Search This Blog

12.7.14

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது ஏன்?


ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது ஏன்?

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் பதில்கள்
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பயிற்சி மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

கேள்வி: பெண்கள்மீதான பாலியல் வன்கொடு மைகள் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், அதனை எதிர்த்து நம் இயக்கம் போராடுமா?

                                                                -------- --------    திராவிடப்பொன்னி, குறிஞ்சிப்பாடி

பதில்: அற்புதமான கேள்வி. இந்தக் கேள்வி கேட்டவரை நான் பாராட்டுகிறேன். இதை நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
அடுத்து நம் இயக்கம் செய்யவுள்ள மிக முக்கியமான பணிகளில், இது தலையாய பணியாகும். அது என்ன பணி என்றால், இளைஞர்கள் மத்தியில், இருபால் இளைஞர்கள் பழகும் பொழுது, ஒரு சுமூகமான கருத்தோடு, மனிதத் தன்மை யோடு பழகவேண்டும். எப்படி ஆண்கள் ஒருவருக் கொருவர் பழகும்பொழுது, சாதாரண நண்பர்களாகப் பழகுகின்றோமோ, அதுபோல், நட்பு என்று சொல்லும் பொழுது, பாலியல் தொந்தரவில் போய் முடியக்கூடாது. அதற்கு நம் இளைஞர்கள்தான் வழிகாட்டவேண்டும்.


யாரையாவது கட்டாயமாக நட்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று, உங்கள் நண்பர்களிடம் சொல்ல முடியுமா? என்னோடு நண்பனாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதைவிட மோசம், பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று சொல்லக்கூடியது.  எனவேதான், அதற்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய மகத்தான பொறுப்பு - அதற்காக ஒரு திட்டம் இருக்கிறது. இதுபற்றி விடுதலையில் செய்தி விரைவில் வெளிவரும்.
இதுபற்றி விளம்பரங்கள் வையுங்கள்; பேனர்கள் வையுங்கள்; மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கின்ற ஹர்ஷவர்தனன் என்பவர் உளறியிருக்கிறார். அது என்னவென்றால், பாலியல் கல்வியால்தான் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. எனவே, பாலியல் கல்வியைத் தடை செய்யவேண்டும் என்று சொல்லியிருக் கிறார்.


இது மிகத் தவறான கருத்தாகும். பாலியல் கல்வி என்பதைத் தெளிவாகக் கொடுத்துவிட்டால், எந்தத் தவறும் நடைபெறாது. மூடி வைத்து, ரகசியம் என்று சொல்லி, தவறான எண்ணங்களை தோன்ற வைத்து,  தெளிவில்லாத இளைஞர்களை உருவாக்குவதினால்தான், இந்தக் கோளாறு கள் நடைபெறுகின்றன. யார் யாருக்கு எவ்வளவு எல்லை என்று தெரியக்கூடிய எல்லை இருக்கவேண்டும். அந்த நட்புறவு எல்லையோடு பழகவேண்டும். இது இருபாலருக் கும் சேர்த்துதான்; ஆண்களுக்கு மட்டுமல்ல; உறுதியான சிந்தனைகள் வரவேண்டும்.


ஆண்களும் பெண்களும் பழகினால், நாங்கள் நல்ல நண்பர்களாகப் பழகுவோம்; வேறு எந்தவிதமான கெட்ட எண்ணங்களுக்கும் இடம் கொடுக்கமாட்டோம் என்று சொல்வதற்கு வழிகாட்டக்கூடிய இளைஞர்கள், இதோ திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய அளவிலே, மிகத் தெளிவாக நீங்கள் அத்துணை பேரும் செய்யக்கூடிய வாய்ப்புகளைப் பெறவேண்டும். அந்தச் சூழலை உருவாக்குவதற்கு சில திட்டங்களை, திராவிடர் கழகம் விரைவில், நாடு தழுவிய அளவில் அறிவிக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



எதிர்ப்புகளை மனதளவில் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது?


கேள்வி: நமது கருத்துகளையும், கொள்கைகளையும் வெளிப்படுத்தும்பொழுது, ஆதரவுகளைவிட, எதிர்ப்புகளை அதிகம் சந்திக்க நேருகிறது. அந்தத் தருணங்களில், அந்த எதிர்ப்புகளை மனதளவில் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது?

                                                                      -------------------------- சிந்துஜா, பெரம்பலூர்


பதில்: உற்சாகத்தோடு எதிர்கொள்ளவேண்டும். எதிர்ப்பு இருந்தால்தான், நாம் வளருவோம். பந்தை அடிக்கிறோம்; எவ்வளவு வேகமாக அடிக்கிறோமோ அந்த அளவிற்கு உயரே எழும்பும். அடிக்க அடிக்க எழும்பும் பந்து, எதிர்க்க எதிர்க்க வளரும் நம் இயக்கம், அதுதான் மிக முக்கியம்.


ஆகவே, அதனை நாம் வரவேற்கவேண்டும். பயப்படக் கூடாது. நேற்றுகூட சொன்னார்கள், நான் மேடையேறி 71 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று. அன்றைக்கு இருந்த எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.  கடலூரில் மேடை ஏறியது பெரிய விஷயமல்ல. என்னவென்றால், எங்கள் ஊரில் கல் எறியாத கூட்டம் கிடையாது; கலாட்டா நடைபெறாத கூட்டமே கிடையாது. காங்கிரஸ்காரர்கள், மற்றவர்கள் எல்லாம் எதிர்த்து கிளர்ச்சி செய்வார்கள்.


தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு கடலூரில் நடைபெற்றபொழுது, தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்; அப்பொழுது, ஒருவர் எழுந்து,  ஏ, ராமசாமி நாயக்கா, பேசாதே, நிறுத்து! என்று சொல்கிறார்.
தோழர்கள் எல்லாம் ஆத்திரப்பட்டார்கள்;  அவரை அடித்து காலி செய்திருப்பார்கள்.


உடனே, அய்யா அவர்கள், கையைத் தூக்கி அமைதியாக இருங்கள்; அவர் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்போம் என்றார்.

அதேபோல், கூட்ட மேடையில் கல் படபடவென்று விழும்; தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று அய்யா சொல்வார்.


சின்னாளப்பட்டியில், அய்யாவின் கையை முறித்தார் கள்; மலத்தை எடுத்து வீசினார்கள்; கடலூரில் செருப்பை வீசினார்கள். செருப்புப் போட்ட இடத்தில்தான் சிலையும், கல்வெட்டும் வைத்திருக்கிறார்கள். ஆக, எதிர்க்க எதிர்க்கத்தான் சிறப்பாக இருக்கும்.


அவ்வளவு தூரம் போவானேன்? இரண்டு நாள்களுக்கு முன்பு கீழப்பாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கே, கூட்டம் அமைதியாக நடைபெற்றது. ஆனால், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், மணி அடித்துக் கொண்டு அங்கே பேச விடாமல், கேள்வி கேட்டு இடையூறு செய்தார்கள். அந்த மணியும் அடித்தது; இந்த மணியும் ஒலித்தது, அதுதான் மிக முக்கியம்.

ஆக, இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், பெரியார் உலகம் அமைப்பதற்கு எல்லோரும் நிதி கொடுக்கிறார்கள்.

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஒரு அனுபவம், மண்ணை வாரி விட்டார்கள்; கல்லை வாரி விட்டார்கள். சில நாள் கழித்து அங்கே கூட்டம் போடவேண்டும் என்று ஒருவர் வந்தார்; அவர் யார் என்றால், அய்யா, நான்தான் அந்த கல்லு போட்ட ஆள்; மண்ணை வாரி இறைத்த ஆள்; இப்பொழுது நான் திருந்திவிட்டேன் அய்யா என்று சொன்னார். ஆகவே, எதிர்ப்பு இருந்தால், நாம் பணியாற்றத் தயங்கக்கூடாது; சங்கடப்படக்கூடாது; கெட்ட பெயர் எடுப்பதற்கு நாம் தயங்கக்கூடாது.


கெட்ட பெயர் என்றால், நல்ல கொள்கையை சொல்லி, கெட்ட பெயர் எடுக்கலாம்; அதற்காக நாம் தேவையில்லா மல் வம்பு இழுத்து கெட்ட பெயர் எடுப்பதைச் சொல்ல வில்லை.

ஆகவேதான், நம்முடைய இயக்கம் எதிர்ப்பினைக் கண்டு அஞ்சாத ஒரு இயக்கம். எதிர்ப்பிலே வளர்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள். எதிர்நீச்சல் அடிக்கவேண்டும். எதிர்நீச்சல் அடிப்பதில்தான் வீரமே இருக்கிறது. தண்ணீ ரில் விழுந்து ஆற்றோடு போனால் என்ன, எதிர்நீச்சல் அடிக்கவேண்டும்.
கலைஞரை பார்த்து, தேசிய நீரோட்டத்தில் செல்ல வில்லை என்று  நெருக்கடி காலத்தில் கேட்டார்கள். உடனே கலைஞர் அவர்கள் பதில் சொன்னார், நான் நீரோடு போகமாட்டேன்; நான் ஏற்கெனவே ஈரோடு போனவன் என்று சொன்னார்.

ஆகவேதான், எதிர்நீச்சல் அடித்தால்தான் நமக்கு சிறப்பு இருக்கிறது; வெற்றியும் அதில்தான் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் காந்தியாரை சுட்டுக் கொன்றது ஏன்?

கேள்வி: இந்து வருணாசிரம தர்மத்தை வலியுறுத்தியவர் காந்தி. அப்படி இருக்கும்பொழுது, அவரை ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்?

                                                           -------------------------------- ராஜாராம், விருத்தாசலம்

பதில்: வருணாசிரமத்தை வலியுறுத்திய காந்தி, நாடகத்தில் முன் கோவலன், பின் கோவலன் என்று இரண்டு போடுவார்கள். முன்னால் சிறிய வயது கோவலன்; பின்னால், இன்னொரு கோவலன் என்று போடுவார்கள். அதுபோல், காந்தியார் வாழ்க்கையைப் பற்றி, அய்யாவின் குடியரசில் மிக அழகாக எழுதியிருக்கிறார். காந்தியார் கொலை வழக்கு என்கிற நூலில், முன்னுரையாக அதனை தெளிவாக எழுதியிருப்பேன்.


இந்தக் கேள்விக்கு அதில் தெளிவான பதில் இருக்கிறது.
அது என்னவென்றால்,
காந்தியாரில் இரண்டு காந்தியார்; என்றார் தந்தை பெரியார். முன்னுள்ள காந்தியார் வருணாசிரம தர்மத்தை ஆதரித்த காந்தியார்; கடைசியில் அவருக்குப் போகப் போகத்தான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளங்கியது. வகுப்புவாரி உரிமையை எதிர்த்தார்கள். ஓமந்தூரார் சென்று காந்தியாரிடம் பட்டியலைக் கொடுத்தார். மூன்று சதவிகிதத் தினர் எவ்வளவு பேர் உத்தியோகத்தில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எவ்வளவு பேர் உத்தியோகத்தில் இருக் கிறார்கள் என்று தெளிவாக சொன்னார்.
அப்படிச் சொன்னவுடன், காந்தியார் அவர்களுக்கு உண்மை விளங்கியது.
வேதம் ஓதுதல்தானே, வேதியர்க்கழகு?  நீ ஏன் மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறாய்? நீ ஏன் டி-ஸ்கொயர் எடுத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிக்குச் செல்கிறாய்?


தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு, வேதம் சொல்வது தானே உன்னுடைய வேலை -  வருணாசிரம தருமப்படி.


அப்படி அவர்கள் இல்லை என்று சொன்னவுடன், அவர்களைப் பற்றி காந்தியார் புரிந்துகொண்டார்.


ஆகவே, காந்தியார் எப்பொழுது உண்மையை உணர்ந்தாரோ, எப்படி பின்னாளில் இந்தக் கருத்துகளை நாம் ஏற்று, சமுதாயத்திற்குப் பயன்படாத அளவிற்கு இதுவரையில் நாம் இருந்துவிட்டோமோ என்று நினைத்து, பிறகு எப்போது பயன்பட ஆரம்பித்தாரோ, இனிமேல் காந்தியாரை விட்டால், ஆபத்து! எனவே, சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சுட்டுக் கொன்று விட்டார்கள்.


சற்று நேரத்திற்கு முன்பு, ஒரு குறிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அது என்னவென்றால், 3.5.1935 குடிஅரசில் நான் சொல்கின்ற தகவல் இருக்கிறது. அதில் பெரியார் அவர்கள் சொல்கிறார், சித்திரபுத்திரன் கட்டுரையில்,
அடுத்து பாருங்கள், இனிமேல் காந்தியைப் பார்ப்பான் கொல்லுவான்; ஒரு காலகட்டத்தில் காந்தியை விட்டு வைக்க மாட்டான்; பார்ப்பான் கொல்லுவான். ஏனென்றால், காந்தி உண்மையைப் பேச ஆரம்பித்தால், பார்ப்பான் காந்தியை விடமாட்டான் என்று தெளிவாக சொல்லி யிருப்பார்.
ஆகவே, பின்னாலே வந்த காந்தியார், வகுப்புவாரி உரிமையினுடைய தத்துவத்தை உணர்ந்தவர். மதத்தை அரசியலில் கலப்பது தவறு என்று சொன்னவர். இப்படி பல விஷயங்களில் முன்பிருந்த கருத்துகளை மாற்றினார்; ஆர்.எஸ்.எஸ் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஆகவே, அவரை கோட்சேமூலம் முடித்துவிட்டனர்.


1971 ஆம் ஆண்டு பெரியாரை ஒரு தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ விருது அளித்திருக்கிறது.



பெண்களுக்கான தீர்மானம் நடைமுறைக்கு வந்துவிட்டதா?

கேள்வி: செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தில் தொடங்கி, பெண்களுக்காகப் பெரியார் போட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா?

                                                                                              ---------------- அபர்ணா, பெரம்பலூர்

பதில்: நல்ல அளவுக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு ஆசிரிய ராகும் உரிமை இப்படி பல தீர்மானங்கள் போட்டிருக் கிறோம்.  அதில், பெண்களுக்குச் சொத்துரிமைதான் மிக முக்கிய மானது.  அந்தச் சொத்துரிமையை, இந்து லா என்று சொல் லக்கூடிய இந்துச் சட்டம் ஏற்கவில்லை. ஏனென்றால், பெண்கள் அடிமைகள். சூத்திரர்களுக்கு எப்படி உரிமை யில்லையோ, அதுபோல், பெண்களுக்கும் சொத்துரிமை கிடையாது. அப்புறம் கொஞ்சம் மாறி, கணவன் சொத்து மனைவிக்கு வரலாம் என்று வந்தார்கள். கணவன் சொத்து மனைவிக்கு வரலாம், ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் என்று வியாக்கியானம் சொன்னார்கள். அது என்ன வென்றால், கற்புள்ள விதவையாக இருக்கவேண்டும்; அவர் மேல் புகார் ஏதாவது வந்தால், அவருக்குச் சொத்துரிமை கிடையாது. பறி போய்விடும் என்றது.


பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. பெண் களுக்கு உரிமை வேண்டும் என்று, அம்பேத்கர் அவர்கள், இந்து சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தார். அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னதினால்தான், அவர் விலகினார். பிறகு, செங்கற்பட்டு தீர்மானத்தை   தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, முதன்முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாநில அளவில்தான் இருந்தது.
அடுத்த கட்டமாக,  அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யின் முதலாவது ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு ஆண்களைப்போலவே சம சொத்துரிமை உண்டு என்பதில், முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச பிளவுகளை எடுத்துவிட்டு, இன்றைக்கு ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சொத்துரிமை என்று 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது.


ஆனால், இதில் ஒரு பெரிய கெட்ட வாய்ப்பு என்ன வென்று சொன்னால், எந்த மக்கள் பயன்படவேண்டுமோ, அந்தப் பெண்கள் இதனைத் தெரிந்துகொள்ளவில்லை. அதுதான் வேதனையான விஷயம். நமக்கென்ன உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை.
ஒரு தந்தை, தன்னுடைய மகன் பெயரில் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிடுகிறார். மகளுக் குக் கொடுக்காமல்; இதற்கெல்லாம் இனிமேல் இடம் கிடையாது. எனவே, 2005 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் விரும்பிய அந்த செங்கற்பட்டு சுயமரியாதைத்  தீர்மானம் இந்தியா முழுவதும் அமுலாகி இருக்கிறது என்பதை பெருமையோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க.விற்கு இதில் முக்கிய பங்குண்டு.


கேள்வி: டில்லியில் ராமலீலா தொடர்ந்து கொண்டாடப்படுகிறது; அதனை எதிர்த்து ராவண லீலா தொடர்ந்து நடத்தவில்லையே, ஏன்?

                                                                                     ------------------ சித்ரா, பெரம்பலூர்


பதில்: அதாவது, எல்லா நேரத்திலும், எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்பது அவசியமில்லை. நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் எது தேவையோ, அதை செய்வோம். தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் வருகிறோம். எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பல பிரச்சினைகளுக்கு தலையை கொடுத்திருக்கின்ற இயக்கம் நம்முடைய இயக்கம்தான்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா?


கேள்வி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா? இல்லையென்றால், நாம் ஏன் போராட்டம்
 நடத்தக்கூடாது?

                                                                                 ------------------- - சேகர், திருச்செந்தூர்

பதில்: நாம்தான் தொடர்ந்து போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறோம். இப்பொழுதுகூட சிவகிரி பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசியிருக்கிறேன். அவ்வப்பொழுது நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத்திலும் அதிகாரப்பூர்வமாக கிடையாது. உச்சநீதிமன்றத்திலும் கிடையாது. இது அவ்வளவும் தந்திரங்கள்தான்; பார்ப்பனர்களுடைய தந்திரங்களினால், சூழ்ச்சியினால் இருக்கிறதே தவிர, மாவட்ட நீதிபதிகள்வரையில் இட ஒதுக்கீடு இருக்கிறது என்று சொல்கிறபொழுது, அந்த மாவட்ட நீதிபதிக்கு அடுத்த கட்டம்தானே, உயர்நீதிமன்றம்; அதற்கடுத்ததுதானே உச்சநீதிமன்றம். அங்கேயும் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவேண்டுமா இல்லையா? அதிலும் தோல்வியுறுகிறவர்களை நீதிபதிகளாக்கு என்றா சொல்கிறோம்!


குறிப்பிட்ட சட்டம் வைத்திருக்கிறீர்கள்; இத்தனை ஆண்டு இருக்கவேண்டும் என்று சட்டம் வைத்திருக்கிறீர்கள். அதனை கடைப்பிடிக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்களே, ஏன் அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவில்லை. நாம் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறோம். ஒரு மாதத்திற்கு முன்புகூட விடுதலையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். ஆகவே, இதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் வருகிறோம் - தொடர்ந்து போராடவும் செய்வோம்.

ஈழத் தமிழர் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில்...


கேள்வி: ஈழத் தமிழர் மாணவர்களுக்கு மருத்து வக் கல்லூரியில் இடம் மறுக்கப்படுகிறதே, ஏன்?

                                                                               ------------------- தமிழரசன், விருத்தாசலம்

பதில்: இது ஒரு தவறான நிலைப்பாடு. தமிழக அரசு அதனை சரி செய்ய கடமைப்பட்டிருக்கிறது. உயர்நிலைப் பள்ளியில் அவர்களுக்கு 12 ஆவது வகுப்பு படிக்கலாம் என்கிற உரிமையை கொடுத்திருக்கிறார்களே, அவர்களும் படித்து முடித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற மாணவர்களுக்கு உள்ள உரிமையை கொடுக்கவேண்டும். மறுக்கக்கூடாது. இதற்கு நீதிமன்றத்தின்மூலமாக நாம் ஒரு பரிகாரத்தைத் தேடவேண்டும் - தேடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம்.


கணவன் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்ற வழக்கம் பெண்ணடிமை முறையா?

கேள்வி: திருமணம் முடிந்த பிறகு, ஒரு பெண் தன் கணவன் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்ற வழக்கம் பெண்ணடிமை முறையா?

                                        ------------------------------------ நன்னன், மேலமெஞ்ஞானபுரம்


பதில்: திருமணம் முடிந்தவுடன் எங்கே வேண்டுமானா லும் செல்லலாம். அது அவர்கள் இரண்டு பேருடைய விருப்பம்தான். மற்றவர்கள் குறுக்கிடும் உரிமை கிடையாது.



நம் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் வைதீகத் திருமணம் செய்துகொள்ளலாமா?
கேள்வி: நம் கொள்கையில் உள்ள தோழர் ஒருவர், ஆன்மிகம் அதிகம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, நற்பண்புகள் நிறைந்த ஒரு பெண்ணை விரும்பினால், சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லாத நிலையில், அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் திருப்திக்காக மத அடிப்படையிலான வைதீகத் திருமணம் செய்துகொள்ளலாமா?

                                                --------------------- சவுந்திரபாண்டியன், கீழப்பாவூர்

பதில்: அப்படியே விட்டால், என்னாகும் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கொள்கை கரைந்துவிடும். அந்தக் கொள்கையை ஒத்துக் கொள்ள வைப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. அப்படி அப்பெண்ணின் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றால், நீங்களே தனி வழியை ஏற்படுத்திக் கொள்வதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது.

இதற்காக நான் கொள்கையை விடுகிறேன் என்று சொன்னால், கோமுட்டி பால் ஊற்றிய கதையாக மாறிவிடும். விதிவிலக்கு இருக்கலாம்; விதிக்குத்தான் விலக்கு உண்டே தவிர, விலக்கு உண்டு, விலக்கு உண்டு என்று சொல்லி, எல்லாருமே விதியை புறக்கணித்தால் என்னாகும்.  ஒருவர் சிகரெட் குடிக்கிறதைப்பார்த்து ஒருவர் கேட்கிறார், ஏங்க சிகரெட் பிடிக்கிறீர்கள், புகைத்தால் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்களே? என்று.
அதற்கு சிகரெட் பிடிப்பவர் சொல்கிறார்,‘I used smoking occasionally. but occasion comes often and often!’ நான் எப்பவாவதுதான் சிகரெட் பிடிப்பேன். ஆனால், அந்த எப்பவாவது அடிக்கடி வந்தால் நான் என்ன செய்வேன் என்றால், அது  ஏமாற்று வேலையாகும்.

தோழர்களே, நல்லா நீங்கள் கருத்துகளை உள்வாங்கி இருக்கிறீர்கள் என்று தெரியும். நீங்கள் தொடர்ந்து விடு தலையை படிக்கவேண்டும்; விடுதலையில், ஞாயிறுமலர் கேள்வி - பதில் பகுதிக்கு நீங்கள் ஒரு கார்டில் கேள்வி எழுதுங்கள், அதற்குப் பதில் எழுதுகிறேன். அதேபோல், உண்மை இதழிலும் கேள்வி - பதில் பகுதி இருக்கிறது; அதற்கும் நீங்கள் கேள்வியை கேட்கலாம், பதில் எழுதுவேன்.

ஆகவே, கேள்வி இதோடு முடிந்துவிட்டது. இங்கே கேட்டலும், கிளைத்தலும் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். முடியவில்லை, நிச்சயம் தொடரும். உங்களுக்கு எந்த சந்தேகம் எப்பொழுது வந்தாலும் நீங்கள் தாராளமாகக் கேட்கலாம்.

உங்களுக்கு சரி என்று பட்டால், ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் ஏற்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சுதந்திரம் நம்முடைய இயக்கத்தில் மட்டும்தான் உண்டு.

பகுத்தறிவுவாதிகளுக்கு மட்டும்தான் உண்டு. அய்யா அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுது என்ன சொல்வார், நான் சொல்றேன் என்பதற்காக கேட்காதே, முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக ஏற்காதே, முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக நம்பாதே, முன்னோர்கள் பேசினார்கள் என்பதற்காக அதனை பின்பற்றாதே, உன் அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி நடங்கள்! என்றார்.


ஒருவர் எழுந்து தந்தை பெரியாரிடம் கேட்டார், அய்யா நீங்கள் சொல்வதை நம்புவதா, வேண்டாமா? என்று கேட்டார். உடனே அய்யா அவர்கள், நான் சொல்வதை நீ நம்பாதே, உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதைக் கேளு என்றார். அவர்தான் பெரியார்.


ஆகவே, அந்தக் கருத்துப்படி நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள் என்று சொல்லி, கேள்வி கேட்ட உங்களுக்கெல்லாம் நன்றி, நன்றி, நன்றி!
வணக்கம்!
                           ------      இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

                                                         --------------------"விடுதலை” 11-07-2014

17 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


சங்கு

திருக்கழுக்குன்றத்தில் உள்ளது வேத கிரீஸ்வரர் கோயில் சங்கு தீர்த்தக் குளம்பற்றி பிரபலமாகப் பேசப்படும். மார்க்கண் டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்த போது இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறந்து கொண்டுள்ளதாம். (தூய தண்ணீரில் சங்கு பிறக் காது என்பது அறிவியல்)

இந்தத் தீர்த்த குளம் இப்பொழுது சேறும் சகதி யுமாக உள்ளது. மார்க் கண்டேய முனிவர் தவம் இருந்தது - தெய்வ சக்தி நிறைந்தது எப்படி சகதி யாயிற்று? 12 ஆண்டுக் கொரு முறை சங்கு பிறக்கிறதா? கடைசியில் எப்பொழுது பிறந்தது? அந்த சங்கு இப்பொழுது எங்கு இருக்கிறது? அடுத்து எப்பொழுது பிறக்கும் விடை உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/83921.html#ixzz37JM1bqe3

தமிழ் ஓவியா said...


கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எச். வகேலா, எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை அகற்றிட வேண்டும் என்று ஜெனிபர் பிண்டோ, பிரியாராவ் ஆகியோர் கடந்தஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

நடைபாதைப் பகுதிகளில் உள்ள கோவில் ஆக்கிரமிப்புகளால் குழந்தைகளும், பெரியோர்களும், பொது மக்களும் சாலை விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெங்களூரு மாநகரத்தில் நடைபாதைக் கோவில்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் எவை அகற்றப்படக் கூடியவை? எவை அகற்ற இயலாதவை? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் கூறியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது? நடைபாதைகளில் உள்ள கோவில்கள் முக்கியமா? அல்லது சிறுவர்களின் உயிர்கள் முக்கியமா? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச் சினையினை மனிதர்களானாலும், கோவில்கள் ஆனாலும் சட்டம் ஒன்றே இதில் விதி விலக்குக் கிடையாது - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறாராகக் கருத்து கூறினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது ஒன்றும் புதுத் தீர்ப்போ, ஆணையோ அல்ல. உச்சநீதி மன்றமே இதைவிட அழுத்தமாக தீர்ப்புக் கூறியுள்ளது.

பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்வதில் தன் இயலாமையை பல நேரங்களில் அரசுகள் காட்டி வருகின்றன. இந்தக் கோவில்களில் எவ்விதப் புனிதமும் கிடையாது. பொதுப் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டு என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பு வெளி வந்தது. 2006இல்.

அதன் தொடர்ச்சியாக 2010 செப்டம்பரில் இதே உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (14.9.2010).

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் நடைபாதைகளில் கட்டப்பட் டுள்ளன. அதன் எண்ணிக்கை 77,450. ராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கோவில் கூடக் கிடையாது என்று அம்மாநில அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டதை நீதிபதிகள் நாகரிகமான மாநிலம் என்ற வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்தினர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அனுமதியின்றியும், பொது மக்களுக்கு இடையூறாக கோயில்களைக் கட்டுவது அநாகரீகம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்ப்புக் கூறியிருப்பது தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற திராவிடர் கழகத் தலைவரோ அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பதை மறந்து விடக் கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை அரசுகள் உணருமா? ஊடகங்களும் இந்த வகையில் வலியுறுத்துமா?

காலந் தாழ்ந்தாலும் மாநில அரசுகள், உள்ளாட்சித் துறைகள் செயல்படுத்துமா? எங்கே பார்ப்போம்!

யாருக்காவது கோவில்களை இடிப்பதில் தயக்கம் அச்சம் இருக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கழகம் தயாரே! கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் சொன்னதுதான் இது. (21.9.1975).

Read more: http://viduthalai.in/page-2/83923.html#ixzz37JMSrO9U

தமிழ் ஓவியா said...


புரட்டு


பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல் வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.

அவ்வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம்.

தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.

மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.

கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11. 05.1930

Read more: http://viduthalai.in/page-7/83875.html#ixzz37JNBvGjt

தமிழ் ஓவியா said...


சிவகாமி - சிதம்பரனார் புனர் (மறு) விவாகம்

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து, மெய்க்காதல் கொண்டு, தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்து வதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது, ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை யான கொள்கையுடைய சுயமரி யாதை இயக்கம் தோன்றி, இன் றைக்கு 4, 5 வருஷங்களே யாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரி யாதைத் திருமணங்கள் நடந்தேறி யிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டி ருக்கிறது. கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்ப தற்குமென்றே கருதப்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா?

அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்டவேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்த தோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள் ளலாம்.

கணவனையிழந்த கன்னிகை, தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப் பாட்டில் கழிக்கவேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமிபோல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிக மான செய்கை யென்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய எதிர்ப் பையும், இடைஞ்சலையும், மூடக் கட்டுப் பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடுகூடிய செய்கைகளையும், நடவடிக்கை களையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

(05-05-1930 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரிமேஜிஸ்திரேட்டுமாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும் ஈரோடு திரு.ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2ஆவது சுயமரியாதை மகாநாட்டுக்கென அமைந்திருந்த சிங்காரக் கொட்டகையில், திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்த (தாலி கட்டுதல் ஒழிந்த) திருமணத்தில் பேசியது ).

- குடிஅரசு - சொற்பொழிவு - 11.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNPVS6m

தமிழ் ஓவியா said...


தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்


தேவஸ்தான போர்டு நிருவாக கமிசனர்கள் நியமனமும், சர்க்கிள்கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங்களைப் பொறுத்த மட்டில் ஏற்பட்ட விசேஷம் என்னவென்றால் தேவதான போர்டு தலை வர்கள் அய்ந்து பேரும் பார்ப்பனரல்லாதவர்களாக நியமிக் கப்பட்டிருக்கின்றனர்.

அதோடு நீலகிரி ஜில்லா தேவதான கமிட்டிக்கு ஒரு ஆதிதிராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது.

தேவதானம் என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றி திரியும் சில ஆதிக்க கூலிகளுக்குமே உரியது. மற்றயோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கக் கூடாதென்ற கட்டுப்பாட்டைக்கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப் பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத் திற்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டி யாக முன்வந்து மேற்படி நியமனங்களைத் துணிகரமாக செய் துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிருவாகத்தையும் சுயமரியாதை உலகம் பாராட்டற்பாலது.

தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜாரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும்படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகுதாராளமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83878.html#ixzz37JNocWXt

தமிழ் ஓவியா said...


கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு


கணிதவிய லில் 50 ஆண்டு களுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்க லான கோட் பாட்டுக்கு இந் தியாவைச் சேர்ந்த நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனி யல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணித வியல் மற்றும் தொழில்துறையியல் கூட்ட மைப்பு சார்பில் ஜார்ஜ் போல்யா-2014 என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.

குவாண்டம் மெக்கானிக்ஸ் உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடு களுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959 ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளி யிட்டனர். ஆனால், அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதற்கு நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/83883.html#ixzz37JOH9xoF

தமிழ் ஓவியா said...


உறவினரும் கொள்கையும்!


தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்களாகிய நமக்குப் பல நேரங்களில் எதிரிகளை விட உற்றார் உறவினரே பெரும் இடர்ப்பாடு தருகின்றனர். இது தந்தை பெரியாருக்கே நிகழ்ந்தது தான் நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டும்.

ஈரோட்டிலே முனிசிபல் தலைவராக இருந்து ஆச்சாரியார் அவர்களே உமது சுகாதார அதிகாரியைச் சேலத்திற்குக் கொஞ்ச நாள் கடன் தரவும் என்று வேண்டிய அளவு நன்மைகள் செய்தவர். குடிநீர் வசதிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டி, குழாய்களில் தண்ணீர் வரும்படிச் செய்தவர்.அதில் தீட்டு கழுவித் தண்ணீர் பிடிக்கும் நிகழ்ச்சியை நாம் பெரியார் படத்தில் பார்த்தோம்.

கடைசிவரை தந்தை பெரியார் அவர்களின் தாயார் அந்தக் குழாய் நீரைப் பயன் படுத்தாமல் ஆற்றிலிருந்து நீர் பிடித்து வந்துதான் பயன்படுத் தினார்களாம்.அய்யாவும் கடைசியில் ஏன் என்று பிடிவாதமாகக் கேட்க, அம்மா அந்தத் தண்ணீர் சுத்தமில்லாதது என்றாராம்.

ஒன்றும் புரியாத பெரியார் எப்படிச் சுத்தமில்லை என்று கேட்ட தற்கு அம்மா அளித்த பதில் நம் ஒவ் வொருவருக்கும் கன்னத்தில் கொடுக்கும் அறை போன்று அந்தக் காலத்தை நினை வூட்டும்.

" குழாய் தண்ணீரெல்லாம் சரி தான். ஆனால் அந்தப் பம்பு சுவிட்ச்சைப் போடும் ஆள் கீழ்ச்சாதிக்காரர்" என்றா ராம்.

இன்று நமது உற்றார், உறவினர் செய்கைகள் பல நமக்குச் சங்கடத்தைத் தருவது நம்மில் பலருக்கு வெட்கமும், வேதனையும் தரக்கூடியது என்றாலும் நாம் தலைவர் பெரியாரைப் போலவே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர கோபமோ,முரட்டு வார்த்தைகள் வரும் படியோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன படி "அவர்கள் சுபாவம் அது" என்று அவர் களுக்குத் துணிவில்லை, அறிந்தது அவ் வளவு தான் என்று எடுத்துக் கொண்டு அன்பு காண்பிக்க வேண்டுமே தவிர ஒதுங்கக் கூடாது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த எதிரிகளின் வார்த்தைகளைப் பற்றிக் கவலை படக் கூடாது.

எனது மகள் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமெரிக்காவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வரவேற்பு வைத்திருந்தோம். அதை விரும் பாத எனது மாமியார் வரவில்லை. அவர்களைப் பார்க்கச் சென்ற மணமக்களைப் பார்க்கவும் இல்லை. இது வளர்ந்து எனக்கும் அவர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையே இல்லை. ஆசிரியர் அய்யா கூட நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியும் நான் போக வில்லை. எப்படி ஆசிரியர் அவர்கள் கொள்கைக்காக தனது மாமனாருக்குக் கொள்ளி வைக்க மாட்டேன் என்று மாமியார் கொள்ளி வைக்காவிட்டால் அவ்வளவு சொத்துக்களையும் கிருத்துவ மிசனரிக்கு எழுதிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், தந்தை பெரியார் அவர்களும் " நெருப்புத் தானே, வைத்து விடு, அவ்வளவு சொத்துக்களும் போகப்போகின்றதே என்று சொல்லியும், வைக்க மறுத்துக் கடைசிவரை அவ ருடன் பேசாமலே இருந்தாரே அது மாதிரி நம்மில் பலருக்கு நேர்ந்துள்ளது.

எனது மாமியார் கடும் உழைப்பாளி. நல்ல அறிவாளி. அத்தனை குழந்தை களையும் நன்றாகப் படிக்க வைத்து அனைத்தும் செய்தவர்.இரண்டு பெண் களையும் மருத்துவர்களாக்கி மகிழ்ந்தவர் எனது மாமனார் தனது பிள்ளைகளை விடத் தனது உடன் பிறப்புக்களுக்குத் தான் எல்லாம் செய்கின்றார், என்ற நமது அனைவர்க்கும் பழக்கப்பட்ட தொடர்கதை வசனந்தான். அதுவே என் துணைவியாரும், அவரது தங்கையும் இரண்டு குடும்பங்களும் நம் குடும்பங்கள் தான் என்று மனமாரச் செய்ய வழி செய்து விட்டது.

தமிழ் ஓவியா said...


எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைசியில் ஊருக்குத் தான் செல்ல வேண்டும் என் றார். ஏன் என்றால் இங்கே அமெரிக் காவிலே என்னைப் பெட்டியிலே போட்டு அனுப்பி விடுவாய். எனக்கு உற்றார், உறவினர் அனைவரும் வந்து கொட்டி, முழக்கித்தான் செல்ல வேண் டும் ,என்றார்கள். நான் அதெல்லாம் பார்க்க முடியாதே, காதிலேயும் விழாதே என்றேன். அதெல்லாம் எனக்குத் தெரியும், விழும் என்று சொல்லி, ஏன் மானமிகு ஆசிரியரின் இரங்கலுரை யையும் கேட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் கடைசியாக ஊருக்குப் போகப் போகின்றார்கள் என்பதால் உறவினர், நண்பர்கள் (அம்மாவுக்கு அமெரிக்கா வில் நிறைய நண்பர்கள் )அனைவரையும் வரச் சொல்லி பிரிவு விழா நடத்தினோம். அதில் பேரக் குழந்தைகளும், நண்பர் களும் ,ஒவ்வொருவரும் அப்பா, அம்மா விற்கு அவர்களைப் பற்றிச் சொன்னது அனைவரையும் அழ வைத்து விட்டது. இதை நான் பலரிடம் சொவதுண்டு. வய தானவர்கட்கு அவர்கள் இருக்கும் போதே விழாக்கள் நடத்த வேண்டும், சென்ற பின் சொல்வது அவர்களுக்குக் கேட்காது என்று.

ஒரு வழியாகச் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது என் துணைவி யாரின் பெரு முயற்சியாலும், மாமியாருக் கும் கடைசிகால அச்சம் வந்ததாலும் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அப்பா அம்மா படங்களுக்கு வருத்தமும், வாழ்த்தும் தெரிவிக்க உறவு மீண்டது. நிற்க முடியாமல், திருவெறும் பூர் பெரியார் மணியம்மை செவிலியர் பயிற்சி மாணவியர் உதவியுடன் நின்று அவரது கையாலேயே செய்த அற்புத மீன் குழம்பைச் சாப்பிட்டு வந்தேன். அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனை வரும் சென்று பார்த்து விடை பெற்றும் வந்தனர். அவர் விருப்பப் படியே எளிமையாக அவர் இறுதி நிகழ்வுகளும், படத்திறப்பும் நடந்தது. நமக்குப் பிடிக்காத மந்திரங்கள் நிகழ்வுகளும் அவர் விருப்பப் படி நடந்தது.

அடுத்து நமக்கெல்லாம் பெரிய இடர் ப்பாடு நமது குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இல்லத் திருமணங்கள். இதிலேயும் நாம் எவ்வளவு தான் மந்திரங்களின் பொருளை விளக்கிச் சொல்லி வெட்கப் பட்டாலும், இன்றும் பலர் அர்த்தமற்ற மத வழித் திருமணங் கள் நடத்துகின்றனர். அதில் நாம் பெண்ணின் பெற்றோர்கள் என்றால் கட்டாயம் மணமகன் இல்லத்தார்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் சென்னையில் தங்கும் போது வசதிக்காக நியூ உட்லண்ட்சு விடுதியில் தங்குவேன்.அங்கு பார்க்க வந்த பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வேல் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பன விடுதி என்று காபி குடிக்க மறுத்து விட்டார். அவருக்கே அவரது பெயர்த்தியின் மணவிழா நடந்தது பெரும் இடர்ப்பாடாகி விட்டது. விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இது நம்மில் பலருக்கு நிகழும் போது எதிரி களின் பேச்சுக்கள் பற்றிக் கவலையில்லை என்றாலும், நமது கொள்கையை நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கே செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மகிழ்வைக் குறைத்து விடுகின்றது.

இதையெல்லாம் மானமிகு ஆசிரியர் அவர்கள் நமது கொள்கைக் குடும்பத் தினர்க்கே, எனக்கும் சேர்த்துத் தான் ,அறிவுரைகள், ஆறுதல்கள் வழங்கி அய்யா வழியில் "அவர்கள் சுபாவம்" ஆனால் எதிர் காலம் நமது தான் என்ற உறுதியைச் சொல்வார்கள். காலம் மாறித்தான் வருகின்றது. நாம் நமது கொள்கையைக் கடைப்பிடிப்போம், உற்றாரும் ,உறவுகளும் திருந்தும் காலம் வரும். அது வரை பொறுமை காப்போம், அவர்களிடம் அன்பு செலுத்துவோம், கோபம் தவிர்ப்போம்.

வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு.

- சோம.இளங்கோவன் (அமெரிக்கா)

Read more: http://viduthalai.in/page2/83871.html#ixzz37JOTrt85

தமிழ் ஓவியா said...


தபால் டெலிவரி! இல்லை!

தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும் பட்ட அரும்பாட்டின் காரணமாகவேதான் இன்றைக்குத் தமிழரினம் குறிப்பாக, ஆதி திராவிடப் பெரு மக்கள் மஞ்சள்குளிக்க முடிகிறது.

அய்யா அவர்கள் இயக்கம் காண்பதற்கு முன்பு இந்நாடு இருந்த நிலை இன்றைய இளைஞர் தலைமுறையினர் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. அதனாலேதான் அய்யா அவர்களது தொண்டின் மேன்மையை உணராது அரசியல் வெட்டுக்கிளிகளாகப் பச்சை கண்ட இடம் பறந்து குதிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

எங்கள் வில்லிவாக்கத்தை எடுத்துக் கொண்டால், உயர் ஜாதிக்காரர்கள் வசிக்கும் இடம் என்று கருதப்படும் சன்னதி தெரு மாடவீதிகள் பக்கம் ஆதித் திராவிடர்கள் நடந்து போகவே முடியாது. முதலாவது உலக யுத்தம் நடந்த போது, ரஜ்பட், ஈரான், பாக்தாத் முதலிய வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த ஆதிதிராவிடத் தோழர்கள் ஆவலோடு தங்கள் வீடுகளுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களை, சேரிக்குள் வந்தால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதி, தபால்காரன் ஆஞ்சநேயர் மண்டபத்தின் அருகே போட்டு விட்டுப் போய் விடுவான். அவன் போட்டு விட்டு வெகுதூரம் போனதற்குப் பின்னாலேயே அந்தத் தபால்களை வேகவேகமாக எடுத்து வருவார்கள்.

- பெரியார் பெரும் தொண்டர் வில்லிவாக்கம் அ. தியாகராசன் கூறிய தகவல் இது.

Read more: http://viduthalai.in/page2/83873.html#ixzz37JP4f1DN

தமிழ் ஓவியா said...


கடவுளை பரிகாசம் செய்யலாமா?


சிவன் தன் பாரியாளுடன் 3,60,000 நாட்கள் கலவி செய்துள்ளான். அதனால் வந்த விந்தை சூன்ய வெளியில் பீச்சி அடித்துள்ளான். அதை அக்னி பகவான் எடுத்து குளிக்க வந்த பெண்களிடம் கொடுக்க அவர்கள் பெற்றவுடன் குழந்தைகளாய் மாறிவிட அந்த ஆறும் ஓரிடத்தில் வைக்க ஆறும் ஓருடலாயும் தலை ஒன்றாகவும் மாறி நின்றுள்ளது. அதுதான் ஆறுமுக கடவுளானது.

சிவன் 3,60,000 நாட்கள் தன் மனைவியுடன் கலவி செய்ததை பார்த்து எண் ணியவன் யார்? ஆறு குழந்தைகளும் உடல் ஒன்றானது - தலை மாறாதது ஏன்? முருகக் கடவுளுக்கு மனைவிகள் இரண்டு இவருக்கு குழந்தை இல்லை. ஏன்?

கடவுள் சிலை செய்து அதற்கு கோவில் கட்டி பிரதியாண்டும் திருமணம் செய்கிறோம் எல்லாம் கொடுக்கும் கடவுள் செயலைக் கண்டு இப்படியெல்லாம் எழுதி கேளிக்கையாக்கி கும்பிடுவது சரியா?

- மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/83872.html#ixzz37JPD4Ysl

தமிழ் ஓவியா said...


மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?


- கி.தளபதிராஜ்

தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.

"நாடார் சகோதரர்களை உண்மை யான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தன மான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார். கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.


தமிழ் ஓவியா said...

"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்? எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன? தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/83884.html#ixzz37JQFXF9R

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானம் - அஞ்ஞானம்


விஞ்ஞானம்: கிருஷ்ணகிரி சுண்டே குப்பம் பகுதியைச் சார்ந்த வேலப்பன் மகன் மதியழகன் (28) ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்குமிடத்தில் படுக்கைகளை சரி செய்யும் பணியில் பணியாற்றி வருகிறார். அவர் ஊருக்கு வரும்போது பழுதான செயற்கைகோள் செல்பேசியைக் கொண்டு வந்தார். ஊரில் பழுதை நீக்கி செயல்பட வைத்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கியூ பிரிவு காவலருக்கு கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செயற்கைகோள் செல்பேசி பயன் படுத்துவது குறித்து ஜி.பி.ஆர்.எல் கருவி மூலம் தெரியவந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அஞ்ஞானம்: நாகர்கோவில் வடிவீசுவரம், அழகம்மன் கோவிலில் 29.6.2014 அன்று பலகோடி ரூபாய் செலவு செய்து மகாகும்பாபிஷேகம், யாரும் நடத்தாத முறையில் அதிக விளம்பரத்துடன் காலை 8.30 மணியளவில் நடந்தது. வடசேரியைச் சார்ந்த சி.இரத்தினம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிடும்போது கழுத்தில் உள்ள நாலேகால் பவுன் தங்க செயின் தாலியுடன் கூடியது. பெண் திருடர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளார்கள். அழகம்மாள் இன்று வரை திருடர்களை பிடிக்கவில்லை, செயினும் கிடைக்க வில்லை. என்ன மகிமை! - எஸ்.நல்லபெருமால் (வடசேரி)

Read more: http://viduthalai.in/page3/83889.html#ixzz37JRTVzFD

தமிழ் ஓவியா said...


இனி இம்மண்ணை ஆள்வது அரசப் பயங்கரவாதமே!


அடிப்படைக்கே அல்லாடும் கோடானு கோடி
மக்கள் வதியும் மண்ணில்மத
அடிப்படை வாதிகள் கையில் ஆட்சி;
மீண்டும் வேதகாலம் திரும்பும்
மக்கள் நாயகத்தின் பேரால் மதப்பயங்
கரவாதி பிடியில் இந்தியம்
சிக்கலைத் தீர்க்காமல் சீர்குலைவு செய்யும்
புஷ்யமித்திர சுங்கன் கூட்டம்!

பேராயக் கட்சியின் பித்தலாட்ட ஆட்சியைத்
துடைத்தெறிய எண்ணிய மக்கள்
ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் கோலத்தில்
அளித்த தீர்ப்பின் வெளிப்பாடு!
குரங்கு கையில் பூமாலை குரங்குப்
படைகளுக்குச் சொல்லவும் வேண்டுமா?
அரத்தக் களரியால் நாட்டை அமளிக்
காடாக்கத் துடிக்கிறது ஆரியம்!

இந்நாட்டுத் தேசியம் இந்து இந்தியை
உருஉள் ளடக்கமாய்க் கொண்டது
இந்நாட்டில் தேசிய இனங்களை ஒடுக்கியது
பார்ப்பன டில்லி வாலாக்கள்
மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துவந்த
மய்யஅரசை மக்கள் நிராகரிக்க
மாநில அரசுகளின் தயவில் கடந்த
முப்பது ஆண்டுகளாய் மய்யஅரசு!

மண்டல் குழுப் பரிந்துரையை வி.பி.சிங் மய்யஅரசில்
ஏற்றதால் ஆட்சியைக் கவிழ்த்தனர்
மண்டலுக் கெதிராய்க் கமண்டலம் தூக்கியோர்
பரிந்துரையை ஏற்றிட வைத்தது
தமிழரின் கனவுத் திட்டமாம் தமிழன்
கால்வாய்த் திட்டம் செயலாக்கம்
செம்மொழியாய்த் தமிழும் இன்னபிற மொழிகளும்
ஆனது மாநிலப் பங்கேற்பால்!

பார்ப்பன சனதாவின் எதிர்பாரா வெற்றியால்
பார்ப்பனர் உள்ளங் குளிர்ந்தது!
பார்ப்பனர் பண்ணையம் ஏற்கெனவே கேட்பா
ரில்லை; ஆட்சி அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ். கட்டுக்குள்! இவ்வாட்சி எந்தத்
திசையில் பதவியேற்பில் ராசபக்ஷே!
பார்ப்பனர்க்குக் கொண்டாட்டம் திண்டாட்டம்
பார்ப்பன ரல்லாத மக்கட்கே!

மக்கள் நலத் திட்டத்தை மாநிலத்தை யாளும்
செயா, ராமன்பேரால் முடக்கினார்
மக்கள் நலனைவிட மக்கள் விரோத
இந்துவியத் திட்டம் செயலாக்கம்
மய்ய மாநில அரசுகளின் தலைவர்கள்
மதவெறிச் சிந்தனையில ஊறியவர்
அய்ந்தாண்டுக் காலம் இம்மண்ணை ஆள்வது
இனி அரசப் பயங்கர வாதமே!

- கவிஞர் இனியன், திருச்சி-13

Read more: http://viduthalai.in/page3/83887.html#ixzz37JRcPwhi

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?


பம்பை நதியில் சேரும் அசுத்தங்களால் நீரில் நோய்க் கிருமிகள் அபாய நிலையைவிட மிக அதிக அளவில் உள்ளன என கேரள மாநில சுற்றுச்சூழல் துறையினர் எச்சரித்துள்ளனர். சாதாரணமாக 100 மி.லிட்டர் நீரில் 500 கோலிபாம் கிருமிகள் வரை, இருக்கலாம் இதுவே சற்று கடுமையான நோய்களை உண்டாக்கும் அளவாகும். சில தினங்களுக்கு முன்னர் பம்பை நதியில் 100 மி.லி. நீரில் 3000 அளவு கோலிபாம்கள் இருந்தன.

தற்போது பம்பை நதியில் குறைந்த அளவு நீர்வரத்து இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்காக வலியானை வட்டம் அருகே உள்ள நிரந்தர தடுப்பணை மதகுகளை அடைத்து வைத்துள்ளனர். பம்பை திரிவேணி சங்கமத்துக்கு மேலே மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்கு மேலே சென்று அறுசெழிக்குழி ஆற்றில் குளித்தும், துணிகளைத் துவைத்தும் அசுத்தப்படுத்துகின்றனர்.

ஹக்கி ஆற்றின் கரையில் பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வரும் பக் தர்கள் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், சிறியான வட்டம் அருகே நுனுஞான் ஆற்றங்கரையில் உள்ள விரிகளில் தங்கியுள்ள பக்தர்கள் இந்த ஆற்றைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின் றனர். பலர் சமையல் செய்து சாப்பிட்டபின் எச்சில் இலை மற்றும் கழிவுகளை ஆற்றில் போடுகின்றனர்.

செழிக்குழி, ஹக்கி நுனஞான் ஆறுகளில் வரும் சிறிய அளவிலான நீர் பம்பையில் சேருகிறது. மொத்த நீரும் தேக்கி வைக்கப்பட்டு தடுப்பணைக்கு மேலே வழிந்தோடுகிறது.
பக்தர்கள் குளிக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் துறையினர் செவ்வாய்க்கிழமை நீரை ஆய்வு செய்தனர். அப்போது 100 மி.லிட்டர் நீரில் 5000 கோலிபாம் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை யினர், குடிநீர் எடுக்கும் பகுதி மற்றும் அசுத்தமாக்கப்படும் பகுதிகளில் அசுத்த மாக்கப்படுவதைத் தடுக்கவும், பம்பை நீரை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.

நன்றி: தினமணி நாளிதழ் நாள்: 7.1.1999

Read more: http://viduthalai.in/page3/83891.html#ixzz37JRqODDV

தமிழ் ஓவியா said...


பேரீச்சம்பழம்


தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழவழப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page8/83899.html#ixzz37JSrHheu

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர்கள் என்றும் வெற்றியாளர்கள்....!


ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரத்தினைச் சார்ந்த தோழர் பகுத்தறிவாளர் செல்வபாண்டியன் அவர்தம் குடும்பத்தினர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எமரால்ட் ஒளிவண்ணன் அவர்கள் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார் (9.7.2014, இரவு 8 மணி).

செல்வபாண்டியன் அவர்கள் உலகப் புகழ் பெற்ற மெல்பெர்ன் ஸிமிவிஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பேராசிரியராக பணி புரிகிறார். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், சிறந்த பேராசிரியர்கள் என்ற வகையில் செல்வபாண்டியன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

அவரது மகன் எழிலன் பொறி யியல் துறை மற்றும் மேலாண்மை துறை இவற்றில் ஒரே நேரத்தில் பயின்று பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவ ராக தேர்ச்சிப் பெற்று விருது வாங்கியவர். செல்வ பாண்டியன் அவர்களது வாழ்விணையர் சங்கமித்திரை கணிதப் பேராசிரியராக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். மகன் எழிலன் அவர்தம் வாழ்விணையர் சாருபிரபா இருவரும் சமீபத்தில் புதுச்சேரியில் மிக எளிமையான முறையில் சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொண்டனர்.

செல்வபாண்டியன் அவர்களது தந்தையார் திரு. சே.ப.வெங்கடேசன் அவர்கள் வேலூரில், அன்னை ஈ..ரா.மணியம்மையாரிடம் பெரியார் பெருந் தொண்டர் பட்டம் பெற்றவர். மூன்று தலைமுறையாக தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் போற்றி பின்பற்றி வரும் இக்குடும்பத்தினர் நம் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் என்றும் சோடை போனவர்கள் அல்லர், பெரும் சாதனை யாளர்கள் என்பதற்கு இவர்தம் குடும்பம் இன்னொரு எடுத்துக் காட்டு.
ஆசிரியர், வாழ்த்துகளை தெரிவித்தார். சிறிது நேரம் ஆசிரியரிடம் உரையாடிச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/83970.html#ixzz37LtKmExJ