Search This Blog

29.9.14

பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல மாபெரும் புரட்சியின் வடிவம்

 

சென்னை பெரியார் திடலில் செப்டம்பர் 23 முதல் 26 வரை ஓர் அறிவு விருந்துக்கு ஏற்பாடு.

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் - அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்ட நாள்!

புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்ற விருது வழங்கப்பட்ட நாள்!

மத்திய அமைச்சர் திரிகுண சென் தலைமையில் தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் தமது ஆசானின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.


அதில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும் ஒப்பற்ற மாணிக்கப் பரல்! ஒளிவீசும் நன் முத்துச் சுடர்!

அந்த ஆபரணத்தின் ஒவ்வொரு வரியையும் முன்னிறுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளிக்கும் அறிவு விருந்தின் திரட்சிதான் இந்தத் தொடர்!
நேற்று முதல் நாள் நிகழ்ச்சி - எடுத்துக் கொண்ட தலைப்பு: புதிய உலகின் தொலை நோக்காளர்! (THE PROPHET OF THE NEW AGE).

தலைமை வகித்தவரோ - உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு எஸ்.மோகன் அவர்கள் இரத்தினப் பிழிவாக தலைமையுரையை வழங்கினார்.
எனது சட்டக் கல்லூரி மாணவர் வீரமணியின் சொற்பொழிவு - அதுவும் நம் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய சொற்பொழிவுக்கு தலைமை வகிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி என்றார் எடுத்த எடுப்பிலேயே.
புதிய உலகின் தொலைநோக்காளர் - இந்த உலகில் தந்தை பெரியாரன்றி வேறு எவர்? 1950அய் நினைத்துப் பார்க்கிறேன்; நம் இனத்தைச் சேர்ந்தவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக அலங்கரிக்க முடிந்ததா? இன்றைக்கு எத்தனை எத்தனைப் பேர்! இவ்வளவுக்கும் இந்த ஆசான் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா காரணம்!


அதனால்தான் நான் சென்னை உயர்நீதின்றத்தின் நீதிபதியாக பதவியேற்கும் முன் இந்தத் திடலுக்கு வந்து, அய்யா அவர்களின் நினைவிடத்தில் தலை வணங்கி என் நன்றியைத் தெரிவித்தேன் என்று மிகவும் நெகிழ்வாக எடுத்துரைத்தார்கள்.


நமது ஒப்பற்ற தலைவர் பெரியார் பற்றி நம் மக்களே இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை நீதிபதி. இன்னும் மண் சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் திருந்துவது எந்நாள்? என்ற அர்த்தம் செறிந்த வினாவை எழுப்பினார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி.
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவுப் படையல் ஆரம்பமானது.
முக்கால் நூற்றாண்டுக்கும் மேலான பொதுத் தொண்டுக்குச் சொந்தக்காரரின் வாழ்க்கை மகா சமுத்திரத்திலிருந்த அலைகளைக் கணக்கெடுத்துத் தோரணமாகத் தொங்க விடுவது அவ்வளவு எளிதா? மூச்சடக்கி முத்தெடுப்பது முடியக் கூடிய செயலா?


அதுவும் அவர் வகுத்துக் கொண்ட அந்த ஒரு மணி நேரத்தில் என்றால் எளிதானதன்று, ஆனாலும் பத்து வயது முதற்கொண்டே இந்த மகா சமுத்திரத்தில் மூழ்கி எழுந்தவர் ஆயிற்றே - பயிற்சி மிகப் பெற்றவராயிற்றே - அதன் காரணமாக அவை அணியாக அணி வகுத்து வந்தன தகவல் களஞ்சியங்களாக!


மற்ற நாட்டு அறிஞர்களுக்கெல்லாம் ஆய்வுக் கூடம், நூலகங்கள்; ஆனால் அறிவுலக ஆசான் அய்யாவின் ஆய்வுக் கூடம் தம்மைச் சுற்றியிருந்த மக்கள்தான்! சமூகம்தான்!!


பேதமற்ற சமுதாயம்தான் அவரின் பாடுபொருள் - அதனை அடைய அனைத்தையும் செய்த ஆசான் அய்யா!


அய்யாவின் தொலைநோக்கில் - சோதனைக் குழாய்க் குழந்தை - மின்சாரம் இல்லாத கார் - முகம் காட்டிப் பேசும் சாதனம் - தொப்பிக்குள் ரேடியோ - கர்ப்ப ஆட்சி வரை அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.


அது ஒரு புறம் இருக்கட்டும்!


1944இல் ஈரோட்டில் கிராம அலுவலர்கள் மத்தியில் அய்யா பேசியதுதான் கிராமச் சீர்திருத்தம் என்ற சிறிய நூல்.


கிராமம் - நகர பேதம் ஒழிக்கப்பட வேண்டும்! கிராமத்தான் உழைப்பில் உண்டு கொழுப்பதுதானே நகரத்தான் என்ற அதிர்வேட்டைக் கிளப்பியது அந்த அரிமா!
நகரம் என்றால் பிராமணன், கிராமம் என்றால் சூத்திரன் - எனும் வருணாசிரம வேறுபாடு வேரோடு களையப்படவேண்டாமா?


குடியரசுத் தலைவராக இருந்த விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார்கள்.


நகர்ப் புறங்களில் உள்ள வசதிகள் எல்லாம் கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பொருளாதார சிந்தனையை அவர் கொண்டிருந்தார்.
1944ஆம் ஆண்டிலேயே அத்தகைய கருத்துக் களை அறிவுலக ஆசான் கூறிய அந்த அதிசயத்தை கிராமச் சீர்திருத்தம் என்ற நூலின் வழியாக அறிந்து கொண்டபோது ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்றார்


65 கிராமங்களை ஒருங்கிணைத்து பெரியார் பெயரில் துலங்கும் பல்கலைக்கழகம் மேற்கொண்டி ருந்த ஆக்கப்பணிகளை வெகுவாக பாராட்டினார். உலகத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் இந்தச் செயலாக்கப் பணியை எடுத்துரைக்க இன்று வரை யிலும் அவர் தவறுவதில்லை - என்பதை ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார்!


பெரியார் ஆண் - பெண் வேற்றுமை ஏன் என்று கேட்டார். உடையிலும் கூட ஏன் வேறுபாடு என்று கேட்டார்,


இன்று அந்நிலை வந்துவிட்டதே! ஒரே மாதிரி உடை என்றால் தேவைப்படும் பொழுது ஒருவருக் கொருவர் மாற்றிக் கொள்ளவும் வசதி உண்டே!
பெண்ணுரிமை பற்றி பேசும்போது உங்கள் மனைவி மார்களை நினைத்துப் பேசாதீர்கள். உங்கள் அருமை மகளையும், அன்புச் சகோதரியையும் மனதிற் கொண்டு பேசுங்கள் என்ற தந்தை பெரியார் அவர்களின் மனித நேயம் மணக்கும் பெண்ணுரிமையின் பெற்றியை நினைப்பீர்!


தொழிலாளர் குறித்த சிந்தனைதான் சாதாரண மானதா? முதலாளி, தொழிலாளி பெயர்கள் ஏன்? தொழிலாளியைப் பங்காளி என்று சொன்னவர் யார் - பெரியாரைத் தவிர?


காந்தியாரின் படுகொலையைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன்! உங்களைப் பார்ப்பான் விட்டு வைக்க மாட்டான் என்று முகத்துக்கு முகம் காந்தியாரிடமே நேரில் 1927ஆம் ஆண்டிலேயே சொன்னவராயிற்றே தந்தை பெரியார். இந்து மதத்தில் கைவைத்து மாற்றிவிடலாம் என்று நினைத்த எவரையும் பார்ப்பான் விட்டு வைத்ததில் லையே! கோட்சே உருவத்தில் பார்ப்பான் காந்தியா ரைத் தீர்த்துக் கட்டியது தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு அல்லவா?


இந்தியைத் திணித்த ராஜாஜியை எதிர்த்தார் தந்தை பெரியார்; அதே ராஜாஜி தந்தை பெரியார் வழிக்குப் பின்னர் வரவில்லையா?


“HINDI NEVER ENGLISH EVER” ஸி என்று ராஜாஜி சொல்லும் அளவுக்குப் பெரியாருடைய வழிக்கு வந்தாரா இல்லையா?


பெரியார் - மணியம்மை திருமணம் என்பது கவர்னர் ஜெனரல் ராஜாஜி கருத்தைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டார் பெரியார் என்று குற்றம் சுமத்தப்படவில்லையா? அதைக் காரணம் காட்டி திராவிடர் கழகத்தில் கூடப் பிளவு ஏற்படவில்லையா?


ஆனால் உண்மை நிலை என்ன? ராஜாஜி பெரியார் மணியம்மை திருமண ஏற்பாட்டுக்கு ஆதரவாக கருத் தைக் கூறிடவில்லை. அவர் கருத்தை ஏற்காமல்தான் திருமணம் என்ற ஏற்பாட்டைச் செய்தார்; அதிலும் அய்யா வெற்றி பெற்றாரே!


அன்னை மணியம்மையார் இயக்கத்துக்குத் தலைமையேற்று அய்யாவுக்குப்பின், கழகத்தை வெற்றிகரமாக தலை நிமிரச் செய்து வழி நடத்தவில்லையா?


கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கடிதத்தை பெரியார் ஏன் அப்பொழுது வெளியிடவில்லை?


கவர்னர் ஜெனரலாக இருந்த ஒருவர் தனக்குப் பர்சனல் என்று குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையில் அதனை வெளியிடுவது பண்பாடு அல்ல என்ற உயர்ந்த நெறியைப் பின் பற்றிய ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் பண்பின் பெட்டகம்தான் கடவுள் மறுப்பாளரான - நாத்திக நெறியாளரான தந்தை பெரியார்! இதுபோல இன்னும் எத்தனை எத்தனை சிந்தனை முத்துக்களை வாரி இறைத்தார் - தகவல் சுரங்கத்தைத் திறந்து காட்டினார் தமிழர் தலைவர்.



முதல் நாள் அறிவு விருந்தை அனுபவிக்காமல் கோட்டை விட்டவர்கள் - இன்று முதல் மூன்று நாட்கள் தொடரும் சொற்பொழிவைத் தவற விடுவது நல்லதல்ல என்பதே நமது கனிவான வேண்டுகோள்.
அறிவுத்தாகம் கொண்டவர்கள் எல்லாம் சிறகடித்துப் பறந்து வரட்டும்.!


குறிப்பு: தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார். மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் வரவேற்புரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார் தமிழர் தலைவர்.

                    ----------------- மின்சாரம்  24-09-2014
Read more: http://viduthalai.in/page1/88163.html#ixzz3EbbCqwPT
              *********************************************************************************

இளைஞர் சிங்கங்களே! மாணவத் தங்கங்களே!

நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள் - சென்னைப் பெரியார் திடலிலே அறிவு வெள்ளம் கரை புரண்டு ஓடும் பொழுது நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கலாமா?


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், அறிவுலக ஆசான் அவர்கள் பெரியார் அவர்களின் அறிவுச் சுரங்கத்திலிருந்து கருத்து மணிகளை எடுத்து கருத்தோவியத்தைத் தீட்டிக் கொண்டிருக்கும் கவினுறுக் காட்சிகளைக் காணாமல் காலத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?


அய்.நா. விருதில் குறிப்பிடப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்துரை மேடைக்கு தலைமை வகித்த வர் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் பெ.செகதீசன் தலைமையுரை என்ற பெயரில் மிகவும் ஆழமான சமூகவியல் சிந்தனை ஆரத்தைத் தொடுத்துத் தந்தார்.


இந்திய சடங்குகள் அனைத்தையும் ஒட்டு மொத்த மாக ஒழித்துக் கட்டினால் இந்திய மக்களிடையே மகத்தான மனமாற்றம் மலர்ச்சி அடையும். அதன் மூலம் வருணாசிரம அமைப்பு முறையும் முற்றாக மாண்டொழியும்; வருணாசிரமம் வாழ்விழந்தால் இந்து மதமும் இறந்து இடுகாடு போய்ச் சேரும் என்று ஒரு லாஜிக்கான கருத்துகளை எடைபோட்டு எடுத்து வைத்தார்.

 

நூறு ரூபாய் கட்டணம் கொடுத்து மக்கள் செவி விருந்து அருந்த வந்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்லாம் யார் சார் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்று மேல் தட்டு மொழி பேசும் மேதாவிகள் உண்டு.

வரமாட்டார்களா? யார் சொன்னது? நூறு ரூபாய் கட்டணம் கொடுத்துக் கேட்க வருவார்கள் என்பதைப் பெரியார் திடல் மெய்ப்பித்துக் காட்டிவிட்டதே!
பேசுகின்றவர்கள் யார்? பேசப்படும் பொருள் என்ன? என்பதுதான் முக்கியம். கட்டணம் வைத்து எத்தனை எத்தனை சிறப்புக் கூட்டங்களை நடத்தி ஏற்றம் பெற்றது - இந்தத் திராவிடர் இயக்கம்! இளைஞர்கள் எல்லாம் இத்தகு உரை வீச்சுகள் மூலம் இன உணர்வு பெற்றிட வில்லையா? இலட்சியக் சூடேறி களமாட வில்லையா?


மீண்டும் அதனைத் தொடங்கியுள்ளது திராவிடர் கழகம் - பெரியார் திடல் புது அத்தியாயத்தைத் மீண்டும் புதுப்பித்துள்ளது. தென் இந்திய சாக்ரட்டீசையும், ஈரோட்டு ஏந்தல்  தந்தை பெரியார் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டினார், தம் ஒரு மணி நேர உரையில் தமிழர் தலைவர்.


சாக்ரட்டீசு என்றும், இங்கர்சால் என்றும், ராசூல் என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி, அந்த உச்சரிப்பில் கூட புரட்சி மகரந்தத்தையும் பூட்டிய உன்னதமான புரட்சித் தலைவர் அல்லவா தந்தை பெரியார். இந்த இரு சாக்ரட்டீசுகளும் இளைஞர்களை நோக்கி ஈட்டி முனை இலட்சியக் கருத்துகளை வாரி இறைத்தனர்.


இந்த இரு பெரும் சிந்தனையாளர்களும் எதிர் நீச்சல் போட்டார்கள். யார் எவர் சொன்னாலும் ஏற்காதே! உன்னறிவால் எடை போட்டுப் பார்! என்ற  உன்னத அறிவுச் சாணையைத் தீட்டிக் கொடுத்தனர்.


ஒரு மனிதன் யாரை மதிக்க வேண்டும்? எதை மதிக்கக் கூடாது, ஒரு மனிதர் எதில் உயர்ந்தவர்? என்பதைத் தந்தை பெரியார் மொழியில் எடுத்துக் காட்டினார் கழகத் தலைவர்.


அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? இவர்களை யெல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப் பட்ட நலமும், பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள் - மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை, யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல் காரன், அன்னதான பிரபு ஆவானா?

சம்பள உபாத்தியாயர், குருநாதனா வானா? தாசி, காதலியாவாளா? என்பது போல், தான் தன் நலத்துக்கு, தன் தன் பொறுப்புக்காக காரியம் செய்யும், எவனுடைய காரியம் எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே யொழிய போற்றக் கூடியதாகாது.

 


அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்வியல் கொண்ட மனிதர்கள் ஏதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், பிறருக்கென்று தன்னாலான ஒப்பற்றத் தொண்டாற்று கிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வர்கள், தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் - மதிக்கா மல் இருக்கலாம், அவமதிக்கலாம், அது பொதுவாய் மதிக்காததாகாது.
1945இல் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து நறுக்கு மணியாக எடுத்துக் காட்டினார்.

தந்தை பெரியார் அவர்களுக்கும், சாக்ரட்டீசுக்கும் இடையே நிலவும் ஒற்றுமையும் உண்டு, வேறுபாடும் உண்டு. சாக்ரட்டீசு கடவுள் நம்பிக்கையாளர் - தந்தை பெரியார் அவர்களோ கடவுள் மறுப்பாளர் - முழு நாத்தகர்!


ஜனநாயகத்தை இருவருமே எள்ளி நகையாடினர்.
தங்கள் இலட்சியத்துக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள்தாம் இருவரும்.


சாக்ரட்டீஸ் உயிர் வாழ நினைத்திருந்தால், உயிர் தானே பெரிது என்ற சபலத்திற்கு ஆட்பட்டு இருந்தால், தன் கருத்தைக் கொஞ்சம் மழுப்பலாக முனைமழுக்கிச் சொல்லியிருக்கலாம்.


ஆனால் கொள்கைதான் பெரிது என்று உறுதியாக எண்ணியதால் கொடிய நஞ்சை (HEMLOCK) அருந்த நேரிட்ட அந்தத் தருணத்திலும் கூட கை நடுக்கமின்றி, நஞ்சை அருந்தக் கொடுத்த அரசாங்க ஆள்மீது ஆத்திரம் கொள்ளாமல், அருமையான - பண்பு மிளிர்ந்த சொற்களைக் கூறி, உயிர் கொல்லும் அந்த நஞ்சினை அருந்தினார்.


தந்தை பெரியார் அவர்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. எத்தனையோ எதிர்ப்புப் புயல்கள் தோள் தட்டி வந்தன. செருப்புத் தோரணங்களைத் தொங்கவிட்டு அவமானப் படுத்தினர் - கூட்டத்தில் பாம்புகளை விட்டனர் - கழுதை களை விட்டனர். உயிருக்குக் குறி வைத்த கொடுமையான சம்பவங்கள் உண்டு. ஆனாலும் எதிரிகள்தான் தோற்றோடி னர் - இறுதியில்.


சிரிப்பவன் யார் என்பது தானே முக்கியம் - ஆம் அதிலே நம் அறிவுலக ஆசான்தான் வெற்றிப் புன்னகை புரிந்தார். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் - அந்தப் பேராசிரியரின் வகுப்புகள் மாலை நேரத்தில் தொடங்கும் என்றார் அண்ணா அவர்கள்.


இராமலிங்கர் போல கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிக்கொண்டேன்  என்று துவண்டு போனவர் அல்லர் - தொண்டுப் பழமான தலைவர் பெரியார்.
தான் விதைத்த விதைகள் கனியாகப் பலன் கொடுத்ததைப் பார்த்து மகிழ்ந்த ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் நம் அய்யா என்று நெஞ்சு நிமிர்த்தி சொன்னார்.

நீதிமன்றங்கள் முன் இரு பெரும் தலைவர்களும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது முத்தாய்ப்பாக இருந்தது.


நீதிமன்ற விசாரணையை ஒரு நாடகம் என்று சொன்னார் சாக்ரட்டீசு என்றால், அதே வார்த்தையை அட்சரம் பிறழாமல் சொன்னவரும் நம் அய்யாவே!
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வெண்தாடிச் சிங்கம் எப்படி கர்ச்சித்தது? இதோ...
(நீதிபதியைப் பார்த்து) தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள்; இவர்களுடன் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக் கிறார்கள்.
தங்களால் காங்கிரஸ் மந்திரிகள் இஷ்டத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரியட்டும் என்றும், நான் சட்டத்தை மீறினேன் என்றும் மற்றவர்கள் கருதி, அதை செய்ய துணிந்துவிடக் கூடாது என்பதற்கும், இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எந்த முயற்சியும் செய்கையும் இன்று வரை யிலும் கூட சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவேயாகும்.


ஆகவே, கோர்ட் டார் அவர்கள், தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவைகளையும் பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி விளக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்றார்.


தந்தை பெரியார் வாக்குமூலமாகக் கொடுத் ததை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டிய போது, மன்றமே ஆழமான உணர்வின் மடியிலே விழுந்து கிடந்தது என்றே சொல்ல வேண்டும்.


இலட்சியத்தை இன்னுயிருக்கும் மேலாக மதிக்கத் தக்கவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ப தற்கான சுவரெழுத்தாக தந்தை பெரியார் அவர்களின் வாக்குமூலம் கால வெள்ளத்தையும் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கடந்தது. கலங்கரை விளக் கமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் அன்றோ!


இன்னும் ஆசிரியர் எடுத்துக் சொன்னவை ஏராளம் உண்டு. எடுத்துரைக்க ஏடு கொள்ளாது.


இன்றும், நாளையும் நேரில் வந்து கிடைத்தற்கரிய அறிவுச் செல்வத்தைத் திரட்டிச் செல்லுமாறு அன் போடு அழைக்கிறோம் - வாரீர்!


குறிப்பு: தொடக்கத்தில் பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்தியநாராயணன் வரவேற்புரை ஆற்றினார். பார்வையாளர்கள் கேள்விகளுக்கு கழகத் தலைவர் விடையளித்தார்.
                    ----------------- - மின்சாரம் --25-09-2014
Read more: http://viduthalai.in/page1/88186.html#ixzz3EbbNXjxG
***************************************************************************************
தந்தை  பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல
மாபெரும் புரட்சியின் வடிவமே அவர்!
  • பெரியார் கொள்கையை மறந்தால் இந்துத்துவா தலைதூக்கும் - எச்சரிக்கை!
  • தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆய்வுரை
- நமது சிறப்புச் செய்தியாளர் -
சென்னை, செப்.26- தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல - மாபெரும் புரட்சியின் எல்லை - வடிவம் அவர். அந்தக் கொள்கையை மறந்தால் மீண்டும் இந்துத்துவா தலைதூக்கும் எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


அய்.நா. மன்றத்தின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் (27.6.1970) காணப்பட்ட வரிகளுள் ஒன்று சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை (Father of the Social Reform Movement) என்பதாகும். இந்தத் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (25.9.2014) மாலை சென்னையில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நூறு நிமிடங்கள் பேசினார். அதில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:


தந்தை பெரியார் அவர்களுக்கு முன்புகூட சீர் திருத்தவாதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களோடு அவை நின்று விடும். தமது கருத்துக்கள், தத்துவங்கள் பரவிட இயக்கம் கண்டவர், தனக்குப் பிறகும்கூட அப்பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காக இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே!


அப்படி அவர்கள் ஒர் இயக்கத்தைக் கண்டதால்தான். அவர்களின் மறைவிற்குப் பிறகு இங்கே பேசிக் கொண்டு இருக்கிறோம்.
இயக்கம் கண்டதால் தான் இந்த மன்றம்; இயக்கம் கண்டதால்தான் விடுதலை ஏடு; இயக்கம் கண்டதால்தான் வெளியீடுகள், பிரச்சாரங்கள்;  பெரியார் கல்வி நிறுவ னங்கள், பல்கலைக் கழகம் வரை வளர்ந்ததற்குக் காரணம் பெரியார் உருவாக்கிய இயக்கமே!


அதனால்தான் யுனஸ்கோ தந்தை பெரியார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று ஆழமாகக் குறிப்பிட்டுள்ளது என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சீர்திருத்தம் என்ற நிலையையும் தாண்டிய மகத்தான புரட்சிக்காரர் என்பதை விளக்கினார்.


ஏதோ பொதுவாகக் கூறியதாகக் கருத முடியாது 1928இல் (நவம்பர் 26) சென்னையில் நடைபெற்ற சீர்திருத்தக் காரர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்து உரை யாற்றுகையில் தந்தை பெரியார் கூறியதை எடுத்துக் காட்டினார்.


வர வர எனக்கு சமூக சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே போகின்றது. பெரும் பான்மை மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர் களுக்கு எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலையல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம். மற்றென்ன வெனில் உறுதியும், தைரியும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறிய பொறுமை கொண்ட யோசனை யின்மீதே இந்த முடிவுக்கு வருகிறேன் என்று தந்தை பெரியார் சொன்ன, பீடிகையோடு ஆசிரியர் அவர்கள் இந்த ஆய்வுரையைத் தொடங்கினார்.
அழிவு வேலை என்று சொல்லுகிறபோது - அது ஆக்கத்திற்கான அடிப்படைப் பணியாகும்; புதர்களை அழித்தால்தானே பூங்காவை உருவாக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களின் அழிவு வேலை என்பது இந்த வகையைச் சேர்ந்தது என்று அருமையாக அதற்கு விளக்கமும் அளித்தார்.
தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று பொதுவாக சொல்லுவார்கள்; அந்தத் தீண்டாமையின் மூலம் எது? ஜாதிதானே - அந்த ஜாதிக்குப் பாதுகாப்பாக இருப்பது எது?


கடவுளும், மதமும் தானே இவற்றுக்குப் பாதுகாப்பு அரணாக உள்ளன! இந்தக் கடவுளும், மதமும் எப்படி உயிர் வாழ்கின்றன? இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேட்போம்.


மதம், கடவுள் என்பவை மனிதனின் மூட பக்தியும், குருட்டு நம்பிக்கையும் என்கின்ற அஸ்திவாரத்தின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஏனெனில் குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளிடத்தில் பொறுப்பை வைத்து பெரிதும் மூடப் பக்தியால் ஏற்பட்ட மதவிதியை - கொள்கைகளை வகுத்து வாழ்க்கையை நடத்துகிறோம். இம்மூடப் பக்தியையும், குருட்டு நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது சீர்திருத்த வேலையின் பாற்பட்டதாகுமா? அது ஆகவே ஆகாது. மற்றபடி மனித சமூகத்தின் நன்மைக்காக அழிக்கப்பட வேண்டிய ஒரு பெரிய அழிவு வேலையின் பாற்பட்டதாகும். ஏனெனில் அடியோடு அழித்து தரைமட்டமாக்கி புதுப்பிக்க வேண்டியிருக்கும். வேலை சீர்திருத்த வேலையாகாது. வேண்டுமானால் புனருத்தாரண வேலை (Reconstruction) என்று சொல்லலாம். அதாவது முதலில் அழித்து பின்னால் புதிதாய் நிர்மாணிப்பது என்பதாகும். இவ்வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான மன உறுதியும், சந்தேகமற்ற தெளிவும் இருக்க வேண்டும்! என்று தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமை உரையில் தந்தை பெரியார் கூறிய தன்னிலை விளக்கத்தை தமிழர் தலைவர் மிகவும் சரியாக - பொருத்தமாக எடுத்துக்காட்டினார்.


சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லுவதைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நான்கு வருண ஜாதியை நானே உண்டாக்கினேன் என்று கூறும் கிருஷ்ணன் என்னால் உண்டாக்கப்பட்ட இந்த நால் வருணத்தை படைத்தவனாகிய நானே நினைத்தாலும் மாற்றியமைக்க முடியாது என்று கூறுகிறார் என்றால் இந்தப் பிறவிப் பேதத்தை எப்படி கட்டிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.


இந்த ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலமாக இருக்கக் கூடிய கீதையையும், அதைப் படைத்ததாகக் கூறும் கடவுள் கிருஷ்ணனையும், இதை வலியுறுத்தும் மதத்தின் மீதும் கை வைக்காமல் ஆகக் கூடிய காரியமா? தந்தை பெரியார் அவர்கள் கூறும் இந்த அறிவு ரீதியான நேர்மையான நியாயத்தை யார்தான் குற்றம் கூற முடியும்? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.


வருணாசிரம தர்மம் என்று கூறுகிறபோது, பிராமண, சத்திரிய, வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவின்கீழ் அவர்ணஸ்தர் (Out caste)  என்று ஆக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்; இந்த அய்ந்துக்கும் கீழே தள்ளப் பட்டவர்கள் உண்டு என்றால் அவர்கள்தான் நம் நாட்டுப் பெண்கள்! பெண்கள் என்று சொல்லும் பொழுது எல்லா வருணங்களையும் சேர்ந்த பெண்களும் இதில் அடங்குவார்கள். தந்தை பெரியார் அவர்களின் தொண்டு என்று சொல்லும்பொழுது ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் மிக முக்கியமானதாகும்.


இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்.


பொது மக்களில் பெண்கள் தீண்டாதார்கள் என்பவர்களைவிட மிக மோசமாக அழுத்தப்பட்டிருக் கிறார்கள். புலிக்கு - ஆடு  கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ள உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக் கருதி நடத்தப்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் நீதி ஏற்படுத்தியிருப்பாரேயானால், முதலிலே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேணடும் - என்று தந்தை பெரியார் எடுத்துரைத்த கருத்தில் ஒரு சொல்லைக் குற்றம் சொல்ல முடியுமா?


பெண்ணடிமை ஒழிப்புத் தளத்தில் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டால் எத்தகைய மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன! பார்ப்பனப் பெண்கள்கூடப் பலன் பெற்று இருக்கின்றனர். பார்ப்பனக் குலத்தில் ஒரு பெண் விதவையானால் மொட்டையடித்து வெள்ளைப் புடவை யைக் கொடுத்து, மொட்டைப் பாப்பாத்தி  என்று முத்திரை குத்தி, மூலையில் உட்கார வைத்திருந்தார்களே - இப்பொழுது அந்த நிலை உண்டா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழாக்களை நடத்தியவர்கள் அல்லவா நாம்?


பெண்களுக்குச் சொத்துரிமை தேவை என்று 1929 செங்கற்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.


தந்தை பெரியாரின் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியிலே பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்ததோடு, திமுக இடம் பெற்ற மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றபபட்டதே!


இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தானே சட்ட அமைச்சராக இருந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்து வெளியேறினார்.
பதவி பெரிதல்ல -  கொள்கை பெரிது என்று நினைத்த வராயிற்றே! அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் தானே முக்கிய முட்டுக்கட்டைகளைப் போட்டவர்கள்! பிரதமர் நேரு அவர்களுக்கு நல்லெண்ணம் இருந்தும் சனாதனிகளின் ஆதிக்கத்துக்குத் தானே கட்டுப்பட வேண்டியவர் ஆனார். அன்று நிறைவேற்றப்பட முடியாமல் போனது -இப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை கிடைத்ததை விளக்கினார் கழகத் தலைவர்.


தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனீயத்தையும் பெண்ணடிமை யையும், மூடச் சடங்குகளையும் உடைத்தெறிந்த மகத்தான புரட்சியாகும்.


அக்னியைச் சுற்றி சப்தபதி எடுத்து வைக்காமல், (ஏழு அடிகள்) சடங்குகளைச் செய்யாமல் நடத்தப்படும் திரு மணங்கள் செல்லாது என்று இதே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 1955இல். அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். கர்ணன் 58 ஆண்டுகளுக்குப்பின் 2013இல் என்ன தீர்ப்பு வழங்கினார்? சடங்குக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. திருமணத்திற்குரிய வயதும், மனமும் ஒத்துப் போனால் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறினாரே!


சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டு விட்டதே! இங்கு மட்டுமல்ல - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டதே! மலேசியாவில் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கும் அதிகாரிகளாக அந்த அரசே திராவிடர் கழக நிருவாகிகளுக்கு அளித்துள்ளதே!
தம் வாழ் நாளிலேயே தாம் கூறியவை வெற்றிக் கனிகளாகக் குலுங்கியதைப் பார்த்துக் களித்தவர் தந்தை பெரியார் அன்றோ என்று அடுக்கடுக்காக கூறிக் கொண்டே போனார் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள்!


சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் பிராமணன் - சூத்திரன் என்ற பேதம் இருக்கிறதே - பிறப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறதே!


மனிதனுக்கு இல்லாத சுதந்தரம், சமத்துவம் மண்ணுக்கு இருந்து என்ன பயன் என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை எங்கே? எங்கே?
ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் எப்படி இருக்க முடியும்? எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் தமது அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, ஜாதிக்கு மூல வேர்களாக இருக்கக் கூடிய கடவுள், மதம்! வேதம், சாஸ்திரம் புராணங்கள் மீது கை வைத்து அவைகளை நிர்மூலமாக்க வேண்டும் என்று ஓயாது உழைத்தார்.


சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர்மிர்தால் என்ற அறிஞரால் எழுதப்பட்ட நூல். ஆசியன் டிராமா என்பதாகும்.

அந்நூலில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டார்: Caste is deeply entrenched in Indian tradition and it could be removed  only by drastic Surgery.


இந்திய சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜாதி! அதனைக் கடுமையான அறுவைச் சிகிச்சையால் தான் ஒழிக்க முடியும் என்று கூறவில்லையா?


இந்தக் கருத்தினைத் தானே இந்த நாட்டில் முக்கால் நூற்றாண்டுக்குமேல் கூறி வந்தார் - தந்தை பெரியார்


இந்தக் கருத்தினை நூலாக வெளியிட்ட குன்னர்மிர் தாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்றாலும், தத்துவப்படி தந்தை பெரியார் அவர்களுக்குக் கிடைத்த நோபல் பரிசாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது பலத்த கரஒலி!

பிரபல எழுத்தாளரான இராமச்சந்திர குகா  Makers of The Modern India    என்ற நூலை எழுதியுள்ளார்.

19 பேர்களைக் குறிப்பிட்டுள்ள அவர் தென்னிந்தியா விலேயே தந்தை பெரியாரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார்.


அதற்கு அவர் விளக்கம் சொல்லும் பொழுது அவர் மட்டுமே சுயசிந்தனையாளராகவும், தலை சிறந்த நிருவாகியாகவும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டவ ராகவும் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆயிரம் ஆண்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள் என்ற ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டு இருக்கிறது.


அதில் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத் கரையும் குறிப்பிட்டுள்ளனர்.
வேதங்களில் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் சலுகைகள் அளிக்கப் பெற்றுள்ளன; எது நாள் வரை அந்தச் சலுகைகளுக்கு அறைகூவல் விடப்படவில்லையோ, அதுவரை மட்டுமே அவை புனிதமானவை. அந்த அறைகூவல் தமிழ்த் தேசத்தில் புயலென எழுந்தது. தெய்வச் சிலைகளை உடைத்த ஒருவர் அதைத் தொடங்கினார். அவர் வேதங்களை மட்டுமின்றிக் கடவுளர்களைப் பற்றியும் கேள்விகள் எழுப்பினார். சில பிரச்சினைகளில் தீவிரமாகத் தோன்றும் நிலைகளை எடுத்தார். ஆனால் அவர் செய்த சமூகப் புரட்சியின் அடிப்படையான இயல்பை, அந்தப் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடத் தெளிவாகக் கண்டனர். தமிழ்நாட்டில் அரசியல் கட்சியும், அத்துடன் இந்தியாவின் பெருமளவு அரசியல் காட்சியும், இறுதி வடிவைப் பெற்றுவிட்டதாகத் தோன்றும் வகையில் இராமசாமி நாயக்கரால் (1879-1973) மாற்றப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் தமிழர் தலைவர் எடுத்துக் காட்டினார்.


தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தவாதியல்ல - புரட்சியின் வடிவமே அவர்தான் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் மக்கள் மத்தியிலே அமைதியான முறையில் பெரும் புரட்சி செய்த மாபெரும் சமூகச் சிற்பி தந்தை பெரியார்.
இந்த மாறுதல்களை மாற்றிக் காட்ட வேண்டும்; மீண்டும் மனு தர்மக் கொடி பறக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். மக்கள் ஏமாந்தால் மீண்டும் இந்துத்துவா வரும் - அதன் விளைவு பார்ப்பன ஆதிக்கத்துக்குத்தான் வழிகோலும். எனவே சமுதாய சமத்துவத்துக்கும், சம வாய்ப்புக்கும் தந்தை  பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்று எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


குறிப்பு; கூட்டத்தின் இறுதியில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதில் அளித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் செல்வேந்திரன் வரவேற்புரையாற்றிட  திராவிட இயக்கத் தமிழர்பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமை உரையாற்றினார். (ஆசிரியரின் நான்கு நாள் முழு உரைகளும் பின்னர் வெளிவரும்).


சுபவீ. தலைமை உரையிலிருந்து...

பணம் கொடுத்து கூட்டம் கேட்கும் - அதுவும் ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் மக்கள் இங்கே கூடியிருப்பது மகிழ்ச்சியினைத் தருகிறது.
அய்.நா.மன்றம் அளித்த விருதின் வாசகங்களை முன்வைத்து ஒரு வரி தலைப்பில் ஒரு நாள் பேசுவது என்பது சாதாரமானதல்ல; ஆசிரியர் அவர்களால் தான் அது முடியும்.


19 ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதுண்டு. பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் என்பவை சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் வேதங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ்நாட்டில், வடலூர் இராமலிங்க அடிகள் தோன்றினார். தொடக்கத்தில் நடராஜர் கடவுள் மீதெல்லாம் பாடி முடித்தாலும் கடைசியில் வேதம், ஆகமம், புராணம் குப்பைகளையெல்லாம் சாட ஆரம்பித்தார். பிள்ளை விளையாட்டு என்று விமர்சித்தார். அப்படிச் சொன்ன ஆறு மாதத்திற்குள் அவர் ஜோதி யாக்கப்பட்டார்.


அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மார்க்கம் சென்றார். காந்தியார் அதை மறு பரிசீலனை செய்யுமாறு வற்புறுத்தினார்.
அப்போது காந்தியாரிடம் அம்பேத்கர் ஒரு நிபந்த னையை வைத்தார். சங்கர மடத்தில் ஒரே ஒரு ஆண்டு ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்க ராச்சாரியார் ஆக்க வேண்டும். அந்த ஓராண்டுக்குள் நான்கு பார்ப்பனர்கள் அந்த சங்கராச்சரியாரைக் கண்டு வணங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும், அப்படி செய்தால் நான் இந்து மதத்தைத் துறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய தயார் என்றார். காந்தியார் மவுனம் ஆனார்.


நாட்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை நாளும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. சீனாவில் அத்தகையவர்கள் 26 சதவீதமாக உள்ளனர்.
- சிறப்பு கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா. சுப.வீரபாண்டியன் ஆற்றிய தலைமை உரையின் ஒரு பகுதி.

                                    --------------- - மின்சாரம் - 26-09-2014
***************************************************************************************
தந்தை பெரியாரின் ஏற்புரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்பு மிளிரும் பேருரை!

அய்.நா. மன்றத்தின் கிளை அமைப்பான யுனெஸ்கோ தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் அடங்கிய வாசகத்தின் கடைசிப் பகுதி - அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி  என்று தந்தை பெரியார் அவர்கள்பற்றி அந்த விருதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


நான்காம் நாளான நேற்று (26.9.2014) இந்தப் பகுதியைத் தலைப்பாக எடுத்துக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 75 மணித் துளிகள் உரையாற்றினார்.


அந்த விருது அளிப்பு விழாவில் தந்தை பெரியார் ஏற்புரையில் கூறிய கருத்தை எடுத்துச்சொல்லி, தன் நிறைவுரையைத் தொடங்கினார் தமிழர் தலைவர்.
இதோ தந்தை பெரியார் அவர்களின் ஏற்புரை:


யுனெஸ்கோ பாராட்டும் - பெரியார்  ஏற்புரையும்!


எனக்களிக்கப்பட்டுள்ள பாராட்டுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறது என்று நான் கருதவில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்.  ஆனால் அவற்றில் ஒன்றை மட்டும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிர தாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றிற்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.


போதுமான அளவுக்கு நான் எதிரியோ, இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் இவை களை எதிர்ப்பது இலேசான காரியமல்ல. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் பக்குவப் படாமலிருந்த போதும், மனிதத் தன்மையற்றிருந்த போதும், ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்புகளை எதிர்ப்பது என்பது மிக்க சாதாரண காரிய மென்றாலும் அவைகளை பாதுகாப்பதற்காக பத்தாயிரக்கணக்கான கோயில்கள், இலட்சக் கணக்கான கடவுள்கள், இதை பரப்புவதற்கு பல பத்து இலட்சக்கணக்கான பேர்கள் இருக் கிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் எதிர்ப் பவர்கள் நாம் மட்டும் தான் இருக்கின்றோம்.என்று ஏற்புரை ஆற்றினார் தந்தை பெரியார். இன்றைய தலைப்புக்கு இது மிகவும் பொருத்த மானதாகும்.


எதிர்ப்பவர்களைப்பற்றி சொன்ன தந்தை பெரியார் அவர்கள், யார் யாரை எல்லாம் எதிர்க்க வேண்டியிருந்தது என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
இதோ அந்தப் பட்டியல்:


பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடி அரசுவினாலும் நான் செய்துவந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் எனபவற்றைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். கோயில் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சாமி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். வேதம் என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன்.


சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என் பதைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். நிருவாக ஸ்தலங் கள் என்பவைகளைக் கண்டித்திருக்கின்றேன்.

ஆடியோ கேசட் (ஒலிக் குறுந்தகடு) வெளியீடு
பகுத்தறிவும், மூட நம்பிக் கையும் என்ற தலைப்பில் பிரச்சார நோக்கத்திற்காக என்றே சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட  பகுத்தறிவும் மூட நம் பிக்கையும்! என்ற தலைப்பில் தமிழர் தலைவர் உரை அடங் கிய ஒலிக் குறுந்தகட்டினை (நன்கொடை ரூ.50) நேற்று (26.9.2014) மாலை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் புலவர் மா.நன்னன் அவர்கள் வெளி யிட, பேராயர் எஸ்றா சற்குணம், உரத்தநாடு காந்தி, வீ.குமரேசன், மயிலை நா.கிருஷ்ணன், சிங் கார. இரத்தினசபாபதி உள்பட ஏராளமான தோழர்கள் மேடை யில் பெற்றுக்கொண்டனர்.


ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக் கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின் றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராச்சியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சிறீ மான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராசுலு நாயுடு, இராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வற்றையோ - யார் யாரையோ கண்டித்திருக்கின் றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.


எதைக் கண்டித்திருக்கின்றேன்;  எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலா மென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் - வையவும் - துக்கப்படவுமான நிலைமை ஏற்படு கின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது.
என்று பட்டியலிட்டுள்ளார் தந்தை பெரியார். அவற்றை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.


போதைப் பொருள் விற்பதுபோல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் மூட நம்பிக் கைகளைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் கூடுதல் சுமைகளையேற்றுப் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைதான் நமக்கு!


மற்ற மற்ற மதங்களில் சிறுசிறு அளவில் பாவ மன்னிப்பு என்றால், இந்து மதத்தில் ஒட்டுமொத்தமான பாவ மன்னிப்புண்டு. 12 ஆண்டுகள் துணிந்து பாவங் களைச் செய்யலாம்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால், ஒட்டுமொத்த பாவங்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ள மக்களைத் திருத்துவது என்பது எளிதான காரியமா?


புனித கங்கையைச் சுத்தப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள். அதுதான் புனித கங்கையாயிற்றே! அதை ஏன் சுத்தப்படுத்தவேண்டும்!
அப்படி என்றால், கங்கை புனிதமான நதியில்லை என்று ஒப்புக்கொள் வதாகத்தானே அர்த்தம்?


இன்னொரு பக்கத்திலே இராமாயணம், மகாபாரதம் என்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றால் மக்கள் ஒழுக்கம் பெறு வார்களா?


கட்டண வசூல் ரூ.66,100
தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றிய நான்கு நாள் சொற்பொழிவின்மூலம் கிடைத்த கட்டணம் ரூ.66,100-அய் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் - மேடையில் கழகத் தலைவரிடம் வழங்கினர்.

தொலைக்காட்சிகளில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பான காரணத்தினால்தான் ராமர் கோவில் பிரச்சினை எழுந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் டாக்டர் கோபால் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளாரே!


இராமாயணம் பரவினால் சகோதரத் துரோகம் வளராதா? காட்டிக் கொடுக்கும் விபீஷணர்கள் வளர மாட்டார்களா?


இன்னும் கம்பர் விழா நடத்துகின்ற நமது புலவர் பெருமக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.


இந்த நேரத்திலே நான் ஒன்றைச் சொல்ல விரும் புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இராவண காவி யத்துக்கு நாம் விழா எடுக்கவேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது பெரிய ஆதரவுக் கையொலி எழுந்தது.
தந்தை பெரியார் இராமாயணத்தைப்பற்றிச் சொன்ன கருத்துகளுக்கு இதுவரை மறுப்புகள் சொன்னவர்கள் யார்?


முதலில் இராமாயணம் நடந்ததாகக் கூறும் காலமே அசல் புரட்டாச்சே! தந்தை பெரியார் கேட்கிறார், இராமாயணம் நடந்த காலம் என்று சொல்லப்படும் திரேதாயுகம், துவாபரயுகம் இவற்றின் கூட்டுத் தொகையே 21 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகள்தான்; அப்படி இருக்கும்போது இராவணன் 50 லட்சம் ஆண்டுகள் இந்த யுகங்களில் ஆண்டான் என்பது எப்படி? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடையெங்கே?


தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்திரங்கள் என்னும் நூல் Ramayana - A True Reading என்று ஆங்கிலத்தில் வெளிவந்தது. உத்தரப்பிரதேசத்தில் சச்சு இராமா யணம் என்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது.


உத்தரப்பிரதேச மாநில ஆட்சி, அதனைத் தடை செய்தது; அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது, நீதிபதி வீ.ஆர். கிருஷ்ண அய்யர் தடை செல்லாது என்று அருமை யான தீர்ப்பு வழங்கினாரே!
(நெருக்கடி நிலை காலத்தில் அந்தத் தீர்ப்பை விடுதலையில் வெளியிடக்கூடாது என்று பார்ப் பனர்களின் கூடாரமாக இருந்த தணிக்கைக் குழுவினர் தடை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது).


இராமாயணத்தைப்பற்றி மக்கள் மத்தியில் தந்தை பெரியார் எடுத்துக் கூறிக்கூறி பக்குவப்படுத்தி வைத் திருந்ததால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது இந்தியா முழுமையும் கலவரங்கள் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கியதையும் இந்த நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.


1971 இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.


ஊர்வலத்தில் வந்த தந்தை பெரியார்மீது ஜன சங்கத்தினர் செருப்பை வீசினார்கள்;  அந்தச் செருப் பைக் கையில் பிடித்த திராவிடர் கழகத் தோழர்கள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட ராமன் படத்தின்மீது சாத்தினார்கள். எங்கள் தலைவர் மீதா செருப்பை வீசினாய்? இதோ பார் உங்கள் ராமனுக்குச் சாத்துப்படி என்று அடித்தார்கள்.

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் சிங்கார.இரத்தினசபாபதி மற்றும் பா.சுகுமாரன் (அமைப்புச் செயலாளர்), ரா.குருநாதன் (வெளியீட்டு செயலாளர்), மு.சடாச்சரம் (பொருளாளர்), தே.முரளிகுமார் (அலுவலக செயலாளர்) ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 26.9.2014).

அது சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நேரம். உடனே அதனைப் பிடித்துக்கொண்டார்கள். இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று பிரச்சாரம் செய்தார்கள். அப்பொழுது காமராசரும், ராஜாஜியும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டிருந்தனர்.


சேலத்தில் ராமனை தி.க.வினர் செருப்பால் அடித்ததால், தி.மு.க. தோற்கப் போகிறது என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்கள்.


முடிவு என்ன? இராமனை செருப்பாலடிக்காத தேர்தலில் 1967 இல் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள் 138; இராமனை செருப்பாலடித்த பிறகு 1971 இல் நடை பெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள் 184.


(உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த் தைகளே இல்லை; எனக்குப் பழி நீங்கியது, உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது என்று தந்தை பெரியார் அவர்கள் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்குத் தந்தி கொடுத்தார்).


184 இடங்களை வென்ற தி.மு.க. அமைச்சரவை யினர் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தந்தை பெரியார் முன்னிலையில் பதவியேற்றனர். (15.3.1971) என்பது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.
தொடர்ந்து, கீதை, ஆத்மா, சோதிட மூடநம்பிக் கைகள்பற்றியெல்லாம் தந்தை பெரியார் மக்கள் மத்தியில் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்பதை எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.


இறுதியாக தந்தை பெரியார் தம்மைப்பற்றித் தன்னிலை விளக்கமாகக் கூறியதை எடுத்துக்காட்டி னார் தமிழர் தலைவர்.


இனி எனது சமுதாயத் திட்டந்தானாகட்டும், வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டு மென்பதும், பார்ப்பனச் சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும் - எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும் - சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன் மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும், சலுகையும் இருக்கக்கூடாது என்பதுந் தானே?
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகையும் கொடுத்து, கூடிய வரையில் சமச்சமுதாயமாக் கப்பட வேண்டுமென்பதுந்தானே?


சமயத்துறையில் புராணக் கடவுள்கள் பிரச்சாரமும் விக்ரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோயில் - மடம் - வர்ணமுறை தர்மம் என்பவற்றின் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும், தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும் இல்லாமல் நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமையுணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதுந்தானேயொழிய, மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?
கல்வியில் தானாகட்டும், 100-க்கு 90 திராவிட மக்கள் கைந்நாட்டுத் தற்குறிகளாய் இருக்க இதைச் சரிப்படுத்தாமல் (ஹைஸ்கூல், உயர்தரப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கிக் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யக்கூடாது என்பதைத் தவிர, கல்விக்கு நான் எந்தவிதத்தில் என்ன கெடுதி செய்கிறேன்?
நமக்கு அரசியலுக்கோ - சமய சமுதாய இயலுக்கோ - வேறு கலை இயலுக்கோ ஆட்கள் வேண்டுமானால், வேண்டிய அளவுக்குக் கிராண்டு, ஸ்காலர்ஷீப், ஸ்டைபெண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படி செய்து வேலை வாங்கலா மென்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட் டில் பிரபுகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படி பணம் ஏன் செலவு செய்யவேண்டும் என்பதுந்தானே?


இவை போன்ற கருத்தின்றி, மற்றப்படி நான் எந்த விதத்தில் நாட்டுக்கு - சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவனாக இருந்தேன்? அன்றியும் என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத் காரத்தைத் தூண்டும் சொல்லையோ - செய்கை யையோ - ஜாடையையே கண்டீர்களா? அல்லது என் பேச்சால் எழுத்தால் செய்கையால், என்றாவது பலாத்காரம், குழப்பம் ஏற்பட்டதா?


சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையைக் கண்டீர் களா? குழப்பம், கலவரம் உண்டாகும் ஜாடையைக் கண்டீர்களா? அனுபவத்தையோ கண்டீர்களா? என்று தந்தை பெரியார் 1948 இல் எழுதியதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியபோது, புதிய தலைமுறை யினருக்குப் பொன்னேடாக ஒளிர்ந்தது.


எத்தகைய உயர்ந்த பொதுவாழ்க்கைக்குச் சொந்தக் காரர் தந்தை பெரியார் என்பதை விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர்.


திராவிடர் சமுதாயத்தைத் திருத்த மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் பணியைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதையும் எடுத்துக்காட்டினார்.


தடைகள் எவை நம் முன்வந்தாலும், அவற்றைத் தகர்த்து தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத் தைப் படைப்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
மூச்சடக்கிக் கடலில் முத்தெடுப்பவன் அவன் சக்திக்கேற்பவே எடுப்பான்; கடலில் உள்ள எல்லா முத்துக்களையும் எடுத்துவிட்டதாகக் கூற முடியுமா? அதுபோலவே, நானும் தந்தை பெரியார் அவர்களின் தத்துவக் கடலிலிருந்து என்னால் முடிந்தவரை மூழ்கி முத்துக்களாக எடுத்துக் கொடுக்க முயலுகின்றேன். உங்களது தூண்டுதல்தான் என் தேடலுக்குக் காரணம் என்றும் தன்னடக்கமாகத் தம் உரைபற்றிக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்க, அவையில் திரண்டிருந்த அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் (சென்னை, 26.9.2014)

பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார். தொடக்கத்தில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்றிட, பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் மா.நன்னன் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

நான்கு நாட்கள் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள் சார்பில் ப.சேரலாதன் நன்றி கூறினார். அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்குக் கட்டணம் செலுத்தி உரையைக் கேட்க வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.


புலவர் மா.நன்னன்  தலைமை உரையிலிருந்து...
கட்டணம் கொடுத்து நான்கு நாள்கள் தொடர்ந்து வந்து ஒரு கூட்டத்தைக் கேட்பது என்பது அரிதினும் அரிது.

பேராயர் சற்குணம் போன்றவர்கள் எல்லாம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கேட்பது பெருமையாக இருக்கிறது.

பல்லி முட்டையிலிருந்து வெளிவந்த நிலையில், அதற்குத் தாய்ப் பல்லி இரையை ஊட்டுவதில்லை; தானாகவே தன் இரையைத் தேடுகிறது. ஆனால், பகுத்தறிவு ஜீவனான குழந்தையோ, தன் உணவைத் தானே தேடுவதில்லை; தாய்தான் ஊட்டுகிறார்.

பகுத்தறிவிற்கு குருடன் யானையைப் பார்த்ததுபோல், பலரும் பல விளக்கங்களைக் கூறக்கூடும்.

ஆனால், தந்தை பெரியார் கூறும் பகுத்தறிவு என்பது மானுடத்திற்கு மிகவும் அவசியமானது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைதான் சரியானது என்று கருதி இறுதியில் இந்த இடத்திற்குத் தான் வந்து சேரவேண்டும்.
அறியாமை என்கிறபோது அதன்கீழ் கிரகணம், அம்மை நோய், பேய் போன்றவற்றில் உள்ள நம்பிக்கையைக் கூறலாம்.

மூட நம்பிக்கை என்று வருகிறபோது, ஆன்மா, கடவுள், விதி இவற்றை அந்தப் பட்டியலில் வைக்கலாம். பொருளற்ற பழக்கவழக்கங்கள் என்கிற பட்டியலில் வணக்கம் கூறுதல் போன்றவற்றை வைக்கலாம்.

இழிவான நடவடிக்கைகள் என்பதில் தரைச்சோறு சாப்பிடுவது, சாந்தி முகூர்த்தம் என்று நாள் வைப்பது, ஆட்டோயூரின் தெரஃபி போன்றவற்றைக் கூறலாம்.

அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் - இவை எல்லாம் மனித வளர்ச்சிக்குக் கேடானவை.
பெரியாரின் பெருநெறிப் பிடித்தொழுகுவோரே இவைபற்றியெல்லாம் அறிந்து அறிவு பெற்றவர்கள் ஆகின்றனர்.

திராவிட இயக்கத்தின் ஆணி வேராகவும், விழுதாகவும் ஆகியுள்ள திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் முதற்பெருந்தொண்டர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே இப்பொருள்பற்றி உரைக்க முதற்பெருந்தகுதியுடையவர் ஆகிறார்.

---------------------------------------- 26.9.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த புலவர் மா.நன்னன் அவர்களின் உரையிலிருந்து....

                ------------------ மின்சாரம்  --  27-09-2014
*************************************************************************************
செப்டம்பர் 23 முதல் 26 வரை நான்கு நாள்கள் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ அளித்த விருது பற்றி பேசியது நான் பெற்ற பேறு!
எதிர்காலம் பெரியார் இலட்சியங்களால் நிறையட்டும்
அந்நிலை உருவாகிட அயராது உழைப்போம் வாருங்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் - கி.வீரமணி அறிவிப்பு


சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில், தந்தை பெரியாரும் அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றம் அளித்த விருதில் அடங்கும் வாசகங்களை மய்யமாக வைத்து செப்டம்பர் 23 முதல் 26 முடிய நான்கு நாள்கள் தொடர் சொற்பொழிவினை ஆற்றிய என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு! என்று புளகாங்கிதம் அடையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் விரும்பிய இலட்சிய உலகைப் படைக்க அயராது உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாள் பெரு விழா என்பது ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் சிறப்புகள் சேர்க்கப்பட்ட அறிவுப் பிரச்சாரத்தை அகிலம் எங்கும் நடத்திடும் அற்புதப் புத்துலகத்திற்கான புத்தாக்கப் புதுமை விழாவாகவே நடத்தப்பட்டு வருகின்றது.


மானுடப் பரப்பு முழுவதும் மனிதத்தின் பெருமையை உணர்ந்தோர் உய்ய, உயர உலகத் தலைவர் தந்தை பெரியார்தம் ஒப்புவமையற்ற உயர் எண்ணங்களே நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்பதை உணரத் தொடங்கி விட்டனர்.

உலகம் முழுவதும் அய்யா விழா!

கடந்த 13-ஆம் தேதி (செப்டம்பர்) வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர் மற்றும் கனெக்டிகட் மாநிலத்திலும் (இவ்வாரம்), சிங்கப்பூர் நாட்டிலும், துவங்கிய பெரியார் 136ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, மலேசியா, ஆப் பிரிக்கக் கண்டத்து நாடான கானா நாட்டிலும், இந்திய நாட்டின் வடபுலத்திலும் மிகச் சிறப்பாக, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மனித உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெரியார்தம் விழுமிய கோட்பாடுகளைப் பரப்புரை செய்யும் பகுத்தறிவு திருவிழாக்களாக நடை பெற்று வருகின்றன.

நன்றித் திருவிழாவாகக் கொண்டாட்டம்!

தலைநகர் சென்னை துவங்கி குமரி வரை வெகு சிறப்பாக விழாக்கள், பேரணிகளாகவும் பிரச்சார நிகழ்ச்சி களாகவும், கருத்தரங்குகளாகவும் நடைபெற்ற வண்ணம் உள்ளன!

இதை திராவிடர்கள் ஓர் நன்றித் திருவிழா வாக கொண்டாடி மகிழ்கின்றனர்!
வெறும் பெரியார் தொண்டின் பெருமையோடு கூட்டங்கள் முடிந்து விடக் கூடாது; தந்தை பெரியாரின் தத்துவக் கருத்துக்கள் எப்படிப்பட்ட அரிய சிந்தனைக் கருவூலம் என்பதை இளைய தலைமுறையினரும் புரிந்து உள்வாங்கி, தங்கள் வாழ்க்கையை அறிவும், மானமும் உள்ள பயனுறு பகுத்தறிவு வாழ்க்கையாக, தொண்டறமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன், இது அமைய வேண்டும்.

யுனெஸ்கோ அளித்த விருது

தந்தை பெரியார் அவர்களை உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளராக, புரட்சிக்காரராக - அய்.நா.வின் ஒரு கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ மன்றம் சார்பாக, 1970இல் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் தலைமையில், மாநில முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப் பெற்று அத்துடன் விருது ஏன் என்பதற்கான விளக்கப் பட்டயமும் அளிக்கப்பட்டது.

அதில் உள்ள அருமையான கருத்தாக்கம் (சிவீணீவீஷீஸீ) தான் பெரியார்  புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி! என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நான்கு மய்யக் கருத்தோட்டக் காரணங்கள் ஏதோ அழகோ, அலங்காரத்திற்கான ஆங்கில மொழிச் சொற்றொடர்கள் அல்ல; மாறாக ஒவ்வொரு எழுத்தும் அதன் பின்னே ஒரு மகத்தான வரலாற்றை உள்ளடக்கியுள்ள காலப் பெட்டகம் என்பதை விளக்கிட வேண்டும் என்ற விழைவு என்னுள் முளை விடத் தொடங்கி சில ஆண்டுகள் ஆயின!

நான்கு நாள் சிறப்புச் சொற்பொழிவு

ஆனால், கடந்த நான்கு நாள்களும் 2014 செப்டம்பர் 23,24,25,26 ஆகிய நாள்கள் அதற்காக அமைந்தன - ஆய்வரங்கமாக! இதுவரை பெரியாரை வாசித்த நாம், பெரியாரை சுவாசிக்கத் தொடங்கினோம்!

பொறுப்பும் அக்கறையும் உள்ளவர்களே வரட்டும், கேட்கட்டும் சிந்திக்கட்டும் என்று எண்ணியதன் விளைவாகவே, ஒவ்வொரு நாளும் நன்கொடை பெரியார் உலகத்திற்கு (சிறுகனூரில் அமையவிருக்கும் மெகா திட்டம்) ரூ.100 - 4 நாள் பொழிவுகளைக் கேட்க அளித்து வரட்டும் என்று அறிவித்தது  நமது தலைமைக் கழகம்.

திட்டமிட்ட ஏற்பாடுகளாக அவை அமைந்து விட்டன. தெள்ளுத் தமிழ் அறிஞர்கள் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் மோகன் (எனது சட்டக் கல்லூரி ஆசிரியர்) மேனாள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் பெ. ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீ, பகுத்தறிவுப் புலவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உற்சாகம் வழிந்த உரைகளோடு தொடங்கி 4 நாள் என்னை மெய் மறந்து நேரம் துறந்து பல மணி நேரங்கள் ஒவ்வொரு நாளும் சரி (ஒரு மணி 20 நிமிடங்கள்) உரையாற்றிடவும் அதைக் கூடியிருந்தோர் உள்வாங்கி சுவைத்து சுவாசித்த முறையும், பெரியார் தம் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு என் பணியின் உந்து சக்தியாக உழைக்கும் உறுதியைப் பெருக்கின-  களைப்பைச் சுருக்கின!


இருபாலர்களும் வந்திருந்தனர்! குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்!!


புதிய இளைஞர்கள் பொங்கிய மகிழ்வுடன் வந் திருந்தனர்! கேட்டனர் - மகிழ்ந்தனர்!

கடைசிவரை ஒருவரும் எழவே இல்லை. என்னை மறந்தேன். பெரியார் என்ற பெருங்கடலில் மூச்சடக்கி மூழ்கி எடுத்த முத்துக்களை அவர்களுக்குப் பரிமாறி, அரிய பகுத்தறிவு சொத்துக்களாக்கி மகிழ்ந்தேன். இவ் ஏற்பாட்டினை செய்த திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர்களுக்கு நன்றி ! நன்றி!!

வசூலான நன்கொடை 4 நாள்களில் கட்டண சொற் பொழிவுக்கானது ரூ.66,100 ஆகும்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத நான்கு நாள்கள்

இது ஒரு, நம் இயக்க வரலாறு காணாத சாதனை அல்லவா?
எனது வாழ்நாளில் இந்த நான்கு நாள்கள் மறக்க முடியாத யான் பேறு பெற்ற நாள்கள்.

பெரியாரின் பெருமைகளைப் பேசா நாட்கள் எனக்குப் பிறவா நாட்கள் அல்லவா?

சாதனை அல்லவா! நெருப்பான கருத்தினைக் கேட்க பொறுப்பான கூட்டம் திரண்டது! கொள்கை - லட்சியத்தில் திளைத்தது!

நமது நம்பிக்கை மிகப் பெரிய அளவில் நிலைத்தது.

இனி எதிர்காலம் பெரியார் லட்சியங்களால் நிறை யட்டும்!

எனவே உழைப்போம்! வெற்றி பெறுவோம்.

------------------கி.வீரமணி  தலைவர் திராவிடர் கழகம் சென்னை 27.9.2014

24 comments:

தமிழ் ஓவியா said...

வழிகாட்டும் கருநாடகா கணவனை இழந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

மங்களூரு, செப்.30- கருநாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி சிறீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தாழ்த்தப் பட்ட இனப் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டனர்.

நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங் களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர் களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/88463.html#ixzz3Eqs00vJf

தமிழ் ஓவியா said...

மோடி மகிமை !


மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.

மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.

மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான் மிகுதி. "இந்தியா"வையேக் காணோம். பெரிய மனதுடன் வந்திருந்த இஸ்லாமியத் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஏமாற்றம் அவர்களது முகங்களில் என்று சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் வரலாற்றைப் புகழ்ந்தவர் இந்தியரில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் கூடச் சரி சமமாகப் படிப்புக் கொடுத்ததே கிருத்துவக் கல்விக்கூடங்கள்தானே. அதை மறைக்க முடியுமா?

அமெரிக்காவின் பணம் வேண்டும், தொழில் வேண்டும் ஆனால் இந்துத்துவாதான் இந்தியா என்று சொல்லி இந்தியாவை விற்றுக் கொண்டுள்ள மோடி மகிமை எடுபடுமா? இந்தியா "இந்துஸ்தான்" என்றால் அமெரிக்கா "கிருஸ்துஸ்தான்" என்பதுதான் உண்மை. பணம் எவ்வளவு தூரம் பாயும் என்பது தெரிந்து விடும். மோடிக்கு வரலாறு காணாத கூட்டம் என்று இந்திய இதழ்கள், இணைய மக்கள் சொன்னாலும், பல இருக்கைகள் காலியாகவே உள்ளன.... கடந்த ஒரு வாரமாக என்று சொல்லி சொல்லி வேறு...!!!

இதோ நிழற் படம்.... பாரத் மாதாகீ ஜே!!!

Read more: http://viduthalai.in/page-8/88476.html#ixzz3EqtiT8Cb

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அக்டோபர் 2

செய்தி: காந்தியார் பிறந்த நாளில் தூய்மையான இந் தியா என்ற திட்ட அறிவிப்புக் காக காந்தியார் பிறந்த நாள் (அக்டோபர் 2) விடுமுறை ரத்து!

சிந்தனை: காந்தியார் பிறந்த நாளுக்கு விடுமுறையும் ரத்து செய்ததாக இருக்கும் - திட் டத்தையும் அறிமுகப்படுத்திய தாகவும் இருக்கும் - ஒரே கல்லால் இரண்டு காய் எப்படி (ஆர்.எஸ்.எஸ்.) தந்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/88484.html#ixzz3Eqttmsuf

தமிழ் ஓவியா said...

பீகார் முதலமைச்சருக்கே தீண்டாமைக்கொடுமைகள்: தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை!


சென்னை, செப். 30_- பீகார் முதலமைச்சருக்கே தீண் டாமைக் கொடுமையா, தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று (30.9.2014) அறிக்கை விடுத் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:_

பீகார் மாநிலத்தில் தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்குச் சான்றாக பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி விளங்குகிறார். அவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனக்கு நேர்ந்த அவ மானத்தைக் குறிப்பிட்டு வேதனைப்பட்டிருக்கிறார்.

அதாவது, பீகார் மாநிலத் தில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில்போது மதுபானி மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குச் சென்ற தாகவும் கோவிலைவிட்டு அவர் வெளியேறிய பின் னர் அந்தக் கோவிலின் நிர் வாகத்தினர் கோவிலைக் கழுவி சுத்தம் செய்ததாக வும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் சாதி எவ் வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதா ரண மக்கள் கிராமப்புறங் களில் எத்தகைய சாதிக் கொடுமைகளுக்கு உள்ளா கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில் களில் மட்டும்தான் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகி யுள்ளது. அதுவும் பெரு நகரங்களில் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் காண முடிகிறது.

நகர்ப்புறங்களி லும் கிராமப்புறங்களிலும் உள்ள பெரும்பான்மை யான கோவில்கள் சாதிய வாதிகளின் கட்டுப்பாட்டி லேயே இயங்கிவருகின்றன. அக்கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவே முடியாத நிலை உள்ளது. கோவில் விழாக் களில்கூட தலித்துகள் கலந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு சாதிக் கொடுமைகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் நிலவுகின்றன. பீகார் முதலமைச்சர் தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சில மாதங்கள் கழித்து வெளிப்படையாகப் பேசியி ருக்கிறார்.

அதனால், தற் போது இது வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது. ஆனால், அன்றாடம் கிரா மப் புறங்களில் நடக்கும் குறிப்பாக, கோவில்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத் திற்கு வருவதேயில்லை. இந்திய நாடு விடுதலை பெற்று சுமார் 67 ஆண்டு களை எட்டியுள்ள நிலையி லும் சாதிக் கொடுமை களை இன்னும் கட்டுப் படுத்த இயலவில்லை என்பதே வெட்கக்கேடான ஒன்றாகும்.

ஊழலுக்கு எதிராகவும் வறுமைக்கு எதிராகவும் போராடும் மனித உரிமை ஆர்வலர் கள், பிற சனநாயகச் சக் திகள் சாதிக்கொடுமைக ளுக்கு எதிராகப் போரா டத் தயங்குவது ஏனென்று விளங்கவில்லை. சாதியத் திற்கு எதிராகவும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சனநாயகச் சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மைய, மாநில அரசுகள் வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத் தைத் தீவிரமாக நடை முறைப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் சாதியவா திகளின் பிடியில் உள்ள கோவில்கள் அனைத்தை யும் அரசுடைமையாக்க வேண்டும். கோவில் மட்டு மின்றி கோவில் சொத்துக் கள் யாவற்றையும் அரசு டைமை ஆக்குவது கோவில் களில் சாதிக் கொடுமை களைக் கட்டுப்படுத்துவ தற்கு வழிவகுக்கும்.

எனவே, மைய, மாநில அரசுகள் பீகார் முதல்வருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடு மையை கவனத்தில் கொண்டு தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. பீகார் முதல் வருக்கு எதிரான தீண்டா மைப்போக்கை கடைப் பிடித்த சாதியவாதிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-8/88478.html#ixzz3Equ1zsmj

தமிழ் ஓவியா said...

சும்மா ஆடுமா சோ குடுமி?


கே: ஆசிரியர் தினம் குரு உத்ஸவ் என்று பெயர் மாற் றப்படுவதை வரவேற்கிறீர்களா? தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரி வித்துள்ளனவே

ப: ஏதோ இதற்கு முன்பு ஆசிரியர் தினத்திற்கு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் என்ற பெயர் இருந்தது போலவும், இப்போதுதான் நாடு முழுவதும் இருந்த அந்தத் தமிழ்ப் பெயர் மாறி, ஸம்ஸ்கிருதப் பெயர் வந்து விட்டதைப் போலவும், இது பெரும் சதி என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதற்கு முன்பு இதே ஆசிரியர் தினத்திற்கு ஷிக்ஷக் திவஸ் என்கிற பெயர் இருந்திருக்கிறது. அதற்கு குரு உத்ஸவ் எவ்வளவோ மேல், தமிழில் குருவும் சரி, உத்ஸவமும் சரி, எல்லோரும் அறிந்த வார்த்தைகள்தான். இந்தப் பெயரை வைப்ப தால் தமிழுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று, இந்தப் பெயர் மாற்றம் என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள். இதில் எல்லாம் கவனம் செலுத்தவே வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. (துக்ளக் 17.9.2014 பக்கம் 8.9)

புரிகிறதா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது; சொல்லு வதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் ஒப்புக்காக சில சொற்கள்.

இந்தப் பெயர் மாற்றம் எல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள் என்று பெரிய மேதாவி போல உதார்!

கடைசியில் சொன்ன அந்த ஒரே வார்த்தையைச் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே?

இந்த மகா யோக்கியர்தான் கோயிலுக்குள் வழிபாடு தமிழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் அவரின் பதில் என்ன தெரியுமா?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ் கிருத துதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் இதே சோ. ராமசாமி தான் துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமாகத் தீட்டினார் என்பது நினைவிருக்கட்டும்!

பிரச்சினையே தமிழில் வழிபாட்டுக்கு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும் பொழுது ஆழ்வார்களும், நாயன்மார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற பிரச்சினை எங்கே வந்தது?

வழிபடுவதற்குத் தமிழிலேயே இருக்கும் பொழுது அர்ச்சனை பாட்டே! என்ற ஆதாரம் இருக்கும் பொழுது ஸம்ஸ்கிருதம் எங்கே வந்து குதித்தது? ஸம்ஸ்கிருதமே இல்லாவிட்டால் - அந்த ஒலிக்கே வாய்ப்பு இல்லாவிட்டால் சாமிகள் எல்லாம் வெறும் சோற்றாலடித்த பிண்டங்களாகத்தான் இருக்குமா?

தமிழ் ஒலிக்குச் சக்தியில்லை - ஸம்ஸ்கிருத ஒலிக்குத்தான் சக்தி என்ற இந்த சோ அய்யர் எப்படி கண்டுபிடித்தாராம்? என்னென்ன சோதனைகளைச் செய்து இந்தப் பூணூல் திருமேனி என்ற கொலம்பஸ் இதைக் கண்டுபிடித்தார். கடவுள் என்றால் ஓசைக்கும் ஒலிக்கும் மயங்கக் கூடியவர்தானா? ஸம்ஸ்கிருத ஒலிதான் எனக்குப் பிரீதி என்று சோவி டம் வந்து மயிலை கற்பகாம்பாள் இரவு நேரத்தில்வந்து சொன்னாளா?

பார்ப்பன மொழியான ஸம்ஸ்கிருதத்துக்காக எதை எதையோ சுற்றி வளைத்துச் சொல்லி, உளறி வக்காலத்து வாங்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழித் துவேஷி என்கிறது; விழித்திருக்கும் போதே விளையாடும் இந்த விஷமிகளிடம் எச்சரிக்கை தேவை!

Read more: http://viduthalai.in/page3/88331.html#ixzz3EqvGBruk

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சூழ்ச்சியே சாதிப் பிரிவுகள் மறைமறையடிகளின் ஆராய்ச்சி உரை

இவ் ஆரியப் பார்ப்பனர் ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர் கட்குள் பல்வேறு சமயப்பிரிவு, சாதிப்பிரிவுகளை உண்டாக்கி அவ் வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே. தத்தம் சாதியே உயர்ந்த தென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை. கண்ணன் கதை. கந்தன் கதை. விநாயகன் கதை, காளி கதை முத லிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம், முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கை யால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.

- அறிவுரைக் கொத்து

Read more: http://viduthalai.in/page3/88390.html#ixzz3EqvNuMKA

தமிழ் ஓவியா said...

சோவின் பார்வையில் டெசோ



கே: கருணாநிதி தலைமையில் சமீபத்தில் நடந்த டெஸோ அவசரக் கூட்டம் பற்றி...?

ப: எத்தனையோ லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்களில் எல்லாம் ஏதேதோ கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றை எல்லாம்பற்றி நாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன? பொழுது போக்குச் சங்கங்கள் பொழுதைப் போக்குகின்றன. அவ்வளவுதான். துக்ளக் 17.9.2014 பக்கம் 13)

ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என்பதைப் பார்த்தீர்களா?

ஏதோ, கலைஞர், டெசோ என்று வார்த்தைகளோடு நின்றுவிடாதீர்கள். இவற்றை பார்ப்பனக் கூட்டம் எப்படிப் பார்க்கிறது என்பதுதான் முக்கியம்!

இந்த டெசோதான் அதனுடைய முறையான செயல்பாடுகளால்தான் ஒரு கட்டத்தில் இந்திய அரசை இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவுக் குரலைக் கொடுக்கச் செய்தது? இன்னொரு கட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைபற்றி பன்னாட்டு விசாரணையை நடத்திட அய்.நா. உத்தரவிட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் சென்னையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்தியதும் இந்த டெசோ தான் (முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வயிற்றில் புளியைக் கரைத்ததற்குக் காரணமாக இருந்ததும் இந்த டெசோதான்) அப்படிப்பட்ட டெசோ பார்ப்பனர்களின் பார்வையில் ரோட்டரி கிளப்பாம்! ஏனிந்த கிண்டல் கேலி தெரியுமா?

அவாளின் ஆத்திரம் அந்த அளவுக்கு அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது என்று பொருள். உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்து விட்டால் பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று கருதுகிறார்கள். ஏனெனில் தங்களுக்கென்று சொல்லிக் கொள்ள இயலாத நாடற்ற கும்பல் அல்லவா அது!

Read more: http://viduthalai.in/page4/88333.html#ixzz3EqwQOshT

தமிழ் ஓவியா said...

செவ்வாய் பற்றிய ஒரு குறிப்பு


சூரியனில் இருந்து 4 ஆவதாக உள்ள பூமியை விட சிறிய கோள்

சூரியனின் உயிர் வளையத்தில் செவ்வாய் இருப்பதால் இங்கு ஒரு காலத்தில் நீரோட்டம் இருந்ததுள்ள தாகவும் ஆனால் உயிர்கள் இருந்ததா என்ற உறுதியான சான்று இன்றுவரை கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோளும் பூமியைப் போலவே கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்குள் சூரியனைச் சுற்றிவருகிறது.

இக்கோளில் தண்ணீர் மாத்திரம் இல்லை. தண்ணீர் திரவநிலையில் இருப்பின் இக்கோளில் தாவரங்கள் வளர 80 விழுக்காடு வாய்ப்பு உள்ளது. இதன் துருவங்களில் கார்பன் டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் உள்ளது. (Dry Ice).


செவ்வாய்க்கோள் பற்றி சுமேரிய, எகிப்திய ஏடுகளில் குறிப்புகள் உள்ளது. தொலைநோக்கிமூலம் செவ்வாயை முதல் முதலாக ஆராய்ந்த அறிவியல் அறிஞர் கலிலியோ

செவ்வாய் பற்றி தன்னுடைய 12-ஆவது வயதில் ஆய்வுக்கட்டுரை எழுதி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியிட்டவர் எட்வின் ஹப்பிள் இவர் பிற்காலத்தில் பிரபல வான் இயற்பியல் ஆய்வாள ராகத் திகழ்ந்தார். இன்று விண்வெளி யில் அமைந்திருக்கும் தொலை நோக்கிக்கு ஹப்பிள் என்ற இவருடைய பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. செவ்வாயில் ஒலிம்பஸ் என்ற மலை நமது எவரெஸ்ட் சிகரத்தை விட 22 மடங்கு உயரமானதாகும்.

செவ்வாயில் ஏற்பட்ட பருவமாற்றத் தால் நீர் ஆவியாகிவிட்டது. செவ்வா யின் தரைத்தளம் பலகோடி ஆண்டு களாக ஈரப்பதமாக இருந்ததால் தரை யில் உள்ள இரும்புடன் வினைபுரிந்து இரும்பாக்ஸைடாக மாறிவிட்டது. இதுதான் செவ்வாய் சிகப்பு வண்ணத் தில் தெரியக் காரணமாகும். செவ்வாயில் தரைக்கு அடியில் நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா கூறினாலும். அது அமிலத்தன்மையுடன் கூடியதாக இருக்ககூடும் என்றும், அந்த நீரினால் உயிரினங்களுக்கு எந்த ஒரு பயனு மிருக்காது என்று அமெரிக்க வானியல் நிபுனர்கள் கூறுகின்றனர். இது வரை 11 செயற்கைக்கோள்கள் செவ்வாய் வட்டப்பாதையில் சுற்றி வரு கிறது. அவை செவ்வாய் ரெகொனன் சசி (Mars Reconnaissance Orbiter), செவ் வாய் (Mars Odyssey),செவ்வாய் எக்ஸ் பிரஸ் (Mars Express).

மரைனர் 9. , வைகிங் 1 மற்றும் 2, செவ்வாய் 3 செவ்வாய் 4 நேற்று முன் தினம் செவ்வாய் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட மார்ஸ் மாவன், மற்றும் இந்தியாவின் செவ்வாய் வட்டப்பாதை ஆய்வுக்கலன் (MOM-Mars Orbiter Mission) .

அமெரிக்கா 2019-ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் ஒன்றை 2004 ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்து வரு கிறது. 80 விழுக்காடு முடிந்துவிட்ட இந்த ஆய்வின் படி 2019-ஆம் ஆண்டு ஜூலை 2 அமெரிக்க தினத்தன்று 3 பேர் கொண்ட குழு செவ்வாயை நோக்கி பயணிக்கும். இவர்களுக்கு உணவிற்காக விண்வெளி ஓடத்திலேயே பயிரிடும் முறையை சோதனை ஓட்டமாக செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page8/88396.html#ixzz3EqxcqeZk

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிய பார்ப்பனர் ஒழிய வேண்டும் விஞ்ஞானியின் கூற்று


இன்றைய சமுதாய அமைப்பில் பார்ப்பனர் களுக்கு இருந்துவரும் உயர்ந்த நிலை மதத்தின் பேரால் அவர்கள் அனு பவித்துவரும் உயர்நிலை தகர்த்தெறியப் படாத வரையில் இந்தியாவி லிருந்து இந்த ஜாதி முறையை ஒழிக்க முடி யாது. மதச்சடங்குகளில் பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தனி உரிமை ஒழிக்கப்பட வேண்டும்

- டாக்டர் அய்யப்பன்
(10.1.1958 இல் சென்னை விஞ்ஞானிகள் மாநாட்டுச் சொற்பொழிவு)

Read more: http://viduthalai.in/page8/88397.html#ixzz3EqxqzE8N

தமிழ் ஓவியா said...

இழந்த மூக்கு திரும்பியது


இன்றைய ஆன்மிகம்?

இழந்த மூக்கு திரும்பியது

குரு பகவானை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் நியமனம் செய்த தலம் நாகப் பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம். ஒரு முறை ஈசனை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அதில் பிரம்மனும் சரஸ் வதியும் கலந்து கொண் டனர். அதனால் கோபம் கொண்ட ஈசனின் அம்சமான வீரபத்திரர், பிரம்மனை தலையில் குட்டியும் சரஸ்வதி தேவியின் மூக்கை அறுத்தும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு ஏற்பட்ட அங்கக் குறைபாடு நீங்க வேண்டும் என சரஸ்வதி தேவி தவம் இருந்து தன் இழந்த மூக்கைத் திரும்பப் பெற்ற தலம் இந்த பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயமாம்.

கடவுள்களுக்குள் ஆணவம், தன் முனைப்பு சண்டை சச்சரவு என்றால் இது எந்த வகையில் ஒழுக்கமானது? சிந்திப்பீர்.

Read more: http://viduthalai.in/page1/88441.html#ixzz3EqyAOkM3

தமிழ் ஓவியா said...

பார்ப்பானே வெளியேறு


பார்ப்பானே வெளியேறு பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

Read more: http://viduthalai.in/page1/88422.html#ixzz3EqyQ9Z80

தமிழ் ஓவியா said...

குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்


பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.

இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!

கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.

இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.

வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.

Read more: http://viduthalai.in/page1/88401.html#ixzz3EqzAluey

தமிழ் ஓவியா said...

பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய்


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லாப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர்ஸ் என வெண்டைக்காய் அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.

இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியை தவிர்க்க கூடியவை. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகள் உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. உணவில் வெண்டைக்காய் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்தது வெண்டைக்காய்.

Read more: http://viduthalai.in/page1/88404.html#ixzz3EqzJYFQb

தமிழ் ஓவியா said...

கல்வி கிடைக்குமாம்!


இன்றைய ஆன்மிகம்?

கல்வி கிடைக்குமாம்!

நவராத்திரியின் நான் காம் நாளான இன்று அய்ந்து வயது குழந் தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட் டால் குறையாத கல்வி கிடைக்குமாம்!

தாழ்த்தப்பட்டவர்களுக் கும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கல்வி கிடைக் காததற்குக் காரணம் இதைச் செய்யாததால் தானா?

கல்வியைக் கற்பிக்க பெரியார் பாடுபட் டதும் காமராசர் செயல் பட்டதும் - பல்லாயிரக் கணக்கான பள்ளிகள் இப்பொழுது தோன்றி இருப்பதற்கும் காரணம் ரோகிணியை வழிபட்ட தால்தானா?

Read more: http://viduthalai.in/page1/88346.html#ixzz3Er0QHVtw

தமிழ் ஓவியா said...

தினமணியின் வயிற்றுப்போக்கு?


- குடந்தை கருணா

இன்றைய எல்லா பத்திரிகைகளும், சொத்துக் குவிப்பு வழக்கின் செய்திகளை வெளியிட்டுள்ளன. சில பத்திரிகைகள், அரசியல் சாதக, பாதகத்தை வெளியிட்டுள்ளன.

ஆனால், தினமணியில் முதல் பக்கத்தில் கார்ட்டூன் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 65 கோடிக்கு 4 ஆண்டு தண்டனைன்னா, ரூ.1.76,000 கோடிக்கு எவ்வளவு ஆண்டுன்னு கணக்கு போட்டு, சந்தோஷம் அடைகிறது. என்னே ஒரு பார்ப்பன வன்மம்.

65 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு என்பது தனது வருமானத்திற்கு மீறிய சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனையாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது.

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1,76,000 கோடி இழப்பு என்று தானே, வினோத் ராய் தனது தணிக்கை அறிக்கையில் கூறி இருந்தார். அதுவும் ஒரு ஒப்பீட்டு முறையில் அந்த கணக்கை தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் ரூ.1,76,000 கோடி ஊழல் என்று எங்கேயும் கூறாதபோது, தினமணி வைத்திய நாதனுக்கு மட்டும் அது எப்படி ஊழலாக தெரிகிறது.

அரசியல் கட்சிகள் தங்களது அரசியலுக்காக, அப்படி ஊழல் என்ற வார்த்தையை சொல் கிறார்கள் என்றால், தினமணியும் அந்த வகையில் சேர்ந்ததா? என்பதை முதலில் வைத்தியநாதன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், தான் ஒரு அரசியல் கட்சிக்கான பத்திரிகை என்பதை யாவது சொல்ல வேண்டும்.

ரூ.1,76,000 கோடிக்கான இழப்பு சம்பந்தமான வழக்கில், இதுவரை, எங்கேயாவது, நீதிமன்றமோ, வழக்கை எடுத்துச் செல்லும் சிபிஅய் நிறுவனமோ கண்டுபிடித்திருக்கிறதா? இதுவரை இந்த வழக்குக்காக கைதாகி தற்போது பிணையில் வழக்கை வாதாடிக் கொண்டிருக்கும் ஆ.ராசாவிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏதேனும் நிரூபணம் ஆகியிருக்கிறதா? இவற்றிற் கெல்லாம் தினமணி வைத்தியநாதன் பதில் சொல்லவேண்டும்.

2ஜி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்; தங்களுக்கு எல்லாவித வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வாய்தா வாங்காமல் வழக்கை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும், பதினெட்டு ஆண்டுகள் வழக்கை பல வழிகளிலும் இழுத்தடித்துக் கொண்டிருந்தவர்களும் ஒன்றா? தினமணி வைத்தியநாதன் பதில் சொல்ல வேண்டும்.

அலுவலகப் பணியில் தன்னிடம் வரும் கோப்புகளை அரசின் கொள்கைகள் சார்ந்து முடி வெடுத்து, அதன் அடிப்படையில் தணிக்கையாளர் அரசுக்கு இழப்பு என அறிக்கை தருவது 2ஜி வழக் கில் மட்டுமல்ல; பல துறைகளிலும் நடந்துள்ளது. நடந்து வருகிறது. நாளையும் வரும்
குஜராத்தில் மோடி ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் காரணமாக ரூ.5,000 கோடி இழப்பு என இதே தணிக்கைத்துறை அறிக்கை அளித்ததே; அது இழப்பா? ஊழலா?

ரூ.1 ஊதியம் பெற்று வந்தவரிடம் ரூ.65 கோடிக்கு சொத்து குவிந்ததை, கண்டுபிடித்து, அந்த சொத்துகளின் பட்டியலை வெளியிட்டது நீதி மன்றம். அது முறைகேடாக சம்பாதித்தது என உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ரூ.1,76,000 கோடி இழப்பு என்று சொல்லப்படும் வழக்கில், தீர்ப்பு வரட்டும். அதுவரை தினமணி வைத்தியநாதன் பொறுமை காட்டலாம்; அல்லது அது ஊழல் என்றால், விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யட்டும். அதில் விளக்கம் தர பலர் தயாராக இருக்கிறார்கள்.

அதைவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையை வேறு ஒரு சம்பந்தமில்லாத வழக்கோடு முடிச்சுபோடுவது, தினமணி வைத்திய நாதனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள உள்ள பீதியையும் வயிற்றில் ஏற்பட்டுள்ள பேதியையும் காட்டுகிறது.

அய்ராவதம் மகாதேவன், சம்பந்தம் போன்ற சிறந்த ஆசிரியர்களை கொண்டு இயங்கிய அன்றைய தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்ற கொள்கை பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், தேகம் முழுவதும் பார்ப்பன வன்மத்தை கொண்டுள்ள ஒருவரின் எழுத்தில் நாளும் பொய் யான செய்தியை வெளியிடும் இன்றைய தினமணிக்கு, அது பொருந்தாது என்பது மட்டுமல்ல; நேர் எதிராக கொண்டதாகத் தான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/88359.html#ixzz3Er1F7iLo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவராத்திரி

நவராத்திரி - மூன்றாம் நாளான இன்று நான்கு வயது குழந்தையை அலங் கரித்து இந்திராணியாகப் பாவித்துப் பூஜிக்க எதிரி கள் விலகுவார்களாம்!

அப்படியா? நமது இராணுவ அமைச்சரை முதலில் இதனைச் செய்யச் சொல்லுங்கள். சீனா, பாகிஸ்தான் நாடுகள் படைகள் மூலம் அடிக்கடி நமது எல்லைகளில் தொல்லைகள் கொடுக்கும் எதிரிகள் அல்லவா? அவர்கள் விலகி ஓடிவிட இவ்வளவு சுலபமான வழி இருக்கிறதே!

Read more: http://viduthalai.in/page1/88293.html#ixzz3Er2euV00

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்


வடமாகாணத்தில் சுயராஜ்யத்திற்காக என்று செய்யப்படும் சத்யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ய சூழ்ச்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வர்ணாசிரம சுயராஜ்ய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும்,

மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்க முடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்பதாகவும்,

பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிறுத்துபவர்களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக் காரர் ராஜ்ஜியமாகிய பட்டப்பகலில் இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வர்ணாசிரம சுயராஜ்ய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம்.

குடிஅரசு - செய்திக் கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3SJhp6

தமிழ் ஓவியா said...

புதிய பத்திரிகைகள்

திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலைமையில் சண்டமாருதம் பத்திரிகையும், திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசு பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத் திற்குச் சில பத்திரிகைகளே இருக்கின்றன.

அதாவது, குடி அரசு, குமரன், நாடார் குலமித்திரன், முன்னேற்றம், தமிழன், புதுவை முரசு, சண்டமாருதம் ஆகிய வாரப்பத்திரிகை களேயாகும். திராவிடன் தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ, இருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்குச் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாது என்போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது.

ஏனெனில், அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும், அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப்பிரச் சாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை. அன்றி யும், நமதியக்கத்தால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புப்போய் புஸ்தக வியாபாரமும், கேட் லாக் வியாபாரமும் போய், யோக்கியதையும் போய் திண்டாட ஏற்பட்டு விட்ட தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நமது இயக்கம் எமனாய் தோன்றி விட்டதாலும் தங்கள் ஜீவ வாழ்வை உத்தேசித்து எதிர்க்க வேண்டிய அவசியமுள்ள பத்திரிகைகள் பல இன்னும் தோன்றலாம். தோன்றியும் இருக்கின்றன.

ஆதலால், அதனதன் யோக்கியதைக்குத் தகுந்தபடி அதனதன் பாஷா ஞானத்தில் நடைபெற இன்னும் பல பத்திரிகைகள் வேண்டியது அவசியமுமேயாகும். ஆதலால், சுயமரியாதை மக்கள் இவை களை ஆதரிப்பார்கள் என்றும், இன்னும் பல பத்திரிகைகள் தோன்ற உதவி அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3rM8i9

தமிழ் ஓவியா said...

மௌலான முகம்மதலி


மௌலான முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லு பவர்களில் அவரும் ஒருவர், ஏழை மக்களை ஏமாற்றி பணக்காரர்களும், படித்தவர்களும் அனுபவிக்கும் போக்கிய மாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போதுமே பிடிக்காது.

தேசியப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவேகிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்க மாட்டார்.

அவர் ஈரோட்டிற்கு வந்திருந்த போது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றது அதாவது,

நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன். என்று சொன்னார்.

சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மையென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும், கவலைப் படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டுபிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.

அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர். தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளைக்கட்டிவிட்டும் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்று கூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணமுடையவர். இவ்வருங் குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11.01.1931

Read more: http://viduthalai.in/page1/88312.html#ixzz3Er3zDKRL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதர்மம்

கிருஷ்ணன் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாம். உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப் பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளு டன் அவதரிப்பாராம்.

சரி... இப்பொழுது அதர்மம் தலைதூக்கவில் லையா? கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங் களும் தலைதூக்கி நிற் கின்றனவே! கிருஷ்ணன் ஏன் இவற்றை நிக்ரகம் செய்ய அவதாரம் எடுக்க வில்லை? அப்படி ஒருவன் இருந்தால் அல்லவா வரு வான்?

Read more: http://viduthalai.in/page1/88265.html#ixzz3Er4Jd6bN

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்

ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page1/88271.html#ixzz3Er4fB3ZM

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!

12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.

இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

- தந்தைபெரியார்

Read more: http://viduthalai.in/page1/88254.html#ixzz3Er5KKF00

தமிழ் ஓவியா said...

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.

சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.

மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆத்திகத்தின் மோசடி வேலை

ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.

காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.

எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-

காமத்தைப் பரப்பும் கருவி

அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?

இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

கருங்குழற் செவ்வாய்

வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)

எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!

-தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page1/88253.html#ixzz3Er5U8sPl

தமிழ் ஓவியா said...

மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார்.

அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார்.

அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு.

அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேம புஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்?

இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page1/88252.html#ixzz3Er5dDqm4