Search This Blog

7.4.13

புத்த நெறி ஒரு மதம் அல்ல - கி.வீரமணி


புத்தநெறி என்பது மதம் அல்ல; அது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் அற நெறியாகும். முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே, முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக நம்பி  விடாதேமுன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக பின்பற்றாதே!
உன் (பகுத்)தறிவு உனக்கு எதைச் சரியென்று கொள்ளச் சொல்கின்றதோ, அதன்படி நடஎன்று சொன்னவர் புத்தர், தவிர வேறு யார்? மஹா வீரர் என்ற சமணத் தத்துவ அறிஞரும் அக்கால கட்டத்தில் தேடினால் கிடைப்பார் - கிடைக்கக் கூடும்!
அதற்குமுன் கபிலர் போன்றவர்கள் இருந்து அறிவுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்லியிருப்பதால்தான், புராண இதிகாச, இலக்கியங்களில் ஒரு கபிலர் அல்ல - பல கபிலர்கள் இருக்கிறார்கள்!
உலகச் சிந்தனையாளர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கடைசியாக எழுதிய ஓர் அரிய அறிவுக் கருவூலம் புத்தரும் தம்மமும் என்ற ஒப்பற்ற புத்தநெறி விளக்க மாபெரும் நூல். அவரது மகத்தான நூல் (Maghum Opns) அதுவே என்றும் கூறலாம்! அந்த புத்தகம் - பவுத்த நெறிக்குரிய சரியான பகுத்தறிவு அடிப்படையில் அமைந்த தனித் தன்மையான நூல் ஆகும்!
மஹாயானம், ஹீனயானம் என் றெல்லாம் திரிந்துள்ள புத்தர்நெறிக்கு புத்தொளி பாய்ச்சிய நூல் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் பவுத்தமும் தம்மமும் என்ற இந்த நூல்.
பாலி மொழி, மற்றும் பல்வேறு மூல நூல்களையெல்லாம் பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து, இறுதியாக வந்த இந்த நூல் மூலம், பவுத்தத்தை முடிய மூடிக் கருத்துக்கள், திரிபுவாத விளக்கங்கள், கதிரவனைக் கண்டோடிய காரிருள் போல விலகி ஓடின!
எனவேதான், இவரது இந்த புத்தொளி விளக்கத்திற்கு
நவயானம் என்ற பொருத்தமான பெயரை அறிஞர்கள், ஆய்வாளர்கள் தந்துள்ளனர்!
புத்தரையும், பவுத்தத்தையும் பற்றிப் பாரம்பரியமாகப் பரப்பப்பட்டு வந்த பல்வேறு கட்டுக் கதைகளை இதன் மூலம் பொய்யுரை - புனை கதைகள் என்று சுட்டியுள்ளார் டாக்டர் அம்பேத்கர்!
புத்தம் தம் கொள்கைப் பிரச்சாரத்தின் போது ஊடுருவிய தவறாக திரித்த கருத்துக்களை புத்தரே சுட்டிக் காட்டி அதிலிருந்து, பின்வருபவர்கள் மிகவும் விழிப்பாக இருந்து, திரிபுவாத பாசிகளை அந்த ஊருணியை அடைத்துக் கொள்வதை அப்புறப்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளன!
இது எந்தஒரு அறிஞரும் அந்தக் கால கட்டத்தில் மேற்கொண்டதாக வரலாற்றில் எங்கும் தேடினாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது!
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தமும் தம்மும் என்ற நூலில் - பிரிவு 5இல், பக்கம் 350இல் (முதற் பதிப்பு) - Causes of This Misunderstanding இந்த பிழைப்பட உணர்தலின் காரணங்கள் என்று தலைப்பிட்டு இதுபற்றி புத்தர் கூறியுள்ள பகுதிகளை மிக நன்றாக விளக்குகிறார்!
1. புத்தரின் போதனை அறிவுரை களைக் கேட்கும் கூட்டத்தில் பெரிதும் உள்ளவர்கள் புத்த பிக்குகளேயாவர்.
2. அந்த பிக்குகள்தான் பெரிதும் புத்தர் கூறிய அறிவுரைகளை அவை எதுவானாலும் மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமைகளைச் செய்து வந்தனர்.
3. எழுத்துக் கலை வளராத கால கட்டம் அது! எனவே எழுத்து ரூபத்தில் தர முடியாத நிலையில் - மனப்பாடம் செய்து, நினைவில் நிறுத்தித் தான் பிக்குகள் அந்த போதனைகளை மக்களுக்குக் கொண்டு செல்பவர்களாக இருந்தனர்.
அப்படிப்பட்ட பிக்குகளில் எல் லோரும் மனப்பாடம் செய்து, புத்தர் கூறிய கருத்துக்களை அப்படியே உள் வாங்கி, மாறாமல் அதை மக்களுக்குக் கொண்டு செல்லும் பக்குவம் படைத் தவர்களாக பலர் இல்லை.
அதனால் இப்படி மனனம் செய்து அப்படியே பிறருக்குக் கொண்டு செல்வதை ஒரு தொழிற்பாடம் போல் செய்பவர்கள் அந்த பிக்குகளிலேயே பலர் இருந்தனர்.
அவர்கள் பனாக்கர்கள் (Bhanakas) என்று அழைக்கப்பட்டனர்.
4. புத்த நெறிபற்றி விளக்க இலக் கியங்கள் என்பவை (Cahonical liberature) அளவில் கடல் போன்று விரிந்து பட்டவை! இவை அனைத்தையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுப்பது எளிதல்ல. அப்படிச் சொன்னால் அதுவே பெரிய சாதனையாகும்!
5. எனவே புத்தர் கருத்துக்கள் - அறிவுரைகளைப் பற்றி இப்படி எடுத்துச் சென்று கூறியவர்கள் மூலம் திரிபு நிலை (Misreporting) தவறாகச் சொன்னது தவிர்க்க முடியாமல் ஏற்பட்டது!
6. இப்படி தவறாகக் கூறப்பட்ட கருத்துரைகள் புத்தரின் கவனத்திற்கேகூட கொண்டு வரப்பட்டது அவர் உயிருடன் இருந்த காலத்தில்!
7. எடுத்துக்காட்டாக அய்ந்து முக்கிய செய்திகளைப்பற்றி இப்படிச் சுட்டிக் காட்டப்பட்டது! (பாலிமொழித்தலைப்புகள் இவை)
1) அலகாத்துப் பாமா
2) மஹா தம்மாவிபாகங்க சுத்தா
3) கன்சொக் கடிதாலா சுத்தா
4) மஹா தன்கா சுங்கிய சுத்தா
5) ஜீவக சுத்தா
8. இதுபோல தவறாக திரித்துக் கூறப்பட்டவைகள் பலவும் உண்டு.  இந்த நிலையில் பல பிக்குகள் புத்தரிடமே நேரில் சென்று இப்படி தவறாக பல கருத் துரைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளதே  என்று சுட்டிக் காட்டிக் கேட்டுள்ளனர்!
இப்படிப்பட்ட சூழலில் அவற்றை எப்படி எதிர்கொண்டு நாள்கள் திரிபு வாதக் கருத்துக்கள் பொய்மையானது அது புத்தரால் கூறப்பட்டவை அல்ல என்று கூறுவது என்று கேட்டார்கள்!
9. குறிப்பாக, கர்மா என்பது பற்றியும், மறுபிறப்பு பற்றியும் பெரிதும் புத்தரின் கருத்துரைகள் போதனைகள் - திரித்துக் கூறப்பட்டிருப்பது மிகமிக அதிகமாக உள்ளது.
10. இந்த கர்மா மறுபிறப்பு ஆகிய கருத்துக்களை பார்ப்பன மதத்தில் ஏராளம் உள்ளதால், அதில் உள்ளவை களை இந்த பனகாக்கள் என்ற பிக்குகளில் மனப்பாடம் செய்து சரியாகச் சொல்லும் தொழிலைக் கொண்டவர் களுக்கு அவைகளை புத்தர் கருத்து களாகத் திரித்துச் சொல்வது மிகவும் எளிதாகி, புத்த நெறியில் அவர்களின் கருத்தை, புத்தரின் கருத்தாகவே எடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
11. எனவே மிகவும் அடிப்படையான புத்த நெறிக் கருத்து இலக்கியத்தில் புத்தர் கருத்துக்களைக் கேட்டு சிந்தித்து, மனதிற் கொண்டு ஒழுகும்போது, மிக அதிகமான கவனத்துடன் அவைகளை சீர்தூக்கிப் பார்த்து எடுத்துக் கொள்ள முன் வரவேண்டும்.
12. என்றாலும் இதனைச் சரியாகக் கண்டறிய ஒரு தேர்வு (பரிட்சை) உண்டு.
13. மிகவும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்வில் ஈடுபட முடியும். புத்தர்பற்றி துணிவுடன் சொல்ல வேண்டிய, ஆய்வு - திரிபுவாதக் கருத்தா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்க முடியும்.
காரணம் எதுவும் Not Rational பகுத்தறிவு அடிப்படையில அமையவில்லை என்றால் அது புத்தர் கருத்துரை அல்ல. அதுபோலவே, தர்க்கவாத அடிப் படையில் அது நிற்கக் கூடியதல்ல (Not logical) என்றால் அது புத்தருடையது அல்ல.
எனவே பகுத்தறிவு அடிப்படைக்கு ஏற்பவும், தர்க்கரீதியாக - காரண காரிய விளக்கத்தினையொட்டி எது இருந் தாலும் அதனை புத்தரின் கருத்துரை (மாறாக இந்த இரண்டு தேர்விலும் நிற்காத கருத்து என்றால் அது மாறானது; புத்தரின் கருத்துரை என்ற பெயரில் புகுந்துள்ள திரிபுவாதம் என்று பொருள்) என்பதாகும்.
14. இரண்டாவது முக்கிய செய்தி: புத்தரைப் பொறுத்தவரை மனிதர்களின் நலன் பயன் தராத எந்த விவாதத்திலும் புத்தர் கவலைப்பட்டதே இல்லை. எனவே மனிதர்களுக்கான நலனுக்கு விரோதமான எதுவும் புத்தரின் சொற்கள் என்று ஒப்புக் கொள்ளவே முடியாது.
15. மூன்றாவது ஒரு பரிட்சை பரி சோதனை (Tests).
புத்தர் எல்லா விஷயங்களையும் இரண்டு வகையாக  பிரித்தார். அவர் உறுதியாக அறிந்தது ஒரு வகை அவரால் உறுதியாகச் சொல்ல முடியாத செய்தி மற்றொரு வகை.
முதற்பிரிவைப் பொறுத்தவரை, புத்தர் அவரது கருத்தை திட்டவட்டமாகவும் - விவாதத்திற்கு இடமின்றியும் தெரிவித் தவை.

இரண்டாம் வகையோ, புத்தரைப் பொறுத்தவரை அவர் அபிப்பிராயங் களாக (Vilus) மட்டுமே தெரிவித்தவை; அவை தற்காலிகமானவை.
16. இந்த மூன்று கேள்விகளைப் பொறுத்து எதில் சந்தேகமோ, வேறு பாடோ தோன்றினால், மேலே சொன்ன பரிட்சைகளை (Tests) மனதிற் கொண்டு ஆராய்ந்து பார்த்து எது புத்தரின் கருத்து என்பது தெளிவாகி விடும்.
இவ்வாறு புத்தர் காலத்திலேயே புகுந்த திரிபுவாதத்தை விரட்டிட வழி வகை கூறினார் என்று துல்லியமாக டாக்டர் அம்பேத்கர் விளக்கினார்!
---------------------------------------------------கி.வீரமணி -----"ிடை”  6-4-2013

53 comments:

தமிழ் ஓவியா said...

இன்று இந்துக்களால் அதிகம் வெறுக்கப்படுபவன் நானாகத்தான் இருப்பேன். என்னை அவர்கள், தேச துரோகி என்கிறார்கள், இந்து மதத்தின் எதிரி என்கிறார்கள், இந்து மதத்தை அழிக்க வந்தவன் என்கிறார்கள், இந்த தேசத்தின் எதிரி என்கிறார்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், வருங்காலத்தில் இந்து வரலாற்று ஆய்வாயர்கள் விருப்பு வெறுப்பு இன்றி என் பணிகளை ஆராய்வார்களேயானால் இந்த தேசத்திற்காக நான் செய்த சேவைகளையும் வட்ட மேசை மாநாட்டில் நான் எடுத்துரைத்த நியாயத்தையும் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

அப்படி அவர்கள் செய்யத்தவறினால், நான் கவலைபட மாட்டேன் . ஏனென்றால், எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றதிற்காக நான் போராடுகின்றேனோ அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள். அது ஒன்று போதும், எதையும் நான் எதிர்கொல்ல.

எந்த மக்கள் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்தேனோ, அந்த மக்களுக்காக எந்த இடையூறு வந்தாலும், எந்த வெற்று வசை மொழிகளுக்காகவும் என் கடமையில் நான் சிறிதும் தவற மாட்டேன்.
- டாக்டர். அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

30 கோடி கருக்கலைப்புகள்


உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1979இல் ஒரு குழந்தைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையும், கிராமங்களில் இருப்போர் முதல் குழந்தை பெண் எனில், இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. சீன அதிகாரிகள் சட்டத்தைக் கடுமையான முறையில் அமல்படுத்துவதால் மக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 30 கோடி கருக்கலைப்புகள் செய்யப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

நூல் திறனாய்வு


அசைக்க முடியாத கருத்தியல்

- வெளிச்சம்


நூல்: திராவிடர் இயக்கம் -நோக்கம், தாக்கம், தேக்கம்

நூலாசிரியர்: கோவி லெனின்
நக்கீரன் வெளியீடு

105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை-_600 014.

தொடர்புக்கு: 044-43993029

பக்கங்கள் 328

விலை ரூபாய் 175.

மனிதகுல வரலாற்றில் சென்ற நூற்றாண்டு அதிமுக்கியமானது. பதிவு செய்யப்பட்டுள்ள மனித வரலாற்றில் சென்ற நூற்றாண்டு எல்லா வகையிலும் சீரும் சிறப்பும் மிக்கது. அறிவியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், கணினி, தொலைத்தொடர்பு, மரபணு என எல்லாத் துறைகளிலும் வெகுவான வளர்ச்சி பெற்ற நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு. மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்தது சென்ற நூற்றாண்டில்தான்.

பல பெரிய நாடுகள் சிதறுண்டுபோய் சிறு சிறு நாடுகள் ஆனதும் சென்ற நூற்றாண்டில் நாம் கண்ட ஒன்று. பல பெரிய நிறுவனங்கள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் உருவானது இருபதாம் நூற்றாண்டில்தான். ஆனால், அவையெல்லாம் பாதி நூற்றாண்டுகள்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்ட வேளையில் தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சி ஏற்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்தும் பொலிவு குறையாது மிடுக்குடன் தனது இரண்டாவது நூற்றாண்டுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கம், திராவிடர் இயக்கம்.

திராவிடர் இயக்கத்தின் நெடிய வரலாற்றில் அது வெற்றிகரமாகச் சுழல்வதற்கு அச்சாணியாக பெரியார் இருந்தார்.

1937இல் நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபொழுது சத்தியமூர்த்தி நீதிக்கட்சி 500 அடி ஆழமான பள்ளத்தில் புதைக்கப்பட்டது என்று கொக்கரித்தார். 1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபொழுது, அன்று நீதிக் கட்சி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் கழக ஆட்சி என்றார். மற்ற இயக்கங்கள், அமைப்புகள் போல திராவிடர் இயக்கத்திற்கும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும், இழப்புகளும் இந்த நூற்றாண்டுப் பயணத்தில் ஏற்பட்டாலும், அதையெல்லாம் தாங்கி மீண்டு எழுந்து வீறு நடை கண்டது என்றால் அதற்கு மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, காலத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கி ஏற்றுக் கொண்டது. இரண்டு, சரியான தலைமை, மற்றும் மூன்றாவதாக, அசைக்க முடியாத அடிப்படைக் கொள்கைகள்.
திராவிடர் கருத்தியல் என்பது மிக ஆழமானது. அது ஒரு இனத்திற்கு மட்டும் பொருந்தக்கூடிய ஒன்றல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கு, மனித மேம்பாட்டிற்கு ஏற்ற ஒன்று. ஆகையினால்தான் திராவிடர் கருத்தியலில் கை வைக்க முடியாத போழ்து தனி மனிதத் தாக்குதலுக்கு இன எதிரிகள் இறங்கி விடுகிறார்கள். நீதிக்கட்சியை அரசியலில் வீழ்த்திய பொழுதும் நீதிக் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கைதான் விமர்சிக்கப்பட்டது. கொள்கை அல்ல.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்திற்கு எல்லாக் கால கட்டத்திலும் மூன்று விதமான எதிரிகள் உண்டு. கருத்தியலை மோதும் ஸிஷிஷி மற்றும் இந்துத்துவ அமைப்புகள், அரசியலில் மோதும், காங்கிரஸ், பி.ஜே.பி., அ.தி.மு.க. கட்சிகள், இதைத் தவிர மூன்றாவதாக தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பார்ப்பனக் கைக்கூலிகளாய் உள்ள அமைப்புகள். இம்மூன்று வகை எதிரிகள், காலந்தோறும் முயற்சித்து வந்தாலும் துளியளவுகூட வெற்றிபெற்றது இல்லை. நீதிக்கட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியானாலும், 1977க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. ஆனாலும் அரசியலில்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர, திராவிடர் கருத்தியலைத் தொட முடியவில்லை. இன்றைக்கும் தமிழகத்தில் திராவிடத்தையும், பெரியாரையும் ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. விஜயகாந்த் கட்சியில் திராவிட என்று இருப்பதும், கம்யூனிஸ்ட்கள் காலம் கடந்து பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன எதிரிகளாலும் மற்றும் நம் இனத் துரோகிகளாலும் எந்த வகையிலும் திராவிடர் கருத்தியலை முறியடிக்க முடியவில்லை. இன்று மட்டுமல்ல, என்றும் அழிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும், திராவிடர் இயக்கத்திற்குப் புதியதாக ஒரு சோதனை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. யார் யார் எல்லாம் இந்த இயக்கத்தினால் உயர்வு பெற்றார்களோ, பின் அவர்களைத் தொடர்ந்து பயன் பெற்று வரும் அவர்தம் சந்ததியினர் அடிப்படை அறிவு கூட இன்றி திராவிடர் இயக்கம் என்ன சாதித்துவிட்டது? என்று கேட்பதுதான் வேதனையான விந்தை.

தமிழ் ஓவியா said...

ஆகவே, திராவிடர் இயக்கம் இன்னும் பொலிவோடும் வலுவோடும் முன்னோக்கிச் செல்ல நமது புதிய தலைமுறையினரைத் தயார் செய்ய வேண்டும். அவர்களுக்கு இவ்வியக்கத்தின் வரலாறு, தொன்மை, மேன்மை இவையினை விளக்கிக் கூற வேண்டும். புதிய புதிய நூல்கள் ஆக்கப்பட வேண்டும். கணினி, இணையம், வலைப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் என எதனையும் விட்டுவிடாமல் நாம் இந்த இயக்கத்தின் மாண்பினைச் சொல்ல வேண்டும். சொல்லப்படும் செய்தி ஒன்றானாலும் சொல்லுகின்ற பாணி வெவ்வேறாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில்தான் எனக்குத் தோழர் கோவி லெனின் எழுதிய திராவிடர் இயக்கம் -நோக்கம், தாக்கம், தேக்கம் என்கிற நூல் கிடைத்தது. நூறாண்டு வரலாற்றை ஒன்றுவிடாமல் முந்நூறு பக்கங்களுக்குள் தொகுப்பது என்பது ஒரு பெரிய சாதனைதான். அதைவிட முக்கியமானது செய்திகளைச் சுவை குன்றாமல் தொகுத்து அளிப்பது. இந்நூலின் ஆசிரியர் லெனின், திராவிடர் இயக்க வரலாற்றை தாத்தா பெயரன் இடையிலான உரையாடலாகக் கொண்டு சென்றிருப்பது சிறப்பானது.

தாத்தாக்கள் திராவிடர் இயக்கத்தின் நோக்கத்தை அறிந்தவர்கள். அதன் தாக்கத்தை நேரில் கண்டவர்கள். கத்திப்பாரா மேம்பாலம் கட்டுவதற்கு முன் வாகன நெரிசல் எப்படி இருந்தது, அதை எத்தனை சிரமத்தோடு கட்டி முடித்தார்கள் என்பதைக் கண்டவர்களும் அனுபவித்தவர்களும்தான், இன்று அந்த மேம்பாலத்தின் மீது வண்டி ஓட்டிச் செல்லும்போது உணரமுடியும். எதுவுமே தெரியாமல் முதன்முதலாய் அதைக் காண்பவர்கள், அதுவும் குறிப்பாக சீனா மற்றும் மேற்கத்திய நாட்டில் உள்ள மேம்பாலங்களைக் கண்டவர்கள், கத்திப்பாரா மேம்பாலத்தில் என்ன பெரிய சிறப்பு உள்ளது? என வினவுவர். ஆகவே, தாத்தா சந்ததியினர்தான் திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தினை இக்கால சமூகத்தினருக்கு எடுத்து உரைக்க முடியும். இடைப்பட்ட அப்பாக்கள் தலைமுறை அந்த வேலையைச் சரியாய்ச் செய்யாமல்விட்ட கோளாறுகள்தானே இப்போதைய சிக்கல்களுக்குக் காரணம். இந்த நூலின் தலைப்பே வித்தியாசமான ஒன்று. திராவிட இயக்கம் என்பதில் ர் விகுதி வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். வரலாறு தெரிந்தவர்களுக்கு அதன் வித்தியாசம் புரிந்திருக்கும். 1912இல் சென்னை மாகாண சபையாக தொடங்கிய பொழுதே அதன் நோக்கம் பார்ப்பனர் அல்லாத மக்களை மேம்படுத்துவதே.

பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு என்றால் எதிர் மறையாக உள்ளது என்றும், ஏன் 3 விழுக்காடு மக்களை மய்யப்படுத்தி நாம் ஒரு அமைப்பினைத் தொடங்க வேண்டும் தேக்கம் என்பதைக் கூட ஓர் எதிர்மறைச் சொல்லாக அன்றி, அதை நேர்வினையாகப் பயன்படுத்தி இருப்பது நூலாசிரியரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருக்கும் நீரினைத் தேக்கி வைத்தால்தான் விவசாயம் , குடிநீர், மின்னுற்பத்தி எனப் பயன்படுத்த முடியும். இன்றைய சூழலில் இவ்வியக்கம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறும் பொழுது, நம்முடைய இன்றைய மற்றும் நாளைய சமுதாயத்திடம் திராவிடர் இயக்க வரலாற்றினைக் கொண்டு செல்வதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. வரலாறு அறிந்த சமூகம்தான் வெற்றி பெற்ற சமூகமாக இருக்கமுடியும். லெனினின் பார்வையில் திராவிடர் இயக்கம் என்ற கப்பல், பயணம் தொடர தயார் நிலையில் உள்ளது. வழி நடத்த மாலுமிகள் தயார் நிலையில் உள்ளனர்.

ஆனால், எந்தத் திசையில் பயணிப்பது என்பதற்கு வழிகாட்ட திசைகாட்டிதான் இல்லை என்று கூறுகிறார். இன்றைய காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்தினைக் குறித்து விமர்சனங்கள் எழுப்பப்படும் நேரத்தில் சரியான சமயத்தில் எழுதப்பட்ட நூல் திராவிடர் இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம். பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் தோழர் லெனின். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய உன்னதமான நூல்
”உண்மை” -ஏப்ரல் 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்


தமிழர்களின் 300 இசைக் கருவிகள்

நூல்: தமிழிசை வரலாறு
ஆசிரியர்: நா.மம்மது
வெளியீடு: நாதன் பதிப்பகம், 72/43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை-_93
தொலைப்பேசி: 044_4554 2637
பக்கங்கள்: 144 விலை: ரூ.100/_

தமிழிசை குறித்து இடைவிடாது பல்லாண்டுகளாக ஆய்வு செய்துவருபவர் நா.மம்மது. நமது உண்மை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது தமிழிசைக் களஞ்சியம் தமிழின் மிக முக்கிய நூல்களில் ஒன்று. அண்மையில் மம்மது எழுதி வெளிவந்துள்ள இன்னொரு முக்கிய நூல் இது. ராகங்கள் மற்றும் இசைக் கருவிகள் குறித்து நுணுக்கமான பல செய்திகளை இந்நூலில் வழங்கியுள்ளார். அவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே.

பண் நம்மைப் பண் படுத்துகிறது; பண்படுத்தி நம் பண்பாட்டை உருவாக்குகிறது.

நால் வகை நிலத்திற்கும் நான்கு தெய்வம், முதலியன கூறுவது போல் நால் வகைப் பெரும்பண் கூறுவார். பகுதி என்று சிறுபண் கூறுவார். பெரும் பண்ணை, யாழ் என்பார். சிறு பண்ணை யாழின் பகுதி என்பார் தொல்காப்பியர்.

தமிழகத்தில் நிரந்தரமான பாலை வனம் பாலைநிலம் இல்லை.

வான் பொய்த்து, மழையின்றி குறிஞ்சியும், முல்லையும் தற்காலிகமாகப் பாலையாகும்.

அப்பாலையையும் ஒரு திணையாகவே அதற்கும் பிரிவு என்ற உரிப்பொருள் முதல் முப்பொருளும் கூறுவார்.

நாற்பெரும் பண், அய்ந்நிலப்பண், ஏழ்பெரும் பாலை என்று நம் இசை பெருக்கமடைந்து வந்தது.

சிலப்பதிகார காலம்

தொல்காப்பியர் காலத்து அய்வகை நிலத்திற்குரிய அய்ந்து பெரும் பண்களின் வரிசையில் ஏழ்பெரும் பாலைகள் என மேலும் இரண்டு பெரும் பண்கள் பற்றிய செய்திகளைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

1. முல்லையாழ் என்ற முல்லை நிலப்பண்ணானது செம்பாலை என்றும்,
2. குறிஞ்சியாழ் என்ற குறிஞ்சி நிலப்பண், படுமாலைப்பாலை என்றும்,
3. நெய்தல்யாழ் என்ற நெய்தல் நிலப்பண், செவ்வழிப்பாலை என்றும்,
4. பாலையாழ் என்ற பாலை நிலப்பண், அரும்பாலை என்றும்,
5. மருதயாழ் என்ற மருத நிலப்பண், கோடிப்பாலை என்றும்,
நெய்தல் நிலத்திற்கான மேலும் ஒரு பெரும்பண்ணாக விளரிப் பாலையும், மருத நிலத்திற்கான மேலும் ஒரு பெரும்பண்ணாக மேற்செம்பாலையும் நம் இசை மரபில் சிலப்பதிகார காலத்தில் புதிய பெயர்களைப் பெறுகின்றன.

இளங்கோ அடிகளும் சிலப்பதிகார உரையாசிரியர்களும் தெரிவிக்கின்ற
செம்பாலை இன்றைய அரிகாம் போதி என்றும்
படுமலைப்பாலை இன்றைய நடபைரவி என்றும்
செவ்வழிப்பாலை இன்றைய செவ்வழி என்றும்
அரும்பாலை இன்றைய சங்கராபரணம் என்றும்
கோடிப்பாலை இன்றைய கரகரப்பிரியா என்றும்
விளரிப்பாலை இன்றைய தோடி என்றும்,
மேற்செம்பாலை இன்றைய கல்யாணி என்றும் நம் இசை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 3000 ஆண்டு தொன்மைப் பண்களான இந்த ஏழுபாலைகளுக்கு நேராக, இக்கால இராகங்களை முதன்முதலில் தம் நுட்பமான ஆய்வுகளால் கண்டுபிடித்துக் கூறியவர் விபுலானந்த அடிகளார்.

இந்திய இசை வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகள் உண்டு. அவைகளில் 300க்கும் மேலான கருவிகளைப் பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன. அவை நம் தமிழர் கண்டுபிடிப்புகள்.

தமிழ் ஓவியா said...

நம்முன்னோர் இசைக் கருவிகளை நான்கு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

1. காற்றுக் கருவி
குழல், நாகசுரம், முகவீணை முதலியன
2. நரம்புக் கருவி
யாழ், தம்புரா, துந்தனா முதலியன
3. தோல் கருவி
தவில், மத்தளம், துடி முதலியன
4. கஞ்சக்கருவி
சிங்கி, கைமணி, சேகண்டி முதலியன

இசைக்கருவி வாசித்த பெரும்பாணர், குழல்ப் பாணர், யாழ்ப்பாணர், பாடினி, பொருநர், மதங்கர், சூதர், மாகதர், விறலியர் என நம் இலக்கியங்கள் நெடுகவே விரிவாகப் பேசுகின்றன.

பண், பாணி, பாண், பாணன், பாண்மகள், பாணிச்சி, பாண்மகன் என பண்ணால் பெயர்பெற்ற இசைக்கருவியாளர் பாடகர் பற்றி நம் பண்டை இலக்கியங்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன.

வேட்டையாடும்போது அம்பு எய்வதால் வில் நாண் வில் நரம்பு ஏற்படுத்தும் ஒலியைக் கொண்டே நரம்பிசைக் கருவியை மானிடன் உருவாக்குகின்றான். வில்யாழ் அதன் பரிணாம வளர்ச்சியான வீணை என்று இன்று பெயர் பெற்றிருக்கும், நமது செங்கோட்டு யாழும் பிறந்த வரலாறு இதுவே.

மிருதங்கம் வாசிப்பவரின் வலப்பக்கம் உள்ள பகுதி வலந்தலையாகும். இது மூன்று மெல்லிய தோல்களால் ஆனது. உட்கரைத்தட்டு, மீட்டுத்தோல், நடுவிலுள்ள சாய்ப்புத் தோல் ஆகிய நுட்பமான பகுதிகள் கொண்டது வலந்தலை; மீட்டுத்தோல், வெட்டுத்தட்டு என்றும் சாய்ப்புத் தோல் கொட்டுத்தட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவை ஆட்டுத்தோல் மற்றும் கன்றின் தோலால் செய்யப்படுகிறது.

சோறு, மங்கனீசு, புளிச்சாறு ஆகிய மூன்று கலவைகளாலும் வலந்தலையின் கொட்டுத்தட்டு பூசப்பட்டு நிரந்தரமாக அமைக்கப்படுகிறது. இது சோறு, கரணை, மருந்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கரணை என்ற இந்தப் பகுதியே மிருதங்கத்திற்குத் தனியானதொரு நாதத்தை அளிக்கிறது. வலந்தலைப் பாடகரின் ஆதாரச் சட்சத்திற்கு சுருதி சேர்க்கப்படுகிறது.

இடந்தலை என்பது மிருதங்கக் கலைஞரின் இடப்பக்கப் பகுதியாகும். இது தொப்பி என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு மெல்லிய தோல்களால் ஆனது. இதன் உட்புறத்திலுள்ள உள் வட்டமும் வெளிவட்டமும் முறையே ஆட்டுத்தோலாலும், எருமைத் தோலாலும் அமைக்கப்படுகின்றன.

அரங்கில் இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்பு மாவும் நீரும் கலந்த கலவை இடந்தலையில் பூசப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இந்தக் கலவை அகற்றப்படுகிறது.

தபலை என்ற தபலா

பண்டை நாள் முதல்கொண்டே ஒருமுகப்பறை, இருமுகப்பறை, அய்முகப்பறை (பஞ்சமுகவாத்தியம்) என்ற பன்முகம் கொண்ட பறைகள் வழக்கில் இருந்துள்ளன. இருமுகப்பறையைப் பிரித்து இருமுகங்களையும் தனித்தனியே வாசித்த முறையும் பண்டை நாளில் வழங்கி வந்துள்ளது. பகுவாய்ப் பறை என்ற சொல்லாடல் சங்கத்தமிழ் இலக்கியங்களில் உண்டு. அவ்வாறு செய்யப்பட்ட ஒரு கருவியே பதலை என்பது பகுவாய்ப் பதலை, கலப்பையர் என்ற வழக்குகள் சங்க நூல்களில் நிரம்பவே உண்டு.

இந்தப் பதலை என்ற சொல் பின்னாளில் தபலை என்றாகியுள்ளது. தபலை, திமிலைகள், பூரிகை, பம்பை என அருணகிரியார் பாடுகின்றார்.

இந்த தபலையே, வழக்கமாக, ஆ விகுதி சேர்த்து சொல்லாக்கம் பெறும் வடவர் வழக்கில் தபலா என்றாகியுள்ளது. எனவே, இன்றைய தபலா என்பது தமிழர் கண்ட இசைக்கருவியே. முந்தைய நூற்றாண்டு வரை தஞ்சை, மராட்டிய அரசவைகளை அலங்கரித்த தபலாக் கலைஞர்கள் பலர் இருந்துள்ளனர்.

தும்புரு - தம்புரா

துன், துன், என்ற தாளக்கட்டுடன் துந்தனா சுருதிக்கருவியாகவும், தாளக் கருவியாகவும் விளங்கி வருகின்றது. இதுவே தாளத்தின், சுருதியின் அளவைக் காட்டும் யாழின் பக்கச் சாரணியாகப் பின்னாளில் மலர்ந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தும்பு என்றால் உட்துளை என்று பொருள்; தூம்புமுகம், வடிகால் தூம்பு என்றெல்லாம் வழங்கி வருவதை நாம் அறிகிறோம். தேனை உறிஞ்ச உட்துளையுள்ள உறுப்பைப் பெற்றுள்ளதால் தேன் வண்டு, தும்பி என்ற பெயர் பெறுகிறது. உட்துளையுள்ள துதிக்கை இருப்பதால் யானையானது தும்பி என்றும் அழைக்கப்படுகிறது.

தும்பு + உரு = தும்புரு. உட்துளை உருக்கொண்டது. தும்புரு, தும்புருயாழ், தும்புருவீணை, தும்புரு -_தம்புர் _ தம்புரா என்றானது. தன்பூர் என்று இந்துஸ்தானியில் பெயர் பெற்றுள்ளது. தூம்பு என்றே பண்டைய சுருதிக் கருவி அழைக்கப்பட்டுள்ளது. இதை கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர என்று மலைபடுகடாம் தெளிவுபடுத்துகின்றது. இங்கு இமிர்தல் என்பது இம் என்ற சுருதியானது, தூம்பின் மூலம் மீட்டப்படுவதைத் தெரிவிக்கின்றது.

சிறுபறை என்ற கஞ்சிரா

பண்டைய சிறுபறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் ஒருமுக வாத்தியம். தாளம் கொட்டும் தோல் இசைக்கருவிகளில் மிகப் பழமையானது இச்சிறுபறையே. சிறுபறையின் குடும்பத்தில், பறை, தப்பு, டேப்பு என்றெல்லாம் எண்ணிலடங்கா தோல்கருவிகள் காலந்தோறும் உருவாகியுள்ளன. ஒரு தவில் கலைஞரும் மிருதங்க வித்வானும் செய்யும் தாள முழக்குகளை மிக எளிதாக ஒரு கஞ்சிராக்கலைஞர் செய்து காட்டுவார். மிருதங்கம், தவில் பயில்வோர் முதலில் கஞ்சிரா பழகுவதே சிறந்தது. இன்றைய நாட்களில் அரங்கிசை என்ற செவ்வியல் இசையில் உடன் வாசிக்கப்படும் உயர்வைப் பண்டைய சிறுபறை என்ற கஞ்சிரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளாரிநெட்

காற்றுக்கருவியான கிளாரிநெட் நெகிழி குடும்பத்தைச் சேர்ந்தது. 3 தாளங்கள் வரை வாசிக்க முடிகின்ற, மேல்தானத்திற்கு மேல்தானமும் வாசிக்க முடிகின்ற உயர்ந்த இசைக்கருவி கிளாரிநெட். இதில் சுரத் துவாரங்களை மூட பொத்தான் அமைக்கப்பட்டுள்ளது. வேண்டிய அளவுகளில் காலளவு, அரையளவு என்றெல்லாம் துவாரங்களை மூட வசதி இருப்பதால், ஒரு சுரத்தின் நுட்ப ஒலிகளையும், அனு சுரங்களையும் கிளாரிநெட்டில் வாசிக்கும் வசதி உண்டு. எனவே, நுட்பச் சுரங்கள் மிகுந்த நமது பண்களுக்கு கிளாரிநெட் ஏற்ற கருவியானதில் வியப்பில்லை.

சாக்சபோன்

பண்டைய ஊதுகுழலின் உலோக வடிவத்திலிருந்து மலர்ந்த ஒரு வாத்தியமே சாக்சபோன். இதன் தாழ்ந்த இசையும் தான மாற்றங்களும் கேட்போரைச் சுண்டி இழுக்கும் தன்மை உடையது. கிளாரிநெட் போன்று பொத்தான் வசதி இருப்பதால் நாம் நினைக்கும் அளவுவரை துவாரங்களை மூடித்திறந்து நுட்பச் சுரங்களையும் இதில் வாசிக்க முடியும். கடந்த நூற்றாண்டு கடைசியில்தான் இந்த வாத்தியக்கருவி நம் தமிழ் இசையுடன் சேர்ந்தது. அரங்கிசைக்கு ஏற்ற கருவியாக சாக்சபோனில் செய்த மாற்றங்கள் அனைத்தும் கதிரிகோபால்நாத் என்ற ஒப்பற்ற சாக்ஸ் கலைஞரையே சேரும். வயலினும், கிளாரிநெட்டும், சாக்சபோனும் வெளிநாட்டுக் கருவிகள். தமிழர் கருவியல்ல. ஆனால் தமிழிசைக் கருவிகள். நம் பண்களின் ஒப்பற்ற நுட்பச் சுரங்களை எல்லாம் காட்ட வல்லவை. தமிழர் இசையிலிருந்து இம்மூன்று இசைக் கருவிகளையும் எளிதில் புறந்தள்ள முடியாது.

தமிழ் ஓவியா said...

பழங்குடிகளின் சாமிகள்

முதலில் வந்து பூஜை செய்து ஏசு வருவார் என்றாய்...

அப்புறம் அவர்கள் வந்தார்கள்.

பூதிக்காடு மாரியைத் திருடிக்கொண்டு,

கரட்டியம்மனையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு

ரங்கநாதனே தெய்வம் என்று கூறி

பூஜை செய்தார்கள்.

உங்கள் ஏசுவும்,

அவர்களின் ரங்கநாதனும் எங்களுக்கு அந்நியர்கள்.

மணியரசி, பூமிவீரன்,

பூதிக்காடு மாரி, கூரய்யன்

போன்றவர்களே எங்கள் சாமிகள்.

அருங்காட்சியகத்தில் இருப்பதெல்லாம்

எங்கள் சாமிகள் அல்ல... - இது பழங்குடி இருளர் மக்களின் பாடல்களில் ஒன்று. ஆதிக்க மதங்கள் அண்டிப் பார்த்து அவர்களைத் தம் மதத்துக்கு மாற்ற முடியாத யதார்த்தத்தை இக்கவிதை உணர்த்துகிறது. தம்மோடு வாழ்ந்து, வாழ்வுக்காகவும் உரிமைக்காகவும் போராடி மடிந்தவர்களையே மண்ணின் சாமிகளாக அம்மக்கள் வழிபடுகிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்க்கையை அவர்களோடே கழித்து அவர்களின் மொழியைக் கற்று கவிதையாக எழுதியிருக்கிறார் கோவை வழக்குரைஞர் லட்சுமணன். `ஓடியன் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் பழங்குடி இருளர்களின் வாழ்வைக் கூறுகிறது. இன்னும் அவர்கள் நாகரிக உலகத்துக்கு வந்துவிடாமல், இயற்கை வாழ்வையே தொடர்வதை எடுத்துக் காட்டுகிறது. எழுத்து வடிவமில்லாத இம்மக்களின் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் லட்சுமணன். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளின் கலவையாக இம்மொழி இருக்கிறது என்று கூறும் இவர், பழங்குடிகளின் மீது சமூகத்தின் பார்வையை ஈர்க்கும் விதமாக இம்முயற்சியைச் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

லட்டா? துட்டா?



கோவிலுக்கு மொட்டை போட்டவனைப் பார்த்து `உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுத்தியா என்று கிராமங்களில் கேட்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட கட்டணம் வசூலித்த காலம் இருந்தது. என்.டி.ராமராவ் ஆட்சியின் போது இலவசமாக்கப்பட்டது. ஏனென்றால், பக்தர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மயிர் விற்கப்பட்டது. மயிர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தப் பணமே போதும் என்பதால், கட்டணத்தை விலக்கினார்கள். திருப்பதி மொட்டை மூலம் கிடைக்கும் மயிரை விற்பதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கிறதாம். இந்த வருமானம் போதாதென்று புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட கூந்தல் முடியைக் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு 5 லட்டுகள் இலவசமாக அளிக்கப்படுமாம். இந்த லட்டு தானம் ஏன் தெரியுமா? நீண்ட முடியை அய்ரோப்பிய நாடுகள் `டோப்பா (ஷ்வீரீ)அதாவது தோற்றப் பொலிவிற்காக வைத்துக் கொள்ளும் பொய் முடி) செய்வதற்காக நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன. இந்த வியாபாரிகளைப் பிடித்துவிட்ட திருப்பதி தேவஸ்தானம் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் மயிரைப் பிடுங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக லட்டு கொடுத்து ஏமாற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலியே...

தமிழ் சினிமாவின் பல செண்டிமெண்டுகளில் தாலி செண்டிமெண்ட்தான் நம்பர் ஒன். தாலியில் கை வைத்தால் அவ்வளவுதான் அப்படியே அதிரும் அளவுக்குப் பின்னணி இசையும், இடி, மழை, மின்னலும் ஒரு சேர மிரட்டும். இந்தக் காட்சிகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்ணுரிமையைப் பறிக்கும் கருவியாக, பெண்ணடிமையைத் தொடரும் அடிமைச் சின்னமாகத்தான் தாலி இம்மண்ணில் உருவாக்கப்பட்டது. அதனைத் தூக்கி எறி என்று குரல் கொடுத்தவர் பெரியார். தம் கருத்தை ஏற்பவர் தாலி கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதன்படி தாலி கட்டாத இலட்சோப இலட்சம் தொண்டர்களை உருவாக்கினார். தாலி அணியாத பெரியார் தொண்டர்களான வீராங்கனைகளை வித்தியாசமாகப் பார்த்த தமிழகம், ஏளனமாக கேலி பேசியதும் உண்டு. சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலோர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள். அதன் முக்கியக் காரணங்களில் தாலியும் ஒன்று. காட்சிக்கு ஏற்றாற் போல ஒப்பனை செய்துகொள்ளும் போது தாலியைக் கழற்ற வேண்டியிருக்கலாம். அப்படிக் கழற்ற மனமில்லாதவர்கள் மீண்டும் நடிக்க வரவில்லை. சிலர் கதாநாயகி வேடத்தைத் தவிர்த்து, அக்காளாக, குடும்பப் பெண்ணாக, டாக்டராக, வயதான மாமியாராக நடித்தார்கள். இப்படி நடிக்கும் போது தாலி ஒரு பிரச்சினை இல்லை அல்லவா?

இந்தக் காலமெல்லாம் கடந்து சின்னத்திரை வலுப்பெற்று வந்த சூழலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்களே துணிச்சலாக முதன் முதலில் தாலியைக் கழற்றிவைத்து விட்டு செய்தி வாசித்து, பின் மீண்டும் அணிந்து கொண்டார்கள். இந்த வகையில் முதன் முதலில் தாலிக்கான புனிதத்தை உடைத்ததற்காக இவர்களைப் பாராட்டலாம்.

ஆனாலும், தாலிக்கு சினிமா கொடுத்த செண்டிமெண்ட்டை சின்னத்திரைத் தொடர்களும் தொடர்ந்தன. தாலியை மட்டுமே வைத்துக்கூட பல கதைகள் புனையப்பட்டன. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய தாலியை அவன் இறந்தாலொழிய கழற்றுவதில்லை என்றே சின்னத்திரைக் குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் திகழ்ந்தன. காலமாற்றம் இப்போது மெதுவாக இந்தப் போக்கினை மாற்றி வருகிறது. பெண்கள் பொருளீட்டி, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவரும் சூழலில் சின்னத்திரை செண்டிமெண்ட்டுகளும் உடைகின்றன போலும்!

கடந்த மார்ச் மாத இடை வாரத்தில் சன் தொலைக்காட்சியில் நிறைவடைந்த `திருமதி செல்வம் தொடரிலும், இன்னொரு தொடரான நாதஸ்வரம் தொடரிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.

திருமணம் செய்த நாளில் இருந்தே துன்பத்தில் உழன்று, உழைப்பால் உயரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை திருமதி. செல்வம். ஒரு கட்டத்தில் மனைவியை விலக்கிவைத்து விட்டு முன்னாள் காதலியுடன் சேர்ந்து மனைவிக்குத் தொல்லை கொடுக்கிறான் செல்வம். ஆனால், காதலியின் சூழ்ச்சி அறிந்து அவளால் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு சிறைக்கும் சென்றுவிட்டு மீண்டும் மனைவியிடமே வருகிறான். தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று மன்றாடுகிறான். ஆனால், மனைவி அர்ச்சனா வழக்கமான பழைய பத்தாம்பசலிப் பெண்ணாக இல்லாமல், ``இதேபோல நான் கெட்டழிந்து மீண்டும் உன்னிடம் வந்து என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டிருந்தால் நீ ஏற்றுக்கொள்வாயா? என்று அதிரடியாய்க் கேட்கிறாள்.

திகைக்கும் கணவனை நோக்கி அடுத்த குண்டை வீசுகிறாள் மனைவி. அது அவன் கட்டிய தாலி. ``நீ கட்டிய இந்தத் தாலி அர்த்தமில்லாமல் என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியபடியே தாலியைக் கழற்றிக் கணவனின் முகத்தில் வீசுகிறாள். சுற்றி இருக்கும் உறவினர்கள் அவளது செயலை ஏற்றுக்கொள்வதோடு, இன்னொரு திருமணமும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்பதோடு அந்தத் தொடரை முடித்தார்கள்.

இதேபோல நாதஸ்வரம் தொடரிலும் ஒரு காட்சி. திருமணமாகி சில நாட்களே ஆன தம்பதியரின் கதையில் அக்காட்சி. கணவனின் நயவஞ்சகத்தை, துரோகத்தை அறிந்து அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வாழப் புறப்படுகிறாள் அந்த இளம்பெண். வெளியேறும்போது அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வருகிறாள்.

காலமாற்றத்தையும், பெண்ணுரிமையின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலையும் உள்வாங்கியே இக்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுரிமைப் போரின் வீச்சு இன்னும் அதிகமாகும்போது தாலி தேவையா என்ற காட்சிகளும் வரலாம்.

தமிழ் ஓவியா said...

ஆச்சாரம்


அய்யர் வூட்டுப்பொண்ணு, முஸ்லிம் பையனைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டாளாமா!

ஊருக்குள் இப்படிப் பரவலாகப் பேசிக் கொண்டார்கள். சீனிவாச அய்யங்காருக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் காதுபடவே பேச இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?

தெருவுல நடந்து போக முடியல! எங்க பாத்தாலும் இதே இழவு பேச்சுத்தானா? ஆத்துக்குப் போய் லோகேஸ்வரியை (மனைவி) ஒரு பிடி பிடிக்கவேணும்! இவளாலதானே இப்படி ஆயிடுத்து?

அவ்வூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பரம்பரைக் குருக்களான அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரிய பெண் சிறீநிதி சேலம் பொறியியற் கல்லூரியில் பொறியியல் படிப்பினை முடித்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அவரது மனம் பின்னோக்கிச்.... சென்றது..!

ஏன்னா...! நம்ம பெரிய பொண்ணு பிளஸ் டூ முடிச்சுண்டா...! நல்ல மதிப்பெண் எடுத்திருக்கா... சேலத்துல ஏதோ நல்ல பொறியியல் கல்லூரி இருக்காம்... அங்க அவாள சேர்த்துடலாம்...! அவாளும் படிக்கறேன்...னு ஆசைப்படறா....! என்ன சொல்றேள்? என மனைவி லோகேஸ்வரி கேட்டதும், கல்லூரியும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்! என்றார்.

இந்தக் காலத்துல பி.இ.. ஆவது படிக்க வச்சாத்தான் அவா வாழ்க்கை நன்னாருக்குமோன்னா! நீங்க அந்தக் காலத்து பி.யு.சி. வரை படிச்சிருக்கேள்... அது உங்களுக்குப் போதும்.. இவாளாவது நன்னாப் படிச்சு வாழ்க்கையில் நல்லா இருக்கட்டுமே என்று கெஞ்சினாள் லோகேஸ்வரி.

சரி..சரி.. எப்படியோ அனுப்பு..! என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார் அய்யங்கார். தாயுக்கும் மகளுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது!

சிறீநிதி பொறியியல் பட்டம் பெற்றாள். அவர் குடும்பத்திற்குத்தான் எவ்வளவு பேரானந்தம்! வரதராஜ பெருமாளுக்கு அபிசேகம் செய்து... ஊர் மக்களுக்குப் பொங்கல், சுண்டல் கொடுத்து... மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பெற்றோர்.

நினைக்க நினைக்க சீனிவாச அய்யங்காருக்கு நெஞ்சு கனத்தது.

அன்று.. இரவு மணி எட்டரை ஆகியும் சிறீநிதி இன்னும் வீடு திரும்பவில்லை. கல்லூரியில் ஏதோ விழா என்று காலையில் போனவா இன்னுமா ஆத்துக்கு வரல? என்ன ஆச்சு? அவா சிநேகிதிங்கிட்ட போன் போட்டாவது கேட்டுடு..! என்றார். எல்லாம் கேட்டேன். சரியான பதிலில்லே! என்றாள் மனைவி. இதுக்குத்தான் பொட்டப்புள்ளைங்கள இவ்வளவு படிக்க வைக்கப்பிடாதுன்னு சொன்னேன்.. கேட்டியாடி..! என்ன ஆச்சோ.. ஏதாச்சோ... பத்திரிகையிலேயும், தொலைக்காட்சியிலும் செய்திகளைப் பார்க்கும் போது வயித்துல புளியக் கரைக்கறது! மனம் குமைந்து போனார்கள் இருவரும். சில நிமிடங்கள் கழித்து, இளையமகள் மூச்சிரைக்க ஓடிவந்து சொன்னாள். அப்பா..! அக்கா, தன்னோட கூடப் படிக்கும் முஸ்லிம் பையன திருமணம் பண்ணிண்டாளாம்! அவா பிரண்டு எனக்கு இப்பத்தா குறுஞ்செய்தி (னீ) அனுப்பிச்சிருக்கா! என்றாள்.

இனி ஊருக்குள்ளே தலைநிமிர்ந்து நடக்க முடியாது...! தலைகுனிய வச்சுட்டாளே..

பாவி! ஓடிப்போன இவாள எப்படி இனி ஆத்துக்குள்ள விடமுடியும்? தனக்கு இனி மகளே இல்லை. அவா இறந்துட்டாள் என்று சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி கருமாதி செய்துவிட்டார்.

அவரின் ஆச்சாரத்திற்கும் - உயர்குலப் பெருமைக்கும் - இந்துதர்மத்திற்கும் களங்கம் கற்பித்து விட்டாள்.

தன்னை ஓர் உயர் வர்ணத்தார் என மதிக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்து தன்னை ஆச்சாரமுள்ள பிராமணன் என்று மெய்ப்பித்துக் கொண்டார்.

ஓடிப்போன சிறீநிதியின் உடுப்புக்களையும் - அவள் நிழற்படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். அவ்வப்போது மனைவி லோகேஸ்வரி மட்டும் மகளை எண்ணி... கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

மூன்றாண்டுகள் ஓடி விட்டது. ஒருநாள் சீனிவாச அய்யங்காரும், மனைவியும் திருவரங்கம் சென்று ரெங்கநாதனைத் தரிசனம் செய்துவிட்டு.... திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வந்தனர்.

பேருந்து நடத்துனரைப் பார்த்து, வண்டி பொறப்பட, இன்னும் எவ்வளவு நேரமாகும்? எனக் கேட்டார். பத்து நிமிடங்கள்! என்றார் நடத்துனர்.

அப்போது, சுமார் முப்பது வயதுள்ள முஸ்லிம் இளைஞன் ஒரு கையில் பெட்டியையும், இன்னொரு கையில் குழந்தையையும் சுமந்து கொண்டு வந்தான். பேருந்தில் ஏதாவது இடம் காலியாக இருக்கிறதாவென்று கண்களால் தேடிக் கொண்டிருந்தான். சீனிவாச அய்யங்கார் அவனை நோக்கி, தம்பி...! இங்க இடம் இருக்கு, வாங்க... உட்காருங்கோ! என்றார்.

தமிழ் ஓவியா said...

அவருக்கு அருகில் பெட்டியை வைத்துவிட்டு உட்கார்ந்தான். குழந்தையைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு, வெளியே, யாரையோ எதிர்பார்த்தபடி இருந்தான். மெல்ல அந்த இளைஞனிடம் கேட்டார் அய்யங்கார். தம்பி... யாரையோ தேடறீங்க....! ஆமாங்க..., என் மனைவி வருவாள்...! ஓஹோ...! கடையில ஏதாவது வாங்கப் போயிருக்காங்க போல! என்றார்.

ஆமாம் என்றதும், லோகேஸ்வரி திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். அந்த இளைஞனைப் பார்த்து, அந்தக் கொழந்தைய இப்படிக் கொடுங்கோ! என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். ஏண்டிச் செல்லம்... அழறே...! அதோ பார்! அதோ.... பஸ் வருது...! அதோ என்று வேடிக்கைக் காட்டியபோது, குழந்தை அழுவதை நிறுத்திச் சிரித்தது. அப்போது, ரம்ஜான் பீவி...! இதோ, இங்கே வா! என்றதும் பேருந்தினுள் இருக்கையை நோக்கி வந்தாள் இளைஞனின் மனைவி.

சீனிவாச அய்யங்காரையும், அவர் மனைவி லோகேஸ்வரியையும் பார்த்தவுடன்.... ரம்ஜான் பீவி திடுக்கிட்டுப் போனாள்! எனினும் சமாளித்துக் கொண்டு, முகத்தினின்று விலகிய பர்தாவை நன்றாக இழுத்து மூடிக் கொண்டாள். கணவனும் மனைவியும் நிற்பதைப் பார்த்ததும், தன் மனைவி அருகில் ரம்ஜான் பீவியை அமரச்செய்தார் அய்யங்கார். அந்த இளைஞனைப் பார்த்து, எழுந்து கொண்டு, தம்பி.... நீங்க உட்காருங்கோ! என்றார்.

பரவாயில்ல சார்.... நீங்க உட்காருங்க! என்றான் இளைஞன். பையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்து, ஒன்றை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் லோகேஸ்வரி. இப்போது, சீனிவாச அய்யங்காரைப் பார்த்துச் சிரித்தது குழந்தை. அவர் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

அம்மா.... கொழந்தைக்கு என்ன பேர் வச்சிருக்கேள்? என்று அதன் கன்னத்தைத் தொட்டு, அவர் வாயில் முத்தமிட்டுக் கொண்டார். பர்தாவிலிருந்த ரம்ஜான் பீவி, தன் கணவனைப் பார்த்துவிட்டு..... லோகேஸ்வரியை ஏக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

குழந்தை, சீனிவாச அய்யங்காரின் நெற்றியில் வித்தியாசமாகத் தெரிந்த சிவப்புக் கோடிட்ட நாமத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் அழித்துக் கொண்டிருந்தது!

பர்தாவினுள் இருந்த ரம்ஜான் பீவிக்கு ஆத்திரம், அழுகையினால் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. முகத்தில் இருந்த பர்தாவை விலக்கி, கைக்குட்டையினால் கண்ணீரைத் துடைத்தாள். சட்டென்று முகத்தைப் பார்த்த லோகேஸ்வரி அதிர்ச்சியும், வியப்பும் ஒரு சேர, அப்படியே பிரமித்துப் போனாள். அவளுக்குப் பேச நா வரவில்லை!

தமிழ் ஓவியா said...

பாச உணர்ச்சி மேலிட..... அடியே...! சிறீநிதி...! சிறீநிதி..!. என்று தன் மகளைக் கட்டிக் கொண்டாள் லோகேஸ்வரி!

மூன்று ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுப் போன சிறீநிதி தற்போது ரம்ஜான் பீவியாக... தன்னிடமே வந்துவிட்டாளே....! என்ன அதிசயம் என்ன வியப்பு, ரெங்கநாதா... என உச்சரித்துக் கொண்டது அவரது வாய்.

கருமாதி செய்த தன் மகள் வயிற்றுப்பேரன் இப்போது சீனிவாச அய்யங்காரின் கைகளிலே! அந்தக் குழந்தையைக் கீழே விடவும் முடியவில்லை. வைத்திருக்கவும் இயலவில்லை! அவருள் இருந்த வறட்டு ஆச்சாரம், ஆணவ அனுஷ்டானம் விடாப்பிடியாக வைத்திருந்த மதமாச்சர்யம் - போலிக் கௌரவம் ஆகியன குருதி உறவின் பாச உணர்வுகளால், படிப்படியாக குறைந்து வந்து கொண்டிருந்தது!

ஆனாலும் ஊரில் நாலு பேருக்கு முன்னால், ஒரு முஸ்லிம் பையனோடு பெற்ற மகள் ஓடிப் போய்விட்டாள் என்பதும், அதற்குப் பிராயச்சித்தமாக, அவர் மகளே இல்லையென்று கருமாதி செய்ததும், அவரின் உள் மனதில் ஓடியது.

சீனிவாச அய்யங்காருக்குக் கோபம் தலைக்கேறியது. தான் வைத்திருந்த பேரக் குழந்தையை - மகளிடமே கொடுத்துவிட்டு, சீ...! நாயே...! என் கண் முன்னால் நிற்காதே! என் மானம், கௌரவம், ஆச்சாரம் எல்லாம் தொலைச்சுண்டு, மீண்டும்..... ஒன்னு சேர்லாமுன்னு பாக்கிறேளா....? அது முடியாது! என்னால் ஏத்துக்க முடியாது...! ஏத்துக்கவே முடியாது! என்றார்.

அடியே....! மொதல்ல பஸ்சவிட்டு எறங்குடி! இவா மொகத்தைப் பாக்கக்கூடாது! என்று கத்தினார் அய்யங்கார். அப்பா....! நா செய்த காரியம் தவறுதான் ஒத்துக்கிறேன். என்னை மன்னிச்சுருங்கோ! அப்பா....! இப்ப லோகத்துல, எத்தனையோ பேரு ஜாதிவிட்டு, மதம் விட்டுத் திருமணம் செய்துக்கிட்டு நலமா வாழுறாங்க! அவா பெத்தவா அங்கங்கே சில எதிர்ப்புத் தெரிவிச்சுட்டாலும் மீண்டும் ஏத்துண்டு அவாள வாழவிடறா.

கலப்புமணம்ங்கிறது இப்போ காலத்தின் கட்டாயம்! நேக்கு நீங்க வேணும்னா கருமாதி செஞ்சிண்டிருக்கலாம். ஆனா தந்தை - மகள்ங்கிற உறவுக்கு யாரும் கருமாதி செஞ்சுட முடியாது. என்னடா பெத்த பொண்ணே, நமக்கு அறிவுரை சொல்றான்னு நெனைச்சுடாதேள். இதனால உங்க ஆச்சாரம், அனுஷ்டானம், இந்துதர்மம் ஒன்னும் கெட்டுப் போகாது.

தமிழ் ஓவியா said...

நம்ம ஊர்ல அடிக்கடி கருப்புச் சட்டைக்காரங்க கூட்டம் போட்டுண்டு, ஜாதியும், மதமும் கடவுள் கற்பிக்கல. அப்படி கடவுள் கற்பிச்சதா நெனச்சா, அந்தக் கடவுள் நமக்குத் தேவையில்ல. மதம் ஒரு அபின், மதம் மனுஷாள மடையனாக்கிறதுன்னு சொல்லிண்டு வர்றத நானும் நிறைய கேட்டிருக்கேன். அவா சொல்றதும் சரிதானேன்னு என் மனதில் அலையடிக்கிற மாதிரி தோனும். அப்புறமா சிந்திச்சுப் பாத்து ஒப்புக்கிட்டேன். அதனால நா படிப்பு முடிக்கறச்ச இவாள திருமணம் செய்துட்டேன். நீங்க போட்டிருக்கிற நாமத்தையும், பூணூலையும் கழட்டிட்டா, நானும் பர்தாவை எடுத்துடுறேன்....! நாம மனஷாளா இருக்கலாம்....! நா, தவறாப் பேசியிருந்தா மீண்டும் மன்னிச்சுருங்கோ! என்று மகள் தன் உள்ளத்தில் கருக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகச் சொன்னாள்.

சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு, தன் கணவரிடம், ஏன்னா....! அவா சொல்றதும் சரியாத்தானே இருக்கு! நம்ப ஆச்சார, அய்தீகப்படி உங்க தோப்பனார் அவாளுக்கு முன் இருந்தவாளெல்லாம்..... சிறீரங்க ரெங்கநாதரைச் சேவிக்க, சிறீரங்கத்திற்குக் கால்நடையா... நூறுமைல் தூரம்நடந்து வந்ததா, பெரியவா சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போ நம்ம பெரியவா மாதிரி, ஆச்சாரப்படி நடந்தே வந்துதான் பெருமாள சேவிச்சுப் போறமா? ஏன்னா, வளர்ந்து வர்ற அறிவியல் முன்னேற்றத்தில, கார்லயும், பஸ்லயும்தானே வந்துபோறோம்? மதம், ஆச்சாரத்தையெல்லாம் எதிர்த்துண்டுதானே வர்றோம்?

கலப்புமணத்துக்கு மட்டும் ஏன் அந்தக் கருமாதி எல்லாம் பார்க்கறேள்? நாலு பேருக்காக நாம வாழல. நமக்காக வாழலாமோன்னா! அதுதான் புத்திசாலித்தனம்! நீங்க ஏத்துக்காட்டியும்..... நான் என் மகளை... மருமகனை, பேரனை ஏத்துண்டு, இவாள நம்ம ஆத்துக்கு அழைச்சுண்டு போறேன்! என்றாள் தீர்மானமாக!

சீனிவாச அய்யங்கார் தான் தனிமையில் விடப்பட்டதாக தாயும் - மகளும் கொடுத்த சாட்டையடிகளைத் தாங்காமல் - பதில் சொல்லாமல் தனக்குத்தானே வெட்கப்பட்டுக் கொண்டார்.

காலமாற்றத்தினால் தானும் மாறுவதில் தவறேதும் இல்லையென நீண்ட மன உளைச்சலுக்குப் பின் தெளிவாகியது அவருக்கு. தான் ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக.... மகளிடமிருந்த பேரக்குழந்தையை, இப்படி..... வாடா....! என்று வாங்கிக் கொண்டார்.

குழந்தை சீனிவாச அய்யங்காரின் மடியில் அமர்ந்துகொண்டு, அவர் நெற்றியிலிருந்த சிவப்பு நாமத்தை மீண்டும் தன் பிஞ்சு விரலால் அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அதில் அவரின் மத ஆச்சாரம், வீணான சனாதனம், ஆணவ பிறவிபேதம் அழிந்து கொண்டிருந்தது!

- பாவலர் ப.கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.



அமில வீச்சுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்முறை, குழுவாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை கிடைக்கவும், ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் சட்டமுன் வரைவு வழிவகை செய்துள்ளது.

ஏற்கெனவே பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தொந்தரவு தரும் நோக்குடன் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது போன்ற குற்றங்களில் இரண்டாவது முறையில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாது.

அமிலம் வீசுவது மிகக் கடுமையான குற்றம், இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்பட்டவர்கள், அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் தண்டனை அளிக்கப்படும். பெண்களைப் பின் தொடர்வது, பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றன முதல்முறையாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளன. இப்படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பெண்களின் மீதான வன்முறை எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், பாலுறவு பற்றிய கருத்துகள் பலதரப்பட்டவையாக உள்ளன.

தமிழ் ஓவியா said...

வன்புணர்வு மட்டும் அல்லாமல், மனைவியுடன் கொள்ளும் உறவுகூட அவள் சம்மதத்துடன்தான் நடைபெற வேண்டும்; இல்லையேல், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற குரல்களும் உரத்துக் கேட்கின்றன.

பெண்ணானவள் தனித்து ஆண் துணையில்லாமல் வாழ முடியாது; மனுநீதியின்பால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அவளது கணவனுடன்கூட பாலுறவிற்கு மறுத்துரைக்கும் உரிமைகள் அவளுக்குண்டு. அவளது மனக்குமுறல்களை எடுத்துரைக்க அவளுக்கு உரிமை உண்டு. அவள் மதிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நடத்துகிறார்களேயொழிய, ஒரு மனித உருவாக நடத்துவதில்லை. அவளால், தந்தை, கணவன் அல்லது மகன் ஆகியோரது பாதுகாப்பின்றி சுதந்திரமாக வாழமுடியும் என்று முன்னாள் பெண்களுக்கான அமைப்பின் தலைவரான (Former Chairperson Womens’ Commission) ஆர். ராமாத்தாள் கூறியுள்ளார்.

வன்புணர்வு என்றால் என்ன? இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவு வன்புணர்வு பற்றிச் சொல்கிறது.

1. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக,

2. அவளுடைய சம்மதம் இன்றி,

3. அவளுக்குப் பிடித்த ஒருவரின் மரண பயம் காட்டியோ, துன்புறுத்தியோ சம்மதம் பெறுதல்,

4. அவள் சட்டப்படி மணந்து கொண்டுள்ள கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும், அவள் அவனைக் கணவன் என்று நம்பி இருக்கும் சமயத்தில், அவளுடைய சம்மதத்துடன்,

5. அவள் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போதோ அல்லது போதை வயப்பட்டிருக்கும்போதோ அவளது சம்மதத்துடன்,

6. அவள் 16 வயதுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில், அவளது சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,

அவை வன்புணர்வாகக் கருதப்படும்.

ஆனால், பதினைந்து வயது நிரம்பாதிருக்கும் மனைவியுடன் அவள் கணவன் கொள்ளும் உறவானது, வன்புணர்வாக மாட்டாது-. (இந்தக் கருத்தானது மறுதளிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.)

ஒரு மனிதன் யாரையாவது தாக்கினால், அது, தண்டனைக்குரிய குற்றமாகும். அவன் அதே செயலை மனைவியிடம் செய்யும்போதும், அது கொடுஞ்செயல்தானே!

ஒரு மனிதன் ஒருவரைக் கடும் வார்த்தைகளால் வைது, காயப்படுத்தினால், அது தண்டனைக்குரியது.

அதேபோலத்தான் ஒருவன் தன் மனைவியைப் பொதுஇடத்திலோ அல்லது வீட்டிலோ வையும்போது அது கொடுஞ்செயலாகிறது.

குடும்பக் கொடுமைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) தண்டனைக்குரியதே.

தமிழ் ஓவியா said...

ஒரு மனிதன் ஒருவரை சைகையின் மூலம் அச்சுறுத்தினால், அது குற்றமாகும். அதுபோலவே, அவன் மனைவியைப் பயமுறுத்தினாலும் அது குற்றமே.

அதைப்போலவே, மற்றொரு பெண் அல்லது சிறுமியுடன் உறவுகொள்வது தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதைப்போலத்தான் மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் செய்தலும் ஆகும்.

சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, எதுவும் குற்றமல்ல; சம்மதம் இல்லாதபோது அச்செயல், அந்த நபர் சிறுமியாகவோ, வேறொரு பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தாலுமே, குற்றமாகி விடுகிறது. அதுவே நாட்டின் சட்டம். உடலுறவின்போது, பெண் அதில் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளாதபோது, அது கணவனேயாக இருந்தாலும், அவளைத் துன்புறுத்தி, அதன் காரணமாக கட்டாயத்தினால் அவள் இணங்கியிருந்தாலும்கூட அச்செயலின் விளைவாக அவளுக்கு வலி, கேடு மற்றும் விருப்பத்துக்கு மாறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது காரணமாக அது வன்புணர்ச்சிபாற் கொண்டு வரப்பட வேண்டும்.
உடலுறவிற்கு அணுகும்போது, மனைவி மறுதளித்தால் அதற்கான மாற்று, அவளிடமிருந்து தள்ளி இருத்தல் அல்லது மணமுறிவு பெறுதலே ஆகும். அதற்காக அவன் அவளை எவ்வழியிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.

திருமணமென்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்தான். அதற்கு அப்பால் யாதொன்றுமில்லை. திருமணமென்பது ஒரு வளர்ச்சி பெற வேண்டிய இணக்கம் (Sense) தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்குத்தான். ஒருவரை அடக்கித் துன்புறுத்த அல்ல. பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கும் பெண்ணிற்குத் திருமணம் ஒரு தண்டனையாக அமையக் கூடாது. அதுவும் வன்புணர்ச்சிக்கு இணையான வல்லுறவாக அது அமையக் கூடாது. ஆனால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியச் சட்டப்படி (The Muslim Personal Law) பெண்ணிற்குத் தரவேண்டிய சீதனம் (மெகர்) கேட்கப்பட்டும்கூட கொடுக்கப்படாவிட்டால், மனைவி அவனைப் புறக்கணிக்கலாம்; சமைக்க மறுக்கலாம்; துணி துவைக்க மறுக்கலாம்; ஏன் எதையும் செய்ய மறுக்கலாம்; ஆனால், அவள் பாலுறவு வாழ்வை மறுக்க முடியாது. கணவன் அழைக்கும்போது அவள் போய்த்தான் ஆகவேண்டும்.

இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் மீனா கந்தசாமி, ஒரு பெண்ணுக்குப் பாலியல் விருப்பம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் சமுதாயம் மட்டுமே, அவளுக்குச் சில நேரங்களில் அந்த விருப்பங்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும்.

இங்கே பெண்ணுக்கு அவள் ஆசையை வெளிப்படுத்தும் இடமும் இல்லை, வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பும் இல்லை என்று நடப்பு உண்மையை உடைத்துப் பேசுகிறார். இது குறித்த தனது கட்டுரை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பின்வருமாறு எடுத்து வைக்கிறார். ஓர் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட உறவின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு நீங்கள் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உங்கள் கணவர் அவரது ஆண் தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக வாழ்த்துக் கூறும் புன்னகையை மருத்துவர் உதிர்ப்பதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டியிருக்கும். இதற்காக நீதிமன்றம் செல்ல இயலாது. இந்திய குற்றவியல்/ஆண் குறியியல் சட்டத்தில் (Indian Penal/Penile Code) திருமண உறவில் பாலியல் வன்முறையின் மீது நடவடிக்கை எடுக்க பிரிவே இல்லை. கடந்த டிசம்பரில், தில்லி மாவட்ட நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் என்பவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், இந்திய குற்றவியல் சட்டம் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை என்ற பார்வையையே ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டாயத்தினாலோ, தனது விருப்பத்திற்கு மாறாகவோ தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று கணவன் மீது மனைவி புகார் தெரிவித்தாலும் அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாகச் சொல்வதானால் உன் கணவன் உன் உடலின் உரிமையாளன். திருமணம் என்பது இலவசப் பாலுறவுக்காக ஆணுக்குக் கிடைத்த லைசன்ஸ் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழி! என்கிறார் மீனா கந்தசாமி.

திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டும் என்ற பெரியார், பெண்ணின் பாலியல் தேர்வையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனையை இன்று உலகம் பேசுகிறது.



தொகுப்பு: செல்வா
சமா இளவரசன் உதவியுடன்

தமிழ் ஓவியா said...

காஸ்ட்ரோவின் வேண்டுகோள்!


அமெரிக்காவை எதிர்த்து நின்ற லத்தின் அமெரிக்க இடதுசாரித் தலைவர்களான பிரேசில் நாட்டு அதிபர் டில்மா ரூசுப், பர-குவே முன்னாள் அதிபர் பெர்னாண்டோ லூகோ, பிரேசில் முன்னாள் அதிபர் லூலா டா சில்வா போன்றோரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து நிற்பவரும், அதன் பலவிதமான கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தவருமான கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ் அவர்களிடம் ஒருமுறை பேசுகையில், தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, மருந்து, மற்றும் ஊசி இவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

சமூகவியலாளர் - நாத்திகர் எஸ்.சந்திரசேகர்


- நீட்சே

சுப்பிரமணியன் சந்திரசேகர் ஓர் இந்திய - அமெரிக்க வானவியல் இயற்பியலாளர். 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்து 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி மறைந்தவர்.

பல வான் மீன்களின் வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய அண்மையிலான வளர்ச்சி முறை குறித்த கருத்தை அறிவதற்கான முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்ததற்காக நோபல் பரிசு பெற்றார். சந்திரசேகர், பஞ்சாபில் உள்ள லாகூரில், ஒரு தமிழ்நாட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்.

சீதாலட்சுமி - சுப்பிரமணியன் தம்பதிகளின் 10 குழந்தைகளில் இவர் மூன்றாவதாகப் பிறந்தவர். அவருடைய தந்தை வழி மாமாதான், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமன் என்ற புகழ்பெற்ற அறிவியல் மேதை ஆவார். ஆரம்ப காலத்தில் சந்திரசேகர் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். பிறகு சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். இயற்பியலில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.

1929இல் அவர் தனது முதல் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இந்திய அரசாங்கத்தின் மாணவர்களுக்கான உதவித்தொகையுடன் அவர், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படித்தார்.

பேராசிரியர் ஆர்.எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராக அவர் ஆழமான தனது படிப்பைத் தொடர்ந்தார். பேராசிரியர் பி.ஏ.எம். டிராக் என்பவரின் யோசனையின் பேரில், கோப்பன் ஹேகன் நகரில் உள்ள பாடமுறை இயற்பியல் கல்வி நிறுவனத்தில் தனது கடைசி ஆண்டுக் கல்வியை முடித்தார். அங்கே பேராசிரியர் நீய்ல்ஸ் போர் என்பவரைச் சந்தித்தார்.

தமிழ் ஓவியா said...

1933ஆம் ஆண்டில் அவர் தனது நலமழிந்த வான்மீன்கள் என்ற புத்தகத்திற்காக வெண்கலப் பதக்கம் பெற்றார். அத்துடன் தானே சுழலும், கீழ் இழுத்துச் செல்லும் ‘Poly Types’ பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், அவருக்கு 1933இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தாரால் முனைவர் (Ph.D) பட்டம் கொடுக்கப்பட்டது. திரும்ப 1933-1937 காலகட்டத்தில் டிரினிட்டி கல்லூரியின் உதவித்தொகை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு சர்.ஆர்தர் எடிங்டன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவர் வெளியிட்ட புகழ் பெற்ற கண்டுபிடிப்பு வெளிப்படையாகவே ஏளனம் செய்யப்பட்டது.

அது அவரை, பிரிட்டனுக்கு வெளியே வேலை தேட விரட்டிற்று. பிறகு பல இடங்களில், சந்திரசேகர், எடிங்டனின் நடத்தை, இன அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கூறினார். 1937இல் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தினரால் பணிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டார். அவர் அங்கேயே தொடர்ந்து பணியாற்றினார். இயற்பியலில் பல துறைகளிலும், வானவியல் இயற்பியலிலும் அவர் தனக்கேயுரித்தான நடைமுறையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

நோபல் பரிசு

1983இல் சந்திர சேகருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. விண்மீன்களின் உயிர்த் தோற்றத்திற்கும், உட்கட்டுக் கோப்புக்கும் அதற்கு முக்கியக் காரணமான வெளிப்புற செயல் மாற்றங்கள் பற்றிய அவரது ஆய்விற்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

அவர் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். ஆயினும் மனச்சோர்வு பெற்றார். காரணம், அவரது முந்தைய ஆராய்ச்சிதான் அந்தப் பாராட்டுப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தனது வாழ்நாள் சாதனை தாழ்வுபடுத்தப்பட்டதாக அவர் உணர்ந்தார். வில்லியம் ஏ. ஃபவுலர் என்பவருடன் அவர் இந்த நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

சந்திரசேகர் 1936இல் லலிதாவைத் திருமணம் செய்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, அவரைவிட ஒரு வருடம் குறைந்த வகுப்பில் லலிதா படித்து வந்தார்.

நோபல் பரிசு பெறும்போது தனது சுய வரலாற்றில் எனது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக, லலிதாவின் பொறுமையான புரிந்துகொள்ளுதலும், ஆதரவும், உற்சாகமூட்டுதலும் எனக்கு உதவியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பு

சந்திரசேகரின் குறிப்பிடத்தக்க பணி, அவரது சந்திரசேகரின் எல்லை என்ற விண்ணியல் இயற்பியல் ஆய்வாகும். அந்த எல்லை, வெள்ளை, குள்ள நட்சத்திரத்தின் அதிகபட்ச அடர்துகள்கள் பற்றி விவரிக்கிறது. 1.44 சூரிய துகள்கள் அல்லது அதற்குச் சமமான குறைந்த அடர்துகள்கள், ஒரு நட்சத்திரத்தைவிட அதிகமாகி, கடைசியில் அழிந்துபோய், நியூட்ரான் நட்சத்திரமாகி அல்லது சூப்பர் கோவாவைப் போல நியூட்ரான் நட்சத்திரமாகவோ அல்லது கருப்பு ஓட்டையாகவோ மாறலாம்.

1995இல், திடீரென்று ஏற்பட்ட இதய அடைப்பு காரணமாக, சந்திரசேகர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில், மனைவியை விட்டு இறந்து போனார்.

பல நேரங்களில் சந்திரசேகர் வெளிப்படையாகவே தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக் கொண்டதல்லாமல், அதன்படியே, தனது தனி வாழ்விலும், பொது வாழ்விலும் நடந்து கொண்டுள்ளார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்கள் சரித நினைவுரையில், சந்திரசேகர் ஒரு கணித செயல்பாட்டு வல்லுநர்; அவரது ஆராய்ச்சிகள் பெரும்பாலும் வானியலை மய்யப்படுத்தியே இருந்துள்ளன; அவரைப் போல மற்றொருவரைக் காண்பது இயலாது என்று ஆர்.ஜே. டெய்லர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தழிழில் : ஆர்.ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல்


’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’

பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது.

உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான பெண்ணுரிமைக்கான அமைப்பு ஃபெமன். இதன் போராட்டங்களில் ஒரு வகை, திறந்த மார்புடன் போராடுவது. அப்படி என் உடல் என்னுடையது மட்டுமே; இது யாருடைய கவுரவத்திற்கும் மூலம் அல்ல (My body belongs to me, and is not the source of anyone’s honour) என்று தனது திறந்த மார்பில் அரபியில் எழுதப்பட்ட வாசகத்துடன் முகநூலில் படம் வெளியிட்டுள்ளார் டுனீசியாவைச் சேர்ந்த அமினா என்ற 19 வயதுப் பெண். இதற்காக அவருக்கு பத்வா அறிவித்திருக்கிறார் அடெல் அல்மி என்ற ஓர் இஸ்லாமிய மதவாதி. ஆனால் மரண தண்டனையே நடப்பில் இல்லாத டுனீசியாவில் சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதி அல்லாத அல்மி கொடுத்துள்ள பத்வா தவறானது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனை எதிர்த்தும், அமினாவின் உயிரைக் காக்க வேண்டியும் உலகளாவிய கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது. தற்போது அவருக்கு ஆதரவாக டுனீசியாவைச் சேர்ந்த மெரியம் என்ற பெண்ணும் தன் உடலில் எங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அரபியில் எழுதி தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அதை உடைக்கும் நடவடிக்கைகளும் தொடரவே செய்யும்.

- சமன்

தமிழ் ஓவியா said...

டெசோ தூண்டிய உணர்வுத் ‘தீ’


தமிழகத் தமிழர்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. ஏதோ ஒன்றிரண்டு கட்சிகள் தான் இதை பற்றிப் பேசுகின்றன. மக்கள் அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். இளைஞர்களுக்கும் இந்த உணர்வுக்கும் சம்பந்தமேயில்லை என்று தான் மத்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் கருதிக் கொண்டிருந்தன. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி கண்டு இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை உள்ளிட்ட நாடுகளே வியப்புடன் நோக்குகின்றன.

தமிழீழத்திற்கான உலகளாவிய மேடையை உருவாக்கவும், பன்னாடுகளின் ஆதரவைப் பெறவும், கடந்த ஆண்டு மாபெரும் மக்கள் திரளைக் கொண்ட வலிமையான அமைப்பாக டெசோ உருவாக்கப்பட்டதில் இருந்து ஈழத்திற்கான போராட்டப் பாதை புதிய எழுச்சி கொண்டது. உலக அரசியல் சுழலில் சிக்கியுள்ள ஈழப் போராட்டத்தினை உலக மக்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்ப்பதன் வாயிலாக போராட்டத்துக்கு வலிமை சேர்க்க புலம்பெயர் தமிழர்கள் முயன்று வருகிறார்கள். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தினையடுத்து புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் சில காலம் அமைதி நிலவினாலும் பின்னர் ஆங்காங்கே போராட்டக்குரல் ஒலிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் மீண்டும் டெசோ உருவாக்கப்பட்டது. தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் டெசோவை வீரியத்துடன் முன்னெடுத்தன. டெசோவின் பயணம் தொடங்கியது. 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்ற மாநாடு, போராட்டங்கள் என அதன் பயணம் குறிப்பிட்ட இலக்கில் சென்றுகொண்டிருந்த சூழலில், சேனல் 4 வெளியிட்ட நோ ஃபயர் சோன் ஆவணப்படத்தினைப் பயன்படுத்தி இந்திய அளவில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று மனிதநேயர்களிடம் ஆதரவு திரட்டத் தயாரானது டெசோ.


தமிழ் ஓவியா said...

ஒரு புறம் போராட்டக்களம்; மறுபுறம் ஈழத்திற்கான ஆதரவினை இந்திய அளவில் பெருக்கும் முயற்சி என இரண்டு களங்களில் பணிகளை மேற்கொண்டது. கடந்த பிப்ரவரியில் கூடிய டெசோ கூட்டத்தையடுத்து தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், கருப்புச் சட்டை அணிந்து ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் என பிப்ரவரி மாதத்தில் போராட்டக் களம் கண்டது. மார்ச் 5-ல் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், அதே நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்களின் கண்டனஆர்ப்பாட்டம், மார்ச் 7 - டெல்லியில் மாநாடு என்று அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. (இச்சூழல் உருவான காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் இன்னும் சில அமைப்புகளும் அவசர அவசரமாக அறிவித்து, டெசோவின் போராட்டத்திற்கு முன்பாக நடத்திட வேண்டும் என்னும் முனைப்பில் மார்ச் 3_ல் முற்றுகைப் போராட்டம் நடத்தின. அவர்கள் எப்படியோ; இதனை நாம் வரவேற்கவே செய்கிறோம். தி.மு.க. தலைவர் கலைஞர் எல்லோரும் போராடவேண்டும்.நாங்கள் அதனை வரவேற்கிறோம் என்றார்.) நாடாளுமன்றத்தில் 10 நாட்களாக முக்கிய விவாதப் பொருளாக டெசோவின் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் ஈழப் பிரச்சினையை மாற்றினர். அ.தி.மு.க.வும் குரல் கொடுத்தது. பல்வேறு வட இந்திய அரசியல் கட்சிகளையும் இது குறித்துப் பேசச் செய்தனர் தமிழக எம்.பி.க்கள். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழக மீனவர்களைக் கொன்றொழிக்கும் இலங்கை இனவெறி அரசுக்கு தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தூதரகமா என தூதரக முற்றுகைப் போராட்டத்தின் போது எழுந்த உணர்வார்ந்த தமிழர்களின் முழக்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கைத் தூதரகத்தை அகற்றக் கோரி பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பியவண்ணம் இருந்தன. (தூதரகத்தை கேரளாவுக்குக் கொண்டு செல்லலாமா என சிங்கள அரசு யோசிக்கிறதாம்.இது தற்போது கிடைத்துள்ள கடைசிச் செய்தி)

அடுத்த கட்டமாக மார்ச் 12-ஆம் தேதி தமிழ்நாட்டளவில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது டெசோ. மத்திய அரசுக்குத் தமிழர்களின் ஒற்றுமையையும், ஈழப் பிரச்சினையில் கொண்டுள்ள அக்கறையையும் எடுத்துக் காட்டும் விதத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தது. அ.தி.மு.க. அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திய சூழலிலும் 80 சதவீத வணிகர்கள் தமது கடைகளை அடைத்து ஆதரவு அளித்தனர்.வழக்கம்போல பார்ப்பன ஊடகங்கள் புளுகின. அன்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தி டெசோ தலைவர்கள் கைதாயினர். அய்.நா-வின் மனித உரிமை ஆணயத்தின் ஜெனீவா மாநாட்டில் ஈழம் தொடர்பாகவும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவருவதற்கு பல்வேறு நாடுகளையும், அய்.நாவின் மனித உரிமை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளையும் தொடர்ந்து நேரில் சந்தித்து வலியுறுத்தியது டெசோ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட திமுக-வின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா வைத்திருந்த வரைவுத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிரான பல அம்சங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

தமிழ் ஓவியா said...

இனப்படுகொலை என்ற வார்த்தை இல்லை எனினும், இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்பதையும், அதற்கான சர்வதேச சுதந்திர விசாரணை வேண்டும் என்பதையும், இலங்கை தன் உள்நாட்டுக்குள் உருவாக்கிய எல்.எல்.ஆர்.சி அறிக்கையையொட்டிய எந்த மறுவாழ்வுப் பணிகளும் நடைபெறவில்லை என்பதையும் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் எடுத்துக் காட்டியிருந்தது. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதோடு, அதில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பன உள்ளிட்ட முக்கியமான திருத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. டெசோ தனது குரலை ஓங்கி ஒலித்தது. மத்திய அரசிடமும், அதன் தலைவர்களிடமும், நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பி தீர்க்கமான முடிவை இந்தியா எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர். அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை ஏற்காத இலங்கை அரசு, அய்.நா. மன்றத்துக்கான இலங்கைத் தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா வாயிலாக, இலங்கை மேற்கொண்டுள்ள மறுவாழ்வுப் பணிகளை அய்.நா.வின் மனித உரிமை அமைப்பு அங்கீகரிக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியது. மேலும் இது வளரும் நாடுகள் மீது நீண்டகாலப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தனக்குக் கூட்டுக்கு ஆள் தேடியது. அளவுக்கு மீறி இலங்கை மீது மனித உரிமைக் கவுன்சில் கவனம் செலுத்துவதாகவும் குறைப்பட்ட அவர், எனவே இலங்கை மீதான குற்றாச்சாட்டுகளோடு உள்ள இந்த தீர்மானத்தை இலங்கை ஏற்காது என்றும் தெரிவித்ததோடு, இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் பல்வேறு சதிகள் அரங்கேறின. இந்தியாவின் அரசியல் புரோக்கர் சு.சாமி சிங்கள அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து விட்டு, அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொண்டார். தமிழகத்தில் அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதங்கள் தொடங்கின. மனித உரிமை ஆணையத்தின் பணியை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பொது வாக்கெடுப்பையும் கோரிய டெசோவின் பணியும் இந்தியாவிற்கு அழுத்தத்தைத் கூட்டியது. கடந்த ஓராண்டாக டெசோவின் இடைவிடாத ஈழ முழக்கம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்டதன் விளைவு, தமிழக இளைஞர்கள்,மாணவர்களின் உள்ளங்களும் ஈழத்தை நோக்கித் திரும்பின. 2009_க்குப் பிறகு சிறு சிறு அமைப்புகளெல்லாம் குரல் எழுப்பி வந்தாலும், டெசோ எழுப்பிய குரலுக்குப் பின்தான் மத்திய அரசும், இந்திய ஊடகங்களும் ஈழச்சிக்கலைக் கண்டுகொள்ளத் தொடங்கின. இந்தச் சூழலில், மார்ச் 8-ஆம் நாள் லயோலா கல்லூரி மாணவர்கள் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தமிழ் ஓவியா said...

தமிழக அரசு மூன்றே நாட்களில் அவர்களைக் கைது செய்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் போராடத் தொடங்கினர். உண்ணாநிலை, சாலை மறியல், இரயில் மறியல், கல்லூரிப் புறக்கணிப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, பேரணி என மாணவர்கள் படிப்படியாக அடுத்தடுத்த கட்டப் போராட்டங்களைக் கையிலெடுத்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் தான் போராட்டத்தை நடத்துவர் என்ற நிலை மாறி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கினர். போராட்டக் களத்தில் இறங்காத மாணவர்கள் என்று எண்ணப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரைக்கும் தங்கள் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தினர். அமெரிக்கத் தீர்மானம் குறித்த இருவேறு பார்வை மாணவர்கள் மத்தியில் இருந்தாலும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை இந்திய அரசு அய்.நாவில் பதிவு செய்ய வேண்டும் என்பதையும், தனித் தமிழீழம் வேண்டும் என பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் மாணவர்கள் தெளிவாக முன்வைத்தனர்.றக தமிழகம் முழுக்க மாணவர் போராட்டங்களால் உணர்வுத் தீ பற்றியெரிந்தது. தி.மு.க தனது அடுத்த கட்ட அழுத்தத்தை டெல்லியில் தொடர்ந்து கொடுத்து வந்தது. அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா உரிய திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் இல்லையேல் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார் தி.மு.க & டெசோவின் தலைவர் கலைஞர். இந்தியா முழுக்க ஈழம் பற்றியே ஊடகங்கள் பேசத் தொடங்கின. நாடாளுமன்றம், மக்கள் மன்றம் என வட இந்தியா முழுக்க இலங்கை இனப்படுகொலை குறித்த விவாதங்கள் இடம்பெற்றன. மத்திய அமைச்சர்கள் மூவர் திமுக தலைவர் கலைஞரைச் சந்தித்து சமாதானம் செய்ய முயன்றாலும், தனது உறுதியில் சற்றும் குலையாதவராகக் கடைசி நிமிடம் வரை காத்திருந்தார் கலைஞர்.

அமெரிக்கத் தீர்மானத்தில் இனப்படுகொலைக் கெதிரான திருத்தங்கள் கொண்டுவருவதற்கான காலம் முடிந்தும் இந்தியா செயலற்று இருந்ததையும், போர்க்குற்றம், சர்வதேச விசாரணை போன்ற ஆறுதலான அம்சங்கள் கூட அமெரிக்கத் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நீர்த்துப் போனதை அறிந்ததும், எச்சரித்த படி அமைச்சர் பதவிகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்தது தி.மு.க. எத்தனையோ இக்கட்டான சூழலிலும் மதவாத ஆபத்து சூழ்ந்து விடக் கூடாது என்பதற்காக பொறுத்துக் கொண்டு, காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை, இனத்துக்கோர் இடர் வந்ததும் விலக்கிக் கொண்டது தி.மு.க. அடுத்தடுத்து காங்கிரஸ் ஆதரவை விடுதலைச் சிறுத்தைகளும் விலக்கிக் கொண்டது. எதிர்பாராத இந்த முடிவை காங்கிரசால் ஜீரணிக்கவே முடியவில்லை.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ் வாடி என பெரும்பாலான வட இந்தியக் கட்சிகளும் தங்கள் சுயரூபத்தைக் காட்டின. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல் தமிழ்நாட்டில் காட்டிக் கொண்ட காவிகளும் கம்யூனிஸ்ட்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்பலமாயினர். காங்கிரஸ் ஒழிந்து பா.ஜ.க வந்தால் இலங்கையில் போர் நிறுத்தப்படும் என்றெல்லாம் ஆருடம் சொல்லிவந்த தமிழகத்தின் வாய்ச் சவடால் பேர்வழிகளுக்கும் ஒரேடியாய் பட்டை நாமம் தீட்டியது பா.ஜ.க. கேரளாவில் இரண்டு மீனவர்களைக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களைத் திருப்பி அனுப்ப அந்நாடு மறுக்க, அதில் உறுதியாக இருந்து தூதரக உறவைக் கூட முறித்துக் கொண்டு, அவர்களை இந்தியாவின் விசாரணைக்கு அழைத்துவர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ச்சியாகக் கொன்று வரும்போதும் வாய்மூடி மவுனம் காத்து, இலங்கையை நட்பு நாடு என்று சொல்லும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அம்பலமானது.

காங்கிரஸ் மட்டுமல்லாது, இந்தியா என்னும் கட்டமைப்பே தமிழர்களுக்கு எதிராக இருப்பதை உணர்த்தின டெல்லியில் நடந்த நிகழ்வுகள். போலியான இந்திய தேசிய உணர்வுக்கு ஆட்பட்டிருந்த மாணவர்களுக்கு இந்தியாவின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியது இந்நிகழ்வு. அகில இந்திய அளவில் திமுக கொடுத்த அரசியல் நெருக்கடி இவர்களை அம்பலத்திற்குக் கொண்டுவந்தது. 2009-ல் போரை நிறுத்த வேண்டும் என்ற அளவில் தமிழகத்தில் இருந்த பொதுமக்களின் உணர்வு, இப்போது மிகத் தெளிவாக தனி ஈழமே ஒற்றைத் தீர்வென்னும் முடிவிலும், அதற்கான பொதுவாக்கெடுப்பு, உலக அளவிலான ஆதரவு திரட்டல் என்ற சரியான பாதையிலும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கை அரசு இந்தியாவுக்கு நண்பனென்றால், தமிழ்நாடு பகை நாடா? என்னும் கேள்வி எழுந்த மாணவர்கள் மனதில், தமிழர்களுக்கு இந்தியா எவ்விதத்திலும் பயன் தராது என்ற உண்மை மாணவர்கள் மத்தியில் பதிலாகப் புலப்படத் தொடங்கியுள்ளது. டெசோவின் பணியால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் சிலர் அவதிப்பட்டாலும், தொடர்ச்சியான போராட்டங்களால் டெசோ கொளுத்திய உணர்வுத் தீ, இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பற்றி எரிகிறது. தங்களிடம் அரசியல் காழ்ப்புணர்வோடு அணுகுவோரை மட்டும் எச்சரிக்கையுடன் கவனித்து ஒதுக்கிவிட்டால் நாளை நமக்கு நம்பிக்கையானது.

எங்கள் தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கிப் படிப்போம் - எங்கள் தமிழ் வானில் பகைவர் நுழைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்று நிறுவியுள்ளனர் மாணவர்கள். தமிழர்கள் உணர்வு எரிமலையாகட்டும்; எதிர்ப்புகள் வெடித்து நொறுங்கட்டும்.

- இளையமகன்

தமிழ் ஓவியா said...

டெசோவின் பயணம் தொடரும்! தொடரும்!


உலகம் வெகு ஆவலாக எதிர்பார்த்த, ஜெனிவாவில் கூடி விவாதித்து, இலங்கையின் போர்க் குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அங்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காகவும், இராஜபக்சே அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல; இனி எதிர்காலத்திலும் எந்த ஒரு அரசும், இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடாதிருக்க ஒரு பாடம் புகட்டப்படுவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பிய உலகத் தமிழர்கள் மற்றும் உண்மையான மனித உரிமை ஆர்வலர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் சென்ற ஆண்டைப் போலவே, வெடியாக இல்லாமல் நீர்த்துப் போன புஸ்வாணம் ஆகிவிட்டது.

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை -_- போராட்டத்தை நசுக்கிட, சுண்டைக்காய் இலங்கைக்கு சகல இராணுவ உதவிகளையும் செய்து, தமிழினம் பூண்டற்றுப் போகும் நிலையை உருவாக்கிட சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் செய்த இராணுவ உதவியைவிட, அதிகமாக இந்தியா அளித்துள்ளது என்பதை பல முறை இலங்கை இராஜபக்சே அரசே பெருமிதத்துடன் அறிவித்துள்ளதே!

அய்.நா.வின் போர்க் குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக சேனல் 4 போன்ற அமைப்புகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. இலங்கையின் அத்துமீறிய போர்க்குற்றக் கொடுமைகள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களையெல்லாம் கூட குண்டு போடப்படாத பகுதி (ழிஷீ திவீக்ஷீமீ ஞீஷீஸீமீ) என்று குறிப்பிடப்பட்ட பகுதிக்கு ஏமாற்றி வரச் செய்து, அங்கும் ஒரே மூச்சில் கொத்துக் குண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அழித்தனரே! 12 வயது பாலகன் பாலச்சந்திரனைக்கூட மார்பில் 5 குண்டுகளால் துளைத்து சாகடித்த இதயமில்லா மனித மிருகங்களின் செயல் உட்பட படமாக வந்து உலகத் தாரின் உணர்ச்சியை எரிமலையாக்கிய பின்னரும், இந்திய அரசின் போக்கில் துளிகூட மாற்றம் காணாதது - வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

தி.மு.க. அதனுடன் சேர்ந்த பாவத்திற்காக பழி சுமப்பதற்கு இனியும் தயாராக இல்லை; இவர்களை இனி திருத்தவே முடியாது என்று உணர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்தே வெளியேறிய நிலையில்கூட, மாணவர்கள் போராட்டம் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் நிலையில்கூட, இந்திய அரசு தனது இரட்டை வேட அரசியலை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்கி, இலங்கை அரசு தன் தவறுகளுக்காக வருந்தி, எஞ்சிய தமிழர் வாழ்வையாவது, இனி ஒரு பாதுகாப்புடன் வாழ வகை செய்வதை விடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சென்ற முறை நீர்த்துப் போகச் செய்ததைப் போலவே, இம்முறையும் உள்ளடி வேலைகளைச் செய்து, இறுதியில் ஒப்புக்காக தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகக் காட்டிக் கொண்டு சரித்திரப் பழியைச் சுமந்து நிற்கிறது இந்தியா!

சென்ற ஆண்டைவிட, இம்முறை கிடைத்த ஆதாரங்கள் ஏராளம்; இலங்கை அரசின் போக்கோ மேலும் கொடுமை என்ற நிலையில், இந்திய அரசு லிலிஸிசி என்பதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டிய இலங்கைக்கு இடித்துரைத்து, அதனை வழிக்குக் கொண்டு வர எதனைச் செய்தது?

தமிழ் ஓவியா said...

நரி வலமும் போக வேண்டாம்; இடமும் போக வேண்டாம். மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால்போதும் என்ற பழமொழி போலக் கூட இல்லாது, அதனையும் தாண்டிடும் தன்மையை அல்லவா காட்டி விட்டது!

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவி இந்தத் தீர்மானத்தில்

1. சுதந்திரமான சர்வதேச நாடுகள் குழுவின் ஆய்வு நடவடிக்கை தேவை,

2. கால வரையறைப்படுத்தப்பட்ட -- குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த விசாரணை நடவடிக்கைகள் முடிய வேண்டும்

- என்பது போன்ற எதுவும் - - இத்தீர்மானத்தில் இடம் பெறவில்லை. இதை தி.மு.க.வும் டெசோ அமைப்பும், இன்னும் பலரும் உணர்ந்தே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைந்தும், அதனை இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லாது ஒரு திருத்தத்தைக்கூட வைக்காதது மட்டுமல்ல; ஏற்கெனவே வந்த தீர்மானமும் நீர்த்துப் போகும்படிச் செய்து தனது மாபெரும் பழி எனும் பங்களிப்பைச் செய்துள்ளது! என்னே கொடுமை!!

25 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித் துள்ளன.

13 நாடுகள்தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. தீர்மானம் இலங்கைக்கெதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை விசாரிப்பவர்கள் யார்? யார் குற்றம் புரிந்தார்களோ அதே இலங்கை அரசுதான் விசாரணையை நடத்தும் அமைப்பை உருவாக்குமாம்! என்னே விசித்திரம்!

தனது நாட்டில் நீதித்துறையில் அரசுக்கு மாறுபட்ட தீர்ப்புக்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயகாவை நீக்கிய இராஜபக்சே அரசுதான் விசாரித்து நீதி வழங்கப் போகிறதா?
தீர்மானம் 25 நாடுகள் ஆதரவோடு நிறைவேறியும் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

ஆபரேஷன் வெற்றி; நோயாளி செத்தார் என்பது போன்ற ஒரு வேதனையான நிலைதான்!

பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்றே! இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மற்ற பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகளும்கூட, ஆரம்பத்தில் ஒப்புக்காக ஒப்பாரி வைத்தனவே தவிர, உண்மையாக ஒத்துழைப்பு நல்கவில்லையே!

போர்க் குற்றவாளி என்று இலங்கை அரசு கூறப்படுவதை பா.ஜ.க. ஏற்காது என்று எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜ் கூறியது -- இலங்கை இராஜபக்சே அரசை காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி தூக்கிப் பிடிக்கிறது என்பதற்கான சான்றே!

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொணரக்கூட இக்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லையே! இந்திய அரசின் வெளி உறவுக் கொள்கையில் பா.ஜ.க. தலையிடாதாம். அப்படியானால் பாகிஸ்தான் பற்றி மட்டும் -- காசாபைத் தூக்கிலிடுவது வரை பேசலாமா?

அகில இந்தியக் கட்சிகள் பலவற்றின் முகத்திரையைக் கிழித்துள்ளது ஈழத் தமிழர் பிரச்சினை.

காங்கிரசுக்கு, அண்ணனாக, உருட்டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன் என்பதுபோல அல்லவா உள்ளது!

தமிழ்நாட்டு மக்களும், வரலாறும் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள்!

டெசோ தன் பயணத்தைத் தொடரும். கடமையைத் தொய்வின்றி மேற்கொள்ளும். குற்றவாளிகள் கூண்டில் கண்டிப்பாய் ஏற்றப்படுவர்; தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

நமக்குரிய இலக்கு இராஜபக்ஷேவே!

இந்த நேரத்தில் பொது எதிரி இராஜபக்ஷே என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, டெசோவையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது?

ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத்தானே காட்டுகிறது!

முந்தைய அவரது நிலைப்பாடுபற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம்.

நமக்குள்ள இலக்கு -- இலங்கை இராஜபக்ஷேவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல -- ஈழப் பிரச்சினை! - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தாய்மைக்கு மரியாதை


பெண்ணாகப் பிறந்தால் இத்தாலியில் பிறந்து வேலைக்குச் செல்ல வேண்டும். இத்தாலிய நாட்டுச் சட்டப்படி, பெண்ணின் கர்ப்ப காலத்தின் கடைசி 2 மாதம் முதல் குழந்தை பிறந்தபின் 3 மாதம் வரை 5 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. 80 சதவிகித சம்பளத் தொகையை மாநில அரசே கட்டிவிடுகிறது.

மேலும், குழந்தை 3 மாதமாகும்போது வேலைக்குச் செல்லும் அதன் தாயும் தந்தையும் விரும்பினால், 6 மாதங்கள் வரை 30 சதவிகித சம்பளத்துடன் விடுமுறையில் செல்லலாம்.

தாயான பெண் ஓர் ஆண்டு முழுவதும் விடுமுறையில் இருக்கும் வசதியை அந்த அரசாங்கமே செய்து தருகிறது. கடினமான பிரசவமாக இருக்கலாம் என மருத்துவர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் 9 மாத விடுப்பை இத்தாலிய சட்டம் வழங்குகிறது.

தமிழ் ஓவியா said...

திரிபுரா அரசின் தடாலடி


மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது.

ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

திருடர்களுக்கு உதவும் கடவுள்

- தேன் தினகரன்

கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

கோபாலன், கோவிந்தன் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள்.

நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக வழக்குப் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோயில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு?

கோபாலன்: அய்யா, நான் தீவிர முருகன் பக்தன்யா.

நீதிபதி: இதை எப்படிப்பா நம்புறது? நீ வணங்குற முருகன் கோயில்லயே கொள்ளை அடிக்கலாமா?

கோபாலன்: ஏழைகளுக்கு உதவுறவர்தானங்கய்யா அந்த அருள் முருகன்.

நீதிபதி: ஏழைகளுக்கு உதவுவார்ங்கிறது சரி. திருடர்க்கும் உதவுவாரா?

கோபாலன்: ஆமாங்கய்யா..........

நீதிபதி: என்ன சொல்ற நீ?

கோபாலன்: பக்தர்களுக்கு அருள் செய்றதுதானய்யா அவனோட கடமை. நான் திருடுறதுக்காக பல இடங்களுக்கும் போய் ஒண்ணும் கிடைக்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தேன். அப்பதான் முருகன் என் கனவில் வந்து, பக்தா! பசியால வாட வேண்டாம். உண்டியல்ல பணம் நிறையா வச்சிருக்கேன்.... எடுத்திட்டுப் போய் சாப்பிடுன்னு சொன்னார்ங்கய்யா...... அவர் சொல்லித்தான் செஞ்சேன்.

நீதிபதி: முருகன் கனவில் வந்தார்னு சொல்றியே, அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?

கோபாலன்: ஆதாரம் எதுவும் இல்லைங்கய்யா......
அடுத்து கோவிந்தனை விசாரிக்கிறார்.

நீதிபதி: நீ என்ன கோபாலன் கூட்டாளியா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா....... நான் தனியா உண்டியலை உடைக்கணும்தான் போனேன். அந்த நேரத்தில கோபாலன் அங்க வந்திட்டான்.

நீதிபதி: கோபாலன் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திருடுனதாச் சொல்றான். நீ எதுக்காக திருடுன?

கோவிந்தன்: எதித்துப் பேசுறனேன்னு தயவு செஞ்சி கோவிச்சிக்கக்கூடாது. ஒங்களுக்கு கடவுள் நம்பிக்கைலாம் இருக்கா?

நீதிபதி: ஓ! இருக்கே! எதுக்காக அப்படிக் கேக்கிற?

கோவிந்தன்: அந்த முருகனை வரவச்சி நான் எதுக்காகத் திருடுனேன்னு நீங்களே அவங்கிட்ட கேளுங்களேன்.

(நீதிபதி யோசிக்கிறார்.)

யோசனை என்னத்துக்கு? முருகனுக்கு சம்மன் அனுப்பி வரவச்சி கேளுங்க, நான் சொல்றது நிஜமா இல்லையான்னு......

நீதிபதி: சம்மன் அனுப்பி வராட்ட என்ன செய்றது?

கோவிந்தன்: கு.வி.மு.ச.87-இன் கீழ் கைது ஆணை போடுங்கய்யா.....

நீதிபதி: என்னப்பா சட்டம்லாம் பேசுற? நீ என்ன வழக்குரைஞரா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா..... பாதிக்கப்பட்டோர் கழகத்தில் உறுப்பினரா

இருக்கேன்.

நீதிபதி: பாதிக்கப்பட்டோர் கழகமா? ஏம்ப்பா.... அவங்க எல்லா விசயத்திலயும் ரொம்ப நியாயமாத்தான் நடப்பாங்க.... அவங்களை எதுக்குப்பா இழுக்கிற?

கோவிந்தன்: என் நண்பர் பெருமாள் கடவுள் இல்லைங்கிறதை சட்டரீதியா ஒன்னால நிரூபிக்க முடியுமான்னு கேட்டான். அதுக்காகத்தான் அந்தக் கோயில்ல கொள்ளை அடிச்சேன். நீங்க இந்த வழக்குல முருகன் ஆஜராகணும்னு உத்தரவு போட்டுட்டா அது தெரிஞ்சிரும்ல?

நீதிபதி: அதெல்லாம் என்னால முடியாது. கோயில் உண்டியலை உடைச்சித் திருடுனது இ.த.ச. 379, 380இன்படி குற்றம், அதுக்குத் தண்டனைய ஏத்துக்கிறியா?

கோவிந்தன்: அய்யா...... எனக்குத் தண்டனை குடுக்கிறதுக்கு முந்தி அந்த முருகனுக்கும் தண்டனை குடுத்திறணும்.

நீதிபதி: முருகனுக்கா? எதுக்கு?

கோவிந்தன்: செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் குற்றம் என்று இ.த.ச.2ல சொல்லப்பட்டிருக்கே. நாங்க கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது அந்த முருகன் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கணும். அதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்ததால இதைக் குற்ற உடந்தைன்னுதான் சொல்லணும். அதனால முருகனுக்கு இ.த.ச.109இன் கீழ் தண்டனை குடுத்திட்டு அப்புறம் எனக்கு உண்டியலைக் கொள்ளை அடிச்சதுக்கான தண்டனையை நீங்க கொடுக்கலாம்.

நீதிபதி: இப்போ நீதிபதி வேலைக்கு வந்ததுதான் பெரிய தப்புன்னு தெரியுது. அதனால என் பதவியை ராஜினாமா பண்ணிர்றேன். இந்த வழக்கை வேற நீதிபதி விசாரிப்பார்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டுப் பொன்மொழி

இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேரும் இடத்திற்கு ஏற்பவே மாறுவோம்.

- துருக்கி

தமிழ் ஓவியா said...

பள்ளி சென்றாள் மலாலா


பள்ளிக்குச் செல்ல முடியாத தனது அனுபவங்களை 11 வயதில் பிபிசி இணையத்தில் எழுதியவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற டெஸ்மாண்ட் டூட்டு, உலக அமைதிக்கான குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயரினைப் பரிந்துரை செய்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது.

2012 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மலாலா தலிபான்களால் சுடப்பட்டார். பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மலாலாவின் குரலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள மாணவிகள் நான் மலாலா என்ற பதாகையினைத் தாங்கி ஆதரவு தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மலாலாவுக்கு உயர்தர சிகிச்சை இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் பலமுறை அறுவைசிகிச்சை செய்தனர். லண்டனில் தங்க வசதியாக அவரது தந்தைக்கு லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் வேலை கொடுக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களுள் மலாலாவும் ஒருவர். அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிய மலாலா மார்ச் 19 பிர்மிங்காமில் உள்ள எங்க் பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்துள்ளார். மீண்டும் பள்ளிக்குச் செல்லும் எனது கனவு இன்று நிறைவேறியது. இந்த அடிப்படை வாய்ப்பை உலகில் உள்ள எல்லாப் பெண்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மலாலா.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரச்சாரம் உஷார்! உஷார்!! உஷார்!!!


பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத் தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகின்றன.

நமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத்தேசத்தையே ஆண்டவர்களாயும், பராக்கிரம சாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றையத் தினம் பிற்பட்டவர்களாகவும், சூத்திரர் களாகவும் இருப்பது ஏன்? இதற்குப் பொறுப்பாளியார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகை களேயாகும்.

தற்காலத்தில் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும்பாலோர் கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத்திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங்களை எழுதியனுப்பும் நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப்பத்திரி கைகளுக்கு ஏஜெண்ட்டுகளாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து கெட்டுப்போகிறவர் களாகவே பிராமணரல்லாதவர்கள் இருக்கிறார்கள்.

பிராமணப் பத்திரிகைகள் இதுசமயம் நமது நாட்டில் ஒவ்வொரு பட்டிணங்களிலும், கிராமங்களிலும் பிரவேசித்திருக்கின்றது. அங்குள்ள படிக்கத் தகுந்த ஒவ்வொருவரும் அப்பத்திரிகைகளைப் படிப்பதும், அவற்றை உண்மை என்று நம்புவதும், மற்றவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லுவதுமான வழிகளில் பிராமணப் பத்திரிகைகளின் அபிப்பிராயத்தைத் தேசமெல்லாம் பரப்பச் செய்துவிடுகின்றன.

தமிழ் ஓவியா said...

சாதாரணமாய் நமது கிராமங்களிலுள் பாமர ஜனங்களும் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிகையின் அபிப்பிராயத்தைத் தான் உண்மையான ராஜீய அபிப்ராய மென்றும், அது யார் யாரைத் தலைவர் என்று சொல்லுகிறதோ அவர்களைத் தலைவர்கள் என்றும், அது யார் யாரைத் தேசத் துரோகியென்று சொல் லுகிறதோ அவர்களைத் தேசத்துரோகி என்றும், அது சொல்லுகிற படியெல்லாம் நடப்பதும் நினைப்பதும்தான் தேச கைங்கரிய மென்றும் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அதுபோலவே மற்றும் சுயராஜ்யா என்னும் ஒரு தமிழ் தினசரிப் பத்திரிகையும் பிராமணர் களால் நடத்தப்பட்டாலும் பிராமணரல்லாதாரை ஏமாற்றுவதற்காக வேண்டி அதன் உண்மைப் பத்திரா திபர்கள் பெயரை மறைத்து பிராமணரல்லாதார் பெயரைப் போட்டு ஏமாற்றி வருகிறார்கள்.

உண்மையில் அதன் ஆசிரியர்கள் ஒரு அய்யங்கார் பிராமணரும் ஒரு விபூதிப் பிராமண ருமாயிருக்க அது வெளியில் தெரிந்தால் அப் பத்திரிகையைப் பிராமணப் பத்திரிகையென்று பாமர ஜனங்கள் நினைத்து விடுவார்கள் என்று வேண்டுமென்றே மறைத்து விட்டு, ஒத்துழையாமையில் ஈடுபட்டுத் தங்கள் உத்தியோகங்களை விட்டு கஷ்டப்பட்டதால் செல்வாக்கு ஏற்பட்டிருக்கும் ஸ்ரீமான்கள் கிருபாநிதி, திரிகூட சுந்தரம்பிள்ளை ஆகிய இருவர் பெயர்களைக் காட்டித் தங்கள் நன்மைக்கான அபிப்பிராயங்களை மேற்படியார்கள் அபிப்பிராய மென்று நினைக்கும்படி ஜனங்களுக்குள் புகுத்தி வருகிறார்கள். இந்த பிராமணரல்லாத கனவான்களும் கொஞ்சமும் கவலையில்லாமல் இவ்வித செய்கைக்குத் தங்கள் பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

பெரும்பாலும் இப்பத்திரிகைகளுக்கு மூலதனம் ஏறக்குறைய முக்கால் பாகம் பிராமணரல்லா தார்களுடையதே. அதை வாங்கி வாசித்து அவர்களுக்கு லாபம் கொடுக்கிறவர்களும் பிராமணரல்லாதார்களே. இவ்வளவு இருந்தாலும் இப்பத்திரிகை களைக் கண்டால் பிராமணரல்லாத தலைவர்கள் என்போர்களிலும், பத்திராதிபர்கள் என்போர்களிலும் பெரும்பாலோர் பூனையைக் கண்ட எலி போல் நடுங்குகிறார்கள்.

தங்கள் ஜாதகத்தையே அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த பிராமணப் பத்திரிகைகளையே தங் களுக்குப் பலன் எழுதும்படி பல்லைக் கெஞ்சிக் கொண்டு திரிகிறார்கள். மகாத்மா போன்றவர்களே இப்பிராமணப் பத்திரிகை களைக் கண்டால் சில சமயங்களில் பயப்பட்டு சமயோசி தமாய் நடக்க வேண்டியிருக்கிற தென்றால் அய்யோ பாவம்! மற்ற ஆகாசக் கோட்டைகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அப்புறம் குட்டித் தலைவர்கள், தொண்டர்கள் என்போர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

இம்மாதிரி ஒரு பெரிய சமூகத்தையே அதன் தலைவர்கள் என்போரையே இப்பத்திரிகைகள் அடக்கி ஆண்டு கொண்டு, தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை எத்தனை நாள்களுக்குத்தான் சகித்துக் கொண்டு வருவதென நினைத்து சரியான மனிதர்கள் என்போர் யாராவது துணிந்து இதன் தந் திரத்தை வெளிப்படுத்தக் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் அவர்களை அடியோடு ஒழிக்க பிராமணப் பத்திரிகை களும், பிராமணத் தலைவர்களும், பிராமண அதிகாரி களும் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

அந்தச் சமயங்களில் அய்யர் - அய்யங்கார் - ஆச்சாரி யார் - ராவு என்கிற பேதமே இல்லா மலும் மிதவாதி சுயராஜ்யக் கட்சி - ஒத்துழையாக் கட்சி - காந்தி சிஷ்யக் கட்சி - சர்க்கார் உத்தியோ கஸ்தர் என்கிற வித்தியாசமே இல்லாமலும், ஒரே கட்டுப்பாடு - கம்பியில்லாத தந்திபோல் ஒரே அபிப்பிராயம், ஆளுக்கொரு வேலை; பத்திரிகைகளில் வைவதொருவர்; பிரசங்கம் மூலம் வைவதொருவர்; பணம் கொடுத்து வையச் சொல்லுவது ஒருவர்; காந்தியிடம் சாடச் சொல்லுவது ஒருவர்; சர்க் காருக்குக் காட்டிக் கொடுப்பது ஒருவர்; அதிகாரத்தைக் கொண்டு நசுக்குபவர் ஒருவர்; ஆக ஒவ்வொருவரும் தங்களாலானதை உடனே செய்யப்புறப்படுவ தன் மூலம் எப்பேர்ப்பட்ட வனையும் நடுங்கச் செய்து விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

உதாரணமாக, ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் நிலைமையைப் பார்த்தாலே இதன் உண்மை பொது ஜனங் களுக்கு நன்றாய் விளங்கும். சென்ற வருஷமெல்லாம் சுயராஜ் யக் கட்சியை வைது கொண்டிருந்தவரும், கொஞ்ச நாளைக்கு முன்பெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொண்டு இருந்தவரும், செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருக்கும் நிலைக்காது என்று ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங் காருக்குச் சாபம் கொடுத்தவரும் வகுப்புவாரிப் பிரநிதித்துவம் பெற காங்கிரசுதான் தகுந்த இடம் என்று காஞ்சி அக்ராசனப் பிரச்சாரத்தில் சொன்னவரும், ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானபோது, ஸ்ரீமான்கள் வ.வெ.சு. அய்யர், சீனிவாசய்யங்கார் சிஷ்யர்கள் முதலியவர்கள் ஸ்ரீமான் நாயக்கர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் ஒரு பிராமணரல்லாதாரான ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அக்ராசனம் வகிப்பதைப் பொறுக்க மாட்டாமல் பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்;

சட்டசபையில் செய்வது போலவே இங்கும் செய்கிறார் களாவென்று கேட்டவருமான நமது முதலியார், இப்போது தன்னை மாரீசன் என்று சொன்னவரும், காந்தியடி களுக்குப் புத்தியில்லை என்று சொன்ன வரும், ஒத்துழையாமை சட்டவிரோதமென்று சொன்னவருமான ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பின்னால் திரிந்து கொண்டும், அந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே தமிழ்நாட்டுக்குத் தலைவராக்கப் பாடுபட்டுக் கொண்டும், சுயராஜ்யக் கட்சி யோக்கியமான கட்சியென்றும், அதனிடமும் அதன் தலைவரிடமும் ஒத்துழையாமை வாசனை அடிக்கின்ற தென்றும், சட்டமறுப்பு அக் கட்சியில் தொக்கியிருக்கின்றதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்றும், முன் தான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டது கூட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற் கென்றும், காங்கிரஸில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கக் கூடாது என்றும், சுயராஜ் யக் கட்சிக்கே வோட்டுக் கொடுங்களென்றும் சொல்லு வதானால், அதன் சக்தி எவ்வளவென்பது ஒருவர் சொல்லாமலே விளங்கும்.

இவ்வளவு பயமும், மாறுதலும் இப்பேர்ப்பட்டவர்களுக் கெல்லாம் வரக் காரணமென்ன? பாமர ஜனங்கள் பிராமணப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதும், பிராமணத் தலைவர்களைக் கொண்டாடு வதும் அவர்கள் சூழ்ச்சிகளை அறியாமலிருப்பதும், அவர்கள் கையிலிருக்கும் அதிகாரங்களுக்குப் பயப்படு வதுமே அல்லாமல் வேறு என்ன? ஆதலால் ஆங்காங் குள்ள பிராமணரல்லாத பிரமுகர்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றிருந்தால், தங்கள் சமூகம் இம்மாதிரி ஏமாறியவர்கள் ஆகாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் திராவிடன், குடிஅரசு முதலியவைகள் போன்ற உண்மை உரைக்கும் பத்திரிகைகளைச் செலுத்த வேண்டும். உண்மை உரைப்பதன் மூலம் அதன் ஆசிரியர்கள் பிராமண அதிகாரத்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் தயாராய்த்தான் இருப்பார்கள். ஆதலால் வஞ்சகப் பத்திரிகைகளைப் பார்த்து மோசம் போகாமலிருக்கச் செய்ய வேண்டும்.

இந்தக் காரியங்களை நீங்கள் செய்யாமலிருந்தால் வரப்போகும் சட்டசபை எலெக்ஷனில் பிராமணரல் லாதார் கண்டிப்பாய் தோற்கடிக்கப் பட்டு போவார்கள். ஸ்ரீமான்கள் டி.எம்.நாயரும், ஸர்.பி.டி. செட்டியாரும் எவ்வளவோ அரும்பாடுபட்டு பிடித்துக் கொடுத்த கோட்டையை மறுபடியும் பிராமணர்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டு உங்களை வெளியாக்கிவிடப் போகிறார்கள்.

அப்புறம் 10 வருஷமோ, 100 வருஷமோ கடவுளுக்குத்தான் தெரியும்!. வீணாய் சர்க்காரை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. சர்க்கார் எந்தக் கை வலுக்குமோ அந்தக் கையில் சேர்ந்து விடுவார்கள். இப்பொழுதே சர்க்காருக்குப் பிராமணர்களிடத்தில் பயம் வந்து விட்டது. அவர்கள் தான் அடுத்த சட்டசபையில் ஜெயிக்கப்போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களை இப்பொழுது இருந்தே தடவிக்கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!

- குடிஅரசு - கட்டுரை - 28.02.1926

தமிழ் ஓவியா said...


ஓவியா IAS


திருச்சி திருவெறும் பூரில் உள்ள பெல் நிறு வனத்தில் பணியாற்றக் கூடிய கழகத் தோழர் கே.வி. சுப்பிரமணியம்.

இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் துணைவரை இழந்த பெண்ணை (ஆரிய மாலா) கொள்கை உணர் வோடு தம் வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்ட கொள்கை வீரர்.

அவரது, மகன் சு. கலாநிதி - பொறி யாளர் தனியே தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவ ருக்கும், செவிலியர் கல்வி பெற்ற தங்கமணிக் கும் (ANM) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா திருவெ றும்பூரில் 5.4.2013 காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது.

மகள் கலைமணிக்கும் திருமணம் முடிந்து விட் டது. அவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவரின் இணையரும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் நுழைவு வாயிலில் தங்கள் குடும் பத்தில் பட்டம் பெற்றவர் களின் பெயர்களையும், அவர்கள் பெற்ற பட்டங் களையும் தாங்கிய பதாகை (Flex) ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

பேத்தி ஓவியா (குழந்தை) பெயருக்குப் பக்கத்தில் IAS என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு வந் திருந்த அனைவரையும் இது ஆச்சரியமாக பார்க்க வைத்தது; ஏன். அனைவரையும் மனம் விட்டுப் பேசவும் வைத்தது.

ஏதோ விளம்பரத்திற் காக தோழர் கே.வி.எஸ். இதனைச் செய்யவில்லை.

தந்தை பெரியார் சகாப்தத்தில் எத்தகைய சமூக மாற்றம் நடந்திருக் கிறது என்பதை வெளிப் படுத்தவும், தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட கருஞ் சட்டைத் தோழர்களாக வாழ்ந்து காட்டி வரும் நாங்கள் எத்தகைய தன்னம்பிக்கை உள்ள வர்களாகவும், சிறப்பான வாழ்வுக்கு சொந்தக் காரர்களாகவும், கல்வி நிறைந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வலுவாகவும் இருக்கி றோம். நீங்களும் ஏன் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடாது? எனும் சிந்தனையைத் தூண்டவும்தான் இந்த ஏற்பாடு! என்னே, இயக்க தோழர்களின் சிந்தனை நேர்த்தி!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதியை இடித்தது சரியானதுதானாம்! என் எண்ணங்களுக்கு ஏற்றதாக பா.ஜ.க. இல்லை - எல்.கே. அத்வானி
அடுத்த பிரதமர் மோடி- ராஜ்நாத்சிங், அடுத்த பிரதமர் அத்வானி - விஜய்கோயல்
பதவிக் கோஷ்டி சண்டையின் உச்சத்தில் பிஜேபி

புதுடில்லி, ஏப்.7- அடுத்த பிரதமர் மோடி என்றார் கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் இல்லை அத்வானி என்கிறார் டில்லி மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் கோயல். பதவிச் சண்டை தேர்தலுக்கு முன்ன தாகவே பா.ஜ.க.வில் ஆரம்பித்து விட்டது. பா.ஜ.க, நிறுவப்பட்ட தன், 33ஆம் ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சி யின் மூத்த தலைவர், அத்வானி பேசிய தாவது: சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், என்னை பாராட்டி பேசியதாக, பலரும் கூறுகின்றனர். இது, பெரிய விஷய மில்லை. எந்த ஒரு விஷயத்தையும், சரியாக பேச வேண்டும்.

அப்படி பேசினால், உலகம், நம் பேச்சை, அங்கீகரிக்கும்; பாராட்டும்.உண்மையை பேசுவதற்கு, எப்போதும் தயங்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையுடன், எந்த சிந்தனையையும் மேற்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும், உங்களுக்குள், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.அயோத்தி பிரச்சினைக்காக, யாரிடமும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவ சியமில்லை. அதற்காக, பெருமைப்பட வேண் டுமே தவிர, மன்னிப்பு கேட்க கூடாது.

ராமர் கோவில் மற்றும் அயோத்தி விவகாரங் களால் தான், பா.ஜ.க, வளர்ச்சி அடைந்தது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எங்களுக்கு, எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இதற்காக நாங்கள், பெருமைப்படுகிறோம். பா.ஜ.க., என்பது, ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; கலாச்சார அமைப்பும் கூட. பா.ஜ.க., தொண்டர்கள், ஊழலை ஒழிப்பதற்காக, கடுமையாக பாடுபட வேண்டும்."பா.ஜ.க, வேறுபட்ட கருத்துக் களை உடைய கட்சி' என, சிலர் விமர்சிக்கின்றனர்.

ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம், அவர்களின் குற்றச் சாட்டுகளை, பொய் என, நிரூபித்துக் காட்ட வேண்டும். இன்றைய பா.ஜ.க.,வின் செயல்பாடு கள், என் சிந்தனை களுக்கு ஒத்துப் போக வில்லை. கட்சியின் இன் றைய செயல்பாடுகளுக் கும், என் கருத்துக்களுக் கும், ஏராளமான வேறு பாடுகள் உள்ளன. இவ்வாறு, அத்வானி பேசினார். அடுத்த பிரதமர் அத்வானிதானாம்
அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க,வின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந் திர மோடியை அறிவிப் பதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலை யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், விஜய் கோயல், கூறுகிறார்.

அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அத்வானி தான், பிரதமர். இதில், எந்த மாற்றமும் இல்லை. கட்சி, துவங்கப் பட்டது முதல், அத் வானியும், வாஜ்பாயும் தான், கட்சியை வழி நடத்துகின்றனர். வாஜ் பாய்க்கு, உடல் நலம் சரியில்லாததால், அவ ரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அத்வானி தான், கட்சியை வழி நடத்த வேண்டும். அவர் தலை மையில், அடுத்த அரசு, அமைய வேண்டும். இவ்வாறு, விஜய் கோயல் கூறினார்.

குறிப்பு: பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று பேசி னார். குத்துவெட்டு பிஜேபியில் இப்பொழுதே ஆரம்பமாகி விட்டது.

தமிழ் ஓவியா said...


டெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது!


காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும்

சென்னை, ஏப்.7- இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக் கையின் அடிப்படையில் காமன் வெல்த் நாடுகளின் தூதர்களைச் சந்தித்து கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தி.மு.க. எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும், இது குறித்து டெசோ தலைவர் கலை ஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ள தாவது:

25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப்படு கொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில், காமன் வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்பு களும், தமிழ் இனஉணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

26-4-2013 அன்று லண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப் பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக் கைக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார் கள் என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சாமிக்கு இணையாக இந்த (ஆ)சாமியா? திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூச்சல்


திருப்பரங்குன்றத்தில் தேர் ஊர்வலத்தில் சுப்பிரமணிய சாமி கடவுளின் அருகில் அர்ச் சகர் பார்ப்பனர் அட்டகாசமாக உட்கார்ந்து வந்து பக்தர்களிடையே சலசலப்பை ஏறப்டுத்தியது. பக்தர்கள் சத்தம் போட்டும் அந்த அர்ச்சகப் பார்ப்பனர் கொஞ்சம்கூட அலட்டிக் கொள் ளாமல் திமிராகவே நடந்து கொண்டார். கருவறைக்குள்ளிப்பதும் சாமி, அர்ச்சகனும் சாமி என்றுதானே அழைக்கப்படுகிறான் அந்தத் திமிர்தான் இது.

திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலில் (சுப்பிரமணிய சுவாமி) ஆண்டு தோறும் பங்குனித் தேரோட்ட நிகழ்ச்சிகள் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா நிகழ்ச்சிகள் 17.3.2013 முதல் 31.3.2013 வரை நடைபெற்றது. விழா நாட்களில் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் சாமி சிலையின் பீடத்தில் சாமிக்கு சமமாக அர்ச்சகர் பார்ப்பனரும் அமர்ந்து வந்தார். வழக்கமாக நின்று கொண்டுதான் வருவர். இதைப் பார்த்த பக்தர்கள் என்னடா அய்யரும் - சாமியும் ஒன்றா என்று முணுமுணுத்தனர்.

அர்ச்சகர் களின் திமிர் கூடிக் கொண்டே செல்கிறது என்றும் சிலர் கூறினர். 16 கால் மண்டபம் தாண்டி சென்றபொழுது - மேடான பகுதியாக இருந்ததால் வண்டியினைத் தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்பொழுது பக்தர்கள் அய்யரே கீழே இறங்கு என்று பக்தர்கள் குரலெழுப்பினர். நாமென்ன சாமி கும்பிட வந்தோமா? அய்யரைக் கும்பிட வந்தோமா? என்று பக்தர்கள் கேட்டனர். ஆனாலும் அர்ச்சகர் இறங்கவே இல்லை. தீபாராதனை செய்யும்போதுகூட உட்கார்ந்து கொண்டுதான் செய்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் - அர்ச்சக பார்ப்பனர் ஒருவர் - அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ததாக அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சகாயம் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டார். எவ்வித நடவடிக்கையும் அர்ச்சகர்மீது எடுக்க வில்லை. அப்பெண் வேலையிலிருந்து நீக்கப்பட் டார் என்று ஏற்கெனவே செய்தி வெளியானது.

அர்ச்சகரும் கோயில் பணியாளனே!

அர்ச்சகர் அனைவரும் - கோவில் பணியாளர்களே என்று இந்து சமய அறநிலையத் துறை சட்டம் குறிப்பிடுகிறது. எல்லா பணியாளர்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுகின்றனர். அர்ச்சகர் மட்டும் கையொப்பமிட மறுப்பதாகவும், காவல் அலுவலர்கள் சொன்னாலும் கேட்பதில்லை யென்றும் கூறப்படுகிறது.

எனவே அதிகாரிகளும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின் றனர். மேற்கண்ட ஒழுங்கீனங்களைத் தடுக்க தமிழக முதல்வரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர் பிரச்சினை: எப்போதுதான் விடிவு?
கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலியர்களிடம் காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களுக்காகக் காட்டக்கூடாதா?
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கேரள மீனவர்கள் இருவரை இத்தாலிய மாலுமிகள் இருவர் சுட்டுக் கொன்ற பிரச் சினையில் இந்திய அரசு காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லும் விடயத்தில் இந்திய அரசு காட்ட கூடாதா என்ற நியாயமான - அர்த்தமுள்ள வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு இருப்பது சரியானதுதானா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளார் - இந்தியாவுக் கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு இலங்கைக் கடற்படை, இலங்கை சிங்கள அரசு நாள்தோறும், தமிழக மீனவர்கள் - இராமேசுவரம், காரைக்கால், நாகை போன்ற பல துறைமுகங்களிலிருந்து சென்று மீன்பிடிப்பவர்களைத் தாக்குவது, வலைகளை அறுப்பது, பறிமுதல் செய்வது, கைது செய்து பல நாள் இலங்கை சிறையில் அடைப்பது என்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாகி விட்டது! இராஜபக்சே அரசின் கொடுஞ்செயல்கள் பட்டியலிடப்பட முடியாத அளவுக்குப் பெருகி விட்டன!!

இதற்குப் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காமல், ஏதோ சடங்காச் சாரமான சம்பிரதாய கண்டனங்கள் - கவலை கொள்ளு கிறோம் என்ற மொழியில், இலங்கை அரசுக்குத் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்காமல் பாம்புக் கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம்?

கடிதம் எழுதினால் போதுமா?

இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு உண்டா? முன்பெல்லாம் திமுக ஆட்சியில், பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் (கலைஞர்) கடிதம் எழுதியதைச் சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் என்ன சொன்னார்?

வெறும் கடிதம் எழுதி விட்டால் போதுமா? மேல் தொடர் நடவடிக்கை என்னவென்று பார்க்க வேண் டாமா? என்று விமர்சனம் செய்யத் தவறவில்லை; இன்றைக்குமட்டும் இங்கே மீனவர் பிரச்சினையானாலும் வேறு முக்கியப் பிரச்சினையானாலும் இதேபோல் கடிதங்கள் தானே எழுதப்படுகின்றன?

இது எவ்வகையில் மாற்றமான அணுகுமுறையாகும்? மக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சகோதரர்கள் கேட்க மாட்டார்களா?

கேரள மீனவர்களுக்கு வேறொரு நீதியா?

கேரள மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை குற்றமாக்கி, அவர்களைக் கைது செய்து, அவ்விருவரும், நீதிமன்ற பிணையில் விடுத்ததையொட்டி, இங்கே வழக்கு விசாரணைக்காக இத்தாலியிலிருந்து திரும்பி வராமல் சண்டித்தனத்தை அந்நாட்டு அரசு உதவியுடன் செய்த போது, கேரள முதல்வர் வற்புறுத்தியதால் இத்தாலியத் தூதுவரை, இந்தியாவின் வெளி உறவுத்துறை அழைத்து எச்சரிக்கை செய்து, கைது செய்வதாக அறிவிக்கப் பட்டது.

அவரது பாஸ்போர்ட் பறிமுதல் அறிவிப்பு வரை செய்த பிறகே இத்தாலிய மாலுமிகளான குற்றவாளிகள் திரும்பி இங்கே அனுப்பப்பட்டனர்.

அதில் நூறில் ஒரு பங்கு வேகத்தைக்கூட தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசும், பிரதமரும் வெளி உறவுத் துறையும் காட்டுகிறதா? கலைஞர் போன்ற பொறுப்புள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியும், இந்திய அரசும் தனது மெத்தனப் போக்கை விடுவதில்லை.

இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் இராமேசுவர- நாகை (தமிழக) மீனவர்கள். இதற்கு ஒரு விடிவே இல்லையா?

எங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா? எங்களுக்கு அரசுகள் விஷம் வாங்கி தந்து விட்டால் அத்தனைப் பேரும் குடித்து மாளுவோம் என்று வேதனைத் தீயில் வெந்து கருகி விரக்தியில் உருகி இரத்தக் கண்ணீர் விடுகிறார்களே மீனவத் தோழர்கள் - தலைவர்கள் தாங்கள் அளிக்கும் பேட்டியில்.

இதற்கு எப்போது தான் விடியல்? இப்படியே போனால் அவரவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படாதா?

வெளியுறவுத்துறைக் கொள்கையில் மாற்றம் தேவை!

மத்திய அரசின் கேளாக்காது, மெத்தனம் மாற வேண்டும். வெளியுறவுக் கொள்கை மறுபரிசீனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எமது மக்களை அங்கும் இங்கும் அழிக்கும் படலம் நாளும் தொடரும் நிலையில், இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்வது, வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது, நொந்த உள்ளத்தை நொறுங்கச் செய்வதாக ஆகாதா?

எனவே கடும் நடவடிக்கை இலங்கைக்கு எதிராக அவசரத் தேவை!

சென்னை
8.4.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பிரதமர் பதவியா? கனவு காண்கிறாரா மோடி! மத்திய அமைச்சர் கபில்சிபல்

புதுடில்லி, ஏப். 8- மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்த நிலை யில் பிரதமர் பதவி பற்றிய விவாதம் வலுத்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் பிரதமர் பத விக்கு வேட்பாளர் அறிவிக்கப்படப் போவ தில்லை என தெரிவிக் கப்பட்டுள்ளது. காங் கிரஸ் தலைவர் சோனி யாகாந்தி, பிரதமர் மன் மோகன்சிங் ஆகியோ ரின் தலைமையில் நாடா ளுமன்ற தேர்தலை சந்திக்கப்போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

முக்கிய எதிர்க் கட் சியான பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் பதவிக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி முன்னிலைப் படுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. நாட்டுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறி, பிரதமர் பதவி மீதான தன் ஆசையை நரேந்திரமோடி மறை முகமாக வெளிப்படுத்தி யுள்ளார். ஆனால் நரேந் திரமோடியின் பிரதமர் பதவி ஆசையை, காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலை வர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறும் போது, நரேந்திரமோ டிக்கு டில்லி (பிரதமர் பதவி) இன்னும் எட் டாக்கனவாகத்தான் உள்ளது. தேசிய அரசியலுக்கு வர விரும்புகிற வர்களுக்கு இரண்டு அம்சங்கள் தேவை. ஒன்று, அவர்கள் அர்த்த முள்ள பேச்சைப்பேச வேண்டும். இரண்டாவது, டில்லிக்கு வருவதில் மிகவும் அவசரம் காட்டக்கூடாது என்றார்.

இதே போன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சரு மான மணீஷ் திவாரியும் நரேந்திர மோடியை வீண் வீரம் பேசும் தீவிர வாதி என ஒரு சமூக வலைத் தளத்தில் சாடி இருக் கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான ராஜீவ் சுக்லா, மோடி பாரத மாதா பற்றி பேசுகிறார். பாரத மாதாவுக்காக சுதந்திர போராட்டத் தில் எந்தவொரு பாரதீய ஜனதா தலைவரும் ஈடு பட்டதாக நான் கருத வில்லை. பாரத மாதாவுக்கு தியா கங்கள் செய்வது எப்படி என்பதை மோடி முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.

டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித்தும் நரேந்திரமோடியை விட்டு வைக்கவில்லை. மோடி குறித்து நேற்று அவர் கூறும்போது, ராகுல் காந்தியையும், நரேந்திரமோடியையும் ஒப்பிடக்கூடாது. ஒருவர் (ராகுல் காந்தி) மதச் சார்ப்பற்ற தலைவர். மற் றொருவர் (மோடி) மதவாத தலைவர். இவர் (மோடி) இயற்கையிலேயே ஒரு சர்வாதிகாரத் தலைவர். அவரை கணிப்பது கடினமான ஒன்று. இவர் இந்தியாவை பிரதிபலிப்பதாக நான் கருதவில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்களையும், கேரள மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன்? கலைஞர் எழுப்பும் வினா

சென்னை, ஏப்.8- கேரள மாநில மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இது குறித்து முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்பதாவது:

கேள்வி: தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 51 மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்று விட்டார்களே?

கலைஞர்: ராமேஸ்வரம் பகுதியி லிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் படகில் வந்த சிங்களக் கடற்படையினர், மீனவர்கள் 25 பேரைச் சிறைப் பிடித்துப் படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைப் போலவே, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற் படையினர், மீன்பிடிப்படகுகள் அய்ந்தை யும், அவற்றில் இருந்த 26 மீனவர் களையும் சிறைப்பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையினர், தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சிறைப்பிடித்து இலங்கைக் குக் கொண்டு செல்லும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலங்கைக் கடற்படையின் இத்தகைய கடுமையான அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இரண்டு இத்தாலிக் கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவா தித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கைக் கடற் படையினரிடம் மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது.

கேரள மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வில், கேரள முதல்வர் திரு. உம்மன்சாண்டி மேற் கொண்ட தீவிரமான நடவடிக்கையைப் போலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மீனவர்களைக் காப்பாற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதும்; கேரள மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்க்காமல் நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும்; தவறல்லவே?

தமிழ் ஓவியா said...


இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் ஆயத்தமாவீர்! தஞ்சை கலந்துரையாடலில் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை


தஞ்சையில் 5.4.2013 நடைபெற்ற மண்டல இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தஞ்சை நகர தி.க. அமைப்பாளர் வெ.இரவிக்குமார் அவர்கள் 10 அரையாண்டு சந்தா, ஓராண்டு சந்தா ஒன்று மொத்தம் 11 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ. 7200 வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் ஏப்ரல் 8- மே 4ஆம் தேதி இராஜபாளையத்தில் நடத்தப்பட இருக்கும் இளைஞ ரணி மாநில மாநாட்டின் மூலம் இராஜபாளையம், கழக பாளையமாக மாறப்போகிறது என்றார் கழகத் துணைத்தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

இராஜபாளையம் மாநாடு மே 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இராஜபாளையம் கருஞ்சட்டைப் பாளையமாக மாறும் என திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கூறினார்.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி கலந்துரையா டல் கூட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக் குத் தலைமையேற்று கலி.பூங் குன்றன் பேசியதாவது.

இராஜபாளையம் மாநாட் டில் நடைபெறும் இளைஞ ரணி அணிவகுப்பில் தஞ்சை மாவட்டம் முதல் பரிசைப் பெறவேண்டும் என ஆவலாக இருக்கின்றீர்கள். இராஜபா ளையம் கருஞ்சட்டைப் பாளை யமாக மாறப்போகும் அளவிற்கு தமிழ்நாடு முழுக்க விளம்பரங் கள் செய்யப்பட்டுள்ளன. இம் மாநாடு மிகப்பெரிய வெற்றி யைப் பெறும் என்பதற்கான கூறுகள் தெளிவாகத் தெரி கின்றன.

நம்மால் முடியும்

இங்கே பேசிய சில இளைஞ ரணித் தோழர்கள் இம்மாநாட் டிற்கு என்னால் முடிந்தவரை ஒத்துழைப்பேன் என்றார்கள், முடிந்தவரை என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்கூடாது, முடியும் என்றே நாம் சொல்ல வேண்டும். மாநாட்டிற்கு சீருடை, கொடிகள், காலணி ஆகியவற் றுடன் தயாராய் இருங்கள்.

இந்த ஆண்டு இயக்க வேலை களைக் கணக்கிட்டுப் பார்த் தால் நாமே அசந்து போவோம். அந்தளவிற்கு இயக்கம் இயங்கி வருகிறது. தோழர்களும் உயி ரோட்டமாய் இருந்து ஈடு கொடுக்கிறார்கள். இதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நமது இயக்கத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. கட்டமைப்புகளும், கழக வெளியீடுகளும் மெருகேறி வரு கின்றன.

அன்றைக்கு ஒரே தஞ்சை மாவட்டமாக இருந்தது. இன்றைக்கு 7 மாவட்டங்களாக விரிந்துள்ளது. இது ஒரு பெரிய வளர்ச்சி ஆகும். முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சுற்றிவர 5 நாள்கள் தேவைப்படும். இன்றைக் குத் தனியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் செய்திட எளிதாக விஞ்ஞான பூர்வமான முறை யில் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

தமிழர்கள் மத்தியில் கழகம்

பல லட்சம் பேர் திராவிடர் கழகத்தில் நேரடி உறுப்பினர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் குறித்து தமி ழர்கள் நல்ல மதிப்பு வைத்திருக் கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவர தொடர்ந்து நாம் பாடுபட்டு வருகிறோம். அந் நிலை வந்தால் சமூகம் மாறும், மக்கள் மனதில் புரட்சி ஏற்படும். சமூக நீதியில் எப்படி தமிழ்நாடு வழிகாட்டியோ அதனால் இந்தியாவே பயன் பெறுகிறதோ, அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் என்ற நிலை வந்தால் இந் தியாவின் சனாதன கோட்டை கள் தூள் தூளாகிப் போகும்!.

தமிழ்நாட்டு மாணவர்கள் விட்டில் பூச்சிகள், ரசிகர் மன் றங்களை நோக்கியே போவார் கள் என்ற எண்ணத்தையெல் லாம் போக்கி, பிரச்சினை என வந்தால் நாங்கள் பெரியாரின் மாணவர்கள் என நிரூபிப்போம் என களத்திற்கு வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் குறித்து நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்து கவலைப்படும். நாம் சமூகம் குறித்துக் கவலைப்படு கிறோம். இன்றைக்கு மன்றல் எனும் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரும் தாக்கத்தைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல ஆசிரியர் பணி யிடங்களில் இடஒதுக்கீடு முற் றிலுமாகப் பின்பற்றாததை நாம் கண்டுபிடித்து அதன் தீர்வு நோக்கி சிந்தித்து வருகிறோம்.

பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி

ஏப்ரல் 18 தொடங்கி 27 வரை உலக புத்தக நாளை யொட்டி பெரியார் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் வேகமாகப் பணிகளைச் செய்து வருகிறார். இந்த 2013 மிகப்பெரிய வேலைத் திட்டம் கொண்ட ஆண்டாக அலை அலையான பிரச்சாரம் கொண்டதாக இருக்கிறது. 24 மணி நேரமும் தூங்காத கடிகா ரம் போல நம் தோழர்கள் விழிப்புடன் பணியாற்றி வரு கிறார்கள் என கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார்.

இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் வாரீர் என்று குறிப்பிட்டுள்ளார் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

தமிழ் ஓவியா said...


ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!



தமிழர்களே, தமிழர்களே கவனியுங்கள்! கவனியுங்கள்!!

பார்ப்பனீயத்தை வளர்க்க சங்கராச்சாரியார்

ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!


சென்னை, ஏப்.9- பார்ப்பனீயத்தை வளர்க்க வேத பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ரிலையன்ஸ் முதலாளிகளின் கூட்டுச் சதியோடு காஞ்சி சங்கரமடம் எப்படி எல்லாம் வலை பின்னுகிறது என்பதைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1966ஆம் ஆண்டு சமயத்தில் முன்னாள் சங்கராச் சாரியார் ஒரு பிடி அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத் தினார். அதன்படி குடும்பத் தலைவிகள், சங்கராச்சாரியாரின் அறக் கட்டளைத் தொண்டர்கள் தங்களை அணுகும்போது நாள்தோறும் ஒரு பிடி அரிசி கொடுத்து வந்தனர். இவ்வாறு பெறப்பட்ட அரிசியும் மற்ற தானியங்களும் அருகில் உள்ள கோயில்களில் சமைக்கப்பட்டு, ஏழைகளுக்கும், தேவைப்படும் தகுதி படைத்த மாணவர் களுக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த திட்டத்தைத் தொடர்ந்து காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திரர் சங்கரா அட்டை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.

அதன்படி நீங்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில்(Fresh Stores)
பொருள்கள் வாங்கும் போது, அதற்குண்டான விலையுடன், ஒரு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் இவ்வாறு பலரிடமும் பெறப்படும் ஒரு விழுக்காடு பணத்துக்குரிய பொருள்கள் காஞ்சி மகா சங்கரமட வித்யா மந்திருக்கு அனுப்பப்படும். இந்த செயலின் விளைவாய், வேதம் படிக்கும் மாணவர்களுக்கான நிதி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

(அதாவது தகுதி பெற்ற பார்ப்பனருக்கே கிடைக்கும்)

தகுதி பெற்ற ஒரு ஏழை வேதம் படிக்கும் (பார்ப்பனருக்கே) மாணவர் ஒரு பயனுள்ள கல்வியைப் பெறுவதற்கு உதவிய திருப்தியும் உங்களுக்குக் கிடைப்பதுடன் காஞ்சி சங்கராச்சாரியாரின் ஒருபிடி அரிசித் திட்டத்தில் இணைந்து கொண்டாலும் கிட்டும். மேலும் சங்கரா அட்டை வைத்து இருப்ப வர்களுக்கு, இத்திட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விலை தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் கிடைக்கும். அதுபற்றிய விவரங்கள் அவ்வப்பொழுது தெரிவிக்கப்படும்.

நீங்கள் கொடுப்பது ஒரு விழுக்காடுதான். ஆனால் நூறு விழுக்காடு நிறைவுகிட்டும்.

எப்படி சங்கரா அட்டை உறுப்பினராவது?

சங்கரா அட்டை உறுப்பினராவதற்கான விண்ணப்பத் தாள், இணையதளத்தில் *(அந்த முகவரியை நாம் ஏன் வெளியிடுவானேன்?) அல்லது ஏதாவது ஒரு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையிலோ விண்ணப்பத்தை வாங்கி, நிறைவு செய்து அத்துடன் ரூ.101-க்கான காசோலை யும் சேர்த்து மேலே குறிப்பிட்ட இடங்களிலோ, கீழ்க்காணும் முகவ ரிக்கோ அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் நரித் தந்திரத்தைப் பார்த்தீர்களா?

எப்படி எப்படி யெல்லாம் பார்ப்பனீயத்தை வளர்க்கிறார்கள் - முதலாளிகளின் கூட்டோடு? பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ள வேண்டாமா?

(பல முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை நாம் வெளியிடத் தேவையில்லை).

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (1)

தமிழ் ஏடுகள் பலவும் சினிமா - பயனற்ற பல வகைக் கேளிக்கை பொழுது போக்குகள் - இவைபற்றியே விளம்பரப்படுத்தி இளைஞர்களின் உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காகவே நடத்தப்படுபவை ஆகும்!

மக்களின் வாழ்க்கையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, குறிக்கோளை அடைந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழியும் முறையும் நேர்மையானதாகவே இருக்க வேண் டும் என்று வலியுறுத்தும் வாழ்வியல் ஏடுகள் வெகு சிலவே தமிழ்நாட்டில் உள்ளன.

அவற்றில் ஒன்று நண்பர் ஜெயகிருஷ்ணன் அவர்களின் வளர் தொழில் ஏடு ஆகும்.

ஊக்கமும், முயற்சியும், உழைப்பும் எவரையும் முன்னேற்றுவது உறுதி. அப்படி விரும்புவோருக்கு தொழில் உலகில் வழிகாட்டும் ஏடாக உள்ளது இந்த வளர்தொழில் ஏடு அதன் ஆசிரியர் - நிறுவனர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் உழைப்பால் உயர்ந்த, உயரும் உண்மையான பெருமகன் ஆவார்!

இந்த இதழில் (ஏப்ரல், 2013இல்) உலகப் புகழ் பெற்ற ஊக்கமூட்டும் எழுத்தாளரான திரு. ஜேக்கேன்ஃபீல்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் சென்னை வந்திருந்தபோது ஒரு கருத்தரங்கில் பேசிய பின் அவரோடு தனியே பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள்:

நாள்தோறும் அய்ந்து செயல்கள், இலக்கை அடைவீர்கள் என்ற தலைப்பில் தலையங்கமாகவே எழுதியுள்ள சுவையான கருத்துக் கோவை படித்தேன். சுவைத்தேன்.

உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் அந்த பிரபல எழுத்தாளரான திரு. ஜேக் கேன் ஃபீல்ட், சிக்கன், "சூப் ஃபார் சோல்" Chicken soup for soul’ என்ற வரிசையில் 225 சிக்கன் சூப் தொகுதிகள் (நூல்கள்) பல்வேறு வயதினர் பல்வேறு நிலையினர் அனைவருக்கும் அவரவர்களுக்குப் பயன்படும் வகையில் ஊக்கமூட்டும் அனுபவ அறிவுரைத் தொகுப்புக்களா கவே அவை அமைந்துள்ளவைகளாகும்!

ஒவ்வொரு தொகுதியும் இப்போது பல்வேறு பதிப்புக்களை பல்வேறு மொழிகளில் - 47 மொழிகளில் 50 கோடி மக்கள் இப்புத்தங்களைப் படிக்கும் வகையில் எழுதி பிரபலமாகியுள்ளார் இவர்.

இதன் துவக்கம் - இவரது முயற்சி முதலில் தோல்விகள் - அடுக்கடுக்கான தோல்விகள் என்பவைகளே அடிப் பீடங்களாகி, அதனைத் தாண்டி மேல் ஏறியே வெற்றியின் உச்சத்திற்கு இவர் சென்றுள்ளார்.

முதல் புத்தகம் (சிக்கன் சூப்) எழுதிய நிலையில் 144 புதிய பதிப்பாளர்களை சென்று பார்த்து அவர்களில் எவரும் அச்சிட முன் வரவில்லை. என்றாலும் இவரே சொந்த முயற்சி செய்து அச்சிட்டு, 3 ஆண்டுகள் அதனை விற்கச் சிரமப்பட்டுள்ளார்!

என்றாலும் இவரது தளரா முயற்சி - விடா முயற்சி - கடும் உழைப்பு - நன்னம்பிக்கை - இவருக்கு வெற்றியை அழைத்து வந்து முன்னே நிறுத்தி விட்டது போலும்!

இன்னொரு சுவையான விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டும்கூட வளர்தொழிலில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது!

உலகின் சுவை மிகுந்த கோழி இறைச்சி உணவான (KFC) கே.எஃப்.சியை அறிமுகப்படுத்த கெண்ட்டகி (Kentahey)அவர்கள் 1100 உணவகங்களைப் போய் பார்த்து தோல்வி அடைந்தார்! எல்லோரும் அன்று இவரது கெண்ட்டகி சிக்கனைப் புறக்கணித்தனர்.

இன்று..? அமெரிக்காவில் மட்டும் 5100 (உலகெங்கும் பற்பல நாடுகளில் - ஏன் நம் சென்னையிலும் இளைஞர் களை ஈர்த்ததாகி விட்டதே சிக்கன் சூப் புத்தக ஆசிரியர். கூறிய 5 செயல்கள் பற்றிக் கூறுமுன் அவ்வறிஞர் கூறிய ஒரு முக்கிய கருத்து கல்வியாளர்களின் கேளாக் காது பாராமுகங்களுக்கு எட்ட வேண்டும். இந்தியாவில் மொழியைக் கற்றுத் தருகிறார்கள்; வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள்; அறிவியலைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் வெற்றிக்கான வழிமுறைகளைக் கற்றுத் தருவ தில்லை. அதைச் சொல்லித் தரத்தான், நான் இங்கே வந்திருக்கிறேன் என்று துவங்கிய அவர்தந்த அறிவுரைகளை நாளை பார்ப்போமா?

- கி.வீரமணி

- (நாளை தொடர்ச்சி)

தமிழ் ஓவியா said...


இலங்கையின் தேசிய கீதம்



இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அதைக் கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரத்துடன் ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? இலங்கைத் தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே பாட முடியும். தேசிய கீதத்தில் தமிழையும் சேர்த்தால் சிங்களப் புத்தமதத் தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத பிரச்சினையை உருவாக்க நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

பாசிஸ்டு ராஜபக்சேயிடம் இதனைத் தவிர வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியென்று 1956ஆம் ஆண்டிலேயே சட்டம் செய்யப்பட்டது. நீதிமன்ற மொழியாக 1960ஆம் ஆண்டில் சிங்கள மொழி ஆக்கப்பட்டது.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட வேண்டும் - இதுவரை செய்ததுண்டா?

இராணுவத்தை எடுத்துக் கொண்டால் நூறு சதவிகிதமும் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதமே தமிழர்கள், அரசுப் பணிகளில் வெறும் 8.3 விழுக்காடே தமிழர்கள்.

தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமென்றால் சிங்களவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (1970) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்துதான் தந்தை செல்வா (1956 ஜூன் 5) தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களக் காடையர்கள் அடித்துத் துவைத்து ஆற்றில் தூக்கிப் போட்டார்கள்.

குருதி சொட்டச் சொட்ட நாடாளுமன்றம் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாரே!

சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்; இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழி! என்று ஆணவமாகப் பேசினாரே!

அந்தப் பண்டார நாயகா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சந்திரிகா பண்டார நாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதிபர் தேர்வு என்பது - இனி நேரடித் தேர்தல் என்று ஆக்கினார்.

இனத்தால் சிங்களவராகவும், மதத்தால் பவுத்தராகவும் இருப்பவர்தான் இலங்கையிலே அதிபராகவர முடியும் என்று புதிய சட்டத்தால் திணிக்கப்பட்டது.

இதற்குப் பிறகுதான் தனியீழம் என்ற புதிய முடிவை எடுத்து முழக்கமிட்டார் தந்தை செல்வா. வட்டுக்கோட்டை மாநாட்டில்தான் அந்த முடிவும் எடுக்கப்பட்டது.

தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்கே நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் கூட்டரசு மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் இப்பொழுது அறிந்து கொண்டோம். இதன் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தோம். இதனை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ள முடியாது. எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாட்சி வைத்திருந்தனர். இலங்கை வரலாற்றில் எங்களுக்கென்று ஓர் இடம் இருக்கின்றது. நாங்கள் நாட்டைப் பிரிக்கும் படிக் கூறவில்லை. இழந்த எங்கள் உரிமையான அரசை அகிம்சை வழியில் மீள அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலையாகும் - என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் ஈழத் தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.

அது எவ்வளவு நியாயமானது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் தேசிய இன உரிமை உணர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர்! தனியீழமே தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.
(விடுதலை, 10.6.1968)