Search This Blog

2.6.14

திருக்குறளும் - பார்ப்பனர்களும்!



திருக்குறளை பிதற்றல் நூல் என்று சொன்னவர்களும் உண்டு. அவர்கள் யார்? எத்தகையவர்? என்பதை விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
திருக்குறளின் பெருமை

திருக்குறள் நூல் உலகத்தார் அனைவ ராலும் போற்றிப் புகழப்படுகிறது. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலா வருகிறது. நடுவு நிலையாக நீதி களைக் கூறுகிறது. தவறான பழக்க வழக் கங்களைக் கண்டிக்கிறது. உலகத்திற்கே பொதுவான நீதிகளைக் கூறுவதன்றி ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு பிரி வினர்க்கோ தனித்து நீதி கூறப்படுவ தில்லை.
உலகு என்னும் சொல் சுமார் அய்ம்பது இடங்களுக்கு மேல் இந்நூலில் கையாளப்படுகிறது. தமிழ் என்றோ தமிழ்நாடு என்றோ சொல்லப்படுவதாக இந்நூலில் எங்கும் காணமுடியாது.

திருக்குறள் ஆட்சி

திருக்குறளை எடுத்தாளாத புலவர் களே இல்லை எனக்கூறலாம். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய பண்டைய நூல்களில் திருக்குறளைப் பொன்னே போல் எடுத்துப் பொதிந்து வைத்துள்ளனர்

-மணிமேகலையில்.
தெய்வந்தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழையெனப்
பொய்யில் புலவர் பொருளுரை தேறாய்

எனத் திருக்குறளை எடுத்தாளுவதோடு வள்ளுவரைப் பொய்யில் புலவர் என்றும், பொருள் பொதித்த உரை என்றும் போற்றப்பட்டுள்ளமை காண்க.
கம்பர் சுமார் 500 குறட்பாக்களைத் தம் நூலில் அமைத்துப் பாடியுள்ளார். சில இடங்களில் குறளுக்கும் புத்துரையும் கூறியுள்ளார். மகாவித்துவான் ச.தண்ட பாணி தேசிகர் அவர்களால் இது தனி நூலாக வெளிவந்துள்ளது.

இடைக்காலத்தார் செய்த கேடு

இவ்வளவு பெருமை வாய்ந்த குறள் நூலுக்கு இடைக்காலத்தார் சிலர் பல கேடுகளைப் புரிந்துள்ளனர். அவர்களுள் பரிமேலழகரும் ஒருவர்.


பரிமேலழகரை யான் மதித்து வருகிறேன். அவர் உரை போன்று எழுதுவது அரிது. இருப்பினும் பரிமேலழகர் வட மொழியாளருக்கு அடிமையாகி ஒரு பத்து விழுக்காடு குறளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித் துள்ளார். தாம் எழுதும் நூல் அவதாரி கையில் அறத்திற்கு விளக்கம் கூற வந்தவர்.

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித் தலுமாம்என எழுதியுள்ளார், மனு என்ன யாவருக்கும் பொதுவான நூலா?


பார்ப்பனர் களுக்கு மட்டும் சாதகமான நூலாகும். நெருப்பில் பொசுக்கப்பட வேண்டிய நூலாகும். அதனாலன்றோ மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி?

என்று கூறினார், மனுநூலைப் படிப் பார்களோ என்னாமல் நினைப்பார்களோ என வினவினார். நினைத்தாலே மனம் கெட்டுப்போகும் எனக்குறிப்பிட்டார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்னும் குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகர் எப்படித்தான் மனுநூலை ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. மேலும் வள்ளுவர் வடநூல் முறையை உட்கொண்டு இவ்வாறு கூறினார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகிறார்.

கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட் பாக்களின் உரையை நோக்குக. 434, 501, 648, 924, 993 காமத்துப்பால் அவதாரிகை, 1330 ஆக 7 இடங்கள்.

சில இடங்களில், அரசன் புரோகிதர் களைத் துணையாகக் கொள்ள வேண்டும் - என எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பவர்களாம். இதுவும் தேவையற்ற உரையாகும். கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட்பா உரைகளைக் காண்க.

442, 45 அதி - அவதாரிகை, 501

முதலில் புரோகிதர்களை நாட்டை விட்டு ஒழியுங்கள், அவர்களால் நாடு கெட்டது போதும்
                ---------------- விவேகானந்தர் வாக்கு.
இவை போன்ற இடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிற குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் கற்போமானால் திருவள்ளுவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

முற்காலத்தில் நூலுக்கு அரங்கேற்றம் என வைத்துப் பல புலவர்கள் முன்னி லையில் நூலை எடுத்துக் கூற வேண்டும். அவைப் புலவோர் குற்றம் கண்டு கூறு வாராயின் நூலாசிரியர் அவற்றைத் திருத் திக் கொள்ளுதல் வேண்டும் இல்லையேல் சமாதானம் கூற வேண்டும் அதன் பின்னரே நூல் வெளிவரும். அதுபோன்று உரைக்கும் அரங்கேற்றம் வைத்திருப்பார் களானால் மேற்சொல்லப்பட்ட குறை களெல்லாம் நீக்கப்பட்டிருக்கும். ஏனோ அவ்வாறு செய்தார்களில்லை.

வைணவ மதத்து ஆழ்வார்கள் பன்னிருவரில் திருமங்கையாழ்வார் என்பவர் ஒருவர். இவர் ஆறு நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:

பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந் தாண்டகம் சிறிய திருமடல் பெரிய திருமடல் - என்பன வாம்.
இவற்றுள்  இறுதியிலுள்ள இரு நூல் களும் அகப்பொருள் நூலாகும். மட லேறுதல் அகப்பொருள் நூலுள் ஒரு துறையாகும்.

அஃதாவது, தலைவியைக் களவுப் புணர்ச்சியில் புணர்ந்து பிரிந்த தலைமகன் தோழியை இரந்தும் தன்குறை நிறைவேறப் பெறாமல் சேட்படுக்கப் பட்டான். பிரிவுத்துயரால் ஆற்றாமை விஞ்சியது. அதனால் நாணம் முதலிய வற்றை விட்டு தலைவியின் வடிவையும், ஊரையும் பேரையும், தனது ஊரையும் பேரையும் ஒரு படத்தில் எழுதி, அச்சித் திரப் படத்தைக் கையிற்கொண்டு, பனை மடலினால் ஒரு குதிரை உருவம் செய் வித்து, அதன்மீதுதான் ஏறிக்கொண்டு, அதனைப்பிறரால் இழுக்கச் செய்து வீதிவழியே பலருங்கூடும் பொது இடங்களில் சுற்றி வருவான்.

இக்கடுந்தொழிலைக் கண்ட உற்றார் உறவினர் மனமிரங்கி அத்தலைவியை தலைவனுக்கு மணம் செய்து கொடுப்பர்.

ஆடவர்கள் இவ்வாறு மடலேறலாமே யன்றி, பெண்கள் எவ்வளவு காமம் மீதூர்ந்தாலும் மடலேறுதல் கூடாது என தமிழிலக்கணம் விதித்துக் கூறுகிறது.

எத்திசை மருங்கினும் மகடூஉ மடன் மேற் பொற்புடை நெறிமை இன்மையான                           (தொல் - 981)


எண்ணில் காமம் எரிப்பினும் மடல் மேற் செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே

(சீவகசிந்தாமணி)


மேற்கண்ட கருத்தை ஒட்டியே திரு வள்ளுவரும்


கடலன்ன காமம் உழந்தும் மடலே றாப் பெண்ணின் பெருந்தக்க தில்
(குறள் - 1137)

கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர் தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல, மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்து இல்லை.
(பரிமேலழகர்)

இக்குறட்பாவின் கருத்தைத் திருமங்கை  ஆழ்வார் தமது பெரிய திருமடல் என்னும் நூலில் பொன்னே போல் போற்றிப்பதிய வைத்துள்ளார். அப்பகுதி யாவது,

- மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்போல் மன்னும் மடலூ ரார் என்பதோர் வாசகமும் தென்னு ரையில் கேட்டறிவ துண்டு (கண்ணி - 38, 39)
தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு என்ன பொருள்? தென்னாட்டுத் தமிழ் மொழியின் கண் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கேட்டு அறிந்ததுண்டு என்பதாம். பெரிய திருமடலில் கூறப் படும் தலைவி வடமொழி கற்ற தலைவி யாவாள். அதனால் கற்றறிந்ததுண்டு எனக் கூறாமல் கேட்டறிவதுண்டு எனக் கூறினாள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பலர் உரை எழுதியுள்ளனர். முழுதும் மணிப் பிரவாள நடையே. மணியும் முத்தும் கலந்ததுபோலத் தமிழும் வடமொழியும் கலந்து எழுதிய நடையே மணிப்பிரவாள நடையாம். இக்கலப்பு நடையைப் பரிதிமாற் கலைஞர் ஆபாச நடை என ஒதுக்குவார்.

பெரியவாச்சான் பிள்ளை உரை

பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஒரு வைணவப் பார்ப்பனர் (அய்யங்கார்) நாலாயிரம் பாடல்களுக்கும் மணிப்பிர வாள நடையில் இவர் ஒருவரே உரையெழுதியவர். மற்றையோர் சில சில பகுதிகளுக்கே உரை எழுதினர். சோழ நாட்டில் திருப்பனந்தாளுக்கு அண்மை யில் உள்ள சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிள்ளை என்பது அவருக்குக் கொடுத்த பட்டம் போலும்.
இவர் மேற்கண்ட பெரிய திருமடல் கண்ணிக்கு உரை கூறும் போது,
தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு மிலேச்சசாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு - என எழுதியுள்ளார். என்னே கொடுமை! இதை எப்படித் தாங்கிக்கொள்வது!

தமிழ்மொழி மிலேச்ச சாதி மொழி யாம். திருக்குறள் மிலேச்ச சாதி நூலாம். மடலேறுதல் பெண்களுக்கு வழக்க மில்லை என விதி வகுத்த தொல்காப்பியர் மொழி மிலேச்ச சாதி பிதற்றும் தமிழா கிறது.

திருக்குறளின்மீது இவர்களுக்கு ஏன் காழ்ப்பு உணர்ச்சி தோன்றுகிறது? மனு நீதி போலத்திருக்குறள் அவர்களுக்குச் சார் பாக நீதி கூறவில்லை. பல குறட் பாக்களில் அவர்களுக்கு எதிர்ப்பாகவும் கூறுகிறது.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று                            (குறள் - 249)

இக்குறட்பாவை அவர்கள் ஏற் பார்களா? பிறர் பொருளால் கேள்வி செய்தே தம் வயிற்றை வளர்ப்பவர்கள் எப்படி ஏற்பார்கள்? இதனுடைய சூதினை அறியாத நம் பண்டைய அரசர்களும் ஏமாந்து பல வேள்விகளைச் செய்து பெயர் பெற்றார்கள் என அறி கிறோம். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் பெயர்களைக் காண்க.

மணிப்பிரவாள நடையில் உரையெழு தும்போது, பல இடங்களில் வேதத்திலி ருந்தும், கீதையிலிருந்தும் மேற்கோள் காட்டி - இவ்வாறு விசேட தருமம் கூறு கிறது எனவும் அடுத்துத் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி - இவ்வாறு சாமானிய தருமம் கூறுகிறது எனவும் எழுதியுள்ளார்கள். வேதம், கீதை தெய்வம் கூறியதாம்.

வேதத்தைப்பற்றி வள்ளலார் கூறி யதைக் கீழ்க்காண்க.
வேதாந்தம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாந்தத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை நெறிதோன்றவிலை என்ன பயனோ இவை.

கீதையைப் பற்றி சிவஞான சித்தியார் கூறுவதைக் கீழ்க்காண்க.

பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக் கூர்த்த அம்பாலே எய்து கொன்றரசாளேன் என்ன தேர்த் தனிலிருந்து மாயை செய்து மால்கொல்லச் செப்பும் வார்த்தை நூலாக்கிக் கொண்டாய்...
(அருணந்தி சிவாச்சாரியார்)

வைணவர்களில் தமிழராகப் பிறந்தவர்களும், இச்சூதுவாதினைப் புரிந்து கொள்ளாமல் தம் மொழியை விட வடமொழி மேலானது எனவும், வட மொழியாளர் தெய்வப்பிறப்பினர் எனவும் நம்பி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். நம்மையும் நமது நூலையும் இகழ்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களைப் புகழ்ந்து பேசியும் எழுதியும் வரு கிறார்கள்.
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று கூறிய பாரதியார் பாவடியை நோக்குக.

திருவள்ளுவரும், புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை (குறள் - 966)

என்று கூறினார். மானம் இல்லாதவரே தம்மை இகழ்வார் பின் சென்று அடிமை களாயிருப்பர். அதனால் புகழும் உண் டாகாது எனக்கூறினார். புரட்சிக்கவிஞரும்,

அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்த நெடும் தூக்கத்தின் பயனே அன்றோ?
எனக்கூறி வருந்தினார்.

இனியாவது யாருக்கும் அடிமை யாகாமல் விழிப்பு நிலையோடு வாழ முயல்வோமாக.

பெரியாரும் திருக்குறளும்

திருக்குறள் நெடுங்காலமாக புலவர் கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலும் அந்நூல் சென்று சேரவேண்டும் என்னும் எண்ணம் முதன்முதலில் பெரியார் அவர்களுக்கே உதித்தது. அதற்காகப் பல மாநாடுகள் கூட்டித் திருக்குறளை எங்கும் பரவச் செய்தார்.

குறளுக்குப் பண்டையோர் தவறான பொருள் செய்திருப்பரேல் அவற்றையெல்லாம் மாற்றி உண்மைப் பொருளைக்கூறி தமிழர்கள் மனத்தில் பதியவைத்தார். இன்றைய தினம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறு குழந்தைகளிடம் கேட்டாலும்  இரண்டு திருக்குறளாவது சொல்லும், இவ்வாறு திருக்குறள் நூல் பட்டிதொட்டியெங்கும் பரவி வருவது தமிழ்ப் பகைவர்களுக்குப் பிடிக்குமா? அதனால் அந்நூலுக்கு மறைமுகமாக பல மாசுகளை உண்டாக்கி வந்தனர்.

ஆகவே திருக்குறள் எங்கும் பரவுவதற்கு முதற்காரணமாய் இருந்த பெரியார் அவர்களை நாம் என்றும் மறவாது நினைவு கூர்வோமாக!
          ------------------- பெரும்புலவர் சீனிவாசன் அவர்கள்  31-05-2014  “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page6/81275.html#ixzz33LEDepKL

11 comments:

தமிழ் ஓவியா said...


பலே, மணப்பெண்!


தொட்டிலை ஆட் டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

இதன் பொருள் - பெண் என்றால் பிள் ளையைப் பெத்துப் போட்டு வெறுமனே தாலாட்டிக் கொண்டு இருப்பதல்ல; - அந்தப் பெண்ணுக்குள்ளும் ஆளுமைத் திறன் உண்டு என்பதாகும்.

ஆனாலும் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று எதுகை மோனையில் பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

ஆண் என்றால் சாட்டை - பெண்ணென் றால் அடிக்கப்படும் முதுகு என்ற நிலை நிலவி வந்தது உண்மைதான்.

பெண்கள் படிக்க ஆரம் பித்தனர் - ஆண்களை விஞ்சி கல்வியில் சாதிக்க ஆரம்பித்தனர் - ஆண் களை முதுகு காட்டச் செய்து விட்டனர்.

காதலிப்பது - கொஞ்ச நாட்கள் ஜாலியாக சுற்றித் திரிவது - அதன் பின் கை விட்டு இன் னொரு பெண்ணைக் கட்டிக் கொள்வது என் கின்ற எஜமானத் திமிர் கொண்ட ஆண்கள் சிலர் உண்டு.

அத்தகைய ஆண் வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது போல், முதுகுத் தோலை உரித் ததுபோல ஒரு நிகழ்வு!

மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வந்த சரவணன் என்ற பொறியியல் பட்டதாரி, தான் பணியாற்றும் நிறு வனத்தில் பணியாற்றிய ரம்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுக் கால மாகக் காதலித்து வந்தான்.

காதலித்த பெண்ணைக் கைவிட்டு - வீட்டார் நிச்சயித்த பெண்ணுக்குத்தாலி கட்டத் திட்டமிட்டான்.

ரம்யாவுக்கு உண்மை தெரிய வந்தது; அடங்கிக் கிடந்த அந்தப் பெண் புலி சீறி எழுந்தது!

நண்பர்கள், உறவினர்கள் 10 பேர்களை அழைத்துக் கொண்டு திருமண மண் டபத்திற்குள் நுழைந்தார். ஆங்கே ஒரே ஆட்டம் பாட்டம்!

ரம்யாவைக் கண்ட சரவணன் ஆடிப் போனான்; அதிர்ச்சி அடைந்தான்.

மணப்பெண்ணிடம் உண்மையைக் கூறினார் ரம்யா! அவ்வளவுதான். ஆவேசப் புயலாகச் சீறி எழுந்தாள் மணப்பெண்! சரவணனின் சட்டையை இழுத்துக் குலுக்கி நான்கு கேள்விகளை நறுக் கென்று கேட்டதோடு நிற்கவில்லை;

தன் கால் செருப்பைக் கழற்றி மண மகனை நாலு சாத்தும் சாத்தினாள்.

காவல்துறையும் வந் தது. திருமணம் நின்றது!

நாலு இடத்தில் இப்படி நடந்தால்தான் நாசகாரர்கள் திருந்துவார்கள்!

பலே ரம்யா!

பலே மணமகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/81424.html#ixzz33XGDwPhX

தமிழ் ஓவியா said...


80 ஆம் ஆண்டில் ‘விடுதலை’ சந்தாக்களைக் குவிப்பீர்


கழகக் குடும்பத்தவர்களே, தமிழ் இன உணர் வாளர்களே,

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த அருட்கொடையான அறிவாயுதம் விடுதலை நாளேடு.

இந்த நாளேடு 80ஆம் ஆண்டை அடைகிறது. தமிழில் ஒரு நாளேடு 80 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுவது என்பதும் - அதிலும் கொள்கை லட்சிய நெறியோடு - வெறியாளர்களை எதிர்த்து, வீறு கொண்டு வேக நடை போடுவது என்பதும் எளிதான செயலா? எண்ணிப் பாருங்கள்.

அக்காலத்துப் பிரபலமான நாளேடுகள் - அதுவும் அரசு ஆதரவு, விளம்பர வருவாய் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெற்று நடந்த நாளேடுகள்கூட 80 ஆண்டைத் தொடவில்லை.

கொள்கை இல்லாமல், வெறும் சர்க்குலேஷன் என்ற எண்ணிக்கையை எப்படிப் பரப்புவது என்பதையே குறியாகக் கொண்டு, அரை நிர்வாணம், சினிமா, ஜோதிட மூடநம்பிக்கை, ஆன்மீகம் என்ற பெயரில் அதிகமான புராணக் குப்பைக் கதைகளைப் பரப்புதல் போன்ற பாமரத்தனத்தின் பசிக்கு இரை போட்டு தங்கள் வயிறுகளை வளர்த்துக் கொள்ளும் மலிவுச் சுவையால் கொழுத்துக் கொண்டுள்ள ஏடுகள் ஏராளம் உண்டு.

மேற்காட்டிய ஜனரஞ்சகம் என்ற ஏமாற்று வேலைகளாலும், ஆட்சியை அனுசரித்தால் போதும் அமோகமாய் பக்க பக்கமாக விளம்பரங்கள் என்ற நிலவரம் ஒருபுறம்.

இவைகளை ஒதுக்கி மனிதர்களை பகுத்தறிவுவாதிகளாகவும், சமூக நீதிக்கு, எதிரான சக்திகளுக்கு எதிராக சங்கநாதம் செய்யும் பணியை, எந்நிலையிலும் நிறுத்த மாட்டோம் என்ற சூளுரையோடு சுயமரியாதை உலகு சமைக்க, பயணம் செய்யும் இந்த ஏடு, ஒரு தனித் தன்மையான லட்சிய ஏடு!

இதனைப் பரப்ப, நமது தோழர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டாமா?

எனது 50 ஆண்டு ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் வகையில், 50ஆயிரம் சந்தாக்களை தந்தீர்கள் - மகிழ்ந்தோம்.

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினீர்கள். அந்த அரும்பணிக்கு உங்களை அர்ப்பணித்துக் கிளம்புங்கள் தோழர்களே, தோழியர்களே!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறினாரே, தமிழன் இல்லம் என்பதற்கான அடையாளம் விடுதலை நாளேடு அங்கு இருப்பதே என்று.

அது கல்லில் செதுக்கப்பட்ட உண்மை என்று காட்டிடும் வகையில், சந்தாக்களை சேர்க்க தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குங்கள் தோழர்களே!

ஒருவர் இரு ஆண்டு சந்தாக்கள் என்ற ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு உழைத்தால் உடனே 50 ஆயிரத்திற்கு மேல் சந்தாக்கள் கிடைக்காதா என்ன?

திருமணங்களுக்கு சந்தாக்களை அன்பளிப்பாகத் தரும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

மாணவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் பரிசுகள் தரும்போது, நம் ஏடுகளின் சந்தாவைத் தந்து படிக்கப் பழக்குங்கள் -உங்கள் செயல் திறனில், நமக்குள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போனதில்லை.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81429.html#ixzz33XGMmFZf

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

16-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள கோபமும், பொருளா தார நெருக்கடியும், காங்கிரசுக்கு மாற்றாக சரியான ஒரு மூன்றாவது அணி அமை யாததாலும், இது பா.ஜ.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், தான்தோன்றித்தனமாக நடக்காமல், தன்னடக்கத்தோடு மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கருத்து.

இந்திராகாந்தி ஆட்சி காலத்திலே, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை, ஒப்பந்தங்களை மீறி நடக்கும் ராஜபக்சேவின் சர்வாதிகார அரசி டமிருந்து, திராணியுள்ளதாகச் சொல்லும் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

தமிழக மீனவர்களைப் படாதபாடு படுத்தும் சுண்டைக்காய் நாடான இலங் கையின் தலையிலே ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்குமா?

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு, மாண்புமிகு ஜெயலலிதா அரசின் (ஈகோ) தன் முனைப்பால் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி - சென்னை இடையிலான கப்பல் போக்குவரத்து பயண நேரம் 32 மணி மிச்சமாகும் என்கிற நிலையிலே - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா?

இந்தியர்களின் கறுப்புப்பண வங்கிக் கணக்கை, இந்தியாவின் இரட்டை வரிக் கொள்கையை காரணங்காட்டி வெளியிட மறுக்கும், சுவிஸ் வங்கியிடமிருந்து பட் டியலை வாங்கி பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொணருமா?

நீராதாரப் பிரச்சினை:- ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில் அணைகளில் 16 பில்லியன் கனமீட்டர் மட்டும் சேமித்து வைக்கப் படுகிறது. ஆனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் ஆண்டுக்கு 2000 முதல் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக் கிறது. தென் மாநிலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நீர்வழிச்சாலை திட்டம் வழியாக இணைத்து அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வெ.பொன்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திட்டச்செலவு ரூ. 50,000 கோடி ஆகுமாம்.

பா.ஜ.க அரசு, நீர் வழிச்சாலைத் திட் டத்தை நிறைவேற்றி நாட்டின் பொருளா தாரத்தை உயர்த்துமா?

ஆட்சி அமைக்க, தமிழ்நாட்டின் (அதிமுக 37 இடங்கள்) தயவு தேவையில்லை என்கின்ற நிலையிலே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நியாயமான நிதியினை பா.ஜ.க அரசு வழங்குமா?

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநில ரயில் கொள்ளையில் ஈடுபடும் உத்தரபிரதேச மாநில கொள்ளையர்களை, பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துமா?

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றாலும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 5 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சீனாவில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 சதவீதம் ஆகும். உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியராம். இந்த நிலையை மாற்றியமைக்க நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா?

சாதாரண காய்கறி முதல் பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்து கொண்டே போகிறது. இதை தடுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையை, பா.ஜ.க அரசு குறைக்குமா?

வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் நீடிக்கிறது, படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பா.ஜ,க அரசு உருவாக்குமா?

உற்பத்திச் செலவுக்கும் கீழாக, மஞ்சள் விலை விற்பதால், விவசாயிகள் பெருத்த நட்டத்தில் இருக்கிறார்கள், உற்பத்திச் செலவையாவது கணக்கிட்டு, பா.ஜ.க அரசு மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய லாமே?

பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெ டுத்திருக்கும் நிலையிலே பா.ஜ.க வில் நிறுத் தப்பட்ட 5 முஸ்லீம்களும் தோல்வியடைந் தது எப்படி? இதற்கான காரணங்களை பா.ஜ.க கண்டறியுமா?

இப்படி ஏராளமான எதிர்பார்ப்பு களோடு, இந்தியத் திருநாட்டின் குடி மகன்கள், ஏக்கப்பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றாமல் புதிய ஏற்றம் தருமா? நல்ல மாற்றம் தருமா? வாழுமா, ஜனநாயகம்! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- கா.நா.பாலு, மேடடூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-2/81437.html#ixzz33XGrAPDr

தமிழ் ஓவியா said...


உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்


இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண் களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர் களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவை.

அறிகுறிகள்: மாரடைப்பின் அறிகுறிகளை அடை யாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம். எனவே நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHPpdbQ

தமிழ் ஓவியா said...

மூட்டு வலியும்.. இதயமும்.. சில ஆலோசனைகள்

எலும்புகளை மட்டுமல்ல... இதயத்தையும் பாதிக்கும் மூட்டுவலி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உடல் வலி...ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி... ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம்.

சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்? என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.

சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோ ரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி அவர் கூறியதாவது:-

மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டா யிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த் ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்:

அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத் தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத் துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது. உடற்பயிற்சிகள் மிக முக்கியம்.

அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு பயனளிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHXlVfg

தமிழ் ஓவியா said...


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை


பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யா இலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண் டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்து விடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல் சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களி லிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுவவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக் கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப் படுத்தியுள்ளது. இது நீரிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத் தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளன.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட் கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு தன்மையை கொண் டுள்ளது.

மேலும் இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHiLve1

தமிழ் ஓவியா said...

தேங்காயில் புதைந்துள்ள சத்துகள்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப் படுகிறது.

தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி யுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந் துள்ளது.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண் டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணெய் உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும் புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHvdrwh

தமிழ் ஓவியா said...


ஜூன் 3

இந்நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட் டின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கல்வெட்டைப் பிரசவித்த பொன்னாள்! கலைஞர் பிறந்த நாள் (1924) என்றாலும் அந்நாள் எத்தகையது!

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜாதிகளைக் கடந்து சமயங்களைப் புறந்தள்ளி, மொழி உணர் வால் ஓரினம் என்ற தமிழினக் கோட்பாட்டை உணர்ச்சிப் பொங்க உரு வாக்கிய ஒரு போராட் டம் உண்டு என்றால் அது 1938 இந்தி எதிர்ப் புப் போராட்டமாகும்.

சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோது, பள்ளிகளில் இந்தித் திணிப்பை அறிவிப்பு செய்தார் (10.8.1937).

தந்தை பெரியார் தலைமையில் தமிழினம் பொங்கி எழுந்தது. சமஸ் கிருதத்தைப் படிப் படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று பச்சையாக சென்னை இலயோலா கல்லூரியில் பேசினாரே!

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது - சும்மா இருப்பாரா சுய மரியாதைச் சூரியன் தந்தை பெரியார்?

தோள் கட்டி, தொடை தட்டி போர்க் குரல் எழுப் பினார் அதன் விளைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்காக சிறைச் சாலை கதவு முதன் முதல் திறந்த நாள் தான் இந் நாள் (1938).

இந்நாளில்தான் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்.

இந்தி ஒழிய வேண் டும் அல்லது நான் ஒழிந்து போக வேண்டும் என்று பல்லடம் பொன்னு சாமி என்ற தோழர் பிரதம அமைச்சர் ஆச்சாரியா ரின் வீட்டு முன் பட்டி னிப் போராட்டம் நடத் தினார். அந்தக் காரணத் துக்காகவும் இன்றுதான் (ஜூன் 3 -1938) சிறைக் கொட்டடியில் தள்ளப் பட்டார்.

மறைமலை அடிகள் தலைமையில் கோடம் பாக்கம் மாநாட்டுக்கு இந்தத் தகவல் கிடைத் தது தான் தாமதம், மாநாடு - ஊர்வலமாக உருப் பெற்றது.

பிரதமர் ராஜாஜி வீட்டுமுன் களம் அமைக் கப்பட்டது முழங்கினர் தலைவர்கள் சி.டி. நாய கம் (இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரி) காஞ்சி மணிமொழியார் சாமி சண்முகானந்தா ஆகியோர் இரவு 12 மணி வரை முழங்கினர். முடி வில் அவர்களும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புக்காக அன்று திறந்த சிறைச் சாலை 21.2.1940 இல் தான் முற்றுப் பெற்றது. இந்த நாளை மறக்கத்தான் முடியுமோ!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81456.html#ixzz33d3hUvFk

தமிழ் ஓவியா said...


கலைஞர் பிறந்த நாள் சிந்தனை எது?

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ் நாடெங்கும் இன்று கொண்டாடப்படு கின்றது. அந்த வாழ்த்துக்களோடு நாமும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த 16ஆம் மக்களவைத் தேர்தல் குறித்தும், சிறப்பாக தேர்தல் குறித்தும், முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்தது குறித்தும் கருத்துக்களும், தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் மாநில அரசின் அத்துமீறல்கள், தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புப் போக்கு, ஊடகங்களின் நடு நிலை பிறழ்ச்சி, வாக்குகள் விலைப் பேசப்பட்டது பற்றியெல்லாம் பலரும் பேசியுள்ளனர்.

கலைஞர் பிறந்த நாள் விழா நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் மக்கள் திரள் இளைஞர்கள் எழுச்சி - தேர்தல் முடிவுகளால் திமுக துவண்டுப் போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பது நல்லதோர் அறிகுறியாகும்.

இதற்கு முன்பும் கூட திமுக இத்தகைய தோல்வி களைச் சந்தித்ததுண்டு. அதற்குப் பிறகு புதுச்சேரி யையும் சேர்த்து 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் தோல்வியையே அறியாதவர் என்று கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோற்று இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதுண்டு.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அடிக் கட்டுமானமுள்ள கட்சி அமைப்பைக் கொண்டதாகும். அதன் காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் ஆட்சி லகானைப் பிடித்தது.

அதே நேரத்தில் 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்துக்கு வர முடியவில்லை. தி.மு.க. நிலையோ முற்றிலும் வேறானது.

இந்த நேரத்தில் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்தொன்றுண்டு. திமுக ஆட்சிக்கும், மற்ற கட்சி ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலைகள் போடுவார்கள்; தெரு விளக்குகளைப் போடுவார்கள் - பாலங்களைக் கட்டத்தான் செய்வார்கள்.

இவற்றையெல்லாம் கூட வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்குப் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய தி.மு.க ஆட்சி - வேறு எந்த அரசியல் கட்சிக் கும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகள் கொண்டதால் இந்தியா விலேயே வேறு எங்கும் சாதிக்கப்படாதவற்றைத் தனித் தன்மையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை எடுத்துக் கொள்ளலாம்; ஜாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கருதி, பொருத்தமாக தந்தை பெரியார் பெயரை அதற்குச் சூட்டிய பெரு மகன்தான் மானமிகு கலைஞர்அவர்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தத்துறை - என்ற வரிசையில் சீர் தூக்கிப் பார்க்கட்டும்; கலைஞர் அவர்களின் பக்கத்தில் வந்து நிற்கும் தகுதிகூட வேறு யாருக்கும் கிடையாதே!


தமிழ் ஓவியா said...


முன்னேற்றம்


தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே! - (விடுதலை, 21.6.1939)

Read more: http://www.viduthalai.in/page-2/81467.html#ixzz33d4XU5fd

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பொன்னார் மேனி யன் (சுந்தரர்)

சுடலைப் பொடி நிறத் தவன் (சம்பந்தர்)

பவளம் போல் மேனி யன் (அப்பர்)

- சிவனைப் பற்றி அடி யார்கள் இப்படிப் பாடி வைத்துள்ளார்களே - ஒரு ஆசாமி எப்படி இத்தனை நிறம் உடைய வனாக இருக்க முடியும்? பச்சோந்தியோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/81463.html#ixzz33d4lTMKZ