Search This Blog

21.1.14

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!-அறிஞர் அண்ணா



(இரண்டாம் உலகப் போர் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது இந்தக் கட்டுரை.  வடக்கு, மேற்கு எல்லைகளில் இந்திய ராணுவம் விழிப்பாக இருக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவுக்குப் போர் அச்சுறுத்தல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, அண்ணாவின் சிந்தனையைத் தாங்கிய அந்த நாள் எழுத்துக்கு இன்றும் அவசியம் இருக்கிறது. படியுங்கள்; அது சரிதான் என்பது புரியும்)


மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர், ஆரியருக்காகக் கற்பிக்கப்பட்ட கரையான்கள் என்று செப்புகின்றனர். மக்களுக்குள் பேதத்தையும் பிளவையும் உண்டாக்கி, ஓர் இனம் உண்டு கொழுத்து ஊராள உற்பத்தி செய்யப்பட்ட உதவாக்கரைக் கருத்தோவியங்கள் என்று உங்கள் அனைவரையும் உரைக்கின்றனர்.

உங்களுக்கும் உக்கிரம் பிறக்கக் கூடுமானால், ஓடி வாருங்கள் பூலோகத்துக்கு, காளைமீது ஏற, கருடனைத் தேடு, அன்னத்தை நாடு, மயிலைப்பிடி, காக்கையைக் கூப்பிடு என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வாகனாதிகளை வர்ணிக்க இங்கு காகிதாதிகள் இல்லை. ஆகவே, தத்தம் வாகனமேறித் தயக்கமின்றி வாருங்கள்! பாருங்கள். அசாமிலே குண்டு விழுந்துவிட்டது! நீங்களே, நெருப்பைக் கக்கும் கண், நீண்ட சூலம், சக்கரம், கதை, தண்டம், வாளாயுதம் வேலாயுதமாகிய ஏதேதோ தாங்கி நிற்பதாக ஏடுகள் கூறுகின்றன. எடுங்கள் உமது ஆயுதத்தை, விடுங்கள் ஜப்பானியர்மீது! ஆமாம்! பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்நாட்டுச் சேனையினருக்கும் ஏன் வீண் சிரமம்? கிளம்பி வாருங்கள், வானவீதியிலே நின்று உமது ஓங்காரக் கூச்சலைக் கிளப்புங்கள், ஓட்டுங்கள், வேட்டுக்காரரை!

இல்லையேல், பிரிட்டிஷ் அமெரிக்க சீன, இஸ்லாமிய, திராவிட நாட்டவரின் வேட்டுகள் வேலைசெய்து, அதன்பின்னர் விரோதி ஓடிய பிறகு, நீங்கள், அதிர்வேட்டு கிளப்பு, அக்கார வடிசல் போடு, ஆடும் அணங்குகளைக் கெண்டுவா, ஆறுகால பூசையைச் செய்து வா, ஆனைவாகன உற்சவம் செய், ஆபரணாதிகளைப் பூட்டு என்று மட்டும் கேட்டு, ஆரியரை எதிரிகளை ஓட்ட என்ற அவசரத் தபாலை எழுதி, தரலோகம், பிரம்மலோகம், இந்திர லோகம், கைலாயம், வைகுண்டம் என்ற விலாசமிட்டு தபால்களிலே சுயமரியாதைக்காரர்கள் போட்டால், இப்படி ஊர்களும் இல்லை, பேர்களும் கிடையாது என்று போஸ்ட் மாஸ்டர் கூறி, குப்பையில் போட்டார் கடிதத்தை. ஆனால் குளித்து முடித்ததுமே, குளத்தங்கரைக்குப் போகும்போதே, குளிக்கும் முன்பே, குடல்சரியத் தின்றபிறகு சம்போ மகாதேவா! முருகா! விநாயகா! என்று அவரே அழைக்க அப்படி ஓர் ஆசாமியும் இல்லை, இருப்பதாகக் கூறப்படுவதும் கிடையாது என்பது அறியாமையா? என்று சுயமரியாதைக்காரன் கேட்டால் வேதசாஸ்திர இதிகாசங்கள், படித்து வாழும் வேதியக்கூட்டம் என்ன பதில் கூறும்?

                        --------------------------(திராவிடநாடு 8.11.1942)


பஞ்சமாம் பஞ்சம்!

(திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த ஆண்டு(2013)பக்தர்கள் அளித்த காணிக்கை ரூ.723 கோடி மற்றும் 1200 கிலோ தங்கம். அதுவும் தெலங்கானா சிக்கலால் பக்தர்கள் வருகை 50 இலட்சம் பேர் குறைந்த நிலையிலேயே இவ்வளவு வசூலாம். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா? அல்லது பணக்காரர்கள் வாழும் நாடா? உணவே கிடைக்காமலும், ஒருவேளை உணவு மட்டுமே உண்ணும் பல கோடி மக்களும் வாழும் இந்தியாவில் இன்றைய நிலை இதுவென்றால் அன்று எப்படி இருந்தது? இதோ அண்ணா எழுதியிருக்கிறார். படியுங்கள்:-)

பஞ்சம்! பசி! பட்டினி! என்று கூவுகிறார்கள்! யாருக்குப் பஞ்சம்? யார் பசியுடன் போராடுகின்றனர்? எங்கே தாண்டவமாடுகிறது, பட்டினி.

இதோ, பட்டி! பாருங்கள், இந்தப் பஞ்ச காலம், பஞ்சகச்சத்தைக் கண்டு பயந்தோடுவதை!

பிப்ரவரி 2- _ மன்னார்குடியில் மாத்வாவமி நடைபெற்றது, பிராமண சந்தர்ப்பணை நடைபெற்றது.

ஜனவரி 31- _ திருச்சி மலைக் கோவிலில் கும்பாபிஷேகம், பசுமடத்தில் பொது ஜன உதவியால் சுமார் 2000 பிராமணர்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி- 6 _ திருவனந்தபுரம் மகாராஜாவின் தந்தையின் சஷ்டியப்தபூர்த்தியை முன்னிட்டுப் பிராமணர்களுக்குத் (வைதீக முறைப்படி) தானம் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 4- _ பெரியகுளம், பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அய்ந்து நாட்களாக, ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரபரி 7-ஆம் தேதி காஞ்சிபுரத்தில், சங்கராச்சாரியார் நடத்திய கும்பாபிஷேகத்தை அனுசரித்துப் பிராமணர்களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

ஜனவரி 30ஆம் தேதி தஞ்சை ஜில்லா கலியாணபுரத்தில், லட்சார்ச்சனை நடைபெற்றது. அதை அனுசரித்து பிராமணர்களுக்கு (நதியாராதனை) போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 5-ஆம் தேதி மாலை தியாகராய நகரில் இராமாயண உபன்யாசம் செய்து வந்த சாஸ்திரிகளுக்குப் பணமுடிப்பு அளிக்கப்பட்டது.

பஞ்சமும், பட்டினியும் இந்தப் `பரப் பிரம்ம சொரூபிகளைத் தீண்டிற்றா? திக்கற்ற தமிழர்களே! இந்தப் பட்டி புகட்டும் பாடம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்.

------------------------- (திராவிட நாடு - 13.-2.-1944  இதழில் அறிஞர் அண்ணா எழுதியது)

29 comments:

தமிழ் ஓவியா said...


இன்னும் திருந்தவில்லையா?


உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே நியமனங்கள் நடைபெறும் என விரிவாகவும், விளக்கமாகவும் நம் பேரறிவுத் தாய் எடுத்துரைத்ததற்குப் பிறகும், இட ஒதுக்கீடு என்று கருணாநிதி ஓலமிடுவது மோசடி அரசியலே!

- அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (21.1.2014, பக்கம் 8)

இன்னும் இவர்கள் திருந்தின பாடில்லை என்று தெளிவாகவே தெரி கிறது. பல்நோக்கு உயர் மருத்துவமனை களில் இட ஒதுக்கீடு செய்வது குறித்து அரசே முடிவு செய்யலாம் என்று சொன்னதற்குப் பிறகும், அ.இ.அ.தி.மு.க. ஏடு மாற்றி யோசிக்கிறது என்றால், இன்னும் இவர்கள் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இட ஒதுக்கீட்டில் கைவைத்தவர்கள் வாழ்ந்ததாகத் தமிழ்நாட்டு வரலாற்றில் கிடையவே கிடையாது!

ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே தோல்வி கண்ட இடம் இது - எச்சரிக்கை! எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/73846.html#ixzz2r58RhCkO

தமிழ் ஓவியா said...


நீதிபதிகள் நியமனக் குளறுபடிகள்: கலைஞர் பதில்


சென்னை, ஜன.21-நீதிபதிகள் நியமனத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி - பதில் பகுதியில் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கள் நியமனத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பற்றி குறை கூறி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதோடு, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டமும் நடை பெற்றுள்ளதே?

கலைஞர்: அண்மைக் காலத்தில் நீதிபதிகள் பற்றியும், அவர்கள் நியமனம் குறித்தும் வெளிவருகின்ற செய்திகள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டு கூறப் படுகிறது. உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்திலேகூட, யாரோ ஒரு பெண்மணி ஆளுங்கட்சி கூட்டங்களிலும், ஆளுங் கட்சிக்குரிய தொலைக்காட்சி நிறுவனத்திலே நேரத் தைக் கழித்தவர் என்றும் என்னிடம் கூறினார்கள்.

நீதிமன்றத்தில் வாதாடிப் பழக்கமே இல்லாதவர்கள் பெயர்கள் எல்லாம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்களை பரிந்துரை செய்திருப்பவர்கள் இதற்கான விளக்கத்தைத் தந்தால் புரிந்துகொள்ள முடியும். நீதிபதிகள் நியமனத்திற்கு முன்பே இப்படிப்பட்ட புகார்களுக்கு ஆளாவார்களானால், அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பிறகு வருகின்ற விளைவுகளை வழக்காடும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே, தற்போது செய்யப்பட்டுள்ள நியமனம் சரியில்லை என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு, அந்த நீதிபதி உச்சநீதிமன்றம் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்று கூறியிருக் கிறார். தற்போது இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றச்சாட்டு வெளி வந்திருக்கிறது.

ஒரு சில நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் இவ்வாறு கூறப்படுகின்ற காரணத்தால், நீதித் துறையின் மீதே களங்கம் ஏற்பட்டுவிடும்! மங்கை சூதகமானால் கங்கை யில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று தேவர் திருமகன்தான் அடிக்கடி கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா? என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேடு தலையங்கம் எழுதியுள்ளதே?

கலைஞர்: அந்த வழக்கை அ.தி.மு.க. அரசு எவ்வாறு நடத்தியது என்பதுபற்றியோ, அரசு வழக்குரைஞர் எவ்வாறு செயல்பட்டார் என்பதுபற்றியோ, அந்தத் தலையங்கத்தில் குற்றமாகக் கூறாமல், வழக்கை நடத் துவதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது என்று மட்டும் எழுதியிருப்பதோடு, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதன்மூலம் நீதியையும், சமூகநீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியின் இந்த வேண்டுகோளையாவது அ.தி.மு.க. அரசு ஏற்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73845.html#ixzz2r58n6xmR

தமிழ் ஓவியா said...


தியாகம் என்பது...


தியாகம் என்பது சுயநலத்துக் கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும்; எவ்வித மான அவமானங்களையும் இலட்சியம் செய்யாமல் பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதாகும்.

(விடுதலை, 11.1.1966

Read more: http://viduthalai.in/page-2/73848.html#ixzz2r592n6Qr

தமிழ் ஓவியா said...

அய்யா இல்லாத வெற்றிடம்...!


- கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

தமிழ் ஓவியா said...

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்
உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய்! - பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ்உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகு தாய்! வளர்ப்புப் பாலே பயன்!நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுக உண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல் எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!





- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

ஊழ்

--------------கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?

ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!

என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?

சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!

இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.

அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

நன்றி : கலைஞரின் குறளோவியம்

தமிழ் ஓவியா said...

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!


கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).

கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்

இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்

நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.

அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.

- ஓவியம்

தமிழ் ஓவியா said...

காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்....


நரையாய் பூமுகத்தில் - புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட - இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் - உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த - நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் - சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை - கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை - உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ - அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் - கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் - எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் - இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு - அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் - பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு - நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா - உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை - உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் - உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் - நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு - தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல - பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே - ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன - இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் - அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் - சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் - நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க - ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை - ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு - அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ - கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க - நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் - உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் - அன்று
காததூரம் ஓடும்.

- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...

சிந்தனை


மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது.

நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான்.

மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம்.

சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்...

- லியானர்டோ டா வின்சி

தமிழ் ஓவியா said...

தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?


தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.

தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.

தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.

துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

- முகநூலில் வே. மதிமாறன்

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். - பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

தமிழ் ஓவியா said...

பாவேந்தர்


இதழுலகில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது.

அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.


திரையுலகில் பாவேந்தர்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். இவற்றில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(1947) என்ற படத்திற்கு அவர் எழுதியது பலருக்கும் தெரிந்திருக்கும். பாலாமணி(எ)பக்காத் திருடன் (1937), இராமானுஜர் (1938), கவிகாளமேகம் (1940), சுலோசனா (1944), பொன்முடி(1949), வளையாபதி(1952)ஆகிய படங்களும் பாவேந்தர் எழுத்தில் வெளிவந்தவை. சிவாஜி நடிக்க தயாரிப்பதாக இருந்த பாண்டியன் பரிசு மற்றும் மகாகவி பாரதியார் ஆகிய படங்கள் தயாரிக்கப்படவில்லை.

1937 தொடங்கி 1960 வரை 22 திரைப்படங்களில் பாவேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பின் ஏறத்தாழ 25 படங்களில் பாவேந்தர் எழுதிய கவிதைகள் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளன.



பாவேந்தரின் குறள் உரை

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 85 குறட்பாக்களுக்கு உரை எழுதியிருக்கிறார். இவற்றில் கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஒன்று. ஆனால், இதற்கு உலகின் தோற்றம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 13 பள்ளிகளில் 1907 முதல் 1944 வரை பாவேந்தர் பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்.

இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் என்ற இயற்கை விவசாயப் பண்ணையினை உருவாக்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். அண்மையில், மத்திய அரசின் காவிரிப் படுகையின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிப் போராடி வந்த நம்மாழ்வார் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியம். - (குடிஅரசு, 3.3.1929)

தமிழ் ஓவியா said...


24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படுவதற்கான 12 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; ஏற்கெனவே மூன்று பேர் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், ஒரு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தப் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை; தாழ்த்தப்பட் டோரில் அருந்ததியர் போன்றவர்களுக்கு வாய்ப்பு, காலங்காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை; அதுபோலவே, மீனவர், சலவையாளர், முடிதிருத்துவோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார் (விடுதலை, 17.1.2014).

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை உணர்வை வெளிப்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக் காலி இடங்களை நிரப்புவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்யவும் கோரி 24.1.2014 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் செவ்வனே செய்துகொண்டுள் ளனர். இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூகநீதியும், சுயமரியாதையும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் தோழர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாளான பொங்கல் விழாவில் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார் (17.1.2014).

திராவிடர் கழகத்தின் தொடர் பணியாகவும் அது அமைந்தே வந்திருக்கிறது என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே! இதே சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் அருகேகூட நீதித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில், பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு. அதற்கான நல் விளைவுகளும் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது.

நாளை மறுநாளும் இதே சமூகநீதி நோக்கத் தோடே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மதுரைக் கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கூட இதே காரணத்திற்காக நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்குரைஞர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இது தொடர்பாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் கர்ணன் அவர்களும் தானே முன்வந்து ஆர்ப்பரித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான இந்த மண்ணின் மனப்பான்மையை (Soil Psychology)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதி பதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மக் களுக்குத் தேவையான சட்டங்களை இயற்று கிறார்கள்; அந்தச் சட்டங்களைக்கூட செல்லாது என்று தடை செய்யும் அளவுக்கு உயர் அதிகாரம் படைத்த மய்யங்களாக உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட மய்யத்தில் வருணாசிரம உணர்வு, ஜாதீய உணர்வு நிலவும் ஒரு நாட்டில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது நீதித்துறையிலிருந்து தொடங்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகம் கொடுக்கும் இந்தக் குரல் சட்ட ரீதியானது; சமூகத் தளத்தில் முதன்மையாக எழுப்பும் இன்றியமையாத சமூகநீதிக்கானது.

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல், ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக் கிறோம்!!!

Read more: http://viduthalai.in/page-2/73918.html#ixzz2rArbUogj

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!


புரிந்துகொள்வீர்!

பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?

Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

அருண்ஜேட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர் பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73915.html#ixzz2rAuAe8te

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம்: எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கொந்தளிப்பு!


சென்னை, ஜன.23- நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் அவர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

நீதிபதிகள் மற்றும் நீதித் துறையின் மீதான நம்பிக்கை என்பது சமூக நீதியைக் காப்பாற் றுவதிலும்தான் அடங்கியிருக் கிறது. ஆனால், நீதிபதிகளின் நியமனத்தில் நீண்ட நெடுங்கால மாக சமூக நீதி பின்பற்றப்படுவ தில்லை. இது நீதியைக் காப்பாற் றும் முழுமையான நடவடிக்கை யாகாது. நாட்டின் ஆட்சி, நிர்வாக அமைப்புகளில், நிர்வகிப்பவர் களைத் தெரிவு செய்யும் முறை யில், சில குறைபாடுகளும் விமர் சனங்களும் இருந்தாலும், வெளிப் படைத் தன்மையே நடை முறையில் இருந்து வருகின்றது. ஆனால், நீதித்துறையில் மட்டும் அத்தகைய வெளிப்படைத் தன்மை இன்னும் வாய்க்காமல் இருக்கிறது. வெளிப்படைத் தன்மை இருப்பதனால்தான் நாட்டை நிர்வகிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண குடிமக்களிலிருந்து யாராவது ஒருவர் உயர் பதவியில் அமர முடிகிறது. இல்லையெனில், இந்த வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப் படும். 20 பேர் மட்டுமே - தாழ்த்தப்பட்டோர்

ஆனால், தகுதி மற்றும் திறமையைக் காரணம் காட்டி நீதித் துறையில் இது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது பெரும் அநீதியாகும். தற்போது, இந்தியா விலுள்ள அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நீதிபதிகளில் 20 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக பட்சமாக சென்னை உயர்நீதிமன் றத்தில் மட்டும் தாழ்த்தப்பட் டோர் 8 பேர் நீதிபதிகளாக இருக் கிறார்கள். அதிலும் 2 பேர் பதவி மூப்பின் அடிப்படையில் வந்தவர் கள். 6 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டவர்கள். முற்போக்கு மாநிலமாகக் கருதப்படக்கூடிய தமிழகத்தில், 16 பேர் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், வெறும் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பெரும் அவலம். அப்படி யென்றால் பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய இத்தகைய அவ லத்தைப் பார்க்கும்போது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள் ளது என்பது புரியும்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களி லும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கப்படவேயில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதேவேளையில், அனைத்து உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் முற்பட்ட வகுப்பின ரின் ஆதிக்கமே மேலோங்கியிருக் கிறது என்பதை அறிய முடிகிறது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதி கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள 12 பேர் கொண்ட பட் டியலில் முற்பட்ட வகுப்பின ருக்கே பெரும்பான்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனை எதிர்த்து வழக்குரை ஞர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். இந் தத் தெரிவுகள் தகுதி, திறமையின் அடிப் படையில் நடைபெற வில்லை என்பதை வழக்குரைஞர்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிப் போராடி வருகின்றனர். தகுதி யுள்ளவர்களிலிருந்து நீதிபதிகள் நியமிக்கப் பட வேண்டும் என்ப தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் தகுதி, திறமை உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரிலும் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. இத் தகைய ஒடுக்கப்பட்ட சமூகங் களிலிருந்து திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படை யானதாக இருக்க வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் வழக்குரைஞர் சமூகத்தின் போராட் டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று ஆதரிக்கிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களி லும், உச்ச நீதிமன்றத்திலும் நீதி பதிகள் நியமனத்தில் இடஒதுக் கீட்டைப் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு, நீதித்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73960.html#ixzz2rGtqS6nu

தமிழ் ஓவியா said...


அருண்ஜேட்லி சொல்லுவதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!


450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முசுலிம் மக்களின் அயோத்தி பாபர் மசூதியை இடித்த குற்றவாளி கள், அந்த இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்றும், அந்தத் திட்டம் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், பிஜேபியின் மாநிலங் களவைத் தலைவருமான அருண்ஜேட்லி பச்சை யாக, கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். (Economic Times Dated 22.1.2014) என்றால் இதனை எந்தத் தரத்தில் வைத்து எடை போடுவது?

பிஜேபியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே என்ன பேசினார்?

பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் - இதைச் செய் ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் (தினமலர் 9.12.2009) என்று சொல்ல வில்லையா?

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர்; எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி போன்ற பிஜேபியின் பெருந் தலைவர்கள்.

21 ஆண்டுகள் ஓடி விட்டன. இதற்குப்பிறகும் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை; இன்னும் சொல்லப் போனால் இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு இந்தியாவின் துணைப் பிரதமராக அத்வானி வந்தார், முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். உமாபாரதி மத்தியப் பிரதேசத் தில் முதல் அமைச்சராக வந்தார் என்றால், இந்தக் கேவலத்தை எந்த வார்த்தைகளால் எடுத்துச் சொல்லுவது?

இந்த இழி செயலைச் செய்ததன் மூலம் இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை இடித்து நொறுக்கினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கிழித்து எறிந்தனர். இந்நாட்டுக் குடி மக்களான சிறுபான்மை மக்களுக்குப் பாது காப்பற்ற ஒரு பயங்கரத் தன்மையை ஏற்படுத்தி விட்டனர்.

இப்பொழுது அடுத்த கட்டமாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் - அதனைக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெறச் செய்வோம் என்று சொல்லுகிற அளவுக்கு தங்களின் இழி குணத்தை, காட்டு விலங்காண்டித்தனத்தை பேட்டியாகக் கொடுக்கிறார்கள் என்றால், இந்திய நாட்டு மக்கள் மிகவும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இதன் மூலம் பயங்கரவாதத்தை, வன் முறையை தங்களின் கொள்கையாகக் கொண் டவர்கள், அணுகுமுறையாகக் கொண்டவர்கள் நாட்டை ஆளத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நிலை உள்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும் எத்தகைய அதிர்வை ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். பொய்ப் பிரச்சாரத்தில் புத்தியைப் பறி கொடுத்தால் அதன் ஒட்டு மொத்தமான விபரீதத்தை நாட்டு மக்கள்தான் அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது!

அதுவும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள 2000 சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிக் கொன்ற நரேந்திரமோடி, பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை; நாடு காடாகி விடுவதற்கு நாட்டு மக்களே துணை போய்விடக் கூடாது என்பதுதான் நல்லோர் களின் கவலையாகும்.

மோடி பிரதமர் ஆனால் நாடே குஜராத்தாக மாறும் - மதவெறியின் கோரத்தாண்டவம் நடக் கும்; அதன் விளைவாக மனித ரத்த ஆறு தான் ஓடும் - மீண்டும் மீண்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/73966.html#ixzz2rGu8ctAa

தமிழ் ஓவியா said...


பழநி கோயில் பஞ்சாமிர்தத்திலும் ஊழல்


பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறை வான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சராசரியாக வாரத்திற்கு 2,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ), பஞ்சாமிர்தத்திற்காக கொள்முதல் செய்யப்படும் நிலையில், சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வாரத்திற்கு 5,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் நடந்து வருகிறது.

கவுந்தப்பாடி அமைந்துள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படு கிறது. இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கியது போக 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக இங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரையை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரித்தால் கூடுதல் இனிப்பும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதாக கூறப் படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் தரம்

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக நேரடியாக சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. முருகன் கோயில் பிரசாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொ டர்ந்து சர்க்கரை விற்பனை செய்து வரு கின்றனர். பிரசாதத்திற்கு செல்லும் சர்க்கரை என்பதால் அதன் தன்மை கெடாமல் அதனை தயாரிக்கும் விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரையை வழங்குவதையும் வழக்கமாக கொண் டுள்ளனர்.

இந்நிலையில், கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைந்துள்ளதால், வெளிச்சந்தையிலிருந்து வரவழைக்கப்படும் தரம் குறைவான சர்க்கரை பழநி தேவஸ் தானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/73989.html#ixzz2rGvFfOdE

தமிழ் ஓவியா said...


மு.க. அழகிரிமீது தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை


தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அறிக்கை

சென்னை, ஜன.24- தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவை களைப் பற்றி முறையிட, கட்சிக் குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக் காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்கா மலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலை மையைப் பற்றி அவதூறு கூறி, கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செய லில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களைத் தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுகிறார்.

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடி வான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையோடும், கட்டுப்பாட் டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/74016.html#ixzz2rMQlNe3W

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கருத்து

24.1.2014 அன்று முற்பகல் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் விடுத்த தி.மு.க.வின் கட்டுப்பாடு காக்கும் அறிக்கையின்மீது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.

குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. இதன் மூலம் பேருரு (விஸ்வரூபம்) எடுத்துள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கையாகும் இது என்பது தாய்க் கழகத்தின் கருத்தாகும்
.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை 24.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74016.html#ixzz2rMQx189h

தமிழ் ஓவியா said...

பாலியல் வன்கொடுமை

பொன்னேரியையடுத்த சோம்பட்டையைச் சேர்ந்த நாகதாஸ் என்னும் பேர் வழி, பெண் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட் டான். பெண் கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவன் பின் மறுத்தான். வழக்குத் தொடுக்கப்பட்டு - மேல் முறையீட்டில்தான் பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது - ஆசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

(டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்; நாடே கொந்தளித்தது; ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து வந்த நிலையி லும், தமிழ்நாடு அமைதி பூத்த தடாகமாகக் காட்சி யளிக்கிறது; ஊடகங்களும் கப்-சிப்! புதிய மனுதர்மம் அழகு நடை போடுகிறதோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRFt2CR

தமிழ் ஓவியா said...

மோடி

தேர்தல் நேரத்தில்தான் காங்கிரசுக்கு ஏழைகள் நினைவு வரும். - நரேந்திரமோடி

(அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்; தேர்தல் நேரத்தில்தானே இவர்களுக்கு மதச் சார்பின்மை பற்றியும், சிறுபான்மை மக்களைப் பற்றியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது).

வை.கோ

இனி திமுக, அதிமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்! - வைகோ (ஆமாம் ராமர்பாலம், ராமர் கோயில், இந்துத்துவா என்ற ஜோதியில் தான் கரைந்தாகி விட்டதே!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRSexMM

தமிழ் ஓவியா said...



இதோ ஒரு இரட்டை நாக்கு!

காங்கிரஸ் மதவாதத்தைத் தூண்டும் கட்சி; பா.ஜ.க.வோ மதச் சார்பற்ற கட்சி இப்படி சொல்லி யிருப்பவர் யார் தெரியுமா, 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்!

இரட்டை வேடம் - இரட்டை நாக்கு என்பது இந்துத் துவா கூட்டத்தின் இரட்டைக் குழந்தைகளோ!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRgq8rP

தமிழ் ஓவியா said...


மோடியின் கரங்கள் அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்: முலாயம்சிங்


மோடியின் கரங்கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்' என்று முலாயம் சிங் (யாதவ்) குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலை களும், அடக்குமுறைகளும், கொடுமை களும் அரங்கேறின.

அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை.

கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஆனால், குஜராத்தில் படுகொலை களை அரங்கேற்றியதுபோல், இங்கும் அத்தகைய சம்பவங்களை நிகழ்த்தும் நிலையில் அவர் இல்லை.

குஜராத்தில் நடை பெற்ற இனக்கலவரத்துக்கு மோடிதான் முழுப் பொறுப்பு. அவரது கரங் கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்'.

குஜராத் அரசு வேலை யில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங் கியதா? விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததா? பெண்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத் ததா? இவற்றில் எதையும் செய்ய வில்லை. ஆனால், செய்ததாக புர ளியைப் பரப்புவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை மட் டுமே கொடுத்தது என்று முலாயம் சிங் யாதவ் பேசினார்

Read more: http://viduthalai.in/e-paper/74019.html#ixzz2rMRxGL9U

தமிழ் ஓவியா said...

ஜாதிக்கொரு சமையலறை

உயர்ந்த ஜாதி இந்து ஒருவன் சாப்பிடும் போது தான் சாப்பிடும் உணவு பற்றி மட்டும் கவனிப்பதில்லை. அந்த உணவைச் சமைத் தது யார் என்பது பற்றியும் அக்கறையோடு கவனிக்கிறான். தாழ்ந்த ஜாதி உணவை யார் சாப்பிட்டாலும் அல்லது சமைத்தாலும் அவனும் தாழ்ந்த ஜாதிக்காரனாகி விடு கிறான்.

எல்லா உயர்ந்த ஜாதிக்காரர்களுமே பணக்காரர்களாக இருந்து விடுவதில்லை. அவர்களிலும் சிலபல ஏழைகள் இருக்கின்றனர். இதனால் பணக்காரப் பார்ப் பனர்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதற்காக ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு இருக்கும் பார்ப்பன சமையல்காரர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனரல்லாதார் பலர் தங்கள் வீடுகளில் பார்ப்பன விருந்தினர்களுக்கு உணவு சமைக்க பார்ப்பன சமையல்காரர்கள் ஒருவரையும், தங்களுக்கும் பார்ப்பனரல்லாத விருந்தினர்களுக்கும் சமைப்பதற்காக மற்றொரு சமையல்காரரையும் வைத்திருக் கின்றனர். இதற்காக தனித்தனி சமைய லறைகள் உள்ளன.

தென்னிந்திய கல்லூரி ஒன்றில் வெவ்வேறு ஜாதி மாணவர்களுக்காக தனித் தனியாக எட்டு சமையற்கூடங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஜாதி மாணவனும் அந்தந்த ஜாதிக்கென்று உள்ள சமையற்கூட சாப்பாட்டு அறையில் சென்று சாப்பிடுவான். மக்களின் ஆன்மீகத் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருந்த காலத்தில்தான் இது போன்ற ஜாதிக்கொரு சமையலறை ஏற்பட்டது.

- ராபின் ஹோவே எழுதிய இந்தியா வில் உணவு என்ற கட்டுரையிலிருந்து.
நூல்: ஜான் கென்னத் கால்பிரெய்த் இன்ட்ரடியூகஸ் இண்டியா, பக்கம் 187.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMTAJSul

தமிழ் ஓவியா said...


உறவின் முறையில் திருமணம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்


சென்னை, ஜன. 24- உறவு முறைகளில் திரும ணம் செய்வது குறைபா டுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக் கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

செவித்திறன் குறை பாடுள்ள குழந்தைக ளுக்கு செவியின் உள் பகுதியில் பொருத்தப் படும் காக்ளியர் கருவி பற்றிய விழிப்புணர்வு சி.டி. மற்றும் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா மருத்துவக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை, பேச்சு மற்றும் கேட்பு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மருத்துவர் ஏ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கே.மணிவாசன் மற்றும் மருத்துவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் பேசியது: குழந்தைகள் பிறந்த உடனேயே அனைத்து விதமான மருத்துவ சோத னைகளையும் தாமத மின்றி மேற்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே ஏற் படும் குறைபாடுகளை சற்று தாமதமாக தெரிந் துகொள்வதன் மூலம் அதை சரிசெய்வதில் பல் வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. காதுகேட்கும் திறன் குறைந்த மற்றும் முற்றிலுமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு காக் ளியர் கருவி பொருத்தப் பட்டவுடன் கேட்பியல் நிபுணர்கள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் ஆகி யோர் உதவியுடன் படிப் படியாக குழந்தைகளின் கேட்கும் திறன் மேம்படு கிறது.

இதுபோன்ற குறை பாடுகளுக்கு உறவின் முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. எனவே இதுகுறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த வேண் டும் என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/74056.html#ixzz2rMTHmhse

தமிழ் ஓவியா said...

ஆண்டவனின் தனிக் கருணை

அன்றொரு நாள் தான் எவ்வாறு ஆண்டவனின் தனிக்கருணைக்கு ஆளானார் என்பது குறித்து ஒருவர் என்னிடம் கூறிக் கொண்டு வந்தார். ஒருநாள் அவர் வெளிநாட்டிற்குக் கடற்பயணம் செய்ய இருந்தார். ஆனால், அது யாது காரணத்தாலோ, பயணம் தடைப்பட்டு விட்டது.

ஆண்டவனின் தனிக் கருணையால்அவர் போகாதது நின்றதே நல்லதாயிற்று. ஏன்? அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்த அய்நூறு பேரும் மாண்டனர். அய்நூறு பேர்களோடு மூழ்கிய கப்பலில் செல்லாவண்ணம் ஆண்டவனின் தனிக் கருணையால் ஒருவன் காப்பாற்றப்பட்டான்.

ஆனால், இந்த அய்நூறு பேர்கள்? அதிலிருந்த தாய்மார்கள்? அவர்களின் கள்ளங்கபட மற்ற மழலை பேசும் இளங்குழவிகள்? அவற்றின் அருமைத் தந்தையர்? அக்கரையில் என்று கப்பல் வந்தடையும்? என் இனிய துணைவர் என்று வருவார் என்று ஆவலே உருவாய் நிற்கும் இளம்பெண்கள்? இவர்களின் கதி? இதன் பெயர்தான் ஆண்டவனின் தனிக்கருணை என்பது!

-அறிஞர் இங்கர்சால்
தகவல்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTb6wf0

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகள் பார்வைக்கு

1972ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் புரட்சி எழுத்தாளர் சங்க சார்பில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் புரட்சி எழுத்தாளர்களின் கடமைபற்றி முடிவு எடுக்கப்பட்டது. சமூகத்தில் புரட்சி ஏற்பட வேண்டுமானால், வெறுமனே பொருளாதார மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்து விட்டால் போதாது;

அத்துடன் சமுதாயப் பிரச்சினைகளின் பிற அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் நிலவி வரும் மூடநம்பிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

கடவுள் நம்பிக்கையின் பிடி மக்கள் மத்தியில் தற்பொழுது பலமிக்கதாக உள்ளது. இப்பிடியை முறியடிக்க வேண்டும். இதற்கு எழுத்தாளர்கள் பாடுபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMThGzOM