Search This Blog

30.4.14

மழை பொழிய வருண ஜெபமாம்?ஏதாவது பலன் ஏற்பட்டதா?

மழை பொழிய வருண ஜெபமாம்!

நாட்டில் வறட்சி தாண்டவமாடுகிறது; குடிநீர்ப் பிரச்சினை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது ஆண்டின் தொடர்ச்சியாக, குறுவை சாகுபடி இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் கிடையாது என்ற நிலைதான் இன்றுவரை!

இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மழை பொழியும்; தண்ணீர்ப் பஞ்சம் தீரும் என்று விவரம் தெரிந்த எவரும் நம்பமாட்டார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு - அதன் இந்து அறநிலையத் துறைக்கு அசாத்திய நம்பிக்கை என்ன தெரியுமா? யாகம் செய்தால், வருண பகவானைப் பிரார்த்தித்தால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற நம்புகிறது. அந்த அடிப்படையில்தான் எல்லாக் கோவில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளது. மழை வேண்டி வருண பூஜை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்காங்கே யாகங்களும், வருண ஜெபங்களும் நடந்துகொண்டுள்ளன.

இதற்கு முன்பேகூட இத்தகைய அறிவுக்குப் புறம்பான வேலையில் ஈடுபட்டதுண்டு. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைப்பாடுதான்.

இதே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மழை வேண்டி புழல் ஏரிக்கரையில் உட்கார்ந்துகொண்டு குன்னக்குடி வைத்திய நாதய்யர்வாள் அமிர்தவர்ஷினி ராகத்தை வாசிக்க வில்லையா? ஏதாவது பலன் ஏற்பட்டதா?

அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காகவே ஏற்றுக்கொள்வோம். மழைக்குக் காரணம் வருண பகவான் என்கிறார்களே, அந்தக் கடவுளுக்கு நாட்டு மக்கள்மீது அக்கறை இல்லையா? மழை இல்லாமல் வறட்சி நிலை தாண்டவமாடுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிக்கத் தண்ணீரின்றி மக்கள், விலங்குகள் பரிதவிக்கும் நிலை! இந்த நிலையில், இம்மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற சாதாரணப் புத்திகூட இந்த வருண பகவான் என்கிற கடவுளுக்கு இல்லையா?

கடவுளைக் கருணையே உருவானவன் என்று சொல்லுகிறார்களே - அது உண்மையானால், காலா காலத்தில் மழையைக் கொடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது பொறுப்புள்ள ஒரு கடவுளின் கடமை யல்லவா!
ஜெபம் செய்தால்தான் கடவுள் கருணை புரிவார் என்றால், அந்தக் கடவுளைவிடப் பொறுப்பற்றவன் வேறு யார்?

மழை எப்படி பொழிகிறது? மழை பொழிவதற்கு என்னென்ன கூறுகள் அவசியம் என்பது மூன்றாம் வகுப்பு மாணவனைக் கேட்டால்கூடக் கூறிவிடுவான்.

ஆனால், மெத்த படித்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு இந்த அடிப்படை அரிச்சுவடிகூடத் தெரியாதது வெட்கக்கேடானதாகும்.
தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு வருண ஜெபம் உதவும் என்றால், மின்பற்றாக்குறைக்கு என்ன பரிகாரம்? நாட்டில் நிலவும் பற்றாக்குறைகளுக்கு எல்லாம் ஆன்மீகத்தில் தீர்வு இருப்பது உண்மையானால், நாட்டில் அரசுகளே கூடத் தேவையில்லையே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த உணர்வைத் தூண்டவேண்டும்; இது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறதே (51ஏ(எச்)).

இந்த நிலையில், அரசுத் துறை அதிகாரிகள் விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக பச்சையான மூடநம்பிக்கையின் அடிப்படையில், வருணஜபம் செய்யுமாறு சுற்றறிக்கை விடுவது சரியானதுதானா? அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட ஓர் அரசு துறைக்கு அதிகாரம் உண்டா?

1988 இல் வடநாட்டில் மதுராவில் விஞ்ஞானிகள் ஒரு சோதனையை மேற்கொண்டனர். மந்திரத்தால் மழை பொழிவிக்கலாம் என்று சொன்னார் 86 வயதுள்ள சர்மா ஒருவர். அவருக்குத் தேவையான அத்தனை உதவி களையும் அரசு செய்து கொடுத்தது.

சர்மாவும் வேத மந்திரங்களை மூச்சு முட்ட ஓதித் தீர்த்தார்; விளைவு ஒரு சொட்டு மழைகூட இல்லை. இதனை புதுடில்லியிலிருந்து வெளிவரும் நேச்சர் (Nature, Vol.333 June 1988)  ஏடு வெளியிட்டு வருண ஜெபத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டதே!

இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது மூட நம்பிக்கையின் மொத்த உருவம்! முதலமைச்சரே, யாகம், யோகம் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்.

முதலமைச்சரே இந்த நிலையில் இருந்தால், அரசு அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்? மேலும் நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? படிப்பும், பட்டமும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சாக இருக்கும்போது, அவர்களிடம் விஞ்ஞான மனப்பான் மையை எதிர்பார்க்க முடியுமா?

விஞ்ஞானம் படிப்பது என்பது வேறு - விஞ்ஞான மனப்பான்மை என்பது வேறு; இது ஒரு வெட்கக்கேடான - தலைகுனியும் நிலையே!

                         -------------------------"விடுதலை” தலையங்கம் 30-04-2014
Read more: http://viduthalai.in/home/71-2010-12-25-09-37-00/79503-2014-04-30-09-45-31.html#ixzz30MlQW6Gi

5 comments:

தமிழ் ஓவியா said...


அரசுக்கு இப்படி மதம் பிடிக்கலாமா?

தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது, நீதிக்கட்சி ஆட்சியினால், பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு, பலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி அமைக்கப்பட்டதாகும்.

மடங்கள், கோவில் பெருச்சாளிகள், சொத்தை, வரு மானத்தை கொள்ளையடிப்பதைத் தடுத்து, ஒழுங்கு முறையாக அதன் வரவு - செலவுகள் தணிக்கைக்குட் படுத்தும் நிலையை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்ட துறைதானே தவிர, ஹிந்து மதப் பக்தியையோ, மூட நம்பிக்கைகளையோ பிரச்சாரம் செய்யும் சனாதன சவுண்டி வேலை செய்வதற்காக ஏற்பட்டதல்ல.

அதுபற்றிய முழு விவரம் தமிழில் தேவையெனில், மறைந்த டாக்டர் நம்பி ஆரூரான் அவர்களது நூலை (அது அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கானது) படித் தாலே விவாதங்கள் சட்டமன்றத்தில் எப்படியெல்லாம் நடந்தன என்பது எவருக்கும் புரியும்.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை, கோவில்களில் மழை வேண்டி யாகம், பூஜை, புனஸ்காரம் நடத்த ஆணை யிட்டிருப்பது மிகவும் கேலிக்குரியதான செயல் அல்லவா!

இந்தத் துறை ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் இயங்கும் நிலையில், அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் வேட்டு வைத்து, அரசின் துறை இப்படி நகைப்பிற்குரிய வகையில் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

மேலும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை (திஸீபீணீனீமீஸீணீறீ ஞிவீமீ) என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 51 ஆவது பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான் மையை வளர்த்தல், ஏன்? எதற்கென்று கேள்வி மூலம் அறிவைப் பெருக்குதல், மனிதநேயம், சீர்திருத்தம் செய்தல் என்பவை வற்புறுத்தப்பட்டுள்ள நிலையில்,

யாகம் செய்தால், ஜெபம், பிரார்த்தனை செய்தால் மழை வரும் என்று கூறிடுவதும், இந்தப் பச்சை மூட நம்பிக் கைகளை தமிழக அரசின் ஒரு துறையே பரப்பிடுவதும் எவ்வகையில் ஏற்கத்தக்கது? அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

யாகம் செய்தால் மழை வரும் என்றால், யாகம் செய்யும் எவரும் ஏன் குடையோடு செல்வதில்லை?

மழையை வரவழைக்க யாகம் - பூஜையால் முடியும் என்றால்,

அதிக மழை பெய்து வெள்ளம் வருவதைத் தடுக்க, நிறுத்த எந்த யாகம், எந்த ஜெபம் செய்யவேண்டும்?

எந்த அறிவாளியாவது, இந்து அறநிலையத் துறையில் ஆணையிட்ட அதிகாரிகளான அறிவுக் கொழுந்து களாவது கூறுவரா?

மரங்களை வெட்டுவது, காடுகளை அழித்து மொட் டையடித்தல் இவைகளைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் இப்படியா உலகம் கைகொட்டி நகைக்கும் அவமான அறியாமை ஆட்டங்கள் ஆடுவது?

கலைஞர் முன்பு முதல்வராக இருந்தபோது, செயற்கை மழையையே விஞ்ஞானம்மூலம் வர வழைத்துக் காட்டினார்களே, (செலவு அதிகம் என்பதால் அதை செய்வது எளிதல்ல என்றாலும், அப்படிப்பட்ட அறிவியல்பூர்வமான முறைகள் அல்லவா முக்கியம்).

முன்பு சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது, மாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில், இந்திரா காந்தி சிலை திறக்க, இந்தியப் பிரதமராக இராஜீவ் காந்தியை அழைத்திருந்தனர். அந்நிகழ்ச்சி நடைபெற இரண்டு நாள் இருக்கும்பொழுது, அங்கு கடும் மழை பெய்த நிலை.
சோவியத் அரசு, விஞ்ஞானிகளை அழைத்து யோசனை கேட்டது,

உடனே விஞ்ஞானிகள், அது ஒரு பிரச்சினை அல்ல; மேகங்களைக் கலைத்துவிடுவோம்; நிகழ்ச்சி மழையின்றி நடைபெறும் என்று உறுதி கூறி, நடத்திக் காட்டினர். அவ்வளவு அறிவியல் முன்னேற்றம், வளர்ச்சி.

இங்கோ, முழங்கால் அளவில் நின்று அமிர்தவர்ஷினி ராகம் - குன்னக்குடி அய்யர் வயலின்மூலம் என்றெல் லாம் செய்தனரே, பலன் என்ன? மழை பெய்ய வில்லையே!

தனியார் மூடத்தனத்திற்குப் பதிலாக, தமிழக அரசின் துறையே இப்படி அறியாமை நோயைப் பரப்பலாமா?

இந்து மதக் கிறுக்குத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/79500.html#ixzz30QGoVcWS

தமிழ் ஓவியா said...


மோசடிக்காரர்கள்




மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page-2/79502.html#ixzz30QH9psMU

தமிழ் ஓவியா said...


சித்திரையில் மழையைத் தேடி...


பிற இதழிலிருந்து....
சித்திரையில் மழையைத் தேடி...

சித்திரை மாதம் 15 ஆம் நாள் தமிழ் நாடு முழுவதும்உள்ள முக்கிய கோவில் களில் மழை பெய்ய வேண்டிவருண ஜெப பூஜையை இந்து சமய அற நிலையத் துறை ஒரே நேரத்தில் நடத்தியுள்ளது. பூஜை, புனஸ்காரங்கள் செய்தது மட்டு மின்றி இசைக்கல்லூரி மாணவர்கள் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி ராகங்களைப் பாடி இசை ஆராதனை நடத் தினர் என்றும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தண்ணீரில் ஒரு மணி நேரம் நின்று சிவாச்சாரியார்கள் வருணபூஜை செய் தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதுஒருபுறம், குடி தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மறுபுறம். பருவகால மழை யின் அளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. சராசரி மழை யளவான 912 செ.மீ. கடந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்துவிட்டது.

வெப்பமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருவதால் வானிலை மாற்றம் மழையளவை கடுமையாகப் பாதிக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை சரியாகப் பெய்யாமல் பொய்த்துவிட்டது.மழை பெய்வதற்கு ஆதாரமான மரங்கள், காடுகள், வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிப் பதில்லை. அவற்றை அழிக்கும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப் பதில்லை. ரியல் எஸ்டேட் என்ற பெய ரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுதல் என்ற பெயரிலும்வயல்களும் நீர் நிலைகளும் அழிக்கப்படுகின்றன. காடு களை அழித்து கழனியாக்கினான்; குளங்களை வெட்டினான்; ஏரிகள் அமைத்தான்; அணைகள் கட்டினான் என்று அரசர்கள் வரலாற்றில் படித்தவை எல்லாம் மறந்து போய் விடுகின்றன. இருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங் கள், வாய்க்கால்கள், இதர நீர்நிலைகளை தூர்வாருதல், ஆழப்படுத்துதல், கரை களை உயர்த்துதல், மழைநீர் வீணாக் காமல் சேகரித்தல் என்ற ஆக்கப்பூர்வ பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

வைகையின் கரையை உயர்த்துவ தற்காக நடந்த வேலையில் ஈடுபட்ட இறைவன் சொக்கநாதன் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக மன்னனிடம் பிரம்படிபட்டான் என்பது திருவிளையாடல் புராணம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ ஏனோ தானோவென்று தூர்வாருதல் உள் ளிட்ட மராமத்துப்பணிகளை செய்வ தால் ஒப்பந்ததாரர்களுக்குப் பயன் கிடைக்கலாம்; மக்களுக்குப் பயன் கிடைப்பதில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்; விண்ணின் மழைத் துளி மண்ணின் உயிர்த்துளி என்றெல் லாம் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது நல்ல செயல்தான். ஆனால் காலத்தே செய்ய வேண்டிய மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு போன்றவற்றை உரிய காலத்தில் நிறைவேற்றாமல் இருந்துவிட்டு கடைசி காலத்தில் யாகம் நடத்துகிறோம்.

ஜெபம் செய்கிறோம் என்று கோடிக் கணக்கில் வீணடிப்பதால் என்ன பயன்? மழைக்கஞ்சி காய்ச்சுதல், கழுதை களுக்கு கல்யாணம் செய்தல் என்று பாமர மக்கள் செய்வதற்கும் அரசின் நிர்வாகத்துக்குட்பட்ட அறநிலையத் துறை வருண ஜெபம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? சூழும் மழை மேகங்கள் மீது வெள்ளிப்பொடி உள் ளிட்ட ரசாயனப் பொருட்களைத் தூவி மழையைப் பொழிய வைத்ததும் அதே போல தேவையில்லை என்று நினைத்த போது விமானங்கள் மூலம் மேகங் களைக் கலைத்து மழை பெய் யாமல் நிறுத்தியதும் முந்தைய சோவியத் நாட்டில் நிகழ்த்தப்பட்டது என்பது வரலாறு. கோடையில் மழைவர வாடை யிலேயே பணிகளை துவக்கிட வேண் டும். அவ்வாறு வருமுன் காக்கும் வகை யில் செயல்படுவதே சிறந்த அரசாகும்.

நன்றி: தீக்கதிர், 30.4.2014

Read more: http://viduthalai.in/page-2/79504.html#ixzz30QHI3g6h

தமிழ் ஓவியா said...


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார். இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.

இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது. அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது, நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர். வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)

Read more: http://viduthalai.in/page-2/79506.html#ixzz30QHPptlc

Unknown said...

நமக்கு வேற வே ல இல்ல