவு செல்வாக்கு உள்ளவர். இவரை அல்லவா? மற்றவர் பார்க்க வேண்டும்? இவர் போய் நடிகரைப் பார்க்கிறார். ஒவ்வொரு நடிகரிடமும் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறார். ஏனென்றால் உண்மைக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை.

மோடி ஒரு மர்ம மனிதர் அதற்கும் இவருக்கும் சம்பந்தமில்லை மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி திருமணத்தையே மறைத்தவர் என்றால் மற்றவற்றை மறைப்பாரா இல்லையா? இதை நான் சொல்லவில்லை மற்றவர்கள் சொல்கிறார்கள்.

பதவி தேடி - மோடி

கூட்டணி என்று சொன்னால் முன்னால் வந்து இராஜ்நாத் சிங்கை வடக்கே இருந்துவரவழைத்து 2 சதவிகித ஓட்டு கூட வாங்க முடியாத பாஜக மதவெறிக்கட்சி, இங்கு வந்து மற்ற வர்களை எல்லாம் பிடித்து, யார் யார் தங்களது பல்லக்கைத் தூக்குவதற்கு தயாராக இருக்கிற பதவி தேடிகளை எல்லாம் பிடித்து, அவர்கள் நாங்கள் ரெடி ரெடி என்று சொல்லி, இதற்கு முன்னால் எப்படி சுமந்தாலும் இப்போது சுமப்பதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது. காரணம் உங்களால் ஏற்படக்கூடிய பலன் இருக்கிறது என்று சொல்பவர்களைத் தேடிப் பிடித்து வந்து 40-பேருக்கும் கையெழுத்து போட்டார் களே! தேர்தலுக்கு முன்னாலே 40-என்று தேர்தலில் போட்டார்களே, இருக்கிறதா?.

தமிழ் ஓவியா said...


புதுச்சேரியில் முதல் நாள் அறிக்கை - அந்த கூட்டணியில் அவர் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. மோடி உருவத்தை பயன்படுத்தக் கூடாது. நாங்கள் தான் பயன்படுத்துவோம் என்று ஒரு கட்சி தலைவர் சொல்ல, பிரச்சாரத்திற்கு சென்ற ஒருவர் புதுச்சேரியின் பிரச்சாரத்தை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தவிர்த்து விட்டார். இது கூத்தணி என்று சொல்வதற்கு ஆதாரம்.

யார் அந்த சின்னத்தை பயன்படுத்தவேண்டும் என்று வாக்காளருக்கே தெரியாத அளவிற்கு சொன்னார்கள். ஆனால் இந்த அணி (திமுக) குலதர்மம் வேண்டாம் சமதர்மம் தான் நாட்டில் கொடி பறக்கவேண்டும் என்பது தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி.
இவ்வளவுக்கு பிறகு இன்னொரு நடிகரை மோடி பார்த்தார். எல்லாவற்றையும் விட உச்சக்கட்டம் இதுதான்! இதுவரை நடித்தது சரியாக இருக்கிறதா? இல்லையா? என்று இவர்களை (நடிகர்களை) பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு வேளை மோடி ஓடிப்போய் தேடினாரா? என்பது தெரியாது. மோடி அலைந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையா? எனவே, நான் தான் சொன் னேன் மோடி அலை வீசவில்லை. மோடிதான் வலை வீசிக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரையும் பிடிப்பதற்காக.

தமிழ் ஓவியா said...

மனிதருக்குள் ஒருமைப்பாடு...

எங்களுக்கு திராவிடர் கழகத்திற்கு இருக்கின்ற கவலை இந்த நாடு, ஜாதியால், மதத்தால், மற்ற வேறு காரணங் களால், மக்கள் பிளவுப்பட்டு இருக்கக்கூடாது. மனித ஒரு மைப்பாடு மண்ணில் ஒருமைப்பாட்டைத் தவிர மனிதருக் குள்ளே ஒருமைப்பாடு மிகவும் தேவை என்பதை வலியுறுத் துகிற ஒரு இயக்கம் நம்முடைய இயக்கம்.
கலைஞர் தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை உருவாக்கி இருக்கிறார். எந்த ஆட்சி போனாலும், வந்தாலும் இந்த சாதனை என்பது வரலாற்றிலே பொறிக்கப்பட்ட பொக்கிஷம்.

உண்மையை மறைப்பவர் மோடி

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் காமாட்சி அம்மனுக்குப் புடவை வைத்து அதெல்லாம் அவரிடம் (மோடி) போய் கொண்டு கொடுக்கும்போது தான் அவருக்கு ஞாபகம் வந்ததாம். அப்புறம் தான் (அபிடவிட்) பிரமாணபத்திரத் தில்தன் மனைவியைப் பற்றி எழுதினாராம் இது தமிழ் இந்து பத்திரிகையில் படத்தோடு வந்துள்ளது. அது அவரின் தனிப் பட்டது. அதை நாம் பேசி பழக்கப்பட்டவர்கள் அல்லர். எதற்கு உதாரணத்திற்கு சொல்கிறேன் என்றால் அவர் மூன்று முறை முதலமைச்சராக இருக்கிற நேரத்தில் கொடுத்த பிரமாணப்பத்திரத்தில் மறைத்து இருக்கிறார். உண்மைகளை அவர் மறைப்பதில் என்ன அதிசயம்? மூன்று மாதம் ஒரு நடிகரை எங்கே சந்திக்கிறது, எப்படி சந்திக்கிறது என்று ஆலோ சனை நடந்து கொண்டு இருந்திருக்கிறது. ஏனென்றால் பெரிய சமூக நீதி மாநாடு பாருங்கள். சமூகநீதி பிரச்சினை இது, இதற்கு அஜெண்டா எல்லாம் தயாரிக்க வேண்டும் பாருங்கள்.

உடனே மோடி நான் வந்து தமிழ் வருடப் பிறப்பு. வாழ்த்து சொல்ல வந்தேன் என்கிறார். வருடா வருடம் இவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு செல்வது தான் வழக்கம் பாருங்கள். இந்த வருடமும் தவறாமல் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்திருக்கிறார். அவர் (நடிகர்) அதற்கு வந்தார் என்று சொன்னாரா? முதலில் உடல்நிலை சரியில்லை என்று விசாரித்தார் என்றார்.

ஒரு நாணயம் - இரண்டு பக்கங்கள்

தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்! டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக நேரு காலத்திலே இடம்பெற்றிருந்த நேரத்திலே, அவர் இந்து சட்ட திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். பெண் களுக்கு சொத்து உரிமை இல்லை. ஆண்களுக்கு இருக்கிற மாதிரி பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்பதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். தந்தை பெரியார் இந்த கொள்கைளை 1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானமாக போட்டார்கள்.

அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்; எனவே அவர் இந்தப் புரட்சிகரமான சிந்தனை யைக் கொண்டுவந்தார். அன்றைக்கு இருந்த நேரு அவர்களா லேயே அந்த சட்டத்தை கொண்டு வரமுடியவில்லை.

பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற சனாதனிகள் எதிர்த்தார் கள். அதன் காரணமாகவே அம்பேத்கர் அவர்கள் பதவியை விட்டு விலகிப் போகிறேன். கொண்டு வந்த சட்டத்தை நிறை வேற்ற முடியாமல், நான் எதற்கு பதவியில் இருக்க வேண் டும்? பதவியிலே ஒட்டிக்கொண்டு இருக்க தேவையில்லை என்று வெளியே போனார். இன்றைக்கு அதுமாதிரி வேறு யாரையும் பார்க்க முடியாது. கொள்கைக்காகப் பதவியை விட்டுப் போனவர்களை கண்டு பிடிக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

மக்களே காரணம்

பாபா சாகேப் அம்பேத்கர் வழிகாட்டினார். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் கடுமையாக முயன்று பார்த்தும் அவரால் செய்யமுடியாததை, கலைஞர் பங்கேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருக்கிறதே. 2005-ல் பெண்களுக்குச் சம சொத்துரிமை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்து உரிமை கொண்டு நிறைவேற்றியது கலைஞர் அரசே! மத்திய அரசிலும் அது வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு எது காரணம் தெரியுமா? கலைஞர் காரணம் என்றா லும் கூட அடிப்படையிலே முக்கிய காரணம், மூலகாரணம் மக்களாகிய நீங்கள் எப்படி என்று உங்களுக்கே தெரியாது 2004-இல் தெளிவான தீர்ப்பைக் கொடுத்தீர்கள். 40-க்கும் 40 என்று அதன் காரணமாகத்தான், மத்தியிலே இருந்த மதவெறி ஆட்சி இறக்கப்பட்டது. இதுபோல திமுக அய்க்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த போது தான் கொண்டு வந்த சட்டம் பெண்களுக்கு சம சொத்துரிமை சட்டம் ஏராள மான சட்டம் நிறைவேற்றினார்கள் - சேது சமுத்திரத் திட்டம் போல.

அம்மையார் ஆட்சியில் தமிழ்நாட்டில் அமைதி பற்றிப் பேசுகிறார்கள். செயின் பறிப்பு இல்லாத நாள் உண்டா? மற்ற காலத்தில் (ஆட்சியில்) செயின் பறித்ததற்கும், இந்த ஆட்சியில் செயின் பறிப்பதற் கும் ஒரு அருமையான வித்தியாசம் உண்டு. என்ன அந்த வித்தியாசம் என்றால், செயின் பறித்துக் கொண்டு போனான் பார் முதல் நாள், அவன் திரும்ப வருகிறான். இரண்டாவது நாள் மீண்டும் அந்த அம்மாவைபார்க்க வந்தான். செய்தி வந்தது பத்திரிகையில். நான் கூட சந்தோசம் அடைந்தேன். திருடன் மனம் திருந்தி விட்டான் போலிருக்கிறது. அம்மாவைப் பார்த்து மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று நினைத்த நேரத்தில், ஒரு வேட்பாளர் இருக்கிறார் பாருங்கள். ஆம் ஆத்மி வேட்பாளர் அவரை அடித்தவர். மறுநாள் போய் மன்னிப்புக் கேட்டார் பாருங்கள்; அது மாதிரி மனம் திருந்திவிட்டான் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, செயினை அந்த அம்மாளிடம் கொடுக்கத் தான் போய் இருக்கான் என்றால் இல்லை அவன் ஓங்கி ஒரு அறை அறைந்து அந்த அம்மாவை, ஏன்? என் வேலையை கெடுத்தாய்? கில்ட் நகையை - கவரிங் நகையை ஏன் போட்டாய்? தங்க நகையை போட்டிருந்தால் வேலை மிச்சமாகி இருக்கும். என்னுடைய உழைப்பு வீணாகாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லையே! என்று சொல்லிவிட்டு போகிறான். என்ன கொடுமை! இப்படி அம்மையாரின் ஆட்சியில் எத்தனைக் கொடுமை நடக்கிறது! என்ன சட்டம் ஒழுங்கு என்று எல் லோருக்கும் தெரியுமே! யாருக்குப் பாதுகாப்பு இருக்கிறது?

திருப்பூர் திரும்புகிறதா?

மின்சாரம் மாணவர்கள் படிக்கின்ற நேரத்தில் இல்லை. எத்தனை மணி நேரம் மின்வெட்டு, கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. நம் இளைஞர்கள் எல்லாம் வேலை கிடைக்கவில்லை என்றால், எங்கே போகிறார்கள்? திருப்பூருக்குப் போவார்கள் கோவை, சிவகாசிக்குப் போவார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன?

தமிழ் ஓவியா said...

நாளிதழில் என்ன செய்தி வருகிறது இரண்டு நாள்களாக. கஞ்சித் தொட்டி நடத்துகிறார்கள். விசைத்தறி ஆள்களுக்கு, தொழிலாளிகளுக்கு வேலை இல்லாமல், கோடிக் கணக்கில் வங்கியில் முதலீடு, எல்லாம் முடங்கி விட்டன. அவர்கள் வாழ்வதா? தற்கொலை செய்து கொள்வதா? என்று சொல்லக்கூடிய நிலை! இந்த நிலையில் அம்மையார் சொல்கிறார் வளர்ச்சி. யாருக்கு வளர்ச்சி?

அவமானமாக இல்லையா?

13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள். அதில் பகுதிப் பேர் பெண்கள்; கலைஞர் வேலையில் அமர்த்தினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் கலைஞர்தான் செய்தார் என்பதற்காக வேலையை விட்டு அனுப்பி, அவர்கள் கோர்ட் மேல, கோர்ட் அலைந்து அய்கோர்ட்டுக்கு போய், உச்சநீதிமன்றம் போய் அங்கு தீர்ப்பு வழங்கிய பிறகும் இன்னும் இந்த அம்மையார் வேலையில் சேர்க்கவில்லையே! அவர்களில் 70-80 பேர் இறந்து விட்டார் கள். பிச்சை எடுக்கும் போராட்டம் வரை நடத்தினார்கள். இது நமக்கு அவமானம் இல்லையா?

யானையாகப் பிறக்க வேண்டுமா?

மக்கள் நலப் பணியாளருக்கு வேலை கொடுக்கவில்லை. யானைக்குப் புத்துணர்வு முகாம். என்ன அர்த்தம். இந்த அம்மையார் ஆட்சியில் யானையாக பிறக்க வேண்டுமா? மனிதனாக பிறந்தால் மரியாதை கிடையாதா? அதற்குப்பின் என்ன வளர்ச்சி? கலைஞர் செய்தார் என்ற காரணத்தால், அண்ணா பெயரில் கட்சி வைத்திருப்பவாகள் ஆட்சி நடத்துபவர்களின் லட்சணம் இதுதானா? அவர் பெயரால் நுற்றாண்டு நூலகம் - அதை இழுத்து மூடுங்கள் என்று சொன்னபோது, வெளிமாநிலத்தில் இருந்து வந்த நீதிபதி கேட்டார். சென்னையில் உங்களுக்கு மூடுவதற்கு இடமே கிடைக்க வில்லையா? என்று அரசு வழக்குரைஞரைப் பார்த் துக் கேட்டாரே! வெட்கத்தால் நாணித் தலை குனிய வேண் டாமா? இன்றைக்கு நீதிமன்றம் காப்பாற்றி இருப்பதால் அந்த நூலகத்தின் கதவுகள் திறந்து இருக்கின்றன. இதைவிட வேதனை வேறு என்ன?

திருவள்ளுவர் எதிரியா?

இன்று அதிகமான பிள்ளைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்றால் சமச்சீர் கல்வி கற்றதால் அல்லவா? திருவள்ளுவர் படத்தை மூடி ஒட்ட சொன்னார் களே! ஏனென்றால், அவர்களுக்கு திருவள்ளுவர் என்றால் யார் என்று தெரியாது. கலைஞர் வைத்த திருவள்ளுவர் சிலையை தட்டி எடுக்க முடியவில்லை. பாவம்! அதனால், இன்னும் இருக்கிறது. திருவள்ளுவர் என்ன இவருக்கு எதிரியா? இதிலே, நாங்கள் தமிழுக்கே தொண்டு செய்வோம் என்றால் யாரை ஏமாற்றுகிற வேலை? அதே போலத்தான் செம்மொழிப் பூங்கா, கலைஞர் வைத்தார். அந்த வார்த் தையைக்கூட கேள்விபடக் கூடாதாம் இந்த ஆட்சியில்!

தொழிற் வளர்ச்சியில் கலைஞர் ஆட்சியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருந்தது; இப்போது 14ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதிலே ஒரே ஒரு ஆறுதல் அம்மையார் நேற்று கூட சொல்லி இருக்கிறார் இதற்கு கீழேயும் கீழே உள்ள மாநிலம் தான் மோடியின் குஜராத். அது 17ஆவது இடத்தில் இருக்கிறது. மோடி வளர்ச்சி வளர்ச்சி என்று இங்கு உள்ள மோடி மஸ்தான்கள் கூறுகிறார்கள்! சிந்தியுங்கள் மக்களே என்று தனது உரையை முடித்தார்.

Read more: http://viduthalai.in/page-4/79042.html#ixzz2zZdRARkR

தமிழ் ஓவியா said...


வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்


இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகிய வற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் செரிமானமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து.

இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்தத் துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி செரிமான சக்தியை அதிகமாக்கும். சிறிது வெப்பத்தையும் கொடுக்கும்.

ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeAvsDI

தமிழ் ஓவியா said...

இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்

கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.

கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் சி யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது.

இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது. முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeJENNL

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

1. அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர் நியாயம் கேட்கமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அமைதி திரும்பும் என்று ஒரு முதலமைச்சரே பாதிக்கப்பட்ட மக்களை வானொலி உரைமூலம் அதிகாரப்பூர்வமாக அச்சுறுத்திய முதல்வர்பற்றி அறிந்ததுண்டோ?

இதோ இருக்கிறார் - குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - இவர்தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராம்!

2. கலவரம் நடந்துகொண்டிருந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று முதல் அமைச்சர் யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், அதனைத் தூசுபோல் தட்டிவிட்டு, பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப் பற்றிப் படித்ததுண்டா?

ஒருவர் இருக்கிறார் - அவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான குஜராத் முதல் அமைச்சர் மோடி.

3. தங்களுக்குப் பிடிக்காத மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களிடம் கைகுலுக்கி, உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்படு கிறீர்கள் என்று சொன்ன ஆட்சியாளரைக் கேள்விப்பட்டதுண்டா?

முதன்முதலாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம் - குஜராத் முதலமைச்சர் மோடிதான் - அவர் பி.ஜே.பி.யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராம்.

4. கார்ப்பரேட் பண முதலைகளும், மதவெறியர்களும் தாங்கிப் பிடிக்கும் ஒருவர்தான் ரோல்மாடல் என்று விளம்பரப்படுத்தப்படும் கேவலத்தை எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? 2014 இல் நடக்கும் இந்தியத் தேர்தலில் நிறுத்தப்படும் மோடி என்பவர்தான் அத்தகையவர் என்பதை நாடே கண்டுகொண்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/79063.html#ixzz2zZeT0z9b

தமிழ் ஓவியா said...



ஆண்மையின் ஆணவமா?

ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!

காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!

முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?

காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?

தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.

திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!

பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...

ஒரு ரோஜா அரளிப்பூவானது


- எஸ்.எஸ். தென்னரசு

எஸ்.எஸ்.தென்னரசு,திராவிட இயக்க முன்னணி எழுத்தாளர்; ஏராளமான சிறு கதைகளை எழுதியவர், அதனால் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டவர்.நாடகங்கள் உள்ளிட்ட இலக்கியப் புதினங்களைப் படைத்துள்ளார். இராமநாதபுர மாவட்ட தி.மு.க.செயலாளராகவும், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகவும், நீண்ட காலம் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.



அன்பு நிறைந்த சுமதிக்கு,

பெண்ணுக்குப் பல ஆசைகள் உண்டு. விபரம் தெரியும் பருவம் வந்தவள் பட்டுப்பாவாடை கேட்டு வாங்கியது வந்ததும் அவளே வண்ணப் புடவைகளுக்குத் தன் தாயிடம் அடம் பிடிப்பாள். அடுத்து அவள் தனக்குள்ளேயே கணவனைப் பற்றிய கனவு காண்கிறாள். அதுவும் நிறைவேறி விட்டால் தானும் ஒரு தாயாக வேண்டும் என்ற துடிப்பு வந்து விடும் அவளுக்கு. இந்த ஆசைதான் அவள் சலிப்படையாத ஆசை.

ஏழை வீட்டில் பிறந்தவளாயினும் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டாய்; வெற்றியும் பெற்று விட்டாள். ஆனால் என் கதை என்ன? உன்னைவிட நான் அழகானவள்; உன்னைவிட நான் படித்தவள்; உன்னை முந்திக்கொண்டு நான் திருமணம் முடித்துக் கொண்டவள். ஆனாலும் உன்னிடம் தோற்றுப் போனேன்.

வாழ்க்கையின் வெற்றி எதிலே அடங்கியிருக்கிறது என்று யாரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை; தெளிவுபடுத்தவும் முடியாது. பெரிய இடத்திலே பிறந்த பேரழகு வாய்ந்த பெண் கொடுத்து வைத்தவள் என்ற ஊர்ப்பேச்சு எவ்வளவு பெரிய பொய் என்பது என்னைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது. இல்லையா சுமதி?

நீ, தாயாகி விட்டாய். உன் குழந்தைகள் உன்னை மொய்த்துச் சிரித்து விளையாடுகின்றன. நான் உன்னையும் உன் குழந்தைகளையும் மனக் கண்களால் பார்த்துப் பெருமூச்சு விடுகின்றேன்.

தமிழ் ஓவியா said...

நான் அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டேன். பெறவே முடியாத அளவிற்கு இழந்துவிட்டேன். நான் ஒருபோதும் இனி தாயாக முடியாது. எல்லாப் பெண்களும் தாய்மார்களாகிவிட்டால் மக்கட்பேற்றை உலகம் தாங்காது என்பதற்காக இறைவன் செய்து வைத்த ஏற்பாட்டில் என் பெயர் எப்படிச் சேர்ந்தது என்பதை நினைக்கும்போது, நான் ஏன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தீமை புரிவோர் பாவிகள் பட்டியலில் சேரலாம் - அதுதான் நியாயம். ஆனால் என்னைப் போன்றவர்கள் பிறக்கும்போதே பாவிகளானதெப்படி? மக்கட்பேற்றினை ஒரு செல்வம் என்கிறார்கள். அந்தச் செல்வம் ஒரு சிலருக்க மட்டுமே கிடைத்திட முடிகிறதே, ஏன்? மணமிருந்தும் மனோரஞ்சிதப்பூ தலையில் சூடிக்கொள்ள முடியாமல் போனது போல், உடலிலும் உள்ளத்திலும் மறுவில்லாத பெண்கள்கூட வாழ முடியாமல் அபாக்கியவதிகளாக ஆகிவிடுகிறார்கள்.

சுமதி, இதற்கு வேதாந்திகள் ஒரே வார்த்தையில் ஊழ் வினை என்று சொல்லி விடுவார்கள். இந்தத் தத்துவங்களெல்லாம் ஒரு வழிப் பாதைகள் போன்றவை; தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துடிப்பவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட கொல்லைக் கதவுகள்!

என் திருமணத்தின்போது என்னையும் அவரையும் ஒரே காரில் வைத்து பட்டணப் பிரவேசம் நடத்தினார்கள். தெருவில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கெல்லாம் நீ பூச்செண்டு கொடுத்துக் கொண்டு வந்தாய். அவர்களது வாழ்த்தெல்லாம் என்னவாயிற்று? கோவில்களுக்கெல்ம் போனோம் _ குறைவில்லாமல் காணிக்கைகளை வழங்கினோம். எல்லாமே வீண் விரயம்தானா?

ஒரு பெண்ணின் உணர்ச்சியை ஒரு பெண்தான் அறிய முடியும் _ நான் நினைத்தால் அல்லது ஒரு பெண் நினைத்தால் ஊழ்வினைகளைத் தூளாக்கிவிட முடியும். ஆனால்... அறுவை சிகிச்சைக்குமுன், மயக்க மருந்து போட்டுக் கொள்வது போல் முதலில் அவள் காதுகளைச் செவிடாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு எவள் துணிகிறாளோ அவள் ஊழ்வினையை ஒழித்து ஊரார் புரளியை எள்ளி நகையாடி ஒரு புரட்சிப் பெண்ணாகி விடுவாள்; நானும் அப்படி ஆகிவிட முடியாதா?

என் வீடு பெரிய வீடு; மேல் வீட்டை நான் வாடகைக்கு விட்டிருந்தேன். அதில் ஒரு நாடக நடிகை குடியிருந்தாள். புஷ்பராணி என்றால் நாடக ரசிகர்களுக்கு ஒரு மயக்கம் உண்டு. அவளுக்குப் பகலெல்லாம் தூக்கம். இரவெல்லாம் விழிப்பு. விடிய விடிய ஆடுகிறவளல்லவா! அவள் என்னமோ நல்லவள்தான். என்னை உணர்ந்தவள்தான். அவளுக்கு இரண்டு குழந்தைகள். புருஷன் அவளை விவாகரத்து செய்துவிட்டு ஒரு புதியவளைப் பார்த்துக் கொண்டான். புருஷனைக் கைவிட்ட புஷ்பராணி, பிள்ளைகள் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டுவிட்டாள். எனக்கு அதுவுமில்லையே என்று நான் ஏங்குவதை அவள் தெரிந்து கொண்டுவிட்டாள்.

ஒருநாள் மாலை நானும் அவளும் கீழ் வீட்டின் உள்முற்றத்தில் பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழ் ஓவியா said...

மேகலை, உன்னைப்போல் நான்கூட கொஞ்ச நாள் வேதனைப்பட்டேன். கடவுளை வணங்கினேன்; கண்ணீர் விட்டேன். இறுதியில் ஒரு மலையாள மந்திரவாதி சொன்னபடி நான் நடந்து கொண்டேன் _ காரியம் சித்தியடைந்தது என்றாள் புஷ்பராணி.

........ பெருமூச்சு விட்டேன் நான். எனக்கும் அந்த வழி கிடைக்காதா என்றுதான் பெருமூச்சு விட்டேன்.

நீ உன் வீட்டுக்காரருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பழக்கத்தை உண்டாக்க வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் பல பெண்களோடு உறவு கொண்டாலும் சொந்த மனைவியோடு இன்பமாக வாழத் தவறியதில்லை. எனக்குத் தெரிந்தவரை குடிப் பழக்கமுள்ளவர்களின் மனைவிகள் குழந்தைகளை நிறையப் பெற்று வாழ்வதைத்தான் நான் பார்த்திருக்கிறேன் -_ புஷ்வராணி இதைச் சொல்லுவதற்குத் தயங்கினாலும் உள்ளத்தைப் பிதுக்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சியை அவளால் மறைக்க முடியுமா?

இதைக் கேட்டதும், ஓமத் திராவகம் குடித்த ஒரு வயதக் குழந்தையைப் போல் நான் தொண்டையைக் காரிக்கொண்டு முகத்தைச் சுளித்தேன்.

இரவு முழுதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பரீட்சையில் தேறுவதற்கு விடிய விடியப் படிக்கும் மாணவனைப்போல் விழித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் இது ஒரு பரீட்சைதானே சுமதி!

பாதி ராத்திரிக்குப் பிறகு அவர் சூதாட்டக் கிளப்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். ஆட்டத்தில் தோற்றிருப்பார் போலிருந்தது. கடு கடு என்று முகத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.

என்னங்க, சாப்பிட வேண்டாமா? விடியப் போகிறதே! என்றேன்.

போகும்போதே நீ அழுதாய். அங்கேயும் அழுது விடிந்தாற்போல்தான் ஆட்டமும் இருந்தது. கேலா, புருஷன் எங்கே போனாலும் மனைவி வாழ்த்தித்தான் அனுப்ப வேண்டும். புருஷனுக்குத் துணைவிதான் மனைவி என்றார்களே தவிர, புருஷனுக்கு வாத்தியார் என்றா சொன்னார்கள்! நீ எனக்கு வாத்தியாராக இருக்கிறவரை நான் ஆட்டத்திலே ஒருநாளும் ஜெயிக்க மாட்டேன் என்றார் அவர்.
கோபப்படாதீர்கள். நாளை முதல் நான் உங்களை வாழ்த்தியனுப்புகிறேன். இன்றைக்குச் சாப்பிட்டுப் படுங்கள் என்றேன்.

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டார், வயிறு நிறையச் சாப்பிட்டா.

களைப்பு நீங்குவதற்கு இந்த டானிக்கைச் சாப்பிட்டுப் பாருங்கள். ஊரிலிருந்து அப்பா அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றேன்.

நீ கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியைக் கொடு என்றார் அவர்.

உங்கள் எச்சிலை நான் சாப்பிட்டால்தான் எனக்குப் பெருமை. முதலில் நீங்கள் குடியுங்கள் என்றேன்.
அவர் குடித்தார்.

துவர்க்கிறது மேகலை என்றார்.

மருந்துகள் எல்லாமே இனிக்குமா! துவர்க்கிற மருந்திலும், கசக்கிற மருந்திலும்தான் சக்தி இருக்கிறது என்றேன்.

முக்கால் கோப்பையைக் குடித்துவிட்டு, கால் பாகத்தை என்னிடம் கொடுத்தார். நானும் தட்டமுடியாமல் கண்களை மூடிக்கொண்டு குடித்துவிட்டேன். புருஷன் கொடுத்தது அல்லவா?

யார் முதலில் மயங்கியது என்றே தெரியவில்லை. அவர் புலம்பிக் கொண்டே இருந்தார்.

அடுத்த மாதம் சூதாட்டக் கிளப்பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாடியில் ஏறி வரமுடியவில்லை என்றார் வெறியில்.

சூதாட்டக் கிளப் மாடியில் இருக்கிறது போலிருக்கிறது என்று நானும் தூக்கக் கலக்கத்தில் எண்ணினேன்.

சுமதி!

விடியற்காலை நான்கு மணிக்கு என் வீட்டு மாடியில் அலறல் சத்தம் கேட்டது. மயக்கம் தெளியாத நிலையில் நான் கண் விழித்தேன்; என் வீடு குடை ராட்டினம் சுற்றுவதுபோல் தெரிந்தது எனக்கு. அத்தான்! அத்தான்! என்று கத்தினேன். அவரைக் காணோம். ஆனால் மேல் மாடியில் மட்டும் பயங்கரக் கூச்சல் கேட்டது. தடுமாறிக் கொண்டு நான் மாடிக்கு ஓடினேன். சுமதி, என்னால் விவரிக்க முடியவில்லையம்மா _ புஷ்பராணி ரத்தக் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்தாள். அவர் _ என்னுடைய அவர், மயக்க நிலையில் சோர்ந்து கிடந்தார்.

என்னத்தான் இது? என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லவில்லை. அதற்குள்ளாக ஊர் கூடிவிட்டது. புஷ்பராணியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அன்று பகலில் அவள் இறந்துவிட்டாள். குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். என் வீட்டுக்காரர் மீது கொலைக்குற்றம் _ தண்டனை _ இருபதாண்டுகள்!

இது யாருடைய வெறி? அவருடைய வெறியா? என்னுடைய வெறியால் கிளறிவிடப்பட்ட வெறியா?

நான் அறிந்த உண்மை இதுதான் _ வெறி என்பது ஒரு தீய சக்திதான்! அதைத் தூண்டிவிடுவது மது மட்டுமல்ல; ஒவ்வொருவர் ஆசையும் கடைசியாகப் பிரயோகிக்கும் ரிசர்வ் கடையாக வெறியைப் பயன்படுத்துகிறது. மது அரந்துவோர் அந்த வெறியைத் தொடக்கத்திலேயே பயன்படுத்தித் தோற்றுவிடுகின்றனர்.

சுமதி, என் கதையைச் சொல்லி விட்டேன். நீயாவது எச்சரிக்கையாகப் பிழைத்துக்கொள். ஏனென்றால், ரோஜாவாக இருக்கவேண்டிய நான் அரளிப்பூவானதுபோல் உன் கதையும் ஆகிவிடக் கூடாதல்லவா!

அன்புள்ள,
மேகலை.

தமிழ் ஓவியா said...

கருத்துரிமையை நெறிக்கும் சட்டம்

- சு.மதிமன்னன்

பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.

ஆனால்....

பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!

சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.

இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?

இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!

நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.

சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!

சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.

இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!

எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!

சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.

கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?

தமிழ் ஓவியா said...

கல்வி முறையில் பகுத்தறிவு சிந்தனையே அடிப்படையாக இருக்கவேண்டும்


- ரொமீலா தாப்பர்

நிகழ்காலத்தை நெறிப்படுத்த கடந்த காலத்தை அழைத்தால், கடந்த காலத்தின் உண்மைத் தன்மை தொடர்ந்து மறுபரிசீலனைக்குள்ளாகும். தேசத்திற்கு புதிய அடையாளங்கள் தேவை. நம்பகத்தன்மையுள்ள வரலாறு என்பது இவ்விஷயத்தில் முக்கியமானது.



ஒரு மரபை நாம் மேற்கோள் காட்டுகிறோம் என்றால், எந்த மரபை நாம் உள்வாங்குகிறோம் எந்த ஜாதி, எந்த வர்க்கம், எந்த மதப்பிரிவு, எந்தப் பகுதி என்று கேட்டுக்கொள்ளவேண்டும். 82 வயதில் ரொமிலா தாபரின் பேனா எப்போதும் போலவே வலிமையுடன் உள்ளது. இந்தியாவின் முக்கியமான வரலாற்றாய்வாளர் தற்போது சமகாலத்தை படம் பிடிக்கும் நூலை எழுதியுள்ளார். நாம் ஒரு சமூகமாக வேண்டுமெனில், கடந்தகாலத்தை நிகழ்காலமாகவும், கிடைத்த ஞானத்தை கேள்வி கேட்கும் தன்மையுடனும், மரபுசாரா பார்வைகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும், வரலாற்றை கட்டுடைத்து விவாதிக்கவும் தலைப்படுகிறார். தி பாஸ்ட் பிஃபோர் அஸ் என்கிற தன்னுடைய சமீபத்திய நூல் குறித்து `இந்தியா டுடே இதழாளர் உரையாடியதிலிருந்து...



கல்வி என்பது ஒரு தகுதி அல்ல, அது ஒரு மனோநிலை. படித்தவர்களிடையே அது இல்லை என்றே நினைக்கிறேன். ஏற்கனவே கற்றவர்களுக்கும் இப்போது கற்றுக் கொள்பவர்களுக்கும் இது பொருந்தும். நாம் எத்தகைய மனோநிலையை படைக்க விரும்புகிறோம் என்பது குறித்து அழுத்தம் தரவேண்டும்.

***

தமிழ் ஓவியா said...

அடையாளங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. ஏனெனில் மக்கள் எப்போதும் கடந்ததைப் பேசுபவர்கள். அடையாளம் சமகாலப் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படித்தான் சமகாலத்தில் ஒருவர் அடையாளத்துக்கு பங்களிக்கும் கடந்த காலத்தைப் பற்றி யோசிக்க முடியும். ஆனால் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் யோசிக்கும் முறை இருக்கிறதே, ஒரு வேளை அது துயர வரலாறாக இருந்தால், அதனால் உருவாகும் அடையாளம் நிலைத்திருக்காது. ஆனால் ஒரு வரலாறு சர்ச்சைக்குரியதாகவும் அதே சமயம் விவாதிக்கப்பட்டும் இருந்தால், அந்த அடையாளம் நிலைத்திருக்கும். ஒரு சாதாரண வாசகர்கூட கருத்துகளின் பிறப்பிடம் எது என்றும் எப்படி கருத்துகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். கருத்து என்பது தனியாக இருப்பதல்ல. அது சமூகத்தில் வேரூன்றியுள்ளது. ஆகவே கருத்தை உற்றுநோக்கி அது எங்கிருந்து யாரால் வந்தது, அதன் இயக்கம் என்ன, அது எப்படி பயன்படுகிறது, எப்படி அதை இன்னும் நன்றாக பயன்படுத்தலாம், அது நம்மை எங்கு சென்று சேர்க்கும் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்.

புராணங்கள் வரலாறு என்கிற பெயரில் நம்மிடம் கடத்தப்படுகிறது. குஜராத்தில் சர்தார் படேல் போன்ற ஒருவரை அடையாளமாக எடுக்கிறோமென்றால் முதலில் ஒன்றைப் பார்க்கவேண்டும். ஏன் அடையாளமாக இவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்வி முதலில் வரவேண்டும். தேர்வுக்கான வழிமுறை ஒன்று உள்ளது. ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? எது அந்த நபரின் அரசியலோடு அவரை தொடர்புபடுத்துகிறது? அந்தத் தேர்வு அரசியல் கட்சி செய்ததா? என்று பார்க்க வேண்டும். அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் யாரை, எதை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் என்று பார்க்கவேண்டும்.

ஒன்று, வரலாறு இன்னமும் பள்ளி, கல்லூரி அளவில் வழக்கொழிந்த முறையில் சொல்லித் தரப்படுகிறது. அதனாலேயே அது தொடர்பில்லாத ஒன்றுபோல் தோன்றுகிறது. இரண்டாவது, வரலாறு அரசியல் கட்சிகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சாதக பாதகங்களைக் கொண்ட அவுரங்கசீப் போன்ற சிக்கலான நபர்களை புரிந்துகொள்வதில் இயலாமை உள்ளது. அவரை கொடூரமானவர் என்றும் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பிரகடனப்படுத்துவதில் ஒரு அவசரம் இருக்கிறது. இருந்தும் அரசு, பேரரசு போன்றவற்றில் ஒருவரை நல்லவர் என்று கொண்டாடுவதோ அல்லது கெட்டவர் என்று நிராகரிப்பதோ அதிக சிக்கலானது. இது மோசமான வரலாறு. நல்ல வரலாறு என்பதை, இன்னும் கூடுதலாக வரலாற்று மாந்தர்கள் ஏன் அப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை ஆழமாக அலசவேண்டும்.

***

தீவிரமாக சிந்தித்து கல்விக் கொள்கை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? நாம் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு வேலை செய்யவில்லை. இங்கு பிரச்சினை பல உண்டு. உதாரணமாக, கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது அவை உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதியில் இருப்பதால் கீழ் ஜாதி குழந்தைகள் அங்கு சென்று படிக்கும்போது மட்டம் தட்டப்படுகிறார்கள். அதனால் பல குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வானொலியும் தொலைக்காட்சியும் கல்விக்காக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு என்ன காரணமென்றால், கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு அழுத்தமாக சொல்லித் தரப்படவில்லை. கல்வி மூலம் அல்ல, பணம் மூலமே ஒருவருடைய மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

***

இன்றைய அரசியல் தலைமைக்கு வரலாற்றில் மட்டும் அக்கறையின்மை என்று அல்ல. பொதுவில் நல்ல கல்வி வேண்டுமென்பதிலிருந்து உடனடி அரசியல் திட்டங்கள் தவிர அனைத்திலும் அலட்சியம்தான். அரசியலுக்குச் செல்லும் நபர்களின் தரம் கேள்விக்குறியாகிவிட்டது. எப்போதும் நாம் எவ்வளவு சகிப்புத்தன்மையுடனும் அகிம்சையுடனும் இருந்தோம் என்று பேச்சுக்கள் உண்டு. சுற்றிப் பாருங்கள். எங்கே சகிப்புத்தன்மை? எங்கே அகிம்சை?
***
இந்து தேசியவாதியாகவோ முஸ்லிம் தேசியவாதியாகவோ இருப்பது ஒரு முரண்பாடு. ஏனெனில் தேசியவாதியாக இருப்பது என்பதே மதம், சாதி, பகுதி தாண்டிய ஒரு பரந்த அடையாளத்தைத் தரக் கூடியது. இதை எப்படிப் பெறுவீர்கள்? சாவர்க்கர் போன்ற ஒரு இந்து அடையாளத்தை தேர்ந்தெடுத்தால் அது சிக்கலாகிவிடும். ஏனெனில் சாவர்க்கர் மிகத் தெளிவாக அடிப்படை இந்திய குடிமகள் இந்துவாக இருக்கவேண்டும் என்கிற பார்வை உடையவர்.

1999இல் இருந்ததுபோல கல்வியையும் வரலாற்றையும் வெட்டி ஒட்டும் நிலைமை வந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு நாம் இருக்கிறோமாஎன்று கேட்டால், இல்லை. நாம் அதற்கு பாதி தயாராக இல்லை. ஏனென்றால், நமக்கு அரசியல் அதிகாரத்துக்கு சிலவற்றை விட்டுக்கொடுப்பதற்கு பழகிவிட்டோம். எதிர்க்க முதுகெலும்பில்லாதவர்களாகவும், கல்வி முறையில் நமக்கு பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் ஒரு சீரான நிலைப்பாட்டை எடுப்பதில்லை. பகுத்தறிவு சிந்தனையும் அக்கறையும் ஓர் இளம் நபரை கற்பிக்கும் வழிமுறையில் அவசியம், தேவை.

- நன்றி: இந்தியா டுடே, ஏப்ரல் 16, 2014

தமிழ் ஓவியா said...

லதர்மமா? சமதர்மமா? அனல் பறக்கும் ஆசிரியரின் பரப்புரை


தேர்தல் களம்

குலதர்மமா? சமதர்மமா?

அனல் பறக்கும் ஆசிரியரின் பரப்புரை

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இக்களத்தில் தனது அனல் பறக்கும் கருத்துகளை தி.க. தலைவர் கி.வீரமணி பரப்பி வருகிறார். பரந்துபட்ட ஜனநாயக நாடான இந்தியாவில் பெரும்பாலான வாக்காளர்களும், ஊடகங்களும் இதனை ஒரு திருவிழா போல கேளிக்கையாகப் பார்க்கும் நிலையே இருக்கிறது. ஆனால், இது பொழுதுபோக்கு நிகழ்வல்ல; சமூகத்தின் பழுதுபோக்க கிடைத்த ஒரு வாய்ப்பு என்பதே இவரது பரப்புரையின் நோக்கமாக இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரைகளில் இருந்து...

பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையினர் என அனைவரும் சமநிலையில் வாழ வைக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஆளட்டும்; சிறுபான்மையினர் சுயமரியாதையோடு வாழட்டும்! என்று கூறுவதுதான் கலைஞர் தலைமையிலான அணி!

***

மூன்று முறை நாட்டிலே தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 4ஆவது முறையும் சோதனை வந்துவிடுமோ? தடை செய்து விடுவார்களோ? என்று எண்ணித்தான் தேடி தேடி மோடியைக் கண்டுபிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதை சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் தெரியாது. பெரியார் கண்ணாடி எனும் நுண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் மட்டும் தெரியும்.

***

தமிழ்நாட்டில் 2 சதவிகிதம்கூட பா.ஜ.க.விற்கு ஓட்டு கிடையாது. யாரைப் பிடித்தால் தமிழ்நாட்டில் வரலாம் என்ற ஆசையில், மோடி அலைந்து திரிந்தபோது, யார் யாரெல்லாம் இங்கு பதவி - பசிக்காக உள்ளார்களோ அவர்களை தேடிப் பார்த்து கூட்டணி அமைத்துள்ளார். இதன் மூலம் என்ன தெரிகிறது? மோடி அலை வீசவில்லை. மோடி அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார். ஊர் ஊராக. ஆகவே அது அலை அல்ல, விரிக்கும் வலை! அவர் வலை விரித்துக் கொண்டிருக்கிறார்!ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான் வலை வீசுகிறது. வலை வீசியதன் விளை வாக, அதிலே, சில மீன்கள் சிக்கி இருக்கின்றன பாவம்.
கடலில் இருந்தால், அந்த மீனுக்கு உயிர் உண்டு. ஆனால் வலையில் சிக்கிய மீன்கள் வியாபாரத்திற்கு கடைக்கு வருவதைத் தவிர அது உணவுக்கு பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது.

மீன்களாவது ஆரோக் கியத்திற்குப் பயன்படும். இந்த மீன்களோ செத்துப் போன மீன்கள். அது ஆரோக்கியத்திற்குக் கூட சரியாக பயன்படாது. இதைத் தான் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

***

இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் பல கட்சிகளுக்கு அல்வா கிடைக்கும்.
14.03.2014 தினமலர் ஏட்டில் வந்த ஒரு செய்தி; நாங்கள் சொல்லவில்லை. அவர்களை ஆதரிக்கும் ஏடே சொல்கிறது கேளுங்கள்!

லோக் சபா தேர்தலுக்காக பா.ஜ.க. அணி சார்பில் டெல்லியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் இன்னும் மற்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அத்வானியும் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு அதிகாரி அத்வானியிடம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டவுடன் அத்வானி எனக்கு இங்கு ஜிலேபி கொடுத்தார்கள். நல்ல டேஸ்ட்டாக இருந்தது சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்றார்.

தமிழ் ஓவியா said...

அத்வானிக்கு -டில்லி அரசியலில் ஜிலேபி! எனவே டில்லி, அரசியல் ஜிலேபி கொடுக்கும் அரசியல். தமிழ்நாட்டு அரசியல் அல்வா கொடுக்கும் அரசியலாக இருந்து வருகிறது.

***

தேர்தல் அறிக்கைதான் ஓர் ஆட்சி எந்தத் திசையிலே செல்லப் போகிறது என்பதைக் குறிக்கும் அறிக்கை. 100 திட்டங்களை, செய்திகளை சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க. அறிக்கையில். சொல்வதையே செய்வோம்! செய்வதையே சொல்வோம்! என்பதுதான் தி.மு.க.;

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஏராளமான வசைமாரிகள் உண்டு; தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இசை இருக்குமே ஒழிய, வசை இருக்காது. அதிலே (அ.தி.மு.க.) வசை இருக்குமே ஒழிய இசை இருக்காது. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கொள்கைக்காக ஆட்சியே தவிர, பதவிக்காக அல்ல. அதைத்தான் கடந்த 2004 தேர்த லில் உணர வைத்தீர்கள். அதை இப்போது 2014-லிலும் உணர வைக்கவேண்டும் மதுரை மக்களாகிய நீங்கள்.

***

ஜெயலலிதா அம்மையார் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்தவுடன், நானே பிரதமர், பிரதமர் என்று சொல்லிவிட்டு, இப்போது திடீர் பல்டியாக, நான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று சொல்கிறாரே! யாருடன் அங்கம் வகிக்கப் போகிறார்?

அம்மையாரைப் பார்த்து நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்வி:

நியாயமான வாக்காளர்கள் கேட்கின்ற கேள்வி; நீங்கள், எந்த அணியில் அங்கம் வகிக்கப் போகிறீர்கள்? நீங்கள் அங்கம் வகிக்கும் அணிக்கு யார் தலைவர்? 22 ஆம் தேதிக்குள் சொல்ல வேண்டாமா? யார் தலைவர் என்று அவர்களாலேயே சொல்ல முடியாது. அவர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்கள் - செய்துகொண்டிருக்கிறார் கள். இதுதான் ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் நாணயம், புரிந்துகொள்வீர்!

***

இப்போது புதிதாக பாவம் ஒருவர் புறப்பட்டு மோடிக்கு ஓட்டுப் போடுங்க! மோடிக்கு ஓட்டுப் போடுங்க! ஊழலை அவர் தான் ஒழிப்பார் -_ அவர்தான் மின்சாரத்தைக் கொடுப்பார் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் முன்பு சொல்வதை பின்பு சொல்வார்; பின்பு சொல்வதை முன்பு சொல்வார்.

செய்தியாளர்கள் கெட்டிக்காரர்கள், நீங்கள் எப்படியானாலும் மாற்றி எழுதிக் கொள்ளலாம். நான் எப்படியானாலும் பேசுவேன். உங்களுக்குப் புரிஞ்சிக்கிற சக்தியைப் பொறுத்தது என்று பேசுவார் - என்ன பேசுகிறோம் என்று பேசுகிற அவருக்கே புரியாது!

ஊழலைப்பற்றி பேசுகிறார் அவர். செய்தியாளர்கள் இங்கே இருக்கிறீர்கள். மோடி ராஜ்ஜியத்தில் ஊழல் இல்லையா? இதற்கு விஜயகாந்த் பதில் சொல்லவேண்டும்.
குஜராத்தில் ஓடுகிற கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையிலிருந்து, ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் எரிவாயு தோண்டி எடுக்கும் ஒப்பந்தத்தை (டெண்டர்) ஒன்று, இரண்டல்ல, 20 ஆயிரம் கோடி ரூபாய் - குளோபல் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) எதுவுமே இல்லாமல், அப்படியே வெறும் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோடி வழங்கியுள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை; மத்திய கணக்குத் துறை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக்காட்டுகிறார். இதேபோல், எட்டு ஊழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

ஒரே ஒரு ஊழலைப்பற்றி விளம்பரப் படுத்துகின்ற இந்நாட்டு ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா?

***

பழைய மனுதர்மத்திற்கு இந்த நாட்டை அழைத்துச் செல்ல வேண் டும். குல தர்மம் கோ லோச்ச வேண்டும். சமதர்மம் தழைக்கக் கூடாது என்பதற்காக, இரண்டு அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

என்ன அந்த இரண்டு அணி? சமுதாயத்தில் அவர்கள் வெளிப்படையாக இருக்கவில்லை மக்களுக்கு தெரியாது. வெளிப்படை யான புறத்தோற்றம் இருக்கிறதே அதைப் புரிய வைக்க வேண்டியது. எங்களது கடமை.

ஆகவேதான், அந்தப் பணியை செய்ய முன்வந்து இருக்கின்றோம். மற்றபடி இந்த தேர்தலில் எத்தனை இடம் என்று கேட்பதற்கு அவசியம் கிடையாது.

இந்த சமுதாயத்தில் கடைகோடியில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆசை. இன்னாருக்கு இன்னது மட்டும்தான் என்பது மனுதர்மம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமதர்மம்.

***

தமிழ் ஓவியா said...

கலைஞர் ஆட்சியில் (காலத்தில்) 108, ஜெய லலிதா ஆட்சியில் 110 ஜெயலலிதா அம்மையார் மக்களுக்கு போடுவதோ 111, மக்களும் அவர்க ளுக்கு விடை 111 கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் சொல்லுவார்கள். அண்ணா நாமம் வாழ்க என்று. இப்போது தான் ஏன் அண்ணா நாமம் வாழ்க என்று சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அண்ணாவுக்கு நாமம், அண்ணா கொள் கைக்கு நாமம், இனிமேல் மக்களும் அஇஅதிமுகவுக்கு போடப் போவதும் நாமம் 111

One Ten. One Ten என்று அதுவும் தமிழில் சொல்வது கிடையாது. எம்டன் மாதிரி One Ten. One Ten என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

110 இருக்கிறது பாருங்கள் அதற்கு என்ன சிறப்பு என்றால், அவசரத்திற்காக வைத்திருக்கின்ற ஒரு கருவி.

மிகப்பெரிய தொழிற்சாலை இருக்கிறது என்றால், தீயணைப்பு கருவி மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள். இந்த தீயணைப்பு கருவி மாதிரி, 110அய் பயன்படுத்த வேண்டும். தொழிற் சாலையில் திடீர் தீப்பிடித்தால் இந்தத் கருவியை பயன்படுத்தலாம். அதை ஒன்றாவது இடத்திலும் வைக்க வேண்டுமென்று சட்டப்பூர்வமாக இருக்கிறது. ஆனால் அடுப்பு கொளுத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? அது மாதிரி இந்த அம்மையார் என்ன செய்தார் தெரியுமா? அவசரத்துக்காக இருக்கிற றிணீமீக்ஷீஸீ (பேட்டன்). அதிலே ஒரே ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு என்றால் இவர்கள் யாரும் எழுந்து கேள்வி கேட்க முடியாது.
அவர் கருத்துக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். அது ளிஸீமீ கீணீஹ் ஜிக்ஷீணீயீயீவீநீ ஒரு வழிபாதை. யாரும் கேள்வி கேட்க முடியாது. அறிவிப்பு கொடுப்பார்கள் அதுதான் அதிமுக அரசு. ஆகவே 110ன் படி இவர்கள் வெளியேற வேண்டும் சட்டமன்றத்தை விட்டு. இல்லையேல் வெளியேற்றுவார்கள். மற்ற சட்டமன்றங்களில் ஏன்? நாடாளுமன்றத்திலே கூட இப்படி கிடையாதே!

***

நேற்றுவரை நான்தான் பிரதமர் என்ற ஜெயலலிதா அம்மையார், திடீர் என்று அங்கம் வகிக்கிறேன் என்றால் என்ன பொருள்? இதை நன்றாக கவனிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் நண்பர்கள் எல்லாம் வடக்கில் இருந்து வந்தார்கள். இங்கே உள்ளவர்களும் கைகளை தூக்கி அவர்கள் கையை பிடித்தார்கள். தூக்கிய கையோடு சரி, கையை கீழ போட்டவுடன் கும்பிட்டார்கள். யார் மற்றவர்கள்? அந்த அம்மா இல்லை.

அவர்கள் நால்வர் அணியாக இருப்பார்கள், சைவ சமயக் குரவர்கள் நான்கு பேர் மாதிரி, நால்வர் அணி. நம்ம இடதுசாரி தோழர்கள் பாவம், வெகு காலம் காத்துக் கொண்டிருந்தார்கள். நம்மிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தொகுதி என்று அறிவிக்கப்படவில்லையே என்று இவர்களும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நம்பிக்கை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அவர்கள் உட்கார்ந்து கொண்டி ருந்தார்கள். அதுவும் ஒரு இலை அல்ல, இரட்டை இலை. நல்லா பரிமாறுவார்கள். நல்லா பரிமாறுவார்கள் என்று நினைத் தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்காங்க உட்கார்ந்தே இருக்காங்க! என்னங்க ஒன்றுமே காணோம் என்று கேட்டார்கள். நால்வர் அணியில் இருந்து இரண்டு பேர் வந்தார்கள். வந்தவுடன் கும்பிட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

நண்பர்களாக நாம் சேர்ந்தோம் - நண்பர்களாகவே பிரிவோம்! என்று அவர்கள் கழற்றி விடப்பட்டார்கள். அதிகமாக அவர் களை நாம் பேசவேண்டாம். அவர்கள் எந்த அணியில் இருந்தாலும், எதிர்த்தாலும் கொள்கை ரீதியாக நண் பர்கள், யாரையும் எதிரியாகப் பார்த்து நமக்குப் பழக்கமில்லை. அவர்களை அவமதித்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

பிரதமர் கனவு கண்டவர்கள். இப்பொழுது நாம் தமிழ்நாட்டில் அதிகம் இடம் வெற்றி பெற்று, மத்தியில் யாருக்காவது ஆதரவு தருவோம் என்று சொல்கிறார்கள். அது ஊடக நம்பிக்கை, உளவுத் துறை நம்பிக்கை. ஆனால் மக்களின் தீர்ப்பு வேறு வித மாக இருக்கும் என்பதை தேர்தல் முடிந்த பின் பார்க்கலாம்.

***

இடதுசாரி தோழர்கள் எங்களை ஏன் வெளியே போக சொன்னார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது; காரணம், மோடியோடு இரகசிய ஒப்பந்தம். ஆகவே நாங்கள் இருந்தால் வசதிகுறைவாக இருக்கும் என்று இடையில் உட்கார வைத்தார்களே தவிர, பரிமாறாமல் அனுப்பி விட்டார்கள்.

பரிமாறினால் மோடி கோபித்துக் கொள் வார் என்று பரிமாறாமல் இருந்திருக்கிறார்கள் என்ற நிலைதான் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்த திமுக அணி கொள்கைக் கூட்டணி, நாம் இருக்கிற கூட்டணி அடிப்படை கொள்கையில் மாறுபட்டு இருக்கிறோமா? இதுவல்லவா கூட்டணி! இந்த அம்மையார் செய்தது போல், யாராவது இதுபோல் அனுப்பப்பட்டார்களா? இதுவா அரசியல் நாணயம்?

***

தமிழ்நாட்டிலே, பெரியார் பிறந்த மண்ணிலே, திராவிடர் இயக்கம் வளர்ந்த மண்ணிலே, பேத மில்லாப் பெருவாழ்வு மாமன், மச்சான், மதத் தால் பிரிவில்லை, ஜாதிகளால் பிளவுபடுவ தில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தாலே தெரியும். இப்படிப்பட்ட சூழல் வடக்கே உண்டா? மற்ற மாநிலங்களில் உண்டா? என்றால் கிடையாது அப்படிப்பட்ட மதக்கலவரங்கள் இங்கேயும் உருவாக்க வேண்டும். ஜாதிகளை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக அமைந்ததுதான் பிஜேபி கூட்டணி.

ஜாதி வெறி, மத வெறி, பதவி வெறி இதை மூன்றையும் கூட்டினால் ஒரு கூட்டணி இதற்கு பெயர்தான் பி.ஜே.பி. கூட்டணி.

***

தமிழ்நாட்டில் அமைதி இல்லை! எங்கு பார்த்தாலும் கொலை, கொலை இல்லாத நாள் உண்டா? இரட்டைக் கொலை, மூன்று கொலை, நான்கு கொலை கொலை கொலையாய் கொலை ஒய் திஸ் கொலை வெறின்னு ஏன் பாடல் சினிமாவில் எடுத்தார்கள் என்று தெரிகிறது. இதுதான் அம்மையார் (ஜெயலலிதா) ஆட்சியின் அமைதியா? வளமா? வளர்ச்சியா?

கொலை எங்கும் நடந்து கொண்டு இருக்கிறது. பத்திரிகையைத் திருப்பினால், தொலைக் காட்சியை பார்த்தால் இன்றைக்கு கொலைச் செய்தி இல்லை. தமிழ்நாடு அமைதியாய் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

சிறைச்சாலைக்குள் கொலை, கோர்ட்டில் வாதாடச் சென்றால் கொலை, தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா? இதுபோல். அப் புறம் எங்க அமைதி வளம் வளர்ச்சி? எண்ணிப் பாருங்கள் வாக்காளர்களே! சிந்தித்து வாக்களி யுங்கள்! நல்ல தலைமுறையை உருவாக்க, அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்.

***

(பாஜக) கூட்டணியில் தமிழ்நாட்டுக்குத்தான் ஒப்பந்தம் போட்டோமே தவிர பாண்டிச்சேரி கூட்டணிக்கு ஒப்பந்தம் போட வில்லை ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அறிவு ஆசான் பெரியார் தான் பழமொழி சொல்வார்கள். தலைக்கு ஒரு சீயக் காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று. அதுதான் நினைவுக்கு வருகிறது. எனவே, பிஜேபி தலைமை யில் உள்ள அணி கூட்டணி அல்ல, அது சீட்டணி!

யாருக்கு எத்தனை சீட்டு என்று கேட்கக்கூடிய, கேட்ட சீட்டணி - கூட்டணி அல்ல.
அந்த கூட்டணியில் (பாஜக) தலைவர்கள் ஒத்துப் போகிறார்களா? அவர் வந்தால், இவர் வரமாட்டார். இவர் வந்தால் அவர் வரமாட்டார்.

ஆகவே, அது ஒரு சர்க்கஸ் கம்பெனி. அதிலே ரிங் மாஸ்டர் மோடி. மற்றவர்கள் எல்லாம் ஜாடி. அவர்கள் ஜோடியாக வேலை பார்க்க மாட்டார்கள். ஜாடியாகத்தான் இருப்பார்கள்.

***

அந்தக் காலத்தில் சொல்லுவார்கள். யுத்தத்தில் முதலாவது, பலியாவது உண்மை என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. ஆனால், போரில் உண்மைகள் பலியாவதைவிட, தேர்தலில்தான் உண்மை பலியாவது அதிகம். ஏனென்றால், நம் நாட்டில் உண்மைகள் தேர்தலில் வெளியே வராது.

அம்மையாருக்கு (ஜெயலலிதா) இப்பொழுதே தேர்தல் பயம் வந்து விட்டது. நாம் எல்லாம் கஷ்டப்பட்டு ரோட்டில் வருகிறோம். அவங்க மேலே இருந்து வருவாங்க, பேசிவிட்டு வசதியாக போவாங்க! நாளுக்கு நாள் அம்மையாருக்கு (பிரதமர் கனவு) சுருதி குறைந்து அங்கம் வகிப்போம்! மத்தியில் வரக்கூடிய ஆட்சியிலே என்கிறார்கள்.

பிரதமர் கனவு கண்டு பிளக்ஸ் எப்படி வைத்தார்கள்? வருங்கால பாரதமே! பாரதம், பாரதம் - பார் அதம் ஆட்சி. பார் அதான் அவரின் ஆட்சி.

தொகுப்பு: சாமி திராவிடமணி

தமிழ் ஓவியா said...

எது அறிவியல்

நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.

எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.

இதுதான் - இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.

இந்த மாதிரியும் இருக்கலாம் - இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.

ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் - அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?

இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!

அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?

ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?

- - - _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]

தமிழ் ஓவியா said...

மேதைமை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

தமிழ் ஓவியா said...

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்

எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’

அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல

- மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்

தமிழ் ஓவியா said...

நாத்திக அறிவியலாளர் - மேரி க்யூரி

- நீட்சே

மதநம்பிக்கைகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் இருந்த மேரி க்யூரி பெரும்பாலும் ஒரு நாத்திகராகவே கருதப் பட்டார். ஆனால் அவரது அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டு காணும்போது, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் அற்றவர் (ஹபடிளவஉ) என்றே கூறலாம்.

போலந்து நாட்டைச் சேர்ந்த வார்சா நகரில் 1867 நவம்பர் 7 ஆம் தேதி அன்று பிறந்த மேரி க்யூரியின் இயற்பெயர் மேரிப ஸ்லோடவுஸ்கா என்பதாகும். ரேடியக் கதிர்வீச்சுப் பொருள்களைக் கொண்டு இவர் தொடர்ந்து நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து வந்தமையால், லூகோடேமியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடுமையான ரத்தசோகையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி. உயிர்நீத்தார்.
போலந்தில் பிறந்த இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரான்ஸ் நாட்டில் கழித்தார். இந்த இரு நாடுகளிலுமே இவரைச் சுற்றி ரோமன் கத்தோலிக்க மதமக்கள் வாழ்ந்து வந்தனர். அவரது தாயும் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவரே. வார்சாவில் இயல்பியல் பேராசிரியராக இருந்த அவரது தந்தை நாத்திகர் என்பதைக் குறிக்கும் சுயசிந்தனையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

க்யூரி அம்மையாரும் மதத்தைப் பின்பற்றியவர் அல்ல. மதத்தைப் பற்றி அவர் கூறுகிறார்:

வாழ்வில் எதனைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை; ஆனால் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் அதிகமாக அறிந்துகொள்வதற்கான நேரம் இதுவே என்பதால், எதிர்காலத்தில் நாம் அதிகமாக அஞ்சாமல் இருக்கக் கூடும்.

தங்களது திருமணம் மதம் சார்ந்த ஒரு விழாவாக இல்லாமல் ஒரு சமூக விழாவாக இருந்தது என்று எழுதியதன் மூலம் தனது மற்றும் தனது கணவரது மதம் சாராத தன்மையை அம்மையார் வெளிப்படுத்தியுள்ளார்.

மேடம் க்யூரி அம்மையார் எந்த மதத்தையும் சார்ந்தவராக இருக்கவில்லை. எந்த மதத்தையும் அவர் பின்பற்றவில்லை. 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் அய்ரோப்பாவில் ஓர் உயர்ந்த இடத்தை மதம் பெற்றிருந்த சூழலில், மதத்தைப் பற்றி கவலையே படாமல் அவர் இருந்தது அவரது காலத்தில் நிலவிய சமூக சம்பிரதாயங்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட ஒரு துணிவான அறிக்கையாகவே கொள்ளத் தக்கதாகும்.

போலந்து குடிமகளான இவர் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ரேடியோ கதிர்வீச்சு பற்றிய தொடக்கநிலை ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இயல்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார். அவரது சிறப்புகளாவன

* நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி இவர்தான்.

* இயல்பியல் மற்றும் வேதியியல் என்று இரு துறைகளிலும் நோபல் பெற்ற ஒரே பெண்மணி இவர்தான்.

* பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆன முதல் பெண்மணியும் இவர்தான்.

* அய்ரோப்பாவில் அறிவியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.

* சோர்போன் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியராக ஆனவரும் இவர்தான்.

தமிழ் ஓவியா said...

* பாரிசின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய மிக உயர்ந்த அவையில் தனது தடனிப்பட்ட தகுதிகள், திறமை காரணமாக 1895இல் அரங்கேறிய முதல் பெண்மணியும் இவர்தான்.

வார்சாவில் ரகசியமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயங்கி வந்த மிதக்கும் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர் வார்சாவில் தனது செயல்முறை அறிவியல் பயிற்சியைத் தொடங்கினார். தனது 24 ஆவது வயதில் அதாவது 1891 இல், தனது அக்கா ப்ரோனிஸ்லாவாவைத் தொடர்ந்து கல்வி கற்க இவர் பாரிஸ் சென்றார். அங்கு தனது உயர்பட்டத்தைப் பெற்ற அவர் தனது பிந்தைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். க்யூரி அம்மையாருக்கும், அவரது கணவர் பியரி க்யூரிக்கும் இயல்பியலாளர் ஹென்றி பெக்குரெல் என்பவருக்கும் 1903ஆம் ஆண்டுக்கான இயல்பியல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ரேடியோ ஆக்டிவிடி அய்சோடோப்புகளைத் (Radioactive Isotope) தனிமைப்படுத்துவதற்கான ரெடியோ ஏக்டிவிடி தியரியைக் கண்டுபிடித்ததும், இதற்குக் காரணமான இரண்டு மூலகங்களான போலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும்தான் க்யூரி அம்மையார் புரிந்த சாதனையாகும். ரேடியோ ஆக்டிவ் அய்சோடோப்புகளைப் பயன்படுத்தி, புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்த பிளாஸ்மா நோயைக் குணப்படுத்துவதில் உலகின் முதன் முதலான ஆராய்ச்சிகள் க்யூரி அம்மையார் அவர்களின் தலைமயில் தொடங்கப்பட்டன. பாரிசிலும், வார்சாவிலும் இவர் தொடங்கிய க்யூரி இன்ஸ்டிடுட்டுகள் இன்று மருத்துவ ஆராயச்சியின் முக்கிய மையங்களாக விளங்குகின்றன. முதல் உலகப் போரின்போது இவர் முதன் முதலான ராணுவ கள ரேடியாலாடஜிகல் மையத்தை நிறுவினார்.

க்யூரி அம்மையார் சற்று புரட்சிகரமான சிந்தனை கொண்டவர். போலந்தை ரஷ்யா ஆக்ரமித்து இருந்ததை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு மாணவர் தீவிர அமைப்பின் செயல்பாடுகளில் இவர் வார்சாவில் இருந்தபோது பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அதன் காரணமாக ரஷ்ய துருப்புகளின் தாக்குதல்களில் இருந்துரு தப்பிக்க அவர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கிராகோ நகருக்கு ஓடவேண்டியதாயிற்று.

தமிழ் ஓவியா said...


தனது இறுதி காலத்திலும், முதல் உலகப் போரின்போதும் க்யூரி அம்மையார் பிரான்ஸ் நாட்டுக்கு விசுவாசம் மிகுந்தவரக இருந்தார். எக்ஸ்ரே எடுக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டியை பிரான்ஸ் அரசுக்காக போர் முனைகளுக்கு அவர் ஓட்டிச் சென்றார். என்றாலும் பிரான்ஸ் நாடு எப்போதுமே அவரிடம் கருணையாக நடந்து கொண்டதில்லை. அங்கிருந்த ஆணாதிக்கம் நிறைந்த அறிவியலாளர் சமூகத்துடனான தனது போர்களில், பெண்ணியத்துக்காக முதல் முதலாகப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியவராக இவர் விளங்கினார். பெரிய பெரிய ஆண் அறிவியலாளர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றி வெற்றி பெறமுடியும் என்பதையும் க்யூரி அம்மையார் மெய்ப்பித்துக் காட்டினார். அவரது அத்தனை திறமைகளுக்குப் பிறகும் பிரெஞ்சு அறிவியல் அகாதமியில் அவருக்கு இடம் அளிக்க மறுக்கப்பட்டதன் ஒரே காரணம், பிரான்ஸ் அகாதமியில் பெண்கள் பங்கேற்க இயலாது என்பதுதான்.

தனது நேர்மைக்காகவும், எளிய வாழ்க்கைக்காகவும் பாராட்டப் பட்டவர் அவர். 1897 இல் தான் பொருள் ஈட்டத் தொடங்கியவுடன் 1893 இல் தான் படிப்புதவில் தொகையாக தான் பெற்றிந்த ஒரு சிறுதொகையை க்யூரி அம்மையார் திருப்பி அளித்தார். தான் முதன் முதலாகப் பெற்ற நோபல் பரிசு பணத்தை தனது நண்பர்கள், தனத குடும்பத்தினர், மாணவர்கள், சக ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் தாராளமாக அளித்தார். ரேடியத்தைப் பிரித்தெடுக்கும் நடைமுறையை அவர் வேண்டுமென்றே உரிமைக் காப்பீடு செய்யாமல் விட்டுவிட்டார். அறிவியல் சமூகம் எந்தவிதத் தடையும் இல்லாமல் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதே அதன் காரணம். பணத்தையும், விருதுகளையும் பரிசாகத் தனிப்பட்ட தனக்குத் தருவதற்கு பதிலாக தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அவரும் அவரது கணவரும் பல முறை தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற மறுத்துள்ளனர்.

புகழினால் அகந்தை கொண்டு கெட்டுப்போகாமல் இருந்தவர் மேரிக்யூரி அம்மையார் ஒருவராகத்தான் இருப்பார் என்று ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டதாகக் கூறப்படுவதுண்டு. பிரெஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் தனது போலந்து நாட்டு அடையாளத்தைப் பற்றிய தனது உணர்வை அவர் எப்போதுமே இழந்ததில்லை. தனது மகள்களை போலந்து நாட்டுக்கு பல முறை அழைத்துச் சென்றுள்ள அம்மையார் அவர்களுக்கு போலந்து மொழியையும் கற்றுத் தந்தார். தான் முதன் முதலாக 1898 இல் கண்டுபிடித்த வேதியியல் மூலகத்திற்கு தனது தாய்நாட்டின் நினைவையொட்டி போலோனியம் என்று அவர் பெயரிட்டார்.

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் - மு.பாண்டியன் நெடுஞ்செழியன்


அம்மாவின் புடவையை மடிக்க முடியாது! அப்பாவின் சில்லரையை எண்ண முடியாது!! என்ற விடுகதைக்கு _ வானத்தையும், நட்சத்திரங்களையும் பதிலாக குறிப்பிடுவார்கள்! அந்த விடுகதையையே பொய்யாக்கி விட்டனர் நமது விண்ணியல், இயற்பியல் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி) என்று கண்டறிந்துள்ளனர்.



நெபுலாக் கொள்கையின்படி ஒட்டு மொத்த பிரபஞ்சம் தோன்றி சுமார் 1500 கோடி ஆண்டுகள் _ பூமி உள்ளிட்ட சூரியக்குடும்பம் தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகின்றன _ என்ற உண்மையும் கண்டறியப்பட்டுள்ளன.

கற்பனைக்கும் எட்டாத அளவில் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1000 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்! அதாவது நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்யும் வெளிச்சம் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்தால் அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு _ அதைப் போல 1000 கோடி ஒளி ஆண்டு _ அதாவது 100 கோடி கோடி கோடி கி.மீ. தூரம்! அதுதான் பிரபஞ்சத்தின் எல்லை! _ அதாவது _ பூமி முதன்முதலாக தோன்றியபோது பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்தும் _ இன்னும் நம்மை வந்தடையவில்லை! என்னே விந்தையிது!

பூமியைச் சுற்றி காற்று மண்டலம் வியாபித்திருப்பதால் பகலில் நாம் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்! விண்வெளியில்? -_ எங்கும் இருட்டு _ கும்மிருட்டு _ இரவும் பகலும் _ எப்போதும்!

இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான பேரண்டங்கள் (Universe) - கோடிக்கணக்கான அண்டங்கள் (Galaxy) - அதில் ஒரு அண்டம்தான் _ நமது சூரியக் குடும்பத்தையும், சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் (Milky way galaxy)! ஒரு பூரிக்கட்டையைப் போன்ற (Spiral galaxy) தோற்றம் கொண்ட நமது பால்வெளி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நமது சூரியக் குடும்பம்!

நமது கோள்களுக்கு துணைக்கோள்கள் _ பூமிக்கு நிலவுபோல _ பால்வெளி மண்டலத்திற்கும் துணை அண்டங்கள் இருக்கின்றன _ பெரிய மெகல்லன் வான்முகில், சிறிய மெகல்லன் வான்முகில் என்பவைதான் அவை! பால்வெளி மண்டலத்தின் ஒட்டுமொத்த விட்டம் மட்டும் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம்! பால்வெளி மண்டலத்தின் மய்யப் பகுதிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் மட்டும் சுமார் 32 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரம்! நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கி.மீ. அதாவது சூரியனிடமிருந்து புறப்படும் வெளிச்சம் நம்மை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. நமது சூரியக் குடும்பத்தில் ஒரே நட்சத்திரம் சூரியன் _ அது 15 கோடிக் கி.மீ. தூரத்தில்!

நமது சூரியக் குடும்பத்துக்கு மிக மிக அருகில் இருக்கும் அடுத்த நட்சத்திரம் ஆல்பா சென்டாரி. அதற்கும் நமக்கும் உள்ள தூரம் 4.3 ஒளி ஆண்டுகள்! அதாவது 43 லட்சம் கோடி கி.மீ.! நமது சூரியக் குடும்பத்திற்கு அடுத்த நட்சத்திரமே 43 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில்! ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு தூர இடைவெளியில் வியாபித்து இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

எல்லாம் சரி _ நமது பூமி ஒரு நொடிக்கு 0.5 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது! நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது! சூரியன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறதா? சுற்றுகிறது _ நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில்! பால்வெளி மண்டலம் (Galaxy) பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது _ நொடிக்கு 600 கி.மீ. வேகத்தில்! கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டால் _ இந்த உலகத்தில் வாழும் உயிரினங்கள் _ மனிதன் உட்பட வெறுமனே உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட _ ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் சுமார் 2 ஆயிரம் கோடி கி.மீ. பயணம் செய்கிறோம்! புதிராக இல்லை? ஆனால் இதுதான் பிரபஞ்ச உண்மை! அதேபோல் சூரியன் தன் குஞ்சுகுளுவான்களுடன் _ குடும்பத்துடன் தன் தாய்வீடான பால்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர 25 கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது! அதை ஒரு காஸ்மிக் ஆண்டு (Cosmic Year) என்பார்கள்! சூரியன் தோன்றி இதுவரை தன் தாய் வீட்டை 20 முறைதான் வலம் வந்திருக்கிறது _ அதுபோல இன்னும் 20 முறைதான் வலம் வரும் _ தன் வாழ்நாளில்.

பரிணாம வளர்ச்சி என்பது உலகிலுள்ள உயிர்களுக்குத்தான் உண்டு சூரியனுக்கு உண்டா? ஆம்! சூரியனுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு _ சுமார் 5000 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே சூரியன் கருக் கொண்டது! அது சுருங்கிச் சுருங்கி தற்போதைய நிலைக்கு வந்தது 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான்! அதையே சூரியன் வயதாக நாம் கணக்கிலெடுத்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்திலுள்ள லட்சம் கோடி கோடி நட்சத்திரங்களில் _ ஒரேயொரு நட்சத்திரமான சூரியனில் _ 13 லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடலாம்! என்னே பிரபஞ்சத்தின விஸ்தீரணம்! நினைக்கவே மலைப்பாக இல்லை?

தமிழ் ஓவியா said...

சூரியக் குடும்பத்தின் நிறையில் 99% சூரியன் எடை _ மற்ற 1% தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் _ இத்யாதிகளின் எடை! சூரியனின் எடை _ 2 பக்கத்தில் 30 சுழிபோட்டால் எத்தனை எண் வருமோ _ அத்தனை கிலோ எடை! பிரமிப்பாக இல்லை?

பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் கம்பிச்சுருள் போன்ற வடிவில் சுழன்று சுழன்றே நகர்ந்து கொண்டிருக்கின்றன. நமது சூரியக் குடும்பமும், சூரியனும் அதற்கு விதிவிலக்கல்ல! நாம் இருசக்கர வண்டியோட்ட _ 8 போட்டால்தான் உரிமம் கிடைக்கும். அதுபோல சூரியனும் நகர்கிறபோது ஓர் ஆண்டில் 8 போடுகிறது! நமக்கும் சூரியனுக்கும் எத்தனை ஒற்றுமை பாருங்கள்!

இப்போது நாம் அவ்வப்போது காணுகின்ற சூரிய கிரகணம் _ அதாவது நிலவின் நிழல் சூரியனை மறைப்பது _ இன்னும் 60 கோடி ஆண்டுகளுக்குப்பின் நிகழவே நிகழாது! ஏனென்றால் நம்மைவிட்டு ஒவ்வொரு வருடமும் 3.8 செ.மீ. தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கும் நிலவுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 60 கோடி ஆண்டுகளில் 25 ஆயிரம் கி.மீ. அதிகமாகி விட்டிருக்கும்!

அதேபோல இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 2009ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் நாள் நிகழ்ந்தது _ சுமார் 7 நிமிடங்கள் சூரியன் மறைக்கப்பட்டது! இதைப் போன்ற முழு சூரிய கிரகணத்தை இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கி.பி.2114இல்தான் மீண்டும் காணமுடியும்!

சூரியன் தோன்றி இந்த 500 கோடி ஆண்டுக் காலத்தில் அது வெளிப்படுத்திய ஆற்றலைக் கணக்கிட்டால் _ அது எப்போதோ தீர்ந்து போயிருக்க வேண்டும் _ ஆனால் உண்மை என்ன? சூரியன் ஒரு கிராம் நிறையை இழந்தால் _ அது 9 இலட்சம் மடங்கு பெருக்கி ஆற்றலாக வெளிப்படுகிறது. இதைத்தான் அறிஞர் அய்ன்ஸ்டீன் _E=MC2[E=Energy, M=Mass, C=Velocity of light] என்று கண்டறிந்தார்.

அதேபோல _ நமக்குத் தெரிந்து 3 பரிமாணங்கள்தான் (3D) - நீளம், அகலம், உயரம் _ நான்காம் பரிமாணமான விண்வெளி நேரம் (Space time) என்பதைக் கண்டறிந்து சொன்னவரும் அய்ன்ஸ்டீன்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சூரியனின் மய்யப் பகுதியின் (Core) வெப்ப நிலை 15 கோடி செல்சியஸ் _ சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற வெப்பநிலை 6000ஷீ நீ! அதேபோல _ சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள்தான் உயிர்களை உண்டாக்கும் அடிப்படைப் பொருளான அமினோ அமிலத்தை உண்டாக்குகின்றன _ அதுதான் உலகத்தில் உயிர்கள் தோற்றத்துக்கான அடிப்படை!

8 கோள்கள்_88 துணைக்கோள்கள் _ கோடிக்கணக்கான ஆஸ்டிராய்ட்கள் _ எண்ணிலடங்கா வால் நட்சத்திரங்கள் _ இவையெல்லாம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன! சூரியக் குடும்பத்தின் விட்டம் மட்டும் சுமார் 15 லட்சம் கோடி கி.மீ.! பூமியின் விட்டம் சுமார் 40 ஆயிரம் கி.மீ.!

அதேபோல நிலவின் விட்டம் சுமார் 3500 கி.மீ. _ அதாவது முழு நிலவின் விட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள தூரத்தை நாம் வெறுங் கண்ணால் பார்க்கிறோம்!

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஹீலியம் மூலக்கூறாக மாறுகின்ற அணுச்சேர்க்கைதான் (Nuclear fusion) சூரியனின் ஆற்றலுக்கு அடிப்படை! ஹைட்ரஜன் அணுகுண்டின் அடிப்படையும் அதுதான்!

தமிழ் ஓவியா said...


பூமியிலுள்ள சக்திக்கெல்லாம் மூல சக்தி சூரியன்தான்!

அதனால் அதைக் கடவுளாக வழிபடலாமா? தேவையில்லை _ ஏனென்றால் _ அது ஒரு அணு உலை அடுப்பு அவ்வளவுதான்.

ஹைட்ரஜன் 71 சதமும் _ ஹீலியம் 27 சதமும் _ மற்ற தனிம வாயுக்கள் 2 சதமும் கொண்ட அணு உலை அடுப்பான சூரியனும் ஒரு நாள் இறந்து போகும்! கவலைப்பட வேண்டாம்! அது நடக்க இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும்! அப்போதைக்கு சூரியனின் பெயர் சிவப்பு அரக்கன் (RedGiant) என்று விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்! சிவப்பு அரக்கனான சூரியனின் இறுதிப் பயணத்தில் _ பூமிப்பந்தும் இன்ன பிற கோள்களும் என்னவாகும்? வெப்பமும் ஈர்ப்பும் குறைந்து போன சிவப்பு அரக்கனின் பிடியிலிருந்து பூமிப்பந்து கழன்று ஓடி தப்பித்துக்கொள்ளும்! மனிதர்களாகிய நம் கதி என்னவாகும்? அந்தக் காலம் _ காலச்சக்கரத்தின் அந்திமக்காலம் வருவதற்குள் நம்மை _ வேற்றுக் கிரகவாசிகளாக நம்முடைய விஞ்ஞானத்தின் அசுரவேகம் மாற்றிவிட்டிருக்கும்! _ சிவப்பு அரக்கனாக சுருங்கிப்போன சூரியன் வெண்குள்ளர் (White Dwarf) என்ற நிலையை அடைந்துவிட்டிருக்கும்!

இந்த ஆராய்ச்சிக்குத்தான் _ நமது தமிழகத்தைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த விஞ்ஞான மேதை சந்திரசேகர் _ நோபல் பரிசைப் பெற்றார்! நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பும் இறப்பும் பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த விண்ணியற்பியல் அறிஞர் சந்திரசேகர் பிரபஞ்சத்தில் கடவுள் நாற்காலி இன்னும் காலியாகவே கிடக்கிறது என்ற உண்மையைச் சொன்னவர் என்பதை நினைவில் வைப்போம்!

அறிந்ததும், அறியாததும் _ புரிந்ததும், புரியாததுமான ஏராளமான புதிர்களை உள்ளடக்கிய _ நாம் வாழும் இந்த பூமியே நமது ஆச்சரியத்தின் எல்லையாக பரந்து கிடக்கிறது.

அவ்வளவு பெரிய பூமியைப்போல _ சுமார் 13 லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவிற்கு பெரிய நட்சத்திரம் _ நமது சூரியன்! நமது சூரியன் அடிப்படையில் ஒரு நடுத்தர வகைப்பட்ட _ நட்சத்திரம்! அவ்வளவுதான்! சூரியனைப்போல பெரியதும் சிறியதுமான நட்சத்திரங்கள் சுமார் 1019 (லட்சம் கோடிகோடி) நட்சத்திரங்களை உள்ளடக்கியதுதான் பிரபஞ்சம் (Space)! என்னே அதன் விஸ்தீரணம்!


இதில் _ கடவுள் எங்கே இருக்கிறார்? கொஞ்சம் யோசித்தாலும் கடவுள் தத்துவம் ஒரு அப்பட்டமான புளுகு மூட்டை _ கட்டுக்கதை என்பது புரிந்துவிடும்!

விஞ்ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் புலப்படாத கடவுளை _ மூட நம்பிக்கையோடு வழிபடும் அஞ்ஞானிகளை _ பக்தர்களைக் கண்டு எள்ளி நகையாடுவதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை.

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!! கடவுள் இல்லவே இல்லை!!!

என்று உண்மையை உரத்து முழங்கிய சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் தத்துவம் இந்த பூமிக்கான தத்துவம் மட்டுமல்ல - பிரபஞ்சத்துக்கான தத்துவம்!.

தமிழ் ஓவியா said...

மதத்தின் பேரால் பிளவு - தந்தை பெரியார்


தோழர்களே! கடவுள், மதம், ஜாதீயம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானக வரும் உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல் படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங் களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப் பட்ட உணர்ச்சிகளேயாகும்.



இந்தப்படி புகுத்தப் படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும் அன்னியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.



ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையில் -சுயேச்சையாய் திரிந்த இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூகக்கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது, அவனவன் தனக்குவேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்குவேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து அவனை உலக சுகபோகங்களில் பட்டினி போட்டு தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்துகொண்டு எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டுவிட்டுதான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விஷயமாகும்.

தமிழ் ஓவியா said...

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்கு பேராசையும், பொறாமையும் சோம்பேறித் தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும், அரசனுக்கு குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள் ஆகியவை கற்பித்துபிறகு அவை மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம் பின்ஜென்மம், கர்ம பாவம், புண்ணியம் மேல் உலகம் கீழ் உலகம், தீர்ப்பு நாள், மோட்சம் நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது.

இந்த கற்பனைகளின் பயன்தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும், மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும், உழைத்தும், சரியான கூலி கிடைக்காமல் பட்டினி கிடந்துழல்வதை பொறுமையுடன் பொறுத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்துவருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் அந்த நிலை அடியோடு அழிபடவேண்டும். அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசீயம், ஜாதீயம் என்பவைகளும் அவற்றின் பேறுகளான கர்மம் தீர்பபு, மோட்ச நரகம், பாவ புண்ணியம் ஆகியவற்றை போலி உணர்ச்சிகளும், அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெறியப்படவேண்டும்.

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும் `யோக்கியமாய், `நாணயமாய் நடந்தும் `இழிவாய் `கீழ்மக்களாய் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைக்கு மற்றவர்களால், தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன்ஜென்ம கர்மபலன் - தலைவிதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக்கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும், சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலையைப்பற்றி சிறிதும் அதிருப்திகூட அடையக்கூடாதென்று கருதி தங்கள் நிலையைப்பற்றி தாங்களே சமாதானமும், சாந்தமும் அடைந்து கொள்கிறார்கள் வெளியில் சொல்லக்கூட வெட்கப்படுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும், மதமும் இதைத்தான் போதிக்கின்றது எப்படி என்றால்:-

``ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே! கஷ்டப்பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே நீ உனது முன்ஜென்ம பாப கர்ம பலத்தினால் தலைவிதியால் கடவுள் சித்தத்தால் இம்மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய் இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில், அடுத்த ஜன்மத்தில் சுகப்படுவாய் - அல்லது ஜன்மத்தில் சுகப்படுவாய் - மேலான பிறவி பெறுவாய் - அல்லது மேல் உலகில் மோட்சம் என்றும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.

இந்த பெருமை உபதேசமும், சாந்த உபதேசமும் சமாதான உபதேசமும் மக்களை கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும் செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும் விடுபட முடியாமலும், சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும்படி செய்து வந்திருக்கிறது.

இவ்வளவு மாத்திரம்தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும், மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களை பட்டினிபோட்டு பெரும் பணப் சேர்க்கும் பணக்காரர்களுக்கும் போதிப்பது என்பதைப் பார்த்தாலே அது.

``ஓ பிரபுகளே! செல்வாவன்களே!! ஏராளமாக மேலும், மேலும் பணம், சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சுமி புத்திரர்களே!!! நீங்கள் முன் ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் - கடவுள் உங்கள் மீது வைத்த கருணையினால் இவ்வுயர்நிலையை அடைந்திருக்கிறீர்கள். இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சுகபோகம் உங்களுக்குக் கிடைத்ததற்கும் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும், கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலமும், கடவுள் பக்தர்களான பாதிரி குழு பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து, சத்திரம், மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி, இந்நிலையை நிலை நிறுத்திக்கொள்ளுவதுடன் மோட்ச லோகத்திலும் சுலபமாக இடம் சம்பாதித்து கொள்ளுங்கள் என்பதேயாகும்.

ஆகவே, தோழர்களே! இந்த காரணங்களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும் ஒரு சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றனர் என்பதை உணருங்கள்.

17.10.1932 அன்று இலங்கையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை

(`விடுதலை`, 19.11.1972).

தமிழ் ஓவியா said...

மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் 7.4.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா -_- பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.



1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

2. யூனிபார்ம் சிவில் கோட்.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

ராமர் சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் _ ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

தமிழ் ஓவியா said...


பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.

தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் _ பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு _ அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!

கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்!

மேற்படி திட்டத்தை ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே ஏன்?

தமிழ்நாட்டிற்கு வந்து திருமதி. சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி போன்றோர் உறையாற்றுகிறார்களே, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடத்திக் கொண்டு வருகின்றன _ அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.

இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?

இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

மோடியின் குஜராத் மாடல் எது?
மோடியின் குஜராத் மாடல் எது?

Print
Email


மனுஷ்யபுத்திரன் (தனது முகநூல் பக்கத்தில்)

ஒரு புத்தகம் பற்றி குருட்டுத்தனமான மோடி ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். குஜராத் கலவரங்கள் பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் குற்றமற்றவர் என்று அறிவித்ததன் மூலமாகத்தான் அவர் பிரதமர் வேட்பாளராக கம்பீரமாக வலம் வருகிறார். ஆனால் இந்தப் பரிசுத்தச் சீட்டு எப்படிப் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் முன் வைக்கிறது.

பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய The Fiction of Fact-Finding: Modi & Godhra, a study of the Gujarat 2002 investigations என்ற இந்தப் புத்தகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்த குளறுபடிகளுக்காக வர்மா கமிஷனால் கண்டிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகாரி ஆர்.கே ராகவன் பின்னால் சி.பி.அய் இயக்குனராக வாஜ்பாய் அரசாங்கத்தினால் மறு வாழ்வு அளிக்கப்பட்டார். அவர்தான் மோடிமீதான இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். கலவரம் நடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிலவரம் பற்றி தொடந்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த மோடி குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றி தனக்கு 5 மணிநேரம் கழித்தே தெரியும் என்று புளுகினார். அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த வன்முறையில், மோடியின் பொறுப்பு பற்றி இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. ராகவன் போன்ற அதிகாரிகள் மோடிக்கு வழங்கிய இந்தப் பரிசுத்தச் சான்றிதழின் மூலம் எப்படி நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தார்கள் என்பதைப் பற்றி மனோஜ் மிட்டா ஆழமாக விவரிக்கிறார். மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியைப் பற்றியே ஒப்பாரி வைப்பவர்கள் அவரது குஜராத் மாடல் நீதியைப் பற்றி ஒரு கணம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகம் பற்றி அவுட் லுக் இதழ் வெளியிட்ட அறிமுகம் ஃப்ர்ஸ்போஸ்ட்.

இணைய தளம் வெளியிட்ட மனோஜ் மிட்டாவின் பேட்டி ஆகியவற்றின் இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன்.

http://www.outlookindia.com/article.aspx?289455
http://www.firstpost.com/politics/sit-chiefs-history-made-him-unfit-to-lead-probe-new-book-on-
2002-riots-1458785.html

தமிழ் ஓவியா said...

வள்ளுவப் பார்வை


கவர் ‘மாவா’ கவரி ‘மானா”

- பேராசிரியர் ந.வெற்றியழகன்

மயிரா? உயிரா?

திருக்குறளுக்கு, உரை எழுதத் தொடங்கிய நாள் தொட்டு, இன்றுவரை பல்வேறு உரைகள் எழுந்து உலவுகின்றன. அவற்றுள் பல உடன்பாடாகவும், வேறுபாடு ஆகவும் மாறுபாடாகவும் உள்ளன. அவற்றுள் உள்ள மெய்ப்பொருளைக் காண்பத நம் ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடமை.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969)

என்னும் குறட்பாவின் உரை கருத்து மாறுபாட்டுக்-கு உரியதாக உள்ளது. அதனை வள்ளுவப் பார்வை வழி ஆய்வு செய்து உண்மை அறிய முயல்வோம். முதலில், இந்தக் குறட்பாவில் வரும், மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் என்ற தொடருக்கு வரையப்பட்டுள்ள அறிஞர் சிலரின் உரை மாறுபாடுகளைச் சற்றே நினைவுபடுத்துவோம்.

(உரை) வலையில் சிக்கிய வள்ளுவர் பெருமான்

1. ஒரு மயிர் சிக்கினால் பிராணனை விடும் கவரிமான் போன்றவர் என்கிறார் பாரதியார் (நூல்: திருக்குறள் உரை)

2. மயிரை இழந்தால் உயிரை விட்டுவிடும் கவரிமான் போன்றவர் கவரிமா _ நீண்ட மயிரழகுடைய கவரிமான் என்பார், பேராசிரியர் பெரும்புலவர் அ.நடேச முதலியார். (நூல்: அருங்குறள் பொழிப்பு விளக்கம்.)

3. ஒரு மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமான் போன்றவர் என, உரை வரைகிறார் மாத்தளை. சோமு. (நூல்: திருக்குறள் அறிவியல் அகலவுரை).

4. தன் மயிர்த்திரளில், ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமான் போன்றவர் வள்ளுவர் என்கிறார், பேராசிரியர் அ.மாணிக்கம் எம்.ஏ. (நூல்: திருக்குறள் தெளிவுரை)

5. மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமான் போன்றவர் என்கிறார் முனைவர் கடவூர் மணிமாறன். (நூல்: திருக்குறள் இனிய தெளிவுரை.)

6. ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரி மானைப் போன்றவர்... என்று உரை தருவார் புலவர் குழந்தை அவர்கள். (நூல்: திருக்குறள் புலவர் குழந்தை உரை)

தமிழ் ஓவியா said...

7. தனது மயிர்த் தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிரை வைத்துக் கொண்டிராத கவரிமான் போன்ற இயல்புடையார். இது நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய உரை. (நூல்: திருக்குறள் நாவலர் பொழிப்புரை) மா மட்டுமே!

8. தன் மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரி மாவை ஒப்பார் -இது, பரிமேலழகர் உரை. (நூல்: திருக்குறள் பரிமேலழகர் உரை)

9. ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரி மாவைப் போன்ற மானமுடையார் என்கிறார் மணக்குடவர். (நூல்: திருக்குறள், மணக்குடவர் உரை.)

10. குளிர்காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்னும் விலங்கினைப் போன்றவர் இது, புலவர் இளங்குமரனார் உரை. (நூல்: திருக்குறள், மதுரை இளங்குமரனார் உரை.)

எட்டுப் பேர் ஒன்றுபோலவே எழுதிய உரை:

இன்னும், பழைய _ புதிய குறளறிஞர்கள், பெரும் புலவர்கள் உரை எழுதியுள்ளனர். தேவைக்காக, விரிவஞ்சி, ஒருசிலரின் உரைப் போக்கினையும் கருத்தமைவையும் மட்டுமே எடுத்துக்காட்டியுள்ளோம். எடுத்துக்காட்டப்பெற்ற 10 பேரில் 8 பேர் கவரிமா என்பதற்கு மயிர்க்கற்றையுடைய விலங்கு(மா) ஆகிய மான் -_ கவரிமான் என்றே உரை எழுதியுள்ளனர்.

பரிமேலழகர், மணக்குடவர், மதுரை இளங்குமரனார் ஆகியோர் மூவர் மட்டுமே கவரிமா என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த மா(விலங்கு) எது? என்பதனைச் சுட்டிக்காட்டவில்லை.

காணப்படும் கருத்தொற்றுமை:

ஒருவர் நீங்கலாக ஒன்பதுபேரும், தானாகவோ சிக்கிக் கொண்டாலோ ஒரு மயிர் தானாக உதிர்ந்து அல்லது விழுந்துவிட்டாலோ அந்த மான் உயிர் வாழ விரும்பாது உயிர் நீங்கும் என்ற கருத்தில் ஒற்றுமை உடையவர்களாக உள்ளனர். ஒருவர் (இளங்குமரனார்) மட்டும் குளிர் காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரி மா என்று இயற்கைச் சூழலின் -_ தட்பத்தின் விளைவினை அடிப்படையாகக் கொண்டு உரை வரைந்துள்ளார்.

இப்பொழுது மேற்கண்ட குறட்பாவில் வரும் கவரிமா எது? அது கவரிமானா? பிற விலங்கா? என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.

திருவள்ளுவர், மிகத் தெளிவாக, மயக்கம் _ குழப்பம் இன்றி மயிர்த்திரள் உடைய விலங்கு என்ற பொருளில் கவரிமா _ என்றே எழுதியுள்ளார். மான் என்று குறிக்க விரும்பியிருந்தால் தெளிவாகவே கவரிமான் என்றே எழுதியிருப்பார். அதனால், யாப்பமைதி அதாவது சீர், தளை எதுவும் தவறாது. பின் ஏன் கவரிமா _என்று குறிப்பிட்டார்?

அது எது?

கவரிமா என்பது, உண்மையில் மயிர்க்கற்றை அல்லது திரள் அதாவது சடைசடையாய் அடர்ந்து வளர்ந்துள்ள மயிர்த்திரள் கொண்ட விலங்குதான் கவரிமா. (மா_விலங்கு) அந்த விலங்கு எது? வள்ளுவர் பெயர் சுட்டிக் கூறவில்லை! ஆனால், அது வள்ளுவர் கருத்துப்படி மான் அன்று. அது வேறு!

இது, திபெத்தில் உள்ள மிக உயர்ந்த மலைப்பகுதியில் வாழ்வது. உலகிலேயே, மிக உயர்ந்த மலைகளே இதன் வாழ்விடம். குளிர்காலத்தில் கூட, 14 ஆயிரம் அடி உயரத்திற்குக் கீர் இது வருவதில்லை. இந்திய நிலப்பரப்பில், சங்கசென்மோ பள்ளத்தாக்கில் மட்டுமே காணப்படுகிறது.

இதன் வகை இரண்டு

இந்தக் கவரி மா இருவகைப்படும். அவை: 1. காட்டுக் கவரிமா. 2. வீட்டுக்கவரிமா. காட்டுக் கவரிமா, 6 அடி உயரம் இருக்கும். அதன் கொங்கு 25 அங்குலத்திலிருந்து 30 அங்குலம் இருக்கும். எப்போதும் இதன் மூக்கு நிலத்தைத் தொடுவதுபோல, தலை தொங்கியபடியே இருக்கும்.

கன்னங்கருத்த முடி

தமிழ் ஓவியா said...

இதன் உடல் முழுதும் மிகவும் கன்னங்கரேல் -_ என, கருப்பு நிறத்தில் அல்லது கரும்பழுப்பான முடி _ மயிர்த்திரள் இருக்கும். முடிநீளமாக இருக்கும்; பட்டுப்போல மென்மையானது; இது தரையைத் தொட்டுக்கொண்டே இருக்கும்; விரைந்து நடக்கும்; துணிவு மிக்கது; கொம்புகள் கூரியன; இதனை வேட்டையாடுவது அத்துணை எளிது அன்று.

வளரும் - முடி வளரும்:

ஒன்றன்பின் ஒன்றாக, எறும்பு செல்வதுபோல நடந்து செல்லும் இயல்புடையது; இது, மோப்பத்திறன் மிகுதியாக உடையது. ஆண்டில், ஏப்ரல் திங்களில் குட்டி போடும். பிறந்து, 2 திங்கள் நிறைவடைந்த பின்னரே இந்தக் குட்டிக்கு முடி வளரும்.
வீட்டுக் கவரிமா

சொத்தான சொத்தல்லவோ?

காட்டுக் கவரிமாவும், மங்கோலிய மாடும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து பிறப்பதுதான் வீட்டுக் கவரிமா. இதன் முடி காட்டுக் கவரிமாவைவிட அடர்ந்திருக்கும். வாலில் மிகுதியான முடி வளர்ந்திருக்கும். வீட்டுக் கவரிமாவின் முடிதான், சவரி சாமரம் எனப்படுவது. வீட்டுக் கவரிமா திபேத்தியர்களுக்குப் பெரும் சொத்தாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

சத்தான சத்தல்லவோ?

பெரிய பொதிகளோடு, நாள் ஒன்றிற்கு 40 கி.மீ. தொலைவு பயணம் செய்யும். இதன் இனிய பால் நிறைவான ஊட்டச் சத்துடையது; மிகவும் குளிர்ந்த பகுதியில் வாழும் கவரிமாவின் முடியைக் குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் கவரி முற்றும் நீக்கப்பட்டால் கொடும்_கடும் குளிர் தாங்க முடியாமல் உயிர் இழக்க நேரும்; சில உயிரிழக்கும்.

இந்தக் கவரி மா யாக் (சீணீளீ) எனப்படும்.

அந்த மானைப் பாருங்கள், அழகு!

இனி, கவரி மான் பற்றியும் பார்ப்போம். தமிழ்நாட்டில் அழகிய கவரிமான்கள் உள. மிக நீண்ட முடியோ (மயிரோ) அது, பயன்படுத்தும்படியாகவோ இதற்கு இல்லை. அவ்வாறு, பயன்படுத்தத் தேவையான குளிரும் தமிழ்நாட்டில் இல்லை!
தரப்படும் தகவல்கள்:

இதுவரை, கவரிமா, கவரிமான் பற்றிய தகவல்கள் எல்லாம் புவியியல் _ அறிவியல் தொடர்பான அறிவியல் செய்திகளின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

மயிர் ஒன்று போனால் உயிர் நின்று போகுமா?

இப்பொழுது, நாம் ஓர் உண்மையைத் தெளிவாக உணரவேண்டும். திருவள்ளுவர் குறிப்பிட்டது கவரிமா! கவரிமான் அன்று.

கவரியை உடைய விலங்கு. அதாவது, திபெத்திய சடை எருமை! அதாவது, யாக் விலங்கு. அதன் முடி நீக்கப்பட்டால் குளிர் தாங்காது உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும். கவரிமானுக்கு அத்துணை முடியும் கிடையாத. உரையாசிரியர் சிலர் கூறுவதுபோல மயிர் நீப்பின் என்பது முடிக்கற்றையில் ஏதேனும் ஒரு மயிர் நீங்கினால் அது ஏன் உயிரிழக்கும்? எப்படி உயிரிழப்பு ஏற்படும்? ஒரு மயிர் விழுவதால் அதன் உயிருக்கு எப்படி, பாதிப்பு ஏற்படும்?

ஏதோ, ஏதோ, ஏதோ ஒரு மயக்கம்

யாரோ, எப்பொழுதோ, எங்கேயோ சொன்னதை சொல்லப்பட்டதை, கேட்டதை, கேட்டதை நம்பியதை அப்படியே ஆராயாது, கிளிப் பிள்ளை போல, ஒரு மயிர் நீங்கின் கவரிமான் உயிர் துறக்கும் என்று இந்த உரையாசிரியர்கள் சொல்கிறார்களே?

எப்படி இது சரியாகும்? உண்மையாகும்? இது ஒரு கருத்து மயக்கம் அல்லவா?

இது, எப்படி எப்படி, எப்படி வந்தது இவர்க்கும்?

பிற உரையாசிரியர்கள் தாம் பகுத்தறிவுக் கண்ணோட்டமோ, அறிவியல் மனப்பான்மையோ இல்லாத அல்லது இருக்க வாய்ப்பு இல்லாத அவற்றைப் பெற ஆர்வம் இல்லாத புலவர்கள், மொழியறிஞர்கள் இவ்வாறு உரை எழுதியுள்ளனர் என்றால் பகுத்தறிவாளர்களாக, தந்தை பெரியாரின் தடம்பற்றி நடந்த புலவர் குழந்தை, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆகியோர் ஏன் இவ்வாறு கருத்து மயக்கம் கொண்டு கவரிமான் ஒரு மயிர் நீங்கினால் உயிரிழக்கும் என எழுதினார்கள்? என்பதைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை? வருத்தமாக உள்ளது! நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டியுள்ளது! இந்தக் கருத்து மயக்கம் இவர்களுக்கு எப்படி வந்தது?

இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?

மயிர் நீப்பின் வாழா என்றுதான் வருகிறது; உரையாசிரியர்கள் கூறுவதுபோல மயிர் நீங்கின் _ உதிர்ந்து போயின் என்று வரவில்லை. நீங்கின் _ என்பது தானாக விழுவது; உதிர்வது; இலக்கணப்படி இது தன்வினை. எனவே, மயிர் தானாக நீங்கின் உயிர் வாழாது என்று பொருள் இதற்கு இல்லை. மயிரைப் பிறர் நீக்கினால் என்று பிற வினைப் பொருளில்தான் வருகிறது. இதில், இந்த பிறவினைப் பொருளில்தான் நீப்பின் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

இதனை, வால் மயிர் துடைக்கின் தான் உயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்கிறது பெருந்தொகை என்னும் நூல்.

துடைக்கின் வாழாது _ என்பதில் துடைக்கின் _ மழிப்பின் என்று பிறவினைப் பொருளில்தான் வருகிறது. கவரி _ என்று பொதுவாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. கவரிமான் என்று குறிப்பிடப்படவில்லை.

உம்மை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்:

இதுகாறும் நாம் ஆய்ந்த வகையில் தன் உடலில் உள்ள தன் மயிர்க்கற்றையை பிறர் நீக்கிவிட்டால் கடுங்குளிரினைத் தாங்கமாட்டாமல் கவரி மா எனப்படும் யாக் எனும் பனிமலைச் சடைமுடி விலங்குக்கு, உயிர் வாழ்வதற்கேற்ற வாய்ப்பு, நிலைமை இராது.

இது போலத்தான், மானம் பிறரால் தொலைக்கப்பட நேரிடில் தன்மானமுடையோர் உயிர்வாழும் சூழல், நிலை, இல்லாதுபோய் உயிர் நீக்கப்படும் வாய்ப்பு வரும் என்பது இக்குறளின் கருத்து; மெய்ப்பொருள்.

அறிஞர்கள் மேலும் ஆய்வு செய்தல் வேண்டும். செய்வார்களா? இக்குறளில் அமைந்துள்ள உண்மைப் பொருளைத் தெளிவாக _ மயக்கம் இன்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். சொல்வார்களா?

தமிழ் ஓவியா said...


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!

சென்னை, ஏப்.22- தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளன என்று சாலைகளில் செல் வோர் அனைத்துத் தரப்பினரிடமும் சோதனை என்கிற பெயரில் கெடுபிடிகள். ரயில் பயணிகளிடம், வியாபாரிகளி டம் கெடுபிடிகள் ஏராளம். நள்ளிரவு நேரங்களிலிருந்து விடியவிடிய தொடர்ந்து தேர்தல் பணியில் உள்ள அதிகாரி கள் ஓய்வின்றி இக்கெடுபிடிகளின்மூலம் பறி முதல் செய்துள்ள தொகையே பல கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை ஆதரிக்கக் கோரும் ஒரு குறுஞ்செய்தி அலைபேசியில் வருகிறது.

Vote for BJP(modi) send this ur frnds and get Rs.551.49 blnc. Free electn offr. Not a joke see NDTV(24hrs)

[Vote for BJP(modi) send this your friends and get Rs.551.49 balance.Free election offer. Not a joke, see NDTV(24hours)]

பாஜகவுக்கு(மோடிக்கு) வாக்களியுங்கள், இச்செய் தியை உங்கள் நண்பர்கள் 15பேருக்கு அனுப்புங்கள். ரூபாய் 551.49 தொகை கிடைக்கும். இலவச தேர்தல் சலுகையாகும். கேலிக்காக அல்ல. 24 மணி நேர என்டிடிவி யைப் பாருங்கள் என்று அச்செய்தியில் உள்ளது. அச்செய்தியை 15 நண்பர்களுக்கு அனுப்பினால், ரூபாய் 551.49 குறுஞ்செய்தியை அனுப்பியவரின் எண் ணுக்கு பணம் ஏற்றப்படுகிறதாம்.

மேலும், இதேபோல் அதிமுகவை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, ஆம் என்றால் அந்த உறுதியின் பேரில் அவருடைய எண்ணுக்கு ரூபாய் இருநூறு உடனடி யாக போய்ச்சேருகிறதாம். இச்செயல்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு தேர்த லில் வாக்குக்குப் பணம் அளிப்பதாகவே உள்ளது என்று பொதுமக்கள்தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற ஹைடெக் மோசடிகளைக் கண் காணித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

மோடியின் குஜராத்தில் பணம் பறிமுதல்

அகமதாபாத், ஏப். 22- குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள அகமதாபாத் நகர் இசான்பூர் பாலத்தில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ. ஒரு கோடி ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் இருந்த மாநகர பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ரூ.50 லட்சத்துக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத் தனர். மீதம் ரூ. 50 லட்சத்துக்கான விளக்கத்தை அவர்கள் அளிக்காததால், அந்தப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு அளிப்பதற்காகக் கொண்டு போகப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79076.html#ixzz2zfUyKZjW

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

விவசாயத்தில் 12 சதவிகிதம் சரிவைக் கண்டது அ.இ.அ.தி.மு.க ஆட்சி; இப்படியிருக்க, இந்தியாவிலேயே வளர்ச்சி தமிழ்நாட்டில் தான் என்று உண்மைக்கு மாறாகப் பேசும் முதலமைச்சர் - ஜெயலலிதாவைப் போல் வேறு எங்கும் கேள்விப்பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/79077.html#ixzz2zfV7Tkqp

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் சட்டமும்!


இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம்போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர, எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - (குடிஅரசு, 24.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/79078.html#ixzz2zfVdweIO

தமிழ் ஓவியா said...

ஜாதீய மரபணுவைக் கண்டுபிடித்த கட்காரி


பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி பிகார் தலைநகரமான பாட்னாவில் கடந்த 19 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிலர் வாயைத் திறந்தாலே - அதற்குள் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் துகள்களும் இருப்பதுண்டு. இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர் களுள் இவரும் ஒருவரே!

பிகாரின் மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது. அத னால்தான் பிகாரில் ஜாதீயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜ.க.வில் ஜாதீயத் துக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதீயத்துக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என்று கூறியுள்ளார்.

கட்காரியின் இந்தப் பேச்சைக் கண்டித்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சுமூலம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை பிகார் மக்களுக்கு எதிரா னவை என்பது தெளிவாகியுள்ளது. அவரது பேச்சுக்காக பிகார் மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகார் அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ராஜீவ் ரஞ்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து பிகார் மக்களை நிதின்கட்காரி அவமதித்துவிட்டார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி புகார் செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தே நிதின்கட்காரி வழக்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்க்காரர்கள் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிகார் மாநில அரசியலில் ஜாதீயம் கலந்துள்ளது என்பதற்குப் பதிலாக மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது என்று தவறுதலாகக் கூறிவிட்டதாக பல்டி அடித்து விட்டார்.

இது ஏதோ வார்த்தைத் தவறி வரக் கூடியதல்ல - ஜாதீ யம் கலந்துள்ளது என்று சொல்லும்பொழுது மரபணு என்ற சொல் எப்படி வரும்? கொஞ்சம் அறிவைப் பயன் படுத்துபவர்களுக்கு இது எளிதில் விளங்காமல் போகாது.

பிகாரில் ஆட்சி அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்ட வர்களின் கைகளில் இருந்து வருகிறது. இது இவர்களின் கண்களை உறுத்துகிறது என்பதுதான் உண்மை.

அதேநேரத்தில் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங் பரிவார்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலான நேரங்களில், பெரும் பாலும் பார்ப்பனர்களாகவேதான் இருந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்களாகத்தானே வந்திருக்கிறார்கள் - இரண்டொருவர்களைத் தவிர.

பா.ஜ.க. என்றாலே பார்ப்பனர்களின் கட்சி என்ற வெகுமக்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற் காகவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஒரு காலகட்டத்தில் திணிக்கப்பட்டனர்.

கோவிந்தாச்சாரியாரின் சமுதாய விஞ்ஞானம் (Social Engineering) இது.

அப்படி வந்தவர்தான் அகில இந்திய பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன்; ஆனால், அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக்கூட அளிக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதியும் அவ்வாறு அமர்த்தப்பட்டவர்தான்.

எப்படியெல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை, அவர் வெளிப்படையாகக் கூறிப் புலம்பி னாரே! பி.ஜே.பி.யின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், தன் கையைப் பிடித்துக்கூட முறுக்கினார் என்று கூறினார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே! பிறகு தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு பிற்படுத்தப்பட் டவர் தேவை என்றபோது கல்யாண்சிங்கை முன் னிறுத்தினார்கள். அவரைப் பலிகிடாவாக்கி பாபர் மசூதியையும் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸின் வேலை முடிந்தவுடன் கல்யாண் சிங் தூக்கி எறியப்படவில்லையா? அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி - அவருடைய உழைப்பால் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது; சிறிது காலம் அதன் முதலமைச்சராகவே இருந்தார். வழக்கு ஒன்றின் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது; வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த நிலையில், மீண்டும் அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அமர்த்தப்பட்டாரா? அதுதான் இல்லை.

பி.ஜே.பி.யை விட்டு வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்படவில்லையா? அந்த நேரத்தில் ஆர்.எஸ். எஸின் தலைவராக இருந்த சுதர்சன், உமாபாரதி வளர்ந்த விதம், குடும்பம் - சமூகநிலைபற்றித் தரக்குறைவாகப் பேச வில்லையா? ஒரு கட்டத்தில் உமாபாரதியும், கல்யாண் சிங்கும், பங்காரு லட்சுமணனும் பி.ஜே.பி. என்றாலே உயர்ஜாதி பார்ப்பனர் கட்சிதான் என்று விமர்சிக்கவில்லையா?

ஜகந்நாத் மிஸ்ரா போன்ற பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் இருந்த பிகார் மாநிலம் - பிற்காலத்தில் பிற்படுத் தப்பட்டோர் கைகளுக்கு வந்த நிலையில், அதனைப் பொறுக்கமாட்டாது வெளியில் வந்து விழுந்த வார்த்தை கள்தான் - நிதின்கட்காரியின் அந்த ஜாதி மரபணு விஷயம்.

பார்ப்பன விரியன் குட்டிகளாயிற்றே - சும்மாவா ஆடும் பூணூல்?

Read more: http://viduthalai.in/page-2/79079.html#ixzz2zfVmLVZm

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


சேது சமுத்திரத் திட்டம் முதல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முடக்கி விட்டு, நான் எந்தத் திட் டத்தையும் முடக்கவில்லை யென்று மிகத் தைரியமாக மக்களிடம் பொய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவைத் தவிர வேறு எங்கும் கேள்விப் பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/page-2/79087.html#ixzz2zfWTq8UG

தமிழ் ஓவியா said...


மனுஷ்யபுத்திரனின் பதில்


மனுஷ்ய புத்திரன் தேர்தல் களத்தில் இளைஞர்களின் பங்கு பற்றி சன் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கு கொண்டு பேசிக்கொண்டு இருந்தபோது கிரிஷ்ணகிரியில் மோடி பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். மோடி குஜராத்தில் மின்சாரமும், தண்ணீரும் வெள்ளமாய் கிடைப்பது பற்றியும், வேலைவாய்ப்பில் குஜராத் கொடி கட்டிப் பறப்பது பற்றியும் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்

நேரடி ஒளிபரப்பு முடிந்ததும் செய்தி யாளர் மனுஷ்யபுத்திரனிடம் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக் கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மனுஷ்ய புத்திரன் சற்றுமுன் பேசிய மோடி எவ் வளவு பொய்கள் கூறி இளைஞர்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.

குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 1500 இடங்களுக்கு 13 இலட்சம் பேர் விண்ணபிக்கிறார்கள். இதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை மோடி ஒழித்ததன் இலட்சியமா? நான்கு இலட்சம் விவசாயிகள் குஜராத்தில் மின் இணைப் புக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங் களாகக் காத்திருக்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மக்கள் குடி தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக் கிறார்கள். விவசாய நிலங்களை அதானி களுக்கும், டாட்டாவுக்கும் மோடி அள்ளி வழங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்று சொல்லி அடுக்கடுக்காக அவர் சொன்ன அத்தனை யையும் கூறி குஜராத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தார். மேலும் மோடி, இந்தத் தேர்தல் வாக் காளர்களுக்கான தேர்தல் அல்ல; கட்சி களுக்கான தேர்தல் அல்ல; இந்தியாவின் அத்தனைக் கோடி மக்களும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றார். அதற்கு பதிலளித்த மனுஷ்யபுத்திரன், மோடி வேட்பாளர்களை, கட்சியை , சித்தாந்தங்களைத் தாண்டி தனது தனிநபர் எதேச்சதிகாரத்தை நிறுவ விழைகிறார். அதுதான் அவர் பேசிவருவதன் அர்த்தம் என்றார்

இன்று மோடி பேசி முடித்த அடுத்த நிமிடம் அதே நேரலையில் விரிவாக மறுத்ததது சிறப்பானதாக இருந்தது.

-சரவணா இராஜேந்திரன்,
திருநெல்வேலி

Read more: http://viduthalai.in/page-2/79086.html#ixzz2zfWcgXmY

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

மக்களைச் சந்திக்காமல் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் பறந்துவந்து எழுதி வைத்ததைப் படித்துவிட்டுச் செல்லும் முதலமைச்சர் ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

கேள்விப்படுவதென்ன - இப்பொழுது நேரிலேயே பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம் - அவர்தான் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா.

கேள்விப்பட்டதுண்டா?

யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தில் இலங்கை அரசின் போரை நியாயப்படுத்திப் பேசிவிட்டு, இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்காகக் கண்ணீர்விடும் முதலமைச் சரைக் கண்டதுண்டா?

ஏனில்லை? இங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் - அவர்தான் புரட்சியைப் பெயருக்கு முன்னாள் ஒட்டி வைத்துக்
கொண்டுள்ள செல்வி ஜெயலலிதா.

Read more: http://viduthalai.in/page-6/79110.html#ixzz2zfYCsMb9

தமிழ் ஓவியா said...


சென்னையில்ஒருபுத்தகச்சோலை! அறிவுத்தேனருந்தவாரீர்!வாரீர்!!

இன்று உலகப் புத்தக நாள்! ஆங்கில மகாக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை - உலகம் பொருத்தமாகப் புத்தக நாள் என்று கொண்டாடுகிறது. அந்த வகையில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓர் அறிவுச்சோலை உங்களை அறிவுக்கரம் கொண்டு அன்பு தவழ, பொன்முறுவல் பூத்து அழைக்கிறது.

நீங்கள் அங்கு ஏன் வர வேண்டும்? அங்குதான் 200 புத்தக அரங்குகள் சங்கமித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பதிப்பகங்கள் மட்டுமல்ல; டில்லி, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரங்குகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலும் கோவை, மதுரை, ஈரோடு முதலிய மாவட்டங்களிலிருந்தும் பதிப்பகத்தார்கள் தங்கள் வெளியீடுகளை அணி வகுக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உலகப் புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டது.

பதிப்பகத்தார்கள் போட்டி போட்டுக் கொண்டு அரங்குகளை அமைக்க முன் வந்ததால், இடவசதி கருதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள், வந்தவர்கள் வியப்படைகிறார்கள் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எல்லாம் உண்டு.

நூறு தமிழ்ப் பதிப்பகத்தார்கள்
35 ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்
10 மல்டி மீடியா நிறுவனங்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல் துறை மணம் கமழும் நூல்கள் எனும் அறிவு சார் கருவூலங்கள்!

மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், ஆய்வரங்கம், பொம்ம லாட்டம், பறை இசை எனும் செவி விருந்துகள்!

நாவிற்கு விருந்தில்லையா என்று கேட்டு விடாதீர்கள் - வந்து பாருங்கள் நேரில் அனுபவித்தால்தான் அதன் அருமை எத்தகையது என்பது விளங்கும்; ஏட்டுச் சர்க்கரை என்றால் இனிக்காதே!

10 முதல் 50 விழுக்காடு வரை (பழைய நூல்கள்) தள்ளுபடி செய்து தரும் நூல் களும் உண்டு.

விருந்தாகவும் - மருந்தாகவும் பயன் படக் கூடிய நூல்கள் அணி அணியாகக் கண்களையும், கருத்துக்களையும் பறிக் கின்றன.

தேர்தல் சந்தடியிலும்கூட குடும்பம் குடும்பமாக மக்கள் மொய்த்த வண்ணமே உள்ளனர். சென்னையின் நடுநாயகமான இடத்தில் இது அமைந்துள்ளதைப் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

கற்றது கை மண்ணளவு

கல்லாதது உலகளவு

என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தகத்தைப் படிப்பது குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவ தற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்த கம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படு கிறது. அதனால்தான் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவுப் பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி நம் அரசியல் முதலிய துறைகளில் அவற் றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்கு பதிப்பிக்கப்படுகிறது!

1962இல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது இது பெரியார் இயக்க நூல்களும் இடம் பெறுகின்றன என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.

மேலும் யார்க்கு எது விருப்பமோ அந்த வகையில் அறிவு ருசிக்கான நூல்கள் தடபுடலாக இருக்கின்றன. குழந் தைகள் முதல் தொண்ணூறைத் தாண்டும் முதியோர் வரை பலன் பெறும் பழ முதிர்ச்சோலை இது!

18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புத்தகச் சங்கமம் 27ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனம் (ழிஙிஜி) இணைந்து நடத்துகின் றன காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
கடைசியாக ஒரு கொசுறு.

நண்பர் ஒருவர் ஆப்ரகாம் லிங்கனி டம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை; பின் ஏன் நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் நான் பணம் சேர்ப்ப தற்காகப் படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண் டும் என்பதைத் தெரிந்து கொள்வதற் காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பல ஆண்டுகள் கழித்து அமெ ரிக்கக் குடியரசுத் தலைவராக ஆன பிற கும்கூட இதே பணிவோடுதான் இருந்தார்.

இதற்குமேல் எந்த எடுத்துக்காட்டு தேவை?

நல்லதோர் வாய்ப்பெனும் விருந்து நழுவ விடலாமா! இடையில் இன்னும் நான்கு நாள்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/79122.html#ixzz2ziZULGR2

தமிழ் ஓவியா said...


நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!


ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலை!

நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக மாக வெற்றி பெற வைக்க, தமிழக மக்கள் - குறிப்பாக வாக்காளர்கள் தயாராகியுள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் ஆங்காங்கு பண மழை பொழியத் துவங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன! தஞ்சை, நீலகிரி, வடசென்னை - முதலிய தொகுதிகள் உட்பட விலையில்லாத மதிப்புள்ள வாக்குகளை 500, 1000 ரூபாய்களுக்கு விலை வைத்து வாங்கி விடுவதன் மூலம் தேர்தலில் தங்களைத் தழுவும் தோல்வியைத் தடுக்கலாம் என்று அந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்.

எவ்வளவு எதிர்ப்புக் காட்டப்பட்டாலும், காவல்துறை, தேர்தல் ஆணையம் கண்டும் காணாதவர்களைப் போல் ஆளும் அ.தி.மு.க. அணிக்கே சாதகமாக உள்ளார்கள்.

புகார் தருகின்ற தி.மு.க. மற்ற கட்சி நண்பர்கள் மீதே பொய் வழக்கும் போடத் தவறுவதில்லை!

நாளை நடைபெறும் தேர்தலுக்காக 144 தடை உத்தரவா? பணம் பட்டுவாடாவுக்கு வசதியான ஏற்பாடா? என்பதே பலரின் கேள்விக் குறியாக உள்ளது!

ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

வாக்காளர்களே, கடமையாற்றிட வேண்டிய காவல்துறையினரும், நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் கமிஷனும் இப்படி கண்டும் காணாத காட்சிகளை அரங்கேற்றலாமா?

நாளை நல்ல தீர்ப்பு வழங்குங்கள் வாக்காளர்களே!

ஜனநாயகம் காக்கப்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/79128.html#ixzz2zlOODGuX

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவது அபாயகரமானது! அண்டை நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

இலண்டன், ஏப்.23- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 கல்வியாளர்கள், பேராசிரியர்கள் நரேந்திர மோடி இந்தியாவின் பிரத மர் ஆனால் அது இந்தி யாவுக்கு ஆபத்து மட்டு மல்ல - மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்ட (இங்கி லாந்தில்) வாழ்ந்துவரும் கல்வியாளர்கள், அறிஞர் கள் இந்தியாவில் நடை பெறும் தேர்தல்குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் மோடி அதிகாரத் துக்கு வருவது மிகுந்த அச்சத்துக்கிடமானது என்று கூறுகின்றனர்.

75 பேராசிரியர்களும் கல்வியாளர்களும் மோடி அதிகாரத்துக்கு வரும் எண் ணமே எங்களை அச்சத்தில் மூழ்கடிக்கிறது என்கின் றனர். தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் டுடே என்கிற இதழில் பேராசிரி யர் சேட்டன் பட், கவுதம் அப்பா ஆகியோர் தலை மையில் 75 பேராசிரியர்கள் மற்றும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரி பவர்கள் ஆகியோர் கூட் டாக வெளியிட்டுள்ள திறந்த மடலில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்து தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே லண்டனிலி ருந்து வெளிவரும் தி இண்டிபென்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில் அடுத்த அரசைத் தேர்வு செய்யுமிடத்தில் மக்கள் உள்ளனர்.

மோடியின் தலைமையிலான பாஜக அரசு அமைந்துவிட்டால்

இந்தியாவில் ஜனநாய கம், பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண் பாடுகள் என்று பிரிந்திருந் தாலும் அவற்றின்மீதான சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகி யவை மிகுந்த சவாலுக்கு உள்ளாகும் என்பதை எண்ணி மிகவும் கவலை கொள்கிறோம் என்று கூறி யுள்ளனர்.

மோடியின் எண்ணங் கள் அதிகாரம் பெறுவது நம்மை அச்சத்தில் மூழ் கடிக்கிறது என்கிற தலைப் பிலான அக்கடிதத்தில்,

நரேந்திர மோடி ஹிந்துத் தேசியவாத அமைப்பின் வலையில் உள்ளவர். ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை யருக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டுள்ளன. அண் மையில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக் குதல்களையும் நடத்தி உள் ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத் தில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நடிகர் அனீஷ் கபூர் மற்றும் பலரும் தி கார்டி யன் இதழில் எழுதியதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாக இன்டிபென் டண்ட் இதழில், குஜராத் தில் ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற வன்முறை கள், பல்வேறு சம்பவங் களுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாளி என்று பல்வேறு தரப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் வெளியாயின. மேலும், அவற்றுக்கு சாட்சி யாக தற்போதைய மூத்த பாஜக தலைவர்களின் பேச்சுக்களும் அமைந்துள் ளன. இந்த முறையிலான அரசு நிச்சயமாக ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தி விடும். பொதுத்துறை நிறுவனங்கள் அதோ கதி!

தமிழ் ஓவியா said...


அதோடு, மோடி-பாஜக வின் மாதிரி பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய வணிகர்களுடன் தொடர் புள்ளதே. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்து, ஏழைமக்களுக்கு எதிராக வும், அவர்களை வாட்டி வதைப்பதற்கு ஒப்பாக வும், செல்வத்தையும், அதி காரத்தையும் பெரும் பணக்காரர்களிடம் ஒப் படைப்பதே ஆகும். மோடியின் வெற்றி என்பது நீதியின்மீது, அதன் கொள்கைகள்மீது விடுக் கப்படும் சவாலாகும். குறிப்பாக, மகளிர்மீதான தடைகள், கண்காணிப்பு கள் ஏற்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவில் மட்டு மின்றி அண்டை நாடுகளி லும் அப்பதற்றம் ஏற் பட்டுவிடும் அபாயம் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

பிரிட்டீஷ் குறிப்பிடத் தக்க பல்கலைக்கழக மாகிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவரான பேரா சிரியர் நந்தினி கூப்து மற்றும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் பணிபு ரிபவராகிய ஜோயா சாட் டர்ஜி ஆகியோர் குறிப் பிட்ட தகவல்களை கல்வி யாளர்கள் கடிதத்தில் மீண் டும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் இதழ்களி லும், பிற ஊடகங்களிலும் அதிக இடத்தை இக்கடி தம் பிடித்துள்ளது. இக் கடி தத்தில் குறிப்பிடப் பிட்டுள்ள படி,

13ஆண்டுகள் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த மோடி அரசின் அயோக் கியத்தனத்துக்கு ஆதார மாக கோத்ரா கலவரம் உள்ளது. 2002இல் குஜ ராத்தில் எல்லைகடந்த வன் முறையாக ஹிந்துக்களால் கலவரம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கிலானவர்கள் குறிப் பாக முசுலீம்கள் இறந் தனர். இந்த வன்முறை வெறியாட்டம் மோடியின் ஆட்சியில்தான் நடைபெற் றது. இந்த வன்முறையில் மோடியின் பங்கு குறித்து, வன்முறை சம்பவங் களுக்கு அனுமதியும், அவற்றை வேகப்படுத்தி யதுமான மோடியின் பங்கு கள் குறித்து மூத்த அதிகாரி கள், காவல்துறை அதிகாரி கள் ஒப்புதல் வாக் குமூலங் களில் தெரிவித்துள் ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79127.html#ixzz2zlOvCOSO

தமிழ் ஓவியா said...


கரணம் தப்பினால் மரணம்!


மிகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதைத் தவறவிட்டால் அடுத்த அய்ந்தாண்டுகள் மட்டுமல்ல - அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் எதிர் காலத்தை இருளாக ஆக்கக் கூடியவை!

பி.ஜே.பி. என்பது பத்தோடு பதினொன்று என்று கருதப்படக் கூடிய ஓர் அரசியல் கட்சியல்ல! சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வருணாசிரம வெறி கொண்ட ஹிந்துத்துவா அமைப்பு.

இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எவ்வளவுத் துல்லியமானது என்பது எளிதில் விளங்கும்.
நியாயமாக இந்தத் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் கூட பி.ஜே.பி. தேர்தலில் நிற்க சட்டப்படி தகுதி உடையதல்ல என்று அறிவித்திட வாய்ப்புண்டு. தேர்தல் ஆணையம் அந்தக் கடமையை செய்யவில்லை.

எந்த அளவுக்கு இவர்கள் சென்றுள்ளார்கள்? பீகார் மாநில பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், மக்களவைத் தேர்தல் வேட்பாளரும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் என்பவர் என்ன கூறினார்? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என்று சொல்லுகிறார்.

மிகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி, அது அடங்குவதற்குள், இந்தத் தேர்தலில் முன்னணிப் படையாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியா, மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் என்ன பேசி இருக்கிறார்?

ஹிந்துக்கள் பெரும்பான்மையாகக் குடியிருக் கும் இடங்களில் சிறுபான்மை மக்களான முஸ்லீம் கள் வீடுகள் வாங்கினால் அவர்களை விரட்டி யடியுங்கள்; கல்லால் தாக்குங்கள்; டயரைக் கொளுத்தி அவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள்மீது எறியுங்கள் என்று பச்சையாக பாசீச வெறித்தனத்தோடு பேசி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாகவே இவர்கள் இப்படி வெறியாட்டம் போடுகின்றனர் என்றால், தப்பித் தவறி இந்தக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வருமேயானால் நாடே கலவரப் பூமியாகி விடும். மனித ரத்த வெள்ளம் நாளும் ஓடும் அபாய நிலைதான் ஏற்படும். இவற்றையெல்லாம் நரேந்திரமோடி கண்டிப்பதாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மோடியைப்பற்றித் தெரிந்தவர்கள் மோடியின் இந்த மறுப்பை ஏற்க மாட்டார்கள்.

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டதை - நாய்க் குட்டி ஒன்று காரில் அடிபடுவதால் ஏற்படும் அனுதாபத்தோடு ஒப்பிட்டுப் பேசியவர் தானே மோடி!

2007இல் தெகல்கா எனும் புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் நேரில்கண்டு அவற்றைப் பதிவும் செய்தது. அப்படி பதிவு செய்யப்பட்டவர்களுள் ஒருவர் குஜராத் மாநில அரசின் சிறப்பு வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியா; அவர் மிகவும் வெளிப்படை யாகவே கூறியதை தெகல்கா வெளிப்படுத்தியதே!

மோடி முதல் அமைச்சராக இருந்திருக்கா விட்டால், அவர் வெடி குண்டையும் வீசியிருப் பார்! என்று கூறியிருக்கிறார் என்றால் மோடி, பிரவீன் தொகாடியாவுக்கு எந்த வகையிலும் ஹிந்துத்துவா வெறித்தனத்தில் குறைந்தவர் அல்லர் என்பது விளங்குமே! இவற்றின் அடிப்படையில் பா.ஜ.க.வையும் அதனோடு கூட்டணி வைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் மிக மோசமான தோல்விக்கு ஆளாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த அணியை மட்டுமல்ல; நேரடியாக இந்த அணியோடு கூட்டு இல்லையென்றாலும், அடிப்படையில் பி.ஜே.பி.யின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டி ருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. வையும் தோற்கடித்துக் காட்ட வேண்டியது மிகவும் அவசிய மாகும்.

இதற்கு மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்கள் உண்டு; இதுவும் ஹிந்துத்துவா உணர்வைக் கொண்டது என்பது ஒன்று. பிஜேபி ஆளும் மாநிலத்தில்கூட நிறைவேற்றப்படாத மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் இந்த ஜெயலலிதாதான். ராமன் பெயரை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியிருப்பவரும் இவரே!

இரண்டாவது காரணம் ஒன்றும் முக்கியமாக இருக்கிறது மதங்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டு, அதே நேரத்தில் அத்தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தும் துரோகத்தனத்திற்குக் கண்டிப்பாகப் பாடம் கற்பித்தாக வேண்டும்.

மூன்றாவது இந்த அம்மையாரின் மூன்றாண்டு ஆட்சி என்பது எந்தவித வளர்ச்சிக்கும் இடம் இல்லாதது - சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதற்கும் சேர்த்து இந்தத் தேர்தலில் தண்டனை கொடுத்தாக வேண்டும். தமிழக வாக்காளர் களே கரணம் தப்பினால் மரணம் என்பதை மறவாதீர்!

விழிப்புணர்வு கொள்க! ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வென்றிட ஆவன செய்க!

Read more: http://viduthalai.in/page-2/79120.html#ixzz2zlQFYCWi

தமிழ் ஓவியா said...


இன்று (23.4.2014) உலக புத்தக நாள்


சென்னை கடற்கரையில் வாசிக்க வாங்க நடைப்பயணம் சென்னை, ஏப். 23- உலகப்புத்தக நாளான இன்று (23.4.2014) காலை சென்னை மெரினா கடற்கரையில், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக வாசிக்க வாங்க! என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏற்றி குழந்தைகள், மாணவர்கள், வாச கர்கள், பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 23, யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது.

உலகப்புத்தக நாளைக் கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 27-ஆம் தேதி வரை சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாசிக்க வாங்க எனும் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் இன்று (23.4.2014) உலக புத்தக நாளாக கொண்டாடும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு நடைபயணம் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது. குழந்தைகள், மாணவர்கள், வாசகர் கள் பெருமளவில் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் மு.தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3230 மாவட்ட ஆளுநர் ஸிலீ ஏ.பி.கண்ணா முன்னிலை வகித்தார். இந்நடை பயணத்தில் பேராசிரியர் இராஜசேகர் புத்தக வாசிப்பு குறித்த அரிய தகவல்களை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தார்.

இந்நடைப் பயணத்தின் முடிவில் இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், காலைச் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பு குறித்த அறிஞர்களின் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உலகப்புத்தக நாள் பெருவிழா வையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், ரோட்டரி இன்டர் நேஷனலும் சென்னை புத்தகச் சங்கமத்துடன் இணைந்து நடத்தின.

வாசிக்க வாங்க! என்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரு மான வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித்தலைவர் த.வீரசேகரன்.

சென்னை புத்தக சங்கமத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விழிகள் பதிப்பகம் தி.வேணு கோபால், எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண் ணன், மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் கே.எஸ்.புகழேந்தி, திரா விடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த இரா.தமிழ்ச் செல்வன், கோவி.கோபால், ராமு.

சென்னை புத்தக சங்கமத்தின் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், சி.வெற்றிச் செல்வி, பெரியார் மாணாக்கன், புரசை அன்புச் செல்வன், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள், ரோட்டிராக்ட் மாணவர்கள், ஆனந்தன், சுரேஷ், அம்பேத்கர்,வை.கலையரசன், கலைமணி, விமல்ராஜ், தமிழ்க்குடிமகன், லோகேஷ்குமார், சக்திவேல், அருண், சங்கர் மற்றும் திரளான பொது மக்களும் பங்கேற்று சிறப்பித் தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் ஏப்.27ஆம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகச் சங்கம நுழைவுச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/79147.html#ixzz2zlQqcvM4

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞரின் நன்றியும் - பாராட்டும்!


சென்னை, ஏப்.23- தேர்தல் பரப்புரைகளை சிறப் பாக செய்த பெருமக்களுக்கு நன்றியையும் பாராட் டுதலையும் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இதுகுறித்து இன்று (23.4.2014) முரசொலியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

நாளை தமிழகத்திலே நாடாளுமன்றப் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள். நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாகப் பிரச்சாரம் செய்வது முடிந்துவிட்டது.

நமது கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்குக் காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதைக் கடந்தும் ஈடு பட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந் தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டி யிருந்தன.

கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவ திலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனி லேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருடைய பிரச்சாரம்பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.

கழக ஆட்சியின்போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள்பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சி யின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் விளக்கிச் சொன் னதை நீயே நேரிலும் கண்டிருக்கிறாய்; கேட்டி ருக்கிறாய்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்வி களுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாக வும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.

அடுத்து கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கலையுலகத்தினர், கழகச் சொற்பொழிவாளர்கள், பல் வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களான சகோதரி சற்குண பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் கவிஞர் கனிமொழி, ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திரகுமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி.ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ், மனுஷ்யபுத்திரன் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர் கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

முக்கியமாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நாள் கூட பாக்கியில்லாமல், தேர்தல் பயணத் தில் ஈடுபட்டு, கழகக் கூட்டணிக்கு வாக் களிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் பூர்வமாக விளக்கிப் பேசியிருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்.

அவர்களுக்கெல்லாம் கழகத்தின் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலி , 23.4.2014

Read more: http://viduthalai.in/page-5/79113.html#ixzz2zlRhd578

தமிழ் ஓவியா said...


மதச் சண்டைக்குத் தூபம் போடுகிறார்கள்! பி.ஜே.பி.,பற்றி கலைஞர் பேட்டி

சென்னை, ஏப். 23- பி.ஜே.பி.யில் சில தலைவர்கள் மதச் சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு தி.மு.கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பு அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கலைஞர் அவர்கள் நேற்று (22.4.2014) காலை சென்னை யில் வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்வதற்காக தமது இல்லத்திலிருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு:

செய்தியாளர்: வாக்காளர்களுக்கு ஏதாவது வேண்டு கோள் விடுக்கிறீர்களா?

கலைஞர்: நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து வாக்களிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

கலைஞர்: நடுநிலையா? நடுநிலை போல் நடிக் கிறார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை!

செய்தியாளர்: மோடிசிறந்த நிர்வாகம் படைத்தவர் இல்லை! தான்தான் சிறந்த நிர்வாகம் படைத்தவர் என்று ஜெயலலிதா நேற்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: நிலைக் கண்ணாடி முன்னால் நின்று சொல்லியிருப்பார்.

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் எந்தத் தேர் தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்து வதைப் போல 144 தடைவிதித்திருக்கிறார்கள் சி.பி.எம். போன்ற கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?

கலைஞர்: பயமுறுத்துவதைப் போலத் தெரிய வில்லை. எந்த எண்ணத்தோடு அதைப் பிறப்பித்திருக் கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

மதக்கலவரத்தைத் தூண்டுதல்

செய்தியாளர்: இந்தியாவிலுள்ள பா.ஜ.க. தலை வர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறு பான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டி ருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். பா.ஜ.க.வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?

கலைஞர்: அவ்வாறு ஒரு சிலர் பேசுகின்ற கருத்து களால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண் டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பதுதான் என்னுடையகருத்து.

தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை!

செய்தியாளர்: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்றுநினைக்கிறீர் களா?

கலைஞர்: அப்படிக் கருதாமல் இருக்க முடியாது.

செய்தியாளர்: தமிழகத்தில் மோடி அலை இருப்ப தாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?
கலைஞர்: தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79114.html#ixzz2zlRtLVO9

தமிழ் ஓவியா said...


உங்களுக்குத் தெரியுமா?


விவசாயிகள் 7000-த்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டது மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடை பாவாடை விரித்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாளர்தான் நரேந்திரமோடி!

நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாகக் கருத்துச் சொன்னவர்தான் நரேந்திர மோடி!

Read more: http://viduthalai.in/page-7/79155.html#ixzz2zlSte3wh

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


மோடியை எதிர்த்தவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்ற நஞ்சைக் கக்கிய பிஜேபி பிரமுகர் கிரிராஜ் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு - 39, புதுச்சேரி - 1, மே.வங்காளம் - 6, உத்தரப் பிரதேசம் - 12, ராஜஸ்தான் -5, மகாராஷ் டிரம் - 19, மத்தியப் பிரதேசம் - 10, ஜார்க்கண்ட் - 4, காஷ்மீர் - 1, சத்தீஸ்கர் - 7, பீகார் - 7, அசாம் - 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக வாக்குப் பதிவையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்களன்று மட்டும் ஒரு நாள் பெருங்குடி மக்கள் வாங்கிய மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.173 கோடியாம்!

தேர்தல் பணிகளுக்காக தமிழ்நாட்டில் ஈடுபடுத்தப் பட்டுள்ள காவல் துறையினர் 1.43 லட்சம்.

அதிமுகவினர் லாட்ஜில் பணம் பட்டுவாடா செய்ததை எதிர்த்து நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தோழர்களுடன் நள்ளிரவில் மறியல் செய் தார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.50 கோடி! பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2835.

மோடியைப் பார்த்து முசுலீம்கள் அச்சப்படுகின்றனர் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

குஜராத் மாநில அமைச்சர் புருசோத்தம் சோலங்கி (பி.ஜே.பி.) வந்த ஹெலிகாப்டரிலிருந்து ரூ.1.75 லட்சம் பணம் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொருவரும் வாக்களித்தால் இந்த நாடு நன்றியு டையதாகவிருக்கும் என்கிறார் குடியரசு முன் னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page-8/79123.html#ixzz2zlT7ClHy

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு என்று நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணிச்சலாக சட்டமன்றத் திலேயே கூறும் முதல்வரைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஆம்! அவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா!

Read more: http://viduthalai.in/page-8/79154.html#ixzz2zlTEU1iW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வில்தான் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகம் தன்னார்வ அமைப்பு தகவல்


புதுடில்லி, ஏப். 23- பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர் கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம்

இந்நிலையில், ஜன நாயக மறுசீரமைப்புக் கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர்பான புள்ளி விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்தக வல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலி யல் வன்முறை, வழிப் பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

காங்கிரஸின் 287 வேட் பாளர்களில் 13 சதவீதத் தினர் அதாவது 36 வேட் பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள் ளன.

பாஜகவில் 48 வேட்பாளர்கள்

பாஜகவின் 279 வேட் பாளர்களில் 88 பேர் (32%) மீது தீவிர குற்ற வழக்கு கள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதி வாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26%), பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%), ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%), பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/79121.html#ixzz2zlTNDmMn

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியிலா - அ.தி.மு.க. ஆட்சியிலா?


தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி களுக்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும் திமுக வும்தானே. கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) நிஞிறி எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தி யானது 13.12 சதவிகிதமாக இருந்தது, இதே கால கட்டத்தில் மோடியின் குஜராத் மாநில நிஞிறி வெறும் 10 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில்!

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் நிஞிறி 4.14 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயத் துறைகளின் வீழ்ச்சியால், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்திலிருந்த தமிழ்நாடு, ஜெயாவின் ஆட்சி யில் கடைசி இடத்துக்கு வந்துவிட்டது. ஜெயா அறிவித்த எல்லா திட்டங்களும், முதலீடுகளும் வெறும் ஏட்டள வில்தானே உள்ளது.

இப்பொழுது சொல்லுங்க, தமிழகம் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் திமுக ஆட்சிதானே!

Read more: http://viduthalai.in/page-8/79119.html#ixzz2zlTV5q6l