Search This Blog

20.10.14

தீபாவளி பண்டிகை பற்றிய தந்தைபெரியார் சிந்தனை

படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்களிடம் அறிவாராய்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? தந்தை பெரியார்


இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின் றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின் றீர்களா?  என்பதுதான். நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்பதின் தத்துவமாகும்.


 நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல் லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த் தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக் குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடு கின்றீர்களே அல் லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களு டையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின் றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.


பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயி ருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத் தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்?


இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப் பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலை வதைப் பற்றிய கவலை வேண் டாமா? என்று கேட்கின்றோம்.


புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள் ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின் றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத் திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன் படியே செய்து வருகின்றீர்கள்.


இப்படிப்பட்ட மனி தர்கள் புராணப் புரட்டை உணர்ந்த வர்களா? புராண ஆபாசத்தை வெறுத்த வர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.  பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!


இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்.
எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய் தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோ சனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்ற வர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர் களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக் கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?


அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தே சித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங் குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப் பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத் துவது  மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கும் கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செல வுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொரு புறமிருந் தாலும், மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்து வார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம்.


ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத் திலும் உண்மைக்கோ, பகுத் தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினா யிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண் டாடுதலும் செய்வதென்றால் அதை என்ன வென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகிய வைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம் மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.


பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென் றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லா விடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமேயொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும்? என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரி யான எந்த விஷயங்களிலும் கிரா மாந்தரங்களில் இருப்பவர்களை விட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும். பட்டணங்களில் இருப் பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம்.  உதாரண மாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண் டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான் மையோர் எதற்காக. ஏன் கொண்டாடு கின்றோம் என்பதே தெரியாதவர்களா கவேயிருக்கின்றார்கள்.


சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென் னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவ தும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமா யண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட் சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.


பார்ப் பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத் தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர் களுக்கும் சம்பந்த மில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென் பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தியோகஸ் தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச்சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.


எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மை யான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்ப வர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப் படுகின்றோம்.  


         -----------------------------------தந்தைபெரியார்- "குடிஅரசு" - கட்டுரை - 16-10-1938

19 comments:

தமிழ் ஓவியா said...

முக்கியமான வேலை வாய்ப்புத் தகவல்


சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி சார்பில் நடத்தப்படும் உதவி பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சி யாளர் உதவித்தொகை மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்க பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பு:-

தேர்வு தேதி: 28.-12.-2014

தேர்வு மய்யம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்
எந்தெந்த பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்?

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்கள் , கலைப்பிரிவு பாடங்கள் , கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 79 பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு முடித்த மற்றும் படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்தேர்வை எழுத விரும்புவோர் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.450.
ஒபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 225.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் கள் ரூ.110 தேர்வு கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை (சலான்) பெற்று கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாதி மற்றும் கல்விச் சான்றிதழ் வங்கி ரசீது (சலான்) நகல், நிழற்படம் மற்றும் உரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

எந்த முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்?

ஒருங்கிணைப்பாளர், விரிவுரையாளருக்கான தகுதித் தேர்வு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-.11.-2014 மாலை 5 மணி.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய இறுதி நாள்:-

மேலும் தகவல்களுக்கு : www.cbscnet.nic.in

Read more: http://viduthalai.in/e-paper/89629.html#ixzz3GhBh6kmK

தமிழ் ஓவியா said...

பலவித வெள்ளத்தில் மக்கள் தவிப்பு!


திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு முறை எழுதி இருந்தார்கள். ஒரு 24 மணி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மழை பெய்தால் தலைநகரம் மக்கள் நடமாட, புழங்கிடத் தகுதியற்றதாக, சகஜ வாழ்க்கைக்கு லாயக்கற்றதாக மாறி விடுகிறது என்று எழுதினார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகும் தலைநகரமான சென்னை அதே நிலையில் தானிருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது.

எங்கு பார்த்தாலும் மழை நீர்த் தேக்கம், போக்குவரத்துப் பாதிப்பு, அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத ஊழியர்களின் பரிதாப நிலை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் கட்டாய நிலை. இத்தியாதி இத்தியாதி வசதிக் குறைவுகள் சென்னை மாநகரைப் புரட்டிப் போட்டுள்ளன.

இவ்வளவு மழை பொழியும் என்று எதிர்பார்க்க வில்லை; உடனடியாகப் பரிகாரம் செய்ய முடியாது, படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் வணக்கத்திற்குரிய மேயர்.

மக்கள் நடந்து செல்ல முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களின் நிலை ஆபத்துக்குரியதாக இருக்கிறது.

ஆங்காங்கே குழிகள் திறந்து கிடப்பதால் அதில் வாகனங்கள் விழுந்து உயிருக்கே ஆபத்தாகும் நிலை. மின் கம்பிகள் அறுந்து விடுவதால், ஏற்படும் விபரீதம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது மட்டும் இதுபற்றியெல்லாம் பேசபடுகிறதே தவிர, அந்தப் பருவம் முடிந்தவுடன் அதனைப்பற்றிப் பொது மக்களும் சிந்திப்பதில்லை. அரசு - மாநகராட்சியும் திட்டமிடுவதில்லை.

சென்னைப் பெரு நகரின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்லுகின்றன - மக்கள் பெருக்கம் இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்; வெளியூர்களிலிருந்து தலைநகருக்கு வரும் பொது மக்கள் நாள்ஒன்றுக்குப் பல லட்சம் - வாகனங்கள் பெருக்கம் என்பவையெல் லாம் சேர்ந்து சென்னைப் பெருநகரத்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி விடுகின்றன.

அரசியல் காழ்ப்புணர்வால் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளாகி விட்டன. எதில்தான் அரசியல் பார்ப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

போதும் போதாதற்கு இந்த மூடத்தனப் பண்டி கைகள்! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கியாவது பண்டிகைகளைத் தாம்தூம் என்று கொண்டாடும் மூடத்தனங்கள்; தீபாவளி இதில் முதல் இடத்தை வகிக்கிறது.

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை அறியாமலேயே அதன்மீது ஒரு கவர்ச்சி! வியாபாரிகள் மக்கள் பணத்தைக் கைப்பற்றிட கைத்திறன் காட்டும் விளம்பர யுக்திகள் - இவற்றின் காரணமாக கொட்டு மழையிலும் கூட துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் நெரிசலோ நெரிசல்! மக்களிடம் பகுத்தறிவு வளர்ச்சி பெருகாவிட்டால் எல்லா வகையிலும் இடர்ப்பாடுகளை வருந்தி அழைத்து அவதிப்பட வேண்டியநிலை!

அதுவும் விஞ்ஞானம் பெற்றெடுத்துக் கொடுத்த இந்த ஊடகங்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே - அவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.

அப்பப்பா, ஒவ்வொரு மாதமும் வந்து போகும் பண்டிகைகளைப் பற்றி சற்றும் அறிவுக்குப் பொருந்தாத அளப்புகள் போட்டிப் போட்டுக் கொண்டு காகித ஊடகங்கள் ஆன்மிக இணைப்பு இதழ்களை வெளி யிட்டு, அதிலும் மக்களின் பணத்தைப் பறிக்கின்றனர்.

மூடத்தனமான தல புராணக் குப்பைக் கதைகளை அதில் கொட்டி, கடைசி வரியில் என்பது... நம்பிக்கை... ...என்பது ஆன்மிகம் என்று பொறுப்பைத் தட்டிக் கழித்து வெளியிடும் மோசடித்தனம்!.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மணையில் விழுவது போல பக்தியால் புத்தி கெட்டுப் போன மக்களை மேலும் மேலும் பழி வாங்குகின்றனவே இந்த ஊடகங்கள் நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை என்பதையும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதை நினைத்துப்பார்த்தால் ஆகா எவ்வளவு தொலை நோக்கோடு இந்த அறிவுலக ஆசான் கணித்துள்ளார்! என்று வியக்க வைக்கிறது.

மழையில் ஆரம்பித்து பத்திரிகை வரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே என்று எண்ண வேண்டாம். மூடச் சங்கிலி ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு, இணைக்கிறதே என் செய்ய!

மழை வெள்ளத்திலும் தீபாவளிச் சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. ஜேப்படிக்காரர்களின் கைவரிசை இன்னொரு பக்கம்.

பள்ளிப் பருவத்தில் பாடத் திட்டத்தில் ஆரம்பித்து , பாட்டி சொல்லும் கதைகள் முதல் ஒரு பெரிய மாற்றம், மறுமலர்ச்சி வரவில்லை என்றால் இந்த மக்கள் மேலும் மேலும் துன்பச் சுமையால் முதுகெலும்பு முற்றிலும் முறிந்து பக்கவாதத்தில் வாழ்வைத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Read more: http://viduthalai.in/page-2/89625.html#ixzz3GhC3WpzT

தமிழ் ஓவியா said...

ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் பலே மோடி?


-குடந்தை கருணா

சனிக்கிழமை அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மோடி அரசு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

இனி, காந்தி அடிகள் பிறந்த, மறைந்த நாள் மட்டும் தான், மத்திய அரசின் நிகழ்வாக நடத் தப்படும்.

இதுவரை கொண்டாடப் பட்டு வந்த பிற தலைவர்களின் நிகழ்வுகளை, அரசு நிகழ்ச்சியாக இனி இருக்காது என்ற முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

ஆகா, மோடியைப் பார், அனாவசியமாக, அரசு விழாக்கள் எடுத்து செலவு செய்வதை எப்படி தடுத்து நிறுத்தி, சிக்கனத்தைக் கடைப்பிடித்து, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டு செல்கிறார் என ஊடகங்களும், நம்மூர் குருமூர்த்திகளும், சோக்களும், வரிந்து கட்டிக்கொண்டு பேசு வார்கள்.

ஆனால், அரசு விழாவாக இது நாள் வரை, நிகழ்த்தப்பட்ட தலைவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் என நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண்சிங், போன் றோரின் நிகழ்வுகள் இனி நடைபெறாது என்பதை, மறைமுகமாக மோடி அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த பட்டி யலில் பாபாசாகிப் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரும் அடங்குவர் என்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான், மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசு, இந்த முடிவை எந்த கோணத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த முடிவை இங்கே உள்ள ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை;

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் ஒவ்வொரு திட்டமாக இனி அறிவிக்க இருக் கிறார்கள். அதன் முதல் துவக்கம் தான், அக்டோபர் 16-ஆம் தேதி யன்று, மோடி துவக்கிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்ராமேவ் ஜெயதே கார்யகிரம் திட்டம்; அதாவது, தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச்சாரக இருந்து, ஜனசங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்த தீன்தயாள், சங்கராச்சாரியா,ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெக்டேவர் ஆகியோ ரின் வாழ்நாள் சரித்திரத்தைப் பற்றி எழுதியவர்.

அவரது வாழ்நாளில், தொழி லாளர் போராட்டம் எதிலும் கலந்து கொண்டதாக ஒரு குறிப்பும் நமக்கு இல்லை; இருந்தாலும், அவரது பெயரில் தொழிலாளர் திட்டம் ஒன்று துவக்கப்பட்டிருக் கிறது மோடி அரசால் என்றால், இவர்களின் போக்கு எப்படி செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அய்ந்து ஆண்டுகளில், மோடி அரசில் இன்னும் ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் பல திட்டங்கள் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

ஆக, ஒரு பக்கம், ஏற்கனவே, இருந்த தலைவர்களின் நிகழ்வுகள், மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்படும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இது தான், மோடி அரசுக்கு உள்ள உண்மையான அஜெண்டா. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக் கும் வித்தை இது தான்.

Read more: http://viduthalai.in/page-2/89627.html#ixzz3GhCQJG9G

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி கருத்து


சென்னை, அக்.20- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனக்கு இடைக் கால பிணை வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்குரைஞர் களில் ஒருவரான பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடி னார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அதே சமயம், பாலி எஸ்.நாரிமன், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாடியது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

காரணம் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர் பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாகவும், திமுக சார்பாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும்,

இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக் குரைஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த பிணை கோரும் வழக்கில் ஜெயல லிதாவின் சார்பில் வாதாடுவது வழக்குரைஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முக சுந்தரம் விமர்சித்திருந்தார்.

சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறி முறைகளை மட்டும் மீறவில்லை;

மாறாக வழக்குரைஞர் களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதி முறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன்மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பாலி எஸ்.நாரிமனின் மகன், இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக் குரைஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர் கள் யாரும், அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் பணிபுரியக் கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்தக் கட்டுப் பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும்,

அவர்களின் உறவினர்களுக்கும்கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்சில் வழக்குரை ஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

Read more: http://viduthalai.in/page-2/89649.html#ixzz3GhD6411m

தமிழ் ஓவியா said...

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்


என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும்.

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மய்யத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/89645.html#ixzz3GhDw4MZk

தமிழ் ஓவியா said...

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மதுராந்தகம் ஏழுமலை மறைந்தாரே!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலை வரும் ஆற்றல்மிகு கழக செயல்வீரருமான மதுராந்தகம் மானமிகு மு.ஏழுமலை (85) அவர்கள் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரி தும் வருந்துகிறோம்.

தந்தை பெரியார் அவர்களை அழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர். தையற் கலைஞரான அவர் வாய் எப்பொழுதும் தந்தை பெரியார் கொள்கையைப் பிரச்சாரம் செய்த வண்ணமாகவே இருக்கும். கழகம் போராட்டத்தை அறிவித்தால், முன்னணித் தோழராக விரைந்து வரக்கூடியவர்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், உள்ளூரில் அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கருஞ்சட்டை வீரர்.

விலை மதிப்பில்லாத அவர்தம் இயக்கத் தொண்டுக்கு, அந்தச் சுயமரியாதைச் சுடரொளிக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்! அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக் கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங் கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்துவார்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/89656.html#ixzz3GhECxLd5

தமிழ் ஓவியா said...

தீபாவளி கவிதை

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வறுமைக்கோடு

தீபாவளியன்று குத்து விளக்கில் ஒருமுகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன், இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகங் கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம், நான்கு முகங்கள் ஏற்றி வைத் தால் பசு போன்ற செல் வம், அய்ந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வப் பெருக்கம்; ஒரு முகம் ஏற்றி வைத்தால் கிழக் கைப்பார்த்து விளக்கை வைக்க வேண்டுமாம்.

ஏன் ஆறுமுகம் வைத் தால் இன்னும் கூடுத லாகப் பலன் கிடைக் காதா? குத்து விளக்கு என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் செல்வச் செழிப்போடு வாழ்கிறார் களே - குத்து விளக்கை ஏற்றி வைத்து நம் மக்கள் கண்ட பலன் வறுமைக் கோடுதானே?

Read more: http://viduthalai.in/e-paper/89684.html#ixzz3GppNxAB5

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

Read more: http://viduthalai.in/page-2/89685.html#ixzz3GppheY3s

தமிழ் ஓவியா said...

மோடி வீசிய மோசடி வலை


தீபாவளி தசரா
விஜயதசமி ஆயுதபூஜை போகி சபரிமலை இன்னும் பலப்பல ....

இப்படி ஹிந்து மதப்பண்டிகைகள் குப்பை கொட்டுவதையே கொண்டாட்டமாக்கி மனநோயாக மாற்றி வைத்திருக்கும் போது
அந்த சனாதன தர்மத்தின் இன்றைய அரசியல் தலைவர் தூய்மை இந்தியா பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார்
வெளி நாடுகளில் குப்பை போடாமலிருப்பது பொது ஒழுக்கம்
இந்தியாவில் மதப்பண்டிகைகளால் குப்பைகளைப் போடுவதே பொது ஒழுக்கமாக
இருக்கிறது. காணிக்கை என்ற பெயரில் கடவுளிடமிருந்து தொடங்கி பொது ஒழுக்கமாய் மாறிப் போயிருக்கிற லஞ்சம் மாதிரி.
இந்த மனநோயை மாற்றுவற்கு ஒன்பது பிரமுகர்கள் என்ன செய்துவிட முடியும்?
வேண்டுமானால் நஞ்சை செலுத்தியவர்களே உறிஞ்சி எடுக்கட்டும்
செய்ய வைப்பாரா பிரதமர்?

- உடுமலை வடிவேல்

Read more: http://viduthalai.in/page-2/89690.html#ixzz3GpqNwljj

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது!


பிரபல வழக்குரைஞர் ராஜீவ் தவான் விமர்சனம்


புதுடில்லி, அக். 21- சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கியிருப்பது, பாரபட்சமானது என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகளும், கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும் உடல்நலத்தை காரணம் காட்டி, மேல்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் கோரி ஜாமீன் பெற முடியுமா என்று ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு, ஏன் ஜாமீன் வழங்கியது என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், டெய்லி மெயில் என்ற நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:- இந்தக் குற்றத்திற்காக, ஜெயலலிதா 18 ஆண்டுகளாக ஜாமீன்தான் பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சுமார் ஓராண்டுக்குப் பிறகும், தேசிய லோக் தளக் கட்சியின் தலைவர் சவுதாலா, இரண்டு மாதங் களுக்குப் பிறகும்தான் ஜாமீன் பெற்றனர் என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஓராண்டு சிறையில் இருக்க நேர்ந்தது என்றும், சத்யம் நிறுவனத்தின் அதிபர் மூன்றாண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக ஜாமீனா?

ஆனால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கப்பட் டிருப்பது நீதித்துறையின் ஆச்சரியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலை களை செய்வதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப் படவேண்டும் என்று அவரது வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றிருக்குமானால், இதேபோல கொலைக் குற்றவாளிகள், கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும், மேல்முறையீட்டுக்கான தயாரிப்புகளை செய்வதற்கு ஜாமீன் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தீர்ப்பில் குறை இருப்பதாக பாலி நாரிமன் கூறிய வாதமும் அடிப்படையற்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ள தவான், குற்றவாளிஎன்ற தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது என ஜெயலலிதாவின் வழக்குரைஞர் வாதாடியிருப்ப தையும் சுட்டிக் காட்டியுள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து மட்டுமே ஜாமீன் பெற்றிருப்பதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்பது சாத்திய மற்றது என்றும், அப்படி தேர்தல் நேரத்தில் தீர்ப்பையும் நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா நீதிமன்றத்தை அணு கினால் தற்போதைய வாதம் அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும் தவான் கூறியுள்ளார். இதற்கு முன்னரும்கூட, தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், எந்த வழக்கிலும் இவ்வளவு விரைவாக 21 நாள் களில் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை என்றும் வழக்குரைஞர் தவான் தெரிவித்துள்ளார்.

அரசை ஆட்டுவிப்பார் ஜெயலலிதா!

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஜாமீன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறதோ என பொதுமக்களை எண்ணத் தூண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நின்று ஜெயலலிதா தமிழக அரசை ஆட்டுவிப்பதற்கும்தான் இது உதவும் என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு என பொதுவான நெறி முறைகள் இல்லை என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன், ஏழை, எளியோருக்கு எதிரான பாரபட்சம் என்றும் ராஜீவ் தவான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89700.html#ixzz3GprdTyG2

தமிழ் ஓவியா said...

தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!


மது விற்பனையில் முதலிடம்! றீகடன் வாங்கி செலவழிப்பதில் முதலிடம் றீவிபத்துகளுக்கோ பஞ்சமில்லை

தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!

சென்னை, அக்.22-_ தீபாவளிப் பண்டிகை அறி வுக்குப் பொருத்தமான தல்ல என்பது மட்டுமல்ல; சகல விதத்திலும் மக்களுக் குக் கேடானது என்பதே உண்மையாகும்.

மது

நாள் ஒன்றுக்கு மது விற்பனை சராசரியாக ரூ.65 கோடி. சனி, ஞாயிறு களில் விற்பனையோ ரூ.90 கோடி. தீபாவளியிலே ரூ.150 கோடி.

ஹி.... ஹி... மதமும் பண் டிகையும் ஒழுக்கத்தை வளர்க்கிறதாம். இப்படி சொல்லுகின்ற ஆன்மிக வாதிகளை நினைத்தால் வாயால் சிரிக்க முடிய வில்லையே!

விவசாயிகளுக்கு தலைவலி

அய்ப்பசி அடை மழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப்படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போது தான் சம்பா நடவுக்குச் செலவு செய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செல வினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை பயிரி டுவது இல்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டு வைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண் டிக்குக் கொண்டு சென் றால், தீபாவளி நெருக் கடியை ஆதாயமாக விலை குறைத்துக் கேட் பார்கள்.

ஒரு தீபாவளியின் போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டி யிருந்தது. கடைத் தெரு வில் விவசாயிகளின் குமுறல் துணிமணி, பல காரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட் டேன்னு சொல்லுமா? இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக் கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.
- தி இந்து (தமிழ்) 22.10.2014

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdDB9GC

தமிழ் ஓவியா said...

85% சதவீத மக்கள் விரும்பவில்லை

தீபாவளியை கடன் வாங்கி கொண்டாட 85 சதவீதம் பேர் விரும்ப வில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டா டப்பட்டாலும், அதன் பின்னணியில் குடும்பப் பொருளாதாரம் முதுகெ லும்பாக உள்ளது. வரு மானத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையில் செலவு செய்யும் குடும்பம்தான் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனாலும் தீபாவளி போன்ற பண் டிகை தினங்களில் செல வுகள் எப்போதுமே கை தாண்டி செல்லுவது வழக்கமானதுதான். இதில் நடுத்தர மக்கள் நிலை பரிதாபமானது.
-தினத்தந்தி 22.102014

எண்ணூர்

தீபாவளி மூடப்பண்டி கையால் பட்டாசு வெடித் துக் கொண்டாடியதால் நேற்று (21.10.2014) இரவு சென்னை எண்ணூர் பெரிய காசி கோயில் குப் பத்தில் ஒரு குடிசைமீது ராக்கெட் வெடி பட்ட தால் அந்த குடிசை எரிந்து சாம்பலானது.

மேற்கு தாம்பரம்

மேற்குத் தாம்பரம் காந்தி சாலையில் மாடி ஒன்றில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் ராக்கெட் வெடிபட்ட தால் எரிந்து சாம்பலா னது. மேலும் நேற்று இரவு மட்டும் தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித் ததில் ஏற்பட்ட காயத் தால் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொருக்குபேட்டை

இன்று (22.10.2014) காலை சென்னை கொருக் குப்பேட்டையில் பட் டாசு வெடித்ததில் ஒரு குடிசை எரிந்தது. அதே போன்று வியாசர்பாடியில் ஒரு குடிசையும், புது வண்ணை ஜீவா நகர் மாடியில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் பட்டாசு தீ பட்டு எரிந் தது. மந்தவெளி செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துகள் குறித்த தகவல்கள் வந்ததும் தீய ணைப்பு வீரர்கள் உடன டியாகச் சம்பவ இடத் திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தால் இன்றும் மட்டும் சென்னையில் 8 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdTlhhB

தமிழ் ஓவியா said...

மின்கம்பி அறுந்து விழுந்ததில்
மாமனார், மருமகன் மரணம்

ராமநாதபுரம் மாவட் டம், ராமேஸ்வரம் மார்க் கெட் தெருவை சேர்ந் தவர் சிதம்பரம் (45). மீன வர். இவரது மகள் கவி தாவுக்கும் (18), கோவில் பட்டியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்தது. முருகன் சென்னை அம்பத்தூரில் இரும்புக் கடை வைத் துள்ளார். தலை தீபா வளியை கொண்டாடுவ தற்காக மனைவி கவிதா வுடன் 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந் தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிதம்பரம், மருமகன் முருகனை அழைத்துக் கொண்டு பட்டாசு வாங் குவதற்காக வெளியே சென்றார். பட்டாசுகளை வாங்கி கொண்டு இரு வரும் மார்க்கெட் தெரு வில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலை யோரத்தில் இருந்த மின் கம்பத்திலிருந்து அறுந்து தொங்கிய கம்பி, காற்றில் அசைந்து எதிர்பாராத விதமாக இவர்கள் மீது விழுந்தது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரு வரும் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர் கள் மின்சாரத்தை துண் டித்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய் தனர். ராமேஸ்வரம் கோயில் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைத் தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் மருமக னும், மாமனாரும் உயிரி ழந்த சம்பவம் அப் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-தினத்தந்தி 22.102014

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; எம்.பி.ஏ. மாணவர் பலி!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் கடற்கரையோரத் தலை நகரான மசூலிப்பட்டினத் தில் உள்ள பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலை அலகில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் எம். பி.ஏ. பயிலும் மாணவர் ஒருவர் பலியானார்.

பலியான ஜோகி கிரண்(23) என்ற அந்த மாணவருடன் இந்த விபத்தில் சிக்கி காய மடைந்த ஜோகி லட்சுமி, ஜோகி துளசி ஆகியோர் பயங்கர தீக்காயங்களுடன் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப் பட்ட வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

பட்டாசுக் கடைகளில் பயங்கர தீ விபத்து

தலைநகர் டில்லிக்கு அருகே உள்ள பரிதாபாத் தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடை மார்க் கெட்டில் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த 230க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் எரிந்து சாம்ப லாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதி முழுவதுமே, புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீபாவளியையொட்டி, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள என்ஐ.டி. பகுதியில் அமைந்துள்ள தசரா மைதானத்தில் சுமார் 230_க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவில் திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. அதில் அங்கிருந்த பட் டாசுகள் வெடித்து சிதறின. இதனால் தீ மள மளவென்று மற்ற கடைகளுக்கும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அங்கு அமைக்கப்பட்டி ருந்த 230-_க்கும் மேற்பட்ட கடைகளும் தீயில் கருகின.

தீ விபத்து ஏற்பட்ட தைப் பார்த்ததும், பட் டாசுகள் வாங்க வந்திருந்த மக்களும், வியாபாரிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 3 பேர் தீக் காயங்களுடன் அரு கில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதி புகை மண்டல மாக இருப்பதால், தீயில் யாராவது சிக்கியுள்ளனரா என்ற விவரம் தெரிய வில்லை. தீயை முழுவது மாக அணைத்தப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdfYtzg

தமிழ் ஓவியா said...

ஜீவா



இயக்குநர் சுசீந்திரன் ஜீவா என்ற திரைப்படம் மூலம் கிரிக்கெட்டில் பார்ப் பனர்கள் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறப்பதைத் தோலுரித்துக் காட்டினார். இன்னும் சொல்லப் போனால் தோளில் கையைப் போட்டு முதுகில் பூணூல் தொங்குகிறதா என்று தேடிய காட்சி - திரை யரங்கையே அதிர வைக் கக் கூடிய வகையில் கை தட்டல் இடியை ஏற் படுத்தியது.

இந்தியக் கிரிக்கெட் வாரியம் என்பது ஒரு பணம் காய்ச்சி மரம்! ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் பணப் புழக்கம்.

கிரிக்கெட் வாரியத் தில் ஆரம்பிக்கும் பூணூல் ஆதிக்கம் விளை யாட்டுக்காரர்களைத் தேர்வு செய்வது வரை நீண்டு கொண்டே போகும்.

கிரிக்கெட் விளை யாட்டுக் குழுவில் இடம் பெற்றாலே போதும் - அதற்கப்புறம் கோடி யிலே புரள வேண்டியது தான்; ஆண்டு சம்பளம் ஒரு பக்கம்; ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இலட்சக் கணக்கில் வருவாய்; அதுவும் உள்ளூரில் ஆடி னால் ஒரு ரேட், வெளி நாடுகளில் ஆடினால் இன்னொரு ரேட்!

ஆட்டத்தில் விளை யாடாமலேயே 12 ஆவது 13ஆவது ஆளாக இருந் தாலும் (Substitute) ஆடி யவர்களுக்கு என்ன சம் பளமோ, அதே தொகை இவர்களின் சட்டைப் பையிலும் திணித்து விடு வார்கள்.

இவை அல்லாமல் 4 ஓட்டம் அடித்தால் அதற் கொரு பரிசுத் தொகை; ஆறு ஆட்டம் (Sixer) அடித்தால் அதற்கொரு தொகை ஆட்ட நாயக னாக (Man of the Match)வந்தால் அதற்கொரு காசோலை.

கிரிக்கெட்டுக்காரர் என்றால் விளம்பரங்கள் வந்து குவியும்; அரசின் சலுகைகள், வருமான வரி சலுகை இத்தியாதி - இத்தியாதி.

பார்ப்பனர்களின் இந்தக் கிரிக்கெட் பகற் கொள்ளையை ஜீவா படம் தோலுரித்து விட்ட தாம் துக்ளக் அய்யர்வா ளுக்கு ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது.

ஜீவா படத்தில் கூறப் பட்ட கிரிக்கெட் மீதான குற்றப் பத்திரிகையைப் பற்றி அவரால் ஒன்றும் விமர்சிக்க முடியவில்லை; காரணம் உண்மையைத் தானே போட்டு உடைத்து இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்

அதனால் துக்ளக் என்ன செய்தது? திரைக் கதை சரியல்லை, நிகழ்ச்சி கள் கதையோடு ஒட்ட வில்லை, பாட்டு சரி யில்லை; ரிதம் சரியில்லை என்று மோடி ராகம் வாசிக்கிறது துக்ளக்.

ஆக ஜீவாவின் வெற்றி இதில்தான் இருக் கிறது. உண்மையை உடைத்துச் சொல்லி பார்ப்பன வட்டாரத்தில் குருதிக் கொதிப்பை ஏற் படுத்தியதுதான் இப்படத் தின் வெற்றியின் நறுக் கான நற்சான்றிதழ்!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/89744.html#ixzz3GsdwB7Kg

தமிழ் ஓவியா said...

பிஜேபி மனப்பால் குடிக்க வேண்டாம்!


நடந்து முடிந்த மகாராட்டிரம், அரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிஜேபி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரியானாவில் அறுதிப் பெரும்பான்மையை எட்டியுள்ளது; மகாராட்டி ரத்தில் அந்த நிலை கிட்டவில்லை; என்றாலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிஜேபிக்கு உண்டு.

மகாராட்டிரத்தில் பிஜேபி பெற்ற வாக்குகளின் சதவீதம் 28; இந்தளவு குறைந்த விகிதத்தில் வாக்கு களைப் பெற்ற கட்சி ஆட்சியை அமைக்கிறது. அரியானாவில் 33 சதவீதம் பெற்று ஆட்சியை அமைக்கிறது.

50 சதவீதமோ, அதற்கு மேலோ வாக்குகளைப் பெற்று இருந்தால், அந்த வெற்றி ஜனநாயக ரீதியானது என்று ஒப்புக் கொள்ளலாம்; ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பலகீனமே ஆட்சி அமைக்கும் பலமாக இருக்கிறது என்பது விசித்திரமே!

விகிதாசாரத் தேர்தல் முறையே சரியானது என்று அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக் கூறு கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிஜேபிக்கும் இதே நிலைதான். மட்டத்தில் உசத்தி என்கிற வாய்ப்புதான் பிஜேபிக்கு! மகாராட்டிரம், அரியானா மாநிலங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் 15 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்து விட்டதால் மக்கள் மத்தியில் மாற்றம் என்ற தாகம் ஏற்படுவது இயல்பே!
பிஜேபிக்கு என்ன வாய்ப்பு என்றால் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அது இருப்பதுதான்; நியாயமாக இடதுசாரிகள் அந்த இடத்தைப் பிடித் திருக்க வேண்டும். அந்த நிலை எட்டப்படாததால், மதவாத பிஜேபிக்குக் கொண்டாட்டமாகி விட்டது.

அரியானாவிலும், மகாராட்டிரத்திலும் வெற்றி பெற்றவர்களில் கிரிமினல்கள் அதிகம். அதில் முதல் இடம் பிஜேபிக்கும் சிவசேனாவுக்கும்தான்! ஆள் பலம், பண பலம்; கிரிமினல்தனம் வெற்றிக்குத் துணை போனது வெட்கக் கேடே!

பிஜேபிகூட தேர்தல் நேரத்தில் என்ன தந்திரம் செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; அவர்கள் மதவாத அரசியல் என்னும் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு நாட்டில் விலைவாசி உயர்ந்து விட்டது; ஊழல் பெருகி விட்டது; நாங்கள் வந்தால் விலைவாசியைக் குறைப்போம்; ஊழலை ஒழிப்போம் என்று நீட்டி முழங்குவதை மக்கள் நம்பும்படியான ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிநாட்டுக் கொள்கையிலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடு இருக்கிறது? இன்னும் போகப் போக பிஜேபி ஆட்சியின் இலட்சணம் அம்பலத்திற்கு வரும் பொழுது இந்த உண்மையை வாக்காளர்கள் அப்பட்டமாகவே புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படத்தான் போகிறது.

பல மாநிலங்கள், பல இன மக்கள், பல மொழியினர், பல பண்பாடுகளைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமாகும்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் பிஜேபி என்ற இந்து மதவெறி கொண்ட ஓர் ஆட்சி நீடிக்க முடியாது வேண்டுமானால் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; அப்படி விடுபடும் நிலை அதற்கு ஏற்படப் போவதில்லை; காரணம் அதன் லகான், சிண்டு ஆர்.எஸ்.எஸிடம் இருக்கிறது.

அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது, யுனிஃபார்ம் சிவில்கோட், காஷ்மீருக்குரிய சிறப்புத் தகுதிகள் நீக்கம் இவற்றைச் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் சாட்டையைச் சுழற்றும் போதுதான் மோடியின் முகவிலாசம் தெரியப் போகிறது.

இந்த மூன்றிலும் கை வைக்குமானால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை இந்தியாவை ஆளும் மத்திய அரசே ஏற்படுத்தியதாகி விடும். குஜராத் மாநிலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை யினரை வேட்டையாடிய அனுபவம் மோடிக்கு உண்டு என்று சிலர் நினைக்கலாம்.

இன்று வரைகூட அந்தக் கறையை முற்றிலுமாகக் கழுவிக் கொள்ள படாதபாடுதான் பட்டுக் கொண் டுள்ளார் மோடி! இந்த நிலையில் 125 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திட முன் வருமா? அப்படி செய்தால் அதை விட தற்கொலை ஒன்று இருக்க முடியுமா? அடுத்து வரும் காலம் பிஜேபிக்கு சோதனை நிறைந்ததாக இருக்கப் போகிறது.

செய்தி ஊடகங்கள் கார்பரேட்டுகளின் கைகளிலும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலும் இருக்கிற காரணத்தால் அந்தத் துணையோடு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அது மனப்பால் குடிக்கும் ஒரு பரிதாப நிலையே!

Read more: http://viduthalai.in/page-2/89730.html#ixzz3Gseq0MBl

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவுக்கு ஆதரவு... ராஜபக்சேவுக்கு விருது!

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கண்டன அறிக்கை

சென்னை, அக்.22_ ராஜபக் சேவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கக் கூறும் சு.சாமிக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில், நான் காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுச் சிறையில் இருந்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிணையில் வெளிவந்துள்ளார். பெங் களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த ஜெயலலிதாவை, தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் சிலர் விமான நிலையத்தில் வரவேற்ற மரபு மீறல்கள் நடந்துள்ளன.

மத்திய அமைச்சரின் அதனைவிடப் பெருங் கொடுமை யாக, மத்திய இணை அமைச்சராக உள்ள மேனகா காந்தி, ஜெயலலி தாவை வரவேற்றும், ஆறுதல் கூறியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன்னுடைய ஆதரவு அவருக்கு என்றும் உண்டு என்று உறுதி அளித்திருக்கிறார். மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறுவது பல் வேறு சந்தேகங்களுக்கு இடமளிக் கிறது.

ஜெயலலிதாவின் வழக்கு மேல் முறையீட்டுக்குச் செல்ல இருக்கும் வேளையில், உயர் நீதிமன்றங்களில் நீங்கள் விடுதலையாகி வந்துவிடு வீர்கள் என்று ஓர் அமைச்சர் நம் பிக்கை தெரிவிப்பதும், எந்த உதவியும் செய்யத் தயார் என்று கூறுவதும் வெறும் மரபு மீறல் மட்டுமன்று, சட்டத்திற்கும் புறம்பானது. மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் அறிக்கையைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கடுமையாகக் கண்டிக்கிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் முக்கியமானவர்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும், சுப்பிரமணியசாமி, லட்சக்கணக்கான தமிழ் உறவுகளைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேனகா காந்தியின் அறிக்கை லஞ்சம் ஊழலுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால், சுப்பிரமணியசாமியின் அறிக்கை தமிழர்களுக்கும், தமிழின உணர்வுக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானதாக உள்ளது. இருவர் மீதும் பாரதீய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ் வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றால், பா.ஜ.க.வின் நிலைப்பாடே அதுதான் என்று உறு திப்படும். ஒட்டுமொத்த தமிழினத்தின் கண்டனத்திற்கு உள்ளாகும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/89734.html#ixzz3GsfBzMfv

தமிழ் ஓவியா said...

வாடிகனில் போப் பரிந்துரைகளை கத்தோலிக்க ஆயர்கள் ஏற்க மறுப்பு

வத்திகான், அக்.22- கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகள் ரீதியான நிலைப்பாடுகளில் மாற்றம் கோரி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வத்திக்கான் ஆயர்களின் உயர் பேரவை நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஒருபால் உறவுக் காரர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

போப்பின் பரிந்துரைகளுக்கு ஆயர்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை. ஒருபால் உறவுக்கார்கள், விவாகரத்தின் பின்னர் மறுமணம் புரிபவர்கள் உள்ளிட்ட தரப்பின ரையும் அங்கீகரிக்கும் விதத்தில் கத்தோலிக்கத் திருச் சபையின் நிலைப்பாடுகள் அமையவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த முன்வரைவு- ஆவணம் வலியுறுத்தியிருந்தது.

ஆனால், இந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காத ஆயர்களின் உயர் பேரவை, குறித்த ஆவணத்தை மீள மாற்றியமைத்துள்ளது. இருந்தாலும், ஒருபால் உறவுக்காரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படு வது தவிர்க்கப்படவேண்டும் என்று இறுதி ஆவணம் கூறியுள்ளது.

போப் பிரான்சிஸ் அளித்த அனைத்து பரிந்துரை களுக்கும், ஆயர்களிடமிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.

நவீனகால அணுகுமுறைகளுக்கு ஏற்ப கத்தோலிக் கத் திருச்சபையின் போதனைகள் அமைய வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே போப் பிரான்சிஸ் தம்முடைய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

ஆனாலும், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் கத்தோலிக்கர்கள் எடுக்கும் ஒழுக்கம் சார்ந்த தெரிவுகளுக்கு திருச்சபை மதிப்பளிக்க வேண்டும் என்கின்ற மாற்றத்திற்கு மட்டும் ஆயர் களின் உயர் பேரவை ஏற்றுக்கொண்டது.

Read more: http://viduthalai.in/page-8/89748.html#ixzz3GsfXtoe4

தமிழ் ஓவியா said...

சபாஷ் பொலிவியா!


கடந்த வாரம் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஈ.வோ. மொராஸிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இது உலகிலேயே அதிக நிதி சேமிப்புக் கொண்ட நாடாக ஒளிர்கிறது! பெண்கள் உயர்வு வியக்க வைக்கிறது. நாடாளு மன்றத்தில் 28% செனட்டில் 47% அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்கள் கொடி கட்டி ஆளுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89752.html#ixzz3GsfuNdyq