Search This Blog

30.9.14

பெரியாருடைய கொள்கைகள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது-கி.வீரமணி

திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் 

சேலம் தமிழ் மறவர் புலவர் பி.அண்ணாமலை - சரசு அம்மையார் இல்ல மணவிழா
திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும்
தண்ணிழல்-சிவசங்கரி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திருச்சி, செப். 29-  திருமணத்திற்கு முன் மருத்துவ சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

ஆத்தூரில் உள்ள விஷ்ணுபிரியா திருமண அரங்கில் 11.9.2014 அன்று காலை 10 மணிக்கு அ.கு.தண்ணிழல் - ப.சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகமிக அவசியம்


ஜோதிடம் பார்ப்பதற்குப் பதிலாக, என்ன செய்ய வேண்டும்? பெற்றோர்களே மணமக்களைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்கின்ற திருமணங்களாக இருந்தாலும் சரி, அல்லது காதல் திருமணங்களாக இருந்தாலும் சரி, சிறப்பாக, வெற்றிகரமாக அந்த மணவாழ்க்கை அமைவதற்கு, நல்ல பாதுகாப்பான ஏற்பாடுகள் என்ன என்று சொல்வதற்கு, வெறும் விசாரணைகள் மட்டும் உதவி செய்யாது. அதற்கு மேலாக ஒன்றைச் சொல்லலாம். அதற்குரிய வாய்ப்புகள் இப்பொழுது ஏராளமாக இருக்கின்றன. அந்த வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று, திராவிடர் கழகம்போல் இருக்கக்கூடிய பெரியார் சிந்தனையாளர்கள், பெரியாருடைய இயக்கங்கள் தெளிவான இந்தக் கருத்தினை முன்வைத்து வருகிறோம். அது என்ன? மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகமிக அவசியமாகும். அது தேவையும்கூட. இதனை எடுத்துச் சொல்லும்பொழுது, சில பேருக்குப் பக்குவம் இல்லை, சொல்வதைக் கேட்பதற்கு. ஜோசியக்காரனிடம் செல்வதை விட, மருத்துவரிடம் போய் இரண்டு பேருடைய உடல் நிலையைப் பரிசோதனை செய்து, சான்றிதழ் வாங்க வேண்டும்; அந்த சான்றிதழ் தவறான சான்றிதழாக அமைந்துவிடாமல், பாதுகாப்பு ஏற்பாட்டோடு செய்து வந்தால், இப்பொழுது வருகின்ற வழக்குகளில், பெரும் பாலான அளவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.


வழக்குரைஞர்களாக இருக்கின்றவர்களுக்கு, அருள் மொழி போன்றவர்களுக்கு வழக்குகள் குறைந்துவிட் டனவே என்று யாரும் வருத்தப்படவேண்டாம்; அவர்களுக்கு வேறு வழக்குகள் நிறையவே இருக்கின்றன, தாராளமாக!
எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறோம் என்று சொன்னால், இந்தச் சிந்தனை இருக்கிறதே, அதற்கு முதலில் விதை போட்டவர்கள் பெரியார் தொண்டர்கள். இப்பொழுது எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், ஒவ்வொரு நாளும் வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளம், சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய மதுரைக் கிளையில் ஒரு நீதியரசர் கிருபாகரன் அவர்கள், வழக்கொன்றில் தீர்ப்பு அளிக்கும்பொழுது அண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.


உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு


சமூகத்தின் அடிப்படையாக இருப்பது குடும்பம். குடும்பத்தின் தலைவன்-தலைவி சாதாரண இணையர் களாக இல்லாத பட்சத்தில், மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஆண்மையின்மை திருமண முறிவுக் குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இதை மறைத்து திருமணம் செய்து விடுகின்றனர்.


இதனால் விவாகரத்து வழக்குகள் எண்ணிக்கை அதி கரிப்பதற்கு, ஆண்மையின்மை முக்கியக் காரணமாக இருக் கிறது. இந்த இயலாமையின் காரணமாக தம்பதியரில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக பெண்கள் இருக் கின்றனர். இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவ தாக உள்ளது.
சமூகக் கட்டுப்பாடுகள், கலாச்சாரத்தின் பெயரில் இத்தகைய பிரச்சினை பெரும்பாலும் வெளியில் சொல்லப் படுவதில்லை. ஆனால், இதைத் தடுக்காத பட்சத்தில் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும். அதோடு, எச்அய்வி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட வர்கள் திருமணம் செய்துகொள்வதையும் தடுத்துவிட முடியும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கவேண்டும்.


மேற்குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையிலும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த கேள்விகளை நீதிமன்றம் முன் வைக்கிறது.


ஆண்மையின்மை குறைபாட்டின் காரணமாக ஏற்படக் கூடிய மண முறிவுகளின் எண்ணிக்கை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளதா?


இத்தகைய மணமுறிவைத் தடுக்க திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்பது அவசியம் இல்லையா?


இத்தகைய வழக்குகளை 6 மாதங்கள் அல்லது ஓராண் டுக்குள் முடிப்பதற்கான திருமணச் சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டு வரவில்லை?


இந்த வழக்குகளில் பாதிக்கப்படும் வாழ்க்கைத் துணைக்கு இழப்பீடு மற்றும் ஏமாற்றியவருக்குத் தண்டனை ஆகிய பிரிவுகளை ஏன் சேர்க்கவில்லை?
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எத்தகைய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன எனத் தெரிவிக்கவேண்டும்.


மேற்கண்டவாறு நீதியரசர் தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார்.


இதுபற்றிய கருத்தரங்குகளை நடத்தவேண்டும் என்று நீதியரசர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்றுகூட சென்னையில் டாக்டர் ராஜசேகர் போன்ற நண்பர்கள், அந்தத் துறையின் வல்லுநர்கள் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தியிருக்கிறார்கள். அந்தச் செய்திகள் ஏடுகளிலே வந்திருக்கிறது.


எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால், திராவிடர் கழகத்துக்காரர்களான நாங்கள் சொல்கின்ற கருத்துகள் எல்லாம் முதலில் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும்; நடை முறையில் அவை ஒத்துவருமா என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். ஆனால், காலப்போக்கில் அதுதான் சிறப்பாக அமையும். யாரும் அதனை மறுக்க முடியாது.


பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன


சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று சொன்னார்கள்; பிறகு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கக் கூடிய அளவில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், இங்கே வந்திருக்கின்ற சகோதரிகளுக்குத் தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம், இந்த மணமுறையைப் பார்த்து யாரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். ஆண்களே படிக்காத ஒரு சமுதாயம்; பெண்களைப்பற்றி கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அதேநேரத்தில் இப்பொழுது நீங்கள் எண்ணிப் பாருங்கள்; இப்பொழுது பெண் குழந்தைகளை யாராவது பள்ளிக்கூடத் திற்கு அனுப்பாமல் இருக்கக்கூடிய துணிச்சல் யாருக்காவது உண்டா? அப்படி நாம் வீட்டில் வைத்திருக்க முடியுமா? அப்படி வைத்திருந்தால், யாராவது ஒப்புக்கொள்வார்களா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். 

இப்பொழுது ஏராளமாகப் படித்தவர்கள், ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படித்து வருகிறார்கள். பெண்கள்தான் முதன்மை யாக வருகிறார்கள். இவையெல்லாம் எப்படி நடந்தது? தந்தை பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன.
இந்த அழைப்பிதழைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சிறந்த பட்டதாரிகளாக, இந்தக் குடும்பத்திற்கு வந்த பெண்கள் பொறியாளர்களாக, வழக் குரைஞர்களாக, மருத்துவர்களாக இவ்வளவு பேர் வரக் கூடிய அளவிற்கு சமுதாய மாற்றங்கள் இன்றைக்கு ஏற் பட்டிருக்கின்றன.


அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட காலம் இப்பொழுது இல்லை.  அப்படி பேசினால், கேலி செய்வார்கள். அப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் வருகிறது என்று சொன்னால், தந்தை பெரியாருடைய இயக்கத்தினாலே - இந்த இயக்கம் என்ன செய்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்த இயக்கம் இல்லா விட்டால், இவ்வளவு மகிழ்ச்சியாக, இவ்வளவு கற்றோர் களாக சரி பகுதியாக பெண்கள் ஆகியிருக்கமாட்டார்கள். எனவேதான், அருமைத் தாய்மார்களே, அன்புள்ளம் கொண்ட சகோதரிகளே இன்னமும் சொல்லிக் கொள் கிறோம், உங்கள் உரிமைகளை நீங்கள் தெளிவாக உணருங் கள். இன்னமும் சொத்துரிமை - சம உரிமையாக சட்டம் வந்திருக்கிறது. ஆனால், இந்த உண்மை பல பெண்களுக்கு இது தெரியாது. சொத்துரிமை சமமாக இருக்கிறது - நம்மை எந்த ஆணும் இழிவுபடுத்தி பேச முடியாது என்பதுபற்றி. ஆனால், இன்றைக்கு எவ்வளவு பெரிய கொடுமைகள் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கின்றன என்பது ஒரு பக்கம் நடந்தாலும்கூட, மற்றொரு பக்கத்தில், அதனை எதிர்த்துப் போராடக்கூடிய அளவிற்கு துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள், சட்டப் பாதுகாப்பைப் பெற்றிருக் கிறார்கள்.

கறுப்புச் சட்டைக்காரர்கள் இடையறாது உழைத்ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை பெற்றனர்


இவைகளெல்லாம் ஏதோ திடீரென்று நடந்தவைகள் அல்ல; சத்திய சாய்பாபா கையைத் தூக்கியதால், பொத் தென்று கீழே விழுந்ததல்ல; ஆதிபராசக்தி, ஓம் சக்தி என்று சொன்னதனால் வந்ததல்ல. மாறாக, இடையறாத இந்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள், கறுப்புச் சட்டைக்காரர்கள் இடையறாது உழைத் ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை பெற்றனர்.


பெரியார் கேட்டார், மக்கள்தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள்; அவர்களுக்கு உரிமை வேண்டாமா? முதலில் பெண்களுக்கு உரிமை கொடு என்று சொன்னார். பெண்ணை பூட்டி வைக்காதே! பெண்ணை பொருளென்று நினைக்காதே! பெண்கள் வெறும் அலங்கார பொம்மைகள் அல்ல; பெண்கள் வெறும் சமையல் கருவிகள் அல்ல! பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல என்று இவ்வளவு கடுமையாகச் சொன்னார். இப்படி சொன்ன பிறகுதான், ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அந்தத் திருப்பம் ஏற்பட்டதன் விளைவுதான், இப்படிப்பட்ட அற்புதமான குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தக் குடும்பம் ஒரு நல்ல கொள்கைப் பல்கலைக் கழகம். இதனால் பெரியாருக்கு லாபமா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு என்ன இதில் லாபம் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையப் போகிறது. உங்களுடைய பிள்ளைகள் சொந்தக்காலில் நிற்கிறார்கள். உங்களுடைய பெண் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கிறார்கள். படித்துவிட்ட பெண்கள், உத்தியோகத்திற்குச் செல்லும் பெண்கள், பதவியில் இருக்கும் பெண்கள் என்று சொன்னால், அவர்களை எந்த ஆணும் எளிதில் விரட்டிவிட முடியாது. என்னை அடித்தால், நீயும் அடி வாங்குவாய் என்ற நிலை, 70 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. உன்னால் என்ன செய்ய முடியும்? என் காலைக் கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும் என்று சொன்னார் கள். இன்றைக்கு அப்படி அல்ல; பெண்கள் துணிந்து எதிர்த்துப் போராடக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு துணிச்சல், தெளிவு வந்திருக்கிறது. இவையெல்லாம் இந்த இயக்கத்தினாலே ஏற்படுத்தப் பட்டவை. திராவிடர் இயக்கம் மலர்ந்த காரணத்தினாலே, செயல்பட்ட காரணத்தினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் வந்திருக்கின்றன. எனவே, அந்த மாறுதல்களில் பூத்த அற்புதமான மலர்கள்தான் இங்கே மணமக்களாக இருக்கிறார்கள்.


யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்கவேண்டும்!


இதிலே காய்த்து கனிந்தவைதான் அவர்களின் வாழ்க்கை வெற்றிகளாக அமைந்து கொண்டிருக்கின்றன. எனவே, அருமைத் தாய்மார்களே, யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்க வேண்டும். காரணம், பெரியார் இல்லையானால், மகளிர் இந்த உரிமைகளைப் பெற்றிருக்க முடியாது; மகளிருக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்க முடியாது. மகளிருக்குச் சொத்துரிமை, மகளிருக்கு கல்வி உரிமை, மகளிருக்கு பதவி உரிமை, மகளிருக்கு மான உரிமை, மகளிருக்கு ஒட்டு மொத்தமான வாழ்வுரிமை இவை அத்தனையும் தந்தவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.


எனவேதான், இன்றைக்கு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உங்கள் பெண் குழந்தைகளாக இருந்தாலும், அவர்களை நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களுக்கு எவ்வளவு சொத்து கொடுப்போம் என்பதைப்பற்றி கவலைப்படா தீர்கள்; அறிவுசார் சொத்து படிப்பு என்று சொல்லி, அதனை நீங்கள் தாராளமாகக் கொடுங்கள். அதனை நீங்கள் கொடுத்து, சொந்தக்காலில்  நிற்க அந்தப் பெண்ணை நீங்கள் தயாரித்துவிட்டால், நிச்சயமாக, ஆமையாகவோ, ஊமையா கவோ ஒருபோதும் அந்தப் பெண் இருக்கமாட்டார். இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார். இது நடை முறையில் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தாய்மார்களே, சகோதரிகளே நீங்கள் நினைத் துப் பார்க்கவேண்டும்.


சுயமரியாதைத் திருமணங்கள் உங்கள் வீட்டிலும் நடைபெறவேண்டும்


அதேபோல, வைதீக மணம் இங்கே இல்லையென்ப தால், என்ன சங்கடம்? தேவையற்ற சடங்குகள் இல்லை. மணமக்கள் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியோடு அமர்ந் திருக்கிறார்கள். வைதீக முறையில் மணவிழா நடைபெற்றி ருந்தால், இவ்வளவு மகிழ்ச்சியாக உட்கார விட்டிருப்பார் களா? இவ்வளவு வசதியாக உட்கார்ந்திருப்பார்களா? மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி, மணமகள் கண்ணைக் கசக்க, மணமகன் கண்ணை கசக்க எதிரே இருக்கின்ற பாட்டி, ஏன் மணமகள் அழுகிறார் என்று கேட்க, ஏதோ இருக்கும்போல இருக்கு என்று பக்கத்தில் அமர்ந்திருப்பவர் சொல்ல, இவ்வளவும் ஏற்படுமே, அதற்கெல்லாம் வாய்ப்புகள் இங்கே இருக்கிறதா என்பதை நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ஆகவேதான், சடங்கில்லை, சம்பிரதாயம் இல்லை என் பதற்காக, நீங்கள் யாரும் கூச்சப்படவேண்டாம்; பயப்பட வேண்டாம்; அச்சத்தை அகற்றுங்கள்; வாழ்வியலை நோக்குங்கள். அந்த வகையில்தான், இந்த மணமக்களின் வாழ்க்கையைப் பார்த்து, இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டிலும் நடைபெறவேண்டும் என்று எண்ணுங்கள்.


இன்னமும்கூட, பிராமணன், சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல் மணவிழாவினை நடத்தினால் என்னாகுமோ, ஏதாகுமோ என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. எது அறிவுக்கு சரி என்று படுகிறதோ, எது உங்களுக்குத் தேவை என்று படுகிறதோ அதனை செய்யுங்கள். மணவிழாவிற்கு மாமா வரவில்லை, சித்தப்பா வரவில்லை, அப்பா வரவில்லை, அம்மா வரவில்லை என்றால் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. புரோகிதர் வரவில்லை என்று கவலைப்பட்டால், அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.


பெரியாருடைய கொள்கைகள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது


திருமணத்தை நடத்தி வைக்கும்பொழுது அந்தப் புரோகிதர் சமஸ்கிருத மொழியில் சொல்லும் மந்திரத்திற்கு என்ன பொருள் என்று தெரியாது.  மறுபடியும்  சமஸ்கிருதம் வரவேண்டும் என்று நினைத்தார்கள். பெரியார் ஊட்டிய உணர்வுகள் இங்கே கொழுந்து விட்டு எரிகின்ற காரணத் தினால்தான், அத்துணைக் கட்சிகாரர்களும் சேர்ந்து தமிழ் நாட்டில் எதிர்த்தன, அதை உள்ளே நுழையவிடுவதில்லை என்று சொன்னால், இன்னமும் பெரியாருடைய கொள்கை கள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது, அசைக்க முடியாத, வேரோடி இருக்கிறது என்பதற்கு அடையாளம்.


நான் பொதுவாகவே மணமக்களுக்கு அறிவுரையை சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. மணமக்களுக்கு வேண்டு கோளாக சில செய்திகளை சொல்லவேண்டும்.
உங்களுடைய அறிவு, ஆற்றல் தெளிவானது, உறுதி யானது. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும்; உங்களு டைய பகுத்தறிவு உங்களை உயர்த்தும். அது உண்மை. ஆனால், நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும், எவ்வளவு பெரிய பதவிக்குச் சென்றாலும், கை நிறைய எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு புகழ் பெற்ற நபராக நீங்கள் ஆனாலும், நீங்கள் மறவாமல் ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான், உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி காட்டவேண்டும்; உங்கள் பெற்றோரிடம் நீங்கள் பாசம் காட்டவேண்டும்; உங்கள் பெற்றோர்களுடைய உதவியை நீங்கள் மறக்கக்கூடாது. ஏனென்றால், இப் பொழுது படிப்பு உயர்கிறது; பாசம் குறைகிறது பல குடும்பங் களில். அது வேதனையாக ஆகக்கூடிய சூழல் ஏற்படுகிறது.


ஆகவேதான் நண்பர்களே, எல்லா மணவிழாக்களிலும் உரையாற்றும்பொழுது நான் சொல்வது என்னவென்றால், இல்லறம், துறவறம் என்றுதான் முன்பு சொன்னார்கள். பெரியார்தான் அதனை மாற்றினார்; இல்லறம் - தொண்டறம் என்று சொன்னார். இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறத்தை செய்யுங்கள். தொண்டறம் என்பது வேறொன்றும் இல்லை. யார் யாருக்கு உதவ முடியுமோ, அவர்களுக்கெல்லாம் நீங்கள் உதவுங்கள். உங்களுக்கு யார் உதவினார்களோ அவர்களுக்கு உங்கள் சக்திகேற்ப, உங்கள் வாய்ப்புக்கேற்ப உதவுங்கள். அதன்மூலமாக மகிழ்ச்சியை நீங்கள் அற்புதமான ஊதியமாகப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.


அடுத்து, அன்புச் செல்வங்களே, நீங்கள் சிக்கனமாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். அண்ணா சொன்னதை ஒவ்வொரு மணவிழாவிலும் நான் சொல்வது வழக்கம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. இதனை நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்; வாழ்க்கைக்கும் விளையாட்டுக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. அது என்ன வென்றால், விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு உண்டு. ஆனால், இல்லற வாழ்க் கையைப் பொறுத்தவரையில், யார் தோற்கிறார்களோ, அவருக்குத்தான் பரிசு உண்டு. ஆகவேதான், தோற்றுப் போவதால், நீங்கள் யாரும் வருத்தப்படாதீர்கள். ஒருவர்  முந்த, இன்னொருவர் முந்தாமல், ஒருவரிடம் இன் னொருவர் தோல்வியை விரும்புங்கள். அதில் ஏற்படுகின்ற சுவையை நீங்கள் அனுபவிக்கலாம். அதில் ஏற்படுகின்ற இன்பத்தைப் புரிந்துகொண்டு வாழலாம்.


ஆகவே, அற்புதமான வாழ்க்கையை உங்கள் வாழ்க் கையை அருமை இளஞ்சிட்டுக்களே, இளம் மணமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் இல்லறத்தையும், தொண்டறத்தையும் சிறப் பாக நடத்துங்கள்.


பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதே


தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டார், சுயமரியாதைத் திருமண முறையை நடத்துவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லலாம் அல்லவா என்று.


உடனே பெரியார் சொன்னார், அதுபோல் நான் செய்தால், அதுவே பிற்காலத்தில் சடங்காக மாறிவிடும். அது தேவையில்லை. அவ்வப்பொழுது அறிவுக்குத் தோன்றுவது என்னவோ அதுபோல் செய்யவேண்டும். நான் திருமணம் நடத்துவது என்பது, கார் மாடல் மாதிரி என்று சொன்னார்.
உதாரணத்திற்கு, 2000 ஆம் ஆண்டு வாங்கிய கார் இப்பொழுது 2014 ஆம் ஆண்டு அவுட் ஆஃப் பேஷனாகி விட்டது. 2013 ஆம் ஆண்டு வந்த கார் மாடலே, 2014 ஆம் ஆண்டு பழைய மாடலாகப் போய்விட்டது.


அதுபோல, சுயமரியாதைத் திருமணத்தை நடத்துவ தற்கு நாங்கள் தேவையில்லை; போகப் போக, அவர்களே முடிவு செய்து, தேவையானால் பெற்றோர்கள், நண்பர்களை மட்டுமே வரச் சொல்லி மாலை மாற்றிக்கொண்டால் போதும் என்று சொன்னார் தந்தை பெரியார்.
பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதே! ஆப்பிரிக்காவில் பெண் இருக்கிறார்; அமெரிக்காவில் மாப்பிள்ளை இருக்கிறார். திருமணத்தை தள்ளிப் போட இருவருக்கும் விருப்பம் இல்லை. உடனே திருமணத்தை இணையத்தின்மூலம் செய்து கொள் கிறார்கள். பெரியார் என்பவர் எவ்வளவு பெரிய முன் னோக்கு உள்ளவர்கள்; தொலைநோக்காளர் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும்.
ஆகவேதான், அதைத்தான் இந்த மணவிழா அழைப் பிதழில் அழகாக எடுத்துப் போட்டிருக்கிறார்கள்;


மணமுறைக்கு பழைமையைத் தேடித் திரியவேண்டிய தில்லை. கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய, ஒரு காலத்து முறைகளே, எக்காலத்திற்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.

அழைப்பிதழில் இருக்கின்ற மற்ற பகுதிகள் எல்லாம் தகவல்கள். ஆனால், இது இருக்கிறது பாருங்கள்; அறிவை சாணைப் பிடிக்கின்ற பகுதி. ஆகவேதான், பெரியாருடைய பொன்மொழியை மிகச் சிறப்பாக எடுத்துப் போட்டிருக் கிறார்கள். அந்த வகையில், சுயமரியாதைத் திருமண முறையைப் புகுத்தியவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதற்குச் சட்ட வடிவமாக்கிய பெருமை பேரறி ஞர் அண்ணா அவர்களையே சாரும். 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்து, தந்தை பெரியார் அவர்களுக்கே அந்த ஆட்சி காணிக்கை என்று சட்டமன்றத்தில் அறிவித்த அண்ணா அவர்கள், அந்த மணமுறைக்குச் சட்ட  வடிவம் கொடுத்தார்கள். நடந்த திருமணங்கள், நடக்கும் திருமணங்கள், இனி நடக்கப் போகும் திருமணங்கள் எல்லாம் செல்லுபடியாகும் என்று சொன்னார்கள்.
அந்த மணமுறை இப்பொழுது சிறப்பாக நடைபெறு கிறது. எனவே, இங்கு இப்பொழுது நடைபெறுவது சமு தாயத்தாலே ஒப்புக்கொள்ளப்பட்ட மணவிழா; சட்டத்தாலே அங்கீகரிக்கப்பட்ட மணவிழா. ஆகவே, அதற்குக் காரணமான இருபெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இருவருடைய நினைவிற்கும் வீரவணக்கம் செலுத்தி, அவர்களுடைய தொண்டினை நினைவு கூர்ந்து, மணமக்கள் தண்ணிழல், சிவசங்கரி ஆகியோருடைய மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


-------------------------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்---”விடுதலை” 29-09-2014

51 comments:

தமிழ் ஓவியா said...

வழிகாட்டும் கருநாடகா கணவனை இழந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

மங்களூரு, செப்.30- கருநாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி சிறீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தாழ்த்தப் பட்ட இனப் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டனர்.

நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங் களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர் களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/88463.html#ixzz3Eqs00vJf

தமிழ் ஓவியா said...

சிந்தனா சக்தியற்றவன்

தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான். - (விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/88464.html#ixzz3EqsWJLpe

தமிழ் ஓவியா said...

மோடி மகிமை !


மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.

மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.

மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான் மிகுதி. "இந்தியா"வையேக் காணோம். பெரிய மனதுடன் வந்திருந்த இஸ்லாமியத் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஏமாற்றம் அவர்களது முகங்களில் என்று சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் வரலாற்றைப் புகழ்ந்தவர் இந்தியரில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் கூடச் சரி சமமாகப் படிப்புக் கொடுத்ததே கிருத்துவக் கல்விக்கூடங்கள்தானே. அதை மறைக்க முடியுமா?

அமெரிக்காவின் பணம் வேண்டும், தொழில் வேண்டும் ஆனால் இந்துத்துவாதான் இந்தியா என்று சொல்லி இந்தியாவை விற்றுக் கொண்டுள்ள மோடி மகிமை எடுபடுமா? இந்தியா "இந்துஸ்தான்" என்றால் அமெரிக்கா "கிருஸ்துஸ்தான்" என்பதுதான் உண்மை. பணம் எவ்வளவு தூரம் பாயும் என்பது தெரிந்து விடும். மோடிக்கு வரலாறு காணாத கூட்டம் என்று இந்திய இதழ்கள், இணைய மக்கள் சொன்னாலும், பல இருக்கைகள் காலியாகவே உள்ளன.... கடந்த ஒரு வாரமாக என்று சொல்லி சொல்லி வேறு...!!!

இதோ நிழற் படம்.... பாரத் மாதாகீ ஜே!!!

Read more: http://viduthalai.in/page-8/88476.html#ixzz3EqtiT8Cb

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அக்டோபர் 2

செய்தி: காந்தியார் பிறந்த நாளில் தூய்மையான இந் தியா என்ற திட்ட அறிவிப்புக் காக காந்தியார் பிறந்த நாள் (அக்டோபர் 2) விடுமுறை ரத்து!

சிந்தனை: காந்தியார் பிறந்த நாளுக்கு விடுமுறையும் ரத்து செய்ததாக இருக்கும் - திட் டத்தையும் அறிமுகப்படுத்திய தாகவும் இருக்கும் - ஒரே கல்லால் இரண்டு காய் எப்படி (ஆர்.எஸ்.எஸ்.) தந்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/88484.html#ixzz3Eqttmsuf

தமிழ் ஓவியா said...

சும்மா ஆடுமா சோ குடுமி?


கே: ஆசிரியர் தினம் குரு உத்ஸவ் என்று பெயர் மாற் றப்படுவதை வரவேற்கிறீர்களா? தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரி வித்துள்ளனவே

ப: ஏதோ இதற்கு முன்பு ஆசிரியர் தினத்திற்கு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் என்ற பெயர் இருந்தது போலவும், இப்போதுதான் நாடு முழுவதும் இருந்த அந்தத் தமிழ்ப் பெயர் மாறி, ஸம்ஸ்கிருதப் பெயர் வந்து விட்டதைப் போலவும், இது பெரும் சதி என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதற்கு முன்பு இதே ஆசிரியர் தினத்திற்கு ஷிக்ஷக் திவஸ் என்கிற பெயர் இருந்திருக்கிறது. அதற்கு குரு உத்ஸவ் எவ்வளவோ மேல், தமிழில் குருவும் சரி, உத்ஸவமும் சரி, எல்லோரும் அறிந்த வார்த்தைகள்தான். இந்தப் பெயரை வைப்ப தால் தமிழுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று, இந்தப் பெயர் மாற்றம் என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள். இதில் எல்லாம் கவனம் செலுத்தவே வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. (துக்ளக் 17.9.2014 பக்கம் 8.9)

புரிகிறதா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது; சொல்லு வதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் ஒப்புக்காக சில சொற்கள்.

இந்தப் பெயர் மாற்றம் எல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள் என்று பெரிய மேதாவி போல உதார்!

கடைசியில் சொன்ன அந்த ஒரே வார்த்தையைச் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே?

இந்த மகா யோக்கியர்தான் கோயிலுக்குள் வழிபாடு தமிழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் அவரின் பதில் என்ன தெரியுமா?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ் கிருத துதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் இதே சோ. ராமசாமி தான் துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமாகத் தீட்டினார் என்பது நினைவிருக்கட்டும்!

பிரச்சினையே தமிழில் வழிபாட்டுக்கு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும் பொழுது ஆழ்வார்களும், நாயன்மார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற பிரச்சினை எங்கே வந்தது?

வழிபடுவதற்குத் தமிழிலேயே இருக்கும் பொழுது அர்ச்சனை பாட்டே! என்ற ஆதாரம் இருக்கும் பொழுது ஸம்ஸ்கிருதம் எங்கே வந்து குதித்தது? ஸம்ஸ்கிருதமே இல்லாவிட்டால் - அந்த ஒலிக்கே வாய்ப்பு இல்லாவிட்டால் சாமிகள் எல்லாம் வெறும் சோற்றாலடித்த பிண்டங்களாகத்தான் இருக்குமா?

தமிழ் ஒலிக்குச் சக்தியில்லை - ஸம்ஸ்கிருத ஒலிக்குத்தான் சக்தி என்ற இந்த சோ அய்யர் எப்படி கண்டுபிடித்தாராம்? என்னென்ன சோதனைகளைச் செய்து இந்தப் பூணூல் திருமேனி என்ற கொலம்பஸ் இதைக் கண்டுபிடித்தார். கடவுள் என்றால் ஓசைக்கும் ஒலிக்கும் மயங்கக் கூடியவர்தானா? ஸம்ஸ்கிருத ஒலிதான் எனக்குப் பிரீதி என்று சோவி டம் வந்து மயிலை கற்பகாம்பாள் இரவு நேரத்தில்வந்து சொன்னாளா?

பார்ப்பன மொழியான ஸம்ஸ்கிருதத்துக்காக எதை எதையோ சுற்றி வளைத்துச் சொல்லி, உளறி வக்காலத்து வாங்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழித் துவேஷி என்கிறது; விழித்திருக்கும் போதே விளையாடும் இந்த விஷமிகளிடம் எச்சரிக்கை தேவை!

Read more: http://viduthalai.in/page3/88331.html#ixzz3EqvGBruk

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சூழ்ச்சியே சாதிப் பிரிவுகள் மறைமறையடிகளின் ஆராய்ச்சி உரை

இவ் ஆரியப் பார்ப்பனர் ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர் கட்குள் பல்வேறு சமயப்பிரிவு, சாதிப்பிரிவுகளை உண்டாக்கி அவ் வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே. தத்தம் சாதியே உயர்ந்த தென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை. கண்ணன் கதை. கந்தன் கதை. விநாயகன் கதை, காளி கதை முத லிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம், முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கை யால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.

- அறிவுரைக் கொத்து

Read more: http://viduthalai.in/page3/88390.html#ixzz3EqvNuMKA

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிய பார்ப்பனர் ஒழிய வேண்டும் விஞ்ஞானியின் கூற்று


இன்றைய சமுதாய அமைப்பில் பார்ப்பனர் களுக்கு இருந்துவரும் உயர்ந்த நிலை மதத்தின் பேரால் அவர்கள் அனு பவித்துவரும் உயர்நிலை தகர்த்தெறியப் படாத வரையில் இந்தியாவி லிருந்து இந்த ஜாதி முறையை ஒழிக்க முடி யாது. மதச்சடங்குகளில் பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தனி உரிமை ஒழிக்கப்பட வேண்டும்

- டாக்டர் அய்யப்பன்
(10.1.1958 இல் சென்னை விஞ்ஞானிகள் மாநாட்டுச் சொற்பொழிவு)

Read more: http://viduthalai.in/page8/88397.html#ixzz3EqxqzE8N

தமிழ் ஓவியா said...

இழந்த மூக்கு திரும்பியது


இன்றைய ஆன்மிகம்?

இழந்த மூக்கு திரும்பியது

குரு பகவானை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் நியமனம் செய்த தலம் நாகப் பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம். ஒரு முறை ஈசனை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அதில் பிரம்மனும் சரஸ் வதியும் கலந்து கொண் டனர். அதனால் கோபம் கொண்ட ஈசனின் அம்சமான வீரபத்திரர், பிரம்மனை தலையில் குட்டியும் சரஸ்வதி தேவியின் மூக்கை அறுத்தும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு ஏற்பட்ட அங்கக் குறைபாடு நீங்க வேண்டும் என சரஸ்வதி தேவி தவம் இருந்து தன் இழந்த மூக்கைத் திரும்பப் பெற்ற தலம் இந்த பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயமாம்.

கடவுள்களுக்குள் ஆணவம், தன் முனைப்பு சண்டை சச்சரவு என்றால் இது எந்த வகையில் ஒழுக்கமானது? சிந்திப்பீர்.

Read more: http://viduthalai.in/page1/88441.html#ixzz3EqyAOkM3

தமிழ் ஓவியா said...

பார்ப்பானே வெளியேறு


பார்ப்பானே வெளியேறு பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

Read more: http://viduthalai.in/page1/88422.html#ixzz3EqyQ9Z80

தமிழ் ஓவியா said...

காக்க! காக்க!! இதயம் காக்க!!!

இன்று உலக இதயப் பாதுகாப்பு நாள்!

இது ஒரு வரலாற்றில் அதன் தேவையை, முக்கியத்துவத்தை வலி யுறுத்த ஒரு பிரச்சார நாள்.

மற்றபடி என்றும் இதயப் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் எந்த நாளும் இன்றியமையாத ஒன்றல்லவா?

அண்மைக் காலத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு. 25, 30 வயதுள்ள இளைஞர் களுக்குக்கூட இதய நோய் தாக்குதல், மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவது அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது!

அதற்குரிய காரணங்கள் என்ன வென்று ஆராய்ந்து மருத்துவர்களும், நல்வாழ்வத் துறை விற்பன்னர்களும் கூறும் விளக்கம்:

இளைஞர்கள் பலரும் வாழும் இன் றைய நவீன வாழ்க்கை முறையே யாகும் சதா உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் டி.வி. என்ற தொ(ல்)லைக் காட்சியில், திளைத்து படுக்கை உருளைக்கிழங்குகளாக இருப்பது பல மணி நேரம் இணையத்தி லும் - கைத் தொலைப்பேசியிலும் மூழ்கி இருப்பது, எல்லாவற்றையும் விட மோசம் - இந்த வேக உணவுகள் என்ற கொழுப்புகளையும், கேடுகளை யும் அவர்கள் உடலில் ஏற்றும் மோசமான ரசாயனக் கலவைகளைக் கொண்ட சுவைமிக்க (விலை அதிகம் - என்றாலும்) சாப்பிடும் உணவு - பிட்சா, பர்கர், குடிக்கும் பானங்களோ பெப்சி கோலா,7up - இப்படி உடலுக்குக் கேடு செய்யும் ஆட்கொல்லி திட, திரவ உணவுகள் ஆகும்!

முன்புபோல கால்பந்து, சடுகுடு என்ற கபாடி, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்றவைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சோம்பேறி விளையாட்டு - இங்கிலாந்து நாட்டில் சில மாதங்களே வரும் சூரிய வெளிச்சத்தில் நளினிமாக மகிழ, 11 பேர்கள் கொண்ட விளையாட் டான கிரிக்கெட் போதை கிராமத்து இளைஞர்கள் மத்தியில்கூட பரவியுள்ள கொடுமை!

அதன்மீது நடக்கும் சூதாட்டக் கொள்ளை வியாபாரம் என்ற ஒழுக்கக் கேடுகளில் பெரும் பெரும் அரசியல் தலைகளுக்கெல்லாம் பங்கு என்ற தொத்து நோய் - இத்தியாதி! இத்தியாதி!

திரைப்படங்கள், சின்னத்திரைகளைப் பார்த்து, புகைபிடித்தல், மது குடித்தல், இப்படி இதயத்தை மெல்லக் கொல்லும் நச்சுகள்! நாளும் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
பொது இடங்களில், அலுவலகங்களில் புகைபிடிப்பது பெரிதும் குறைந்துள்ளது என்றாலும்கூட இன்னமும், இந்த பழக் கங்கள் தொலைந்து விடாத நிலைதான் தொடருகிறது!

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. சைக்கிள்களைப் பயன்படுத்துவது பெரிதும் காணாமல் போய் விட்டது!

சிலர் சின்னச்சின்ன, அலட்சியப் படுத்தப்பட வேண்டிய செய்திகளை மேல் போட்டுக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் ஒரு முக்கியக் காரணம் அதையும் தவிர்த்தல் அவசியம்.

அய்ரோப்பாவில், நெதர்லாந்து நாட்டில் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சீனாவில் - பீகிங் போன்ற தலைநகர் பகுதியிலேயே பெரிதும் பயன்படுத்துகின்றனர் சைக்கிள்களை.

இப்பழக்கத்தை நம் பொது நல நிறுவனங்களும், தலைவர்களும் வற்புறுத்த வேண்டும். சாலைகளில் சைக்கிள்களுக்கென, நடைமேடை போலத் தனியே உருவாக்கினால் அது அவர்களுக்கும் பாதுகாப்பு மற்ற வாகன ஒட்டிகளுக்கும் தொல்லை - விபத்து ஏற்படுத்தாமல் காப்பாற்றிட உதவக் கூடும்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் (பிளஸ் 2) முதல் கல்லூரி பல்கலைக் கழக வகுப்புகள்வரை ஆண்டு தோறும் மாணவர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை (Compulsory Medical Checkup) செய்து அறிக்கையை ஆவணப்படுத்தினால் நல்லது!

வருமுன்னர் காப்பது நல்லது என்பதால், பல வகையான இதய நோய் - மாரடைப்பு, - இவைகளைப் பற்றி பெரிய மருத்துவர்கள் அவ்வப் போது விளக்குவதால் அதைத் தவிர்த்து, பொதுவாக எழுதியுள்ளேன்

Read more: http://viduthalai.in/page1/88424.html#ixzz3Eqyiwv8z

தமிழ் ஓவியா said...

பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய்


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லாப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர்ஸ் என வெண்டைக்காய் அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.

இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியை தவிர்க்க கூடியவை. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகள் உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. உணவில் வெண்டைக்காய் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்தது வெண்டைக்காய்.

Read more: http://viduthalai.in/page1/88404.html#ixzz3EqzJYFQb

தமிழ் ஓவியா said...

கல்வி கிடைக்குமாம்!


இன்றைய ஆன்மிகம்?

கல்வி கிடைக்குமாம்!

நவராத்திரியின் நான் காம் நாளான இன்று அய்ந்து வயது குழந் தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட் டால் குறையாத கல்வி கிடைக்குமாம்!

தாழ்த்தப்பட்டவர்களுக் கும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கல்வி கிடைக் காததற்குக் காரணம் இதைச் செய்யாததால் தானா?

கல்வியைக் கற்பிக்க பெரியார் பாடுபட் டதும் காமராசர் செயல் பட்டதும் - பல்லாயிரக் கணக்கான பள்ளிகள் இப்பொழுது தோன்றி இருப்பதற்கும் காரணம் ரோகிணியை வழிபட்ட தால்தானா?

Read more: http://viduthalai.in/page1/88346.html#ixzz3Er0QHVtw

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

புரிகிறதோ!

செய்தி: நவராத்திரியை முன்னிட்டு தி இந்து சுண் டல் போட்டி நடத்துகிறது. அட்டகாசமான பரிசுகள் காத்திருக்கின்றன. - தி இந்து அறிவிப்பு

சிந்தனை: பார்ப்பான் உயிர் அவன் கடவுளிடத்திலும் மதத்திலும்தான் இருக்கிறது என்பதைத் தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/88345.html#ixzz3Er0nfhH5

தமிழ் ஓவியா said...

தினமணியின் வயிற்றுப்போக்கு?


- குடந்தை கருணா

இன்றைய எல்லா பத்திரிகைகளும், சொத்துக் குவிப்பு வழக்கின் செய்திகளை வெளியிட்டுள்ளன. சில பத்திரிகைகள், அரசியல் சாதக, பாதகத்தை வெளியிட்டுள்ளன.

ஆனால், தினமணியில் முதல் பக்கத்தில் கார்ட்டூன் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 65 கோடிக்கு 4 ஆண்டு தண்டனைன்னா, ரூ.1.76,000 கோடிக்கு எவ்வளவு ஆண்டுன்னு கணக்கு போட்டு, சந்தோஷம் அடைகிறது. என்னே ஒரு பார்ப்பன வன்மம்.

65 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு என்பது தனது வருமானத்திற்கு மீறிய சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனையாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது.

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1,76,000 கோடி இழப்பு என்று தானே, வினோத் ராய் தனது தணிக்கை அறிக்கையில் கூறி இருந்தார். அதுவும் ஒரு ஒப்பீட்டு முறையில் அந்த கணக்கை தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் ரூ.1,76,000 கோடி ஊழல் என்று எங்கேயும் கூறாதபோது, தினமணி வைத்திய நாதனுக்கு மட்டும் அது எப்படி ஊழலாக தெரிகிறது.

அரசியல் கட்சிகள் தங்களது அரசியலுக்காக, அப்படி ஊழல் என்ற வார்த்தையை சொல் கிறார்கள் என்றால், தினமணியும் அந்த வகையில் சேர்ந்ததா? என்பதை முதலில் வைத்தியநாதன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், தான் ஒரு அரசியல் கட்சிக்கான பத்திரிகை என்பதை யாவது சொல்ல வேண்டும்.

ரூ.1,76,000 கோடிக்கான இழப்பு சம்பந்தமான வழக்கில், இதுவரை, எங்கேயாவது, நீதிமன்றமோ, வழக்கை எடுத்துச் செல்லும் சிபிஅய் நிறுவனமோ கண்டுபிடித்திருக்கிறதா? இதுவரை இந்த வழக்குக்காக கைதாகி தற்போது பிணையில் வழக்கை வாதாடிக் கொண்டிருக்கும் ஆ.ராசாவிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏதேனும் நிரூபணம் ஆகியிருக்கிறதா? இவற்றிற் கெல்லாம் தினமணி வைத்தியநாதன் பதில் சொல்லவேண்டும்.

2ஜி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்; தங்களுக்கு எல்லாவித வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வாய்தா வாங்காமல் வழக்கை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும், பதினெட்டு ஆண்டுகள் வழக்கை பல வழிகளிலும் இழுத்தடித்துக் கொண்டிருந்தவர்களும் ஒன்றா? தினமணி வைத்தியநாதன் பதில் சொல்ல வேண்டும்.

அலுவலகப் பணியில் தன்னிடம் வரும் கோப்புகளை அரசின் கொள்கைகள் சார்ந்து முடி வெடுத்து, அதன் அடிப்படையில் தணிக்கையாளர் அரசுக்கு இழப்பு என அறிக்கை தருவது 2ஜி வழக் கில் மட்டுமல்ல; பல துறைகளிலும் நடந்துள்ளது. நடந்து வருகிறது. நாளையும் வரும்
குஜராத்தில் மோடி ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் காரணமாக ரூ.5,000 கோடி இழப்பு என இதே தணிக்கைத்துறை அறிக்கை அளித்ததே; அது இழப்பா? ஊழலா?

ரூ.1 ஊதியம் பெற்று வந்தவரிடம் ரூ.65 கோடிக்கு சொத்து குவிந்ததை, கண்டுபிடித்து, அந்த சொத்துகளின் பட்டியலை வெளியிட்டது நீதி மன்றம். அது முறைகேடாக சம்பாதித்தது என உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ரூ.1,76,000 கோடி இழப்பு என்று சொல்லப்படும் வழக்கில், தீர்ப்பு வரட்டும். அதுவரை தினமணி வைத்தியநாதன் பொறுமை காட்டலாம்; அல்லது அது ஊழல் என்றால், விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யட்டும். அதில் விளக்கம் தர பலர் தயாராக இருக்கிறார்கள்.

அதைவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையை வேறு ஒரு சம்பந்தமில்லாத வழக்கோடு முடிச்சுபோடுவது, தினமணி வைத்திய நாதனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள உள்ள பீதியையும் வயிற்றில் ஏற்பட்டுள்ள பேதியையும் காட்டுகிறது.

அய்ராவதம் மகாதேவன், சம்பந்தம் போன்ற சிறந்த ஆசிரியர்களை கொண்டு இயங்கிய அன்றைய தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்ற கொள்கை பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், தேகம் முழுவதும் பார்ப்பன வன்மத்தை கொண்டுள்ள ஒருவரின் எழுத்தில் நாளும் பொய் யான செய்தியை வெளியிடும் இன்றைய தினமணிக்கு, அது பொருந்தாது என்பது மட்டுமல்ல; நேர் எதிராக கொண்டதாகத் தான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/88359.html#ixzz3Er1F7iLo

தமிழ் ஓவியா said...

பகத்சிங்


துப்பாக்கிகளும், குண்டுகளும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. சிந்தனை என்னும் கல்லில் தீட்டப்படும் கத்திதான் புரட்சி! என்ற பகத்சிங்கின் பிறந்த நாள் இந்நாள் (1907).

1924ஆம் ஆண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருந் தான் அவன்; அவனது பாட்டியும் தந்தையும் - அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற் புறுத்தினர். அவர்களுக்கு அந்த மாணவன் கடிதம் ஒன்றை எழுதினான்.

இது திருமணம் செய்து கொள்வதற்கான கால மல்ல; நாடு என்னை அழைக்கிறது. என் உடல், உள்ளம், பொருள், ஆவி அனைத்தையும் நாட் டுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்னும் முடி விற்கு நான் வந்துள்ளேன். இது ஒன்றும் நம் குடும் பத்திற்குப் புதிதும் அல்ல; நமது குடும்பம் முழுவ துமே நாட்டுப் பற்றினால் நிறைந்த ஒன்றாயிற்றே! நான் பிறந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் என் சித்தப்பா சுவராஸ்சிங் சிறையில் மரணத்தைத் தழுவிடவில்லையா?

அஜீத்சிங் சித்தப்பா இப்போது வெளிநாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை! நீங்களும் பலமுறை கொடுஞ் சிறை வாசத்தை அனுபவித்தவர்கள் தானே உங்கள் எல்லோருடைய அதே வழியைத்தான் - நானும் பின்பற்றிக் கொண் டிருக்கிறேன். அதனால் என்னைக் குடும்ப வாழ்க்கையில் கட்டிப் போட வேண்டாம்; மாறாக என் நோக்கம் நிறை வேறுவதற்காக உங்களின் வாழ்த்தைத் தெரிவி யுங்கள் என்று கடிதம் எழுதிய இளம் சிங்கம் தான் நமது பகத்சிங்.

இந்து சனாதன உணர் வோடு தீவிரவாதத்துடன் நடந்து கொண்டவர்கள் உண்டு - வாஞ்சிநாதன் போல ஆனால் பகத்சிங் அதற்கு நேர்மாறான இலட்சியவாதி - பகுத் தறிவுவாதி.

1928இல் சைமன் கமி ஷனுக்கு எதிராகப் போராட்டங்கள் கனன்று எழுந்தபோது லாகூரில் ஊர்வலத்திற்குத் தலைமை வகித்துச் சென்ற லாலா லஜபதிராய் காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப் பட்டார். பழி வாங்க சூளுரைத்தான் பகத்சிங், சரண்டர்ஸ் என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுப் பழியும் தீர்த்தான். அதே நேரத்தில் லஜபதிராயின் இந்துத்துவா வெறியைத் தம் ஏற்கவில்லை என்றும் சொல்லத் தவறிடவில்லை.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் கால கட்டத்தில்கூட லெனினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந் தான்; தூக்குக் கயிற்றை முத்தமிடும்போதுகூட எங்கள் முகத்தை மூட வேண்டாம் என்ற வீரஞ் செறிந்த சொற்களைச் சொன்னவன் அவன்! இளைஞர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! வாழ்க பகத்சிங்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88289.html#ixzz3Er2OGWcE

தமிழ் ஓவியா said...

சி.பா.ஆதித்தனார் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை!

தமிழர் தலைவர் பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது:

தமிழ் இன உணர்வோடு மிகப்பெரிய ஒரு சாதனையாக தன்னுடைய ஏடுகள்மூலம் குறிப்பாக தினத்தந்தியின் மூலம் மிகப்பெரிய ஒரு வரலாற்றையே உருவாக்கியவர். தந்தை பெரியாரால் மிகவும் மதிக்கப்பட்டவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்தத் துறையிலே நிகழ்த்திய சாதனையை இன்னமும்கூட யாராலும் முறியடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட அவர் ஒரு தனித்த ஒரு அத்தியாயத்தையே படைத்தார். தமிழர்களால் ஏடுகள் நடத்த முடியும். அதுவும் மற்றவர்களுடன் போட்டி போட்டு சிறப்பாக நடத்த முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அந்த பாரம்பரியத்தில் சிவந்தி அவர்களும், அவருக்குப்பின் அவர்களுடைய பாரம்பரியமான பிள்ளைகளும் நடத்துவது பாராட்டப்படவேண்டியது. எனவே, ஆதித்தனார் மறையவில்லை. வாழ்கிறார். -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/88290.html#ixzz3Er2Wj75W

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவராத்திரி

நவராத்திரி - மூன்றாம் நாளான இன்று நான்கு வயது குழந்தையை அலங் கரித்து இந்திராணியாகப் பாவித்துப் பூஜிக்க எதிரி கள் விலகுவார்களாம்!

அப்படியா? நமது இராணுவ அமைச்சரை முதலில் இதனைச் செய்யச் சொல்லுங்கள். சீனா, பாகிஸ்தான் நாடுகள் படைகள் மூலம் அடிக்கடி நமது எல்லைகளில் தொல்லைகள் கொடுக்கும் எதிரிகள் அல்லவா? அவர்கள் விலகி ஓடிவிட இவ்வளவு சுலபமான வழி இருக்கிறதே!

Read more: http://viduthalai.in/page1/88293.html#ixzz3Er2euV00

தமிழ் ஓவியா said...

சண்டமாருதம்

கோட்டையூரிலிருந்து வெளிவரும் சண்டமாருதம் என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ. பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கு ஏற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதேயாகும்.

அதன் ஆசிரியரான திரு.அ. பொன்னம்பலனாரைப் பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். எந்நேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலை பூண்டு தேவார, திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல் களைக் கண்களில் நீர் ஒழுக தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசையோடு பாடிப்பாடி சைவப் பிரச்சாரம் செய்தவர்.

பூவாளூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர்களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப்பட்டவர் சுயமரியாதையில் திரும்பி சண்ட மாருதம் போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே சண்டமாருதம் என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே, தமிழ்மக்கள் சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

அதன் வருட சந்தா ரூ. 3-0-0

வெளிநாட்டு சந்தா ரூ. 4-0-0

விலாசம்: சண்டமாருதம், ஆபிஸ், கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.

குடிஅரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3a4IYa

தமிழ் ஓவியா said...

மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-

மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.

இவைகளின் வாக னத்தில் தேரில் நெருப்பு பிடிக் கின்றது. அச்சு ஒடிகின்றது. இவை களின் பயனாய் பலர் சாகின் றார்கள். மூடர்களே! இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலி யவைகள் இருக்கின்றதாக நினைக் கின்றீர்கள்? உங்களிலும் மூடர் கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல் லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..

மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர் : கடவுளைப் படைப் பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.

பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தன மாகும்.

மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3hs1a0

தமிழ் ஓவியா said...

புதிய பத்திரிகைகள்

திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலைமையில் சண்டமாருதம் பத்திரிகையும், திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசு பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத் திற்குச் சில பத்திரிகைகளே இருக்கின்றன.

அதாவது, குடி அரசு, குமரன், நாடார் குலமித்திரன், முன்னேற்றம், தமிழன், புதுவை முரசு, சண்டமாருதம் ஆகிய வாரப்பத்திரிகை களேயாகும். திராவிடன் தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ, இருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்குச் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாது என்போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது.

ஏனெனில், அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும், அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப்பிரச் சாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை. அன்றி யும், நமதியக்கத்தால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புப்போய் புஸ்தக வியாபாரமும், கேட் லாக் வியாபாரமும் போய், யோக்கியதையும் போய் திண்டாட ஏற்பட்டு விட்ட தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நமது இயக்கம் எமனாய் தோன்றி விட்டதாலும் தங்கள் ஜீவ வாழ்வை உத்தேசித்து எதிர்க்க வேண்டிய அவசியமுள்ள பத்திரிகைகள் பல இன்னும் தோன்றலாம். தோன்றியும் இருக்கின்றன.

ஆதலால், அதனதன் யோக்கியதைக்குத் தகுந்தபடி அதனதன் பாஷா ஞானத்தில் நடைபெற இன்னும் பல பத்திரிகைகள் வேண்டியது அவசியமுமேயாகும். ஆதலால், சுயமரியாதை மக்கள் இவை களை ஆதரிப்பார்கள் என்றும், இன்னும் பல பத்திரிகைகள் தோன்ற உதவி அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3rM8i9

தமிழ் ஓவியா said...

மௌலான முகம்மதலி


மௌலான முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லு பவர்களில் அவரும் ஒருவர், ஏழை மக்களை ஏமாற்றி பணக்காரர்களும், படித்தவர்களும் அனுபவிக்கும் போக்கிய மாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போதுமே பிடிக்காது.

தேசியப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவேகிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்க மாட்டார்.

அவர் ஈரோட்டிற்கு வந்திருந்த போது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றது அதாவது,

நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன். என்று சொன்னார்.

சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மையென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும், கவலைப் படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டுபிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.

அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர். தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளைக்கட்டிவிட்டும் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்று கூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணமுடையவர். இவ்வருங் குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11.01.1931

Read more: http://viduthalai.in/page1/88312.html#ixzz3Er3zDKRL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதர்மம்

கிருஷ்ணன் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாம். உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப் பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளு டன் அவதரிப்பாராம்.

சரி... இப்பொழுது அதர்மம் தலைதூக்கவில் லையா? கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங் களும் தலைதூக்கி நிற் கின்றனவே! கிருஷ்ணன் ஏன் இவற்றை நிக்ரகம் செய்ய அவதாரம் எடுக்க வில்லை? அப்படி ஒருவன் இருந்தால் அல்லவா வரு வான்?

Read more: http://viduthalai.in/page1/88265.html#ixzz3Er4Jd6bN

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்

ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page1/88271.html#ixzz3Er4fB3ZM

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!

12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.

இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

- தந்தைபெரியார்

Read more: http://viduthalai.in/page1/88254.html#ixzz3Er5KKF00

தமிழ் ஓவியா said...

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.

சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.

மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆத்திகத்தின் மோசடி வேலை

ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.

காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.

எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-

காமத்தைப் பரப்பும் கருவி

அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?

இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

கருங்குழற் செவ்வாய்

வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)

எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!

-தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page1/88253.html#ixzz3Er5U8sPl

தமிழ் ஓவியா said...

மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார்.

அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார்.

அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு.

அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேம புஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்?

இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page1/88252.html#ixzz3Er5dDqm4

தமிழ் ஓவியா said...

தீண்டாமை நோய்!


பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி, மது மானி மாவட்டம் மகா சிவன் கோவிலுக்குள் சென்று வந்ததால், கோவில் தீட்டாகிவிட்டது - சன்னிதானம் தீட்டாகி விட்டது - கர்ப்பக்கிரகம் தீட்டாகி விட்டது என்று கூறி, கோவிலை இழுத்து மூடி கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து கழுவி, சிறப்பு யாகங்கள் செய்து சுத்தி கரித்த பிறகே கோவிலைப் பொதுமக்களுக்குத் திறந்து விட்டுள்ளனர்.

ஒரு முதலமைச்ச ருக்கே இந்த நிலை! அர்த்த முள்ள இந்து மதத்தின் அழுக்கு நிறைந்த அர்த்தம் இதுதான்!

தீண்டாமை அதிகாரப் பூர்வமாக கோவிலுக்குள் - அதன் கருவறைக்குள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக் கிறது என்பது இப்பொழுது புரிகிறதா? தந்தை பெரி யார் கோவில் கர்ப்பக்கிரகப் போராட்டத்தை அறிவித் ததன் அடிப்படை இப் பொழுது விளங்குகிறதா?

இதில் கைவைத்தால் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் இந்தத் தீண் டாமை இருள் பஞ்சாய்ப் பறந்துவிடுமே!

கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அதிகாரியாக (அய்.ஜி.) இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுச் சென்ற பிறகு, அவர் பயன்படுத்திய அறை, மேசை, நாற்காலி, அலுவலகக் கார் ஆகிய வற்றின்மீது பசுவின் சாணி யைக் கரைத்து ஊற்றி சுத்திகரித்தனர்.

இதனை இந்த அதி காரியே மனம் நொந்து சொன்ன சேதி தினமணி யில் வெளிவந்தது (8.4.2011).

நான் தலித் சமுதாயத் தைச் சேர்ந்தவன் ஆகை யால், இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டுள்ளனர். இது மனித உரிமைகளை யும் குடிமக்கள் சுதந்திரத் தையும் மீறுவதாகும். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக் கைகள் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி என்.திலகர் சம் பந்தப்பட்ட துறை ஆணை யருக்குத் தாக்கீது ஒன்றைப் பிறப்பித்தார். புகார் தொடர் பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட் டும் இவ்வாறு செய்யப்பட வில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்கு தலாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. அர சில் உயர்பதவி வகித்த வருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன வென்று சொல்லுவது? என்றும் அவர் கூறினார்.

பெரியாரியலை சமு தாயம் புரிந்து, பெரியாரி யலை உள்வாங்கச் செய் வது ஒன்றே முடிவான தீர்வு என்பதைக் கருத வேண்டும் - அடுத்து செயல் படுத்தவும் வேண்டும் - புரிகிறதா?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/88501.html#ixzz3EttAFLWO

தமிழ் ஓவியா said...

இதற்குத் தீர்வுதான் என்ன?


கோவிலுக்குள் சென்று வந்த பிகார் முதலமைச்சர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோவிலைத் தீட்டுக் கழித்துள் ளார்களாம். இந்த இழிவுகளுக்கு நிரந்தர தீர்வுதான் என்ன?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குச் செயல்வடிவத்தைக் கிடைக்கச் செய்வதுதானே! சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/88507.html#ixzz3EttVNtgg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?



நவராத்திரி - ஏழாம் நாளான இன்று 8 வயது சிறுமியை சாம்பவி அம்மனாகப் பாவித்து வழி பட்டால், புருசன் - பெண் ஜாதிக்குள் அன்யோன் யம் ஏற்படுமாம்.

அப்படியானால், குடும்ப நீதிமன்றத்தை இழுத்து மூடிவிடலாம் - அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/e-paper/88511.html#ixzz3Ettdb127

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


வித்தியாசம்!

செய்தி: நம் நாட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுதுதான் பேசும் பிரதமர் கிடைத்துள்ளார்.
- அமித்ஷா (பி.ஜே.பி. தலைவர்)

சிந்தனை: ஆமாம்; அவர் பேசாமல் கெடுத்தார் - இவர் பேசிக் கெடுக்கிறார். அவ்வளவுதானே வித்தி யாசம்!

Read more: http://viduthalai.in/e-paper/88509.html#ixzz3Etto1AUM

தமிழ் ஓவியா said...

சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியமாகும்.
_ (குடிஅரசு, 3.3.1929)

Read more: http://viduthalai.in/page-2/88512.html#ixzz3EtuXYIEn

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனை

அய்யா,

தங்களது வாழ்வியல் சிந்தனைகள் மூன்றாம்பாகம் படித்தேன். வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதை அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான நூல்.
மனித சமூகத்திற்கு எழுதப்பட்ட சிறப்பான நல்ல நூல். இந்த நூலைப் படித்து மனநிறைவு அடைந்தேன்.

இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் துலாக்கோல் போல சமநிலையுடன் மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்ச் சியாகவே மனிதன் வாழலாம் என்று முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது,

நான் சிறு வயதில் கஷ்டப்படும் காலத்தில் தமிழ்வாணனின் துணிவே துணை என்ற தலைப்பில் கற்கண்டு நூலைப் படிப்பேன். துன்பம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்த வன். அதுமட்டுமல்ல, ஏவிஎம் மெய் யப்பச் செட்டியார் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லைக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய சிறு முன்னேற்றத்தி லும் வாழ்வியல் சிந்தனையின் பெரும் பங்கு எனக்கு உண்டு என்பது தெளிவு. பார்த்தேன்; படித்தேன்; சிந்தித்தேன். படிக்கப் படிக்க தேன்போல் இனிமை யாகத் தித்தித்தது. பகுத்தறிவுப் பணிக்கு என் இனிய வாழ்த்துகள். நன்றி!

- ம.ச.நாராயணன்

Read more: http://viduthalai.in/page-2/88517.html#ixzz3EtvRClDI

தமிழ் ஓவியா said...

ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு


இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.

அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.

ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார். அய்யய்யோ... ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.

இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.

தமிழ் ஓவியா said...

இந்தியப் பெண்களின் நிலை


இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2012இல் 706 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013இல் 1,636ஆக உயர்ந்துள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க...


2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது.

இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வந்து சேருவார்கள்.

- சந்திரஹாசன், ஈழ அகதிகள் மறுவாழ்வு இயக்கம்.

தமிழ் ஓவியா said...

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங் கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே, 13ஆவது சட்டத் திருத்தத் தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகாரப் பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக, இந்தியாவிடமும் அய்.நா.சபையிடமும் இலங்கை அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.

- இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.

- கவிஞர் சல்மா

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய்துகொள்ளலாம் இண்டியானாவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு



அமெரிக்காவில் இண்டியானா பகுதியில் மனிதநேய அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு முன்பாக அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதவையாக இருந்துள்ளன.

அப்படி மாற்றமுடியாத சட்டத்தை சிகாகோவை மய்யமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஏழாம் சர்க்குயூட் நீதிமன்றம், மனித நேயர்களுக்கான திருமண உரிமையை கடவுள் நம்பாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, மறுப்பது என்பது அரசியலமைப்பு முதல் விதி கூறுகின்ற மத ரீதியிலான சுதந்திரம் குறித்த உரிமைகளை மறுப்பதாக ஆகிவிடும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டின் சட்டத்தின்படி இண்டியானாவில் திருமணங்கள் மதரீதியில் உடையணிந்தவர் (மதக்குரு) நடத்திட வேண்டும் அல்லது அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்று உள்ளது. மனுதாரரான மனிதநேயர் வாதிடும்போது, மனிதநேயர்களின் திருமண உரிமையை மறுப்பது என்பது தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும். மதரீதியில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்ததாக ஆகிவிடும் என்று கூறினார்.

மனிதநேயரான ரேபா போயிட் உட்டன் கூறும்போது, நீதிமன்றம் தேவையான உரிமையைப் பெற்றுள்ளது என்றார். மதச் சார்பற்ற மணமகன் என்று மனுதாரருக்குச் சான்றளிக்கும் அவர் மேலும் கூறும்போது, ஒருவர் நாத்திகராகவோ, கடவுளை நம்புவதில் அய்யம் உள்ளவராகவோ, மனிதநேயராகவோ அல்லது மதரீதியிலான திருமணத்தைச் செய்ய விரும்பாதவராகவோ இருந்தாலும் தற்போது, இதுபோன்ற அற்புதமான நேரங்களில் தங்களுடைய கவுரவத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் நடைபெறும் விழாக்களையும் மகிழ்வாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று உட்டன் கூறியுள்ளார்.

புளோரிடா, மெய்ன் மற்றும் தெற்குக் கரோலினா ஆகிய பகுதிகளில் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றபின், மனிதநேயர்களுக்கு அலுவல்ரீதியாக திருமணம் செய்வதற்கு அனுமதி உள்ளது. அதுபோன்றே இண்டியானாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோல் இரண்டு டசன் மக்கள் மனிதநேயர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மனிதநேயர்களுக்கான அமைப்பின் விசாரணை மய்யத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அதன் தலைவராக உள்ள ரொனால்ட் ஏ. லிண்ட்சே கூறும்போது, அனைத்து மதச் சார்பற்ற அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்க முடியாத அளவில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் வேகமாக நம்பிக்கையாளர்களாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பாரபட்சமாக நடத்தப்படுவதாலும், மதரீதியில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது என்று கூறினார்.

வடக்கு கரோலினாவிலும் திருமணச் சட்டங்கள் சவாலாகத்தான் உள்ளன. திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டப்படியான திருமண உரிமைச் சான்று (Legal Marriage Licence) பெற்றிருக்க வேண்டும் என்று யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் பாஸ்டர்கள் என்கிற மதக் குழுவினர் அரசு கேட்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வருகின்றனர். வடக்குக் கரோலினாவில் ஓரினத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணச் சடங்குகளை நிறைவேற்றக்கூடிய பாதிரிகள்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்தப் பாதிரிகளும், மற்றவர்களும் அவர்களின் நம்பிக்கைப்படி ஓரினத் திருமணங்களையும் நடத்திட வலியுறுத்தி வருகின்றனராம்.

நன்றி: வாஷிங்டன் போஸ்ட், 14.7.2014

தமிழ் ஓவியா said...

மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!


தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?
ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ்- _ கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித்துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர் விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!

இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையைத் திரை போட்டு மூடி, கதவைச் சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.

கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.

அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.

ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

-ஆர்.டி. மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

பெரியாராம் பேரண்டம்!


இருளை வெடிவைத்துப்
பிளந்த எரிமலை!
இன உணர்வை ஏற்றிய தீபம்!

ஆயிரங் காலத்து
அடிமைச் சேவகத்தை
அடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்!

ஆணவச் சிரிப்பின்
அடங்கா ஆரியத்தை
அக்னிச் சிரிப்பால்
அழித்திட்ட அரிமா!

பிறவிப் பேத
சமுத்திரக் காட்டை
அறிவுப் புனலால்
உறிஞ்சிய அகழி!

எங்கே எங்கே
ஏற்றத் தாழ்வென்று
முகவரி தேடி
மோதிய வேழம்!

மதமாம் யானையை
சம் ஹாரம் செய்து
மன்பதை காத்திட்ட
மானுட மீட்பர்!

அமைதித் தேன்குழல் தென்றல் காற்றை
வையத்து வாயினில்
ஊட்டிய செவிலி!

யாரிந்த மானுடர்?
ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த
பெரியாராம் பேரண்டம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...



தலைவர்கள் போற்றும் தலைவர்!


கொள்கைக் குன்றம்

இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.

- முத்தமிழறிஞர் கலைஞர்



ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

- அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)


நீதிமன்றின்...


நோபல் பரிசு

பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

- நீதிபதி பி.வேணுகோபால்


பதவியை விரும்பாத தலைவர்

அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.

- நீதிபதி ஏ.வரதராசன்



பெரியார் இல்லை என்று சொன்னால்...

பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.

- நீதிபதி எஸ்.மோகன்


ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
- நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்


தன் அறிவை முன்வைத்து...

கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!

- நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)

தமிழ் ஓவியா said...

விநாயகனின் மர்ம விளையாட்டுகள்


கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;

நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;

இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;

ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.

சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?

கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?

- வே.மதிமாறன்

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்வில்....


நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?

தமிழ் ஓவியா said...


பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.

நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

- இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)

தமிழ் ஓவியா said...

இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

- பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பு மட்டுமல்ல

1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி

பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.

கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில் தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.

இதழ்களின் பார்வையில்...

தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.

- தினத்தந்தி 31.12.2008

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

- தினகரன் 4.1.2009

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.

- தினமணி 5.1.2009

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- தீக்கதிர் 18.1.2009

பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!

- ஆனந்த விகடன் 14.1.2009

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.

- புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!


பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.