Search This Blog

6.4.13

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பிஜேபி இரட்டை வேடம்

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் யஷ்வந்த் சின்கா ஒன்று சொல்கிறார், சுஷ்மா சுவராஜ் வேறொன்று சொல்லுகிறார் ஏனிந்த இரட்டை வேடம்?
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பறிக்க பிஜேபி தந்திரம்!
இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றார் தமிழர் தலைவர்
ஈழத் தமிழர் பிரச்சினையில் நாடாளு மன்றத்தில் பிஜேபியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா ஒன்றைச் சொல்லுகிறார்; அதே கட்சியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் (மக்கள வையின் எதிர்க்கட்சித் தலைவர்) அதற்கு மாறாகச் சொல்லுகிறார் ஏனிந்த இரட்டை வேடம்? தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குளைப் பறிக்கும் தந்திரமே இது என்று கூறி பிஜேபியின் இரட்டை வேடத்தைக் கலைக்கும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 5.3.2013 அன்று நாடாளுமன்றத்தின் மக்கள வையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் கொடுத்த தீர்மானத்தினையொட்டி, மக்கள வையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட விவாதம் நடைபெற்றது.

 அன்று யஷ்வந்த் சின்கா (பிஜேபி) பேசியது என்ன?

தி.மு.க. தொடங்கி, அதிமுக., பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள் ஏனைய அகில இந்தியக் கட்சிகளைச் சார்ந்தோர் எல்லோரும் பேசினர்.

அன்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்கா அவர்கள் மிக அருமையாக, உருக்கமானதொரு உரையை ஆற்றி, போர்க் குற்றம் - இராஜபக்சே ஆட்சியில் எப்படி தலைவிரித் தாடியது என்று விளக்கினார்.

அதற்கடுத்து சில நாள்களுக்குப் பிறகு, இலங்கை அரசின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைபற்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி (நாடாளுமன்ற கட்சிகள்) கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், திருமதி சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார்?

சுஷ்மா சுவராஜ் (பிஜேபி) பேசுவது என்ன?

1. இலங்கை போர்க் குற்றம் புரிந்தது என்று கூறுவதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை.

2. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றச் சொல்ல மாட்டோம்.
3. தனி நாடு, தமிழ் ஈழம் போன்ற கருத்தை ஏற்க மாட்டோம் என்பது போன்ற நிலைப்பாட்டையே கூறினர்.

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் வடபுல அகில இந்திய தலைவர்கள் கருத்தும் ஏறத்தாழ இதே பாணியில் தான் இருந்தது; இருக்கின்றது!
தமிழ்நாட்டில் சிலரின் வீராவேச முழக்கங்களில்கூட இலங்கைத் தமிழர் என்ற சொல்லாடல் தான் இருக்குமே தவிர, ஈழத் தமிழர், தனி ஈழம் என்பதைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை இந்திய மண்ணுக்கு வரவழைத்த, சுஷ்மா சுவராஜ் கட்சி - குறிப்பாக மத்திய பிரதேச அரசு - அது பா.ஜ.க., ஆட்சியாகத்தான் உள்ள நிலையில், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு புத்தர் கோயிலுக்கு வருகை என்ற சாக்கில் தரப்பட்டதே!

அவரை அழைத்தது அம்முறை - மத்திய அரசுகூட அல்ல; என்றாலும் மத்திய அரசு உண்மையாக மக்களின் குரலுக்கு மதிப்பளித்திருந்தால், மோடிக்கு விசாவை அமெரிக்கா மறுத்துள்ளதுபோல, எடுத்துச் சொல்லி தடுத்திருக்கலாமே; மனம் இருந்தால் மார்க்கம் உண்டே (This is for local consumption). பா.ஜ.க.வில் அமைப்பு முறையில் கட்சியில் யஷ்வந்த் சின்காவுக்கு என்ன முக்கியப் பொறுப்பு?

தமிழ்நாட்டிற்கு அவரை அழைத்து வந்து இங்கு ஈழ ஆதரவு உணர்வினைக் கூறி, தமிழ்நாட்டு மக்களுக்கு மயக்க பிஸ்கட் தந்து, வாக்குரிமையை, மயக்கத்தி லாவது பறிக்க வழி வகை ஏற்படாதா என்ற நப்பாசை தானே காரணம்?  ஏதாவது ஒரு கருத்தை, பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று கொள்ளவோ, காட்டவோ நினைத் தால் அது சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் போன்றவர்கள் (முறையே எதிர்க்கட்சித் தலைவர், கட்சி தலைவர் என்பதுபோன்ற பதவியாளர்கள்) கருத்து தானே முக்கியம்?

வாக்குகளைப் பறிக்கும் திட்டம் தானே!

தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் இவரைக் காட்டி இங்கே வாக்கு வங்கியை தமிழர்களிடமிருந்து பறிக்கவே இப்படி ஒரு இரட்டை முகம், இரட்டைக் குரல் ஏற்பாடு! தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள்!

பா.ஜ.க. என்பதே ஆரிய தர்மத்தை ஆரிய நெறிகளை ஏற்று அவதரித்த அரசியல் கட்சிதானே!

பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால் இந்த இரட்டை வேடம்தானே எளிதில் எவருக்கும் விளங்கும்!

டெசோவை தாக்கும் தமிழ்நாட்டுக் காவிக் கட்சியினரின் சாயம் இதன் மூலம் வெளுக்கும்.

வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும் - பிஜேபிக்கும் வேறுபாடு கிடையாது

வெளியுறவுத் துறைக் கொள்கையில் உருட்டைக்கு நீட்சி, புளிப்பில் அதற்கப்பன் என்ற பழமொழி போல, காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க.வும் இருக்கும்!

இங்கே இப்போது திடீர் ஈழப் பாசம் சிலருக்கு வந்ததும் இதே வரிசையில்தான்; எல்லாம் போகப் போகப் புரியும்.

----------------------கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம்  சென்னை -"விடுதலை” 6.4.2013

48 comments:

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடிக்கு விசா கிடையாது அமெரிக்கா அறிவிப்பு


வாஷிங்டன், ஏப்.6- குஜராத் முதல் அமைச் சருக்கு விசா வழங்குவது இல்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று, அமெரிக்கா அறிவித்து உள்ளது.

குஜராத் முதல் அமைச்சராக பதவி வகித்துவரும் பா.ஜனதா மூத்த தலைவரான நரேந் திர மோடி, கட்சியின் வருங்கால பிரதமர் வேட்பாளர் என்று கருதப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறார். ஆனால், அவருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து விசா வழங்குவதற்கு அமெரிக்க அரசு மறுத்து வருகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை தொடர்ந்து, இந்த முடிவை அமெரிக்கா எடுத்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி அன்று அமெரிக்க எம்.பி.க்கள் அடங்கிய தூதுக்குழுவினர் குஜராத் சென்று முதல் அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்கள். அப் போது அவர்கள் மோடியை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்து இருந்தனர்.

இந்த அழைப்பின் அடிப்படையில், நரேந் திர மோடிக்கு அமெ ரிக்கா செல்ல விசா வழங்கப்படுமா? என்று, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விக்டோ ரியா நுலந்திடம் செய் தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த அவர், நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது இல்லை என்ற அமெரிக்க அரசின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நோஞ்சான்


மகன்: மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தன்னுடைய சொந்த பலத்தில் போட்டியிட்டு பலவீனமான காங்கிரசை வீழ்த்தும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே, அப்பா!

அப்பா: ஓ, ஒரு நோஞ்சான் இன் னொரு நோஞ்சானை வீழ்த்தப் போகிறானோ மகனே! பேஷ்! பேஷ்!!

தமிழ் ஓவியா said...


தொல்காப்பியர் என்ன திமுக காரரா?


தொல்காப்பியப் பூங்கா என்று அடையாறு பகுதியில் மிக அருமையான பூங்கா அமைக்கப்பட்டது சென்ற தி.மு.க. ஆட்சியில்.

முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலில், சென்னை மாநகர மேயர் திரு மா. சுப்ரமணியன் அவர்களது சீரிய முயற்சியால் அமைக்கப்பட்டு,

அதற்கு தொல்காப்பியப் பூங்கா என்றே பெயரிடப்பட்டு, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பெயர்ப் பலகைகளும் மாட்டப்பட்டிருந்தன.

ஆட்சி மாறிய நிலையில் - அதிமுக ஆட்சி, தமிழக அரசிலும், சென்னை மாநகராட்சியிலும் ஏற்பட்ட பிறகு இதுவரை பொது மக்களுக்காக திறக்கப்படாமலேயே இருந்து வந்தது!

என்ன காரணமோ, தொல்காப்பியப் பூங்கா பெயர்ப் பலகைகள் எடுக்கப்பட்டு,

அடையாறு பூங்கா என்று திடீரென்று ஒரு பெயர்ப் பலகை கடந்த சில நாள்களாகத் தொங்குகிறது.

தொல்காப்பியர் என்ன திமுகவிலா இருந்தார்? அதிமுகவுக்கு தொல்காப்பியர் மீதுகூட ஏன் வெறுப்பு? தமிழ் இன மொழி உணர்வுகளை அடியோடு மாற்றத்தான் வேண்டுமா?

தமிழர்களே யோசியுங்கள்!

தமிழ் ஓவியா said...

தேரும் - ஏரும்

தஞ்சாவூர் பெருவுடையார் கோயி லுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் ஆனந்தம் அறிவித்துள்ளார்.

ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் கேட்குதா கடவுளுக்கு? அந்தக் கடவுளுக்குச் சக்தியிருந்தால் மழை பொழிந்து ஏரோட் டும் மக்களின் வயிற்றில் பால் வளர்ப்பது தானே?

தமிழ் ஓவியா said...

அபாய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களின் அளவு நாளும் குறைந்து வருகிறது.
2001-2002 இல் 62.26 லட்சம் ஹெக்டேர்
2011-2012இல் 57.53 லட்சம் ஹெக்டேர்.

காவிரி நீரும் கைவிரித்து, நிலத்தடி நீரும் குன்றி வயல்கள் எல்லாம் வீட்டு மனைகளானால் காற்றைப் புசித்து வாழ வேண்டியதுதான் (அந்தக் காற்றும் மாசுபட்டுதான் கிடக்கிறது)

தமிழ் ஓவியா said...

சொல்லுவது ராஜ்நாத்சிங்

காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டது. அக்கட்சிக்குத் திறமையான தலைவர் இல்லை என்றார் பிஜேபியின் தலைவரான ராஜ்நாத்சிங்.

நிதின்கட்காரி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதால் திண்ணையில் இருந்த மாப்பிள்ளைக்குத் திடுக்கென்று வந்த கலியாணம் போல, ராஜ்நாத்சிங்குக்கு பிஜேபியின் தலைவர் பதவி கிடைத்தது. வேறு அசாத்திய திறமையால்தான் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூற முடியுமா?

தமிழ் ஓவியா said...

ஓகோ அப்படியா?

ஆட்சிக்கும், கட்சிக்கும் இரட்டைத் தலைமை கொண்ட காங்கிரசின் செயல்பாடு தவறானது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்தான் இறுதி அதிகாரம் கொண்ட தலைவராக இருக்க வேண்டும் என்கிறார் அருண்ஜெட்லி!

நல்ல கருத்துதான்; பிஜேபி வேட் பாளர்கள் யார்? யார்? பிஜேபிக்குத் தலைவர் யார்? பிரதமர் வேட்பாளர் யார்? என்பது வரை முடிவு செய்யும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸிடம் தானே உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ!

தமிழ் ஓவியா said...

வயிற்றுப் பிழைப்பு!

இலங்கையிலிருந்து சிங்களவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கோயில் கோயிலாகக் கும்பிட்டுக் கிடக்கிறார்கள். (அவர்கள் செய்த பாவங்களை புத்தர் மன் னிக்க மாட்டார் என்று கருதி விட்டார் களோ, என்னவோ!)

கோயிலுக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படு கிறார்கள்.

நாகை மாவட்டம், திருக்கடவூரில் உள்ள கோயில் அர்ச்சகர்கள் அறிவுறுத் தப்பட்டுள்ளார்களாம். இலங்கையிலி ருந்து வருபவர்களுக்கு அர்ச்சனையோ, யாகமோ நடத்தக் கூடாது என்று அறி வுறுத்தப்பட்டுள்ளார்களாம்!

அர்ச்சகப் பார்ப்பான் வயிறு எரிந்து சாபம்தான் விடுவான். அவன் வயித்துப் பிழைப்பாச்சே! சிங்களவர்களை திருக் கடவூர் அமிர்தகடேசுவரரும் கை விட்டாரே!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


பக்திப் போதையால் கோயில் திருவிழாவில் கலவரம் காவல் நிலையத்திற்குப் பூட்டு!


சேலம், ஏப்.6- சேலம் அருகே கோவில் திருவிழா தகராறு சம்பவத் தில் காவல்துறையினரை உள்ளே வைத்து காவல் நிலையத்திற்கு மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம், வீராணம் நாராயண தாதனூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 27-ஆம் தேதி பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. அப்போது மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இந்த தகராறில் அழகரசன் (வயது 24) என்பவர் தாக்கப்பட்டார். இந்த மோதல் சம்பவம் குறித்து கேள்விபட்டதும், வீராணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த வேலு சம்பவ இடத்திற்கு சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார்.

இதையடுத்து அழகரசன் கொடுத்த புகாரின்பேரில் யுவராஜ், சுபாஷ், பாரதி, அண்ணாமலை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கேசவன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது சிலர் ஜெயலட்சுமியிடம் கேலி செய்ய முயன்றதால் அதனை கேசவன் தட்டிக்கேட்டார். இது குறித்து வீராணம் காவல் நிலையத்தில் கேசவன் கொடுத்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தவேலு வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, மணிகண்டன், ஆறு முகம், காஞ்சனா ஆகியோரை நேற்று கைது செய்தார். இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையம் அருகே திரண்டனர்.

பின்னர் வழக்குரைஞர் ஹரிபாபு, குமரவேல், தனசேகரன் மற்றும் 4 பெண்கள் உள்பட 20 பேர் வீராணம் காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைதான வர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறை யினருக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.

காவல் நிலையத்துக்குப் பூட்டு

அப்போது திடீரென அவர்கள் காவல்துறையினரை உள்ளே வைத்து காவல் நிலையத்தின் கதவுகளை இழுத்து பூட்டி பூட்டு போட்டனர். இதனால் காவல் நிலையத்திற்குள் இருந்த காவல் துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் அஸ் வின் கோட்னீஸ், கூடுதல் கண்காணிப் பாளர் சரோஜ்குமார் தாகூர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு காவல் நிலையத் தினை பூட்டியிருந்த பூட்டு உடைக்கப் பட்டது.

இதையடுத்து காவல் நிலை யத்தை முற்றுகையிட்ட 4 பெண்கள் உள்பட 20 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். அதன்பிறகு 20 பேரையும் இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் கைதானவர்கள் அனை வரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் அருகே கோவில் திருவிழா தகராறில் வீராணம் காவல் நிலை யத்திற்கு பூட்டு போட்டு போராட்டத் தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


மதம், சாமியார், மந்திரவாதிகளின் அட்டகாசம்


மந்திரவாதியின் கைவரிசை!

ஆரணி, ஆரணியில் மந்திரசக்தி மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி தனியார் பேருந்து நடத்துநரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த மந்திரவாதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையத்தை சேர்ந்தவர் சேகர் தனியார் பேருந்து நடத்துநர். கடந்த ஓராண்டிற்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த பால சுப்பிரமணி (வயது53) என்பவர் சேகரை சந்தித்தார்.

அப்போது பாலசுப்பிர மணி தனது மகன் பிரபுவை ஆரணியில் படிக்க வைக்க வந்திருப்பதாகவும், இருவரும் தங்குவதற்கு வாடகைக்கு வீடுதேவை என்றும் சேகரிடம் கூறியிருக்கிறார்.

உடனே சேகர் தனக்கு சொந்தமான வீட்டை பால சுப்பிரமணியத்திற்கு வாடகைக்கு கொடுத்தார். இதில் பாலசுப்பிரமணி தங்கியிருந்தார். இதனால் பாலசுப்பிர மணிக்கும், சேகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது. பாலசுப்பிரமணி தனக்கு மந்திரசக்தி தெரியும் என்றும், அதன்மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தரமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய சேகர், மந்திர வாதி பாலசுப்பிர மணியத்திடம் அவ்வப்போது ரூ.500, ரூ.1000 என கொடுத்துள்ளார். அதை பாலசுப்பிரமணி இரு மடங்காக்கி கொடுத்துள்ளார். இதனால் சேகருக்கு ஆசை வந்து விட்டது. உடனே சேகர் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க தொடங்கினார்.

இவ்வாறு கடந்த ஓராண்டில் 13 லட்சத்து 81 ஆயிரம் கொடுத்திருக்கிறார். ஆனால் பாலசுப்பிரமணி வாங்கிய பணத்தை இருமடங்காக்கி கொடுக்கவில்லை.

இதுபற்றி பாலசுப்பிரமணியனிடம் சேகர் கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு மந்திர சக்தி உள்ளது. பணத்தை திருப்பி கேட்டால் கை, கால்களை செயல்படாமல் செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மந்திரவாதி பால சுப்பிரமணியை ஆரணியில் காணவில்லை. அவர் தலை மறைவாகி விட்டார்.

அவர் பலரிடம் இதுபோன்று பணத்தை இருமடங் காக்கி தருவதாகக்கூறி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்தில் சேகர் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி பாலசுப்பிரமணியை தேடி வரு கின்றனர்.

தமிழ் ஓவியா said...

மதபோதகர் மீது மாணவி புகார்

சென்னை, சென்னையில் நர்சிங் படிக்கும் மாணவி, தன்னை காதலித்து, திருமணம் செய்து, சில காலம் இல்லற வாழ்க்கையும் நடத்திவிட்டு, தற்போது தவிக்கவிட்டு, தப்பி ஓடிவிட்டார் என்று மதபோதகர் மீது புகார் மனு கொடுத் துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள அந்த நர்சிங் மாணவியின் பெயர் ஆரோக்கிய இருதய கலையரசி. சென்னை வியாசர்பாடி, சாஸ்திரிநகரைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர், தன்னை காதலித்து, உல்லாசம் அனுபவித்து, கருவுறச் செய்து பின்னர் கருவையும் கலைத்துவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று தெரிவித்து இருந்தார்.

நேற்றும் அதே நர்சிங் மாணவி மீண்டும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, அதே மதபோதகர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். நேற்று கொடுத்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த ஜனவரி மாதம் நான் கொடுத்த புகார் மனு அடிப்படையில், மதபோதகர் மீது, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். உடனே அந்த மதபோதகர் திடீரென்று என் மீது பாசத்தை பொழிந்தார். என்னை பதிவுத் திருமணம் செய்துகொள்வதாக சொன்னார். சொன்னபடி பதிவுத் திருமணமும் செய்தார்.

பின்னர் கொடைக்கானலுக்கு சென்று தேனிலவு கூட கொண்டாடினோம். இத்தனையும் 2 மாதங்கள் மட்டுமே. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல, அந்த மத போதகர் மீண்டும் என்னை கைவிட்டு, விட்டு போய்விட்டார். திருமணம் முடிந்தவுடன், நான் கொடுத்த புகார் தொடர்பான வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். எனக்கு கணவர் ஆகிவிட்டார் என்ற சந்தோஷத்தில், எனது புகார் தொடர்பான வழக்கை நான் திரும்பப் வாங்கி விட்டேன்.

வழக்கை திரும்பப் பெற்றவுடன், எனது கணவரான மதபோதகர், என்னுடன் நடந்த திருமணம், தேனிலவு போன்றவை எல்லாம் வெறும் நாடகம் என்று சொல்லிவிட்டார். மீண்டும் என்னை விட்டு போய்விட்டார். போகும்போது ரூ.15 லட்சம் கொடுத்தால் உன்னோடு மீண்டும் வாழ்வேன் என்று கூறிச் சென்றார். இனிமேலும் அவரிடம் ஏமாறமாட்டேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நர்சிங் மாணவி புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகார் மனுவும் மீண்டும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கட்ராம்பட்டி. இங்கு கொண்டம்மாள் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த உண்டியலை அப்படியே வெளியே தூக்கி சென்றனர். பின்னர் அங்குள்ள குளக்கரையில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப் பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியலை காணவில்லை. கொள்ளையர்கள் உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. அப்போது குளக்கரை அருகே உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உண்டியல் உடைத்த ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கொலைகார சாமியார் கைது!

இந்தூர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களில் ஒருவரான தீபக் பரத்வாஜ் கடந்த மாதம் 26ஆம் தேதி டில்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சில நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் புருஷோத்தமன் ராணா, சுனில்மான், ஓட்டுநர் அமித் குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு கோடி பணம் பெற்றுக்கொண்டு பரத்வாஜை சுட்டுக் கொன்றோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பரத்வாஜை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவி மற்றும் மகன்களிடமும் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பரத்வாஜின் நிலங்களை அபகரிக்க முயன்ற ஒரு சாமியார் கூலிப்படையை ஏவி அவரை கொல்ல திட்டமிட்டார் என்பது காவல்துறை யினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலையை செய்வதற்காக பிரபல ஆன்மிக குரு ஒருவர் தங்களை வாடகைக்கு அமர்த்தி ரூ.1 கோடி தந்ததா கவும் கொலையாளிகள் புருஷோத்தம் ராணா, சுனில் மான் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், சுவாமி பிரதீபானந்த் இந்தூரில் நர்மதா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஆசிரமத்தில் ரகசியமாக தங்கியிருப்பதாக காவல்துறையின ருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்றிரவு அந்த ஆசிரமத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால், சில நாட்களாக அங்கு தங்கியிருந்த அவர் புதன்கிழமை வெளியேறி விட்டதாக ஆசிரமத்தில் வசிப்பவர்கள் கூறினர்.

ஆசிரமத்தில் இருந்த அவினாஷ் சாஸ்திரி என்ற சாமியாரை கைது செய்த காவல்துறையினர், இன்று அவரை டில்லிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணைக் கெடுத்த சாமியாருக்கு அடி, உதை!

புதுடில்லி, தெற்கு டில்லியை சேர்ந்த போலி சாமியார் ஒருவர் பேய் ஓட்டுவதாகக் கூறி 23 வயது திருமணமான பெண்ணை பாலியல் வன்முறை சம்பவம் பெரும் பரபரப்புக் குள்ளானது.

தெற்கு டில்லியைச் சேர்ந்தவர் ஹீராலால்.இவரும் மற்ற போலிச்சாமியார்களைப் போலவே தன்னை சாமியாராக அறிவித்துக் கொண்டார். போலிச்சாமியார்கள் தங்களுக்கு மந்திர வித்தை தெரியும் பேய் ஓட்டுவோம் என்றெல்லாம் மார் தட்டுவது போன்றே இவரும் மார் தட்டி வந்தார்.

இதனை நம்பி மக்கள் ஏமாறுவது நின்றபாடில்லை. இந்த நிலையில் ஹிஸ்டீரியா நோய் பீடிக்கப்பட்ட தன் மனைவியை டில்லி ஆர்.கே.புரத்தை சேர்ந்த நபர் சாமி யாரிடம் அழைத்து வந்தார். ஹிஸ்டீரியா நோயை பேய் பிடித்துள்ளது என்று கூறி தீர்த்துவைக்குமாறு சாமி யாரிடம் கணவர் கோரியுள்ளார். யாகம் வளர்க்கவேண்டும் பணம் வேண்டும் என்று சாமியார் தனது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்.

பொருளாதார தேவை நிறைவேறியவுடன் உடல் தேவையும் ஏற்பட்டது. இத்தனைக்கும் சாமியார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றே 'வைத்தியம்' பார்த் துள்ளார். வீட்டில் அனைவரும் இருந்தனர். சாமியார் யோசித்தார், பெண்ணின் பேயை விரட்டும்போது அந்த ஆவி வேறொரு உடலுக்குள் புகுந்து விடும் எனவே அந்தப் பெண்ணை தவிர அனைவரும் வெளியேறுங்கள் என்றார்.

குடும்பத்தார் சென்றவுடன் அந்தப் பெண்ணை நடுவில் உட்கார வைத்து பூஜை நடத்தினார். யாகம், பூஜை முடிந்தவுடன் அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்து தன் ஆசையை தீர்த்துக் கொண்டார் சாமியார்.

இதற்கிடையே குடும்பத்தாருக்கு சந்தேகம் வரவே கணவர் சாமியார் என்ன செய்கிறார் என்பதை கதவு சாவித் துவாரம் வழியாக பார்த்துள்ளார். அங்கு சாமியாரின் நிலையைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கணவர் கதவை உடைத்துக் கொண்டு போய் சாமியாரை நன்றாக கவனித்தார்'. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில், தீராத நோய் என்றால் மருத்துவரை அணுகு வதை விடுத்து இதுபோன்ற பொறுக்கி சாமியார்களை அணுகும் பக்த முட்டாள்களை என்னவென்று கூறுவது.

தமிழ் ஓவியா said...

சிறுமியை சீரழித்த பார்ப்பனர்!

யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரி காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன் முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

அச்சிறுமியை கோவில் பின்புறத்தில் வைத்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி யுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.சாவ கச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற தேர்தல் கங்காணிகள்

தமிழ்நாட்டிலே நிலவும் பத்திரிகைகளில் பெரும்பாலும் தனது மனசாட்சிக்கு விரோதமாக எழுதி தன் சுயமரியாதையை இழந்து வருகின்றன. முதுகெலும் பில்லாமல் இருக்கும் இவைகள், எவ்வளவுதான் யோக்கியதையா யிருப்பதுபோல போலித்தனமாக கைவீசி காலுதறி நடப்பதாகப் பாவனை செய்து வரினும் அவைகளுக்கு முதுகெலும் பில்லாத தத்து வத்தை நாட்டார் அறியாமலிருக்க மாட்டார்கள்.

இப்பத்திரிகை களெல்லாம் உண்மையறிய முடியாமலோ, பலக்குறை வாலோ, வேண்டுமென்றோ சூழ்ச்சிக்காரர்கள் பக்கமாகவேயிருந்து வருகின்றன. ஆனால் பிறருடைய உதவியை நாடாது தன் கால் பலத்திலேயே நிற்கக்கூடிய பத்திரிகைகளில் ஒன்றாகிய நமது நாடார் குலமித்திரன் சுயராஜ்யக் கட்சியினுடைய சூழ்ச்சியின் உண்மை கண்டு தைரிய மாய் வெளிவந்து எழுதியிருப் பதில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற கங்காணி மார்கள் (சுயராஜ்யக்கட்சியார்) தேசமெங்கும் உலாவித் திரிகின்றனர்.... சொற்கேளாப்பிள்ளை யினால் குலத்துக் கீனமென்ற பழமொழி இவர்களுக்கே தகுமென்று மகாத்மா காந்தி மௌன யோகத்திலிருந்து விட்டார். நமது நேரு கங்காணி, தமது தோழர்களையெல்லாம் பிரிய விட்டு விட்டுத் துடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீனிவாசக் கங்காணி ஆள் பிடிக்கிற வேலையை வெகு துரிதமாய் நடத்திக்கொண்டு வருகிறார். ஒவ்வொரு முக்கியவிடத்திலும் கங்காணி யாபீஸ்கள் இரகசியமாய் அமைத்து வருகிறார்.

இவ்வுரைகள் சீனிவாசய்யங்கார் கோஷ்டிக்கு ஒரு பீரங்கி வெடி போலவே தோன்றும், சுயராஜ்யக் கட்சியின் கபடக் கோட்டையைத் தகர்ப்பதில் நாடார்குல மித்திரனும் நமக்குதவியாய் பங்கெடுத்துக் கொண்டிருப் பதற்கு நம் மனப்பூர்வமான நன்றி செலுத்துகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 25.04.1926

தமிழ் ஓவியா said...


சபர்மதி ராஜி


சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தி முன்னிலையில் சுயராஜ்யக் கட்சிக்கும் பரஸ்பர ஒத்துழைப்புக் கட்சிக்கும் ராஜி ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், மகாத்மா அதில் கலந்து கொள்ளவே கிடையாது. மகாத்மா காந்திக்கு முன்னிலையில் சபர்மதி ஆச்சிரமத்தில் ராஜி யேற்பட்டு விட்டதென்று சொன்னால், அதில் ஒரு பெருமையும், பொதுஜனங் களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தினால் செய்த சூழ்ச்சியே யல்லாமல் வேறல்ல.

ராஜியால் விளைந்த பலன், நாளுக்கு நாள் நகர்ந்ததடி அம்மானே என்றபடி சுயராஜ்யக் கட்சியார் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதுதான். அதாவது, மந்திரிகள் தங்களுடைய கடமைகளைச் சரியாக நடத்துவதற்கு அவசியமான அதிகாரம், பொறுப்பு, சுயமாகச் செய்வதற்குச் சக்தி முதலியவை கொடுக்கப் பட்டால் கவர்ன்மெண்ட் போதுமான அளவு இணங்கிவிட்டதாகக் கருதி சுயராஜ்யக் கட்சியார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ளலாம்.

மந்திரி பதவிக்கு அவ்வித பொறுப்பும் சுதந்திரமும் கொடுத் திருக்கிறார்களா இல்லையா என்கிற விஷயம் அந்தந்த மாகாண சட்டசபை மெம்பர்களே தீர்மானித் துக் கொள்ளவேண்டியது. திரு. ஜெயகரும் திரு. நேருவும் இதை ஊர்ஜிதம் செய்ய வேண்டியது.

ஒப்பம்:-

சரோஜினி நாயுடு, மோதிலால் நேரு, லஜபதிராய், எம்.ஆர். ஜெயகர், என்.சி கெல்கர், பி.எஸ்.ஆனே, டி.வி.கோகலே, ஓகலே. முதலில் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தியோகம் ஒப்புக்கொள்வது என்று காங்கிரஸில் தீர்மானித்தார்கள். சர்க்கார் இணங்கி வரவில்லை; சட்டசபையை விட்டு வெளிவந்தாய் விட்டது. இப்போது மந்திரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால் ஒப்புக் கொள்வது என்று தீர்மானித்தாய் விட்டது.

- குடிஅரசு - செய்தி விளக்கம் 25.04.1926

தமிழ் ஓவியா said...


சத்தியமூர்த்தியும் - கதரும்

சில மாதங்களுக்கு முன்னர் சேலத்திலே கதர் சாலையைத் திறந்து வைத்த சென்னை டாக்டர் சி.நடேச முதலியார் அதுசமயம் கதராடை அணிந்து வராமல் சுதேசப் பட்டுடைகளைத் தரித்திருந்ததைப் பற்றி பிராமண சிகாமணியான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எள்ளி நகையாடினார்.

அதாவது, டாக்டர் முதலியார் மில்லில் நெசவான பட்டாடை தரித்துக்கொண்டு கதர் சாலையைத் திறந்து வைத்ததானது, கொள்கைக் காக நெற்றி யில் விபூதியும் வயிற்றுப் பிழைப்புக்காக வயிற்றில் நாமமும் தரித்திருப்பவன் கதையாக யிருக்கிற தென்று கூறினார். அதற்கு டாக்டர் முதலியார் இந்தியாவில் கையினால் நெசவானாலும் ஆலை நெசவானாலும் இரண்டையும் சுதேசிய மென்றே தாம் கருதுவதாகவும் ஆகையால் சுதேசியத்தை ஆதரிக்க வேண்டி யதே எங்கள் கொள்கை என்றும் உள்ளதை வெளிப்படையாகக் கூறினார்.

ஆனால் சத்தியத்திற்கு உழைக்கிறோமென்று சொல்லும் சத்திய கீர்த்தியின் பிள்ளைகளான சத்திய வந்தர் குலத்திலுதித்த நித்தியங்கத்தி ஸ்ரீமான் சத்திய மூர்த்தி புதுவருஷத் திருநாளன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பெருங்கூட்டத்தில் முற்றிலும் பரதேசி மயமாய் விளங்கினார் என்று லோகோ பகாரியில் பாரி எழுதியிருக்கிறார்.

இப்படியிருக்க, கொள்கைக்காகத் திருநீறும், பிழைப்புக்காக திரு நாமமும் போட்டுக் கொண்ட லையும் பாசாண்டி என இப்பொழுது ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அழைப்பதா? அல்லது டாக்டர் முதலியாரை அழைப்பதா? ஆம்! பிராமணர்கள் செய்தால் அது மருந்துக்காகச் செய்ததாய்ப் போய் விடுகிறது. பிராமணரல்லாதார் எது செய்தாலும் அது வயிற்றுக்கில்லாமல் செய்தானென்றாகி விடுகிறது.

ஏனென்றால் செல்வாக்குள்ள பத்திரி கைகள் பிராமணர் கைவசம் சிச்கியிருக்கிறது. நமது ஜனங்களும் அதையேதான் பார்க்கிறார்கள். லோகோபகாரியையும், நாடார்குல மித்திரனையும், குடியரசையும் பார்த்தால் தேசத் துரோகமாய் விடும். ஏன் பிராமணர்கள் என்னதான் சொல்லமாட்டார்கள்?

- குடிஅரசு - கட்டுரை - 25.04.1926

தமிழ் ஓவியா said...


மூட்டை சோதனை

பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங் காருடைய சட்டைப் பையிலிருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காகவேண்டி அவர்களுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும், மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிருபர் எழுதியிருக்கிறார்.

இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர்.

இவர்கள் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணாமல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானா லும், தங்கள் மூட்டையைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப் படுகிறோம்.

அல்லாமலும் இந்தப் பிராமணர்களுக்கும் இவர்களைப் பரிசோதனை செய்யும்படியானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு எந்தச் சமயத்தில் என்ன மரியாதைகள் கிடைக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 25.04.1926

தமிழ் ஓவியா said...


மோடிமஸ்தான் பராக்! பராக்!!


மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?

பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.

பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.

மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!

தமிழ் ஓவியா said...

நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.

இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.

பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.

பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.

அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!

அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!

இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.

மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.

பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.

ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது, அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.

அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.

மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.

அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.

அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.

உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.

உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.

அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.

உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.

இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்?

அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.

நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!

இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.

குஜராத்

குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.

இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில், பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான்.

இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!

அந்தோ பாவம் நரேந்திர மோடி!

தமிழ் ஓவியா said...


வங்கநாடு (வங்காளதேஷ்) பிறந்தது எப்படி?


2011 ஜூலை மாதம் 25ஆம் தேதி, இந்திய தேசிய காங்கிரசின் தலைவி யான சோனியா காந்தி பங்காள தேஷின் மிகப் பெரிய விருதினை, (ஸ்வதீனதா சம்மோனோன பரிசினை) முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பாக டாக்கா நகரில் உள்ள பங்கேப்பன் என்ற இடத்தில், பெற்றுக் கொண்டுள்ளார்.

1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மூன்றில் இரண்டு பகுதி இடங்களில் வெற்றி பெற்று, இந்திராகாந்தி மெஜாரிட்டி அரசாக, அமைதியாக மக்கள் வாக்களித்தனர்.

எதிர்ப்பில்லாத முழு உரிமை!

பிறகு பங்காளதேசத்திற்கு மாற் றங்கள் வந்தது. பாகிஸ்தான் ஆள் வதற்கு 1971இல் நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியானது தனி மெஜாரிட்டி பெற்றது. இது மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர் ஜீவ்ல்பிகுவொர் அலி பூட்டோ விற்குப் பிடிக்கவில்லை. மேற்கு பாகிஸ்தானியர்களாலும் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால், மக்களால் தனக்கு ஒப் பளிக்கப்பட்ட ஆளும் உரிமையை விட்டுக் கொடுக்க ஷேக் முஜிபூர் ரஹ்மானால் இயலவில்லை. பாகிஸ்தானின் அவாமிலீக் கட்சியின் ஆளுமையைத் தொடங்குவதற்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. அப் பொழுது கிழக்கு பாகிஸ்தானு மிடருந்த பகுதியின்மீது, மேற்கு பாகிஸ்தானின் படைகள் வந்து இறங்கின? வங்காள மக்கள் மீது இனப் படுகொலை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் ஷேக் முஜ்புர் ரகுமான் சிறை வைக்கப்பட்டார். ஜெனரல்ஜியா போன்ற வங்காள ராணுவஅதிகாரிகள் பலத்த எதிர்ப் புரட்சி செய்தனர்.

தமிழ் ஓவியா said...


ராணுவ அதிகாரிகள், வீரர்கள், மற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளடங்கிய 10 மில்லியன் வங்காள மக்கள் மேற்கு பாகிஸ்தானுக்கும், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கும் ஓடிவிட்டனர். இந்திய அரசு மற்றும் மக்களின் ஆதரவுடன் அகதி முகாம்கள் நிறுவப்பட்டன. இந்த அகதி முகாம்களை நடத்துவதற்காக இந்திய அரசு, 600 மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. ஒரு சாதாரண போர் முறைகளைவிட பாகிஸ்தானின் ராணுவ வீரர்களின் கொடுஞ் செயல்கள் என்று மீறி செயல்பட்டன. முக்தி பகினி என்ற வங்காள சுதந்திர இயக்க அமைப் பிற்கு இந்திய அரசினால், ஆயுதங் களும் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு, கொரில்லாப் போர் தொடங்கிற்று.

பல அரசியல் கட்சிகளும், குழுக் களும், தலைவர்களும், இந்திய அரசு, தனது ராணுவத்தின் முக்தி பகினி யுடன் சேர்ந்து போராட வேண்டு மென்று வலியுறுத்தினர். அதன் மூலம் ரத்தக் கறை படிந்த கிழக்கு பாகிஸ்தானத்திற்கு இந்த நேரத்தில் உதவும் கரமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நேரத்தில் அமெரிக்க நாட்டின் அயல் உறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியா வந்தார். பாகிஸ்தான்மீது இந்தியா போர் தொடுத்தால் அதற்கு அமெ ரிக்கா உதவிகரமாக இருக்காதென்று குறிப்பிட்டார். பாகிஸ்தானத்தின் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானிற்கு ஆதரவாக, ஆயுத உதவிகள் செய்தது.

இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான ஜெனரல் மானேஜர் அமைதி காத்தார். சீனா, 1962இல் நடந்த போருக்குப் பின்னிருந்தே சீனா இந்தியாவின் நட்பு நாடாக நீடிக்க வில்லை.

பாகிஸ்தானுடன் போருக்குச் செல்வதற்கு இந்தியா, குளிர்காலம் வரும் வரை காத்திருக்க வேண்டிய தாயிற்று. அப்பொழுதுதான் சீனாவினால், இமாலயத்தைக் கடந்து வீரர்களையும் போர்ச் சாதனங்களை அனுப்ப அது இயலாமற் போயிற்று.

ஆகஸ்டு மாதத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய - சோவியத் ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று. அதனால், இந்தியாவும் சோவியத் ரஷ்யாவும், போர்க் காலங் களிலும் மற்றும் அல்லாத காலங் களிலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதாக ஒப்பந்தமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் ராணுவ நிலைமைகளையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துச் சொல்ல இந்திராகாந்தி ஒரு உலகப் பயணம் மேற்கொண்டார். அமெ ரிக்காவின் ரிச்சர்டு நிக்சன் தவிர, மற்ற உலகத் தலைவர்கள் எல்லோ ரும் உள்ள ஆபத்தான நிலை மையைப் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் நிக்சன், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளருக்கு உதவி செய்வதாக, ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து உள்ளார்.

டிசம்பர் மாதம் 3ஆம் தேதி, பாகிஸ்தானின் யாஷியாகான் இந்தி யாவின்மீது தனது தாக்குதல் ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பாக் படை இந்திய எல்லைகளில் குண்டுகளைப் பொழிந்தது. பதிலாக, இந்தியாவின் கப்பற்படை, கராச்சி துறைமுகத்தின் போக்குவரத்துகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அதன்மீது குண்டுகளையும் வீசிற்று. விசாகப் பட்டினம் துறைமுகத்தில் பாகிஸ் தானின் நீர் மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கடிக்கப்பட்டது. இந்திய கப்பற் படையினால், கிழக்குப் பாகிஸ் தானிலிருந்த சிட்டகாங் துறைமுகம் முற்றுகையிடப்பட்டது. பாகிஸ்தானின் இரண்டு பகுதிகளிலிருந்தும் ஒன்றுக் கொன்று தகவல் பரிமாறிக் கொள் ளவும் முடியவுமில்லை.

இந்திய வான்படை டாக்கா விமான நிலையத்தை துவம்சம் செய்தது. வங்காள விரிகுடாவை நோக்கி அமெரிக்காவின் 7ஆவது கப்பற்படை அனுப்பப்பட்டது. அது, சோவியத் கப்பற் படையினரால் நிறுத்தப் பட்டது. ஆனால் வெளிநாட்டுத் தலையீடும் உதவியும் தேவையில் லாமல் போயிற்று. 14 நாட்களுக்கு முன் போர் முடிந்து போயிற்று. 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் சரண் அடைந்தனர். நம்னா பந்தயத்திடலில் இந்திய ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் பாகிஸ்தான் ஜெனரல் நியாசி சரணடைந்தார். பங்களா தேசம் பிறந்தது!

முக்தி பகினி மற்றும் இந்திய முகாம்களிலிருந்த ஒரு கோடி மக்கள் திரும்பவும் பங்களாதேஷ் சென்றார் கள். இந்திய ராணுவ அதிகாரிகளும் வீரர்களும், திரும்பவும் தங்களின் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


அறிவுப்பூர்வ ஆதாரம்!


பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்தவிடும் என்று கருதும் பழக்கம், படித்தவர், படிக்காதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள் சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். விக்டோரியா - நீண்ட காலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத். காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர். அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல்மார்க்ஸ் - புதிய சமதர்ம சமுதாயக் கருத்தைத் தந்த கம்யூனிசத்தந்தை, டார்வின் - பரிணாமவாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோதத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக்-பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி

நன்றி: குமுதம்; தகவல்: சம்பத்ராஜ், பேட்டைவாய்த்தலை

தமிழ் ஓவியா said...


கடவுள் துறைகள்!


திருச்சி உறையூரில் வெக்காளியம்மன் கோயில் இருக்கிறது. அக்கோயிலில் காணப்படும் அறிவிப்புப் பலகையில் கீழ்க்காணும் விவரம் எழுதப்பட்டுள்ளது. எந்தெந்த கோயிலை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்ற பட்டியல் அது.
வ.எண் அம்பாள் அருள்பவை
1 மதுரை மீனாட்சி கலை
2 திருவானைக்கா
அகிலாண்டேஸ்வரி செல்வம்
3 கன்னியாகுமரி குமரி அம்மன் அமைதி
4 சமயபுரம் மாரி(த்தாய்) மழை
5 தில்லை எல்லைக் காளி ஆற்றல்
6 காசி விசாலாட்சி
ஞானம்
7 தஞ்சை முத்துமாரி
வீரம்
8 பட்டீசுவரம் துர்க்கை அழகு
9 காஞ்சி காமாட்சி காமம் அழிப்பாள்
10 உறையூர் வெக்காளி
எல்லாம் தருவாள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அருள் பாலிக்கும் சக்தியாம். இத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டும் இந்த மக்கள் அடைந்த பலன்தான் என்ன?

உறையூர் வெக்காளி கடவுளுக்கு மட்டும் எல்லாம் வழங்கும் சக்தியாம்.

எல்லா வித நோய்களையும், தீர்க்கும் ஒரே மருந்து என்கிற மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வியாபார தந்திரம் தானே, சமயபுரத்தம்மானை வேண்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள் எங்கே மழை?

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா!


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும், பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழப்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலையவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அரியாமக்கள்; தமைக்காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குடிஅரசு 5.2.1944

தமிழ் ஓவியா said...


நான் மனிதனா ?


இராமன் கௌசல்யாவுக்கு

பிறந்தததால் இந்துவானேன்.

எட்வர்டு ஜெனிபருக்கு

பிறந்ததால் கிறிஸ்துவனானேன்.

சலீம் அனார்கலிக்கு

பிறந்ததால் முஸ்லிமானேன்.

யாருக்கும் யாருக்கும்

பிறந்தால்

மனிதனாவேன்?

- ஜெயபிரபா

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் முதல் பெண்கள்


முதல் பெண் குடியரசுத் தலைவர்... - பிரதிபா பாட்டீல்

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் மக்களவை சபாநாயகர் - மீராகுமார்

முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர்

காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - டாக்டர் அன்னிபெசன்ட்

அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் அரசி - ரஸியா சுல்தானா

முதல் பெண் ஏர்மார்ஷல் - பத்மா பந்தோபத்யாய

முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் - புனீதா ஆரோரா

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி

புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் - அருந்ததி ராய்

மகசேச விருது பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா

அயல்நாட்டுத் தூதரான முதல் பெண் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் அய்.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி - லெய்லா சேத்

முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் பட்டதாரி - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா

விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சால்லா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

முதல் கமர்ஷியல் பெண் பைலட் - துர்பா பானர்ஜி

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்

முதல் பெண் மேயர் (மும்பை) - சுலோச்சனா மோடி

ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி - ப்ரியா ஜிங்கன்

முதல் பெண் ரயில் ஓட்டுநர் - திலகவதி

தமிழ் ஓவியா said...


கஞ்சா அடிக்கும் இந்து சாமியார்?


அது எங்கள் பிரசாதம்: கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில், சோறு, தண்ணீர், தூக்கம் கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள் போதை தரும் கஞ்சாவை, புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

தினமலர் 4.3.2013 பக்கம் 16

தினமலே சொல்லுகிறது. தெரிந்து கொள்ளுங்கள் இந்து சாமியார்களின் யோக்கியதையை.

தமிழ் ஓவியா said...


பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில், ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது ருத்ர கோடீசுவரர் ஆலயம்!

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன!

பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் -_ வாடையும் சகிக்க முடியதாததாக இருக்கிறது என்று குடியிருப்புகள் பெருகிவிட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது!.

இப்பகுதியில் உள்ள ருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம். எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா?

உயிரில்லாக் கற்சிலைக்கும், உதவாத அய்தீகதத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்று தான் திருந்துவார்களோ?

- சி.நா.திருமலைசாமி, சின்ன நெகமம், 642137
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 83

தமிழ் ஓவியா said...


மூளை என்னும் கணினி


அமெரிக்காவின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் மனித மூளையைப் பற்றிய பெரும் ஆராய்ச்சி. அமெரிக்காவின் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆராய்ச்சி அறிவிக்கப்பட்டபோது இது முடியுமா என்ற கேள்விதான் பெரிதாக இருந்தது.

மரபணு ஆரய்ச்சியில் அக்குவேறு ஆணிவேறாக மனித மரபணுவின் அடிப்படையான டி என் ஏ வின் ஜீனோம் திட்டம் அறிவிக்கப் பட்ட போது அறிவியல் உலகமே மகிழ்ச்சியான அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அது வெற்றிகரமாக முடிந்தாலும் எதிர் பார்க்கப்பட்ட முழுப் பயனும் இன்னும் அடையப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல நோய்களின் மரபனுக்கள் வெற்றிகரமாக ஆராயப்பட்டுள்ளன.

விண்ணுலகத்தை ஆராய்ந்ததைவிட நமது மூளை எனும் உலகின் சிறந்த கணினியை ஆராய்ந்து பல நோய்களுக்கும் அடிப்படை காண முயல்வது விஞ்ஞானிகளுக்கே பெரிய சவாலாக, முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மூளையில் உள்ள ஆயிரம் கோடி நியூரான் எனும் செல்களை ஆராய முடியுமா? ஒவ்வொரு நியூரானும் ஒரு பெரிய கணினிக்குச் சமம். இதயத்தின் ஒவ்வொரு செல்லும் கிட்டத்தட்ட ஆராயப்பட்டு, இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இடத்தையும், சில நேரங்களில் ஒழுங்காக செயல்படாத அந்த செல்கள் இதயத்துடிப்பு ஒழுங்காகச் செயல்படாத போது அந்த சிறு இடத்தைக் கண்டுபிடித்து அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமலேயே "பொசுக்கி" இதயத் துடிப்பைச் சரி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

மூளையின் பல இடங்கள் எதை எதைக் கட்டுப்படுத்துகின்றன என்பது துல்லியமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆனாலும் பல மூளைக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன? பிறவிக் கோளாறுகள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன? வயதான மூளைத் தாக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?

அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பன மிகவும் முக்கியமான ஆராய்ச்சிகளாக அமையும். அமெரிக்கத் தலைவர் ஒபாமாவே இந்த ஆரய்ச்சியைத் தொடங்கி வைத்து ஆதரித்து இன்று பேசியுள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்தின் கோட்டையாக உள்ள மூளையின் கதவுகள் திறக்கப் படப்போவது நிச்சயம்.

டாக்டர் சோம. இளங்கோவன் (அமெரிக்கா

தமிழ் ஓவியா said...

லட்டா? துட்டா?



கோவிலுக்கு மொட்டை போட்டவனைப் பார்த்து `உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுத்தியா என்று கிராமங்களில் கேட்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட கட்டணம் வசூலித்த காலம் இருந்தது. என்.டி.ராமராவ் ஆட்சியின் போது இலவசமாக்கப்பட்டது. ஏனென்றால், பக்தர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மயிர் விற்கப்பட்டது. மயிர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தப் பணமே போதும் என்பதால், கட்டணத்தை விலக்கினார்கள். திருப்பதி மொட்டை மூலம் கிடைக்கும் மயிரை விற்பதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கிறதாம். இந்த வருமானம் போதாதென்று புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட கூந்தல் முடியைக் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு 5 லட்டுகள் இலவசமாக அளிக்கப்படுமாம். இந்த லட்டு தானம் ஏன் தெரியுமா? நீண்ட முடியை அய்ரோப்பிய நாடுகள் `டோப்பா (ஷ்வீரீ)அதாவது தோற்றப் பொலிவிற்காக வைத்துக் கொள்ளும் பொய் முடி) செய்வதற்காக நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன. இந்த வியாபாரிகளைப் பிடித்துவிட்ட திருப்பதி தேவஸ்தானம் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் மயிரைப் பிடுங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக லட்டு கொடுத்து ஏமாற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலியே...

தமிழ் சினிமாவின் பல செண்டிமெண்டுகளில் தாலி செண்டிமெண்ட்தான் நம்பர் ஒன். தாலியில் கை வைத்தால் அவ்வளவுதான் அப்படியே அதிரும் அளவுக்குப் பின்னணி இசையும், இடி, மழை, மின்னலும் ஒரு சேர மிரட்டும். இந்தக் காட்சிகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்ணுரிமையைப் பறிக்கும் கருவியாக, பெண்ணடிமையைத் தொடரும் அடிமைச் சின்னமாகத்தான் தாலி இம்மண்ணில் உருவாக்கப்பட்டது. அதனைத் தூக்கி எறி என்று குரல் கொடுத்தவர் பெரியார். தம் கருத்தை ஏற்பவர் தாலி கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதன்படி தாலி கட்டாத இலட்சோப இலட்சம் தொண்டர்களை உருவாக்கினார். தாலி அணியாத பெரியார் தொண்டர்களான வீராங்கனைகளை வித்தியாசமாகப் பார்த்த தமிழகம், ஏளனமாக கேலி பேசியதும் உண்டு. சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலோர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள். அதன் முக்கியக் காரணங்களில் தாலியும் ஒன்று. காட்சிக்கு ஏற்றாற் போல ஒப்பனை செய்துகொள்ளும் போது தாலியைக் கழற்ற வேண்டியிருக்கலாம். அப்படிக் கழற்ற மனமில்லாதவர்கள் மீண்டும் நடிக்க வரவில்லை. சிலர் கதாநாயகி வேடத்தைத் தவிர்த்து, அக்காளாக, குடும்பப் பெண்ணாக, டாக்டராக, வயதான மாமியாராக நடித்தார்கள். இப்படி நடிக்கும் போது தாலி ஒரு பிரச்சினை இல்லை அல்லவா?

இந்தக் காலமெல்லாம் கடந்து சின்னத்திரை வலுப்பெற்று வந்த சூழலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்களே துணிச்சலாக முதன் முதலில் தாலியைக் கழற்றிவைத்து விட்டு செய்தி வாசித்து, பின் மீண்டும் அணிந்து கொண்டார்கள். இந்த வகையில் முதன் முதலில் தாலிக்கான புனிதத்தை உடைத்ததற்காக இவர்களைப் பாராட்டலாம்.

ஆனாலும், தாலிக்கு சினிமா கொடுத்த செண்டிமெண்ட்டை சின்னத்திரைத் தொடர்களும் தொடர்ந்தன. தாலியை மட்டுமே வைத்துக்கூட பல கதைகள் புனையப்பட்டன. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய தாலியை அவன் இறந்தாலொழிய கழற்றுவதில்லை என்றே சின்னத்திரைக் குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் திகழ்ந்தன. காலமாற்றம் இப்போது மெதுவாக இந்தப் போக்கினை மாற்றி வருகிறது. பெண்கள் பொருளீட்டி, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவரும் சூழலில் சின்னத்திரை செண்டிமெண்ட்டுகளும் உடைகின்றன போலும்!

கடந்த மார்ச் மாத இடை வாரத்தில் சன் தொலைக்காட்சியில் நிறைவடைந்த `திருமதி செல்வம் தொடரிலும், இன்னொரு தொடரான நாதஸ்வரம் தொடரிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.

திருமணம் செய்த நாளில் இருந்தே துன்பத்தில் உழன்று, உழைப்பால் உயரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை திருமதி. செல்வம். ஒரு கட்டத்தில் மனைவியை விலக்கிவைத்து விட்டு முன்னாள் காதலியுடன் சேர்ந்து மனைவிக்குத் தொல்லை கொடுக்கிறான் செல்வம். ஆனால், காதலியின் சூழ்ச்சி அறிந்து அவளால் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு சிறைக்கும் சென்றுவிட்டு மீண்டும் மனைவியிடமே வருகிறான். தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று மன்றாடுகிறான். ஆனால், மனைவி அர்ச்சனா வழக்கமான பழைய பத்தாம்பசலிப் பெண்ணாக இல்லாமல், ``இதேபோல நான் கெட்டழிந்து மீண்டும் உன்னிடம் வந்து என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டிருந்தால் நீ ஏற்றுக்கொள்வாயா? என்று அதிரடியாய்க் கேட்கிறாள்.

திகைக்கும் கணவனை நோக்கி அடுத்த குண்டை வீசுகிறாள் மனைவி. அது அவன் கட்டிய தாலி. ``நீ கட்டிய இந்தத் தாலி அர்த்தமில்லாமல் என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியபடியே தாலியைக் கழற்றிக் கணவனின் முகத்தில் வீசுகிறாள். சுற்றி இருக்கும் உறவினர்கள் அவளது செயலை ஏற்றுக்கொள்வதோடு, இன்னொரு திருமணமும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்பதோடு அந்தத் தொடரை முடித்தார்கள்.

இதேபோல நாதஸ்வரம் தொடரிலும் ஒரு காட்சி. திருமணமாகி சில நாட்களே ஆன தம்பதியரின் கதையில் அக்காட்சி. கணவனின் நயவஞ்சகத்தை, துரோகத்தை அறிந்து அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வாழப் புறப்படுகிறாள் அந்த இளம்பெண். வெளியேறும்போது அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வருகிறாள்.

காலமாற்றத்தையும், பெண்ணுரிமையின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலையும் உள்வாங்கியே இக்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுரிமைப் போரின் வீச்சு இன்னும் அதிகமாகும்போது தாலி தேவையா என்ற காட்சிகளும் வரலாம்.

தமிழ் ஓவியா said...

டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல்


’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’

பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது.

உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான பெண்ணுரிமைக்கான அமைப்பு ஃபெமன். இதன் போராட்டங்களில் ஒரு வகை, திறந்த மார்புடன் போராடுவது. அப்படி என் உடல் என்னுடையது மட்டுமே; இது யாருடைய கவுரவத்திற்கும் மூலம் அல்ல (My body belongs to me, and is not the source of anyone’s honour) என்று தனது திறந்த மார்பில் அரபியில் எழுதப்பட்ட வாசகத்துடன் முகநூலில் படம் வெளியிட்டுள்ளார் டுனீசியாவைச் சேர்ந்த அமினா என்ற 19 வயதுப் பெண். இதற்காக அவருக்கு பத்வா அறிவித்திருக்கிறார் அடெல் அல்மி என்ற ஓர் இஸ்லாமிய மதவாதி. ஆனால் மரண தண்டனையே நடப்பில் இல்லாத டுனீசியாவில் சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதி அல்லாத அல்மி கொடுத்துள்ள பத்வா தவறானது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனை எதிர்த்தும், அமினாவின் உயிரைக் காக்க வேண்டியும் உலகளாவிய கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது. தற்போது அவருக்கு ஆதரவாக டுனீசியாவைச் சேர்ந்த மெரியம் என்ற பெண்ணும் தன் உடலில் எங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அரபியில் எழுதி தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அதை உடைக்கும் நடவடிக்கைகளும் தொடரவே செய்யும்.

- சமன்

தமிழ் ஓவியா said...

நமக்குரிய இலக்கு இராஜபக்ஷேவே!

இந்த நேரத்தில் பொது எதிரி இராஜபக்ஷே என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, டெசோவையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது?

ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத்தானே காட்டுகிறது!

முந்தைய அவரது நிலைப்பாடுபற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம்.

நமக்குள்ள இலக்கு -- இலங்கை இராஜபக்ஷேவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல -- ஈழப் பிரச்சினை! - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

திரிபுரா அரசின் தடாலடி


மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது.

ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

திருடர்களுக்கு உதவும் கடவுள்

- தேன் தினகரன்

கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

கோபாலன், கோவிந்தன் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள்.

நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக வழக்குப் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோயில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு?

கோபாலன்: அய்யா, நான் தீவிர முருகன் பக்தன்யா.

நீதிபதி: இதை எப்படிப்பா நம்புறது? நீ வணங்குற முருகன் கோயில்லயே கொள்ளை அடிக்கலாமா?

கோபாலன்: ஏழைகளுக்கு உதவுறவர்தானங்கய்யா அந்த அருள் முருகன்.

நீதிபதி: ஏழைகளுக்கு உதவுவார்ங்கிறது சரி. திருடர்க்கும் உதவுவாரா?

கோபாலன்: ஆமாங்கய்யா..........

நீதிபதி: என்ன சொல்ற நீ?

கோபாலன்: பக்தர்களுக்கு அருள் செய்றதுதானய்யா அவனோட கடமை. நான் திருடுறதுக்காக பல இடங்களுக்கும் போய் ஒண்ணும் கிடைக்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தேன். அப்பதான் முருகன் என் கனவில் வந்து, பக்தா! பசியால வாட வேண்டாம். உண்டியல்ல பணம் நிறையா வச்சிருக்கேன்.... எடுத்திட்டுப் போய் சாப்பிடுன்னு சொன்னார்ங்கய்யா...... அவர் சொல்லித்தான் செஞ்சேன்.

நீதிபதி: முருகன் கனவில் வந்தார்னு சொல்றியே, அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?

கோபாலன்: ஆதாரம் எதுவும் இல்லைங்கய்யா......
அடுத்து கோவிந்தனை விசாரிக்கிறார்.

நீதிபதி: நீ என்ன கோபாலன் கூட்டாளியா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா....... நான் தனியா உண்டியலை உடைக்கணும்தான் போனேன். அந்த நேரத்தில கோபாலன் அங்க வந்திட்டான்.

நீதிபதி: கோபாலன் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திருடுனதாச் சொல்றான். நீ எதுக்காக திருடுன?

கோவிந்தன்: எதித்துப் பேசுறனேன்னு தயவு செஞ்சி கோவிச்சிக்கக்கூடாது. ஒங்களுக்கு கடவுள் நம்பிக்கைலாம் இருக்கா?

நீதிபதி: ஓ! இருக்கே! எதுக்காக அப்படிக் கேக்கிற?

கோவிந்தன்: அந்த முருகனை வரவச்சி நான் எதுக்காகத் திருடுனேன்னு நீங்களே அவங்கிட்ட கேளுங்களேன்.

(நீதிபதி யோசிக்கிறார்.)

யோசனை என்னத்துக்கு? முருகனுக்கு சம்மன் அனுப்பி வரவச்சி கேளுங்க, நான் சொல்றது நிஜமா இல்லையான்னு......

நீதிபதி: சம்மன் அனுப்பி வராட்ட என்ன செய்றது?

கோவிந்தன்: கு.வி.மு.ச.87-இன் கீழ் கைது ஆணை போடுங்கய்யா.....

நீதிபதி: என்னப்பா சட்டம்லாம் பேசுற? நீ என்ன வழக்குரைஞரா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா..... பாதிக்கப்பட்டோர் கழகத்தில் உறுப்பினரா

இருக்கேன்.

நீதிபதி: பாதிக்கப்பட்டோர் கழகமா? ஏம்ப்பா.... அவங்க எல்லா விசயத்திலயும் ரொம்ப நியாயமாத்தான் நடப்பாங்க.... அவங்களை எதுக்குப்பா இழுக்கிற?

கோவிந்தன்: என் நண்பர் பெருமாள் கடவுள் இல்லைங்கிறதை சட்டரீதியா ஒன்னால நிரூபிக்க முடியுமான்னு கேட்டான். அதுக்காகத்தான் அந்தக் கோயில்ல கொள்ளை அடிச்சேன். நீங்க இந்த வழக்குல முருகன் ஆஜராகணும்னு உத்தரவு போட்டுட்டா அது தெரிஞ்சிரும்ல?

நீதிபதி: அதெல்லாம் என்னால முடியாது. கோயில் உண்டியலை உடைச்சித் திருடுனது இ.த.ச. 379, 380இன்படி குற்றம், அதுக்குத் தண்டனைய ஏத்துக்கிறியா?

கோவிந்தன்: அய்யா...... எனக்குத் தண்டனை குடுக்கிறதுக்கு முந்தி அந்த முருகனுக்கும் தண்டனை குடுத்திறணும்.

நீதிபதி: முருகனுக்கா? எதுக்கு?

கோவிந்தன்: செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் குற்றம் என்று இ.த.ச.2ல சொல்லப்பட்டிருக்கே. நாங்க கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது அந்த முருகன் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கணும். அதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்ததால இதைக் குற்ற உடந்தைன்னுதான் சொல்லணும். அதனால முருகனுக்கு இ.த.ச.109இன் கீழ் தண்டனை குடுத்திட்டு அப்புறம் எனக்கு உண்டியலைக் கொள்ளை அடிச்சதுக்கான தண்டனையை நீங்க கொடுக்கலாம்.

நீதிபதி: இப்போ நீதிபதி வேலைக்கு வந்ததுதான் பெரிய தப்புன்னு தெரியுது. அதனால என் பதவியை ராஜினாமா பண்ணிர்றேன். இந்த வழக்கை வேற நீதிபதி விசாரிப்பார்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டுப் பொன்மொழி

இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேரும் இடத்திற்கு ஏற்பவே மாறுவோம்.

- துருக்கி

தமிழ் ஓவியா said...


ஓவியா IAS


திருச்சி திருவெறும் பூரில் உள்ள பெல் நிறு வனத்தில் பணியாற்றக் கூடிய கழகத் தோழர் கே.வி. சுப்பிரமணியம்.

இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் துணைவரை இழந்த பெண்ணை (ஆரிய மாலா) கொள்கை உணர் வோடு தம் வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்ட கொள்கை வீரர்.

அவரது, மகன் சு. கலாநிதி - பொறி யாளர் தனியே தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவ ருக்கும், செவிலியர் கல்வி பெற்ற தங்கமணிக் கும் (ANM) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா திருவெ றும்பூரில் 5.4.2013 காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது.

மகள் கலைமணிக்கும் திருமணம் முடிந்து விட் டது. அவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவரின் இணையரும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் நுழைவு வாயிலில் தங்கள் குடும் பத்தில் பட்டம் பெற்றவர் களின் பெயர்களையும், அவர்கள் பெற்ற பட்டங் களையும் தாங்கிய பதாகை (Flex) ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

பேத்தி ஓவியா (குழந்தை) பெயருக்குப் பக்கத்தில் IAS என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு வந் திருந்த அனைவரையும் இது ஆச்சரியமாக பார்க்க வைத்தது; ஏன். அனைவரையும் மனம் விட்டுப் பேசவும் வைத்தது.

ஏதோ விளம்பரத்திற் காக தோழர் கே.வி.எஸ். இதனைச் செய்யவில்லை.

தந்தை பெரியார் சகாப்தத்தில் எத்தகைய சமூக மாற்றம் நடந்திருக் கிறது என்பதை வெளிப் படுத்தவும், தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட கருஞ் சட்டைத் தோழர்களாக வாழ்ந்து காட்டி வரும் நாங்கள் எத்தகைய தன்னம்பிக்கை உள்ள வர்களாகவும், சிறப்பான வாழ்வுக்கு சொந்தக் காரர்களாகவும், கல்வி நிறைந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வலுவாகவும் இருக்கி றோம். நீங்களும் ஏன் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடாது? எனும் சிந்தனையைத் தூண்டவும்தான் இந்த ஏற்பாடு! என்னே, இயக்க தோழர்களின் சிந்தனை நேர்த்தி!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதியை இடித்தது சரியானதுதானாம்! என் எண்ணங்களுக்கு ஏற்றதாக பா.ஜ.க. இல்லை - எல்.கே. அத்வானி
அடுத்த பிரதமர் மோடி- ராஜ்நாத்சிங், அடுத்த பிரதமர் அத்வானி - விஜய்கோயல்
பதவிக் கோஷ்டி சண்டையின் உச்சத்தில் பிஜேபி

புதுடில்லி, ஏப்.7- அடுத்த பிரதமர் மோடி என்றார் கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் இல்லை அத்வானி என்கிறார் டில்லி மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் கோயல். பதவிச் சண்டை தேர்தலுக்கு முன்ன தாகவே பா.ஜ.க.வில் ஆரம்பித்து விட்டது. பா.ஜ.க, நிறுவப்பட்ட தன், 33ஆம் ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சி யின் மூத்த தலைவர், அத்வானி பேசிய தாவது: சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், என்னை பாராட்டி பேசியதாக, பலரும் கூறுகின்றனர். இது, பெரிய விஷய மில்லை. எந்த ஒரு விஷயத்தையும், சரியாக பேச வேண்டும்.

அப்படி பேசினால், உலகம், நம் பேச்சை, அங்கீகரிக்கும்; பாராட்டும்.உண்மையை பேசுவதற்கு, எப்போதும் தயங்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையுடன், எந்த சிந்தனையையும் மேற்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும், உங்களுக்குள், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.அயோத்தி பிரச்சினைக்காக, யாரிடமும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவ சியமில்லை. அதற்காக, பெருமைப்பட வேண் டுமே தவிர, மன்னிப்பு கேட்க கூடாது.

ராமர் கோவில் மற்றும் அயோத்தி விவகாரங் களால் தான், பா.ஜ.க, வளர்ச்சி அடைந்தது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எங்களுக்கு, எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இதற்காக நாங்கள், பெருமைப்படுகிறோம். பா.ஜ.க., என்பது, ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; கலாச்சார அமைப்பும் கூட. பா.ஜ.க., தொண்டர்கள், ஊழலை ஒழிப்பதற்காக, கடுமையாக பாடுபட வேண்டும்."பா.ஜ.க, வேறுபட்ட கருத்துக் களை உடைய கட்சி' என, சிலர் விமர்சிக்கின்றனர்.

ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம், அவர்களின் குற்றச் சாட்டுகளை, பொய் என, நிரூபித்துக் காட்ட வேண்டும். இன்றைய பா.ஜ.க.,வின் செயல்பாடு கள், என் சிந்தனை களுக்கு ஒத்துப் போக வில்லை. கட்சியின் இன் றைய செயல்பாடுகளுக் கும், என் கருத்துக்களுக் கும், ஏராளமான வேறு பாடுகள் உள்ளன. இவ்வாறு, அத்வானி பேசினார். அடுத்த பிரதமர் அத்வானிதானாம்
அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க,வின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந் திர மோடியை அறிவிப் பதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலை யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், விஜய் கோயல், கூறுகிறார்.

அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அத்வானி தான், பிரதமர். இதில், எந்த மாற்றமும் இல்லை. கட்சி, துவங்கப் பட்டது முதல், அத் வானியும், வாஜ்பாயும் தான், கட்சியை வழி நடத்துகின்றனர். வாஜ் பாய்க்கு, உடல் நலம் சரியில்லாததால், அவ ரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அத்வானி தான், கட்சியை வழி நடத்த வேண்டும். அவர் தலை மையில், அடுத்த அரசு, அமைய வேண்டும். இவ்வாறு, விஜய் கோயல் கூறினார்.

குறிப்பு: பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று பேசி னார். குத்துவெட்டு பிஜேபியில் இப்பொழுதே ஆரம்பமாகி விட்டது.

தமிழ் ஓவியா said...


டெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது!


காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும்

சென்னை, ஏப்.7- இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக் கையின் அடிப்படையில் காமன் வெல்த் நாடுகளின் தூதர்களைச் சந்தித்து கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தி.மு.க. எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும், இது குறித்து டெசோ தலைவர் கலை ஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ள தாவது:

25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப்படு கொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில், காமன் வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்பு களும், தமிழ் இனஉணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

26-4-2013 அன்று லண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப் பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக் கைக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார் கள் என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சாமிக்கு இணையாக இந்த (ஆ)சாமியா? திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூச்சல்


திருப்பரங்குன்றத்தில் தேர் ஊர்வலத்தில் சுப்பிரமணிய சாமி கடவுளின் அருகில் அர்ச் சகர் பார்ப்பனர் அட்டகாசமாக உட்கார்ந்து வந்து பக்தர்களிடையே சலசலப்பை ஏறப்டுத்தியது. பக்தர்கள் சத்தம் போட்டும் அந்த அர்ச்சகப் பார்ப்பனர் கொஞ்சம்கூட அலட்டிக் கொள் ளாமல் திமிராகவே நடந்து கொண்டார். கருவறைக்குள்ளிப்பதும் சாமி, அர்ச்சகனும் சாமி என்றுதானே அழைக்கப்படுகிறான் அந்தத் திமிர்தான் இது.

திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலில் (சுப்பிரமணிய சுவாமி) ஆண்டு தோறும் பங்குனித் தேரோட்ட நிகழ்ச்சிகள் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா நிகழ்ச்சிகள் 17.3.2013 முதல் 31.3.2013 வரை நடைபெற்றது. விழா நாட்களில் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் சாமி சிலையின் பீடத்தில் சாமிக்கு சமமாக அர்ச்சகர் பார்ப்பனரும் அமர்ந்து வந்தார். வழக்கமாக நின்று கொண்டுதான் வருவர். இதைப் பார்த்த பக்தர்கள் என்னடா அய்யரும் - சாமியும் ஒன்றா என்று முணுமுணுத்தனர்.

அர்ச்சகர் களின் திமிர் கூடிக் கொண்டே செல்கிறது என்றும் சிலர் கூறினர். 16 கால் மண்டபம் தாண்டி சென்றபொழுது - மேடான பகுதியாக இருந்ததால் வண்டியினைத் தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்பொழுது பக்தர்கள் அய்யரே கீழே இறங்கு என்று பக்தர்கள் குரலெழுப்பினர். நாமென்ன சாமி கும்பிட வந்தோமா? அய்யரைக் கும்பிட வந்தோமா? என்று பக்தர்கள் கேட்டனர். ஆனாலும் அர்ச்சகர் இறங்கவே இல்லை. தீபாராதனை செய்யும்போதுகூட உட்கார்ந்து கொண்டுதான் செய்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் - அர்ச்சக பார்ப்பனர் ஒருவர் - அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ததாக அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சகாயம் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டார். எவ்வித நடவடிக்கையும் அர்ச்சகர்மீது எடுக்க வில்லை. அப்பெண் வேலையிலிருந்து நீக்கப்பட் டார் என்று ஏற்கெனவே செய்தி வெளியானது.

அர்ச்சகரும் கோயில் பணியாளனே!

அர்ச்சகர் அனைவரும் - கோவில் பணியாளர்களே என்று இந்து சமய அறநிலையத் துறை சட்டம் குறிப்பிடுகிறது. எல்லா பணியாளர்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுகின்றனர். அர்ச்சகர் மட்டும் கையொப்பமிட மறுப்பதாகவும், காவல் அலுவலர்கள் சொன்னாலும் கேட்பதில்லை யென்றும் கூறப்படுகிறது.

எனவே அதிகாரிகளும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின் றனர். மேற்கண்ட ஒழுங்கீனங்களைத் தடுக்க தமிழக முதல்வரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர் பிரச்சினை: எப்போதுதான் விடிவு?
கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலியர்களிடம் காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களுக்காகக் காட்டக்கூடாதா?
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கேரள மீனவர்கள் இருவரை இத்தாலிய மாலுமிகள் இருவர் சுட்டுக் கொன்ற பிரச் சினையில் இந்திய அரசு காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லும் விடயத்தில் இந்திய அரசு காட்ட கூடாதா என்ற நியாயமான - அர்த்தமுள்ள வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு இருப்பது சரியானதுதானா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளார் - இந்தியாவுக் கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு இலங்கைக் கடற்படை, இலங்கை சிங்கள அரசு நாள்தோறும், தமிழக மீனவர்கள் - இராமேசுவரம், காரைக்கால், நாகை போன்ற பல துறைமுகங்களிலிருந்து சென்று மீன்பிடிப்பவர்களைத் தாக்குவது, வலைகளை அறுப்பது, பறிமுதல் செய்வது, கைது செய்து பல நாள் இலங்கை சிறையில் அடைப்பது என்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாகி விட்டது! இராஜபக்சே அரசின் கொடுஞ்செயல்கள் பட்டியலிடப்பட முடியாத அளவுக்குப் பெருகி விட்டன!!

இதற்குப் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காமல், ஏதோ சடங்காச் சாரமான சம்பிரதாய கண்டனங்கள் - கவலை கொள்ளு கிறோம் என்ற மொழியில், இலங்கை அரசுக்குத் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்காமல் பாம்புக் கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம்?

கடிதம் எழுதினால் போதுமா?

இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு உண்டா? முன்பெல்லாம் திமுக ஆட்சியில், பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் (கலைஞர்) கடிதம் எழுதியதைச் சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் என்ன சொன்னார்?

வெறும் கடிதம் எழுதி விட்டால் போதுமா? மேல் தொடர் நடவடிக்கை என்னவென்று பார்க்க வேண் டாமா? என்று விமர்சனம் செய்யத் தவறவில்லை; இன்றைக்குமட்டும் இங்கே மீனவர் பிரச்சினையானாலும் வேறு முக்கியப் பிரச்சினையானாலும் இதேபோல் கடிதங்கள் தானே எழுதப்படுகின்றன?

இது எவ்வகையில் மாற்றமான அணுகுமுறையாகும்? மக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சகோதரர்கள் கேட்க மாட்டார்களா?

கேரள மீனவர்களுக்கு வேறொரு நீதியா?

கேரள மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை குற்றமாக்கி, அவர்களைக் கைது செய்து, அவ்விருவரும், நீதிமன்ற பிணையில் விடுத்ததையொட்டி, இங்கே வழக்கு விசாரணைக்காக இத்தாலியிலிருந்து திரும்பி வராமல் சண்டித்தனத்தை அந்நாட்டு அரசு உதவியுடன் செய்த போது, கேரள முதல்வர் வற்புறுத்தியதால் இத்தாலியத் தூதுவரை, இந்தியாவின் வெளி உறவுத்துறை அழைத்து எச்சரிக்கை செய்து, கைது செய்வதாக அறிவிக்கப் பட்டது.

அவரது பாஸ்போர்ட் பறிமுதல் அறிவிப்பு வரை செய்த பிறகே இத்தாலிய மாலுமிகளான குற்றவாளிகள் திரும்பி இங்கே அனுப்பப்பட்டனர்.

அதில் நூறில் ஒரு பங்கு வேகத்தைக்கூட தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசும், பிரதமரும் வெளி உறவுத் துறையும் காட்டுகிறதா? கலைஞர் போன்ற பொறுப்புள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியும், இந்திய அரசும் தனது மெத்தனப் போக்கை விடுவதில்லை.

இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் இராமேசுவர- நாகை (தமிழக) மீனவர்கள். இதற்கு ஒரு விடிவே இல்லையா?

எங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா? எங்களுக்கு அரசுகள் விஷம் வாங்கி தந்து விட்டால் அத்தனைப் பேரும் குடித்து மாளுவோம் என்று வேதனைத் தீயில் வெந்து கருகி விரக்தியில் உருகி இரத்தக் கண்ணீர் விடுகிறார்களே மீனவத் தோழர்கள் - தலைவர்கள் தாங்கள் அளிக்கும் பேட்டியில்.

இதற்கு எப்போது தான் விடியல்? இப்படியே போனால் அவரவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படாதா?

வெளியுறவுத்துறைக் கொள்கையில் மாற்றம் தேவை!

மத்திய அரசின் கேளாக்காது, மெத்தனம் மாற வேண்டும். வெளியுறவுக் கொள்கை மறுபரிசீனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எமது மக்களை அங்கும் இங்கும் அழிக்கும் படலம் நாளும் தொடரும் நிலையில், இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்வது, வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது, நொந்த உள்ளத்தை நொறுங்கச் செய்வதாக ஆகாதா?

எனவே கடும் நடவடிக்கை இலங்கைக்கு எதிராக அவசரத் தேவை!

சென்னை
8.4.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்களையும், கேரள மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன்? கலைஞர் எழுப்பும் வினா

சென்னை, ஏப்.8- கேரள மாநில மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இது குறித்து முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்பதாவது:

கேள்வி: தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 51 மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்று விட்டார்களே?

கலைஞர்: ராமேஸ்வரம் பகுதியி லிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் படகில் வந்த சிங்களக் கடற்படையினர், மீனவர்கள் 25 பேரைச் சிறைப் பிடித்துப் படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைப் போலவே, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற் படையினர், மீன்பிடிப்படகுகள் அய்ந்தை யும், அவற்றில் இருந்த 26 மீனவர் களையும் சிறைப்பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையினர், தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சிறைப்பிடித்து இலங்கைக் குக் கொண்டு செல்லும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலங்கைக் கடற்படையின் இத்தகைய கடுமையான அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இரண்டு இத்தாலிக் கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவா தித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கைக் கடற் படையினரிடம் மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது.

கேரள மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வில், கேரள முதல்வர் திரு. உம்மன்சாண்டி மேற் கொண்ட தீவிரமான நடவடிக்கையைப் போலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மீனவர்களைக் காப்பாற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதும்; கேரள மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்க்காமல் நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும்; தவறல்லவே?

தமிழ் ஓவியா said...


இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் ஆயத்தமாவீர்! தஞ்சை கலந்துரையாடலில் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை


தஞ்சையில் 5.4.2013 நடைபெற்ற மண்டல இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தஞ்சை நகர தி.க. அமைப்பாளர் வெ.இரவிக்குமார் அவர்கள் 10 அரையாண்டு சந்தா, ஓராண்டு சந்தா ஒன்று மொத்தம் 11 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ. 7200 வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் ஏப்ரல் 8- மே 4ஆம் தேதி இராஜபாளையத்தில் நடத்தப்பட இருக்கும் இளைஞ ரணி மாநில மாநாட்டின் மூலம் இராஜபாளையம், கழக பாளையமாக மாறப்போகிறது என்றார் கழகத் துணைத்தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

இராஜபாளையம் மாநாடு மே 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இராஜபாளையம் கருஞ்சட்டைப் பாளையமாக மாறும் என திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கூறினார்.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி கலந்துரையா டல் கூட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக் குத் தலைமையேற்று கலி.பூங் குன்றன் பேசியதாவது.

இராஜபாளையம் மாநாட் டில் நடைபெறும் இளைஞ ரணி அணிவகுப்பில் தஞ்சை மாவட்டம் முதல் பரிசைப் பெறவேண்டும் என ஆவலாக இருக்கின்றீர்கள். இராஜபா ளையம் கருஞ்சட்டைப் பாளை யமாக மாறப்போகும் அளவிற்கு தமிழ்நாடு முழுக்க விளம்பரங் கள் செய்யப்பட்டுள்ளன. இம் மாநாடு மிகப்பெரிய வெற்றி யைப் பெறும் என்பதற்கான கூறுகள் தெளிவாகத் தெரி கின்றன.

நம்மால் முடியும்

இங்கே பேசிய சில இளைஞ ரணித் தோழர்கள் இம்மாநாட் டிற்கு என்னால் முடிந்தவரை ஒத்துழைப்பேன் என்றார்கள், முடிந்தவரை என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்கூடாது, முடியும் என்றே நாம் சொல்ல வேண்டும். மாநாட்டிற்கு சீருடை, கொடிகள், காலணி ஆகியவற் றுடன் தயாராய் இருங்கள்.

இந்த ஆண்டு இயக்க வேலை களைக் கணக்கிட்டுப் பார்த் தால் நாமே அசந்து போவோம். அந்தளவிற்கு இயக்கம் இயங்கி வருகிறது. தோழர்களும் உயி ரோட்டமாய் இருந்து ஈடு கொடுக்கிறார்கள். இதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நமது இயக்கத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. கட்டமைப்புகளும், கழக வெளியீடுகளும் மெருகேறி வரு கின்றன.

அன்றைக்கு ஒரே தஞ்சை மாவட்டமாக இருந்தது. இன்றைக்கு 7 மாவட்டங்களாக விரிந்துள்ளது. இது ஒரு பெரிய வளர்ச்சி ஆகும். முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சுற்றிவர 5 நாள்கள் தேவைப்படும். இன்றைக் குத் தனியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் செய்திட எளிதாக விஞ்ஞான பூர்வமான முறை யில் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

தமிழர்கள் மத்தியில் கழகம்

பல லட்சம் பேர் திராவிடர் கழகத்தில் நேரடி உறுப்பினர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் குறித்து தமி ழர்கள் நல்ல மதிப்பு வைத்திருக் கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவர தொடர்ந்து நாம் பாடுபட்டு வருகிறோம். அந் நிலை வந்தால் சமூகம் மாறும், மக்கள் மனதில் புரட்சி ஏற்படும். சமூக நீதியில் எப்படி தமிழ்நாடு வழிகாட்டியோ அதனால் இந்தியாவே பயன் பெறுகிறதோ, அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் என்ற நிலை வந்தால் இந் தியாவின் சனாதன கோட்டை கள் தூள் தூளாகிப் போகும்!.

தமிழ்நாட்டு மாணவர்கள் விட்டில் பூச்சிகள், ரசிகர் மன் றங்களை நோக்கியே போவார் கள் என்ற எண்ணத்தையெல் லாம் போக்கி, பிரச்சினை என வந்தால் நாங்கள் பெரியாரின் மாணவர்கள் என நிரூபிப்போம் என களத்திற்கு வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் குறித்து நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்து கவலைப்படும். நாம் சமூகம் குறித்துக் கவலைப்படு கிறோம். இன்றைக்கு மன்றல் எனும் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரும் தாக்கத்தைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல ஆசிரியர் பணி யிடங்களில் இடஒதுக்கீடு முற் றிலுமாகப் பின்பற்றாததை நாம் கண்டுபிடித்து அதன் தீர்வு நோக்கி சிந்தித்து வருகிறோம்.

பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி

ஏப்ரல் 18 தொடங்கி 27 வரை உலக புத்தக நாளை யொட்டி பெரியார் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் வேகமாகப் பணிகளைச் செய்து வருகிறார். இந்த 2013 மிகப்பெரிய வேலைத் திட்டம் கொண்ட ஆண்டாக அலை அலையான பிரச்சாரம் கொண்டதாக இருக்கிறது. 24 மணி நேரமும் தூங்காத கடிகா ரம் போல நம் தோழர்கள் விழிப்புடன் பணியாற்றி வரு கிறார்கள் என கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார்.

இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் வாரீர் என்று குறிப்பிட்டுள்ளார் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.