Search This Blog

30.6.12

ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க


தீண்டாமைச் சுவர்கள்

அண்மைக் காலமாக சில கிராமங்களில் தீண்டாமை என்னும் பாம்பு தலைகாட்டுகிறது. தீண்டாமைச் சுவர் என்னும் தகவலும் வெளி வருகிறது. தேநீர்க் கடைகளில் இரட்டைத் தம்ளர் முறை நடைமுறையில் இருப்பதாகவும், ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன.

இதற்குக் காரணம் என்ன? இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டிப் பாகக் காவல்துறை உளவுப் பிரிவினருக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங் களைவிட விழிப்புணர்வுப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் மிக மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; அதற்குக் காரணம் ஈ.வெ. ராமசாமி என்பது அமெரிக்கப் பேராசிரியர் களின் கருத்து என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி கூறியதை ஆனந்தவிகடன் இதழேகூட வெளிப்படுத்தியதுண்டு.

திராவிடர் கழகம் ஒவ்வொரு நாளும் இந்தத் திசையில் பாடுபட்டுக் கொண்டுதானிருக்கிறது என்பதும் ஊருக்குத் தெரியும்.
இதற்கு மேலும் அந்த அசிங்கமானது (ருபடல ழநயன) தலை தூக்குவது ஏன் என்பது முக்கியமான அவசியமான கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டங்கச்சியேந்தல் முதலிய ஊராட் சிகளில் ஊராட்சித் தேர்தலையே நடத்த முடியா திருந்த கொடுமையை மானமிகு கலைஞர் அவர்கள் கடந்த முறை முதல் அமைச்சராக இருந்தபோது நீக்கி, சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தேர்தல்கள் சுமூகமாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதே!
ஆட்சியர்களாக இருக்கக் கூடியவர்களின் அணுகுமுறையும், அக்கறையும் இதில் மிக முக்கியமானது. சில நாட்களுக்குமுன் ஈரோடு கொடுமுடியையடுத்த நகப்பளையம் என்னும் கிராமத்தில் 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் தலையிட்டு, சுவர் அகற்றப்பட்டது என்பது நல்ல செய்தியாகும். மதுரை மாவட்டத்திலும் உத்தபுரத்தில் இப்படி நடைபெற்றதுண்டு.

இரு தரப்பாரையும் அழைத்துப் பேசுவது, அமைதிக் குழு (ஞநயஉந ஊடிஅஅவைவநந) போடுவது என்பதெல்லாம் சடங்காச்சாரமாக நடைபெறு வதாகத் தான் பொருள் - அதுதான் யதார்த்தமும் கூட!

அதைவிட இந்த விஷம வேலைகளில் ஈடுபடுபவர்கள் யார்? அமைப்பு எது? என்பதைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் கட்சிகளுக்கும். ஜாதிகளுக்கும் அப்பால்கூடி, சீர்திருத்த முற்போக்கு எண்ணத்தோடு செயல்பட முன் வருவார்களேயானால், இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும்.

அனைத்துக் கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தக் கட்சியும் தீண்டாமை இருக்க வேண்டும் என்று சொல் லுவதில்லை. (பி.ஜே.பியைத் தவிர).

இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பில் நம்பிக் கையுள்ள கட்சிகள் இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றன என்பது மிகவும் முக்கிய மல்லவா! கொள்கைப் பூர்வமாக அரசியல் கட்சிகள் இயங்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

தீண்டாமையை எந்த நிலையில் அனுசரித்தாலும் அது சட்டபடி குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை! இதற்கென்றே காவல்துறையில் தனிப்பிரிவே கூட இயங்குகிறது. ஆனாலும் விளைவு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.

திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வேண்டுகோள்: எந்த இடத்தில் எந்த வகையில் தீண் டாமை மற்றும் ஜாதி வெறிப் பாம்பு தலை தூக்கினாலும், உடனடியாக தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முதற் கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நட வடிக்கை - அடுத்த கட்டமாக நேரில் களத்தில் இறங்குவது - தொடர் பிரச்சாரம் செய்வது என்பது போன்ற முறைகளில் நமது பணிகள் அமைதல் வேண்டும்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியதுதான்; அதே நேரத்தில் ஜாதியின் விளைவுதான் தீண்டாமை என்று மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்க தேவையான திட்டங்களைச் செயல் படுத்துவோம்.

இந்து சமய அமைப்பு என்பது வருண பேதம் எனும் அடித்தளத்தின்மீது நிமிர்ந்து நிற்கிறது.

இந்த மூலபலத்தைத் தகர்த்தெறிவதுதான் நிரந்தரமான தீர்வு.

ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க இளைஞர்களே ஒன்று திரள்வீர்!
----------------------- “விடுதலை” தலையங்கம் 29-6-2012

28.6.12

கணேசனும், லட்சுமியும், காளியும் அமெரிக்கனைச் சுட்டெரிக்காதது ஏனோ?


இந்துக்களின் ஆக்ரோஷ கடவுளான காளியை அமெரிக்காவில் ஒரு நிறுவனம் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது தெரியுமா? காளியின் பெயரால் பீர் அறிமுகமாகியுள்ளது. (இதில் கோபப்பட என்ன உள் ளது? இந்துக் கடவுள்கள், அவதாரங்கள் குடிக்க வில்லையா?)

லட்சுமியின் படம் அமெரிக்காவின் கழிப் பறையில் ஓவியமாக வரையப்பட்டதுண்டு. விநாயகரின் படம் பெண்களின் உள்ளாடைகளில் இடம் பெற்றது.

செருப்புகளில் விநாயகர் குடியிருந்தார். சிவபுரத்து நடராசன் சிலை கடத்தப்பட்டு, நாட்ரன்துரையிடம் அமெரிக்காவில் சரண் அடைந்தது. நடராசர் நடனமாடுவது போல இருந்த காட்சி அவர்களை ரசிக்கச் செய்தது. அவர் கையில் இருந்த தட்டை சிகரேட் தூளைப் படியவைக்கும் (ஹளா கூசயல) கிண்ணமாகப் பயன் படுத்திக் கொண்டார்.

இந்துக்களின் மனம் மிகவும் புண்படுத்தப்பட் டது என்று குரல் கொடுத்தனர். நாடாளு மன்றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் அனல் கக்கி னார். அமெரிக்கத் தூதரை அழைத்து நடந்த காரியங்களுக்காக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரித்தார் - ஒன்றும் நடந்துவிடவில்லை.

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுக்கலாம். பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கலாம், காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறக்கலாம். மாண்டவ்ய முனிவர் தவளைக்குப் பிறக்கலாம். சவுனக முனி நாய்க்கும் பிறக்கலாம்; ஜாம்பவந்தர் கரடிக்குப் பிறக்கலாம்.

மகாவிஷ்ணுவின் மார்பின் கறுப்பு மயிரில் கிருஷ்ணன் பிறக்கலாம் வெள்ளை மயிரில் அவன் அண்ணன் பிறக்கலாம்!

இப்படியாக சாத்திரம் புராணங்கள் எழுதி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அமெரிக்கக்காரன் இந்துக் கடவுள்களைக் கேலி செய்து விட்டான் என்று குதிப் பதில் பொருளுண்டோ!

அவன் செய்ததாவது கேலி, நீ செய்ததோ, அசிங்கம் - ஆபாசமாயிற்றே!

அதுசரி உங்கள் கணேசனும், லட்சுமியும், காளியும் அந்த அமெரிக்கர்களை ஒன்றும் செய்யவில்லையே! உம் கடவுள் சக்தி பூஜ்ஜியம் தானோ!

அதுவும் காளி சிவமூர்த்தியின் கோபாக்னியாயிற்றே - பத்ரகாளியாயிற்றே. அந்த அமெரிக்கனைச் சுட் டெரிக்காதது ஏனோ? குடலைக் கிழிக்காதது ஏனோ! எல்லாம் உல்டாப் தானோ!

---------------- மயிலாடன் அவர்கள் 28-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல - பெரியார்


தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில், பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங்கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவேயாகும்.

இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்றவர்களாக மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களை சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.

தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.


இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.

இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.


கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக் கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடமைக்கோ, காட்டு மிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள் கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானை கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பானுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழிமக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.

எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடையவில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகியவைகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கன மாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.
-------------------------தந்தை பெரியார்-"விடுதலை" 6.9.1960

27.6.12

ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது ஏன்?


ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பாற்றவே!

ஜுனியர் விகடன் (27.6.2012) இதழில் திரு எஸ்.இராமகிருஷ்ணனின் எனது இந்தியா கட்டுரை வெளிவந்துள்ளது. 1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலை செய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக்கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் இராமகிருஷ்ணன்.

இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சி நாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்?
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தி யனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்.

அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடை யேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு,
வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta.."

திரு. ரகுநாதன் தமது பாரதி காலமும் கருத்தும்' (1982) என்ற நூலில் இக்கடிதத் தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (நுஒவைள) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகுநாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெளிவாக பதிய வைத்திருக்கிறார்.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் நூலை மேற்கோள்காட்டி எழுதியிருக்கும் திரு. இராமகிருஷ்ணன், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான் என்ற தகவலை வெளிப் படுத்தும் இந்த கடிதத்தை வெளியிட் டிருக்கவேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆஷை நவீன இரண்யன் என்று பத்திரிகைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்யன் யார்?

இரண்யன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால்விட்டவன். புராணகால இரண்யனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் பேரில் நாடக வடிவம் பெற்றது.

வர்ணாஸ் ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் நவீன இரண்யன் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்?

ஆஷும் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவ வேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டி யில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச்சென்று மருத்துவ மனையில் சேர்த்தார் ஆஷ்.

தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ர ஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தை கெடுத்து விட்டார் ஆஷ்! இதுவே ஆஷ் கொலைக்கு காரணம் என்று சொல் லப்படுகிற வரலாறு இருக்க புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடி வெடுத்து நீலகண்ட பிரம்மச்சாரி திட்டம் தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறது.

-------------- கி. தளபதிராஜ் அவர்கள் 27-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26.6.12

சாமியை கல்லென்று சொன்னீர்களே, சரியா?-பெரியார் பதில்

ஆயிரந்தரம் சொல்லுவேன்

ஈ.வெ.ரா.: ஸ்ரீ அய்யங்கார் வெகுநேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக்காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாராயண அய்யங்கார்: (எழுந்து) நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே, இது சரியா?

ஈ.வெ.ரா.: ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள், காட்டுகின்றேன். (என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.)


மற்றொரு பார்ப்பனர்: (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறதே!

ஈ.வெ.ரா: அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கு செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும்படியாகவாவது செய்யக்கூடாதா?

(அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.)

அய்யங்கார்: இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவதுதானே?

ஈ.வெ.ரா.: நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகிறேன்.

அய்யங்கார்: இருக்கிறதை மறைப்பதால் புதிதாக ஒன்றைக் காட்டவேண்டாமா?

ஈ.வெ.ரா.: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்து மதம் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி ஒப்புக்கொண்டு விட்டீர்களே, இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்: நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே, உங்களுகுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே! அதையேன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக்கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே?

ஈ.வெ.ரா.: ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கிடையாது.ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகின்றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன்.

வருடம் ஒன்றுக்கு 1,000 ரூபாய்கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கிறேன். ஆனால், அவைகளை இப்போது அடியோடு நிறுத்திவிட்டேன். இந்தப் பிரச்சாரச் செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய்வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அநேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படியிருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்: புரோகிதரைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கு போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக் கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாக கண்டிக்கிறீர்கள். அப்படியானால், என்னதான் செய்கின்றது? எந்தப் புஸ்தகத்தைத்தான் படிக்கிறது?

ஈ.வெ.ரா.: நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி, சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்லுவேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும், கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கிறேன்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம்தான். எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு எனது வேலையும் சுலபமாகும் எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்தே பலர் செய்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால், அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ, பாண்டிய ராஜ்யமாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன். அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேலையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது.

வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும், மனிதனின் சுயமரியாதைப்பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான்.

வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்குப் பிரவேசித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக்கொண்டு தப்பிப் பிழைத்ததால்தான் திரும்பிவர முடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர் விட வேண்டும் என்பது எனது ஆசை.

ஏனெனில் நான் எடுத்துக்கொண்ட வேலை அவ்வளவு பெரியதும், பல எதிரிகளைக் கொண்டதும், தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால், இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும், இனிப் பயப்படுவது என்பது முடியாத காரியம்.

ஆயிரந்தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல் - வெறும் கல். நமது தேசிய இயக்கம் என்கிற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு - வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி. நான் யாருக்கும் போதிக்க வரவில்லை.

எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக்கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடும் என்று யாரும் சாமிக்காக வக்காலத்துப் பேசவேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டுதான் இது.

--------------------சிதம்பரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. குடிஅரசு 4.2.1928.

25.6.12

பெரியாரின் குறிக்கோள் சமதர்மமே! - அறிஞர் அண்ணா


சோவியத் ரஷ்யா, உலகின் கவனத்தை இழுக்கும் சக்தி பெற்றுவிட்டது. மலடோவின் புன்சிரிப்புக்குத் தவம் கிடக்க வேண்டிய நிலைமைக்கு வல்லரசுகள் இன்றுவந்துவிட்டன. அத்தகைய உச்சநிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, அதே நாடு, வல்லரசுகளின் வலையில் சிக்கிக் கிடந்தது; மதவாதிகளின் மாயச்சேற்றிலே அமிழ்ந்து கிடந்தது, ஜாரின் பிடியிலே, ரஸ்புடீனின் கபடத்திலே, சீமான்களின் களியாட்டத்திலே சிக்கிச் சீரழிக்கப்பட்ட நாடாக இருந்தது. பஞ்சத்தையும் படுகொலையையும் கண்டது; கொடுங்கோலரையும் வறுமையையும் கொண்டு நெளிந்தது. அத்தகைய நாடு, இன்று, உலகில் வேறு எங்கும் காணமுடியாத சோபிதத்துடன் விளங்குகின்றது.

சோவியத் ரஷ்யாவின் இந்தப் புதுநிலையை மறுப்பார் இல்லை. புதிய சக்தி பெற்றுவிட்டது என்ப தற்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. வல்லரசுகள் பலவும் இன்று சோவியத்தின் பலத்தைக் கண்டு, பயம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நோய் கொண்டிருந்த நாடு, இன்று பலம் பெற்று விளங்குகிறது. காட்டுமிராண்டிக்காலநிலை மாறிவிட்டது - கணப்போதில்! ஆம்! முப்பதாண்டுகள், ஒரு நாட்டு வாழ்நாளிலே, ஒருகணம்தானே! இதற்குள் கொடுங் கோலர்கள் விரட்டப்பட்டனர், கபட சன்யாசிகள் ஒழிக்கப்பட்டனர், முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது, புதிய ஆட்சிமுறை ஏற்பட்டுவிட்டது. புதியதோர் உலகே தோன்றிவிட்டது. இதனை மறுப்பார் இல்லை - ஆனால் இதன் முழு உண்மை - முழுச் சித்திரம் - மக்களுக்குத் தெரிய ஒட்டாதபடி, தப்புப்பிரசாரம் எனும் மூடுபனிப் படலத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் பலர். நாம்அந்த மூடுபனியை நமது சக்திக்கேற்ற அளவு அழிக்க முயற்சிக்கிறோம். இந்த இதழ் மூலம் சித்திரவதைக்கு ஆளான மக்கள், சீறி எழுந்து போரிட்டு, சீரும் சிறப்பும் பெற்றது மானிட வர்க்க வரலாற்றிலே, முக்கியமான பகுதி. அவர்கள் பட்ட கஷ்டத்தை அவனி அறியாவண்ணம், முதலா ளித்துவம் தப்புப்பிரசாரம் செய்துவந்தது; வருகிறது. சமீபகாலம் வரையில் சோவியத்தை அழிப்பதற்கே, வல்லரசுகள் பலவும் தமது பணபலத்தைப் பயன் படுத்தி வந்தன. எனினும் வெற்றி அவர்கட்கு இல்லை. ஒவ்வோர் நாடும் இன்று தத்தம் எல்லையைப் பாதுகாக்கின்றன. “எப்பக்கம் வந்து புகுந்திடுமோ? ரஷ்யா, எத்தனை பட்டாளம் கூட்டிவருமோ?” என்று வீண் பீதிகொண்டு, பட்டாளம் தேவையில்லை - வரவும் வராது - ஏழையின் கண்ணீரிலே, பாட்டா ளியின் பெருமூச்சிலே, விவசாயியின் விசாரத்திலே, தேவையான அளவு பட்டாளம் இருக்க, சோவியத் படையை இங்கு அனுப்புவானேன்!

சோவியத் படை எடுப்பு - ரஷிய ஆதிக்கம் என்பன போன்றவைகள் கடைசிக் கட்டத்திலே வந்து நிற்கும் முதலாளித்துவத்தின் குளறல்.

இந்தப் பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம், சோவியத்தின் மீது மக்களுக்கு அருவருப்பு வருமாறு செய்து, அதைத் துணைகொண்டு, சோவியத் முறை யான சமதர்மத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படிச் செய்து, முதலாளித்துவம் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம் என்று ஆசைகொண்டிருக்கிறது. அந்த ஆசை நிறை வேறாது! ஏனெனில் நாம் முன்பு குறிப்பிட்டபடி ஏழை யின் விழியில் நீர் வழிகிறது! இது சமூகம் புது அமைப்புத் தேடுகிறது என்பதற்கான அறிகுறி.

இந்த நிலையிலேதான், தப்புப் பிரசாரத்துக்கு இலக்கான ரஷியாவைப் பற்றிய சில உண்மைகளை எடுத்துக்கூறும் கடமையை நாம் களிப்புடன் ஆற்ற முன்வந்தோம். இதனை நமது கடமை என்று நாம் கொள்வதற்குக் காரணமும், உரிமையும் இருக்கிறது. ஏனெனில், பெரியாரின் இயக்கத்தைச் சார்ந்தவராகிய நாம், சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

“ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடு கிறது என்கின்றதன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில் லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டுச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் தீண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேஷ்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்களெல்லாம் தங்கள் செல்வம் முழுமையும், தங்களுடைய சுயவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும்.”

பெரியார், ஜாதிமத ஊழல்களை மட்டுமல்ல, மக்களிடை காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும் இதுபோலப் பலமாகக் கண்டித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையைக் கூறவேண்டுமானால், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடும் அவரை, விஷமிகள், “நாத்திகர்” என்று பாமரரிடம் கூறி வந்தது போலவே, “பொது உடைமை வாதி இவர்” என்றும், சர்க்காரிடம் சாடி கூறினர். அவருடைய வேலைத் திட்டத்தை ஒரு காலத்தில், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி போன்றவர்கள், பொது உடைமைத் திட்டம் என்று கூறினதுண்டு.

பெரியார், இவைகளைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிச் சளைக்கவில்லை.

சமதர்மப் பிரசாரத்தைத் தமிழகத்தில் தளராது செய்து வந்தார். அதுவும் ஏட்டுப்படிப்பின் பயனாக அல்ல - அனுபவத்தின் துணைகொண்டு மட்டுமல்ல - நேரடியாகச் சோவியத் சென்று, அங்குப் புது உலகு பூத்திருக்கும் அழகினைக் கண்டு உண்மை நிலை யினைத் தெரிந்து கொண்டு அந்தப் பிரசாரத்தைத் துவக்கினார்.

அது மட்டுமல்ல உண்மை. அவருடைய சாதி ஒழிப்புப் பிரசாரமுங்கூட, வெறும் மதத்திருத்தமோ, மக்களிடை ஏற்பட வேண்டிய மனத்திருத்தமோ மாத்திரமல்ல, சாதிமுறையையே - வர்ணாசிரமத்தையே, அவர் முற்காலத்தில் தந்திரசாலிகள் அமைத்துக் கொண்ட பொருளாதாரச் சுரண்டல் முறை என்று நம்புகிறார் - தக்க காரணம் காட்டி இதனை நிரூபித் திருக்கிறார். ஆகையால், சாதி முறையை அவர் எதிர்க்கிறார் என்றால், பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதும், இனி யும் வளரச் செய்யக் கூடியதுமான கொடிய ஏற் பாட்டைத் தாக்கித் தகர்க்கிறார் என்றே பொருள் - அதாவது சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.

தமிழகத்தாரின் மனதிலே கிடக்கும் பழங்காலக் கொள்கைகளை, அவர், சாதிய முறையின் மூலம் வளர்ந்துள்ள முதலாளித்துவத்தின் முடிக்கயிறுகள் என்று எடுத்துக்காட்டியே கண்டிக்கிறார். அவருடைய பெரும்படையின் பணி, சமதர்மத்துக்கே பயன் படுகிறது - பிறர் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பினும் - மதிப்பிடக் கூசிடினும். இத்தகைய பணி, சோவியத் தில், தேவையான அளவுக்குமேல், புரட்சிக்கு முன்பு செய்யப்பட்ட காரணத்தாலே தான், புரட்சி, சாத்திய மாயிற்று. பாட்டு, கூத்து, கதை, காவியம், ஓவியம் முதலிய பல்வேறு துறைகளிலும், இதற்கான பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏழை ரஷியன் மனதிலே, தூவப்பட்டி ருந்த நெடுங்காலக் கருத்துக்களை அறவே ஒழித்த தால் தான், மாவீரன் லெனின், புரட்சி மார்க்கத்தைக் காட்டியவுடன் சிங்கக் கூட்டம் சீறி எழுந்தது, கிழித்து எறிந்தது பகைக் கூட்டத்தை.

இந்த மூலக்கருத்தை நன்கு தெரிந்ததாலேயே, இன்று பெரியார் நடத்திச் செல்லும் இயக்கம், நாட்டு மக்களிடை நல்லறிவுப் பிரச்சாரத்தை விடாமல் செய்து வருகின்றது; இலட்சியப் பாதையில் நடந்து சென்ற வண்ணம் இருக்கிறது. அதன் இறுதியில், சோவியத் சோபிதம் காண வேண்டும் என்ற உறுதியுடன்.

இதன் பயனாகவே, நாம், நவம்பர் புரட்சி சமயத் திலே, சோவியத் நாட்டுச் சோபிதத்தை விளக்கும் கட்டுரைகளையும், அதுபோன்ற புத்துலகம் காண வேண்டின், எதுபோன்ற சூழ்நிலை தேவை என்பதை விளக்கிடும் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறோம். நாடோடியின் நிலைமை, விபசாரம் பிறக்கும் வழி என்ற பல்வேறு சித்திரங்களும் இன்று நாட்டிலே காணக்கூடியன. தெருக்கோடியில், பாதை ஓரத்தில், பட்டினத்தில், பட்டியில் எங்கும் நீங்கள் இவர்களைச் சந்திக்கலாம். இவர்கள் சமூகத்திலே உள்ளதற்கான காரணம் என்ன, என்ற சிந்தனையைக் கிளறவே, இக்கட்டுரைகள். இதழ்பெற்றுப் பயன் பெறுவர் தமிழர் என்று நம்புகிறோம்.

------------------அறிஞர் அண்ணா“திராவிட நாடு”, தலையங்கம், 17-11-1946

பெண்கள் விடுதலை பற்றி பெரியார்


இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?

இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?

இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!

இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?

இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக்கின்றதே.

மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.

அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.

இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங்களாகத்தானே யாருக்காவது ஒருவ க்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.

இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?

இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?

இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?

அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!

------------------சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது-குடிஅரசு 27.9.1945

24.6.12

செத்தமொழியைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் படும் பாடு!

இனப்பற்று

சென்னை மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரி ஒன்று இருக்கிறது. அத னோடு இணைந்து செயல்படுவது குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத மய்யம் ; அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று வந்த இந்த மய்யம் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிதி கிடைக்காமையால் தள்ளாடியது.

மின்னஞ்சல் வழியாக இந்த நிலையை அறிந்து கொண்ட ரவி என்ற பார்ப் பனர் பதைபதைத்துப் போனார்! தான் ஆடாவிட் டாலும் சதை ஆடாதா என்ன!

ரவி தன் பார்ப்பன நண்பர்களோடு இணைந்து இந்த மய்யத்தைத் தூக்கி நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். (சிருங்கேரி மடம் நடத்தும் சமஸ்கிருத வகுப்புகளுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்று வரு கிறாராம்)
என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டாராம் - இந்த ரவி? பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பார்ப்பனர்களோடு ஒருங்கிணைப்பாளராக யிருந்து தொடர்பு கொண்டு, நிதியின் வாய்க்காலைத் திறக்கச் செய்து மய்யத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டார். இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மய்யத்தில் வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்களை வாழ்நாள் உறுப்பினராக இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அந்தப் புதிய திட்டம்.


மய்யத்திற்கு நிதியும் ஆயிற்று; மய்யத்தில் நூல்கள் விற்பனையும் ஆயிற்று. ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிக்கும் இந்த சாமர்த்தியம் நம் மக்களுக்கு எங்கிருந்து வரப்போகிறது?

மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டதில் நூறு வாழ்நாள் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனராம்.

இன்னொன்றுதான் முக்கியம். சென்னை அய். அய்.டி.யில் உள்ளோர் (முழுக்க அக்கிரகாரம் தானே!) மத்திய அரசின் சில துறைகளிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனராம். (அவர்களால் முடியக் கூடிய காரியம்தானே!)

செத்தமொழி என்றாலும் அதனைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் என்ன பாடு படுகிறார்கள் பார்த்தீர்களா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது நீடாமங்கலத்திலிருந்து ஒரு பார்ப்பனர் மின்னஞ்சல் மூலம் பார்ப்பனர் வட்டாரத்துக்குத் தகவல் அனுப் பினாரே நினைவிருக்கிறதா? தவறாமல் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொல்லுங்கள் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததே! தமிழர்களே இந்த இனப்பற்று உங்களுக்கு எப்பொழுது வரப் போகிறது?

----------------- மயிலாடன் அவர்கள் 24-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.6.12

பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார்



ஆனந்தவிகடன் லோகம்!

இந்த வார ஆனந்தவிகடனை (20.6.2012) ஒரு புரட்டு புரட்டியபோது சில பேட்டிகள் தென்பட்டன.

அந்தப் பேட்டிகளுக்குள் சில தகவல்கள்:

(1) சினிமா இயக்குநர் ஒருவரின் பேட்டி

பெரியார் பெயரை உச்சரித்து, பெரியாரின் பேரன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, சற்று விளம்பரம் கிடைத்தவுடன் பெரியாரை விமர்சித்து, அதன் மூலம் பார்ப்பனர்களின் சடகோபத்துக்கு ஆளாவது ஒன்றும் அதிசயமல்ல. தமிழர்கள் போல மலிவான பொருள்கள் உலகத்தில் எங்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் என்றார் தந்தை பெரியார். (விடுதலை 17-.9.-1969)

இனப்பாதுகாவலரான தந்தை பெரியார் அதையும் கடந்து உலக மக்களுக்கே வழிகாட்டும் சுயமரியாதை - பகுத்தறிவு - சமதர்ம ஒளியை உலகுக்குக் கொடுப்பவர்.

சுயசிந்தனையாளர்! - அவருக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. தன் கருத்தை திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார் என்று சொல்லக் கூடியவரே தவிர, -திருவள்ளுவர் சொன்னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொல்லாதவர்! காலத்தைக் கடந்து கருத்துக்களைக் கருத்தரிக்கச் செய்யக் கூடிய ஞானத்தந்தை அவர். அறிவாயுதத்தை எடுத்த களப்போராளி, தளகர்த்தர்! வாழ்நாள் முழுவதும் அந்தக்களத்திலேயே நின்றவர் - வெற்றிகளையும் குவித்தவர்.

வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்த காலத்திலும் சரி அவரைத் தவிர்த்துவிட்டு சமூகமோ, அரசியலோ, சிந்தனையோ பயணித்தது கிடையாது.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக் கவிஞர் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

ஒன்றை தமிழர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் உணர்தல் தேவை.

தந்தை பெரியார் அவர்களையும் மாவீரன் பிரபாகரனையும் ஒப்பிடுதல் முதல் குற்றமாகும். தந்தை பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார். பிரபாகரன் படத்தைத்தான் மேடையில் வைப்போம் - பெரியார் படத்தை வைக்க மாட்டோம் என்று பேசுவது எல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனமே!

ஒரு மேடையிலே பெரியார் படம் வைக்கப் படாததாலேயே பெரியாரின் ஆளுமை சுருங்கிப் போய்விடுமோ!

(உலகப் பல்கலைக்கழகங்களில் பெரியார் உலா வருவது இந்தக் குப்பை களுக்குத் தெரியுமா?)

இப்படியெல்லாம் பேசுவது - எழுது வது பெரியாரையும் புரிந்து கொள்ளாத - தம்பி பிரபாகரனையும் தெரிந்து கொள்ளாதபேதைமை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

என்ன முரண்பாடு என்றால் ஆனந்தவிகடன் பேட்டியில், தம்மையும் அறியாமல் வேறு ஓர் இடத்தில் எங்களின் பெருமைக்குரிய வழி காட்டி பெரியார்தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு பிறகு, -வழிகாட்டியின் படத்தை வைக்கப்போவதில்லை என்பது -குழப்பப் போதையில் அவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

பித்துக்குளித்தனமான ஆவணம் ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி, நாலாதிசைகளிலும் சவுக்கடி கிடைத்தவுடன் நாக்குத் தொங்கி, விழி மேலேறி, கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொள்ள, பெரியாரே துணை! என்று சரணம் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது நல்ல நகைச்சுவையே!

(ஆவணத்தை வெளியிட்டவரே கைவிட்டு விட்டாரே!)

அவர்களின் கண்ணோட்டத்தில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன் (அவர்களின் ஆவணத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.)

அந்த ஆய்வாளர்கள் சொல் பேச்சைக் கேட்டு 2012ஆம் ஆண்டு அனுமார்களாகவும், விபீஷணர்களாகவும், சுக்ரீவன்களாகவும் வாலையாட்டிப் பிழைத்துப் போகட்டும்! (தந்தை பெரியாரையும், திராவிடர் என்ற பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வையும் பெறாத எந்த அமைப்பும், தனி மனிதனும் இங்குக் கடையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்).

(2) சரத் ஃபொன்சேகா

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததில் வெறி பிடித்து அநாகரிகமாக செயல்பட்ட அன்றைய இலங்கை ராணுவத்து தளபதி பொன்சேகா ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைத் தெரிவிக்கிறார். அவை ஒருபுறமிருக்கட்டும்.

அடுத்து ஈழத்தில் என்ன நடக்கும் என்று அவர் சொன்னது மிக முக்கியமானதே.

இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக் கொண்டும் வேவு பார்த்துக் கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்.

ஊடகங்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அரசு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பது கூடக் குற்றம் என்று நினைக்கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே.

எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது. . ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல் . . . மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற் கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர் களின் புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்கிறார் பொன் சேகர். எங்கெல்லாம் அடக்கு முறைகள் திமிர் முறித்துக் கிளம்புகின்றனவோ, அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது மனிதவியல் பாலபாடமாகும்.

விழுப்புரம் டெசோ (ஆகஸ்டு5) மாநாடு அழைப்புக் கொடுக்கும் -காத்திருங்கள்!

(3) சு.சாமி. பராக்!

கேள்வி: உண்மையிலேயே உங்களுக்குத் தமிழ் சுத்தமாகப் பேசவராதா? இல்லே, இதை ஒரு சாக்காக வெச்சு அவ, இவ, அவன், இவன்னு - கலாட்டா பண்றீங்களா?

சு.சாமி பதில்: இது என் ஸ்டைல். திராவிட இயக்கத்துக்காரங்க போல அடுக்கு மொழியில் மக்களுக்குப் புரியாத தமிழில் பேசி என்ன பிரயோஜனம்? அதனால்தான் நான் எப்பவும் போல பேசுகிறேன். அதுவும் தவிர, சமஸ்கிருத வார்த்தைகள் எல்லா மொழியிலயும் பரவிக்கிடக்கு. அதைப் பயன்படுத்திப் பேசினா, தமிழ், கர்நாடகம், தெலுங்கு, இந் தினு எல்லா மொழிக்காரங்களும் புரிஞ்சுக்குவா. சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கனும். நான் இப்படிப் பேச அதுவும் ஒரு காரணம் என்கிறார் சு.சாமி. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் பார்ப்பனர்களை இங்கே தெரிந்து கொள்க!
இப்படித் தமிழ்ப் பேசும் இந்த வகையறாக்கள் எல்லாம் தமிழ் தேசியவாதிகள் கண்ணோட்டத்தில் பச்சைத் தமிழர்கள் தாம்.
ஏன்னா, நன்னா; தமிழ்ப் பேசுறாளே!

அவ, இவ என்று பேசுவதும் வேண்டு மென்றே!

சமஸ்கிருதத்தை பரப்புவதற்காகவே இந்த வேடம் என்பது கோணிப்பைக்குள் ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே!

இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல; எல்லாப் பார்ப்பனர்களுமே இந்த உணர்வு படைத்தவர்கள்தான். கோல்வாக்கரிலிருந்து லோக்கல் வாக்கர்கள் வரை இதே புத்தியைக் கொண்டவர்கள்தான்.

என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாய பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று அடித்துக் கூறியவர்தானே சத்தியமூர்த்தி அய்யர்வாள்! (மெயில் 25.-7.-1939)

சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதைத்தான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று சொன்னவர்தான் வி.வி. கிரி என்ற பார்ப்பனர்.

(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து -_ 2-.1-.1963)

(4) சி. ராஜகோபாலாச்சாரியார்

நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பொருள்களைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள் சமஸ்கிருதத்துடன் இணைக் கப்பட்டவை. பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளில் இருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற சமஸ் கிருதம் தெரியாவிட்டால் மகா பெரிய விபத்தாகும்.

அது பணமிருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுப்பதற்கு ஒப்பாகும். ஒரு பள்ளிப் படிப்பில் சமஸ்கிருதம் சார்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்துவாய் இருந்தாலும், முஸ்லிமாய் இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்கிருதம்தான்.

புத்தர்கள், இந்துக்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள் முதலியோர்களுக்கு சமஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது. இப்போதைய நவீனக் கல்விகளுடன், சமஸ்கிருத்ததையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னுமொரு தலை முறைக்குள் இந்து மதம் இப்போது இருப்பது போல் இராது. சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம்.

----------------(சென்னை லயோலா கல்லூரி சமஸ்கிருத சங்கத்தின் துவக்கவிழாவில் 24-.7.-1937 அன்று பிரதம அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.)

சங்கராச்சாரியார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், ஆர்.வெங்கட்ராமன் என்று சமஸ்கிருத்தைச் சப்புக் கொட்டி உச்சி மோந்து உச்சரிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் மிக நீளமாகவே உண்டு.

தமிழ் ஆய்வாளரான ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் இந்தப் பார்ப்பனர்களைப் பற்றி வெகு நேர்த்தியாகவே படம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பார்ப்பான் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்குகின்றார்கள். ஆயினும் அவர்கள் தாம் தமிழர் அல்ல என்றும் தமக்குத் தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுதுவது போன்ற தமிழ் மொழிப் பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்தி பிரச்சார சபைகளையும் வடமொழியைத் தமிழோடு கலந்து எழுதும் உரைநடைகளையும் தோற்று விக்கின்றனர்.

(நூல், தமிழ் வரலாறு)

சு.சாமி _ பார்ப்பனர்கள் எத்தகையவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு

இதைத் திராவிடச் சிந்தனையாளர்களால்தான் சுட்டிக் காட்ட முடியும். இடித்தும் காட்டவும் முடியும். தமிழ்த் தேசிய வாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ம.பொ.சி. ஒருவர் போதாதா?

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா?

ஏன் தாராளமாக விமர்சிக்கலாமே! ஏன், அவர்தானே பகுத்தறிவைப் புகட்டினார். தாராளமாகவே விமர்சிக்கலாம்.

என்ன...?

அவர்தான் பார்ப்பனர் எதிர்ப்பை முன்னிறுத்தினார். அவர்தான் சூத்திர இழிவை ஒழிக்கப் பாடுபட்டார். அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் புழங்கும் உரிமைக்காக வைக்கம் வரை சென்று போராடி சிறை சென்றார்.

அவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உரிமை வேலை வாய்ப்பு உரிமைக்காக சமூக நீதிக் கொடியை உயர்த்தி பிடித்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தவும் செய்தார்.

அவர்தான் பெண்ணுரிமைப் பேரிகை முழங்கினார். அவர்தான் இந்தியை எதிர்த்து மொழி மானம் காத்தார். தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தையும் கொண்டு வந்தார்.

அவர்தான் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த மக் களுக்குப் பகுத்தறிவு வெளிச்சத்தைக் காட் னார். தமிழ், தமிழன், தமிழ்நாடு உரிமை களுக்காகக் கடைசி மூச்சு அடங்கும் வரை போர்க்களத்தில் நின்றார். இவ்வளவும் தமிழ்நாட் டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, பொது மக்களுக்கோ தேவையில்லை என்றும், இவை யெல்லாம் ராஜதுரோகம் என்றும் உங்களின் நுண்மாண் நுழை புல அறிவு கூறுமானால் தாராளமாகப் பெரியாரை விமர்சியுங்கள் -_ விமர்சித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் காலத்தையும் உழைப்பையும் இந்தப் பகுதிகளுக்கே செலவிடுங்கள். பிறப்பில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைப்பற்றி வாய் திறக்காதீர்கள். விமர்சிக்க வேண்டாம்! நீங்கள்தான் பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி விட்டீர்களே!

மாநில உரிமைகளைக் கொத்துத் கொத்தாகத் தூக்கிச் செல்லும் டில்லி கழுகுகளைக் கண்டு கொள்ளாதீர்கள். (தேவைப்பட்டால் கருடதரிசனம் செய்யுங்கள்).

நுழைவுத் தேர்வை ஒழித்த தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை நுழைய விடும் ஒட்டகங்களுக்குத் தீவனம் தேடும் வேலையில் ஈடு படுங்கள் (அதுதான் இந்திய இறையாண்மைக்காக ஊசி முனையில் தவமிருக்க முடிவு கட்டி விட்டீர்களே!)

பார்ப்பானை -ஆராய்ச்சியாளன் - இளைஞன் என்று ரோமம் பிளந்து ஆய்வு செய்து கண்டு பிடித்து விட்டீர்களே! திராவிடன் தான் ஆரியன் என்று அடேயப்பா! ஏழேழுலோகம் சென்று கண்டு பிடித்து கனைத்துக் கொண்டு திரிகிறீர்களே!

அதனால் நன்றாக விமர்சனம் செய்யுங்கள். பெரியாரை விமர்சனம் செய்யுங்கள். அப்பொழுதுதானே ஆரிய ஏடுகளின் விளம்பர பாதுகா பட்டா பிஷேகம் சாங்கோ பாங்கமாக நடக் கும். சூத்திரப் பட்டமும் நிலைக்கும்.

தமிழனுக்குக் கொஞ்சம் விளம் பரம் கிடைத்தால் பார்ப்பான் கால் எங்கு இருக்கிறது என்று தேடிச் சென்று நக்கிக் கிடப்பான் என்று தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?

--------------- மின்சாரம் அவர்கள் 26-6-2012 “விடுதலைஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


22.6.12

நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?ஆபாச நச்சு விதை!


முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்: உன்னைப் போன்ற அழகான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம் கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி 5 வயதிலும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர்களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாசமான பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார்.

கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

------------------முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

-------------------"விடுதலை” தலையங்கம் 22-6-2012

ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?


சேது வெளியிட்ட செய்தி

2012 மே 20 நாளிட்ட தினமலர் இதழின் வாரமலரில், கேள்விகளும் ஆச்சரியங்களும் என்கிற பகுதியில் "நவக்கிரக சன்னதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்" என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. செய்தியை எழுதியிருப்பவர் சேது என்பவர். அந்தச் செய்தி பின்வருமாறு:

"சூரியனை மய்யமாகக் கொண்டு பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சுற்றி வருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடுநாயகமாக அமைக்கப் பட்டுள்ளதே நிரூபணமாகும்.

அதுமட்டுமன்றி, திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் நீதியாக வரும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.

எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியலடிப்படையானதே!' என்கிறார் வேதஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீஜெகநாத சுவாமி".

கோவை ஜெகநாதசவாமியின் கோமேதகக் கருத்துகளை ஆய்வு செய்வோமே?

புவி எங்கே போயிற்று?

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்தக் கோள்பட்டியலில், இந்தக் கோவை ஜோதிடர் ஜெகநாத சுவாமி உட்பட நாம் வாழும் புவி (Earth) இடம்பெறவில்லையே? ஏன் இந்த நிலை? அறிவி(வானி)யலில் புவி ஒரு கோள் ஆயிற்றே? ஜோதிடத்தில் புவி இல்லையே! புவி எங்கே போயிற்று? புவி என்பதாக ஒரு கோள்பற்றிய அடிப்படை அறிவே இந்த வேத ஜோதிட மேதைகளுக்கு இல்லையே? பின் எப்படி ஜோதிடம் அறிவியல் ஆகும்?

விண்மீனுக்கும் கோளுக்கும் வேறுபாடு தெரியவில்லையே?

ஜோதிடத்தில் சூரியன் ஒரு கோள் ஆகும். ஆனால், அறிவியலில் சூரியன் கோள் (Planet) அன்று; விண்மீன் ஆகும். (Star). வேதஜோதிடம் சூரியனை ஒரு கோள் ஆகக் கருதுகிறதே? 'க்ரஹாணாம் ஆதிராதித்யோ' -_ அதாவது, கிரகங்களுள் முதன்மையானவன சூரியன் என்று ஸ்ரீசூர்யஸ்தோத்திரம் என்னும் நூலுள் கூறப்பட்டுள்ளது.

"ஓம் க்ரஹாணாம் பதயே நமஹ!" அதாவது, கோள்களின் தலைவனே! வணக்கம்! என்று, 108 பெயர் வரிசையுள் 89வது சூரியனின் பெயர் வரிசையாக ஸ்ரீசூர்யா அஷ்டோத்ர சத நாமாவளி என்னும் நுல் கூறுகிறது. (தகவல்: பாலஜோதிடம்; டிசம்பர் 1987. இதழ்)

சூரியன் அய்யத்திற்கிடமின்றி கோள் (கிரகம்)என்றே ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கொண்ட ஜோதிடம் எப்படி அறிவியலாகும்? ஜெகநாத சுவாமி செப்புவாரா விடை?

கோளா? துணைக்கோளா?

ஜோதிடத்தில் சந்திரன் ஒரு கோளாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புவி என்னும் கோளைச்சுற்றிவரும் ஒரு துணைக்கோள் (Satelite) ஆகவே அறிவியல் கூறுகிறது.

சந்திரனை _ ஒரு துணைக்கோளை, கோள் என்று வைத்துச் சதிராட்டம் போடும் ஜோதிடம் எப்படி அறிவியல் ஆகும்?

விண்ணிலே எத்தனை வெண்ணிலவுகள்?

ஜோதிடத்தில் இருப்பது ஒரே ஒரு சந்திரன் (நிலவு)தான்! இதை வைத்துக்கொண்டுதான் திரையிசைப் பாடலாசிரியர்கள், அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!! என்றும் உள்ளதும் ஒரே நிலா! இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!! என்று கொட்டி முழக்குகிறார்கள். ஆனால், வானியலில், 112 பெரியவை; 16 சிறியவை. ஆக, 128 சந்திரன்கள் உள்ளன என்று கண்டுபிடித்தும் கூறப்பட்டுள்ளது.

புவிக்கு அமைந்த துணைக்கோள் ஆன ஒரே ஒரு சந்திரனுக்குத்தான் ஜோதிடப் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஏனைய 127 சந்திரன்கள் என்ன குற்றம் செய்தன? அவர்கள் மொழியில் சொல்வதானால் அவை என்ன பாவம் செய்தன? இந்த வேத ஜோதிட அனுபவசாலி ஜெகநாதசுவாமி பதிலளிப்பாரா?

இல்லாத கோள்கள் இரண்டு

ஜோதிடத்தில் விண்மீனான சூரியன், துணைக்கோளான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி, இவற்றோடு இராகு, கேது எனப்படும் இரண்டு கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவை, உண்மையில் இல்லவே இல்லை. கற்பனைப் புள்ளிகள். வானியலில் இவை இடம்பெறவில்லை. இப்படியிருக்க, இராகு, கேது உள்ளிட்ட கோள்கள் எனக் குறிக்கும் ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

இருக்கும் கோள்கள் இடம் பெறவில்லையே?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியன சூரிய குடும்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. இவை ஜோதிடத்தில் இன்றும் சேர்க்கப்படவில்லையே? எப்படி ஜோதிடம் அறிவியலாகும்?

அண்மைய அறிவியல் ஆய்வின்படி, புளூட்டோ, ஒரு கோளுக்குரிய தகுதிப்பாடு இல்லை என்று விலக்கிவிட்டனர் அதனை அறிவியலார்.

பேச்சு _ மூச்சு இல்லை

அதே சமயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்தின் (நாசா) நிதியுதவியுடன், அறிவியலாளர்கள் புதியகோள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு செட்னா (ஷிமீஸீணீ) எனப் பெயரும் இட்டுள்ளனர். இவ்வாறான கோள்பற்றி மூச்சு விடாத ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

நவக்கிரகங்களின் நடுநாயகமாம்

கோளே இல்லாத, கோள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான விண்மீன் ஆன சூரியன் ஆலயங்களில் நவக்கிரங்களின் நடுநாயகமாக ஏனைய கோள்களோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஜோதிடம் அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் என்று பிதற்றுவது சரிதானா?

இப்படிக் கூறுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? ஜெகநாதசுவாமி ஏன் இப்படி ஜோதிடத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்புகிறார்? எதற்காக இவர் இவ்வண்ணம் குழப்பத்தின் குட்டையாக மாறவேண்டும்?

வர்ணதர்ம வல்லாண்மை:

வர்ண தர்மப் பிடியில் மக்களை அழுத்தி வைத்ததுபோல கோள்களையும் வர்ண வல்லாண்மையின் பிடியில் வைத்துள்ள ஜோதிடத்தின் போக்கைக் கீழே பாருங்கள்:

குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி) இரண்டும் பிராமண ஜாதி (வர்ணம்)யாம்! சூரியன், செவ்வாய் சத்திரிய ஜாதியாம், சந்திரன், புதன் வைசிய ஜாதியாம், சனி சூத்திர ஜாதியாம்! இராகு, கேது _ சாங்கிரம (கலப்பு) ஜாதியாம்! இவ்வாறு எழுதிவைத்துள்ளனர் ஜோதிடகர்த்தாக்கள்.

இழிவுக்கும் அவமரியாதைக்கும் உரிய கோள் ஆக, சனியை வைத்திருக்கிறார் பாருங்கள்! சனி சூத்திர ஜாதியாம்! வர்ணதர்ம ஒடுக்குமுறையும் உயர்ஜாதி வெறியும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள போக்கு இது! அறிவியலில் இல்லாத அது சொல்லாத வர்ண தர்மத்தைச் சுமத்தும் இந்த ஜோதிடம் எப்படி அறிவியலாகும்?

ஆணாம்! பெண்ணாம்! அலியாம்!!

கோள்கள்பற்றிய ஜோதிடத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை! உயிரற்ற அறிவற்ற, மனமற்ற வெறும் அஃறினைப் பொருள்களாகிய கோள்கள், துணைக்கோள், விண்மீன் இவை ஆணாக, பெண்ணாக, அலியாக இருக்கின்றனவாம்!

சூரியன், செவ்வாய், குரு(வியாழன்) இவை ஆண்களாம்! சந்திரன், சுக்ரன்(வெள்ளி), ராகு இவை பெண்களாம்! புதன், சனி, கேது இவை அலிகளாம்!! கேலிக்கூத்தாக இல்லை? இப்படி எந்த அறிவியல் கூறுகிறது? பின், எப்படி இந்த ஜோதிடம் அறிவியலாகும்? ஆகும் என்கிறாரே கோவை சுவாமிகள்!

கிரகணம் பற்றிய கிறுக்குத்தனம்

திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுகின்றனவாம்! ஆகவே, ஜோதிடம் அறிவியலாம்! சொல்கிறார் கோவை சுவாமிகள்! கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் உண்யில் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த முன்னோர் கண்டுபிடிப்பா?

வரலாறு கூறும் வானியல் செய்திகள்

கி.மு.747இல், அதாவது கி.மு.8ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்துள்ளதாக, கிரேக்க வானியலறிஞர் டாலமி குறிப்பிடுகிறார்.

இந்தக் குறிப்புகள் எகிப்து, இந்தியா, சீனாவுக்குப் பரவியதாக வரலாற கூறுகிறது. கி.மு.7-_6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேலீஸ் என்னும் கிரேக்க அறிஞர், கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு புகுவதால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏறப்டுவதாக, கணித்துச் சொல்லியிருக்கிறார்.

கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனக்காரஸ் என்னும் கிரேக்க அறிஞர், சூரியனுக்கம் சந்திரனுக்கும் இடையே புவி வருவதால் நிகழ்வதே சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்றார்.

இவர்களுக்கு உரிமை இல்லை!

ஓர் இடத்தில், ஒருமுறை முழுச்சூரிய கிரகணம் (Total Solar Eclipse) தோன்றினால், பின்னர் 360 ஆண்டுகட்கு பிறகுதான் மறுபடியும் முழுச்சூரிய கிரகணம் தோன்றும்.

இதுபோல, பிறவகைக் கிரகணங்களுக்கும், சந்திர சூரிய கிரகணங்களுக்கும் அவற்றிற்கென சுழற்சிக்கால முறை உண்டு. மேலைநாட்டிலிருந்து _ நாடுகளிலிருந்து பெற்ற இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் கிரகணக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனரே தவிர, இவர்களாகவே கண்டுபிடித்துச் சொல்லவில்லை! இப்படிச் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு எவ்வகை உரிமையும் கிடையாது.


இந்தியாவில் தோன்றவில்லை!

இதுமட்டுமல்ல, ஆண்டுகள், மாதங்கள் ஆகவும், மாதங்கள் வாரங்கள் ஆகவும், வாரங்கள் நாள்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் 7 நாள்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்கள் 7 கோள் (கிரகங்)கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த முறைமை, 2000 ஆண்டுக்காலமாகவே இந்திய நிலப்பரப்பில் நடைமுறையில் இருந்துவந்தாலும் இந்தியாவில் தோன்றியது அன்று. இந்த முறை, முதன்முதலில் எகிப்தில் தோன்றியது.

பின்னர், அலெக்சாண்டர், எகிப்தை வெற்றி கண்டபோது இது கிரேக்கநாட்டிலும் பரவியது. கிரேக்க நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிலும் பரவியது. 12 இராசிகளின் பெயரும் இதுபோல் வந்தவைதாம். இப்படி இருக்க, இந்தியப் பஞ்சாங்கத்தின் கிரகணக் குறிப்புகளை வைத்துக் கொண்டு என்னமாய்க் குதியாட்டம் போடுகிறார் இந்தக் கோவை சுவாமிகள்!

மூடநம்பிக்கைகளின் முகாம்

இனியும், ஜோதிடம் அறிவியல் என்று கிறுக்குத்தனமாக_ அசட்டுத்தனமாகக் கூறுவதை, வேதஜோதிடத்தில் நீ.......ண்ட அனுபவம் வாய்ந்த ஜெகநாத சுவாமிகள் போன்ற ஜோதிட பற்றாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜோதிடம் அறிவியல் என்று கூறுவது அபத்தம் ஆகும். அது, அறிவியல் அல்ல; அல்ல; அல்லவே அல்ல! ஆனால், அது மூடநம்பிக்கைகளின் முகாம்.

---------------- பேரா.ந.வெற்றியழகன் அவர்கள் ஜுன் 1 15 20112 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

21.6.12

நிலவுக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமா?


நிலவுக்குச் சுற்றுலா செல்ல ரூ.900 கோடி செலவாகும். தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ருசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா, மலை மேல் ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா! என்று பாட்டுப் பாடி குழந்தைகளுக்குச் சோறூட்டும் காலம் ஒன்று இருந்தது. நிலா இங்கே வராது - நிலாவுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்.

இனிமேலாவது பித்தா பிறை சூடிப் பெருமானே - சிவபெருமான் தலையில் சூட்டப்பட்டிருக்கும் சந்திரனே என்று சொல்லும் செய்யுள்களைக் குப்பைக் கூடை யில் தூக்கி எறிந்தால் புத்திக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நம்பலாம்.

குரு பத்தினியைக் கற்பழித்து விட்டான் சந்திரன், குருவின் சாபத்தால் தேய்பிறையானான் என்கிற மூளிகளை மூளையிலிருந்து கூட்டிப் பெருக்கி, மூலையில் ஒதுக்கினால் ஓகோ, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் எனும் பாராட்டுக்கூடக் கிடைக்கப் பெறலாம்.

ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் தேய்ந்து கொண்டு போகிறான் என்கிற புராண மூட் டையைப் பொசுக்கி எறிந்தால், அடுத்த தலை முறையினராவது அறிவு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

நவக்கிரகங்களுள் முக்கியமானதான பூமியைப் பட்டியலில் சேர்க்காமல், பூமியின் துணைக் கோளான சந்திரனை நவக்கிரகப் பட்டியலில் சேர்த்துள்ள சோதிடர்களை - மக்கள் மத்தியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக (51ஹ () முட்டாள் தனத்தை முதலாக்கி வியாபாரம் செய்ய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப் படையில் சிறைக் கொட்டடியில் அடைத்தால் விஞ்ஞான மனப்பான்மை இந்தியாவில்கூட முளை விட ஆரம்பித்து விட்டது என்று மன நிறைவு அடையலாம்.

விஞ்ஞானத்தையும் ஒரு பக்கத்தில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அஞ்ஞானத்தையும் ஆலிங்கனம் செய்யும் இரட்டை வேடக்காரர்கள் இனியாவது திருந்துவார்களா?

------------------- மயிலாடன் அவர்கள் 21-6-2012 “விடுதலை” டில் எழுதிய கட்டுரை